இரா. முருகன்'s Blog, page 42
October 13, 2022
நோயுற்று மூத்து நுந்து கன்றாகி – திருக்கோத்தும்பி – ராத்திரி வண்டி குறுநாவல்
ராமச்சந்திரன் ஸ்டேஷன் மாஸ்டரைக் கவனித்துப் பார்த்தான்.
‘சரவணா.. சாரிடா.. வெரி சாரி.. இனிமே கவனிச்சு சரியா வரையறேண்டா.. நாளைக்கு வந்து நிச்சயம் வரஞ்சு தரேன். இன்னிக்கு ரயில் ஓடாதாம்.. வர முடியலே.. மன்னிச்சுக்கோ..’
‘நீ தப்பு ஏதும் பண்ணலேடா.. எதுக்காக வருத்தப் படறே.. நான் தாண்டா தப்புப் பண்ணிட்டேன். உன் பங்குக்கு எடுத்து வச்ச பணத்திலே அப்பா கருமாதி காரியம் எல்லாம் நடத்தினேன். இதுவும் பொய் தாண்டா. நான், இவ கேட்டாளேன்னு ரெட்டை வடம் செய்யறதுக்கு அதிலேருந்து தான் எடுத்துக்கிட்டேன்.. இந்த வருஷம் அரியர்ஸ் வரும். திருப்பிப் போட்டுடறேண்டா. அப்ப எறந்த போது உன் பங்குலே எடுத்ததைக் கேக்கக் கூடாது. அது கடமைடா.. பெத்தவனுக்குப் போறதுக்கு பல்லாக்கு கட்ட வேணாம்? புஷ்பப் பல்லாக்கு..நீதான் பாக்கலியே..’
அப்பா சிங்கப்பூர்லே இருந்து வந்துட்டாரா? அந்த ஓட்டை உடசல் ரூமிலேயே செத்துப் போய்ட்டாரா?
சரோ .. சரோ.. அரிசி.. வர்றியா.. நான் வரலே.. வாய்க்கரிசி போடணும்..
ராமச்சந்திரனை இன்னொரு அலை உருட்டித் தள்ளுகிறது.
மகாவித்துவான் படுக்கையில் இருக்கிறார். சுவாசம் சிரமத்தோடு இழைந்து கொண்டிருக்கிறது. பக்கத்தில் தலைமாட்டில் சாமிநாதய்யர் உட்கார்ந்து திருக்கோத்தும்பி படித்துக் கொண்டிருக்கிறார். ராமச்சந்திரன் விளாக்கைத் தூண்டி எண்ணெய் விட்டுக் கொண்டு பக்கத்தில் நிற்கிறான். சீக்கிரம் விளக்கு அணையப் போகிறது. மின்விசிறி அதிகமாகச் சத்தம் போட்டுக் காற்றை வீசி அடிக்கிறது. ஸ்டேஷன் மாஸ்டர் அமைதியாக உட்கார்ந்திருக்கிறான்.
‘நோயுற்று மூத்து நுந்து கன்றாகி..’
சாமிநாதய்யரின் கணீரென்ற குரலும் இடறுகிறது.
‘நுந்து கன்றென்றால்?’
பிள்ளையவர்களைப் பார்க்கிறார்.
‘விருப்பமில்லாமல் செலுத்தப்படுகிற கன்று’
அவர் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழியக் குழறிக் குழறிச் சொல்கிறார்.
ராமச்சந்திரன் கண்களைத் துடைத்துக் கொள்கிறான். நோயுற்று மூத்து நுந்து கன்றாகி.. நானும் தான்.. இருக்க இடம் இல்லாமல், பரிவு காட்ட யாருமில்லாமல், நோயுற்று, மூத்து, நுந்து கன்றாகி..நுந்து கன்றுக்குத் தொழுவம் கூடக் கிடையாது.. ஸ்டேஷன் மாஸ்டர் வீடு..சரவணன் ஸ்டூடியோ..அம்மா சமையல்காரியாக இருந்த வீட்டு காடிகானா…
‘சார்.. உங்க வீடு பெரிசு. மனசும் நல்ல மனசு. நான் ஊருக்குப் போய் உங்க படம் வரைஞ்சு அனுப்பறேன். மிசஸ் கூட இருக்கற போட்டோ கொடுங்க. சேர்த்து வரைஞ்சு தரேன். ஃபோட்டோ மாதிரி, அச்சா, அழகா… சரவணன் வரையறதுக்கு எல்லாம் புதுசாத் தருவான்.. நான் கேட்டா அவன் நிச்சயம் தருவான்.. என் மேலே ரொம்பப் பிரியம். எனக்கு பொண்ணு பார்க்க, வேலையை எல்லாம் விட்டுட்டு ஓடி வந்துட்டான். பொண்ணுக்கு என்னைப் பிடிக்கலே. அவனைத் தான் பிடிச்சுது.. அதுக்கு அவன் என்ன பண்ணுவான்? கல்யாணம் வச்சுக்கச் சொல்லப் போறேன். அடுத்த மாசம். எங்க வீடு இல்லாட்ட என்ன? வேறே பெரிய வீடா, சுத்தமா, பெரிய கூடத்தோட பிடிச்சு… நூறு இருநூறு பேரு சேர்ந்து உக்கார்ந்து சாப்பிடற தோதிலே.. நான் இல்லாம கல்யாணம் நடக்குமா.. நான் ஊருக்குப் போகறேன்.. ராமேஸ்வரத்துலே என்ன இருக்கு? மணல்தான்..நான் போகலே.. உங்க படம்.. கட்டாயம்.. மறக்காமே..’
‘திடீர் திடீர்னு மனசை மாத்தாதடா.. அப்பா செத்தபோது என்கிட்டே சொன்னாரு.. ராசுப்பயலுக்கு ஸ்திரமான மனசும் புத்தியும் வரபோது அவன் உங்கிட்டே திரும்ப வருவன். அப்போ அவனைக் கைவிட்டுடாதேன்னு. நான் உன்னை விட்டுடுவேனாடா? சின்ன வயசிலே உனக்கு அம்மை வார்த்தபோது பக்கத்திலேயே உக்கார்ந்து பாத்திட்டிருந்தேன் ராவும் பகலும்.. ஞாபகம் இருக்காடா.. நானும் தவமணி அக்காவும்..’
ராமச்சந்திரன் இன்னொரு அலையில் பிரவாகத்தின் உள்ளே போகிறான்.
பல்லக்கு போய்க் கொண்டிருக்கிறது. மேலே மறைப்பில்லாமல் வானம் பார்த்து மல்லாந்து கிடக்கும் பல்லக்கு. பழைய வீபுதியும், பூ வாசனையுமாக போன சிவராத்திரிக்கு முன் தினம் காறுபாறு தம்பிரான் ஆதின நிலத்தில் அறுவடை என்று காறுபாறு செய்ய ஏறிப் போனதற்கு அப்புறம் ஒரு வருடமாக யாரும் அதைத் தொடவில்லை. வயல் வரப்பில், மரத்தடியில் வைத்திருந்ததில், காக்கை எச்சம் மூங்கில் கழிகளில் விழுந்து தெறித்துக் காய்ந்து போய் அப்பி இருக்கிறது. பல்லக்கு பக்கத்தில் ராமச்சந்திரன் சரவணனோடு நடந்து கொண்டிருக்கிறான். சாமிநாதய்யருக்கு அம்மை வார்த்திருக்கிறது. ஆதீனகர்த்தர் சொன்னபடி சூரிய மூலைக்குக் கூட்டிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
‘கொஞ்சம் நடையை எட்டிப் போடுங்க.. வெய்யில் ஏற்றதுக்குள்ளாற போய்ச் சேரணும்..’
பல்லக்குத் தூக்கிகளில் ஒருவன் சொல்கிறான். ராமச்சந்திரன் நடந்தபடி, பல்லக்கு உள்ளே குனிந்து சொல்கிறான்.
’ஒன்றும் கவலைப்பட வேண்டாம். சீக்கிரம் சரியாகிவிடும். உங்களுக்கென்ன குறைச்சல்? வீடு இருக்கிறது. அன்பான பெற்றோர் இருக்கிறார்கள். கண்ணைப் போல் பார்த்துக் கொள்வார்கள். எனக்குத் தலைக்கு மேலே கூரை உண்டா? எவ்வளவு மோசமான நிலைமை. ஆனாலும் கவலைப்படவில்லை. இந்த முகத்துக்குக் கல்யாணம் ஒரு கேடா என்றார்கள், ராத்திரி முழுக்கக் கண் விழித்து சோப்பு விளம்பரம் எழுதினால், காலையில் அதை அழிச்சுட்டு மேலேயே வேறே படம் போடறாங்க. ஒண்ணுக்கும் கவலைப்படலே.. ஒன்றுக்கும் கவலைப்படவில்லை.. வைத்திருந்தது எல்லாம், உங்கள் வாழ்க்கை வரலாற்றையும் சேர்த்து, பஸ்ஸில் போய் விட்டது. கிடைக்குமா என்று தெரியவில்லை. உலகம் பெரியது. நுந்து கன்றுக்கும் தொழுவம் கிடைக்கும். வீடு வந்து கொண்டிருக்கிறது. இளைப்பாறிக் கொள்ளுங்கள். நான் அப்புறம் ஈசுவர சித்தம் இருந்தால் வந்து பார்க்கிறேன். நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று மகாவித்துவான் சொல்லி அனுப்பியிருக்கிறார். மகாமகம் சமயத்தில் திரும்பி வந்தால் போதும்..’
உடம்பு பூரா வேதனை தெரியப் படுத்திருந்த ஐயர் சொல்கிறார் – ‘ராத்திரி வண்டி வரப் போகிறது. ஏறிப் பட்டணம் போங்கள். எல்லாம் நல்லது நடக்கும்..’
ஈனஸ்வரத்தில் அவர் பேச்சின் கடைசி காதில் விழவில்லை.
ஸ்டேஷன் மாஸ்டர் மெல்லப் பக்கத்தில் குனிந்து கையைப் பிடித்துக் கொண்டு மௌனமாக இருக்கிறான்.
‘ராசு.. உன் கையெழுத்தை நானே போட்டுட்டேண்டா. நிலம் வித்தாத்தான் அக்கா கல்யாணம் முடியும்னு இருந்துச்சு.. ரொம்ப லேட்டாத்தான் அக்காவை கரையேத்தினேண்டா.. அப்பாவும் இல்லே.. நீயும் போய்ட்டே.. நீ நல்ல பையன் இல்லையா.. அக்கா மேலே பிரியம் உண்டு இல்லே.. நான் சொன்னாத் தட்ட மாட்டியே.. நிலம் போனாப் போவுதுடா.. அக்கா இப்போ சந்தோஷமா இருக்கு..ஆம்பளைப் புள்ளை.. நாலரை வயசு ஆவுது.. எனக்குப் பொண்ணு பிறக்காட்ட என்னடா? அவனுக்கு வேறே பொண்ணே கிடைக்காதா? அக்காவைப் பார்க்கப் போகலாமா?’
‘ஊருக்குப் போகணுமே இப்போ..’
‘சீக்கிரம் போயிடு.. அப்புறம் பாத்துக்கலாம்.. அந்தப் பொம்பளையைத் தனியா விட்டுட்டு வந்திருக்கியா? நல்லா சிரிக்கறாடா உங்காளு.. இருட்டிலே கூடப் பல்லு என்ன வெளுப்பாத் தெரியுது.. நாக்கைத் துருத்திக்கிட்டுப் பிராக்குப் பாத்துக்கிட்டு நிக்காதே.. என்னை மாதிரி எவனாவது காஞ்ச பய தள்ளிக்கிட்டுப் போயிடுவான்.. எங்கேயோ நல்லா இருந்தா சரி.. அவளுக்கும் மனசு இருக்கும்டா.. என் புத்திக்கு அவ உடம்பு தான் தெரியுது.. நீ அவ மனசைப் புரிஞ்சுக்கிட்டு நட..’
‘நான் ஊருக்குப் போய் உங்க படம் அனுப்பறேன்..’
‘அண்ணியையும் சேர்த்து வரஞ்சு அனுப்பு. ஹால்லே கல்யாண போட்டோ மாட்டியிருக்கு பாரு. பாத்துக்கோ. நீதான் மனசுலே பதிச்சிட்டா மறக்க மாட்டியே.. அண்ணியைத் துணியோட போடு.. என்ன.. பக்கத்துலே பசங்கள்ளாம் இருக்கிற மாதிரிப் போடு.. படம்னா மனசுக்கு சந்தோஷமா இருக்கணும்..முழுசும் நிசமா இருக்கணும்னா முடியுமா? சரிதானே?’
ராமச்சந்திர்ன் உம் உம் என்று நான்கைந்து தரம் முனகினான். எதற்கென்று தெரியாமல் திடீரென்று எழுந்து ஸ்டேஷன் மாஸ்டர் கைகளைப் பற்றிக் கொண்டு கண்ணில் ஒற்றிக் கொண்டான். அவன் காலைத் தொட யத்தனித்துக் குனிந்து தரையில் விழுந்து தூங்கிப் போனான். சுவர்க் கோழியும் ஃபேனின் கடகட சத்தமும் தவிர அப்புறம் ஒரு சத்தமில்லை.
நடுராத்திரிக்கு யாரோ கதவை இடிக்கிற சத்தம். கணபதி தான்.
‘மெசேஜ் வந்திருக்கு. மதுரையிலேருந்து. பட்டணம் போற வண்டி அவுட் ஆச்சாம். புக்கிங் கிளார்க் சொல்லச் சொன்னாரு’
‘அவரு வீட்டுக்குப் போகலியா?
‘நீங்க பத்து மணிக்கு வரேன்னீங்களாம். தூங்கிட்டீங்களா?’
சீவகன் கண்ணைத் துடைத்துக் கொண்டான். உள்ளே தரையில் அலங்கோலமாகக் கிடக்கிற ராமச்சந்திரனைப் பார்த்தான். அப்புறம் வானத்தைப் பார்த்தான். தெளிவாக இருந்தது.
‘நீ போ.. வரேன்..’
கணபதியை அனுப்பி விட்டு, ராமச்சந்திரனைத் தட்டி எழுப்பினான். முகத்தை ஈரத்துணி கொண்டு துடைத்து விட்டான். நாற்காலியில் பிடித்து உட்கார்த்தினான்.
‘தூங்காதே..டிரயின் வந்துட்டிருக்கு.. த்ரீ டயர் கோச்சில் ஏத்தி விடறேன்.. அங்கே போய்த் தூங்கிக்க.. பணம் இருக்கா? சரி நான் தரேன்.. ஊருக்குப் போற வரைக்கும் போதும்.. டிக்கட்டெல்லாம் நான் பாத்துக்கறேன்.. கிளம்பு… வண்டி வரப் போகுது.. இரு இரு.. பாத்ரூமிலே போய் தலையை வாரிக்கிட்டு வா.. வாயைக் கொப்பளிச்சுத் துப்பு.. சீப்பு இருக்கா.. இந்தா..’
பகுதி – 9
அநேகமாகக் கூட்டம் இல்லாமல் வண்டி வந்து நின்றது. மதுரையில் பிடிவாதமாகக் காத்திருந்து கிளம்பியவர்களாக இருக்க வேண்டும். அதில் ஏறினவர்கள் எல்லாம்.
த்ரீ டயர் கோச்சில் தூங்கி வழிந்து கொண்டு உட்கார்ந்திருந்த கண்டக்டரிடம் சொல்லி சீவகன் ராமச்சந்திரனை ஏற்றி விட்டான்.
‘ஒரு கண்ணு வச்சுக்குங்க.. எங்கேயாவது பாதியிலே எறங்கிடப் போறான்..’
’வேண்டியவரா?’
‘தம்பி..’
‘உடம்பு சரியில்லையா? சோர்ந்து போய் உக்காந்திருக்காரே?’
‘திடீர்னு வண்டி வர்றதா மெசேஜ் வந்தது. நல்லாத் தூங்கிட்டு இருந்தான். எழுப்பிக் கூட்டிட்டு வந்தேன். தூக்கம் இன்னும் தெளியலே.. அதான்’
ராமச்சந்திரன் ஆள் இல்லாத இருக்கையில் காலை சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டான். மங்கலான வெளிச்சத்தில் கம்பார்ட்மெண்ட் முழுக்க இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கரப்பான் பூச்சிகள் ஊர்ந்து கொண்டிருந்தன. ஒரு குளிர்ந்த காற்று மெல்ல வீசியது. பச்சையும் சிவப்புமாக விளக்கை எடுத்துக் கொண்டு ஸ்டேஷன் மண் தரையில் காற்று வாங்க நின்ற கார்டு தன் பெட்டிக்குப் போய்க் கொண்டிருந்தார். ரயில் கிளம்பி ஊர்ந்து போகப் போகிறது. அப்புறம் வேகம். எல்லாவற்றையும் அடித்துச் சாய்த்து இயக்கம் தான் இருப்பு என்று கூவிப் பாயும் வேகம்.
‘போய்ட்டு வா ராசு.. ராமச்சந்திரன்.. போய்ப் பதில் போடு.. நான் ரிப்ளை கார்ட் அனுப்பறேன்.. அட நீ அட்ரஸே சொல்லலியே..சரி போ.. நீயே எழுது..’
‘போய் நிச்சயம் உங்க படம் அனுப்பி வைக்கறேன்..’
‘ஒண்ணும் அவசரமில்லே.. மெல்ல அனுப்பு.. வரட்டா?’
ரயில் நகர்ந்த போது எதிர்த்த பெர்த்தில் தூங்கிக் கொண்டிருந்தவர் எழுந்து உட்கார்ந்தார். ஸ்டேஷன் பெயர்ப் பலகையைப் படிக்க முயன்று தோற்று இவனிடம் கேட்டார் –
‘மணி என்னங்க?’
‘தெரியலீங்க..நான் வாட்ச் கட்டறதில்லே..’
ஜன்னல் வழியாக வானத்தை வெறித்தார்.
‘மூணு மூணரை இருக்கும்.. நட்சத்திரம் நிக்குது சுத்தமா..’
‘அப்படீங்களா?’
‘இது என்ன ஊருங்க?’
எந்தப் பெயரும் நினைவில் வரவில்லை. ஒரு வினாடி தாமதித்து ‘உத்தமதானபுரம்’ என்றான்.
(நிறைந்தது)
October 12, 2022
இடமும் காலமும் நடப்பும் பிரமையுமாக ஒரு பிரவாகத்தில் அவன் குறுக்கும் நெடுக்குமாக, மேல் கீழாக
ராத்திரி வண்டி இரா.முருகன் பகுதி – 8
ராமச்சந்திரன் கண்ணை மூடி மூடித் திறந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு தடவை இமை மூடும் போதும் இந்த உலகமே பிடிக்கு வழுக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இடமும் காலமும் நடப்பும் பிரமையுமாக ஒரு பிரவாகத்தில் அவன் குறுக்கும் நெடுக்குமாக, மேல் கீழாகப் பயணம் போகிறான். முன்னால், இன்னும் முன்னால் போய், தொடங்கிய இடத்துக்கு வருகிறான்.
கண்ணைத் திறக்கும் போதெல்லாம் எதிரே உட்கார்ந்து பாட்டிலிலிருந்து கிளாஸில் நிறைக்கிற ஸ்டேஷன் மாஸ்டர் தான் இந்த உலகத்தோடு ஒரே தொடர்பாகத் தெரிகிறான்.
‘ராசு… ராமச்சந்திரனா.. அட போடா..நீ வேறே என்ன பெயர் வச்சுக்கிட்டா என்ன .. எனக்கு நீ ராசு தான்.. சொல்லுடா தம்பி.. அட, எனக்கு மட்டும் சொல்லுடா.. அவ எப்படிடா உங்கூட வந்தா? நான் தான் அவளுக்குக் காத்துக்கிட்டு டைப்பு அடிக்கற போது அவ பின்னாடியே போனேன்.. அவ இல்லேயிலே .. ஆமா .. அது பிரஸ்காரன் பொண்ணு.. இவ.. டீக்கடைக்காரன் சம்சாரம்.. நீ போனே பாரு.. எப்படிடா தவற விட்டேன்.. இட்டுட்டு வந்திருப்பேன்.. மயிரு உத்தியோகம்.. இந்தப் புடுங்கி உத்தியோகத்தைச் சொல்லியே இவளை அட அதாண்டா உங்க அண்ணியைக் காட்டிப் பிடிக்குதான்னு கேட்டாங்க… என்னமோ ஆர்வக் கோளாறு.. சரின்னுட்டேன்.. கட்டி வச்சுட்டாங்கடா.. கடனேன்னு படுக்க வரா.. கருவாட்டுக் குழம்பு மட்டும் நல்லா வைக்கிறா… நீ சாப்பிட மாட்டியா? கருப்புக் கம்பளி சாமியார் போல சைவமா இப்போ? பூசணிக்காய் சாம்பார் கேசா? டிராயிங் மாஸ்டர் போடுவாரே… முதுகைச் சொறிஞ்சுக்கிட்டு வரிசையா… படம்னா அது படம்.. நீயும் வரையறியே.. அது என்னடா கட்டடம் எல்லாம் கரி படிஞ்சு? டீக்கடையா? அப்போ பாய்லர் எங்கேடா? படம் போட்டா ஒரு தெளிவு வேணும்.. என்ன கவனிக்கறியா? பார்க்க சந்தோஷமா இருக்கணும். என்ன ஏது யாருன்னு புரியணும்.. பொணத்தை எரிக்கறதும் மாடிப்படியிலே இருட்டிலே ஒண்ணுமில்லாம மொட்டக் கட்டையா நிக்கறவளும் என்னடா படம்? சொல்லுடா ராசு.. அண்ணன் கேக்கறேனில்லே..’
‘ஓவியத்தில் காணப்படுகிற ஒவ்வொரு பொருளுக்கும் அதன் நிஜ உருவத்துக்கும் தொடர்பு காண நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். அது ஒரு போதும் சரியாக அமைவதில்லை. ஓவியத்தை, ஓவியனின் கண் கொண்டு பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். அதை முழுமையானதாக, ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்ட தூரிகை வீச்சுக்களின் தொகுப்பாக, வண்ணங்களும், உருவமும், பின்புலமும் சேர்ந்து பிரத்யேகமாக ஏற்படுத்திக் கொண்ட உலகமாகப் பார்க்க வேண்டும். ஓவியம் உங்கள் பார்வைக்கும், கவனிப்புத் திறனுக்கும் சவால் விடுகிறது என்பது போல அதை எதிர்கொள்ளாதீர்கள். அது ஒரு மகிழ்ச்சியின், துக்கத்தின், பயத்தின், கோபத்தின் வெளிப்பாடு. பகுதி குறியீடாக, பகுதி இயல்பாக, ஒரு குறுகுறுப்போடு, மிரட்சியோடு, திகைப்போடு வெளிப்படுகிற ஒன்று. அய்யப்பப் பணிக்கர் சொல்கிறது என்னவென்றால் – ஓவியன் சத்தியத்தின் ஒரு துகளைத் தன் போக்கில் சித்தரிக்கிறான்’.
‘அது யாரு மலையாளத்தான்? டீக்கடைக்காரன் தானே? கில்லாடிடா நீ. சரிக்கட்டிட்டியா? கையிலே பருப்பு வடையும் பொறை பிஸ்கட்டும் பொட்டலம் கட்டிக் கொடுத்து பஸ் ஸ்டாண்டுக்கு வந்து ரெண்டு பேரையும் அனுப்பி வச்சானா? ஆனாலும் இப்படி பஸ்ஸை விட்டுட்டு நிக்கறியேடா.. நான் அவ கூடப் போயிருப்பேன்..இந்த சாணிக் காகித உத்தியோகமும் இவ கழுத்திலே கட்டின தாலியும் தான் தடுத்துக்கிட்டு காலைப் பிடிக்குது.. நீ ஓடுடா.. துரத்திக்கிட்டு பின்னாடியே ஓடு. எவ பின்னாலேயும் போ, எனக்கு ஒண்ணும் ஆகப் போறதில்லே… உங்க அண்ணி கைமணம் வருமாடா எவளுக்கும்? தெய்வம்டா… அவ என்னப் பார்த்து பூ இவ்வளவு தான்’யா நீன்னு சிரிச்சாலும், எவனும் நாக்கைத் துருத்திக்கிடு வர பய கூடக் கிளம்பிப் போயிட மாட்டா..என் புத்தி தாண்டா லோலோன்னு அலையறது.. ஆனா உடம்பு ஸ்ட்ராங்க்.. நீத்துப் போயிடுமா.. சரிதான் போடா.. கொஞ்சம் ஊத்திக்கடா.. வேணாம்னு சொல்லாதே.. தம்பியைப் பார்க்க வச்சிக்கிட்டுக் குடிச்சா பெரும் பாவம்.. ராமச்சந்திரா.. ராசு.. நேரத்துக்கு ஒரு பெயர்டா உனக்கு.. கூட்டிட்டுப் போனியே.. கல்யாணம்னு சொல்லி ஒரு மஞ்சக் கயித்தையாவது அவ கழுத்திலே கட்டினியா?’
‘கல்யாணமா? உன் மூஞ்சிக்குக் கல்யாணம் ஒரு கேடான்னு கேட்டாங்க சார்.. உள்ளே கூப்பிட்டுப் போய் உட்காரச் சொல்லுவாங்கன்னு பாத்தா திண்ணையிலேயே அழிச்சாட்டியமா உக்கார்த்திட்டாங்க. ரொம்ப நாழி கழிச்சு காப்பி கொடுத்தாங்க..கொட்டு கொட்டுன்னு உக்காந்துக்கிட்டு நான் வாசலைப் பார்த்துக்கிட்டிருக்கேன்.. அப்புறம் மெதுவா சொல்றாங்க.. சரவணன் தான் மாப்பிள்ளைன்னு நினைச்சாங்களாம்.. அப்ப நான்? அவனுக்கு எடுபிடியாப் போனவன்னு வச்சுக்கிட்டாங்க போல.. என்னை அந்தக் கிழவனும் கிழவியும் புழு மாதிரிப் பாத்தாங்க சார்.. அந்தப் பொண்ணு.. ஜன்னல் வழியா முகமும் கையும் தெரியுது.. கையெல்லாம் லேசா முடி… நான் கவனிச்சேன்.. அவ சரவணனைப் பாத்துட்டு உள்ளே போயிட்டா… லட்சணமா இருக்கா.. பளிச்சுனு .. அழகா.. கும்பிட வைக்கிற அழகு.. எந்த தீத்தாராண்டியாவது கூப்பிட்டா? போறான் போ.. கும்பிட்டுக்கிட்டே கூப்புடுவோம்ங்கிறானுங்க..’
ராமச்சந்திரன் பிரவாகத்தில் தத்தளித்தும், முழுகியும் மேலே எழும்பி வருகிறான்.
‘சரோ.. சரோ.. வரியா..?’
‘போயிடுங்க.. நான் அந்த மாதிரிப் பொம்பளை இல்லே.. ஆம்பளை இல்லாத வீடுன்னு வம்பு பண்ணாதீங்க. எம் புருஷன் ஜெயிலுக்குப் போயிட்டா என்ன, திரும்பி வராமலா போயிடுவாரு? கஷ்டமோ நஷ்டமோ நானும் என் பிள்ளையும் பட்டுக்கறோம்..சமையல்காரின்னா இளப்பமா.. நிக்காதீங்க.. போயிடுங்க…’
‘உடனே போயிடலாம் வா.. வீட்டுலே யாரும் இல்லே..’
’நான் வரலே’
‘நாகராசன் கிட்டே காலையிலே இங்கே அரிசி கொண்டு வந்து போடச் சொல்லியிருக்கேன்’
‘என்னை என்ன ஒழிஞ்ச நேரத்துலே துணி விரிச்சா உப்பு புளிக்கு ஆகும்னு நினைக்கறவளா வச்சுட்டீங்களா?’
‘சத்தம் போடாதே. பையன் எந்திருச்சிடப் போறான். ஏதோ போனோம் வந்தோம்னு இல்லாம.. முதல் தடவை மாதிரியே எப்பவும் தகராறு செஞ்சா எப்படி? இந்தப் பேச்செல்லாம் இப்ப எடுபடாது..வா.. நேரமாகிக்கிட்டு கிடக்கு.. இவ இங்கே ஓட்டை உடசலை எல்லாம் அடச்சு வைக்காட்ட இங்கேயே வந்துடுவேன்..பையன் முகப்புலே தானே படம் போட்டுக்கிட்டிருக்கான்..நாற்காலி, தாம்புக் கயிறு.. எழவு.. எல்லாத்தையும் இங்கே எறிஞ்சு வச்சிருக்கா.. ஒரு நாளைக்கு என்னையும் கொண்டு வந்து எறிஞ்சுட்டான்னா, அப்புறம் உன் காலடியிலேயே கிடப்பேன்..’
தடாரென்று கதவைத் திறந்து கொண்டு வந்து ஏதோ பழைய குப்பையை உள்ளே எறிந்து விட்டுப் போகிறாள் வீட்டுக்காரனின் மகள். அது சால்வடார் டாலியின் ஓவியம் – நிலையான காலம். சிவகாசிக் காலண்டரில், வார்னிஷ் வழவழப்பில், காபிப் பொடி விளம்பரத்தோடு வந்திருக்கிற படம். மேடை மேலும், தரையிலும், செத்துப்போன கடியாரங்கள் கோரமாக உடல் பிதுங்கித் தொங்குகின்றன. மரக் கிளையில் ஒரு கடியாரம் தூக்கு மாட்டித் தொங்குகிறது. உள்ளங்கை நிலத்தைத் தொடத் தொங்குகிறவன் படத்திலிருந்து சரோ..சரோ.. என்று அம்மாவைக் கூப்பிடுகிறான். ராமச்சந்திரனின் பார்வை ஒரு சிறிய வட்டத்தை மட்டும் வெளிச்சம் போட. காதில் மின் விசிறி சத்தமும், ஸ்டேஷன் மாஸ்டர் குரலும்.
உலகத்தில் இவனை விடப் பரிச்சயமானவர்கள் யாரும் இல்லை. அம்மாவும் இறந்து போனாள்.
‘உனக்கு படிப்பு ஏறலே. படம் நல்லாப் போடறே. மெட்றாஸிலே என் தம்பி ஆர்ட் காலேஜ்லே சொல்லிக் கொடுக்கறான். அவனுக்கு லெட்டர் தரேன்.. இது உங்கம்மா எங்கிட்டே கொடுத்து போஸ்டல் சேவிங்க்ஸிலே சேர்த்து வச்சது.. ரெண்டாயிரத்துச் சொச்சம் இருக்கு…’
இவன் தான் சொன்னான். அப்போது இவனுக்கு நிறைய வயதாகி இருந்தது. தலை வழுக்கையாக, கண்ணாடி எல்லாம் போட்டுக் கொண்டு ரிடயர்ட் போஸ்ட் மாஸ்டராக இருந்தான்.
’ராமேந்த்ரன்.. படத்திலே மானசம்.. மனசைக் கொண்டு வந்து நிக்க வைக்கணும். வெறும் அனாடமியா ஆர்ட்? இல்லல்லோ.. அனாடமி அறிஞ்சு பிரஷ் பிடிச்சா பேனர் வரையலாம்.. நில்க்கண்டா..அதையும் கடந்து போகணும்.. புரிஞ்சுதா..’
இவன் சிகரெட் பிடித்தபடி சொன்னான். அப்போது இவன் ஓவியக் கல்லூரியில் ஓவியம் வரையச் சொல்லிக் கொடுத்தான்.
‘ஒரு வருஷத்தோட விட்டுட்டியேடா.. நான் பீஸ் கட்டறேன்.. தொடர்ந்து படிச்சு கம்ப்ளீட் பண்ணுடா’
இவன் தான் சொன்னான். மெட்றாலில் பேனர் ஆர்ட்டிஸ்டாக இருக்கிறான்.
‘நீ பிடிவாதம் பிடிச்சா பிடிச்சது தான்… சரி போ.. ஒழி.. கொஞ்ச நாள் என் கூடவே இரு.. பானர் வரையக் கத்துக்கோ.. காலேஜ்லே விட்டுட்டு ஓடி காசியிலே திரிஞ்சுட்டு வந்தூ நிக்கற மாதிரி இங்கேயிருந்து போயிடக் கூடாது. என்ன புரியறதா? மெஸ் பில் கட்ட முடியலேன்னு போனியா? அது ஒரு சாக்குடா உனக்கு.. உன் மனசுக்குள்ளே ஏதோ குட்டிப் பிசாசு இருக்கு.. அது போடற ஆட்டம்டா.. ‘
இவன் மட்டும் ஆதரவாகக் கைநீட்டி இருக்காவிட்டால் தெருவில் அலைந்து திரிய வேண்டி இருக்கும்.
‘இந்த ஓரமா நீ காமடியன் தலையைப் போடு. தவளையை முழுங்கறாப்பலே. இதான் ஸ்டில்.. பாத்துக்க.. போன வாரம் செல்வி டிடர்ஜெண்ட் சோப் போர்டுலே பண்ணின மாதிரி கூத்து பண்ணிடாதே..குவர்னிகாவிலே வர்ற ஒத்தை பல்பையும், குதிரைத் தலையையும் போட்டு நடுவிலே மாடலையும் சோப்போட உக்கார வச்சிருந்தியே.. செல்வராசன் திருப்பிப் போட்டான்.. போய்ப் பாரு.. சேலை வெலகினது தெரியாம துணி துவைக்கிற பொண்ணு.. இந்த வேலைக்கு பிகாஸோவும் மாட்டிஸேயும் வேணாம்.. ஒழுங்கா மாரு வரையத் தெரிஞ்சாப் போதும்’
இவன் சொன்னபோது குரலில் கோபமே இல்லை.
ராமச்சந்திரன் ஸ்டேஷன் மாஸ்டரைக் கவனித்துப் பார்த்தான்.
   
October 11, 2022
யாருக்கோ வந்ததுன்னு நிக்கறீங்களே.. உங்க பஸ்தான்.. போயிடுச்சு சார்
‘கணபதி, வீச்சுப் பொரட்டா வாங்கிட்டுப் போ’
வண்டிக்காரன் சொன்னான்.
‘போறதுக்குள்ளே ஆறிடுமே அண்ணே’
‘நீ சூடா இருக்கேயில்லே.. அது எப்படி ஆறும்?’
பஸ் ஸ்டாண்ட்.
‘சார், நீங்க இருங்க.. ஸ்டேஷன் மாஸ்டர் ஐயா பணம் கொடுத்து விட்டிருக்காரு வண்டிச் சத்தத்துக்கு.. நீங்க எடுக்க வேணாம்… பழனியண்ணே.. இந்தாங்க…. சார், இறங்கிக்கலாம்.. நீங்க இறங்குங்க.. மூட்டையை நான் இறக்கறேன்.. இதிலே பூரா படமா இருக்கா சார்? கனமாக் கனக்குது. பழனியண்ணே.. நீங்க பாக்கலியே. சார் என்னமா படம் போட்டாரு காலையிலே.. உங்க சித்தினி சாதிப் பொண்ணு தான்’
‘எனக்கு எதுக்குடா படம் எல்லாம்… நேரேயே பாத்துப் பாத்து அலுத்துப் போச்சு..’
’அப்ப ஓரமா வண்டியைப் போட்டுட்டுப் பார்த்துக்கிட்டே இருங்க.. சார் மண்டபம் போகணும்.. பஸ் ஏத்தி விட்டுட்டு வரேன்.. ஸ்டேஷன் பக்கம் திரும்பற சவாரின்னா நானும் முன்னாடி தொத்திக்கறேன்.. சரிதானே?’
கணபதி சுறுசுறுப்பாக குதிரை வண்டியிலிருந்து மூட்டை முடிச்சை இறக்கி வைத்தான்.
ராமச்சந்திரன் ஒரு முறை தீர்க்கமாகச் சுற்றிலும் பார்த்தான்.
பஸ் பஸ்ஸாக வெள்ளரிக்காயும், பலாச்சுளையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மூட்டை ஏற்றினார்கள். பரிசுச் சீட்டு விற்கிற பையன்கள் புகுந்து புறப்பட்டார்கள், எட்டு மடிப்பான காலைப் பத்திரிகையைப் பிரித்து விசிறிக் கொண்டு வெளியே சிகரெட் குடிக்கிற கண்டக்டரையும் டிரைவரையும் மாறி மாறிப் பார்த்தார்கள். கிளம்புகிற பஸ்களில், கழுத்து வியர்வையைத் துடைத்துக் கொண்டு, வெற்றிலையைத் துப்பி விட்டுப் பராக்குப் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள்.
‘சார், இதான் மண்டபம் போற பஸ்’
தூரத்தில் சிமெண்ட் பெஞ்சில் தோல்பையை மாலை போல தொங்கவிட்டுக் கொண்டு கண்டக்டர் நிஷ்டையில் இருக்கிற மாதிரி அமர்ந்திருக்க, அழுக்குத் துண்டோடு ஒருவன் ‘ராமநாதபுரம்.. மண்டபம்’ என்று அடிக்கொரு தரம் கத்திக் கொண்டிருந்தான்.
’சார்.. நீங்க போய் டிக்கெட் வாங்கிட்டு வாங்க. நான் இந்தப் படுக்கையை மேலே ஏத்திடறேன்.. மேலே வேணாம்.. மீனும் கருவாடுமா வரும்போது ஏத்திட்டு வந்து, ஒரே கவிச்ச நாத்தம் பிடிச்சுக் கிடக்கும். உள்ளேயே போட்டுடறேன். கடைசிக்கு முந்தின சீட்டு. நேரே வந்து உக்காந்துடுங்க.’
ராமச்சந்திரன் கண்டக்டரை நோக்கிப் போனான்.
‘என்ன சார் இப்படி பொம்முனு இருக்கு? கொஞ்சம் இறுக்கமாக் கட்டிட்டா உள்ளே போட்டுடலாம்..சரி, நீங்க போங்க. நான் பாத்துக்கறேன். சார்.. ஒரு நிமிஷம்… பஸ் கிளம்ப இன்னும் அரை அவராவது ஆகும்கிறாங்க.. நான் இதோ போய்ட்டு ஓடி வந்துடறேன். கிளம்பறதுக்குள்ளேஎ வந்துடுவேன். நீங்க ஏறிக்குங்க;
ராமச்சந்திரன் தலையை ஆட்டிக் கொண்டே நடந்தான்.
***************************** *******************
கணபதி ஒரு பொட்டலத்தைக் கையில் மாறி மாறி வைத்துக் கொண்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்தபோது மண்டபம் பஸ் போயிருந்தது.
சே … புதுக்கடையினா கூட்டம் ஜாஸ்தியா இருக்கும்னு தெரிஞ்சுக்கிட்டே பொய் மாட்டிக்கிட்டேன். பார்சலுக்கு வேறே நேரமாக்கிட்டான். சரி நாம நம்ம வேலையைப் பார்த்தாச்சு.. அந்த ஆளு போயிருப்பாரு சவுக்கியமா.. கூடவே கையைப் பிடிச்சுட்டுப் போயா விட்டுட்டு வர முடியும்? போகட்டும் போ. ஒரே சூடா சுடுதே. ஆறதுக்குள்ளே போனா அந்த சனியனுக்குத் தரலாம். ஆசையாச் சாப்பிடும்.. பழனியண்ணன் வண்டி எங்கே போச்சு?
யாரோ தோளைத் தொட்டார்கள்.
திரும்பினால், ராமச்சந்திரன் சிரித்துக் கொண்டு நின்றிருந்தான்.
‘ஐயயோ.. என்ன சார்.. பஸ் போயிடுச்சு போல இருக்கே.. எங்கேயாவது பராக்குப் பார்த்துக்கிட்டு நின்னுட்டீங்களா? படுக்கை வேறே வண்டியிலேயே மாட்டிக்கிடுச்சே.. ஸ்டேஷன் மாஸ்டர் படிச்சுப் படிச்சுச் சொன்னாரு.. இவர் கொஞ்சம் ஒரு மாதிரி.. திடீர்னு எங்கேயாவது எதையாவது நினைச்சுக்கிட்டு நின்னுடுவார். பார்த்து பஸ்ஸிலே ஏத்தி விட்டுட்டு வான்னு.. உங்க சங்கதி தெரியாம நான் வெளியே போனது என் தப்பு தான்.. இனிமே வேறே வண்டி கூட கிடையாது.. ஸ்டேஷன் மாஸ்டருக்குத் தெரிய வந்தா, என்னை ஒரே முட்டா ஏசுவாரு.. என்ன சார்.. நீங்க பாட்டுக்கு நிக்கறீங்க.. பஸ் போயிடுச்சு சார்.. யாருக்கோ வந்ததுன்னு நிக்கறீங்களே… உங்க பஸ் தான் சார்.. எப்படி விட்டீங்க?’
‘மண்டபம் போக டிக்கட் பதினஞ்சு ரூபாயாம். எங்கிட்டே சட்டைப் பையிலே அஞ்சு ரூபா தான் இருக்கு’
‘ஏன் சார், ஸ்டேஷன் மாஸ்டர் கிட்டே முன்னாடியே அத்தச் சொல்லியிருந்தா என்ன? வண்டிச் சத்தம் கொடுத்தவர் பஸ்ஸுக்கு கொடுக்க மாட்டாரா என்ன? ஆமா, என்ன நம்பிக்கையிலே தேசாந்தரம் கிளம்பி வந்தீங்க பையிலே அஞ்சு ரூபாயை மட்டும் வச்சுக்கிட்டு?’
’நூறு ரூபா இருந்துச்சு.. எந்தச் சட்டையிலே வச்சேன்னு ஞாபகம் இல்லே. அந்த ஹோல்டாலுக்குள்ளே தேடினாக் கிடைக்கும். அதான் பஸ்ஸோடு போயிடுச்சே..’
‘நல்ல ஆளு சார் நீங்க. இப்ப எங்கே போய்த் தேடறது? என்ன பண்ணப் போறீங்க?’
‘வாங்க.. திரும்பப் போயிடலாம். நடந்தே போயிடலாம். நீங்க கூட ஏதோ வாங்கணுமில்லே. அஞ்சு ரூபா போதுமில்லே?’
பஸ் ஏஜெண்ட் அழுக்குத் துண்டில் முகத்தைத் துடைத்துக் கொண்டு, ‘தொண்டி.. திருவாடானை, இளையான்குடி’ என்று கூவ ஆரம்பித்திருந்தான். கணபதி ஓட்டமும் நடையுமாக அவனை நோக்கிப் போனான். வேடிக்கை பார்க்கிற சுவாரசியத்தோடு ராமச்சந்திரனும் அவனுக்குப் பின்னால் ஓடினான்.
‘இப்ப எங்கேன்னு பிடிக்கறது? நாளைக்கு மதியத்துலே வண்டி திரும்ப இங்கே வரப்போ இருந்துச்சுன்னா எடுத்து வைக்கறேன். நீங்களும் மதுரை ஆபீஸுக்கு போன் அடிக்கச் சொல்லுங்க.. ராத்திர் வண்டி ராமநாதபுரத்துலே ஷெட்டுக்கு போகும். அங்கேயும் சொல்லி வைக்கச் சொல்லுங்க.. செல்வராசு முதலியார்னு மேனேஜர்.. கொஞ்சம் காது மந்தம்.. அவர் கிட்டே தான் தாக்கல் சொல்லணும்.. முத்துப்பாண்டி தான் இன்னிக்கு கண்டக்டரா ஓடறாரு… நாளைக்கும் அவரே இருந்தா கேக்கலாம்..வழியிலே ஏறி இறங்கினவன் எவனாவது கிளப்பிட்டுப் போயிருந்தா, போனவன் போனாண்டி தான்.. சாரோட பொட்டியா? உன்னோட அவரையும் பொரட்டா ஸ்டாலுக்குக் கூட்டிப் போயிட்டியா என்ன வண்டி கிளம்பறது கூட தெரியாம? என்னய்யா நீ ரயில்வேக்கார ஆளா இருந்துக்கிட்டு வண்டியை கோட்டை விட்டுட்டு நிக்கறே? நல்ல ஆளுங்கய்யா.. தொண்டி,,, திருவாடானை..’
‘இவரை ஒரு கேள்வி கேட்டா இவரு நம்மளை ஒன்பது கேள்வி கேக்கறாரு.. ராமவிலாஸ் பஸ் சர்வீஸே அய்யா நிர்வாகத்துலே தான் ஓடற மாதிரி.. சார் என்ன பண்ணலாம்?’
கடகடவென்று வண்டி சத்தம்.
‘என்னய்யா கணபத், சார் இன்னும் வண்டி ஏறலியா? மூட்டை முடிச்செல்லாம் எங்கேய்யா? வித்துப் பொரட்டா வாங்கிட்டு வந்துட்டீங்களா?’
‘மூட்டையா.. அது மட்டும் மண்டபம் போயிடுச்சு. சார் போறதுக்கில்லேன்னுட்டாரு.. திரும்ப ஊருக்குப் போறாராம்..’
‘அதான் இன்னிக்கு ரயில் இல்லேன்னியேப்பா’
‘நாளைக்குப் போகப் போறாராம். பணம் தனியா எடுத்து வச்சிருக்காரு’
ராமச்சந்திரன் பலமாகச் சிரித்தான்.
‘எல்லாம் போச்சு. இனிமேல் புதுசா எல்லாம் வரையலாம்’
‘போயிருக்காது.. நாளைக்குக் கெடச்சுடும். ஸ்டேஷன் மாஸ்டர் சார் கிட்டே சொல்லுங்க’
‘ஏறுங்க போகலாம்.. போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடன்னு’
வண்டிக்காரன் சொன்னான்.
‘பொரட்டாவோட’ என்றான் ராமச்சந்திரன்.
(தொடரும்)
   
October 10, 2022
உன் கையிலே கலை இருக்குடா ஹுசைன் மாதிரி, விவியன் சுந்தரம் மாதிரி, பூபேன் கக்கர் மாதிரி
 ராத்திரி வண்டி   குறுநாவல்        பகுதி 7 அ
ராத்திரி வண்டி   குறுநாவல்        பகுதி 7 அ
————————————————————————-
‘இப்ப என்னன்னு சொல்லு விஷயத்தை…நான் அவசரமாப் போகணும்..’
‘ஒண்ணுமில்லேய்யா, என் தம்பி வந்திருக்கான். நாளைக்கு முத்துப்பட்டியிலே பொண்ணு பார்க்கப் போகப் போறானாம்’
‘மவராசனாப் போய்ட்டு வரட்டும்’
‘நாமளும் கூட வரணுமாம்’
‘நான் எதுக்குடி? அப்புறம் பொண்ணுக்கு என்னைப் பிடிச்சுப் போயிடுத்துன்னு வச்சுக்க… அவனுக்குக் கல்யாணம் ஆகணுமா, வேணாமா?’
‘ஆமா.. உன் மூஞ்சிக்கு நான் ஒருத்தியே சாஸ்தி.. பழனியண்ணே நல்லாச் சொல்லுங்க இந்த ஆளுக்கு. மனசுலே பெரிய மம்முதக் கொரங்குன்ன்னு நெனப்பு. அடிக்கடி டவுனுக்குப் போறேன்னு கிளம்பிடறாரு சண்டியர். எங்க வேணுமின்னாலும் ஒழி. வயத்துக்குக் கொட்டிக்கிட்டுப் போ. அது போதும்..’
’இரு இரு வந்து கவனிச்சுக்கறேன்.. தம்பி இருக்கானா போய்ட்டானா?’
‘நாட்டரசன்கோட்டைக்குப் போயிருக்கான். காலையிலே வந்துடுவான். ரெட்டரெடியா இருக்கச் சொல்லியிருக்கான்’
’ஆமா இவரு பெரிய ஜில்லா கலக்டரு. சமூகத்தை எதிர்பார்த்து வாயையும் பின்னாலேயும் பொத்திக்கிட்டு காத்து நிக்கணும்..’
‘நீ எங்கெ வேணும்னாலும் பொத்திக்க. விளக்கு வைக்கறதுக்குள்ளே வந்து சேர்ற வழியைப் பாரு. உடம்பைப் பாரு. வத்தக் காச்சியாட்டமா. சமைச்சு வைக்கறதை கொட்டிட்டுப் போக உனக்கு வலிக்குது..’
‘வரேன்.. வரேன்.. வந்து வாயிலேயே போடறேன்’
‘வரும்போது திருநெல்வேலி அல்வா வாங்கிட்டு வா… ஆமா.. சும்மா கையை வீசிக்கிட்டு வந்து நிக்காதே..’
‘சரிதான் போ புள்ளே… வெய்யில்லே அலையாம வீட்டுக்குப் போ.. விட்டா ஓலைப் பாயிலே ஒண்ணுக்கிருக்கற மாதிரி பேசிட்டே போவியே.. அல்வாவாம் அல்வா..’
ராமச்சந்திரனுக்குத் தெரியும். இது கோபமில்லை. இவன் சாயந்திரம் அல்வாவோடு போய் நிற்பான். அவள் காத்திருப்பாள். சமைத்து வைத்து விட்டுக் காத்திருப்பாள். மல்லிகைப் பூவுக்கும், இவனுக்கும். குடிசையோ, அஸ்பெஸ்டாஸ் தகடு வேய்ந்தோ ஒரு வீடு. வழி மறித்து வாயைப் பிடுங்கி ரசிக்கிற மனைவி. வாசலில் காத்திருக்கிற மனைவி.
‘ராமச்சந்திரா, நிச்சயமா நீ லைஃப்லே செட்டில் ஆகறதுக்குக் கல்யாணம் பண்ணிட்டுத் தாண்டா ஆகணும்’
‘எனக்கு எவன் பொண்ணு தருவாண்டா சரவணா? என்ன இருக்கு ஆஸ்தி? உன்னோட ஸ்டூடியோவிலே ஒட்டிக்கிட்டு உனக்குக் கூடமாட பானர் வரைஞ்சு தரேன். நீ நாளைக்கு வெளியே போன்னு சொன்னா வேலையும் போச்சு.. தலைக்கு மேலே கூரையும் போச்சு..’
‘உன் கையிலே கலை இருக்குடா ராமச்சந்திரா.. ஹுசைன் மாதிரி, விவியன் சுந்தரம் மாதிரி, பூபேன் கக்கர் மாதிரி நீ ஒரு நாள் வரத்தான் போறே.. நான் தான் பானரோட நின்னுட்டேன். நீ நல்லா வரத்தான் போறே.. வீடு வீடுன்னு மாஞ்சு போறியே.. நிச்சயம் உனக்குன்னு வரத்தாண்டா போகுது.. பொண்டாட்டி, பசங்க, கட்டில், நாற்காலி… பூபன் கக்கரோட சிவன் சிலையோடு ஒரு ஷோ கேஸ் படம் மாதிரி சகலமும் அடுக்கி வச்ச ஷோ கேஸ்… உன்னாலே முடியும்டா நல்லா வர’
‘ஆனா நான் காலேஜிலே டிராப் அவுட். மெஸ் பில் கட்டப் பணம் இல்லேன்னு வெளியே அனுப்பிச்சபோது நீ மட்டும் வான்னு கூட்டிட்டு வராட்ட நான் இன்னிக்குத் தெருவிலே சாக்பீஸ்லே படம் போட்டுச் சில்லறை பொறுக்கிட்டிருப்பேன். தெருவிலே அனுமார்தான் போடணுமா? சர்ரியலிஸ்டிக்கா சாக்பீஸ்லே படம் போட்டு பஸ் அழிச்சது போக மிச்சத்தை வச்சிருந்தா எப்படிடா இருக்கும்? நாலு பேராவது காசு போடுவாங்களா?’
‘திடீர் திட்டினு என்னடா பேத்த ஆரம்பிச்சுடறே? கல்யாணம் நடந்தா அப்புறம் இப்படி எல்லாம் இருக்கக் கூடாது. என்ன பேசறோம், யார் கிட்டப் பேசறோம்னு மனசுலே வச்சுக்கணும். சும்மா ஒரு புஸ்தகத்தைக் கையிலே வச்சுக்கிட்டு, அதுவும் ஒரே புத்தகத்தைத் திரும்பத் திரும்பப் படிச்சுக்கிட்டுப் பொண்டாட்டி கிட்டே போய் திடுதிப்புனு வித்துவான் தியாகராசச் செட்டியார், கட்டளைக் கலித்துறைன்னு என்கிட்டே சொல்ற மாதிரிப் பேசக் கூடாது. மிரண்டு ஓடிப் போயிடுவா’.
‘வந்தா இல்லேடா ஓடறதுக்கு. என் மூஞ்சிக்கு யார்டா சரவணா கழுத்தை நீட்டுவா?’
‘ஏண்டா உன் மூஞ்சிக்கு என்னடா? கொஞ்சம் நாக்கைத் துருத்தறதைக் கொறைச்சுக்கிட்டு தலையை வாரி, ஷேவ் பண்ணிக்கிட்டேன்னா, இதோ பாரு, இந்த ஓரமா வரஞ்சிருக்கேனே.. தெலுங்குப் பட செகண்ட் ஹீரோ.. அவன் மாதிரி இருப்பே’
ராமச்சந்திரன் நாக்கைச் சட்டென்று உள்ளே இழுத்து, உதடுகளை அழுத்தமாக மூடிக் கொண்டு வண்டிக்குள் பதிந்திருந்த சிறிய, சாயம் போன கண்ணாடியில் முகம் பார்த்தான்.
மம்முதக் கொரங்காட்டமா இருக்கு.
கணபதியிடம் வண்டிக்காரன் சித்தினி ஜாதிப் பெண் என்று ஏதோ ஈடுபாட்டோடு பேசிக் கொண்டிருந்தான்.
‘நீ விவரமான ஆளு அண்ணே.. இதெல்லாம் எங்கே தெரிஞ்சுக்கிட்டே?’
‘அனுபவம்டா தம்பி. கேட்டுக் கேட்டுப் படிஞ்சது வேறே. சொந்தமாத் தெரிஞ்சுக்கிட்டதை எல்லாம் சொல்ல ஆரம்பிச்சா நான் சொல்லிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். நீ கேட்டுக்கிட்டே வாயைத் தொறந்துக்கிட்டு இருக்க வேண்டியது தான். உன் வயசுக்கு நான் எத்தனை பார்த்திருப்பேன். இன்னமும் தான் பார்த்துக்கிட்டு இருக்கேன்.. பொன்னாத்தா தெரியுமா?’
‘கீரை வித்துட்டு வர கிழவி தானே’
‘இப்பத் தாண்டா கிழவி தம்பி.. வாலிபத்துலே… ரவிக்கை எல்லாம் ஏது அப்ப? சேலைத் தலைப்பையும் இடுப்புலே சொருகிட்டு.. கையெல்லாம் மொசமொசன்னு முடி..’
‘அய்யே ஆம்பள கணக்கா மொசமொசன்னு’
’அட போடா விஷயம் தெரியாதவனே.. முடி இருந்தா..’
ராமச்சந்திரன் முணுமுணுத்தான்.
மொசமொசன்னு மொசமொசன்னு
பாஸ்போர்ட் சைச் போட்டோவிலே கை தெரியுமா என்ன?
‘இதாண்டா பொண்ணு.. பார்த்துக்கடா ராமச்சந்திரா.. ஊரு ஆம்பூர் பக்கம். நம்ம பெய்ண்டர் ரங்கசாமிக்கு அக்கா முறையாம் இவங்க அம்மா. உங்க வகை ஆளுதான். உனக்கு சரிடா…அவங்க எல்லாம் பாக்கறாங்களே.. ஏழைப்பட்ட குடும்பம். அப்பா தாலுகா ஆபீஸ்லே கிளாஸ் ஃபோரா இருந்திட்டு ரிடயர் ஆனவராம்.. அதாண்டா, டவாலி சேவகம்..’
‘பொண்ணுக்கு உதட்டுக்கு மேலே லேசா மீசை இருக்கு போல இருக்கே?’
‘டேய் நீ என்னடா நெனச்சிட்டிருக்கே.. இங்கே வாடா சொல்றேன்.. இந்தா பாரு.. பெரிசா மாரை வரஞ்சுக்கிட்டிருக்கேனே.. இந்த ஹீரோயினை பாத்திருக்கியாடா? கையெல்லாம் முடி’
‘அவளையே கட்டிக்கிடலாமா?’
‘ஆமா, வாசல்லே மாலையை வச்சுக்கிட்டு ரெடியா நிக்கறா.. போய்ப் பாரு.. ரவிக்கையிலே ஜிகினா ஒட்டணும்.. செய்யறியா? படத்துலேடா’
சப்த கோலாகலங்களுடன் நகரம் முன்னால் விரிந்தது.
‘உங்கள் நாவிற்கினிய கொத்து புரட்டா, வீச்சு புரட்டா, வடைகறி, தோசை, இட்லி வகைகளுக்காக இன்றைக்குப் புதியதாகத் திறக்கப் பட்டிருக்கிறது, விடிவெள்ளி ஈவினிக் மட்டன் ஸ்டால். ஒரு முறை வருகை தந்தால், மீண்டும் மீண்டும் கவர்ந்திழுக்கக் கூடிய சுவையான உணவு.. விடிவெள்ளி..’
ஒலிபெருக்கி இடைவிடாமல் அலறிக் கொண்டிருந்தது.
October 9, 2022
பசும்புல் மணத்துக்கொண்டு ஜட்கா வண்டி ஊர்ந்து கொண்டிருந்தது – ராத்திரி வண்டி – குறுநாவலில் இருந்து
ராத்திரி வண்டி இரா.முருகன் பகுதி – 7
பசும்புல் மணத்துக் கொண்டு ஜட்கா வண்டி ஊர்ந்து கொண்டிருந்தது. ஆள் அரவமில்லாத கப்பி ரோட்டில் வெய்யில் காய்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆடுகள் பாதையோரத்துக் குத்துச் செடிகளை மேய்ந்து கொண்டிருந்தன. வண்டியோடு ஓடி வந்த நாய் ஒன்று அலுத்துப் போய்த் திரும்பி நடந்தபோது ஒப்புக்குக் குரைத்தது.
இந்த ஸ்டேஷன் மாஸ்டருக்கு நம்மேல் ஏன் இத்தனை கரிசனம் என்று ராமச்சந்திரனுக்குப் புரியவில்லை.
இங்கே உட்காராதே.. வரையாதே.. சரி.. வீட்டுக்கு வா… மதியத்துக்கு முன்னால் கிளம்பி விடு…. இரு.. சாப்பிட்டுட்டுப் போ… ஆள் அனுப்பி பஸ் ஏத்தி விடச் சொல்றேன்..
‘சாருக்கு சொந்த ஊரு எது?’
கணபதி வண்டிக்காரன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு உள்ளே திரும்பிக் கேட்டான்.
எல்லோருக்கும் ஏனோ இதைத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தத் தகவல் ஒரு பரிச்சயத்தை முழுமையாகச் செய்யக் கூடியதாக இருக்க வேண்டும்.
‘தஞ்சாவூர் பக்கத்திலே..’
‘நஞ்சை பூமி. மூணு போகம். தெரியுமில்லே அண்ணே?’
கணபதி வண்டிக்காரனை விசாரித்தான்.
தினம் அவ்வளவு முடியுமா என்ன?
ராமச்சந்திரனுக்கு சிரிப்பு வந்தது.
அரிசி உண்டாக்கறதும் போகம். அரிவை முயக்கும் போகம்.
‘சார் என்ன சிரிக்கறீங்க… இவனுக்கு அதெல்லாம் என்ன தெரியும்னா? எல்லாம் சுத்திட்டு இப்ப அடங்கியாச்சு..’
‘சுத்தமா அடங்கியாச்சா?’
வண்டிக்காரன் கேட்டான்.
‘ஏன், உம்ம மச்சினியை அனுப்பிச்சுக் கேக்கச் சொல்லுமே’
‘இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லு. எதுத்தாப்பிலே யாரு வரான்னு பாத்தியா?’
‘அட, என் வீட்டுக்காரி.. இங்கே எங்கே வரா? ஒரு நிமிட்டு நிறுத்துங்கண்ணே’
தலையில் சுள்ளிக் கட்டோடு ஒரு பெண் வண்டிக்குப் பக்கத்தில் நின்றாள்.
‘நீ இங்கே என்ன பண்ணிட்டிருக்கே பிள்ளே?’
கணபதி கீழே குதித்தான்.
‘சார் ஒரு நிமிட்’
அவன் ராமச்சந்திரனைப் பார்த்து அவசரமாகச் சொன்னான்.
அதற்குள் அந்தப் பெண் இரைய ஆரம்பித்திருந்தாள்.
‘நீ என்ன நெனச்சிட்டிருக்கே.. காலையிலே புட்டு அவிச்சு வச்சேன்.. பசியாற வரலே… மதியம் சோறு பொங்கி இறக்கிட்டுக் காத்திருந்தேன். . ஆளே அட்ரசு இல்லாம எங்கேயோ ஓடிட்டே.. என்ன ஆச்சுய்யா உனக்கு?’
‘ஸ்டேஷன் மாஸ்டர் வீட்டுலே கொஞ்சம் வேலை இருந்துச்சு. அவங்க வீட்டம்மா ஊருக்குப் போயிருக்காங்களா, அதான்..’
‘கோமணம் தோச்சுக் கொடுத்திட்டு இருந்தியா?’
வண்டிக்காரன் அனுபவித்துச் சிரித்ததைப் பார்க்க ராமச்சந்திரனுக்கும் சிரிப்பு வந்தது.
கணபதி கொஞ்சம் சங்கடத்துடன் ‘தே.. சும்மா கிட.. விட்டா நீ பாட்டுக்குப் பேசிக்கிட்டே போறே.. வண்டியிலே ஆளு இருக்கு.. சாரோட விருந்தாளி’ என்றான்.
‘இருந்திட்டுப் போகட்டுமே. நான் என்ன அவரைப் பத்தியா புரணி பேசிட்டு இருக்கேன்.. நம்ம கதையே பேசி ஓய மாட்டேங்குது..’
   
October 8, 2022
ராசு உனக்கு திருக்குறள் தெரியுமா?தம்மில் இருந்து…ஏதோ ஒண்ணு போ
‘என்ன மிஸ்டர் ராமச்சந்திரன்… போகலாமா?’
’எங்கே?’
‘சரியாப் போச்சு. நீங்க போகச் சொன்னீங்களே.. மறந்தே போச்சு.. இப்பப் போனா மதியம் சாப்பாட்டுக்குப் போய்ச் சேர்ந்துடலாமா?’
‘எத்தனை தடவை சாப்பிடறது? இப்பத்தானே சாப்பிட்டீங்க? அதுவும் மறந்து போச்சா?’
‘சாரி.. சாரி.. இந்தப் புஸ்தகத்திலே ஒரேயடியா முழுகிப் போயிட்டேன்.. இது ஒண்ணுதான் எங்க அப்பா எனக்குன்னு விட்டுட்டுப் போன சொத்து.. இந்தப் பக்கத்துலே பாருங்க.. பேரு எழுதியிருக்கு.. இந்தப் படம் யாரு தெரியுமா? மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. ஐயரோட குரு..’
’உங்க அப்பா படமோன்னு பார்த்தேன்..’
‘அவரு படமா.. இருங்க.. காமிக்கறேன்..’
சித்திரக்காரன் தன் ஹோல்டாலிலிருந்து ஒரு பழைய பையை உருவி எடுத்தான். பழ்ந்துணியில் பொதிந்து வைக்கப்பட்ட, ஃபிரேம் செய்த புகைப்படம். கழுத்திலும் காதிலும் ஃபோட்டோவுக்காக நகை மாட்டிக் கொண்டு, கண்கள் சிரிக்க, குழந்தையும் கையுமாக லட்சணமான ஒரு பெண் நிற்கிறாள். பக்கத்தில் நாற்காலி போட்டுச் சட்டமாக உட்கார்ந்திருக்கிற ஆள் ஏகக் குழப்பமாக எங்கேயோ வெறிக்கிறான்.
’அப்பா.. அம்மா கையிலே நான். இது எங்க வீட்டுக் கூடத்திலே எடுத்தது. கூடம் எவ்வளவு பெரிசா தூணெல்லாம் நிறுத்திப் பளிச்சுனு இருக்கு பாருங்க… ஒரு தூசு துப்பட்டி கிடையாது.. சுத்தம்னா அம்புட்டு சுத்தம்.. நூறு பேருக்கு எதிர் எதிரா இலை போட்டு சாப்பாடு போடலாம்.. வாழக்காய் சாம்பார்.. சுடுசாதம்…’
ஏதோ ஸ்டூடியோவிலே எடுத்த மாதிரி இல்லே இருக்கு? வீட்டுலே இப்படித்தான் படுதா தொங்குதாக்கும்.
‘இந்த வீடு எங்கே இருக்கு மிஸ்டர் ராமச்சந்திரன்?’
‘எங்க ஊர்லே. நான் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. சின்ன வயசுலே பார்த்திருக்கேன். இருந்திருக்கேன். சொந்த வீடுன்னா சும்மாவா? திருக்குறள் படிச்சிருக்கீங்களா?’
‘வீடு கட்டறதைப் பத்தி ஏதாவது வருதா அதிலே?’
இருந்தா ஹௌசிங் லோன் சொசைட்டி போர்டுலே சாக்பீஸாலே எழுதி வச்சிருப்பாங்களே.. இன்று ஒரு தகவல்…
‘தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்றே அம்மா அரிவை முயக்கு’
யாருக்குத் தெரியும்.. அது என்ன கற்க கசடற…
அது கூட சரியா நினைவு வரலே.. சீவகா, உனக்கு இந்தி மட்டுமா வராது? தமிழே தடவுது.. போவட்டும்..பக்கத்து வீட்டு அக்கா தாவணி என்ன கலர்? திங்களும் புதனும் மஞ்சள்.. செவ்வாய் சிவப்புலே ஸ்கர்ட் ப்ளவுஸ்..
‘அந்தத் திருக்குறளுக்கு என்ன அர்த்தம்னா, நம்ம சொந்த வீட்டுலே உக்கார்ந்து நாமே சம்பாதிச்ச சொத்தை அனுபவிக்கற சுகம் பொண்ணு கிட்டே கிடைக்குதாம். எனக்கு தம்மில்லும் இல்லே… தமது பாத்தும் பூஜ்யம். உன் மூஞ்சிக்கு அரிவை முயக்கு வேறே கேக்குதான்னுட்டா அவ… சரியாத்தான் கேட்டா..’
ஆரம்பிச்சுட்டான். பய எங்கேயோ ஒருத்தி பின்னாலே போய் அவ போடா படவாப் பயலேன்னு எகத்தாளம் பண்ணி அனுப்பியிருக்காப்பல… துணியில்லாம வரஞ்சு எடுத்துட்டுப் போய் இதான் நீன்னு காட்டியிருப்பான்.. எல்லாமா ஈன்னு இளிச்சுக்கிட்டு, சீ ஆனாலும் மோசம் நீங்கன்னு வெக்கப் பட்டுக்கிட்டு மாராப்புக்குள்ளே சொருகி வச்சுக்கும்… எவனும் சரி.. எந்த மேதாவின்னாலும்…கிறுக்குத் தனம், கோணங்கித் தனம் பண்ணினாலும்.. பொம்பளை பாத்து போடான்னு சொல்லிட்டா என்னமா உடஞ்சு போயிடறான்.. எல்லாரும் ராசுப்பய ஆக முடியுமா? பய கமுக்கமா இருந்தே என்ன வேலை பண்ணியிருக்கான்.. ராசு உனக்குத் திருக்குறள் தெரியுமாடா? தம்மில்.. தம்மில்… ஏதோ ஒண்ணு.. போ…
   
October 7, 2022
ரயில் ஊதிக்கிட்டு கிடக்கட்டும்.. யாராவது கொடி காட்டுவாங்க:ராத்திரி வண்டி
ராத்திரி வண்டி இரா.முருகன் பகுதி – 6
கரண்ட் போச்சா?.. மத்யான வெய்யில் நேரத்திலே பவர் கட் பண்ணிடறாங்க.. ஸ்டேஷன்லே இருந்தாலும் ஒண்ணும் தெரியாது. இப்படி வயறு முட்டச் சாப்பிட்டுச் சும்மா இருந்தா வியர்த்து வியர்த்துக் கொட்டறது எழவு.. இவன் மட்டும் எப்படி அலுங்காம உக்கார்ந்து புஸ்தகம் படிச்சுட்டு இருக்கான்? துரைக்கு வேர்க்கறதே கிடையாது பொல.. இந்த விஷயத்திலே ராசுப்பய இவனுக்கு நேர் எதிரே. மத்தியானம் சாப்பிட்டுட்டு ஏதோ மிருகம் படுத்துக் கிடக்கற மாதிரி நடுக் கூடத்திலே உருண்டு கிடப்பான். சுத்தி வியர்வை கால்வாய் வெட்டின மாதிரி ஓடும். அது பிடிச்சுக் கூட அந்தப் பொம்பளை அவன் கூட இறங்கிப் போயிருக்கலாம்… என்ன எழவு இது.. அவனைப் பத்தி எப்ப நினைச்சாலும் சனியன் போல அவளும் கூட வரா.. இல்லே.. இல்லே… அவனை நினைக்கறதே அவளைப் பத்தி அசை போடத்தான்.
போன மாசம் ஊருக்குப் போனபோது சுப்பையாத் தேவர் சொன்னாரே… அது என்ன ஊரு… ரிஷிகேஷ்… யாத்ரா சர்வீஸ்லே வடநாடு பூரா யாத்திரை போறபோது ரிஷிகேசத்துலே எதோ சாமியாரு ஆசரமாம்.. கருப்புக் கம்பளி சாமியோ என்னமோ பெயர் சொன்னாரே…ஆமா.. சாமியாரு பெயரு தான் முக்கியம்… நமக்கு வேண்டிய விஷயம் எதுவும் ஞாபகத்தில் இருக்கறதில்லே.. அந்த ஆசிரமம் கிட்டே பஸ் ரெண்டு நிமிஷம் நின்ன போது பக்கத்துலே ஒரு மேடையிலெ சின்னதா கடை போட்டுக்கிட்டு சாயா ஆத்திக்கிட்டிருந்தது நம்ம ராசுப் பய மாதிரி இருந்ததாம். சிரிச்ச மாதிரி கூட தோணிச்சாம். பக்கத்திலே வடக்கத்திக்காரி மாதிரி பைஜாமா போட்டுக்கிட்டு நின்னது மேற்படியாள் தானாம். சர்வ நிச்சயமாச் சொன்னார்.
ஆனா, பக்கிரிசாமி நாயக்கர் ஒரே போடாப் போட்டாரு…’தம்பி தேவருக்குப் பகல்லேயே பசுமாடு தெரியாது.. இவரு ராத்திரியிலே எருமையைத் தேடற மாதிரி, ஓடற பஸ்ஸுலே உக்காந்துக்கிட்டு ஒரு சொடக்கு போடற நேரம் யாரையோ பார்த்தாராம்… அதை வச்சுக்கிட்டு அவன் தான் இவன்னு ஒரே போடாப் போடறாஅரு.. நீயும் நம்பறே பாரு.. என்னத்தச் சொல்ல…’
தேவருக்குச் சரியான கோபம்…விருட்டுனு எளுந்து சொல்றாரு –
‘நீ நம்பினா நம்பு.. அது உன் தம்பிதான்.. என்னமோப்பா.. உங்கப்பா சாகறதுக்கு நாலுநாள் முந்தி, இங்கே இந்தத் திண்ணையிலே தான் கயத்துக் கட்டிலைப் போட்டுக்கிட்டு உக்கார்ந்திருந்தாரு. நான் சைக்கிள்லே சொசைட்டிக்குப் போயிட்டு இருந்தேன்.. வலுக்கட்டாயமாக் கூப்பிட்டு உக்காரச் சொல்லி ஊர் விஷயம் எல்லாம் பேசிட்டே இருந்திட்டு, போறப்போ சொல்றாரு… ராசுப்பய பாவம்.. அந்த மலையாளத்துக்காரி ஏதோ செய்வினை செஞ்சு அவனை வசியம் பண்ணிட்டா… வாடா பயலேன்னு எதை எதையோ காட்டி இழுத்துக்கிட்டு ஓடி .. இந்த அப்புராணிப்பய இப்போ எங்கே கிறுக்காத் திரியறானோ.. அவ வேறே எவனாவது இன்னொரு பயலோட சவாரி விட்டிருபா.. இவன் பாருங்க.. என் மூத்த பையன் சீவகப் பாண்டியன்.. தம்பியைத் தேடிப் பிடிச்சுக் கூட்டி வரணும்னு ஒரு கவலையும் இல்லாம இருக்கான்.. ரெண்டு பிள்ளை பெத்தேன்.. ரெண்டுமே உருப்படி இல்லே… இவன் விருந்தாளி மாதிரி வந்துட்டுப் போறான்… அவன் வசிய மருந்தைத் தின்னுட்டு எங்கேயோ அலையறான்.. என்னமோ நடக்கட்டும் போங்க தேவரேன்னு ஒரே ஆதங்கம்.. கொட்டித் தீத்துட்டாருப்பா..நான் சொல்றதைச் சொல்லிட்டேன்…அம்புட்டுத்தாம்ப்பா…’
வசியம் என்ன வசியம்?… இவன் காலையிலே படம் போட்டுட்டிருந்தானே.. அந்த மாதிரி எடுப்பா மதமதன்னு நின்னு கண்ணாலே கூப்பிட்டா, ரிஷிகேசச் சாமியார் கூடக் கம்பளியைத் தூக்கி எறிஞ்சிட்டு பின்னாலேயே ஓட மாட்டான்? தம்பி என்ன, நான் கூடத்தான் போயிருப்பேன். தெரிஞ்சிருந்தா, டைப் கிளாஸ்லே பிரஸ்காரன் பொண்ணு பின்னாலே நின்னதுக்குப் பதிலா இவ பக்கத்திலே போயிருப்பேன்…
ராசு, இங்கிட்டு பாருடா.. அண்ணன் வந்திருக்கேன்.. ஆமா, யாத்ரா சர்வீஸ் பஸ்லே தான் வந்தேன்… பஸ்ஸிலே தேவரு, நாயக்கர்லாம் உக்காந்திருக்காங்க..போய் டீ கொண்டு போய்க் கொடு.. நான் இந்தப் பொம்பளையைப் பாத்துக்கறேன்… பஸ் பத்து நிமிஷம் நிக்கும்… ஓடாமப் போ..என்ன பிள்ளே கேக்கறே.. உங்க ஊர்லே குட்டின்னு தானே கூப்பிடறது? எந்தா வேணும் குட்டி? சாயாவா கோப்பியா? நீ தான் வேணும்.. இப்படி கிட்டே வந்து உக்காரு.. எதாவது பேசேன்.. மாட்டியா.. நானே பேசறேன்… சாயா போடற போது டீ தூளைப் பாலோட போட்டுக் கொதிக்க வச்சா நல்லா இருக்குமாம்… நீ வசிய மருந்து கொடுத்தாக்கூட நல்லாத்தான் இருக்கும்..
ஆனாலும் அப்பாவுக்கு ராசு மேலே பிரியம் ஜாஸ்தி தான். அவன் பிறந்த உடனே அம்மா போய்ச் சேர்ந்துட்டா. அம்மா முகமே தெரியாம வளர்ந்த பிள்ளைன்னு தனி வாஞ்சை. சாகற தருவாயிலே என் கையைப் பிடிச்சுட்டுச் சொல்றாரு.. சீவகா, ராசு பங்குக்கு எட்டாயிரம் ரூபா, உன் பேர்லேயே பேங்குலே போட்டு வச்சுக்கோ… அவன் எப்ப திரும்பி வந்தாலும் அவன் கிட்டே கொடுத்து.. வேணாம்.. திரும்ப ஓடிடுவான்.. நீயே ஒரு கடையோ உடையோ வச்சுத் தந்து அவன் பொழச்சுக்க ஒரு வழி பண்ணனும். அவனை வச்சு நீ ஒரு வேளையாவது சோறு போட்டு நல்ல வழி காட்டினாத்தான் என் ஆத்துமா கடத்தேறும்..’
ராசுப்பய நல்லாச் சாப்பிடுவான். இவன் ..இந்த சித்திரக்காரன் சின்னப் பிள்ளை மாதிரி சுத்தி வர எறச்சுக்கிட்டுக் கொறிக்கறான். பாவம்.. சாப்பிடும்போது கண்ணு கலங்கியே இருந்தது.. என்ன சோகமோ..
இவனுக்குச் சாப்பாடு போட்டு அனுப்பணும்னு ஏன் தோணினது? எப்படியாவது இவன் எடத்தைக் காலி செஞ்சா சரின்னு தான் வந்த உடனே நினைச்சேன். அப்பக் கூட்டியே வந்திருக்கக் கூடாது. நல்ல வேளை. இவ இங்கே இல்லாமப் போனா. இருந்தா இவனைப் படி ஏற விட்டிருப்பாளா?
‘அய்யே .. என்ன உங்க தம்பி மொட்டைக் கட்டையாப் படம் போட்டுட்டு இருக்காரு.. இது பொம்பளை இருக்கற வீடுன்னு விவஸ்தையே கிடையாதா.. எதப் பார்த்தாலும் அசிங்கமாத்தான் கண்ணுலே படும் போல.. அவர் பார்க்கிற பார்வையிலே கூசிக் குறுகிப் போயிடறேன்.. அவர் போனதுக்கு அப்புறம் தான் வருவேன். என்ன…போக மாட்டாரா? இங்கேயே இருந்துக்கட்டும்..நாளைக்கு அந்த ஓடுகாலியும் வந்து ஒட்டிக்கட்டும்.. உங்களுக்கும் பாத்தே பொழுது போகும்..’
பார்த்துக்கிட்டா… ராசு, முகப்பிலே உட்கார்ந்து நீ பாட்டுக்குப் படம் போடு. உன்னை யாரும் தொந்தரவு பண்ண மாட்டாங்க. உன் பங்குப் பணம் எட்டாயிரம் தானே? தரேண்டா. நீ வாசல்லே இரு. பணம் தானே? வரும்… தானே வரும்….ஏ குட்டி.. இவிடெ வரூ… பால் எடுத்துட்டுப் போறியா? யாருக்கு? ராசுப்பயலுக்கா? சல்யம் பண்ணாதே அவனை. கேட்டோ? வரூ.. இவிடெ வா… பேசிட்டு இருப்போம்.. தரையிலே உக்கார்ந்தா நல்லாத் தான் இருக்கு.. தலை வச்சு படுத்துக்கட்டா? ரயிலா? அது பாட்டுக்கு ஊதிக்கிட்டுக் கிடக்கட்டும்.. எவனாவது கொடி காட்டிட்டுப் போறான். இந்தக் கை அதுக்கு இல்லே… மசில்ஸ் பார்த்தியா? தொட்டுப் பாரு.. சினிமா பாக்கறது உண்டா? ரொம்ப நாள் முந்தி செம்மீன் பார்த்தேன். உன்னை மாதிரித்தான். கருத்தம்மான்னோ என்னமோ பேரு.. பெரிசு பெரிசா..
சீ.. எப்பவும் அவ நினைவுதான்.. ராசு பயித்தியம் பிடிச்சு அலையறானோ என்னமோ.. நான் ஒரு நாள் ஓடப் போறேன்.. ராசு .. நீ நல்லா இருடா.. எங்கேயாவது நல்லா இரு.. உன் பங்குப் பணம்தானே? அப்புறம் தரேண்டா… இப்பத் தோதுப் படாது.. நீ ஊருக்குப் போய்ட்டு அப்புறம் வா…
   
October 6, 2022
எழுத்தாணியை ஒளித்து வைத்த பட்டீச்சுரத்துப் பகல் – ராத்திரி வண்டி குறுநாவலில் இருந்து
‘உங்க சொந்த ஊர் எது மிஸ்டர் ராமச்சந்திரன்?’
‘அது.. அது.. பட்டீசுரம்.. ஆறுமுகத்தா பிள்ளை தெரியுமா? அந்த ஊரு’
‘அது யாரு?’
’பண்ணையார்… உ.வே.சாமிநாதய்யரோட எழுத்தாணியை ஒளிச்சு வச்சுக்கிட்டார்’.
‘கீதா பென்சிலை எங்கடா ஒளிச்சு வச்சே?’
நான் எடுக்கலே.. இரு கேட்டுச் சொல்றேன்..
ராப்பொழுது பட்டீசுரம். அங்கங்கே ஒளி மினுக்கப் பெரும்பாலும் இருட்டில் முழுகிப் போயிருக்கிறது. காவிரி தூரத்தில் சலசலத்து ஓடுகிற சத்தம்.. ராத்திரியில் அதிசயமாக நாரை ஒன்று பறந்து போகிறது.
திண்ணையில் குத்து விளக்கு காற்று இல்லாததால் நின்று எரிகிறது. மகா வித்வான் மேல் துண்டால் முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டு கண்களை மூடி யோசனை செய்கிறார்.
திடீரென்று அவர் குரல் கணீரென்று ஒலிக்கிறது. நிறுத்தி நிறுத்தி ஒவ்வொரு செய்யுளாக வருகிறது. திருப்பெருந்துறைப் புராணம். அடுத்த மாதம் அரங்கேற்ற வேணும்.
எங்கேயோ அல்லி அரசாணி மாலையைச் சத்தம் போட்டுப் படிக்கிறார்கள். இடுப்பில் குழந்தையோடு உழத்திப் பெண் ஒருத்தி தெருவில் போகிறாள். குழந்தை அழுகை இருட்டில் கரைந்து கொண்டே போகிறது.
‘சாமிநாதய்யரே, எழுதியது போதும். எழுந்து நித்திரை போங்கள்’ என்கிறார் ஆசிரியர்.
எழுத்தாணியைப் பத்திரமாக இடுப்பில் முடிந்து கொண்டு திண்ணையிலேயே ஒரு ஓரமாக முடங்குகிறார் ஐயர். ஆசிரியர் விளக்கை எடுத்துக் கொண்டு உள்ளே போகிறார்.
ராமச்சந்திரன் மெல்ல உள்ளே நுழைந்து படுத்துக் கொண்டிருந்த ஆறுமுகத்தா பிள்ளையைத் தட்டி எழுப்புகிறான்.
‘மனுஷர் கஷ்டம் தெரியாமல் யாரது தூங்குகிற போது எழுப்புகிறது?’
அவர் கண்ணைத் தேய்த்துக் கொண்டு ராமச்சந்திரனைப் பார்க்கும்போது ஓவியக் கல்லூரி பிரின்சிபால் மாதிரித் தெரிகிறார். ராமச்சந்திரன் அவர் தலைமாட்டில் உட்கார்ந்து கர்ண மந்திரம் போல மெதுவாகச் சொல்கிறான் –
‘ஏன் இப்படி சில்லறைத் தனமாக சாமிநாதய்யரின் எழுத்தாணியை ஒளித்து வைத்துக் கொண்டீர்? சீப்பை ஒளித்தால் கல்யாணம் நின்று விடுமா என்ன? உமக்கு வேண்டுமானால் நான் பென்சில் கொண்டு வந்து தருகிறேன். சின்ன வயசில் திருடினது. சாமிநாதய்யரை எழுதப் படிக்க விடாமல் நோகடிப்பதில் உமக்கென்ன குரூரமான சந்தோஷம்? நீர் காலைக்கடன் கழித்து விட்டு வருவதற்குள் உம் விஷயமாக ஒரு செய்யுள் இயற்றிப் பாடினால் தான் எழுத்தாணியைத் திரும்ப வரவழைப்பேன் என்றீராமே? வெளிக்குப் போகிற நேரத்துக்குள் தமிழ்ப் பாட்டு எழுதச் சொல்லி இம்சிப்பது தான் உம்மைப் பொறுத்தவரை புலமையைச் சோதிப்பதா? உமக்குள் பிரபுத்துவத் திமிர் இருக்கு. அது பணம் வைத்திருப்பவர்கள் ஏழைகளைத் துன்பப் படுத்தச் சொல்லும். எழுத்தாணியை ஒளித்து வைத்து அழ வைக்கச் சொல்லும். பழைய நாற்காலியையும் தாம்புக் கயிற்றையும் மேலே வீசி இருப்பிடத்தை அடைசல் பிடித்து இருண்டு கிடக்க வைக்கச் சொல்லும். எல்லோரும் தூங்கின பிறகு திருடன் மாதிரி சுவருக்கு அப்புறமாக நின்று, ‘சரோ.. சரோ’ என்று கூப்பிட்டு அரிசியையும் பருப்பையும் அனுப்புவதாக ஆசிஅ காட்டச் சொல்லும். உமக்கு, உம் பெயரில் தமிழ்ப் பாட்டுதானே வேணும்? நீர் முக்கி முனகி மலம் கழித்து விட்டு வருவதற்குள் இங்கே புராணமே அரங்கேற்றப் படப் போகிறது பாரும்மய்யா…’
ஆறுமுகத்தா பிள்ளை திரும்பப் படுத்துக் கொண்டு, அரைக் கண்ணை மூடிக் கொண்டு ‘ராத்திரி ஸ்டேஷன் மாஸ்டர் போதை தருகிற சமாச்சாரம் எல்லாம் குடிக்கக் கொடுப்பான். அளவாகச் சாப்பிடு. நடுராத்திரியில் ரயில் ஏற வேண்டியிருக்கும்’ என்று சொல்கிறார். சொல்லியபடிக்குப் புரண்டு திரும்பிப் படுத்துக் கொள்கிறார்.
ராமச்சந்திரன் வெளியே வரும்போது இன்னமும் நாய் குரைத்துக் கொண்டிருக்கிறது.
‘அந்த நாய்?’
ராமச்சந்திரன் வெளியே இலக்கில்லாமல் கையைச் சுட்டிக் கேட்கிறான்.
‘ஸ்டேஷன் நாய்தான்.. ஸ்டேஷன் கலாசி, ஸ்டேஷன் புக்கிங் கிளார்க், ஸ்டேஷன் மாஸ்டர் போல ஸ்டேஷன் நாய்.. அட சிரிங்களேன்.. மாட்டீங்களா.. சரி…நீங்க வேணுமானாக் கையை அலம்பிட்டு வந்து உக்காருங்க .. நான் சாப்பிட்டு முடிக்க இன்னும் நேரமாகும்..’
பக்கத்தில் யாரோ சில்வண்டு இரைச்சலை மீறிச் சொல்கிறார்கள்.
‘என்ன ராமச்சதிரன்.. உட்கார்ந்துக்கிட்டே தூங்கறீங்களா?’
இது ஸ்டேஷன் மாஸ்டர் குரல் இல்லையோ.. ஆமா, இப்போ அவன் .. அவர் கூடத்தானே உக்கார்ந்து சாப்பிட்டுட்டு இருக்கறது…
‘ஐயாம் சாரி.. ரெண்டு ராத்திரியாத் தூக்கம் முழிச்சி இப்ப ஒரு மாதிரி இருக்கு..’
’நீங்க வேணாக் கையைக் கழுவிட்டு கொஞ்ச நேரம் படுத்திருங்க. கணபதி வந்ததும் ஜட்கா வண்டி கொண்டுக்கிட்டு வரச் சொல்றேன். மூணு மணிக்கோ மூணரைக்கோ மண்டபம் பஸ் வரும் .. டவுன்லே’
ராமச்சந்திரன் கை கழுவி விட்டு வரும்போது சொன்னான் –
‘உங்க சமையல் நல்லா இருக்கு. எனக்கு சமையல் தெரிஞ்சாலாவது என்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லியிருப்பா. படம் போடறது என்ன பிழைப்பு…’
ஸ்டேஷன் மாஸ்டர் மௌனமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
   
October 5, 2022
அந்தக் காலத்தில் ’மீரா’ பட வெளியீடு பற்றி இப்படித்தான் பரபரப்பு இருந்திருக்கும்
நண்பர்களுக்காக திரு கமல் ஹாசன் ஏற்பாடு செய்திருந்த சிறப்புக் காட்சியாக நேற்று ‘பொன்னியின் செல்வன்’ பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
குரசோவாவின் ’காகேமூஷா’ திரைப்படத்தை நினைவு படுத்தும் வெளிப்புற இரவு நிகழ்வாக செறிவான Mise-en-scène அடிப்படையில் தொடங்கி எழுந்து வருகிறது பொ.செ. திரையில் கால் இருட்டு என்றால் அரை இருட்டாக்கித் தோன்ற வைத்து, கூடவே, கிசுகிசுப்பு ஒலியையும் கூச்சலாகப் பெருக்கித் தரும் ஐமேக்ஸ் திரையரங்கு படத்துக்குக் கூடுதல் பரிமாணம் சேர்த்திருந்தது.
திரைப்படம் பற்றி எல்லோரும் எழுதி விட்டார்கள். ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும் நானெழுதி இங்கே –
வந்தியத்தேவன் கார்த்தி தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த நல்வரவு. ஆதித்ய கரிகாலன் விக்ரம் கொஞ்சம் அதிகமாகவே கரிகாலனாகி விட்டார்.
ஜெயராமின் ஆழ்வார்க்கடியான் நம்பி கச்சிதம். காட்சியில் பங்கு பெறும் மற்ற நடிகர்களின் நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் நடிகராக நிறையத் தமிழ், மலையாளப் படங்களில் தோன்றிய அவர், தான் ஏற்ற பாத்திரத்தை முழுக்க மிளிரச் செய்கிறார் இங்கே.
நடிகர் தேர்வு சிறப்பு. ஐஸ்வர்யா ராய் பச்சனை மந்திரவாதி ரவிதாசன் தாக்கும் காட்சியின் physical violence ஆத்திரப்பட வைத்தது. (அவர் நந்தினி என்பது அப்புறம் தான் நினைவு வருகிறது)
ஜெயமோகனின் வசனம் படத்தின் மற்றுமொரு சிறப்பு. தேவைக்கு அதிகமாகப் பேசாத பாத்திரங்கள் எல்லோரும்.
now the mandatory nit picking
மதுராந்தக சோழரை அவர் அன்னை சோழ அரியணை ஏறப் போட்டியிடாமல் சிவனடியாராகவே இருக்க வற்புறுத்தும் காட்சி சற்று ஏனோ தானோ உருவாக்கம் – நிகழ்த்தப் படுத்தல்.
ஜெ.மோ வசனத்தில் வரும் பையன், குட்டிப் பையன் சொல் பயன்பாடு பத்தாம் நூற்றாண்டில் வழக்கில் இருந்திருக்கலாம். இல்லாவிட்டாலும் என்ன? பெயரன் பெயர்த்தியாக ஜெயன் – அருண்மொழி இணையர் இல்லத்தில் விரைவில் குட்டி கிருஷ்ணன் தவழ
வாழ்த்துகள்
   
October 4, 2022
வாழைக்காய் குழம்பும் வக்கத்த வீட்டுப் பொண்ணும் – குறுநாவல் ராத்திரி வண்டி
‘அம்மா …. தினம் கஞ்சி தானா? நல்லாவே இல்லேம்மா….’
‘நாளைக்கு சோறு பொங்கலாம்… அரிசி வருது…’
‘அம்மா…’
‘என்னடா?’
‘இந்த எடத்தை ஏன் காடி கானாங்கறாங்க?’
‘அந்தக் காலத்துலே சாரட் வண்டி நிக்குமாண்டா இங்கே..’
‘யாரு அதிலே போவாங்க?’
‘பெரிய வீட்டுலே இருக்கறவங்க’
‘நாமளும் பெரிய வீட்டுலே போய் இருந்தா என்னம்மா?’
‘ஏண்டா இந்த எடத்துக்கு என்னடா? நம்ம நிலமைக்கு இதாவது கிடச்சுதே… ஊரு விட்டு ஊரு வந்து… இந்த வீட்டுலே சமையல் செஞ்சு.. எச்சத் தட்டு கழுவி… நாம உயிரோட இருக்கறதே பெரிசுடா…’
‘இந்த இடம் ஒரே அடைசலா இருக்கும்மா… ஓட்டை உடைசல், தகர டப்பா, தாம்புக் கயிறு… காலையிலே கூட அந்த வீட்டு அம்மா பழைய பிரம்பு நாற்காலியை உள்ளே போட்டுட்டுப் போனாங்க… நான் படிச்சுட்டிருந்தேன்.. தொப்புன்னு பக்கத்துலே வந்து விழுந்தது…’
‘நீயே வாங்கி ஓரமா வச்சிருக்கலாமில்லே?’
’அதையெல்லாம் இங்கே ஏம்மா கொண்டுக்கிட்டு வர்றாங்க?’
‘அதைப் போட்டு வைக்கத்தானேடா இந்த இடம்?’
‘அப்ப நாம இருக்கறது?’
‘தெரியாத் தனமாக் கொடுத்திட்டாங்க.. இப்பப் போகச் சொல்ல முடியலே… உறவாயிடுச்சே…’
‘என்ன உறவும்மா?’
‘அவர் உனக்கு சுத்தி வளைச்சு சித்தப்பா ஆகணும்..’
’சுத்தாம?’
‘வாயிலேயே போடுவேன்.. சிம்னியை சின்னதாக்கிட்டுப் படு’
‘அம்மா….’
’என்னடா.. இன்னும் தூங்கலியா?’
‘நேத்து ராத்திரி யாரும்மா உன்னை சரோ சரோன்னு கூப்பிட்டது?’
‘கனவு ஏதாவது கண்டியா? சும்மா படுடா..’
‘இல்லேம்மா.. அந்த வீட்டுக்காரர் குரல் மாதிரி இருந்தது..’
‘உளறாதேடா… படு.. கண்ணை மூடு.. நேரமாச்சுல்லே…’
‘அம்மா,, அப்பா புஸ்தகத்தை ஏம்மா எடுத்திட்டுப் போகலே… நீ பெட்டியிl வச்சிருக்கியே.. அது… அது அப்பா புஸ்தகம் தானே?’
‘நீ இப்பத் தூங்கப் போறியா இல்லியா?’
அந்தப் புஸ்தகம் ரொம்பப் பழசா இருக்கே… அப்பா படிச்சு இருப்பாரோ?’
‘படிச்சிருப்பார்…’
‘நானும் படிக்கப் போறேன்..’
‘பெரியவனானதும் படிக்கலாம்..’
‘நான் நேத்திக்குப் பெட்டியைத் திறந்து அதை எடுத்துப் பார்த்தேன்.. என் சரித்திரம்னு போட்டிருந்தது..’
‘யாரோ பெரிய சாமியார் எழுதினதுடா..’
’நீ படிச்சிருக்கியாம்மா?’
’நாலு எழுத்து படிச்சிருந்தா நான் ஏன் இப்படி எச்சத் தட்டு கழுவிட்டு இருக்கேன்? சரி படுடா.. எனக்குத் தூக்கம் வருது..’
’மிஸ்டர் ராமச்சந்திரன், நீங்க பத்திரிகையிலே படம் போட முயற்சி செய்யலாமே? கையை விலக்கிக்குங்க. சாம்பார் சூடா இருக்கு… எப்படி இருக்கு நம்ம சமையல்?’
‘பிரமாதம்.. எங்க அம்மா சமைச்ச மாதிரி..’
‘நீங்க எப்ப படம் போடக் கத்துக்கிட்டீங்க? இந்த மாதிரி கலை எல்லாம் சின்ன வயசிலேயே படியணுமே..இல்லியா?’
‘காம்பவுண்டு சுவர் பூரா, கரிக்கட்டியால் கிறுக்கி வச்சுட்டு நாக்கைத் துருத்திக்கிட்டு நிக்கறதைப் பாரு.. கண்டிச்சு வளர்க்காட்ட அவஙக் அப்பன் மாதிரி தறுதலையாப் போயிடப் போறான்.. ஏண்டா, கீதா பென்சிலை எடுத்தியாமே? எங்கடா அது?’
‘நான் எடுக்கலே மாமி’
;அவ பென்சில் பின்னே ரெக்கை மொளச்சுப் பறந்தா போச்சு?’
‘பத்திரிகையிலே கார்ட்டூன் போட்டா நிறைய வருமா? இல்லே, கதைக்கு வரைஞ்சாலா?’
’வரைஞ்சு வச்சா எழுத மாட்டாங்களா அதுக்கு?’
‘நீங்க தான் சொல்லணும்..நான் ஸ்டேஷன் மாஸ்டர் .. நீங்க ஆர்ட்டிஸ்ட்…சரிதானே..’
‘கதைன்னா யாரு கேரக்டர்னு பார்த்து.. விதவிதமா மனுசங்க..’
இறக்கை முளைத்த பென்சில் மனிதர்கள். புறா மனிதர்கள். புத்த மனிதர்கள்…
‘பென்சிலை எங்கடா ஒளிச்சு வச்சிருக்கே?’
‘நான் எடுக்கலேம்மா.. அடிக்காதே .. அடிக்காதே..’
‘வெறுமனே விக்கறதுக்குப் படம் போறதை விட பத்திரிகைக்குப் போட்டா தொடர்ந்து சீரா பணம் காசு வரும் இல்லே?’
‘ஆமா சார்… நிறைய பென்சில் வாங்கலாம்’.
ஸ்டேஷன் மாஸ்டர் கண்களில் ஒரு சிரிப்பு மின்னி மறைகிறது.
   
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers
 


