Jeyamohan's Blog, page 1716

October 30, 2016

விஷ்ணுபுரம்- விண்ணப்பம்

images


 


அன்புள்ள நண்பர்களுக்கு,


இவ்வருடம் விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 25 ஆம் தேதி மாலை கோவை பாரதிய வித்யா பவன் அரங்கில் நிகழவிருக்கிறது முந்தையநாள். 24 ஆம் தேதி காலைமுதல் உரையாடல்களும் எழுத்தாளர் சந்திப்புகளும் நிகழும்.


பரிசுபெறுபவர் குறித்த ஒர் ஆவணப்படமும் அவரைப்பற்றிய ஒரு நூலும் விழாவில் வெளியிடப்படும்.


வருபவர்கள் முன்கூட்டியே ரயில் முன்பதிவுகள் செய்து கொள்ளவேண்டுமென்று கோருகிறேன். பிற தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்


தமிழகத்தில் இன்று நிகழ்ந்துவரும் மிகப்பெரிய இலக்கியவிழா இதுவே. இத்தனைபெரிதாக இதை உத்தேசிக்கவில்லை . இயல்பாகவே இது பெரிதாகி வந்தமைக்கு இளம் வாசகர்களுக்கு இது தேவையாக இருந்ததுதான் காரணம் என நினைக்கிறேன்


ஒவ்வொருவருடமும் இதன் செலவு அதிகரித்தபடியே செல்கிறது. பெரும்பாலும் நண்பர்களின் நன்கொடையால்தான் இவ்விழா முன்செல்கிறது. சென்ற ஆண்டு அது சற்றே சுமையாக ஆகிவிட்டது


ஆகவே இம்முறை விஷ்ணுபுரம் அமைப்பை ஒரு சிறிய டிரஸ்ட் ஆக பதிவுசெய்திருக்கிறோம். என் நண்பர்கள் நான்குபேர் கொண்ட இச்சிறிய அமைப்பு நிதிநிர்வாகத்திற்காக மட்டுமே.


இதுவரை வெளிப்படையாக நன்கொடைகள் பெற்றுக்கொண்டதில்லை, காரணம், முறையான அமைப்பு இல்லை என்பதுதான். இப்போது அவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது


விஷ்ணுபுரம் அமைப்புக்கு நிதிதவி செய்யும்படி நண்பர்களைக் கோருகிறேன். இது அனைவரும்கூடிச் செய்யும் விழாவாக நீடிக்கவேண்டும் என்பதே எங்கள் எண்ணம்


வங்கி விவரங்கள்


வங்கி ICICI BANK Ram Nagar Coimbatore


பெயர் VISHNUPURAM ILAKKIYA VATTAM TAMIL EZHUTHALARGAL ARAKKATTALAI


கணக்குஎண் 615205041358


IFSC Code ICIC0006152

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2016 11:31

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 12

[ 14 ]


யக்‌ஷவனத்திலிருந்து பதினெட்டுகாதம் தொலைவிலிருந்த அஸ்வபக்ஷம் என்னும் சோலை நடுவே நீர் நிறைந்திருந்த அஸ்வபாதம் என்னும் சுனைக்கு புலரியெழும் வேளையில் அர்ஜுனன் வந்தான். தனது வில்லையும் அம்புகளையும் அங்கிருந்த பாறை மேல் வைத்துவிட்டு சேறு வழுக்கிய சுனை ஓரம் மெல்ல நடந்து நீர்நுனி அலையும் விளிம்பை அடைந்து குனிந்து அள்ளி முகம் கழுவிவிட்டு அருந்துவதற்காக மீண்டும் ஒருமுறை நீரை அள்ளியபோது சுனைநீர் கொப்பளித்து அலையெழுந்து வந்து அவன் கால்களை நனைத்தது.


வியந்து அவன் விழிதூக்க நீருக்குள்ளிருந்து கூப்பிய கைகளுடன் சித்ரசேனன் எழுந்து நின்றான். அவனருகே அவன் தேவி சந்தியை பொன்னிறவடிவில் நின்றாள். கந்தர்வன் “இளைய பாண்டவரே, உங்களால் அடைக்கலம் அளிக்கப்பட்ட கந்தர்வனாகிய சித்ரசேனன் நான். என்னைக் கொன்றழிக்க இளைய யாதவர் படையாழியுடன் வந்துவிட்டார். உயிரஞ்சி உங்கள் வில்நிழல் தேடி வந்துள்ளேன்” என்றான். அர்ஜுனன் “நன்று, என் சொல் அவ்வண்ணமே உள்ளது” என்றான். “நீங்கள் இளைய யாதவரின் துணைவர் அல்லவா?” என்றாள் சந்தியை. “நான் தனியன்” என்று அவன் சொன்னான்.


“இச்சுனைக்குள் மறைந்திருங்கள், கந்தர்வரே. உங்கள் தேவியும் உடனிருக்கட்டும். இக்காட்டை என் வில்லால் அரணமைத்துக் காப்பேன். என்னைக் கடந்து இதற்குள் எவரும் நுழைய முடியாது என்று உறுதி கொள்ளுங்கள்” என்றான். அவனை வணங்கி மீண்டும் நீருக்குள் புகுந்து நிழலென அசைந்து மறைந்தான் சித்ரசேனன். சுனையின் நீர்வாயில்கள் மூடின. அது வானை தன்மேல் பரப்பிக்கொண்டது.


அர்ஜுனன் தன் அம்புத்தூளியைத் தோளிலிட்டு வில்லை ஏந்தியபடி வந்து அஸ்வபக்ஷத்தின் முகப்பில் இருந்த பாறை ஒன்றின்மீது ஏறி கீழ்த்திசையை நோக்கியபடி இளைய யாதவரின் வரவுக்காக காத்திருந்தான். அவன் குழலை காற்று அசைத்தது. அவன்மேல் காலைவெயில் ஒளிமாறிக் கடந்துசென்றது. அசையா மரமென அவன் தொலைவில் நின்று நோக்குகையில் தோன்றினான். அவனருகே காண்டீபம் துணைவன் என நின்றிருந்தது. அதில் அவன் கைபட்ட இடம் தேய்ந்து தழும்பாகி ஒளிகொண்டிருந்தது.


மரங்களின் நிழல்கள் காலடியில் தேங்கிக்கிடந்த உச்சிப்பொழுதில் மலைச்சரிவில் இளைய யாதவர் புதர்ச்செறிவிலிருந்து வெளிவருவதை அர்ஜுனன் கண்டான். வெயிலுக்கு மயங்கி சோலைகளுக்குள் ஒண்டியிருந்த பறவைகள் எழுந்து சிறகடித்து வானில் சுழன்றன. ஒரு காட்டுநாய் ஊளையிட அதன் தோழர்கள் ஏற்றுப்பாடின. அவர் கால்பட்டு உருண்ட பாறைகள் கீழே மலைப்பள்ளத்தில் விழும் ஒலிகள் கேட்டன.


குரல் எட்டும் தொலைவு வரை இளைய யாதவர் வருவதற்காக காத்தபின் தன் வில் தூக்கி நாணொலி எழுப்பி உரத்த குரலில் அர்ஜுனன் சொன்னான் “இளைய யாதவரே, நீங்கள் தேடி வரும் கந்தர்வன் இக்காட்டுக்குள் எனது பாதுகாப்பில் உள்ளான். அடைக்கலம் கோரியவருக்காக உயிரும் இழப்பது மறவனின் அறம்.  இது போர் எச்சரிக்கை, திரும்பிச்செல்க!”


இளைய யாதவர் அக்குரலைக் கேட்டதாகத் தெரியவில்லை. சீரான காலடிகளுடன் அவர் வந்துகொண்டிருந்தார். அப்பால் காட்டுப்புதருக்குள் காலவரும் அவர் மாணவர்களும் வருவதை அவன் கண்டான். நாணொலியை மீண்டும் எழுப்பி “யாதவரே, அதோ அந்த இரட்டைப்பாறை எனது எல்லை. அதைக் கடந்து இதற்குள் வரும் எவரும் என்னால் கொல்லப்படுவார்கள். திரும்புக! இப்புவியில் என்னை வெல்ல எவரும் இல்லை” என்று அர்ஜுனன் கூவினான்.


இளைய யாதவர் அழுக்குபடிந்த தோலாடை அணிந்திருந்தார். புழுதி சூடி திரிகளாக ஆன குழலை நாரால் முடிந்து பின்பக்கம் விட்டிருந்தார். அவர் தலையில் என்றும் விழிதிறந்திருக்கும் பீலி அன்று இருக்கவில்லை. இடையில் எப்போதும் அவர் சூடியிருக்கும் குழலும் இல்லை. வலக்கையில் கதையும் இடக்கையில் படையாழியும் ஏந்திய கரிய உடல் புழுதியும் அழுக்கும் கொண்டு ஒளி அணைந்திருந்தது.


அணுகிக்கொண்டிருந்த இளைய யாதவரை நோக்கி சினமெழுந்த பெருங்குரலில் அர்ஜுனன் கூவினான் “யாதவரே! மீண்டும் சொல்கிறேன். நேற்றுவரை உங்கள் மேல் நான் கொண்டிருந்த அனைத்து அன்பையும் முற்றறுத்து இங்கு வந்து நின்றுள்ளேன். களம் புகுந்தபின் குருதியோ நட்போ பொருட்டென ஆகக்கூடாது என்று கற்ற போர்வீரன் நான். நமது போரால் இருவரும் அழிவோம் என்றே கொள்க… தங்கள் இலக்கு நான் எனறால் மட்டுமே அணுகுக!”


ஒருகணமும் தயங்காத காலடிகளுடன் இளைய யாதவர் அணுகி வந்தார். அவர் விழிகள் தன்மேல் பதிந்திருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். அவர் இரு கைகளும் இரு சிறகுகள்போல காற்றில்  வீசின. கால்கள் உருண்டபாறைகள் மேல் எடையுடன் பதிந்து மேலேறின. இரைநோக்கி இறங்கிவரும் பருந்தின் அலகென கூர்ந்திருந்தது அவர் முகம்.


அர்ஜுனன் தன் நாணை முற்றிறுக்கி இழுத்து விம்மலொலியெழுப்ப மரக்கூட்டங்களிலிருந்து பறவைகள் கூச்சலிட்டபடி எழுந்து பறந்தன. வில்லை வளைத்து அவன் அம்பு தொடுப்பதற்குள் கண்தொடா விரைவுகொண்ட கையால் ஏவப்பட்ட இளைய யாதவரின் படையாழி ஒளிக்கதிரென அவனை நோக்கி வந்தது. உடல்சரித்து அதை தவிர்த்தான். அருகிருந்த மரம் அலறலுடன் முறிந்து கிளையோசையுடன் மண்ணில் சரிந்தது.


துடித்தெழுந்து அதிர்வோசையுடன் திரும்பிச் சென்ற படையாழியுடன் இணைந்து சென்றது அவன் தொடுத்த அம்பு. அதை உடலொசிந்து இளைய யாதவர் தவிர்த்தார். மறுகணம் சுழன்றெழுந்து மீள வந்தது அவர் படையாழி. விழிமின்னி வண்டென ஒலித்துக் கடந்துசென்று அவர் அருகே நின்ற மரக்கிளையை முறித்தது பாண்டவனின் பிறையம்பு. அவனருகே ஒரு பாறை ஓசையுடன் பிளந்து விழ துள்ளித் துடித்தபடி திரும்பச்சென்றது படையாழி.


எய்தும் தவிர்த்தும் அவர்கள் நின்றாடினர். சூழ்ந்திருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. பாறைகள் பொறியனல் சீறி பொடி உதிர்ந்தபடி வெடித்தன. காற்று கிழிபட்டு கிழிபட்டு அதிர்ந்தது. ஊடே பறந்த பறவைகள் அறுபட்டு விழுந்து துடித்தன. அனல் உமிழ்ந்த இளைய பாண்டவனின் அம்பு பட்டு பசுமரம் ஒன்று பற்றிக்கொண்டது. படையாழி வந்து சீவிச் சென்ற பொறிதட்டி பைம்புற்கள் அனல் கொள்ள அர்ஜுனனைச் சூழ்ந்திருந்த காடு நெருப்பாகியது.


ஒருதழலை மறுதழல் தழுவ அவர்களைச் சூழ்ந்தது பேரனல். மேலே எரிந்து சுழன்றது அனலாழி. ஐந்து நெருப்புகள் சூழ அவர்கள் போரிட்டனர். சோமக்கணையால் இளைய யாதவரைத் தாக்கி அவரை பித்தெழச் செய்தான். காற்றுக்கணையால் இலைச்சுழல் எழுப்பினான். இந்திரக்கணையால் முகில் பிளந்து மின்னெழச் செய்தான்.


ஒருவரை ஒருவர் முற்றறிந்திருந்தனர் இருவரும். அர்ஜுனன் கையெடுப்பதற்குள் அவன் எண்ணிய அம்பை இளைய யாதவர் அறிந்தார். அவர் விழி திரும்புவதற்குள் அங்கே அர்ஜுனன் நோக்கினான். ஒவ்வொரு இலக்கையும் ஒவ்வொரு எண்ணத்தையும் அவர்கள் ஒன்றென அறிந்தனர். ஒற்றைப்பெருஞ்சினம். ஓருருவாகிய ஆணவம். ஒன்றென்றே ஆன தன்னிலை. பார்த்தனாகி நின்று இளைய யாதவர் தன்னுடன் போரிட்டார். கிருஷ்ணனாக மாறி அர்ஜுனன் தன்னை தாக்கினான்.


இருபாதியெனப் பிரிந்து தங்களுக்குள் போரிட்டனர். ஒருகணத்தின் ஒருகோடியின் ஒருதுளியில் அவர்களின் போர் இதோ இதோ என முன்னகர்ந்தது. அனலாகி கரியாகி காடு அவர்களைச் சூழ்ந்து புகைந்தது. வெம்மை உமிழ்ந்த பாறைகள் மணியோசையுடன் வெடித்துருண்டன. வானிலெழுந்த பறவைகள் கூச்சலிட்டு தவித்தன. கொன்றும் வென்றும் கடந்தும் மீண்டும் ஒரு கொடுங்கனவில் நின்று களியாடினர்.


பின் ஒரு கணத்திரும்பலில் அர்ஜுனன் அறிந்தான், அங்கெழுந்து அறியா முகம் சூடிநின்ற பிறிதொரு இளைய யாதவரை. அவன் உள்ளம் திடுக்கிட அம்பெடுத்த கை தளர்ந்தது. அணுக்கத்தின் எல்லைக்கும் அப்பால் அங்கு அறியாது கரந்திருந்தவன் எவன்? முகம் சூடி ஆடியது எம்முகம்? அத்தனை நாள் ஒன்றே காலமென, உடலென்று பிறிதிலாததுபோல வாழ்ந்தபோதே அது அங்கிருந்ததா?


சிறுதுளி. இன்மையை விட சற்றே பெரிது. ஆனால் கணம்கணமென அது பேருருக்கொண்டது. ஆயிரம் பல்லாயிரம் கைகள் முளைக்க, ஒன்றன்மேல் ஒன்றென விழிகள் வெறிக்க, முகம் மீதேறிய  முகங்கள். நகைக்கும் ஒரு வாயும், சினந்து பிளந்ததொரு வாயும், அறைகூவுமொரு வாயும், வசைபாடி வெறுக்குமொரு வாயுமென திசை சூழ்ந்தது. அவனறியாத பேருருவத்தைக் கண்டு அஞ்சியும் அதிர்ந்தும் அவன் எய்த அம்புகள் இலக்கழிந்தன. ஆழி வந்து அவனை நக்கி குருதி உண்டு மீண்டது. சுவைகண்டு வெறிகொண்டு விம்மி மீண்டும் வந்தது.


குருதி தெறிக்க அவன் பின்னால் விழுந்து கையூன்றி எழுந்து கால் வைத்து பின்னடைந்தான். அவன் முன் வந்து விழுந்து நிலத்தை ஓங்கியறைந்து மண்கிளறிச் சுழன்றெழுந்தது கொலைத்திகிரி. அர்ஜுனன் திரும்பி ஓடினான். முழங்கியபடி அவனை காற்றில் துரத்திவந்தது அது. எழுக என் அம்புகள். உயிர்கொள்க நான் கற்ற நுண்சொற்கோவைகள். இதோ என் படைக்கலங்கள். இதோ என் தவத்தின் கனிகள். என்னை நானென உணரவைத்த என் அறிதல்கள்.


ஆனால் அவையனைத்தையும் முன்னரே அவன் இளைய யாதவர் மேல் ஏவியிருந்தான். இல்லத்து நாய்க்குட்டிகள் என அவரை அணுகி குலவிக்குழைந்து உதிர்ந்தன அவை. அவர் அறியாத ஒன்று எழுக! அவர் அறியாதது என்றால் தானும் அறியாதது. அறியாது கரந்து ஆழத்திலிருக்கும் ஒன்று. வெறிக்கூச்சலுடன் அவன் நின்றான். தன் இருளுக்குள் இருந்து அந்தச் சொல்லை எடுத்து அம்பில் ஏற்றி திரும்பி நின்று எய்தான். நச்சுமிழ்ந்தபடி சென்று அவர் நெஞ்சில் தைத்தது அது.


அவர் திகைத்து கையோய்ந்து நிற்பதைக் கண்டான். தன்னுள் எழுந்த பெருங்களிப்பின் ஊற்றென்ன என அக்கணத்திலும் உள்வியந்தான். “யாதவனே, கொள்க! இது நீயறியா பார்த்தன். இதோ நீ காணா நஞ்சு. நீ அணுகாத ஆழத்து இருளில் ஊறியது” என்று கூவியபடி அம்புகளை எய்துகொண்டு அணுகினான். காலெடுத்து காலெடுத்து பின்வாங்கிய இளைய யாதவர் நின்று பேரலறலுடன் வானுருக்கொண்டெழுந்தார். அவர் கையில் இருந்தது காண்டீபம். அவர் தோளெழுந்தது அவன் சூடிய அம்புத்தூளி. அவர் இடப்பக்கம் நின்றிருந்தாள் அவள்.


“நீ?” என்று அவன் திகைத்தான். வெறியுடன் நகைத்தபடி அவள் அவர் பின்னால் மறைந்தாள். விழியுமிழ்ந்த நஞ்சு. நகைப்பில் நிறைந்த நஞ்சு. அவள்தான். என் நெஞ்சுதுளைக்கும் வாளியின் கூர்முனையென அமைவது அவள் நஞ்சேதான். இளைய யாதவர் கையிலெழுந்த காண்டீபம் உறுமியபடி அர்ஜுனன் மேல் அம்புக்குமேல் அம்பெனத் தொடுத்தது. அது அவனை நன்கறிந்திருந்தது.


அம்பு ஒன்று அர்ஜுனன் தொடையை தைக்க அவன் சரிந்து மண்ணில் விழுந்தான். அவன் உருண்டு சென்ற நிலமெங்கும் அம்புகள் வந்து நட்டுச் செறிந்து வயலென நின்றன.  அவன் நன்கறிந்த குரல்களை கேட்டான். அன்னையென குருதியென காதலென கடமையென அவனைச் சூழ்ந்திருந்த விழிகளெல்லாம் அம்புமுனைகளென ஒளிகொண்டெழுந்து விம்மி வந்து தைத்து நின்று நடுங்கின.


KIRATHAM_EPI_12


பெருவஞ்சத்துடன் கையூன்றி எழுந்து அவன் கைநீட்டியபோது சுட்டுவிரலில் இருந்தது யாதவரின் படையாழி. “செலுத்துக! செலுத்துக என்னை!” எனத் துடித்தது அது. “இது என் வஞ்சம்! ஆம், என் வஞ்சம் இது” என்றது. “படைநின்ற தெய்வம் கொண்ட வஞ்சம் இது. செலுத்துக என்னை!” அவனே ஒருகணம் அதன் வெறிகண்டு திகைத்தான். அவன் அதை விடுவதற்குள்ளாகவே எழுந்து பறந்து சென்றது. அதிலிருந்து குருதித்துளிகள் வீசப்பட்ட செம்மொட்டுமாலையெனத் தெறித்தன.


உடலெங்கும் எழுந்த வெறியால் உலைந்தாடி கைவீசி  நகைத்து “கம்சரின் பொருட்டு. யாதவனே, இதோ கம்சரின் பொருட்டு!” என்று அர்ஜுனன் கூவினான். திகைத்து கையோய்ந்து நின்ற இளைய யாதவரின் தலையறுக்கச் சென்று இறுதிக்கணத்தில் அவர் தலைசரிக்க அவர் முடித்திரளை வெட்டிவீசி மீண்டது.


“நில் நில்!” என அவர் கூவ மீண்டும் சீறி அவரை அணுகியது. வஞ்சமெழுந்த விழியென இளைய யாதவர் அதை கண்டார். “நீயா?” என்று கூவியபடி பின்னால் திரும்பி ஓடினார். அவரைத் தொடர்ந்து வந்து குதிகாலை வெட்டியது நற்காட்சி. குருதியுடன் மண்ணில் விழுந்த அவர்மேல் வந்து சுழன்று இழைவெளியில் புரண்டகன்ற அவர் தோள்தசையைச் சீவி திரும்பிச்சென்றது. குருதிசுவைத்த அதன் நாக்கு மின்னொளி சிதற காட்டில் சுழன்றது. “சிசுபாலனுக்காக! சிசுபாலனுக்காக!” என்று அர்ஜுனன் கூவினான்.


எரிபுகை எழுந்து இருண்ட வானுக்குக் கீழே அவர்கள் மட்டுமே இருந்தனர். விழிகள் மயங்கி மறைய உடலறிந்த காட்சியில் ஒருவரை ஒருவர் கண்டு போரிட்டனர். ஆயிரம் முறை ஆரத்தழுவிய தோள்கள், அன்புகொண்டு பின்னியாடிய விரல்கள் ஒன்று பிறிதை தான் என அறிந்தன. ஒன்று புண்பட்டபோது பிறிதும் வலிகொண்டது. அவ்வலியால் வெறிகொண்டு மேலும் எழுந்தது. மேலும் குருதி என கொந்தளித்தது. தன் குருதி உண்டதுபோல் சுவையறிந்து திளைத்தது.


எரிந்த காட்டுக்குள் நிகழ்ந்த போர் இருளுக்குள் எதிராடிப்பாவைத் தொடர்பெருக்கு என எழுந்தது. தொலைகாடுகளில் இடியெனப் பிளிறி தலைகுலுக்கி ஓடிவந்து மத்தகம் அறைந்தன இணைக்களிறுகள். கொம்புகள் மோதின எருதுகள். சீறி வளைந்து தாவி அறைந்து கைபின்னிப் புரண்டன வேங்கைகள். கவ்விக்கிழித்து தசைதெறிக்க குருதிசீற ஒன்றையொன்று கடித்துண்டன ஓநாய்கள். வானில் சுழன்று கொத்தி சிறகுதிர்த்து தசைத்துண்டுகள் என மண்ணில் விழுந்து துள்ளித்தாவின சிட்டுகள். நீள்கழுத்து பின்னி அறைந்து சிறகடித்து எழுந்து விழுந்து நீர்சிதறப் போரிட்டன அன்னங்கள். ஒன்றை ஒன்று விழுங்கின நாகங்கள். போர்வெளியாகியது உலகம். குருதிச் சாந்தணிந்தாள் மண்மகள்.


உடலெங்கும் செங்குருதி வழிய மண்ணில்புரண்டு தன்னைச் சூழ்ந்து அதிர்ந்த படையாழிச் சுழற்பெருக்கைக் கடந்து எழுந்த அர்ஜுனன் இளைய யாதவரின் அருகே நிழல் சுருண்டசைவதை கண்டான். பெண்ணுருக்கொண்ட பெருநிழல் நான்கு கைகளும் நீண்டுபறக்கும் குழலும் கொண்டு எழுந்தது. அஞ்சி அவன் எழுவதற்குள் அவன் காண்டீபத்தை வெட்டி எறிந்தது ஆழி. அவன் அருகிருந்த பாறையை எடுத்தபடி எழுந்ததும் அவனை அணுகி ஓங்கி அறைந்து தெறிக்கச்செய்தது கதை.


அவன் முழுவிசையாலும் பாய்ந்து அவர் மேல் முட்டி பின்னால் சரிந்தான். இருவரும் உடல்தழுவி மலைச்சரிவில் உருண்டனர். அவர்கள் உடல்பட்டு எழுந்த பாறைகள் உருண்டு முட்டி மலையாழத்தில் பொழிந்தன. அவர் கையமர்ந்த படையாழியை அவன் உதைத்து வீசினான். கதையைப் பற்றியபடி சுழன்று  எழுந்து அறைந்து தெறிக்கச்செய்தான். அவர் தோளை கடித்தான். உடலை கைநகங்களால் கிழித்தான்.


இரு உடல்களும் தழுவியறிந்தன முன்பு தழுவியபோது அறியாத அனைத்தையும். வழிந்த இரு குருதிகளும் கலந்து ஒன்றென மணத்தன. ஒன்றென வாயில் சுவைத்தன. தசையிறுகப் பற்றி இறுகி அசைவிழந்து நின்ற கணத்தில் இளைய யாதவரின்  விழித்த கண்களை அருகே கண்டான். அவை நோக்கிழந்து பிறிதொரு கனவில் இருந்தன.


“யாதவரே” என்று அவன் அழைத்த ஒலி அவனுள் புகுந்து மூலாதாரத்தை அடைந்தது. அவன் உடல் தசைவிதிர்த்து நடுங்கிக்கொண்டிருந்தது. அவன்  கைகளைப்பற்றி நிறுத்தி கால்களால் தொடையை அழுத்தி நெஞ்சில் தோளூன்றி மேலெழுந்தார் இளைய யாதவர். பிறிதெங்கோ எழுந்த கொலைநகைப்பு ஒன்றை அவன் கேட்டான். அனல் சூழ்ந்த வான்வெளியில் என அம்முகத்தை கண்டான். அனைத்து எண்ணங்களும் மறைய விழிமட்டுமேயாகி கிடந்தான்.


அக்கணத்தில் நீருக்குள் இருந்து சித்ரசேனன் கைகூப்பியபடி எழுந்தான். “யாதவரே, என்னைக் காக்கவந்த வீரர் அவர். அவர்மேல் அளிகொள்க! இதோ நான் வந்து நிற்கிறேன். என்னைக் கொன்று முனிவரின் வஞ்சினம் நிறைவுறச் செய்க!” என்று கூவியபடி ஓடிவந்தான். “நான் இனி உங்கள் அடைக்கலம் அல்ல, பாண்டவரே. இனி எனக்கு கடன்பட்டவரல்ல நீங்கள்” என்று அலறினான்.


மறுஎல்லையில் இருந்து காலவர் தன் மாணவர் சூழ கூவியபடி ஓடிவந்தார். “யாதவரே, வேண்டாம்! என் வஞ்சினத்தில் இருந்து விலகுக. சொல்பேணி நான் எரிபுகுகிறேன். எனக்கென இப்பேரழிவு நிகழவேண்டியதில்லை.” உறுமியபடி திரும்பிநோக்கியது சிம்மம். அவர் திகைத்து நின்று “நானறிந்திலேன்! யாதவரே, நான் அறியாது பிழையிழைத்தேன்” என்று கைகூப்பினார்.


மறுபுறம் ஓடிவந்த சித்ரசேனன் “கொல்க என்னை… என் பொருட்டெழுந்த இவ்வீரனுக்காக இறக்கிறேன்” என்றபடி அணுக நுதல்விழி சீற நோக்கியது பைரவம். அவன் கைகூப்பி நிற்க அவன் துணைவி உருவழிந்து வரிகொண்ட வலிகையாக ஆகி மண்ணில் படிந்தாள்.


“எங்கள் பகை அழிந்தது. நிறுத்துங்கள் போரை” என சித்ரசேனனும் காலவரும்  இணைந்து குரலெழுப்பினர். அர்ஜுனன் மீதிருந்து எழுந்த இளைய யாதவர் உடலெங்கும் குருதி வழிய வெற்றுடலுடன் அக்கணம் கருவறைக்குள் இருந்து வந்தவர் போலிருந்தார். கால்கள் நிலைகொள்ளாது அசைய  கண்களை மூடி தன்னை திரட்டினார். பின்னர் வாயிலூறிய குருதியை ஓங்கி துப்பினார். மூச்சில் சிதறின குருதிமணிகள்.


“யாதவரே, குளிர்க… நிறுத்துக போரை!” என்றார் காலவர். குருதிச்சரடு தெறிக்க அவர் தன் கைகளை உதறிக்கொண்டார். அவர்களை எவரென்பதுபோல நோக்கியபின் தளர்ந்த நடையுடன் திரும்பிச்சென்றார். அவர் செல்வதை சொல்லற்று நோக்கி நின்றபின் இருவரும் அர்ஜுனனை நோக்கி ஓடிச்சென்றனர்.


கிழித்துண்ண முயன்ற பருந்தின் உகிரலகில் இருந்து நழுவி விழுந்த பறவைக்குஞ்சு போல அர்ஜுனன் அங்கே கிடந்தான். சித்ரசேனன் “எழுக, இளையவரே! என் பொருட்டு நீங்கள் அளித்தவற்றுக்காக என் குலம் கடன்பட்டிருக்கிறது” என்றான். காலவர் “இளையவரே, வென்றவர் நீங்கள். இது என்ன ஆடலென்று இப்போது அறியமாட்டீர்” என்றார்.


[ 15 ]


எரிதழலில் அவியிட்டு விண்ணுலாவியாகிய நாரதரை அழைத்து தான் செய்யவேண்டியதென்ன என்று காலவர் கேட்டார். செய்த பிழைக்காக சித்ரசேனன் தன் நாவரிந்து இடட்டும் என்றார் நாரதர். தன் சொல்பேணுவதற்காக அந்நாவை எரித்து அச்சாம்பலைப் பூசட்டும் காலவர் என வகுத்தார். இருவரும் அதை ஏற்றனர். “என் விரல்கள் யாழைத் தொடுகையில் நாவாகின்றன. இந்நாவால் நான் அடைவதொன்றுமில்லை” என்றான் சித்ரசேனன். அதை எரித்த சாம்பலை தன் நெற்றியிலிட்டு நீராடி எழுந்து மீண்டும் தவம்புகுந்தார் காலவர்.


“அர்ஜுனன் மட்டும் அதிலிருந்து மீளவில்லை” என்றான் சண்டன். அவர்கள் தண்டகாரண்யத்தின் நடுவே ஓடிய பிரபாவதி என்னும் சிற்றோடையின் கரையிலிருந்த பாறைமேல் அமர்ந்திருந்தனர். “ஏன்?” என்றான் பைலன். “அஸ்வபக்ஷத்தில் இருந்து திரும்பிய அர்ஜுனன்  இருளிலேயே தன் குடிலுக்குள் சென்று படுத்துக்கொண்டான். அவன் உடலெங்குமிருந்த புண்களை மறுநாள்தான் சகதேவன் கண்டான். நகுலனை அழைத்து அவற்றுக்கு மருந்திடும்படி கோரினான்.”


திகைப்புடன் “மூத்தவரை இப்படி உடல்நைந்து குருதிவழியச் செய்யும்படி வென்றவர் எவர்?” என்று நகுலன் கேட்டான்.  “பிறிதெவர்?” என்றான் சகதேவன். நகுலன் பிறகேதும் சொல்லவில்லை. அர்ஜுனன் உடல்தேறி மீண்டெழ நாற்பத்தொரு நாட்களாயின. அவன் உடல் ஒளி மீண்டது. ஆனால் அவன் விழிகள் முற்றிலும் மாறிவிட்டிருந்தன. பிறிதெங்கோ நோக்கி அவை அலைபாய்ந்துகொண்டிருந்தன. யுதிஷ்டிரர் மலையிறங்கி வருவதுவரை அவன் அங்கிருந்தான். அதன் பின் தன் உடன்பிறந்தாரிடம் சொல்லிவிட்டு கிளம்பமுற்பட்டான்.


யக்‌ஷவனத்திலிருந்து அவர்கள் கிளம்பும் தருணம் அது. அர்ஜுனன் அவன் கிளம்பிச் செல்லவிருப்பதை தமையனிடம் சொன்னபோது பீமன் திடுக்கிட்டு “தனியாகவா? எங்கே?” என்றான். “அறியேன். ஆனால் நான் சென்று அடையவேண்டியவை பல உள்ளன. அவை நான் மட்டுமே செல்லக்கூடிய இடங்கள்” என்றான் அர்ஜுனன். “மீண்டும் ஒருவர் தனித்துச் செல்வதை ஒப்பமுடியாது…” என்று பீமன் உரக்க சொன்னான். “செல்பவருக்கு ஒன்றுமில்லை. இங்கிருப்பவர்கள் சென்றவரை ஒவ்வொரு கணமும் எண்ணி துயர்கொள்ளவேண்டியிருக்கிறது.”


“இளையவனே, நீ செல்வது எதை அடைவதற்காக?” என்றார் யுதிஷ்டிரர். “அம்புகளை” என்று அவன் சொன்னான். “நாம் போரிடப்போவதில்லை, இளையோனே. போரிடுவதென்றால் நம் உடன்பிறந்தவரை எதிர்கொள்ளவேண்டும். நான் அதற்கு ஒருபோதும் ஒப்பமாட்டேன்” என்றார் யுதிஷ்டிரர்.


அர்ஜுனன் “வில்வீரன் அம்புகளைத் தேடுவது தன்னை நிறைத்துக்கொள்வதற்காக மட்டுமே” என்றான். சினத்துடன் கைகளைத் தட்டியபடி அருகே வந்த பீமன் “வீண்சொற்கள் வேண்டாம். நீ அம்புகள் தேடுவது எதற்காக? இளைய யாதவருக்கு எதிராகவா?” என்றான். அவன் விழிகளை ஏறிட்டு நோக்கி “ஆம்” என்றான் அர்ஜுனன். பீமன் கடும் சினத்துடன் அறையும்பொருட்டு கையோங்கி அணுகி “மூடா, இன்று இப்புவியில் நமக்கு நண்பர் என பிறரில்லை” என்றான்.


யுதிஷ்டிரர் கைநீட்டி அவனை தடுத்தபின் அர்ஜுனனிடம் “பார்த்தா, நீ அவருக்கு எதிராக படைநிற்கப்போவதில்லை. இது என் ஆணை!” என்றார். “நாம் அவர் கருவிகள். நம்  பிறவிப்பெருநோக்கம் அதுமட்டுமே.” சகதேவன் “ஆம், மூத்தவரே நம் ஊழ் அவருடன் பிணைந்தது” என்றான்.


அர்ஜுனன் “என்றும் நான் அவர் நண்பனே. அதை நன்கறிவேன்” என்றான். “ஆனால் அடிமை அல்ல. பணியாள் அல்ல. மாணவனும் அல்ல. இணையானவனே நண்பனாக அமைய முடியும். நண்பனாக அமைந்தால் மட்டுமே அவர் எனக்கு ஆசிரியராக நிற்கவும் இயலும்” என்றான். பீமன் இகழ்ச்சியுடன் நகைத்து “அவருடன் போரிட்டுத்  தோற்ற சிறுமை உன்னை எரியவைக்கிறது” என்றான்.


அர்ஜுனன் “இல்லை மூத்தவரே, நான் அவரிடம் தோற்கவில்லை” என்றான். “அக்கணத்தில் அவரால் என்னை வெல்லமுடிந்தது, கடக்கமுடியவில்லை என்று அறிந்தேன். அங்குதான் என் உள்ளம் சிறுமைகொண்டு சுருங்கியது.” அவன் சொல்வதென்ன என்று அறியாமல் அவர்கள் நோக்கினர். தானே அதை தெளிவுற உணராதவன் போல அர்ஜுனன் தலையை குலுக்கிக்கொண்டான்.


“முதல்வனாக அன்றி நின்றிருக்கமுடியாத ஆணவம் இது. பார்த்தா, இவ்வாறு தருக்கிய எவரும் முழுவெற்றி அடைந்ததில்லை” என்றான் பீமன். அர்ஜுனன் நிலைமாறாத மொழியில் “மூத்தவரே, நீங்கள் இதை புரிந்துகொள்ளமுடியாது. ஆழியும் பணிலமும் ஏந்திய அண்ணலின் கதைகளிலேகூட அவன் முன் நிகரென எழுந்து நின்றவர்களே அவனருளுக்கு உரியவர்களானார்கள். தென்னிலங்கைக் கோமகனோ இரணியனோ எவராயினும் அதுவே வீரர்களின் வழி” என்றான்.


பீமன் அலுப்புடன் தலையை அசைத்து “நீ முடிவுசெய்துவிட்டாய். ஆணவம் கொண்டவர்களிடம் பேசிப் பயனில்லை. நூறுகோணங்களில் சிந்தனைசெய்து அனைத்து விடைகளையும் கண்டடைந்திருப்பாய்” என்றான். “ஆம், என் ஆணவம் அடிபட்டது, இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் அது நான் அவர் முன் தோற்றதனால் அல்ல. நானறியாத ஒன்று அவரில் பேருருக்கொண்டு எழுந்ததைக் கண்டேன். அதனெதிர் நிகரென ஒன்று என்னுள்ளும் எழுவதைக் கண்டேன். அதனால்தான்” என்றான் அர்ஜுனன்.


“அந்த ஆழுலகை அறியாது இனி இங்கிருக்க என்னால் இயலாது. மூத்தவரே, அம்பு என்பது ஒரு சொல் மட்டுமே. இப்புடவி கொண்டுள்ள ஆழ்மெய்மை ஒன்றே அம்பென உருக்கொண்டு என்னை வந்தடைகிறது. நான் அறிந்து அதை கைக்கொண்டாகவேண்டும். மறுமுறை அவர்முன் சென்று நின்றிருக்கையில் என் அம்புத்தூளியில் அது இருந்தாகவேண்டும்.”


யுதிஷ்டிரர் பெருமூச்சுடன் “அவன் சென்றுமீளட்டும், மந்தா. நாம் தடைசொல்ல வேண்டியதில்லை” என்றார். பீமன் “ஆம், நாம் சொல்வதற்கொன்றும் இல்லை” என்றான். யுதிஷ்டிரர் அர்ஜுனனிடம் “இளையோனே, நாம் நோக்காது ஒழிந்த காட்சிகளாலானது இப்புவி நின்றிருக்கும் பீடம். நாம் கேளாது  ஒளிந்துகொள்ளும் ஒலிகளாலானது நமைச் சூழ்ந்த வானம். ஒளிந்திருப்பவற்றை தேடிச்செல்பவன் விரிந்து விரிந்து சூழும் பேரிருளை மட்டுமே அறியமுடியும் என்கின்றன நூல்கள்” என்றார்.


அர்ஜுனன் “ஆம் மூத்தவரே, நான் அதை அறிவேன்” என்றான். “நான் தேடிச்செல்வது முழுமையை அல்ல, என்வயமாகி என்னில் அடங்கும் அதிலொரு துளியை மட்டுமே.” யுதிஷ்டிரர் “கரியிருள் சூழும் என்கிறார்கள். அதன் தோலுரித்து எழும் ஒளிக்கு நீ உகந்தவனாக ஆகுக!” என்று வாழ்த்தினார். அர்ஜுனன் அவர் காலடிகளைத் தொட்டு சென்னி சூடினான்.


யுதிஷ்டிரர் திரும்பி  இளையவனாகிய சகதேவனிடம் “நன்று சூழுமா, இளையோனே?” என்றார். “நிகரென நின்று மட்டுமே அறியும் சொல் ஒன்று அவருக்காகக் காத்துள்ளது, மூத்தவரே” என்றான் சகதேவன்.


“அர்ஜுனன் தன் உடன்பிறந்தார் நால்வரிடமும் விடைபெற்றான். விழிநோக்காது திரௌபதியிடம் சொல்கொண்டான். யக்‌ஷவனத்திலிருந்து காண்டீபத்தை மட்டும் கையில் கொண்டு திரும்பிநோக்காமல் நடந்து வடக்குத்திசையேகினான். அவன் காலடிகள் பட்டு வளைந்த புல்நுனிகள் மெல்ல நிமிர்வதை உடன்பிறந்தார் நோக்கி நின்றனர்” என்றான் சண்டன்.


“அவன் பயணத்தை அயோத்திநாட்டுக் கவிஞராகிய சம்விரதர் அர்ஜுனேந்திரம் என்னும் காவியமாகப் படைத்தார். அதை இன்று சூதர் பாடியலைகின்றனர். அர்ஜுனன் கதை நன்று. அது எப்போதும் பெண்களிடமிருந்து அரிசியும் நெய்யும் பெற்றுத்தருவது. இளம்பெண்கள் மட்டும் தனித்தமர்ந்து கேட்பார்களென்றால் மெல்ல அவர்களின் கைவளைகளையோ குழைகளையோகூட கழற்றி வாங்கிக்கொள்ள முடியும்.” அவன் தன் மடிச்சீலையை அவிழ்த்து ஒரு பொன்வளையையும் ஒற்றைக்காதணியையும் காட்டினான். பைலன் புன்னகைத்தான்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 10
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 39
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 42
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 10
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 24
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 87
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 87
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 86
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 11
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 58
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 56
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2016 11:30

மன்னிப்பு -கடிதங்கள்

அன்பு ஜெயமோகன்,


 


முதலில் உங்கள் கடிதத்துக்கு மிக்க நன்றி. என்னுடைய மனைவியும் உங்கள் தளத்துக்கு அன்றாடம் வருபவர். ‘ஏன் ஜெயமோகன் உனக்குக் கடிதம் எழுதுவதில்லை?’ அவருடைய  பதிலுக்காகக் காத்திருக்கிறேன் என்று நான்கைந்து முறையாவது கூறியிருப்பாள். இன்று உங்கள் கடிதத்தைக் காண்பித்தேன். முகமெல்லாம் புன்னகை. :-)


 


வங்கிப் பெண்மணி பற்றி நீங்கள் எழுதியிருந்தது நிச்சயம் எரிச்சலின் வெளிப்பாடாகத்தான் இருக்கும் என்பதை நானும் உணர்ந்தேன். என்னுடைய முந்தைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது போல, “நேற்றுக்கூட” என்று நீங்கள் குறிப்பிட்டிருந்ததிலிருந்து, அந்தக் கருத்தை ஒருவேளை ‘இம்பல்சிவாக’ எழுதிவிட்டீர்களோ என்றும், அதனாலேயே அந்தப் பெண்மணியின் நோய்மையை உணர்ந்துகொள்ள கால அவகாசம் வாய்க்காமல் போய்விட்டதோ என்றும் தோன்றியது. உங்களைத் தொடர்ந்து வாசித்து வருபவன் என்கிற முறையில் எனக்கு அது உங்கள் மொழியாகவே தெரியவில்லை. அது ஒருவேளை நான் உங்களுடன் இயல்பான மொழியில் உரையாடியிராதவன் என்பதால் இருக்கலாம்.


 


முந்தைய கடிதத்தில் Impulsive என்பதற்கு பதிலாக Repulsive என்று எழுதிவிட்டேன். கருத்தே மாறிவிட்டது. அதற்கு மன்னிக்கவும். நானுமே அப்போதுதான் வாட்சேப்பில் தவறான தகவல் ஒன்றை பகிர்ந்ததைப் பற்றி பேசிக்கொண்டிருந்ததால், உங்களுக்கு அதே அவசரத்துடன் எழுதிவிட்டேன். இருந்தாலும், செய்த செயலில் உண்மையாகவே தவறிருப்பின் மன்னிப்பு தெரிவிப்பதற்கும், விளக்கமளிப்பதற்கும் பெரிய மனமும், துணிவும் வேண்டும்


 


 


மாதவன் இளங்கோ


 


அன்புள்ள மாதவன்


 


உங்கள் கடிதத்தின் தொனி புரிந்தது. சாதாரணமாக நான் வாசகர்களின் உணர்ச்சிகளைப் பொருட்படுத்துவதில்லை. பி ஏ கிருஷ்ணனின் கடிதம் ஆணையிட்டது, ஏற்றுக்கொண்டேன். இது முன்பும் பலமுறை நடந்துள்ளது. நமக்கு அப்படி சில நங்கூரங்கள் தேவை


 


ஆனால் வாசகர்கள் எழுத்தாளர்களை ‘சான்றோர்’ ஆக கருதுகிறார்கள். சமநிலையை  எதிர்பார்க்கிறார்கள். அதை எழுத்தாளன் நிறைவேற்றப்புகுந்தால் அவன் சான்றோன் ஆவான், எழுத்தாளன் அல்லாமலாவான்.


 


இதை நான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறேன் ஆன்றவிந்த கருத்துக்களைச் சொல்பவன் அல்ல எழுத்தாளன். உணர்வுநிலைகளால், நுண்ணுணர்வால் மட்டுமே சமூகத்தை வாழ்க்கையைப் பார்ப்பவன். அதில் சமநிலை இருக்காது. ஆனால் ஆன்றவிந்த ஆய்வாளர்கள் காணாதவை காணக்கிடைக்கக்கூடும். அதுவே அவன் இடம்


 


உணர்வுரீதியாக சமூகத்தில் ஒருவனாக ஆகிநின்றிருக்கும் வரைத்தான் எழுத்தாளன் எழுதமுடியும். நம் அரசு நிறுவன ஊழியர்கள், குறிப்பாக எதையும் கற்காமல் மாறாநிலையில் இருக்கும் நடுவயதான பெண் ஊழியர்கள் மற்றும் குடிகாரர்கள்  குறித்த என் எண்ணங்களில் கசப்பில் எந்த மாற்றமும் இல்லை


 


ஜெ,


 


 


அன்புள்ள ஜெ அவர்களுக்கு,


 


இன்னமும் புரியவில்லை. மன்னிப்பெதற்கு? யாரிடம் கேட்கிறீர்கள்? தான் செய்யும் தொழிலில் எவ்வித ஈடுபாடுமற்று காணப்படும் அந்த வாங்கி ஊழியரிடமா? பாரதி சொன்னதுபோல் ‘தேடி சோறு நிதம் திண்ணும்’ மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்த சமூகத்திடமா? ஔவை சொன்ன நல்லோர் ஒருவரிடமா? அல்லது உங்களிடமேவா?


 


உங்களிடமே என்றால் நான் ஒப்புக்கொள்வேன். நீங்கள் எழுதிய வார்த்தைகள் ஏதோ ஒருவகையில் உங்களின் மனதை உறுத்தும்பட்சத்தில் அதனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம்.


 


வேறு யாரிடமாவதென்றால் நிச்சயம் தேவையில்லை.


 


உங்களிடமெழும் இந்தக் கோபம், நீங்கள் எழுதிய அறத்தின் வெளிப்பாடேயன்றி வேறென்ன? கெத்தேல் சாகிப்பையும் யானை டாக்டரையும் வணங்கானையும் எங்கள் கண் முன்னே காட்டிவிட்டு இந்தக் கோபம் கூட வரவில்லை என்றால் தான் பிழை!


 


ஒருவேளை எஸ் ரா அவர்கள் சுகா அவர்களிடம் சொன்னது உண்மை தான் போலும்!


 


என்றும் அன்புடன்,


 


லெனின்


கள்ளக்குறிச்சி


 


 


அன்புள்ள லெனின்


ஒரு விஷயத்தை கோபமாக அல்லது எரிச்சலாகச் சொல்லும்போது அந்த நோக்கம் அடிபட்டுப்போகிறது.  ஆகவே சிலசமயம் எல்லைமீறிய கோபத்துக்காக மன்னிப்பு கோரவேண்டியதுதான்


 


அதிலும் பி.ஏ.கிருஷ்ணன் ஒரு கடிதம் எழுதியபின் அதில் மாற்று எண்ணமே இல்லை. ஒருவேளை என் தரப்பே சரி அவர் தவறாகச் சொல்கிறார் என்றாலும்கூட. அவருக்கு நான் அளிக்கும் இடம் அது


 


ஜெ


 



திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

“தேவாங்கு” காணொளியைக் கண்டபோது, உண்மையில் அப்படிப்பட்ட பணியாளர்களிடம் ஏற்படும் வெறுப்பும், கோபமுமே வந்தது. இது போன்ற அலட்சியத்தை நானும் ஒரு முறையல்ல, பல முறை அனுபவித்திருக்கிறேன்.

எனினும், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில், அந்த உங்கள் பதிவுக்கான பின்னூட்டங்களையும், அப்பணியாளரின் உண்மை நிலையையும் அறிந்தபோது, ஜெயமோகன் போன்ற எழுத்தாளர் இதைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றியது…


உங்கள் கருத்தை எதிர்த்து கருத்திட்டிருந்தவர்களில் பலர் உங்கள் நண்பர்களே, உங்கள் வாசகர்களே என்பதைக் கண்டபோது, உங்கள் வாசகர் வட்டத்தின் சுய விமர்சனத் தன்மை வியப்பையளித்தது.


“ஒரு மன்னிப்பு” என்று தலைப்பு, உங்கள் மீதான மதிப்பைப் பன்மடங்கு உயர்த்தி விட்டது… அப்பதிவைப் படிக்கத் துணிவில்லையாயினும், உங்கள் இதயம் அடைந்த வருத்தத்தை தலைப்பிலேயே உணர முடிந்தது.



மன்னிப்பு என்பது மிகப்பெரிய சொல். கிராதம் உங்களை வேறு நிலைகளுக்கு இட்டுச் செல்லட்டும். செல்லும். நன்றி.











என்றும் அன்புடன்

செ.அருட்செல்வப்பேரரசன்


arulselvaperarasan@gmail.com

http://mahabharatham.arasan.info





 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2016 05:17

October 29, 2016

விளையாடல்

nagesh 2


அன்புள்ள ஜெ


 


ஏ.பி நாகராஜனின் திருவிளையாடல் சினிமாவின் முக்கிய நான்கு கதைகளும், திருவிளையாடற் புராணத்தை (பரஞ்சோதி முனிவரின்) தழுவி உள்ளது.


 


திரைப்படத்தில் உள்ள முக்கிய வசனக் கூறுகள், காட்சி அமைப்பு (வணிகம் சார்ந்து இருந்தால் கூட, மூல இலக்கியத்திற்கு மரியாதையாகவே) முதலியவை ஏ பி நாகராஜனின் உழைப்பையும் தமிழ் இலக்கியம் தழுவிய அபார முயற்சியும் வியப்பளித்தன.


 


திரைத் துறையில் கூட non -linear  கதை சொல்லுதலும் முயற்சிக்கப் பட்டிருக்கிறதோ என தோன்றுகிறது.


 


பாண புத்திரர் கதை – இறையனார் – சாதாரிப் பண் பாடினாராம். அது தேவ காந்தாரி என்றும், பந்துவராளி என்றும் கூறுகின்றனர். படத்தில் அமைந்தது கௌரி மனோகரி. இருந்தாலும் சிறப்பாகவே இருக்கிறது – பாடலினிசை மட்டும் :)


 


http://shaivam.org/tamil/sta_tiruvilaiyadal_07_u.htm#viraku


 


தருமி கதை – எனக்கு மிகவும் வியப்பை அளித்தது இது


http://shaivam.org/tamil/sta_tiruvilaiyadal_08_u.htm#tharumikku


 


வேறு ஏதாவது குறிப்புகள் நீங்கள் அறிந்தது உண்டா?


 


எதோ ஒரு தளத்தில் குறைத்து மதிப்பிடப் பட்ட திரை முயற்சியோ எனவும் தோன்றுகிறது.


 


இதனைப் பற்றிய புகழ் – தோன்ற வேண்டிய இடம் – இலக்கியத்தில் இருந்து எனத் தோன்றுகிறது


 


 


முரளி


 


அன்புள்ள முரளி


 


ஏ பி நாகராஜனின் புராண மறு ஆக்கங்கள் அனைத்துமே தனியாக ஆராயத்தக்கவை. திருவிளையாடலிலேயே சிவன் விறகுவெட்டியாக வந்து மக்களிடம் தன் துன்பத்தைச் சொல்லும் பகுதி மேலும் முக்கியமானது.


 


அந்த அழகியல் அன்றிருந்த தெருக்கூத்து, அதில் இருந்து கிளைத்த நாடகம் ஆகிய வெகுஜனக்கலையில் இருந்து வந்தது. நாகராஜனின் விளைநிலமே பாய்ஸ் கம்பெனி நாடகம்தான்.


 


அந்த வெகுஜனக்கலையில் பல நுட்பமான உள்ளோட்டங்கள் உண்டு. ஒன்ரு தெய்வங்களை மனிதத்தன்மை கொண்டு அன்றாட வாழ்க்கைக்குக் கொண்டுவருவது. கட்டியங்காரன் சிவபெருமானை உள்ளூர் பிரமுகருக்கு அறிமுகம் செய்து அவரை சிவபெருமானுக்கு அறிமுகம் செய்வான்.


 


தெய்வங்களின் பிரச்சினைகளை மனிதப்பிரச்சினைகளாக ஆக்குவார்கள். அதிலுள்ள தத்துவார்த்தமான அம்சங்களை முழுமையாகக் களைந்து எளிமையாக்கி உணர்ச்சிகரமாக ஆக்குவார்கள்


 


அதன் அடுத்தபடியாக ‘தலைகீழாக்கம்’ நிகழும். தெய்வங்களை கேலிசெய்வார்கள்.  சிவபார்வதி நடனத்தின்போது ஒரு செம்பு நீரைக்கொண்டுவந்து மேடையில் வைத்து ‘போறபோக்கப்பாத்தா உங்களுக்குத் தேவைப்படும்போல’ என்று பபூன் சொல்வதுண்டு என்றே வாசித்திருக்கிறேன்


 


புராணங்களை புரிந்துகொள்வதற்குப் பதிலாக புராணங்கள் வழியாக தங்களைப்புரிந்துகொள்வது, புராணங்களை வைத்து விளையாடுவது என்று அந்த அழகியல் செல்கிறது.


 


அதன் சமூகக்கூறுகளைப்பற்றியும் உளவியல்கூறுகளைப்பற்றியும் நிறையவே ஆராயலாம். அதற்கு முக்கியமான தேவை என்பது உடனடியாக எங்காவது கற்றுக்கொண்ட மேலைநாட்டுக் கொள்கைகளை கண்மூடித்தனமாக அதன்மேல் போட்டு ஆராயமலிருப்பது. ஆனால் மேலைநாட்டுக்கொள்கைகளை போட்டால்தான் கல்விமான் அந்தஸ்து. ஆகவே அதைச்செய்யும் ஆய்வாளர்களே நம்மிடம் இருக்கிறார்கள்


 


முதலில் இந்த அழகியலை நேரடியாகச் சந்தித்து அது உருவாக்கும் வினாக்களுக்கான விடைகளை நம் பண்பாட்டில்தேடி அந்தப் பயணத்திற்கு உதவுமளவுக்கு மட்டுமே கையாளவேண்டும்.


 


அப்படிப்பட்ட ஆய்வுகள் எழுமென்றால் நம் சினிமாவுக்கும் அதற்கு முன்பிருந்த வணிகக்கலைகளுக்கும் இடையேயான உறவை, கொடுக்கல்வாங்கலைப்பற்றி நிறையவே பேசமுடியும். நம் ரசனையும் சமூகப்புரிதலும் விரிவடையும்


 


‘என்னிடம் வா ,நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லும் கடவுளிடம் ‘எங்கெங்க வீங்கியிருக்குன்னா?’ என கேட்கும் நாகேஷின் குரல் எவருடையது என்று ஆராய்ந்தாலே போதும் , நம் பண்பாட்டில் நடந்துகொண்டே இருக்கும் அந்த விளையாடலைக் காணமுடியும்.


 


ஜெ


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 29, 2016 11:35

பவிழமிளம் கவிளிணையில்…

1


இனிய ஜெயம்,



பிச்சகப்பூங்காட்டில் பாட்டைக்கேட்டேன்

அப்போதெல்லாம் பிழைப்புக்காக பார்த்த தொழிலில் பாடல் பதிவகம்  நடத்திய நாட்கள் அது.  உண்மையில் இளையராஜா இசை எத்தனை தீவிரமாக சாமான்யர்களை ஆட்கொண்டு ஆண்டது என அப்போதுதான்  நேரில் உணர்ந்தேன்.   நிலா அது வானத்து மேலே  பாடலை எவருக்கேனும் பதியாமல் ஒரு நாள் என்னை கடந்து சென்றதில்லை.  நிலா அது, மற்றும் கடலுல எழும்புற அலைகளை, இந்த இரு பாடலும் ஒலிக்காமல் ஒரு லான்ச் கூட கடலுக்குள்  மிதக்காது. இங்கே கடலூரில்  பின்னணியில் இளையராஜா குரல் எழுந்ததும், திரை முன் எழுந்து நின்று வெறிக் கூச்சலிடும் மீனவ நண்பர்களின் பரவசத்தை  நேரில் கண்டால் மட்டுமே  இளையராஜா வியர்வைக்கு வாழ்வை ஒப்புவித்த எளியவர்களின் அகத்தினுள் எந்தளவு வேரோடி இருக்கிறார் என்பது புரியும்.

மீனவ நண்பர்கள் குழந்தைமை கூடிய எழுத்துப் பி அபிஷேகம்ழை செய்து களுடன், உதா [ குயில புடிச்சி  குண்டில டிச்சி,,, சின்ன தம்பி] கொண்டு வரும் பாடல் வரிசையில் இளையராஜா அல்லது எம்ஜியார் இருவர் தவிர பிறருக்கு இடமே இல்லை.   இதில் இரண்டாம் இடம் பிடிப்பவர் கே ஜே யேசுதாஸ்.  காலை முதல் நள்ளிரவு வரை  தலைக்குள் இளையராஜாவும் யேசுதாசும் மட்டுமே பொழிந்து கொண்டிருப்பார்கள். இத்தனை நாட்கள் கழிந்து வந்து திரும்பிப் பார்க்கையில், யேசுதாஸ் அவர்களின்  குரல் மட்டுமே இன்று என்னுள் கரைந்து கிடப்பதை உணர முடிகிறது.  சென்ற ஆயுளில் சரஸ்வதிக்கு லட்சத்து எட்டு குடம் தேன் அபிஷேகம் செய்து அவர் அடைந்த குரலாக இருக்கக் கூடும். ஒரே சொல். அது விண்ணில் இருந்து மானுடனுக்கு இறங்கும் கடவுளின் குரல்.

தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம், பாடலில்  ஆண் குரல் எழும் போதெல்லாம், நல்லாத்தான் இருக்கு  ஆனால் இதை யேசுதாஸ் பாடி இருந்தால் இன்னும் எங்கேயோ போய் இருக்கும் என்ற எண்ணம் எழும்.  நீண்ட நாள் கழித்து  நீங்கள் சுட்டி அளித்த பிச்சகப் பூங்காட்டில் வழியே மலையாளத்தில் யேசுதாஸ் அவர்களின் குரலை கேட்டேன். ஆம் நீங்கள் சொன்னது மெய்தான். கேரளம் கடவுளின் நிலம். யேசுதாஸ் குரல் கடவுளின் குரல். கேரளத்தின் குரல்.

ரீப்ளே மோடில் வைத்து இரவெல்லாம் இந்த ஒரே பாடலில் திளைத்துக் கிடந்தேன்.  புதிய நகச்சாய புட்டியை திறந்தால் அதிலிருந்து ஒரு வாசம் எழுந்து, சைனசில் நிறைந்து, பின்மூளையை கிரு கிறுக்க வைக்குமே, அதே உணர்வை இப் பாடல் வழி இரவெல்லாம் அனுபவித்துக் கிடந்தேன்.  இது கொடுத்த கற்பனையில் இரவெல்லாம் கிரிதரனாகி நீலியின் பின் திரிந்தேன்.  குறிப்பாக இதில் பூக்கும்  தமிழ் முயங்கிய மலையாளம். அதுதான் இந்தப் பித்தின் ஆணி வேர்.  சில சொற்கள் வைரஸ் போல மூளைக்குள் தங்கி விடும், நாளை எனக்கு அம்னீஷியா வந்து மொத்த நீலமும் என்னை விட்டு அகன்றாலும்,

”ஒரு நாளும் அவளறிய உரைக்காத அன்பைஎல்லாம் பலகோடி சொற்களாக்கி தன்னுள்ளே ஓடவிட்டு  காலக் கணக்கெண்ணி காத்திருக்கும் தனியன்”  ”அவள் நினைவை உச்சரித்து உயிர் துறக்கும் இனியன்”

இந்த வரிகளை என்னுள்ளிருந்து அழிக்க முடியாது. அதற்க்கு இணையான இசை மொழி  பாடலின் ”பவிழமிளம் கவிளினையில் பழமுதிரும் பிராயம்.”  என்ற இந்த வரிகள்.  கற்கண்டு போல நா நுனியில் தித்தித்துக் கரைகிறது.   இடைக்கா,  செண்டை  கேட்ட முதல் கணமே  நம் அகம் கேரள மண்ணுடன் பிணைந்து விடுகிறது.கேரள நிலம் முழுமையையும்  சாரமாக்கி அகத்தில் படர வைக்கும் வாத்தியம் செண்டை. இப்படி ஒரே ஒரு இசைக் கருவி. அதைக் கேட்டால் தமிழ் நிலம் மொத்தமும் அகத்தில் விரிய வேண்டும் எனில் அது என்ன வாத்தியமாக இருக்கும் என யோசித்துப் பார்த்தேன். மௌனமே எஞ்சியது.

இரவெல்லாம் கேட்டு கேட்டு நிலவை வழியனுப்பி வைத்தேன்.  இசை போதை. இத்தனை போதையை  இந்த  பாடலில் நிறைத்து  அகத்தை விம்மச் செய்வது எது?  காதல் . காதல்.  என் காதல் தோழியுடன் களித்துக் கிடந்தது எய்திய போதை.  மெல்ல மெல்ல பூத்தது புலரி. புள்ளினங்கள் ஆர்ப்ப மெல்ல எழுந்து வந்தான் பரிதி.

ஆன்மாவின் கூட்டில் துளி ஒளி சொட்டி, வெளியும் கொள்ளாத காதலை திறந்தான்.

எங்கே வாசித்த வரி? பரபரத்து தேடி அடைந்தேன்.

பெண்ணைப் பற்றி கடவுள்

பெண்ணைப் பற்றி கடவுள் சிந்திக்கத் தொடங்கினானே

அப்போதுதான் நான் அவனை உணர்ந்தேன்.

கோடிக் கற்பனையில் யுகங்கள் மூழ்கியிருந்து

அவளுக்கொரு வடிவைப் புன்னகையுடன் தேர்ந்தானே

அப்போதுதான் அவனை அறிந்துகொண்டேன்.

அவளை அவ்விதமே தீர்மானித்ததற்காக

முற்று முழுக்கவும் அவனை நம்பினேன்

தன் முடிவில் எந்தத் தடுமாற்றமுமின்றி

அப்படியே அவளைப் பிறப்பித்தானே, அதனால்

வெகுவான மரியாதை அவன்மீது கூடிக்கூடி வந்தது.

பருவத்தின் கொடை சுமந்துபோகும் பெண்களை

எங்கு கண்டாலும் வழங்கிய பெரும் வள்ளன்மைக்காக

அவ்விடங்களிலேயே அவனைத் தொழுதேன்.

ஆன்மாவின் கூட்டிற்குள் ஒரு துளி ஒளி சொட்டி

வெளியும் கொள்ளாத காதலைத் திறந்தான்,

நோன்பிருந்து என் பொழுதுகளில் அவனைப் போற்றினேன்.

அவனே காமத்திலிருந்து உய்வித்தான் எனவே

அவன் அடிமையாய் தாசனாய் ஆராதகனாய் ஆகினேன்.

எனக்கொரு சின்னஞ்சிறு மகள் பிறந்தாள்

நானும் கடவுளுக்குரிய தகுதியடைந்துவிட்டேன்




யூமா வாசுகியின்  கவிதை அது.   பெண் , காதல்,  எல்லாம், காணும், இவை எல்லாம் எதற்க்காக  ?  வேறெதற்கு கடவுளின் தகுதியை அடையத்தான்.
 
இனிய ஜெயம், இதுதான் அன்று, எனக்கு அன்றைய நாளின் கவிதை.

 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 29, 2016 11:32

வீரசிங்கம் பயணம் போகிறார்!

download-8


அன்புள்ள ஜெயமோகன்,


மலட்டு விதைகள் மற்றும் கலப்பு விதைகள் பற்றி, லெபனான் நாட்டின் பின்புலத்தில் எழுதிய எனது புனைவுக் கட்டுரை (Creative Essay), கடந்த நான்கு வாரங்களாக ஞாயிறு தினக்குரலில் தொடராக வந்தது.


மலட்டு விதைகள் பற்றி அறிய முதலாவது மற்றும் நாலாவது அத்தியாயங்களை தவறாது வாசிக்கவும். இரண்டாம் மூன்றாம் அத்தியாயங்கள் லெபனான் நாட்டைப்பற்றியது.


ஆசி கந்தராசா


சிட்னி


 


வீரசிங்கம் பயணம் போகிறார் புனைவுக்கட்டுரை


 


===============================


 


பயணியின் புன்னகை ஆசி கந்தராசா கட்டுரைகள் குறித்து

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 29, 2016 11:31

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 11

[ 12   ]


யக்‌ஷவனத்திலிருந்து வில்லுடன் கிளம்பிய அர்ஜுனன் எங்கும் நில்லாமல் புரவிகளிலும் படகுகளிலுமாக பயணம்செய்து மூன்றாம்நாளே சப்தஃபலத்தை சென்றடைந்தான். அச்சிற்றூரைச்சுற்றி மண்குவித்து எழுப்பப்பட்டிருந்த சிறியகோட்டைவாயிலில் அவனை காவலர்தலைவன் சதமன் தடுத்தான். சதமனை நன்கறிந்திருந்த அர்ஜுனன் திகைப்புடன் “என்ன செய்கிறீர்? நீர் என்னை அறியமாட்டீரா?” என்றான். “எவராயினும் நிறுத்துக என்று எனக்கு ஆணை, பாண்டவரே” என விழிதிருப்பி சதமன் சொன்னான்.


சினத்தை அடக்கியபடி  “நான் இளைய யாதவரை பார்த்தாகவேண்டும், இப்போதே” என்று அர்ஜுனன் சொன்னான். “அவர் எவரையும் சந்திக்கவிருப்பமில்லை என்பது மாறா ஆணை. தேவியருக்கும் படைத்துணைவருக்கும் ஒற்றருக்கும்கூட முகம் மறுக்கப்படுகிறது” என்றான் சதமன். “மறுக்கவே முடியாத முகம் என்னுடையது, மூடா” என்று அர்ஜுனன் சீறினான். “விலகு, நான் அவரைச் சந்திக்கும் உலகில் பிறமானுடர் இல்லை” என்று சொல்லி வாயில் கடக்கப்போனான்.


சதமன் வாளை உருவி குறுக்கே நின்று “என் தலையறுத்திட்டபின்னரே நீங்கள் உள்ளே நுழைய முடியும், பாண்டவரே” என்றான். “அரசரின் ஆணைக்காக உயிர்கொடுப்பதே இப்போது என் கடன்.” அர்ஜுனன் திகைத்து நின்று அவனைக் கூர்ந்து நோக்கியபின் “என்ன இது? இதுபோல் ஒருநாளும் நிகழ்ந்ததில்லை” என்றான்.  அப்பாலிருந்து வந்த முதிய யாதவ வீரராகிய கலிகர் “மூத்தவர் பிரிந்துசென்றபின் அரசர் தன்னிலையில் இல்லை, பாண்டவரே. உடலுக்குள் அவர் அகம் மாறிவிட்டிருக்கிறது” என்றார்.


“நான் அறியாத அகம் ஒன்று அவரிடமில்லை. எனக்கு அதில் ஐயமே இல்லை. சென்று சொல்லுங்கள், நான் வந்திருக்கிறேன் என்று” என்று அர்ஜுனன் கூவினான். “அவரின்றி நான் இல்லை என்பதனாலேயே நானின்றி அவரும் இருக்கலாகாது. சென்று சொல்லுங்கள் நான் வந்துள்ளேன் என்று.” கலிகன் “எச்செய்தியும் தன்னருகே வரலாகாதென்றே அரசாணை உள்ளது. அதை நாங்கள் மீறமுடியாது” என்றான். “என் வருகையை அறிவிக்கவில்லை என்றால் உங்கள் அனைவருக்கும் அவர் அளிக்கும் தண்டனை எழும்” என்றான் அர்ஜுனன்.


“ஆணையை நிறைவேற்றுவதே எங்கள் பணி. அரசரின் சொல்லெண்ணி ஆய்ந்து நோக்குவதல்ல” என்றான் சதமன். அர்ஜுனன் பற்களை கடித்துக்கொண்டு  “நான் கடந்துசெல்கிறேன். யாதவநாட்டில் எனக்கு எல்லைகளில்லை என்று அவன் சொன்ன சொல் என் செவிகளில் உள்ளது” என்றான். அவன் அவர்களைக் கடந்துசெல்ல முயல வாளை உருவிய கலிகன் “தங்களை எதிர்கொண்டுநிற்க என்னாலோ யாதவப்படைகளாலோ இயலாது, பாண்டவரே. ஆனால் உங்கள் முன் தலையற்று விழ எங்களால் முடியும்” என்றான்.


அர்ஜுனன் தயங்க குரல் தழைத்து அவன் சொன்னான் “இளவயதில் உங்கள் வேட்டைத்துணைவனாக வந்தவன் நான். இதுவே நம் உறவின் முடிவென்றால் அவ்வண்ணமே ஆகுக!” .அர்ஜுனன் தளர்ந்த குரலில் “நான் என்ன செய்யவேண்டும் இப்போது?” என்றான். சதமன் பேசாமல் நின்றான். “என் பொருட்டு ஒன்றை மட்டும் செய்யுங்கள். நான் வந்திருக்கும் செய்தியை மட்டும் அவருக்கு அறிவியுங்கள்…” என்றான் அர்ஜுனன்.


கலிகரின் விழிகள் மெல்ல கனிந்தன. “அதுவே ஆணைமீறலாகும். ஆயினும் தங்களுக்காக அதைச்செய்து அதற்குரிய தண்டனையை அடைய நான் சித்தமே” என்றார்.  அர்ஜுனன் பெருமூச்சுவிட்டான். கலிகர் கோட்டைக்குள் செல்ல அர்ஜுனன் வெளியே நிலையற்ற உடலுடன் காத்து நின்றான். அந்தச் சிறுகோட்டையும் சூழ்ந்துள்ள மரங்களுமெல்லாம் இருளால் மூடப்பட்டுள்ளதாகத் தோன்றியது. கரிப்புகை படிந்த சுவரோவியம்போல. அது என்ன விழிமயக்கு என எண்ணிக்கொண்டான். மழைமூட்டமிருக்கிறதா என வானைநோக்கினான். கண்கூசவைக்கும் வெயிலே வானில் வளைந்திருந்தது.


இருநாழிகை கடந்தபின் கலிகர் திரும்பி வருவதை அவன் கண்டான். நெடுதொலைவிலேயே என்ன விடை எனத் தெரிந்துவிட்டது. அவன் அறிந்துவிட்டதை உணர்ந்த கலிகரின் நடையும் மாறுபட்டது. அருகே வந்ததும் கலிகர் அர்ஜுனின் வளைந்த புருவத்தின் முன் தலைவணங்கி “பொறுத்தருள்க பாண்டவரே, எவரையும் சந்திக்கும் நிலையில் இல்லை யாதவ மாமன்னர்” என்றார். “நான் வந்துள்ளேன் என்று சொன்னீரா?” என்றான் அர்ஜுனன், அவ்வினாவின் பொருளின்மையை உணர்ந்தபடியே.


“ஆம், அவர் காட்டிலிருந்தார். நான் அருகே சென்று பின்னால் நின்று தலைவணங்கி  ‘அரசே, தங்கள் தோழர் இளையபாண்டவர் முகம்காட்ட விழைவுகொண்டு வந்து நின்றிருக்கிறார்’ என்றேன். சீறித்திரும்பி ‘யார் நீ? உன்னிடம் ஆணையிட்டிருக்கிறேன் அல்லவா, எச்செய்தியும் என்னிடம் வரலாகாதென்று? ஆணையை மீற எப்படி துணிவுகொண்டாய்?’ என்று கூவினார். நான் பணிந்து ‘ஆம், ஆணையை மீறியமைக்கான தண்டம் என் தலைமேல் விழுக! இளைய பாண்டவர் என்பதனால்தான் நான் வந்தேன். அவர் தங்களில் ஒருபாதி என்று அறிந்த முதியவன் என்பதனால்’ என்றேன்.”


“இளையவர் குரலை அவ்வண்ணம் நான் கேட்டதேயில்லை, பாண்டவரே. ஒவ்வொருநாளும் அவர் உடலும் குரலும் விழிகளும் மாறிக்கொண்டிருக்கின்றன. ‘என்னுடன் எவரும் இல்லை. அவன் எவனாயினும் கிளம்பிச்செல்லும்படி சொல். ஆணை!’ என்றார். மீண்டும் ஒரு சொல்லெடுக்க எனக்கு துணிவிருக்கவில்லை. ஆயினும் என் உள்ளம் பொறாது  ‘அன்னையைத்தேடும் கன்றென வந்துள்ளார் பாண்டவர். அவர் கண்களின் துயர்கண்டே வந்தேன்’ என்றேன்.  ‘இங்குள்ள எம்மானுடருடனும் எனக்கு உறவில்லை. செல்… இக்கணமே செல்லவில்லை என்றால் உன் தலையை வெட்டி உருட்டுவேன்’ என்று கூவினார்.”


“அவர் முகம் வெறுப்பிலென சுளித்திருந்தது. கண்களில் பித்தெழுந்திருந்தது. உடல் நோய்கொண்டதென நடுங்கியது. தலைவணங்கி நான் மீண்டேன்” என்றார் கலிகர்.  அர்ஜுனன் நம்பாதவன் போல அச்சொற்களை கேட்டுநின்றான். பின் அவர் சொன்ன அனைத்தையும் ஒற்றைக்கணத்தில் தன்னுள் மீட்டெடுத்தான். “அவருக்கு என்ன ஆயிற்று?” என்றான். “அவரில் கூடிய தெய்வங்களே அதை அறியும்” என்றார் கலிகர். நீள்மூச்சுடன் “நான் திரும்பிச்சென்றேன் என்று அவரிடம் சொல்க!” என்றான் அர்ஜுன்ன். அவர்கள் மெல்ல தளர்ந்தனர்.


அர்ஜுனன் திரும்பிநடக்க கலிகர் “இளவரசே…” என்று பின்னால் நின்று அழைத்தார். திரும்பிய அர்ஜுனனிடம் “பொறுத்திருங்கள். அனைத்து மானுடர் வழியாகவும் அறியாத்தெய்வங்கள் கடந்துசெல்கின்றன. விண்பறப்பவரும் இருளூர்பவரும்…” என்றார். அர்ஜுனன் தலையசைத்தான். “இது ஒரு பருவம். இது கடந்துசெல்லும்.” அர்ஜுனன் “நான் வந்தது உடனடியாக அவர் போருக்குச் செல்லவிருக்கிறாரா என்று அறிவதற்கே” என்றான். “அறியேன். அவர் உள்ளம் செல்லும் வழியென்ன என்று எவராலும் உணரமுடியவில்லை” என்றார் கலிகர். “காலவர் வந்துசென்றபின்னரும் அவர் எதுவும் சொல்லவில்லை.”


அன்றிரவு மாற்றுருக்கொண்டு இருளுக்குள் காகமென அக்கோட்டைவாயிலை அர்ஜுனன் கடந்துசென்றான். நூறு புற்கூரைவீடுகள் மட்டும் கொண்ட அச்சிற்றூரின் தெருக்களினூடாக இருளிலும் நிழலிலும் கரந்து சென்று  ஊரின் மையமாக அமைந்த மரப்பட்டைக்கூரையிட்ட மாளிகையை அடைந்தான். அதனுள் புகுவது அவனுக்கு மிக எளிதாக இருந்தது. அங்கே விளக்கெரிந்த மாடியறையே யாதவருக்குரியது என உய்த்து படிகளைத் தவிர்த்து உத்தரச் சட்டங்களில் தொற்றி அங்கே சென்றான்.


அறை வாயிலருகே நின்றிருந்த காவலனை ஒலிகாட்டி திரும்பச்செய்து அவன்  விழிசலித்த கணத்தில் உள்ளே நுழைந்தான். அவன் காலடியோசை கேட்டு இளைய யாதவர் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தார். அவர் அமர்ந்திருந்த மஞ்சமெங்கும் ஏடுகள் சிதறிக்கிடந்தன. எழுந்தபோது அவை தரையில் விழுந்து பரவின. இளைய யாதவரின் உடல் நடுங்கிக்கொண்டிருக்க கண்கள் நிலையற்று உருள்வதைக் கண்ட அர்ஜுனன் “இளையவரே, நான்… தங்கள் தோழன்” என்று தணிந்த குரலில் சொன்னான்.  “எவர் உன்னை உள்ளே விட்டார்கள்? எப்படி வந்தாய்? யாரது?” என்று இளைய யாதவர் பதறினார்.


திகைப்புடன் அவருடைய அழுக்குடலையும் சிக்குகொண்ட கூந்தலையும் மெலிந்த தோள்களையும் தாடிபடர்ந்த முகத்தையும் நோக்கிய அர்ஜுனன் “இளையவரே, தங்களை சந்திப்பதற்காக வந்தேன்” என்றான். “நான் எவரையும் சந்திப்பதாக இல்லை. என்னை தனிமையில் விடுக! செல்…” என்று அவர் வெளியே கைசுட்டி சொன்னார். “நீங்கள் இருக்கும் நிலை புரிகிறது, இளையவரே. உங்கள் உள்ளம் இருள்கொண்டிருக்கிறது. நானும் கடந்துசென்ற இருள்தான் அது… ஆனால் ஒளியிலும் இருளிலும் நான் உங்களுடன் இருந்தாகவேண்டும்..” என்றான் அர்ஜுனன்.


“வெளியே போ… வெளியே போ” என்று கைசுட்டி பித்தன்போல இளைய யாதவர் கூச்சலிட்டார். “யாரங்கே? இவனை உள்ளே விட்டது யார்? யாரது?” வாயிலில் வந்து நின்ற காவலன் அர்ஜுனனைக்கண்டு திகைத்து வெளியே சென்று கூவி தோழர்களை அழைத்தான். அர்ஜுனன் மேலும் அமைதிகொண்டு “என்ன நிகழ்கிறதென புரிகிறது, யாதவரே. தனிமையை விழைந்தால் அதிலிருங்கள் சின்னாள். நான் பின்னர் வந்து பார்க்கிறேன். ஆனால் இத்தருணத்தில் பெருமுடிவுகள் ஏதும் தேவையில்லை” என்றான்.


அவன் அருகே செல்ல இளைய யாதவர் பற்களைக் கடித்தபடி பின்னால் சென்றார். “அரசே, கந்தர்வன் ஒருவனைக் கொல்ல நீங்கள் வஞ்சினம் உரைத்தீர்கள் என்று அறிந்தேன். ஆராயாது எடுத்த முடிவு அது. வேண்டாம். அவன் பிழையேதும் செய்யவில்லை. அது காலவ முனிவர் கொண்ட பிழைப்புரிதல். அதை அவரிடமே நான் பேசுகிறேன். அவன் அவர் கால்தொட்டு சென்னிசூடி மன்னிப்பு கோருவான்…” என்றான்.


“நீ எதற்கு இதைப்பேசுகிறாய்? நீ யார் இதைச் சொல்ல?” என்றார் இளைய யாதவர். “அவன்பெண்டிர் என்னை வந்து கண்டு அடைக்கலம் கோரினார். அவன்பால் பிழையில்லை என்று கண்டு நான் அவருக்கு சொல்லளித்தேன்.” பற்கள் தெரிய இளிப்பதுபோல் சீறியபடி “எது பிழை என்று முற்றறிந்துவிட்டாயா? உன் புல்லறிவை எனக்கு அளிக்கும்பொருட்டு வந்தாயா?” என்றார் இளைய யாதவர். படீரென தன் நெஞ்சை ஓங்கியறைந்தபடி உரத்த குரலில் “துவாரகையின் அரசன் உன் சொல்கேட்டுத்தான் மெய்யும் பொய்யும் அறியவேண்டுமா?”


அர்ஜுனன் என்ன நிகழ்கிறதென்றே அறியாதவனாய் தவித்தபடி “இல்லை, அவ்வாறில்லை. யாதவரே, என்னை நீங்கள் அறியமாட்டீர்களா? இதை நாம் பேசி முடிவுசெய்வோம். தாங்கள் முந்தி படையாழி கைக்கொள்ளவேண்டியதில்லை” என்றான். “கைக்கொண்டால் நீ என்ன செய்வாய்?” என்றபடி இளைய யாதவர் அருகே வந்தார். வெறிச்சிரிப்பு போல சினம் கொண்ட முகம் சுளித்திருந்தது. “என்னை நீ என்ன செய்வாய்? அவ்விழிமகனுக்கு அடைக்கலம் கொடுக்கையில் நீ அறிந்தாயல்லவா அவனை நான் கொல்வேன் என வஞ்சினம் உரைத்தேன் என்று?”


அர்ஜுனன் கைநீட்டி அவர் கைகளை பற்றப்போனான். “இல்லை இளையவரே, உண்மையிலேயே எனக்குத்தெரியாது தாங்கள் அவ்வாறு வஞ்சினம் உரைத்தீர்கள் என்று. அறத்தைச் சொல்லி அவர்கள் கோரியமையால் மட்டுமே வாக்களித்தேன். மங்கலம் நிறைந்த பெண்ணின் முகம் கண்டு அவ்வறத்தை நான் உறுதிசெய்துகொண்டேன்” என்றான்.


அவன் கையைத் தவிர்த்து “எப்படி அந்த வாக்கை அளித்தாய் நீ? இழிமகனே சொல், எப்படி அளித்தாய் அந்த வாக்கை? அவனைக் கொல்வதாக வஞ்சினம் உரைத்தவர் எவரென அறியாமல் அவ்வாக்கை அளிக்கும் துணிவை எப்படி கைக்கொண்டாய்?” என்றார் இளைய யாதவர். அவன் கண்கள் விரிந்து அதற்குள் விழிகள் உருண்டன. “இப்புவியில் எவர் வந்தாலும் எதிர்நிற்கமுடியும் என நினைத்தாய் அல்லவா? நீ இப்புவியின் அறமனைத்தையும் காக்கப்பிறந்தவன் என்று எண்ணினாய் அல்லவா? சிறுமதியனே, நீ யார்? அஸ்தினபுரி என்னும் சிற்றசரின் இளவரசன். அதையும் இழந்து காடுசேர்ந்து இரந்துவாழும் கோழை. எப்படி அந்த உறுதியை அவளுக்களித்தாய்? உனக்குமேல் இப்புவியில் எவருமில்லை என்று எண்ணினாயா?”


அர்ஜுனன் பற்களைக் கடித்து ஒருகணம் தன்னை இறுக்கி கட்டுப்படுத்திக்கொண்டு பின் பெருமூச்சுடன் மெல்ல தளர்ந்தான். “இவை ஏன் நிகழ்கின்றன என்று நானறியேன். எங்கோ எதுவோ பிழைபட்டுவிட்டது. இச்சொற்கள் உங்களுக்குரியவை அல்ல” என்றான். திரும்பிச்செல்ல அவன் உடல் அசைந்ததும் அவன் தோளைத்தொட்டு திருப்பி தன் முகத்தை அவன் முகமருகே கொண்டுவந்து உற்றுநோக்கி இளைய யாதவர் சொன்னார் “அஞ்சி ஓடாதே. நீ ஆண்மகனுக்குப்பிறந்தவன் என்றால் அஞ்சி பின் திரும்பாதே. அடைக்கலம் கொடுக்கையில் நீ அறிந்திருக்கவில்லை நானென்று. இன்று என் ஆழி எதிர்எழுகிறதென அறிந்ததும் என்னிடம் வந்து மன்றாடுகிறாய்.”


“நான் எவரையும் அஞ்சவில்லை” என்றான் அர்ஜுனன். “ஆம் நீ அஞ்சமாட்டாய். ஏனென்றால் நீ மாவீரனான பாண்டுவின் மைந்தன் அல்லவா? ஆண்மையின் உச்சத்தில் நின்று அவன் பெற்ற மைந்தன் அல்லவா?” என்று வெறுப்புடன் இளைய யாதவர் நகைத்தார். உடல்நடுங்க அவர் கைகளைப்பற்றியபடி “இளையவரே, வேண்டாம். இதற்குமேல் சொல்லெடுக்கவேண்டாம்” என்றான். அக்கைகளை வீசியடித்து உரக்க “சொல்லெடுத்தால் என்ன செய்வாய்? வில்லெடுத்து என் தலைகொய்வாயா? முடிந்தால் அதைச்செய். செய் பார்ப்போம்” என்று கூவினார் இளைய யாதவர்.


அர்ஜுனனின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அவ்விழிகளில் இருந்த வன்மையை அவனால் விழிதொட்டு நோக்கமுடியவில்லை. “அறிவுடையவன் என்றால் ஆய்ந்து முடிவெடுக்கவேண்டும். ஆணென்றால் எடுத்த முடிவுக்காக உயிர்துறக்கவேண்டும். நீ பேடு. உன் தந்தைக்கு சிறந்த மைந்தன்தான். போ, போய் பெண்ணுருக்கொண்டு பெண்களுடன் புனலாடு. பெண்டிரின் ஆடை அணிந்து அரங்கேறி நடனமாடு. போ!”


ஒருகணம் அது இளைய யாதவரேதான் எனத் தோன்றிவிட்டது. உயிருடன் உறவுகொண்ட நண்பனே அப்படி உட்புகுந்து அறியமுடியும். உயிர்துடிக்கும்படி நரம்புமுடிச்சில் கைவைத்து கொல்லமுடியும். அப்படியென்றால் தோள்தழுவிக் களியாடுகையிலும் ஒரு உளமூலை இவற்றையெல்லாம் அள்ளி எண்ணிச் சேர்த்துக்கொண்டிருக்கிறது. சிரிப்புக்கும் கனிவுக்கும் அப்பால் படைக்கலம் கூர்கொண்டபடியே இருந்திருக்கிறது. இவரும் இவ்வாறென்றால் இப்புவியில் எஞ்சுவதுதான் என்ன? நெஞ்சுவிம்ம விழிநீர்திரள அவன் முற்றிலும் தளர்ந்து விழுபவன் போலானான்.


“என்ன சொன்னாய், பெண்ணுக்கு சொல்லளித்தாயா? அவைநடுவே தன் தேவியை இழிவடையவிட்டு நோக்கி நின்ற புல்லன். நீயா பிறிதொரு பெண்ணைக் காக்க உயிர்கொடுக்கப்போகிறாய்?” அர்ஜுனன் “இளையவரே, வேண்டாம். அளிகூருங்கள்… வேண்டாம்” என்று உடைந்த குரலில் சொன்னான். “ஆ! ஏன் நீ நின்றாய் என்று அறியாதவனா நான்? அவள் உளம்நிறைந்த கர்ணன் அவளை இழிவுபடுத்தட்டும் என்று காத்து நின்றாய். அவள்  பீமனைக் கடந்து உன் காலில் வந்து விழுந்து அடைக்கலம் கோரட்டும் என்று நோக்கி நின்றாய். அன்பும் அறமும் எங்கே? உன்னுள் மலமெனப் புளித்து நாறுவது ஆண்மையின் வெற்றாணவம் அல்லவா?”


அவன் இளைய யாதவரின் விழிகளையே பதைப்புடன் நோக்கினான். அவனறிந்த எவரும் அங்கில்லை. அவை ஒருகணமும் நிலைகொள்ளாமல் உருண்டன. காட்சியென எதையும் அள்ளமுடியாதவை போல. அவன் பற்களை இறுகக் கடித்து கைமுட்டிகளை முறுக்கி கண்களின் மென்நரம்புகள் வழியாக குருதி சூடாகப் பெருகிச்செல்ல நின்றான். “சொல், உன் குரல் எங்கு போயிற்று?” என்றார் இளைய யாதவர். அவன் இதழ்கள் மட்டும் வலியுடன் அசைந்தன. “நான் சொல்லவா? அவைநடுவே ஆடைகளையப்பட்டது உன் அன்னை. அவையமர்ந்து நோக்கி நின்றிருந்தவர் விதுரர்…” இளைய யாதவர் தன் தொடையில் ஓங்கி அறைந்தபடி வெடித்துச் சிரித்தார்.


“போதும்!” என்று அர்ஜுனன் கூவினான். “போதும், இனி சொல்லில்லை” என்றான். “ஆம், சொல் இல்லை. சொல்லே வேண்டியதில்லை. செல். ஆணென்றால் வில்லுடன் வா” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் பற்களை கடித்துக்கொண்டு முகம்தூக்கி “வருகிறேன். சித்ரசேனன் என் காவலில் இருப்பான். எவரும் அவனை தொடப்போவதில்லை. எதிர்வரும் எவரும் என் எதிரிகளே. வில்லுண்டு, காண்டீபம் அதன் பெயர்” என்றபின் அர்ஜுனன் திரும்பி வாயிலில் நின்ற காவலரை விலக்கி அறையை விட்டு வெளியே சென்றான்.


அவனுக்குப்பின்னால் காலடிகள் ஒலிக்க ஓடிவந்த இளைய யாதவர் “நான் என் படையாழியுடன் வருகிறேன். முடிந்தால் அவனைக் காப்பாற்று. எதிரே நீ நின்றால் உன் தலையறுத்து உருட்டிவிட்டு அவனைக் கொன்று எரிப்பேன். அந்நீறை என் நெஞ்சிலும் நெற்றியிலும் சூடி நின்றாடுவேன். ஒரு பேடியை வென்று நிற்க என் படையாழிக்கு அரைக்கணமே போதும்” என்றான். உரக்க நகைத்தபடி “உன்னைக் கொல்லும்போதே நான் என் இறுதி முடிச்சையும் அவிழ்க்கிறேன். இங்கு என்னை கட்டிவைக்கும் ஏதுமில்லை பின்னர்” என்றார்.


திரும்பிப்பார்க்காமல்  அர்ஜுனன் படிகளில் இறங்கினான். வழியெங்கும் அவன் சந்தித்த அத்தனை யாதவர்விழிகளும் திகைப்புகொண்டிருந்தன. அரண்மனையைவிட்டு வெளியே வந்து இருண்ட முற்றத்தில் பந்தங்களின் செவ்வொளி சூழ்ந்த வெறுமையில் இறங்கி நின்றபோது அனைத்தும் கனவெனத் தோன்றியது. மறுகணமே நகைப்பும் எழுந்தது.


[   13   ]


அர்ஜுனன் யக்‌ஷவனத்திற்குத் திரும்பியபோது அவனிடம் ஏற்பட்டிருந்த மாறுதலை சகதேவன் மட்டுமே  உணர்ந்தான். பீமனும் அர்ஜுனனும் பிறரிடமிருந்து தனித்தலையும் வழக்கம் கொண்டவர்கள் என்பதனால் அவர்களின் துயரம் எப்போதுமே சொல்லில் பகிரப்படுவதில்லை. ஆயினும் மூத்தவர்களின் ஓரிரு அசைவுகளிலேயே அவர்களின் உள்ளறியும் ஆற்றல் சகதேவனுக்கு இருந்தது.


அர்ஜுனன் சென்றது எங்கு என அவன் அறியவில்லை. ஆனால் வந்து சேர்ந்த முதல்நாள் உணவருந்த கைகழுவி வந்து அமர்ந்தபோதே அவன் தமையனின் உள்ளத்துயரை உணர்ந்துகொண்டான்.


அன்றிரவு அர்ஜுனன் தன் வில்லுடன் காட்டுக்குள் சென்றபோது சற்றுதொலைவில் சகதேவனும் தொடர்ந்து சென்றான். நெடுந்தொலைவுவரை இளையவன் வருவதை அர்ஜுனன் உணரவில்லை. நீர்நிலையொன்றின் அருகே அவன் நின்றபோதுதான் விழிப்புகொண்டு பறவைக்குரல்களை அறிந்தான். வில்லுடன் திரும்பியபோது சகதேவன் அருகணைவதைக் கண்டு புருவம் சுருக்கி காத்து நின்றான். அவனை நெருங்கி வணங்கிய சகதேவன் “தாங்கள் தனிமையில் செல்வதால் உடன் வந்தேன், மூத்தவரே” என்றான்.


“நான் எப்போதும் தனிமையில்தான் செல்கிறேன்” என்றான் அர்ஜுனன். “இல்லை, எப்போதும் இளைய யாதவர் உடனிருக்கிறார்” என்று சகதேவன் சொன்னான். “ஆகவேதான் தங்களுடன் பிற எவரும் அருகணைய முடியாமலிருக்கிறது. உடன்பிறந்தோர் நால்வரும். மணந்த தேவியரும் மைந்தரும்கூட.” அர்ஜுனன் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். பின்னர் “நீ எளிதில் தொட்டுவிடுகிறாய், இளையோனே. இன்று நீயே எந்தையின் வடிவாக எங்களுள் இருக்கிறாய். உன்னிடம் நான் சொல்லியாகவேண்டும்” என்றான். சகதேவன் புன்னகைத்தான்.


“நான் இளைய யாதவரை இழந்துவிட்டேன்” என்று அர்ஜுனன் தரைநோக்கியபடி சொன்னான். சகதேவன் எம்மறுமொழியும் சொல்லாமை கண்டு விழிதூக்கி நோக்கினான். அவன் புன்னகையுடன் “அவ்வாறு இழக்கப்படும் உறவல்ல அது, மூத்தவரே” என்றான். அர்ஜுனன் “உறவுகளில் அப்படி ஏதேனும் உண்டா என்ன? அவர் இங்குவருகையில் தமையனை இழந்த துயரை சுமந்துவந்தார். காவடியின் மறுஎடையாக என்னை இழந்த துயரை வைக்க விழைகிறார் போலும்” என்றான்.


“அது வெறும் குருதியுறவு” என்றான் சகதேவன். “குருதியுறவென்பது ஒரு தொடக்கம் மட்டுமே. மண்ணில் வாழ்க்கை குருதித்தொடர்புகளால் நிகழவில்லை. இங்கு நிகழும் லீலையை கர்மஜாலா என்கின்றனர் நூலோர். எனவே உறவுகளனைத்தும் கர்மபந்தங்கள் மட்டுமே.” அர்ஜுனன் அவன் சொல்வதை நோக்கிக்கொண்டிருந்தான். உரிய சொற்களை மட்டுமே எடுத்துக்கோக்க அவனால் எப்படி முடிகிறது? ஏனென்றால் அவன் உணர்வுகளை அவற்றுடன் இணைத்துக்கொள்வதில்லை.


“செயல்வலையில் சிக்கிய மானுடருக்கு செயலுறவே மெய். நீங்கள் அவ்வாறு இணைக்கப்பட்டவர்கள்” என்று அவன் மீண்டும் சொன்னான். “இப்போது நிகழ்வதென்ன என்று நீ அறியமாட்டாய், இளையோனே. நானும் அவரும் களம்குறித்துவிட்டோம். இருவரில் ஒருவரே எஞ்சுவோம்” என்றான் அர்ஜுனன். அவன் சொல்வதை கூர்ந்து நோக்கியபின் சகதேவன் மீண்டும் புன்னகைத்தான்.


“சொல், இவற்றுக்கெல்லாம் என்ன பொருள்?” என்று அர்ஜுனன் கேட்டான். “அபஹாரம் என்று இதை நிமித்திகமெய்நூல் சொல்கிறது, மூத்தவரே. மானுட வாழ்க்கை என்பது இப்புவியை ஆளும் பெருவல்லமைகளினால் ஆட்கொள்ளப்படுவதே. வெற்றியால் புகழால் செல்வத்தால் காதலால் வஞ்சத்தால் அச்சத்தால் சிறுமையால் ஆட்கொள்ளப்பட்டுத்தான் இங்கு அத்தனை மானுடரும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவருடைய ஆட்கொள்ளல் என்ன என்று என்னால் அறியமுடியவில்லை. ஆனால் அதுவும் இயல்பென்றே நூலறிந்த நெஞ்சால் உணர்கிறேன்.”


“என்னை அச்சுறுத்துகிறது அந்த வஞ்சம்” என்று  அர்ஜுனன் சொன்னான். “பிற எவரும் என்னை இப்படி வெறுக்க இயலாது. பிறிதெவ்வகையிலும் என் மேல் இப்படி நச்சுமிழமுடியாது.” சகதேவன் சிரித்து “ஆம், அவர் ஒருவரே உங்களை உட்கடந்து கொத்த முடியும். நீங்கள் அவரையும் அவ்வண்ணம் செய்யலாம்” என்றான். “நானா, அவரையா? நீ அவ்வாறு நிகழுமென எண்ணுகிறாயா?” சகதேவன் “இது நிகழுமென முன்நாள் வரை எண்ணியிருந்தோமா?” என்றான். “ஒருநாளுமில்லை. என் நெஞ்சில் அன்னையூட்டிய முலைப்பால் எஞ்சியிருக்கும் வரை அது நிகழாது” என்றான்.


சகதேவன் மறுமொழி சொல்லவில்லை. அர்ஜுனன் சட்டென்று இளையோனின் கைகளை பற்றிக்கொண்டான். “இளையோனே, எனக்கு அச்சமாக உள்ளது. உண்மையிலேயே அது நிகழவும் கூடும். என்னை ஆள்வது எந்த தெய்வமென்று நான் அறியேன்” என்றான். அக்கைகளை நெரித்தபடி “அவ்வாறு நிகழுமென்றால் அதற்கு முன்னரே நான் இறக்கவேண்டும். அதைநான் செய்தேன் என்று என்னை நோக்கி நான் இழிவுகொள்ளலாகாது… நான்  அஞ்சுகிறேன், இளையோனே” என்றான்.


“அது நிகழட்டும்” என்று சகதேவன் சொன்னான். “அணுக்கங்கள் அப்படி ஓர் எல்லையில் முட்டிக்கொண்டாகவேண்டும். குருதியும் சீழுமென மீண்டும் தழுவிக்கொண்டாகவேண்டும்.” அர்ஜுனன் “என்ன சொல்கிறாய்?” என்றான். “நட்பின் கெடுமணம் இது, மூத்தவரே” அர்ஜுனன் தளர்ந்து கைகளை விட்டுவிட்டு இருளை நோக்கி திரும்பிக்கொண்டான். “இனித்தினித்து அறிந்தீர்கள். இனி கசந்து கசந்து அறிவீர்கள். அறிதல் அணுக்கத்தையே உருவாக்கும்” என்றான் சகதேவன்.


“எல்லா உறவுகளிலும் இத்தகைய ஒரு தருணம் நிகழும் என்று எண்ணுகிறாயா?” என்றான் அர்ஜுனன். “நிகழுமென்றால் ஒரு புதியஆழம் வெளிப்படுகிறது” என்றான் சகதேவன். நெடுநேரம் தன்னுள் ஆழ்ந்து தனித்து நின்றபின் மீண்ட அர்ஜுனன் “எத்தனை பெரிய ஆடல்” என்றான். “ஆம்” என்று சகதேவன் சொன்னான் “நிமித்திகக் கலை அதன் நுனியை அறிய முழுவேதத்தையும் எடுத்தாள்கிறது.”


“இளையோனே, இப்போர் நிகழுமென்றால் என்ன ஆகும்?” என்றான் அர்ஜுனன். “நீ உன் நிமித்திகநூலைக்கொண்டு சொல்!” சகதேவன் “ஒவ்வொரு செயலுக்கும் நிமித்திகநூலை அணுகுபவர் மூடர். உங்கள் பிறவிக்கணக்கை நான் நோக்கிவிட்டேன். நன்றே நிகழும்” என்றான். “நான் என்ன செய்வது?” என்றான் அர்ஜுனன். “மூத்தவரே, உங்களிருவரையும் சுழற்றிச்செல்லும் அப்பெருக்குக்கு உங்களை ஒப்படையுங்கள்.” அர்ஜுனன் சிலகணங்கள் எண்ணியபின் “ஆம், வேறுவழியில்லை” என்றான்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 10
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 43
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 42
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 41
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 22
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 60
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 44
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 41
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 24
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 39
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 69
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 88
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 29, 2016 11:30

October 28, 2016

ஒரு மன்னிப்பு

வங்கி முதலிய சேவையிடங்களில் [நான் பணியாற்றிய நிறுவனத்திலும்கூட] மிகப்பெரிய பணிச்சிக்கல் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் எதையுமே கற்றுக்கொள்ள மறுக்கும்  ஊழியர்கள். மீண்டும் மீண்டும் அவர்களுக்குப் பயிற்சிகள் கொடுக்கிறார்கள். ஆனால் பயனிருக்காது. கவனக்குறைவு, அலட்சியம் இரண்டினாலேயே அனேகமாக வேலைக்குத்தகுதியற்றவர்கள். இவர்களில் மதுஅடிமைகள், நடுவயது கடந்த பெண்கள் அதிகம்.


 


ஆனால் தொழிற்சங்க உரிமைகள் இவர்களைப் பாதுகாக்கின்றன – தொழிற்சங்கத்தில் இருந்தவரை நானும் அதை ஆதரித்திருக்கிறேன். இது இன்றைய அரசுத்துறைகளில் உண்மையிலேயே உள்ள மிகப்பெரிய சிக்கல்.இவ்விருசாராரையும் பற்றி பலமுறை எழுதியும் இருக்கிறேன்.


 


இந்தப்பக்கம் மக்களுடன் மக்களாக நின்று பார்க்கையில் இது மிகப்பெரிய வதை. உண்மையை ஓரளவேனும் ஒத்துக்கொள்ளக்கூடிய எவருக்கும் இது தெரியும். அரசியல்சரிகளைப் பேசுவது வேறு விஷயம். அதைப்பேச வேறு பலர் இருக்கிறார்கள். என் அனுபவம், எண்ணத்தையே நான் எப்போதும் பேச நினைக்கிறேன். கூடுமானவரை என் எழுத்து என்பது நேரடியான உணர்வுப்பதிவுதான். நான் என்னை ஆன்றடங்கிய சிந்தனையாளனாக எப்போதும் முன்வைப்பதில்லை, நான் அப்படிப்பட்டவன் அல்ல. நான் உணர்வுரீதியான எழுத்தாளன் மட்டுமே.


 


அன்றுகாலை வங்கியில் எனக்கு ஏற்பட்ட இதே போன்ற அனுபவம் அது சார்ந்து வந்த மின்னஞ்சலுடன் சேர்ந்துகொண்டதனால் எரிச்சலில் இட்ட பதிவு அது. அந்தப்பதிவின் கோபமான சொற்கள் பிழையானவை என்று உணர்கிறேன்.  பி.ஏ.கிருஷ்ணன், இரா முருகன் போன்றவர்கள் எழுதியிருந்தனர். ஆகவே அப்பதிவை நீக்கும்படிச் சொன்னேன் [நான் காஞ்சிபுரம் வேலூர் பகுதியில் சமணக்கோயில்களைப் பார்க்கும் பயணத்திற்குப்பின் இன்றுகாலை தான் நாகர்கோயில் வந்தேன்]  . அதனால் புண்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்.


 


எப்படியானாலும் நாளும் வசை வருகிறது. உரிய காரணத்தோடு வசை இப்படி எப்போதாவதுதான் வருகிறது. அந்தவகையில் நல்லதே


 


*


 


ஜெ


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 28, 2016 17:40

தீபாவளி யாருடையது?

 


index


அன்புள்ள ஜெ


நலமா? இந்திய மரபு, ஆன்மிக சிந்தனைகள், தத்துவங்கள் என உங்களின் பல தரவுகளை படித்து இருக்கிறேன், படித்தும் வருகிறேன். வெகு நாட்களாக மன ஆழத்தில் இருக்கும் கேள்வி இது, ‘தீபாவளி’ தமிழர் பண்டிகை இல்லையா? இது வட நாடு சென்று தென் நாடு மீண்ட ஒரு பண்டிகையா உண்மையில்? நமது தீப ஒளி பண்டிகையான ‘கார்த்திகை’ தீபத் திருவிழாவின் வட நாட்டு வடிவமா? நரகன் என்பவனே , தேவ அசுர மோதல்கள் என புனையப்படும் ஆரிய திராவிட இன குழுக்களின் மோதல்களில் திராவிட இனச் சார்பாக நின்ற மாவீரனின் படிமமா? நமது இன அழிப்பை (தொன்ம வரலாறு அல்லது புராணத்தின் படி) நாமே கொண்டாடும் ஒரு இழிவான பண்டிகையா? அனைத்துக்கும் மேலாக, ஒருவனது இறப்பை நாம் கொண்டாடலாமா? நாம் பண்பட்டவர்கள் இல்லையா? என்றும் எனக்குள்ளும் எனக்கு வெளியேயும் கேள்விகள் பல, விடை தேடி உங்களிடம் மீண்டும் நான்.


அன்புடன்

சக்திவேல், சென்னை


indexஅன்புள்ள சக்திவேல்,


 


பல வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தின் அரசியலில் சிலவகையான துருவப்படுத்தல்கள் உருவாயின. முதலில் உருவானது பிராமணர்கள் பிராமணரல்லாத உயர்சாதியினர் என்ற துருவங்கள். அன்று பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைத்து எல்லா அதிகாரங்களிலும் ஊடுருவியிருந்த பிராமணர்களுக்கு எதிராக அதிகார விருப்பு கொண்ட பிற உயர்சாதியினர் உருவாக்கிய அரசியல் உத்தி அது.


நிலப்பிரபுத்துவ அதிகாரத்தை ஆயிரம் வருடம் ஆண்டுவந்த பிராமணாரல்லா உயர்சாதியினர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அறிமுகமாக ஆரம்பித்த முதலாளித்துவத்தின் முன் அதை மெல்லமெல்ல இழக்க ஆரம்பித்தார்கள். இன்று பூரணமாக இழந்தும் விட்டார்கள். அதற்கு எதிராக அவர்கள் முன்னெடுத்த கடைசி அரசியல் போராட்டமே பிராமணரல்லா இயக்கம்.பின்னர் அவ்வியக்கம் அன்று பொருளியல் பலத்துடன் உருவாகி வர ஆரம்பித்திருந்த பிற்படுத்தப்படுத்தபட்டோருக்கான இயக்கமாக ஆகியது. பிராமணர் – பிற்படுத்தப்பட்டோர் என்ற துருவப்படுத்தல் உருவாகி இன்றும் நீடிக்கிறது.


இந்த துருவப் படுத்தலுக்கான கருத்துத் தளமாக உருவாக்கப் பட்டதே ஆரிய- திராவிட வாதம். ஓரிரு கிறித்தவப் பாதிரிகளால் உருவாக்கப்பட்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பரப்பப்பட்ட அந்த வாதம் இன்றுவரை எந்த வகையான வரலாற்று ஆதாரமும் இல்லாத வெற்று ஊகம் மட்டுமே. அன்று விவேகானந்தர் முதல் டாக்டர் அம்பேத்கார் வரையிலான ஆய்வாளர்களால் அபத்தம் என முழுமையாகவே மறுக்கப்பட்ட ஒன்று அது. இன்று மார்க்ஸியநோக்குள்ள ஆய்வாளர்கள்கூட அதை ஏற்க தயங்குமளவுக்கு அது விரிவாகவே ஆய்வுத்தளத்தில் மறுக்கப்பட்டுவிட்டது.


அந்த ஆரிய-திராவிட வாதத்தை இன்னமும் எளிமையாக்கி பிராமணர்- திராவிடர் என்று பிரித்து அதனடிப்படையில் மொத்த தமிழ்ப்பண்பாட்டையே ஒன்றுடன் ஒன்று முரண்படும் இரு கூறுகளாக உருவகித்துக்கொண்டார்கள். இந்த உருவகம் எந்தவகையிலும் வரலாற்று அடிப்படைகொண்டதல்ல. முழுக்கமுழுக்க அரசியல் சார்ந்த ஒன்றே. ஆனால் சிறு வயது முதலே நாம் இதைக்கேட்டு வருவதனால் இதைப்பற்றி ஆராய்வதில்லை. இனிமேலாவது கொஞ்சம் தமிழுணர்வுடன், கொஞ்சம் வரலாற்று நோக்குடன் இவற்றையெல்லாம் நாம் பேச ஆரம்பிப்பது நல்லது.


எதிர்மறையாக மட்டுமே வரலாற்றையும் பண்பாட்டையும் அணுகுவது, எதிரிகளை கண்டுபிடித்துப்பெருக்கிக் கொண்டே செல்வது, நம்மை தூய மேன்மையான மக்கள் ஆகவே ஒடுக்கப்பட்டோம் என சுயபரிதாபம் கொள்வது, அதை வன்மமாக ஆக்கிக்கொள்வது போன்றவை ஒருவகை மனநோய். சிந்தனையின் ஒருகட்டத்தில் அது நம்மை பீடிக்கிறது. ஏனென்றால் கருத்துலகாக நம்மைச்சூழ்ந்திருக்கும் எண்ணங்களில் பெரும்பகுதி இப்படிப்பட்டவை


அவற்றை நம் பொதுப்புத்தியால், வரலாற்று அறிவால் வென்று மீண்டு வராதவரை நாம் இருப்பது அறியாமை இருளில். மிகையுணர்ச்சிகளின் சேற்றில்.நம் நுண்ணுணர்வு, தர்க்கத்திறன் அனைத்தும் அதில் வீணாகிவிடும். அப்படி அறிவுலகில் செயல்படுவது பெரும் நரகம்.


 


*


 


வரலாறு குறித்த ஒரு பொதுப்புரிதல் நமக்குத்தேவை. அது மானுடர் வாழ்வதற்காக நிகழ்த்திய பெரும் போராட்டத்தின் விளைவு. பல்வேறு மோதல்களும் தழுவல்களுமாக உருவாகி வந்த ஒன்று. கொடுத்தும் பெற்றும் உருவானவையே அனைத்துப் பண்பாட்டுருவங்களும். அது ஒரு சிக்கலான முரணியக்கம். அதை முழுக்கப்புரிந்துகொள்வதும் தீர்ப்புகளை அளிப்பதும் எவராலும் இயலாதது.நாம் அதை நாம் வாழும் களத்தில் இன்றையதேவை மற்றும் உணர்ச்சிகளைக்கொண்டே புரிந்துகொள்கிறோம்.


 


ஆகவே நாம் செய்யக்கூடுவது நாம் புரிந்துகொள்வதன் எல்லைகளைப் பற்றிக் கவனத்துடன் இருப்பதே. வரலாற்றைக்கொண்டு வெறுப்பையும் கசப்பையும் சமைத்துப்பரிமாறாமலிருப்பதே. காலப்பயணம் செய்து வரலாற்றை மாற்றியமைக்க எவராலும் இயலாது. கடந்துசென்ற வரலாற்றிலிருந்து ‘தூய’ சரடுகளை , இன மத மொழி பண்பாட்டுக்கூறுகளை இன்று பிரித்தெடுக்கவும் முடியாது. அவ்வாறு எண்ணுபவர்களைப் பேதைகள் என்றே சொல்வேன்


 


ஆனால் பேதைகள் பலசமயம் வெறுப்பைப் பரப்பி  நிகழ்காலத்தில் உள்ள வணிகப்போரின் கருவிகளாக ஆகி விடுவார்கள்.பேரழிவை உருவாக்குவார்கள். நாம் நமக்குச் சுற்றும் பார்க்கலாம். கீழைச்சமூகங்களில் ஒரு அறிவுஜீவிக்கும்பல் இனம், மொழி,மதம் என்னும் பெயரால் அழிவு அழிவு என்றே கோரிக்கொண்டிருக்கிறது. மேலும் மேலும் அழிவு வராமல் அவர்களால் அடங்கமுடியாது என்றே தோன்றுகிறது. இந்த ஒளித்திருநாளின் நாம் நம் உள்ளத்தில் ஒளியை ஏற்றிக்கொள்வோம்


 


*


 


பொதுவாக பண்டிகைகள் எவையுமே சட்டென்று உருவாவதில்லை. புதிதாக எவராலும் கொண்டு வரப்படுவதும் இல்லை. அவை ஏதோ ஒருவகையில் பழங்குடி வாழ்க்கையில் இருந்துகொண்டிருக்கும். ஆகவே அவற்றுக்கு ஆழ்மனம் சார்ந்த குறியீட்டு முக்கியத்துவம் இருக்கும். பின்னர் அவை புராணக்கதைகளை உருவாக்கிக் கொள்ளும். தத்துவ விளக்கம் பெறும். பலவகையில் அவை மாறி வளர்ந்து சென்றுகொண்டே இருக்கும். எளிமையாக அவற்றை வகுத்துக்கொள்ள முடியாது


தீபாவளியின் தோற்றுவாய் எதுவாக இருக்கும்? பழங்குடி வாழ்க்கையையே பார்க்கலாம். குமரியிலும் மேற்கு மலைகளிலும் உள்ள தொல்தமிழ்ப் பழங்குடிகளிடம் ஒரு வழக்கம் உள்ளது. தொற்றுநோய்க்காலங்களில் அந்த தீயசக்தி தன் வீட்டை அண்டாமலிருக்க வாசலில் விளக்குகளை கொளுத்தி வைப்பது. காலாரா மாதங்களில் அவ்வாறு எங்கள் வீட்டிலும் வைத்த நினைவு உள்ளது. கிராமங்களில் இன்றும் நீடிக்கிறது அது. அதுதான் தொடக்கமாக இருக்க வேண்டும். ஐப்பசி தமிழகத்தின் மழைமாதம். தென்னாட்டின் மிகப்பெரிய நோய்க்காலம்.


தொன்மையான காலகட்டத்தில் இந்த ஆசாரம் வளர்ந்து பண்டிகையாக ஆகியிருக்கலாம். பௌத்தர்கள் இதை தங்கள் மதத்துக்குள் இழுத்துக்கொண்டார்கள். பௌத்தச் சடங்குகளில் தீபவரிசை முக்கியமான ஒன்று. இன்றும் அது பௌத்தம் மருவிய வழிபாடுகளில் தாலப்பொலி என்றவடிவில் கேரளத்தில் நீடிக்கிறது.தட்டுகளில் தீபங்களை ஏந்தி அணிவகுப்பது. [கொற்றவை நாவலில் விரிவான விளக்கம் உண்டு]. சமணர்களும் அதை தங்கள் மதத்துக்குள் இழுத்துக்கொண்டார்கள். தங்களுக்கான விளக்கங்களை அளித்தார்கள்.


பின்னர் பெருமதங்களாக ஆன சைவமும் சாக்தமும் இப்பண்டிகையை தங்கள் கோணத்தில் விளக்கி உள்ளிழுத்தன. சைவத்தில் அது கார்த்திகைதீபமாகவும் சாக்தத்தில் தீபாவளியாகவும் ஆகியது. என் ஊகம் என்னவென்றால் பௌத்ததில் இவ்விழா பிரக்ஞாதாரா தேவியின் [அறிவொளித்தேவி.] பண்டிகையாக இருந்தது. அது சாக்தத்தில் நுழைந்தபோது நரகாசுரனை கொன்ற கொற்றவையின் பண்டிகையாக ஆகியது. தொல்தமிழ்தெய்வமான கொற்றவையின் இன்னொரு வடிவமே துர்க்காதேவி. கேரளத்து தேவிசிலைகளில் கொற்றவையின் துல்லியமான இலக்கணம் உள்ளது.


பௌத்தர்களின் இருளரக்கனே நரகாசுரனாக ஆகியிருக்கலாம்.அடிப்படையில் பழங்குடியினர் அஞ்சிய அந்த நோய் அல்லது பீடையின் இன்னொரு வடிவமே நரகாசுரன். நரகாசுரனைப்பற்றிய நான்கு வெவ்வேறு தொன்மங்களும் அவன் தற்செயலாக உருவாகி எழுந்த ஒரு இயற்கையான அழிவுச்சக்தி என்றே உருவகிக்கின்றன.


உதாரணமாக வைணவத்தொன்மத்தின்படி திருமாலின் பன்றி அவதாரத்திற்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன் நரகாசுரன். அவனை அழிவுசக்தி என உருவகிக்கும் வைணவம் தெய்வத்தின் மகன் என்றும் சொல்வதைக் கவனிக்கவேண்டும். பூமியிலிருந்து எழுந்தவன் என்பதும் குறியீட்டுரீதியாக முக்கியமானது. நோய் அல்லது பீடை குறித்த மிகத்தொன்மையான பழங்குடி உருவகத்தின் வைணவ இறையியல் விளக்கம் இது.பன்றியால் மண்ணிலிருந்து உருவாவது. ஆனால் வைணவம் அழிவையும் திருமாலின் லீலையாகக் கொள்வது. அந்தத்தத்துவமே இப்புராணமாக ஆகிவிட்டிருக்கிறது.


இத்தகைய விளக்கங்கள் கூட முன்னரே இருந்த தொன்மங்களுடன் இணைத்தே விரிவாக்கம் செய்யப்படும். ஏற்கனவே மகாபாரதத்தில் இருந்த ஒரு வரலாற்றுக்கதை நரகாசுரனுடையது. அவன் காமரூபத்தைச் சேர்ந்த பிரக்ஜ்யோதிஷம் என்னும் நாட்டை [இன்றைய அசாம்]ஆண்ட அசுரச்சக்ரவர்த்தி. அவனை கிருஷ்ணரும் சத்யபாமையும் கொன்றனர். அது இந்த தொன்மத்துடன் இணைந்தது. இவ்வாறுதான் தொன்மங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னி வளர்கின்றன.


இந்தியா முழுக்கச்சென்ற சாக்தத்தில் தீபாவளி என்னென்ன மாற்றங்கள் அடைந்தது என்பது தனி ஆராய்ச்சிக்குரியது. பல இடங்களில் இன்று அது ஒரு முக்கியமான சமணப்பண்டிகைதான். சில இடங்களில் பழங்குடிப்பண்டிகை. சைவம் வைணவம் சீக்கியம் எல்லா மதங்களுக்கும் தீபாவளிக்கு அவர்களுக்கான புராண விளக்கம் இருப்பதைப்பார்க்கலாம். நரகாசுரனை கிருஷ்ணன் கொன்றார் என்பது வைணவக்கதை. நரகாசுரன் தன் அன்னையாகிய தேவியால் கொல்லப்பட்டான் என்பது சாக்தத்தின் கதை.


பண்டிகைகள் மாறிக்கொண்டே இருப்பது வரலாறு. தேதிகள்கூட பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கலாம்.மேற்குமலைப் பழங்குடிகள் கொண்டாடிய தீபத்திருநாள் இப்போது சபரிமலை அய்யப்பனின் மகரவிளக்கு விழாவாக உள்ளது என்று ஒரு கேரள ஆராய்ச்சி சொல்கிறது. அது மகரசங்க்ராந்தி என்றபேரில் வட இந்தியாவிலும் கொண்டாடப்படும் பண்டிகை. சோழர்கள் காலத்தில் தமிழகத்தில் சாக்தர்கள் மட்டும் தீபாவளி கொண்டாடினார்கள். சைவர்கள் கார்த்திகையை.


உண்மையில் சோழர் காலத்தின் தமிழகத்தில் மிகப்பெரிய பண்டிகை என்பது திருவோணம்தான். இன்றும் சோழநாட்டுக் கோயில்களில் அது கொண்டாடப்படுகிறது. இன்று அது கேரளத்தில் மட்டும் எஞ்சியுள்ளது. பின்னர் நாயக்கர்களின் காலகட்டத்தில் தீபாவளி அரச ஆதரவு பெற்றது. இன்றைய வடிவில் நாம் தீபாவளியைக் கொண்டாட மாமன்னர் திருமலைநாயக்கர்தான் காரணம்.


ஆக, தீபாவளி வடவர் பண்டிகை, நரகாசுரன் தமிழன், துர்க்கை ஒரு பிராமணமாமி என்பது போன்ற ‘ஆய்வுகளை’ அடிப்படைச் சிந்தனை கொண்டவர்கள் கொஞ்சம் தாண்டிவரலாம் என்று நினைக்கிறேன். அது நம்முடைய தொல்மூதாதையரின் ஒரு நம்பிக்கையில் இருந்து உருவாகி பல்வேறு மதங்கள் வழியாக வரலாறெங்கும் வளர்ந்து பரவி இன்றைய வடிவை அடைந்திருக்கிறது.


 


*


 


இன்று, பண்டிகைகளால் ஒரு பொதுவான மனிதனுக்கு என்ன முக்கியத்துவம் உள்ளது? எல்லா பண்டிகைகளும் நம்மை நாமறியாத நீண்ட பழங்காலத்துடன் அறியமுடியாத தொன்மையுடன் இணைக்கின்றன. நம் வாழ்க்கை என்பது நம்மில் தொடங்கி முடிவது அல்ல. அது ஓர் அறுபடாத பெரும் நீட்சி என்று உணர்ந்தால் இவை ஒவ்வொன்றும் முக்கியமானவைதான். நேற்று நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையை நாம் நீடிக்கிறோம் என்ற பேருணர்வு இப்பண்டிகைகளின் சாரம்.


சடங்குகள், பண்டிகைகள் அனைத்துமே குறியீடுகள். அக்குறியீடுகளுக்கு நாம் என்ன பொருள் அளிக்கிறோம் என்பதுதான் நமக்கு முக்கியமானது. தீபாவளியை டிவி முன் குந்தி அமரும் பண்டிகையாக ஒருவர் காணலாம். அதன் வரலாற்று நீட்சியை உணரக்கூடிய ஒரு தினமாக, மதங்களும் மக்களும் கலந்து உருவாக்கிய ஒரு உணர்வெழுச்சியின் நாளாக கொண்டாடலாம். நம் அகவிரிவைப் பொறுத்தது அது.


அனைத்துக்கும் மேலாக எல்லா பண்டிகைகளும் குழந்தைகளுக்கானவை. அவர்கள் உற்சாகம் கொள்வதற்கான தருணங்கள். பெரியவர்கள் தங்கள் உலகை விட்டு கொஞ்சம் குழந்தைகளின் உலகுக்குள் இறங்கிவருவதற்கானவை. நாம் நம் பெற்றோரின் நினைவை நம் பிள்ளைகளுக்கு அளிப்பதற்கானவை. வாழ்க்கை என்பது இம்மாதிரி சில தருணங்கள் மட்டுமே. ஆகவே உற்சாகம் கொள்வதற்கான காரணங்கள் அனைத்துமே முக்கியமானவை.


பண்பாடு என்பது என்ன? சில சடங்குகள், சில ஆசாரங்கள், சில நம்பிக்கைகள், சில வழக்கங்கள் அல்லாமல்? அவற்றின் குறியீட்டு வடிவிலேயே பண்பாடு பாதுகாக்கப்படுகிறது, கைமாறப்படுகிறது. அவை இல்லையேல் பண்பாடு இல்லை. அவற்றை இழந்தால் நாம் சீன மலிவுச்சாமான்களையும் அமெரிக்க பரப்புக்கலைகளையும் நுகர்வதற்காக பிறக்கும் நூறுகோடி சதைத்திரள்கள் மட்டுமே. அப்படி அதில் துளிகளாக உங்கள் பிள்ளைகளை ஆக்குவதென்பதுதான் உங்கள் இலக்கு என்றால் அது உங்கள் விருப்பம்


ஜெ


தீபாவளி


தீபாவளி – விடுதலையின் ஒளிநாள்


தீபாவளி கடிதங்கள்


தீபாவளி:கடிதங்கள்




கடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா


நமது கைகளில்….


 


===================================


 


மறுபிரசுரம் / முதற்பிரசுரம்   Nov 4, 2010 @ 8:41

தொடர்புடைய பதிவுகள்

தீபாவளி
அவர்கள்
கடிதங்கள்
தீபாவளியும் சமணமும்:கடிதம்
கடிதங்கள்
தீபாவளி:கடிதங்கள்
தீபாவளி கடிதங்கள்
தூரன்:கடிதங்கள்
தீபாவளி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 28, 2016 11:36

மீட்பு -கடிதம்

mision-800x531





இனிய ஜெயம்,


அதிகாலை [நள்ளிரவு??] நண்பர் மாதவன் இளங்கோவின் கடிதம் படித்த கணம் முதல் இந்த வினாடி வரை பரவசம் சுதி இறங்காமல் இருக்கிறது. வெற்றியின் கதை. மீட்சியின் சாட்சியம். ஒவ்வொரு முறை என் முன் எழும்போதும் மானுடன் எத்தனை மகத்தானவன் என விம்மிதம் பொங்கும்.


”டின்னிடஸால் பாதிக்கப்பட்ட நண்பர்கள் யாரேனும் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள் என்று எல்லோரிடமும் வேண்டிக்கொள்கிறேன்.”


என்ற அவரது அழைப்பில் இருந்த மீட்பின் குரல்வழியே ஓலைச் சிலுவை கதையின் சாமர்வெல்லை வந்தடைந்தேன். வறுமைக்கு வாழ்வைத் தொலைத்த பனையேறி குடும்பம் .எட்டு பெத்த பனையேறி அனைவரையும் அநாதரவாக விட்டு இறக்கிறார். வீட்டு மனிதர்களைக் காட்டிலும் அம்மா குடும்பத்தில் புழங்கிய தெய்வங்கள் அதிகம். அதில் வளர்ந்து வந்த அம்மா சொல்கிறாள், கும்பி காஞ்சவனுக்கு எல்லா சாமியும் கல்தான். தெய்வங்களால் கைவிடப்பட்டவளை சாமர்வெல் கேட்கிறார், வேதத்துக்கு மாறுகிறாயா?


எனக்கு ரொட்டி வேணும். கதை சொல்லி கேட்க, சாமர்வேல் சிரித்தபடி ”ரொட்டி போதுமா?” என்கிறார். கதை சொல்லிக்கு எட்டு வயது ”நிறைய ரொட்டி வேணும் . என் தங்கச்சிக்கும் குடுக்கணும்” எட்டாவதான தங்கை. கதைசொல்லி ஜேம்ஸ் டேனியல் ஆகி, சாமர்வெல்லை பின்தொடர்கிறான்.


சாமர்வேல் கடந்து வந்த வாழ்வும், அவரது ஆளுமையும், ஜேம்ஸின் விவரணையில் சாமர்வெல்லுடன் அரைநூற்றாண்டு காலம் வாழ்ந்த உவகையையும் ஆயாசத்தையும் அளிக்கிறது. ஜேம்ஸ் அவருடன் இருக்கிறான். விசுவாசமாக இருக்கிறான். எஜமானின் ஒவ்வொரு காலடியையும் முத்தி முத்தி நுகர்ந்து அவர் பின் செல்லும் வளர்ப்பு நாய் போல் விசுவாசமாக இருக்கிறான். அவனே சொல்வது போல அவனால் சாமர்வெல்லுகுத்தான் விசுவாசமாக இருக்க முடிகிறது. ஏசுவுக்கு அல்ல. சாமர்வெல்லுக்குள் புரண்டு அவரது ஊற்றுமுகத்துக்கு வழி விட்ட அந்த ஒன்று, இன்னும் ஜேம்சுக்குள் புரளவில்லை. காரணம் ஜேம்சுக்கு . உணவு படிப்பு வசதி எல்லாம் கிடைத்தது கூடவே தேவனும். அவ்வளவுதான் ஜேம்ஸின் தேவன். அவனுக்கு கிடைத்த ஏசு ஒரு பண்ட மாற்று. அந்த பண்டமாற்றை செய்தவர் சாமர்வேல். இதுதான் ஜேம்ஸின் நிலை.


காலரா பெருகி ஊரே செத்து அழுகி மிதந்து நாறுகிறது. ஜேம்சும் சாமர்வெல்லும் ஊருக்குள் ஊழியம் செய்கிறார்கள். தனது மூன்று குழந்தைகளையும் இழந்த அன்னைக்கு மீட்பளிக்கிறார் சாமர்வெல். அக் கணத்தில்தான் சாமர்வெல்லாக தன் குடும்பத்துக்கு வந்தது எது என அறிகிறான். அது சோறும் குழம்புமட்டுமல்ல , கல்வியும் செல்வமும் மட்டும்அல்ல அது பண்டமாற்றல்ல .மீட்சி .


அறிந்த அக்கணம் நிகழ்கிறது அவனது தேவனின் வருகை.


‘என் தேவனே! என் ஏசுவே ! என் மீட்பனே! என் ஐயா, இதோ உனக்கு நான்! உனக்கு நான் என் தேவனே’


சாமர்வேல் அவரது சாரமான கருணையால் அவனுக்கு தேவனை அறிமுகம் செய்துவிட்டு, அவனால் தொட முடியாத தொலைவில் மிக முன்னால் சென்றுகொண்டிருக்கிறார்.


என் அன்புத் தோழி வானதி ஆதவ் அறக்கட்டளை சார்பாக மருத்துவ வளாகம் திறந்த நாளில், இக் கதையைத்தான் மீள மீள எண்ணிக் கொண்டிருந்தேன். என் தோழி மகத்தானவள், மனிதகுமாரனின் கால்களை தொட்டு விட்டவள்.


https://www.youtube.com/watch?v=lAoT2ktM2H0

the mission படத்தில் eniyo moricon வின் ஒபோ கருவி இசை. ஓலைச்சிலுவை சாமர்வெல்லின் துணை.


என் அன்புத் தோழிக்கு இந்த்த இசைத் துணுக்கு.


கடலூர் சீனு





தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 28, 2016 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.