இரா. முருகன்'s Blog, page 49
July 18, 2022
Era Murukan English Poem – This is the way the cookie crumbles
The men at work and women
pour molten bitumen like lava
oozing out in a trickle
from conical beakers
they pour the asphalt
pour the asphalt and lay the road
the ugly road, the narrow road
meandering through the tank bund
engulfing a dry pond
with the tank bed parched and cracked
all through the year
and they go on
all through the damn year
wearing a pair of
makeshift shoes of rags,
yellow and red and black
torn from the bright
clothes the dead men wore
and left aside before
being carried across the
tank bund road along the
lifeless street, the stinking street
with the stench of death
all through the year
running across the stinking street,
hungry and thirsty while
last night’s stale rice
and a dried chilly with salt
carried to work waiting warm
near the tar mixer spewing fire
running across the hot street
the empty street
the street no one walks
with all doors locked from in
they sit for lunch flavoured with bitumen
with rag shoes on legs still in tact
as work is calling
and more asphalt and still more asphalt
and more road, the stinking nasty road
that leads them always
to where the dead men left for
waiting for the shabby
coat of bitumen
smelling of stale rice
the doors are still shut from within
tea time sneaking in and
cookie jars reluctantly open
waiting for milk to boil
raising a cookie to mouth
those wearing bright red
and yellow and black
with legs outstretched on the floor
the marble tiled floor
always cool, always clean
they don’t know and
damn they don’t know
beyond the doors
on the newly asphalted road to nowhere
someone runs up and then down
with rags for shoes
pouring molten tar while the giant roller
levels everything bloody everything
humming in half sleep
that’s the way the cookie crumbles.
(2nd June 2013)
(Era Murukan – 2nd June 2013)
July 9, 2022
பெருநாவல் மிளகு – கருத்தரங்கில் திரு ஸ்ரீநிவாசராகவன் நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவம்
வாழ்த்துரை
—
ஸ்ரீநிவாச ராகவன் S
வணக்கம்.
வாழ்த்துகள் முருகன்ஜி.
முருகன்ஜி-யை நான் சிறுவனாக இருக்கும்போது அண்ணாந்து பார்த்திருக்கிறேன். இப்போது நான் உருவத்தில் உயரமாக வளர்ந்த பிறகும் இலக்கிய உலகில் நான் அண்ணாந்து பார்க்கும் அண்ணா அவர் தான்.
நேரத்தை வீணடிக்காமல் நேரடியாக மிளகு பெரும்புதினத்துக்கு வருகிறேன்.
இந்தப் புதினத்தை நான் இரண்டு வகைகளில் அணுக விழைகிறேன்.
ஒன்று அதன் கட்டமைப்பு(structure). இரண்டாவது அவரது எழுத்து நடை
(language). இரண்டுமே எனக்கு மிக்க வியப்பைத் தரக்கூடியவையாக உள்ளன.
மறக்கப்பட்ட மற்றும் மறைக்கப்பட்ட ஒரு ஆளுமையின் கதை இது. மிளகு ராணி நமது அரசியலிலும், சமூகத்திலும் சரித்திரத்திலும் எப்படி மறைக்கப்பட்டிருக்கிறார் என்பது மிகவும் வியப்பாக இருக்கிறது. அந்தச் சரிதததை வெளிக்கொண்டு வந்ததற்காக நாம் இரா முருகனுக்கு மிகப் பெரிய வந்தனத்தை தெரிவித்தாக வேண்டும். சென்ன பைரவ தேவி ஒரு கற்பனைப் பாத்திரம் அல்ல. அவர் முழுக்க முழுக்க உண்மையாக வாழ்ந்து மறைந்த பாத்திரம். கிட்டத்தட்ட மிக விரிந்த ஆராய்ச்சியின் விளைவாக
இந்தப் புத்தகத்தை முருகன் அவர்கள் படைத்திருக்கிறார்.
மிளகு பெரு நாவலை முதல் பத்து நிமிடத்திலிருந்து அரை மணி நேரம் படித்த வரை நான் அது ஒரு மாய யதார்த்தமாக அமைந்திருக்கிறது என்று நினைத்தேன். தொடர்ந்து வாசித்த பிறகு அப் புதினம் ஒரு மிகுபுனைவு என்ற ஜானர் வகையில் அமைந்திருப்பதாக நினைத்தேன். ஆனால் மிளகு பெருங்கதையை முழுவதுமாகப் படித்த பின்னர் தான் அது முருகன்ஜி அவர்களால் ஒரு polymorphic historical fantasy என்ற கட்டமைப்பில் எழுதப்பட்டிருப்பதை உணர்ந்தேன்.
மிளகு ஒரு அசர வைக்கும் படைப்பு. அதில் வரும் பரமன் கதாபாத்திரத்தை நாம்
உன்னிப்பாகப் பின் தொடர்ந்தால் ஏற்படக்கூடிய ஒரு பரவசம் அல்லது ஓர் ஆச்சரியம் என்பது எல்லைகளைத் தாண்டியது. அறிவியல் புனைவை சமூகவியலோடும் அரசியலோடும் கலந்து எழுதுவது என்பது எளிதில் சாத்தியமாகக் கூடியதல்ல. அசாத்தியமான கற்பனையும், அசாத்தியமான எழுத்து வன்மையும், அசாத்தியமான ஆளுமையும் கொண்டவரால்தான் அப்படி எழுத முடியும். இதை முருகன்ஜி-யைத் தவிர வேறு யாரும் எழுத முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது என்பேன் நான்.
மீர்ஜான் கோட்டையில் துவங்கும் கதை நானூறு வருடங்கள் முன்னும் பின்னும் போய் வரும் வகையில் நான் லினியர் முறையில்
சொல்லப்படும் இக்கதை கெருஸப்பா செல்கிறது. ஹொன்னாவர் செல்கிறது. அம்பழப்புழைக்குச் செல்கிறது. லண்டனுக்குச் செல்கிறது. திரும்பவும் 1999 காந்தஹார் விமானக் கடத்தலுக்குச் சென்று நாக்பூர் விமான நிலையத்தில் பரமன் காணாமற் போவதில் நிற்கிறது. பிறகு உள்ளால் செல்கிறது. அங்கிருந்து கோழிக்கோடு செல்கிறது. அங்கே குஞ்ஞாலி மரைக்காயரை ஞாபகப்படுத்துகிறது. (மரக்காயர் திரைப்படம் பார்க்கும்போதும் எனக்கு முருகன் தான் நினைவுக்கு வந்தார்.) பின்பு மதுரைக்கு வருகிறது. ஒரு முழு அத்தியாயம் முழுவதும் வரும் மதுரையைப் பற்றி பத்து நாட்கள் மதுரையில் தங்கித்தான் எழுதியிருக்க முடியும்.
பிறகு லண்டன் சென்று கெலடி-க்கு வந்து மிர்ஜான் கோட்டையில் முடிகிறது. இதில் உள்ள நிகழ்வுகளின் தொடர்ச்சி என்பது அற்புதமானது. இந்த சாதனை எப்படிச் சாத்தியம் என்றால் அதற்குப் பின் முருகன்ஜி-யின் அசுர உழைப்பு இருக்கிறது. நேரடியாக கூர்க் மாவட்டத்திற்குச் சென்று தங்கியிருந்து எழுத வேண்டிய கதையை பெருந்தொற்று காரணமாக சென்னையிலேயே இருந்து எழுதியதாக ஒரு முறை என்னிடம் அவர் சொன்னார். அந்தச் சூழலை மனதுக்குள் வரித்துக் கொள்ளாமல் இப்படி அற்புதமாக எழுதியிருக்க முடியாது. அவ்வகையில் அவரது உழைப்பு என்பது அசாதாரணமானது. ராட்சத்தனமானதும் கூட.
சதுர்முகப்பஸதி இந்த நாவலை நகர்த்திச் செல்கிறது. இப்புதினத்திற்கு அது ஒரு டூல் கிட் போல அமைந்திருக்கிறது.
வரலாற்றுடன் இதில் அறிவியலும் கலந்திருப்பதை கொஞ்சம் இயற்பியலும் க்வாண்டம் மெகானிக்ஸ்-ம் தெரிந்தவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும். அதோடு இழைந்து வணிகவியலும் வருகிறது. Commodity trading என்பதை லிஸ்பனில் வைத்து கையாளுகிறார். கலாச்சாரம் என்ற சாரத்தை கதை முழுவதும் இழையோடச் செய்திருப்பதில் அவரது புத்திசாலித்தனம் இருக்கிறது.
மற்றொன்றையும் சொல்லியாக வேண்டும். ஒவ்வொரு
கதாபாத்திரமும் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து ஒன்றை நிகழ்த்திவிட்டு மற்றொரு காலகட்டத்தில் தன்னைப் பிரதி எடுத்துக்கொள்கிறது. Point and Counter Point போல. உதாரணமா பெட்ரோ கதாபாத்திரம் Point என்றால் நேமிநாதன் கதாபாத்திரம் Counter Point.
முழுக் கதையும் time lineல் non linear ஆக நானூறு வருடங்களுக்குள் மாறி மாறிப் பயணிக்கிறது. அதில் editing குறிப்பிடத்தக்கது. திரைப்படம் தவிர்த்து இந்தியாவில் படைப்பிலக்கியத்துறையில் Editing என்னும் திறன் தனித்துறையாக இன்னும் வளரவில்லை. மேற்கத்திய நாடுகளில் editing houses உண்டு. ஒருவர் எழுதுவது அப்படியே அச்சு
ஏறாது. பதிப்பாளர் சார்பில் ஒரு எடிட்டர் எடிட் செய்த பிறகே அது
புத்தகமாக வெளிவரும்.
இந்தியாவில் எழுத்துலகில் professionsl editors குறைவு.
ஆனால் மிக அற்புதமாக மிளகு பெரும்புதினத்தை எழுத்தாக்கம் செய்திருக்கும் முருகன்ஜி மிக அழகாகவும் நேர்த்தியாகவும் அதை எடிட் செய்திருக்கிறார். அதனால் கொஞ்சமும் பிசிறடிக்காமல் எகிறிச் சென்றுவிடாமல் தெளிவாகப் பயணிக்கிறது மிளகு.
எழுத்து நடை என்று பார்க்கும் போது இரண்டு விஷயங்கள் முன்னிலை வகிக்கின்றன. ஒன்று ஹாஸ்யம். அதுவும் பகடி கலந்த ஹாஸ்யம். அங்கங்கே அதைத் தூவிச் செல்கிறார். அந்த ஹாஸ்யம் இல்லாத அத்தியாயமே இல்லை எனலாம்.
இரண்டாவது சிருங்காரம். கொஞ்சம் வார்த்தைகள் மாறிப்போனால் எல்லை தாண்டிவிடக்கூடிய கட்டங்களில் கூட வரம்பு மீறாத சிருங்காரம் கதை முழுவதும் ரசிக்கக் கிடைக்கிறது. அந்தக் கட்டங்களை முருகன்ஜி விரசம் கலவாது அழகாகக் கையாண்டிருக்கிறார். அது எவ்வளவு கடினம் என்பது எழுதுபவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
தான் எழுதியது பிரசிவித்த குழந்தைக்குச் சமம். அதை எடிட் செய்வது மிகக் கடினமானது. 2000 பக்கங்களுக்கு அதிகமாக எழுதப்பட்டால் தான் இறுதியாக அது எடிட் செய்யப்பட் 1380 பக்கங்களாக ஆகியிருக்க முடியும். அவ்வகையில் எடிட்டிங் என்பது இந்தக் கதையின் ஆகச்சிறந்த ஓர் அம்சம் என்று நான்
சொல்வேன்.
இன்னொரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். காந்தஹார் விமான நிலையத்தில் இந்திய விமானம் கடத்தப்பட்ட நிகழ்வு சொல்லப்பட்டுள்ள விதம்.
ஒரு கதையை வாசிக்கும் போது அதில் இடம் பெறும் ஒரு கதாபாத்திரமாக நம்மை நாமே உணர்வது என்பது சாதாரணமாக நிகழ்வதே. ஆனால் இந்தக் கதையில் முருகன்ஜி படைக்காத ஒரு கதாபாத்திரமாகவே நாம் மாறி அவர் படைத்த அனைத்துக் கதாபாத்திரங்களுடனும் கதை முழுவதும் தொடர்ந்து நாமும் நடமாடிப் பயணிக்கும் புதிய அனுபவம் நேர்கிறது. விமானக் கடத்தலின் போது நாமும் ஒரு பணயக் கைதியாக உணர்கிறோம்.
மிர்ஜான் கோட்டையின் பாதுகாப்பை மிளகு ராணி மேற்பார்வையிடும் போது நாமும் அங்கே ஒரு காவலாளி போல நிற்கிறோம். திலிப் ராவ்ஜி-யும் அவரது தந்தையும் பேசும்போது நாம் அங்கே ஒரு சமையல்காரனாக நிற்போம். இப்படி எல்லாக் கட்டங்களிலும் நாமும் கதைக்குள் மூழ்கி இடம் பெறுவது என்பது முருகன்ஜ-யின் எழுத்து வன்மையின் வெற்றி.
கதையில் இடம் பெற்றிருக்கும் எலும்பும் எறும்பும் கவிதையும் குறிப்பிடத்தக்கது. மதுபானத்தில் ஊமத்தைச் சாற்றைக் கலந்து தரும் திட்டம் ஒரு conspirators போலவே. எழுதப்பட்டுள்ளது. என்னைக் கவர்ந்த இன்னொரு விஷயம் ஆவிகளோடு பேசக்கூடிய மீடியம் நபர்களைப் பற்றிய கட்டம். ஊஜா
போர்ட் என்பது அதன் கருவி என்பர். அதன் அமைப்பு முதல் எழுத்துக்கள் நகர்த்தப்படும் விதம் வரை அத்தனை விவரங்களையும் எழுதி அதை இந்தக் கதையில் ஒரு கேரக்டராகவே முருகன் படைத்திருக்கிறார். தீவிர ஆராய்ச்சி இன்றி அந்த எழுத்து சாத்தியமல்ல.
மதுரையைப் பற்றி எழுதும் போது உயிர் உள்ள நகரம் என்று எழுதியிருப்பார். ஒரு எழுத்தாளன் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை எந்த அளவுக்கு உன்னிப்பாக கவனிக்கிறான் என்பதற்கு இது ஓர் உதாரணம். அதுதான் நம்மை அந்த எழுத்தை வாசிக்க வைக்கும்.
தன் கதையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு வாசகத்திலும் முருகன்ஜி ஒரு
செய்தியைப் பகிர்கிறார். அவரது எழுத்தால் அச் செய்திகள் இலக்கியத்தன்மை அடைகின்றன. எல்லா செய்திகளையும் எழுதிவிட முடியாது. செய்திகளைச் சம்பவங்களோடு கலந்து எழுதும்போதுதான் சுவாரஸ்யம் பெறுகின்றன. அந்த லாவகம் இந்தக் கதையின் சிறப்பம்சமாகும். தன்னுடைய அரசூர் வம்சம் மன்றும் ராமோஜியம் நூல்களைத் தாண்டி புதிய உயரத்தை முருகன்ஜி இப்புதினத்தால் தொட்டிருக்கிறார்.
என்னுடைய காலத்திலிருந்து தினமும் சில மணி நேரங்களைக் களவாடி நான் மிளகு பெரும்புதினத்தைப் படித்தேன். காலை உணவாகப் பொங்கலில் வரும் மிளகு போல, கடையில் நாம் வாங்கும் மிளகைப் போல நம்
உடலைப் பாதுகாக்கும் மருந்தாகும் மிளகைப் போல இந்த மிளகும் திகழ்கிறது. ஓர் அடுக்கு ரோஜாவின் இதழ்களைப்போல பல அடுக்குகளாக உருவகங்களோடு தன்னைப் பிரதி எடுத்துக்கொள்ளும் கதாபாத்திரங்களோடு படைக்கப்பட்ட ஓர் அபுனைவாக பிரம்மாண்டமாக அழுத்தமாக மிக அழகாக மிளகு வந்திருக்கிறது என்ற வகையில் தமிழ்ப்புதின வரலாற்றில் மிளகு ஒரு சகாப்தம் ஆகத் திகழ்கிறது. It is his magnum opus as of now. தமிழின் ஆகச் சிறந்த 25 புதினங்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்தால் அதில் நிச்சயம் மிளகு இடம்பெறும்.
முருகன்ஜி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். நன்றி.
July 7, 2022
மீண்டும் – ராஜம் கிருஷ்ணன் நேர்காணல் – இரா.முருகன் வார்த்தை டிசம்பர் 2008 இதழ்
‘வார்த்தை’ பத்தி – குட்டப்பன் கார்னர் ஷோப் – ஒன்பது
இன்றைக்கு துலா மாசத்து சஷ்டி. அப்பா திதி. விஷ்ராந்தி போயிருந்தேன்.
பாலவாக்கம் மாதாகோவிலோடு திரும்பிக் கடற்கரையை நோக்கிப் போகும்போது உள்ளொடுங்கி இருக்கிற கட்டிடம் விஷ்ராந்தி. நிராதரவான முதியவர்களுக்கான காப்பகம். அம்மாவும் பாட்டித் தள்ளையுமாக வயசான பெண்களுக்கு மட்டுமான அந்த விடுதிக்கு இரண்டு மாதத்துக்கு ஒருமுறை போகிற வழக்கம். அங்கே ஒவ்வொருவரோடும் கொஞ்சம் பேசி, சாப்பிடும்போது பரிமாறி, இலையில் அல்லது ஏந்திய கையில் இனிப்பையோ பழத்தையோ வைத்து சாப்பிடச் சொல்லி திரும்பி வரும்போது ஆத்மார்த்தமாக ஒன்றி சில மணிநேரம் கடந்து போயிருக்கும். காப்பகத்தில் தங்கியிருப்பவர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். சிலர் மறைகிறார்கள். சிலர் புதிதாக வருகிறார்கள். இந்த ஆகஸ்டில் தான் ஓணத்தை ஒட்டி விஷ்ராந்தி போயிருந்தேன். அப்போது அங்கே ராஜம் கிருஷ்ணன் இல்லை.பாட்டியம்மா எல்லோரும் ப்ரேயருக்குப் போயிருக்காங்க சார், கொஞ்சம் உட்காருங்க என்கிறார் வரவேற்பறையில் இருந்த இளம்பெண். இரண்டு மாதத்துக்கு முன்னால் இவளைப் பார்த்த நினைவில்லை. காப்பகத்தில் பொறுப்பாளர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் எல்லோருக்கும் அன்பாகப் பேசத் தெரிந்திருக்கிறது. வயதானவர்களோடு நாள் முழுக்க இருக்க நேரும்போது இந்த அன்பும் சிரிப்பும் இல்லாவிட்டால் இரண்டு தரப்புக்குமே நரகமாகிவிடும். விஷ்ராந்தி மூதாட்டிகளில் பலரும் இந்த நரகத்திலிருந்து மீண்டு வந்தவர்கள். அவர்களுடைய கடைசி தினங்களில் மறுபடி அங்கே போகமுடியாது.
ராஜம் கிருஷ்ணன் புனே கிளம்பிப் போய்ட்டாங்களா? நான் கேட்ட உடன் அந்தப் பெண் சட்டென்று நிமிர்ந்து பார்த்து இல்லை என்று தலையசைக்கிறாள்.
முதுபெரும் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் தற்போது விஷ்ராந்தியிலே இருக்காங்க. முந்தாநாள் தான் சந்தித்துவிட்டு வந்தேன். அநேகமாக இந்த வாரக் கடைசியிலே விஷ்ராந்தியை விட்டுப் புறப்பட்டு புனே போறாங்க. உறவுக்காரர் கூட்டிப் போறாராம். நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் அளித்த தகவல் அது.
இதமான குரலுக்கு இன்னொரு நல்ல உதாரணம் திருப்பூர். எழுத்து போல அவருடைய பேச்சும் குரலும் ஆளுமையும் மனதுக்கு எப்போதுமே அலாதியான அமைதியையும் நிறைவையும் கொடுக்கக் கூடியது. திருப்பூர் கிருஷ்ணன் போய்ப் பார்த்துவிட்டு வந்தார் என்பதே எனக்கு ஆறுதலான செய்தி. ராஜம் கிருஷ்ணன் பற்றிய பத்திரிகைத் தகவல் பெரும்பாலும் உண்மை என்று உறுதி செய்தார் அவர். அந்தப் புரட்சிப் பெண்மணி எந்த அரசாங்க, தனியார் உதவியையும் எதிர்பார்த்துக் கைகட்டி நிற்க மாட்டேன் என்று உறுதியாகச் சொன்னதாகவும் திருப்பூர் சொல்லியிருந்தார். ராஜம் கிருஷ்ணன் வேறே எப்படியும் சொல்லியிருக்க மாட்டார்தான்.
ராஜம்மா புனே போகலேன்னா, அவங்க இங்கேதான் இன்னும் இருக்காங்க, இப்போ ப்ரேயர் போயிருக்காங்க, சரிதானே?
வரவேற்பறைப் பெண்ணிடம் விசாரிக்க அடுத்த சிரிப்போடு அவள் சுபாவமாகச் சொல்கிறாள் – அவங்க இங்கே தான் சார் இருக்காங்க. ஆனா இப்போ பார்க்கறது கஷ்டமாச்சே. ஓய்வெடுத்துட்டு இருக்காங்க. உடல் நலமில்லே.
ஒரு வாரமாக இதே ரொட்டீன் பதிலை எத்தனை பேரிடம் சொல்லியிருப்பாளோ. திருப்பூர் கிருஷ்ணனுக்கும் இந்த மறுமொழி கிடைத்திருக்கும். தீபாவளி நேரத்தில் வாரப் பத்திரிகையில் செய்தி வந்த பிறகு விஷ்ராந்திக்குத் தொலைபேசியும், நேரில் சென்றும் ராஜம் கிருஷ்ணனைப் பற்றி சில பேராவது விசாரித்திருக்கலாம். சாகித்திய அகாதமி பரிசு பெற்ற, தமிழின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரும், பெண் விடுதலைக்கான போராளியுமான ராஜம் கிருஷ்ணன் தன் எண்பத்து மூன்றாம் வயதில் விஷ்ராந்தியில் வந்து சேர்ந்திருப்பதாகப் பத்திரிகையில் வந்த செய்தி திருப்பூரைப் போல், என்னைப் போல் பலரையும் பாதித்திருக்கக் கூடும்.
தம்பி இங்கே அடிக்கடி வர்றவரு. பிரேயருக்குத் தாமதமாகக் கிளம்பிப் போய்க் கொண்டிருந்த ஒரு பாட்டி என் அருகில் வந்து கண்ணுக்கு மேலே ஷேடு கட்டிப் பார்த்துவிட்டு அடையாளம் கண்டுகொண்ட சந்தோஷத்தில் மலர்ந்த முகத்தோடு சொல்கிறாள். குழந்தைச் சிரிப்பு கூடவே இழைந்து கொண்டு வருகிறது.
அந்த முதிய குழந்தை சிபாரிசில் ராஜம் கிருஷ்ணனை சந்திக்க உடனே அனுமதி கிடைக்கிறது.
சீக்கிரம் வந்துடுங்க சார். பிரேயர் முடிஞ்சு பாட்டியம்மா எல்லாம் உங்களுக்காகக் காத்திருப்பாங்க.
வரவேற்பறைப் பெண் என் கையிலிருந்து இனிப்புப் பொதியை வாங்கி ஓரமாக வைத்தபடி சொல்கிறாள். நான் வழக்கமாக வாங்கிப் போகிற லட்டு உருண்டைகளை விஷ்ராந்தியில் ஒவ்வொரு பாட்டி கையிலும் கொடுக்கும்போது சுதந்திரதினக் கொடியேற்றி இனிப்பு மிட்டாய் பெற்ற பள்ளிக்கூடப் பிள்ளைகள் போல் அந்த முகங்களில் தென்படும் ஆனந்தம் அளவிட முடியாதது. கடுமையான சர்க்கரை வியாதி இருக்கிற சில பாட்டிகள் வாழ்க்கையில் இதுவரை அனுபவித்த சோகங்களில் லட்டு வாங்க முடியாத இந்த சோகம்தான் மகத்தானது என்று தோன்றப் பரிதாபமாகப் பார்க்கும்போது எனக்கே அம்பலப்புழை மேல்விலாசம் சாட்சாத் கண்ணன் மேல் இப்படி அப்படி என்றில்லாத கோபம் வரும் (வேறு யார் பேரில் கோபப்பட?). தீபா மேத்தாவின் ‘தண்ணீர்’ படத்தில் லட்டுக்காக உயிரையே விடும் பாட்டி இந்தக் கூட்டத்தில் இருந்துதான் போயிருப்பாள்.
லட்டு நினைவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு காப்பகப் பொறுப்பாளரான இன்னொரு இளம்பெண்ணோடு நடக்கின்றேன். காம்பவுண்ட் கடைசியில் மருத்துவ விடுதி.
அம்மா, உங்களைப் பார்க்க உங்க நண்பர் வந்திருக்கார். பார்க்கலாமா?
கதவு அருகில் இருந்தே இவள் சொல்ல, உள்ளே இருந்து ஈன சுவரத்தில் பதில். வரச் சொல்லும்மா.
சீக்கிரம் முடிச்சுட்டு வந்துடுங்க. காத்திருப்பாங்க.
நினைவூட்டிய திருப்தியில் திரும்பப் போகும் இந்தப் பெண்ணுக்கும் மறக்காமல் இனிப்புக் கொடுக்க வேண்டும். செருப்பை வெளியே விட்டுவிட்டு நுழைகிறேன்.
வரிசையாகக் கட்டில்கள். கடைசிக் கட்டிலில் உடல் தளர்ந்து ராஜம் கிருஷ்ணன். முன்னணித் தமிழ்ப் படைப்பாளிகளில் பட்டியலை யார் எப்போது தேர்ந்தெடுத்தாலும் தவறாமல் இடம் பெறும் பெயர் அவருடையது. சீட்டுக் குலுக்கிப் போட்டு எடுத்தாலும் அவர் பெயர்ச் சீட்டு நிச்சயம் வரும். அவரா இவர்?
மெல்ல எழ முயன்று திரும்பத் தலையணையில் சாய்கிற போதும் தொடரும் நட்பான சிரிப்போடு எப்படி இருக்கீங்க என்கிறார். பெண்மைக்கே உரிய கம்பீரத்தோடு அவரும், எப்போதும் நிழலாகத் தொடர்ந்து அவருக்கு வலிமை தந்த அன்புக் கணவருமாகச் சிலகாலம் முன்பு வரை இலக்கிய விழாக்களில் தவறாமல் பார்த்த ராஜம் கிருஷ்ணன் எங்கே? ஒரு சின்னச் சிரிப்பு மாத்திரம் பாக்கி இருக்க அந்த அந்நியோன்யமான தம்பதி எந்த வெளியில் கரைந்து போனார்கள்?
கடைசியா இலக்கியச் சிந்தனை விருந்துலே பார்த்தோம். பத்து வருடம் முந்தி.
நினைவு படுத்துகிறேன். ராஜம் கிருஷ்ணன், மகா ஸ்வேதா தேவி, தோப்பில் முகம்மது மீரான், மாலன். இவர்களோடு அந்த ஆண்டுக்கான இலக்கியச் சிந்தனைச் சிறுகதை விருது பெற்றவன் என்ற முறையில் குட்டப்பன் கார்னர்ஷோப் காரனும் கலந்து கொண்ட பகல் விருந்து அது. இலக்கியச் சிந்தனை அறங்காவலரும் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அவர்களின் குடும்ப இல்லத்தில் நடைபெற்றது.
ஆமா, நினைவு இருக்கு. ராஜம் திரும்பப் புன்னகைக்கிறார்.
மகாஸ்வேதாதேவி. அவங்க முற்போக்கு முகாம்.
மெல்லச் சொல்கிறார்.
நீங்க மட்டும் என்னவாம்? நான் திரும்பக் கேட்கிறேன். இவரிடம் இனியும் பகிர்ந்து கொள்ள எந்த சோகமும் இல்லை. நானும் அவரும் பத்து வருடம் முன்பு விட்ட இடத்தில் இருந்து உரையாடலைத் தொடரப் போகிறோம். அவ்வளவுதான்.
எளிதில் உடையக் கூடிய கற்பிதம் இது. ஆனாலும் அவருக்கு ஏதோ ஒரு விதத்தில் ஆசுவாசம் அளிக்கக் கூடும். அப்போது எனக்கும் அதேபடிதான்.
நானா, முற்போக்கா? சரி. பெண்ணுரிமை பேசுகிற எல்லா இயக்கத்திலேயும் என்னைத் தீவிரமா இணைச்சு இயங்கியிருக்கேன். ஆனால் அங்கேயும் பெண்ணுரிமை எந்த அளவு இருந்தது?
எனக்குத் தெரியலை என்கிறேன்.
தேசியப் பெண்கள் மாநாட்டுக்கு இவங்களா போகணும்? என்ன படிச்சிருக்காங்க? என்னத்தைப் பேசுவாங்க? இவங்களுக்கு என்ன தெரியும்னு முட்டுக்கட்டை போட்டாங்க. ஆனாலும் போனேன். பேசினேன். முற்போக்கு.
அந்த அமைப்பின் பெயரைச் சொல்லிவிட்டு சாந்தமாக மறுபடி சிரிக்கிறார். நான் படுக்கைக்கு அருகே நிறுத்தியிருந்த வாக்கரைப் பார்க்கிறேன்.
இதப் பிடிச்சுட்டுத்தான் கொஞ்சம் நடமாட முடியுது. அவர் தொண்ணூறு வயசுவரைக்கும் எனக்கு எல்லாமுமாக இருந்தார். போன அப்புறம் ஆக்சிடண்ட்.
கணவரின் நினைவில் ஒரு கணம் அமைதியாக இருந்து, தொடரும்போது குந்தா அணைக்கட்டு கட்டுமானப் பணி நிறைவேறும் மலைச் சரிவில் இருந்தார் ராஜம் கிருஷ்ணன். ஐம்பது வருடம் முந்திய, ஜவஹர்லால் நேருவின் ஆதர்சம் நிறைவேறத் தொடங்கியிருந்த இந்தியா அது. பொறியாளரான கணவரோடு அணைக்கட்டு பகுதியில் குடித்தனம் நடத்த இளம் பெண்ணாக ராஜம் புறப்பட்டுப் போனபோது எழுத ஆரம்பித்திருந்தார். கலைமகள், கல்கி மூலம் தெரிய வந்த ராஜம் அவர்.
நாத்திமார், மைத்துனர்கள் என்று ஏகப்பட்ட பேர் இருந்த அன்பான கூட்டுக் குடும்பத்தில் ராஜம் கிருஷ்ணன் மருமகளாகப் புகுந்தபோது அவருக்கு பதினாறு வயதும் திகையவில்லை.
அந்தக் காலக் கல்யாணத்துக்கு இப்போ எங்கே ப்ரூப் தேடி நிரூபிக்கறது?
நான் விழித்தேன். வாக்கரை வெறித்தபடி அவர் நிகழ்காலத்துக்கு வந்திருந்தார்.
அரசு ஊழியராக இருந்து ரிடையர் ஆனவரின் மனைவி. குடும்ப பென்ஷன் சாங்ஷன் பண்ண நான் எங்க வீட்டுக்காரருடைய சட்டபூர்வமான மனைவின்னு நிரூபிக்கணும்னாங்க. அறுபது வருஷம் முந்திய கல்யாணத்துக்கு ஏது சாட்சி?
நண்பர்கள் உதவியால் தற்போது பென்ஷன் கிடைக்கத் தொடங்கியிருப்பதாகச் சொன்னார். வயதான காலத்தில் உறுதுணையாகத் தாங்கப் பிள்ளைச் செல்வமோ, சேர்த்து வைத்த சொத்தோ இன்றி நிர்க்கதியாக நின்ற ராஜத்தின் பெயரில் கடவுளுக்குக் கொஞ்சம் போல இரக்கம் இருக்கிறது. நன்றி கிருஷ்ணா.
குந்தா அணைக்கட்டு போனபோது யாரை முதல்லே பார்த்தேன் தெரியுமா?
அவர் நினைவுகளுக்குத் திரும்பி விட்டார். மறுபடியும் கசியும் ஆசுவாசம்.
மலை உச்சிக்கு ரெண்டு பேரும் ஜீப்புலே போய் இறங்கறோம். அணைக்கட்டுக்கு நேர்கீழே. படகர் இன மக்கள் வாழும் பகுதி அது. இயற்கையோடு அந்த அளவு நெருக்கமான இனம் வேறே எத்தனை இருக்கு? அவங்க வாய்மொழி இலக்கியம் ஒண்ணே போதும். ஐரோப்பிய மொழிகளில் பழைய கதைப்பாடல் (ballad) மாதிரி வளமான படைப்புகள் அதெல்லாம். தேடித்தேடிச் சேர்த்து வச்சேன். இப்போ எங்கே போச்சோ தெரியலை.
திரும்ப ஒரு வினாடி மௌனம். நான் வாக்கராக ஒத்தாசை செய்து அவரை மறுபடி குந்தா அழைத்துச் செல்கிறேன். அங்கே போய்ச் சேர்ந்ததும் பார்த்தது யாரை?
என் கணவருக்கு வணக்கம் சொல்லி பின்னால் இருந்து ஒரு குரல் கூப்பிட்டது. திரும்பிப் பார்த்தேன். நான் தான் ஜவஹர் என்றார். இந்தப் பகுதியிலேயே பிறந்து வளர்ந்து இப்போ இந்த அணைக்கட்டு திட்டத்தில் வேலை செய்யறேன்னார்.
நான் எழுதப் போற நாவல்லே கதையை இவர்தான் நடத்திப் போகப் போறார்னு அப்பவே முடிவு செஞ்சேன்.
நாவலுக்கு முன் கதாநாயகன் பிறந்த கணத்தில் ஆழ்கிறார் ராஜம் கிருஷ்ணன்.
அறுபது வருடம். குறிஞ்சி பூக்கிற ஐந்து காலத்தில் நிகழ்கிற நாவல் குறிஞ்சித் தேன். படகர் இனத்தின் வாழ்க்கை முறை, கலாசாரம், முன்னேற்றம்னு மத்தவங்க சொல்றதோடு அவங்க அந்நியப்பட்டுப் போறது எல்லாத்தையும் பற்றி அந்த மக்களோடு நிறையப் பேசி, கலந்து பழகி அப்புறம்தான் நாவல் உருவானது. மேதா பட்கர் இப்போ சொல்றதை படகர்கள் அப்பவே எடுத்துக் காட்டினாங்க.
ராஜம் கிருஷ்ணனில் எல்லாப் படைப்புகளுக்கும் பொதுவானது இப்படியான கலந்து பழகுதலும் கள ஆய்வும். கரிப்பு மணிகள், அமுதமாகி வருக, வளைக்கரம். சொல்லிக் கொண்டே போகலாம். சொல்லுகிறார். நேரம் மெல்ல ஊர்கிறது.
கள ஆய்வோடு கூட நிறையப் புத்தகங்களைப் படிக்கறதும் அவசியம். சென்னை மத்திய நூலகத்தில் புத்தகம் கொடுக்க மாட்டேன்னுட்டாங்க. சாகித்ய அகாதமி பரிசு பற்றிக் கூடச் சொன்னேன். அது எல்லாம் இங்கே ஒரு பொருட்டே இல்லை. ஆனா, தில்லியிலே விஷயம் வேறே. லைபிரரியில் புத்தகம் கேட்டபோது அப்ளிகேஷன் கொடுத்தாங்க. கட்டம் கட்டமாகப் பூர்த்தி செஞ்சுட்டுப் போனா, ஒரு இடத்திலே, தொழில்னு கேட்டிருக்கு. அதிலே பட்டியல் போட்டிருந்த எதுவுமே நான் செய்யாதது. ஒட்டுமொத்தமா அடிச்சுட்டு ரைட்டர்னு எழுதிக் கொடுத்தேன். உடனே அவங்க பார்வையே மாறிப் போச்சு. கடைநிலை ஊழியர் என்னை உட்காரச் சொல்லி, மின்விசிறியைப் போட்டு தேநீர் கொண்டுவந்து கொடுத்தார். மத்த எல்லா இடத்திலேயும் எழுதறவங்க மேலே கரிசனம் உண்டு.
ராஜம் சொல்லி நிறுத்துகிறார்.
இத்தனை உழைச்சு மணிமணியாகப் படைப்புகளை உருவாக்கிவிட்டு அதையெல்லாம் ஏன் தீவச்சுக் கொளுத்திட்டு இங்கே வந்தீங்க?
நான் கேட்கிறேன். அவர் இல்லை என்று கையை அசைத்து மறுக்கிறார்.
அந்தப் பத்திரிகையிலே தவறாகப் போட்டிருக்காங்க. நான் அப்படிச் சொல்லலே.
விபத்துலே அடிபட்டு ஒதுங்கி வசதி குறைந்த பகுதிக்குக் குடிபெயர்ந்தபோது அதை எல்லாம் விட்டுட்டு வரவேண்டிப் போச்சு. அங்கே இருந்து என் நண்பர்கள் பாரதி சந்துருவும் திலகவதியும் தான் என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தது.
வார்ட் உள்ளே யாரோ ரேடியோவை உச்சகட்ட ஒலியில் வைக்கிறார்கள். குத்தாட்டப் பாட்டு ஒன்று இரைச்சலாக ஒலிக்க அதை மீறிப் பேச முயல்கிறார். வேண்டாம் என்று சொல்ல தயக்கமாக இருக்கிறது.
திலகவதியை முதல்லே பார்த்தபோது என்ன சொன்னாங்க தெரியுமா? ராஜம் என்னை விசாரிக்கிறார்.
உங்க கதையைப் படிச்சுத்தான் எழுத்தாளராக உத்வேகம் வந்ததுன்னு சொல்லியிருப்பாங்க. சரியா?
இல்லே. என் கதையைப் படிச்சுத்தான் போலீஸ் அதிகாரியாக முடிவு செஞ்சதாகச் சொன்னாங்க.
ராஜம் திரும்ப மறுத்தபடி சிரிக்கிறார்.
அவர் முதுகுப் பக்கம் காகிதம் கோர்த்த ஒரு அட்டை தட்டுப்படுகிறது. நான் பார்ப்பதைக் கவனித்து அதை மெல்லத் தடவி எடுத்து என்னிடம் காட்டுகிறார். பாதி எழுதிய கட்டுரை ஒன்று. எழுத்து தெளிவாக இருக்கிறது.
ஊஹூம், இது கிறுக்கித்தான் வந்திருக்கு. பத்திரிகை பத்தி எழுதறேன்.
இன்னொரு தடவை என்னை மறுத்து அதே பிரியத்தோடு புன்னகைக்கிறார்.
தொலைபேசி ஒலிக்கிறது. எனக்குத்தான் என்று தெரியும். லட்டுக்காகக் குழந்தைகள் காத்திருக்கின்றன. விடைபெற்று நடக்கிறேன். கரிப்பு மணிகள் மனதில் இனிப்போடு படிகின்றன. கடல் காற்று வீசத் தொடங்கி இருக்கிறது.
(Vaarthai – Dec 08)
July 6, 2022
அகல்யா தாய்க்குப் பார்க்கக் கொடுத்து வைக்காத அவளது மரணம் – வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து
வாழ்ந்து போதீரே அரசூர் நாவல் நான்கில் இருந்து
வாழ்ந்து போதீரே அத்தியாயம் முப்பத்தாறு
மலா பாக ருபயீ த்யா, மோதா பாவு. அப்பன் காஹீ தூபா கரீதீ கரூ.
ஐந்து நிமிஷம் முன் டோம்பிவிலி ஃபாஸ்ட் லோக்கல் ரயிலில் வந்து சேர்ந்தவன், ரிடர்ன் டிக்கட்டை சிகரெட் பாக்கெட்டுக்குள் பத்திரப்படுத்தியபடி திலீப்பிடம் சொன்னான். ஐந்து ரூபாய் வேணுமாம். போய் நெய் வாங்கி வருவானாம்.
நாலு மூங்கில் கழிகளும் தென்னங் கிடுகுமாக சைக்கிளில் வந்த இன்னொருத்தன் வண்டி பிரேக் பிடிக்காமலோ, இல்லை விளையாட்டாகவோ கட்டிடச் சுவரில், சினிமா கதாநாயகி நடிகை நூதன் படம் ஒட்டிய போஸ்டரில் இடுப்புக்குக் கீழ் முட்டி நிறுத்தினான்.
ஒன்றும் இரண்டுமாக மூலத்தார் வேட்டி உடுத்தி, வெள்ளைக் குல்லா வைத்த நடுவயசு மராட்டியர்களும் இளைய ஆண்களும் உரக்கப் பேசியபடி வந்து கொண்டிருந்தார்கள்.
பாண்டுப் சர்வமங்கள் சாலில் சாவுச் சடங்கு நடத்திக் கொடுக்க திலீபுக்கு ஒத்தாசையாக வருகிறவர்கள். அவர்கள் எல்லோரையும் திலீப் அறிவான். காமத் ஓட்டலில் சர்வர் விடுப்பில் போக டெம்பரவரியாக வடா பாவ் பார்சல் கட்டுகிறவர்கள். எச்சில் இலைகளை எடுத்து இரும்பு வாளியில் ரெண்டு பேராக நீளக் கயிறு கட்டித் தூக்கிப் போய் குப்பை குவிக்கும் பெருவெளியில் வீசி எறிந்து விட்டு பீடி புகைத்தபடி வருகிறவர்கள். விநாயக சதுர்த்திக்கு தாதரிலும் மடுங்காவிலும் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி விளாம்பழம் விற்கக் கடை போட்டு, பக்கத்து நடைபாதைக் கடைக் காரர்களால் வசவும் கேலியும் பெற்று பொருட்படுத்தாமல் வியாபாரம் செய்கிறவர்கள். தீபாவளிக்கு பெரிய முறங்களில் உள்ளூரிலோ மராத்வாடா பிரதேச கிராமங்களிலோ அபாயமில்லாத வெங்காய வெடி செய்து அனுப்புவதைப் பரத்தி அதே நடைபாதைகளில் ஒன்று இரண்டு வெடிகளைத் தரையில் எறிந்து பலமாக வெடித்து விற்பவர்கள். மகாலட்சுமி கோவில் வாசலில் செருப்பு டோக்கன் கொடுத்து காசு வசூலிப்பவர்கள். இல்லாத நேரங்களில் பிணம் தூக்குகிறவர்கள்.
எப்படியோ யார் மூலமோ தகவல் தெரிந்து சாவு விழுந்த மராட்டிய வீடுகளுக்கு எல்லாம் கிரமமாக நடத்திக் கொடுத்துப் பிணம் தூக்கிப் போக வந்து விடுகிறவர்கள். அவர்களை திலீப் வேறு இடங்களிலும் சந்தித்திருக்கிறான். அதெல்லாம் அவனும் போகக் கூடாத இடங்கள் தன். நல்ல வேளையாக அகல்யா வந்தாளோ அதை எல்லாம் விட்டு விலகி வந்தானோ.
பய்யா, பைசா கொடு. கொடுத்தாத் தான் நெய் வாங்கிட்டு வர முடியும்.
நெய் வாங்கக் காசு கேட்டவன் அண்டர்வேரோடு நின்று கால் சராயை மடித்து தோல்பையில் வைத்து கொண்டிருந்தான். மூலத்தார் வேட்டியை பக்கத்தில் இருந்தவன் தன் பையிலிருந்து எடுத்து நீட்டியபடி திலீபுக்காகப் பரிந்து வந்தான்
தருவான். அம்மாவைப் பறி கொடுத்த பிள்ளை. உனக்கு அந்த சோகம் தெரியாது
திலீப் அவனை விழித்துப் பார்த்தான். எல்லோரும் அவனிடம் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். சினிமாவில் பார்த்தபடி, தொடர்கதையில் படித்தபடி, மேடை போட்டு நீட்டி முழக்கித் தலைவர்கள் பேசுவதைக் கேட்டபடி, எல்லாரும் எதிர்பார்க்கிற படி அவன் இப்போது அழுது புரண்டு கொண்டிருக்க வேண்டும். கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வடிந்து சட்டையை நனைக்க, விம்மி விம்மி அழ வேண்டும். பக்கத்தில் இருப்பவர்கள் தேற்றத் தேற்ற, அம்மாவைப் பற்றிய பழைய நினைவுகளில் மூழ்கி அதைத் திடுமெனத் தொடங்கும் மறு பாதியாக, நடுவிலிருந்து பிய்த்து எடுத்த ஒரு வார்த்தையாக, சொல்லத் தொடங்கி விம்மலில் கரைகிறதாக வெளியிட்டபடி இருக்க வேண்டும். எதுவுமே இல்லாவிட்டால், டர்க்கி டவலால் தோளைப் போர்த்திக் கொண்டு சூனியத்தில் பார்வை நிலைக்க விழித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும்.
அகல்யா, ஒரு வாய் காப்பி கொடு. தலையை வலிக்கறது.
வாசலுக்கு வந்த அகல்யா அவனைப் பார்க்க, திலீப் கேட்டான்.
அவள் அவனைக் கண்டிப்பது போல் உதட்டைச் சுழித்துக் காட்டி நெய் வாங்கப் போகிறவன் குறுக்கிட, சாவு நடந்த வீட்டு எஜமானியாக முகத்தை வைத்துக் கொண்டாள்.
அகல்யா தலையை இறுக்கமாக முடிந்தபடி அவசரமாக அவன் பக்கம் வந்தாள். வாழ்க்கை பூரா சர்வமங்கள் சால் குடியிருப்பில் இந்த மாதிரி சமாசாரங்களுக்கு நடுவே குடும்பம் நடத்தி, ஆபீஸ் போய் வந்து, தீபாவளியும் கணேஷ் சதுர்த்தியும் கொண்டாடி, ஞாயிறு பகல் பக்கத்துக் குடித்தனப் பெண்களோடு ஊர் வம்பு பேசி, வடா பாவ் வீட்டிலேயே செய்ய முயன்று கருகலும், எண்ணெய் முறுகலுமாக எதையோ செய்து முடித்துப் பகிர்ந்து சாப்பிட்டு, கூடிய மட்டும் சந்தோஷமாக இருக்கிற பெண். தமிழ்ப் பிராமணத்தியோ, மராத்திக் காரியோ இல்லை. பெண். எல்லா சூழ்நிலைகளிலும் தலையை உயர்த்தி இருந்து, நதியோடு போய், எட்டரை மணி டோம்பிவிலி-தாதர் லோக்கல் போய் விட்டதா என்பது போன்ற கவலைகள் தவிர வேறே இல்லாத பெண்.
எதிர்க் குடித்தனத்திலே டாங்க்வாலே மருமகள் ரேகா காப்பி போட்டுண்டு இருக்கா. வடா பாவ் வாங்கி வந்தது இருந்தது, அதையும் ஸ்டவ்லே தண்ணி விட்டு மேலே வச்சு சூடாக்கறா. ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு நான் உள்ளே இருந்து கூப்பிடறேன். நேரே டாங்க்வாலே ப்ளாட்டுக்குள்ளே போயிடுங்கோ.
ரேகா எல்லாம் கொடுப்பாள்னா சரி.
அகல்யா அவனை மகா ஆச்சரியத்தோடு பார்த்தாள். அம்மாவைப் பறி கொடுத்து விட்டு நிற்கிறவன், பெண்டாட்டியிடம் ஏடாகூடமாக அர்த்தம் வரும் ஜோக் சொல்லுவானா என்ன? அவனுடைய சிந்தனையும் நினைவும் எல்லாம் ஈசுவரனிலும், உயிர் துறந்த ஆத்மாவை நற்கதிக்குக் கொண்டு செலுத்த இயன்றதைச் செய்வதிலும் அல்லவா இருக்கும்.
நீங்க எங்கேயும் போக வேண்டாம். சும்மா எதுவும் பேசாமா நின்னுண்டிருங்கோ. நானே வந்து கூட்டிப் போய்க் கொண்டு வந்து விடறேன்.
அவள் சொல்லி விட்டுப் போனவள் திரும்பி வந்தாள்.
வாசல்லே ஒரு ஷாமியானா பணிய வேண்டாமா? அகல்யா கேட்டாள்.
ஷாமியானா? புரியாமல் பார்த்தான் திலீப்.
பந்தல்.
எதுக்கு?
எதுக்கா? நாலு அண்டை அயல் பிராமணா குளிக்கறதுக்கு முந்தி வந்து எட்டிப் பார்த்துட்டு ஓடற கதையா என்ன?
வேறே என்னவாம்?
என்ன கேள்வி கேட்டாறது. நினைவில்லையா? நிறை சுமங்கலி. கல்யாணச் சாவு
அப்பா போயாச்சே. அப்புறம் என்ன சுமங்கலி?
அவர் காணாமல் தான் போனார். சௌக்கியமா எங்கேயோ இருக்கார்.
அதுக்கும் ஷாமியானாவுக்கும் என்ன சம்பந்தம்? திலீப் புரியாமல் கேட்டான்.
அது இருக்கட்டும். அம்மா பெரிய லாவணி ஆர்டிஸ்ட். மகாராஷ்ட்ரா பூரா தெரிஞ்சவா, சீஃப் மினிஸ்டர் வரலாம். உங்க பெரியப்பா. செண்ட்ரல் மினிஸ்டர் வருவார். கூடவே அதிகாரிகள் வரலாம். அப்புறம் உங்க தலைவர் கூட.
நிமிர்ந்து பார்த்தான் திலீப். உண்மைதான். அவனுடைய மராத்தி அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்வது இந்த சந்தர்ப்பத்தில் முக்கியமானது. மராத்திக்காரி அம்மா இறந்து போனாள். அவனுக்குள் கொஞ்சமாவது அவளுடைய மராத்தி ரத்தமில்லையா ஓடுகிறது?
முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல் நேரம். லாவணி ஆட்டக்காரி, மராத்தியப் பெண்மணி, ஷாலினிதாய்க்கு ஏக புத்ரன் திலீப். மராத்தியன் திலீப். திலீப் மோரே. இந்த வார்டில் போட்டியிடத் தகுதி. அம்மா இறக்க, திலீப்புக்கு கட்சி வேட்பாளர் அருகதை கிட்டும்.
சுறுசுறுப்பு தொற்றிக் கொண்டது. புதுசாக வந்து சேர்ந்த ஒரு எடுபிடியிடம் ஷாமியானா என்று சொல்ல அவன் சரியென்று சொல்லி, வந்த வேகத்தில் சைக்கிளைத் திருப்பி குலை தெறிக்க ஓட்டிப் போனான்.
வார்ட் பிரமுகர் மிட்டாய்க்கடை கதம் இந்தத் துக்கச் செய்தியைக் கேட்டு ஓடி வர வேணாமா?
ஓரமாகச் சுவரில் சாய்ந்து நின்று சிகரெட்டை ஊதிக் கொண்டிருந்த பிரக்ருதியை ஓடச் சொன்னான். அவனும் மகாராஜா உத்தரவு கொண்ட சிப்பாய் போல் சிட்டாகப் பறிந்தான்.
இந்தப் பயல்கள் எல்லோருக்கும் கணிசமாக, எல்லாம் முடிந்து போகும்போது கொடுக்க வேண்டும் என்று தெரியும். சகலத்துக்கும் செலவாகப் போகிற பணத்துக்கு என்ன செய்வது? பெரியம்மா சலுகை காட்ட, பிஸ்கட் பன்றி மனசே இன்றி அனுமதித்த நாலாயிரம் ரூபாய் கைவசம் உண்டு. அது போதுமா? அதுவும் இதெல்லாம் ஒரு நாள் காரியம் இல்லையே. தமிழோ, தெலுங்கோ, மராத்தியோ, பத்து நாளும் அதற்கு மேலும் இல்லையா ஏதேதோ வைதீகமும், விருந்துமாக முழங்குமே.
அவனுக்கு விசித்திரமாக இருந்தது. சொந்த அம்மா இறந்து போய் இப்படி அதைப் பற்றித் துக்கமோ வருத்தமோ இல்லாமல், மூன்றாம் மனிதன் மாதிரி, அதை அருகே இருந்து பார்த்து அனுபவப்படும் இழவாக மட்டும் எடுத்துக் கொள்ள எப்படி மனம் வந்தது? அடிப்படையிலேயே ஏதோ தவறு அவனிடம்.
இறப்பு சர்ட்டிபிகேட் வாங்கி வந்துடலாமா?
யாரோ கேட்டார்கள். நல்ல விதமாக உடுத்து, சட்டையைக் கால் சராய்க்குள் நுழைத்து கச்சிதமாக இடுப்பு வார் கட்டி இருந்தவர். டை மட்டும் தான் குறைகிறது. இருந்தால் பிஸ்கட் சாஸ்திரிக்கு சகலபாடி போல இருப்பான்.
நாசுக்கான, மேல் மட்டத்தில், அதிகாரப் பெரும் பரப்பில் நடத்தித் தர வேண்டிய காரியங்களைச் செய்வதே எனக்கு வேலை.
வந்தவன் சொன்னான். ஆக, மற்றவர்கள் மூலக் கச்சம் உடுத்தி திலீப்புக்கு சகாயம் புரிய வந்தால், நன்றாக உடுத்தி வேறே மாதிரி உதவி செய்ய வந்தவன் இவன். விரட்ட மனம் இல்லை. இவன் வகையில் நாலாயிரத்தில் ஆயிரமாவது போகலாம். போகட்டும். சாவு சர்டிபிகேட் இல்லாமல் எப்படி மயானத்தில் எரிப்பது?
முன்பணமாக அவனுக்கு இருநூறு ரூபாய் எடுத்துக் கொடுத்து, இன்னொரு எடுபிடிக்கு பதினைந்து ரூபாய் எண்ணிக் கொடுக்கும்போது உள்ளே இருந்து அகல்யா குரல். போனான்.
வேகமா சாப்பிடுங்கோ. அங்கே அம்மா தகனத்துக்குப் போறதுக்காகக் கிடக்கா. இங்கே என்னடான்னா வந்த மூதேவியும் வீட்டுப் பிள்ளையாண்டனும் கொண்டா கொண்டான்னு கொட்டிண்டிருக்கான்னு மூணு பாஷையிலே சொல்வா.
அவன் காதில் மட்டும் படச் சொல்லி முன்னால் நடந்தாள்.
வடாபாவை வாயில் திணித்துக் கொண்டிருந்தபோது அங்கேயே தேடி வந்த அகல்யாவின் அப்பா, மாப்பிள்ளை என்ன இப்படி ஆகிப் போச்சே என்று உலகத்துத் துக்கம் எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டி நிறுத்தி திலீப்பிடம் விசாரிக்கும் குரலில் கேட்டார். போய்ட்டா என்றான் அவன் சகஜமாக.
எச்சில் கையை கால்சராயில் துடைத்தபடி வெளியே வர, ஒரு வேன் வந்து நிற்பது கண்ணில் பட்டது. கூட்டமாக யாரோ வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஓடி, வாசலில் போய் நின்றான். எடுபிடிகள் காந்தி குல்லாவை நேராக்கிக் கொண்டு அவனுக்கு முன்னால் நகர்ந்தார்கள்.
வேனிலிருந்து மெல்ல இறங்கி வந்து கொண்டிருப்பவர்கள் நகரத்துக்கு வெகு தூரம் வெளியில் இருக்கும் புறநகரப் பிரதேசங்களில் இருந்து வரும் பழைய லாவணி கலைஞர்கள். அம்மா செயலாக இருந்தபோது அவர்களில் பலரும் வீட்டுக்கு வந்து போனதை திலீப் மறக்க மாட்டான்.
கிராமத்துக் கலைகள் எல்லாம் நசித்துக் கொண்டிருக்க, அந்தக் கலைஞர்கள் சாயாக் கடை வைத்தும், தெருத்தெருவாக பன்னும் பிஸ்கட்டும் சைக்கிளில் கட்டி எடுத்துப் போய் விற்றும், தலையணைக்குப் பஞ்சு அடைத்துக் கொடுத்தும் ஜீவித்துக் கொண்டிருப்பவர்கள். சொற்பமான பெண்கள் இவர்களில் உண்டு. எச்சில் தட்டு அலம்பி, வீட்டு வேலை செய்தும், ஆஸ்பத்திரியில் ஆயாவாக பீத்துணி துவைத்தும், சித்தி வினாயகர் கோவில் வாசலில் ஜவந்திப்பூ மாலை விற்றும் வயிறு கழுவுகிறவர்கள். அம்மாவுக்கு வேண்டியவர்களான அவர்களைப் பார்க்க, திலீபுக்கு மனம் நிறைந்து வந்தது.
அவர்கள் ஓவென்று குலவையிட்டுக் கொண்டு வந்தார்கள். அம்மாவின் சடலத்துக்கு அருகே நின்றும் அமர்ந்தும் லாவணிப் பாடல்களைக் குரலெடுத்துப் பாடினார்கள். ஓரிருவர் சுவரில் மோதாமல், ஷாலினிதாய் உடலில் படாமல் சுவடு வைத்து நடனமும் ஆடினார்கள். ஒரு மகத்தான கலைஞருக்கு மற்ற கலைஞர்கள் செய்யும் மரியாதை மட்டுமில்லை, நிகழ்ந்து ஏறக்குறைய நிறைவாக முடிந்த வாழ்க்கைக்கான ஒரு கொண்டாட்டமாகவும் அது இருந்தது என்பதை திலீப் கவனித்தான்.
அகல்யா மறுபடி ஓடி வந்தாள்.
பாட்டி ஒண்ணும் சாப்பிட மாட்டேங்கறா. ரேகா கிட்டே சொல்லி ஒரு ஈடு இட்லி வார்த்து வச்சிருக்கு. ஒண்ணாவது கழிச்சு சிராங்காய் காப்பி குடிங்கோன்னா மாட்டேன்னு அடம். அவ தான் போயிருக்க வேண்டியவளாம். உங்கம்மா பாவம், தானே போய்ச் சேர்த்துட்டாளாம். நீங்க ஒரு வார்த்தை சொல்லி சாப்பிடச் சொல்லுங்கோ.
போனான். பழைய பட்டுப் புடவை வாடையடிக்க கற்பகம் பாட்டி சமையல்கட்டுக் கதவில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். தளர்ந்து தான் போயிருந்தாள். ஒரு மத்தியதர மேல்தட்டுக் குடும்பத்தைத் தன்னந்தனியாகத் தாங்கி நிறுத்திய மனுஷி, பாம்பே அழுக்கு சாலில் ஊழியம் செய்து தேய்ந்து போன தளர்ச்சி. அவளுடைய வேர்களை விட்டு அகற்றி நட்டு வேடிக்கை பார்க்கிறதாகத் திலீப் உணர்ந்தான். இவளை இனி எங்கே இருத்த வேண்டும்? பெரியப்பா வீடு? அகல்யா கவனித்துக் கொள்ள மாட்டாளா? எத்தனை நாள்?
ஒரு விள்ளல் இட்லியும், ஒரு மடக்கு காப்பியும் அவளுக்கு ஊட்டி விட ரெண்டு பேர் கண்ணிலும் கண்ணீர். அம்மாவுக்கு அழவில்லையே என்று மனதில் ஆதங்கம் சூழ, திலீப் கீழே வந்தான்.
மேக மூட்டமாக இருந்தது. பறவைச் சத்தம். காக்கைகள் அவசரம் என்று குரல் விட்டு, விருட்டென்று மறைய, பழைய கட்டிடங்கள் எழுந்து நிரம்பிய குறுகிய தெருவில் உயரப் பறந்து ஒரு மயில் வந்தது. இன்னொரு மயில், கூட இன்னும் ஒன்று, அடுத்து ஒன்று என மொத்தம் நாலு மயில்கள்.
தாழ இறங்கிய அவை, கட்டத் தொடங்கி இருந்த மூங்கில் பல்லக்குக்கு அருகே நின்றவர்களைச் சிறகடித்து அகற்றிக் கிடைத்த வெளியில் ஆடத் தொடங்கின.
யாரும் எதுவும் பேசவில்லை. புகைக்கவும், சிறுசொல் சொல்லவும் மறந்து அனைவரும் அந்தக் கம்பீரமான அழகில் லயித்துப் போயிருந்தார்கள்.
ஷாலினிதாய்க்குப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை என்பதில் திலீப்புக்கு வருத்தம் மேலெழுந்து வந்தது.
கார் வந்து நிற்கிற சத்தம். இல்லை. அது ஒரு ஜீப். உள்ளே இருந்து குதித்த முதல் பாதுகாப்புக் காவலர் தரை வழுக்கிச் சரிந்தார். காந்தி குல்லாய் எடுபிடிகள், கெட்ட வார்த்தை வசவோ, வலியால் கத்துவதோ, கடவுளை அழைப்பதோ எதையோ மெல்லிய, தீனமான குரலில் சொல்லிய அவரைப் பத்திரமாகத் தூக்கி நிறுத்தினார்கள். உயரமான, கிளிமூக்கு கொண்ட நபர். மலைப் பிரதேசத்தில் இருந்து வந்தவராக இருக்கும் என்று திலீப் நினைத்தான்.,
ஜீப்பில் வந்த மற்றவர்கள் மெல்ல இறங்கித் துப்பாக்கி பிடித்து நிற்க, சைரன் முழங்கி வந்து நின்ற காரில் இருந்து வெளிப்பட்ட, கையில் ஃபைல் வைத்திருக்கும் அதிகாரிகள், சந்திர மண்டலத்தில் நடக்க உத்தேசிப்பது போல் நடந்தார்கள். அடுத்து வந்த காரில் இருந்து திலீப்பின் மினிஸ்டர் பெரியப்பா இறங்கினார்.
அவர் எல்லோரையும் பார்த்து, உறைந்த புன்னகையோடு கை கூப்பினார். மயில்கள் அது பாட்டுக்கு ஆடிக் கொண்டிருக்க, உள்ளே இருந்து வந்த லாவணிக் கலைஞர்கள் குல்லா கையில் எடுத்து வணக்கம் சொன்னார்கள்.
சாவு வீட்டுக்கு, அதுவும் சொந்த சகோதரனின் மனைவி இறந்து போன துக்கமான நிகழ்வுக்கு வந்திருக்கிற நினைவு வந்தோ என்னவோ பெரியப்பா உதடுகளைக் கோணி சிரிப்பை அழித்தபடி, துக்கம் தாங்காது போனது என்பது போல் தலையைத் தொடர்ந்து இடம் வலமாக ஆட்டியபடி வந்தார்.
கொங்கணிப் பெண்மணியின் முலைகள் நடுவே முகம் புதைத்து இப்படித் தலையசைய நேரு நினைவுகளை அவர் கெல்லி எடுத்துக் கொண்டிருந்தது திலீபுக்கு நினைவு வந்தது.
சாவு வீட்டில் நல்ல சிந்தனைகளே உன்னைச் சூழ்ந்திருக்கட்டும் என்று மயில்கள் அவனைப் பார்த்துச் சொல்லியபடி ஆடின.
அதுகளை யாராவது ஓட்டுங்கோ. கண்ணைக் குத்தி வைக்கப் போறது. நேரம் காலம் தெரியாம அது பாட்டுக்கு ஆடறது.
பெரியப்பா ஜாக்கிரதையான இந்தியில் சொன்னார். தில்லி புதுத் துரைத்தனத்து மொழி. லாவணிக் கலைஞர்கள் புரிந்து கொண்டு தலை ஆட்டினார்கள்.
அது போயிடும் சாப். மெல்ல கை அசைச்சா போதும்.
நாலைந்து பேர் கை அசைத்துக் கால் மாற்றி நின்று முன்னால் சென்று மீள, போங்கடா என்று அதுகள் பாட்டுக்கு ஆட்டத்தைத் தொடர்ந்தன.
அப்சரா ஆளி.
கூட்டமாக அவர்கள் பாடத் தொடங்கினார்கள். பூம்பூம் என்று முழங்கிய சாவுச் சங்குகள் குரல்களோடு கலந்து ஒலித்தன. வரட்டியில் பற்ற வைத்த அக்னி சாவு வாடையை விருத்தி செய்து கொண்டு பற்றிப் படர இன்னொரு வரட்டியைக் குல்லாய்க் காரன் ஒருத்தன் தரையில் இட்டான்.
மயில்கள் ஒரு வினாடி நின்றன. போகலாம் என்று யாரோ சொன்னது போல் அவை ஒரே நேரத்தில் இறகு வீசிப் பறந்து மேலே உயர்வதை திலீப் பார்த்தான். அவன் மனதுக்குள் அவற்றுக்கு நன்றி சொல்ல, அம்மா போகுமிடத்துக்கு அவளுக்குத் துணை உண்டு கவலைப் பட வேண்டாம் என்று அகவி உயர்ந்த மயில்கள், அடுத்த கணம் பார்வை வட்டத்தை விட்டு நீங்கின.
புதுப் புடவை வந்தாச்சா? மராத்தி புரோகிதன் விசாரித்தான்.
வாங்க ஆள் போயிருக்கு. யாரோ சொன்னார்கள்.
என்ன நிறம்? சோனியாக நின்ற ஒரு பெண் கேட்டாள். அண்டை வீடு.
வெள்ளை.
எதுக்கு வெள்ளைப் புடவை? சுமங்கலியாப் போயிருக்கா. சிவப்புப் புடவை தான் உகந்தது.
பக்கத்து, எதிர் குடித்தனப் பெண்கள் ஒரே குரலில் சொன்னார்கள்.
திலீப் அப்பாவை நினைத்துக் கொண்டான். அவர்கள் அவர் இன்னும் எங்கோ ஜீவித்திருப்பதாக திடமாக நம்புகிறார்கள். அகல்யா கூடத்தான். அதை மறுக்க எந்த ஆதாரமும் யாரிடமும் இல்லை. ஷாலினிதாய் மஞ்சளும் குங்குமமுமாகத் தான் சிதை ஏறுவாள்.
திலீப் மனசைத் திடப்படுத்திக்கோ. நாம கொடுத்து வச்சது அவ்வளவு தான்.
பெரியப்பா அவன் கையைப் பிடித்தபடி சொன்னார். என்னமோ தோன்ற அவர் தோளில் முகம் புதைத்துக்கொண்டான் திலீப். மெதுவாகத் தட்டியபடி, கம்போஸ் யுவர்செல்ப் என்று இரண்டு தடவை சொன்னார் பெரியப்பா.
உன் ஆத்துக்காரி எங்கே?
அகல்யா வந்து காலைத் தொட்டு வணங்க முற்பட, வேண்டாம் என்று விலக்கினார்.
அகல்யாவின் அப்பா எல்லோரையும் இடித்துக் கொண்டு முன்னால் வந்து பெரிதாக வணங்கி, கஷ்டப் படாம போனாளே அதுவே நிம்மதி என்று பெரியப்பாவிடம் சொல்ல அவர் யோசனையோடு பார்த்தார். எங்கப்பா என்றாள் அகல்யா.
குளிப்பாட்டிடலாமா?
யாரோ கேட்டார்கள்.
வாழ்ந்து போதீரே அத்தியாயம் முப்பத்தேழு
மூணு மாசமா ஆர்ட்டிஸ்ட் பென்ஷன் வரலே சாப்.
லாவணிக் கலைஞர்கள் பெரியப்பாவை சூழ்ந்து கொண்டு முறையிட்டார்கள். ஷாலினி தாயை விட முதியவளான ஒரு பழைய ஆட்டக்காரி தன் வயதையும் இருப்பையும் பொருட்படுத்தாது மினிஸ்டர் பெரியப்பா காலில் விழுந்து நமஸ்காரம் செய்தாள். அவர் அதிர்ச்சியோடு விலகி செக்யூரிட்டி ஆட்களைப் பார்த்த பார்வையில் என்ன புடுங்கிட்டு இருக்கீங்க என்ற கேள்வி தெரிந்தது.
சோபானத்துக்கு, அகல் விளக்கும் பூவுமாகப் புது மணப்பெண்ணைத் தோழிகள் அழைத்துப் போகும் தருணத்தில் பாடுகிற, மங்கலமானதும், குறும்பு நிறைந்ததுமான பாடலை அண்டை அயல் மூத்த பெண்கள் எல்லாக் குரலிலும் பாட, ஷாலினி தாயின் உடலை ஆண்கள் பார்க்காமல் குளிப்பித்தார்கள்.
திலீப் தயக்கத்தோடு பெரியப்பாவைப் பார்த்தான்.
என்னடா, வேலைக்குப் போறே தானே.
ஆமா பெரியப்பா. காலையிலே தான் இங்கே வந்தேன்.
பத்தாம் நாள் அங்கேயே செஞ்சுடலாமே. கோவிலும் குளமுமா இருக்கே.
செய்யலாம் அம்மா அங்கே வந்ததே இல்லையே.
அவன் சொல்லவில்லை. சே என்று போனது திலீப்புக்கு.
என்ன மனுஷர். அடுத்தவருடைய துக்கத்தில் கூட அதிகார முகத்தை நுழைக்கப் பார்க்கிறார்.
ஆலப்புழையோ கோலப்புழையோ உத்தியோகம் கிடைச்சிருக்கு. தக்க வச்சுக்கறது உன் சாமர்த்தியம்.
பெரியப்பா சத்தமின்றி, ஆனால் அழுத்தமாகச் சொன்னார்.
அரசு அதிகாரி ஒருத்தர் அவசரமாக ஃபைலோடு ஓடி வந்து மினிஸ்டர் காதில் கிசுகிசுத்தது திலீப்புக்கும் கேட்டது –
சார், மூத்திரம் ஒழிச்சு வர, கார் ரெடியா தெருக் கோடியிலே வச்சிருக்கு.
காருக்குள்ளேயா என்கிற மாதிரி சந்தேகத்தோடு அவன் பார்க்க, அடுத்த தெருவிலே கட்சி பிரமுகர் வீடு என்று விளக்கிச் சிரித்தார் பெரியப்பா. கூடவே, தன் அந்தஸ்துக்கு இவனோடு அபத்தமான நகைச்சுவைக்கெல்லாம் சிரிப்பது சரிப்படாது என்று தோன்றவோ என்னமோ, மூஞ்சியை உம்மென்று வைத்துக் கொண்டு எதிரே நூதன் சினிமாப்பட போஸ்டர் ஒட்டியிருந்த சுவரைக் கூர்ந்து பார்த்தார். கொங்கணி மாமியா முலையைக் காட்டி அங்கே நிற்கிறாள்?
புதுப் புடவை, புதுப் புடவை.
இன்னும் பாட்டுகள் தொடர வாசலுக்கு வந்த அகல்யா, யாரோ நீட்டிய புதுப் புடவையை வாங்கிக் கொண்டு உள்ளே ஓடினாள். பூம் பூம் பூம். சங்கு ஊதியவன் நிறுத்தி தொடர்ந்து இருமிக் கோழையைச் சுவரில் துப்பி நூதனை நனைத்து விட்டுத் திரும்பச் சங்கூத ஆரம்பித்தான்.
ஆர்டிஸ்ட் பென்ஷன் ரொம்ப குறைவா இருக்கு, மகாராஜ். பாதி மாசம் தான் வருது. அப்போ அதை வச்சு கோதுமையோ அரிசியோ வாங்கறோம். அப்புறம் ஒரு வாரம் சோளம். அதுக்கு அடுத்து கஞ்சி. மாசக் கடைசியிலே விட்டோபா கோவில் வாசல்லே கை ஏந்தறேன். பரிதாபப்பட்டு, உள்ளே வந்து தானம் கேட்கச் சொன்னார் பூசாரி.
நான் சாயாக் கடை வச்சுத்தான் பிழைக்கறேன் மகராஜ். லாவணியில் டோலக் வாசிச்சு பாடி, ஷாலினிதாய் கூடவே முப்பது வருஷம் நடிச்சிருக்கேன். பென்ஷன் முப்பது ரூபா வருது. போஸ்ட்மேன் அஞ்சு ரூபா எடுத்துப்பான்.
ஷாலினிதாய் நிறைசூலியா ஆடினபோது நான் தான் திரை போட்டு பிரசவம் பார்த்தேன். இந்தப் பையன் மேடைக்குப் பின்னாடி பிறந்தவன் தான். அதுக்கு பென்ஷன் வேண்டாம். ஆடின காலுக்கு மூட்டுவலிக் களிம்பு வாங்கவாவது.
குரல்கள். கோரிக்கைகள். மன்றாடல். துயரம் பகிர்தல். எல்லாமும் ஆனார்கள் அந்த லாவணிக் கலைஞர்கள்.
சால் குடித்தனக்கார ஆண்களும் வீட்டுப் பெண்களும் சிறு பூமாலைகள் சகிதம் வாசல் கதவுக்கு வெளியே பொறுமையாக நின்றார்கள். மினிஸ்டர் பெரியப்பாவும் திலீப்பும் லாவணிக் கலைஞர்களும் நின்ற இடத்தைச் சுற்றி நீண்டது அந்த வரிசை.
ஜன்னலில் பாட்டி தலை தெரிந்தது. வாடிப் போயிருந்தாள். குழி விழுந்த கண்கள் பாசமும் ஆவலுமாகத் தன் ஒரே மகனைப் பார்த்துக் கொண்டே இருந்தன.
பாட்டி பார்க்கறா பெரியப்பா.
அவர் காதில் சொன்னான் திலீப்.
அவர் ஆமா என்று சொல்லி, எலக்ஷன் பிரச்சாரத்தில் ஓட்டுக் கேட்டுக் கை ஆட்டுகிற மாதிரி ரெண்டு கையும் ஆட்டினார். இதோ வரேன் என்று அவர் முனகியது அவருக்கே கேட்டிருக்காது.
பெரியப்பா, மெட்றாஸ் வீட்டிலே அப்பா பங்கை வச்சு எனக்கு ஒரு ஒரு ரெண்டு லட்சம் தர முடியுமா? நான் தொழில் பார்த்துப் பிழைச்சுக்கறேன்.
தைரியத்தை எல்லாம் திரட்டி ஒரு வழியாகக் கேட்டு விட்டான் திலீப்.
ஏண்டா இந்த வேலைக்கு என்ன? சம்பளம் தரான் தானே பிஸ்கட் சாஸ்திரி.
அவன் கேட்டதை எதிர்பார்க்காத மினிஸ்டர் பெரியப்பா கூட்டச் சத்தத்தில் கரைந்து போன குரல் மீண்டும் எழுந்து கம்மக் கேட்டார்.
தரார் பெரியப்பா.
திலீப் அவசரம் கூட்டிப் பதில் சொன்னான்.
மெட்ராஸ் வீடு பத்தி மெல்ல பார்க்கலாம். உனக்குப் பணம் வேணும்னா நான் தரேன். வீடு இருக்கட்டும். நல்ல விலை வரட்டும்.
யாரோ மரியாதை தரும் இடைவெளி விட்டு அவர் பார்வைக்குக் காத்திருந்ததை திலீப் ஓரக் கண்ணால் பார்த்தான்.
சரி பெரியப்பா என்றான். அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ள அவனையறியாமல் மீண்டும் அவசரம் எழுந்தது. அவன் பழகியிருந்தது அப்படித்தான்.
உங்கப்பன் விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்திருக்கான் தெரியுமில்லையோ. அடிக்கடி ஆயிரம் ரெண்டாயிரம்னு வாங்கிண்டு போவான்.
பெரியப்பா சொல்லியபடி கையைக் காட்ட, பக்கத்தில் வந்தார் ஒரு அதிகாரி.
சார், ப்ளாஸ்க் எடுத்து வரட்டா? பில்டர் காபி.
அவர் திரும்ப வாய் பொத்திக் கேட்க, துண்டால் முகம் துடைத்தபடி பெரியப்பா வேண்டாம் என்றார்.
ஐயா, பென்ஷன் பற்றி.
லாவணிக் கலைஞர்கள் ஏங்கின குழந்தைகளாக பசி என்று வயிற்றைக் காட்டி யாசிக்கும் தோதில் குரலெடுத்து மன்றாடினார்கள். ஷாலினிதாய் இறந்த துக்கத்தில் இதுவும் ஒரு அங்கம் என்று அவர்கள் கருதி இருக்கலாம். எல்லோரும் கஜ்ஜை கட்டி ஆடியவர்கள் தானே. எல்லோரும் கால் ஓய்ந்து, குரல் ஓய்ந்து போனவர்கள் தானே? ஷாலினிதாய்க்கு சித்த சுவாதீனம் இருந்தது என்றால் இவர்களில் எத்தனை பேருக்கு மனமும் உடலும் உபாதை இல்லாமல் உள்ளது?
திலீப்புக்குத் தெரியவில்லை.
ஒரு பழைய மோட்டார் சைக்கிள் ஓரமாக நின்றது. மினிஸ்டர் பெரியப்பாவின் காவலர்கள் ஓட்டி வந்தவனை நரகத்துக்கு உடனடியாகப் போகச் சொல்லிக் கழுத்தில் கை வைக்க, அவன் சட்டைப் பையில் இருந்து எடுத்த அட்டையைக் காட்டினான். அட்டியின்றி வழி கிடைத்தது. பிரஸ், பிரஸ் என்று ஜபித்தபடி அந்த மனுஷன் முன்னேறி வந்து கொண்டிருந்தான்.
பெரியப்பா, தனக்கு மூத்திரம் போக அழைப்பு விடுத்த ஆபீசரைக் கூப்பிட்டார்.
இவங்க கிட்டே ஒரு மனு வாங்கி எனக்கு நோட் போட்டு வைக்கணும்.
சடசடவென்று கையில் பிடித்த ரெக்சின் பைகளில் இருந்து, ஒவ்வொரு லாவணிக் கலைஞரும் எழுதித் தயாராக வைத்திருக்கும் பெட்டிஷனை அந்த அதிகாரியிடம் கொடுக்க, வனஸ்பதிப் புகை கிளப்பிக் கொண்டு ஒரு தீப்பந்தம் எரிய ஆரம்பித்தது. ஷாலினி தாய்க்கு சொர்க்கத்துக்கு வழி காட்ட நெய்த் தீபச் சுடர் அது என்று மராத்தி புரோகிதன் திலீப்பிடம் விளக்கினான்.
அம்மாவுக்கு சகோதரன், அவங்க குடும்பம்?
மோட்டார் சைக்கிளில் வந்தவன் உத்தேசமாகக் கூட்டத்தில் பார்த்துக் கேள்வியை எறிந்தான்.
ஒருத்தரும் இல்லே. தனி மனுஷி தான் சாகற வரைக்கும்.
லாவணிக் கலைஞர்களில் ஒருவர் மனுவை நீட்டியபடி சொன்னார்.
சும்மா இருப்பா. ஷாலினிதாய்க்கு ஒரே மகன் இந்தப் பையன் திலீப்.
இருமலுக்கு நடுவே ஒரு முதிய பெண்மணி சொன்னார்.
கேட்ட உடனே எப்படி மனு கொடுக்கறீங்க எல்லோரும்?
ஆபீசர் சிறு சிரிப்போடு விசாரித்தார்.
எஜமான், நாளைக்கே நாங்களும் செத்து நரகம் போனாலும் மனுவோடு தான் போவோம். வராத பென்ஷன் பாக்கி குடும்பத்துக்காவது போக ஏற்பாடு செய்யச் சொல்லி மனு இதெல்லாம். என் பேரனுக்காவது கிடைக்கட்டும்.
மோட்டார் சைக்கிள்காரர் ஓரமாக நின்று திலீப்பை ஏகத்துக்குச் சைகை செய்து அழைத்தார். திலீப்பை மராட்டிய புரோகிதன் உடனே குளித்து வரச் சொன்னான். இந்தோ வரேன் என்று புரோகிதனுக்குக் கையைக் காட்டி மோட்டார் சைக்கிள் காரனிடம் போனான் திலீப்.
சொன்ன பேச்சு கேட்க மாட்டியா? நேரமாகுது. நான் அந்தரத்திலே விட்டு போனா அழுகிச் சாக வேண்டி வரும்.
புரோகிதன் தன் தலைமை ஸ்தானத்தை உறுதி செய்யும் குரலில் திலீப்பை மிரட்ட, திலீப் பெரியப்பாவை புகல் தேடி நோக்கினான். இந்த வெத்துவேட்டு புரோகிதனிடன் நம் செல்வாக்கு உப்புக்குக் கூட செல்லுபடியாகாது என்று கண்டு கொண்ட பெரியப்பா அவசரமாக வீட்டுக்குள் நுழைந்தார்.
பாட்டி மறுபடி ஜன்னலில் எட்டிப் பார்த்து விட்டு, மினிஸ்டர் மகன் உள்ளே வருவதைப் பார்த்தோ என்னவோ திரும்பப் போனாள்.
அவளுக்கு என்னத்துக்கு இந்தக் கஷ்டம் எல்லாம். எட்டு ஊருக்கு விட்டெறியும் அதிகாரத்தோடு இருக்கப்பட்ட மந்திரி மகன் வீட்டில் மிச்ச ஆயுசு முழுவதும் இளைப்பாறாலாமே.
திலீப் நினைத்தபடி குளிக்கக் கிளம்ப, மோட்டார் சைக்கிள் காரன் அவன் பாதையில் குறுக்கே விழுந்தான். பிரஸ், பிரஸ் என்று திரும்ப உச்சரித்த அவன் கண்கள் பாதி மூடி இருந்தன. அதிகாரம் மறைமுகமாவது அச்சு யந்திரத்தின் மூலம் இவனுக்கும் பாய்கிறதால் ஏற்பட்ட அந்தஸ்தோ என்னமோ. திலீப் இவனைப் பகைத்துக் கொள்ள மாட்டான்.
ஒரு மராத்திப் பத்திரிகைப் பெயரைச் சொல்லிக் கேட்டான் –
படிக்கிறீங்களா, ரொம்ப அபூர்வமான ஒண்ணு.
அவன் சொல்லும்போது திலீப்பின் சின்ன மாமனார் நினைவு வந்தார்.
பதிர்பேணியிலே ஒரு லோட்டா பால் விட்டுண்டு, உள்ளே ஒரு குஞ்சாலாடையும் உதிர்த்துப் போட்டுட்டு சாப்பிட்டா, அடடா, தேவாமிர்தம்.
அவர் பத்திரிகை நிருபர் போலத் தான் வாயைக் குவித்து ஆகாரச் செய்தி சொல்லி மகிழ்வார். அவர் காமத் ஓட்டலில் டிபன் சாப்பிட்டு வந்து இந்தக் கூட்டத்தில் ஒரு ஓரமாக இருப்பார் என்று திலீப்புக்குத் தெரியும்.
எனக்கு எல்லோரோட பெயர், வயசு, இறந்து போனவங்களுக்கு உறவு இதெல்லாம் வேணும். சரியான தகவல் தேவை. பத்திரிகையில் போடணுமே.
மராட்டியப் பத்திரிகைக்காரன் முறையிட்டான்.
பிழையான தகவல்களாலான சாவுச் செய்தி மராட்டிய மண்ணெங்கும் சொல்லொணா துன்பத்தை விதைக்க வல்லது என்று பொறுப்பு உணர்ந்த குரலில் திரும்பவும் அவன், எல்லோருடைய பெயர், வயது, உறவு என்று சொல்ல, மறுபடி மராட்டிய புரோகிதன் நரகம் பக்கத்தில் தான் என்று வார்த்தை அருளியது காதில் கேட்கவில்லை என்ற பாவத்தில் திலீப் குளிக்கப் போனான்.
நான் சொல்றேன் எழுதிக்குங்க.
எதிர் ப்ளாட் கோர்படே சீனியர் சங்கு முழங்கும் சத்தத்துக்கு நடுவே சொல்லத் தொடங்கியது பாதி காதில் விழுந்திருக்க, அகல்யா அசதி முகத்தில் தெரிய அவன் பக்கமாக வந்தாள். நேற்று ராத்திரி முழுக்க அவளுக்குத்தான் அலைச்சல்.
பாத்ரூம்லே வெதுவெதுன்னு வென்னீர் விளாவி வச்சிருக்கேன். அவ்வளவு தான் ரேகா வீட்டு அடுப்பிலே சூடு படுத்த முடிஞ்சுது. கெரசின் அங்கேயும் காலி. போய்க் குளிச்சிட்டு சடுதியிலே வாங்கோ.
அகல்யா டர்க்கி டவலையும் புது மைசூர் சாண்டல் சோப்பையும் கொடுத்தாள்.
ரொம்ப கமகமன்னு வர வேணாம். சூழ்நிலையை பா
July 4, 2022
அரசூர் மகாத்மியம் – வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து
வாழ்ந்து போதீரே அத்தியாயம் இருபது –
விடியலின் ஈர வாடையும், சுட்ட சாம்பலைப் பொடி செய்து பன்னீரும் வாசனை திரவியமும் கலக்காமல் பூசும் வைராக்கியமான வீபுதி வாசனையும், குத்தாக அள்ளி ஏற்றி வைத்த மட்டிப்பால் ஊதுபத்தி மணமும், யாரிடம் இருந்து என்று குறிப்பிட முடியாதபடி நகர்கிற, நிற்கிற, உறங்கிக் கிடக்கிற ஜனத் திரளில் இருந்து எழுந்து பொதுவாகக் கவிந்த வியர்வை உலர்ந்த நெடியும், பறித்ததும் மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வரும் செழித்த காய்கறிகளின் பச்சை மணமும், காற்றில் அடர்த்தியாகக் கலந்த, இன்னும் தொடுக்கப்படாத ஜவ்வந்திப் பூக்களின் குளிர்ந்த நறுமணமும், ஒற்றைக் கெட்டாகப் பிடித்து உயர்த்திக் குளிர்ந்த தண்ணீர் தெளித்துத் தாழ வைக்கும் கொடிக்கால் வெற்றிலையின் கல்யாண வைபவ மணமும், பூக்கூடைகளில் இருந்து எடுக்கப்படக் காத்திருக்கும் கரும்பச்சை மரிக்கொழுந்து வாசனையும், குதிரை வண்டிகளில் விரித்த துணிக்குக் கீழே சன்னமாகப் பரத்திய காய்ந்த புல்லின் கூர்மையான வாடையும், குதிரைச் சாணம் தெறித்துச் சிதறி உலர்ந்த தெருக்களின் புதுத் தார் வாடையும், புழுதி அடங்கக் குளிரக் குளிர நீர் தெளித்துத் தூசி அடங்கும் வீட்டு வாசல் மண்ணின் நெகிழ வைக்கும் கந்தமுமாகக் காலை நேர மதுரை கொச்சு தெரிசாவையும் முசாபரையும் வரவேற்றது.
காலையில் முதல் பஸ் ஐந்து மணிக்கு தொண்டியில் இருந்து, புதிதாகப் பிடித்த மீன் நிறைத்த கூடைகளோடு புறப்படுகிறது. அரசூர் வழியாக மதுரை போகிற, பயணிகளின் நெருக்கமும் கூச்சலும் இல்லாத அந்த பஸ்ஸில் தியாகராஜ சாஸ்திரிகள் கொச்சு தெரிசாவையும் முசாபரையும் பிரியத்தோடு ஏற்றி வழியனுப்பி வைத்தார்.
ராத்திரி முசாபரி பங்களாவில் அவர் சாட்சிக் கையெழுத்துப் போட்டுத் தங்க இடம் கிடைத்தது. அதற்கு முன்னால் குண்டுராயர் ஓட்டலில் ராத்திரிக்குச் சாப்பாடாக இட்லி தின்னக் கூட்டிப் போனது தியாகராஜன் தான்.
கல்லுக் கல்லா இருந்தாலும் உடம்புக்குக் கெடுதல் எதுவும் வராது. இதை முப்பது வருஷம் தினம் சாப்பிட்டுத்தான் கல்லு மாதிரி இருந்தார் எங்க புரபசர் மருதையன்.
என் மகள் ஐஸ்வர்யா அருணும் நானும்
July 2, 2022
பெரு நாவல் மிளகு – சொல்வனம் இலக்கிய இதழில் திரு.நம்பி எழுதிய மதிப்பீடு
மிளகு பெருநாவலுக்குச் சிறப்பான மதிப்பீடுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் பிரசுரமான நாவல்களில் பரவலாகப் பேசப்படுகிற புதினமாக மிளகு திகழ்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
சொல்வனம் இலக்கிய இதழில் நம்பி எழுதிய இந்த மேன்மைசால் மதிப்பீட்டைப் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன்.
நம்பிக்கும் சொல்வனத்துக்கும் நன்றி
https://solvanam.com/2022/06/26/%E0%A...
பெருநாவல் ‘மிளகு’ – மதிப்பீடு – வல்லினம் கலை இலக்கிய இதழில் பாலாஜி பிருத்விராஜ் எழுதியது
மிளகு பெருநாவலுக்கு இன்னுமொரு அடர்வும் ஆழமுமான மதிப்பீடு. நன்றி திரு பாலாஜி பிருத்விராஜ்,
நன்றி வல்லினம் இலக்கிய இதழ்
June 29, 2022
மழை ஓவியம் – இதுவும் அதுவும் உதுவும் மின்நூலில் இருந்து
மழை ஓவியர்
‘மழைநாள் திவசம்’ கவிதை எழுதிய ஞானக்கூத்தன் ‘மழைநாள் கலை இலக்கியக் கூட்டம்’ என்று இன்னொன்று எழுதாததற்குக் காரணம், இப்படியான கூட்டங்கள் அபூர்வமாகவே நடக்கின்றன என்பதே. கொட்டும் மழையில் இலக்கியக் கூட்டத்தை, அதுவும் சென்னைப் புறநகர் பகுதியில் ஏற்பாடு செய்து விட்டு எப்படியோ ஆட்டோ பிடித்து அன்றைய பேச்சாளரான முதுபெரும் இலக்கிய விமர்சகர் சி.சு.செல்லப்பாவோடு விருட்சம் பத்திரிகை ஆசிரியர் அழகியசிங்கர் போய் இறங்கினார். நாலே நாலு பேர் வந்த அந்த மழைக் கூட்டத்தைப் பார்த்து ‘விருட்சம் பட்டுப் போகட்டும்’ என்று சி.சு.செ விஸ்வாமித்திரனாக சாபம் கொடுத்ததை வெள்ளந்தியாக அழகிய சிங்கர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இது விருட்சம் கூட்டம் இல்லை. இலக்கியத்தையும் பேசப் போவதில்லை. ஒரு சேஞ்சுக்காகக் கலையைப் பற்றிய கூட்டம். ஓவியர் மணியம் செல்வன் பேசுவார் என்று என் பதிப்பாளர் – நண்பர் பத்ரி அனுப்பிய ஈ-மெயிலுக்கு நன்றி சொல்லிவிட்டு உடனே டெலிட் செய்யாமல் இன்னொரு தடவை கவனிக்க வைத்த விஷயம் – கூட்டம் நடைபெறும் இடம். வீட்டிலிருந்து வெறுமனே இல்லாவிட்டாலும் மெகபோன் வைத்துக் கூப்பிட்டால் காதில் விழக்கூடிய தூரத்தில் இன்னும் ராட்டை நூற்கிற தக்கர் பாபா வித்யாலயா. அதுவும் சனிக்கிழமை சாயந்திரம். போகலாம் என்று தீர்மானித்தபோது போயிடுவியா என்று கூவி சவால் விட்டுக் கொண்டு ஜன்னலுக்கு வெளியே மழை தொடர்ந்தது.
கலை இலக்கியக் கூட்டங்களுக்கு ஆண்கள் அணியக் கூடிய சிலாக்கியமான உடுப்பு – மேலே ஜிப்பா; இடுப்பில் வேட்டி அல்லது ஜீன்ஸ் அதுவுமன்றி பைஜாமா. மழைக்கு உடுத்தி அலைய வாகான அரை டிராயரில் இப்படியான கூட்டத்துக்குப் போனால் ஓவியக் கலைக்கு அவமதிப்பை மறைமுகமாகக் காட்டியதாக நம் மேல் விமர்சனம் வருமா? சமூக நாகரீகம் குறித்த சிக்கலை ஒரு மணி நேரம் யோசித்துத் தீர்த்து, முழுசாக உடுத்து தக்கர்பாபா அரங்கத்தில் முக்கால்வாசி ஈரமாக நுழைந்தபோது வரவேற்ற பத்ரி ஷார்ட்ஸில் தான் இருந்தார். இன்னும் நாலு நிஜார் கனவான்களும் கூட்டத்தில் உண்டு. இனி கூட்டம் அறிவிக்கும்போதே டிரஸ் கோட் என்ன என்றும் எழுதி விட்டால் சிக்கல் இல்லை.
மழையாக இருந்தாலும் இருபது பேர் எப்படியோ வந்து சேர்ந்திருந்த கூட்டம். மணியம் செல்வன் சாஸ்திரத்துக்கு நாலு வார்த்தை பாரம்பரிய சித்திரக் கலை, ரவிவர்மா, கோட்டோவியம், சித்தன்ன வாசல் என்று ஒப்பித்து விட்டு ‘அவை நிறைந்து சாவகாசமாக ஒரு கூட்டம் போடுங்கள், வந்து நிறையப் பேசறேன்’ என தப்பித்திருக்கலாம். வந்திருந்த இருபது பேரையே இருநூறு பேராகப் பாவித்து கிட்டத்தட்ட ரெண்டரை மணி நேரம் உற்சாகத்தோடு சொற்பொழிந்தார் அவர்.
எழுத்தாளர் யாராவது இருபது நிமிடத்துக்கு மேல் பேசினால் முன்னால் உட்கார்ந்து அரை குறையாகக் காதில் வாங்கிக் கொண்டு மொபைலில் மன்மோகன் சிங்கை கிண்டல் செய்து ட்வீட் அனுப்பிக் கொண்டிருக்கலாம்.
ஆனால் ம.செ மொபைலை சட்டைப் பையில் இருந்து எடுக்கவே விடவில்லை. ரெண்டரை மணி நேரம் என்ன, ராத்திரி ரெண்டு வரைக்கும் அவர் பேசினாலும் கேட்கக் கேட்க அலுப்பே தட்டாத பேச்சு. வெறும் பேச்சு மட்டும் இல்லை. லேப்டாப் கம்ப்யூட்டரில் கொண்டு வந்த ஓவியங்களையும் காட்டி நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதால் மனம் தானே ம.செ பொழிந்ததில் லயித்து விட்டது.
மொத்தம் ஐந்து ஓவியர்கள் – மாதவன், எஸ்.ராஜம், சில்பி, கோபுலு, மணியம். அப்புறம் ஆறாவதாக மணியம் செல்வனும். இவர்கள் தான் டாபிக்.
ஒற்றைப் பார்வையில் இவர்கள் எல்லோரும் ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் தொடர்ந்தோ தீபாவளி, பொங்கல் மலர்களில் மட்டுமோ படம் வரைந்த ஓவியர்கள். ‘முப்பது பைசா விலைக்கு விற்கிற பத்திரிகைக்காக’ உசிரைக் கொடுத்து நுணுக்கமாக மரபு ஓவியம் வரைவதில் வல்லவர்கள். அதாவது அறுபதுகளில். இப்போதென்றால் பத்து ரூபாய்க்கு விற்கிற பத்திரிகைகள்.
இலக்கிய வாதி எழுத்தாளர்கள் ஜனரஞ்சக எழுத்தாளர்களோடு ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டால் அனாசாரம் என்று வெகு சமீப காலம் வரை நினைத்தது உண்டு. அது போல், ஆர்ட் காலரிகளில் ஓவியக் கண்காட்சி நடத்தி பத்து லட்சம் இருபது லட்சம் விலைக்கு நவீன பாணி ஓவியங்களை விற்று லண்டன் – நியுயார்க் பறக்கிற குறுந்தாடி ஓவியப் பிரபலங்கள் இந்த ஜனரஞ்சக ஓவியர்களை ஒரு பொருட்டாகக் கருதுவது இல்லை. ஓவிய விமர்சகர்ளும் அப்படியே.
ஆனாலும் முப்பது பைசா ஓவியர்களுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது என்பது உண்மை. கதைக்குப் படம் போட்டும், கார்ட்டூன் போட்டும் சராசரி வாசகர்களின் மனதில் இடம் பிடித்தவர்கள் இவர்கள். ‘தமிழ் சரியா படிக்கத் தெரியாது. பத்திரிகையிலே ஜோக் மட்டும் பார்ப்பேன்’ என்று மேட்டுக்குடி தமிழர்கள் போன நூற்றாண்டு முழுக்க ஆடம்பரமாக அறிவித்தது உண்டு. இப்போது நடுத்தர வர்க்கமும் அதே போல் பேச ஆரம்பித்து விட்டது. அவர்களுக்கும் பரிச்சயமான பெயர்கள் மேலே குறிப்பிட்ட எல்லோரும்.
மாதவன் பத்திரிகை ஓவியத்தோடு கூட பிரதானமாக, சினிமா கட் அவுட்டும் பேனரும் வரைந்து பிரபலமான ஓவியர். ஆனாலும், இருபது பேர் வந்த கூட்டத்தில் பத்து பேருக்கு அவரைத் தெரியவில்லை. அறிமுகப்படுத்துகிற வேலையை கச்சிதமாகச் செய்தார் ம.செ. அழுத்தமான நிறங்கள், அழுத்தமான கோடுகள். ஆற்றில் பளிங்கு நீரையும், மேலே நீல வானத்தையும் வண்ணமும் தூரிகையின் துடிப்பும் வெளிப்படுத்த அவர் வரைந்த பத்திரிகை ஓவியங்கள் காலண்டர் ஆர்ட் என்று ரெண்டே வார்த்தையில் தள்ளி விடலாம். நஷ்டம் நமக்குத்தான்.
பேனர் ஆர்ட்டிஸ்களின் கலை வெளிப்பாட்டுச் சூழல் மற்ற கலைஞர்களுடையதை விடக் கஷ்டமானது. பரபரப்பான வீதியில் சாரம் கட்டி உச்சியில் உட்கார்ந்து, எப்படியோ பிரஷ்ஷயும் வண்ணங்களையும் அங்கே பக்கத்தில் இடுக்கி வைத்துக் கொண்டு, உள்ளங்கையில் வைத்திருக்கிற புகைப்படத்தைப் பார்த்து அதைப் பல மடங்கு பிரம்மாண்டமாக அச்சு அசலாக அதேபடிக்கு வரைய வேண்டும். மாதவன் சாரம் கட்டி வரைந்தாரா தெரியவில்லை. ஜெமினியின் இந்தி ‘சந்திரலேகா’வுக்காக அவர் வரைந்து கொடுத்து பம்பாய்க்கு எடுத்துப் போன பேனரில் கதாநாயகி ராஜகுமாரியின் லோலாக்கு மட்டும் ஆறு அடி உயரம் என்றால் பேனரின் நீள அகலம் மற்றும் உயரத்தைக் கணக்குப் போட்டுக் கொள்ளலாம்.
எஸ்.ராஜத்தின் பாட்டு மாதிரி ஓவியமும் அடக்கமான அழகு கொண்டது. மாதவன் போல் பளிச்சென்ற நிறங்கள் கிடையாது. கண்ணுக்கு இதமான வண்ணங்கள் பெரும்பாலும். வண்ணங்களோடு மனதில் நிற்பது அவர் பிடிவாதமாகக் கடைப்பிடித்த அஜந்தா ஓவியப் பாணி. சாவி பத்திரிகை மலரில் படம் போட கொஞ்சம் பாணியை மாற்றுங்கள் என்று கேட்டபோது மறுத்து விட்டாராம் இந்த ஓவிய-இசை மேதை. பெரும்பாலும் தீபாவளி மலர்களிலேயே இவர் திறமை வெளிப்பட்டது என்று தோன்றுகிறது. கிட்டத்தட்ட அறுபது தீபாவளிகள்!
ராஜம் இன்னொரு புதுமையும் செய்திருக்கிறார். அமரரான காஞ்சி மூத்த சங்கராச்சாரிய சுவாமிகள், மடத்தில் சிவபூஜை செய்கிற ஓவியத்தை கல்கி தீபாவளி மலருக்காக வரைய ஆரம்பித்தவர் தன் பாணியில் பூஜையில் பிரத்யட்சமான மூன்று தேவியரையும் வரைந்திருக்கிறார். விண்ணுலகத் தேவதைகளை சுலபமாக வரைந்தவர் மண்ணுலக சங்கராச்சாரிய சுவாமிகளின் உருவத்தை அதே பாணியில் வரையத் தயங்கி, மணியம் செல்வத்திடம் ஓவியத்தைக் கொடுத்து பூர்த்தி செய்யச் சொல்லி இருக்கிறார். தலைமுறை இடைவெளி கடந்த இந்த நட்பைச் சொன்னபோது ம.செ நெகிழ்ந்துதான் போனார்.
ஓவியர் சில்பி தத்ரூபம் என்பதின் மறு பெயர். அவருடைய மயிலைக் கற்பகாம்பாள் ஓவியத்தைக் காட்டினார் ம.செ. கோவில் கர்ப்பகிருஹத்தில் போய் நின்றால் கூட இந்த அற்புத தரிசனம் கிடைக்காது என்று பக்தர்களைக் கன்னத்தில் போட்டுக் கொள்ளவைக்கும் நேர்த்தி. இருக்காதா பின்னே? காலையில் கோவிலுக்குள் போய் வரைய ஆரம்பித்து, உச்சி காலம் முடிந்து கோவிலைப் பூட்டும்போது அவரை உள்ளேயே வைத்துப் பூட்டிப் போய், சாயந்திர பூஜைக்கு திரும்பத் திறந்தபோது முடிந்த ஓவியமாம் அது. முடித்தாலும் திருப்தி இல்லாமல், கற்பகாம்பாளுக்கு அணிவிக்கும் எல்லா நகைகளையும் ஒரு தடவை வாங்கிப் பார்த்து நுணுக்கமான திருத்தங்கள் செய்து தான் சில்பி ஓவியத்தை முடித்தாராம். மரபு ஓவியத்தில் ஒரு மைல்கல் அவர்.
கோபுலுவைப் பற்றித் தனியாகச் சொல்ல ஏதுமில்லை. அந்தப் பெயரைச் சொன்னாலே நமக்கு ஜெயகாந்தனின் சாரங்கனும், ஹென்றியும், கொத்தமங்கலம் சுப்புவின் சிக்கல் சண்முகசுந்தரமும் தில்லானா மோகனாம்பாளும், வாஷிங்டனில் திருமணக் காட்சிகளும் இன்னும் ஏகமான கோட்டோவியங்களும், வண்ண ஓவியங்களும் நினைவில் வரும். முக்கியமாக அந்தக்கால ஆனந்த விகடன் அட்டைப்பட சிரிப்புத் துணுக்குகள்.
கோபுலு வரைந்த ஆனந்த விகடன் அட்டைப்பட நகைச்சுவை ஓவியத்தை ம.செ காட்டினார். மனதிலேயே நிற்கிறது. 1940-களின் நடுத்தர வர்க்க வீடு. வீட்டு வாண்டுகளுக்கு ‘மாசாந்திர விளக்கெண்ணெய்’ கொடுக்கும் வைபவம். விளக்கெண்ணெய் குடித்த மூன்று குழந்தைகள் விளக்கெண்ணெய் குடித்த மாதிரி மூஞ்சியை வைத்துக் கொண்டு நிற்க, மாட்டேன் என்று அடம் பிடிக்கும் பையனை அம்மா விசிறிக் கட்டையைக் காட்டி மிரட்டுகிறாள். பக்கத்தில் அன்பே உருவான பாட்டி சர்க்கரை டப்பாவோடு நிற்கிறாள். வீட்டுக்கு உள்ளே இன்னொரு அறை. ரெண்டு டைமன்ஷன் படத்தில் எப்படி இந்த மேதை இவ்வளவு ஆழத்தைக் கொண்டு வந்தார்?நம்மால் அந்த உள்ளறையை உணர முடிகிறது. உள்ளறையில் அப்பா எதைப் பற்றியும் கவலைப் படாமல் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார். இனி படத்தில் வரும் மறக்க முடியாத பாத்திரம் – அடுத்து விளக்கெண்ணெய் குடிக்க வரிசையில் நிற்கும் இன்னொரு குட்டிப் பையன். அவன் முகத்தில் தெரியும் கலவரத்தை கோபுலு தவிர வேறே யாராலும் சித்தரிக்க முடியாது.
கோபுலு இன்னும் நம்மிடையே இருக்கிறார் என்பது தமிழ் கூறும் நல்லுலகத்தின் பெரும் பேறு.
‘சேர்க்கச் சேர்க்க சிற்பம், எடுக்க எடுக்க ஓவியம்’ என்றார் மணியம் செல்வன். சிற்பத்தில் இம்மி இடம் கூட விடாமல் நுணுக்கமாகச் செதுக்கும்போது கிடைக்கும் காட்சி அனுபவத்துக்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை ஓவியத்தில் அங்கங்கே வெறும் வெளியை அப்படியே விட்டு கற்பனையில் நிரப்ப வைப்பது. மணியம் இதில் வல்லவர் என்று ம.செ காட்டிய அவருடைய ஓவியங்கள் கூறின.
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைக் கூட மறந்து விடலாம். ஆனால் மணியன் வரைந்த பழுவேட்டரையரையும் நந்தினியையும் மறக்க முடியுமா என்ன? அவர் மேல் கல்கிக்கு விசேஷப் பிரியம் இருந்திருக்கிறது. ஓவியக் கல்லூரியில் டிப்ளமா முடித்து விட்டு ஆறு மாதம் கழித்து கல்கி பத்திரிகையில் வேலைக்கு சேர்கிறேன் என்று மணியம் சொன்னபோது கல்கி கேட்டிருக்கிறார் – பத்திரிகையில் நீ வேலை பார்க்கப் போறியா, டிப்ளமா வேலை பார்க்கப் போறதா? படிப்பை முடிக்காமலே வேலைக்குச் சேர்ந்த மணியம் அதை ஒரு குறையாகவே கருதினாலும் கல்கி பத்திரிகை வேலையை கடைசி வரை ரசித்தே செய்திருக்கிறார். பத்திரிகைப் பெயர், விலை முப்பது காசு முதற்கொண்டு அட்டைப்பட ஓவியத்தோடு கூட வரைந்து எழுத வேண்டியிருந்த காலம் அது.
மேலே சொல்லிய எல்லா ஓவியர்களின் கலைச் சிறப்பையும் உள்வாங்கிக் கொண்டு அடுத்த தலைமுறை ஓவியரான மணியம் செல்வனின் படைப்புகள் மிளிர்கிறதை அவர் சொல்லாமலேயே உணர்ந்து கொள்ளலாம். சிவராத்திரி நேரத்தில் சிவபிரானை கருப்பு வண்ணத்தில் ஒரு நிழல் போல் தான் வரைந்த ஓவியத்தை ம.செ திரையில் காட்டினார். சிவனுக்கு முக்கண்னோ, மூக்கோ, நாசியோ செவியோ வாயோ எதுவுமில்லை. ஆனாலும் கற்பனையில் நிரப்பிக் கொள்ள சராசரி பத்திரிகை வாசகன் எந்த கஷ்டமும் படவில்லை.
ஆனாலும் அந்த ஓவியத்துக்கு உள்ளே ஓவியருக்கே தெரியாத ஒரு ரகசியம் இருக்கிறதாம். இதை மணியம் செல்வனுக்குச் சொன்னவரும் ஒரு வாசகரே.
‘படத்தைத் திருப்பிப் பாருங்க சார்’ என்றாராம் வாசகர் ஓவியரிடத்தில்.
திரையில் வந்த தன் சிவராத்திரி சிவன் ஓவியத்தைத் தலைகீழாகத் திருப்பிக் காட்டினார் மணியம் செல்வன். அங்கே துல்லியமாக ஒரு வினாயகர் தெரிந்தார். மணியம் செல்வனின் டாவின்சி கோட் இது என்று சந்தேகப் படுகிறவர்கள் அவருடைய மற்ற ஓவியங்களையும் தலைகீழாகப் பார்க்கவோ யோகாசனம் செய்தபடி பார்க்கவோ செய்யும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
June 28, 2022
ஆப்பிள்காரர் – என் ’இதுவும் அதுவும் உதுவும்’ மின்நூலில் இருந்து
ஆப்பிள்காரர்
வாழ்க்கை வரலாறுகள் படிக்க சுவாரசியமானவை – அவற்றில் மெயின் கதாபாத்திரமாக வருகிறவர்களுக்கு.
சுயசரிதம் இன்னும் விசேஷமானது. உயிரோடு இருக்கும்போதே கடியாரத்தின் முள்ளைப் பின்னால் நகர்த்தி, பழைய காலண்டரை சுவரில் ஆணியடித்து மாட்டி, ஏற்கனவே நடந்ததை எல்லாம், இப்படி நடந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நாம் நினைக்கிற படி மாற்றி அமைப்பது.
இங்கே ஒரு காந்தி, அங்கே ஒரு லூயி பாஸ்டர் இப்படி விரல் விட்டு எண்ணக் கூடியவர்களின் நேர்மையான சுயவரலாறுகளின் எண்ணிக்கை, வாழ்க்கை வரலாற்று புத்தகங்களை ஒட்டுமொத்தமாகக் கணக்கெடுத்தால் ஒரு டசன் தேறும்.
சுயசரிதையில் சுய கற்பனை கலந்தால் சம்பந்தப்பட்டவரின் மனசாட்சி வேண்டுமானல் உறுத்தும். பாட்டுடைத் தலைவன் சொல்லச் சொல்ல, அடுத்தாற்போல் உட்கார்ந்து கேட்டு புளகாங்கிதம் அடைந்து பயாகிரபி எழுதும்போது அந்த உறுத்தலுக்கெல்லாம் இடமில்லை. நீளமான மெய்யை கொஞ்சம் வளைத்துச் சுற்றி வளையம் வளையமாக அழகு படுத்தி அளிப்பது எழுதுகிறவரின் எழுத்துத் திறமைக்கு சவால். இந்த மாதிரி –
இவருடைய சொந்த மாமா மரண தண்டனை பெற்று ஜெயிலில் அடைபட்டு எலக்ட்ரிக் நாற்காலியில் சேர்த்துக் கட்டி வைத்து மின்சார ஷாக் கொடுத்து கொல்லப்பட்டார்.
இதை வாழ்க்கை வரலாற்றில் எழுதும்போது அந்த மாமாவை கௌரவமானவராக்கி விடலாம் –
His maternal uncle occupied a honarary chair of applied electronics in a premier Governmental institution and died in harness.
1940-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 20-ந் தேதி அவனியாபுரம் கிழக்கில் காலை ஏழு மணிக்குப் பிறந்தார் என்று சாங்கோபாங்கமாக ஆரம்பிக்கும் கெட்டி அட்டை போட்ட வாழ்க்கை வரலாறு கையில் கிடைத்தால், புத்தகத்தின் கடைசி பக்கத்தைப் படித்து இன்னும் இருக்காரா என்று உறுதி செய்து கொண்டு திரும்ப புத்தகக் கடை அலமாரியிலோ நூலக மேஜையிலோ வைத்துவிடுவது வழக்கம்.
இப்படியான எளிதாக உடைக்க முடியாத, சரி இங்கிலீஷிலேயே சொல்லி விடலாம், tough nut to crack ஆசாமிகளையும் உட்கார்ந்து படிக்க வைக்கிற ஒரு வாழ்க்கை வரலாறு சமீபத்தில் காலம் சென்ற ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பெனி நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றியது. டைம்ஸ் பத்திரிகை மற்றும் சி.என்.என் டெலிவிஷனில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த, வாழ்க்கை வரலாறு எழுதியே பிரபலமான வால்டர் ஐசக்சன் எழுதியது.
ஈர்ப்புக்கு ஒரு காரணம் கோடிக் கணக்கில் உலகம் முழுவதும் விற்கும் நம்பர் ஒன் ஆப்பிள் லேப் டாப் கம்ப்யூட்டர், ஆயிரம் பாட்டுக்களையும் அதற்கு மேலும் சேர்த்து வைத்துக் கேட்க வழி செய்யும் கைக்கடக்கமான ஐபாட், பேசவும் பாட்டுக் கேட்கவும் இன்னும் கம்ப்யூட்டரோடு உறவாடவுமான சேவைகள் கொண்ட ஐபாட், புத்தகம் படிக்க, சினிமா பார்க்க, கையில் சுமந்து திரிய இறகு மாதிரி லேசான ஐபேட் இப்படியான சாதனங்கள் மூலம் ஒரு சின்ன சைஸ் எலக்ட்ரானிக் புரட்சியையே உருவாக்கிய ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பெனியை ஏற்படுத்தி வளர்த்த பிரம்மா – விஷ்ணு இந்த ஸ்டீவ் ஜாப்ஸ். அடுத்த காரணம், ஸ்டீவ் ஜாப்ஸ் இப்போது உயிரோடு இல்லை. புற்று நோயால் அக்டோபர் மாதம் காலமாகி விட்டார் என்பது. அதைவிட முக்கியமான காரணம், தன் வாழ்க்கை முடியப் போகிறது என்று உணர்ந்து கொண்ட ஸ்டீவ் ஐந்து வருடம் முன்பே வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக்க எழுத்தாளரை அணுகியிருக்கிறார் என்பது.
ஸ்டீவோடு கிட்டத்தட்ட நாற்பது நீண்ட பேட்டிகள் – நேர்முகமாகவும், தொலைபேசி மூலமும். அவருடைய நண்பர்கள், உறவினர்கள், ஊழியர்கள், தொழில் முறை போட்டியாளர்கள் இப்படிப் பலரையும் கூட இந்தப் புத்தகத்துக்காகப் பேட்டி எடுத்திருக்கிறார் எழுதிய வால்டர் ஐசக்ஸன்.
ஸ்டீவ் மட்டுமில்லாமல் அவரோடு தொடர்பு கொண்டவர்களையும் சந்தித்துப் பேசியதில் இரண்டு காரியங்களை முடிக்க முடிந்திருக்கிறது. முதலாவது, ஸ்டீவ் பற்றிய அவர்களின் பார்வைக் கோணத்தையும் நினைவுத் தடங்களையும் பதிவு செய்தல். அடுத்தது இன்னும் விசேஷமானது.
ஸ்டீவ் தன் சொந்தக் கதையை, எதிர்நீச்சல் போட்டு மற்ற அமெரிக்க கம்ப்யூட்டர் கம்பெனிகளின் போட்டியை சமாளித்து முன்னுக்கு வந்ததை எல்லாம் சொல்லும்போது, பெரும்பாலும் நடந்தது நடந்தபடி நேர்மையோடு சொன்னார் என்றாலும், அவ்வப்போது அவருடைய ‘கற்பனை நிஜத்தை’யும் (his own version of reality) கலந்தே சொல்லியிருக்கிறார். கூடிய மட்டும் இவற்றைப் பகுத்தறிய சம்பவங்களில் சம்பந்தப்பட்ட மற்றவர்களிடம் இத் தகவல்களைச் சரி பார்க்க வேண்டிய வேலையும் எழுத்தாளர் வால்ட்டர் ஐசக்சனுக்கு வாய்த்தது.
ஆக, முழு உண்மை, பகுதி உண்மை, முறுக்கி வேறு மாதிரி மாற்றப்பட்ட உண்மை, கற்பனையான உண்மை இப்படி உண்மையின் சகல முகங்களோடும் ஸ்டீவ் இந்தப் புத்தகத்தில் அறிமுகமாகிறார்.
ஸ்டீவ் அக்டோபர் மாதம் இறந்தபோது உலகமெங்கும் அவருடைய ஆராதகர்கள் – இவர்களில் இளைய தலைமுறையே அதிகமான இடத்தைப் பிடித்தவர்கள் – இண்டர்நெட்டில் அஞ்சலிக் கோபுரம் எழுப்புகிற மாதிரி ‘வானத்து அமரன் வந்தான் காண், வந்தது போலே போனான் காண்’ ரீதியில் உருகிக் கண்ணீர் விட்டார்கள். ஸ்டீவ் பற்றி அரசல் புரசலாகத் தெரிந்தவர்களும் அவசர அவசரமாகக் கைக்குட்டை தேடி கண்ணில் ஒற்றிக் கொண்டு இரங்கல் பா பாடிய சத்தம் ஒரு வாரம் முழுக்க நெட்டில் கேட்ட வண்ணம் இருந்தது. ஸ்டீவ் கேட்டுக் கொண்டபடி எழுத ஆரம்பித்த இந்தப் புத்தகம், அவருடைய மரணத்தைத் தொடர்ந்து பெருகிய ஆராதகர்களை வாசகர்களாக்கக் குறி வைத்திருப்பதால், பெரும்பாலும் ஸ்டீவ் காவிய நாயகனாகவே ஆரம்பத்திலிருந்து கடைசி வரை சித்தரிக்கப் படுகிறார். காந்தியும் காட்பாதரும் கலந்த ஒரு கலவை.
கம்ப்யூட்டர் கம்பெனி நடத்தியதாலோ என்னமோ ஸ்டீவுக்கு உலகமே பைனரியாகத் தான் தெரிகிறது. திறமைசாலிகள் – முட்டாள்கள், நல்லவர்கள் – அல்லாதவர்கள் இப்படி. அவர் கருத்துப்படி ‘இந்த ஆள் பெருமூடன்’ என்று கணித்தால், பட்டியலில் விழுந்தவர்கள் என்ன செய்தாலும் வெறுப்பை உமிழ்ந்து அவர்களை அவமானப் படுத்துவதை ஸ்டீவ் தன்னைப் பொருத்தவரை ஒரு நாகரீகமாகவே கருதி இருக்கிறார். முக்கியமாக, ஆப்பிள் கம்பெனியின் பெயர் இன்றைக்கு உலக அளவில் பேசப்படுவதற்கு அடித்தளமான பணியாற்றிய மூத்த கம்ப்யூட்டர் விற்பன்னர்களை, மற்ற ஊழியர்கள் முன்னால், கிழித்துத் தோரணம் கட்டித் தொங்க விடுவதில் ஸ்டீவுக்குக் கொள்ளை ஆசை. கார்ப்பரேட் ஹிட்லர்.
இந்த சேடிஸத்துக்குப் பின்னணிக் காரணமாகக் காட்டப்படுவது ஸ்டீவ் பிறந்ததுமே பெற்றோரால் கைகழுவப்பட்ட குழந்தை. அம்மா யூத மதப் பெண். அப்பா சிரியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த ஒரு முஸ்லீம். அவர்கள் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே உறவு வைத்திருந்ததால் பிறந்தவர். பெற்றோர் உதறித் தள்ளிய ஸ்டீவை அடுத்தவர் எடுத்து வளர்த்திருக்காவிட்டால் அவர் அமெரிக்கக் கீழ் நகரப் பகுதிகளில் அலைந்து திரிந்து ஏமாற்றி வயிறு வளர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கலாம். சின்ன வயதிலேயே சுவீகாரம் எடுத்துக் கொண்ட அம்மாவும் அப்பாவும் அவருடைய பிறப்பு பற்றி ஸ்டீவிடம் சொன்னது அவரை வாழ்க்கை முழுதும் பாதித்து தொழில் ரீதியாகவும், நடைமுறை வாழ்க்கையிலும் வார்த்தை வன்முறையாளராகவே இருக்க வைத்திருந்த பரிதாபம் இந்தப் புத்தகம் முழுக்கப் படிக்கக் கிடைக்கிறது. ஒவ்வொரு வாக்கியத்திலும் கட்டாயம் ஒரு fuck, ஒரு shit வருகிறபடிக்கு ஆப்பிள் கம்பெனியின் மூளை வேலைக்காரர்கள் பலரையும் ஸ்டீவ் ஜாப்ஸ் வார்த்தைச் சவுக்கால் விளாச, அவர்கள் அதை அமைதியாக விழுங்கியிருக்கிறார்கள். அங்கே மட்டுமில்லை எல்லா நாட்டு கம்ப்யூட்டர் கம்பெனிகளிலும் ஊதியத்தை உயர்த்திக் கொடுத்து நாக்கைப் பிடுங்கிக் கொள்வது வழக்கமாக நடக்கிறதுதான்.
தன்னைக் கைவிட்ட அம்மாவையும் அப்பாவையும் விந்து அணுவைச் சேகரித்துக் கருத்தரித்து பெற்றுப் போட்டவர்களாக வாழ்க்கை முழுக்கக் கண்டதும், புற்றுநோய் முற்றிய நிலையில் படுக்கையில் இருக்கும்போது அந்த அப்பா எழுதிய அன்பான கடிதத்துக்கு ‘தேங்க் யூ’ என்று ரெண்டே வார்த்தையில் பதில் எழுதி அலட்சியப் படுத்தியதையும் அவர் மனம் காயப்பட்டதன் விளைவு என்று புரிந்து கொள்ளலாம். ஒன்பது மாதம் ராப்பகலாக ஆப்பிள் கம்பெனி இஞ்சினியர்கள் உழைத்து உருவாக்கிய ஐபோன் வடிவமைப்பு பிடிக்காமல் தூக்கிக் கடாசி விட்டு, ‘புதுசா செய்யணும். ராவாப் பகலா, சனி, ஞாயிறு வீட்டுலே அக்கடான்னு உட்காராம ஆபீசுக்கு வந்து சேருங்க. நான் சொன்னது பிடிக்கலேன்னா, துப்பாக்கி தர்றேன். என்னை இப்பவே சுட்டுக் கொன்னுட்டுப் போங்க’ என்று அழுத்தம் கொடுத்து சிந்திக்க முழு அவகாசம் கூடத் தராமல் ஒரு வல்லுனர் கூட்டத்தையே ‘எஸ் சார்’ போட வைத்த போல்பாட் தனம் டாலர் கனவுகளை மெய்யாக்க பிரயோகித்த அல்டிமேட் ராஜதந்திரமாக இருக்கலாம். ஆனால், உடம்பு சரியில்லாத காரணத்தால் ஆபீசுக்கு மாதக் கணக்கில் போக முடியாமல் இருந்து, திரும்பப் போனதும் ஊழியர் கூட்டம் கூட்டி நரசிம்மாவதாரம் எடுத்து நாலைந்து ஊழியர்களைக் கிழித்துத் திருப்திப்படுவதும், சபையில் அவமானப்படுத்தி அங்கேயே வைத்து பதவியைப் பறித்து ‘பேண்டைக் கழற்றி’ அனுப்புவதும் நோய் மனக்கூறாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டியே ஆக வேண்டும் என்று அவருக்கு வாழ்நாள் முழுக்க வெறியே இருந்திருக்கிறது. அறுபதுகளில் ஹிப்பியாக இந்தியா வந்திருக்கிறார். வெறுங்காலோடு கோவில் பிரசாத உண்டைக்கட்டிக்காக மைல் கணக்காக நடந்திருக்கிறார். தன் வயது மற்ற அமெரிக்க இளைஞர்களின் பெரும்பான்மையினருக்குக் கிடைக்காத இந்த அனுபவங்களோடு, பாலில் தண்ணீர் கலந்து விற்ற பால்காரியோடு இங்கே அவர் சண்டை போட்டதையும் சேர்த்துக் கொள்கிறார் வால்டர் ஐசக்ஸன்.
முழுக்க பழங்கள் மட்டுமே உணவாக மாசக் கணக்கில் இருந்திருக்கிறார் ஸ்டீவி. அப்படி இருந்தால் உடலில் கழிவே தங்காது என்றும் வியர்த்தாலும் வாடை அடிக்காது என்றும் திடமாக நம்பிக் குளிக்காமல் நடமாடி இருக்கிறார். அப்படியே வேலைக்குப் போக, மற்றவர்களைக் குறைவாக இவருடைய உடம்பு வாடையால் கஷ்டப்படுத்த, ஆள் குறைவான ராத்திரி ஷிப்டில் உட்கார வைக்கப் பட்டிருக்கிறார். இதனால் எல்லாம் பாதிக்கப்படாமல், புற்றுநோய் முற்றும்வரை, இது தினசரி மூணு வேளை ஆப்பிள் வாரம், இது முழுக்க முழுக்க சாலட் வாரம் என்று விதவிதமாக சாப்பாடு சம்பந்தமாக சோதனை செய்தபடி இருந்திருக்கிறார்.
ஸ்டீவ் புதுச் சிந்தனைகளோடு சதா திரிந்த தொழில்நுட்ப விற்பன்னர் என்று ஆராதகர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிம்பம் கொஞ்சம் உடைய, அவருடைய வெற்றிக்கு, காலமும் இடமும் சூழ்நிலையும் பார்த்துச் செயல்பட்டு தொழில்நுட்பத்தை வியாபாரமாக்கும் தந்திரம் இயல்பிலேயே கைவந்ததுதான் காரணம் என்று காட்டுகிறார் ஐசக்ஸன். ஆப்பிள் கம்பெனி உருவாக ஸ்டீவ் ஜாப்ஸுக்குத் தோள் கொடுத்த இன்னொரு ஸ்டீவ் ஆன, முழுக்க முழுக்கத் தொழில்நுட்ப வல்லுனரான ஸ்டீவ் வோஸ்நியக் தான் ஆப்பிளின் மகத்தான வெற்றிக்கு அடித்தளம் அமைத்ததில் பெரும் பங்கு உள்ளவர் என்று தெரிகிறது.
ஏ.டி.அண்ட் டி தொலைபேசிக் கம்பெனியின் தொலைபேசி அலை அதிர்வுகளைப் போலி செய்து ஓசியில் டெலிபோன் பேச வசதி செய்யும் நீலப் பெட்டி என்ற மோசடி வன்பொருள்-மென்பொருள் தொகுதி தான் இந்த இரட்டையர் முதலில் உருவாக்கி விற்றது. நீலப் பெட்டி மூலம் இரண்டு பேரும் வாட்டிகன் நகரில் போப்பாண்டவரிடம் பேச முயற்சி செய்தது, அதுவும் ஹென்றி கிஸ்ஸிங்கர் போல் குரலை மாற்றிப் பேசி, போப்பாண்டவரின் மடாலயப் பாதிரியார்களை அலறி அடித்துக் கொண்டு பேச வைத்தது போன்ற இளமைப் பருவக் குறும்புகளில் இரண்டு பேர் பங்கும் சரிசமம்.
இப்படிப் பிள்ளையார் சுழி போட்டாலும், முதல் ஆப்பிள் கம்ப்யூட்டரை வடிவமைத்து ஸ்டீவ் வோஸ்நியக் காட்டியதும், இதை எப்படி மற்ற கம்ப்யூட்டர்களோடு இணைப்பது, எப்படி இதில் இருக்கும் தகவலை பிரதி எடுத்து வைப்பது என்று தொலைநோக்கோடு முதல் கேள்விகளைக் கேட்டு ஆப்பிள் நிறுவனத்தை வெற்றிப் பாதையில் கொண்டு போக சாமர்த்தியம் காட்டியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆனாலும் வோஸ்நியக்கை ஜாப்ஸ் ஏமாற்றி இருக்கிறார். அடாரி விடியோ விளையாட்டு கம்பெனிக்கு இவர்கள் உருவாக்கிய விளையாட்டு யந்திரத்துக்கான வருமானத்தில் பாதியைப் பகிர்ந்து கொண்ட ஸ்டீவ் ஜாப்ஸ் கம்ப்யூட்டர் சில்லுகளை மிச்சம் பிடித்து குறித்த காலத்தில் வடிவமைத்துக் கொடுத்ததற்காக அடாரி கொடுத்த போனஸைப் பற்றி பங்காளி வோஸ்நிக்கிடம் மூச்சுக்கூட விடவில்லை. இன்னும் கூட இது வோஸ்நிக்குக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய இனிப்பில்லாத நினைவு. ஆனாலும் அவருக்கு ஸ்டீவ் நல்ல நண்பராகவே இருந்திருக்கிறார்.
ஐபோன் 4-இல் எழுந்த ஆண்டென்னா சிக்கலை நாலே வாக்கியங்களை சபையில் சொல்லி சமாளித்தது (We’re not perfect. Phones are not perfect. We all know that. But we want to make our users happy), ஐபேட் உருவான போது சரியான முறையில் விளம்பரங்கள் அமையவில்லை என்பதற்காக விளம்பர நிறுவனத்தை துரத்தித் துரத்தி அடித்து வேலை வாங்கியது, ஐ-கிளவுடுக்காக பதினெட்டு மில்லியன் பாட்டுகளை இணைய மேகத்தில் (cloud computing) சேகரிக்க இசை வெளியீட்டுக் கம்பெனிகளோடு ஒப்பந்தம் போட்டு, போட்டியாளரான அமேசனை தலை குப்புற வீழ்த்தியது என்று ஸ்டீவ் ஜாப்ஸின் பராக்கிரமங்கள் விவரமாகச் சொல்லப்பட்டுப் பட்டியல் போடப் படுகின்றன. கூடவே அவர் ஒபாமாவை விருந்துக்கு அழைத்ததும் விவரிக்கப் படுகிறது.
ஒபாமாவிடம் ஸ்டீவ் சொன்னாராம் – அமெரிக்காவில் கல்விமுறை சகிக்கலை. வாத்தியார்களை தொழிற்சங்கம் அமைக்க விடக்கூடாது. சங்கத்தை உடைத்து, வேலையிலே சேர்க்க, அப்புறம் திறமைசாலி இல்லேன்னு சொல்லி நீக்க அதிகாரத்தை கல்லூரி முதல்வர்களுக்குத் தரணும். வருஷம் பதினோரு மாசம், தினம் சாயந்திரம் ஆறு மணி வரை வகுப்பு நடக்கணும். புத்தகத்தை எல்லாம் தூக்கிக் கடாசிடுங்க. வேஸ்ட் அது எல்லாம். இனி (ஆப்பிள்) கம்ப்யூட்டரில் ஈ-பாடப் புத்தகத்தைத் தான் எல்லாரும் படிக்கணும்னு சட்டம் கொண்டு வரலாம்.
அச்சுப் புத்தகங்களை நேசிக்க முடியாத ஸ்டீவ் ஜாப்ஸ், எப்போதாவது சென்னை அண்ணா நூலகத்தைப் பற்றி இதே போல் நம்மவர்களுக்கு உருப்படியான யோசனை என்று ஏதும் சொல்லிவிட்டுப் போனாரா, தெரியவில்லை.
June 25, 2022
காசா லே சா – இதுவும் அதுவும் உதுவும் மின்நூலில் இருந்து
இருபத்தைந்து பைச வரை இருக்கிற நாணயங்கள் டீ-மானிடைஸ் செய்யப்பட்டு, பணப்புழக்கத்திலிருந்து விலக்கப்பட்டதாக வெளியான செய்தி துக்ககரமானது.
ஓட்டைக் காலணாவைப் பார்த்த ஞாபகம் தேசலாக இருக்கிறது. சாளூரில் இருந்து வெள்ளரிக்காயும், பச்சைக் கத்திரிக்காயும் விற்க வருகிற அப்பத்தாக்கள் தாலியில் கோர்த்துப் போட்டுக் கொண்டிருப்பார்கள். அதைத்தவிர அறுபதுகளில் அந்தக் காசுகளுக்கு ஒரு பயனும் இருந்ததாகத் தெரியவில்லை.
நிக்கல் காசு புழக்கத்தில் வந்ததும், அரசாங்கத்தில் அழகியல் ரசிகரான யாரோ அதிகாரி ரொம்ப யோசித்து குட்டியூண்டு சதுரமாக ஒரு பைசாவை உருவாக்கினார். ஊர் முழுக்க ஒரு பைசா புழங்கினாலும் அதற்கும் பிரயோஜனம் இருந்ததாக நினைவில்லை. தப்பு. இருந்தது.
காதி வஸ்திராலயத்தில் தக்ளி வாங்கினால் பதினாலு பைசா விலை. மதராஸ் சர்க்கார் வெளியிட்ட சிறிய சைஸ் பாரதியார் பாட்டு புத்தகமும் அதே பதினாலு பைசாதான் விலை. அரசாங்கமே பதினாலு பைசா வருமானத்துக்காக ஏழெட்டு பேருக்கு வேலையும் கதர்ச் சட்டை, வேட்டியும் கொடுத்து உட்கார்த்தின அந்தக் கதர்க் கடைகளில் பதினைந்து பைசா கொடுத்து பொருள் வாங்கும்போது நாம் மறந்தாலும் அவர்கள் ஞாபகமாக கல்லாவில் இருந்து ஒரு பைசா எடுத்துத் தருவார்கள்.
ரெண்டு பைசா வந்ததும் இருந்ததும் மறைந்ததும் கனவு போல் இருக்கிறது. வட்டமான செப்புக்காசு, கொஞ்சம் ராஜராஜசோழன் கால சாயலில் இருக்கும் என்று நினைவு மட்டும் இருக்கிறது. அதுக்கு சாதா ஐஸ் ப்ரூட் கிடைக்கும். அழுக்கான வண்டியில் வைத்து வியர்த்து வடிந்து தள்ளிக் கொண்டு வருகிற ஐஸ்காரர் இப்படி இரண்டு இரண்டு பைசாவாக வருமானம் சேர்த்து என்ன மாதிரி வாழ்க்கை நடத்தியிருப்பார்?
மூன்று பைசா நிக்கல் காசு ஒரு புரட்சிக்கு வித்திட்டது. புனல் வாதத்தில் ஓம் நமசிவாயா என்று எழுதின சுவடி வைகை தண்ணீரில் மிதக்க சமணர்களின் ‘அஸ்தி நாஸ்தி’ சுவடி அடித்துப் போனதாக ஒரு டைப் பக்தி பிளஸ் வரலாறு பள்ளிக் கூடங்களிலேயே சொல்லிக் கொடுத்த காலத்தில் கனமான பொருட்கள் கூட மிதக்கும் என்ற நம்பிக்கையைப் பரவலாக்க மூன்று பைசா நாணயம்தான் வெகுவாக பயன்பட்டது.
நடுவிரலில் பாந்தமாக உட்கார்த்தி, கிண்ணத்தில் பூத்தாற்போல் விட, அந்தக் காசு மிதக்கிற அழகே தனி. தேர்த் திருவிழாக் கடை சர்பத் வாங்க அந்த மூன்று பைசா போதும். யார் வாங்கிக் குடித்துவிட்டுப் போனாலும் கொடுத்த காசு அடுத்த நிமிஷம் அலுமினிய பேசின் தண்ணீரில் குஷியாக மிதக்க ஆரம்பித்து விடும்.
ஐந்து பைசா அதிகம் தட்டுப்பட்ட காசு. வேகாத வெய்யிலில் பள்ளிக்கூடத்தில் எங்கள் ஏழு-சி வகுப்பு பானையை நிரப்பப் பக்கத்து செட்டியூரணியில் இருந்து தண்ணீர் சுமந்து வந்து ஊற்றிப் போகும் காது வளர்த்த அம்மாவுக்கு ஐந்து பைசா தான் தினசரி கிளாஸ் ஃபண்டில் இருந்து எடுத்துக் கொடுத்து செலவுக் கணக்கு எழுதப்படும். அந்தம்மா தினசரி பத்து வகுப்புக்குத் தண்ணீர் சுமந்து வந்து ஊற்றுகிறவள். தினசரி ஐம்பது பைசா வருமானத்தில் ஐஸ்காரரை விட கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது வசதியாக இருந்திருப்பாளோ.
பத்து பைசா கொஞ்சம் கவுரவமான காசு. பாக்கெட்டில் வைத்து காணாமல் போனால், அலைச்சலைப் பொருட்படுத்தாமல் ஒரு நடை வந்த வழியே திரும்பி நடந்து தேட வைக்கக் கூடியது. பத்து பைசாவுக்கு ஒரு நாட்டு வாழைப்பழம் வாங்கலாம். சென்னைப் பக்கம் வாழக்கா பழம் என்று சொல்கிறது இது. பத்து பைசா ரெண்டு கொடுத்தால் ஆனந்த பவானில் இட்லி கிடைக்கும். தவிர சந்தைக் கடையில் அட்டை முழுக்க ஒட்டி வைத்த பாக்கெட்களை ஒரு பாக்கெட் பத்து பைசா கொடுத்துக் கிழித்தால் பம்பர் பிரைசாக ஐந்து முழு ரூபாய் கிடைக்க வாய்ப்பு உண்டு. அதென்னமோ பத்து பைசா அலுமினிய டம்ளரோடு தான் நினைவில் வருகிறது. அந்த டம்ளர் கூட பத்து பைசா லாட்டரி பரிசுதான்.
இருபது பைசா வந்தபோது அது உடனே காணாமல் போனது. செப்பில் அடித்த காசு என்பதே காரணம். வாங்கியவர்கள் உருக்கிச் சேர்க்க ஆரம்பித்தார்கள். பின்னால் அது நிக்கல் ஆனபோது சீந்துவாரற்றுப் போய்விட்டது. எந்தக் காசோடும் சேராமல் தனியாகவே இருந்து தனியாகவே போய்ச் சேர்கிற காசு இது.
கால் ரூபாய், நாலு அணா என்றெல்லாம் வீட்டிலும் வெளியிலும் பெரிசுகள் அறிமுகப்படுத்திய இருபத்தைந்து நயாபைசா முக்கியமான துட்டு. எதை எடுத்தாலும் இருபத்தைந்து பைசா வண்டியில் விற்கிற ரப்பர் பந்து, பாரீஸ் தேங்காய் சாக்லெட், தொண்டைக் கட்டுக்கு பெப்ஸ் மாத்திரை, மலச்சிக்கலுக்கு பர்கோலாக்ஸ், வைடமின் பி மாத்திரை, ராயர் கடை பஜ்ஜி, பள்ளிக்கூட மேஜிக் ஷோ டிக்கட், பழைய சினிமா பாட்டுப் புத்தகம், நடராஜ் பென்சில், இங்க் பில்லர், வெற்றிலை பாக்கு இப்படி இருபத்தைந்து பைசாவுக்கு ஏகப்பட்டது கிடைத்தது.
இருபத்தைந்து பைசா தோழர் காசி கடையில் கொடுத்தால் தமிழ்வாணனின் கல்கண்டு வாரப் பத்திரிகை கிடைக்கும்.
காலணா நான்பார்த்தே கால்நூறு ஆண்டுதண்ணீர்
மேல்மிதந்த மூணுபைசா ஞாபகம் – போலொருநாள்
நாலணா போனவழி நாடு மறந்துவிடும்
காலமெலாம் காசாலே சா
இரா.முருகன் 04/06/2011
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

