Jeyamohan's Blog, page 1710
November 18, 2016
2.0
எந்திரன்2 அல்லது 2.0 வின் முதல்தோற்ற வெளியீட்டுவிழா வரும் 20 ஞாயிறன்று மும்பையில் நிகழவிருக்கிறது.அழைப்பிதழே ஆல்பம் போலிருந்தது.
நான் வழக்கமாக சினிமா விழாக்களில் கலந்துகொள்வதில்லை. எனக்கு அவற்றில் பெரிய இடமும் இல்லை என்பது ஒரு விஷயம். பலசமயம் நான் பயணங்களில் இருப்பதனால் கலந்துகொள்ள முடிவதுமில்லை. கடல், பாபநாசம் போன்ற படங்களின் விழாக்களில் வெளிநாட்டில் இருந்தேன். எந்திரன் தொடக்கவிழாவின்போதும் வெளிநாட்டில்.
சினிமாவிழாக்கள் பெரிய ஊடகக் கொண்டாட்ட நிகழ்வுகள். அங்கே விண்மீன்கள்தான் முதன்மை.நான் அங்கே என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. இருந்தாலும் ஞாயிறுகாலை திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்புகிறேன். ஊருக்கு நேற்று முன்தினம்தான் வந்தேன். கர்ணன் படவேலைகள்.
சினிமாக்கள் எப்படியோ இந்தியாவில் ஒரு சமகாலச் சரித்திரமாக ஆகிவிடுகின்றன. அவை நிகழும்போது ஓர் அன்றாட மனநிலையில் நாம் இருந்தாலும் திரும்பிச்சென்று பழைய செய்திகளைப் பார்க்கையில் ஒருகாலகட்டத்தின் பகுதியாக இருந்தமையின் மெல்லிய பரவசத்தை அடையமுடிகிறது. அவ்வகையில் எந்திரன் வெளியீட்டுவிழா ஓர் அனுபவமாக அமையும் என நினைக்கிறேன்.
2.0 அனைத்துவகையிலும் ஒரு பெரிய தொழில்நுட்பக் களியாட்டம். ஷங்கரின் மனம் பொதுமக்களின் ரசனையை நுட்பமாக பின் தொடர்வது. நான் பார்த்தவரை இந்திய அளவில் சினிமாத் தொழில்நுட்பத்தின் உச்சம் இப்படம்தான்.
நான் படப்பிடிப்புக்கு எல்லாம் போனேன். என்ன நடகிறதென்றே புரியவில்லை. சினிமா சர்வதேசத் தொழில்நுட்ப நிபுணர்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது.மாரி இ வாக்ட், ஜான் ஹ்யூக்ஸ், வால்ட் ஜோஸ், கென்னி பேட்ஸ் , நிக் போவல், ஸ்டீவ் கிரிஃபின் என்று நம் சினிமாத்தொழில்நுட்பர்களின் பெயர்கள் திரையில் ஓடும் காலம். இயக்குநர் ஓர் இசையமைப்பாளர் போல கையசைத்து அவர்களை வழிநடத்தவேண்டியிருக்கிறது.
அக்ஷய்குமாரின் வில்லன் கதாபாத்திரத்தை நானே திரையில் பார்க்க விழைகிறேன். கிறிஸ்டோபர் நோலன் படங்களின் வில்லன்களைப்போன்ற தத்துவார்த்தமான ஆழம் கொண்ட கதாபாத்திரம்.
அத்துடன் வழக்கம்போல நம் உச்சவிண்மீனின் ஒளி. நான் பள்ளி மாணவனாக இருந்தபோது மூன்றுமுடிச்சு படத்தில் அவரைப் பார்த்தேன். இன்றுவரை நம்மை கவர்ந்திருக்கும் அந்தத் தோரணையும் துடிப்பும் முழுமையாக வெளிப்படும் படம் இது
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சிறுகதைகள் என் மதிப்பீடு -2
சிலசிறுகதைகள் 2 குறித்து என் பார்வைகளை முன்வைக்கும் முன் சில சுயவிளக்கங்கள். சம்பந்தமே இல்லாமல் எவரெல்லாம் புண்படுவார்களோ, முகநூலில் குமுறுவார்களோ அவர்களிடமெல்லாம் ‘மன்னிச்சிடுங்கண்ணாச்சி’ சொல்லிக்கொள்கிறேன்.
என் சிறுகதை விமர்சனத்தில் ஒரு சின்ன அத்துமீறல் உள்ளது. அது கதையை எப்படி எழுதியிருக்கலாம் என்று சொல்வது. விமர்சகன் அதைச் சொன்னால் ‘டேய் போடா’ என்றுதான் எழுத்தாளன் சொல்லவேண்டும். நான் சற்று ‘மூத்த’ எழுத்தாளன் என்பதனால் இந்த உரிமையை எடுத்துக்கொள்கிறேன்.
அதேபோல விமர்சகன் எழுத்தாளனை நோக்கிப் பேசக்கூடாது. அவன் எவனாக இருந்தாலும் விமர்சகன் என்பவன் எழுத்தாளனின் நுண்ணுணர்வோ, அறிவாற்றலோ கொண்டவன் அல்ல. விமர்சகனின் பணி மேலான வாசிப்பை உருவாக்குவதே. அவன் இடம் தேர்ந்த வாசகன் என்பதுதான் அவன் சகவாசகனை நோக்கியே பேசவேண்டும். வாசகன் வாசிக்காத இடங்களை சுட்டி வாசிப்பை விரிவாக்கும் முதன்மை வாசகனே நல்ல விமர்சகன்.
ஆனால் நான் படைப்பாளியை நோக்கிப் பேசுகிறேன். இதுவும் அத்துமீறல்தான். இலக்கியமுன்னோடிகள் வரிசை விமர்சனங்களில் வாசகனை மட்டுமே இலக்காக்குகிறேன். இங்கே கொஞ்சம் அத்துமீறுவதற்கான உரிமையையும் ‘முன்னோடி’ என்பதனால் எடுத்துக்கொள்கிறேன்
அப்படியெல்லாம் இல்லை, அந்த இடத்தை எனக்கு அளிக்கப்போவதில்லை என்னும் வாசகர்கள் ,எழுத்தாளர்கள் இதைப்புறக்கணித்துவிடலாம்.
*

காளிப்பிரசாத்
காளிபிரசாத்தின் விடிவு அவரது முதல் கதை. முதல் கதை என்ற வகையில் இயல்பாகவும் தடையின்றியும் செல்லும் மொழிநடை அமைந்திருப்பதைக் குறிப்பிட்டு பாராட்டியாக வேண்டும். சிறுகதை நவீன இலக்கியத்தின் ஒரு வடிவம் என்ற வகையில் அதன் தோற்றத்திலேயே புறவயமான ஒரு நடையை அடிப்படையான தேவையாகக் கொண்டுள்ளது. நிகழ்வுகளையும் அந்நிகழ்வுகளின்மேல் எதிர்வினையாக எழும் எண்ணங்களையும் குறைந்த சொற்களில் வாசகன் ஊகிக்கும்படி வாய்ப்புகளை அளித்து சொல்வது அதனுடைய வழிகளில் முக்கியமானது.
சிறுகதை முன்னோடிகளாகிய ஓ.ஹென்றி, செக்காவ், மாப்பாசான் ஆகியோருடைய கதைகளில் இந்த புறவய நடை அமைந்தபிறகு இன்றுவரை சிறுகதையின் மைய ஓட்டமாக இருப்பதே இதுதான். ஜி.நாகராஜன் சிறுகதைகளைப்பற்றிப்பேசியபோது ‘கதையில் என்ன எண்ணப்பட்டது என்பதை சொல்லவேண்டியதில்லை. என்ன நிகழ்ந்தது என்பதைச் சொன்னாலே போதுமானது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த மைய ஓட்டத்திற்கு எதிர்வினையாக வெறும் எண்ணங்களே ஆன கதைகளும் உணர்வுகளைச் சொற்களாக நேரடியாக வெளிப்படுத்துவதை மட்டுமே செய்யும் கதைகளும் எழுதிப்பார்க்கப்பட்டன. மௌனியின் சிறுகதை ஒரு உதாரணம். இன்னொரு வகையில் கு.ப.ராஜகோபாலனின் விடியுமா போன்ற சிறுகதைகள் உதாரணம்.
காளிபிரசாத்தின் முன்னுதாரணமாக புறவய நிகழ்வுகளையும் அவற்றின் இயல்பான உள எதிர்வினைகளை மட்டுமே எழுதி கதையை நிறுவும் அசோகமித்திரன் இருப்பதைக் காண முடிகிறது. முதற்கதையிலேயே தமிழின் முக்கியமான முன்னோடி புனைகதை எழுத்தாளர் ஒருவரின் நேரடியான செல்வாக்கு இருப்பதும் வரவேற்புக்குரியதே.
இக்கதை இறந்து போன நண்பன் ஒருவனின் கதாபாத்திரத்தை பற்றி ஒரு சித்திரத்தை வாசகனுக்கு அளிப்பதை ஒரு கதைச் சரடாகவும் அவனுடைய இறப்பிற்கு பிந்தைய அரசுச் சடங்குகள் மற்றும் சட்ட சிக்கல்களைப் பற்றிய ஒரு சரடாகவும் பின்னிச் செல்கிறது. முதல் சரடு கதை சொல்லியின் நினைவிலும் இரண்டாவது சரடு அவன் எதிர்கொள்ளும் புற உலகிலும் இருக்கிறது. இவை பெருமளவு குழப்பமில்லாமல் பின்னப்பட்டிருப்பதும் சிறுகதையின் வடிவத்தில் ஆசிரியருக்கு உள்ள தேர்ச்சியைக் காட்டுகிறது .முதல் கதை என்னும் போது இது குறிப்பிடத்தகுந்த வெற்றியே
சிறுகதையின் வடிவு என்பது கூரிய தொடக்கம், மையம் கொண்ட கதை ஓட்டம், புறவயமான நடை, காட்சித்தன்மை, இறுதியில் உச்சமும் திருப்பமும் கவித்துவ உட்குறிப்பும் அமையும் இயல்பு – ஆகியவற்றைக் கொண்டது. இது இலக்கணம்
காளிப்பிரசாத்தின் இக்கதை இறுதி முடிச்சை நம்பி இருப்பது. இறுதி முடிச்சை நம்பி இருப்பதில் அதன் உடல் பகுதியில் அம்முடிச்சுக்கு நேர்மாறான கதை சித்தரிப்பை அளிப்பதும், அம்முடிச்சுடன் நேரடியாகத் தொடர்பற்ற தகவல்களை தந்து வாசகனுடைய கவனத்தை திசை திருப்புவதும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட உத்தி அப்போதுதான் கதை முடியும்போது அந்த திருப்பம் வாசகனை ஒரு மெல்லிய அதிர்ச்சியுடன் அடுத்த கட்டத்தை நோக்கிக் கொண்டு செல்லவைக்கிறது. அவ்வகையில் சிறுகதையின் வடிவத்தையும் காளிபிரசாத் சிறப்பாகவே அடைந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.
கதை முழுக்க பலவகையிலும் புழங்கி வரும் ஏராளமான தகவல்கள் அக்கதை எப்படி முடியும் என்பதை வாசகன் ஊகிக்காதபடி அவன் கவனத்தை திசை திருப்பி விளையாடிச் செல்கின்றன. ஆனால் இச்சித்தரிப்பின் முக்கியமான குறைபாடாக இருப்பது இந்த திசைதிரும்பலுக்காகவும், சட்ட சிக்கல் உட்பட நடைமுறை வாழ்க்கையை சொல்லும் நோக்கத்திற்காகவும் தேவையற்ற மனிதர்கள் மற்றும் தேவையற்ற தகவல்கள் உள்ளே கடந்து வருவது. இது சிதறலை உருவாக்குகிறது. சிதறல் என்பது ஒரு வடிவக்குறைபாடே.
உதாரணமாக இக்கதையில் கோதண்டராமன் போன்ற அலுவலக நண்பர்களைப்பற்றிய குறிப்புகள் அனைத்தும் இந்தக்கதை அவர்களை நோக்கிச் செல்கிறதோ எனும் எண்ணத்தையும், அல்லது ரவியுடன் வாழ்க்கையுடன் கோதண்டராமனுக்கு ஏதோ ஒரு நுட்பமான உறவிருக்கிறதோ என்ற எண்ணத்தையும் உருவாக்குவதாக இருக்கிறது. சிறுகதையின் வடிவில் முடிவை வாசகனுக்குக் காட்டாத கைத்திறன் இருப்பது நல்லது. ஆனால் அது வாசகனை திட்டமிட்டு திசை திருப்புவதாகவோ அல்லது அவனது கவனத்தை கதையிலிருந்து விலக்குவதாகவோ அல்லது வேறு கதைகளை அவன் கற்பனை செய்யும் விதமாகவோ அமைவதென்பது சரியானதல்ல
ஆக இதன் புறவயச் சித்தரிப்பில் கோதண்டராமன் போன்று சம்மந்தமில்லாத கதாபாத்திரங்களின் குணச்சித்திரங்கள் இல்லாமல் இருதிருந்தால் , ஏதோ வகையில் வெளியே நடக்கும் ஒவ்வொரு செயல்களில் இருந்தும் ரவியின் குணச்சித்திரத்திற்கு இயல்பான ஒரு ஊசல் சென்று மீண்டிருந்தால் கதை வடிவம் இன்னும் ஒழுங்காக அமைந்திருக்கும்.
இறுதியாக, இக்கதையின் முடிச்சு பழகிப்போனது . இன்று விகடன் உட்பட வணிக இதழ்களிலேயே இத்தகைய கதைகள் சாதாரணமாக வெளிவரத்தொடங்கிவிட்டன. முப்பதாண்டுகளுக்கு முன் அசோகமித்திரன் இத்தகைய கதைகளை எழுதும் போது அன்றாடத்தன்மையிலிருந்து ஒரு மெல்லிய பேருணர்ச்சி வெளிப்படுவது அழுத்தமான விளைவுகளை உருவாக்கியது. ‘அவனுக்குப்பிடித்தமான நட்சத்திரம்\ போன்ற அசோகமித்திரனின் ஆரம்பகால கதைகளிலேயே இதை அவர் முயன்றிருக்கிறார். இன்று அக்கதைகளையே பெரிய அளவில் நம்மால் சொல்ல முடியவில்லை என்னும் போது அதே பாணியில் எழுதப்பட்ட ஒரு புதிய கதை அதன் வீச்சை பெருமளவுக்கு இழந்து விடுகிறது என்றே சொல்லத்தோன்றுகிறது.
மனிதர்கள் வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களில் ஒரு குறிப்பிட்ட வகையில் எதிர்வினை ஆற்றுகிறார்கள்; சிலர் மட்டும் தன் ஆழத்தின் இயல்பால் மேலே சென்று ஓர் மதிப்பீட்டை வெளிப்படுத்துகிறார்கள். அத்தகைய கதாபாத்திரத்தைக் காட்டுவது இக்கதையின் வடிவம். இது சிறுகதையின் பழகிப்போன கூறுமுறைகளில் ஒன்றாக இன்று மாறிவிட்டிருக்கிறது. இதேபோல ஒருவனை ஐயப்படுதல், பின்பு அவன் எப்படிப்பட்டவன் என்று தெளிதல் இன்னொரு மாதிரிவடிவம்.
இப்படிச் சொல்லலாம். 1. ஒரு கதாபாத்திரம் மீதான தவறான புரிதலைக் களைதல் 2 தெரியாத ஒரு செய்தியை ஒரு கதாபாத்திரம் வெளிப்படுத்துதல் 2 எதிர்பாராதபடி ஒரு கதாபாத்திரம் வேறுவகையில் வெளிப்படுதல் ஆகியவை ஒரு வகை ‘டெம்ப்ளேட்டுகள்’
கதை எழுதத்தொடங்கும்போதே இயல்பாக இத்தகைய கதைகள் தான் எழுதத்தோன்றும். ஏனென்றால் இவை அன்றாட வாழ்க்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் நாம் நமது முன் தீர்மானங்களை வாழ்க்கை முறியடிக்கும்போதே வாழ்க்கையின் உணர்வு சார்ந்த உண்மையை அறிகிறோம். உடனே அதை எழுதும்படி நமது கைகள் பரபரக்கின்றன. நமது முன் தீர்மானத்தை கதையின் உடலாகவும் நமது அறிதலை கதையின் உச்சமாகவும் வைத்துக் கொண்டால் ஒரு சிறுகதை வடிவம் இயல்பாக வந்துவிடும்.
ஆனால் அது பழகிப்போன வடிவம் என்றும் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். சிறுகதை எழுத்தின் ஆரம்ப கட்டத்தில் கதைக்கருவை தேர்ந்தெடுப்பது ஒரு அறைகூவல். நூறு வருடங்களாக சிறுகதை எழுதப்பட்ட நம் மொழியில் வாழ்க்கையின் பல்வேறு தருணங்கள் மேதைகளால் எழுதப்பட்டுவிட்ட பின்னர் புதிதாக ஒன்றை எழுதுவதென்பது எளியதல்ல.
ஆனால் இன்னொரு வகையில் அது எளிதுதான். ஏற்கனவே கதைகள் சொல்லப்பட்டுவிட்ட முறைமைகளை உணர்ந்து அத்தகைய கூறுகளை தவிர்த்து விட்டால் நம் வாழ்வில் எஞ்சுவது எதுவோ அது எல்லாமே புதிய விஷயமாகவே இருக்கும். காளிபிரசாத் அப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டுமென்றும் தொடர்ந்து எழுத வேண்டுமென்றும் விரும்புகிறேன்.
சுனீல் கிருஷ்ணன்
*
சுனில் கிருஷ்ணனின் ருசி கதையும் ஓர் அன்றாட உண்மையை புனைவினூடாக சென்று தொட முயல்கிறது. இக்கதையின்முக்கியமான அம்சம் என்பது வாசகனை நம்பி கதையின் அந்த நுண்ணிய தருணத்தை குறைந்த அளவு மட்டுமே காட்டி நிறுத்தியிருக்கும் தன்னம்பிக்கைதான். வாசகனிடம் சொற்பொழிவாற்றவோ வாசகனிடம் தேவைக்கு மேல் உரையாடவோ தான் சித்தரிக்கும் வாழ்க்கையை அலகுகளாகப்பகுத்து முன்வைக்கவோ ஆசிரியர் முயலவில்லை.
இக்கதையில் இருப்பது ஒரு தருணம் மட்டுமே. கதை சொல்லி அத்தருணத்தை தன் உள்ளம் வழியாகவும் அவ்வுள்ளத்தால் வந்தடையும் புறச்சூழல் வழியாகவும் வந்தடைகிறான். இவ்விரு சரடுகளும் பெருமளவுக்கு நேர்த்தியாகவே சொல்லப்பட்டுள்ளன. ஆனால் இக்கதை இன்றுவரை தமிழ்ச்சிறுகதை வந்தடைந்த பாதையிலேயே உள்ளது. ஆகவே புதியதாக இல்லை. சிறுகதையில் நேற்றைய நேர்த்திக்கு மதிப்பில்லை. புதியதன்மை – novelty – தான் முதன்மைக்குணம். திறனும் முழுமையும் அதற்குப்பின்னரே
உதாரணமாக கதை சொல்லியை ஏமாற்றி சுரண்டி சென்றுவிட்ட ஒருவனைப்பற்றி கதை சொல்லி அடையும் ஆங்காரமும் கோபமும் கதைக்குள் வந்து கொண்டே இருக்கின்றன. ஜானகிராமன் கதைகளைப்பார்த்தால் கதைசொல்லியே தன் உடன் வரும் எவரிடமேனும் சற்று வளவளப்பு எனத் தோன்றத்தக்க உரையாடல் வழியாக நேரடியாக சொல்வது போல் அமைந்திருக்கும். அசோகமித்திரன் கதைகளில் வரும்போது அவனுடைய உள்ளத்தில் நிகழ்ந்த எண்ணம் வழியாகவே அது காட்டப்பட்டிருக்கும். இக்கதையில் ‘எப்படி ஏமாற்றிவிட்டான், மூட்டைப்பூச்சி போல் உறிஞ்சிவிட்டு ஏமாற்றிச் சென்றுவிட்டான்’ என்று கதைசொல்லியின் உளக்குமுறலாக பல முறை திரும்ப வருகிறது. கதையே சிறிது எனும்போது இத்தனை முறை இது திரும்ப சொல்லப்படுவது வாசகனுக்கு தே வையற்றது.
இன்றைய ஓர் இளம் எழுத்தாளன் ஜானகிராமனோ அசோகமித்திரனோ அதை சொன்ன பாணியில் அன்றி வேறு எவ்வகையில் இதை சொல்லியிருக்க முடியும் என்றே யோசிக்க வேண்டும். ஒர் உரையாடலில் வரும் குறிப்பாக அல்லது ஒரு உருவகமாக அல்லது இதுவரைச் சொல்லப்படாத வெவ்வேறு வகைகளில் அதைக் குறிப்பிட்டிருக்கலாம். அப்படி ஒரு புதிய பாதை கண்டடையும்போது மட்டுமே இக்கதை அடுத்த தலைமுறை எழுத்தாளனின் கதையாக அறியப்படும். இன்று அது அசோகமித்திரனின் கதைகளின் ஒரு மெல்லிய நீட்சியாகவே நின்றுகொண்டிருக்கிறது.
ஒரு கதை எழுதிய பின்னர் இது எவ்வகையில் அசோக மித்திரனிடமிருந்தோ ஜானகிராமனிடமிருந்தோ வண்ணதாசனிடமிருந்தோ மேலே செல்ல முடியும் என்று எண்ண ஆரம்பிக்கும் போதே அக்கதையில் உள்ள குறைபாடுகள் கண்ணுக்குத் தென்படும். இது இளம் எழுத்தாளனுக்கு ஒரு முக்கியமான சவால்
ஒரு பேச்சுக்கு இப்படி வைத்துக் கொள்ளலாம். அந்தக் கதைசொல்லி ஒரு ரயில் நிலையத்தில் வாங்கும் அந்த மக்ரூனியுடன் அவன் சுரண்டப்பட்டதும் இணைந்திருந்தால் ,அவ்விரண்டும் ஒரே கூற்றாக கதைக்குள் இயல்பாக வந்திருந்தால், இக்கதை அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கும். உள்ளத்துக்குள் குமுறிக்கொண்டிருக்கிறான், பின்னர் மக்ரூனி வாங்குகிறான் என்ற அளவிலேயே இப்போது நின்று விடுகிறது. அவற்றுக்கிடையே உள்ள உறவு இக்கதையில் இவ்வடிவில் இல்லை.
மக்ரூனியை தயாரித்து விற்கும் ஒரு தொழிற்சாலையை இவர்கள் நடத்தியிருக்கலாம். வாங்கி விற்கும் ஒரு கடையை நடத்தியிருக்கலாம். அல்லது மக்ரூனியுடன் அந்த நண்பன் எவ்வகையிலோ தொடர்பு கொண்டிருக்கலாம். பல ஆண்டுகளாக மக்ரூனி என்பதே அவன் கைநடுங்க வைக்கும் ஒரு உணவாக இருந்திருக்கலாம்.
இன்று அவன் பிடிபட்டுவிட்டான் என்னும் போது ஒரு மக்ரூனியை வாங்கி இவன் உண்ணுகிறான் என்ற இடத்திலே கதை தொடங்கியிருக்கலாம். அதில் ஒரு துளியைக் கூட பங்கு வைக்க அவனுக்குத் தோன்றவில்லை என்பது அவனே உணரும்போது அந்தக் கதை முடிவுக்கு வருவது இயல்பாக அமைந்திருக்கும்.
அத்துடன் ருசி என்பதற்கும் அந்த ஏமாற்றப்பட்ட நிகழ்வுக்குமான உறவு கதைக்குள் வந்திருக்கவேண்டும். அவர்கள் இருவரும் சேர்ந்து சுவைத்த ஏதோ ஒன்றின் சுவையாக மக்ரூனி மாறியிருக்கலாம். அவர்கள் சேர்ந்து சுவைத்த நட்பு. அல்லது சேர்ந்து சுவைத்த பிறரது குருதி. எதுவோ. சுவைதான் கதை. ஆனால் அது எப்படி ஏமாற்றப்பட்ட உணர்வுடன் இணைகிறது என்பது வாசக உள்ளம் கோருவது.
இன்னொன்று ஒரு கதையின் அறஅடிப்படை என்பதும் வாசகனுக்கு திருப்தியூட்டக்கூடியதாக இருக்கவேண்டும். ஒரு பொட்டலம் இனிய உணவை எவருடனும் பகிர்ந்துகொள்ள தனக்கு தோன்றவில்லையே என்பது கதை சொல்லிக்கு ஒரு குற்ற உணர்வையோ அல்லது தன்னைப்பற்றிய ஒரு புரிதலையோ உருவாக்குவது இயல்பானதே ஆனால் அதன் பொருட்டு தன்னை ஏமாற்றிச் சென்றுவிட்ட ஒருவனை முழுமையாக அவன் மன்னித்துவிடுவான் என்றால் அந்த அற தன்மை சமநிலை அடையவில்லை.
ஏனென்றால் இப்படிச்சொல்லலாம். ஏமாற்றிச் சென்றவன் செய்தது ஒரு ’குற்றம்’. பிறருக்கு கொடுக்காமல் உணவை உண்பது ஒரு ’பிழை’. இரண்டும் சமானமானவை அல்ல. இந்த அம்சம் தான் இந்தக்கதையை படிக்கும் போது வாசகனுக்கு நிறைவுணர்ச்சியை அளிக்காமல் இருக்கிறது.
இதை எப்படி சமன் செய்திருக்கலாம் என்பது ஆசிரியருடைய சொந்த நீதியுணர்ச்சியை சார்ந்த ஒன்று நான் என்ன செய்திருப்பேன்? கதைசொல்லியை ஏமாற்றிச்சென்றவனுடைய ஏமாற்றுதலில் தனக்கும் ஒரு பெரிய பங்கு இருக்கிறது, அது பிறருக்குப் பகிராத தன்னியல்பால் தன்னை மட்டுமே சார்ந்து எண்ணும் தனது மனப்போக்கினால் தனக்குத் தானே இழைத்துக் கொண்ட ஒரு குற்றம் என்று அந்தக் கதை சொல்லி உணர்வான் என்றால் ஓரளவுக்கு இந்த சமன்பாடு சரியாக வருகிறது.
கதையின் கலைக்குறைபாடு என்று முக்கியமாக இன்னொன்றைச் சொல்லவேண்டும். உள்ளத்து உணர்வுகளை எழுதும்போது அவ்வுணர்வுகளை நேரடியான சொற்களில் சொல்வதை கூடுமானவரை தவிர்ப்பதே நல்லது. அதோடு அந்த உணர்வை வாசகன் அறிந்து கொண்ட பிறகும் கூட ஆசிரியன் சொல்லிக் கொண்டிருப்பான் என்றால் ஒரு சலிப்பை வாசகன் அடைவான்.
’ஆவேசமும் கோபமும் உள்ளூர நிறைத்து பொங்கின இரவெல்லாம் நினைவுகள் கற்பனைகள் அவனை விதவிதமாக சிறுமை செய்வது போல அவமதிப்பது போல பெரிய மனுஷத்தனத்துடன் மன்னிப்பது போல கெஞ்சி இறைஞ்சுவது போல…’ என்று சொல்லும் இடத்திலேயே அவ்வுணர்வுகள் வெளிப்பட்டுவிட்டன. அதைத் திரும்ப சொல்ல வேண்டியதில்லை.
உணர்வுகள் அல்லது எண்ணங்கள் கறாரான குறைந்த பட்ச சொற்களில் தான் சொல்லப்படவேண்டும். உணர்வுகளைப்பொறுத்தவரை அவற்றை நேரடியாக சொல்ல சொல்ல அவை வலுவிழக்கவே செய்யும். ‘உள்ளம் கொந்தளித்தது’ என்பது எந்த வகையிலும் உள்ளக் கொந்தளிப்பைக் காட்டாது. ’அழுகை வந்தது’ என்பது எந்த வகையிலும் துயரை காட்டாது. அவை சொற்கள். சொற்கள் பொருளை அளிப்பவை, உணர்வை அல்ல. ஆகவேதான் நாம் புனைவை எழுதத் தொடங்குகிறோம். அதற்குத்தான் படிமங்களையும் உருவகங்களையும் ஆசிரியர்கள் பயன்படுத்தினார்கள்.
இதன் போதாமை என்பது ஒரு வாசகனை அவன் அற உணர்வை தொட்டு நிலை குலையும் அளவுக்கு இதன் அறம் சார்ந்த வினா வலுவானதாக இல்லை என்பதே. அந்தக் கொந்தளிப்பு நிறைவூட்டும்படிச் சொல்லப்படவில்லை. அந்தக் கண்டடைதல் வாசகன் தன்னைக் கண்டடைவதாக ஆகவில்லை. ஆயினும் நுட்பமாகச் சொல்லப்பட்ட நல்ல கதை, ஆனால் முன்னோடிகளைக் கடந்து போகவில்லை என்றே சொல்வேன்.
சுனீல் கிருஷ்ணனின் ஆற்றல் புறவுலகை நுட்பமாகச் சொல்லும் திறன், அன்றாடவாழ்க்கையின் தருணங்களில் அறக்கேள்விகளை எழுப்பும் பார்வை ஆகியவை. அவை வளரட்டும்.
=========================================================================================
=================================================================================
==============================
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சுட்டி விகடனில்…
சுட்டி விகடனின் 18 ஆவது ஆண்டு நிறைவு இதழ் கடைகளுக்கு வந்துவிட்டது. அதில் நான் ‘வெள்ளிநிலம்’ என்று ஒரு குழந்தைகள் நாவலை எழுத ஆரம்பித்திருக்கிறேன். கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு முன்பு தினமணி சிறுவர் மலர் இணைப்பில் நான் எழுதிய பனிமனிதன் நாவலின் தொடர்ச்சி இந்நாவல். அதில் வந்த பாண்டியன், டாக்டர், கிம் ஆகிய கதாபாத்திரங்கள் மட்டும் . திபெத், ஸ்பிடி சமவெளி, லடாக், பூட்டான் என கதையின் களம் இமையமலைதான்.
பனிமனிதனை குழந்தைகளாக வாசித்த பலர் என் வாசகர்களாக இன்று இருக்கிறார்கள். வாசிக்கும் குழந்தைகளுக்குரிய எழுத்து அது. அதாவது, நடை மிக எளிதாக இருக்கும். நிகழ்வுகள் சிக்கலற்றவை. ஆனால் அடிப்படையில் ஒரு தீவிரமான புனைவு. பனிமனிதன் ஆழமான மானுடக்கேள்விகளை எழுப்பிய நாவல். இதுவும் அவ்வகையிலேயே இருக்கும்
அடிப்படையில் இது ஒரு சாகசநாவல். குழந்தைகளுக்குப்பிடித்தமான மாயநிலம். பரபரப்பான சாகசக்காட்சிகள், கூடவே கொஞ்சம் அறிவியல் ஆகியவையே பனிமனிதன் மிக விரும்பப்பட்டமைக்குக் காரணம். இந்நாவலில் அறிவியலுடன் கொஞ்சம் வரலாறும் இருக்கும். ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம். குழந்தைகளுக்கு வாசிக்கக்கொடுக்கலாம். வாசித்துக்காட்டலாம்.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 31
[ 48 ]
பீதர் வணிகர்களுடன் அர்ஜுனன் பிங்கலத்தில் இருந்து எலிமயிரின் நிறம் கொண்டிருந்த தூசரம் என்னும் பாலையை கடந்தான். மரவுரியின் நிறம் கொண்டிருந்த கபிலத்தையும் பூர்ஜப் பட்டை என வெளிறிய பாண்டகத்தையும் கடந்தான். வெயில் என்பது நிலத்திற்கு ஒன்று என்று உணர்ந்தான். மரப்பட்டைகளை உலர்த்திவெடிக்கவைக்கும் வெயிலை அவன் அறிந்திருந்தான். கற்பாறைகளை விரிசலிடச்செய்யும் வெயிலை அங்கு கண்டான்.
நீர் என்பது தேக்கமென பெருக்கென அதுவரை அறிந்திருந்தான். அது துளிகள் மட்டுமே என உணர்ந்தான். கழுதைகளில் ஏற்றப்பட்ட தோற்பைகளில் நீர்கொண்டுசென்றனர். ஒவ்வொருவருக்கும் உரிய நீர் அன்றுகாலையிலேயே வழங்கப்பட்டது. எரிக்கும் வெயிலில் அதை துளித்துளியாக அருந்தியபடி முன்சென்றனர். கையில் நீர் இருக்கும் எண்ணமே கடும் விடாயை தாங்கச்செய்யும் விந்தையில் திளைத்தனர். அதில் சிறுபகுதியை மறுநாளைக்கென சேர்த்துவைத்தவர்கள் பற்களைக் காட்டி மகிழ்ந்து நகைத்தனர். இரவில் துயில்வதற்கு முன் அந்த நீரை நாவில் விட்டுச் சுழற்றி அமுதென சுவைத்தனர்.
நீர்த்துளியை விரல்நுனியில் தொட்டு கண்முன் தூக்கி நோக்கினான் அர்ஜுனன். அதன் ஒளியும் ததும்பலும் முழுப்பும் நெஞ்சை ஆட்கொண்டன. அதன் வளைவுகளில் பாலைநிலப்பரப்பு வளைந்து சுருண்டிருந்தது. விழிகளைச் சந்திக்கும் விழிமணி. விழியே நீரென்றாகியதா என்ன? சொட்டுவதும் வழிவதும் தேங்குவதும் பெருகுவதும் விரைவதும் பொழிவதும் அலைகொள்வதும் திசையென்றாவதுமான விழியா அது?
கடக்கும்தோறும் பாதை நீண்டு வர கால்கள் தன்விழைவால் நடந்தன. நடப்பதே அவற்றின் இருப்பு என்பதுபோல. துயிலிலும் கால்கள் நடந்துகொண்டிருப்பதாக உணர்ந்தான். அதுவரை அவன் கொண்டிருந்த நடையே மாறலாயிற்று. புதையும் மணலுக்குள் முழுக்காலையும் பதியவைத்து சிறிய அடிகளாக தூக்கி வைத்து சீரான விரைவில் நடக்கவேண்டியிருந்தது. நடைமாறுபட்டதும் நடப்பதும் எளிதாயிற்று. ஒருகட்டத்தில் அத்திரிகளும் ஒட்டகைகளும்கூட அப்படித்தான் நடக்கின்றன என்று தோன்றியது.
நாள் செல்லச்செல்ல ஒவ்வொரு நோக்கிலும் பாலையின் வடிவங்கள் பெருகின. இன்மையென, வெறுமையென, மாற்றமின்மை எனத் தெரிந்த வறுநிலம் மெல்ல தன் உயிர்க் களியாட்டத்தை காட்டலாயிற்று. பொருக்கு என எழுந்த சிறுகூடுகளுக்குள் வெண்ணிற எறும்புகளின் உலகம் கலைந்து பரவியது. சிதல்வரிகளுக்குள் ஆழ்ந்த பாதைகள் இருந்தன. நொதித்த மாவில் என மென்மணலில் விழுந்த சிறுதுளைகளிலிருந்து கரிய எறும்புகள் கசிந்தவைபோல் எழுந்து நிரைவகுத்துச் சென்றன. கற்களின் அடியிலிருந்த விரிசல்களில் இருந்து சிற்றுயிர்கள் எட்டிப்பார்த்தன. ஒட்டகக் குளம்போசையின் நடுவே விரைந்து உட்புகுந்து மறைந்தன.
சாறே அற்றவைபோல, மறுகணம் பற்றிக்கொள்வனபோல தெரிந்த முட்புதர்கள் அனைத்திலும் புழுதிபடிந்து மண்வடிவெனத் தோன்றிய இலைகள் உயிருடனிருந்தன. அவற்றை உண்ண இருளுக்குள் விழிமின்ன எலிபோன்ற சிறு விலங்குகள் வந்தன. அவற்றை பிடிக்க பட்டுநாடா போன்ற வண்ணப்பட்டைகளுடன் பாலைநாகங்கள் பாறைகளுக்கிடையே இருந்து வளைந்து எழுந்தன.
உலோகமென மயல் காட்டிய கூர்முட்களில்கூட உயிர் இருந்தது. புலரியில் அந்த முள்முனைகளில் மென்மயிர் நுனியில் என பனித்துளிகள் நடுங்கின. அத்துளிகளை சிறு சிப்பியளவே இருந்த குருவிகள் வந்து அமர்ந்து கோதுமை மணிகள் போன்ற அலகுகளால் கொத்தி உறிஞ்சி உணடன. சாம்பல்நிறச்சிறகுக்கு அடியில் கொன்றைமலர் வண்ணம் கொண்ட அடிவயிறுள்ளவை. வெண்பஞ்சு நெஞ்சும் இளநீலவரிகொண்ட சிறகுகளும் கொண்டவை. கோவைப்பழம்போல் சிவந்தவை சிலவற்றின் சிறகுகள். பழுத்த மாவிலைபோல் பொன்மின்னியவை சில.
முள் மட்டுமேயாகி, கீழே வலையென நிழல்விரித்து நின்றிருந்த மரங்களுக்குள் மலர்செறிந்ததுபோல் நூற்றுக்கணக்கில் சிறிய குருவிகள் அமர்ந்து சலங்கைகள் குலுங்குவதுபோல் ஒலி எழுப்பி பேசிக்கொண்டிருந்தன. காலடியின் ஓசை கேட்டு அவை காற்று அள்ளி வீசிய மலர்கள் என எழுந்து சுழன்று பறந்து அமைந்தன. தொலைவில் வண்ணப் பட்டுத்துவாலை ஒன்று பறந்தலைவதெனத் தோன்றியது.
அனலென நாக்கை நீட்டிப்பறக்க வைத்தபடி சாலையோரப் பாறையொன்றில் அமர்ந்து நடுங்கி வண்ணம் மாற்றிக்கொண்டது உடும்பு. ஓசை கேட்டு வால் வில்லென வளைய கன்னச்செதில்கள் சிலிர்த்து விடைக்க தலையை மேலும் கீழும் அசைத்து நெருப்பொலியை எழுப்பியது. வண்ணமணித்தொகை என தன் வாலை சிலம்பொலியுடன் ஆட்டிக்காட்டி மணலுக்குள் தலைபதித்துக் கிடந்த நச்சு நாகம் ஒன்றை காவல்வீரன் நீண்ட கழியால் அள்ளி எடுத்து வீசினான். மென்மணல் சரிவில் அலைவடிவை வரைந்தபடி அது வளைந்து சென்று மணலுக்குள் தலை பதித்து தன்னை இழுத்து உள்ளே பதுக்கிக்கொண்டது.
மணல்மேல் கால்பரப்பி நடந்த வெண்சிறு சிலந்திகள் துளைகளுக்குள் சென்று மறைந்தன. முட்புதர்களுக்குள் பனி நிற வலைச்சுழிகள் அழகிய உந்திக்குழிகள்போல் இருந்தன. பொன்னிறக் கூழாங்கற்கள்போல வண்டுகள் சிறகுகள் ரீங்கரிக்க சுற்றிவந்தன. அவற்றை உண்பதற்காக மணலில் கால்பதிய வாலசைத்து எம்பி அமர்ந்து நடந்தன நீளவால்கொண்ட குருவிகள்.
“உயிர்” என்று அர்ஜுனன் சொன்னான். “ஆம், நீரின் சாயல் காற்றிலிருந்தால் போதும், அங்கு உயிர் இருக்கும்” என்றார் போ என்னும் பெயர்கொண்ட முதுபெருவணிகர். “வீரரே, நீர் என்பது உயிரின் மறுபெயர்.” வெந்துவிரிந்த வறுநிலம் நோக்கி “இங்கு மழை பெய்வதுண்டா?” என்றான் அர்ஜுனன். “மழைக்காலம் என்று ஒன்றில்லை. பல்லாண்டுகளுக்கு ஒருமுறை எப்போதேனும் பெய்யலாம். ஆனால் காற்றில் நீர் உண்டு. குளிர்ந்து காலையில் அவை இலைகள் மேல் பரவுகின்றன. இச்சிற்றுயிர்களுக்கு அந்த நீரே போதும்.”
“இங்கு பெரிய உயிர்களும் உள்ளன” என்று அர்ஜுனன் இரும்பாலான கவசமணிந்த புரவிபோல அவர்களின் பாதையைக் கடந்துசென்ற ஒரு பெரிய எறும்புதின்னியை நோக்கியபடி சொன்னான். “இளையபாண்டவரே, குருதியும் நீரல்லவா?” என்றார் போ. அச்சொல்லாட்சி அவனை ஒரு கணம் திகைக்கச் செய்தது. உடனே புன்னகைத்து “ஆம்” என்றான்.
முகிலற்றிருந்த நீலவானத்தின் தூய்மை ஒரு அழியா இருப்பென தலைக்கு மேல் ஏறி எப்போதும் தொடர்ந்தது. நிற்கும்போதெல்லாம் அதை அண்ணாந்து நோக்காமல் இருக்க முடியவில்லை. பாலையில் நுழைந்ததுமுதல் வானத்தின் முகிலின்மை அளித்து வந்த மெல்லிய பதற்றம் நாள்செல்லச் செல்ல விலகியது. அளியின்மை எனத் தோன்றியிருந்த அது மாசின்மை எனத் தோன்றத்தொடங்கியது.
இளைப்பாறுவதற்காக பாலைச்சோலைகளில் படுக்கும்போது வான் முழுமையாகத் தெரியும்படி முள்மர நிழல்களைத் தவிர்த்து பாறையடிகளில் அவன் மல்லாந்தான். வானை நோக்கிக் கொண்டிருக்கையில் அங்கிருந்து ஒலியின்மை வழிந்து தன்னைச் சூழ்ந்து மூடிக்கொள்வதை அவன் விழிகளால் பார்த்தான். உள்ளமென்று அவன் உணர்ந்த சொற்பெருக்கு ஓய்ந்து துளித்துச் சொட்டி மறைய முற்றிலும் இன்மையில் ஆழ்ந்து விழிதிறந்து கிடந்தான்.
விண்ணிலுள்ளது தூயநீர்ப்பெருக்கு என்கின்றது வேதம். மாமழை அக்கடலின் ஒரு துளிக்கசிவே. வருணன் அத்துளியின் காவலன். வருணனைப்போன்ற துளிகள் சென்று சேர்ந்தெழுந்த பெருங்கடல் ஒன்று அங்குள்ளது. இவ்விண்மீன்கள் நீர்த்துளிகளா என்ன? சுட்டுவிரல்முனையில் பழுத்துத் ததும்பி சொட்டத்துடிக்கும் விழிகளா? எவரேனும் தொட்டு உசுப்புகையில் துடித்து வந்து அள்ளிப்பற்றிக்கொண்டு எரித்துக் கொழுந்தாடத் தொடங்கியது காலம்.
கழுகின் உகிர்க்கால்கள் போல புழுதிப்பரப்பை அள்ளிநின்ற வேர்ப்பற்றும் யானைக்கால்கள் போன்று கருமைகொண்டு முரடித்த அடிமரங்களும் கொண்ட மரங்கள் குறுகிய கிளைகளை நீட்டி குற்றிலைகளும் முட்களுமாக செறிந்திருந்த சோலைகள். தெற்கிலிருந்து நிலைக்காது வீசும் காற்றுக்கு வடபுலம் நோக்கி சீவப்பட்ட மயிரென வளைந்து நின்றிருந்தன அவை. சருகுகள் மென்மணலால் மூடப்பட்டிருந்தன. கால்கள் வைக்கையில் அழுந்தி ஆழங்களில் தீப்பற்றிக் கொள்ளும் ஓசை எழுப்பின.
“சருகுகளின் மேல் கால்வைக்க வேண்டாம்” என்று வணிகர்கள் எச்சரித்துக் கொண்டிருந்தனர். “நாகங்கள் உள்ளிருக்கும், கருதுக!” காலில் தோல் உறையிட்ட அத்திரி ஒன்றின்மேல் ஏறி ஒருவன் சரிவிலிறங்கிச் சென்று குவிந்த ஆழத்தில் சேறு தேங்கிய வளையத்தின் நடுவே சந்தனச்சட்டத்திற்குள் ஆடி என வானொளி ஏற்று நடுங்கிக் கொண்டிருந்த நீர்ப்பரப்பு வரை சென்று வழி உருவாக்கினான். முன்னும் பின்னும் சென்று அவன் உருவாக்கிய அவ்வழியினூடாக மட்டுமே பிறர் நடந்து சென்றனர்.
மூங்கில் குவளைகளில் நீரள்ளி முதலில் போவுக்கு அளித்தனர். அதை வாங்கி தலைவணங்கி தெய்வங்களுக்கு வாழ்த்துரைத்தபின் அவர் அருந்தினார். பின்னர் அர்ஜுனனுக்கு அதை அளித்தார். “இனிது… நீரளவு இனிதென ஏதுமில்லை புவியில்.” வரிசையாக அனைவருக்கும் நீர் அளிக்கப்பட்டது. ஓர் ஆழ்ந்த இறைச்சடங்குபோல அவர்கள் அமைதியுடன் நீர் அருந்தினர். நீரை உடல் ஏற்றுக்கொள்ளும் ஒலி எழுந்தது. அவி ஏற்கும் அனலின் ஒலிபோல. உயிர் மண்ணை உணரும் ஒலி என அர்ஜுனன் நினைத்தான்.
மானுடர் அருந்திய பிறகு அத்திரிகளுக்கும் இறுதியாக ஒட்டகைகளுக்கும் நீரளிக்கப்பட்டது. மணற்காற்று ஓலமிட்டுக் கொண்டிருந்த இரவில் வெடித்துச் சாய்ந்தும் காற்றில் அரித்து ஊன்போல உருக்காட்டியும் நின்ற பாறைகளுக்கு அடியில் காற்றுத்திசைக்கு மறுபக்கம் அவர்கள் தங்கினர். அப்பால் பாறைமேல் மணலை அள்ளி வீசி மழையோ என ஓசையிட்டுக்கொண்டிருந்தது காற்று. தோலாடைகளால் முற்றிலும் உடல் மறைத்து முகத்தை மட்டும் காற்றுக்கு வெளியே நீட்டி அமர்ந்தபடியே துயின்றனர்.
[ 49 ]
மழை என ஒவ்வொருநாளும் மயல்காட்டியது பாலை நிலம். ஒவ்வொருநாளும் காலையில் கடுங்குளிரில் உடல் நடுங்கி பற்கள் கிட்டிக்கத்தான் போர்வைக்கூடாரத்திற்குள் அவன் விழித்துக்கொண்டான். குளிர் குளிர் குளிர் என உள்ளம் ஓடிக்கொண்டிருக்கும். குளிரில் தோள்கள் இறுகிக்கோட்டியிருக்கும். கழுத்துத் தசைகள் எடைதூக்குவதுபோல இறுகி நிற்கும். கைவிரல்பூட்டுகள் எலும்பு ஒடிந்தவைபோல உளையும். கால்விரல்கள் மரத்து உயிரற்றிருக்கும். காதுமடல்கள் எரியும்.
உள்ளே கம்பளியும் வெளியே தோலும் வைத்து தைக்கப்பட்ட அந்தப்போர்வை அவன் உடலின் மூச்சையும் வெம்மையையும் உள்ளே சேமிப்பது. பின்னிரவில் அந்த வெம்மை கருப்பை போலிருக்கும். எந்த அணைப்பிலும் அந்த ஆழ்ந்த அன்பை உணர்ந்ததில்லை. விடியலின் இருளுக்குள் அந்த வெம்மையை விண்மீன் மினுங்கும் கரியவானம் அள்ளி உண்டுவிடும். உடல் உயிரென எஞ்சியிருக்கும் வெம்மையை மூச்சினூடாக வெளியே அனுப்பிக்கொண்டிருக்கும். சற்று நேரத்திலேயே நடுங்கி அதிரத்தொடங்கும்.
பின்னர் சூரியனுக்கான தவம். கணம் கணம் என. எண்ணம் எண்ணம் என. விண்மீன் விண்மீன் என. அலையலையென காற்றில் காலம் அள்ளி வரப்பட்டு அவனைச்சூழும். அள்ளிச்செல்லப்பட்டு அடுத்த அடுக்கு வந்தமையும். காற்றில் எப்போதும் ஒரே மணம். புழுதி. ஆனால் வந்தபின் அந்த மணத்தின் வேறுபாடுகளை காணப்பழகிக்கொண்டான். காலைப்புழுதியில் குளிர்ந்த பனியின் ஈரம் கலந்திருக்கும். பின்னர் நீராவி. பின்னர் வறுபடும் மணல். பின்னர் மணலுமிழும் அனல். பின்னர் வெந்த சுண்ணம். பின்னர் மெல்லிய கந்தகம். பின்னர் இருளுக்குள் இருந்து முள்மரங்களின் மெல்லிய தழைமணம்.
ஒளியெழுந்ததும் கண்கள் வழியாகவே உடல் வெப்பத்தை அள்ளிப்பருகத் தொடங்கும். உடல்தசைகள் நீர்பட்ட களிமண் என இறுக்கம் அழிந்து குழைந்து நீளும். கைகால்கள் சோர்வு கொண்டு இனிமையடையும். கண்கள் சொக்கி மீண்டும் ஓர் இன்துயில் வந்து எடையென உடல்மேல் அமையும். சித்தம் ஒளியுடன் குழைந்து மயங்கும். குருதிக்கொப்புளங்கள் அலையும் செவ்வெளியில் சூரியக்கதிர்கள் அதிர்ந்துகொண்டிருக்கும். உடலெங்கும் குருதி உருகி கொப்பளிப்பு கொள்ளும். செவிமடல்களில் குருதியின் துடிப்பை உணரமுடியும்.
எழுந்து நோக்கும்போது முள்முனைகளில் எல்லாம் பனித்துளிகள் ஒளிவிட்டுக்கொண்டிருக்க அருமணிகள் கனிந்த வயல் எனத் தெரியும் பாலை. விண்சுரந்த நீர். விண்ணில் வாழ்கின்றன பெருங்கடல்கள். ஆனால் நோக்கி நிற்கவே அவை உதிராது காற்றில் மறையும். பின்னர் நீள்மூச்சுடன் பாலைநிலம் வெம்மைகொள்ளத் தொடங்கும். வானிலிருந்து வெம்மை மண்ணை மூடிப்பொழிந்துகொண்டிருக்கும். பின்காலையாகும்போது மண்ணிலிருந்து வெம்மை மேலெழத் தொடங்கும். பின்னர் வானிலிருந்து வரும் காற்று மண்ணின் அனலை அவிப்பதாகத் தெரியும்.
உச்சிப்பொழுதே பாலையில் பெரும்பொழுது. அறத்தின் துலாமுள் என கதிரவன் அசைவற்று நின்றிருக்க நிழல்கள் தேங்கிய பாறைகள் வெம்மைகொண்டு கனலுண்டு கனலுமிழ்ந்து உருகுநிலையை நோக்கி செல்வதுபோலிருக்கும். பின்மாலையில் வெம்மை இறங்குகிறதா இல்லையா என உள்ளம் ஏங்கும். அப்போது மென்மையாக காதை ஊதும் நீராவி மழை என்று சொல்லும். மழை என உள்ளம் குதித்தெழும். ஆம், மழையேதான். மழைவிழுந்த வெம்புழுதியின் தசைமணம். மழைக்காற்றின் மென்குளிர். அது மயலா மெய்யா? இல்லை உணர்கிறேன். உண்மையே அது. மழை.
“மழை!” என அவன் அருகே வந்த வணிகரிடம் சொன்னான். “மழையேதான்.” அவர் இதழ்கோட்டிய புன்னகையுடன் “அதன் பெயர் மாயாவருணன். மழையெனக் காட்டுவான். மழைத்துளிகளைக்கூட உதிர்ப்பான். மழைக்காக ஏங்கும் உயிர்களுடன் விளையாடுவான். வருணனை வெறுக்கச்செய்யும்பொருட்டே அவன் தோன்றுகிறான்.” அர்ஜுனன் விண்ணை நோக்கினான். தென்கிழக்கே முகில்கள் தெரிந்தன. “முகில்கள் வந்துகொண்டிருக்கின்றன” என்றான்.
“ஆம், அவை நீர்சுமந்த கடல்முகில்கள் அல்ல. மண்ணில் இருந்து எழுந்தவை. மேலெழுந்து குளிர்ந்து குடையாகின்றன. அவைதான் மாயாவருணனின் கருவிகள்.” அர்ஜுனன் அவர் சொன்னதை நம்பவில்லை. மழை மழை என உள்ளம் தவிக்க முகில்களை நோக்கிக்கொண்டிருந்தான். முகில்கள் காற்றில் புகை எனக்கரைந்து வானில் மறைந்தன. மேலும் மேலும் நீராவி சுமந்து தோலை வியர்க்கவைத்த காற்று மீண்டும் வெம்மைகொள்ளத் தொடங்கியது. மூச்சுத்திணறல் வந்தது. கண்ணிமைகள் வியர்த்து விழிகளுக்குள் உப்பு சென்றது. விடாய் எழுந்து உடலகம் தவித்தது.
“நீர் அருந்தலாகாது. மழைவருமென எண்ணி நீரை அருந்தவைக்கும்பொருட்டே மாயாவருணன் இதை செய்கிறான்” என்றார் வணிகர். “பாலையில் தவித்து இறக்கும் மானுடர் அருகே வந்திறங்கி அவன் நடனமிடுகிறான். வெள்ளெலும்புகளைச் சுற்றி அக்காலடிகளை காணமுடியும்.” அர்ஜுனன் அந்த மழைமயக்கு மெல்ல விலகி சூரியன் மேலும் ஒளிகொள்வதையே கண்டான். மெல்ல அந்தி. இருள்மயக்கில் மீண்டுமொரு நீராவிப்படலம் வந்து செவிதொட்டு ஏக்கம் கொள்ளச்செய்தது.
மாயாவருணனை அறிந்த தேர்ந்தவணிகரும் கூட ஏமாற்றம்கொள்ளாமல் இருக்கமுடியவில்லை. ஒருமுறை நன்றாகவே வான் மூடிவிட்டது. திசைகள் மயங்கும் இருள். ஆடைவண்ணங்கள் மேலும் ஆழம் கொண்டன. “மழை” என்றான் அர்ஜுனன். “பார்ப்போம்” என்றார் போ. மேலும் மேலும் இருட்டிவந்தது. வெம்மை முழுமையாக மறைந்து குளிர் காதுகளைத் தொட்டது. உடல் சிலிர்ப்பு கொண்டது. “ஆம், மழையேதான்” என்றான். “பார்ப்போம்” என்று போ சொன்னார்.
முதல்மழைத்துளியின் ஓசையைக் கேட்டதும் அவன் உடல் அதிரத் தொடங்கியது. சிற்றம்பு வந்து மென் தசையை தைப்பதுபோல மீண்டுமொரு மழைத்துளி. “ஆம், மழை” என்று அவன் கூவினான். “மழை! மழை!” பலர் கூவத்தொடங்கினர். இளைஞர் கைகளை விரித்து கூச்சலிட்டபடி ஆடலாயினர். “மழைதான்…” என்றார் போ. ”பாணரே, சொல்க! இது மழையா?” என்றான் ஒருவன். பீதர்நாட்டுப்பாணன் சுருங்கிய கண்களுடன் நகைத்து “ஆம், மழை” என்றான். “அனைத்துக்குறிகளும் மழை என்கின்றன.”
மழைத்துளிகள் கூடை கவிழ்த்து கொட்டியதுபோல விழுந்தன. அக்கணமே மண்ணிலிருந்து எழுந்த நீராவிக்காற்று அவற்றை அள்ளிச் சிதறடித்தது. வானிலெழுந்த முகில்பரப்பு விரிசலிடலாயிற்று. சூரிய ஒளி அதனூடாக வந்து மண்ணில் ஊன்றி நின்றது. அதில் செந்நிறமாக புழுதிகலந்த நீராவி ஒளியுடன் அலையடித்தது. வானம் பெரும் பெட்டகம்போல் திறக்க பாலை செந்நிற ஒளிகொண்டபடியே வந்தது.
சற்றுநேரத்திலேயே முகில்பரப்பு இரண்டு பகுதிகளாகப்பிரிந்து தெற்கும் மேற்குமென வளைந்தது. பாலை முன்பிருந்ததுபோலவே வெயில்படர்ந்து விழிகூசச் சுடர்ந்தது. வணிகன் ஒருவன் குனிந்து புழுதியில் இருந்து நீர்த்துளி விழுந்து உருவான உருளையை கையில் எடுத்தான். “பனிப்பழமா?” என்றான் ஒருவன். “இல்லை நீர்தான்” என்றான் அவன்.
போ தன் ஆடையிலிருந்த மண்ணைத் தட்டியபடி “முகில் என நின்றது புழுதி” என்றார். புழுதியை மண்ணில் இருந்து எழும் வெங்காற்று மேலே கொண்டுசென்று முகிலீரத்துடன் கலந்துவிடுவதைப்பற்றி ஒருவன் சொன்னான். “வானில் ஒரு சேற்றுச்சுவர் அது” என்றார் போ. பெருமூச்சுடன் தனக்குத்தானே என “எத்தனை அறிந்தாலும் மாயாவருணனிடமிருந்து எவரும் முற்றிலும் தப்பிவிடமுடியாது” என்றார்.
பாணன் உரக்க நகைத்து “அத்தனை தெய்வங்களுக்கும் மாயவடிவங்கள் உள்ளன, பெருவணிகரே” என்றான். மூச்சிழுக்க முடியாதபடி காற்று எடை கொண்டதாகத் தோன்றியது. குருதி அழுத்தம் கூடி உடலை உடைத்துத் திறக்க விரும்பியது. “ஒரு மழை… ஒருமழை இல்லையேல் இறந்துவிடுவேன்” என முதல்முறையாக வந்த இளவணிகன் ஒருவன் கூவினான். தலையை ஓங்கி ஓங்கி அறைந்தபடி “வாழமுடியாது…. என் உடல் உருகிக்கொண்டிருக்கிறது” என்றான்.
“இந்த நீர்த்துளிகள் நச்சுக்கு நிகரானவை” என்றார் போ. “மாயாவருணன் உமிழ்வது இந்த நச்சுமழை.” பாதையின் ஓரத்தில் சிற்றுயிர்கள் இறந்து கிடப்பதை அவர்கள் கண்டனர். சிறிய ஓணான்கள் பல்லிகள் வெண்வயிறுகாட்டி எஞ்சிய உயிர் வயிற்றில் பதைக்க விரல்கள் விரிந்து சுருங்க வால்நுனி அசைய கிடந்தன. ஒருநாகம்கூட நாவீசியபடி நெளிந்துகொண்டிருந்தது. “நூறு மாயாவருணன்களைக் கடந்தே வருணனை அடையமுடியும்” என்றான் பாணன்.
[ 50 ]
பாறைகளற்று நெடுந்தொலைவு வரை அலையலையாகக் கிடந்த ஊஷரத்தைக் கடப்பதற்கு நெடுநாட்களாயிற்று. அங்கு கிடைத்த நீர் உப்பு மிகுந்திருந்தது. அதை வடிகட்ட அரிப்புகளை அவர்கள் கொண்டுவந்திருந்தனர். மென்மணலை சுண்ணத்துடன் பிசைந்து அழுத்திச்செய்த மணற்பலகை அரிப்புகளினூடாக முதலில் நீர் ஊறி கீழே வந்தது. பின்பு மூங்கில் சக்கைகளும் படிகாரமும் கலந்து உருவாக்கப்பட்ட அரிப்புகளில் பலமுறை வடிகட்டி எடுக்கப்பட்டது. அதன்பின்னும் அது மெல்லிய உப்புச்சுவையுடன் இருந்தது.
“குருதிச்சுவை” என்று அர்ஜுனன் அதைக்குடித்தபடி சொன்னான். “கண்ணீரின் சுவையும்கூட” என்றார் போ. இளையவணிகன் ஒருவன் “ஏன் கன்னியின் இதழ்ச்சுவை என்று சொல்லக்கூடாதா?” என்றான். வணிகர்கள் நகைத்தனர். “மைந்தனின் சிறுநீரின்சுவை” என்றார் போ. பீதர்நாட்டில் இளமைந்தரின் சிறுநீரின் சிறுதுளிகளை தந்தையர் அருந்துவதுண்டு என்றான் பீதர்நாட்டுச் சூதன். “அது தன் குருதியை தானே அருந்துவது.”
உப்பரித்த நிலம் வழியாக நிழல் தொடர நடந்தனர். பின் நீளும் நிழலை நோக்கி சென்றனர். உப்பு விரைவிலேயே காற்றை வெம்மை கொள்ளச்செய்தது. நிலத்தில் இருந்து எழுந்த வெம்மை காதுமடல்களை, மேலுதடுகளை, மூக்குவளைவை, இமைகளை எரியச்செய்தது. மணல் இளகி கால்களை சேறென உள்வாங்கியதால் நடப்பதும் கடினமாக இருந்தது.
நெடுங்காலத்திற்கு முன் ஏதோ நீர் தேங்கி பின் வற்றிவிட்டிருந்த குட்டைகள் விளிம்புகளில் அலையலையாக உப்புப்படிவு இதழ்கள் போல் ஒன்றன்மேல் ஒன்றென பதிந்திருக்க மாபெரும் மலர்போல் விரிந்து தெரிந்தன. “அவற்றை மண்மலர்கள் என்கிறார்கள். வான்மழையை அளிக்கும் தெய்த்திற்கு மண் மலர்படைத்து வரவேற்கிறது” என்றார் போ. பீதர்நாட்டுச் சூதன் “புன்னகைகள்” என்றான்.
எப்போது முளைத்தன என்று தெரியாத மரங்கள் அக்குட்டைகளைச் சூழ்ந்து நின்றிருந்தன. தொலைவிலிருந்து பார்க்கையில் சற்றுமுன் காட்டு நெருப்பு எழுந்து எரிந்து எஞ்சிய அடிமரங்கள் அவை எனத் தோன்றின. அருகணைந்தபோதுதான் அவை மட்கி அழிந்து பல்லாயிரம் ஆண்டுகளாகியிருக்கக்கூடும் என்று தெரிந்தது. விழுந்து கிடந்த மரங்கள் கல்லென மாறிவிட்டிருந்தன. சில மரங்கள் வெண்ணிற உப்பாக உருக்கொண்டிருந்தன.
வணிகர்கள் உப்புப்பரப்பை உடைத்துக் கிளறி உள்ளே புதைந்திருந்த உலர்ந்த மீன்களை வெளியே எடுத்தனர். உப்பில் அமைந்திருந்தமையால் அவை கெடா ஊனுடன் இருந்தன. “பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தவை” என்றான் ஏவலன். ஆனால் சற்றுமுன் உயிரிழந்தவை போலிருந்தன. அர்ஜுனன அவற்றின் விழிகளை நோக்கியபோது மெல்லிய துயில் ஒன்றுக்கு அப்பால் அவன் பார்வையை அவை உணர்ந்து கொண்டிருப்பதுபோல் தோன்றியது. மீன் விழிகள் நீர்ச்சொட்டு போன்றவை. நீர் விழிகள் என மீன்களைச் சொல்லும் கவிதைவரியை நினைவுகூர்ந்தான்.
“இங்கு பறவைகள் மீன் கொள்ள வருவதுண்டு” என்று இன்னொரு ஏவலன் சொன்னான். “நீள் அலகால் அவை மீன்களை கிளறி எடுக்கின்றன. எனவே ஆழத்தில் உப்பில் சிக்கிக்கொண்ட மீன்களை மட்டுமே மானுடர் எடுக்கமுடியும். இப்பாலைப்பரப்பில் செல்பவர்களுக்கு அது நல்லுணவு. ஆனால் மிகை உப்பால் விடாய் கூடி வரும். உப்பு நீரிலேயே இவற்றை பலமுறை கொதிக்கவிட்டு செறிந்துள்ள உப்பை அகற்ற வேண்டும். மீண்டும் நன்னீரில் கொதிக்கவிடவேண்டும்.”
“சுழல்காற்று எழுகையில் இவை உப்புடன் எழுந்து வானுக்குச் சென்றுவிடுவதுண்டு. அங்குள்ள நீராவியில் உப்பு உருகிக்கரைய இவை மழையெனக் கொட்டியதாகவும் கதைகள் உண்டு. இறையருளால் வானிலிருந்து உணவு பொழியும் என்கிறார்கள் இங்குள்ளோர்” என்றார் போ. உப்புநீரை அள்ளி யானங்களிலாக்கி அங்கிருந்த சுள்ளிகளைக்கொண்டு தீமூட்டி வாற்றி நீர் எடுத்தனர். அதில் மீன்களை வேகவைத்து உலர்ந்த கோதுமைத்தூளுடன் உண்டனர்.
அதன் பின் காற்றோ வானோ உயிர்க்குலங்களோ ஓசை எழுப்பாமையால் முற்றிலும் அமைதிகொண்டிருந்த விமூகமென்னும் பாலையைக் கடந்து சென்றனர். “அதற்கப்பால் உள்ளது லவணம். அதை சுற்றிக்கொண்டுதான் நாங்கள் செல்வோம். லவணம் இறந்தவர்களின் நிலம் என்று அழைக்கப்படுகிறது” என்றார் போ. “அங்கு ஒரு கடல் இறந்து கிடக்கிறது என்கிறார்கள்.”
அர்ஜுனன் புருவம் சுருக்கி நோக்கினான். “பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வேறு வகையான மானுடர்கள் வாழ்ந்ததாகவும் விண்ணிலிருந்து அனல் வடிவ இறைவனால் அவர்கள் அனைவரும் உப்புச் சிலைகளென மாற்றப்பட்டதாகவும் இங்குள்ள தொல்கதைகள் சொல்கின்றன. முற்றிலும் உப்பாலானது அந்நிலம். உப்புச் சுவருக்கு அப்பால் உப்பு செறிந்த நீரால் உயிர்கள் வாழா கடல் ஒன்று உள்ளது என்றும் அங்கே ஆழத்தில் நீரின் தேவன் வாழ்வதாகவும் சொல்கிறார்கள்” என்றார் பீதர்குலத்துப் பாணர்.
“அந்த இடத்தை நாடியே நான் வந்தேன்” என்றான் அர்ஜுனன். “நான் அறிந்து எவரும் அங்கு சென்றதில்லை. சென்று மீண்டேன் என்று ஒரு சொல்லும் காதில் விழுந்ததில்லை” என்றார் போ. “நான் அதை வெல்லும் பொருட்டே வந்தவன்” என்றான் அர்ஜுனன். “தெய்வங்களை அறைகூவலாகாது, வீரரே. இப்பெரும்பாலையைப் பார்த்தபின்னருமா மானுடம் என்னும் நீர்க்குமிழியை நம்புகிறீர்?” என்றார் பாணர். போ புன்னகையுடன் “சில மானுடர் தெய்வங்களால் தங்களை அறைகூவும்பொருட்டு தெரிவுசெய்யப்படுகிறார்கள் பாணரே” என்றார்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 30
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 29
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 28
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 27
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 26
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 25
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 24
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 23
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 22
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 21
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 20
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 19
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 18
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 17
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 16
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 15
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 14
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 12
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 11
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 10
November 17, 2016
இலக்கியமதிப்பீடுகளின் எல்லைகள்
அன்பு ஜெயமோகன்,
சிறுகதைகள் குறித்த தங்கள் கடிதங்களை வாசித்தேன்.
இந்த வரிசையில் வெளிவந்துள்ள 12 கதாசிரியர்களும் என்னுடைய ‘எதிர்கால எதிரிகள்’ என்று எழுதியிருந்தீர்கள். பரவாயில்லை, 90% எதிர்மறை விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியதிலாவது எனக்காக 10% இடத்தை விட்டுவைத்தீர்களே.
ஆனால் இந்த ‘எதிர்கால எதிரிகள்’ பட்டியலில் என்னை ஏன் சேர்த்துவிட்டீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இது வெறும் புள்ளியியல் விவரமே ஆயினும், ‘பகை’, ‘எதிரி’ என்றெல்லாம் மீண்டும் மீண்டும் நீங்கள் கூறுவதிலிருந்து, எனக்கு சில விஷயங்கள் புரிகிறது. இதற்கு முன்பு அவ்வாறு பலர் நடந்துகொண்டு, அதனால் நீங்கள் மனம் புண்பட்டிருக்கிறீர்கள். அதன் காரணமாகவே பகை வந்துவிடக்கூடாது, நண்பர்கள் எதிரிகளாகிவிடக்கூடாது என்று தயக்கமும், அச்சமும் கொள்கிறீர்கள்.
ஆனால் உங்களைப் பல நாட்கள் வாசித்து வருபவன் என்கிற முறையில் இந்தத் தயக்கம் எனக்கு வியப்பளிக்கிறது. உண்மையாகவே உங்களுக்கு இந்த தயக்கமும், அச்சமும் இருக்கிறதா என அறிய விரும்புகிறேன். உண்மையெனில், உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியதற்காக உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். மேலும், இந்த விஷயத்தில் நான் எதிரியாகிவிடுவேன் என்கிற அச்சம் உங்களுக்கு வேண்டாம். நான் இதுவரை உங்களுக்கு எழுதிய கடிதங்களில் இருந்தே என்னைப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
விமர்சனங்களை எதிர்கொள்வது பற்றிய என்னுடைய கருத்தையும் உங்களுக்குத் தெரிவித்திருக்கிறேன். என் மீதான விமர்சனங்களுக்கெல்லாம் நான் எதிரியாக வேண்டுமென்றால் என்றால் முதலில் என்னுடைய தந்தைக்கே நான் எதிரியாக வேண்டும். நாங்கள் உரையாடிக்கொண்டிருக்கும் பொழுது வேறு யாராவது பார்த்தால் மிரண்டுபோவார்கள். நான் அவருக்கு விமர்சகன். அவர் எனக்கு விமர்சகர். அது போலவே நீங்களும். எதைப் பற்றியும் மீதான என்னுடைய பார்வையை எடுத்துரைப்பேன். எடுத்துரைப்பது எதிரியாவது ஆகாது. அப்படியே இருந்தாலும், எதிர்திசைக்கு அர்ஜுனன் சென்று விடுவானோ என்கிற அச்சம் துரோணருக்கு எதற்கு?
இலக்கிய உலகில் இருக்கும் குழுக்களையெல்லாம் அறிவேன். நான் எந்த குழுக்களிலும் இருக்க விரும்பாதவன். குழு தரும் அடையாளம் என்னைச் சிறைப்படுத்திவிடும். என் சுதந்திரத்தையும் பறித்துவிடும். என்னைக் குருடனாக்கிவிடும். அடையாளமற்று இருப்பதையே நான் விரும்புகிறேன். நான் உங்களுக்கு கடிதம் எழுதுவதன் காரணமாகவே என்னை உங்களின் அடிவருடி என்றும்கூட சிலர் அழைக்கலாம். அப்படி நினைப்பவர்களுக்கு என்னைப் பற்றி ஒரு அணுவும் தெரியாது என்றே அர்த்தம். வேண்டுமானால் அவர்கள் நான் சமீபத்தில் எழுதிய ‘பயணி’ கட்டுரையை வாசிக்கலாம்.
“Criticisms are like chisels; They can make a beautiful sculpture out of a stone. Only when they are used by Sculptors.” – சில வருடங்களுக்கு முன்பு நான் எழுதியது. நீங்கள் அத்தகையதொரு சிற்பி என்பதால்தான் என்னுடைய சிறுகதையை அனுப்பினேன். வாசகர்கள் அனைவரிடமும் பகிர்ந்து விமர்சனம் கேட்பீர்கள் என்று எனக்குத் தெரியாது. அதுவும் நல்லதற்கே. உங்கள் நோக்கமும் புரிந்தது. நீங்களே கூறியதுபோல் வாசக எதிர்வினையற்ற சூழலில் அது ஒரு பெரிய திறப்பு. பல உளிகளைப் பார்க்கவும் சந்தர்ப்பம் கிட்டியது. அவற்றில் எத்தனை உண்மையிலேயே சிற்பிகள் கையாண்டவை என்பதும் நன்றாகவே தெரிந்தது.
சினம் கொள்ளவேண்டாம். இதுவரை இருபது கதைகளாவது எழுதியிருப்பேன். ஒரு வாசகனாக அதில் எத்தனை ‘உண்மையிலேயே’ சிறுகதைகள் என்பதையும் நன்றாக அறிவேன். நான் வெறும் வாசகன் மட்டுமே. எழுத்து என் கிளைவிளைவே. ஆறு வருடங்களுக்கு முன்பு உங்களுடைய நேர்காணல் ஒன்று சொல்வனம் இணைய இதழில் வெளியாகியிருந்தது. அதில் நீங்கள் இவ்வாறு கூறியிருந்தீர்கள்:
“மனிதர்கள் புலம்பெயரும்போது வெகு தீவிரமான அகச்சிக்கலுக்கு ஆளாகிறார்கள். திடீரென்ற தனிமை, புதிய சூழல் இவை, அதுவரை மனிதனின் மனதில் மூடிக்கிடந்த புனைகதையின் வாசலைத் திறந்து விடக்கூடும்.”
நான் எழுத ஆரம்பித்தது இப்படியே. திலீப்குமார் ஒரு சில கதைகளைப் பற்றி சொல்லும்போது, இவை எல்லாம் monologic-ஆக இருக்கிறது என்று கூறினார். அதற்குக் காரணமும் இந்த திடீர் தனிமையே. நான் ஒரு ‘extrovert’. எனக்குப் பேசுவதற்கு ஆட்கள் வேண்டும். அவர்களிடமிருந்தே எனக்கான சக்தியை நான் பெறுகிறேன். ஆனால் இங்கு ஆத்ம நண்பர்களும், ஒத்த சிந்தனையாளர்களும் கிடைப்பது ஆரம்பத்தில் அவ்வளவு எளிதாயிருக்கவில்லை.
எனவே எழுத ஆரம்பித்துவிட்டேன். எழுத்து நான் என்னுடனேயே பேசிக்கொள்ள ஏற்படுத்திக்கொண்ட வழிவகை எனலாம். இவற்றையெல்லாம் சிறுகதையாக எழுதவேண்டும் என்று முனைந்து எழுதவில்லை. இவை வெறும் எண்ணப்பதிவுகளே. வெறும் thoughtful responses. That’s it. என் பெல்ஜிய நண்பர் ஒருவர் என்னைப் பிடித்துக்கொண்டு அழுதது இன்னும் என் கண்களிலேயே இருக்கிறது. அதிலிருந்து மீண்டு வெளிவர முடியாமல், ஆற்றாமையினாலேயே ‘முடி’ சிறுகதையை ஒருநாள் நள்ளிரவு வேளை எழுத ஆரம்பித்து மூன்று மணிவரை எழுதி முடித்துவிட்டு, தாங்கவியலா துக்கத்தினால் காலை வரை உறங்கவில்லை. அப்படியே அதை என்னுடைய நண்பர் பாஸ்கருக்கு அனுப்பிவிட்டேன்.
‘அம்மாவின் தேன்குழல்’, ‘அமைதியின் சத்தம்’ போன்ற கதைகளை வெங்கட் சாமிநாதன் விமர்சித்திருக்கிறார். ‘அம்மாவின் தேன்குழல்’ கதையில் கடைசி பாராவை எடுத்துவிட்டால் அது நல்ல கதை என்றார் வெ.சா. வல்லமை இதழில் வெளியான அந்தக் கதையை அந்த வருடத்தின் சிறந்த கதைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்த நாஞ்சில் நாடன் அதைப் பற்றி, ‘பதாகை’ இதழில் வெளியான தன்னுடைய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:
“கொஞ்சம் நெட் ரைட்டிங் வாசனை இருக்கு. காப்பியை பித்தளை டம்ளர்ல குடிக்கிறதுக்கும் ப்ளாஸ்டிக் டம்ளர்ல குடிக்கிறதுக்கு வித்தியாசம் இருக்கு.”
அதைக் குறிப்பிட்டு நீங்களும் உங்கள் தளத்தில் பதில் எழுதியிருந்தீர்கள். ஆனால் அப்போது உங்களுக்கு என்னைத் தெரியாது.
நாஞ்சில் பேட்டியில் ஒருவிஷயம் சொல்கிறார் , அவர் மட்டுமே சொல்லக்கூடியது அது. இணைய எழுத்தைப்பற்றிச் சொல்லும்போது காபியாக இருந்தாலும் அதை பிளாஸ்டிக் டம்ளரில் குடித்தால் நன்றாக இல்லை, வெண்கலக் கோப்பையில்தான் குடிக்கவேண்டும் என்கிறார். உண்மையில் அந்த வேறுபாடு அழகியல் சார்ந்தது.
நான் புன்னகைப்பதைக் கண்டு அஜிதன் என்ன என்று கேட்டான். ‘புரட்சியாளர்கள் புதுமையை நாடுவது எப்படி ஒரு இயல்பான இணைவோ அதைபோல அழகியலாளர்கள் கொஞ்சம் பழமைவாதிகளாக இருப்பதும் இயல்பான இணைவுதான். என்ன சொல்கிறாய்?” என்றேன்
பதினாறு வருடங்களுக்கு முன்பு, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நான் ஒரு greenhorn-ஆக சேர்ந்த பொழுது, அதிக அனுபவம் வாய்ந்தவர்கள் என்னுடன் சேர்ந்து peer programming செய்வார்கள். அருகே அமர்ந்து அவர்கள் program செய்வதை நாங்கள் அவதானிக்கவேண்டும். கேள்விகள் இருந்தால் கேட்கவேண்டும். நாங்கள் எழுதும்போது அவர்களும் கவனித்துப் பல நுட்பங்களை சொல்லிக் கொடுப்பார்கள். அபிலாஷ் சந்திரன் போன்றவர்கள் உங்களைப் போன்ற துரோணர்களுடன் அருகே இருந்து உரையாடிப் பெற்றுக்கொண்டதைப் பற்றியெல்லாம் அர்ஜுனர்களாய் கம்பீரமாக நின்று கூறும்போதெல்லாம் வெளியிலிருந்து ஏக்கத்துடன் ஏகலைவனாய் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என் போன்றவர்களுக்கு.
இன்றைக்கு உங்களைப் போன்று வாசகர்களுடனும், எழுத்துலகிற்குள் புதிதாய் நுழைந்தவர்களுடனும் அன்றாடம் உரையாடலை நிகழ்த்திக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் குறைவு. அதிலும் என் போன்ற வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு அதெல்லாம சாத்தியமே இல்லை. இலக்கிய உலகிலும் எனக்கு யாருடனும் பழக்கமில்லை. வல்லமை, சொல்வனம் போன்ற இதழ்களில் எழுத ஆரம்பித்த பிறகே பல பேருடன் தொடர்பு கிடைத்தது. எனக்கு வேண்டியதெல்லாம் அனுபவம் மட்டுமே. ஏனையவை ஏதாவது கிளைவிளைவாகக் கிடைத்தால் மகிழ்ச்சி.
அதேசமயம் எதைச் செய்தாலும் முழுமையான அர்ப்பணிப்புடன்தான் செய்ய விரும்புகிறேன். கற்றுக்கொள்ள முயல்கிறேன். பயிற்சி செய்கிறேன். மா.அரங்கநாதனின் ‘சித்தி’ கதையில் வரும் ஓட்டக்காரனைப் போல் ஓடுவதற்காகவே, ஓட்டத்தை ரசித்துக்கொண்டே, ஓடிக்கொண்டிருக்க விரும்புகிறேன். விழாமல் ஓடுவதற்கு சொல்லிக்கொடுங்கள். எதிரியாகி விடமாட்டேன். ஆனாலும் என்ன? நேரிடையாகவே மோதுவேன். மறைந்திருந்து தாக்கமாட்டேன். தாக்கினாலும் தகர்ந்துவிடவா போகிறீர்கள்?
அன்புடன்,
மாதவன் இளங்கோ
அன்புள்ள மாதவன்,
நீங்கள் நினைப்பதுபோல ஒன்றுமில்லை. நான் சொன்னவை எப்போதும் இருப்பவை, எழுதவந்த காலம் முதல் பார்த்துக்கொண்டிருப்பவை. அதனால் நான் புண்பட்டுவிடுவதோ அல்லது குறைந்தபட்சம் சீண்டப்படுவதோகூட இல்லை. என் இயல்பென்பது முழுமையாகப் புறக்கணித்து மேலேசெல்வதே. நான் இத்தனைஎழுதுவது,இவ்வளவு வாசிப்பது, இவ்வளவு செயல்படுவது அவ்வியல்பால்தான்.
அதை நானே முயன்று கற்றுக்கொண்டேன். ஒரு மனிதரை, ஒரு நிகழ்வை என் உள்ளத்திலிருந்து முழுமையாக அழிக்க அதிகபட்சம் ஒருமணிநேரம் போதும். ஒரு புன்னகை, முற்றாக என்னை உள்ளிழுத்து வைத்துக்கொள்ளும் ஒரு வேலையில் ஈடுபடுதல் அல்லது ஒரு பயணம் . குளியல்போல. மீண்டும் நினைக்கையில் நெடுந்தொலைவில் இருக்கும் அனைத்தும். இங்கு நான் ஆற்றவேண்டியது எதுவோ அதை மட்டுமே முதன்மையானதாகக் கருதுகிறேன்.
ஆகவே நான் இக்கருத்துக்களை கொஞ்சம் வேடிக்கையாகச் சொல்வதற்கான காரணம் இப்படி ஒரு விஷயம் நம் சூழலில் உள்ளது என்பதைச் சுட்டுவதற்காக மட்டுமே
*
என் ஆற்றலை என் கலையின் வெற்றிதோல்விகளை நான் நன்கறிவேன். பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு அது தெரியும். ஏதேனும் தளத்தில் ஓரளவேனும் சாதித்தவர்களுக்கு அது மிகத்தெளிவாகவே தெரியும். அதன்பின்னரும் அவர்கள் எதிர்வினைகளை கூர்ந்து நோக்குவது அவர்கள் அறியாத புதிய கோணங்களுக்காக. மானுட இயல்புகளை கவனிப்பதற்காக.
எதிர்வினைகளை எந்தவகையிலும் பொருட்படுத்தக்கூடாது என்று நான் எழுதவந்த காலத்தின் இருபெரும் ஆளுமைகளான சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் இருவருமே சொல்லியிருக்கிறார்கள். ஜெயகாந்தன் நான் அவரை எடுத்த பேட்டியில் அதைத் தெளிவாகவே சொல்கிறார்.
சுந்தர ராமசாமியின் தரப்பு என்னவென்றால், எதிர்வினை என்பது சமகாலம் சார்ந்தது. அன்றாடம் சார்ந்தது. சராசரியிலிருந்து எழுவது. அதற்கு செவிசாய்க்கும் எழுத்தாளன் கீழே சென்றுவிடுவான். அவன் கவனிக்கவேண்டியது அவனுடைய சொந்த அழகுணர்வும் நீதியுணர்வும் நிறைவடைகின்றனவா, அவன் எண்ணிய இலக்கு நோக்கிச் செல்கிறானா என்று மட்டுமே
ஜெயகாந்தன் இன்னொரு கோணத்தில் எதிர்வினையாற்றும் சமகாலத்தவன் பெரும்பாலும் தன் சிறுமையை மட்டுமே எழுத்தாளனுக்குக் காட்டுகிறான் என்று சொன்னார். வாசகர்கடிதங்களை தான் படிப்பதே இல்லை என்றார். எதிர்வினையாற்றும் வாசகன் பெரும்பாலும் இயலாமையை அல்லது தாழ்வுணர்வைக் கொண்டு அவன் தன் காலகட்டத்தின் முக்கியமான ஆளுமைகளை மதிப்பிடுகிறான். அவர்கள் முக்கியமானவர்கள், தான் முக்கியமானவன் அல்ல என அவன் உணர்கிறான். அவர்கள் சாதனையாளர்கள், தான் சாமானியன் என்பதே அவனைச் சீண்டுகிறது. அவ்வுணர்ச்சியே அவன் விமர்சனத்தின் அடிப்படையாக அமைகிறது என்றார்.
அவ்வகையில் சமகாலத்துச் ‘சிறிய’ எழுத்தாளர்களின் கருத்துக்களுக்கு சருகுகளின் மதிப்புகூட இல்லை என்றார் ஜெயகாந்தன். படைப்பூக்கத்துடன்எழுதமுடியாதவனின் உள்ளம் ஒரு இருண்ட நரகம். அங்கிருந்து அவனுடைய புகைச்சல் மட்டுமே வெளிப்படமுடியும்.
*
உண்மையில் என் கால்நூற்றாண்டுக்கால அனுபவத்தில் எதிர்மறை விமர்சனங்களில் நூற்றுக்கு ஒன்று மட்டுமே எவ்வகையிலேனும் பொருட்படுத்தத் தக்கது. விஷ்ணுபுரமோ, பின் தொடரும் நிழலின் குரலோ ,காடோ ,ஏழாம் உலகமோ வெளிவந்த காலகட்டத்தில் எழுந்த எதிர்வினைகளை இன்று வாசித்தால் அந்நாவல்கள் இன்று அடைந்துள்ள வாசகப்பரப்பை காணும் எவரும் அதிர்ச்சியையே அடைவார்கள்.
அதன்பின்னரும் விவாதம் என்பது முக்கியமானதே என்று நினைக்கிறேன். அது எழுத்தாளன் தனக்கு நிகரானவர்களாக நினைக்கும் ஆளுமைகளுடனான கருத்தாடலாக இருக்கலாம். அல்லது அடுத்த தலைமுறையிலிருந்து எழுந்து வரும் முக்கியமான புதிய குரலுடன் நிகழும் உரையாடலாக இருக்கலாம்.
வாசக எதிர்வினைகள் இருவகையில் முக்கியமானவை. ஒட்டுமொத்தமாக, ஒற்றைத்தரப்பாக, ஒரு சராசரி அடிப்படையில் கவனத்திற்குரியவை. அவை தான் எழுதியது வாசிக்கப்பட்டதா என அறிவதற்கான சான்றுகள். இன்னொன்று வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையே ஒர் அந்தரங்கமான சந்திப்புப்புள்ளி உள்ளது. அதை எழுத்தாளன் வாசகனிடமிருந்து அறியும் தருணம் அவனுக்கு தன் எழுத்தைப்பற்றிய ஆழ்ந்த நம்பிக்கையை உருவாக்குவது.
*
எழுதத்தொடங்கும் காலகட்டத்தில் எழுத்தளர்களுக்கு இருவகை எதிர்வினைகள் முக்கியமானவை. ஒன்று, அச்சூழலின் முதன்மையான இலக்கியவாதிகளின் நோக்கு. அது அங்கீகாரம் அல்லது தீர்ப்பு அல்ல. அச்சூழலில் அதுவரை அடையப்பட்ட தரத்தின் அளவீடு அது.
இன்னொன்று உடன் எழுதும் எழுத்தாளர்களின் மதிப்பீடு. அவர்கள் உங்களுடன் உடன் ஓடுபவர்கள். வடிவம் சார்ந்த நோக்கு முதல் தரப்பில் இருந்தும் பார்வை சார்ந்த மதிப்பீடு இரண்டாம் தரப்பில் இருந்தும் கவனிக்கத்தக்கது.
நான் எழுதவந்த காலகட்டத்தில் சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஞானி, சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், கோமல் சாமிநாதன் எனப்பலர் தொடர்ந்து எதிர்வினையாற்றியிருக்கிறார்கள். கணிசமானவை கறாரான எதிர்மதிப்பீடுகள்.
அதேபோல நான் பாவண்ணன், சுப்ரபாரதி மணியன், கோணங்கி, சுரேஷ்குமார இந்திரஜித், ந.ஜெயபாஸ்கரன், யுவன் சந்திரசேகர் போன்ற அன்றைய இளம் எழுத்தாளர்களுடன் தொடர்சியான உரையாடலில் இருந்தேன். பலருக்கு ஒவ்வொருநாளும் கடிதங்கள் எழுதியிருக்கிறேன். அவர்கள் எழுதும் அனைத்தையும் விமர்சனம் செய்வேன். ஒருநாளுக்கு சராசரியாக பத்து கடிதங்கள் வரும் அன்று எனக்கு.
ஆகவேதான் இக்கதைகளை பிரசுரித்து எதிர்வினைகளைக் கோரினேன். எதிர்வினையாற்றியவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்கள் என்பதைக் காணலாம். அந்த எதிர்வினைகள் எழுத்தாளர்களுக்கு முக்கியமானவை
எஸ்ரா பவுண்ட் சொன்ன ஒரு வரி எனக்கு முக்கியமானதென அடிக்கடித் தோன்றும். தன்னளவில் ஒரு நல்ல படைப்பையேனும் எழுதாத ஒருவரின் இலக்கியமதிப்பீட்டை பொருட்படுத்த வேண்டியதில்லை. நான் பொருட்படுத்துவேன், வெறும் விமர்சகர்களின் மதிப்பீட்டை அல்ல, அவர்களின் ஆய்வுக்கருவிகளை மட்டும்.
*
விமர்சனரீதியான வாசிப்பு இல்லாமல் எவரும் தன் மொழியை, வடிவை தீட்டிக்கொள்ளமுடியாது. எது தன் வல்லமை, எங்கே சரிகிறோம் என உணர முடியாது
எங்கே பிரச்சினைகள் வருகின்றன? உண்மையில் ஊக்கத்துடன் எழுதிக்கொண்டிருக்கும் ஓர் இளம் படைப்பாளி, தன்னால் மேலும் நெடுந்தொலைவு செல்லமுடியும் என உணர்பவர் எதிர் விமர்சனங்களால் புண்படுவதில்லை. அவ்விமர்சனம் அவர் எழுதிய படைப்பின் நுண்மைகள் அனைத்தையும் தொட்டபின் மேலும் கோருவதாக இருக்கும் நிலையில் அவரால் அக்குரலை உதாசீனம் செய்யமுடியாது
எழுத்தாளன் புண்படுவது புறக்கணிப்பை வெளிப்படுத்தும் ஒற்றைவரி நிராகரிப்புகள் மற்றும் கிண்டல்களில். போகிற போக்கிலான சீண்டல்களில். ஆனால் தொடர்ந்து பல ஆண்டுகளாக படைப்பூக்கத்துடன் இருக்கும் ஒரு படைப்பாளிக்கு அதுவே கூட பழகிவிட்டிருக்கும். அதன் பின் உள்ள உணர்வுகளை அவனால் புரிந்துகொள்ளமுடியும்
1988ல் கணையாழியில் நான் ‘கிளிக்காலம்’ என்னும் கதை எழுதியிருந்தேன். மறு இதழில் கணையாழியில் வெளிவந்தவற்றிலேயே மோசமான கதை அதுதான் என ஒரு கடிதம் வந்திருந்தது. கணையாழியின் அன்றைய எழுத்துமுறைக்கு முற்றிலும் ஒவ்வாத கதை அது. மூன்று இளைஞர்களின் பாலியலுணர்வின் தொடக்கத்தை, ஒருவனின் பாலியல் களங்கமின்மையின் அழிவை சித்தரிக்கும் கதை. கணையாழிக்கதைகள் நடுத்தவ நகர்ப்புற வர்க்கத்தின் அன்றாடச்சிக்கல்களை மிக உள்ளடங்கிய தொனியில் செய்திநடையில் வெளிவந்துகொண்டிருந்த காலம்
நான் கடுமையாகப்புண்பட்டேன். ஆனால் நேரில் சந்தித்தபோது அசோகமித்திரன் என் உணர்ச்சிகளில் உள்ள அர்த்தமின்மையை சுட்டிக்காட்டினர். அந்த வாசகரின் அழகுணர்வு இலக்கியவாசிப்பு எதுவும் எனக்குத்தெரியாது. அவர் எதிர்பார்க்கும் கதையை நான் எழுதவில்லை என்று மட்டுமே அதற்குப்பொருள். “அது அவரோட லிமிட்’ என்று அசோகமித்திரன் சொன்னார். அது ஒரு பெரிய விழிப்புணர்வாக அன்று இருந்தது
ஆக, பொதுவான எதிர்வினைகளை எளிதில் கடந்துபோகமுடியும். உண்மையான புண்படுதல் நிகழ்வது அந்த எழுத்தாளன் தன் உண்மையான எல்லையை விமர்சகர் சுட்டிக்காட்டுவதை உணரும்போதுதான். ஆனால் அதற்கு ஒன்றும் செய்யமுடியாது.
*
நான் சமகால இளம் எழுத்தாளர் எவரையும் எதிர்மறையாக விமர்சனம் செய்யவேண்டாம் என்ற கொள்கையை கடந்த பல்லாண்டுக்காலமாகக் கொண்டிருக்கிறேன். எப்போதாவது ஒருவரி தற்செயலாக, எழுத்தினூடாக வெளிவந்தால் ஆயிற்று. மற்றபடி விமர்சனமே சொல்வதில்லை . ஆனால் அனைத்தையும் வாசித்துப்பார்க்கிறேன்
தவிர்ப்பதற்கான பல காரணங்களில் முதன்மையானது அவர்கள் எவ்வகையிலும் அதை விரும்புவதில்லை என்பதே. முன்னரே அவர்கள் வரச்சாத்தியமான எதிர்மறை விமர்சனத்திற்கு எதிரான வாதங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். விமர்சனத்தின் நோக்கங்களை ஐயப்படுவது, விமர்சகனின் நேர்மையை மறுப்பது அதற்கான குறுக்கு வழி. தங்களை கறாராக அணுகக்கூடியவர்கள் என தாங்கள் நினைப்பவர்களை முன்னரே மட்டம்தட்டி தங்களை மேலெ நிறுத்திக்கொள்ளும் ஒரு பாவனையை நடித்துக்கொள்வது சமீபத்திய உத்தி.
அவர்கள் ஒரு சிறு முகநூல் வட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். அவர்களின் நூல்கள் அந்த வட்டத்திற்குள் இரண்டுமாதக்காலம் ஓர் அலையை உருவாக்குகின்றன. அதில் மகிழ்ந்து திளைக்கிறார்கள். அது தீவிரமான வாசகர்வட்டம் என நினைத்துக்கொள்கிறார்கள். எதிர்மறை விமர்சனம் அந்த வட்டத்தை அழிக்கும் என கவலைப்படுகிறார்கள். அவ்வாறு அவர்கள் மகிழ்ந்திருப்பதென்றால் இருக்கட்டுமே என்றே எனக்கும் படுகிறது.
ஏனென்றால் இந்த எதிர்மறை மனநிலையின் உச்சத்தில் ஓர் இளம் எழுத்தாளர் நிற்பாரென்றால் அவருக்கு எதிர்மறை விமர்சனங்களால் எந்தப்பயனும் இல்லை. அவரது வன்மமும் கோபமும் மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு. அவர் எழுதச் சாத்தியமானவற்றையும் அம்மனநிலை அழிக்கும். மேலும் சிற்றிதழ்ச்சூழலில் எந்த உணர்வும் ஆறப்போடப்படும். முகநூலில் வஞ்சமும் கசப்பும் மாதக்கணக்கில் அலையடித்துக்கொண்டே இருக்கும்.
இந்த எதிர்மறை மனநிலையை முகநூல்சூழல் எப்படி உருவாக்கியிருக்கிறது என்பதை முன்னரே சுட்டியிருந்தேன். இங்கே இன்று இலக்கியத்தில் எவரை வேண்டுமென்றாலும் எவர் வேண்டுமென்றாலும் எள்ளி நகையாடலாம், ஒட்டுமொத்தமாக நிராகரிக்கலாம். ‘உனக்கு என்ன தகுதி அதற்கு?” என்னும் கேள்வியே எழுவதில்லை. அனைவரும் சமம் என்பதை தரம் எவருக்கும் தேவையில்லை என ஆக்கிவிட்டிருக்கிறார்கள். மதிப்பீடுகள் இல்லை. ஆகவே மதிப்புக்குரியவர்களும் இல்லை.
பலசமயம் கருத்துக்கள் அவற்றைச் சொல்பவரின் தகுதியால்தான் முக்கியத்துவம் கொள்கின்றன. அவருடைய எழுத்துக்களின் பின்னணி அக்கருத்துக்களை முழுமையாக்குகிறது. அதை முழுமையாக நிராகரித்து அவரை சில்லறைப்பூசல்களின் இடத்துக்குக் கொண்டுவந்துவிட்டால் விமர்சனம் பொருளற்றதாகிறது. முகநூல் அதற்கான களம். முகநூல் இருக்கும் வரை இலக்கியவிமர்சனமே சாத்தியமில்லை என்றுகூடத் தோன்றுகிறது.
ஆகவே எதிர்மறை விமர்சனம் இன்று ஒரு வீண் உழைப்பு. எனவே எதிர்காலத்திலும் எந்த இளம் எழுத்தாளரைப்பற்றியும் எந்த விமர்சனமும் சொல்லும் எண்ணம் எனக்கில்லை.
பாராட்டுதலாகச் சுட்டிக்காட்டவேண்டிய ஆக்கங்களை பற்றி மட்டுமே அவ்வப்போது சுட்டிக்காட்டுகிறேன். அவை கவன ஈர்ப்பு மட்டுமே.
இங்கே இந்தக்கதைகளை மட்டும் விமர்சனம் செய்யலாமென நினைப்பது இவர்களே இவற்றை எனக்கு அனுப்பி கருத்து கேட்பதனால் மட்டும். ஆனால் மிக விரைவிலேயே இவர்களும் அந்த முகநூல் சூழலுக்கே செல்லப்போகிறார்கள். நக்கல்கள், கிண்டல்கள், மதிப்பின்மையை வெளிக்காட்டும் தோரணைகள், உள்நோக்கம் கற்பித்தல்கள் வழியாக தங்களை காத்துக்கொள்ள உந்தப்படலாம். ஏனென்றால் நான் தொடர்ந்து கண்பது அது. அதைத்தான் சற்று கிண்டலாகச் சுட்டினேன்.
ஜெயமோகன்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
இந்தியாமீதான ஏளனம் -கடிதம்
அன்பு ஜெயமோகன்
‘இந்தியா குறித்த ஏளனம்..’ கடிதத்தைப் பார்த்தேன். பிரகாஷ் எந்த நாட்டில் வசிக்கிறார் என்று தெரியவில்லை. ஐரோப்பிய பின்னணியிலிருந்து என்னுடைய கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். அவர் கூறியதில் சில உண்மைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால், சீனர்-ஜப்பானியர்களைக் குறித்த பார்வை எனக்கு சரியெனத் தோன்றவில்லை. வெளிநாட்டுக்காரர்கள் வெளிநாட்டுக்காரர்கள்தான். இவர்கள் நல்ல வெளிநாட்டுக்காரன் கெட்ட வெளிநாட்டுக்காரன் என்றெல்லாம் பார்ப்பதாய்த் தெரியவில்லை. ஒருவேளை அவ்வாறு பார்த்தாலும் அதற்குக் காரணம் சீனர்கள் நடந்துகொள்ளும் விதம் காரணமாக இருக்கலாமே ஒழிய, பிறிதொரு காரணம் இருப்பதாய்த் தெரியவில்லை.
மேலும், இந்திய உணவைப் பார்க்கும்போது அவர்கள் அருவெறுப்படைவது பற்றி எழுதியிருந்தார். அதை நான் என்னுடைய அனுபவத்திலிருந்து முற்றிலும் மறுக்கிறேன். எனக்கு உள்ளூர் நண்பர்கள் அதிகம். முதல் முறையாக இந்திய உணவை சுவைப்பதற்கு சற்று தயக்கம் காட்டுவார்கள். அதற்கு காரணம் இந்திய உணவு சற்று காரசாரமாக இருக்கும் என்று அவர்கள் அறிந்து வைத்திருப்பதால்தானே தவிர வேறெந்த அருவருப்பு உணர்வும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதுவும் வாசனைத் திரவியங்களைத் தெளித்துக்கொள்வதையெல்லாம் நான் நிச்சயமாகக் கண்டதில்லை. எனக்கே முதன்முதலில் ஐரோப்பிய உணவுகளை பார்ப்பதற்கு, “என்னடா சாப்பாடு இது?” என்று தோன்றும். ஆரம்ப நாட்களில் விருந்துக்குச் செல்லும்போதெல்லாம் என் மனைவியிடம் வீட்டுக்கு வந்து இன்னொருமுறை சாப்பிடுவேன் என்று கூறியிருக்கிறேன். இதெல்லாம் உணவு பழக்கப்படும் வரைதான்.
என் அநுபவத்தில் ஒருமுறை இந்திய உணவை சுவைத்தவர்கள் யாரும் மறுமுறை அப்படி முகம் சுழிப்பதில்லை. என்னுடைய நண்பர்களில் இந்திய உணவின் சுவைக்கு அடிமையானவர்கள் அதிகம். பல நேரங்களில் இரண்டு டப்பர்வேர்களில் மதிய உணவு எடுத்துச் சென்றிருக்கிறேன். உணவுக்காகவே என் வீட்டுக்கு வருபவர்களும் உண்டு. கேட்டன் என்றொரு நண்பன் இருக்கிறான். புதன்கிழமையன்று அவர்கள் வீட்டில் ப்ரியா சமைக்கும் உணவுதான். கடந்த எட்டு மாதங்களாக ஒவ்வொரு புதன்கிழமையும் வீட்டுக்கு வந்து உணவு வாங்கிச் செல்கிறான். அதற்கு பணமும் தந்து ப்ரியாவின் உணவுக்கு வாடிக்கையாளராகவே மாறிவிட்டான். கடந்த மாதம் கூட என்னுடைய அணியிடம் எங்கு விருந்துக்கு செல்லலாம் என்று கேட்டபோது அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் ‘ஹிமாலயன் உணவகம்’.
பெல்ஜியத்தில் எந்த இந்திய உணவகங்களுக்குச் சென்றாலும் அங்கு இந்தியர்களை உள்ளூர் கூட்டம்தான் நிரம்பி வழிகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்புகூட வைரத்துக்குப் பெயர் போன ஆன்ட்வெர்ப் நகரத்துக்கு நண்பனின் திருமணத்துக்கு உடை வாங்குவதற்காக சென்றிருந்த போது, இரவு உணவுக்கு ‘ஆகார்’ உணவகத்துக்குச் சென்றிருந்தோம். உணவகத்தில் அமர இடமே இல்லை. நாங்கள் மட்டுமே இந்தியர்கள். நீங்கள் பெல்ஜியம் வரும்போது நிச்சயம் உங்களை அங்கு அழைத்துக்கொண்டு சென்று காட்டுகிறேன். அவ்வளவு ஏன், பல சமயங்களில் நாங்கள் அவர்கள் வீடுகளுக்கெல்லாம் சென்று இந்திய உணவைச் சமைத்திருக்கிறோம். நேற்று என் நண்பர் ஒருவருக்கு இந்தியாவில் திருமணம். அவருடைய பெல்ஜியம் பெண் நண்பர்கள் இந்திய திருமணத்தைப் பார்க்கவும், திருமண விருந்து உண்ணவும் இந்தியா சென்றிருக்கிறார்கள்.
உங்களுடைய பதிலில் பல விஷயங்களை ஆழமாக அணுகி பேசியிருக்கிறீர்கள்.
“பொதுவாக இன்னொரு நாட்டைப்பற்றி எந்த நாட்டிலும் இருக்கும் பாதிப்பங்கு மனப்பதிவு தவறானதாகவே இருக்கும்.”, “ஏன் நாடுகளைப் பார்க்கவேண்டும். மலையாளிகள் தமிழர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?” – இவற்றை எல்லாம் நானே எழுதியது போலவே உணர்கிறேன். என்னுடைய கருத்தும் அஃதே. இன்றைய மிகை ஊடகச் சூழல் நிலைமையை இன்னும் மோசமாக்கிக்கொண்டிருக்கிறது. Peak Negativity.
உங்கள் கட்டுரையில் நான் பார்த்தவுடன் திடுக்கிட வைத்தது, நீங்கள் “வெள்ளையனின் பொறுப்பு” (Whiteman’s Burden) பற்றி எழுதியிருந்த பகுதி. நீங்கள் டாக்டர்.யூவல் நோவா ஹராரி எழுதிய ‘Sapiens – A Brief History of Humankind’ புத்தகம் வாசித்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. ஆனால், நீங்கள் மூன்று பத்திகளில் குறிப்பிட்டிருந்ததை அப்படியே எழுதியிருக்கிறார், நீங்கள் குறிப்பிட்டிருந்த ருட்யார்டு கிப்ளிங் வரிகளோடு. அதற்கு மேலும் சென்று, ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு வங்காளம் எவ்வளவு வளமான பகுதியாக இருந்தது என்பதில் ஆரம்பித்து, பிறகு அவரிகளுடைய பொருளாதாரக் கொள்கைகள் எப்படி வங்காள பஞ்சத்துக்கு வித்திட்டது என்பதை வரை எழுதியிருக்கிறார்.
இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பை 2011-இல் ஹீப்ரு மொழியிலும், ஆங்கிலத்தில் 2014-இலும் வெளியிட்டிருக்கிறார்கள். உங்களின் ‘இந்தியா குறித்த ஏளனம்..’ பதிவை 2010-இல் எழுதியுள்ளீர்கள். ஆனால், ‘Sapiens was a top ten bestseller’. ஒரு மில்லியன் பிரதிகளாவது இதுவரை விற்கப்பட்டிருக்கும். சாரு நிவேதிதா அவர்களின் அறச்சீற்றத்தில் ஒரு நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. பேசாமல் நீங்கள் எல்லோரும் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பிக்கலாம். தமிழர்களின் தமிழ் மொழி மீதான தாழ்வு மனப்பான்மையும், ஆங்கில மோகமும், வாசிப்பில் நாட்டமின்மையும் பெரும் சோர்வைத் தருகிறது. உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் ‘வாசியுங்கள்.. வாசியுங்கள்..” என்று கூறி சலிப்படைந்துவிட்டேன்.
பிரகாஷ் கூறியவற்றுக்குப் பின்னால் வேறொரு காரணமம் இருக்கிறது. அது நம்முடைய இந்தியர்கள் பழகும் விதம்.
மேனாட்டு வரலாற்றாசிரியர்கள் மற்றும் மதப்பரப்புநர்கள் உருவாக்கியதாக சித்திரங்களை பற்றி விளக்கியிருந்தீர்கள். ஆனால் இன்றைக்கு உலகத்தின் எல்லா மூலைகளிலும் கணிசமான அளவு இந்தியர்கள் வாழ்கிறார்கள். இதில் அவர்களது பங்கு என்ன? அவர்களால் இந்த சித்திரத்தை மாற்றி அமைக்க முடியாதா? அதற்கான பொறுப்பு என் போன்றவர்களுக்கு இருக்கிறதல்லவா?
தற்சயலாக நிகழ்ந்த ஒன்று. மூன்று நாட்களுக்கு முன்புதான் இதுபற்றி எழுதியிருந்தேன். வெளிநாடுகளுக்கு குறைந்த காலமோ, நீண்ட காலமோ பெரும் இந்தியர்களுக்கு நான் எழுதிய உதவிக்குறிப்புகள் இவை. நம் மீதான விமர்சனத்தையும் உள்ளடக்கியது. அதை உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
இனி.. நான் எழுதியது:
வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு.. சில வார்த்தைகள்.. சில சிந்தனைகள்..
எனக்குள் மானுடப்பற்று பெருகிய நாளிலிருந்தே தேசப்பற்று அருகிவிட்டது. திறந்த மனத்துடனான பரந்த வாசிப்பும் அதற்கு ஒரு காரணம். “மானுடமா? தேசமா?” என்று கேட்பதெல்லாம் சிறு குழந்தையிடம், “உனக்கு அப்பா பிடிக்குமா? அம்மா பிடிக்குமா?” என்று கேட்டு அதன் கற்பைப் பரிசோதிக்கும் சிறுபிள்ளைத்தனம். ‘வசுதைவ குடும்பகம்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ போன்ற ஒருலகச் சிந்தனைகள் எல்லாம் கற்பனாவாதம் என்றால், தேச எல்லைகள் மட்டும் இயற்கையிலேயே அமைந்தவையா என்ன? சிரியாவைச் சேர்ந்த ஐயாயிரத்து ஐநூறு குடும்பங்களுக்கு பெல்ஜியத்துக்கு வருவதற்கு கடந்த வெள்ளியன்று விசா கிடைத்திருக்கிறது. கட்டிப்பிடித்து முத்தமிடவேண்டும் போலிருக்கிறது இந்த அரசாங்கத்தை. முகத்தில் குருதி வழிய அதிர்ச்சியும், குழப்பமும், பயமும் கலந்த முகத்துடன் அமர்ந்திருந்த அந்தச் சிறுமியைப் பார்த்து நெஞ்சம் படபடத்து கண்ணீர் விடுவதற்கு நான் சிரிய தேசத்தவனாக இருக்கவேண்டுமா என்ன? எனக்குள் இருக்கும் தந்தையுணர்வே போதுமானது.
தேசங்களைப் பற்றிய என்னுடைய பார்வை ஒருபுறமிருந்தாலும், அதே சமயம், வெளிநாடுகளில் வாழும் என் போன்றவர்களின் தவறுகளுக்காக எங்கள் மீது எறியப்படும் கல், நான் சார்ந்த தேசத்தில் வாழும் அனைவரின் மீதும் விழுந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். இதுகுறித்து என்னுடைய சிந்தனைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
பணியிலும் வெளியிலும் இவற்றை கடைப்பிடிக்க முயற்சி செய்யலாம்:
தாழ்வு மனப்பான்மையை ஒழியுங்கள்..
பணி நிமித்தமாக நீங்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான காரணம் உங்கள் அறிவு அவர்களுக்குத் தேவைப்படுகிறது என்பதற்காகவே. தேவை அவர்களுக்குத்தான். அவர்களுடைய பிரச்சினைகளுக்கு உங்களுடைய தீர்வுகள் தேவை. பிரச்சினை எதுவாகவும் இருக்கலாம். எனவே உங்கள் மீதும் உங்கள் அறிவின் மீதும் நம்பிக்கை வையுங்கள். உங்கள் மீதே நம்பிக்கை வைக்காமல், உலகத்தின் எந்தக் கடவுளை நீங்கள் வழிபட்டாலும் அதனால் துளி உபயோகமில்லை. ஏதோ அவர்கள் தயவில் நீங்கள் இங்கு வந்து வாழ்வது போல் நடந்துகொள்வதைப் பார்க்கும்போதெல்லாம் சற்று வருத்தமாக இருக்கிறது.
விவாதம் புரியுங்கள்..
“இந்தியர்கள் ஏன் ஆமாம் சாமிகளாக இருக்கிறார்கள்?” என்றும், உடனே “ஆனால் நீ அப்படியில்லை.” (எல்லோரிடமும் இப்படித்தான் சொல்வார்களாக இருக்கும்) என்று இங்குள்ளவர்கள் கூறும்போதெல்லாம், “இதற்கு முன்பு எத்தனை இந்தியர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். சென்னைக்குச் சென்று நீங்கள் கூறும் விலைக்கு ஆமாம் சாமி போடும் ஆட்டோக்காரர்களை முதலில் எனக்குக் காட்டுங்கள். அதற்குப் பிறகு நாம் பேசலாம். இங்கு வருபவர்களெல்லாம் பெருநிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்கள். எனவே நீங்கள் கூறுவதெல்லாம், அந்தப் பெருநிறுவனங்களுக்கான குணாதிசயமாகத்தான் இருக்கவேண்டும். நான் அப்படி இல்லை என்று நீங்கள் கூறும்போதே இந்தியாவில் அப்படி இல்லாமல் இருப்பதற்கும் சாத்தியமிருக்கிறது என்பதை நம்புங்கள்” என்று விவாதித்திருக்கிறேன். மேலும் இது நான் இதற்கு முன்பு நான் கூறிய தாழ்வு மனப்பான்மையையும், தன்னம்பிக்கையும் சார்ந்த விஷயம் என்பதை உணருங்கள்.
பெரும்பாலான இந்திய நிறுவனங்களில் காணப்படும் அதிகாரப் படிநிலை அமைப்பு என்பது இந்தியச் சிந்தனையாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால், இலக்கியத்தை வாசித்தால் நம்முடைய பேராசான்கள் துணிவையே பேசியிருக்கிறார்கள். நம் பெரியவர்கள் ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்றுதானே நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
உதாரணத்துக்கு என் தந்தை எந்தக் காலத்திலும் யாருக்கும் அடங்கி நடந்து நான் பார்த்ததில்லை. தனக்கு எது சரி, நியாயம் என்று படுகிறதோ அதைத்தான் செய்திருக்கிறார். அதனால் அவர் இழந்ததுதான் அதிகம் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்காக அவர் கவலைப்பட்டும் நான் பார்த்ததில்லை. நானுமே அவருடனான விவாதங்களின்போது அவரின் இது பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறேன். எங்களுடைய விவாதங்களையெல்லாம் பார்த்தீர்களேயானால் மிரண்டு விடுவீர்கள். இப்படியெல்லாம் தந்தையும் மகனும் விவாதம் செய்ய முடியுமா என்றுகூட உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் மனதுக்குள் அவரை ரசிக்கவே செய்திருக்கிறேன். இவரைப் போன்றவர்கள் வெளிநாடுகளுக்குச் வந்து பணி புரியவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். எல்லா இந்தியனும் தலையாட்டுபவனில்லை என்று அப்போதாவது இவர்களுக்கும் புரியட்டுமே.
நான் சொல்ல வந்த செய்தி இதுதான். விவாதியுங்கள். அடக்கமாக நடந்து கொள்வதற்கும், அடங்கிப் போவதற்கும் இடையேயான வித்தியாசத்தை உணர்ந்துகொள்ளுங்கள். பெரும்பாலும் நான் காண்பது அடக்கத்தையல்ல, அடங்கிப்போவதையே. ஒருவேளை இந்தத் தலைமுறைக்கே உரிய தாழ்வு மனப்பான்மையையும் பிற பலவீனங்களையும் இந்தப் பெருநிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்கின்றனவோ என்னவோ. நிறுவனங்கள் மட்டுமல்ல. அதிகாரப் படிநிலை அமைப்பில் உங்களுக்கு மேல் ஒரு தன்னம்பிக்கையற்றவர் தலைவராக, மேலாளராக அமர்ந்திருப்பார். அவரின் ஒரே பலமே உங்களின் இந்த பலவீனமாகதான் இருக்கும். அவர் அதைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்வார். போட்டி நிறைந்த இந்த உலகில் நம்முடைய பலவீனம் இன்னொருவனுக்கு பலம். ஆனால் அதுபற்றி பயம் கொள்ளவேண்டாம். தாழ்வு மனப்பான்மையை விட்டொழியுங்கள். அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். துணிவு தானாக பிறக்கும். (பலமுறை சொல்லிவிட்டேன். இருந்தாலும் இன்னொருமுறை வேண்டிக்கொள்கிறேன், ‘புத்தகங்கள் வாசியுங்கள்’. அது எல்லா இடத்திலும் உங்களுக்கு கைக்கொடுக்கும்.)
புன்னகையை முகத்தில் பூசிக்கொள்ளுங்கள்..
யாரென்றே தெரியவில்லை என்றாலும்கூட, உள்ளூர்க்காரர்கள் ‘eye contact’ ஏற்பட்டுவிட்டால் உடனே புன்னகைப்பார்கள். அந்த சமயங்களில் இந்தியர்கள் தலையைத் திருப்பிக்கொள்வதை கவனித்திருக்கிறேன். இதனால் இந்தியர்கள் இறுக்கமானவர்கள் என்கிற பார்வை வந்துவிடும். Smile is contagious. So, Please practice it.
கம்பீரமாக நடக்கப் பழகிக் கொள்ளுங்கள்..
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் திமிர்ந்த ஞானச் செருக்கு” – இவற்றையெல்லாம் மாதர்களுக்கு மட்டும் சொல்லவில்லை பாரதி. எல்லா மாந்தர்களுக்கும்தான்.
மீண்டும் , விவாதம் புரியுங்கள்…
எனக்குச் சற்றும் பிடிக்காத இன்னொரு விஷயம். இந்தியாவைப் பற்றிய விவாதங்களில் அவர்களுக்குப் பக்க வாத்தியம் வாசிப்பது. இந்தியாவில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கிறது. அதற்கு ஆயிரம் காரணங்களும் இருக்கிறது. நானுமே இந்தியாவைப் பற்றிய விவாதங்களில் இந்தியாவில் இருக்கும் பிரச்சினைகளைச் சொல்லி வருந்தி இருக்கிறேன். ஆனால் அதற்கான காரணங்களாக நான் அறிந்திருப்பதையும் அவர்களுக்கு எடுத்துரைப்பதன் அவசியத்தை உணர்ந்திருக்கிறேன். அதே சமயம் அவர்கள் தேசத்தில் இருக்கும் பிரச்சினைகளையும் துணிவுடன் எடுத்துரையுங்கள். உதாரணத்துக்கு, இங்குள்ள சமூக பாதுகாப்பு அமைப்பு எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றுதான். ஆனால் அதே சமயம், இந்தியாவில் சமூகப் பாதுகாப்பே இல்லை என்று இவர்கள் கூறும்போதெல்லாம், இந்தியாவின் குடும்ப அமைப்பைப் பற்றி அவர்களிடம் எடுத்துச் சொல்லி, இங்கு அம்மாவையும் அக்காவையும் சந்திப்பதற்குக்கூட ஒப்பந்தம் செய்துக்கொள்ளவேண்டியதன் அவலத்தையும் விமர்சியுங்கள்.
விவாதியுங்கள். விவாதிப்பதற்கு சில சிந்தனைகள். இப்படித்தான் நான் அவர்களுடன் விவாதிக்கிறேன்:
இந்தியாவில் வசதியான சகோதரன், தன்னைவிட வசதி குறைந்த சகோதரனுக்கு வேண்டியதைச் செய்து உதவுகிறான். உதவியே ஆக வேண்டும்!! அதையேத்தானே இங்குள்ள சமூகப் பாதுகாப்பு அமைப்பு செய்கிறது? அரசாங்கத்துக்கு மட்டும் இவற்றையெல்லாம் செய்வதற்கான வசதி வானிலிருந்தா விழுகிறது. நீங்கள் முகமறியாதவர்களுக்கு செய்கிறீர்கள். இந்தியாவில் உறவுகளுக்குள்ளும் நட்புகளுக்குள்ளும் செய்துகொள்கிறார்கள். இங்கே அது விதியாக இருப்பதால் அதற்குட்பட்டு நடக்கிறீர்கள். அங்கே அது அடிப்படை அறமாக இருப்பதால் அறத்துக்குட்பட்டு நடக்கிறார்கள். எது சரியென்பதைக் காலம்தான் எடுத்துச் செல்லும். எத்தனை காலத்துக்கு அரசாங்கம் இவற்றை செய்ய முடியும்? கிரீஸில் இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது? நம்முடன் என்றைக்கும் துணை வரப்போவது மானுடம் மட்டுமே. அரசாங்கங்கள் அல்ல. எனவேதான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், நான் அரசாங்கங்களும், தேசங்களையும்விட மானுடத்தை மதிக்கிறேன்.
கலாச்சார ஒற்றுமைகளைக் காணுங்கள்..
ஐரோப்பாவிற்கு வந்த புதிதில், இங்கிருக்கும் இந்தியர்களும் சரி, ஐரோப்பியர்களும் சரி அடிக்கடி பண்பாட்டு வேறுபாடுகளைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதை காண முடிந்தது. அது இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதுபற்றி என்னுடைய புத்தக முன்னுரையில்கூட எழுதியிருக்கிறேன். சமீபத்தில் பெல்ஜியத்தின் புகழ்மிக்க கல்லூரி ஒன்றில் உரை நிகழ்த்தியபோது கூட இதைப் பற்றி மாணவர்களிடம் பேசினேன்.
“பண்பாடு என்பது ஒரு வெங்காயம்; பனிப்பாறை என்றெல்லாம் பேசுகிறார்கள். நான் முதன்முதலாக பெல்ஜியத்திற்கு 2005-ஆம் ஆண்டு வந்தபோது, என் முன்னே ஒரு பெரிய வெங்காயத்தைக் கண்டேன். பண்பாட்டு வேறுபாடுகளை பல்லடுக்களாகக் கொண்ட ஒரு வெங்காயம். மேற்புற அடுக்காக இருந்தது இவர்களின் வெள்ளைத்தோல். தோலை உரித்து எடுத்தேன். அடுத்த அடுக்கில் மொழி தெரிந்தது. அதையும் உரித்து எடுத்தேன். இப்படி ஒவ்வொரு அடுக்கில் ஒவ்வொரு வேறுபாடு என்று ஒன்றடுத்து ஒன்றாக வந்து கொண்டேயிருந்தது. நான் விடாமல் உரித்துக் கொண்டே சென்றேன். இறுதியில் ஒன்றுமில்லாமல் போனது. பண்பாடு என்பது ஒரு வெங்காயம் என்பது அப்போதுதான் புரிந்தது. பண்பாட்டு வேறுபாடுகளைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்பது மனிதர்களை மேலும் பிரிக்கவே செய்யும். வெங்காயமாவது, பனிப்பாறையாவது.. கண்ணுக்குத் தெரியும் வேறுபாடுகளைவிட, மறைந்திருக்கும் ஒற்றுமைகள் மூலமாகவே சக மனிதர்களிடம் நம்மை இணைத்துக் கொள்ள முடியும், அவர்கள் எந்த தேசத்தவர்களாயினும்.”
என்னுடைய உரை முடிந்த பிறகு மாணவர்களிடம், அவர்கள் இந்த உரையிலிருந்து பெற்றுக்கொண்டது என்ன என்று கேட்ட போது, பெரும்பாலான மாணவர்கள் “Cultural Similarities instead of Cultural Differences” மற்றும் “Cultural Surprises instead of Cultural Shocks” போன்றவை புதிய சிந்தனைகள். கேள்விப்பட்டதில்லை. அவற்றையே எடுத்துச் செல்ல விரும்புகிறோம் என்று கூறினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் அந்த ஒட்டுமொத்த உரையிலும் அந்தப் பகுதி மட்டுமே என்னுடைய சுய சிந்தனை. நான் கண்டடைந்த தரிசனம்.
உள்ளூர் மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள்..
குறிப்பாக ஐரோப்பாவிற்கு வருபவர்கள் நிச்சயம் செய்ய வேண்டியதொரு விஷயம். இந்த தேசத்துக்குச் செல்கிறீர்களா, அந்த தேசத்து மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள். அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளவும், அவர்களோடு எளிதில் இணைத்துக்கொள்ளவும், அந்தச் சமூகத்தில் விரைவில் ஒரு அங்கமாகவும் இது மிகவும் உதவும். இன்னும் சொல்லப்போனால் உங்கள் வியாபாரத்துக்கும் அது மிகவும் அவசியம். இந்தியாவில்தான் ஆங்கிலம் ஒன்றே போதுமானதாக இருக்கிறது. ஆங்கில மோகமும், தம் மொழியின் மீதான தாழ்வு மனப்பான்மையும் எல்லா இந்திய மொழிகளையும் கொன்றழித்துக்கொண்டிருக்கிறது.
இங்கு அதெல்லாம் சாத்தியமில்லை. என்னதான் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசினாலும் நீங்கள் இரண்டாம் தர குடிமகன்தான். அதுவும் நான் வசிக்கும் பெல்ஜியத்தில் மூன்று மொழிகளில் ஏதேனும் ஒன்று தெரியாமல் குடியுரிமை கூடப் பெறமுடியாது. எப்படியிருந்தாலும் அயல் மொழி ஒன்றைக் கற்றுக்கொள்வது நல்லதுதானே. என் மகனின் டச்சு மொழிப்புலமைப் புலமை பற்றி இங்குள்ள ஆசிரியர்களே வியக்கிறார்கள். நான் அவனுடைய தமிழாசிரியர் என்கிற முறையில், பிற்காலத்தில் அவன் தமிழ் மொழிப புத்தகங்களை டச்சு மொழியாக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவனும் உறுதியளித்திருக்கிறான். நம்மைப் பற்றி அவர்கள் புரிந்துகொள்ளவைக்கக்கூட அவர்கள் மொழியை நாம் கற்றாக வேண்டியதன் அவசியம் இருக்கிறது. என் அணியில் உள்ள நண்பர்கள் அவ்வப்போது வந்து தமிழ் மொழி வார்த்தைகளைக் கேட்டுது தெரிந்துகொள்கிறார்கள். இது நான் அவர்கள் மொழியின் மீது காட்டும் ஆர்வத்தின் பலனாக விளைந்தது.
உள்ளூர் நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்..
வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் பெரும்பாலும், தங்களுக்கு வேண்டிய இந்தியாவை தாங்களே அங்கு உருவாக்கிக்கொள்வார்கள். இந்தியக் குழு மற்றும் அதற்குள் தமிழர்கள், தெலுங்கர்கள், வட இந்தியர்கள், என்று உப குழுக்களை உருவாக்கிக்கொள்வார்கள். அதில் தவறில்லை. நம் தேசத்தை விட்டு வெகுதொலைவு வந்து வேறோர் தேசத்தில் இருக்கும்போது இன்னொரு இந்தியனைப் பார்த்தால் மகிழ்ச்சி பொங்கத்தான் செய்யும். எனக்கும் அப்படியே. அப்படித்தான் பல புதிய இந்திய நண்பர்களை ஏற்படுத்திக்கொண்டேன். இன்றைக்கு என்னுடனிருக்கும் நெருங்கிய இந்திய நண்பர்களை அவ்வாறே பெற்றேன். ஆனால், பெரும்பாலான இந்தியர்களுக்கு அதைத் தாண்டி வேறெதுவும் இருக்காது.
உதாரணத்துக்கு உள்ளூர் செய்தித்தாள்களைக்கூட வாசிக்கவே மாட்டார்கள். உள்ளூர் நண்பர்கள் இருக்கமாட்டார்கள். அப்படியே உள்ளூர்க்காரர்களை வீட்டுக்கு அழைத்தால், பெரும்பாலும் அவர்கள் வாடிக்கையாளர்களாகவோ, வியாபார காரணங்களுக்காக ஏற்படுத்திக்கொண்ட நட்புகளாகவோ இருப்பார்கள். உள்ளூர் நண்பர்களுடன் பழகி, அவர்களைப் பற்றியும் அவர்களுடைய கலாச்சாரத்தைப் பற்றியும் அறிந்துகொள்ளவும், இணைத்துக்கொள்ளவும் பெரும்பாலும் முயல்வதே இல்லை.
இங்கு ‘பெரும்பாலான’ என்கிற பதத்தை அடிக்கடி உபயோகிக்கிறேன். அதற்குக் காரணம் எவற்றையும் பொதுமைப்படுத்த நான் விரும்புவதில்லை. எதிலும் விதிவிலக்குகள் இருக்கவே செய்கிறார்கள்.
சிக்கனத்துக்கும் கஞ்சத்தனக்குமான எல்லைகளை உணருங்கள்..
‘இந்தியர்கள் கஞ்சர்களா?’ என்று ஒருமுறை என் நண்பனொருவன் கேட்டான். ஆனால் உண்மை இதற்கு நேர்மாறானது. இத்தனைக்கும் உண்மையில் இவர்கள்தான் சிக்கனமானவர்கள். அவ்வளவு எளிதாகச் செலவு செய்துவிட மாட்டார்கள். அது நான் இவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட ஒன்றுகூட. ஆனால் அவன் அப்படிக் கேட்டதற்கு முக்கியமான காரணம், இந்தியாவில் ஆடம்பரங்களுக்கெல்லாம் வாரி இறைத்துச் செலவு செய்யும் இந்தியர்கள் வெளிநாட்டுக்கு வந்தால் மட்டும் திடீரென்று சிக்கன சிகாமணிகளாகி, அத்தியாவசிய செலவு செய்வதற்குக்கூட ஐந்து முறை யோசிப்பார்கள். சிக்கனமாக இருப்பது நல்லதுதான்.
ஆனால் இந்தியாவில் முதல் நாள் முதல் காட்சிக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பவர்கள்கூட இங்கு வந்தால் ஐந்து யூரோ (400 ரூபாய்) போன் ரீசார்ஜ் அட்டையை வாங்குவதற்குத் தயங்குவதைப் பார்த்திருக்கிறேன். ஏனிந்த முரண்? எனக்கு நெருங்கிய இந்திய நண்பர் ஒருவர் இங்கு வந்திருந்தபோது தினமும் உணவகத்துக்குச் சென்று செலவழிப்பதைக் நையாண்டி செய்து அவரை அவமானப்படுத்திவிட்டார்கள். பிறகு அவரும் டிராகுலா கடித்த கதையாக மாறிவிட்டார். எனவே சிக்கனத்துக்கும் கஞ்சத்தனத்துக்குமான எல்லைகளை உணருங்கள்.
முக்கியமாக சாலை விதிகளை கடைப்பிடியுங்கள்..
அந்நியர்களை எப்பொழுதுமே ஆறு கண்கள் அதிகமாகவே நோட்டமிடும் அறிக. இது எந்த நாட்டிலும் நடப்பதுதான். எனவே நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறும் பெரிதுபடுத்தப்படுவதை தவிர்க்க முடியாது. அப்போதெல்லாம் “யாரிந்த மனிதன் இப்படி எல்லாம் நடந்துகொள்கிறான்” என்று யாரும் நினைக்கப் போவதில்லை. “இந்த இந்தியர்களே இப்படித்தான்” என்றுதான் பேசுவார்கள். ஏனெனில் சாலைகளைப் பொறுத்தமட்டிலும் நமக்கிருக்கும் குடிமை உணர்வை உலகமே அறியும். அதை உலகமே கிண்டல் செய்துகொண்டுதானிருக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்தியாவிற்குச் சென்று திரும்பும் இந்த ஊர் மனிதர்கள் சாலைகளில் நம்முடைய ஒழுங்கைப் பற்றிச் சொல்லி கிண்டல் செய்யும்போதும், நான் நாணிக் குறுகவே செய்கிறேன். அந்த சமயத்தில் என்னால் அதிகம் விவாதிக்கவே முடிவதில்லை. ஆனால், அதைப்பற்றி நமக்கென்ன கவலை. நமக்கு தேசப்பற்று என்றால் தேசியகீதத்தை அவமானப்படுத்தாமல் கேட்டுக்கொண்டு தேசியக்கொடிக்கு முன்பு விறைப்பாக நின்று வணக்கம் செலுத்தவேண்டும். அதுபோதும்.
இவையெல்லாம் என்னுடைய அறிவுரைகளல்ல. உதவிக்குறிப்புகள் மட்டுமே. உதவக்கூடும் என்று நினைத்தால், நடைமுறைப்படுத்துங்கள். இன்னும் சில முக்கியமான உதவிக்குறிப்புகளும் இருக்கின்றன. விரைவில் இரண்டாம் பாகம் வெளியிடுகிறேன்.
இறுதியாக, இன்னொரு முக்கியமான விஷயம். இவற்றையெல்லாம் வெளிநாட்டில் மட்டுமல்ல. எங்கிருந்தாலும் பின்பற்ற முயற்சிக்கவும்.
அன்புடன்,
மாதவன் இளங்கோ
பெல்ஜியம்
மா அரங்கநாதன் கதைகலைப்பற்றி மாதவன் இளங்கோ
டின்னிடஸ் மாதவன் இளங்கோ
பெல்ஜியத்திலிருந்து மாதவன் இளங்கோ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
நமது பிரச்சனை குற்றாலத்தில் உள்ள தடுப்புச்சுவர் அல்ல!
அன்புள்ள ஜெ.,
நமது முகங்கள் வாசித்தேன்
நமது பிரச்சனை குற்றாலத்தில் உள்ள தடுப்புச்சுவர் அல்ல. அது ஒரு விளைவு. சில நகரப்பள்ளி-கல்லூரிகளைத் தவிர தமிழகத்தின் மற்ற எல்லா கல்விநிலையங்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உருவகமாக, சில இடங்களில் உண்மையாகவே ஒரு தடுப்புச்சுவர் போடப்படுகிறது, அதை ஒழித்தாலொழிய இதை ஒழிக்க முடியாது.
ஆணும் பெண்ணும் ஒரே இருக்கையில் அமரக்கூடாது, ஆண் ஏறும் படிக்கட்டில் பெண் ஏறக்கூடாது, ஆண்விடுதி நோக்கி சாளரம் திறக்கும் பெண்விடுதி அறைகளில் ஜன்னலை மூடித்தான் வைக்கவேண்டும், இப்படி பல விதிகள் – என்ன தீட்டு படுமோ தெரியவில்லை. ஆணும் பெண்ணும் பேசி பிடிபட்டால் அம்மாணவர்களின் நடத்தையை வசைபாடி, பெற்றோரை கூட்டி வரச்சொல்லி, “என்ன புள்ள வளத்து வெச்சிருக்கீங்க, ஒழுக்கங்கெட்டத்தனமா,” என்று அறிவித்து, அபராதம் கட்டவைத்து, கல்லூரியில் ஒழுக்கம் நிலைநாட்டும் வரை விடமாட்டார்கள் நம் கல்வித்தந்தையர்
இதில் “ஒழுக்கம்” என்பதன் பொருள் – “வேற்று சாதி ஆண்மகனை காதலித்து விடாதே,” அவ்வளவே. சமூகத்தில் பலர், தங்கள் மகள் பொதுவெளியில் சாதாரணமாக சந்திக்கும் வன்முறைக்கு இணையான (அல்லது அதற்கும் மேலான) ஒரு அசம்பாவிதமாகவே இந்த “ஒழுக்கக்கேட்டை” பார்க்கிறார்கள். திருமணமாகாத ஒரு சராசரி தமிழ்ப்பெண் எதிர்நோக்கும் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கு இந்த புள்ளியில் தொடங்கி இதிலேயே முழுமைபெறுவதாக எனக்குத் தோன்றுகிறது. என்னதான் படித்தாலும், வேலை பார்த்தாலும், பயணம் செய்தாலும் அவள் போய்ச்சேரும் புள்ளி என்பது “நல்ல” மாப்பிளையுடன் திருமணம், மனை, குழந்தைகள் – இந்த பாடம் தொடர்ந்து அவள் காதுகளில் ஓதப்படுகிறது. அதற்கு வழிவகுக்காத எதுவும் அவளுக்கு அவசியமில்லை; அது ஆதரிக்கப்படுவதில்லை.
இந்த எண்ணம் இல்லாமல் அன்பும், அரவணைப்பும் மட்டுமே பெற்றோரிடம் மேலோங்கினாலும், அவள் பாதுகாப்பற்றவள், பாதுகாப்பாக இருக்க வேண்டும், எந்த வம்பையும் நாடாமல் இருந்தால் நல்லது என்று எப்போதும் எச்சரிக்கை சூழலிலேயே அந்தப்பெண் சிறுவயது முதல் வளர்க்கப்படுகிறாள். “ஆறு மணி ஆகிவிட்டது, வெளியே வராதே,” “அங்கெல்லாம் தனியாக போகாதே” என்று அவள் பாதுகாப்பை கருதி போடப்படும் கட்டுப்பாடுகளின் பலனாக சில நேரங்களும், சில இடங்களும், அவளுக்கற்ற ஒன்றாக அடையாளம் கொள்கிறது. அவள் உடல்மொழி, அவள் இயங்கக்கூடிய வெளி, அவள் சிந்தனைக்களம் என்று எல்லாமே போன்சாய் மரங்கள் போல குறுக்கப்படுகின்றன.
இதன் விளைவுகள் இரண்டு. ஒன்று, பொது இடங்களில் ஒப்பீட்டளவில் அதிகம் பெண்கள் காணப்படுவதில்லை. இதனாலேயே அது பெண்களுக்கான வெளி அல்ல என்று மீண்டும் மீண்டும் ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது. இரண்டு, இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளால், பொதுவெளிகளெல்லாம் ஆண்களுக்குச் சொந்தம், பெண்கள் அங்கு அந்நியர்கள் என்ற எண்ணம் பொதுவாக ஆண்மனதில் வேரூன்றுகிறது. அப்படி அவள் அங்கு வந்தாலும், அந்த இடத்தை போல, அவன் அருந்தக்கூடிய மதுவைப்போல, அவனை மகிழ்விக்கவே படைக்கப்பட்டு அவள் அங்கு வந்ததாக எண்ணிக்கொள்கிறான். அவள் அங்கு இருப்பதையே ஒரு மீறலாக அவன் மனம் கணக்கிடுகிறது.
பெண் ஒரு மனிதி, மனிதர்கள் மற்றவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் தங்கள் மகிழ்ச்சிக்காக மட்டுமே சில செயல்களை செய்யக்கூடும் என்ற புரிதல், அப்படிப்பட்டவன் மனதில் இருப்பதாக தெரியவில்லை. அவளது விடுதலையுணர்வு அவனை சீண்டுகின்றது. நீங்கள் சொல்வது போல அவன் தாழ்வு மனப்பான்மை நிறைந்தவன்; அவளைச் சீண்டி தன்னை அந்த இடத்தில் தாட்டான் குரங்காக தனக்கே நிறுவ முயல்கிறான். பொதுவெளியில் ஆண்துணை இல்லாமல் வரக்கூடிய பெண்களை ஒழுக்கம் சார்ந்து விமர்சிப்பதும், அவர்களின் நடத்தையை பற்றி மனதளவிலாவது ஒரு சித்திரம் கொள்வதும் நம் சமூகத்தில் மிக இயல்பான ஒன்று, அதுவும் தாழ்வுமனப்பான்மையுடன் சம்பந்தம் உடையது தான். இந்த மனத்திரிபுகளை குணப்படுத்தாமல் குற்றாலத் தடுப்புச்சுவரை நீக்கமுடியாது.
ஆணுக்கு இந்த தாழ்வுமனப்பான்மை இருக்கும் வரை பெண் பாலியல் துன்புறுத்தலை பற்றியோ வன்புணர்வை பற்றியோ உயிரை பற்றியோ பயம் இல்லாமல் இயல்பாக இருப்பது மிகவும் கடினம். ஆனால் என் பார்வையில், பெண் அந்த பயத்தை மீறி அவள் அளவில் அவள் முழுமை பெறுவது முக்கியமான, சமரசம் செய்யக்கூடாத ஒன்று. அது ஒரு உரிமை, ஒரு கடமையும் கூட.
மதுரையை சுற்றியுள்ள மலைகளுக்குச் செல்ல எனக்குப் பிடிக்கும். அந்த மலைகளின் அமைதியை தேடியே அங்கு செல்வேன், பெரும்பாலும் வீட்டுக்குத் தெரியாமல். தனியாக. பகலில் சிறு குழுக்களாக ஆண்கள் அமர்ந்து சீட்டாடுவதும், சில நேரங்களில் மது அருந்துவதும், போதை பொருட்கள் உட்கொள்வதுமாக அங்கே காண முடியும். பெரும்பாலும் எதுவும் நடந்ததில்லை என்றாலும், ஒரு ஓரக்கண் பார்வையை உணர்ந்தபடி மட்டுமே அங்கு உலாவ முடியும். இயல்பாக இருக்க முடியாது. ஓரிருமுறை கேள்விகள் வரும் – தனியா வந்திருக்கியா? லவ் பைலியரா? படம் எடுக்கப்போறீங்களா? என்னா ரேட்டு?
கல்லூரி படிக்கும் போது பயமே இல்லாமல் வாராவாரம் தனியாக மலைகளை நாடிச்செல்வேன். அந்த வயதில் அக்குறும்பயணங்களின் வழியே, அந்தத் தனிமையின் வழியே, அம்மலைகளின் வழியே, நான் அடைந்தவை ஏராளம். ஒரு மழைநாளில் மாடாக்குளம் கபாலிமலை மேல் நின்று காலுக்கடியில் மேகங்களை கண்டேன். சமண குகைகளும் மரங்களும் மலைகளும் எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என்று எண்ணி விளையாடுவேன். மலை மேல் அமர்ந்து இசைகேட்பது, ஒருமலை மேலிருந்து இன்னொரு மலையை பார்ப்பது எல்லாம் பேரனுபவங்கள். நண்பர்கள் ஓரிருவரோடு சேர்ந்து சென்று மலைப்படிகளில் அமர்ந்து கதை பேசுவோம். நான் அந்த மலைகளிடம் கற்றுக்கொண்டது அதிகம். அந்தப்பாடங்களை கற்காமல் போனவர்களை நினைத்தால் ஒருவித அனுதாபம் கலந்த வியப்பு வருகிறது, அதில் என் சகவயது பெண்கள் நிறைய.
இப்போது நினைத்தால் அதிசயமாக இருக்கிறது, அந்நாட்களில் எனக்கு பெரும்பாலும் பயம் இல்லை. ஆனால் காலப்போக்கில் உடலில் எச்சரிக்கை உணர்வும் பயமும் எப்படியோ புகுந்துவிடுகிறது. புகட்டப்படுகிறது. இந்தியாவிற்குள் தனியாகவோ, ஓரிரு தோழிகளுடனோ பயணங்கள் மேற்கொள்ளும் போது பல எச்சரிக்கை உணர்வுகள். கையில் இருக்கும் காசை பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும்; அந்த ஊரில் தெரிந்தவர்களின் தொலைபேசி எண்களை கைவசம் வைத்த்துக்கொள்ள வேண்டும்; ஒரு நண்பரிடம் எங்கு இருக்கிறோம் என்று தொடர்ந்து ‘அப்டேட்’ செய்துகொண்டே செல்லவேண்டும்; கைபேசியில் ‘சார்ஜ்’ தீர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; டாக்சி, கார் எண்களை யாருக்காவது வாட்ஸாப்பில் அனுப்பவேண்டும் என்று தொடர்ந்து ஒன்று மாற்றி ஒன்று தோன்றிக்கொண்டே இருக்கும்.
தனியாக பயணம் செய்தால், குறிப்பாக நகரங்களை தாண்டி எங்கு சென்றாலும், நாம் அணிந்திருக்கக்கூடிய உடை அந்த சூழலுக்கு ஏற்றதா என்று என்ன பெண்ணிய சிந்தனை வாசித்திருந்தாலும் ஒரு நிமிடம் மனம் யோசிக்கும். தங்கும் விடுதி அறைகளில் ஒழித்து வைக்கப்பட்ட காமரா இருக்குமோ என்று கண் தேடும். வட இந்தியா, தென்னிந்தியா என்று பாரபட்சமே இல்லாமல் தனியாக பயணம் செய்தாலோ, தோழியோடு இணைந்து பயணம் மேற்கொண்டாலோ, “தனியாகவா?” என்ற கேள்வி வரும்போது மனம் எச்சரிக்கை அடைகிறது. வெளிநாட்டு பயணங்களில் இந்த வகையான பயம் இருப்பதில்லை – திருட்டு பயம் உண்டு, ஆனால் அது உயிர் பயம் பெரும்பாலும் இருப்பதில்லை. மெல்ல மெல்ல அந்த பயத்தை ஓரளவாவது போக்கிக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கிறேன் அந்த பயம் பயணங்களின் கட்டற்ற விடுதலையுணர்வுக்கு முதல் எதிரி அல்லவா?
கடற்கரையையோ அருவியையோ கண்டவுடன் இறங்கி குளித்து குதூகலிக்க கோருவது மனித இயல்பு. பெண்கள் அந்த இயற்ககை உணர்ச்சியை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி, கண்ணுக்குப்படாத ஏதேதோ கண்களிடமிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள விழைவதை நான் சென்ற நீர்நிலைகளில் எல்லாம் கண்டுள்ளேன் (குடும்பத்தோடு பெருங்குழுவாக செல்லும்போது மட்டும் விதிவிலக்கு). என் அம்மாவிடம் அந்த இயல்பை நான் பார்த்துள்ளேன். கடலில் இறங்கும் போது புடவையை கணுக்கால் வரை மட்டுமே தூக்கி அலைவிளும்பில் நிற்பார்கள், பிறகு குதூகலம் கூட முன்னுக்கு வந்து முட்டிவரை புடவையை தூக்கிவிட்டுக்கொண்டு அலைவர ‘ஊ’ என்று கத்துவார்கள், இரண்டு நிமிடங்களில் ஏதோ எல்லையை மீறியதாக உணர்ந்து பின்வாங்கி புடவையை இறக்கிவிட்டுக்கொண்டு, “ஆடினது போதும், வா,” என்று உச்சுக்கொட்டி கூட்டிச்செல்வார்கள்.
நான் இன்று அம்மாவிடமிருந்து வெகுதூரம் வந்துவிட்டேன், இருந்தாலும் எங்களுக்குள் இருக்கும் இடைவெளி கூடவில்லை, குறைந்துவிட்டது. இப்போது நான் காணும் மலைகளையும் அருவிகளும் நகரங்களையும் பேருந்துகளையும் என் அம்மா என் கண்களின் மூலம் காண்கிறாள். என் அனுபவங்களை அவள் வாழ்கிறாள், அவள் வாழ்வதை நான் வாழ்கிறேன். அவர்களது தலைமுறை எனக்கு ஈன்ற பயத்தையும் ஐயத்தையும் தாண்டிச்செல்ல நான் முயற்சித்துக்கொண்டும் இருக்கிறேன்.
உண்மையில் நான் சென்ற பயணங்களில் மக்கள் பெரும்பாலானோர் அன்பானவர்கள் என்ற எண்ணமே வலுத்துள்ளது. ஓரிரு கசப்பான அனுபவங்களினால் எச்சரிக்கை எண்ணம் இருக்கத்தான் செய்கிறது, இருந்தாலும் பயணம் தேவைப்படுகிறது. “ஜாக்கிரதை, பார்த்துப்போ, போன் பண்ணு” என்று எல்லா எச்சரிக்கைகளை சொன்னாலும் இப்போது என் பெற்றோருக்கு எனக்கு பயணங்களில் கிடைப்பது என்ன என்று புரிந்துள்ளது, ஆத்மார்த்தமாக அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் எச்சரிக்கை உணர்வு இருக்கத்தான் செய்யும், அது போக நம் சமூகத்தில் உள்ள பல தடுப்புச்சுவர்கள் முதலில் இடிந்துடைய வேண்டும். என் தலைமுறையில் நடந்தால் நல்லது.
சுசித்ரா ராமச்சந்திரன்
கொற்றவையின் தொன்மங்கள் சுசித்ரா ராமச்சந்திரன்
தாயார் பாதமும் அறமும் சுசித்ரா ராமச்சந்திரன்
வெள்ளையானையும் கொற்றவையும் சுசித்ரா ராமச்சந்திரன்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 30
[ 46 ]
நெடுவெளி வளைக்க விரிந்து மேலும் விரிந்து எனக்கிடந்த ஏழு பெரும்பாலை நிலங்களைக் கடந்து அர்ஜுனன் இருபத்தியாறு மாதங்களில் வாருணம் என்றழைக்கப்பட்ட அறியாத் தொல்நிலத்தை சென்றடைந்தான். வருணனின் நிலம் அது என்றன அவன் சென்றவழியில் கேட்டறிந்த கதைகள். மழைக்கலங்கல் நீரின் நிறமுடைய பிங்கலத்தைக் கடந்ததும் தன்னை அழைத்துவந்த பனிமலை வணிகர்களிடம் விடைபெற்றுக்கொண்டான். அவர்கள் “நன்று சூழ்க, வீரரே… அறியா நிலம் நோக்கி செல்கிறீர்கள். அங்கு அறிந்த தெய்வங்கள் துணை வரட்டும்” என வாழ்த்தி விடைகொடுத்தனர்.
முள்ளூற்று என்று பாலைநில மக்களின் மொழியில் அழைக்கப்பட்ட தொன்மையான சிற்றூரில் ஏழு நாட்கள் அவன் தங்கியிருந்தான். புழுதி ஓடும் நதி என பாலை வளைந்து கிடந்தது அப்பாதை. விண்வடிவத் தெய்வம் ஒன்று சாட்டையால் அறைந்து பூமி மார்பில் இட்ட குருதித் தழும்புபோல் இருந்தது அது. எங்கிருந்தோ எவரோ மறுகணம் வரக் காத்திருப்பதென ஒருமுறையும் எவரோ முந்தைய கணம் சென்று மறைந்தது என மறுமுறையும் தோன்றச்செய்யும் வெறுமைகொண்டிருந்தது.
ஏழு நாட்கள் அங்கிருந்த மதுவிடுதி ஒன்றின் வெளித்திண்ணையில் அமர்ந்து அப்பாதையையே நோக்கிக்கொண்டிருந்தான். பாதை என்பதே பெரும்கிளர்ச்சியை அளித்த இளமைக்காலத்தை எண்ணிக்கொண்டான். பின்னர் பாதைகள் அச்சத்தை அளிப்பவையாக மாறிவிட்டிருந்தன. அவற்றின் முடிவின்மை அளிக்கும் அச்சம். முடிவின்மை நோக்கி செல்லும் பாதை என்பது உருவாக்கும் பொருளின்மை குறித்த அச்சம்.
அங்கிருந்து எழுந்து மீண்டும் அஸ்தினபுரிக்கு திரும்பிவிடவேண்டும் என்று உள்ளம் விரும்பியது. உடனே கசப்புடன், அஸ்தினபுரிக்கு சென்று என்ன செய்வதென்று எண்ணிக்கொண்டான். அரண்மனைக்குள் நுழைந்து தன் அறைக்குள் நுழையலாம். மஞ்சத்தில் புரளலாம். அன்னையின் கருப்பைக்குள் மீளலாம். அங்கிருந்து பார்த்திவப் பரமாணுவுக்கு குறுகிச் செல்லலாம். அங்கிருந்து மீண்டும் கடுவெளிக்கு விரிந்தெழலாம். இப்பாதையும் அங்குதான் செல்கிறது என்று எண்ணியபோது உரக்க நகைத்தான்.
நீண்ட சடைமுடியும் தோள்களில் சரிந்துகிடந்த சடைப்புரிகளும் பித்தெழுந்த விழிகளுமாக இருந்த அவனது நகைப்பு மதுக்கடைக்குள் இருந்த காப்பிரிநாட்டுத் தொலைவணிகர் மூவரை திரும்பிப்பார்க்க வைத்தது. பெரியஉதடுகளும் எருமைவிழிகளும் மின்னும் கருநிறமும் கொண்ட ஒரு வணிகன் வெளியே வந்து “புளித்த மது அருந்துகிறீர்களா, பாரதரே?” என்று கேட்டான். அர்ஜுனன் “ஆம்” என்று உள்ளே சென்று மதுவை வாங்கி அருந்தினான். அழுகல் மணத்துடன் எழுந்த ஏப்பத்தை சற்று உடல் உலுக்க குமட்டி வெளிவிட்டபடி மீண்டும் திண்ணைக்கு வந்து அமர்ந்தான்.
“அங்கு வெயிலின் அனலடிக்கிறதே? இங்குள்ள இருள் குளுமையாக இருக்கிறதே!” என்றான் இன்னொருவன். அவனை நோக்கி மறுமொழி எடுக்க எண்ணி சொல் நாவில் எழாது அர்ஜுனன் தலையசைத்தான். “இன்னும் சில நாட்களில் வடபுலத்திலிருந்து பீதர்நாட்டு வணிகர்கள் வருவார்கள். ஆயிரம் ஒட்டகங்களுக்கு மேல் அவர்களுடன் வரும். அது ஒரு நகரும் சிற்றூர். கூடாரங்களும் உணவும் நீரும் அவர்களிடம் இருக்கும். பாடகர்களும் பெண்களும்கூட இருப்பார்கள். அவர்களின் நாட்டிலிருந்து பாலையைக் கடந்து யவன நாட்டை அடைய அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் ஆகும்” என்றான் ஒருவன்.
“அவ்வளவு தொலைவு சென்று அவர்கள் ஈட்டும் பொருள்தான் என்ன?” என்று தரையில் அமர்ந்திருந்த மேய்ப்பன் கேட்டான். பச்சைக்கண்களும் ஒடுங்கிய கன்னமும் சுருக்கங்கள் செறிந்த முகமும் கொண்டிருந்தான். முதுமைகொண்ட சோனக வணிகன் கையில் மதுக்குவளையுடன் “எந்த வணிகமும் பொருளை எண்ணி தொடங்கப்படுவதில்லை. நேர்நோக்கில் பொருள் மட்டுமே வணிகனின் எண்ணத்தில் உள்ளது. ஆனால் பொருள் என்பதற்கே மீறல், கடந்து செல்லல் என்பது உட்பொருள். எண்ணிப்பாருங்கள், உண்பதற்கும் உடுப்பதற்கும் மட்டும் பொருள் தேவைகொண்டவன் பொருள் விழைவதே இல்லை. எவராயினும் பொருள் விழைவதே பிறிதொன்றென ஆகவும் தானும் பிறரும் வகுத்த எல்லைகளிலிருந்து வெளியேறவும்தான்” என்றான்.
“ஆம், உண்மை” என்றான் காப்பிரிவணிகன். “அமர்ந்த இடத்திலிருந்து பொன் குவிப்பதைப் பற்றி கனவு காணும் இளவணிகன் எவனாவது உள்ளானா? தொலைவில் மேலும் தொலைவில் எங்கோ பொன் குவிந்துள்ளது என்றல்லவா அவன் எண்ணுகிறான்? தொடுவான் முட்டும் நெடும்பாதையைப்போல வணிகனை கிளர்ச்சியுறச் செய்வது எதுவுமில்லை. ஆம், பொன்கூட இல்லை” என்றார் முதியவர். காப்பிரி வணிகன் “உண்மைதான்” என்றான்.
முதிய வணிகன் மதுக்கோப்பையை வைத்துவிட்டு வாயை அழுந்தத் துடைத்தான். “வீரர்களின் வெற்றிக்கதைகளை சூதர்கள் பாடுகிறார்கள். தலைமுறை தலைமுறையாக அவர்கள் பெயர்கள் சொல்லில் பதிந்து நீடிக்கின்றன. வணிகர்களை எவரும் பாடுவதில்லை. வணிகர்கள் பொன் கொடுத்தால்கூட அவர் புகழை பாடவேண்டுமென்று சூதர்கள் நினைப்பதில்லை. ஆனால், இளையோரே! நாம் காணும் இப்புவி என்பது வணிகர்களால் உருவாக்கப்பட்டது. ஆம், நாம் உருவாக்கியிருக்கிறோம் இதை.”
“ஒவ்வொரு முறையும் தன் மூதாதையர் வகுத்த எல்லையொன்றை மீறி ஒரு காலடி எடுத்து வைக்கும் வணிகன் விராட வடிவம் கொண்டு இப்புவியில் நிறைந்திருக்கும் மானுடத்தின் ஒரு புதிய தளிராக எழுகிறான். அவனில் அப்போது கூடும் தெய்வமே மானுடர்க்கு அருளும் தெய்வங்களில் முதன்மையானது. அதை இவ்வெளிய மக்கள் உணர்வதில்லை. பொருள்வயின் அலையும் வணிகன் பொருளையும் அடைவதில்லை, தோழரே. வணிகம் எனும் பேரின்பத்தை அறிந்தவனே அவ்வின்பநாட்ட விசையை பொருளாக மாற்றிக்கொள்கிறான்” என்றார் முதியவர். “நீர் என்ன சொல்கிறீர், வீரரே?” என்று அழுக்கான தோலாடை அணிந்து தலையில் மேலும் அழுக்கான தலையுறையுடன் தரையில் கால்மடித்து அமர்ந்திருந்த மதுக்கடை ஏவலன் அர்ஜுனனை நோக்கி சிரித்தபடி கேட்டான். மீசையை சுட்டுவிரலால் சுழற்றியபடி அவனை நோக்கிக்கொண்டு பேசாமல் இருந்தான் அர்ஜுனன். அவன் பேசப்போவதில்லை என்று உணர்ந்தபின் ஏவலன் விழி திருப்பிக்கொண்டான்.
“அவரும் எல்லை கடந்து செல்பவரே. அவரால் வணிகர்களை புரிந்துகொள்ள முடியும்” என்றான் மெல்லிய உடல்கொண்ட ஒருவன். முகத்தைப் பாராதவர்கள் அவனை சிறுவன் என்றே சொல்லிவிடுவார்கள். “வீரர் செய்வதும் வணிகமே. அவர்கள் வெல்வது பணமல்ல, புகழ்.” முதிய வணிகன் “புகழ் அல்ல, வெற்றி. தன்மீதான வெற்றி. அது அளிக்கும் மெய்மை” என்றார். அர்ஜுனன் மெல்ல அச்சூழலில் இருந்து நழுவி மீண்டும் பாதைமேல் படர்ந்த சித்தம் மட்டுமென்றானான்.
[ 47 ]
ஏழாவது நாள், தொலைவில் குருதி ஒற்றிஎடுத்த பஞ்சுத் திவலை போல செம்புகை எழுவதை மதுக்கடைக்காரன் கண்டான். உடல் அனல்பட்டதுபோல துடிக்க “வருகிறார்கள்! அதோ!” என்று கூவியபடி கொம்பு ஒன்றை எடுத்து கவிழ்த்துப் போடப்பட்ட மரத்தொட்டி மேல் ஏறிநின்று அவன் மும்முறை முழங்கியதும் அச்சிற்றூரிலிருந்து ஆண்களும் பெண்களும் இல்லங்களில் இருந்து புதரிலிருந்து சிறுபறவைகள் என கிளம்பி பாதையை நோக்கி கூச்சலிட்டபடி ஓடி வந்தனர்.
ஒவ்வொருவரும் தங்கள் கையில் பலவண்ணக் கொடிகளை எந்தியிருந்தனர். பச்சைக் கொடி உணவையும் ஓய்விடத்தையும் குறித்தது. நீலநிறக் கொடி உணவுடன் பெண்டிரும் உண்டென்பதை குறித்தது. நீலச்சிவப்புக் கொடி அங்கு சூதாட்டம் நிகழும் என்பதை காட்டியது. மஞ்சள்நிறக் கொடி குளியல்சேவை உண்டு என்று சொன்னது. செம்பச்சைநிறக் கொடி பொருள் மாற்று வணிகத்திற்கு அழைப்பு விடுத்தது. காற்றில் துடிதுடித்து அவை எழுந்து பறந்து அவ்வணிகக்குழு நோக்கி செல்லத் தவித்தன.
அர்ஜுனன் எழுந்து அங்கிருந்த முள்மரத்தின் அடியில் மார்பில் கைகளைக் கட்டியபடி நோக்கி நின்றான். வணிகர்குழுவில் முதன்மையாக குருதிநிறப் பெருங்கொடி ஒன்று பறந்தது. அதில் வாய்பிளந்து சுருண்டு பறக்கும் முதலைச்சிம்மம் துடித்தது. அதன் நா அனல்சுருளாக எழுந்திருக்க பெரிய உருண்டைவிழிகள் பசிகொண்டிருந்தன. “பீதர்கள்!” என்றான் ஒருவன். “பீதர்கள்! பீதர்கள்!” என்று குரல்கள் எழுந்தன. “பீதர்கள்” என்றபடி ஒருவன் குடில்களை நோக்கி ஓடினான்.
வணிகக்குழு மிக மெதுவாக உருவம் கொண்டு பெருகி வளர்ந்து அணுகுவதை அர்ஜுனன் நோக்கி நின்றான். அவர்களுக்கு மேல் புழுதி எழுந்து செந்நிறக் குடைபோல் நின்றது. அனல் என படபடத்த கொடிக்குப் பின்னால் படைக்கலங்களை ஏந்தியவர்கள் சீர்நடையிட்டு வந்தனர். இரும்புப்பட்டைகள் தைக்கப்பட்ட தோற்கவசங்களும் மெழுகிட்டு துலக்கப்பட்ட தோல் காலணிகளும் தீட்டப்பட்ட இடைப்பட்டைகளும் மின்னின. பாதரசக் குமிழென ஒளிவிட்டன தலைக்கவசங்கள். வேல்முனைகளும் வாள்முனைகளும் வெயிலில் நீர் அலைவளைவுகள் என ஒளி வீசின.
இரு நிரைகளாக ஒட்டகைகள் இரட்டைப்பொதி சுமந்து நீரில் ஆடும் கலங்களைப்போல அசைந்து வந்தன. ஒட்டகைகளின் நிரைக்கு இருபுறமும் படைக்கலங்களை ஏந்திய வீரர்கள் காவல் வர தொடர்ந்து செந்நிறமான தலைப்பை அணிந்த பீதவணிகர்களும் நடந்து வந்தனர். அவர்களைத் தொடர்ந்து ஏவலர்களும் சுமையர்களும் நான்கு நிரைகளாக வந்தனர்.
ஒட்டகைகளின் மீது இருபுறமும் தொங்கும்படியாக பொதிகள் ஏற்றப்பட்டிருந்தன. தோலுறைகளால் பொதியப்பட்டவை. அவற்றுக்குள் பட்டும் புல்லேட்டுக் கட்டுகளும் இருக்கும் என அவன் அறிந்திருந்தான். தேய்ந்த கூழாங்கற்பற்கள் தெரிய தாடையை தொங்கவிட்டு அசைபோட்டபடியும், கடிவாளத்தை மென்றபடியும், அண்ணாந்து கழுத்தை வளைத்து எடை மிக்க குளம்புகளை எறிந்து எறிந்து எடுப்பவை மணல் எழுந்து தெறிக்க வைத்து ஒட்டகைகள் அணுகின.
பீதவணிகர்களில் பெரும்பாலானவர்கள் குருதிநிற ஆடை அணிந்து உயரமான தோல் காலணிகள் அணிந்திருந்தனர். அவர்களின் செந்நிற ஆடைகள் பாலைக்காற்றில் படபடக்க அனல் எழுந்து தழலாடுவதுபோல அவர்கள் நிரை நெளிந்தது. தொடர்ந்து வந்த அத்திரிகளில் முதிய பெருவணிகர்கள் அமர்ந்திருந்தனர். பொன்பட்டுநூல் பின்னிய தலையணிகளை அணிந்திருந்தனர். அவர்களுக்கு இருபுறமும் நாணேற்றப்பட்ட விற்களுடனும் அம்புகள் நிறைந்த தூளிகளுடனும் வில்லவர்கள் வந்தார்கள். தொடர்ந்து காவலரால் சூழப்பட்ட அத்திரிகள் உணவுப்பொதிகளையும் நீர் நிறைந்த தோற்பைகளையும் சுமந்தபடி வந்தன. இறுதியாக மீண்டும் வில்லவர்கள் வந்தனர். அவர்கள் தொலைவை தொடு பெருவிற்களும் நீண்ட அம்புகளும் கொண்டிருந்தனர்.
கொடியுடன் வந்த முதல் காவலன் விடுதிக்கு முன்பிருந்த முற்றத்தை அடைந்தபோதும் பின்நிரை வந்துகொண்டிருந்தது. பள்ளத்தில் இறங்கித்தேங்கும் நீரோடைபோல அந்தப் பெருநிரை முற்றத்தில் வளைந்து சுழலத்தொடங்கியது. பெருவணிகர்கள் தனியாகப் பிரிந்து அவர்களை ஓடிச்சென்று வரவேற்ற அவ்வூர் மக்களை விழிசுருங்கச் சிரித்தபடி எதிர்கொண்டனர். கைகளை விரித்து பெண்களை தழுவிக்கொண்டார்கள். ஊரார் கொடிகளைத் தாழ்த்தி கைகளைத் தூக்கி தங்கள் மொழியில் உரக்க வாழ்த்துரைத்தனர்.
அத்திரிகளிலிருந்து பெருவணிகர்கள் இறங்கியதும் அவர்களின் கால்களைத் தொட்டு சென்னி சூடி தங்கள் இல்லங்களுக்கு வரும்படி அழைத்தனர். கூச்சல்களும் சிரிப்பொலிகளும் வாழ்த்தொலிகளும் நிறைந்திருந்தன. சிறு குழந்தைகள் நடுவே கூச்சலிட்டபடி ஓடி வணிகர்களின் ஆடைகளைத் தொட்டு பணம் கேட்டன. அவர்கள் செம்புநாணயங்களை அவர்களுக்கு அளித்தனர். உணவைச் சூழ்ந்து கூச்சலிடும் காகங்கள்போல குழந்தைகள் அவர்களை மொய்த்தன.
காவலர்கள் படைக்கலங்களைத் தாழ்த்திவிட்டு கவசங்களையும் காலணிகளையும் கழற்றினர். சிலர் களைப்புடன் அப்படியே அமர்ந்து கைகளைத் தூக்கி சோம்பல் அகற்றினர். ஏவலர்கள் ஒட்டகைகளை கடிவாளம் அகற்றி விட்டுவிட்டு அத்திரிகளை நாடாவைப்பற்றி முதுகில் கையால் அடித்து அதட்டி அழைத்துச் சென்றனர். ஒட்டகைகள் கால்மடித்து விழுவதுபோல நிலத்தில் நெஞ்சுபட அமர்ந்து ஒருக்களித்துக்கொண்டன. அத்திரிகள் கனைத்து தங்கள் தோழர்களை அழைத்தன. பொதி அகன்றதும் முதுகை நீட்டி இளைப்பாறலுடன் சாணியுருளைகளை உதிர்த்தன. பச்சைக்குழம்பாக சிறுநீர் கழித்து வால்சுழற்றி துளிவிசிறின.
ஏவலர் பொதிகளைச் சரித்து இறக்கி இழுத்துச்சென்று ஒன்றுடன் ஒன்று சேர்த்து சிறு குன்றுகள்போல அடுக்கினர். ஒட்டகைகள் நாணொலி எழுப்புவதுபோல ஒலி எழுப்பின. தும்மல் ஓசையிட்டபடி தலைகளை குலுக்கின. அருகிலிருந்து ஓர் ஒட்டகை கண்களை நோக்கியபோது விழி திறந்தபடி அது துயிலில் இருப்பதுபோல் அர்ஜுனனுக்குத் தோன்றியது. அவற்றின் குளம்புகளில் லாடங்கள் தேய்ந்திருந்தன. குறியவாலை பட் பட் என அவை அறைந்து அவ்வோசையால் பேசிக்கொண்டன.
அத்திரிகளை நீண்ட மரத்தொட்டிகளில் ஊற்றப்பட்ட நீரை அருந்துவதற்காக கொண்டுசென்றனர். கழுத்து மணி குலுங்க ஆவலுடன் நீரருகே சென்று மூழ்கி மூக்கு மயிர்களில் துளிகள் சிதற தலைதூக்கி செவிகளை அடித்தபடி சிலுப்பிக்கொண்டு அவை நீரருந்தின. நீரின் தண்மை அவற்றின் உடலின் அனலை அவிப்பதை வால் சுழலும் துள்ளலிலிருந்து அறியமுடிந்தது.
ஒட்டகைகள் நீருக்கென தவிப்பெதையும் வெளிப்படுத்தவில்லை. ஓர் ஒட்டகை படுத்தபடியே மல்லாந்து நான்கு கால்களையும் மேலே தூக்கி உதைத்து கனைத்தது. பிற ஒட்டகைகள் ஆர்வமில்லாது அதை நோக்கின. அவற்றின் கண்ணிமைகள் பாதி மூடியிருந்தன. தேர்ந்த கைகளுடன் ஏவலர்கள் பொதிகளை அமைத்து அவற்றின் மேல் தோலுறையிட்டு மூடி இறுகக்கட்டினர். பின்னர் அவர்களுக்கு அளிக்கப்பட்ட புளித்த மாவுக்கள்ளை மரக்குடுவைகளில் வாங்கி அருந்தினர்.
நீரை வாயிலெடுத்ததும் விழுங்காமல் வாய்க்குள்ளேயே பலமுறை சுழற்றி அவற்றின் குளுமையை உணர்ந்து துளித்துளியாக விழுங்கியபின் மீண்டும் பணியாற்றி போதுமான இடைவெளிவிட்டு இன்னொரு மிடறை அருந்தினர். அனைத்துப் பொதிகளையும் இறக்கிவைத்து அனைத்து அத்திரிகளையும் நீர்காட்டி முடித்தபிறகுதான் அவர்கள் புளித்த மதுவை அருந்தி முடித்திருந்தனர். அதன் பின்னரே ஒட்டகைகளுக்கு நீர் அளிக்கப்பட்டது.
நீரருந்தும்பொருட்டு எழுந்து தொட்டிகளை நோக்கிச் செல்ல ஒட்டகைகள் விரும்பவில்லை. எனவே மூங்கில்களில் நீர்த்தொட்டிகளை கயிற்றால் கட்டி இருவர் இருவராக தூக்கிக்கொண்டு வந்து அவற்றின் முன் வைத்து அவற்றை நீரருந்தச் செய்தனர். ஒட்டகைகளும் ஏவலரும் அத்திரிகளும் காவல்வீரரும் புழுதியால் மூடப்பட்டிருந்தனர். அம்முற்றத்தில் வந்து தங்கள் ஆடைகளை உதறிக்கொண்டபோது எழுந்த புழுதியே அவர்களை மறைக்கும் திரையாக மாறியது.
மதுவிடுதியின் அனைத்து இருக்கைகளிலும் தரையிலும் மரப்பெட்டிகளிலும் வணிகர்கள் செறிந்து அமர்ந்திருந்தனர். அவர்களின் பேச்சொலிகளும் சிரிப்போசையும் வாயில் வழியாகத் தெறித்தன. குள்ளனான மதுக்கடை ஏவலன் வெளியே வந்து குடில்களை நோக்கி ஓடினான். நான்குபேர் பெரிய மதுப்பீப்பாயை உருட்டியபடி உள்ளே சென்றார்கள். உள்ளிருந்து இரு வணிகர் சிரித்தபடி ஓடிவந்து அதை தாங்களும் சேர்ந்து உருட்டிச்சென்றனர்.
ஏவலரும் காவல் வீரர்களும் மதுவிடுதிக்குள் நுழைய ஒப்புதல் இருக்கவில்லை. அவர்கள் பொதிகளைச் சூழ்ந்து முற்றத்திலேயே நீள்வட்டமாக அமர்ந்து கொண்டனர். கால்களை வளைத்து மடிக்காமல் முழங்காலை ஊன்றி குதிகால் மேல் பின்பக்கத்தை வைத்து அமரும் அவர்களின் முறையும் பெரிய கைகள் கொண்ட உடையும் அவர்களை பறவைகள் போலக் காட்டின.
அவர்களின் உடல்கள் மிகச் சிறியவையாகவும் தோள்கள் முன்நோக்கி வளைந்து குறுகியதாகவும் இருந்தன. உடலோடு ஒப்பிடுகையில் அவர்களின் கைகள் மிகப் பெரியவை என்பதை அர்ஜுனன் கண்டான். கடும் உழைப்பின் விளைவாக அவை தோல் காய்ந்து மரத்தாலானவைபோல் தோன்றின. தொடர் அனல் காற்றால் அரிக்கப்பட்ட சுண்ணப்பாறைகள்போல மஞ்சள் முகங்கள் சுருக்கங்கள் மண்டி நிறம் கன்றிப்போயிருந்தன. கண்கள் சேற்று வெடிப்புக்குள் தெரியும் நீர்த்துளிகள்போல. வாய்கள் கத்தியால் கீறப்பட்ட புண்கள்போல.
குறுவில்லை கையால் மீட்டியது போன்ற விரைவொலியுடன் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். பூனைகளின் பூசல்போல மறுகணம் தோன்றியது. விடுதிக்காவலன் வந்து அர்ஜுனனை வணங்கி “பெருவணிகர் தங்களைப் பார்க்க விரும்புகிறார். தாங்கள் விரும்பினால் அவரிடம் வில்லவராக சேர்ந்துகொள்ளலாம்” என்றான். “நன்று” என்றபடி அர்ஜுனன் அவனுடன் சென்றான்.
விடுதிக்குப் பின்புறம் பிறைவடிவில் இருந்த மரப்பட்டைக்கூரைகொண்ட சிற்றில்களில் பெருவணிகர் பலர் உடைகளைக் கழற்றி இளைப்பாறத் தொடங்கியிருந்தனர். உடலில் படிந்த கூரிய மணல்பருக்களை அகற்றும்பொருட்டு பெரிய தோல் துருத்தியால் காற்றை விசையுடன் வீசி அவர்களின் உடலை தூய்மை செய்தபின் பெரியமரக்குடைவுக் கலங்களில் வெந்நீர் கொண்டுவந்து அதில் துணியை முக்கி அவர்களின் உடலை மெல்ல ஒற்றி எடுத்துக்கொண்டிருந்தனர் பெண்கள். அதிலிடப்பட்ட நறுமணத் தைலத்தின் ஆவி அங்கே சூழ்ந்திருந்தது. உடலெங்கும் பரவியிருந்த தோல்வெடிப்புகளில் நீர் பட்டபோது வணிகர்கள் முனகினர். சிலர் அப்பெண்களை கையால் அடித்துத் தள்ளினர்.
அவர்களின் ஆடைகளை கழிகளில் தொங்கவிட்டு மென்மையான குச்சிகளால் அடித்தும் தூரிகைகளால் வருடியும் மணலையும் அழுக்கையும் போக்கிக்கொண்டிருந்தனர் இளைஞர். உடல் தூய்மை செய்துகொண்டிருக்கும்போதே ஒரு கையில் மதுக்கிண்ணத்துடன் மெல்ல விழிசொக்கி உடல் தளர்ந்து இளைப்பாறினார்கள் வணிகர்கள் சிலர். சிலர் ஏனென்றறியாமல் அழுதுகொண்டிருந்தனர்.
அரைவட்ட வடிவ குடில்நிரையாலான ஊரின் மையமாக இருந்த பெரிய குடிலின் முன் விரிபலகையில் பீதர்குலத்து முதுவணிகர் படுத்திருந்தார். அவருடைய நீண்ட கூந்தல் பெண்களின் பின்னல் போல இடையையும் தாண்டி பின்னி கரிய நாகம்போல வளைந்து கிடந்தது. மெழுகு பூசி திரிக்கப்பட்ட அதன் புரிகளை கீழிருந்து ஒரு பெண் பிரித்துக்கொண்டிருந்தாள். முகவாயிலிருந்து மட்டும் ஓரிரு மயிர்கள் நீண்டு நின்ற தாடியும் கீறி நீட்டப்பட்ட காதுகளும் சுருக்கங்களுக்குள் புதைந்து மறைந்த சிறிய விழிகளும் கொண்டிருந்தார்.
இடையில் தோலாடை மட்டும் அணிந்து படுத்திருக்க அவர் உடலில் துருத்தியால் ஊதப்பட்ட காற்றுடன் வெந்நீரைக் கலந்து மென்துளிகளாக்கி புகைபோல பாய்ச்சிக்கொண்டிருந்தனர் இரு பெண்கள். ஒரு சிறு பீடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த அவரது காலை இரு பெண்கள் வெந்நீரால் கழுவிக்கொண்டிருந்தனர். ஒருத்தி மென்மையான கல்லால் காலை உரசிக் கழுவ இன்னொருத்தி சிறிய மர ஊசியால் நகங்களுக்கிடையே இருந்த மணலை எடுத்துக்கொண்டிருந்தாள். அவர் கைகளையும் இருவர் கழுவி நகங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தனர்.
பெருவணிகர் அருகே நின்றிருந்த இரு கணக்கர்கள் புல்லால் ஆன பட்டுச் சுருளை விரித்து அவற்றிலிருந்து அவரது மொழியில் எதையோ வாசித்துக் காட்டிக்கொண்டிருக்க அவர் ஒவ்வொரு சொற்றொடருக்கும் தலையசைத்து ஒப்பு அளித்தபடி கேட்டுக்கொண்டிருந்தார். அர்ஜுனன் அருகே சென்றதும் விடுதித்தலைவர் அவனைப் பற்றி அவரிடம் சொன்னார். பீதவணிகரின் முதிய விழிகள் ஆர்வமற்றவைபோல அர்ஜுனனை பார்த்தன. இல்லையோ என்பது போன்று தெரிந்த உதடுகள் மெல்ல அசைய செம்மொழியில் “இமயமலையைச் சார்ந்தவரா?” என்றார்.
“அங்கிருந்தேன். ஆனால் பாரதவர்ஷத்தின் வடபுலத்து அரசகுடியினன். க்ஷத்ரியன்” என்றான் அர்ஜுனன். அவரது கண்கள் சற்று சுருங்கின. “உங்கள் பெயரென்ன? அதையல்லவா முதலில் சொல்ல வேண்டும்?” என்றார். “எங்கள் ஊரின் வரிசை வேறு வகையில்” என்றபின் அர்ஜுனன் “என் பெயர் விரஜன்” என்றான். அவர் சிறிய வாய் மேலும் குவிய “நன்று” என்றபடி “நீர் வில்லவர் என்பதை கைகள் காட்டுகின்றன” என்றார்.
அர்ஜுனன் தலையசைத்தான். அவர் திரும்பி ஒரு வீரனைப் பார்த்து அவரது மொழியில் அவனிடம் ஒரு வில்லை கொடுக்கும்படி சொன்னார். அவன் தன் கையிலிருந்த வில்லையும் அம்பறாத்தூணியையும் கொடுத்தான். அர்ஜுனன் அவற்றை வாங்கி கையில் அணிந்து தோளில் எடுத்துக்கொண்டான். “உமது திறமைகளில் ஒன்றைக் காட்டுக!” என்றார்.
அர்ஜுனன் திரும்பி தொலைவில் ஒரு குடிலுக்குள் இருந்து எழுந்துகொண்டிருந்த புகைச்சுருளைப் பார்த்து தன் அம்பு ஒன்றை எய்தான். வெண்பட்டாலான மரம்போல எழுந்து விரிந்து கொண்டிருந்த புகையை அம்பு இரண்டென கிழித்தது. பெருவணிகர் வியப்புடன் எழுந்து அதைப் பார்த்தார். அந்த அம்பு கீழே விழுவதற்குள் அடுத்த அம்பு அதைத் தைத்து மேலே தூக்கியது. மூன்றாவது அதை மேலும் தூக்கியது. தொடர் அம்புகளால் முதல் அம்பு வளைந்து வானத்தில் எழுந்தது.
கீழிருந்து மேலெழுவதுபோல் சென்ற அம்புகளால் அந்த முதல் அம்பு திருப்பி உந்தப்பட்டு அர்ஜுனனை நோக்கி வந்தது. அவன் அதைப் பற்றி மீண்டும் அம்பறாத்தூணிக்குள் போட்டான். பிற அம்புகள் வரிசையாக மண்ணில் தைத்து சாய்ந்து நின்று அசைந்தன. அவன் நின்றிருந்த இடத்தில் இருந்து அந்த அம்புகள் அனைத்தும் நேர் கோட்டில் ஒரே கோணத்தில் சாய்ந்து நாணல்கள் போல நின்று பீலி சிலிர்த்தன.
சொல்லழிந்து அமர்ந்திருந்த பெருவணிகர் கைகளை இழுத்துக்கொண்டு நீர்க்குடுவைகள் சரிய எழுந்து பதறும் குரலில் “வீரரே, நீங்கள் அஸ்தினபுரியின் விஜயரா?” என்றார். “ஆம், வேறு எவருமில்லை. கர்ணனல்ல. பரசுராமனல்ல. அப்படியென்றால் நீங்கள் அர்ஜுனனேதான்.” அர்ஜுனன் “ஆம்” என்றான்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 29
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 28
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 27
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 26
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 25
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 24
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 23
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 22
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 21
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 20
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 19
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 18
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 17
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 16
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 15
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 14
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 12
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 11
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 10
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
November 16, 2016
கலந்துரையாடல் – மார்க் லின்லே
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
இந்த கணத்தில் எங்கள் வாழ்வினை திரும்பி பார்க்கும் போது ,காந்தி குறித்தும் காந்தியம் குறித்தும் கிடைத்த தரிசனங்கள் உங்களின் எழுத்துக்களின் வழியே தான் முதன்மையாக கண்டடைந்தோம்.
யானை தன் குட்டிகளுக்கு தாகம் எடுத்தால் தண்ணீர் எங்கு கிடைக்கும், பசி எடுத்தால் உணவு எங்கு கிடைக்கும் என்பதற்கான அறிவை அதன் சிறு வயது முதலே மனதில் பதிய வைத்துவிடும். அத்தோடு மட்டுமில்லாமல் அடுத்தடுத்த தலைமுறைக்கு அந்த அறிவை கடத்திக்கொண்டே இருக்கும். அதுபோலதான் காந்தியத்தையும் சமதர்மத்தையும், இயற்கை பேணுதலையும், இறையை கண்டடைதலையும் நாங்கள் குழந்தை யானை போல குக்கூவின் தும்பிக்கையை பிடித்தே கற்றுக்கொண்டிருக்கிறோம்.
நல் அதிர்வுகளின் ஒத்திசைவிலும், தோழமைகளின் வழிகாட்டுதளிலும், தாய்மையின் அரவணைப்பிலும் நாங்கள் இத்தருணத்தில் எங்கள் தாகத்திற்காக கண்டடைந்த நீரூற்றுதான் மார்க்ஸ் லிண்ட்லே.
காந்தியத்தையும் அதன் முழு ஆன்மீகத்தையும் வாழ்வில் நிதர்சனமாய் உணர்ந்த ஜே.சி. குமரப்பாவின் கொள்கைகளை கற்றுணர்ந்து உலகம் முழுக்க கொண்டு சேர்த்துக்கொண்டிருப்பவர் மார்க்ஸ் லிண்ட்லே.
மதுரையில் உள்ள காந்தி நினைவகத்தில் மார்க்ஸ் லிண்ட்லே அவர்களுடனான சந்திப்பும் நம்மாழ்வார் அய்யாவை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு சூழலுக்கு ஏதுவாக தம் பணிகளை அமைத்துக்கொண்டு வாழ்வை சத்தியத்தை நோக்கி திசைதிருப்பி பயணித்துக்கொண்டிருக்கும் நல்லுள்ளங்களையும் கெளரவிக்கும் நிகழ்வும் நடைபெறுகின்றது.
நம்மில் ஏற்பட்ட மாறுதல்களை நம் சொந்தங்களுடன் பறிமாறிக்கொள்ளவும் மேலும் நம் பலத்தை அதிகரித்துக்கொள்ளவும் தோழமைகள் அனைவரையும் அழைக்கின்றோம்.
ஆதிநிலம் - பனை – நூற்பு
தொடர்புக்கு 9787978700
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சிறுகதைகள் – என் மதிப்பீடு -1
உதயன் சித்தாந்தன்
எழுத்தை விமர்சனம் செய்தால் எதிரிகளாகி விடுகிறார்கள் என்று ஒருகடிதத்தில் சொன்னது வேடிக்கைக்காகத்தான். அதற்காகவெல்லாம் விமர்சனம் செய்யாமல் இருந்துவிட முடியாது. எந்த ஒரு இலக்கியவாதிக்கும் அவனுடைய படைப்பின் உள்மடிப்புகளை உண்மையிலேயே தொட்டு அறிந்த ஒரு வாசகனின் எதிர்மறை விமர்சனமும் கூட உள்ளூற இனிதாகவே இருக்கும். கடுமையான விமர்சனங்கள்கூட அப்புனைவை எழுதியவனை விட ஒருபடி மேலே நின்றிருக்கும் வாசகனால் சொல்லப்படும்போது ஒருவகை ரகசிய வரவேற்பையே பெறுகின்றன
சென்ற காலத்தில் தமிழ்ச் சிற்றிதழ்ச் சூழலில் மிகக் கடுமையான விமர்சனங்களின் ஒரு களம் இருந்தது. சுந்தர ராமசாமியின் மொட்டைமாடிக்கூட்டம் அல்லது தேவதச்சனின் நகைக்கடை அல்லது ஞானக்கூத்தனின் திருவல்லிக்கேணி கடற்கரைச் சந்திப்பு என படைப்புகளை உரசிப்பார்க்கும் மையங்கள் பல அன்று இருந்தன. அவையே பயிற்சிக்களங்களாகவும் இருந்தன. இன்று எழுதும் எழுத்தாளர்களை இந்தக் களங்களில் எவற்றிலிருந்து வந்தவர் என்பதை வைத்தே அடையாளப்படுத்தமுடியும்
நான் எழுத வந்த காலகட்டத்தில் எனது கதைகளை தேவதச்சனும் சுந்தர ராமசாமியும் மிகக் கறாராகவே அணுகியிருக்கிறார்கள். ’மௌனி எழுதிய பிறகு தமிழில் இந்தக்கதைக்கு என்ன தேவை?’ என்று என்னிடம் தேவதச்சன் கேட்டதை நான் நினைவு கூர்கிறேன். தேவதச்சனின் நகைக்கடையில் உள்ள ஒரு மரநாற்காலியை மின்சார நாற்காலியென்றே வேடிக்கையாகச் சொல்வது வழக்கம். கதையோ கவிதையோ எழுதியவர்களை அன்புடன் வரவேற்று அதில் அமரவைத்து சோடாபுட்டிக் கண்ணாடியை ஏற்றிவிட்டபடி ’ஆரம்பிக்கலாமா?’ என்று தேவதச்சன் தலையாட்டியபடி கேட்கும் காட்சியை நினைவு கூர்கிறேன். கண்ணீர் மல்க எழுந்து செல்லும் இளம் எழுத்தாளர் மசால் தோசை காபி வாங்கிக் கொடுத்து ஆறுதல் செய்யப்படுகிறார்.
ஆனால் கறாரான விமர்சனம் என்பது கலையின் அடிப்படைகள் சார்ந்த புரிதலில் இருந்து வெளிவரவேண்டும். அதற்குப்பின் பரந்த வாசிப்பும் உண்மையான அக்கறையும் ரசனையும் இருக்கவேண்டும். அப்படைப்பு வெளிப்படுத்தும் அனைத்து தளங்களையும் தொட்டெடுத்தபின் மேலே செல்ல விழைவதாகவும் இருக்க வேண்டும். ஒற்றை வரி நிராகரிப்புகள் வெறும் வசைகள் ஆகியவற்றால் எந்தப்பயனும் இல்லை. அவை இலக்கியவாதிகளை சோர்வுறவும் எரிச்சலூட்டவுமே செய்யும்.
ஒருவகையில் இணையம் பெரிய சமத்துவ வெளி ஒன்றை உருவாக்கியது. அங்கு மேல் கீழ் இல்லை. முன்பு குறிப்பிட்ட சபைகளில் சுந்தர ராமசாமியோ தேவதச்சனோ ஞானக்கூத்தனோ அவர்களுக்குரிய பீடம் ஒன்றில் அமர்ந்துதான் அந்தக் கருத்துக்களைச் சொன்னார்கள். அதற்கான படைப்பு பின்புலமும் இலக்கிய வரலாற்று இடமும் அவர்களுக்கு இருந்தது. சமத்துவம் என்ற பெயரில் இந்த இடங்கள் அனைத்தும் மறுக்கப்பட்டு நேற்று வாசிக்க வந்த ஒருவன் கருத்துக்கு நிகராகவே ஒரு தலைமுறையை வடிவமைத்த இலக்கிய விமர்சகனின் கருத்தும் கொள்ளப்படும்போதுதான் விமர்சனம் உண்மையில் அழிந்து போயிற்று.
முதலில் இந்த சமத்துவ வெளி எவரும் பேசலாம். எதையும் பேசலாம் என்ற அளவில் கொண்டாடப்பட்டது. ஆனால் அதில் சாதகமான விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. அந்தச் சுதந்திரத்தை பயன்படுத்திக் கொண்டு அதுவரைக்குமான மேல் கீழ் அடுக்குமுறையால் கட்டுப்படுத்தப்பட்ட புதிய குரல்களோ புதிய கருத்துக்களோ எழுந்து வரவும் இல்லை. மாறாக பொறுப்பற்ற ஒற்றை வரிகளும் வசைகளுமே வந்தன. அக்கறையற்ற வாசிப்பே அமைந்தது
ஆகவே மெல்ல மெல்ல இணைய வெளியின் மொத்தக் கருத்துக்களையுமே எழுத்தாளர்கள் புறந்தள்ளத் தொடங்கினார்கள். அவர்கள் அவற்றைக் கவனிக்காமல் ஆனபோது அவையும் மெல்ல இல்லாமல் ஆயின. எழுத்தாளர்கள் கவனிப்பது அவர்களுடைய முகநூல் நட்பு வட்டத்தைச் சார்ந்தவர்களின் கருத்துக்களைத்தான் என்றாயிற்று. இச்சூழலில் நேற்று வெறும் ஆயிரம் பேர் வாசித்துக் கொண்டிருந்த சிற்றிதழ்களில் எழுதிய எழுத்தாளனுக்கு இருந்த எதிர்வினையும் விவாத வாய்ப்புகளும் இணையத்தில் இன்று எழுதும் எழுத்தாளர்களுக்கு மறுக்கப்படுகின்றன.
அதனால்தான் இணையத்தில் பத்து வருடம் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் ஒருவர் கூட எதையும் கற்றுக் கொள்ளவோ எழுத்தின் பயணத்தில் முன்னகரவோ முடியாமல் இருக்கிறது. ஐம்பது கதைகளை எழுதியபின்னரும்கூட அவர் எழுத்தில் எந்த மாற்றத்தையும் பார்க்க முடிவதில்லை.
இன்றுகூட ஒரு புனை கதையை அச்சு ஊடகம் ஒன்றுக்கு அனுப்புவது ஒரு எழுத்தாளன் அது சம்பந்தமான குறைந்தபட்ச ஒரு மதிப்பீட்டு நோக்கைப் பெறுவதற்கான ஒரே வாய்ப்பாக இருக்கிறது. காலச்சுவடுக்கோ உயிர்மைக்கோ ஒருகதையை அனுப்பும்போது அந்தக் கதையை அங்கு வாசிப்பதற்கு எவரோ ஒருவர் இருக்கிறார் அவர் ஏற்கவோ மறுக்கவோ செய்கிறார் என்னும் ஒரு எதிர்பார்ப்பு எழுத்தாளனிடம் இருக்கிறது. அதன் வழியாக தன் எழுத்தைப்பற்றி தான் இரு புறவயமான மதிப்பை பெற முடியும் என்று அவன் நினைக்கிறான்.
இவ்விதழ்களுக்கு ஒரு மாதத்திற்கு ஒரு கதையைத்தான் பிரசுரிக்க முடியும் என்ற கட்டாயம் இருப்பதனால் தான் இந்த மதிப்பீடு அங்கே இருக்கிறது. எத்தனை படைப்புகளை வேண்டுமானாலும் பிரசுரிக்க முடியும் என்னும் வசதி இருக்கும் இணைய இதழ்களில் இப்படிப்பட்ட மதிப்பீடே இருப்பதில்லை. ஆகவே இணைய இதழ்களில் வரும் கதைகள் இன்றைய சூழலில் அனேகமாக முழுமையாகவே கவனிக்கப்படுவதில்லை.
ஆகவே இந்த சூழலுக்கு வெளியே ஒரு விவாதத்தை உருவாக்கலாம் என்பதே இக்கதைகளை சுட்டி கொடுத்ததன் நோக்கம். சிங்கப்பூர் கதைகளைப்பற்றிய விவாதத்தின்போது பலரும் தமிழில் இவ்வாறு செய்யலாம் என்று கோரினார்கள்
எனக்குப்பிடித்த கதைகளை மட்டுமே சுட்டி கொடுக்கும் வழக்கம் எனக்கு இருந்தது. ஆனால் சிறுகதைகளைப்பற்றி ஒரு பொதுவான விவாதத்தை உருவாக்கவேண்டும் என்பதற்காகவே எனக்கு வந்த ஏறத்தாழ அனைத்து கதைகளையும் சுட்டி கொடுத்தேன். சாதகமும் பாதகமுமான விமர்சனங்கள் வரலாம் என்று எண்ணினேன்.
சென்ற முறை இவ்வாறு புதியவர்களின் கதைகளை விமர்சனம் செய்து எழுதிய காலகட்டத்தில் அவற்றின் மிக மென்மையான விமர்சனங்கள் செய்யப்பட்டவர்கள் கூட இரண்டு வருடங்கள் கழிந்து தாங்கள் புண்பட்டிருக்கும் தகவலை நண்பர்கள் வழியாக தெரிவித்தனர். அவர்களின் நண்பர்களும் ‘நீ ஒரு போட்டிப் பேரிலக்கியவாதியாக எழுந்து வரக்கூடாது என்று என்பதற்காக சொல்லப்பட்ட சதிகாரக் கருத்து இது’ என்று அவர்களை உசுப்பி விட்டார்கள். பலவகை கசப்புகள். ஒருவகையில் அதுவும் நன்று தாழ்வுணர்ச்சியைவிட மேட்டிமை உணர்ச்சி எழுத்தாளனுக்கு உதவக்கூடியது என்பது தான் என்னுடைய எண்ணம். அது உண்மையாக இருந்தால்போதும்.
இணைய வெளியில் பீடங்கள் மறுக்கப்பட்டிருக்கின்றன. அதாவது பீடங்களை நோக்கி கண்களை மூடிக்கொள்கிறார்கள். எத்துறையிலும் பீடங்கள் இருந்தே தீரும் அவற்றில் அமர்பவர்கள் சிலர் இருப்பார்கள். ஒவ்வொரு அடியிலும் பெற்றுக்கொண்டு ஒவ்வொரு சரிவிலிருந்தும் மீண்டும் நெடுங்கால பயணம் வழியாகவே அவர்கள் அங்கு வந்து சேர்ந்திருப்பார்கள். புதிய பீடங்கள் உருவாகவேண்டும் என்றும் புதியவர்கள் அங்கு அமரவேண்டுமென்றும் விரும்புகிறேன்.
*
முதல் இரு சிறுகதைகள் ராம் செந்தில் எழுதிய மடத்து வீடு, உதயன் சித்தாந்தன் எழுதிய புத்தரின் கண்ணீர்.
ராம் செந்திலின் கதை சிறப்பு இயல்பென்பது வெறுமே நடத்தைகளை கூர்ந்து கவனிப்பதன் மூலம் உள்ளம் வெளிப்படும் தருணங்களை அவரால் சொல்ல முடிகிறது என்பது தான். தொடர்ந்து எழுதுவாரென்றால் ஒரு எழுத்தாளராக அவருடைய திறன் வெளிப்படும் புள்ளியும் இதுவாக இருக்கும். மனிதர்கள் எத்தனை நுட்பமாக சீட்டாடுபவர் ஒரு சீட்டை எடுத்து வைக்கும் பெரும் திட்டத்துடன் சொற்களை முன்வைக்கிறார்கள், அவற்றை எதிர்கொள்பவர்கள் என்னென்ன பாவனைகள் வழியாக அவற்றை பெற்றுக் கொள்ளவோ கடந்து செல்லவோ செய்கிறார்கள் என்பதை இக்கதையினூடாக பார்க்க முடிகிறது.
இளம் பெண்கள் மட்டுமே இருக்கும் ஒரு இல்லத்திற்கு செல்லும் இளைஞர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் நடந்து கொள்ளும் நுட்பமான வேறுபாடு இக்கதையில் உள்ளது. பாலியல் புழக்கங்களில் மானசீகமாக நமது சமூகம் வகுத்த ஓர் எல்லைக்கோடு உள்ளது. ஆண் இவ்வளவுதான் செல்லலாம். பெண் இவ்வளவுதான் வரலாம் என்று. அந்த எல்லைக்கோட்டை முட்டிக் கொண்டிருப்பதில் உள்ளம் ஒரு ரகசியக் கிளுகிளுப்பை அடைகிறது. அதைக் கடந்து சென்று ஓரிரு சொற்றொடர்களைப் போட்டு விட்டு மீண்டு வந்து ஒளிந்து நின்று அச்சொற்றொடர் எப்படி எடுத்துக் கொள்ளப்படுகிறது என்று பார்ப்பதில் இருக்கும் கிளர்ச்சி இக்கதையில் இருப்பதனாலேயே இது ஒரு வாசிக்கத்தக்க கதை என்று நான் நினைக்கிறேன்.
வண்ணதாசனின் பல கதைகளில் இதன் வெவ்வேறு முகங்கள் பதிவாகியிருக்கின்றன. ஒரு உரையாடல் அந்த உரையாடலின் பொருட்டன்றி அந்த உரையாடலால் மறைக்கப்பட்ட உணர்வுகளின் பொருட்டு நிகழ்வதை இக்கதையில் காணமுடிகிறது. பெண்கள் மட்டும் இருக்கும் இல்லத்திற்குள் சென்றதே அந்தப்பையன்களை நிலையிழக்கச்செய்கிறது. அவர்கள் வழக்கமாக நடந்து கொள்ளும் முறையல்ல அங்கு நடந்து கொள்வது. அந்தப்பெண்கள் அவற்றைப்பெற்றுக் கொண்டு மெல்ல ஊக்கப்படுத்தி ஆனால் தவிர்த்துச் செல்லும் நுட்பம் அங்கு வரும் அத்தனை பேரும் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள், தொடர்ந்து அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் ஆண்களின் மனநிலை அது என்பதைக்காட்டுகிறது.
ஒரு சிற்றூரில் தையலோ பிற தொழில்களோ செய்து தங்கள் உழைப்பில் வாழும் பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய இக்கட்டு இது. சுந்தர ராமசாமியின் மொழியில் சொல்லப்போனால் மாயக்காம உறுப்புகளை மாட்டிக் கொண்டு ஓயாது உரசிக் கொண்டிருக்கும் ஜென்மங்களை எதிர்கொள்வது. ஒரு மேல்மட்டத்தில் இதை எதிர் கொள்வதற்கான பயிற்சியை அவர்கள் அடைந்து மிகத் திறமையாக அதை கையாளவும் செய்கிறார்கள். ஆனால் உள்ளூர அவர்களின் பெண்மை எந்த அளவுக்கு சீண்டப்பட்டிருக்கிறது என்பது அவர்களின் தந்தையிடம் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தில் தெரிகிறது.
ஒரு விரிந்த கோணத்தில் உடல் தளர்ந்து கை தளர்ந்து உளம் தளர்ந்த ஒரு முதியவர் மனிதர்களை, பெண்களைப் பார்க்க விரும்புவதில் பிழை ஒன்றும் இல்லை. ஒரு வேளை அது அவரை வாழ்க்கையில் பிடிப்பும் நம்பிக்கையும் கொள்ளக்கூட செய்யலாம். திருமணமாகி குழந்தைகளுடன் இயல்பான இல்லற வாழ்க்கையில் இருக்கும் பெண் ஒருவேளை சற்று உற்சாகமாகக்கூட அதை புரிந்து கொள்ளக்கூடும். ஆனால் இப்பெண்கள் எதிர்வினை ஆற்றுவதில் இருக்கும் மூர்க்கம் அவர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் ஆண் என்னும் அடையாளத்திற்கெதிரானதாக இருக்கிறது. அது உடனடியாக அவ்விளைஞர்களுக்கு புரியவும் செய்கிறது.
இந்த ஒரு தருணத்தை சென்று தொட்டிருப்பதனால் குறிப்பிடத்தக்க சிறுகதை என்று இதை சொல்ல முடியும் சிறுகதையின் அமைப்பிலும் இயல்பான ஒரு தருணம் வழியாக உச்சம் ஒன்று வெளிப்படும் திருப்பம் அமைந்திருக்கிறது.
ஆனால் இச்சிறுகதையின் வடிவ சிதைவுகள் இதை வாசகர்கள் முறையாக வாசிப்பதை தடை செய்யக்கூடும். ஒன்று மடத்துவீடு என்ற தலைப்பும் கதையின் தொடக்கத்தில் வரும் மடத்துவீடு பற்றிய விரிவான வர்ணனையும். இக்கதை உருவாக்கும் உலகத்திற்கும் அது சென்று முடியும் உளவியல் புள்ளிக்கும் அந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கதைக்குள் எவ்வகையிலும் அது ஒரு குறியீடாக ஆகவில்லை.
மடத்து வீடு அத்தனை தூரம் கதையில் சொல்லப்பட வேண்டுமென்றால் கதையின் உச்சம் அந்த மடத்துவீடு சார்ந்ததாகவே இருந்தாக வேண்டும். வெறும் ஒரு வரலாற்று பின்னணிக்காகவோ கதையைத் தொடங்குவதற்காகவோ அவ்வளவு நீண்ட விவரணையை அளிப்பது வாசகனை சோர்வுறச்செய்யும்.
இக்கதையின் மையம் என்பது அப்பெண்கள் ஆண்களை எதிர்கொள்வதும் அவர்களின் உள் ஆழம் கொள்ளும் நேர் எதிர் திசையிலான நகர்வும் தான். அந்த பெண்களிடமிருந்தே கதையைத் தொடங்கியிருக்க வேண்டும் அவர்களைப்பார்க்கும் இளைஞர்களிடம் இருந்து கதை வளர்ந்து அவர்களுக்குள்ளாகவே முடிந்திருக்கவேண்டும். பிற அனைத்துமே குறைந்த பட்ச குறிப்புகளாகக் கதைக்குள் வந்திருந்தால் போதுமானது.
சிறுகதை என்பது கூர் தீட்டப்பட்ட வடிவம் எழுதப்பட்டுவிட்டதனாலேயே எத்தனை நுணுக்கமான விஷயமாக இருந்தாலும் சிறுகதைக்குள் அது இருந்தாக வேண்டுமென்பதில்லை. தன் கதையை தானே வெட்டிக் கூர்திருத்திக் கொள்ளும் வழக்கமே நல்ல சிறுகதையை உருவாக்குகிறது.
புத்தரின் கண்ணீர் மூன்று வகையில் எதிர்மறையாக என்னில் விளைவுகளை உருவாக்கியது. ஒன்று புத்தரின் கண்ணீர் என்னும் தலைப்பு. புத்தரின் சிரிப்பு என்று ஒரு போர் நடவடிக்கை சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு எதிர்வினையாகத்தான் இத்தலைப்பு அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நூற்றுக்கணக்கான தலைப்புகள் கதைகளாகவும் சினிமாக்களாகவும் வந்துவிட்டன. ஒரு சிறுகதையின் தலைப்பு தன்னளவிலேயே ஒரு தேய்வழக்காக இருப்பது மிகவும் சோர்வுறுத்தக்கூடியது.
இரண்டாவதாக இச்சிறுகதையின் கதைக்கரு என்பது போர்க்கொடுமைகளில் ஈடுபடும் சிங்கள வீரனொருவனை அவன் குடும்பம் எப்படிப் பார்க்கும் என்ற ஒரு பொதுப்பார்வையின் அடிப்படையில் அமைந்துள்ளது அவன் குடும்பத்தால் அவனை ஏற்றுக்கொள்ள முடியாதென்றோ அவன் வீட்டுக்குள் பெண்கள் அவனை கற்பழிப்பவனாகத்தான் பார்ப்பார்கள் என்றோ உடனடியாகத் தோன்றும். இதுவே பொது வழிப்பார்வை எனப்படுவது
உண்மையில் அப்படித்தானா? குற்றவியல் வழக்கறிஞர்களான நண்பர் செந்தில், கிருஷ்ணன், செல்வராணி மூவருமே ஒன்றைச் சொன்னார்கள். பெரும்பாலான கற்பழிப்பு வழக்குகளில் கற்பழித்துக் கைதான கணவனுக்காக வழக்கறிஞரை அமர்த்துவதும், அவனுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து கொடுப்பதும் அவனுடைய மனைவியாகவோ தாயாகவோ தான் இருக்கிறார்கள்.
மனித இயல்பு நம்மவர் பிறர் என்று பிரியும்போது அதற்கு அடிப்படையில் அறம் சாதகமாக இருப்பதில்லை. ஒரு சிங்களப்பெண்ணை கற்பழித்த சிங்கள இளைஞனை கொடுமையாளனாக பார்க்கும் அதே சிங்கள மனம் தமிழ்ப் பெண்ணை போரில் கற்பழித்த சிங்களனை வீரனாகப் பார்க்கவும் கூடும். சட்டம் இல்லாத, சமூகக்கட்டுப்பாடு இல்லாத தருணங்களில் மனித மனம் கொள்ளும் கட்டின்மையையும், திரிபையும் அது செல்லும் இருட்டின் உச்சத்தையும்தான் கலைமனம் கூர்ந்து கவனிக்கவேண்டும். அதற்கு அந்த சிங்கள சிப்பாயாக தான் மாறி நின்று நோக்குவது ஒரு வழி
உண்மையில் அப்போது என்ன நிகழ்கிறது? கலாச்சாரம் பண்பாடு போன்றவை அளிக்கும் பலவகையான தடைகளை கடந்து வெறும் மிருகமாக,மனிதனாக நிற்பதின் களியாட்டு அவனை ஆட்கொள்கிறது. சிங்கள ராணுவமாயினும் இந்திய ராணுவமாயினும் விடுதலைப்புலிகளின் ராணுவமாயினும் தமிழகக் காவல் துறையாயினும் சீருடை அணிந்த படைகள் அனைத்தும் ஒரே மனநிலையைத்தான் கொண்டுள்ளன. சட்டபூர்வமாக குற்றங்களை அவர்களால் செய்ய முடியும். அந்த வாய்ப்பு வரும்போது குற்றங்கள் செய்வதின் ஆதி மிருக உவகையில் அவர்கள் ஈடுபடுகிறார்களே ஒழிய நம்மவர் பிறர் என்று பார்ப்பதில்லை.
வாச்சாத்தியில் கற்பழித்த காவலர்கள் அவர்கள் குடும்பத்தாரால் புறந்தள்ளப்படவில்லை. தர்மபுரியில் கல்பனா சுமதி என்னும் பெண்ணைக் கற்பழித்துக் கொலை செய்த காவலர்கள் தண்டிக்கப்பட்ட போது அவர்களைச் சூழ்ந்து நின்று அவர்களின் பெண்குழந்தைகளும் மனைவியரும் அன்னையரும் கதறி அழுத காட்சியை ஒளிப்பதிவில் நாம் பார்த்தோம்.
அந்த அசாதாரண எதிர்வினைகளை நோக்கித்தான் கலைஞனின் கவனம் செல்லுமே ஒழிய ஒரு பொத்தாம் பொதுவான பார்வையை வைப்பதல்ல அவன் இயல்பு. அந்தப் பொதுப்பார்வை வாசகனை சோர்வுறச்செய்கிறது. ஏனென்றால் அவன் அதை ஏற்கனவே அறிவான். அவன் எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு பாதையில் கலைஞனும் சென்று ஒரு சாதாரணமான முடிவை முன்வைக்கும்போது தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாக அவன் உணர்கிறான்.
மானுடனின் மிருக இயல்புக்கு அப்பால் சென்று தான் பிறர் என்னும் பேதத்தைக் கடந்து அறத்தை நோக்கக்கூடியவர்கள் இருப்பார்களா? இருக்கலாம். இருந்தால் அது வேறு கதை. ஆனால் இக்கதை சமரசிங்காவில் தொடங்குகிறது. புத்தனுக்கு அணுக்கமானவன் என்பதில் ஒரு குறிப்பிருக்கிறது. சிங்கள இனவாதத்திற்கு மேல் எழுந்து நிற்கும் ஒரு புத்தரை அவன் கண்டுவிட்டான் என்றால் அது கதைக்குள் வந்திருக்க வேண்டும். கதை அவனுடையதாக இருக்கவேண்டும். அவனில் அறத்தின் உச்சம் நிகழ்ந்திருக்கவேண்டும்.
ஆனால் சமரசிங்காவிலிருந்து அவனுடைய மகனுக்கு கதை செல்கிறது. அதன் பிறகு மீண்டும் அவனுடைய மகள்களுக்கு வருகிறது. அவனுடைய மனைவிக்கு வருகிறது. ஒரு பொதுவான உண்மையை ஒரு சூழலில் அனைவராலும் எதிர்கொள்ளப்படும்படியாக முன்வைக்கிறது இந்தக்கதை. கதையை மிக நேரடியானதாக ஆக்குவது அந்தப்பையன் கற்பழித்த புகைப்படங்களை அனைவரும் பார்ப்பதுதான். அவன் அந்த ராணுவத்தின் செயல்களுக்கான கூட்டுப்பொறுப்பாளி என அம்மக்கள் நினைத்திருந்தால் கதையின் வீரியம் மேலும் கூடியிருக்காதா?
சமரசிங்காவின் மகனுக்குமான கதையாக அமைந்திருக்கலாம். அல்லது சமரசிங்காவிலிருந்து கற்பழிப்பாளனாக மாறி விலகிச்சென்ற அவன் மைந்தனின் கதையாக இருந்திருக்கலாம். அது அவனுக்கும் அவன் மைந்தனுக்கும் இடையே இருக்கும் அவன் பெண்களின் கதையாக இருந்திருக்கலாம். எப்படியும் அந்தக்குவி மையம் முக்கியமானது. அது சிதறிவிட்டிருக்கிறது
ஒருவேளை இக்கதை சொல்வது ஓர் அன்றாட உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் அப்படியென்றாலும் கூட அனைவரும் அறிந்த பொது உண்மை அது. சாமான்ய மனம் செல்லும் பொதுவழிப்பாதை. அதுவல்ல நவின இலக்கியத்திற்கான வழி. நவீன இலக்கியம் ஒருவகை சீண்டலை ஆதாரமாகக்கொண்டது. வாசகனை அமைதியிழக்கவைப்பது. அதில் மீறல் ஒரு அவசியத்தேவை.
மூன்றாவதாக இக்கதை சிங்கள வாழ்க்கைக்குள் செல்லும்போது எந்தவிதமான நுண் தகவல்களையும் முன்வைக்காமல் சிங்கள வாழ்க்கையைப்பற்றிய ஒரு தமிழனின் பொதுப்புரிதலை சித்தரிப்பதாகவே அமைந்துள்ளது. அவர்கள் இல்லம் எப்படி இருக்கும், அவர்கள் உறவுகள் எப்படி அமைந்திருக்கும், அவர்களின் சமையல் என்ன அவர்களின் கூடம் எப்படி அமைந்திருக்கும், அவர்களின் உறவுகள் எந்த வகையானவை? அனைத்தையும் கதைக்குள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இயல்பாக வந்திருக்கவேண்டும்
ஒரு திரைப்பட இயக்குநர் தான் இயக்கும் திரைச்சூழலைப்பற்றி முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும், ஆனால் காட்சியில் அவற்றைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இயல்பாக வரும் சிறு தகவல் வழியாக அவருக்கு முழுமையாகத் தெரியும் என்ற நம்பிக்கையை ரசிகனிடம் அவர் முன் வைக்க முடியும் என்பார்கள். ஒரு சிங்கள வாழ்க்கைச் சூழல் இயல்பாகவே சரியாக வந்திருந்தால் மிகக்குறைவான தகவல்களுடனேயே வாசகர்களிடம் ஒரு நம்பிக்கையை உருவாக்கியிருக்க முடியும்.
இம்மூன்று காரணங்களினால் இக்கதை மிகவும் குறைப்பட்ட ஒன்றாக உள்ளது. இதற்கப்பால் சென்று கதையில் சிறப்பென கொள்ளக்கூடியது ஒன்றே. சிங்கள -தமிழ் இனவாதம் மிகபெரிய முரண்பாடாக வளர்ந்து அதை உண்டு மிக எளிய வெறுப்பை திருப்பிக் கக்கும் எழுத்தாளர்கள் மலிந்துள்ள ஒரு சூழலில் அதைத் தாண்டி சென்று ஒரு மனிதத்தை தேடும் பார்வை இக்கதையில் உள்ளது.
இலங்கை எழுத்தின் மிகப்பெரிய சிக்கலே அரசியல்வாதிகளால் உருவாக்கப்படும் அரசியல் சூழலுக்கப்பால் சென்று ஒரு துளியேனும் மானுட உண்மையைப்பார்க்கும் எழுத்தாளர்கள் அங்கு பெரும்பாலும் இல்லாமல் ஆகிவிட்டிருக்கிறார்கள் என்பதுதான். அரசியல் பிரச்சாரத்தை மீண்டும் செய்ய எழுத்தாளன் எதற்கு? இலங்கை இனப்பிரிவினைப்போராட்டத்தின்போது உச்சகட்ட வெறுப்பு அறப்பூச்சுடன் அங்கே முன்வைக்கப்பட்டு பிரச்சார எழுத்துக்கள் குபிந்தன. இன்று மீண்டும் ஒரு பிரச்சார அலைதான் அங்கு நடந்துகொண்டிருக்கிறது.
அந்த பொதுச்சூழலில் இருக்கும் வைரஸைக் கடந்து சென்று ஒரு உண்மையை தொட முயன்றதற்காக இக்கதை குறிப்பிடத்தகுந்தது என்று நினைக்கிறேன்.
=================================
==============================
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

