Jeyamohan's Blog, page 1712

November 10, 2016

தேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம்!

j


 


பெண்களின் வாழ்க்கை முறை பெண்களினாலே தீர்மானிக்கப்படுகின்றது. எமது தமிழ் குடும்பச்சூழலில் பெண் எவ்வாறு புழங்கவேண்டும் என்பதை உண்மையில் யார் தீர்மானிப்பது என்று உற்றுப்பார்த்தால் அவளின் தாயாகவும் அவனைச் சார்ந்த பெண்களாகவும் இருப்பார்கள். பொதுவாக அப்பாவுக்கும் மகளுக்குமான உறவு மிக இயல்பானது. ஆனால், தாய்க்கும் மகளுக்கும் இடையிலான உறவு மிக இறுக்கமானதும் அந்தரங்கமானதுமாக இருந்துவிடுவதுண்டு. ஆண் பிள்ளை எவ்வாறு சமூகவெளியில் இயங்கவேண்டும், பெண் பிள்ளை எவ்வாறு சமூகவெளியில் இயங்கவேண்டும் என்பதை மென்மையாகவும் கடுமையாகவும் சொல்லிச் சொல்லி வளர்ப்பதில் பெரும்பங்கை செலவழிப்பதது தாய்மார்கள்


அனோஜன் பாலகிருஷ்ணன் தேவகிச்சித்தியின் டைரி பற்றி எழுதிய கட்டுரை


தேவகிச்சித்தியின் டைரி


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 10, 2016 10:32

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 23

[ 33 ]


வளர்பிறைக்காலம் முடிவுவரை அர்ஜுனன் ஜாதவேதனுடன் அங்கிருந்தான். மைந்தனுடன் விளையாடி தன் உள்ளுருகி எழுந்த அமுது அனைத்தையும் அவனுக்கு ஊட்டி அவ்வின்பத்தில் கணம் கணம் என நிறைந்து திளைத்தான். ஒன்றுபிறிதொன்றைக் கண்டடைந்து நிறைத்து தானழிவதே உயிர்களுக்கு விண்ணென்றானது வகுத்தளித்த பேரின்பம் என்று அறிந்தான்.


ஜாதவேதன் தன் மைந்தன் உயிர்மீண்ட செய்தியை தன் நூற்குலத்தையும் குடியையும் சேர்ந்த நூற்றெட்டு அந்தணர்களுக்கு நேரில் சென்று அறிவித்தான். அவனுக்கு அமிர்தன் என்று பெயர் சூட்டுவதைச்சொல்லி இடையணிநாளில் நிகழவிருக்கும் வேள்விக்கும் விருந்துக்கும் அழைப்பு விடுத்தான். “நம் வாழ்வில் முதன்மை நாள் அது. நாம் அமுதத்தால் வாழ்த்தப்பட்டவர்கள் என்பதை அனைவரும் அறியட்டும்” என்று அவன் தன் மனைவியிடம் சொன்னான். “ஒன்றும் குறையலாகாது. ஒரு கணமும் முழுமையின்றி கடந்துசெல்லலாகாது.”


“ஆம், நாம் வாழ்ந்ததே இந்நாளுக்காகத்தான்” என்றாள் அன்னை. “அழைக்கப்படவேண்டியவர்களில் எவரும் விடுபடக்கூடாது.” அவர்கள் அமர்ந்து எண்ணி எண்ணி அழைப்புக்குரியவர்களை சேர்த்துக்கொண்டனர். அந்நாளுக்குரிய  அனைத்தையும் ஒருக்குவதில் ஈடுபட்டு மெல்ல மெல்ல அதில் மூழ்கினாள். வேடர்களைச் சென்று கண்டு தேனுக்கும் தினைக்கும் சொல்லி வந்தாள். வேட்டுவப் பெண்களிடம் விறகுக்கு சொன்னாள். ஆயர்குடிகளில் நெய்யும் பாலும் குறித்துவைத்தாள்.


இல்லத்துப் பின்கட்டில் மண்ணில் புதைத்திருந்த கலங்களிலிருந்து எஞ்சிய கூலம் அனைத்தையும் எடுத்து உலர்த்திப் புடைத்து சேர்த்து வைத்தாள். முன்பு இல்லமெங்கும் புதைத்திட்டு மறந்த பொன் முழுக்க எடுத்துச் சேர்த்து ஒவ்வொருவருக்கும் அளித்தாள். நினைவுகூர்ந்து நினைவுகூர்ந்து பொன்னை எடுக்க எடுக்க உவகை கொண்டாள். கனவிலும் மண்ணைத்தோண்டி பொன்னெடுத்துக்கொண்டிருந்தாள். நினைவொன்றை சித்தம் தொட்டெடுக்கையில், மண்ணைத் தோண்டுகையில் எண்ணியிராத ஒரு பொன் கிடைக்கையில் கூவிச்சிரித்தபடி எழுந்து கைவீசி ஆடினாள்.


பின் மண்மட்டுமே எஞ்சியபோது அவளுக்குள் ஏமாற்றம் தோன்றலாயிற்று. தோண்டித் தோண்டி சலித்தபின்னரும் மண்கெல்லி நோக்குவதை நிறுத்தமுடியவில்லை. வேள்விக்குரிய அவிப்பொருள்  சேர்த்துவர புலரிமுதல் அந்தி வரை அலைந்த ஜாதவேதன் அவளை பின்னர்தான் கூர்ந்தான். “என்ன செய்கிறாய்? மண்ணில் நட்டால் முளைப்பதல்ல பொன். நிறுத்து!” என்று கடிந்தான். “எங்கோ இன்னுமிருக்கிறது பொன். நான் கனவில் கண்டேன்” என்றாள் அவள். “பொன் இருப்பது வெளியே. வேதத்தை வலையாக்கி அதை நான் சேர்த்துக்கொண்டுவருகிறேன். இது நம் மைந்தனின் நாள்” என்றான் ஜாதவேதன்.


நாளும் அந்திக்குப்பின் அந்தணனும் மனைவியும் தனித்தமர்ந்து தங்கள் கையிலிருப்பதையும் மிஞ்சி தேவைப்படுவதையும் பற்றி பேசினர்.  நாள் செல்ல நாள் செல்ல இருப்பது குறைய வேண்டுவது வளர்ந்தது. பின்னர் இடைப்பட்ட கணக்கு பேருருக்கொண்டு அவர்கள் முன் நின்றது. அவர்களின் பதற்றம் மிகுந்தது. தன்னிரக்கமும் எரிச்சலும்  மேலெழுந்தது. ‘இன்னும் சற்று… இன்னும் சில…’ என்று சொல்லிச்சொல்லி கணக்கிட்டவர்கள் ‘இன்னும் எவ்வளவு? இன்னும் எதுவரை?’ என ஏங்கலாயினர்.


“என் தகுதிக்கு மீறி அழைத்துவிட்டேன், பாண்டவரே” என்றான் ஜாதவேதன். “நூற்றெட்டு அந்தணர் அமர்ந்து செய்யும் வேள்விக்கு உரிய நெய் என நான் எண்ணியதைவிட பன்னிருமடங்கு அதிகம் தேவைப்படுகிறது. அத்தனை பெரிய வேள்விக்கு வரும் விருந்தினர் உண்பதற்கு உரிய அன்னமும் இன்னும் ஒருக்கப்படவில்லை. வேள்வி முடிந்து அவர்கள் எழும்போது அளிக்கப்படும் நற்கொடையும் சேரவில்லை. அவர்கள் அணிவதற்கு பட்டு, அவர்கள் துணைவியருக்கு ஆடை, அவர்களின் இளமைந்தருக்கு பரிசுகள் என இருந்தால் மட்டுமே அது வேள்வியென்றாகும்.”


“அளிக்கப்பட்டதை மறந்து பெறப்படாததை எண்ணிக் கணக்கிட்டுச் சொல்லி நிலைநிறுத்துபவர்கள் அந்தணர். நானும் அவ்வாறுதான் இருந்தேன். அதை எண்ணும்போது என் நெஞ்சு பதைக்கிறது” என்றான். நிலைகொள்ளாமல் கைகளை அசைத்து “உள்ளம் சென்ற தொலைவுக்கு என் செல்வம் செல்ல மறுக்கிறது. நான் என்ன செய்வேன்?” என்றான். வான்நோக்கி ஏங்கி “தெய்வங்களே, என்னை ஏன் கைவிட்டீர்கள்?” எனக் கூவினான்.


அறைக்குள் இருந்து எட்டி நோக்கிய அவன் துணைவி “களஞ்சியம் நிறைந்திருக்கும் இல்லத்தில் பிறக்கவேண்டிய மைந்தன் வெறும் சொல் மட்டும் நிறைந்திருக்கும் இல்லத்தில் பிறந்துவிட்டான்” என்றாள். சினம்கொண்ட ஜாதவேதன் “அது என் பிழை அல்ல. களஞ்சியம் நிறைந்த இல்லம் கொண்டவனுக்கு நீ அவனை பெற்றிருக்கவேண்டும்” என்றான். “களஞ்சியத்தை நிறைக்கவேண்டியது உங்கள் பொறுப்பு…” என்றாள் அவள். “ஏழை அந்தணன் என்றுதானே வந்தாய்?” என்று அவன் கூவ “ஆம், ஆனால் செயலற்றவன் என அறிந்திருக்கவில்லை” என்று அவள் திருப்பிக் கூவினாள்.


அர்ஜுனன் அவர்களைத் தடுத்து  “அஞ்சவேண்டியதில்லை, அந்தணரே. என்னால் ஆவதை நான் சேர்த்து அளிக்கிறேன்” என்றான். “தாங்கள் பாண்டவர் என்றறிவேன். ஒரு சொல் ஓலையில் எழுதி அளியுங்கள், இங்கிருக்கும் குடித்தலைவர்  இல்லத்திற்குச் சென்று வேண்டிய அனைத்தையும் பெற்றுவிடுவேன்” என்று ஜாதவேதன் சொன்னான். “இல்லை அந்தணரே, நான் நகர் புகுவதில்லை என்ற நெறி கொண்டவன். கான்புகுவதற்காக உடன்பிறந்தாருடன் அஸ்தினபுரிவிட்டு நீங்கியவன். நான் அதைச் செய்வது முறையல்ல” என்றான்.


ஜாதவேதனின் முகம் சற்று சுருங்கியது. “தாங்கள் இரவும் பகலும் தோளில் வைத்து கொஞ்சி அலையும் மைந்தனுக்காக இச்சிறு செயலை செய்வீர்கள் என்று எண்ணினேன், பாண்டவரே. நன்று, மைந்தனைவிட நெறியே உங்களுக்கு முதன்மையானது என்றுரைக்கிறீர்கள். அதுவும் அவ்வாறே ஆகுக!” என்று சொல்லி திரும்பி நடந்தான். அவன் மனைவி “நமக்கு நம் மைந்தன் முதன்மையானவன். அனைவருக்கும் அப்படியா?” என்றாள்.


அர்ஜுனன் அவள் விழிகளை சந்தித்ததும் நெஞ்சதிர்ந்து விழிதிருப்பிக்கொண்டான். ஜாதவேதன் உடலசைவுகளில் தெரிந்த எரிச்சலை நோக்கியதும் அந்தணனும் மனைவியும் இளமைந்தனை தங்கள் கையிலெடுத்தே நாட்களாகின்றன என்பதை உணர்ந்தான். தவழ்ந்து அவன் அவர்கள் அருகே செல்லும் போதுகூட எரிச்சலுடன் “அருகே வராதே, எண்ணை கொப்பரையை கவிழ்த்துவிடுவாய்” என்று ஜாதவேதன் சொன்னான். அடுமனைக்குள் சென்று அன்னையின் ஆடையை அவன் பற்றினால் “விலகிச் செல்! அடுப்பில் எரிகொள்ளி இருப்பதை அறியமாட்டாயா, மூடா?” என்று அவள் சினந்தாள்.


அவர்கள் விலக்கம் கொள்ள கொள்ள மைந்தன் மேலும் மேலும் அர்ஜுனனை அணுகினான். எப்போதும் அஞ்சியவன்போல அவன் ஆடைகளை பற்றிக்கொண்டான். நாளெல்லாம் அவன் தோள்களில் அமர்ந்திருந்தான். ஒரு கணமும் கீழிறங்க மறுத்தான். மைந்தனை தூக்கிக்கொண்டே காட்டிற்குச் சென்று பெருங்கலம் நிறைய மலைத்தேன் எடுத்து வந்தான் அர்ஜுனன். ஜாதவேதனிடம் அதை அளித்து “நறுமலைத்தேன் இது. ஊர்த்தலைவரிடம் கொண்டு சென்று உரிய விலை பெற்று வருக!” என்றான்.


ஜாதவேதன் விழிகளை விலக்கி  “தேனுக்கு இப்போது மதிப்பொன்றுமில்லை, பாண்டவரே. ஊர்த்தலைவர் இதை பொருட்டென எண்ணமாட்டார். ஊர்மன்றிலும் சந்தையிலும் நூறு வேடர்கள் கலம் நிறைய தேனுடன் கொள்வாரின்றி அமர்ந்திருக்கிறார்கள். நானோ அந்தணன். வணிகம் செய்யக் கற்றவனுமல்ல” என்றான்.


“மலைப்பொருள் எதுவென்றாலும் கொண்டுவருகிறேன். வேள்வி சிறக்கட்டும்” என்று அர்ஜுனன் சொன்னான்.  “எனக்குத் தேவை வேள்விச்செல்வம். மலைப்பொருளை விற்று நான் நினைக்கும் பணத்தை ஈட்ட முடியாது” என்றான் ஜாதவேதன். “நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை, மலைப்பொருளுக்கு ஓர் இயல்பு உண்டு. மிகுதியாகக் கிடைக்கும்தோறும் அதன் விலை இறங்கிவிடும்.”


அர்ஜுனன் சில கணங்கள் அவனை நோக்கி நின்றபின் மைந்தனை தூக்கிக்கொண்டு விளையாடச்சென்றான். “தேன்! தேன்!” என்று மைந்தன் துள்ள தன் கையிலிருந்த எஞ்சிய தேனடையைப் பிழிந்து அவன் வாயில் விட்டான். முகம் நிறைந்து உடலில் வழிய அமிர்தன் தேனை உண்டான். தேன் தட்டை வீசியபின் அவனுடலில் படிந்திருந்த இனிமையை தன் நாக்கால் தொட்டு அர்ஜுனன் உண்டான்.


வேள்வி நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. அந்தணனும் மனைவியும் அர்ஜுனன் இருப்பதையும் மறந்தனர். அவனுக்கு உணவளிக்க நினைவு கொள்ளவில்லை. அவனோ உணவை எண்ணவும் இல்லை. காடுகளில் அலைந்து சந்தனமும் பலாசமும் கொண்டு வந்து சேர்த்தான். கஸ்தூரியும் புனுகும் சவ்வாதும் கொண்டு வந்து வேள்விக்கு அளித்தான். அவை ஒருபொருட்டல்ல என்னும் நோக்குடன் ஜாதவேதன் அவற்றை பெற்றுக்கொண்டான்.


மைந்தனை உடல்கழுவ கொண்டுசெல்கையில் கொல்லைப்பக்கம் நீரோடைக்கரையில் அந்தணன் துணைவி தனித்திருந்து கண்ணீர்மல்க தனக்குள் பேசிக்கொள்வதைக் கண்ட அர்ஜுனன் “அன்னையே, இன்னும் என்ன துயர்? மைந்தன் முழுநலத்துடன் இருக்கிறானே?” என்றான். அவள் சினத்துடன் திரும்பி “இருந்தென்ன பயன்? இவன் வளர்ந்து எப்போது எங்களுக்கு உணவளிக்கப்போகிறான்? அதுவரை இவ்வாறு உழைத்து தேய்ந்து மடியவேண்டுமென்பது எங்கள் ஊழ்” என்றாள்.


திகைத்த அர்ஜுனன் ஏதோ சொல்லெடுப்பதற்குள் கழுவிக்கொண்டிருந்த கலன்களை கையிலெடுத்தபடி அவள் நிமிர்ந்து “வேதம் நன்குணர்ந்த அந்தணர்கள் அரசர்களுக்கு எரிசெயல் ஓம்பி பொன் பெற்று வந்து மாளிகை கட்டுகிறார்கள். எனக்கு வாய்த்தவனோ ஊக்கமில்லா மூடன். இப்பிறப்பெல்லாம் சிறுகுடிலில் கரிபடிந்த கலன்களைக் கழுவி, புகையூதி கண்கலங்கி, மிச்சில் உணவை உண்டு, கந்தல் அணிந்து வாழ்ந்து மறைய வேண்டுமென்பது என் ஊழ் போலும். முற்பிறப்பில் செய்த பிழை இவ்வாறு வந்து சூழ்ந்திருக்கிறது. பிறகென்ன சொல்ல?” என்றாள்.


“தங்கள் குறை என்ன, அன்னையே?” என்று அர்ஜுனன் கேட்டான். பேசியபடியே அடுமனைக்குள் சென்ற அவள் உளவிசையுடன் ஆடையைச் சுழற்றி இடையில் செருகியபடி வெளியே வந்து “என் குறை இதுதான். நூற்றெட்டு அந்தணர்களுக்கும் மைந்தர் இருக்கிறார்கள். அவர்களின் காதணிவிழாவும் சொல்லணிவிழாவும் நிகழ்ந்ததெவ்வாறு என்று அறிவேன். இங்கு  நான் எண்ணி எண்ணி வைத்திருக்கிறேன் அரிசிமணிகளை. அவர்களின் பெண்டிர் இங்கு வந்தமரும்போது எதை சமைத்து பரிமாறுவேன் என்று தெரியவில்லை. அவர்களின் இதழ்களில் விரியும் கெடுநகைப்பை இப்போதே காண்கிறேன். ஒவ்வொரு முகத்திற்கு முன்னும் ஒருமுறை இறந்து எழப்போகிறேன். அதைக் காணாமல் இப்போதே செத்தழியவேண்டும். அதுதான் என் விழைவு… போதுமா?” என்றாள்.


சீற்றத்துடன் திரும்பி,  அர்ஜுனன் கையிலிருந்து இறங்கி எச்சில் வழிய நகைத்தபடி தவழ்ந்துசென்று  எழுந்து அவள் ஆடையைப் பற்றி இழுத்த மைந்தனின் முதுகில் ஓங்கி அறைந்து “இவன் மீண்டு வரவில்லை என்றால் இந்தத் துயர் இருந்திருக்காது. பிறக்கவில்லை என்றே இருந்திருப்பேன். எந்த தீக்கணத்தில் அதை விரும்பினேன்? ஏதோ கொடுந்தெய்வம் இந்தப் பொறியில் என்னை சிக்க வைத்தது!” என்றாள்.


அடிபட்டு அமர்ந்து வாய்திறந்து கண்ணீர் உதிர கதறி அழுத மைந்தனைத் தூக்கி தன் தோளில் அமர்த்தி அர்ஜுனன் வெளியே சென்றான். அன்று முழுக்க நிலையற்றவனாக காடுகளில் அலைந்துகொண்டிருந்தான். அவனுள் எழுந்த வினாக்களை எதிர்கொள்ள அவனே அஞ்சினான். குழந்தையை கொஞ்சிக்கொஞ்சி அவற்றை அப்பால் துரத்தினான்.


மாலையில் திரும்பி அந்தணனின் இல்லத்திற்கு வந்தபோது அவன் முற்றம் முழுக்க கலங்கள் ததும்ப நெய்யும் தேனும் வந்து நிறைந்திருப்பதை கண்டான். மூட்டைகளில் அரிசியும் கோதுமையும் அடுக்கப்பட்டிருந்தன. அடுமனையாளர்கள் கொல்லைப்பக்கம் கொட்டகை கட்டி வெண்கல உருளிகளை உருட்டி அடுப்பிலேற்றிக் கொண்டிருந்தனர். பணியாட்கள் இல்லத்துக்கு முன் கட்டப்பட்ட பெரிய பந்தலில் தோரணங்களை அமைத்துக்கொண்டிருந்தனர். வைதிகர் அமர்ந்து வேள்விக்களத்திற்கு வாஸ்து வரையக் கோடுகள் வரைந்து கொண்டிருந்தனர்.


அவன் வருவதைக் கண்டதும் வைதிகர் மதிப்புடன் எழுந்து நின்றனர். வீரர்கள் உரத்த குரலில் “இளைய பாண்டவர் வாழ்க! அஸ்தினபுரியின் இறைவர் வாழ்க!” என்று குரல்கள் எழுப்பினர். திகைத்து நின்ற அர்ஜுனன் திரும்பி ஜாதவேதனை நோக்க அவன் அஞ்சாது அவன் கண்களை நோக்கி “ஆம், நான் சென்று ஊர்த்தலைவரிடம் சொன்னேன். சான்றுக்கு தாங்கள் அணிந்து கழற்றி வைத்த கணையாழி ஒன்றையும் கொண்டு சென்று காட்டினேன். அவரே தங்களைத் தேடி சற்று கழித்து இங்கு வருவார்” என்றான்.


கட்டற்று எழுந்த பெருஞ்சினத்துடன் கை ஓங்கியபடி அர்ஜுனன் காலடி எடுத்து முன்னால் வந்தான். “நான் ஆணையிட்டிருந்தேன். உமக்கு நான் ஆணையிட்டிருந்தேன்” என்று கூவினான். ஜாதவேதன் வெறுப்பில் வெறித்த விழிகளுடன் கைவிரித்து “அந்தணனை அடிக்க கையோங்குகிறீர்களா? அவ்வாறே ஆகுக!” என்றான். அர்ஜுனன் கை தழைத்து “உத்தமரே, வேதம் அறிந்த தாங்கள் இதை செய்யலாமா? அறத்துக்கு உகந்ததா இது?” என்றான்.


“இதுவே எனக்கு உகந்தது. இன்று எனக்குத் தேவை பொருள். என் மைந்தனை குடியவை முன் தகுந்த முறையில் நிறுத்த அதுவன்றி வழியில்லை. அதன் பொருட்டே இதைச் செய்தேன். எனக்கு இதில் பிழையென ஏதுமில்லை” என்றான் ஜாதவேதன். “மைந்தனை மீட்க விழைகையில் பொருளை நீர் எண்ணவில்லை” என்றான் அர்ஜுனன். ஜாதவேதன் உரக்க “ஆம், மைந்தன் உயிர் பெரிதே எனக்கு. ஆனால் அவன் நோயின்றி உயிர்கொண்டு நிற்கும்போது அவனைவிடப் பெரிது பொருள்தான். இதில் என்ன ஐயம்?” என்றான்.


திகைத்து அங்கு நின்ற அனைவரையும் நோக்கி சொல்லெடுக்க பலமுறை வாயசைத்த பின் திரும்பி நடந்தான். அவன் பின்னால் வந்த ஜாதவேதன் “இளைய பாண்டவரே, தங்களை வருத்துவதற்காக இதை நான் சொல்லவில்லை. எந்நூலிலும் நோக்குக! எந்த அறிஞனிடம் வேண்டுமானாலும் உசாவுக! தென்திசைத் தலைவனே உயிருக்கு முதல்வன். ஆனால் வாழ்வுக்கு முதல்வன் குபேரனே. அவனைவிட ஒருபடி மேலானவன் வடதிசை ஆள்பவனே” என்றான்.


ஒரு முதியவைதிகர் தொலைவில் நின்றபடி “உலகியலோருக்கு உகந்தவன்  செல்வத்துக்கு இறைவனே. காலனை வழுத்துபவர்கள் இருக்கிறார்கள்.  குபேரன் அருளியவர்களே மெய்யாக வாழ்கிறார்கள்” என்றார். அர்ஜுனன் திரும்பி நோக்க வைதிகர் தலைவர் “ஆம், இளைய பாண்டவரே! இப்புவியில் நோயும் இறப்பும் அணுகும்போது மட்டுமே அறத்திற்கிறைவன் எண்ணப்படுகிறான். அல்லும் பகலும் வாழ்த்தப்படுபவன் வடதிசை அண்ணலே” என்றார். தலையசைத்து “நன்று” என்றபின் அர்ஜுனன் திரும்பி நடந்தான்.


[ 34 ]


ஊழித்தொடக்கத்தில் விளையாடும் இளமைந்தன்போல தன் சுட்டுவிரலை காற்றில் அசைத்தசைத்து பன்னிரண்டாயிரம்கோடி பெருமலைத் தொடர்களைப் படைத்தபின் பிரம்மன் அவ்விரலை கட்டைவிரலில் தொட்டு மெல்ல சுண்டியபோது மிகச்சிறிய விதை ஒன்று பறந்து விழுந்தது. அதை சுட்டுவிரலால் தொட்டெடுத்து இடக்கை உள்ளங்கையில் வைத்து முகம் முன்னால் தூக்கி நோக்கி புன்னகைத்தார். விழி விலக்கி தன் முன் திசைகளை நிரப்பி எழுந்தெழுந்தமைந்துசென்ற மலையலைகளைப் பார்த்தபடி அவ்விதையிடம் “உன் பெயர் திருணபிந்து. நீயும் இம்மலைகளுக்கு நிகரென ஆகுக!” என்றார்.


அதை மெல்ல ஊதி கீழே விரிந்துகிடந்த மண்பரப்பில் விழச்செய்தார். மண் தொட்ட அவ்விதை கைகூப்பி முனிவரென எழுந்தது. திருணபிந்து  மண்ணில் புதைந்து உயிர்பெருக்கி எழுந்தது.  மண்ணை உண்டு உருப்பெருக்கி பரவி பன்னிரண்டாயிரம் கோடி மலைகளையும் முழுக்க மூடியது. புவியெங்கும் ஒருகணமும் ஓயாது நிகழ்ந்து கொண்டிருந்தது அவரது வேள்வி. பெருந்தழல் எழுந்து அவிகொண்டது. பசுமை விளைந்து அவியாகியது.


தன் அவியிலிருந்து அவர் ஈன்றெடுத்த மகள் ஹவிர்ஃபு எனப்பட்டாள். பேரழகியென அவள் வளர்ந்து நின்றபோது பிரம்மனிடம் “எந்தையே, என் மகளுக்குரிய கணவன் யார்?” என்றார் திருணபிந்து. சுட்டுவிரலால் காற்றில் ஒரு முகம் வரைந்து பிரம்மன் புலஸ்தியர் என்னும் பிரஜாபதியை படைத்தார்.  “குன்றாத பிறப்பாற்றல் கொண்டவர் இவர். பெருகிநிறைபவளான உன் மகளே இவருக்குரிய துணைவி” என்றார்.


புலஸ்தியர் ஹவிர்ஃபுவை மணந்தார். கணந்தோறும் என பல்லாயிரம் கோடி மைந்தரைப் பெற்று விண்ணில் மிதந்தலைந்த உலகங்களை முழுதும் நிரப்பினர் அவர்களிருவரும். ஹவிர்ஃபு புலஸ்தியருக்கு  ஈன்ற முதல் மைந்தர் விஸ்ரவஸ் என்று அழைக்கப்பட்டார். அழியாச்சொல் என எழுந்து சொல் பெருக்கி விரிந்து சித்தம் நிறைத்த விஸ்ரவஸ் பரத்வாஜ முனிவரின் மகளாகிய தேவவர்ணினியை மணந்தார். அந்திமஞ்சள் நிறம் கொண்டிருந்த தேவவர்ணினி கணவருடன் கூடி மகிழ்ந்த இரவொன்றில் உடலோய்ந்து உளம் நிறைந்து துயிலில் படுத்திருக்கையில் கனவில் பொன்னிறமான புல்தளிர் ஒன்றைக் கண்டு புன்னகைத்தாள். விழித்துக்கொண்டு எழுந்து தன் அருகே படுத்திருந்த விஸ்ரவஸின் தோளை உலுக்கி சொன்னாள் “தளிரொன்றின் ஒளியை நான் கண்டேன்.  பிறிதெங்கும் இல்லாது தன்னுள்ளிருந்தே எடுத்து தான் சூடி நின்ற ஒளி அது.”


விஸ்ரவஸ் அவள் தோள்மேல் கைவைத்து காதில் குழையை வருடி கழுத்தின் மென்வரிகளில் விரலோட்டியபடி “தன்னுள்ளிருந்து ஒளியெழச்செய்யும் ஆற்றல் கொண்டவை இரண்டே. விண்ணில் ஆதித்யர்கள், மண்ணில் மெய்யெழும் சொல்” என்றார். “பிறிதொன்றும் உள்ளது. அதை சற்று முன்தான் கனவில் கண்டேன்” என்றாள் தேவவர்ணினி.  “அவ்வண்ணம் ஒன்று இப்புவியில் இல்லை. அதில் எனக்கு ஐயமே இல்லை” என்றார் விஸ்ரவஸ். “அது உன் விழைவு மட்டுமே. துயில்க!” என அவள் தலையை வருடி முத்தமிட்டார்.


அவள் “இல்லை, நானறிவேன். அது கனவு மட்டும் அல்ல” என்றாள். “மலர் விரிவதற்கு முந்தைய மணமெழலே கனவு. இனிய ஒன்று நிகழவிருக்கிறது.” அவர் புன்னகையுடன் அவள் கன்னத்தை வருடி “நான் என்ன செய்யவேண்டும்? சொல்” என்றார். “தங்கள் மூதாதையாகிய படைத்தோனை அழைத்து கேளுங்கள். இன்று நான் கனவில் கண்டதென்ன என்று” என்றாள் அவள்.


சற்றே சினம் கொண்டபோதிலும் அவர் எழுந்து அறையில் இருந்த அகல் அருகே சென்று அழியாச்சொல்லை ஆகுதியாக்கி அதை வேள்வித்தீயாக  மாற்றினார். “எந்தையே, சொல்க! ஆதித்யர்களுக்கும் வேதப்பொருள் சுமந்த சொற்களுக்கும் அப்பால் தன்னொளி கொண்ட பிறிதேது உள்ளது இப்புவியில்?”  புன்னகைத்து பிரம்மன் சொன்னார் “உயிர்.” விஸ்ரவஸ் வியப்புடன் “உயிர் ஒளிர்வதை நான் கண்டதில்லை” என்றார். “ஒளிரும்” என்றார் பிரம்மன். “இளந்தளிரில் உயிரின் ஒளி வெளிப்படுகிறது. தளிர் முதிரும்போது மூவகை வினைகளும் வந்து அதை சூழ்கின்றன. பின்பு அது தன்னை மூடி நிற்பதையே தானெனக் காட்டுகிறது.”


“ஏதோ ஒரு தருணத்தில் சில நொடிகளில் மட்டுமே உயிரின் ஒளி வெளிப்படுகிறது. காதலின் கனிவில், தாய்மையின் நெகிழ்வில், ஊழ்கத்தின் முழுமையில், பெரும் கருணையில், பேரறத்தில்” என்று பிரம்மன் சொன்னார். “அவள் தன் கனவில் கண்டது அது. ஒரு புல்லிதழின் மென்தளிர். தளிரெல்லாம் பொன்னே.  காலையில் எழுவது விண்ணுலாவியான ஆதித்யனின் செந்தளிர். மாலையில் பழுத்து மீண்டும் அத்தளிரென்றாகி அவன் மறைவதே வாழ்வின் நெறி. குலமூதாதையாகிய திருணபிந்துவையே அவள் கண்டாள். அவள் வாழ்க!”


பிரம்மன் மறைந்ததும் விஸ்ரவஸ் திகைப்புடன் “உன்னில் எழுந்தது உயிரின் ஒளி. புவியின் முதல் தளிர் அது” என்றார். அவள் அவரை அணைத்து  “எனக்கு அவ்வொளி கொண்ட மைந்தன் ஒருவனை தருக!” என்றாள். “அவர் சொல்லிச் சென்றதை நீயும் கேட்டாயல்லவா? அது தளிரின் ஒளி. தளிரென்பது நோக்கியிருக்கவே முதிர்ந்து இலையாவது. விழியறியாது நிறம் மாறும் இளங்கதிர் போன்றது” என்றார் விஸ்ரவஸ்.


“வளராத தளிரொன்றை எனக்கு அருள்க!” என்றாள். “வளராது இருக்கையில் அது தளிரே அல்ல” என்றார் விஸ்ரவஸ். “உயிர்கள் அனைத்தும் மாறுபவை. மாறுதலுக்குப் பெயரே உயிர்.” அவள் இளமைக்குரிய வீம்புடன் “நானறியேன். எனக்கு குன்றாத் தளிரொளி கொண்ட மைந்தன் தேவை. பிறிதொரு குழவியை நான் ஏற்க மாட்டேன்” என்றாள். “வளரா மைந்தனா? அறிவில்லையா உனக்கு?” என்று அவர் சினக்க அழுதபடி அவள் எழுந்து சென்றாள்.


அவர் உளம் பொறுக்காது அவள் பின்னால்  சென்று “நீ பேசுவதென்ன என்று அறிவாயா? தளிரொளி கொண்டு காலமுடிவு வரை மாறாதிருப்பது இயல்வதாகுமா?” என்றார். “நானறியேன். என் கனவில் வந்ததனாலேயே அது ஒன்றைத் தவிர பிறிதெதையும் நான் ஏற்கக்கூடாது என்பதே என் உள்ளம் கொள்ளும் கூற்று. ஒரு விழைவு எழுவதென்பது தற்செயல் அல்ல. அது எழவேண்டுமென்று எங்கோ ஒன்று எண்ணுகிறது. இவ்விழைவு எழுந்தமையாலேயே இது நிகழ்ந்தாகவேண்டும்” என்றாள்.


“இது நிகழ இயலாது, சிறுமியென பேசாதே!” என்றார் விஸ்ரவஸ். “இல்லையேல் எனக்கு மைந்தனே தேவையில்லை” என்றாள் அவள். கடும் சினம் கொண்டு, பின் அவள்மேல் கொண்ட பேரன்பினால் மெல்ல கனிந்து துயர் மிக்கவரானார் விஸ்ரவஸ். செய்வதென்ன என்று அறியாமல் நிலைகுலைந்து இருந்தபின் தெளிந்து தன் தந்தையாகிய புலஸ்தியரிடம் சென்றார். அவர் தவச்சாலைக்குள் சென்று தாள் பணிந்து முகமன் உரைத்தபின் கேட்டார். “தந்தையே, அழியாத் தளிர் ஒன்றை விழைகிறாள் என் துணைவி. நான் என்ன செய்வேன்?”


புன்னகைத்து “அது பெண்களின் பேதைமை. ஆனால் பிள்ளையும் பெண்களும் கொள்ளும் பேதைமைக்குப் பின் இருப்பது சொல்தொட்டு அறியமுடியாத நுண்மை ஒன்று. அதை பேணுக!” என்றார் புலஸ்திய முனிவர். “அறிக, மைந்தா! புவியில் என்றும் அழியாதிருக்கும் பொருட்களே உலோகமெனப்படுகின்றன. அழியும் அழகுகளை அழியாது நிறுத்துவதற்கென்றே பிரம்மனால் படைக்கப்பட்டவை அவை. நீரின் ஒளியை இரும்பில் நிறுத்தலாம். அனலை செம்பின் சிவப்பில். வெயிலொளியை வெள்ளியில். புவியெங்கும் எழுந்து மறையும் புதுத்தளிரின் ஒளியை வைப்பதற்கு என்றே ஓர் உலோகம் மண்ணில் உள்ளது. அதன் பெயர் பொன். அதுவாகுக உன் மைந்தனின் உடல்” என்றார்.


ஆலிலையின் தளிர், மூங்கில்குருத்து, கொன்றைமலர், வேம்பின் முளை என வண்ணங்களைக் கலந்து எடுத்த வண்ணத்தில் மண்ணிலிருந்து பொன்னை எடுத்தார் விஸ்ரவஸ். “இப்பொன்னிறத்தில் எனக்கு ஒரு மைந்தனைத் தருக!” என்று அகிலம் படைத்த முதல்வனை எண்ணி வேண்டினார்.  பொன்னுருகிச் சொட்டியது அவர் மனைவியின் வயிற்றுக்குள். பொன் பெருகி வளர்ந்தது. அவ்வொளி கொண்டு அவள் உடல் அனல்சூடிய அகல்விளக்கு போல மிளிரத்தொடங்கியது.


கருவுற்றிருந்த அவளைக் காண வந்த நாரதர் சொன்னார் “இறைவி, உன்னில் எழுந்திருப்பவன் ஒரு தேவன். பொன்னுருக் கொண்டவன். பொன்னே உலோகங்களில் முதன்மையானது.  பொன்னில் எழுவது உலோகங்களின் கொழுந்துப்பருவம். குன்றா இளமை கொண்டவனாக இருப்பான் உன் மைந்தன். இப்புவியில் இனிவரும் பொருளனைத்தும் பொன்னாலேயே மதிப்பிடப்படும். பொருள்கள் அனைத்திற்கும் மதிப்புசொல்லும் பொருள் என்று அதுவே அமைந்திருக்கும். அப்பொருளின் தலைவனாக அவன் என்றுமிருப்பான்.”


KIRATHAM_EPI_23


அவ்வாறு பிறந்தெழுந்தான் குபேரன். என்றும் மாறாத குழந்தை உடல் கொண்டிருந்தான். குறுகிய கைகால்களும் கொழுவிய முகமும் தொந்தியும் கொண்ட பொன்மைந்தனை அள்ளி நெஞ்சோடணைத்து தேவவர்ணினி விழிநீர் உகுத்தாள்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 53
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 22
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 18
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 52
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 69
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 44
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 33
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 29
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 10
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 9
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 1
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 69
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 21
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 20
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 19
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 17
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 16
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 15
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 10, 2016 10:30

November 9, 2016

சில சிறுகதைகள் -4

download (1)


 


கே.ஜே.அசோக் குமாரின் பாம்புவேட்டை என்னும் சிறுகதை. சொல்வனம் இதழில்


p


அன்பிற்க்கும், மதிப்பிற்க்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,


வணக்கம். நலமா?


என்னுடைய சிறுகதையை இணைத்துள்ளேன். தங்கள் கருத்துதை எதிர்பார்க்கிறேன்


யாதும் காமமாகி நின்றாய்


மகேந்திரன்



*



மு தூயன் கதை


தில்லையம்மா


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 09, 2016 10:33

மா.அரங்கநாதன் கதைகள் பற்றி…

maarangana4[10]


 


 


அன்பு ஜெயமோகன்,


 


இலக்கியத்தில் எனக்கு மிகவும் பிடித்த வடிவம் ‘சிறுகதை’. சிறுகதை என்றால் சிறிய கதை என்றுதான் வாசிப்பு வாசம் இல்லாத என்னுடைய நண்பர்கள் பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ‘சிறுகதை என்றால் என்ன?’ என்று நீங்கள் உட்பட பல மேதைகள் தெளிவாக ஏற்கனவே எழுதிவிட்டார்கள். தமிழில் எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளை பெரும்பாலும் வாசித்துவிட்டேன் போலிருக்கிறது என்று நினைத்து நான் பெருமிதம்கொள்ளும் பொழுதெல்லாம் ‘கல்லாதது உலகளவு’ என்று யாரேனும் வந்து என் தலையில் கனமாகக் குட்டுகிறார்கள்.


 


இந்த முறை அதைச் செய்தது சகோதரர் அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்கள். கடந்த ஜனவரி மாதம் இந்தியா வந்த போது வாங்கி வந்த புத்தகங்களே நிறைய வாசித்து முடிக்கப்படாமல் இருப்பதால், ஆகஸ்டு மாதம் மீண்டும் வந்த பொழுது புத்தகக் கடைகளுக்கே செல்லவில்லை. இந்தியாவுக்கு வந்து புத்தகக் கடைகளுக்குச் செல்லாமல் திரும்பியது அநேகமாக அதுதான் முதன்முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். வாசு அவர்கள் நிறைய புத்தகங்கள் கொடுத்து அனுப்பினார். “உங்களுக்காக நான் எடுத்து வைத்த இன்னும் சில புத்தகங்களைக் கொண்டு வர முடியாமல் போய்விட்டது” என்று வருத்தப்பட்டார். அவர் கொடுத்த புத்தகங்களில் ஒன்றுதான் – ‘மா.அரங்கநாதன் கதைகள்’. இதற்கு முன்பு மா.அரங்கநாதனின் ஒரே ஒரு கட்டுரையைக்கூட வாசித்ததில்லை. வாசி என்று வாசு கொடுத்திருக்கிறார் என்பதால் வாசிக்க ஆரம்பித்தேன். புத்தகம் என்னை உள்ளிழுத்துக்கொண்டது. ஆனால் மா.அரங்கநாதன் கதைகள் ஏன் இவ்வளவு நாட்களாக என் கண்களில் படவில்லை? ஏன் பேசப்படவில்லை? அல்லது நான் ஏன் கேள்விப்படவில்லை? என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். என் கேள்விகள் அத்தனைக்கும் அவருடைய சிறுகதை ஒன்றே பதிலாகக் கிடைத்தது. ‘சித்தி’ என்கிற சிறுகதை அது.


 


எனதன்பு திலீப்குமார் உட்பட பல படைப்பாளிகளை உங்களின் திறனாய்வாளன் பட்டியல் மூலமாகவே அறிந்துகொண்டேன். அதன்  பிறகு அந்தப் படைப்பாளிகளின் நூல்களை வாங்கி வாசித்தேன். ஒருவேளை, நீங்கள் மா. அரங்கநாதனை விட்டு விட்டீர்களா என்று கோபம் வந்தது. அந்தப் பட்டியலை மீண்டும் எடுத்துப் பார்த்தேன். தவறு என்னிடமே. நான்தான் உங்களுடைய பட்டியலில் இடம்பெற்றிருந்த மா. அரங்கநாதன் கதைகளை தவறவிட்டிருக்கிறேன். Shame on me.


 


அந்தச் சிறுகதையை தட்டச்சு செய்து நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வதற்கு சோம்பலாக இருந்ததால், இணையத்தில் தேடினேன். நல்லவேளையாக அழியாச்சுடர்கள் தளத்தில் கிடைத்தது.


 


http://azhiyasudargal.blogspot.be/2010/05/blog-post_19.html


 


இந்தக் கதையை வாசித்த பிறகு நாட்டிய சாஸ்திரத்திலிருந்து சில வரிகள் நினைவுக்கு வந்தது.


 


“யதோ ஹஸ்த ததோ திருஷ்டி


யதோ திருஷ்டி ததோ மனா


யதோ மனஸ் ததோ பாவா


யதோ பாவா ததோ ரசா”


 


‘கைகள், கண்கள், மனம், பாவம் இவை அனைத்தும் செய்யும் கலையில் கலந்திருக்கும் நிலையில்தான் ரசசித்தி கிட்டும்’. இது நாட்டியக் கலைக்கு மட்டும் அல்ல, கிட்டத்தட்ட எல்லா செயல்களுக்கும் பொருந்தும், எழுத்து உட்பட. நாம் செய்யும் செயலில் கலையில் சித்தி உண்டாக இந்த விழிப்புணர்வும், ரசனையும் முக்கியம் அன்றோ?


 


மா. அரங்கநாதன் அவர்களுடைய தளத்தைக் கண்டடடைந்து அவரது நேர்காணல் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன ஒரு கம்பீரமான குரல்!


 


https://www.youtube.com/watch?v=AvzPDipjez0


 


ஆகஸ்டு மாதம் நான்  இந்தியாவில் இருந்தபோது, தான் அவரைச் சந்திக்க புதுவைக்குச் செல்வதாக வாசு கூறினார். நானும் அவரோடு சென்றிருக்கவேண்டும் என்று இப்போது தோன்றுகிறது.


 


தமிழ் எழுத்துலகில்தான் எத்தனை மேதைகள்!!


 


என்றும் அன்புடன்,


மாதவன் இளங்கோ


 


அரங்கநாதன் சிறுகதைகள்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 09, 2016 10:32

சிறுகதைகள் – விமர்சனங்கள்

images


 


 


மடத்து வீடு சிறுகதை பற்றிய குறிப்புகள் -


நமது குரலை நாமே ரெக்கோர்டிங்கில் கேட்பது (அல்லது காணொளியில் நம்மை நாமே பார்ப்பது) எப்பவும் சற்று நிலைகுலையச்செய்யும் அனுபவம். “இது நான் தான்” என்று மனம் ஒப்புக் கொள்ள மறுக்கும். ஆனால் அது முக்கியமான நிகழ்வு. It is a reality check about ourselves.


”மடத்து வீடு” கதையில் முதியவரின் நடத்தையைப் பற்றி கேட்கையில் இளைஞர்களுக்கு ஏற்படுவது கிட்டத்தட்ட இதே அனுபவம் தான். முக்கியமாக, பெண்களை “objectify” செய்யும் ராஜேஷ் மீது தான் மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது. அவனைப் பற்றிய மனக்காட்சியும் நிஜமும் பிளவு பட்டு கண்முன் நிற்கின்றன.


ஆனால் இந்த மையச்சரடு கதையில் ஒரு பின்குறிப்பு போலத்தான் தென்படுகிறது. கதையில் அழுத்தம் இல்லை. முடிச்சவிழ்ந்த மூட்டைப்போல சிதறிக் கிடக்கின்றது.


தேவைக்கு மேற்பட்ட கதாப்பாத்திரங்கள் கவனத்தைக் குலையச் செய்கின்றன. உதாரணத்திற்கு, இது narrative-ஆகவே எழுதக்கூடிய கதை. கதைக்கூறுபவரும் ஒரு கதாப்பாத்திரமாக வருவதைத் தவிர்த்திருக்கலாம். அவனுடைய கதாப்பாத்திரம் கதைக்கு எதையுமே அளிக்க வில்லை.


Macro வருணனையிலிர்ந்து ஆரம்பித்து, பின்னர் அந்த வீட்டைப் பற்றி, உறுப்பினர்களைப் பற்றி பேசிய பின்னர்தான் கதாப்பாத்திரங்கள் நமக்கு அறிமுகமாகின்றன. அதற்குப் பிறகு திரும்பி வீட்டிற்குக் கொண்டு செல்லப்படுகிறோம். மாறாக, கீழே குறிப்பிட்டிருக்கும் இடத்திலிருந்து ஆரம்பித்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.


கல்லூரி முடிந்து சாயங்காலம் பேருந்திலிருந்து இறங்கியபோது, பெட்டிகடையிலிருந்து அருண் பார்த்துவிட்டு கூப்பிட்டான். கூடவே ஒருவன், ஜீன்ஸ் பேண்ட், காட்டன் சட்டையில் நின்றான். மெலிதாக தாடிவிட்டிருந்தான். கையில் ஒரு இரும்பு காப்பு. விரலிடுக்கில் சிகரெட் புகைந்தது. அவனை காட்டி, இது என்னோட ஃபிரெண்ட். என்றான் அருண்.  மடத்து வீட்டுக்கு போறோம், வர்றியா? என்று கேட்டான். உடனே அந்த பெண்கள் ஞாபகத்துக்கு வந்தார்கள். புத்தகங்களை வீட்டில் வீசிவிட்டு அவர்களோடு நடந்தேன்.”


அது வாசகர் மனதில் உடனே வீட்டைப் பற்றி, பெண்களைப் பற்றி கேள்விகளை எழுப்பும். அவர்கள் நடந்து செல்லச் செல்ல அந்த இடத்தை பற்றிய, வீட்டைப் பற்றிய வருணனைகளைக் சொல்வதற்கு வலிமையான கட்டத்தை உருவாக்கியிருக்கும். கதைக்கூறுபவரும் வாசிப்பவரும் சக பயணிகளாகச் செல்ல வழிவகுக்கும். இப்பொழுதிருக்கும் வடிவத்தில் தான் ஏற்கனவே கண்டு அறிந்ததை நமக்குத் தெரிவிப்பது போல இருக்கிறது. It makes the first person narrative redundant.


எப்படி கேவலமா வந்து நின்னு கேட்டா அந்த பொம்பளை… நாக்கை புடுங்கிட்டு சாகலாம்ன்னு இருந்துச்சு.. இந்த வயசுலே திண்ணைலே உட்கார்ந்துட்டு பொம்பளைங்க குளிக்கிறதை கண்ணுகொட்டாம பாக்குறாரே.. வீட்டுலே இருக்குற நீங்களும் பொம்பளைங்கதானேன்னு கேட்டாளே போனவாரம்.. குரல் உடைந்து கதறினாள் வித்யா.. இதெல்லாம் எங்களுக்கு தேவையா? இன்னும் யாருகிட்டெல்லாம் நாங்க கேவலபடணும்.. எப்படி கஷ்டப்பட்டு பாத்துக்குறோம்.. மேலே பேச முடியாமல் விம்மினாள்.


வித்யா மூலம் கூறுவதைக்காட்டிலும் இதை ஒரு நிகழ்வாக எழுதியிருந்தால் கதையின் மையம் வலிமையாக முன்வந்திருக்கும்,


மேலும், அப்பாவின் இத்தகைய நடத்தையை அறிந்த பெண்களுக்கு ஆண்கள் மீது பொதுவான கசப்பு அல்லது கோவம் அல்லது அருவருப்பு எஞ்சுவதே பெரும்பாலும் நேரக்கூடியது. ராஜேஷின் அசட்டுத்தனத்துக்கு ஈடுகொடுக்கும் நடத்தை இயல்பாகத் தெரியவில்லை.


ப்ரியம்வதா


 


 


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு


வணக்கம்


இத்தளத்தில் கடந்த இரண்டு நாட்களாக பதிவிட்டிருந்த சிறுகதைகள் பற்றி என் விமர்சனத்தை எழுதியிருக்கிறேன். இது எனக்கும் எளியபயிற்சியாக இருக்மென்பதால் செய்து பார்த்தேன்.


நண்பர் சுனில் கிருஷ்ணனின் ‘ருசி’ சிறுகதை: http://padhaakai.com/2014/03/02/ruchi-2/


இதேத் தளத்தில் அவரின் ‘வாசுதேவன்’ என்கிற கதையைப் வாசித்ததாக ஞாபகம். நோய்மையை சுமந்து வாழ்வினை துக்கத்தோடுஅனுகும் ஒரு மனிதனைக் காணச்செல்கிறவர்களைப் பற்றியது என நினைக்கிறேன். (கதையின் தலைப்பு மட்டும் நன்றாக நினைவிருக்கிறது).அதொரு நல்ல சிறுகதையாக இருந்ததால் அவர் மீது எதிர்பார்ப்புகூடியதாலே இக்கதையை வாசித்தேன்.


ருசி கதை அன்றாட மனித அகவுலகம் சார்ந்த எளிய கதைதான். கதையின் மையம் அவனுக்கு அக்கணத்தின் தோன்றியிருக்கும் பழையஏமாற்றமானää பலியுணர்வுள்ள ஒரு உணர்ச்சி. அது யார்மீது என்பதை யூகிக்க விடாமலோ அல்லது அதைப்பற்றிய அவனின் எண்ணங்களைகுவிக்காமலோ கதை வௌ;வேறு தகவல்களில் அலைகிறது. பின்னால் மூட்டைப்பூச்சிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது அதையும்உடைத்துவிடுகிறார். ருசி என்ற தீவிர உணர்வை, எண்ணத்தை இன்னும் நுட்பமாக பதிவுவிட்டு கதையின் கருவுடன் இணைத்திருக்கலாம்.இரயிலின் அன்றாட வாழ்வு விவரிப்புகளைச் சொல்லிக்கொண்டும்போகும்போது ‘சரி  அடுத்து என்ன’ என்று நகரும்போது கதைமுடிந்துவிடுகிறது. வாசகனை கணிக்க விடக்கூடிய சாத்தியங்கள் சேர்க்கபடவில்லை.


மடத்துவீடு: மடத்துவீடு 


எளிய கருத்துச்சொல்லல் வகையைச் சார்ந்த கதைதான் இது. ஆண் துணையற்று தனித்திருக்கும் பெண்களைச் சீண்டும் இளைஞர்கள்ஒருகணத்தில் சட்டென திருந்துவதுபோன்ற கதைகள் வழக்கொழிந்து நாளாகிவிட்டது. மனம் திருந்துவதெல்லாம் இப்போது யாரும் கிடையாது.சரிதான் என்று விலகிவிடுவதோடு சரி. கதை அங்கிருந்து எதிர்புறமாகவோ அல்லது அப்பெரியவரின் மனநிலையிலோ வேண்டுமானால்எழுதிப்பார்த்திருக்கலாம். நடையும், உரையாடல்களும் செறிவாகவும், நவீனத்துக்குறியதாக இருக்கின்றன. திரு. ராம் செந்தில் அவர்களுக்குகதைக்கான மொழி அழகாக வருகிறது புதிய கருவுடன் இணைந்தால் நல்ல சிறுகதையாக வருமென நினைக்கிறேன்.


விடிவு: http://solvanam.com/?p=46758


 


எதிர்பாராமல் நிகழும் சம்பவமும் அதனால் அழுத்தும் குற்றவுணர்வைப் பற்றிய கொண்ட தொடக்கநிலை கதைதான் இதுவும்.சிறுகதைக்கு முடிவு எவ்வளவு முக்கியமானதோ அதுபோல அதன் தொடக்கமும் வாசகனை சட்டென கதைக்குள் உள்ளிழுக்கச் செய்யவேண்டும். இக்கதை அதைச் செய்யவில்லை. உள்ளே செல்வதற்குள் நேரமும், அயற்சியும் அடைந்துவிட்டேன். அலுவலகம் சார்ந்த பரிவாரவிவரனைகள் இவ்வளவு தேவையில்லை. உதாரணமாக ‘சார்’ போன்றவை. இவை வாசகனை அலுப்பூட்டும் பகுதிகள். ரவிக்கும் ராஜாவுக்குமானநட்பு ஆழமாக சொல்லப்படாதபோது கதையில் அதன் இழப்பும், அவனின் குற்றவுணர்வும் சரியாக கடத்தப்படவில்லை. அழுத்தமாககூறியிருந்தால் கதையின் மையத்தை இன்னும் வலுவாக்கியிருக்கும். வெறும் சம்பவமாக நின்றுவிடுகிறது. கதையின் முடிவை வாசிக்கத்தொடங்கியதுமே யூகித்துவிடமுடிகிறது. காரணம் நட்பு, இழப்பு போன்ற ஒரே வகை மாதிரிகளால். ஏற்கனவே எழுதப்பட்ட கதைகளாகஇருந்தாலும் இன்றைய வாசகன் அதை வேறு வடிவமாகவோ, வெறொரு பார்வையிலோ சொல்வதைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறான்.திரு காளிபிரசாத்தின் முதல் கதை என்பதற்கான மொழி தடைகள் ஏதுமில்லாமல் வேகமாகவே கொண்டு செல்வதில் பாராட்டுகிறேன்.


புத்தரின் வீடு: http://tarunam.blogspot.com/2016/04/sirukathai.html


சமீபத்திய ஈழ சிறுகதைகளை வாசித்த வகையில் இச்சிறுகதை சற்று மாறுதலான ஒன்றை எடுத்திருக்கிறது.  ஆனால் எல்லா ஈழசிறுகதைகளை போன்றே வாசிக்கின்றபோது தோன்றும் முன்கணிப்பு இதிலும் சரியாக ஏற்பட்டுவிடுகிறது.  மாறுதலாக கதை சிங்களதரப்பிலிருந்து தொடங்குகிறது ஆனால் அதுவும் உரையாடல், மொழிநடையில் ஏனோ ஈழத்தமிழர்களையே நினைவுப்படுத்துகிறது. புத்தகொள்கையோடு வாழ்ந்திருக்கும் ஒரு எளிய மனிதனின் அறம் அவன் வாழ்ந்துகொண்டிருக்கும்போதும், அவனின் அடுத்த தலைமுறைக்குமேசென்று சேர்வதில்லை என்கிற மையத்தை சுற்றி சுழல்கிறது. ஆனால் போரின்போது ஏற்படும் குரூரங்களும், வன்மங்களும் மனிதகுணங்களுக்கு இயல்பானதே. சிங்கள இராவணுத்தின் போக்கு அப்படித்தான் இருக்குமென அவருக்கு அப்போதுதான் தெரிகிறதா? மேலும்போர்ச்சூழலைப்பற்றிய அழுத்தமான ஏதேனும் சில வரிகள் இல்லை. போர் முடிந்து வரும் மகன் திருந்துகின்ற இடத்தை யூகித்த பின்பும் கதைநீண்டுகொண்டே செல்கிறது.


கதையின் தொடக்கமும் கருவும் மிகச்சிறந்த சிறுகதைக்கான கூறுகளை கொண்டிருந்தும் முழுச்சித்தரமாக மாறவில்லை. சமீபத்திய ஈழசிறுகதைகளிலிருந்து சற்று மாறுபட்டிருக்கிறது.


ஜெ இவைகள் என் வாசிப்பின் வழியும் இத்தளத்தினை தொடர்ந்து வாசிப்பதாலும் அமைந்த என் தனிப்பட்ட பார்வைதான். இதுசரியானதா என தெரியவில்லை. ஆனால் இவ்விமர்சனத்தினூடே என்னையும் வளர்த்துக்கொள்ள முடியுமென நம்புகிறேன். உங்களின் கருத்தைதெரிந்துகொள்ள ஆவல்.


அன்புடன்


தூயன்


 


புதுக்கோட்டை


 


அன்புள்ள ஜெமோ


 


கதைகளை வாசித்தேன். இரண்டு கதைகளிலுமே பொதுவான சிந்தனைகள்தான் இருந்தன. ராம் செந்தில் கதையில் பெண்களை வெறும் காமமாகவே ஆண்கள் பார்ப்பது பற்றிய பரவலான சிந்தனை வெளிப்பட்டது. இலங்கைக்கதையில் சிங்களர்களில் பௌத்தமரபைப்பின்பற்றுபவர்களுக்கு இருக்கும் குற்றவுணர்ச்சி. ஆனால் நவீன இலக்கியத்துக்கு இது போதாது. ஒரு சூழலில் பொதுவாகப்பேசப்படுவதை கதையாக ஆக்கினால் அதற்கு இலக்கிய மதிப்பு இல்லை. கதை என்றால் அதில் ஒரு சாட்டை இருக்கவேண்டு. அதிர்ச்சி நிலைகுலைவு என எதையாவது நல்ல சிறுகதை தரவேண்டும். சரிதானே என்று நினைக்கவைத்தால் போதது. இந்தக்கதைகளின் முக்கியமான பிரச்சினையே இதுதான்


 


சத்யா


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 09, 2016 10:31

நீர் நிலம் நெருப்பு – ஆவணப்படம் பதிவுகள்

நீர் நிலம் நெருப்பு ஆவணப்படம் பற்றிய இரு வலைப்பதிவுகள்


 


ஜெயமோகனின் ‘நீர் நிலம் நெருப்பு’ ஆவணப்படம்

 


ஜெயமோகன் பற்றிய ஆவணப்படம் 


 


https://www.youtube.com/watch?v=l_TLO...

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 09, 2016 10:31

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 22

[ 31 ]


செல்லுந்தோறும் சிறகுகொண்டது தண்டகாரண்யப் பெருங்காடு. அதன் வடபுலச்சரிவில் இலை வெளுத்து, கிளைதேம்பி தனித்து சோர்ந்து நின்றிருந்த மரங்கள் மறையலாயின. வேர்கள் மண்கவ்வி நரம்புகள் என கொடிகள் பின்னிப்புடைத்த அடிமரங்கள் எழுந்து கிளை பருத்து விரிந்து தழைத்து வான்மூடி பறவைக்குரல் சூடி நின்றிருந்த பெருமரங்களின் காடு வரலாயிற்று. கீழிருந்து பாறையில் படரும்  செந்நிறக் கொடி என மலைச்சரிவில் பற்றி வளைந்து மேலேறிய பாதை இலைத்தழைப்புக்குள் புகுந்து குகை வழியென ஆயிற்று.


KIRATHAM_EPI_22


அதன் மறுமுனையில் ஒளி தெரியாமல் ஆனபோது பைலனின் கையை பற்றிக்கொண்டு ஜைமினி “அடர்காடு. இங்கு கொடு விலங்குகள் உண்டா?” என்றான்.  “விலங்குகள் எங்குமுள்ளன” என்றான் பைலன். “விலங்கில்லாத காடு இமயமலையின் உச்சியில் கூட இல்லை என்கிறார்கள். நான் இருமுறை யானைகளை எதிர்கொண்டிருக்கிறேன்” என்று ஜைமினி சொன்னான்.  “கண்களை மூடிநின்று வேதச்சொல் எடுத்து ஓதினேன். அவை விலகிச் சென்றுவிட்டன.”


முன்னால் சென்றுகொண்டிருந்த சண்டன் திரும்பி  “அவை ஊனுண்ணிகள் அல்ல. பசித்த புலி ஒருவேளை எவற்றையும் சுவைத்து உண்ணக்கூடும்.” என்றான். ஜைமினியின் முகம் சுருங்கியது.  தன் கைகளால் காற்றில் தாளமிட்டபடி உடலில் மெல்லிய நடனத்துடன் முன்னால் சென்ற சூதனை நோக்கி திரும்பி பைலனிடம் மெல்லிய குரலில் “நான் இவனை வெறுக்கிறேன். இவ்வுலகில் இவனுக்கு அனைத்துமே நகைப்புக்குரியதாகத் தெரிகிறது” என்றான்.


“ஆம்” என்று பைலன் சொன்னான்.  “ஆம், அது ஒரு தத்துவம். தொல்காலம் முதலே அதையும் நம் எண்ணமுறைமையில் ஒன்றெனப் பயின்று வருகிறார்கள்.” ஜைமினி  “அந்த இளிவரலுடன் இவன் எங்கு அமரமுடியும்? எதை ஏற்க முடியும்? எதை சூடி நின்றிருக்க முடியும்?” என்றான்.  புன்னகையுடன் “அவர் அமர்ந்திருப்பவர் அல்ல. சென்று கொண்டிருப்பவர்” என்றான் பைலன்.


ஜைமினி எரிச்சலுடன் “இச்சொற்கள் எனக்கு சலிப்பூட்டுகின்றன. மானுடர் அனைவரும் தங்கள் பிறவி ஏணியில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். விண்புகும் வழியொன்றே அவர்கள் தேடுவது” என்றான்.  “அவர் விழையும் விண் சொல்லுக்குள் உள்ளது. அதற்குள் செல்லும் ஏணி ஒன்றும் அவரிடம் உள்ளது. யாரறிவார்? நானும் நீங்களும் அழிந்த பின்னரும் மானுடத்தின் சொல்வெளியில் அவர் வாழக்கூடும்.”


“இவ்வெளிய சூதனின் பெயர் வரலாற்றில் வாழுமா என்ன?” என்றான் ஜைமினி. “விண்மீன்கள் செறிந்த வான்பரப்புபோல மொழி நம்மை சூழ்ந்திருக்கிறது. அறிந்த விண்மீன்கள் சில, அறியாதவை கோடி.  நாம் அவற்றைப் பார்க்காதபோது அவை ஒவ்வொன்றும் நம்மை பார்த்துக்கொண்டிருக்கின்றன” என்று பைலன் சொன்னான். “அவர் இருப்பார். அவர்கள் என்றும் வாழும் ஒரு பெருக்கு.”


ஜைமினி “நீர் சொல்வதை என்னால் உணரமுடியவில்லை. உண்மையில் நீங்கள் இருவரும் பேசிக்கொள்வதில் பெரும்பகுதி எனக்கு புரியவில்லை. பொருளுறுத்துவதைவிட களியாடுவதற்கே சொற்களை கையாள்கிறீர்கள். உங்கள் நடுவே பகடைகளென உருண்டுகொண்டிருக்கும் சொற்கள் வேதத்திலிருந்து எழுந்து வந்தவை என்று உணர உணர என் உள்ளம் சினம் கொள்கிறது” என்றான். சொன்னபோது எழுந்த அந்த உணர்வு வளர்ந்து “உங்கள் இருவரையும் நோக்கி கூச்சலிட்டு வசைபாடவேண்டும் என்று தோன்றுகிறது” என சேர்த்துக்கொண்டான்.


“அவ்வசைபாடும் சொல்லும் வேதத்திலிருந்து எழுந்ததல்லவா?” என்று முன்னால் நின்று இடையில் கைவைத்து சூதன் கேட்டான். ஜைமினி விழிகளை திருப்பிக்கொண்டு நிற்க பைலன் நகைத்தான். “வசைவேதம் என்று ஒன்றை நாம் உருவாக்குவோம், அந்தணரே. அது வேதநிழலெனத் தொடரட்டும்” என்றபின் சண்டன் கைகளை வீசி வேதத்தின் அனுஷ்டுப்பு சந்தத்தில் இழிவசைகளால் ஆன பாடலொன்றைப் பாடியபடி முன்னால் சென்றான். பைலன் நகைக்க முற்பட்டு ஜைமினியின் விழிகளை கண்டபின் அடக்கிக்கொண்டான்.


“நாம் பேசுவது இவனுக்கு கேட்டுக்கொண்டிருக்கிறதா?” என்று ஜைமினி பைலனின் காதில் கேட்டான். “அவர் கேட்காத ஒன்றுமில்லை. வேண்டாதபோது காதுகளை மூடிக் கொள்ளவும் கற்றிருக்கிறார்” என்று பைலன் சிரித்தபடி சொன்னான். “எப்படி நாம் பேசிக்கொள்வது?” என்றான் ஜைமினி. “நீர் அவர் நம்முடன் இருக்கிறார் என்று எண்ண வேண்டியதில்லை. நினைப்பெழுந்ததை பேசலாம். அவர் எச்சொல்லாலும் துயரோ சினமோ உறப்போவதில்லை. சொல் அனைத்தும் மகிழ்வூட்டுவதே என்று எண்ணும் சூதர் அவர்” என்றான் பைலன்.


அவர்கள் பசுமை இருள் சற்று விலகி வெற்றுப்பாறை ஒன்று தெரியும் இடத்தை கண்டனர். “சொல்லின் இடைவெளி. காவியத்தின் தெய்வங்கள் இளைப்பாறுவதற்கான இடம்” என்றபடி சண்டன் அதை  நோக்கி சென்றான். பாறை இடுக்கில் எழுந்த அரச மரம் ஒன்று பசுமைக்குடை என நின்றது. அதன் கீழ் இருந்த பாறையில் சென்று அமர்ந்தபடி “உணவருந்துவதற்கு உகந்தது. உணவு இருந்தால் மேலும் இனிமைகொள்ளக்கூடும்” என்றான்.


பைலனும் ஜைமினியும் கால் சோர்ந்து வந்து அவனுக்கருகே அமர்ந்தனர். ஜைமினி சூதன் அமர்ந்த பாறையில் தொற்றி ஏறி சூதனுக்கு மேல் தன் கால் அமையும்படி அமர்ந்துகொண்டான். சூதனின் காலடியில்  அமர்ந்த பைலன் விழிதூக்கி ஜைமினியை நோக்கியபின் சூதனின் கண்களை சந்தித்து புன்னகைத்தான்.


“அந்தணரே, தங்களிடம் உணவு இருக்கிறதா?” என்றான் சண்டன். எரிச்சலுடன் “அந்தணரை உத்தமரே என்றுதான் கீழ்க்குலத்தோர் அழைக்கவேண்டும் என்கிறது கர்த்தம ஸ்மிருதி” என்றான் ஜைமினி. “உணவுக்காக எவரையும் எப்படியும் அழைக்கலாம் என்பது சூத ஸ்மிருதி. உணவிருக்கிறதா, உத்தமரே?” ஜைமினி சினத்துடன் தன்னிடமிருந்த உலருணவுப் பொதியை எடுத்து முன்னால் இட்டான். சண்டன் “அதை எடுத்து சூதன் உண்ணப்போவதால் அதில் தூய்மையற்றிருக்கும் பகுதியை எனக்கு அளிக்கலாமே” என்று பைலனிடம் சொன்னான்.


பைலன் சிரித்துக்கொண்டே அந்தப் பொதியை எடுத்து பகிர்ந்து பாதியை சண்டனுக்கு அளித்தான். ஜைமினி இன்னொரு சிறிய பொதியை எடுத்து பிரித்து தான் உண்ணத்தொடங்கினான். “உத்தமரை இப்போது ஒரு புலி வந்து அடித்து உண்ணும் என்றால் அது நோன்புணவை உண்ணுவதன் நலன்களைப் பெறும் அல்லவா?” என்று சூதன் கேட்டான். ஜைமினி உண்பதை நிறுத்திவிட்டு முறைத்தான். பைலன் சிரித்துக்கொண்டு “அந்தப் புலியை  அது இறந்தபின் உண்ணும் புழுக்களும் நோன்புணவை அருந்தும் பயன்களைப் பெறுகின்றன” என்றான்.


ஜைமினி எழுந்து அப்பால் சென்றான். சூதன் அதை அறியாதவன்போல “இப்புவியிலுள்ள அனைத்தையும் உண்கின்றன புழுக்கள். காலத்தின் வடிவம் அவை” என்றான். பைலன் “சமண அன்னநிலையில் நீங்கள் பாடிய அந்தக் காவியம் முடிவுறவில்லை, சூதரே” என்றான். “ஆம், அது மேலும் பல பகுதிகள் கொண்டது” என்றான் சண்டன். “நான்கு திசைகளையும் வென்றெழுந்த பெருவில்லவனின் கதை அது. நான்காவது திசை வென்றதை இரண்டாம் பகுதியாகவே ஆசிரியர் எழுதியிருக்கிறார்.”


ஆர்வத்துடன் அங்கிருந்தே “இரண்டாவது திசை எது?” என்று ஜைமினி கேட்டான். சூதன் திரும்பி நோக்க மேலும் அணுகியபடி “கிழக்கா மேற்கா?” என்றான். “வடக்கு” என்று சண்டன் சொன்னான். “அதெப்படி தெற்கிலிருந்து கிழக்கு அல்லது மேற்குக்குத்தானே செல்ல முடியும்?” என்று ஜைமினி அவனருகே வந்து நின்றபடி கேட்டான். “அது தொட்டுத் தொடரும் பாதை. இது ஊசலின் மறு எல்லை. இப்பயணம் இவ்வாறே அமைய முடியும்” என்றான் சூதன்.


“வடக்கின் அரசன் குபேரன் அல்லவா?” என்று ஜைமினி கேட்டான். “ஆம், குபேரனிடமிருந்து அர்ஜுனன் பெற்றுக்கொண்ட மெய்மையை சொல்லும் பகுதியைச் சொல்கிறது  சம்விரதர் சொல்கோத்து அமைத்த  அர்ஜுனேந்திரம் என்னும் காவியத்தின் மறுபகுதி” என்றான் சண்டன். ஜைமினி சிரித்தபடி “அர்ஜுனன் பெருஞ்செல்வன் ஆகிவிட்டானா?” என்றான். “பெறுபவன் எப்படி செல்வனாக ஆகமுடியும்?” என்றான் சண்டன்.


[ 32 ]


யமபுரியிலிருந்து மீட்டெடுத்த இளமைந்தனின் உடலுடன் அர்ஜுனன் யமுனைக்கரையில் எழுந்தான். விழிதிறந்த அம்மைந்தன் பசித்து கைகால் உதறி அழத்தொடங்கினான். தன் சுட்டு விரலை அவன் இதழ்களில் கொடுத்து உளம் கனிந்து “நிறைக!” என்று அர்ஜுனன் சொன்னபோது அதில் பாலூறியது. மைந்தன் உடல் எம்பி எழுந்து துள்ளும் சிறு கைகளை விரல் சுருட்டி ஆட்டி, உள்ளங்கால்கள் உட்சுருங்கி விரிய இதழோசையுடன் அவ்வமுதை சப்பி உண்டான். அவன் இதழ்க்கோடியில் பால்நுரை மெல்ல எழுந்து வந்து கன்னவளைவில் வழிந்து மென்கழுத்தை நனைப்பதை அர்ஜுனன் குனிந்து பார்த்தான்.


ஜாதவேதனின் இல்லத்திற்கு  அவன் சென்று சேர்ந்தபோது  அர்ஜுனனின் உடலெங்கும் அமுது நிறைந்திருந்தது. விரல் நுனிகள் அனைத்தும் பால் நிறைந்த முலைக்காம்புகள் என தரிப்பு கொண்டன. தித்திப்பில் திளைக்கும் நாவென ஆகிவிட்டிருந்தது அவன் உடல். எண்ணங்கள் அனைத்தும் தேனில் புழுவென நெளிந்து வழுக்கிக்கொண்டிருந்தன. மைந்தன் அவனுடன் இணைந்து அன்னையென அவனை எண்ணத்தொடங்கிவிட்டிருந்தான்.


இல்லத்து முற்றத்தில் மைந்தனுடன் அவன் கால் வைத்ததுமே திண்ணையில் அமர்ந்திருந்த ஜாதவேதன் எழுந்து இரு கைகளையும் விரித்து கூவி அழுதபடி அவனை நோக்கி ஓடி வந்தான். அவ்விரைவிலேயே கால்தடுக்கி முகம் அறைபட மண்ணில் விழுந்து இரு கைகளையும் நீட்டி அர்ஜுனனின் கால்களை பற்றிக்கொண்டான். “எந்தையே! என் குலதெய்வமே!” என்று கதறி அழுதான். சொல் விக்கி அவன் உடல் வலிப்புகொண்டது. குருதியும் கண்ணீரும் புழுதியுடன் கலந்து அவன் முகத்தில் வழிந்தன.


அவனை தோள் தழுவி எழுப்பி அமரச்செய்து அவன் மடியில் மைந்தனை படுக்கவைத்து “இதோ உன் மூதாதையர் மீண்டு வந்திருக்கின்றனர்” என்று அர்ஜுனன் சொன்னான். “ஆம். நான் இறந்து மீண்டு வந்திருக்கிறேன். இனி எனக்கு இறப்பில்லை. அமுது நிறைந்துள்ளது என் மடியில்! ஆராவமுது!” என்று கூவி  அள்ளி மைந்தனை உடல் சேர்த்து வெறி கொண்டு முத்தமிட்டான். முத்தமிட்டு முத்தமிட்டு ஆற்றாமல் மூச்சிரைத்து நெஞ்சு விம்மினான். அவனாக மாறி அம்முத்தங்களை தானுமிட்டு நின்றான் அர்ஜுனன்.


“இனி இவன் பெயர் அமிர்தன். இறப்பற்றவன். அமிர்தன்! ஆம் அமிர்தன்!” என்று சொல்லி அவனை தூக்கி வானோக்கி நீட்டி “எந்தையரே, இனி மகிழுங்கள். இனி நிறைவடையுங்கள். என் குருதி இனி வாழும்” என்று கூவினான். அப்படியே மயங்கி பின்னால் சரிந்தான். அவன் கைகால்கள் மீண்டும் வலிப்பு கொண்டன. அவன் மடியில் குழந்தை அள்ளிப்பற்றியபடி அமர்ந்திருந்தது. தந்தையின் மணத்தை அது அறிந்துவிட்டிருந்தது. அவன் ஆடையை கைபற்றிச்சுருட்டி வாயில் வைத்து கவ்வியபடி கால்சுழித்தது.


ஓசை கேட்டு இல்லத்தின் இருளுக்குள்ளிருந்து பரல் மீனென வெளிறிய அவன் மனைவி தோன்றினாள். நெடுநாள் ஒளிகாணாதவள்போல அவள் கண்கள் சுருங்கின. வெறித்த நோக்குடன் அங்கு என்ன நிகழ்கிறது என்பதை பார்த்திருந்தாள். அக்காட்சி அவள் உள்ளத்தைச் சென்றடைய நெடுநேரமாயிற்று. எண்ணியிரா கணம் ஒன்றில் எண்ணத்தில் அனல் பற்றிக்கொண்டு விலங்குபோல அலறியபடி பாய்ந்து வந்து ஜாதவேதனின் மடியில் நெளிந்த மைந்தனை அள்ளிச்சுழற்றி மார்போடணைத்தாள். பெருங்கூச்சலுடன் பாய்ந்து இல்லத்திற்குள் ஓடினாள்.


அர்ஜுனன் அந்தணனை மெல்ல தூக்கி அழைத்துச்சென்று இல்லத்துக்கு முன் கால்கழுவ வைத்திருந்த கலத்துநீரை அள்ளி அவன் முகத்தில் அறைந்து நினைவு மீளச்செய்தான். ஜாதவேதன் “என் மைந்தன் என் மைந்தன்” என்று  கைகள் பதைக்க நீட்டியபடி  கூவினான். மைந்தனை மீண்டும் பறிகொடுத்துவிட்டோமா என அஞ்சி எழுந்து “என் மைந்தன் எங்கே? என் மைந்தனை எவர் கொண்டுசென்றார்கள்?” என்றான். அனைத்தும் உளமயக்கோ என்று தோன்ற “பாண்டவரே! பாண்டவரே” என்று கூவினான்.


“நலமாயிருக்கிறான் குழந்தை. உங்கள் மனைவியிடம் இருக்கிறான்” என்று அர்ஜுனன்  கூறினான். ஜாதவேதன் பெருமூச்சுகளும் விம்மல்களுமாக மெல்ல அடங்கினான். கண்களை துடைத்துக்கொண்டு “வருக இளவரசே, என் இல்லத்தில் ஒருவாய் நீர் உண்டு என் குலத்தை வாழ்த்துக!” என்று கண்ணீருடன் அர்ஜுனன் கைகளை பற்றினான்.


அச்சிறு புல்வீட்டிற்குள் நுழைந்து ஜாதவேதன் இட்ட தோலிருக்கையில் அர்ஜுனன் அமர்ந்தான். ஜாதவேதன் அடுமனைக்குள் சென்று என்ன இருக்கிறது என்று அறியாமல் அனைத்துக் கலங்களையும் துழாவி ஒரு மூங்கில் குவளையில் ஆறிய பாலுடன் வந்து “இது ஒன்றே எனக்கு அளிப்பதற்கென்று இருக்கிறது. ஏழை நான். உணவென்றாகி வந்த வேதத்தையும்  இத்தனைநாள் மறந்துவிட்டிருந்தேன். சற்று பொறுங்கள், அரசே! நான் உணவாக்குவேன்” என்றான்.


“ஆகட்டும்” என்று அர்ஜுனன் சொன்னான். மீண்டும் ஓர் அலையென நினைப்பெழ “எங்கே என் மைந்தன்?” என்று கூவியபடி ஜாதவேதன் உள்ளே சென்றான். இல்லத்தின் சிற்றறைக்குள் மைந்தனுடன் புகுந்து கதவை உள்ளிருந்து மூடிவிட்டிருந்தாள். “பாரதி, என்ன செய்கிறாய்? கதவைத் திற” என்று அவன் கூவினான். கதவை ஓங்கித் தட்டியபடி “என்ன செய்கிறாய் என் மைந்தனை? பிச்சி, பேதை, திற கதவை!” என்று கூச்சலிட்டான்.


உள்ளிருந்து உறுமல்களும் சிரிப்பொலிகளும் எழுந்தன. அவன் செவிகூர்ந்துவிட்டு அஞ்சி அர்ஜுனனிடம் ஓடிவந்து  “பாண்டவரே, கதவை திறந்து கொடுங்கள். அவள் பிச்சி. என் குழந்தையை அவள் கொன்றுவிடுவாள்” என்றான். “எந்தப் பிச்சியும் தன் குழந்தையை கொல்வதில்லை” என்று அர்ஜுனன் சிரித்தான். அறைக்குள் இருந்து நெஞ்சில் அறைந்து அழும் பேரொலி கேட்டது. “அழுகிறாள். குழந்தை இறந்துவிட்டதென்று தோன்றுகிறது. அழுகிறாள்” என்று ஜாதவேதன் கண்ணீருடன் அர்ஜுனனின் கைகளைப்பற்றி இழுத்தபடி கூறினான்.


“நாம் அவ்வுணர்வை புரிந்துகொள்ள முடியாது, அந்தணரே. இளமைந்தர் நமக்குரியவர்கள் அல்லர். அவர்கள் ஒருவரோடு ஒருவர் இணையட்டும்” என்று அர்ஜுனன் அமர்ந்தபடியே சொன்னான். “அஞ்சுகிறேன், பாண்டவரே. அவளை நான் அறிவேன். ஊனுண்ணி விலங்கென என்னை உறிஞ்சி உண்ட பிடாரி அவள்” என்று கூறியபடி மூடிய கதவின் வாயிலின் முன்னாலேயே ஜாதவேதன் அமர்ந்து அழுதான்.


அன்று முழுக்க அன்னையும் மைந்தனும் அச்சிற்றறையின் இருளுக்குள் இருந்தனர். வாயிலுக்கு வெளியே தந்தை தலையில் அறைந்து அழுதபடியும் தவித்தபடி எழுந்து அமர்ந்தும் சோர்ந்து மீண்டும் விழுந்தும் காத்திருந்தான். மறுநாள் புலரியில் அறைக்கதவு திறந்து அன்னை தன் மைந்தனுடன் வெளிவந்தாள். சோர்ந்து விழிமயங்கி இருந்த ஜாதவேதன் அவ்வோசை கேட்டு துடித்து எழுந்து நோக்கியபோது அவன் முன்பென்றோ கண்டு மறந்திருந்த அவள் கன்னிமுகத்தை கண்டான். சொல் மறந்து இரு கைகளையும் கூப்பினான்.


அவள் இடையில் இருந்த மைந்தன் ஒரு முலை பற்றி அருந்த மறுமுலையில் இருந்து பால் ஊறி பீறிட்டு நிலத்தில் சொட்டிக்கொண்டிருந்தது. ஓசை நிறைந்த காலடிகளுடன் எவரையும் பார்க்காதவள்போல நடந்து அவள் வெளியே சென்றாள். ஜாதவேதன் எழுந்து அர்ஜுனனிடம் ஓடிவந்து “மீண்டும் அவள் முலை ஊறியிருக்கிறது. இது எவ்வண்ணம் என்று தெரிந்திலேன்” என்றான். “மண் செழிக்க மழையை அனுப்பும் பெருநெறியின் ஆணை அது” என்று அர்ஜுனன் சொன்னான். “தங்களை மறந்துவிட்டேன், பாண்டவரே. உணவருந்துங்கள்” என்று அடுமனை நோக்கி ஓடினான் ஜாதவேதன்.


அவ்வில்லத்தில் அர்ஜுனன் ஆறு நாட்கள் தங்கியிருந்தான். ஒவ்வொரு நாளும் பகல் முழுக்க அக்குழவியை மாறி மாறி முலையூட்டியபடி அன்னை இல்லத்தைச் சுற்றிய குறுங்காட்டில் அலைந்தாள். மானுட விழிகள் எதையும் அவள் விழிகள் சந்திக்கவில்லை. இரவில் மீண்டு வந்து அடுமனைக்குள் அமர்ந்து மாதப்பசி கொண்ட ஓநாய் என அனைத்து உணவையும் அள்ளி விழுங்கினாள். மைந்தனை தன் முலைகளுக்கு நடுவே அணைத்தபடி விழுந்து துயின்றாள். அவன் ஒவ்வொருமுறை அசையும்போதும் விழித்தெழுந்து உறுமியும் முத்தமிட்டும் தழுவியும் ஆற்றுப்படுத்தினாள்.


ஜாதவேதன் அர்ஜுனனுக்கும் அவளுக்கும் உணவு சமைத்தான். பித்து எழுந்தவன்போல அவன் பேசிக்கொண்டே இருந்தான். பிறந்து மறைந்த அத்தனை பிள்ளைகளையும் அவன் ஒவ்வொரு நாளென கணமென காட்சியென நினைவில் மீட்டுக்கொண்டுவந்தான். அத்தனைபேரும் ஒரு மைந்தன் என வந்து தன் முன் நின்றிருப்பதுபோல. அவன் மனைவியோ அனைத்து மைந்தர்களையும் மறந்து முதல் குழவியை ஈன்றவள் போலிருந்தாள்.


ஏழாவது நாள் அவள் மெல்ல மீண்டு வந்தாள். தோட்டத்திலிருந்து அவள் வருகையில் வில்லுடன் எதிரே சென்ற அர்ஜுனனை நோக்கி கைகளைக் கூப்பி விழிதாழ்த்தி நின்றாள். அர்ஜுனன் அருகே நின்று புன்னகை செய்து “உன் மைந்தன் மீண்டுவிட்டான், அன்னையே” என்றான். “ஆம், இனி இப்புவியில் நானடைவதற்கொன்றுமில்லை” என்று அவள் சொன்னாள். “நான் இன்னும் ஏழு பிறவி எடுத்து தங்கள் தேருக்குப் புரவியாக வேண்டும். அது ஒன்றே என் வேண்டுதல்” என்றபின்  எழுந்த அழுகையை அடக்கியபடி மைந்தனை அணைத்து இல்லத்திற்குள் புகுந்தாள்.


மறுநாள் ஜாதவேதன் அர்ஜுனனிடம்  வந்து “அவள் மீண்டுவிட்டாள். இன்று என்னிடம் சொல்லாடினாள். இளவரசே, அவளிடம் இயல்பாக சொல்லுரைத்து எத்தனையோ நாளாகிறது. இத்தனை காலம் அவளில் இருந்த கொலைத்தெய்வத்தின் முகம் விலகி சில கணங்களிலேயே அவள் இயல்முகம் மீண்டு வந்ததை எண்ணி வியக்கிறேன். அவளுக்குள் இருந்திருக்கிறதா அது?” என்றான். உவகையுடன் நிலைகொள்ளாமல் அங்குமிங்கும் திரிந்தான். “அதைவிட அந்த வெறிமுகத்தை எப்படி இத்தனை விரைவில் நான் முற்றிலும் மறந்தேன் என்று எண்ணுகையில் விந்தையால் என் உள்ளம் திகைக்கிறது” என்றான்.


“மானுடர் தங்கள் விழைவால் உருவாக்கிக்கொண்ட உலகம் இது” என்று அர்ஜுனன் புன்னகை செய்தான். பின்னர் குரல் தழைந்து முகம் திருப்பி “இத்தனை நாள் நான் இங்கிருந்ததே மீண்டும் அம்மைந்தன் என் கைக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான். அவனைத் தழுவி முத்தமிட்டு வாழ்த்தி மீள்கிறேன். என் உடல்நிறைந்திருக்கும் அமுதை அவனுக்களிக்காமல் இங்கிருந்து நான் செல்ல முடியாது” என்றான்.


“அவ்வண்ணமே” என்று சொல்லி உள்ளே சென்று மனைவியுடன் மைந்தனை அழைத்து வந்தான் ஜாதவேதன். அவள் அருகே வந்து மண்டியிட்டு அர்ஜுனனின் மடியில் தன் மைந்தனை வைத்தாள். ஓயாது முலையுண்டதனால் உடல் ஒளிபெற்று விழிகள் கூர்கொண்டிருந்த மைந்தன் “ந்தை” என்ற ஒலியெழுப்பி காலுதைத்து மெல்ல புரண்டு அர்ஜுனனின் மார்பிலிருந்த ஆடையை பற்றிக்கொண்டான்.


குனிந்து அவன் நெற்றியில் கன்னங்களில் இளந்தோள்களில் முத்தமிட்ட அர்ஜுனன் அவனைத் தூக்கி அண்ணாந்து மென்வயிற்றில் தன் மூக்கையும் வாயையும் புதைத்து அசைத்தான். கைகால்கள் நெளிய துள்ளிக் குதித்து மைந்தன் நகைத்தான். இரு கைகளையும் கூப்பி அன்னை அமர்ந்திருந்தாள்.


மைந்தனை அன்னையிடம் அளித்து அர்ஜுனன் எழுந்தான். “இது முடியாத சுழல் என்றுணர்ந்தேன், அன்னையே. என்னுள் நிறைந்த அமுதனைத்தையும் இவனுக்கு அளித்து இங்கிருந்து கிளம்பலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஒரு துளி அளிக்க ஓராயிரம் துளி பெருகும் ஊற்று அது என்று அறிந்தேன். இவ்வொரு மைந்தனை அமுதூட்டியே இப்பிறப்பை இங்கு கழித்துவிடுவேன். என் கடன்கள் என்னை அழைக்கின்றன. செல்லும் தொலைவு காத்திருக்கின்றது. வழி அளிக்கவேண்டும்” என்றான்.


ஜாதவேதன் “இன்னும் ஒரு வாரம் இங்கிருக்க வேண்டும், பாண்டவரே. இக்குடில் தாங்கள் தங்குமிடமல்ல என்றறிவேன். என்றாலும் என் மைந்தனுக்கு இடையணி அணிவித்து பெயர் சூட்டும் விழா ஒன்று ஒருக்கியிருக்கிறேன். வரும் முழுநிலவுநாளில் அவனுக்கு மெய்ஆசிரியனாக தாங்கள் அமர்ந்து அச்சடங்கை செய்ய வேண்டும். அருள வேண்டும்” என்றான்.


அச்சொல்லுக்கு முன்னரே தன்னால் உடனே கிளம்பமுடியாதென்று அர்ஜுனன் அறிந்திருந்தான். அது ஒரு நிமித்தம் என அமைய “ஆம், அவ்வாறே” என்றுரைத்தான்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 14
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 13
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 12
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 18
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 7
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 21
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 20
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 19
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 17
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 16
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 15
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 11
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 10
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 58
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 56
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 52
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 51
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 09, 2016 10:30

November 8, 2016

நடுங்கும் நட்சத்திரங்கள்

 


ஆதிப்படிமங்கள் கவிதையில் எப்போதும் இருந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு கவிஞனும், ஒவ்வொரு கவிதையும் அவற்றை பொருள்மாற்றம் செய்துகொண்டே இருக்கிறார்கள். ஒருவரின் சூரியன் அல்ல பிறிதொருவரது. ஒருவரின் கடல் அல்ல பிறிதொருவர் காண்பது. ஆயினும் அனைத்துக் கவிதைகளுக்கும் பொருள் அளித்தபடி வெளியே கடல் அலையடித்துக்கொண்டிருக்கிறது


 


Sugumaran-Photo


கடலினும் பெரிது


சுகுமாரன்


 


விரும்பியதை அடைய

ஏழுகடல் கடக்க வேண்டும் என்றார்கள்


காலடி மணலில் பிசுபிசுத்த

முதல் கடலைத் தாண்டினேன்

பாதத்தில் புரண்டு கொண்டிருந்தது

இரண்டாம் கடல்

கணுக்காலைக் கரண்டிய

மூன்றாம் கடலை உதறித் தள்ளியும்

முழங்காலில் மண்டியிட்டது

நான்காம் கடல்

இடுப்பை வருடிய ஐந்தாம் கடலைப்

புறக்கணித்து நடந்தேன்

கழுத்தை நெரிக்க அலைந்தது

ஆறாம் கடல்

தலையை ஆழ மூழ்கடித்து

உட்புகுந்து ஆர்ப்பரித்த

ஏழாம் கடலைக்

கொப்பளித்துத் துப்பியதும்

‘வெற்றி உனதே, இனி

விரும்பியதை அடையலாம்’ என்றார்கள்.


உப்பை ருசித்தபடி கேட்டேன்

‘ஏழினும் பெரிய கடல் இல்லையா?’


 


என்னும் கவிதையை வாசித்ததும் நினைவுகள் வாசித்த அனைத்து கவிதைகளையும் தொட்டுக்கொண்டன. ‘ஏழாம் கடலினக்கரே’ என்னும் மலையாளச் செம்படவப்பாடல்.


 


சுகுமாரனின் கடல் கடந்துசெல்வதற்குரியது.  பிறருக்கு அது அரியது, ஆனால் கவிஞனால் கடக்கத்தக்கது. அலையலையாக கரையில் அறைந்து அறைகூவிக்கொண்டிருப்பது அது.


 




download (1)


 கொண்டுவந்த கடல்


யுவன் சந்திரசேகர்


 


இந்தமுறை சங்கு கொண்டு வந்தேன்

சென்ற முறை சிப்பி.

அதற்கு முன்னால் சோழி

பாலிதீன் பைகளில்

செதில் கலந்த மணலும்,

கரைக்கோயில் குங்குமமும்

கொண்டு வந்ததுண்டு.

ஒரு முறைகூட

கடலின் பரிதவிப்பை

பரிவை ஆறுதலை

கொண்டு வர முடிந்ததில்லை.

சீசாவில் கொண்டுவந்த கடற்குஞ்சு

பாதியாகிச்

செத்துக் கிடக்கிறது அலமாரியில்.


 


யுவனின் கடல் நேர்மாறாக அள்ளி கொண்டுவந்து உடைமையாக்கப்படவேண்டியது. சிப்பி போல சோழி போல கையில் அகப்படுவது. அகப்படாத ஒன்றாக அப்பால் விரிந்திருப்பது.


 


பிறிதொரு கடலை தற்செயலாக வாசித்தபோது கண்டடைந்தேன். இந்தக்கடல் அச்சுறுத்துகிறது. அள்ளமுடியாததாக, அறியமுடியாததாக, விண்மீன்களை நடுங்கச்செய்வதாக விரிகிறது


photo (1)


கடலைக் களவாடுபவள்


 


சுஜாதா செல்வராஜ்


 


கடலாடி மகிழும் மகள்


நம்ப மறுக்கிறாள்


கடலை


உடன் எடுத்துச்செல்லுதல்


இயலாதென்பதை


தூக்கணாங்குருவிக் கூட்டிற்குள்


குடிபுக முடியாதென்பதையும்


ஆமை ஓட்டிற்குள் மழைக்கு


ஒதுங்கமுடியாதென்பதயும்


 


 


பதறப் பதற


கிளிஞ்சல்களைப்


பொறுக்கத் தொடங்குபவள்


அரற்றிக்கொண்டு வருகிறாள்


வீடுவரை


உணவை மறுதலித்து


விழிகளை நிறைத்தபடி


உறங்கிப்போகுமவள்


விரலிடுக்கில் உறுத்தும்


மணலும்


உள்ளங்கைக்குள் புதையும்


கிளிஞ்சல்களும்


கடலுக்கு


வலைவீசிக்கொண்டிருக்கும்


நடுநிசிப் பொழுதில்


நடுங்கும் நட்சத்திரங்கள்


இமை தாழ்த்தி


உறைகின்றன


 


பெண்ணின் பார்வையில் விரிவைப்பார்த்த மறுகணமே எல்லைகளை உணர்ந்து பின்வாங்கி சுருங்குவதாக கடல்காணும் அனுபவம் அமைகிறதோ என்று தோன்றியது. அன்னையின் பார்வையில் மகளுக்குச் சொல்லப்படுகிறது இக்கவிதை.


 


தமிழ்க்கவிதை மரபில் செவிலிக்கூற்று எனப்படும் கவிதைகள் ஒரு நிரை. நற்றாய் என்று செவிலி சொல்லப்படுகிறாள். சங்கப்பாடல்களில் இருந்து ஆழ்வார் பாடல்களுக்குக் குடியேறிய ஓர் அழகியல் அது. உலகை அறிந்த அன்னை மகளுக்குச் சொல்லும் வரிகள் அவை. இயல்பாக அம்மரபில் சென்றமைகின்றது இக்கவிதை


 


சொல்லப்படமுடியாதவற்றை எவ்வண்ணமோ சொல்லிவிடும்போதே அது கவிதை. நடுநிசிப் பொழுதில் நடுங்கும் நட்சத்திரங்கள் என்னும் வரி நெடுநேரம் உடனிருந்தது என்னுள். இயல்பாக எளிய விஷயமொன்றைச் சொல்லிவிட்டதனாலேயே நிறைவளித்தது இது


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 08, 2016 10:37

சில சிறுகதைகள் -3

Madhavan_Elango


 


அன்பு ஜெயமோகன்,


 


உங்கள் கடிதம் கண்டேன். என்னுடைய தந்தையைப் பற்றி இதற்கு முந்தைய கடிதங்களில் ஒன்றில் கூறியிருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவருடன் சனிக்கிழமையன்று ஸ்கைப்பில் பேசிக்கொண்டிருந்தேன். அதிகமாக உங்களுக்கு நான் எழுதிய கடிதங்களை பற்றியே பேச்சு சுற்றி வந்தது. என்னைவிட அவர் உங்களை நன்றாக புரிந்துகொண்டுள்ளார் போலிருக்கிறது. “He is honest to his feelings. That’s how a writer should be. Isn’t it?” என்று கேட்டார். கிட்டத்தட்ட அதையேதான் நீங்களும் தெரிவித்திருந்தீர்கள்.


 


இன்னொரு விஷயம். கடந்த வாரமே நான் எழுதவேண்டும் என்று நினைத்தது. தங்கள் வாசகர்களிடமிருந்து எனக்கு வரும் கடிதங்களில் இருந்து ஒன்றை என்னால் நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது. உங்கள் தளத்தின் வாசகர்கள் எல்லோருமே தேர்ந்த வாசகர்களாக இருக்கிறார்கள். அனைவருமே நன்றாகவும் எழுதுகிறார்கள்.


 


தங்களுடைய வாசகி லோகமாதேவியை நிச்சயம் அறிவீர்கள். உங்களுக்கு நான் அனுப்பிய கடிதங்கள் மூலமாக என்னைஅறிந்துகொண்டிருக்கிறார். பொள்ளாச்சியில் தாவரவியல் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் அவர், “ஜெயமோகன் இல்லாத நாட்கள் எனக்கில்லை” என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்ளுமளவிற்கு தங்களின் அதிதீவிர வாசகி. கடந்த வாரம் அவர் என்னுடைய “முடி” என்கிற சிறுகதையை வாசித்துவிட்டு அதைப் பற்றி விமர்சனம் எழுதி அனுப்பினார். அதைத் தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். மேலும் அந்தச் சிறுகதையையும் தங்கள் வாசிப்புக்கு இணைத்துள்ளேன்.


 


கதையை ஆழ்ந்து வாசித்ததோடல்லாமல், அதற்காக அதிக நேரம் எடுத்துக்கொண்டு இவ்வளவு சிரத்தையுடன் நீண்ட விமர்சனம் எழுதி அனுப்பியுள்ளது ஆச்சர்யமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. அவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி.


 


முடி – மாதவன் இளங்கோ சிறுகதை


 


download


அன்புள்ள ஜெமோஅவர்களுக்கு,


வணக்கம். நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
என்னுடைய சமீப சிறுகதை முயற்சியை தங்கள் பார்வைக்கு வைக்க விழைகிறேன்.

http://solvanam.com/?p=43008


Regards,
சிவா கிருஷ்ணமூர்த்தி

 


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 08, 2016 10:35

வெண்முரசு 18வது கலந்துரையாடல்,சென்னை

KIRATHAM_EPI_09


அன்புள்ள நண்பர்களுக்கு,

சென்னை வெண்முரசு 18வது கலந்துரையாடல், வருகிற 13/11/2016 , ஞாயிறுக்கிழமை மாலை 4 மணிக்கு  நடைபெறுகிறது. இதில் கடலூர் சீனு ”வண்ணக்கடல் ” நாவலில் இருந்து பேசவிருக்கிறார்.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் .


இடம்
சத்யானந்த யோகா மையம்
11, தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு
வடபழனி
சென்னை
அழைக்க:- 9952965505




Thanks & Regards

SOUNDAR.G


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 08, 2016 10:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.