Jeyamohan's Blog, page 1677

February 16, 2017

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–17

17. நறுமணவேட்டை


ருத்ரனின் குரல் கேட்டு அவன் விடிகாலையில் உடல்வெம்மை படர்ந்த மெல்லிய சேக்கையில் எழுந்தமர்ந்தபோதும் கனவுக்குள்தான் இருந்தான். “அரசே, முதற்பொழுது எழுந்துவிட்டது” என்று ருத்ரன் சொன்னான். காற்றில் சாளரக் கதவொன்று ர்ர் ர்ர் என மரக்குடுமியில் சுழன்றுகொண்டிருந்தது. அறைக்குள் சிற்றகல் கரிபடிந்த இறகுவடிவ பித்தளை மூடிக்கு அடியில் அனலிதழ் குறுகி எரிந்துகொண்டிருந்தது. அவன் மெல்ல தன்னை திரட்டிக்கொண்டான். இடமும் காலமும் தன்னிலையும் துயிலின்போது விலகிநின்று விழிப்பிற்குப்பின் மெல்ல வந்தமைவதை அவன் முன்னரும் கண்டிருக்கிறான். அவை விழிப்பின் மூன்று நிலைகள் மட்டுமே என கற்றிருக்கிறான்.


கானாடலில் அவனுக்கு முதற்படைத்துணை என இடம் நின்று உடன் வருபவன் அணுக்கனாகிய ருத்ரன். குற்றுடலும் இரட்டை மண்டையும் குரங்குக் கண்களும் கொண்ட முண்டன். அவன் சிறுமைந்தனாக இருக்கையிலேயே உடன் வந்த விளையாட்டுத்தோழன். சிறுவனாகவே உடல் எஞ்சிவிட்டதனால் உள்ளத்தையும் அவ்வாறே அமைத்துக்கொண்டவன். அவனுடன் பேசும் அனைவரையும் சிறுவர்களென்றாக்கும் ஊக்கம் கொண்டவன். ஆனால் சொல்கடந்து நுண்புலம் தேரவும் அவனால் இயலுமென புரூரவஸ் அறிந்திருந்தான்.


அவன் எழுந்த அசைவு காதில் விழுந்ததும் ருத்ரன் மஞ்சத்தறையின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்து அவன் காலருகே நின்று “அரசே, கானகம் சித்தமாகிவிட்டது” என்று அழைத்தான். கனவுக்குள் காட்டிலொரு குரங்கென தாவிக்கொண்டிருந்ததை எண்ணினான். அக்கனவுக்குள் நுழைந்து வந்த ருத்ரன் “நகர்புக பொழுதாகிவிட்டது, அரசே” என்றான். கிளையிலாடியபடி “இன்னொரு நாள்” என்றான் புரூரவஸ். “நகர் காத்திருக்கிறது, அரசே” என்றான் ருத்ரன். “இன்னும் ஒரு நாழிகை” என்றான் கெஞ்சலாக. “இப்போதே நாம் புறப்படவில்லையெனில் கோட்டை மூடுவதற்குள் நகரை அணுக முடியாது.”


“இன்னொரு கணம்” என்றபின் திரும்பி பின்காலை ஒளியில் இலையனைத்தும் மலரென மின்னிய காட்டை பார்த்தான். அவன் கைபற்றி “வருக, அரசே!” என்றான் ருத்ரன். “ஆம்” என்று விழித்துக்கொண்டபோதுதான் அவன் தன் மஞ்சத்தை உணர்ந்தான். எழுந்து ஆடையை சீரமைத்தான். சாளரத்துக்கு அப்பால் விண்மீன் பரவிய வானம் வளைந்திருந்தது. குளிர்காற்றில் இலைப்பசுமை மணத்தது.


ருத்ரனைப் பார்த்து “எங்கு செல்கிறோம்?” என்றான். “காடு ஒருங்கியிருக்கிறது நமக்காக. இது இளவேனில் தொடங்கும் காலம்” என்றான் ருத்ரன். அவன் முகம் மலர்ந்து “இங்கு என் சாளரத்தைக் கடந்து வந்த குளிர் காற்றில் முல்லையின் மணம் இருந்தது” என்றான். அவன் வெளியே நடக்க ருத்ரன் உடன் வந்தான். புரூரவஸ் “கனவில் நான் ஒரு குரங்கென கிளைகள் நடுவே பாய்ந்துகொண்டிருந்தேன், ருத்ரரே” என்றான். “ஆம், நம் குலம் அங்கிருந்து வந்தது” என்றான் ருத்ரன்.


“அறியாத பெருங்காடொன்று. அங்கு மானுட உருக்கொண்ட குரங்கென நானிருந்தேன். என்னைச் சூழ்ந்து மரமானுடர் வால்சுழற்றிப் பாய்ந்தனர். அவர்களுடன் நானும் பாய்ந்தேன். எனினும் அவர்களில் ஒருவனல்ல நான் என்றும் உணர்ந்திருந்தேன்” என்றான் புரூரவஸ். “உங்கள் குரல் அங்கு புகுந்துவந்து அழைத்தது. இங்கு எழுந்து ஆடையை சீர் செய்துகொண்டபின்னரும் நெடுநேரம் அக்கனவில் இருந்தேன்” என்றான். ருத்ரன் “கனவுகள் நன்று. ஒரு பேழைக்குள் பிறிதொரு பேழை என நம்மை அவை பெருகச்செய்கின்றன” என்றான்.


புரூரவஸ் “இக்கனவு தொடர்ந்து என்னுள் இருக்கிறது. கனவு கலைந்து எழுந்து நீரருந்தி படுத்த பிறகும் அக்கனவே தொடர்கிறது. தொடர்பற்ற துண்டு வாழ்க்கைத்தருணங்கள் அவை. பொருள்கொண்டு இணைத்தெடுக்க இயலவில்லை” என்றபின் நினைவு கூர்ந்து நின்று “அதில் நான் பிறிதொருவனாக இருந்தேன்” என்றான். ருத்ரன் அவனருகே வந்து “அரசனாகவா?” என்றான். புரூரவஸ் குழம்பியபின் “அரசனைப்போல. ஆனால் அரசன் அல்ல. ஐந்து உடன்பிறந்தாரில் இரண்டாமவன் என எவரோ சொன்ன நினைவுள்ளது” என்றான்.


“உங்கள் மூதாதையரில் எவரும் அவ்வண்ணம் சொல்லும்படி இல்லையே?” என்றான் முண்டன். “அக்காட்டில் மிக அருகில் எங்கோ ஒரு குடிலில் எனக்கென தேவி ஒருத்தி காத்திருப்பதாக உணர்ந்தேன். கிளைகளூடாக பாய்ந்து செல்கையில் என் உடன்பிறந்தார் இருவர் தொடர அவள் சிறுமலர்த் தோட்டமொன்றில் நின்றிருப்பதை கண்டேன். கருநிறமும் வெண்ணிறமும் கொண்ட இரட்டையர் அவர்கள்.” அவன் பெருமூச்செறிந்து “ஐவருக்கும் அவள் ஒரு துணைவி” என்றான்.


“அது நம் குலவழக்கமே” என்றான் ருத்ரன். “ஆனால் நம் கதைகளில் அரசர்கள் என எவரும் அவ்வண்ணம் இல்லை.” புரூரவஸ் “நானும் அதை பலவாறாக எண்ணி நோக்கியிருக்கிறேன். அவர்கள் முகங்கள் அத்தனை தெளிவாக என்னுள் உள்ளன. அவள் முகம் ஒருநாளும் ஒழியாது உள்ளே எழுகிறது” என்றான். ருத்ரன் குரங்குபோல் கண்சிமிட்டி புன்னகைத்தான். பெரிய சோழிப்பல் நிரைகள் அரையிருளில் மின்னின. “தேவி அழகியா?” என்றான். “கரியவள், கருமையிலேயே பெண்ணழகு முழுமை கொள்ளமுடியுமென்று தோன்றச் செய்பவள்” என்றான் புரூரவஸ்.


“யார் கண்டார்? இன்று அவளை நாம் பார்க்கவும் கூடும்” என்றான் ருத்ரன். எரிச்சலுடன் திரும்பிநோக்கி “நான் விளையாட்டென இதைச் சொல்லவில்லை ருத்ரரே, அவள் முகத்தை தெளிவுறக் கண்டேன். நீண்ட விழிகள். சிற்பமுழுமை கொண்ட மூக்கு. அன்னையின் கனிவும் மழலையின் எழிலும் சூடிய உதடுகள். நிமிர்வும் குழைவும் ஒன்றென்றேயான உடல். ஒரு கணமே அவளைக் கண்டேன் என தோன்றுகிறது. அவளை நோக்கி நோக்கி ஒரு முழு வாழ்நாள் இருந்தேன் என்றும் அப்போது தோன்றியது” என்றான்.


“ஐவரா…?” என்றான் ருத்ரன் தனக்குத்தானே என. “நம் குடிப்பிறந்த எவர் முகமேனும் ஒப்பு உள்ளதா?” என்றான். “ஆம். நானும் உள்ளில் அதையே தேடிக்கொண்டிருக்கிறேன். எல்லா முகங்களிலும் அவர்களின் தோற்றம் உள்ளது என ஒரு முறையும் முன்னர் கண்டதே இல்லை என மறுமுறையும் தோன்றுகிறது” என்று புரூரவஸ் சொன்னான். ருத்ரன் “ஆம், முகங்கள் மீளமீளப் பிறக்கின்றன. உள்ளங்கள் தனித்தன்மைகொண்டு முகத்தை மாற்றி வனைகின்றன” என்றான். “அரசே, ஐவர் முகமும் தெரிந்திருக்கிறதா?”


“ஆம். இருவரையே நான் இன்று பார்த்தேன். பிற இருவரையும் மிக அருகிலென நினைவிலிருந்து எடுக்க முடிகிறது. தவத்தோற்றம் கொண்ட மூத்தவர், விழிக்கூர் கொண்ட இரண்டாமவர். அழகர்களான இரட்டையர். இது முற்பிறவியோ என ஐயுறுகிறேன்” என்றான் புரூரவஸ். ருத்ரன் நகைத்து “பிறவிச்சுழலில் முன் என்ன பின் என்ன? இங்கு முடையப்பட்டிருக்கிறது எவ்வகையில் எது என எவருமறியார்” என்றான்.


வெள்ளி எழுந்தபோது கானாடலுக்கான கல்நகைகளும், தோலாடையும், தோள்பட்டையும் அணிந்து களைப்பறியா கரும்புரவியில் படைத்தோழர் புடைசூழ அவன் நகர் நீங்கினான். கல்லடுக்கி மரம் வேய்ந்து கட்டப்பட்ட சிற்றில்கள் நிரைவகுத்த அவன் நகரின் தெருக்களில் இருபுறமும் எழுந்த குடிகள் அரிமலர் வீசி அவன் குடியையும் கொடியையும் வாழ்த்தி ஒப்பக்குரல் எழுப்பினர். கோட்டை வாயிலை அவன் கடந்தபோது கொடி மாற முரசொலி எழுந்தது. தேர்ச்சாலையைக் கடந்து சிற்றாறுகள் இரண்டைக் கடந்து மறுகரை சென்று காட்டுக்குள் புகுந்தான்.


காடு மெல்லிய குளிராக, தழை மணமாக, ஈரமண் மணமாக, மகரந்தப்பொடி கலந்த காற்றாக அவனை வந்து சூழ்ந்தது. பின்னர் பச்சை இலைகளின் அலைக்கொந்தளிப்புக்குள் நீரில் மீனென மூழ்கி மறைந்தான். அவனில் அணியப்பட்டவையும் புனையப்பட்டவையுமான அனைத்தும் அவிழ்ந்து அகன்றன. அவனுடலில் எழுந்த ஒருவனிலிருந்து பிறிதொருவன் என தோன்றிக்கொண்டே சென்றான். பன்னிரு தலைமுறைகளை உதிர்த்து அக்காட்டில் கல்மழு ஏந்தி, செங்கழுகின் இறகு சூடி, தன் குலத்தலைமை கொண்டுநின்ற ஊருபலன் என்னும் முதுமூதாதையாக ஆனான்.


அவனுக்கு உளமறியும் வால் முளைத்தது. கைகளில் காற்றை அறியும் காணாச்சிறகுகள் எழுந்தன. புரவியிலிருந்து தாவி மரக்கிளைகளில் தொற்றிக்கொண்டான். கிளைகள் வளைந்து வில்லென்றாகி அம்பென அவனை ஏவ பிறிதொரு கிளையைத் தொற்றி கூச்சலிட்டபடி தாவினான். நீரில் விழுந்து அலைதெறிக்க நீந்தி எழுந்து பல்லொளிர கூச்சலிட்டான். கரை மென்சதுப்பில் புரண்டு களிமண் சிலையென எழுந்தான். இளவெயிலில் அச்சேற்றுடன் படுத்து உலர்ந்தெழுந்து மீண்டும் நீர்க்களியாடினான். அன்றும் மறுநாளும் அக்காட்டிலேயே பிறிதொன்றிலாதிருந்தான்.


imagesமூன்றாம்நாள் சாலமரத்தில் கட்டிய ஏறுமாடத்தில் ஈச்சைஓலை பரப்பிய மூங்கில் படுக்கையில் மரவுரி போர்த்தி துயின்றுகொண்டிருந்தபோது மீண்டும் அக்கனவு வந்தது. அதில் அவன் சாலமரத்தின் உச்சியில் கட்டப்பட்ட பெருங்குடிலொன்றின் அடுமனையில் அமர்ந்து தன் முன் குவிந்திருந்த ஊன்சோற்றை அள்ளி உண்டுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்து அமர்ந்திருந்தனர் உடன்பிறந்த நால்வர். பன்றி ஊனை எடுத்து பற்களால் பற்றி இழுத்து கவ்வி உண்டான். அவனுடலில் ஊறிய ஊற்றுக்கள் அனைத்தும் அச்சுவையை முன்னரே அறிந்திருந்தன. சுவை சுவை என பல்லாயிரம் நாவுகள் துடித்தன. உண்ணும்தோறும் பெருகியது உணவு. தன் உடல் இருமடங்கு பெருத்திருப்பதை அவன் கண்டான்.


தான் யார் என ஒரு எண்ணக்கீற்று எழுந்து ஓடுவதை உணர்ந்து ஒருகணம் உண்பதை நிறுத்தினான். “என்ன, மூத்தவரே?” என்றான் கரிய இளையோன். “நான் ஒரு தொல்மூதாதை, எங்கோ அடர்காட்டில் கல்மணிமாலை அணிந்து கழுகிறகு சூடி நின்றிருக்கிறேன் என்று எண்ணிக்கொண்டேன்” என்றான். புன்னகையுடன் “இப்போதே அப்படித்தான் இருக்கிறீர்கள்” என அவன் சொன்னான்.


“உண்ணுங்கள்” என்றபடி அவன் குலமகள் அருகே வந்து மேலும் அன்னத்தை அவன் முன் வைத்தாள். நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தான். இருள்செறிந்த தொல்குகைகளில் அறியா முதுமூதாதையர் கல்கொண்டு செதுக்கிய ஓவியச்சிற்பத்தின் வடிவம். இருளைச் செதுக்கி எடுத்த எழில் என்று தொல்கதைகள் கூறும் தோற்றம். நீண்ட இவ்விழிகள் எவரைப் பார்க்கின்றன? இங்கிருந்துண்ணும் இப்பேருடலனையா? இங்கிருந்து நோக்கும் மண்மறைந்த மூதாதையையா?


விழித்துக்கொண்டு குளிரிலா அச்சத்திலா என்றறியாத நடுக்கத்தில் அவன் நெடுநேரம் படுத்திருந்தான். தன்னை வந்தடையும் விழிப்பு காலைத் தன்னிலையை மிகப்பிந்தி கொண்டுவந்து சேர்க்கிறதா? அந்த இடைவெளியில் நின்று தவிக்கும் அகம் எவருடையது? எங்கு உறைகிறது அது? நீள்மூச்சுடன் எழுந்து குடில்முகப்பில் வந்துநின்று ஓசைகளாக இருளுக்குள் சூழ்ந்திருந்த காட்டை நோக்கினான். பின்னர் ஏணி எனக் கட்டிய கொடி வழியாக தொற்றி இறங்கி இன்னமும் இருள்பிரியாத காட்டினூடாக சுள்ளிகள் ஒடியும் ஒலியெழுப்பி நடந்தான்.


இருள் திரண்டெழுவதுபோல் எதிர்கொண்டு வந்தது பிடியானை வழிநடத்திய யானைக் கூட்டமொன்று. பிளிறி அவன் வருவதை தன் குலத்திற்கு அறிவித்தாள் முகக்கை மூதன்னை. கிளையொன்றில் மலைத்தேனீக்கூடுபோல் கிடந்த கரடியொன்று நீளுகிர்கள் ஒன்றுடனொன்று முட்டி கூழாங்கற்கள்போல ஒலிக்க இறங்கி கையூன்றி உடல் ததும்பி புதருக்குள் சென்று மறைந்தது. நீர்மை ஒளி வளைய சென்றன நாகங்கள். விழிமின்னத் திரும்பி நோக்கிய செவி சிலிர்த்த மான்கணங்கள் கடந்து சென்றன.


புலரி வரை அவன் நடந்து சென்றுகொண்டிருந்தான். எங்கு செல்கிறோம் என்று அவன் உள்ளம் அறிந்திருக்கவில்லை. ஆனால் செல்லும்போது அருகணைகிறோம் எனும் அறியா உணர்வொன்று கூர்கொண்டு அவனை வழிநடத்தியது. முதலொளி எழுந்து இலைத்தழைப்பினூடாக ஆயிரம் விழுதுகளாக காட்டில் இறங்கிநின்ற பொழுதில் முற்றிலும் அறியா நிலமொன்றில் அவன் இருந்தான். கைகளை விரித்து வெய்யோனின் வெள்ளிக் காசுகளை ஏந்தி விளையாடியபடி நடந்தான்.


இன்று என் உள்ளம் ஏன் இத்தனை உவகை கொண்டிருக்கிறது என்று எண்ணிக்கொண்டான். உவகைக்கு உவகையே போதுமான ஏதுவாகும் என்று அவன் குலமூத்தார் சொன்னதை எண்ணிக்கொண்டு அதன்பொருட்டும் புன்னகைத்தான். சிறு சுனையொன்றில் மான்கள் நீர் அருந்தும் ஒலி கேட்டது. அவற்றை அப்போதே பார்க்கவேண்டும் என்று எண்ணமெழுந்தது. ஏன் அவ்வாறு தோன்றியதென்று பின்பு பலநூறு முறை அவன் எண்ணியதுண்டு. அவை நீர் அருந்தும் ஒலி விலங்குகள் நீர் அருந்தும் ஒலிபோல விரைவு குறைந்துவரவில்லை. சீரான தாளம்போல் ஒழுகிச்சென்றது என்பதை அவன் உணர்ந்தது பல்லாண்டுகளுக்குப் பின்னர்தான்.


மெல்ல நடந்தபோது அவை மான்களல்ல ஆடுகள் என ஓசை பிரித்தறிந்தான். மான்கள் நீர் அருந்துகையில் அவ்வப்போது தலைதூக்கி இடைவெளி விடுவதுண்டு. ஆடுகளின் மூச்சு மான்கள்போல சீறல்கொண்டதும் அல்ல. அப்பால் மலையூற்று ஊறித்தேங்கிய சிறு சுனையொன்றைச் சூழ்ந்து செறிந்திருந்த மரங்களாலான சோலையை கண்டான். இலைகளுக்கு அப்பால் நீரலை நெளிந்தது. மரங்களின் பசுமையில் நீர் நிறைவு துலங்கியது.


காலையொளியில் சுடர்கொண்டிருந்த இலைத்தழைப்புகளை நோக்கியபடி, மெல்லிய காலடியோசையால் சிறுபசுந்தவளைகளை புல்நுனிகளிலிருந்து தாவித்தெறிக்கச் செய்தபடி, அவன் அச்சோலையை அணுகினான். அவன் வரவை அறிந்த ஆள்காட்டிக்குருவி சிறகடித்து எழுந்து ஓசையிட்டது. புதரில் முட்டையிட்டிருந்த செம்மூக்கன் சிறகொடிந்ததுபோல புல்வெளியில் விழுந்து எம்பிக்குதித்து எழுந்து பறந்து கூவியபடி மீண்டும் விழுந்தது. அவன் அணுகுவதை ஆடுகள் அறிந்துவிட்டிருக்கின்றன எனத் தெரிந்தது. ஆனால் அவன் வேட்டைக்காரனல்ல என்பதை எப்படியோ புல்வாய் விலங்குகள் அறிந்திருந்தன என்பதனால் அவனை அஞ்சி அவை ஓடுவது அரிது.


சோலையை அணுகும்போதே பாரிஜாத மலரின் மணத்தை அவன் உணர்ந்திருந்தான். அணுகுந்தோறும் அந்த மணம் குறைந்து வருவதன் விந்தையை பின்னர்தான் உணர்ந்தான். சோலையின் முகப்பென அமைந்த இரு சாலமரங்களின் அடியில் வந்து நின்றபோது செண்பக மலர்களின் மணமே அவனைச் சூழ்ந்திருந்தது. தான் அறிந்தது செண்பக மணத்தைத்தான், தொலைவில் அதையே பாரிஜாதம் என்று எண்ணிக் கொண்டேன் என்று அவன் எண்ணினான். அது எவ்வண்ணம் என கூடவே வியந்தான். மீண்டும் முகர்ந்தபோது அது மனோரஞ்சிதமா என ஐயம் எழுந்தது. எண்ணிய மணத்தை தான்காட்டும் மலர் என்றால் அது யக்‌ஷரோ கந்தர்வரோ சூடிய மலரா?


சருகுகளில் காலடிகள் ஒலிக்க அவன் உள்ளே சென்றபோது சோலை நடுவே காலை ஒளியை உறிஞ்சிக்கிடந்த சுனைநீரின் அலைவை கண்டான். தாழ்ந்திருந்த மரக்கிளைகளின் அடியில் நீரின் ஒளியலைகள் நெளிந்தன. பின்னர் அவன் தன் இரு ஆட்டுக்குட்டிகளை நீரருந்த காட்டி நின்றிருந்த கரிய கான்மகளை பார்த்தான். ஒரு கணம் உள்ளம் பதறி சொல்லழிந்து முடிவிலியில் பறந்து மீண்டும் திடுக்கிட்டு விழித்து உடல்பொருந்தி எண்ணமென்றாயிற்று. அது உருவெளித்தோற்றம் அல்ல, உளமயக்கும் அல்ல. அணங்கோ என ஐயம் எழுந்து மயிர்சிலிர்த்தான். கால்களை நோக்கி இல்லை எனத் தெளிந்த பின்னரும் நெஞ்சம் துடித்துக்கொண்டிருந்தது.


அவளை அவன் முன்னர் கனவில் கண்டிருந்தான் என்றும் அவன் உடல்கொண்ட மெய்ப்பும் உளம்கொண்ட கொப்பளிப்பும் அதனால்தான் என்றும் பின்னரே சித்தம் உணர்ந்தது. உடன்பிறந்த நால்வருடன் அவன் இருந்த அக்குடிலில் இருந்தவள். அவன் வந்த காலடியோசை கேட்டு முகம் தூக்கி நீண்ட விழிகளால் அவள் நோக்கினாள். முற்றிலும் அச்சமற்ற பார்வை. மடமோ நாணமோ பயிர்ப்போ அறியாது நிமிர்ந்த உடல்.


ஆடுகளும் கீழ்த்தாடையின் தொங்குதாடியில் நீர் சொட்டிவழிய தலைதூக்கி காதுகளை முன்கோட்டி சுண்ணக்கூழாங்கல் என ஒளிவிட்ட கண்களால் அவனை கூர்ந்து நோக்கின. அவற்றின் குறிய வால்கள் துடித்தன. கன்னங்கரிய ஆடு மெல்ல கனைக்க வெண்ணிற ஆடு செருமலோசை எழுப்பியது. பின் அவன் தீங்கற்றவன் என உணர்ந்ததுபோல் மீண்டும் குனிந்து நீரில் தலையை வைத்தது. கரிய ஆடு “ஆம்” என தலையசைத்தபின் தானும் நீரை முகர்ந்தது.


எவர் என்பதுபோல் அவள் புருவங்கள் மெல்ல சுழித்து நெற்றி மடிப்புகொண்டது. வாழைப்பூநிற உதடுகள் மெல்ல விரிந்து உப்புப்பரல் என பல்நிரை தெரிந்தது. அவளை முடிமுதல் அடிவரை கருவறை வீற்றிருக்கும் தேவிமுன் நின்றிருக்கும் அடியவன் என நோக்கினான். ஆயிரம் முறை விழுந்துவணங்கி எழுந்தான் என அத்தருணத்தை பின்னர் அவன் சொற்களாக்கிக்கொண்டான். அரசன் என்றும் ஆண் என்றும் அல்லாமலாகி விழியென்றும் சித்தமென்றும் அங்கு நின்றிருந்தான்.


ஆடுகளை நோக்கி மெல்லிய சீழ்க்கை ஒலி ஒன்றை எழுப்பியபின் அவள் சேற்றில் ஊன்றிய வளைகோலை கையில் எடுத்துக்கொண்டு உலர்ந்து வெடிப்புகள் பரவி தரையோடு வேய்ந்ததுபோல் ஆகியிருந்த கரையில் அவற்றின் பொருக்குகள் உடைந்து ஒலிக்க மேலேறி வந்தாள். நாணல் வகுந்திருந்த வழியினூடாக அவள் காலடிகள் விழுந்து விழுந்து எழுவதை, அவள் அணிந்த மான்தோல் கீழாடை நெளிவதை அவன் பிற ஏதுமில்லாத வெளியில் கணம் கணமென அசைவு அசைவு என கண்டான்.


அவள் அணிந்திருந்த வெண்கல்மாலை உன்னிஎழுந்த இளமுலைகளின்மேல் நழுவிப்புரண்டது. இடையில் அணிந்திருந்த கல்மேகலை நெற்றுபொலிந்த செடிபோல மெல்ல ஒலித்தது. மான்தோலாடை தொடைவரை சுற்றி அதன் நுனியை எடுத்து முலை மறைத்து வலத்தோளில் செலுத்தி சுழற்றிக் கட்டியிருந்தாள். கைகளில் எருதின் கொம்புகீறி நுண்செதுக்குகளுடன் செய்த வளையல்கள். கால்களில் மென்மரத்தால் ஆன சிலம்பு. காதுகளில் ஆடின செம்மணிக் கல்லணிகள். மூச்சில் வியர்த்த மேலுதடுகளுக்கு மேல் புல்லாக்கின் நிழல் அசைந்தது.


அவன் அருகே வந்து “யார்?” என்று அவள் கேட்டபோது திடுக்கிட்டு விழித்துக்கொண்டு நீள்மூச்சுடன் “என் பெயர்…” என்றான். ஒரு கணம் தன் பெயரே தன் நினைவிலெழாத விந்தையை உணர்ந்து தடுமாறி இடறிய குரலில் “நான் அரசன்” என்றான். மீண்டும் சொல்சேர்த்து “நகரத்தவன்” என்றான். அவள் இதழ்கள் விரிய, கொழுவிய கன்னங்களில் மெல்லிய மடிப்புகள் எழ, பற்கள் ஒளியுடன் விரிய புன்னகை செய்து “பெயரில்லாத அரசனா?” என்று கேட்டாள். “ஆம்” என்று சொல்லி உடனே “இல்லை” என்று பதறி பெருமூச்சுவிட்டான். அவள் சிறிய ஒலி எழ சிறுமியைப்போல் வாய்பொத்தி தோள்குறுக்கி சிரித்தாள்.


அவன் தத்தளித்து மூச்சுத்திணறி தன் பெயரை கண்டடைந்தான். “என் பெயர் புரூரவஸ்” என்றான். உடனே சொல்பெருக “புதனுக்கு இளையில் பிறந்த மைந்தன். இங்கு காட்டு அரசனான ஹிரண்யபாகுவின் மைந்தனாகப் பிறந்தேன். உத்தரகுரு நாட்டை ஆள்கிறேன்” என்றான். அவள் விழிகளில் நகைப்பு மின்ன “தன் பெயரை இத்தனை எண்ணிச்சூழ்ந்து உரைக்கும் ஒருவரை முதல்முறையாக பார்க்கிறேன்” என்றாள். “நான் என்னை ஒரு கணம் பிறிதொருவனாக உணர்ந்தேன். பிறிதேதோ பெயர் என் நாவில் எழுந்தது” என்றான்.


புருவம் சுருங்க அவள் “யார்?” என்றாள். “என் கனவில் எழுந்த ஒருவன்… இன்னும் வாழ்ந்திராதவன்” என்றான். “விந்தைதான்” என்று அவள் சொன்னாள். “முதற்கணம் உங்களைப் பார்த்தபோது முன்பு எப்போதோ கனவில் கண்ட ஒருவர் என்றுதான் நானும் எண்ணினேன். அம்மயக்கத்தை இந்தச் சுனைச்சரிவில் ஏறி வருகையில் ஒவ்வொரு காலடியாலும் கலைத்து இங்கு வந்தேன்” என்றாள். அவன் அவள் விழிகளை நோக்கி “உன் பெயர் என்ன, கன்னியே?” என்று கேட்டான். “சியாமை” என்று அவள் சொன்னாள். “நான் இங்கு காட்டை ஆளும் அரசனாகிய கருடபக்‌ஷனின் மகள்.”


“உன்னை முன்னர் இங்கு பார்த்ததே இல்லை. இந்த அடர்காட்டில் என்ன செய்கிறாய்?” என்றான். அவள் “இவை நான் வளர்க்கும் ஆடுகள். இவற்றுடன் இக்காட்டில் உலவுவதே என் விளையாட்டு” என்றாள். “இவற்றை கால்போனபோக்கில் விட்டு நான் தொடர்ந்து செல்வேன். அவற்றை என் உள்ளம் என்பார்கள் என் தோழிகள்.” இரு ஆடுகளும் சற்று அப்பால் சென்று உதிர்ந்த மலர்களையும் பழுத்த இலைகளையும் பொறுக்கித் தின்னத் தொடங்கிவிட்டிருந்தன.


அவன் திரும்பி இரு ஆடுகளையும் பார்த்தான். “இனியவை” என்றான். “கரியது ஸ்ருதன். வெண்ணிறமானது ஸ்மிருதன். இவை இரண்டும் எப்போதும் என்னுடன் இருக்கும். இரவில் என் படுக்கையின் இரு பக்கமும் இவற்றை கட்டி இருப்பேன். விழித்துக்கொண்டதும் முதலில் இவற்றையே பார்ப்பேன். பகல் முழுக்க இவற்றுடனேயே இருப்பேன்” என்றாள். “இரவில் விழித்துக்கொண்டு இவற்றின் கண்கள் ஒளிவிடுவதைக் காணும்போது நான்கு விண்மீன்கள் எனக்கு காவலிருப்பது போலிருக்கும்.”


இருவரும் தங்கள் சொற்களை கைமாறிக்கொண்டனர். விழிகளால் ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டே இருந்தனர். சியாமை புரூரவஸின் தோற்றத்தை அன்றி பிறிதெதையும் அறியவில்லை. அவளிலிருந்து பேருருவம் கொண்டு எழுந்த ஒருத்தி அப்பொன்னிற உடலை ஒவ்வொரு தசையாக நரம்பாக அசைவாக மெய்ப்பாக நோக்கிக்கொண்டிருந்தாள். அப்பெண்ணின் உள்ளங்கையில் அமர்ந்து பிறிதொருத்தி எளிய சொற்களால் சூதுகளம் ஒன்றமைத்து அவனை ஈர்த்தும் அணுகுகையில் விலக்கியும் விலகியபின் மீண்டும் நெருங்கியும் ஆடினாள்.


புரூரவஸ் அவள் விழிகளையன்றி பிறிதெதையும் அறியவில்லை. முலைச்சுவை மறவா சிறுகுழந்தையொன்று அவனுள் இருந்து எழுந்து அவள் மடியில் படுத்து மலர்மென்மை கொண்ட கால்களை நெளித்து, சிறுகட்டை விரல் சுழித்து, காற்றை அள்ளிப்பற்றியது போன்று சிறுகை குவித்து விளையாடியது. பாலாடை படிந்து பார்வை மறைந்த பைதல் பருவமென்பதால் அவள் விழிகளும் இதழ்களின் மணமுமன்றி ஏதும் அவனை சென்றடையவில்லை. அவள் சுவையை எண்ணி இதழூறி வழிய சொல்லிலா குதலைமொழிகளுடன் அவன் அவள் அருகே இருந்தான். அப்போது அவன் அந்த மலர்மணத்தை அறிந்தான். அதுவரை அறியாததாக இருந்தது அது. பிறிதொன்றிலாது வந்து சூழ்ந்துகொண்டது.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 32
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–16
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–15
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 39
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 38
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 10
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 8
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 29
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 92
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 91
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 78
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 66
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 64
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 61
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 60
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 59
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 51
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 49
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 42
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 39
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2017 10:30

February 15, 2017

பழம்பொரி

pazam


 


 


என் நண்பர்களில் பேலியோ டயட் எனப்படும் இறைச்சித்தீனி இளைப்புமுறையை சிரமேற்கொண்டவர்கள் மூவர். அரங்கசாமி, விஜய் சூரியன், ராஜமாணிக்கம். மூன்றாமர் வீரசைவம். ஆகவே சைவ பேலியோ. புதிதாகத் தழுவிக்கொண்ட மதத்தை நாம் உள்ளூர நம்புவதில்லை. ஆகவே அதை உறுதியாகத் தழுவிக்கொள்ள விழைகிறோம். அதற்குச் சிறந்த வழி அதைப் பரப்புவதுதான். மூவரும் பேலியோவின் பெருமையை அந்தந்த வட்டாரங்களில் தீவிரமாகப் பரப்பினர்


மூவருமே இளைத்தனர் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. குறிப்பாக விஜய் சூரியன் சென்றுதேய்ந்திறுதலாக ஆகிக்கொண்டிருந்தார். பார்க்கவே பயமாக இருந்தது. ராஜமாணிக்கம் மெலிந்தமையால் திருப்பூர் வட்டாரத்தில் பலர் அவரிடமே ராஜமாணிக்கத்தைப்பற்றிய கோள்களைச் சொல்லத் தொடங்கினர். அரங்கா டிரிம் ஆகிவிட்டதாக நம்பி முகவாயில் ஈ அமர்ந்ததுபோன்ற மீசையை வைக்கத்தலைப்பட்டார்


பேலியோவைச் சொல்லிப்புரியவைப்பது கடினம். ராதாகிருஷ்ணனிடம் நாற்பத்தைந்து நிமிடம் அரங்கா ரத்தம்கக்காத குறையாகப் பேசி முடிந்தபின்னர் அவர் “இல்லண்ணா, சின்ன வயசிலேயே போலியோ சொட்டு மருந்து ஊத்திட்டாங்க” என்றதாக செல்வேந்திரன் சொன்னது வதந்தி. “பேலியோவிலே பனங்கிழங்கு சாப்பிடலாமா?” என செல்வேந்திரன் தீவிரமாக கேட்டதை முன்னர் என் நண்பர் ஆர்தர் வில்சன் “பிரதர் ,மௌனவிரதம் இருக்கிறப்ப பேசலாமா?” என்று கேட்ட தத்துவக்கேள்வியுடன்தான் ஒப்பிட முடியும்


ஆனால் அடுத்தமுறை பார்த்தபோது மூவருமே பழையநிலை மீண்டுவிட்டிருந்தனர். “என்ன இது?” என்றேன். “கொஞ்சம் டெம்பரவரியா விட்டிருக்கேன்… ஆரம்பிக்கணும்” என்றார் விஜய்சூரியன். “பேலியோ இருந்தா கெட்டகனவுகளா வருதுண்ணா” என்றார் ராஜமாணிக்கம். கனவில் அவரை ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து வானில் ஏவியிருக்கிறார்கள். அரங்காவின் பிரச்சினை வேறு. மெலிந்தால் “என்னது பிஸினஸ்லே பிராப்ளமா?” என்று கேட்கிறார்கள். செட்டிகெட்டால் பட்டு உடுக்கவேண்டும். கெடாதபோதும் பட்டுதான்.


மீண்டும் பார்க்கையில் மூவரும் முன்பிருந்ததை விட பெரிதாகியிருந்தனர். விஜய்சூரியன் ஒரு நல்ல சுவர் போல தெரிந்தார். “என்னாச்சு?” என்றேன். ”கொறைக்கணும்” என்றார் ரத்தினச்சுருக்கமாக. ராஜமாணிக்கம் “இல்லண்ணா, ஆறுமாசம் சோறே திங்கலையா, அதான் சோறுமேலே ஒரு ஆர்வம்” என்றார். புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால் “முன்னாடில்லாம் எனக்கு இந்த பாதாம் பிஸ்தா முந்திரீல்லாம் சுத்தமா புடிக்காதுணா. இப்ப அதிலயும் ருசி தெரிஞ்சுபோச்சு” என அவர் வருந்தியது மேலும் தெளிவாகப்புரிந்தது.


முதற்குற்றவாளி நானே. சென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டு அமெரிக்கா கிளம்பும்போது எடைகுறைக்க முடிவெடுத்தேன். அப்போது நியாண்டர்செல்வன், [ஹோமோஎரக்டஸ் சீஸர் என்று கூட ஒருவர் இருக்கிறார் இல்லையா? ] போன்றவர்கள் கிளம்பி வந்திருக்கவில்லை. வந்திருக்கலாம் , எனக்குத்தெரியவில்லை. என்னிடம் அந்த டயட்டைச் சொன்னவர் அரவிந்தசாமி. கடல் படத்திற்கு முன் நூற்றிப்பத்து கிலோ எடை இருந்தார். மூன்றே மாதங்களில் எழுபது கிலோவாக ஆகி சின்னப்பையனாக மாறி வந்து நின்றார். மணிரத்னம் பம்பாய் படப்பிடிப்புதான் நடக்கிறது என காலக்குழப்பத்திற்கு உள்ளானார்.


அவர் சொன்னதை அப்படியே கடைப்பிடித்தேன் உச்சகட்ட டயட். அரிசிச்சோறே இல்லை. எந்த மாவுணவும் அண்டவிடவில்லை. காலையில் முட்டை. உச்சிப்பொழுதில் வேகவைத்த மீன். இரவில் சிக்கன் சூப். காய்கறிசூப் அவ்வப்போது இளம்பசியை ஆற்ற.


ஆனால் பேலியோ அடிப்படைவாதி அல்ல நான். ஆகவே கொழுப்புக்கட்டிகளை உள்ளே தள்ளவில்லை. மிதமிஞ்சிய புரோட்டீன் எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டுமாதங்களில் ஒல்லிக்குச்சி ஆனேன். கனடாவில் நான் சென்றிறங்கியபோது நீண்டநேரம் தயங்கியபின்னர்தான் என் உயிர்நண்பர் செல்வம் அருகே வந்தார். “அருண்மொழி புது ஆளுகூட வாறாளே எண்டு பாத்தனான்” என்றார். “சார் யாரு?” என்று என்னைக்காட்டி அ.முத்துலிங்கம் கேட்டார்


ஆனால் அமெரிக்காவில் நான் அரிசி உண்ண ஆரம்பித்துவிட்டேன். எட்டு கிலோ ஏற்றிக்கொண்டு வந்திறங்கினேன் இங்கே வந்தபின் “கொஞ்சம் ஏத்தலாம், இப்ப என்ன?” என சோறு. “சவம் கெடக்குது” என மீன்குழம்பு. மீண்டும் தொப்பை. மீண்டும் இனிய வாழ்க்கை.


இப்போது கொஞ்சம் தொப்பை இருக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. எடைகுறைப்புக்காக அருண்மொழி காலையுணவாக முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் வைத்துவிட்டுச்செல்கிறாள். மதியத்திற்கு எண்ணி ஒரு டம்ளர் சோறு. இரவுக்குப் பழங்கள். ஆனால் எடை குறையவில்லை. சொல்லப்போனால் கூடிக்கொண்டிருக்கிறது. அருண்மொழி இணையத்தில் எடைக்குறைப்பு ஆலோசனைகளுக்காகத் தேடுகிறாள்.


ஆனால் அவள் அறியாத ஒன்று உண்டு. எனக்கு பத்தரை மணிக்கு கொஞ்சம் முதுகுவலிக்கும். அப்படியே கிருஷ்ணன் ,அரங்கா ,கடலூர் சீனு வகையறாக்களுடன் பேசியபடி கடைத்தெருவுக்குச் சென்று ஒரு சிங்கிள் டீ அடிப்பேன். கூடவே ஒரு இரண்டு பழபஜ்ஜி. வாழைப்பழச்சீவலை கடலைமாவில் போட்டு எண்ணையில் பொரித்து எடுக்கப்படும் பழம்பொரி கேரளத்தின் பழம்பெரும் தின்பண்டங்களில் ஒன்று. கன்னிப்பெண் போல வெளியே பொன்னிறமும் உள்ளே கனிந்த இனிப்பும்.


மாலையிலும் ஒரு நடை உண்டு. மாலையிலும் அங்கே சூடான பழம்பொரி அடுக்கப்பட்டிருக்கும். தாழைமடல்களை அடுக்கி வைத்ததுபோல.ஏழை எழுத்தாளர் என்னதான் செய்யமுடியும்? ஓரளவுக்குமேல் பொறுக்கமுடியாது அல்லவா?


பொதுவாக பழம்பொரியை மல்லுக்கள் மறுக்கக்கூடாது. வரைபடத்தைப்பாருங்கள், கேரளமே ஒரு பெரிய பழம்பொரி போலத்தானே இருக்கிறது? அதிலும் குறிப்பாக என்னைப்போன்ற பூர்ஷ்வா , பிற்போக்கு, தரகுமுதலாளித்துவ, ஏகாதிபத்திய அடிவருடி, ஆணாதிக்க, இந்துத்துவ, நாயர்கள். பருப்புவடை எனப்படும் மசால்வடை கம்யூனிசப் பண்டம். இனிப்பா இல்லையா என்று இனிய சந்தேகம் கொண்டு உண்ணப்படும் பழம்பொரியே அதற்கு எதிர்க்கட்சி.

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 15, 2017 10:48

மலர்ப்புரி அவிழ்தல்

DSC01774

வி.பிரசாத்


 


உங்கள் எழுத்தை முதலில் வாசிக்க முயன்ற நாட்களை அடிக்கடி நினைத்து பார்ப்பேன். இத்தனை கடினமாய் ஏன் இவர் எழுத வேண்டும் என்று சலித்திருக்கிறேன். பிறகு புரிந்தது, உங்கள் எழுத்துக்கள் கேட்பது சிதறாத கவனம். அதைக் கொடுக்கும் போது பதிலுக்கு கிடைப்பது பெரும் நிறைவு. வெண்முரசு தொடங்கியதில் இருந்து தொடர்ந்து உங்களை வாசித்து வந்தாலும் சமயங்களில் காரணம் ஏதுமின்றி முழுமையாய் துண்டித்து கொண்டு சோதித்து பார்த்திருக்கிறேன்.


பலரை போல எனக்கும் கவிதை எழுத பிடிக்கும். ஆனால் உங்களை வாசிக்க ஆரம்பித்ததும், என் கவிதை எழுதும் நம்பிக்கையை இரக்கம் இல்லாது நீங்கள் தகர்த்தீர்கள். என் மானசீக குருவாகிய உங்கள் எழுத்தின் வழியே நான் பலவற்றை அறிந்துக் கொண்டேன் – எப்படி ஒரு படைப்பை அணுக வேண்டும் (குறிப்பாக கவிதையை), எது இலக்கியம், எது வணிக எழுத்து, இரண்டும் இருக்க வேண்டிய அவசியம், நகைச்சுவை என்பது என்ன என்று இப்படி இன்னும் நிறைய. உங்களுடைய பரந்துப்பட்ட படிப்பு, இமைப்பதை போல அனிச்சையாய் நீங்கள் எழுதி கொண்டே இருப்பதை எல்லாம் பார்த்து விட்டு நான் எழுதுவதை குறைத்துக் கொண்டேன்.


நேரில் 2 முறை பார்த்தும் எனக்கு பேச நா எழவில்லை -என் உயரத்தையும் ஆழத்தையும் காட்டிக்கொடுத்து விடும் என்ற அச்சமே. இப்போதும் அதுவே காரணம். “Cliche” ஆக போகிறேன் என்று நினைக்காதீர்கள். பெரும்பாலும் உண்மை என்பது ஒன்றே உடைகள் மட்டுமே வேறு.


இன்று விகடனில் “கள் மணக்கும் மலர்” படித்தேன். மாலை நேரத்து வானம், ஒரு கவிதை, இரவு நேர இசை – தேவகணமாய் மாற்றும் வித்தை கற்றவை இவை. அதில் ஒன்று தான்


நன்மை செய்யும் சலவைக்காரி


கஞ்சிப்பசையிட்டு எடுத்து


கல்லில் அடித்துப் பிழிந்து


குளிர்ந்த குளத்தில் இடுகையில்


நீரில் பிரியும் துணிபோல


அகன்ற இலைகள் கொண்ட


பகன்றையின் பெரிய மலர்


துவர்ப்பும் இனிப்பும் மிக்க


கள் போல மணக்கும்


இதுபோன்ற ஒரு மாலைப்பொழுது


அவன் பிரிந்து சென்ற


அந்த நாட்டிலும் இருக்காதா என்ன?


இதில் சலவைக்காரி என்பதை மாயை அல்லது அறிவு என்றும், துணி என்பதை தலைவியின் மனம் என்றும், மலரை தலைவனின் மனம் என்றும் வைத்து படிக்கும் போது, குழந்தையின் நுனி விரல் தீண்டலில் திறக்கும் சிலிர்ப்பினை கொள்கிறேன் நான். “இனிய நினைவுகளை அகழ்ந்து இன்று அவன் இல்லாத நிஜத்தில் அதை அறைந்து, அழுது அழுது நீர் வழியாக இளகி கொள்ளும் என்னை போல், கள் சுவைப்போன்ற உள்ளதைக் கொண்ட அகன்ற மார்பினின் நெஞ்சத்தை மலர வைக்கும் பொழுது ஒன்று அங்கே இருக்காதோ” என்றே மாற்றி படிக்கிறேன்.


நன்றி இதை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு


சரி தவறு என்ற துலாக்கோலில் நிறுத்தாமல், நினைத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் என்ற திருப்தியோடு தூங்க செல்கிறேன்.


http://www. vikatan. com/news/miscellaneous/80627-writer-jayamohans-sanga-chiththirangal-review. html


வி. பிரசாத்


*


அன்புள்ள பிரசாத்,


நான் 1999 ல் கேரள வார இதழான மாத்யமத்தில் அக்கட்டுரைத் தொடரை எழுதினேன். பின்னர் அதை தமிழில் விகடனில் எழுதினேன்.


அதை எழுதும்போதிருந்த நோக்கங்கள் சிலவற்றை அன்றே வகுத்துச் சொல்லியிருந்தேன். சங்கப்பாடல்களை ஒரு மதநூலை வாசிப்பது போல ‘சரியான’ பொருள் கொண்டு வாசிப்பதற்கான மனநிலையையே தமிழாசிரியர்கள் உருவாக்கினர். பொழிப்புரைகள் வழியாகவே அவை புரிந்துகொள்ளப்பட்டன. அவற்றை பழந்தமிழரைப் பற்றி அறியும் பண்பாட்டு ஆவணங்கள் என்று மட்டுமே பார்த்தனர்


நான் அவை தொல்சான்றுகள் அல்ல என்றும் இன்றும் வாழும் கவிதைகள் என்றும் காட்டவிரும்பினேன். கவிதை என்றுமுள்ள வாழ்க்கையைச் காட்டவேண்டும். நம் சொந்த வாழ்க்கையை வைத்துப் புரிந்துகொள்ளப்படவேண்டும். அதாவது சங்கப்பாடல்கள் கவிதைகள் என்றால் அவை பழந்தமிழர் வாழ்வைக் காட்டுவனவாக இருக்கக்கூடாது, நம் வாழ்க்கையை நமக்கு தெளிவுறுத்துவனவாக இருக்கவேண்டும்


கவிதையை வாசிப்பதென்பது ‘பொருள்கொள்வது’ அல்ல. பொருளை ‘உருவாக்குவது’. கவிதையை வாழ்க்கையாக விரிவாக்குவது. அதை ஒவ்வொரு வாசகனும் தன் வாழ்க்கையை ஆதாரகளமாகக் கொண்டு செய்யவேண்டும். என் வாழ்க்கையை கொண்டு அதைச் செய்து காட்டினேன். அதுதான் அந்நூல்


இன்று யோசிக்கும்போது அந்நூலின் வெற்றியே அதில் எங்குமே கவிதையைப் பொருள்சொல்லி விளக்கவில்லை என்பதும் எப்படி பொருள் கொள்வதென்று வழிகாட்டவே இல்லை என்பதும்தான். அந்த அனுபவக் குறிப்புகளில் இருந்து கவிதைக்குச் செல்லும் பாதை வாசகனின் கற்பனைக்கே விடப்பட்டுள்ளது


ஜெ,


***


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 15, 2017 10:32

ஒற்றை தேங்காய்க்கு வந்த சோதனைகள்

index


 


அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,


வணக்கம். நலம். நலம் விழைக பிரார்த்திக்கின்றேன்.


தங்களின் குறளினிது உரைகளை கேட்டுவருகிறேன் என்பதால் அங்கிருந்தே தொடங்குகிறேன். ‘வான்சிறப்பு’ இயல் கடவுள் வாழ்த்தைத் தொடர்ந்து வருவதற்கு பல அவசியங்கள் இருக்கலாம். பல வகையில் இந்த அத்தியாவசியங்கள் பற்றி தெரிந்திருந்தாலும் இன்றே இதன் அற்புதத்தை உணர்த்தேன், மழை! மழை!! மழை!!!


பல முறை தண்ணீர் இறைத்தாலும் செடிகள் உயிரை பிடித்துக்கொண்டு ஒரு மழைக்காகத்தான் ஏங்கும் போலும். ஆம் இதைத்தான் உணர்ந்தேன் அந்த செழிப்பை பார்த்தபிறகு, குடியரசு தின வாரத்தில் ஊரில் ஒரு நாள் நல்ல மழை. செடிகளிடம் அந்த புத்துணர்ச்சி நம்மோடு உணர்வோடு உறவாடுகிறது, அந்த பளபளக்கும் பழுப்பு மற்றும் பச்சை மழைக்கு பிறகே. மனதிற்கு இதமாகயிருந்தது, ஆறுதலாகவுமிருந்தது. சொற்ப்பமானவைகள் தவிர கன்றுகள் பிழைத்துக்கொண்டது என்று பார்க்கமுடிகிறது, இயற்கை ஒருபோதும் வஞ்சிப்பதில்லை, ஒருபோதும் வஞ்சிப்பதில்லை!


இந்த இரண்டு மாதங்களில் வீட்டில் இயற்கை சார்ந்த மாற்றங்கள், படிப்பு அவசியம் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கியிருந்தது எங்கள் அனைவரையும் படிக்க வைத்த குடும்ப, சராசரி இந்திய நடுத்தர குடும்ப, சேறு என்றால் அழுக்கு என்ற வீட்டில் இந்த இயற்கை சார்ந்த மாற்றம். மகிழ்ச்சியாய். 17 ஆண்டுகளுக்கு முன் வீட்டில் மேம்பார்க்கும் போது கிணற்றடி குளியல் தண்ணீர் கொல்லைக்கு போவதனால் அங்கு அதிகம் அடசலாகிறது என்று அவற்றை விதியில் சாக்கடையில் மாற்றிவிட்டோம், இன்று விட்டில் பொழங்கும் அனைத்து தண்ணீரையும் மீண்டும் கொல்லைக்கே போகும்படி அமைத்திருக்கிறோம். கொல்லையில் இன்று சூண்டை, ரோஜா, நார்த்தை, எலுமிச்சை, மா, பலா, வேப்பம், வெள்ளை கொய்யா, சிவப்பு கொய்யா, மற்றும் முகப்பில் புதீனா, வெங்காயத்தார், மிளகாய், உருளை, மல்லி, கற்பூரவள்ளி. இதில் உருளை செடி பழுத்தவிட அதை அறுவடை செய்தோம், குட்டி உருளைகள் 5 கிடைத்தது, அப்படியொரு மகிழ்ச்சி அன்றே சப்பாத்தி கிழங்கு சமையல்! ;)


இது போன்ற மகிழ்ச்சிகளில் தான் கள சோதனைகளை சமாளித்துவருகிறொம். கடந்த வாரங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் பிரதானம் அதில் சில காளை நின்று ஆட்டம் காட்டியது, இங்க நமக்கு சோதனைகள் ஆட்டம் காட்டுது! ;) ஆழ்தூளை கிணறு முடியம் தருவாயில் பொங்கலுக்காக ஊருக்கு போய்ட்டு வந்து தொடருகிறோம் என்று சொல்லிச்சென்று பொங்கலுக்கு பின் ஒரு வாரம் கடந்து வந்து பணி தொடங்கி, ‘அண்ணே, 230 அடியில் பாறையாயிருக்கு கொஞ்சம் சொணங்குது எப்படியும் முடிச்சுடுவோம் என்று சொல்ல..’ தந்தை ஊரில் சிவனேனிருக்கும் பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து அவரை கிளப்பிவிட்டுட்டார், ’’என்ன பன்னுறதுனு தெரியாம எப்படா வேலை முடிப்பேங்கய்’’ என்று அவரும் எங்களோடு சுற்றிகிட்டுயிருக்கார் ;) பாறை கறைந்தபாடில்லை. கை போர் ஆகாது இயந்திரம் தான் வேண்டும் என்று முடிவாக 230 மேல் எப்படி சாத்தியங்கள் என்று விசாரிக்க போக, பல கருத்துக்கள் வர நாங்கள் குழம்ப, பிள்ளையார் ’’என்ன பன்னபோறாயங்கய்’’ என்ற பீதில் இருக்கார். போர்கார்ர் உள்ளுர்கார்ர் என்பதால் எப்படியும் வேலைய முடிச்சுடுறேனு முயற்சி பண்ணுறார் ஆனா அவரிடம் பெரிய வண்டி இல்லை ஆகையால் அடுத்தவரை நம்பியிருக்கார் இப்ப நாங்க, அவர், அவர் என்னொருவரை நம்பி என்று இப்படி இழுத்துக்கொண்டிருக்கிறது. குழம்பிய நாங்கள் பரவால்லை இத்தோடு முடித்துக்குவோம் பைப்பை இறக்குவோம் என்றாலும் அவர் இன்னும் இரண்டு நாள் என்று போய்க்கொண்டேயிருக்கிறது….


இது ஒரு பக்கமிருக்க, வங்கி வேலை அதவிட பிரமாதம் ஏன்னு கேட்குறிங்களா அந்த புது வங்கி மேளாலர் எங்களிடம் அனைத்தையும் சரி பார்த்து கடன் பெற்றிடலாம்னு உறுதி கூற, அனைத்து வேலைகளும் நிறைவேறியது, கணக்கு தொடங்கினோம், சட்ட ஆலோசனை, வங்கி வேளான் அதிகாரி வந்து இடத்தை பார்வையிட்டு ஓப்புதல்.. இதுக்கு அப்பறம் தான் அற்புதம், பிராந்திய அலுவலகம் சென்ற மேளாலரை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டார்களாம்! ;) போட்டது போட்டபடியேயிருக்க அடுத்த மேளாலர் இன்னும் பொறுப்பு எடுத்துக்கலையாம் எங்களால் வந்த சோதனையோ என்னவோ அந்த வங்கி கிளைக்கு!! இதெல்லாம் அந்த பிள்ளையாருக்கு தெரிந்தால் இன்னும் பீதியடைக்கூடும் என்று இதற்கு என்று தனி தேங்காய் இல்லை, ஆனால் அந்த ஒற்றை தேங்காயோடு சேர்த்திவிடலாம் என்ற எண்ணமுண்டு ;)


மற்றொருபுறம், மின்சார வேலைகள், கிராம நிர்வாக அலுவலர் பொறியியல் படித்த இளைஞர் அவருக்கும் வேளான் ஆர்வமுண்டாம், அவரே அழைத்து கிணறுக்கு சேவை வாங்கி பிறகு ஆழ்துளை கிணற்றுக்கு மாற்றுவது சிரமம் ஆகையால் ஆழ்துளை கிணற்று வேலைகளை முடித்துவிட்டு ஒரே வேலையாக பார்க்க அறிவுறித்தினார். இதையே மின்சாரம் படிவம் அளித்த முகவரும் ஆமோதித்தார். ஆகையால் அந்த வேலை நிக்குது. முகவர் மற்றேமொரு தகவல் கொடுத்தார் படிவத்தை அலுவலத்தில் சமர்பிக்கும் முன் ஒரு முறை கேட்டுக்கொண்டு பின் கொடுக்கலாம் என்று. என்ன விசயம் என்றதும், அடுத்த ஊரில் உள்ள தோட்டத்திற்கு இணைப்பு வாங்கியதாவும் பாரம் தாங்கவில்லையாம், நாம் வாங்கும் இணைப்பும் இதே பகுதில் அமைந்தால்  டிரான்ஸ்பாரம் உபயம் நாம்தான்!


இருப்பது இருக்க, குட்டி உருளை கிடைத்த மகிழ்ச்சியில் வீடு இருக்கிறது, ஆகையால் பிள்ளையாரும் என்றே நம்புகிறேன் ;)


விரைவில் தாங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற மற்றுமொரு மகிழ்ச்சியுடன்,


நன்றி!


நாராயணன் மெய்யப்பன்


***


இயற்கைவேளாண்மை கடிதங்கள்


இயற்கைவேளாண்மை கடிதம் நாராயணன் மெய்யப்பன்


கன்றுகள் காடாகவேண்டும் நாராயணன் மெய்யப்பன்


கடைநிலைப் பொருளியல் நாராயணன் மெய்யப்பன்


அறம்செய விரும்பு நாராயணன் மெய்யப்பன்


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 15, 2017 10:31

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–16

16. அறமென்றமைந்தோன்


இளவேனில் எழுந்தபின் தோன்றும் முதற்கதிர் முதல் மலரைத் தொடுவதற்கு முன் தங்கள் முலைதொட வேண்டுமென்று தேவகன்னியர் விழைவதுண்டு. அவர்கள் அழகை பொன்கொள்ளச் செய்யும் அது. தன் தோழியர் எழுவருடன் இமயச்சாரலில் அமைந்த சௌகுமாரியம் என்ற சோலையை அடைந்து அங்கு ஓடிய சிறு காட்டாற்றில் பாய்ந்து நீராடி ஈரக்குழல் உதறி கரையேறி மலர்செறிந்த மரக்கிளைகளில் தொங்கி ஊசலாடி விளையாடிக்கொண்டிருந்தாள் ஊர்வசி. நீந்துகையில் மீன்களென்றும் கிளை தாவுகையில் கிளிகளென்றும் ஓடி ஒளிகையில் வெண்முயல்கள் என்றும் புதர்கள் ஊடே தாவுகையில் மான்களென்றும் அவர்கள் உருமாறினர்.


அப்போது அவ்வழியே கருமுகில்தேர் ஒன்றில் ஏறி கேசி என்னும் அரக்கன் தன் ஏழு படைவீரர்களுடன் சென்றுகொண்டிருந்தான். அவன் நீளக்கருங்குழல் காற்றிலெழுந்து நூறு யோசனை தொலைவுக்கு அலையலையென பறந்து கொண்டிருந்தது. அதன் இருளால் கருக்கல்வானம் மேலும் இருண்டது.  முதலொளிக்கு முன் தன் இருளுலகம் சேர்ந்துவிடவேண்டும் என அவன் விரைந்துகொண்டிருந்தான்.


இளவேனில் எழுந்ததும் முதற்சேவல் மரக்கிளையில் ஏறி நின்று செங்கனல் கொண்டையைச் சிலிர்த்து சிறகடித்து “எங்கோ எழுந்தருளாயே! எங்கோ எழுந்தருளாயே!” என்று கூவியது. கீழ்வான் விளிம்பில் அருணனின் தேர்ப்புரவிகளின் குளம்புத் தடங்கள் சிறு செந்நிறத் தீற்றல்கள் எனத் தோன்றலாயின. “வருக, எம் தேவா!” என்று கூவியபடி நாகணவாய்கள் துயிலெழுந்தன. உள்ளான்களும் காகங்களும் காற்றில் எழுந்து சிறகசைத்து களியாட்டெழுப்பின. தேர்முகம் தெளிந்து கிழக்கே ஒளியரசன் வானிலெழுந்து செங்கதிர்முடி துலங்கி வந்தான்.


முதற்கதிர் வந்து மலர் தொடும்போது அவற்றுக்குமேல் தங்கள் மெய்யுருக் கொண்டு பொன்முலைகளைத் திறந்து காத்து நின்றனர் தேவகன்னியர். அவ்வான் மீது கரிய அலையெனப் பறந்த கேசியின் தலைமுடி சூரியக்கதிரை மறைத்தது. சினம் கொண்ட ஊர்வசி சலிப்போசையிட்டபடி அக்குழலை தன் கையால் பற்றி வீசி விலக்கினாள். ‘யார் அது?’ என திரும்பி நோக்கிய கேசி கதிர்கொண்டு பொன்பூசி நின்ற ஊர்வசியை கண்டான்.


அக்கணம் அவன் பிறிதெதையும் எண்ணவில்லை. தேரைத் திருப்பி பாய்ந்துவந்து அவளை அள்ளித்தூக்கி தன் தேரிலேற்றி “செல்க, என் அரண்மனைக்கு!” என்று தேர்ப்பாகனுக்கு ஆணையிட்டான். இருளுருக்கொண்ட தேர்ப்புரவிகள் குளம்பறைய தென்னிருள் நோக்கி விரைந்தன. ஊர்வசி கைநீட்டி அலறினாள். கீழே இருந்த அவள் தோழிகள் வெண்நாரைகளாக சிறகுகொண்டு பறந்து அவனைத் துரத்தினர். கரிய கூகைகளாக எழுந்த கேசியின் வீரர்கள் அவர்களை சிறகுகொய்து மண்ணில் வீழ்த்தினர்.


வான்வழியே அவர்கள் செல்லும்போது கங்கையில் புதுப்புனலாடி ஒளியலைத்த நீர்ப்பரப்பைப் பிளந்து பொன்னொளிரும் வெற்றுடலுடன் எழுந்து கரைவந்து ஈரக்குழலை உதறி தோள்மேல் பரப்பி விரல்களால் நீவியபடி நின்றிருந்த புரூரவஸ் தன்மேல் விழுந்து மறைந்த நிழலைக்கண்டு நிமிர்ந்து நோக்கினான். அவன்மேல் விழுந்த முதற்கதிரின் ஒளி வேள்வி விறகின் மேல் எழுந்த தென்னெரியென சுடர்ந்தது. அவனை நோக்கி கைவீசி  “என்னை காத்தருள்க, அரசே!” என்று ஊர்வசி கூவினாள்.


மின்விரைவில் கடந்து சென்ற கருந்தேரைக் கண்டதுமே புரூரவஸ் கையருகே இருந்த தன் உடைவாளை மட்டும் எடுத்துக்கொண்டு பாய்ந்து அருகணைந்த தன் புரவியிலேறி அதை விண்ணில் பாய்ந்தெழச் செய்தான். ஒளிமேல் காலூன்றும் திறன் கொண்டிருந்த அவன் புரவி வானிலேறி மிதந்து கேசியின் விண்தேரைப் பின்தொடர்ந்து சென்றது. தேரின் குடைத்தூணில் கேசியின் கருங்குழலினால் பன்னிருமுறை சுற்றிக் கட்டப்பட்டு நின்றிருந்த ஊர்வசி வெண்நிறக் குஞ்சிமுடி பறக்க பாற்கடல் அலையென பாய்ந்துவந்த புரவிமேல் வெற்றுடலுடன் வாளேந்தி அமர்ந்திருந்த புரூரவஸைக் கண்டு விழிமலர்ந்து நோக்கினாள்.


கேசியைத் துரத்தி மறித்த புரூரவஸ் தன் உடைவாளால் அத்தேரின் விளிம்புகளில் நின்று வில்லும் வேலுமேந்தி போரிட்ட அரக்கர்களின் பறக்கும் கூந்தலை வெட்டினான். அவர்கள் பாறைகள்போல சென்று மண்ணில் விழுந்தனர். அங்கு எழுந்து நின்று பறக்கமுடியாமல் கைவீசி கூச்சலிட்டனர்.  கேசியின் கூந்தலை வெட்டி கீற்றுகளாக பறக்கச்செய்தான். அவை மண்ணில் இறங்கிப்படிய விண்பறவையின் சிறகுகள் அவை என அங்கே கன்று மேய்த்திருந்த ஆயர் கூச்சலிட்டு மேலே நோக்கினர்.


குழலறுபட்டு தேர்த்தட்டில் விழுந்த கேசியைப் பற்றி வாளால் அவன் தலையை முற்றிலும் மழித்தான். தன் ஆற்றலனைத்தும் இழந்து வெறும் உடலென தேர்த்தட்டில் கிடந்த கேசியை அவன் ஆடையைக் கொண்டே கைகள்பிணைத்து தேரில் இட்டான். முடியாலான கட்டுகள் அறுக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ஊர்வசி அவனை நோக்கி “நன்று செய்தீர் அரசே, இதை நினைத்திருப்பேன்” என்றாள்.


“நீ யார், அழகியே? கான்தேவதையா? விண்ணுலாவியா? நீர்மகளா? மண்ணில் எப்பெண்ணும் இப்பேரழகு கொண்டு நான் பார்த்ததில்லை” என்றான் புரூரவஸ். ஊர்வசி “நான் அமராவதியின் ஊர்வசி. இது உங்கள் உளம்கொண்ட என் தோற்றமே” என்று புன்னகைத்தபின்  “வருகிறேன்” எனச் சொல்லி ஒரு பொற்கிளியாக மாறி சிறகடித்து எழுந்து காற்றில் பறந்து மறைந்தாள்.


அமராவதிக்குத் திரும்பி வந்த ஊர்வசி கிளம்பிச்சென்றவளாக இருக்கவில்லை. அவள் விழிகள் உள்நோக்கி திரும்பிவிட்டிருந்தன. விரல்நுனிகளில் எப்போதும் மென்பதற்றம் இருந்தது. இரு கால்களும் இணையாக நிலத்தூன்றவில்லை. இடை ஒசிந்து தோள் நிலையழிந்து காற்றில் உலையும் மலர்க்கொடி என்றிருந்தாள். எண்ணங்களில் எங்கெங்கோ சென்று நீள்மூச்சுடன் திரும்பிவந்தாள். கைநகம் கடித்து இமை தாழ்த்தி அமர்ந்து ஏங்கினாள். சிற்றொலியில் திடுக்கிட்டு விழித்துக்கொண்டு எங்குளோம் என உணர்ந்து நீள்மூச்செறிந்தாள். அவளிடம் நிகழ்ந்த மாற்றங்களை தோழியர் அறிந்தனர். அவளுக்கு நிகழ்ந்ததென்ன என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.


அந்நாளில் இந்திரன் அவைக்கு விண்ணுலாவியாகிய நாரதர் வந்தபோது அவரை மகிழ்விக்கும்பொருட்டு ஸ்ரீநிருத்யம் என்னும் பெருங்கூத்தை அவையில் நிகழ்த்தும்படி இந்திரன் ஆணையிட்டான். பாடகியர் இரு நிரையாக அமர்ந்து பாற்கடலில் துயில்பவனின் பேரழகை அவன் நெஞ்சில் அணிந்த அருமணியாகிய துணைவியின் பொன்றாப் பொலிவை போற்றிப்பாடினர். திருமகளாக நடனமங்கையர் நடுவே ஊர்வசி கால்விரல் முதல் நெற்றி வகிடு வரை நூற்றெட்டு அணிகளை அணிந்து நின்றாள். இளம்பச்சைப் பட்டாடை சுற்றி குழலில் மலர்சூடி இவளே அவளென்று நாரதர் முதலிய முனிவரும் விழிமயங்கும்படி தோன்றினாள்.


ஆடல் தொடங்கியது. சொல் ஒவ்வொன்றும் விரல் அசைவாக மாறுவதை அவையோர் கண்டனர். இசையென்பது உடலசைவாகி தாளம் காலடிகளாகி பாடல்கொண்ட பொருளனைத்தும் விழிமின்னல்களாகி ஓர் உடலில் ஒரு காவியம் நிகழ்ந்தது. தன்னை திருமகளென்றே ஆக்கி அங்கு நிறைந்திருந்தாள் ஊர்வசி. பொன்னொளிர் பேருடல் என ஓருடல் என்று ஒரு வரி பாடலில் எழுந்தபோது நாணத்தால் கண்சிவக்க முகம்கன்ற உடல் சற்று சிலிர்த்து நிலையமைந்து அவள் காட்டிய முத்திரையைக் கண்டு இசைமுனிவராகிய நாரதர் சினந்தெழுந்தார்.


“நிறுத்து!” என்று கூவினார்.  “நிறுத்துக! நிறுத்துக! ஆடலை நிறுத்துக!” என்று கைவிரித்து கூச்சலிட்டபடி அவை நடுவே வந்தார். உடனாடிய மங்கையர் திகைத்து நிலைமண்டிலத்தில் கால்பரப்பிவைத்து நின்றுநோக்க ஊர்வசியை அணுகி  “நீ ஆடியதென்ன? உன் கைவிரல் இங்கு மலர்ந்து சொன்னதென்ன?” என்றார்.  “நான் அறிந்து ஆடவில்லை, முனிவரே. இது அதுவாக ஆகி ஆடிய நடனம்” என்றாள் ஊர்வசி. பெருஞ்சினத்துடன் “நீ காட்டிய கைமுத்திரை விண்ணளாவ விரிந்தவனுக்குரியதல்ல. அது மானுடனை சுட்டுகிறது” என்றார் நாரதர்.


புரியாமல் திகைத்து பிற பெண்களைப் பார்த்தபின் இடையில் கைவைத்து ஒசிந்துநின்று  “என்ன பிழையென்று நான் அறியக்கூடவில்லை, முனிவரே” என்றாள் ஊர்வசி.  “நீ காட்டியது ஆழிவண்ணன் உடலை அல்ல. மானுட உடலை” என்றார் நாரதர். “நீ அவனுக்கு மானுடன் ஒருவனை இணை வைத்தாய். இழிமகளே, தேவகன்னியர் எண்ணவும் ஒண்ணாத செயல் ஒன்றைச் செய்தாய்.”


அப்போதுதான் அனைத்தையும் உணர்ந்தாள். ஆனால் அச்சமோ துயரோ கொள்ளாமல் முகம் மலர்ந்து இதழ்களில் புன்னகை விரிய கண்களில் ஒளியுடன் “ஆம்” என்றாள். தோழியரை விழிநுனியால் நோக்கியபடி நாணித்தலைகுனிந்து  “அதை நன்குணர்கிறேன்” என்றாள்.  “முனிவர் மகளெனப் பிறந்தவள் நீ. தெய்வங்களுக்குரிய மலரென இங்கிருப்பவள். மானுடனை எண்ணி எப்படி காமம் கொண்டாய்?” என்று நாரதர் கூவினார். “ஓடையின் திசையை அது முடிவு செய்யமுடியாதென்பார்கள், முனிவரே” என அவள் மெல்லிய குரலில் சொன்னாள்.


நாரதர் கைநீட்டி “இனி நீ இங்கிருக்கலாகாது. உன்னுள் குடியேறிய இந்நஞ்சு முற்றிலும் நொதித்து அமுதென்றாகி ஒளிகொண்டபின் இங்கு மீண்டுவருவதே முறை. நீ விழைந்த மானுடனை அடைக! அவன் எல்லையை அறிந்து  கடந்து தெய்வகன்னியாக உன்னை உணர்கையில் இங்கு மீள்க!” என்றார்.


“அத்தீச்சொல் ஏற்ற ஊர்வசி கிளையிலிருந்து உதிரும் மலரென மண்ணில் விழுந்தாள்” என்றான் முண்டன். அவன் உடலிலேயே புரூரவஸின் விரைவை, கேசியின் ஆற்றலை, ஊர்வசியின் ஆடலை, நாரதரின் சினத்தை நோக்கிக்கொண்டிருந்த பீமன் எண்ணம் அறுபட்டு மீண்டுவந்தான்.  நிமிர்ந்து அமர்ந்து “சொல்க!” என்றான்.


அவன் அருகே வந்து முழந்தாளிட்டு அமர்ந்து நிமிர்ந்து அவன் விழிகளை நோக்கி முண்டன் சொன்னான் “ஊர்வசி மண்ணுக்கு வந்தாள். அவளை புரூரவஸ் கண்டடைந்தார். மண்ணிலவள் தோன்றிய இடம் இது. இச்சுனைக்கரையில் இந்தச் சோலையில் தான் புரூரவஸ் ஒரு காட்டு இளம்கன்னியாக அவளை கண்டடைந்தார்.”


பீமன் திரும்பி ஆலயக்கருவறைக்குள் அமர்ந்திருந்த கரிய சிலையின் முகத்தைப் பார்த்தான். மாறாக்குமிண்சிரிப்பும் நிலைநோக்கும் கொண்டிருந்தாள். கல்லில் எழுந்த கண்ணொளி காலத்தை அறியாது என அவன் எண்ணிக்கொண்டான். “அன்னையின் ஆலயமுகப்பில் இருக்கிறோம். அவள் அனைத்தையும் அறிக!” என முண்டன் சொன்னான். “என்னிடம் மாயக்கலை ஒன்றுள்ளது. அதைப் பற்றும் உளஉறுதியும் தொடரும் விரைவும் உங்களுக்கிருக்குமென்றால் இக்காலத்திலிருந்து பெயர்த்தெடுத்து உங்களை அக்காலத்திற்கு கொண்டு செல்வேன்.”


பீமன் அருகே அவன் முகம் வந்தது. விழிகள் முடிவிலி திறக்கும் இரு துளைகளெனத் தெரிந்தன. “புரூரவஸாக உங்களை ஆக்குவேன். காலம் கடந்து அங்கு சென்று உங்கள் மூதாதை என ஆகி இங்கு வந்து அன்று நிகழ்ந்ததை மீண்டும் நடிக்க வைப்பேன். அன்று முதல் இன்று வரை மானுடம் அறிந்த அனைத்து அறிதலும் உங்களுடன் இருப்பதனால் அன்று நிகழ்ந்ததை விழைந்தால் நீங்கள் இன்று மாற்ற முடியும். அனைத்துத் தருணங்களையும் பிறிதொன்றென அமைக்க முடியும்.”


“அறியாக் கன்னியென மண்ணில் வந்த ஊர்வசியிடம் புரூரவஸாக நின்று உங்கள் உளத்தெழுந்த வினாவை கேட்க முடியும்.” பீமன் விழிசுருக்கி “எவ்வினாக்களை?” என்றான். “உங்களை இங்கு இவ்வண்ணம் நிறுத்துவனவற்றை, இங்கிருந்து மேலும் எழாது எடையளிப்பவற்றை.” பீமன் தன் மெல்லிய செந்தாடியைத் தடவியபடி அவனை நோக்கிக்கொண்டிருந்தான். “ஐயுற வேண்டாம், நான் உங்களை அங்கு கொண்டு செல்வேன்” என்றான் முண்டன். “அது ஓர் உளமயக்கா?” என்றான் பீமன். “இப்புவியில் நிகழும் மானுட வாழ்க்கை யாவும் ஓர் உளமயக்கே. உளமயக்குக்குள் எத்தனை உளமயக்கு நிகழ்ந்தாலென்ன?” என்றான் முண்டன்.


மீண்டும் ஏதோ சொல்ல நாவெடுத்தபின் தன்னை கலைத்துக் கூர்த்து  “நன்றி முண்டரே, நான் சித்தமே” என்றான் பீமன். “ஒன்று கேளுங்கள்! நீங்கள் அங்கு செல்வது மட்டுமே என் திறனால் அமையும். மீண்டு வருவது உங்கள் விழைவே. மீண்டு வரவேண்டாம் என்று தோன்றியதென்றால் நான் ஒன்றும் செய்ய இயலாது” என்றான் முண்டன். புன்னகையுடன் “ஆகுக!” என்றான் பீமன்.


தன் கைகளை விரித்த முண்டன் வலக்கையிலொரு சிறு வெண்மலரை வைத்திருந்தான். இடக்கையில் ஒரு கூழாங்கல். அதை பீமன் முன் நீட்டினான். “இது விண்ணிலிருந்து உதிர்ந்த மலர். இது அவளை நாடிச்செல்லும் ஒரு மானுடன். இதைத் தொடுக!” என்றான். பீமன் கை நீட்டி அந்தக் கூழாங்கல்லை தொட்டான். “செல்க!” என அவன் சொன்னான். அது ஒரு கனவென்று அவன் எண்ணினான். கனவுக்குள் என அவன் குரல் ஒலித்தது. “செல்க…” பீமன் இனிய துயிலில் என உடல்தளர்ந்தான். ஆம் கனவேதான் என்று சொல்லிக்கொண்டான். “செல்க!” என மீண்டும் எங்கோ முண்டனின் குரல் ஒலித்தது.


imagesவேட்டைக்குச் செல்வதை புரூரவஸ் ஒருபோதும் விரும்பியிருந்ததில்லை. அரசர்கள் மாதம் இருமுறை வேட்டை கொள்ளவேண்டுமென்பது அரண்மனையின் நெறிகளில் ஒன்றென கடைபிடிக்கப்பட்டது. அரண்மனைகள் உருவாவதற்கு முன்பு காட்டுக்குடிலின் மீது குலக்கொடி நாட்டி கொந்தைமுடி சூடி கல்பீடத்தில் அமர்ந்து பசுங்கோல் ஏந்தி ஆண்ட அக்காலத்தில் இருந்தே அரசர்களுக்கு அது முறையென குலமூத்தார் கூறினர். குலநெறி பிழைக்கவேண்டாம் என்பதனால் அவன் வேட்டையை வெறும் கானாடலாக ஆக்கிக்கொண்டான்.


அவன் இளவயது முதலே ஊனுணவை முற்றிலும் தவிர்த்திருந்தான். அறியாச் சிறுவனாக இருக்கையில் ஒருநாள் அரண்மனை முற்றத்தில் அமைந்த அணிக்குளத்தில் ஆம்பலும் குவளையும் மலர்ந்திருக்க ஊடே துள்ளி வெள்ளிஒளி காட்டி அலைவளயங்களின் நடுவே மூழ்கி களியாடிக்கொண்டிருந்த இளமீன் ஒன்றை இலைகள் நடுவே வெண்மலரோ என விழிமாயம் காட்டி அமைந்திருந்த கொக்கு சவுக்கென கழுத்தைச் சொடுக்கி கவ்விச் செல்வதை அவன்  கண்டான்.


பதறியபடி “அன்னையே! அன்னையே!” என்று கூவி அழுது அதைத் தடுக்க பாய்ந்து சென்றான். சிறகுக் காற்று அவன்மேல் பட சிவந்த நீள்கால்களின் மடிந்த உகிர்களில் பற்றிய துள்ளும் மீனுடன் கொக்கு எழுந்து அப்பால் நின்றிருந்த சிறுமஞ்சணத்தி மரத்தின் கிளையில் அமர்ந்தது. நிகழ்ந்ததென்னவென்று அப்போதும் அறியாது நிலைத்துறைந்த மீனின் விழிகளை அவன் பார்த்தான். இறுதிச் சொல் உறைந்திருந்த திறந்த வாயின் பற்கள் புன்னகை எனத் தெரியக்கண்டு பதைத்து நின்றான்.


வால் சுழற்றித் துள்ளும் மீனின் கண்களைக் கொத்தியது கொக்கு. பின் அதை கவ்வித் தூக்கி கழுத்து வளைத்து நேராக்கி அலகுக்குள் செலுத்தி கிளையிறங்கும் நாகமென தலை நெளித்து விழுங்கியது. கொக்கின் கழுத்துக்குள் துடித்தபடி செல்லும் மீனை அவன் கண்டான். கைகால்கள் வலிப்புற மல்லாந்து விழுந்தான். வாயோரம் நுரை வழிய விழிகள் மேலெழுந்து செல்ல தரையில் கிடந்தவனை செவிலியர் ஓடிவந்து தூக்கி மடியிலிட்டு நீர் தெளித்து கன்னம் பற்றி உலுக்கினர்.


மேலே செருகிய விழி மீண்டதும் அள்ளி அன்னையைப்பற்றி அவள் முலைக்குவடுகளுக்குள் முகம் புதைத்து உடல் குலுங்க விசும்பி அழுதான். “என்ன ஆயிற்று? என்ன ஆயிற்று?” என்று செவிலியர் அவனை தேற்றினர். பிறர் அவனைத் தொடும் ஒவ்வொரு தொடுகைக்கும் உடல் அதிர்ந்து கூசி அட்டையென வளைந்தொடுங்கிக்கொண்டான். அள்ளி அவனை கொண்டுசென்று வெண்பட்டுச் சேக்கையில் படுக்க வைத்தனர். அவன் சித்தத்தை திருப்பும்பொருட்டு பொன் வளையல்கள் குலுங்க கைகொட்டி கொஞ்சினர். அவன் உடல் தொட்டு கூச்சமூட்டினர். அன்னை அவன் தலையை தன் மடியில் எடுத்துவைத்து புன்தலை மயிரை விரலால் அளைந்தபடி “ஒன்றுமில்லை மைந்தா, ஒன்றுமில்லை” என்றாள்.


அவன் கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டே இருந்தது. இரு கைகளும் விரல் ஒன்றுடனொன்று ஏறிப்புரண்டு இறுகியிருந்தன. கழுத்து வலிபட தூக்கில் தொங்குபவன் போன்று அவன் கால்கள் இழுபட்டிருந்தன. ஏழு நாட்கள் ஒளியை அஞ்சி இருளுக்குள்ளேயே கிடந்தான். சிற்றறையின் கதவு சற்றே திறந்து செவிலி உள்ளே வரும் ஒளி விழிபட்டபோதே அலறியபடி எழுந்து இருண்ட மூலைக்கு ஓடி ஒடுங்கிக்கொண்டான். அறியாத எவரைக் கண்டாலும் அஞ்சி கண்களை மூடிக்கொண்டு மெத்தையில் உட்புறமாகக் கவிழ்ந்து புதைய முயன்றான். “அன்னையே அன்னையே அன்னையே” என்ற ஒரு சொல்லன்றி எதுவும் அவன் நாவில் எழவில்லை.


அரண்மனை மருத்துவர்கள் அவனை நோக்கியபின் “எதைக் கண்டோ அஞ்சினார் இளவரசர்” என்றனர். நிமித்திகர் அவன் நாளும் கோளும் நோக்கியபின் “அவர் முன் ஏதோ இருட்தெய்வம் எழுந்து முழுதுரு காட்டியது, அரசி” என்றனர். கவடி நிரத்தி சோழி பரப்பி பன்னிருகளக் கணக்குகள் இட்டு மீண்டும் மீண்டும் கலைத்து நோக்கியும் அத்தெய்வம் ஏதென்று அறியக்கூடவில்லை. இருட்தெய்வங்கள் எழுந்தால் பன்னிருகளத்தின் நான்கு முனையிலும் வைத்த அகல்சுடர்கள் அணையுமென்றும் தொட்டுவைத்த மஞ்சள் பொட்டுகள் குருதிச் சிவப்பு கொள்ளுமென்றும் நூல்கள் கூறின.


ஆனால் மங்கலத்தெய்வம் எழுந்ததுபோல சுடர் புகையற்று அசைவிழந்து நின்றது. மஞ்சள் பொன்னொளி கொண்டது.  அஞ்சி நடுங்கி உடல் வலிப்புற்று சேக்கையில் கிடந்த மைந்தனை நான்கு சேடியர் தூக்கிக்கொண்டு வந்து பன்னிருகளம் முன் இடப்பட்ட மான்தோல் மஞ்சத்தில் அமர்த்துகையில்  அவர்கள் அறிந்திராத இன்மணமும் எழுந்தது. “களத்தில் எழுந்துள்ளது நற்தெய்வமே” என்றார் நிமித்திகர். ஆனால் பற்கள் கிட்டிக்க, நீல நரம்புகள் சென்னியில் புடைத்து கழுத்தில் இறங்கி தோள்பரவி மணிக்கட்டில் பின்னி கைவெள்ளையில் தெளிய, கண்கள் சுழன்று மேலேற, உடல் துள்ளி விழ அப்பெருந்துயரம் அச்சிற்றுடலில் ஏன் எழுகிறது என அவர்களுக்கு புரியவில்லை.


அந்நாளில் அங்கு வந்த மாமுனிவராகிய துர்வாசரின் காலடியைத் தொட்டு சென்னிசூடி அன்னை கேட்டாள் “அருளுரையுங்கள் முனிவரே, மைந்தனை ஆட்கொண்ட அத்தெய்வம்தான் எது?” அவர் அன்னையின் விழிநீர் கண்டு உளம் இளகினார். “நன்று! நான் நோக்கி உரைக்கிறேன்” என்றபடி மைந்தனை வைத்த இருளறைக்குச் சென்றார். துயர்கொண்ட முகத்துடன் அன்னையும் தந்தையும் உடன் வந்தனர். “மைந்தன் மீண்டெழுவானா, முனிவரே? எங்கள் குல நிமித்திகரும் மருத்துவரும் பூசகரும் அவன் எஞ்சுவது அரிது என்கிறார்கள்” என்றார் அவன் தந்தை ஹிரண்யபாகு.


“இவன் விண்ணாளும் தெய்வமரபில் புதன் மைந்தனாக இளையின் கருவில் பிறந்தவன் என்றார்கள் நிமித்திகர். இவன் பிறந்ததுமே இனி இப்புவியாளும் அரசகுலமெலாம் இவன் குருதியில் பிறக்குமென்று உரைத்தனர் வருங்காலம் உய்த்தறிந்த ஏழு தொல் நிமித்திகர். வாள் வலி கொண்டு புவி வென்று முடிசூடி அமரும் மாவீரன் என்று இவனை எண்ணினேன். மானுடரைக் கட்டி நிறுத்தும் அச்சமும் ஐயமும் அறத்தயக்கமும் முற்றிலும் இல்லாத உளம்கொண்டவன் என்று கருதினேன். இவனோ கருகி உதிர்ந்த மலர்போல் இருக்கிறான்” என்று அவன் தந்தை சொன்னார்.


அன்னை விம்மியபடி “என் மைந்தன் நாடாளவேண்டியதில்லை. அரசக்கொடிவழிகள் இவனில் பிறந்தெழவும் வேண்டியதில்லை. என் மடி நிறைத்து பிறந்து முலையுண்டு வளர்ந்த என் மைந்தன் நான் வாழும் காலம் வரை கண் நிறைய என் முன் திகழ்ந்தால் மட்டும் போதும். அருள் புரிக, தவத்தோரே” என்றாள்.


மைந்தன் கிடந்த சிற்றறையின் வாயிலில் நின்றிருந்த சேடி தலைவணங்கி “துயில்கிறார்” என்று மென்குரலில் சொன்னாள். நன்று என தலையசைத்தபின் கையசைவால் அன்னையையும் தந்தையையும் வெளியே நிற்கச்செய்து துர்வாசர் உள்ளே நுழைந்தார். காலடி ஓசையின்றி அணுகி இளமைந்தனின் முகம் நோக்கி அமர்ந்து திரும்பி அவர் விழிகாட்ட சேடி கதவை மூடினாள். அறைக்குள் இருள் நிறைந்தது. கதவின் கீழிடுக்கு வழியாக தரையில் விழுந்த வாள் என மின்னிய ஒளியில் மெல்ல அறையிலுள்ள அனைத்தும் துலங்கின. மைந்தனின் நெற்றிப்பொட்டில் கைவைத்து தன் உளம் குவித்தார் துர்வாசர்.


கனவுக்குள் அவன் அவரைக் கண்டான். அவர் கை பற்றி உலுக்கி கண்ணீருடன் “சொல்க, சொல்க முனிவரே, இது ஏன் இவ்வண்ணம் நிகழ்ந்தது? இங்கு ஓருயிருக்கு பிறிதுயிருடன் என்ன பகை? ஒன்று பிறிதை அழிப்பதில் எழும் அப்பேருவகையின் பொருள்தான் என்ன? மீனெனத் துடிதுடிக்கையில் என் உள்ளத்தின் ஒரு பாதி கொக்கென சுவையறிந்தது ஏன்?” என்றான்.


“கொல்லுதலும் கொலையுறுதலும் இங்கு ஒழியுமொரு கணமில்லை. அவ்விரு செயல்களின் சரடுகளால் ஊடுபாவென நெய்யப்பட்டுள்ளது இப்புடவி” என்றார் துர்வாசர். அக்கொக்கை சேற்றுச்சுனை ஒன்றின் கரையில் முதலை ஒன்று பாய்ந்து கவ்வி  சிறகு படபடக்க, நீரில் அலைகொந்தளிக்க, உள்ளிழுத்து மறையும்  காட்சியை அவனுக்கு காட்டினார். வீறிட்டலறியபடி அவரை அள்ளிப்பற்றி கைகால்களால் இறுக்கிக்கொண்டு அவர் தொடையில் முகம் புதைத்து கூவியழுதான்.


“அந்த முதலையும் உண்ணப்படும். அச்சேற்றில் அதை உண்ணும் பல்லாயிரம் சிறுபுழுக்களின் மூதாதையர் பிறந்துவிட்டனர். இவையனைத்தும் ஒரு நிலையில் உள்ளமும் அறிவும் ஆழமும் கொண்ட உயிர்க்குலங்கள்.  பிறிதொரு முறையில் அன்னத்தை உண்டு அன்னமென்றாகும் வெறும் பருப்பொருட்கள். நிகர் நிலையொன்றுண்டு. அதில் நின்றிருக்க மட்டுமே நம்மால் இயலும்” என்றார் துர்வாசர்.


“சொல்க, நான் என்ன செய்யவேண்டும்?” என்றான். “நானறிந்ததெல்லாம் நாம் நம்மை ஆள்வதைப்பற்றி மட்டுமே. நம் கைகளால் கொலை செய்யாதிருப்பது. நம் உள்ளத்தால் அறம் மீறாதிருப்பது. இளையோனே, நமது விழைவுகள் முறை மீறாதிருக்கட்டும். நமது கனவுகளும் கரைகண்டு அமைவதாகுக! மானுடர் இப்புவியில் ஆற்றுவதற்கு பிறிதொன்றுமில்லை.” அவன் பெருமூச்சுடன் “ஆம். ஆனால்…” என்றான். “ஆமென்பது உன் உறுதி, அதை கொள்க! ஆனால் என்பது ஒரு வினா. இறுதிநீர் அடிநாவில் குளிரும் வரை அது தொடர்க! அவ்வாறே ஆகுக!”


அவன் சற்றுநேரம் அமைதியாக இருந்தான். பின்னர் “ஆம்” என்றான். “இளையோனே, நீ என்றும் துலாமுள் என அறத்தட்டுகள் நடுவே நிற்கப்போகிறவன். ஆணும் பெண்ணும் கருச்சுமந்து பெற்றனர் உன்னை. நீ அறியாத ஒன்றும் இங்கு இருக்கப்போவதில்லை” என்று உரைத்தபின் எழுந்து கதவைத் திறந்து வெளிவந்த துர்வாசர் சேடியரிடம் “துயிலட்டும். நாளை மீண்டுவிடுவார்” என்றார்.


மறுநாள் முதற்புலரியில் அனைவரும் அயர்ந்து துயில் கொண்டிருக்கையில் எழுந்து அவன் கதவைத் திறந்து வெளியே சென்றான். குளிரிலும் நோய்மெலிவிலும் உடல்நடுங்க மெல்ல கால்வைத்து நடந்தான். ஒவ்வொரு நாளும் விழித்திருக்கும்போதெல்லாம் நினைவிலும் கனவிலும் அவன் கண்டு அஞ்சிய அணிச்சுனை அருகே சென்று நின்றான். அதில் புதிய மீன்கள் வெள்ளித் தெறிப்பென எழுந்து விழுந்தன. புதிய மலர்கள் மொக்கவிழ்ந்து வண்ணம் காட்டின. புதிய வெண்கொக்குகள் இரண்டு வந்து அஞ்சனமரத்தின் கிளைகளில் அமர்ந்தன.


[image error]


கைகூப்பியபடி கிழக்கே தெரிந்த முதற்கதிரை பார்த்து நின்றான். பொன்னொளி எழுந்து வந்து அவன் உடலை குளிப்பாட்டியபோது கைகளைக்கூப்பி அவன் கால் மடித்து அமர்ந்திருந்தான். மஞ்சத்தறையில் அவனைக்காணாத சேடியர் தேடிப்பதைத்து ஓடி அலைகையில் சேடி ஒருத்தி அவனைக் கண்டு திகைத்து ஓசையின்றி கைகாட்டினாள். அரண்மனை மகளிரும் காவலரும் பின் அரசனும் அரசியும் வந்து அவனைச் சுற்றி நின்று நோக்கினர். யாரோ ஒரு முதுகாவலர் “எந்தையே!” என்று ஒலியெழுப்பி கைகூப்ப அனைவரும் அவனை வணங்கினர். தந்தையும் தாயும் கைகூப்பினர். பேரறத்தான் என்று அவன் அதன்பின் அழைக்கப்பட்டான்.


பின் எப்போதும் அவன் ஊன் உண்டதில்லை. படைக்கலம் பயின்று தேர்ந்தான். வாள் கொண்டு வெல்லவும் வில் கொண்டு விழி எல்லைவரை தொடவும் தேர்ந்தான். நிகரற்ற வீரன் என்று அவன் குலம் அவனை கொண்டாடியது. ஆனால் ஒரு களத்திலும் ஒருபோதும் பகைவனை அவன் கொல்வதில்லை என்று அனைவரும் அறிந்திருந்தனர். கொல்லாநெறி நின்றதால் அவனை பேரளியின் மைந்தன் என்று வணங்கினர். தென்திசை முதல்வனின் வடிவில் கல்லால மரத்தின் கீழ் கால் மடித்தமர்ந்திருக்கும் தோற்றத்தில் அவனுக்கு சிலையெழுப்பி தங்கள் தென்திசை சிற்றாலயங்களில் அமர்த்தி வழிபட்டனர்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–14
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–13
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–15
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–12
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–9
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–7
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–6
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–5
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 82
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 3
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–11
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–10
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–8
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–4
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–3
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று-‘மாமலர்’-1
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 70
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 61
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 15, 2017 10:30

February 14, 2017

புரட்சி, மக்களின் திருவிழா!

[image error]


 


சிலநாட்களாக பாதிநேரம் செல்பேசியை அணைத்தே வைக்கவேண்டியிருக்கிறது. மலையாள டிவிக்களிலிருந்து அழைத்து கொஞ்சம் பேசமுடியுமா என்கிறார்கள். ஒப்புக்கொண்டால் நம் படத்தை போட்டு “தமிழ் எழுத்துக்காரன் ஜெயமோகன் நம்முடே ஒப்பம் உண்டு. ஸ்ரீ ஜெயமோகன், அவிடே எந்து சம்பவிக்குந்நு?” என ஆரம்பிப்பார்கள். ஊழல்வழக்குகள் வழியாகத்தான் தமிழகம் இந்தியாவில் புகழ்பெற்றிருக்கிறது. மற்றவிஷயங்களைப் பேசினால் மைக்கை நாசூக்காக நகர்த்திவிட்டு நன்றி சொல்லிவிடுவார்கள்.


தமிழ்த் தொலைக்காட்சிகளுக்கு நான் தொலைக்காட்சி ஆளுமை அல்ல என்பதை பலமுறை சொல்லிவிட்டேன். விடமாட்டார்கள். ’நீயெல்லாம் அண்ணா தம்பியோட பொறக்கலையா” என கண்ணீருடன் கதறவேண்டிய நிலை. உண்மையில் ஆளுமைகளுக்கு நாட்டிலே அவ்வளவு பஞ்சமா வந்துவிட்டது? மனுஷ்யபுத்திரன் பேசுவது மக்களுக்குப் புரிய ஆரம்பித்துவிட்டதென்றால் எம்.டி.முத்துக்குமாரசாமியைக் கூப்பிடவேண்டியதுதானே? அருமையாகக் கட்டுடைப்பாரே மனுஷன்.


மலையாளப் பத்திரிகைநண்பர்களின் கொடுமைகள் தனி. ”ஈ பந்நீர்ஸெல்வம் ஆரா? ஆயாள் ஸஸிகலயுடே அம்மாவனாணோ?” என்றவகை அரசியல் விசாரிப்புகள். உசாவல் முடிந்த ஐந்தாவது நிமிடம் செய்திக்கட்டுரை எழுதியாகவேண்டும். எதிரிகள் எவரையாவது கைகாட்டிவிடுவது என் வழக்கம். வன்மத்துடன் ”நீங்க ஏன் சுகுமாரன் கிட்ட கேட்கக்கூடாது? அவர் அந்தக்கால நக்ஸலைட். சூடா விஷயங்களைச் சொல்வாரு” என்றேன். அவர் என்னை கைகாட்டி விட்டிருப்பாரோ என்றும் சந்தேகம் உண்டு.


அரசியல்சூழல் நமக்கே மசமசவென்றிருக்கையில் பக்கத்து மாநிலத்தார் பரிதவிப்பதில் வியப்பில்லை. எடியூரப்பாவுக்கும் சித்தராமையாவுக்கும் சாதிய உரசல் உண்டா என்று கேட்டால் நாம் என்ன சொல்வோம்? ஒருவர் கேட்டார். “பன்னீர்செல்வம் தேவரா?” உச்சரிப்பு மென்மையானது. அப்படியென்றால் அசுரர்கள் எவர் என எண்ணசெய்தது. ”சசிகலா மூக்குலத்தோர் தானே?”. குழம்பி “ஆமாம்” என்றேன். “அப்படியென்றால் இது மூக்குலத்தோருக்கும் தேவருக்குமான சண்டையா?” நான் பதறி “அய்யய்யோ பன்னீர்செல்வமே முக்குலத்தோர்தான்” என்றேன். “ஓ, அப்படியென்றால் சசிகலாதான் தேவர் இல்லையா?”.


“என்னை விட்டுவிடுங்கள். உண்மையில் எனக்கே ஒன்றும் புரியவில்லை” என்று சொல்லி செல்பேசியை அணைத்துவிட்டேன். வீட்டில் டிவியும் இல்லை. அருண்மொழி அலுவலகத்தில். வீட்டுக்கு எவரும் வருவதுமில்லை. ஆகவே அமைதி. நான் கொஞ்சம் வெண்முரசு எழுதினேன். டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் கொஞ்சம் வாசித்து ஒரு மெல்லிய ஆன்மவிடுதலையை அடைந்தேன். எப்படி இருந்தாலும் தமிழ்நாடு தப்பிக்கும். இல்லை என்றால் அதை சாயங்காலம் யாராவது  கூப்பிட்டுச் சொல்லிவிடுவார்கள்.


மின்னஞ்சலைத் திறந்தால் ஏகப்பட்ட கடிதங்கள். ”ஏன் நீங்கள் கருத்து சொல்வதில்லை?” உடனடி விஷயங்களில் கருத்துச் சொல்வதில்லை என்று ஒரு கெத்து காட்டினேன். அப்படியென்றால் ஜல்லிக்கட்டு விஷயத்தில் கருத்து சொல்லுங்கள் என்று ஒருவர் சொன்னார். “சார், உண்மையிலே எனக்கு என்ன நடக்குதுன்னே புரியலை. அதனாலேதான் கருத்தே சொல்றதில்லை” என்றேன். “என்ன நீங்க, இப்ப என்ன நடக்குதுன்னு தெரிஞ்சா மத்தவங்க கருத்து சொல்றாங்க? ஒரு ஒப்பீனியன் தானே? சொன்னா என்ன?”


ஆமாம், ஒப்பீனியன் எல்லாருக்கும் இருக்கலாம் அல்லவா? ஒப்பீனியன் என்பது மிக அவசியமான ஒன்று. அதை பலவகையில் பயன்படுத்தலாம். ஒப்பீனியன் உள்ளவர்கள் வெளியே செல்லும்போது பிறருடைய ஒப்பீனியனை அதைவைத்து தடுக்கமுடியும்.திரும்பிவந்து வீட்டுக்குள் செல்லும்போது அதை மடித்து ஓரமாக வைத்துவிடலாம்.


“சார் நீங்க யாருக்கு எதிரா கருத்து வச்சிருக்கீங்க?” என்றார் பக்கத்துவீட்டு வங்கியாளர். “யாருக்கு எதிராவா? நானா?” என்றேன் திகைப்புடன். “ஏன் சார், அரசியலிலே ஒரு ஸ்டேண்ட் வேணும்லா?” வேண்டும்தான். ஆனால் ஏன் அது எதிராக இருக்கவேண்டும்?. “சார், என்ன சொல்லுதீக? இப்ப நாம எப்டி ஒரு முடிவ எடுக்குதோம்? நமக்கு இன்னாரைப் பிடிக்காது. அவருக்கு எதிரிய சப்போர்ட் பண்ணுதோம். அதுதானே ஸ்டேண்டு? நல்ல ஒரு எதிரி இல்லேன்னாக்க பின்ன மயிராட்டா ஸ்டேண்ட் எடுத்து வெளங்குகது?”


“ஆமாம்” என்றேன். “ஆனா எனக்கு எதிரின்னு ஒருத்தரும் இல்லியே” என்றேன். “அடாடா ஏன் சார்?” என்றார். “எனக்கு யாரையுமே தெரியாது சார்”. அவர் உற்சாகத்துடன் “அப்ப அவந்தான் சார் நம்ம எதிரி. எப்டி தெரியாம ஒளிச்சு இருக்கான் பாத்தியளான்னு ஆரம்பிக்கவேண்டியதுதானே?” நான் பம்மி “எதுக்குங்க?” என்றேன்.


”என்ன இப்டி கேட்டுட்டீக? ஒரு எதிரி இருந்தாத்தான் நாம ஒரு ஆளூண்ணு இருப்பம் சார். மோடிய இல்லாட்டி கருணாநிதிய கிளிகிளீன்னு கிளிச்சா நமக்கு ஒரு இதுதானே?” என்றார். ”நம்ம எதிரி இன்னின்ன மாதிரி சூழ்ச்சி பண்ணுதான்னு நினைக்குதோம். ஒடனே நாம அதுக்கு எதிரா சூழ்ச்சி பண்ணுதோம். காலம்பற எந்திரிச்சு கட்டன்சாய குடிக்கிற நேரத்திலேயே லைஃப் தொடங்கிரும்லா?”.


நான் குரல்கம்ம “நான் சூழ்ச்சில்லாம் பண்ணுறதில்லீங்க” என்றேன். “என்ன சார் சொல்லுதீக, இப்ப செய்யல்லேன்னாக்க எப்ப செய்ய போறீக? ஹைடைம்லா? வாங்க நானே சொல்லித்தாறேன். சூப்பரா செஞ்சுபோடலாம். சூழ்ச்சி பண்ணணும் சார். சூழ்ச்சி பண்ணேல்லன்னாக்க பின்ன என்ன அரசியல்?” என்றார்.


நான் “அத எங்க போயி பண்ணுறது?” என்று கேட்டேன். “ஃபேஸ்புக்கிலேதான்” என்றார். “எனக்குத்தான் ஃபேஸ்புக் அக்கவுண்டே இல்லியே” அவர் அயர்ந்து “ஓ” என்றார். பின்னர் “சவம், ஒண்ணை தொடங்கிப்போட்டா அதுபாட்டுக்கு கெடக்கும்லா?” என்றார். குரல்தாழ்த்தி “பயமாட்டிருந்தா ஃபேக் ஐடி போரும். நமக்கு நாலஞ்சு ஃபேக் ஐடியாக்கும் உள்ளது. சொந்தப்பேரில தொடங்கினாக்க வில்லங்கம் பாத்துக்கிடுங்க. மக கெட்டிப்போறதுக்கு நிக்காள்லா?”


”அருண்மொழி என்னமாம் சொல்லுவா?” என்றேன். “சார், இப்பல்லாம் பொம்பிளையாளுகதான் அரசியலிலே ஏறி நிக்காளுக. மெரினாவிலே ஓரோண்ணும் சங்கப்பிடிச்ச கோளி மாதிரி என்னா சத்தம் பாத்தியள்லா?” என்ன சொல்வதென்று தெரியவில்லை. ”சரி சார்” என விடுபட்டேன். “சாயங்காலம் வாறேன்… ஒரு நல்ல எடமா பாப்பம் என்னா?” என்றார்.


களைப்புடன் டீக்கடைக்குச் சென்றேன். அங்கே உச்சக்குரல் விவாதம். “இவன் அவளுக்க அண்ணன் மகனாக்கும். அவன் பெண்ணெடுத்த வகையிலே மத்தவன் நேரே மச்சான். அவளுக்க மூத்த மாமனுக்க மகளாக்கும் இவள கெட்டியிருக்கது. அவளுக்க எளையவன் மத்தவன்.. ”


நுணுக்கமான செய்திகள். டிவி சீரியலாக இருக்குமோ? “பெரியவரு என்ன சொல்லுதாரு?” என்றார் ஒருவர். “:அவரு கெடப்புல்லா? கைய அனக்க முடிஞ்சா லெட்டரு எளுதமாட்டாரா?” அரசியலேதான். எவ்வளவு உட்சிக்கல். எத்த்தனை ஊடுபாவுகள். அயோவா அல்லது பெர்க்லி பல்கலை சார்பில் எவரேனும் ஆய்வுசெய்ய ஓரிரு ஆண்டுகளுக்குள் வந்திறங்காமலா இருக்கப்போகிறார்கள்?


எல்லா முகங்களும் மலர்ந்திருந்தன. அத்தனைபேருமே உச்சகட்ட உற்சாகத்தில் இருந்தனர். “ஐபிஸி என்ன சொல்லுதுண்ணாக்க அதில மூணு கிளாஸ் இருக்கு. முத கிளாஸிலே…”. இன்னொரு பக்கம் “ஒத்த அடி… வச்சான்லா வேட்டு…நான் என்ன சொல்லுதேன்னாக்க…”


சோர்வுடன் திரும்பி வந்தேன். மீன்கூடை கொண்டு சென்ற எலிஸாம்மாள் “சொத்தெல்லாம் பிடுங்கிட்டு செயிலிலெ அடைச்சுப்போட்டு முக்காலியிலே கெட்டிவச்சு அடிக்கணும்ணு அமேரிக்காக்காரன் சொல்லிப்போட்டானாம் பிள்ளே? தெரியுமா?” என்றார். என்ன ஒரு மகிழ்ச்சி. ”தெரியாது” என்றேன். “மேலே ஏசுவும் மாதாவும் உண்டுல்லா?” என்றபடி சென்றார்.


நாடே இப்படி செயலூக்கம் கொண்டு இதுவரை பார்த்ததில்லை. மெரினாப்புரட்சிக்கு ஒரு படி மேல்தான். புரட்சி மக்களின் திருவிழா என்றார் அந்தக்கால மார்க்ஸிஸ்ட் யாரோ. அப்படியென்றால் மக்களின் திருவிழாக்களெல்லாம் புரட்சிகளா? சுசீந்திரம் தேர்த்திருவிழாவும் ,சவேரியார்கோயில் கொடையும், கோட்டாறு கல்லுபள்ளி உறூஸ் நேர்ச்சையும் புரட்சிதான் என்று அ.மார்க்ஸ் ஏதாவது எழுதித்தொலைப்பாரோ? மூன்றாவதைச் சொல்லமாட்டார், அவரெல்லாம் சலவைசெய்த வகாபியத் தூய்மைவாதி.


வீட்டுக்கு வந்தபோது களைத்துப்போயிருந்தேன். உலகத்திற்கே புரியும் ஒன்று எனக்கு மட்டும் என்ன ஏதென்றே பிடிபடவில்லை. எங்கே சென்று சொல்ல? மலையாள இதழிலிருந்து அழைப்பு. “ஜெயேட்டா ஈ எடபாடு பழனிஸ்வாமீ ஆராணு? எந்தா அயாள்டே எடபாடு?” உண்மையிலேயே யார் அவர்?  “யார்?” என்று கேட்டவனிடமே கேட்டேன். “பின்ன விளிக்காம்” என்று வைத்துவிட்டான்.


நாட்டில் என்னென்னவோ நடக்கிறது. எப்படியானாலும் இந்தப்புரட்சியும் ஓயும். ஓயாவிட்டாலும் நாம் வீட்டுக்கதவை மூடிக்கொள்ளமுடியும். எவ்வளவு ஆறுதல்!

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 14, 2017 10:49

கந்து -கடிதம்

1


ஜெ,


கந்து பற்றிய உங்கள் குறிப்பு வாசித்தேன். நாங்கள் ஊரில் சாதாரணமாக மாடு கட்டும் குற்றியைத்தான் கந்து என்று சொல்வோம். அதில் கட்டிவைத்து அடிக்கும் தண்டனையை கந்து அடிப்பு என்றும் சொல்வோம். திருடர்களை அப்படி அடிப்பதுண்டு. இதில் என்ன சொல்லாராய்ச்சி என்றுதான் தோன்றியது. சொற்கள் மக்களிடம் எப்படிப் புழங்குகின்றன என்று தெரியாமல் புத்தகங்களை வைத்துப் புரிந்து கொள்வதிலுள்ள மடமை இது.


கந்து என்ற தூய தமிழ்ச்சொல்லில் இருந்துதான் ஸ்கந்தன் என்ற வடமொழிச்சொல் வந்திருக்கும் என்று உங்கள் கட்டுரையில் சொல்கிறீர்கள். அதைப்பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன்


சிவராம்


*


அன்புள்ள சிவராம்,


பலபொருட்களில் நாட்டார்வழக்கிலும் இலக்கியத்திலும் தொன்றுதொட்டே இருந்து கொண்டிருப்பதனால் கந்து என்பது பழைமையான தமிழ்ச்சொல். அது அப்படியே பிராகிருதத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது. சம்ஸ்கிருதத்தில் ஸ்கந்தன் என்னும் சொல் கந்து என்பதிலிருந்து எடுத்தாளப்பட்டதாக இருக்கலாம். ஸ்கந்தன் இங்கே கந்தனாக சொல்லப்பட்டான்.


சம்ஸ்கிருதத்தில் உள்ள ஸ்கந்த என்னும் சொல்லுக்கு சம்ஸ்கிருத வேர் இருப்பதாக மோனியர் விலியம்ஸ் அகராதி காட்டவில்லை. இது ஒரு பொதுவான வாசிப்பு. இதைத்தான் சொன்னேன். இதை ஆராயவேண்டியவர்கள் இருமொழி வேர்ச்சொல் அறிஞர். அவர்களே உறுதியாகச் சொல்லமுடியும். நான் சொன்னது இது மட்டுமே


ஜெ


***


ஜெ


ஸ்கந்த என்பது தமிழ்ச்சொல்லான கந்து என்பதில் இருந்து சம்ஸ்கிருதத்திற்குச் சென்றது என்றும் அதற்கு சம்ஸ்கிருதத்தில் வேர்ச்சொல் இல்லை என்றும் சொன்னீர்கள். ஸ்கந்த என்பது தன்னளவிலேயே ஒரு சம்ஸ்கிருத வேர்ச்சொல்தான். அதற்கு இருபதுக்கும் மேற்பட்ட அர்த்தங்கள் உள்ளன. தமிழில் பயன்படுத்தப்படுவதற்கு முன்னரே அது சம்ஸ்கிருதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது


கிருஷ்ணஸ்வாமி


*


அன்புள்ள கிருஷ்ணஸ்வாமி


தமிழில் கந்து ஒரு வேர்ச்சொல் என்பதனால் தமிழ் மொழியின் முதற்பதிவு முதலே பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி வேர்ச்சொற்களை வைத்துக்கொண்டு ஆடும் மொழிவெறி ஆட்டங்களில் எனக்கு நாட்டமில்லை. நான் இதற்கெல்லாம் ஐரோப்பியர்களை மட்டுமே நம்புவேன்.  ஆளைவிடுங்கள். நன்றி


ஜெ


***

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 14, 2017 10:31

சு.வேணுகோபால் -இருகடிதங்கள்

சு.வேணுகோபால் (1)


 


இனிய ஜெயம்,


இளம் வாசகர் சுரேஷ் பிரதீப் பதிவுகளின் தொடர் வாசகன் நான். என்னை தொகுத்துக் கொள்ளவும், புதிய கோணங்களை விவாதிக்கவும் அவை எனக்கு அணுக்கமாக இருக்கின்றன.


சு.வேணுகோபால் படிப்புகளில் தீமையின் சித்திரம் குறித்த அவரது மதிப்பீட்டு கட்டுரை தனித்துவமானது. முதல் தளத்தில் தான் வகுத்துக்கொண்ட கேள்வியின் பரிமாணங்களை தான் வாசித்த பிற இலக்கிய ஆக்கங்களுடன் உரசி விவாதித்து விரிக்கிறார்.


இரண்டாவதாக காலத்தின் முன் உறவுகளை நிறுத்தி சுரா விவாதிக்க எடுத்துக்கொண்ட கலைக்களத்தை அதன் சாரத்தை சுரேஷ் பிரதீப் சரியாக அடிக்கோடிடும் அதே சமயம், அந்த விவாதம் மீது படைப்பாளியின் எல்லையையும் கச்சிதமாகவே வகுத்து வைக்கிறார்.


பரந்த வாசிப்பு, வாசித்தவற்றுடன் உரையாடி அவற்றை திட்டவட்டப்படுத்துதல் நேர்மை. [எழுத்தாளர்கள் இருண்மையை இவ்வளவு எழுதுகிறார்கள் என இப்போது தான் எனக்கும் தெரிகிறது என அவர் எழுதும் வரி] இந்த ஆளுமை கொண்டு எந்த தயக்கமும் இன்றி அனாயாசமாக சு.வே உலகுக்குள் முயங்கி பல கதவுகளை திறக்கிறார்.


தனி மனிதனுக்குள் உறையும் தீங்கு, அமைப்புக்குள் உறையும் தீங்கு என சு.வே பின்னும் உலகை சரியாக பற்றுகிறார்.


கட்டுரையை வாசிக்க வாசிக்க இணையாக மனம் அவருடன் விவாதித்துக் கொண்டிருக்க அனுபவத்தை இதோ இதை எழுதுகையில் தித்திப்பாக நினைத்துப் பார்க்கிறேன். பால்கனிகள் நாவலின் இறுதியில் கிருஷ்ணன் சொல்வான்.


துரோகம் பண்ணா ஆம்பளைய விரும்ப கூடாதுனு இருக்கா? அப்படி இருக்க முடியுமாக்கா? அவங்க வெறுத்தா நாம வெறுக்கணும்னு கட்டாயம் ஏதாவது இருக்கா? எல்லோரும் என்னை வெறுக்க வெறுக்க தான் இதைத் தூக்கி முத்தம் வச்சேன். இவன் என்னை ஒருபோதும் வெறுக்க மாட்டாங்கா! ஏமாத்தமாட்டாங்கா! என்னை புரிஞ்சிப்பான். என்னை கண்கலங்காம காப்பாத்துவான். யாரையும் ஏமாத்தறது மாதிரி வளக்கமாட்டேங்கா. நல்லா படிக்க வெச்சிருவேன். யாரும் யாரையும் வெறுத்துட்டு வாழ முடியுமாக்கா? அது வாழ்க்கையா? வெறுக்கறதுல என்ன இருக்கு? நேசிக்கறதுலதான் அழகிருக்கு. என்ன நான் சொல்றது?


இந்த உரையாடல் நடைபெறும் முன்பு அவன் கடந்து வந்த ஊர்வலம் ஒன்றினை இணைத்து சிந்தித்தால் சு.வே உள்ளே உருவாகி நின்றெரியும் கனிவின் அனல் புரியும்.


ஒரு சிறு குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்டு அக்குழந்தையின் இறுதி ஊர்வலத்தில் ஊரே திரண்டு பின் செல்லும். அந்த ஊர்வலத்தை கடந்து வந்தவன் சொல்லும் சொல் இது.


சூரியன் முதல் மின்மினி வரை பற்பல ஒளிகள். ஒன்றேயானது இருள். காமம் குரோதம் மோகம் என மும்முகம் காட்டும் ஒன்றே ஆன அது. அந்த அந்தகாரம் முன் சூரியன் முதல் மின்மினி வரை சாத்தியப்படும் அத்தனை ஒளிகளையும் சுட்டி நிற்கிறது சு.வே-இன் உலகம்.


கருப்பு நகைச்சுவை எனும் எல்லையில் கூட மிக தனித்துவமான சித்திரம் ஒன்றினை சு.வே யின் ஆட்டம் நெடுங்கதையில் காண முடிகிறது. நாயகன் மூன்று கிலோமீட்டர் வரை தண்டவாளக் கம்பி மீது சைக்கிள் சவாரி செய்து காட்டுவதாக அறிவிக்கிறான். எல்லா சாதனைகளும் அழகிகளை கவரத்தானே. பயிற்சியில் இறங்குகிறான். பெண்களின் இயற்கை உபாதை தணிக்கும் வெளி அவனால் பறி போகிறது. சாகச நாள் வருகிறது. தண்டவாளத்தில் சவாரி செய்கிறான். விபத்து. எவளோ மிக சரியாக தண்டவாள கம்பியில் இயற்கை உபாதையை வெளியேறி வைத்திருக்கிறாள். [எண்ணெயை கொட்டி வைத்தால் போதாதா? மாறாக இது அவளது விமர்சனமும் கூட இல்லையா].


கட்டுரை தொட்டு சு.வே உலகின் ஏதேதோ சித்திரங்கள் உள்ளே எழுந்தது. இங்கே முக்கியமான மற்றொரு அம்சம் இருக்கிறது. சுரேஷ் பிரதீப், பிரபு இருவருமே சு.வே உலகுடன் இணையாக அமி, ஜி.நாகராஜன், ஆ.மாதவன் இவர்களைத்தான் கொள்கிறார்களேயன்றி தஞ்சை பிரகாஷ் உலகை அல்ல. எந்த அகத்தூண்டலும், படைப்புக் கொந்தளிப்பும் இன்றி, எழுதித் தள்ளப்பட்ட ஆன்மா அற்ற வெற்று கதைகள் அவை. [தஞ்சை பிரகாஷ் ரசிகர்கள் அவருக்கு இணையான வெற்றான கிம் டு கிக் குக்கும் ரசிகர்களாக இருப்பதை பார்த்திருக்கிறேன்] காணாமல் போய் கிடந்த அவற்றை திடீர் என கண்டு பிடித்து [என்னே தமிழ் இலக்கிய சூழல் எனும் பிலாக்கணத்தோடுதான்] உலவ விட மட்டுமே முடியும். உரையாட வைக்க முடியாது. என்பதற்கு இக் கட்டுரைகள் சான்று.


சுரேஷ் பிரதீப்புக்கு என் கைகுலுக்கல்கள்.


கடலூர் சீனு


***


சுரேஷ் பிரதீப்


 


அன்புள்ள ஜெ


வணக்கம்


சு வேணுகோபால் குறித்த இரு கட்டுரைகளுமே அரியவை. பொதுவாக இங்கே விமர்சனங்களே மிகமிகக்குறைவு. இணையத்தில் மட்டுமே விமர்சனங்கள் வெளிவருகின்றன. மற்ற இதழ்களில் விமர்சனங்களையே எதிர்பார்க்கமுடியாத நிலை. விமர்சனங்கள் ஏன் தேவை என்றால் நாமே ஓர் இலக்கியவாதியை வாசித்து முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியாது. அவற்றை நன்றாக வாசித்த மற்றவர்களின் கருத்துக்கள் நம் வாசிப்பை மேம்படுத்துகின்றன. இரு கட்டுரைகளும் நான் வாசித்த சு.வேணுவின் கதைகளை வேறுவகையிலே வாசிக்க வைக்கின்றன.


இங்கே வழக்கமாக மதிப்புரைகள்தான் வருகின்றன. அவையும் தொச்சை பற்றிய கருத்தைச் சொல்வது போல நல்லாருக்கு நல்லால்லை என்ற அளவிலேயே உள்ளன. வேணுகோபாலின் கதைகளிலிருந்து அடிப்படைகளை விவாதிக்கும் கட்டுரைகளை அதனால்தான் முக்கியமாகக் கருதுகிறேன்.


ரவிச்சந்திரன்


 


சு வேணுகோபால் தீமையின் அழகியல்  பிரபு


சு வேணுகோபால் தீமையும் மானுடமும் சுரேஷ் பிரதீப்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 14, 2017 10:31

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–15

15. இருகருவிருத்தல்


தாரை  கருவுற்றிருக்கும் செய்தி அவர்கள் இருவரையுமே விடுவித்தது. அவர் அனைத்தையும் உதறி இளஞ்சிறுவன் என்றானார். குழவியின் நினைவன்றி பிறிதில்லாதவராக முகம் மலர காடுகளிலும் நகர்தெருக்களிலும் அலைந்தார். பிறக்கவிருக்கும் குழவிக்கு விளையாட்டுப்பொருட்களும் ஆடைகளும் கொண்டுவந்து சேர்த்தார். மனைவிக்கு வேதுவைக்கவும் மூலிகைச்சாறு கொடுக்கவும் தானே முன்னின்றார். பிறர் நகையாடுவதுகூட பெருமையென்றே தோன்றியது. “முதுமையில் பிறக்கும் மைந்தன் முற்றறிஞன் ஆவான் என சொல்லுள்ளது” என்று சொன்ன காமிக முனிவரிடம் அவர் அருகே நின்ற முனிவர்களின் ஏளனப்புன்னகையை உணராமல் “ஆம், அவன் அழியாத தண்ணொளி கொண்டவன். அவன் கருநிமித்தங்களை கருதிநோக்கினேன்” என்றார்.


அவளும் முழுமுகமலர்வை அடைந்தாள். அப்போதுதான் அவள் அவ்வாறு மகிழ்வதையே தன்னுள்ளம் விழைந்திருக்கிறது என்பதை அவர் உணர்ந்தார். ஐயம்கொள்ளற்கு அரிய ஒன்றின்பொருட்டு அது நிகழவேண்டுமென்றே அவர் எண்ணியிருந்திருக்கிறார். துயர்கொள்வதை ஆழுள்ளம் விரும்புவதனால்தான் அதை வளர்த்துக்கொள்கிறது. ஆனால் துயர் இயல்புநிலை அல்ல, அந்த வாள்முனையில் நெடுந்தொலைவு நடக்கமுடியாது என அறிந்தார். அனைத்தையும் வீசிவிட்டுக் களித்தாட விழைந்திருந்தனர் இருவரும். அது கருக்கோளால் அமைந்தது.


பிறக்கவிருக்கும் குழவியைப்பற்றி பேசிப்பேசி பன்னிருகால் புரவியில் நாள் கடந்தனர். அக்குழவியின் அழகும் பெருமையும் அதற்கென வெளியே அவர்கள் செய்யவேண்டியவையும் என தொட்டுப்பேசி அது சலிக்கையில் அதைக் குறித்த அச்சங்களுக்கு சென்றனர். கருவிலேயே நோயுறுமோ என அவள் கேட்டாள். கருநாகங்களை கனவுகாண்பதாக சொன்னாள். அசைவிழந்துள்ளதோ என ஐயுற்றாள். அஞ்சி பாய்ந்துவந்து அவரை கட்டி இறுக்கிக்கொண்டு உடல்நடுங்கினாள். “என்ன இது? உனக்கென்ன பித்தா?” என்றார் அவர். அவளை பேசிப்பேசித் தேற்றி இயல்படையச் செய்தார்.


அவள் அவ்வாறு நடுங்குவதும் தான் தேற்றுவதும் மிகத்தொன்மையான ஒரு நாடகத்தில் ஒவ்வொரு முறையும் புதியதாக இருக்கும் நடிப்பு என அவர் உள்ளம் அறிந்தது. ஆனால் அத்தருணம் தித்தித்தது. மகவைப்பற்றிய இன்மொழிகளைச் சொல்லி மெல்ல அவளை மலரச்செய்தார். அவள் விழிகசிய உடல் மெய்ப்புகொள்ள முலைக்காம்புகள் கூர்கொண்டு அதிர அதைக் கேட்டு நீள்மூச்செறிந்தாள். பின்னர் பாய்ந்து அவரை கைகவ்வித் தழுவி “செத்துவிடுவேன்… அப்படியே செத்துவிடுவேன்” என புலம்பினாள். “என்ன இது வீண்பேச்சு? நான் இல்லையா என்ன?” என்றார். அச்சொற்களை தன் தந்தையரும் அவ்வாறே சொல்லியிருக்கக் கூடுமென உணர்ந்தபோது அவை மேலும் இனிதாயின.


இனித்து இனித்து கடந்த ஒன்பது மாதங்களில் அவர்கள் நெடுந்தொலைவு வந்துவிட்டிருந்தனர். அவள் பேற்றுநோவு கொண்டபோது அவர் அவள் நீராடுவதற்காக மூலிகைவேர் சேர்க்கும்பொருட்டு காட்டிலிருந்தார். மாணவன் ஒருவன் வந்து மூச்சிரைக்க “தேவிக்கு வலி” என்றான். அவருக்கு ஈற்றுநோவென உளம் கூடவில்லை. “விழுந்துவிட்டாளா? எங்கே?” என பதறி ஓடினார். எதிரே ஓடிவந்த இன்னொருவன் சிரித்தபடி “ஆண்மகவு…” என்றான். “எங்கே?” என்றார். “ஆசிரியரே, தங்களுக்கு மைந்தன் பிறந்துள்ளான்.” அவர் கைதளர அப்படியே அருகிருந்த பாறையில் அமர்ந்து “தெய்வங்களே!” என்றார்.


மாணவர் தோள்பற்றி அவர் இல்லம் மீண்டார். எதிரே வந்த முதுசெவிலியின் முகத்திலிருந்த புன்னகையில் பிறிதொன்றும் இருப்பதை அவர் அகம் உணர்ந்தது. “நற்செய்தி ஆசிரியரே, தண்ணொளி கொண்ட மைந்தன்!” என்றாள். அவர் “ஆம், அறிந்தேன்” என்றார். குடிலில் ஏறி அங்கு நின்றிருந்த பெண்களை நோக்கியபோது அனைவர் முகத்திலும் அந்த முள்பொதிந்த புன்னகை இருப்பதை கண்டார். “எங்கே?” என்றார். “வருக!” என அவரை அழைத்துச்சென்றாள் ஒருத்தி.


ஈற்றறைக்குள் மரவுரிமேல் கிடந்தாள் தாரை. அருகே மென்பஞ்சு துகிலுக்குள் குழவியின் தலைமட்டும் தெரிந்தது. “வெள்ளிக்குழல்…” என்றாள். அவர் கைகள் நடுங்கத் தொடங்கின. அவள் துணியை விலக்கி மைந்தனை காட்டினாள். “பால்வெண்நிறம்…” என்றாள். அவர் குழவியை குனிந்து நோக்கியபோது கால்கள் தளர்ந்தன. அதன்மேலேயே விழுந்துவிடுவோம் என அஞ்சினார். ஒரு நோக்குணர்வை அடைந்து திரும்பி அவள் விழிகளை சந்தித்தார். முற்றிலும் ஆர்வமற்ற விழிகளுடன் அவரை நோக்கியபின் அவள் கண்களை மூடிக்கொண்டாள்.


திரும்பிவந்து இல்லமுகப்பில் அமர்ந்தபோது தன் உள்ளம் ஏன் அமைதிகொண்டிருக்கிறது என்று அவருக்கே புரியவில்லை. குழவிநலம்சூழ முனிவர்துணைவியரும்  பிறபெண்டிரும் வந்துகொண்டிருந்தனர். சற்றுநேரத்தில் சந்திரன் தன் அணுக்கர்களுடன் வரும் ஒலி கேட்டது. தேர் வந்து நின்றதையும் அணுக்கர் புரவிகளிலிருந்து இறங்கியதையும் கண்டபின்னரும் அவர் எழவில்லை. புன்னகையுடன் அணுகி வந்த சந்திரன் “இங்கு பிறந்துள்ளது என் மகன் என்று நான் அறிந்தேன். அவனையும் அவன் அன்னையையும் அழைத்துச்செல்லவே வந்தேன்” என்றான்.


“அதை முடிவுசெய்யவேண்டியவள் அவளே” என்று அவர் அவன் கண்களை நோக்கி சொன்னார். கௌதமரின் துணைவியாகிய முதுமகள் உள்ளிருந்து இறங்கிவந்து “என்ன சொல்கிறாய்? பிறன்மனை தேடும் இழிவு இன்னுமா உன்னிடம் வாழ்கிறது?” என்றாள். “அவள் வந்துசொல்லட்டும்” என்றான் சந்திரன். உள்ளிருந்து தாரை குழவியை துணிச்சுருளில் சுற்றி எடுத்துக்கொண்டு வந்து நின்றாள். “செல்வோம்” என்றாள். அனைவரும் திகைத்து அவரை நோக்க அவர் விழிகளை அசையாமல் நிலைக்கச்செய்து அங்கு நின்ற ஒரு மரத்தை வெறித்துக்கொண்டிருந்தார்.


“வருக!” என அவள் கைகளைப்பற்றி தேர்நோக்கி அழைத்துச்சென்றான் சந்திரன். நிமிர்ந்த தலையுடன் உறுதியான அடிவைத்து அவள் நடந்துசென்று தேரிலேறிக்கொண்டாள். அவர்கள் அமராவதிநகரின் தெருக்கள் வழியாக சென்றபோது இருமருங்கும் தேவரும் துணைவியரும் வந்து நின்று நோக்கினர். அவள் யானைமேல் மணிமுடிசூடி அமர்ந்து நகர்வலம் செல்லும் பேரரசி போலிருந்தாள்.


images “சந்திரன் தாரையை மணந்து பெற்ற மைந்தன் புதன். வெள்ளியுடல் கொண்டிருந்த மைந்தனை சந்திரன் உருகிச்சொட்டிய துளி என்று மண்ணிலுள்ளோர் கண்டு வாழ்த்தினர். விண்ணில் ஒரு வெண்தழலெனச் சுழன்று சென்ற புதன் தன்னருகே மங்கா ஒளிர்சிரிப்புடன் சென்ற அழகி ஒருத்தியை கண்டான். “யார் இவள்?” என்று அவன் வினவியபோது வைவஸ்வத மனுவின் மகளான அவள் பெயர் இளை என்றறிந்தான். பின்னர் அவன் அங்கே வந்தபோது அவள் தோற்றம்கொண்ட அழகிய இளைஞன் ஒருவனை கண்டான். “அவன் இளையின் உடன்பிறந்தவனாகிய இளன். அவர்கள் இரட்டையர் போலும்” என்றனர்.


வைவஸ்வத மனுவுக்கு சிரத்தை என்னும் துணைவியில் பிறந்த இளையை மணம்கொள்ள புதன் விழைந்தான். ஒருநாள் அவள் தந்தையிடம் சென்று அவர் கன்னியை கைக்கொள்ள கோரினான். “அவள் இங்கில்லை. அடுத்த மாதம் இளவேனில் எழுகையில் இங்கு வருக!” என்றான் அவள் உடன்பிறந்தானாகிய இளன்.  அவன் புன்னகையில் அறியாத பொருள் ஒன்று இருப்பதாக உணர்ந்தவனாக புதன் திரும்பி வந்தான். மீண்டும் அடுத்த மாதமே சென்று வைவஸ்வத மனுவின் இல்லக் கதவை தட்டினான். இம்முறை அழகிய புன்னகையுடன் கதவைத் திறந்த இளை சிரித்தபடி “அன்னையே, நீங்கள் சொன்ன வெள்ளியுடலர்” என்றாள்.


வைவஸ்வத மனுவும் சிரத்தையும் அவனை முகமன் சொல்லி அமர்த்தினர். “உங்கள் மைந்தன் இல்லையா இங்கு?” என்றான் புதன். “அவன் வெளியே சென்றுள்ளான். உங்கள் விழைவை சொல்க!” என்றார் வைவஸ்வத மனு. “உங்கள் மகளை மணம்கொள்ள விழைகிறேன்” என்றான் புதன். வைவஸ்வத மனு “எவரும் விழையும் அழகி இவள் என்று நான் அறிவேன். இவள் கைகோரி நாளும் ஒரு தேவன் வந்து என் வாயிலை முட்டுகிறான். ஆனால் இவளை மணப்பவனுக்கு ஒரு தெரிவுமுறைமையை நான் வகுத்துள்ளேன்” என்றார். “சொல்க!” என்றான் புதன்.


“எவர் பிறிதொருவர் கூறாத பெரும்செல்வம் ஒன்றை அவளுக்கு கன்னிப்பரிசென்று அளிக்கிறார்களோ அவனுக்குரியவள் அவள்” என்றார் வைவஸ்வத மனு. இளையை நோக்கித்திரும்பி “அது எத்தகைய பரிசு?” என்றான் புதன். “இங்கு அமர்ந்திருக்கிறாள் என் தாய், அவள் உரைக்கவேண்டும் அப்பரிசு நிகரற்றதென்று” என்றாள் இளை. புதன் “அத்தகைய பரிசுடன் வருகிறேன்” என எழுந்தான்.


புதன் தன் அன்னையிடம் சென்று “நிகரற்ற பெண் பரிசு எது? அன்னையே, சொல்க!” என்றான். முதுமகளாகிவிட்டிருந்த தாரை சொன்னாள் “எந்தப் பெண்ணும் விழைவது ஒருபோதும் அறம்பிறழா மைந்தனை மட்டுமே.” புதன் அன்னையை கூர்ந்துநோக்கி நின்றான். “ஆம் மைந்தா, அன்னையர் காமுறுவது அதன்பொருட்டு மட்டுமே. நான் விழைந்தவண்ணம் பிறந்தவன் நீ. நான் எண்ணியதும் இயற்றியதும் உன்பொருட்டே.”


புதன் திரும்பிச்சென்று வைவஸ்வத மனுவின் வாயிலை முட்டினான். அதைத் திறந்து “வருக!” என்ற வைவஸ்வத மனு அவன் வெறும் கைகளை நோக்கி  குழப்பத்துடன் “அந்நிகரற்ற பரிசை கொண்டு வந்திருக்கிறீர்களா?” என்றார். “ஆம். அதை அக்கன்னியிடம் மட்டுமே சொல்வேன்” என்றான். தன் முன் வந்து நின்ற இளையிடம் “தேவி, ஒருபோதும் அறம் வழுவா மைந்தனொருவனை என் குருதியில் நீ பெறுவாய். அறம் காக்கும் குலப்பெருக்கு அவனிலிருந்து இம்மண்ணில் எழும். இதுவே என் பரிசு!” என்றான்.


நெஞ்சு விம்ம கைகோத்து அதில் முகம் சேர்த்து விழிநீர் உகுத்தாள் இளை. அவள் பின் வந்துநின்று அவள் அன்னை “நன்று கூறினாய்! பெண் விரும்பும் பெரும்பரிசை அளித்தாய். இவள் கைகொள்க!” என்றாள். அவன் அவள் கைகளைப்பற்றி “இச்சொற்கள் மெய்யாகுக! சந்திரகுலம் மண்ணில் எழுக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான்.


ஏழு முனிவர் கை பற்றிஅளிக்க எரி சான்றாக்கி சந்திரனின் மைந்தனாகிய புதன் இளையை மணந்தான். மணநாள் இரவில் அவன் அவளிடம் “உன் உடன்பிறந்தான் எங்குள்ளான்?” என்றான். “வேற்றூர் சென்றுள்ளார். எங்குள்ளார் என்று அறியேன்” என்றாள் அவள். அவன் கைகளை பற்றிக்கொண்டு அவள் கேட்டாள் “எனக்கு இரு சொற்கொடைகளை அருளவேண்டும் நீங்கள். என் உடன்பிறந்தான் குறித்து ஒருபோதும் கேட்கலாகாது. ஒரு மாதம் உங்களுடன் இருந்தால் மறுமாதம் நான் என் தந்தை இல்லத்தில் இருப்பேன். அங்கு வந்து என்னை பார்க்கலாகாது.” அவன் “அவ்வண்ணமே” என்று அவளுக்கு கைதொட்டு ஆணை அளித்தான்.


ஒரு மாதம் அவர்கள் ஊடியும் கூடியும் காதலில் ஆடினர். இளை அவன் உள்ளத்தின் ஒவ்வொரு எண்ணத்தையும் உணர்ந்துகொள்பவளாக இருந்தாள். “ஆணுள்ளம் பெண்ணுக்கு இத்தனை அணுக்கமானது என்று நான் இதுவரை அறிந்திருக்கவில்லை” என்று அவன் அவளிடம் சொன்னாள். அவள் புன்னகை புரிந்தாள். “ஆண் அறிந்தவை அனைத்தையும் அறிந்திருக்கிறாய்” என ஒருமுறை அவன் அவளை வியந்தான். அவள் சிரித்தபடி கடந்துசென்றாள்.


மாதம் ஒன்று நிறைந்ததும் அவள் அவனிடமிருந்து விடைபெற்று வைவஸ்வத மனுவின் இல்லத்திற்கு சென்றாள். அவள் சென்றபின்னரே அவள் இருந்ததன் நிறைவை புதன் உணர்ந்தான். காணுமிடமெல்லாம் அவளென்று இருக்க எண்ணுவதெல்லாம் பிறிதொன்றில்லை என்றாக அவன் கணமும் வாழமுடியாதவன் ஆனான். சிலநாட்களை தன் அரண்மனையில் முடங்கிக் கழித்தபின் இளமுனிவராக மாற்றுருக்கொண்டு அவளைக் காணும்பொருட்டு வைவஸ்வத மனுவின் இல்லத்திற்கு சென்றான்.


வைவஸ்வத மனுவின் இல்லத்தை அடைந்து கதவைத் தட்டியதும்  இளன் வந்து கதவைத் திறந்தான். அவனுக்கு கால்கழுவ நீர் ஊற்றி இன்மொழி சொல்லி வரவேற்று அழைத்து அமரச்செய்தான். “உத்தமரே, யார் நீங்கள்?” என்றான். “நான் கௌதமகுலத்து முனிவனாகிய சம்விரதன். இங்கு திருவுருக்கொண்டு பிறக்கவிருக்கும் மைந்தன் ஒருவனை கருக்கொள்ளும் கன்னி ஒருத்தி இருப்பதாக அறிந்தேன். அவளுக்கு என் நற்சொல் அளித்துச்செல்ல விழைந்தேன்” என்றான். இளன் “அவள் இங்கில்லை. எங்கள் தந்தையுடன் பிறந்த சுயம்பு மனுவின் இல்லத்தில் விருந்தாடும்பொருட்டு சென்றுள்ளாள்” என்றான்.


ஏமாற்றம் அடைந்த புதன் “நன்று, அவளுக்கு என் நற்சொற்கள் உரித்தாகட்டும்” என எழுந்தபோது இளன் ஈரத்தரையில் மிதித்து அப்பால் சென்றான். அவன் காலடிச்சுவடுகளை கண்டதும் என்ன என்றறியாமலேயே புதன் உடல் பதைக்கத்தொடங்கியது. பின்னர் “இளை! நீ இளை!” என கூவியபடி எழுந்தான். “இல்லை, நான் அவள் உடன்பிறந்தான். என்னைப்போலவே அவள் தோற்றம் இருக்கும்” என்று இளன் பதறியபடி சொன்னான். “நீ அவள்தான்… என் உள்ளம் சொல்கிறது” என்று புதன் கூச்சலிட்டான். “இல்லை இல்லை” என சொன்னபடி அவன் வெளியேற முயல புதன் பாய்ந்து அவன் கைகளை பற்றிக்கொண்டான்.


அவனைத் தொட்டதுமே அவனுக்கு உறுதியாயிற்று. “நீ இளைதான்… நான் எந்த தெய்வத்தின் முன்பும் ஆணையிடுவேன். நீ என் துணைவி இளை!” என்று அவன் கண்ணீருடன் சொன்னான். அழுதபடி இளன் அவன் கைகளை பற்றிக்கொண்டான். “ஆம், நான் இளைதான்.  ஒருமாத காலம் ஆணாக இருப்பேன். அதன்பொருட்டே இங்கு வந்தேன்.”


என்ன நிகழ்ந்தது என அவள் அன்னை சொன்னாள். வைவஸ்வத மனுவும் சிரத்தையும் ஓர் மைந்தனுக்காக தவமிருந்தனர். மித்ரனையும் வருணனையும் வேள்வியில் எழுப்பி மன்றாடினர். ஒரே நேரத்தில் இரு எரிகுளங்களில் மித்ரனும் வருணனும் எழுந்தனர். மித்ரன் வைவஸ்வத மனுவிடம் “அழகிய மைந்தனைப் பெறுக!” என சொல்லளித்த அதே வேளையில் வருணன் “அறம் வளர்க்கும் மகள் பிறக்கட்டும்” என்றான்.


இரு சொற்களுமே நிகழ்ந்தன. பிறந்த மகவு ஆணும் பெண்ணுமாக இருந்தது.  இருபால் குழவியை முழுதுடலும் எவருக்கும் தெரியாமல் வளர்த்தனர் வைவஸ்வத மனுவும் சிரத்தையும். வைவஸ்வத மனு அதை  மைந்தன் என்றே அனைவரிடமும் சொல்லி அவ்வாறே காட்டிவந்தார். அன்னையோ அதை மகள் என்று அணிசெய்து அகத்தளத்தில் வைத்து கொஞ்சி வளர்த்தாள். ஆணென்றும் பெண்ணென்றும் மாறிமாறி உருக்கொண்டு வளர்ந்தது குழவி. அன்னை அதை இளை என்றாள். தந்தை இளன் என்றார்.


ஒருநாள் அவர்களின் இல்லத்திற்கு முதுமுனிவர் அகத்தியர் வந்தார். “மைந்தனை கொண்டுவருக… அவன் பெருந்தோளன் ஆவதற்குரிய நற்சொல்லை நான் உரைக்கிறேன்” என்றார். “மைந்தனைக் கொண்டு வா” என வைவஸ்வத மனு ஆணையிட சேடி ஒருத்தி பெண்ணென ஆடையணிந்த மைந்தனை கொண்டுவந்தாள். திகைத்த வைவஸ்வத மனு அகத்தியரைப் பணிந்து நடந்ததை சொன்னார்.  சிரத்தை அவர் கால்களைப் பணிந்து “எங்கள் மைந்தனை மீட்டருள்க, முனிவரே!” என வேண்டினாள்.


“இக்கணமே இவன் ஆண் என்றாகுக!” என்று உரைத்து தன் கமண்டலத்து நீரை தெளித்தார் அகத்தியர். குழவி ஆணென்றாகியது. “இவனுக்கு சுத்யும்னன் என்று பெயரிடுக!” என அவர் ஆணையிட்டார். மைந்தனை வாழ்த்திவிட்டுச் சென்றார். வைவஸ்வத மனு பேருவகைகொண்டு களியாடினார். அனைவருக்கும் விருந்தளித்தார். குலதெய்வங்களை வணங்கி விழவுகொண்டாடினார். சுத்யும்னனின் அன்னையும் அதில் கலந்துகொண்டு களியாடினாளென்றாலும் அவளுக்குள் மகளை இழந்த துயர் எஞ்சியிருந்தது.


சுத்யும்னன் போர்க்கலைகளும் ஆட்சிக்கலைகளும் கற்றுத்தேர்ந்தான். குடித்தலைமைகொள்ளும் தகைமையை அடையும்பொருட்டு அவன் ஐவகை நிலமும் கண்டுவர தன் தோழருடன் பயணமானான். வழியில் அவர்கள் குமாரவனம் என்னும் சோலைக்குள் நுழைந்தனர். அது உமை தன் தோழியருடன் வந்து நீராடும் இடம். அதற்குள் ஆண்கள் நுழையலாகாது என நெறியிருந்தது. மீறுபவர்கள் பெண்ணென்றாகுவர் என உமை அளித்த சொல் நின்றிருந்தது.


காட்டின் எல்லையைக் கடந்த சுத்யும்னன்மேல் பறந்த ஏழு கிளிகள் “இது உமையின் காடு. இங்கு ஆண்களுக்கு இடமில்லை” என்று கூவின. அதைக் கேட்டு அஞ்சி அவன் துணைவர்கள் நின்றுவிட்டனர். சுத்யும்னன் “நான் நுழையலாமா, கிளியே?” என வேடிக்கையாகக் கேட்க ஏழு கிளிகளில் ஒன்று “நீங்கள் நுழையலாம், அழகரே” என்றது. சுத்யும்னன் உள்ளே நுழைந்தான். அக்கணமே அவன் பெண்ணென்று ஆனான்.


அழகிய மங்கையாக வைவஸ்வத மனுவின் இல்லம் திரும்பிய சுத்யும்னனைக் கண்டு அன்னை ஓடிவந்து அணைத்துக்கொண்டாள். “என் மகள் மீண்டுவந்துவிட்டாள்” என்று கூவி சிரித்தாடினாள். கண்ணீருடன் முத்தமிட்டு தழுவி மகிழ்ந்தாள். தந்தையோ ஆழ்ந்த துயர்கொண்டு தன் அறைக்குள் முடங்கிக்கொண்டார். தன் காலடிகளை வந்து பணிந்த இளையை நோக்கி திரும்பக்கூட அவரால் இயலவில்லை.


துயர்மிகுந்து தனித்தலைந்த வைவஸ்வத மனு வசிட்டரைச் சென்றுகண்டு தன் குறைசொல்லி விழிநீர் விட்டார். வசிட்டர் வந்து இளையை கண்டார். தந்தைக்கும் தாய்க்கும் இருக்கும் விழைவுகளைச் சொல்லி ஒரு மாதம் பெண்ணாகவும் மறுமாதம் ஆணாகவும் இருக்கும் சொல்பேறை அவளுக்கு அருளினார். இளை மறுமாதம் இளன் என்றானாள்.


“நீங்கள் என்னை பிரிய நினைத்தால் அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி இளன் கைகூப்பினான். திகைத்துநின்ற புதன் ஒரு சொல்லும் கூறாமல் திரும்பி ஓடினான். தன் அரண்மனைக்குள் சென்று தனியறையில் அமர்ந்து நெஞ்சுருகினான். இளையை அவ்வண்ணமே மறந்துவிட முடிவெடுத்தான். அம்முடிவை உறுதிசெய்ய எண்ணங்களைத் திரட்டும்தோறும் அவளுடன் கொண்ட உறவின் தருணங்கள் எழுந்து தெளிவுகொண்டு வந்தன.


அவ்வுறவின் அழகே அவள் ஆணும்கூட என்பதுதான் என அப்போது அறிந்தான். பிறிதொரு பெண்ணிலும் அந்தக் காம முழுமையையும் காதல் நிறைவையும் அடையமுடியாதென்று தெளிந்தான். அதைச் சொன்னபோது அவைக்கவிஞர் காகஜர் ஆணென்று  உள்ளமும் பெண்ணென்று உடலும் கொண்ட ஒரு துணைவியையே ஆண்கள் விழைகிறார்கள் என்றார். ஆனால் காமத்தின் ஒரு நுண்கணத்தில் ஆணுடலும் பெண்ணுள்ளமும் கொண்டவளாகவும் அவள் ஆவதை அவன் மகிழ்ந்து அறிந்திருந்தான். எண்ண எண்ண அவன் அவள்மேல் பெரும்பித்து கொள்ளலானான். வைவஸ்வத மனுவின் இல்லத்திற்குச் சென்று இளையை மனைவியெனக் கொள்ளவே விழைவதாகச் சொன்னான்.


இளை கருவுற்றாள். அக்கருவுடன் தன் தாய்வீடு சென்று அங்கே இளன் என்று கருவை சுமந்து வளர்த்தாள். ஆண்வயிற்றில் ஐந்துமாதமும் பெண்வயிற்றில் ஆறுமாதமும் வளர்ந்து அக்குழவி முழுமைகொண்டது. பொன்னொளி கொண்ட உடலுடன் பேரழகனாகப் பிறந்தது. “கோல்சூடி அறம்பேணும் ஆயிரம் மாமன்னர்கள் பிறக்கும் குடிக்கு முதல் மூத்தான் இவன்” என்றனர் நிமித்திகர். “ஆணென்றும் பெண்ணென்றும் அன்னைகொண்டவன். அனைத்துயிர்க்கும் அளி சுரக்கும் உள்ளத்தோன்” என்றனர் முனிவர்.


images சந்திரகுலத்து முதல் மன்னன் புரூரவஸ் இவ்வாறு புதனுக்கும் இளைக்கும் மைந்தனாகப் பிறந்தான். அவனை ஏழு பெரும்தீவுகளென அமைந்த புவியனைத்திற்கும் அரசன் என்று ஆக்கினான் புதன். அவன் குருதியில் பிறந்த மன்னர்களால் சூரியனால் அளக்கப்பட்ட புவி நூற்றெட்டு நிலங்களாக பகுத்து ஆளப்பட்டது. அறத்துலா கணமும் அசையாது புவியாண்டான் புரூரவஸ்.


ஒருமுறை அறம் பொருள் இன்பம் எனும் மூன்று மெய்மைகளும்  மூன்று முனிவர்களென உருக்கொண்டு அவன் அரண்மனைக்கு வந்தன. முனிவர்களைப் பணிந்து வரவேற்று அவையில் அமர்த்தி முகமனும் முறைமையும் செய்து நற்சொல் கேட்க அமர்ந்தான்.


அம்மூன்று முனிவரில் நீண்ட வெண்தாடியும் புரிசடையும் குழலும் கனிந்த விழிகளும் கொண்டிருந்த முதியவரே இன்பர்.  நரைமீசையும் கூரிய தாடியும் அச்சமில்லா விழிகளும் கொண்டிருந்த நடுஅகவையர் பொருளர். நாணச்சிரிப்பும் தயங்கும் விழிகளும் மெலிந்த சிற்றுடலும் பெண்களுக்குரிய மென்முகமும் தோளில் சரிந்த சுரிகுழலும் கொண்டிருந்த பதினகவையர் அறத்தார். அவர் தங்களை இன்பர் என்றும் பொருளர் என்றும் அறத்தார் என்றும் அறிமுகம் செய்துகொண்டபோது அரியணை விட்டெழுந்து வந்த புரூரவஸ் இரு கைகளையும் கூப்பியபடி சென்று இளையவராகிய அறத்தாரை கால்தொட்டு சென்னிசூடி  “என் அவைக்கு முதல் நல்வரவு, முனிவரே” என்றான்.


சினம்கொண்ட இன்பர் முழங்கும் குரலில்  “மூத்தவருக்கு முதன்மையளிக்காத முறை கொண்டதா உனது அரசு?” என்று கேட்டார்.  “பொறுத்தருள்க முனிவரே, இவ்வவையில் என்றும் அறமே முதன்மைகொண்டது” என்றான் புரூரவஸ். மேலும் சினம்கொண்ட பொருளர்  “இங்கு நீ அமர்ந்திருப்பது பொருள்மேல் என்று அறிந்திராத மூடனா நீ?  அறம் மட்டும் ஓச்சி வாழ்வதென்றால் காட்டுக்குள் தவக்குடில் அமைத்து அங்கு சென்று தங்கு. கோலும் முடியும் அரணும் குடியும் வாழ்வது பொருள்மேல் என்பதை எப்படி மறந்தாய்?” என்றார்.


புரூரவஸ் மேலும் பணிந்து  “முனிய வேண்டாம் பொருளரே, இங்கு நான் ஈட்டியுள்ள பொருளனைத்தும் அறத்தின் விளைவாக அதர்வினவி எனைத் தேடிவந்தவையே. அறம் துறந்தொரு பொருளை என் உள்ளமும் தொட்டதில்லை” என்றான். “இன்பமே மங்கலம் என்றறிக! இன்பத்தை அறியாத அரசன் மங்கலம் அற்றவன். அவன் மண்ணில் மைந்தரும் ஆக்களும் விளைகளும் பெருகாது. மழைவிழுந்து நிலம் பொலியாது” என்றார் இன்பர். “அனைத்துமாகி நின்றிருக்கும் அறம் என்னையும் குடிகளையும் வாழவைக்கும்” என்றான் புரூரவஸ்.


இன்பரும் பொருளரும் சினந்து “இனி ஒரு கணம் இங்கிருக்கமாட்டோம்” என கூவியபடி அவைவிட்டு எழுந்தனர். பொருளர் திரும்பி “மூடா, பொருள் என்பதன் திறன் அறியாமல் பேசினாய். பொருள் அளிக்கும் பெருந்துன்பம் இரண்டு. பொருளருமை அறியாது அள்ளி இறைக்கும் வீணன் எய்தும் வெறுமை முதலாவது. அதைவிடக் கொடியது, பொருளை அஞ்சி அதை பதுக்கி வாழும் கருமி அறியும் குறுகல். நீ    ஏழாண்டு காலம் வீணனாய் இருப்பாய்! எஞ்சிய இருபத்தோராண்டு காலம் கருமியாயிருப்பாய்! பொருளெனும் பெருந்துன்பத்தை அறிந்தபின் அதன் அருளைப்பெறுவாய்” என்றபடி வெளியேறினார்.


இன்பர் சினத்துடன் சிறிதே நகைத்து “காமத்தின் பெருந்துன்பம் பிரிவு. பிரிவு பேருருக்கொள்ள வேண்டுமென்றால் அரிதென ஓர் உறவு நிகழவேண்டும். பெருங்காதல் உனக்கு அமையும். அதை இழந்து பிரிவின் துயரை அறிவாய்! அறிந்தபின்னரே அதை கடப்பாய்” என்றுரைத்து உடன் வெளியேறினார். தயங்கியபடி எழுந்த அறத்தார் “நானும் அவர்களுடன் செல்ல கடமைப்பட்டவன், அரசே. இன்பத்தையும் பொருளையும் இரு கைகளென உணர்பவன் தன் தலையென கொள்ளத்தக்கது அறம். அவை இரண்டையும் நீர் அறிந்து நிறைகையில் உம்மில் நான் அமைவேன்” என்று சொல்லி வெளியேறினார்.


MAMALAR_EPI_15


“இன்பத்துயரும் பொருள்துயரும் பெற்று அறமறிந்து அமைந்தார் உம் மூதாதை புரூரவஸ். அவர் புகழ் வாழ்க!” என்றான் முண்டன். “அவர் அவ்விரு பெருந்துயர்களையும் அறிந்தது ஊர்வசியுடன் கொண்ட காதலால். அவளை அவர் சந்தித்த இடம் இந்தச் சோலை. அவள் நினைவாக அவர் அமைத்ததே இச்சிற்றாலயம்.”


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–14
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 32
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 29
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 9
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–13
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–12
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–9
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–7
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–6
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–5
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–4
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 41
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 13
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 13
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 1
வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 74
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 24
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 8
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 14, 2017 10:30

February 13, 2017

கந்து

1


ஜெ,


வலைத்தளத்தில் இந்த யூடியூப் பதிவைப்பார்த்தேன். இந்தச் சொல்லாராய்ச்சி சரியா? சரியாக இருக்காது என எனக்கு ஒரு சந்தேகம் . அதனால்தான் கேட்டேன்


சந்திரகுமார்


 



 


அன்புள்ள சந்திரகுமார்,


இந்த நாட்டில் எந்த வேலியில் போகிற ஓணானும் செய்யக்கூடிய அறிவுலகச் செயல்பாடு சொல்லாராய்ச்சி. தோன்றுவதைச் சொல்லவேண்டியதுதான். புத்தகமோ அகராதியோ ஒரு பொருட்டு இல்லை. டிவி பார்க்கிறவன் எங்கேபோய் புத்தகம் பார்க்கப்போகிறான்?


என்ன வேடிக்கை என்றால் இந்த டிவி அறிஞர்கள் இந்த மெய்ஞானத்தை ஏதோ வலைத்தளத்திலிருந்து எடுத்திருக்கிறார்கள். அதில் எவரும் எதையும் எப்படியும் எழுதலாமென்பது அறிவுலகநீதி. எவரும் வாசிப்பதில்லை என்பதனால் தீங்கில்லை.


கந்து என்ற சொல் பலவகையில் இன்றும் பயன்பாட்டில் இருப்பது. நேரடியாக அதற்கு சிறிய தூண் என்று பொருள். பொதுவாக ஊர்மன்றில் நாட்டப்பட்டிருக்கும் கல்தறி கந்து எனப்படும். விலங்குகளைக் கட்டிவைக்கும் தறியும் பொதுவாக கந்து என்று சொல்லப்படுகிறது.வைக்கோல் போர் நடுவே உள்ள தூணும் கந்துதான் [அகராதி ]


[ஆனால் வையாபுரிப்பிள்ளை அகராதியே நாட்டார்ச்சொல்லான இதை குத்துமதிப்பாக கேட்டுத்தான் பொருள் அளித்திருக்கிறது. பொதுவாக அவ்வகராதியின் பல சொற்பொருட்கள் அவரது மாணவர்களால் சேகரிக்கப்பட்டவை. இலக்கியப்பொருள் சரியாக இருக்கும். நாட்டாரியல்சொற்களில் பொருள்திரிபுகள் உண்டு]


நம் பாலியல் நூல்களில் பெண்களின் கிளிடோரிஸ் கந்து எனப்படும். அந்தப்பொருளே இன்று அதிகமும் பயன்படுத்தப்படுகிறது.


சென்ற நூறாண்டுகளுக்கு முன்புகூட வரிகொடாதவர்கள், கடனைக் கட்டாதவர்களை ஊர்மையத்தில் கல்தறியில் கட்டி வைத்து அடிக்கும் வழக்கம் இங்கே திருவிதாங்கூரில் இருந்தது, அதற்கு கந்து அடி என்றுதான் பெயர். கடன் திருப்பியளிக்க மறுப்பவர்களை கந்தில் கட்டி வைப்பது வழக்கமாக இருந்தது. கந்துவட்டி என்பது அதிலிருந்து வந்த சொல் என்பதை அறிய பெரிய ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை


பெயர்ச்சொற்களைப் பொருள் கொள்கையில் சில அடிப்படைப் புரிதல்களை மேற்கொள்வது நல்லது. என் அண்டை வீட்டாராக இருந்த கேரளப்பேரறிஞர் திரிவிக்ரமன் தம்பி [அ.கா.பெருமாள் அவர்களின் ஆசிரியரும்கூட] ஊர்பெயர் ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் மூன்று விதிகளை ஒருமுறை சொன்னார்



பொதுவாக பெயர்ச்சொற்கள் கவித்துவக் கற்பனை, உருவகம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைவதில்லை. அவை நடைமுறைப் பயன்பாட்டில் இருந்தே உருவாகும். ஆகவே அபூர்வமான அர்த்தங்களைத் தேடிச் சென்றாலோ இலக்கிய நுட்பங்களை கண்டடைந்தாலோ முட்டாளாகவே ஆவோம்.

2 ஒரு பெயர்ச்சொல்லின் பயன்பாடு அதே சூழலில் ஒன்றுக்கும் மேற்பட்ட தளங்களில் நுட்பமான வேறுபாடுகளுடன் இருந்து கொண்டிருக்கும். அவற்றையும் கருத்தில் கொள்ளவேண்டும்


3 ஒரு பெயர்ச்சொல் அவ்வாறு பயன்படுத்தப்படும் அந்த முறைக்கு, அந்தப் பார்வைக் கோணத்திற்கு அதற்கு முன் ஒரு மரபு இருக்கும். ஆகவே ஒன்றுக்கு மேற்பட்ட முன்னுதாரணங்கள் தேவை


இந்த நெறிகளேதும் இல்லாமல் ‘எனக்கு இன்னா தோண்றதுன்னாக்கா’ என சொல்லாய்வு செய்யும் ஆசாமிகள் தமிழில் வளரும் ஆகாயத்தாமரைகள் என்றே சொல்லலாம்.


கந்து என சிவலிங்கமும் சொல்லப்படுவதுண்டு. ஏனென்றால் அது சிறிய கல்தூண் அல்லது கல்முழையாகவே வழிபடப்பட்டது. சிலப்பதிகாரத்தில் அருகர் கந்தன் எனப்படுகிறான் என வையாபுரிப்பிள்ளை அகராதி சொல்கிறது. ஏனென்றால் அவர் கல்தூணில் புடைப்புச்சிற்பமாகச் செதுக்கப்பட்டிருக்கலாம். ஊர்மன்றுகளில் நாட்டப்பட்டு வழிபடப்பட்டிருக்கலாம்.


கந்தன் என்னும் சொல் ஸ்கந்த என்னும் சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்தது என்று ஊகிக்கவே வரலாற்று வாய்ப்பு. ஏனென்றால் பழந்தமிழில் முருகன் கந்தன் என்று சொல்லப்பட்டதில்லை. முருகன் என்பதே தமிழ்ப்பெயர்


ஆனால் ஸ்கந்தன் என்னும் சொல் கந்து என்னும் சொல்லில் இருந்து வந்திருக்கலாமா எனக்கேட்டால் அது ஆய்வாளர்களால் பரிசீலிக்கத்தக்கது என்றே என்னைப்போன்ற ஒருவன் சொல்லமுடியும். ஏனென்றால் ஸ்கந்தா என்ற சொல்லுக்கு மண்ணில் முகிழ்த்தது, அனல்வடிவாக எழுந்தது என்னும் பொருள்களே சம்ஸ்கிருதத்தில் காணப்படுகின்றன. ஆனால் அதற்கு சம்ஸ்கிருத வேர்ச்சொல் அடித்தளம் இல்லை.


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 13, 2017 18:08

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.