Jeyamohan's Blog, page 1648

April 23, 2017

நித்யா -கடிதங்கள்

muni nara


திரு. ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.


என்னுடைய மின் அஞ்சலுக்கு பதிலாக, நீங்கள் உங்களுடைய இணைய தளத்தில் வெளியிட்ட ‘நித்யாவின் இறுதிநாட்கள் ‘ ( http://www.jeyamohan.in/97384#.WPRyxo... )என்ற கட்டுரையைப் படித்தேன்.


உங்கள் கட்டுரை எனக்கு பயனுள்ளதாக உள்ளது. திரு. நித்ய சைதன்ய யதி அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள எனக்கு தூண்டுதலாக இருந்தது,அவரைப் பற்றி United Writers வெளியிட்டுள்ள ‘அனுபவங்கள் அறிதல்கள்’ என்ற புத்தகத்துக்கு நீங்கள் எழுதியுள்ள முன்னுரை.


அந்தப் புத்தகத்தில், அவர் எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் மொழி பெயர்ப்பு ‘மரணத்தை எதிர்கொள்ளல்’ (பக்கம் 101) என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது.


அக் கட்டுரையை படித்த பின்தான், திரு. நித்ய சைதன்ய யதி, அவருடைய மரணத்தை எவ்வாறு எதிர் கொண்டார் என்ற கேள்வி எழுந்தது.அக்கேள்வியால் உந்தப்பட்டு, நான் உங்களுக்கு என்னுடைய முந்தைய மின் அஞ்சலை அனுப்பினேன். உங்களுக்கு, என்னுடைய நன்றிகள் பல.


எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்தே, இறப்பு, மரணம் என்ற சொற்கள் என்னை ஈர்த்தே வந்துள்ளன.


மரணம் என்ற வார்த்தையின் முழுப் பொருள், மகா + ரணம், அதாவது மிகப் பெரிய ரணத்தால் வேதனைப்பட்டு, உயிரானது உடலை விட்டுவெளியேறுதல் என்பார் என் அக்குபங்சர் ஆசான்களில் ஒருவரான அக்கு ஹீலர். உமர் பாரூக்.


அவர் மேலும் சொல்வார்:


1. நாம், இயற்கையின் விதிகளான பசித்த பின் உணவு உண்டு,தாகமெடுத்த பின் நீர் அருந்தி, உடல் கேட்கையில் அதற்கு ஓய்வுகொடுத்து, இரவு 9 மணிக்கு உறங்கச் சென்றால், நோயற்ற வாழ்வுவாழ்ந்து, நம் உடலை விட்டு உயிர் பிரிகையில், வலிகள், தொந்தரவுகள், நோய்கள், எதுவும் இன்றி இயற்கையாக உயிர் பிரியும். அதனைத்தான் நம் முன்னோர்கள் இறப்பு என்கிறார்கள்.


2. நமக்கு வரும் சிறிய நோய்களான ஜுரம், சளி, வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவை, நம் உடலே, உடலை சுத்தம் செய்யும் ஒரு கழிவு நீக்க வேலை. இந்த வேலையை நாம் மருந்துகள் எதுவும் எடுத்துக் கொள்ளாமல், அனுமதிக்கையில், நமக்கு பெரிய எந்த ஒரு நோயும் வராது. இன்று மனிதர்களுக்கு வரும் கான்சர், சிறுநீரக செயலிழப்பு, உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் காரணம், சிறிய நோய்களான ஜுரம், சளி, வாந்தி, வயிற்றுப் போக்கு, போன்றவற்றுக்கு மருந்துகள் எடுத்துக் கொள்வதுதான்.


3. மருந்துகள், எந்த ஒரு நோயையும் தீர்ப்பதில்லை.


பாயசம் இல்லாத விருந்து இல்லை. பக்க விளைவு இல்லாத மருந்து இல்லை. மருந்துகளின் பக்க விளைவுகள்தான், மனித குலம் இன்று எதிர் கொள்ளும் அனைத்து நோய்களுக்கும் காரணம்.


4. ‘பட்டினியே சிறந்த மருந்து (லங்கணம் பரம அவுஷதம்)’ என்றனர் நம் முன்னோர்கள்.


இதனையே திருவள்ளுவர் சொன்னார்:


குறள் 942:


மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.


பொருள்:


உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே

தேவையில்லை.


5. நோய்க்கு சிகிச்சை அளித்தால் சரியாகும். இறப்பு என்பது நோய் அல்ல. அதற்கு சிகிச்சை கிடையாது. எனவே சிகிச்சை அளித்து இறப்பை நிறுத்த, முடியாது.


இது போன்ற உண்மை விளம்பும் கோட்பாடுகளால் கவரப்பட்டு நான் அக்குபங்சர் பயின்று, அக்குபங்சரிஸ்டாக சிகிச்சை அளித்து வருகிறேன். மருந்துகள், ஆய்வுக் கூட அறிக்கைகள், அறுவை சிகிச்சைள் இன்றி, மிக, மிக குறைந்த செலவில் பலர் குணமடைந்துள்ளார்கள்.


நோய்கள், இறப்பு ஆகியவை பற்றிய பயத்தை, என்னிடம் இருந்து விரட்டியதில் அக்கு ஹீலர். உமர் பாரூக் உள்ளிட்ட என்னுடைய அக்குபங்சர் ஆசான்கள் 17 பேர்களின் பங்கு, முதன்மையானது.


ஒருவரின் உயிர் பிரிந்ததை,மற்றவர்களுக்கு தகவல் சொல்லும் போது, காசர்கோட்டில் என்னுடைய கிராமத்தில் அவருடைய ஆயுள் முடிந்து விட்டது எனச் சொல்வோம். அவர் மரணித்து விட்டார் எனச் சொல்ல மாட்டோம். காரணம், மரணம் என்பது எதிர் மறைச் சொல்.


காசர்கோட்டில் உள்ள பெர்லா கிராமம் என்னுடைய சொந்த ஊர். அங்கு என்னுடைய பரம்பரை வீடு Kuntikana உள்ளது. என்னுடைய இன்னொரு தாத்தாவின் (அம்மாவின், அப்பா) பரம்பரை வீடு, காசர்கோட்டில், சட்டஞ்சால் அருகில் உள்ள ‘தயிரா’ ஆகும்.


என்னுடைய இரு தாத்தாக்களின் பரம்பரை வீடுகளிலும் சில நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி

கோயில்கள் உள்ளன.

என்னுடைய கிராமம் மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் அக்குபங்சர் சிகிச்சை அளிப்பதற்காக ஒவ்வொரு மாதமும் நான் காசர்கோட்டுக்கு ரயிலில் செல்லும் போது, அந்த ஊர் பற்றி, அங்கு நீங்கள் இருந்ததைப் பற்றி நீங்கள் எழுதியது அவ்வப்போது நினைவுக்கு வரும்.


நன்றியுடன்.

ஆர் ராதாகிருஷ்ணன்


 


nitya sea


அன்புள்ள திரு ஜயமோகன்,


திரு நித்ய சைதன்ய யதி பற்றி வாசித்தேன்.[நித்யாவின் இறுதிநாட்கள் ] தொடர்புடைய கட்டுரைகளையும் வாசித்தேன்.

ஸ்ரீ நாராயண குரு கல்வி, சமூகசீர்திருத்தவாதி என்ற அளவு அறிந்திருந்த எனக்கு அவருடைய வேதாந்த ப்ரதிபத்தி ப்ரமிப்பை ஏற்படுத்திது.


1992-95 ஆண்டுகளில் அஸ்ஸாமில் பணியாற்றியபோது ஸ்ரீ சங்கரதேவரைப்பற்றிய பரிச்சயம் ஏற்பட்டது. நாம்கர்கள் (Namgarh) பற்றி முதன்முதலாக தெரிந்துகொண்டேன். பௌத்த மதம் குறித்தும் அறிந்தேன்.


அஸ்ஸாம் கீழை பௌத்த நாடுகளின் நுழைவாயில். தாய்லாந்து பர்மா பாக்கு தேக்கு, சீனத்துப்பட்டு இவற்றின் விளைநிலம் இங்கு ஆரம்பம். குவாஹாடி என்றால் வடமொழியில் பாக்குச்சந்தை என்று பொருள்.


தென்மேற்கில் நாராயணகுரு சங்கரமூர்த்தியை ப்ரதிஷ்டை செய்தார். வடகிழக்கில் சங்கரதேவர் நாராயணமூர்த்தியை நாம்கர்களில் ஷராய்களில் எழுந்தருளப்பண்ணி அனைத்து வகுப்பினரும் வழிபட உதவினார். மேலும் பல ஒற்றுமைகள். மக்களுக்கு உணவு, உடை, உறைவிடம் போல ஒரு அருள் பொழியும் தெய்வம், தாய் போல எதுவும் எதிர்பாராமல் அன்பு காட்டும் தேவதை தேவை. இந்த இரண்டு ஸாதுக்களும் அந்த தெய்வத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தார்கள்.


இன்றளவும் ஷராய் அஸ்ஸாமின் அதிகார பூர்வமான கலாசார சின்னம்.ஷராய் என்பது ஒரு புத்தவிஹார வடிவில் பித்தளையில் செய்யப்பட்ட சிறிய வழிபாட்டுப்பொருள். இதனுள் ஸாளக்ராமம் இத்யாதிகளை எழுந்தருளப்பண்ணி ச்ரவணம்,கீர்த்தனம் முதலிய அனுஷ்டானங்களை செய்வர்.


யார் ஆலய பூஜை, ஆவாஹனம் பண்ணலாம்? ஸம்ஸ்காரம், தீட்சை உடையவர்கள் மட்டும் தானே? இதிஹாஸ புராண காலத்திலிருந்தது ,இன்று வரை, தெரிந்தும் தெரியாமலும், தீக்ஷித குடும்பங்களில் கண்டெடுத்த, கொண்டெடுத்த குழந்தைகள் உண்டு. ஈச்வர ஸங்கல்பம் என்று சொல்வார்கள். ரிஷிமூலம் நதிமூலம் பார்க்கக்கூடாது என்பது நியதி.

சாஸ்த்ர மர்யாதை குலையாமல் மனித தர்மம் காப்பாற்றப்பட்டு வந்திருக்கிது. அதனால்தான் இந்த ஸாதுகள் வேத வேதாந்தங்களுக்கு தங்கள் அங்கீகார முத்ரையை பதித்தார்கள். ஆனால்

தற்கால ஜாதீய அரசியல் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்ல இயலாது.


அன்புடன்


கிருஷ்ணன். சாமவேதம்


 


நித்யாவின் இறுதிநாட்கள்
தொடர்புடைய பதிவுகள்

நித்யாவின் இறுதிநாட்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2017 11:33

நேர்காணல்கள் முழுத்தொகுப்பு

petti


 


ஏப்ரல் 2017 வரை நான் அளித்த பேட்டிகளின் முழுத்தொகுப்பை நண்பர் வெங்கட்ரமணன் தொகுத்திருக்கிறார்


ஜெயமோகன் பேட்டிகள் முழுத்தொகுப்பு

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2017 11:33

வெண்முரசு விடுபடல்

வெண்முரசு மாமலரில் ஓர் அத்தியாயம் பிரசுரத்தில் விடுபட்டுவிட்டது. நேற்று அதற்கு முந்தைய அத்தியாயம் பிரசுரமாகியது. அதை இன்று நேற்றைய தேதியிட்டு வெளியிட்டிருக்கிறோம் . கதைத்தொடர்ச்சியில் ஓர் இடக்குழப்பம் வந்ததைச் சிலர் சுட்டிக்காட்டியிருந்தனர். அது இதன் விளைவே


தவறுக்கு வருந்துகிறோம் நன்றி


‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–82
தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2017 11:31

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–83

83. எரிமலர்க்கிளை


உணவருந்தி முடித்ததும் முதுமகள் ஒருத்தி காட்டிய கொப்பரையில் இருந்த புல்தைலம் கலந்த வெந்நீரில் கைகளை கழுவிக்கொண்டு தேவயானி எழுந்தாள். வெளியே முன்முழுமைச் செந்நிலவு எழுந்திருந்தது. மரங்கள் நிழல்களென மாறிவிட்டிருந்தன. குடில்களனைத்திலும் ஊன்நெய் விளக்குகள் எரியத்தொடங்க அணுகிவரும் காட்டெரிபோல் குடில்நிரையின் வடிவம் தெரிந்தது. வானிலிருந்து நோக்கினால் தீப்பந்தம் ஒன்றை விரைவாகச் சுழற்றியதுபோல் அச்சிற்றூர் தெரியுமென்று அவள் எண்ணிக்கொண்டாள்.


“தாங்கள் இளைப்பாறலாமே, பேரரசி?” என்றாள் சாயை. “ஆம். உடல் களைத்திருக்கிறது. துயில் நாடுகிறேன். ஆனால் இந்த இளங்காற்றை விட உளமெழவில்லை. எழுந்து வரும் விண்மீன்களையும் முழுநிலவையும் சற்று துய்த்துவிட்டுச் செல்லலாம் என்று தோன்றுகிறது. பிறிதொருமுறை இப்படி ஒரு மலைச்சிற்றூரில் இயல்பாக தங்கும் வாய்ப்பு அமையப்போவதில்லை” என்றாள். “தாங்கள் விரும்பினால் முற்றத்தில் சென்று அமர்ந்து நிலவை நோக்கலாம். பீடங்களை அங்கு கொண்டு இடச் சொல்கிறேன்” என்றாள் சாயை.


“வேண்டியதில்லை. இந்த முற்றத்தை ஒருமுறை சுற்றி நடந்து வரலாமென்று எண்ணுகிறேன். பகல் முழுக்க தேரில் அமர்ந்திருந்ததின் அசைவு உடலில் எஞ்சியிருப்பதுபோல் உள்ளது” என்றபடி தேவயானி கைநீட்ட சாயை மேலாடையை எடுத்து அவளுக்களித்தாள். அதை தன் தோளிலிட்டபடி வெளியே சென்று வட்டப்பெருமுற்றத்தில் இறங்கி காற்றில் மேலாடையும் குழலும் எழுந்து பறக்க சற்றே முகவாய் தூக்கி விண்ணை நோக்கியபடி ஓய்ந்த உடலுடன் நடந்தாள்.


சாயை அவளையும் அந்தப் பெருமுற்றத்தையும் நோக்கிக்கொண்டு உடன் நடந்தாள். பறவைக்குரல்கள் அடங்கியமையால் குடில்களில் இருந்து மகளிரும் சிறுவரும் எழுப்பும் ஓசைகள் வலுத்து ஒலித்தன. சிறு குழந்தைகள் குடில்களின் படிகளில் பாய்ந்திறங்கி அப்பால் இருந்த மரங்களில் தொற்றி ஏறி குதித்தும், ஒருவரை ஒருவர் துரத்தியும், பிடித்துத் தள்ளியும், கட்டி மண்ணில் விழுந்து புரண்டும் விளையாடிக்கொண்டிருந்தனர். மலைக்குடி மகவுகள் பொழுதுமுழுக்க விளையாடிக்கொண்டே இருப்பதனால் விளையாட்டில் தங்களை மறக்கும் இயல்பு கொண்டிருந்தன. நகரங்களில் எக்குழந்தையும் தன் இல்லத்தையும் ஆற்றவிருக்கும் கடமைகளையும் மறந்து விளையாடுவதில்லை என்று அப்போது தோன்றியது.


விலங்குகள் விளையாடுவதுபோல என்று ஒரு சொற்றொடர் எழுந்தது உள்ளத்தில். வளர்ந்த பின்னரும்கூட அவர்கள் விளையாடுகிறார்கள். உடல் ஓய்ந்த முதியவர்களுக்குக் கூட விளையாட்டுகள் உள்ளன. விளையாடாத உயிர் எதை இழக்கிறது? ஏன் விளையாடுகிறார்கள்? அத்தனை விளையாட்டுகளும் வாழ்க்கையின் போலிக்குறுநடிப்புகள். வேட்டைகள், புணர்தல்கள், சமையல்கள், பூசல்கள். வாழ்க்கையை தனக்குரிய நெறிகளுடன் தன் சொல்திகழும் எல்லைக்குள் அமைத்துக்கொள்வதே விளையாட்டு. தெய்வங்களும் ஊழும் அமைக்கும் இடர்களும் துயர்களும் இல்லாத பிறிதொரு வாழ்க்கை. விளையாட்டை இழந்தமையால்தான் அரசாடுகிறேனா?


இளையவரும் கன்னியரும்கூட நாணமோ ஒதுக்கமோ இன்றி ஒருவரை ஒருவர் கைபற்றி தோள்தழுவி விளையாடினர். அவள் நகர்நுழைந்தபோது வரவேற்புக்கு வந்து நின்ற மக்களைவிட பத்துமடங்கினர் அங்கிருப்பதாக தோன்றியது. குடில்களில் இருந்து இளையோரும் சிறுவர்களும் மகளிரும் மையமுற்றத்திற்கு வந்தபடியே இருந்தனர். அங்கே சிறு குழுக்களாக அமர்ந்து தங்கள் இல்லங்களிலிருந்து கலங்களிலும் தாலங்களிலும் உணவை கொண்டுவந்து வைத்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு உண்டனர். சிரித்தும் கூச்சலிட்டும் உவகை கொண்டாடினர். சிறு குழந்தைகள் சிறு குருவிகள் என ஒவ்வொரு அன்னையிடமிருந்தும் ஒவ்வொரு வாயென வாங்கி உண்டு அக்கூட்டத்தினூடாக எழுந்தும் அமர்ந்தும் விளையாடிக்கொண்டிருந்தனர்.


இருட்டுக்கு மேலும் அழுத்தம் வந்தது. விண்மீன்கள் கம்பளம்போல ஒளியுடன் விரிந்தன. நிலவு எண்ணியதைவிட மேலெழுந்துவிட்டதை தேவயானி கண்டாள். முற்றத்தில் எவரும் விளக்குகளை வைத்திருக்கவில்லை என்பதனால் நிலவொளி ஈரத்தண்மையுடன் படிந்து குழல்களையும் ஆடைகளையும் ஒளிரச்செய்தது. கண்களும் பற்களும் மின்னின. தேவயானி “நாமும் இங்கு நம் உணவை கொண்டுவந்து அமர்ந்துகொண்டிருக்கலாம்” என்றாள். “அரசியர் உடன் உணவருந்துவதென்பது குருநகரியில் ஒரு பெரிய சடங்கென்றே கொள்ளப்படுகிறது. அதற்குரியவர்கள் ஓராண்டுக்கு முன்னரே தெரிவு செய்யப்பட்டு அதற்கென பயிற்சி அளிக்கப்பட்டு வந்து சேர்வார்கள். அவ்வாறு உணவருந்தியவர்கள் அதை ஒரு தகுதியெனக் கொள்ளவும் செய்வார்கள்” என்றாள் சாயை.


அவள் குரலில் இருந்த நகையாட்டை உணர்ந்து மெல்லிய எரிச்சலுடன் “ஆம், அது ஒரு அரசுசூழ்தல் முறை. இங்கு நாம் மலைக்குடிகளென ஓரிரவை கழித்திருக்கலாம். சில தருணங்களிலேனும் கவசங்களை கழற்ற வேண்டியுள்ளது” என்றாள் தேவயானி. பேசியபடி விழிதிருப்பியவள் ஒரு கணம் திகைத்து “யார் அது?” என்றாள். “எவர்?” என்றாள் சாயை. “அவ்விளைஞர்கள்… அங்கே செல்லும் அம்மூன்று இளையோர். மூவரில் இருவரின் நடை ஒன்று போலிருக்கிறது. அது நான் மிக நன்கறிந்த அசைவு” என்றாள். சாயை “அவர்கள் இக்குடியின் இளைஞர்கள். நாளை அவர் எவரென்று உசாவுவோம்” என்றாள்.


“அல்ல, அவர் இக்குடியினர் அல்ல” என்று கூர்ந்து நோக்கியபடி தேவயானி சொன்னாள். “மலைக்குடியினர் அனைவருக்கும் தனித்த நடையும் அசைவும் உள்ளன. இம்மலைச்சரிவில் பாறைகளினூடாக நடப்பதனாலாக இருக்கலாம். மரங்களில் தொற்றி அலைவதனால் உருவான தோளசைவுகள் அவை. அவர்கள் இங்கு வேட்டை விலங்குகள்போல் சூழலைக் கூர்ந்து எண்ணி காலெடுத்து நடக்கிறார்கள். இவர்கள் நிகர்நிலத்து ஊர்களில் வளர்ந்தவர்கள்” என்றாள். மீண்டும் விழிகூர்ந்து “நான் நன்கறிந்த அசைவு. நன்கறிந்த நடை” என்றபின் “அது அரசரின் நடை” என்றாள்.


“என்ன சொல்கிறீர்கள், அரசி?” என்று சாயை கேட்டாள். “ஆம், ஒளியில் அவர்களைப் பார்த்திருந்தால் இவ்வசைவு அத்தனை துலக்கமாக தெரிந்திருக்காது. நிழல் என அசைவு மட்டுமேயாகி செல்கிறார்கள். அது நன்றாக காட்டிக் கொடுக்கிறது. அவர்களில் மூத்த இருவரின் நடையும் அசைவும் நமது அரசர் யயாதிக்குரியவை” என்றாள் தேவயானி. “அவர்களை அழைத்து வா” என்றாள். சாயை அப்பால் நின்றிருந்த மலைக்குடி இளைஞன் ஒருவனை அருகழைத்து தொலைவில் ஒருவரோடொருவர் பேசிச் சிரித்தபடி சென்றுகொண்டிருந்த அந்த மூவரையும் சுட்டிக்காட்டி அவர்களை அழைத்து வரும்படி சொன்னாள்.


“ஐயமே இல்லை” என்றாள் தேவயானி. “ஐயம் வில்லிலிருந்து விடுபட்ட அம்பு, வழியில் தடுத்து நிறுத்தஇயலாது” என்றாள் சாயை. “என்ன சொல்கிறாய்?” என்று அவள் சீற்றத்துடன் கேட்டாள். “இந்த ஐயம் அசோகவனிக்கு வருவதற்கு முன்னரே இருந்தது உங்களுக்கு.” தேவயானி “என்ன சொல்கிறாய்?” என்று மீண்டும் உரத்த குரலில் கேட்டாள். “ஏனெனில் நீங்கள் உங்களை அறிவீர்கள். இங்கிருந்து நீள்தொலைவுக்கு விலகிச் சென்றுவிட்டதை அறிந்திருப்பீர்கள். அவரையும் அறிவீர்கள்” என்றாள். “கலை காமத்தை எழச்செய்கிறது.”


தேவயானி உடல் நடுங்க இரு கைகளையும் மார்பில் கட்டிக்கொண்டு விழிநிலைத்து அணுகிவரும் அவ்விளைஞர்களை நோக்கினாள். மூவரும் அவள் அருகே வந்து முறைமைப்படி இடைவளைய வணங்கி நின்றனர். மூத்தவனிடம் “நீங்கள் யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?” என்றாள். மூத்தவன் “என் பெயர் திருஹ்யூ. இவர்கள் என் இளையோர். இவன் அனுதிருஹ்யூ, மூன்றாமவன் புரு. நாங்கள் அசோகவனியின் சேடியாகிய சர்மிஷ்டையின் மைந்தர்” என்றான். “உங்கள் தந்தை எவரென்று அறிவீர்களா?” என்று தேவயானி கேட்டாள்.


மூத்தவன் நாவெடுப்பதற்குள் முந்திக்கொண்டு “ஆம், அறிவோம்” என்று புரு மறுமொழி சொன்னான். “அவர் குருநகரியின் அரசர் யயாதி.” தேவயானியிடம் சிறு மாறுதலும் உருவானதாக உடல் காட்டவில்லை. சாயை அவள் மேலும் சொல்லெடுப்பதற்காக காத்து நின்றாள். தேவயானி மிக இயல்பான குரலில் “அதை உங்கள் அன்னை சொன்னார்களா?” என்றாள். “ஆம், ஆனால் அதைவிட நாங்களே தெளிவாக உணர்ந்திருந்தோம். எங்கள் அன்னையைப் பார்ப்பதற்காக அரசர் வந்து அசோகவனியின் காவலர் மாளிகையில் தங்குவதுண்டு. நாங்கள் அங்கிருந்து கிளம்புவதற்கு ஒருநாள் முன்னர்கூட வந்திருந்தார். உடன் அவரது அணுக்கத்தோழர் பார்க்கவனும் இருந்தார்.”


தேவயானி தலையசைத்தபோது அவள் இரு குழைகளும் ஆடி கன்னங்களை தொட்டன. சாயை அவர்கள் செல்லலாம் என்று கையசைத்தாள். அவர்கள் திரும்பியதும் தேவயானி “பொறுங்கள்” என்றாள். புரு திரும்பிப் பார்த்தான். தேவயானி இரு கைகளையும் விரித்து தலையசைத்து அவனை அருகே அழைத்தாள். அவன் ஐயுற்று நிற்க அவள் புன்னகை செய்து “நான் உங்கள் தந்தையின் முதல் மனைவி. உனது அன்னை… வருக!” என்றாள். தயங்கியபடி அருகே வந்த அவனுடைய மெலிந்த தோளில் கைவைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டு வலக்கையால் அவன் குழலை வருடி “உன் பெயர் புரு அல்லவா?” என்றாள்.


“ஆம், அரசி” என்றான் புரு. “அன்னையே என்று சொல்க!” என்றாள். “ஆம், அன்னையே” என்றான் புரு. “அது உங்கள் மூதாதை புரூரவஸின் பெயர் என்று அறிவாயா?” என்றாள். “ஆம், அறிவேன்” என்றான் புரு. “அன்னை என என் பாதங்களைப் பணிக!” என்றாள் தேவயானி. அவன் குனிந்து அவள் கால்தொட்டு சென்னிசூட “நலம் திகழ்க! வெற்றியும் புகழும் விளங்குக! காலத்தில் படரும் கொடிவழி அமைக!” என்று தேவயானி அவன் தலையில் கைவைத்து வாழ்த்தினாள். பிற இருவரும் வந்து அவள் கால்களைத் தொட்டு வணங்கினர். அவள் அவர்கள் தலையில் கைவைத்து வாழ்த்தினாள்.


சாயையிடம் “இவர்களுக்கு பரிசுகள் அளிக்கவேண்டியிருக்கிறது” என்றாள். சாயை ஆணையேற்று குடிலுக்குள் சென்றாள். தேவயானி இரு கைகளையும் விரித்து மூன்று மைந்தரையும் தன் உடலுடன் அணைத்துக்கொண்டாள். திருஹ்யூவின் தோள்களைத் தொட்டு “உங்கள் அன்னையின் தோள்கள் போலிருக்கின்றன. மைந்தா, அரசகுடிப்பிறந்தவர்கள் ஒருபோதும் வலுவற்ற உடல் கொண்டிருக்கலாகாது. உள்ளம் உடலை தான் என பதித்து வைத்துக்கொள்ளும். உடலின் வலுவின்மையை அது தானும் நடிக்கும். நன்கு உடல் தேறுக!” என்றாள். “ஆம், அன்னையே” என்று அவன் தலைவணங்கினான். அனுதிருஹ்யூவிடம் “மூத்தவனுடன் எப்போதும் இரு, மைந்தா. ராகவராமனின் உடன் அமைந்த இளையவனைப்போல” என்று அவள் சொன்னாள். அவன் வணங்கினான்.


புரு “தாங்கள் எங்களை ஒடுக்கக்கூடுமென்று அஞ்சினோம், அன்னையே” என்றான். அவள் அவன் விழிகளை நோக்கி “உண்மையிலேயே அவ்வச்சம் இருந்ததா?” என்றாள். அவன் “தாங்கள் அணித்தேரிறங்கி வருகையில் நேரில் கண்ட கணமே அது முற்றிலும் விலகியது. தாங்கள் பேரன்னை. அவ்வாறன்றி பிறிதெவ்வகையிலும் அமைய முடியாதவர். ஆகவேதான் நான் உணர்ந்த உண்மையை உங்களிடம் சொன்னேன்” என்றான். “அது நன்று. அன்னையிடம் பொய் சொல்லலாகாது என்று நீ எண்ணியதை உணர்கிறேன்” என்றாள் தேவயானி. “நீ வெல்பவன். உன் கொடிவழியினர் என்றும் உன்னை வழிபடுவர். பாரதவர்ஷத்தில் உன் குருதி பெருநதியென கிளைவிரிந்து பரவும்” என்றாள்.


சாயை உள்ளிருந்து மூன்று மணிமாலைகளையும் அரசக் கணையாழிகளையும் எடுத்து வந்தாள். அவற்றை தேவயானி அவர்களிடம் கொடுத்தாள். திருஹ்யூ “இவற்றை நாங்கள் அணிகையில்…” என்று தயங்கியபடி சொல்லத் தொடங்க “ஆம், நீங்கள் எவரென்ற வினா எழும். யயாதியின் மைந்தர், குருகுலத்து இளவரசர் என்றே சொல்லுங்கள்” என்றபின் சாயையிடம் “கிருபரிடம் கூறுக! இவர்கள் குருநகரியின் இளவரசர்கள். சூதர்களுக்குரிய கல்வியும் அடையாளங்களும் இனி இவர்களுக்கு இருக்கலாகாது” என்றாள். அவள் தலைவணங்கி “அவ்வாறே, பேரரசி” என்றாள். தேவயானி அவர்களிடம் “செல்க, நாம் மீண்டும் சந்திப்போம்” என்றாள். அவர்கள் மீண்டும் அவள் கால்தொட்டு வணங்கி விடைகொண்டனர்.


tigerகுடிலுக்குள் சென்றதுமே தேவயானி உடலசைவுகள் மாற பிறிதொருத்தி என்றானாள். அரவென சீறித்திரும்பி தன்னைத் தொடர்ந்து உள்ளே வந்த சாயையிடம் “உனக்குத் தெரிந்திருக்கிறது” என்றாள். “ஆம், முன்னரே தெரியும்” என்று சாயை சொன்னாள். “அவளுக்கு முதற்குழந்தை பிறந்ததுமே கண்காணிக்கத் தொடங்கினேன். அரசர் இங்கு வந்து தங்கிச் செல்லும் ஒவ்வொரு தருணத்தையும் நன்கு அறிந்திருந்தேன்.” தேவயானி உரத்த குரலில் “நீ இதை ஏன் என்னிடம் சொல்லவில்லை? என் நலனுக்காக என்று பொய் சொல்லமாட்டாய் என்று எண்ணுகிறேன்” என்றாள்.


“சொல்ல வேண்டாம் என்று தோன்றியது. உங்கள் நலனுக்காக அல்ல” என்றாள் சாயை. “ஏன்?” என்றாள் தேவயானி. “என் வஞ்சத்துக்காக” என்று சாயை சொன்னாள். தேவயானி திகைத்து பின் மீண்டு உடைந்த குரலில் “நான் உன்னை நம்பினேன். உன்னை என் ஒரு பகுதியென எண்ணினேன்” என்றாள். “உங்கள் ஒரு பகுதியாக இருப்பதனால்தான் சொல்லவில்லை. ஏனென்றால் உங்கள்மேல் நச்சுமிழ விரும்பினேன்” என்றாள். “முற்றிலும் உங்களுக்கு படைக்கப்பட்ட உள்ளம் கொண்டவள் நான். ஆனால் என்னுள் இவ்வஞ்சத்தின் நச்சுப்பல் இருந்துகொண்டே இருந்தது.”


“துயில்கையில் பலமுறை உடைவாளை உருவி உங்கள் கழுத்தில் பாய்ச்ச வேண்டுமென்று எண்ணியிருக்கிறேன். பின்னர் அறிந்தேன், இது இன்னும் கூரிய உடைவாள். இன்னும் குளிர்ந்தது, குருதி சிந்தாதது, அமைதியானது. எனவே இதை தேர்வு செய்தேன்” என்றாள் சாயை. அவள் விழிகளில் தெரிந்த வெறுப்பைக் கண்டு அஞ்சி தேவயானி பின்னடைந்தாள். “ஏன் இதை செய்தாய்?” என எழாக் குரலில் கேட்டாள்.


அவளை அசையா விழிகளுடன் நோக்கி சாயை அணுகிவந்தாள். “என்னை அறியமாட்டீர்களா, அரசி? என்னையன்றி நீங்கள் நன்கறிந்த எவருளர்?” அவள் மூச்சுக்காற்று தேவயானிமேல் நீராவியுடன் பட்டது. “நான் வேங்கை. கசனின் குருதிச் சுவையை அறிந்தவள். உனது குருதிச் சுவையையும் அறிய வேண்டாமா?” சன்னதமெழுந்த வாயிலிருந்து கிளம்பும் தெய்வக்குரல் போலிருந்தது அவள் உரை.


தேவயானி மேலும் பின்னடைந்து பீடத்தில் முட்டி, சுவரை நோக்கிச் சென்று சாய்ந்து நின்றாள். “நிழல் கருமையாக இருப்பதே தெய்வ ஆணை” என்றாள் சாயை. “நிழல் எழுந்து உருவை விழுங்கும் தருணம் ஒன்றுண்டென்று உணர்க! நீ சென்று நின்ற உச்சம். அசோகவனிக்குள் நுழைவதற்கு முன் அதை நீ உணர்ந்திருந்தாய். ஆனால் உன்னுள் ஒன்று வீழ்ச்சியடைய விழைந்தது. விந்தை அது, அழிவதற்கு மானுடர் கொள்ளும் விழைவு. தங்கள் நெஞ்சிலேயே ஈட்டியை பாய்ச்சிக்கொள்கையில் அவர்கள் கொள்ளும் உவகை.” அது உளமயக்கா கனவா என தேவயானி வியந்தாள். தன் கால்கள் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்ததும் உடலை இறுக்கி விழாமலிருக்க முயன்றாள்.


“என் கடன் அவ்வுச்சத்திலிருந்து இழுத்து உன்னை இருள் நிறைந்த ஆழங்களுக்குத் தள்ளுவது. இது அத்தருணம்” என்றாள் சாயை பிறிதெங்கோ இருந்து என ஒலித்த குரலில். தேவயானி இரு கைகளும் நடுங்க எதையாவது பற்றிக்கொள்ளத் துழாவி மீண்டுவந்த கைகளை ஒன்றோடொன்று சேர்த்து நெஞ்சோடு அழுத்திக்கொண்டு திறந்த வாயுடனும் ஈரம் நிறைந்த விழிகளுடனும் சாயையை நோக்கி நின்றாள்.


“இப்போது உன்னுள் கொதிக்கும் நஞ்சனைத்தையும் உமிழ்ந்து ஒழிக! அதன் பின்னரே உனக்கு மீட்பு” என்ற சாயை தன் கைகளை கழுத்துக்குப் பின் கொண்டுசென்று அணிந்திருந்த மணியாரத்தின் பட்டு நூல் முடிச்சை இழுத்து அறுத்து வீசினாள். கூரையிலிருந்து நாகக்குழவி விழுந்ததுபோல அது தரையில் நெளிந்து கிடந்தது. சரப்பொளி ஆரத்தையும் கண்டமாலையையும் மேகலையையும் அறுத்து மணிகளும் காசுகளும் சிதற நிலத்தில் எறிந்தாள். கடகங்களையும் வளையல்களையும் சிலம்புகளையும் கழற்றியிட்டாள். இடையணிந்த பொன்னூல்பின்னிய பட்டு நூலாடையையும் களைந்தபின் அங்கிருந்த பேழையொன்றின் மீது கிடந்த மரவுரி மேலாடையை எடுத்து இடைசுற்றி அணிந்தபின் “நான் செல்கிறேன். மீண்டும் நாம் காண ஊழிருந்தால் அது நிகழ்க!” என்றாள்.


அவள் திரும்பியதும் தேவயானி கைகள் காற்று உலைக்கும் மரக்கிளைகள் என பதறிச் சுழல உடைந்த குரலில் “உன்னை கொல்வேன். உன் தலைகொய்து உருட்டுவேன். இழிமகளே… உன்னை கழுவேற்றுவேன்” என்றாள். சாயை திரும்பி புன்னகையுடன் “என்னை உன்னால் எதுவும் செய்ய முடியாது. நான் உன் மறுபாதி” என்றபின் வெளியே இறங்கி இருளில் அமிழ்ந்து மறைந்தாள். அவளைத் தொடர்ந்து ஓடிச்சென்று வாயில்சட்டத்தில் கைபற்றி நின்று வெளியே நோக்கிய தேவயானி அவள் முற்றத்தில் காற்றில் சருகுகளென சுழன்று உலைந்து அலைகொண்டிருந்த தலைகளுக்கு நடுவே புகுந்து அறிய முடியாதபடி கடந்து மறைவதைக் கண்டாள்.


tigerசில கணங்களுக்குப்பின் மீண்டு உடல் எடை மிகுந்தவள்போல தள்ளாடி மெல்ல நடந்து மஞ்சத்தை சென்றடைந்தாள். அதன் இழுபட்ட கயிறுகள் முனகும்படி விழுந்து இறகுத் தலையணையில் முகம் புதைத்துக்கொண்டாள். அவள் உடல் துள்ளி விழுந்தது. உள்ளங்கால்கள் இரண்டும் அனலில் நின்றவை போலிருந்தன. பின் உள்ளங்கைகளும் எரியத் தொடங்கின. நாவும் மூச்சும் கண்களும் அனலென கொதித்தன. தழலெழுந்து வயிற்றை நெஞ்சை உருக்கி பற்றி எழுந்தாடத் தொடங்கியபோது முற்றிலும் காலம் இல்லாதாயிற்று.


அவள் தன்னை உணரத் தொடங்கியபோது களைத்து கைகளும் கால்களும் தனித்தனியாக உதிர்ந்து கிடக்க சித்தம் கம்பத்தில் கொடியென தனித்து படபடத்தது. கொடி கிழிந்துவிடுவதுபோல் துடித்தது. நெய்யில் சுடரென தனித்தெழுந்து வெறும்வெளியில் நின்று தவித்தது. தலையை இரு பக்கமும் அசைத்தபோது கண்கள் பெருகி வழிந்து காதுகளை அடைந்திருப்பதை உணர்ந்தாள். ஓங்கி அறைந்து நெஞ்சை உடைக்கவேண்டும் என்று வெறிகொண்டாள். ஆனால் இமைகளை அசைப்பதற்குக்கூட எண்ணத்தின் விசை எதுவும் எஞ்சியிருக்கவில்லை.


அந்த இரவு தன்னை என்ன செய்கிறதென்று அவளால் உணர முடியவில்லை. பளிங்குக் கலம் விழுந்து உடைந்து பல நூறு துண்டுகளானதுபோல் உள்ளம் வெறும் சொற்களின் தொகையாக இருந்தது. ஒன்றோடொன்று இணையாதபோது சொற்கள் முற்றிலும் பொருளற்றிருந்தன. பொருள் தேடி அவை ஒன்றையொன்று முட்டி மோதி குழம்பின. அந்த ஒழுங்கின்மையின் வலி தாளாமல் அவள் எழுந்தமர்ந்தாள். குடிலுக்குள் உலவினாள். சாளரத்தினூடாக குருதிநிறைந்த தாலமென எழுந்துவந்த நிலவை பார்த்தாள். முற்றமெங்கும் எழுந்தமர்ந்து விளையாடியும் உண்டும் குடித்தும் களித்துக்கொண்டிருந்த மக்களை நோக்கினாள். காட்சிகளில் உளம் பொருளேற்றாவிட்டால் அவற்றுக்கு ஒன்றுடனொன்று தொடர்பும் இசைவுமில்லை என்று அறிந்தாள்.


மீண்டும் வந்து சேக்கையில் படுத்து முகத்தை புதைத்துக்கொண்டாள். உடல்நோய் எளிது, நோயுறா உடல்பகுதியால் நோயை வெல்ல முயலலாம். உள்ளம் நோயுறுகையில் நோயே உள்ளமென்றாகிவிடுகிறது. இச்சொற்கள் அனைத்தையும் ஒன்றோடொன்று பொருள் கொள்ளும்படி இணைத்துவிட்டால் மட்டும் போதும். உள்ளமென்ற ஒன்று மீண்டு வந்தால் போதும். ஆனால் ஒரு சொல்லை பற்ற முயல்கையில் ஒரு நூறு சொற்கள் கிளைகளிலிருந்து எழுந்து கலைந்து கூச்சலிட்டு சுழன்று பறந்தன. பற்றிய சொல் வெறித்த விழிகளுடன் செத்துக் குளிர்ந்திருந்தது.


இவ்விரவை தான் கடக்கவே போவதில்லை என்று தோன்றியது. ஆடைகள் அணிகள் அனைத்தையும் கழற்றிவிட்டு வெறுமொரு விலங்கென இவ்விருளில் பாய்ந்து திசை எல்லைவரை ஓடினால் இவையனைத்திலிருந்தும் விடுதலை பெறக்கூடும். அந்த முடிவின்மையின் பொருளிலாமை அளித்த அச்சம் பெருகி திரும்பி வந்து ஊருக்குள் இல்லத்திற்குள் உடைகளுக்குள் புகுந்துகொள்ளச் செய்தது. நானென்பது ஓர் இன்மை என உணர்வதே துயரத்தின் உச்சம். அவ்வின்மையின்மேல் சூடிக்கொண்டவையே பெயர், குலம், தன்னிலை, ஆணவம், உடல், அணிகள், உறவுகள் அனைத்தும்.


ஏன் இத்தனை துயருறுகிறேன்? இழந்தது எதை? எண்ணியிரா வஞ்சத்தை முன்னரும் சந்தித்திருக்கிறேன். புழுதியென சருகென உதிர்க்கப்பட்டிருக்கிறேன். ஆணவமென ஒரு துளியும் எஞ்சாது கவிழ்ந்து தரையில் சிந்திய அழுக்குக் கீற்றென கிடந்திருக்கிறேன். அவ்வின்மையிலிருந்துதானே முளைத்தெழுந்தேன்? பின்னர் வென்றடைந்து அள்ளிச் சுற்றிக்கொண்ட அனைத்தும் அவ்வெறுமையின்மீது அமைந்தவையே என்று உள்ளூர அறிந்திருந்தேன் அல்லவா? இவையனைத்தும் உதிர்ந்து மீண்டும் அந்த வெறுமைக்குச் செல்லும்போது நான் இழப்பதென்ன?


இழப்பல்ல, தோற்கடிக்கப்படுதல். முற்றாக வீழ்த்தப்படுதல். முழுத் தோல்வியில் இருந்து மீண்டு எழுவது எளிதல்ல. ஆணவத்தை ஆயிரம் மடங்கு பெருக்கி எழுந்து மண்ணில் ஆழ வேரூன்றி விண்ணைப்பற்றி முகில்தொட்டு உலாவும்படி தலைதூக்கி நிற்கவேண்டியிருக்கிறது. அங்கிருந்து மீண்டும் சரிவதென்பது பெருவீழ்ச்சி. எதை இழந்தேன்? இத்தருணத்தில் அரசனென அமர்ந்திருக்கும் அவனை சிறைபிடித்து கழுவிலேற்ற என்னால் ஆணையிடமுடியும். அவை நடுவே நிற்கச் செய்யலாம். காடேகும்படி சொல்லலாம். இல்லை, அவை இயல்வதல்ல என்று அவள் உள்ளம் அறிந்திருந்தது. தன் மைந்தருக்குத் தந்தை என்பதனால், குருநகரியின் சந்திரகுலத்துக் கொடிவழியின் குருதி என்பதனால்.


நான் அடைந்ததனைத்தும் அவன் உவந்து அளித்ததே என்று அறிந்துகொண்டதே இத்தருணத்தின் தோல்வியா? அவன் அளிக்காத ஒன்றும் என்னில் எஞ்சவில்லை என்று எண்ணும் தன்னிரக்கமா? உயிரை மாய்த்துக் கொள்ளலாம். அது இத்தருணத்தின் தோல்வியை மீண்டும் வலியுறுத்துவது. இப்புள்ளியிலிருந்து சீறி மேலெழுவது எப்படி? இக்கணத்திலிருந்து விண்ணளாவ எழுவது எப்படி? இனி ஒளி உண்டு வளர இயலாது. இருள் குடித்து மண்ணுக்குள், பாதாளங்களில் விரிவதே வழியென்றாகும். பெருவஞ்சமே சுக்ரரின் மகளுக்கு தெய்வங்கள் வகுத்ததென்பதாகும்.


தெய்வங்களே, மூதன்னையரே, எத்தனை வெறுக்கிறேன்? கடுங்கசப்பன்றி ஒரு சொல் இல்லை. இத்தனை தொலைவுக்கு ஓர் உயிரை பிறிதொன்று வெறுக்கலாகுமா? தெய்வங்கள் சினக்குமோ? ஆனால் செய்வதொன்றுமில்லை. என்றும் அவனை வெறுத்துக்கொண்டுதான் இருந்தேன். என் உடலை கைப்பற்றியவன். என் உடலை அவன் ஆள்கையில் உள்ளிருந்த கசப்பு நொதித்து நுரைத்து பெருகியது. அவனுக்கு நான் என்னை அளித்தேன்? அன்று என் அகம் களித்திருந்தது. இவனை ஒரு கணமும் விரும்பியதில்லை. அதனால்தானா? ஆம், அதனால்தான். தன் உடல்வெம்மை சேக்கையை கொதிக்கச்செய்வதை உணர்ந்து எழுந்தமர்ந்தாள். எழுக இருள்! எழுக நஞ்சு! எழுக ஆழுலகங்கள்! இரு கைகளின் நகங்களும் கைவெள்ளையை குத்திக்கிழிக்க பற்கள் உதடுகளில் குருதியுடன் இறங்கின.


புற்றுவாய் திறந்தெழும் ஈசல்களென என்னிலிருந்து கிளம்பி இவ்வறை நிறைத்து சுழன்று பறந்து சிறகுதிர்ந்து ஊர்ந்துகொண்டிருக்கும் இவ்வெண்ணங்கள் எவை? ஒவ்வொரு தருணத்திலும் மானுட உள்ளத்தில் எண்ணங்களைப் பெய்யும் தெய்வங்கள் விழி அறியாதபடி சுற்றிலும் காத்து நிற்கின்றன. முன்பு இத்தருணத்தை எதிர்கொண்ட மானுடர் நுரைத்து பெருக்கி இங்கு விட்டுச்சென்ற சொற்களா இவை? என்றும் இங்குள்ளனவா? மானுடர் பிறந்து வந்து இவற்றில் பொருந்தி பின் விலகி மறைகின்றார்களா? நதியென காற்றென கடலென மலைகள் என இச்சொற்கள் முடிவிலி வரை இருந்துகொண்டிருக்குமா என்ன?


அவள் தன்னினைவு அழிய விரும்பினாள். மது அருந்தலாம். அகிஃபீனாவுக்கு ஆணையிடலாம். கிருபரை அழைத்துச் சொன்னால் விரைவிலேயே அவை இங்கு வரும். ஆனால் அவள் இருக்கும் நிலை அவர்களுக்கு தெரிந்துவிடும். மூவரையும் இளவரசர்கள் என அவள் அறிவித்துவிட்டதை இப்பொழுது குருநகரியின் அகம்படியினரும் காவலரும் அறிந்திருப்பார்கள். இவ்விரவு முழுக்க அவர்கள் அதைப்பற்றித்தான் பேசி சலிக்கப்போகிறார்கள். அனைத்தையும் களைந்து வெறும் பெண்ணென அவர்கள் முன் சென்று நிற்பது என்பது சுட்டுப்பழுத்த வாள் ஒன்றை நெஞ்சில் தைத்துக்கொள்வதற்கு நிகர். பிறிதொன்றில்லை. இவ்விரவுதான்… இதைக் கடப்பதொன்றுதான் வழி. அந்தக் கீழெல்லையில் ஒரு கீற்றுஒளி எழுவது வரைதான்.


ஒழுக்கு எத்தனை எடைகொண்டதாக ஆயினும், கணங்கள் சுட்டுப்பழுத்து வெம்மை கொண்டிருப்பினும், சென்றவையும் வருபவையும் குருதி சுவைக்கும் முட்பெருக்கென்று சூழினும் காலத்தால் நின்றுவிட முடியாதெனும் அருளைக் கொண்டுள்ளது மானுடம். கணம் பிறிதொரு கணம் மீண்டும் ஒரு கணம் என அது உருண்டு முன்சென்றே ஆகவேண்டும். அள்ளி தானளிக்கும் அனைத்தையும் இறந்தகாலம் என்று ஆக்கியே ஆகவேண்டும். தேர் கடந்து சென்றபின் நிலைத்திருக்கும் திறன் புழுதிக்கு இல்லை.


வெளியே முற்றத்திலிருந்து ஒவ்வொருவராக எழுந்து கடந்து சென்றனர். சூழ்ந்திருந்த குடில்களில் விளக்குகள் அனைத்தும் அணைந்தன. மறுஎல்லையில் மேடைப்பணியின் குறை தீர்க்கும் தச்சர்களின் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. பேச்சுக்குரல்கள், மரை திருகும் ஒலிகள். அங்கிருந்து நெய்விளக்குகளின் ஒளி செந்நிறக் கசிவாக பரந்து முற்றத்து மண்ணில் நீண்டிருந்தது. ஒளியை அங்கு சென்று தொட்டு காலால் கலைக்க முடியுமென்பதுபோல. இப்பெருவலியை நானே எனக்கு அளித்துக்கொள்கிறேன். ஆணவம் மிக்கவர்கள் தங்களை துன்புறுத்துவதில் பெருந்திறன் கொண்டவர்கள்.


எத்தனை இனிது குருதிச் சுவை? தன் குருதிச் சுவை. தன் சிதைச் சாம்பலைத் தொட்டு நெற்றியிலிடும் வாய்ப்பு ஒருவனுக்கு அளிக்கப்படுமென்றால் அவனடையும் பெருநிறைவுதான் என்ன? பேரரசி இங்கு இறந்தாள். வெளியே சென்று அப்பெருமுரசின் முழைதடி எடுத்து மும்முறை முழக்கி உலகுக்கு அறிவிக்க வேண்டும் அதை. இம்மேடையில் இதுவரை நடந்த நாடகம் முடிவுக்கு வருகிறது. பெருநதி மீண்டும் ஊற்றுக்குத் திரும்புவதுபோல சுக்ரரின் சிறு குடிலுக்குச் சென்று அமையவேண்டும். அங்கு அவள் விட்டு வந்த இளமை காத்திருக்கக்கூடும். கற்று நிறுத்திய காவியத்தின் இறுதிச்சொல்லும் நுனி துடித்து காத்திருக்கக்கூடும்.


கிளம்புவதொன்றே வழி. உளம் உளத்தின்மேல் செலுத்திய பெருவிசையாலேயே அவள் களைப்புற்றாள். மஞ்சத்தில் சென்று படுத்தபோது ஒன்றோடொன்று முட்டிக்கொண்ட நூறு சொற்றொடர்கள் இறுகி அசைவிழந்து நின்றன. பின் அவள் உளநெருக்கடி மட்டுமே அளிக்கும் ஆழ்துயிலில் அமிழ்ந்தாள்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–79
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–82
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–81
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–80
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–77
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–69
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–68
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–67
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–66
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–65
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–64
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 75
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 47
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–78
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–75
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–74
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–73
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–72
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–63
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–62
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2017 11:30

April 22, 2017

பிறந்தநாள்

பவா


 


 


இன்று காலையிலிருந்தே மின்னஞ்சல்கள், அழைப்புக்கள்.இம்முறை வாழ்த்துச்சொன்னவர்களில் எனக்கு முற்றிலும் அறிமுகமற்றவர்களே அதிகம். ஆச்சரியமென்னவென்றால் தேவதேவன் கூப்பிட்டு வாழ்த்து சொன்னார். ‘ஜெயமோகன், மனுசங்க பிறந்ததை எல்லாம் கொண்டாடுறாங்க தெரியுமா?’ என நினைக்கும் உலகைச்சேர்ந்த ஆத்மா. ஆச்சரியம்தான்.


 


நானே தேவதச்சனைக் கூப்பிட்டு நாளை நிகழவிருக்கும் அவருடைய படைப்புக்கள் பற்றிய கருத்தரங்குக்கு வாழ்த்துக்களைச்சொல்லி எனக்கு வாழ்த்துக்களைக் கோரிப் பெற்றுக்கொண்டேன்.


 


பிறந்தநாளுக்கு பெரிதாகக் கொண்டாட்டமெல்லாம் இல்லை. இம்முறை நான் வீட்டிலிருந்தமையால் அருண்மொழி சர்க்கரைப்பொங்கல் செய்திருந்தாள். காலை எழுந்ததும் அதை சாப்பிட்டேன். செய்தித்தாள்கூட வாசிக்காமல் படுத்து உடனே தூங்கிவிட்டேன். நெய்மயக்கம் என்று அதை எங்களூரில் சொல்வார்கள்.


shy

ஷைலஜா


 


வெளியே ஒரே சத்தம். யாரோ வந்து என் வீட்டு வாசலில் நின்றிருக்கும் பேச்சொலி. என் செல்பேசிக்கு ஒரு சிக்கல், வேகமாக வைத்தால் சுவிட்ச் ஆஃப் ஆகிவிடும். வேறொன்று வாங்கவேண்டும். ஆனால் நான் வைத்திருப்பது நோக்கியா சாதாரண மாடல். அதை மீண்டும் கண்டுபிடிப்பது கடினம்.


 


எழுந்து  நோக்கினால் பவா செல்லத்துரை. கிட்டத்தட்ட பதினாறுபேர் வந்திருந்தார்கள் அவருடன். ஷைலஜா, ஜெயஸ்ரீ ,வம்சி ,மானசி ,சுஹானா என பெரிய கூட்டம். இங்கே புத்தகக் கண்காட்சி நடந்து நேற்றோடு முடிகிறது. தலைமையுரை ஆற்ற பவா வந்திருந்தார். விகடன் ஊழியராக இருக்கும் ராம் ஏற்பாடுசெய்திருந்தார்


 


பிறந்தநாள் அதுவுமாக காலையில் குளிக்கவில்லை. ஷேவ் செய்யவில்லை. தூக்கக் கலக்கம். ஒரு நல்ல சட்டை போடலாமென்றால் பீரோ சாவி எங்கே என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆனால் உற்சாகமாக இருந்தது. ராம் ஒரு கேக் வாங்கிவந்தார். அதை வெட்டினேன்.


 


நான் பிறந்தநாள் கேக்கே வெட்டியதில்லை. எங்களூரில் சாஸ்தா, யக்‌ஷி கோயில்களில் ’வழிபாடு’ அளிப்பதே பிறந்தநாள் கொண்டாட்டம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சாஸ்தா. எனக்கு அளப்பங்கோடு கண்டன் சாஸ்தா. அவர் மாடு கன்று விலங்குகளுக்கு உரிய தெய்வம். யானைகளுக்கு விசேஷமாக. அங்கே விறகு பச்சரிசி வெல்லத்துடன் சென்று பொங்கலிட்டு வணங்கி வருவோம்.


jeya

ஜெயஸ்ரீ


 


வளர்ந்தபின் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை. பிள்ளைகளுக்காக கேக் வெட்டுவோம். நான்தான் வெட்டுவேன்.நானே சாப்பிடவும் செய்வேன். முதல்முறைக் கேக் வெட்டியபோது கூச்சமாகத்தான் இருந்தது. வீட்டில் அருண்மொழி இல்லை. பால் இருந்தது, ஆனால் டீயெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.


 


மதியம் வரை தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொன்னேன். பின் ஒரு நீண்ட தூக்கம். மாலை ஐந்துமணிக்கு அருண்மொழி வந்தாள். நானும் அவளும் அஜிதனும் கிளம்பி புத்தகக் கண்காட்சி சென்றோம். நான் தேவிபாகவதம் வாங்கினேன். அஜிதன் ‘சென்னை மாதிரி வெளியே நிருபர்கள் நின்னுட்டு என்ன புக் வாங்கினீங்கன்னு கேட்டா காமெடியா போயிரும்” என்றான்.


 


ஆனால் அறிவுஜீவி என்பவன் சம்பந்தமில்லாத புத்தகங்களை வாங்குபவன்தான். நான் ஒருமுறை புத்தகக் கண்காட்சியில் கட்டைப்பை நிறைய புத்தகங்களை வாங்கிக்கொண்டு சுஜாதாவை பார்க்கச்சென்றேன். “என்ன புக்?” என்று ஆர்வமாகக் கேட்டார். ஒவ்வொன்றாக எடுத்துப்பார்த்தார். போகர்மருத்துவம், ரசவாதம், சங்க இலக்கியத்தில் தாவரங்கள், வேர்ச்சொல் அகராதி என கலவையான புத்தகங்கள்.


uthaya

உதயகுமார்


 


சுஜாதா முகம் மலர்ந்து “அட அட…இதைத்தான் நான் சொல்லிட்டே இருக்கேன். இண்டெலக்சுவல்னா வினோதமா எதையாவது வாசிக்கணும்… ஒருத்தர் கையிலே பனிக்கோடாரி மாதிரி நினைக்கவே முடியாத ஒரு புத்தகம் இருந்தாத்தான் அவர் வேற ஆளுன்னு அர்த்தம்’. நான் வைத்திருந்த அடிப்படைஹோமியோபதி, தமிழ்நாட்டுக்கொலைவழக்குகள் போன்ற நூல்களை அவர் ஆர்வமாக எடுத்துக்கொண்டார்.


 


விழாவில் ஷைலஜா சிறப்பாகப் பேசினார். முன்னுரை, வரவேற்புரை அளித்தவர்கள் ஆளுக்கு ஒருமணிநேரம் பேசியமையால் கடைசியில் சிறப்பு அழைப்பாளரான பவா பேசநேரமில்லை. இந்தமாதிரி நகைச்சுவைகள் தமிழ்நாட்டில் சாதாரணம். விழாவில் என்னையும் அருண்மொழியையும் அஜிதனையும்  மேடைக்கு அழைத்து மீண்டும் கேக் வெட்டவைத்தார்கள். ஒரு பிறந்தநாளுக்கு இரண்டு கேக்.


 


மிஷ்கின் வாழ்த்து தெரிவித்தார். அவருடைய குரலும் சிர்ப்பும்போல என்னை கவரும் பிறிதொன்றில்லை. பொங்கிக்கொண்டே இருக்கும் ஆளுமை. தன்னம்பிக்கை, மூர்க்கமான அன்பு, நேற்றும் நாளையுமில்லாத பித்து. மிஷ்கின் நாம் புனைவுகளில் மட்டுமே கண்டறியும் கலைஞனின் ஆளுமை கொண்டவர்.


mysh

மிஷ்கின்


 


பறக்கை ரோட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட   உணவகத்திற்குச் சென்று சாப்பிட்டோம். ஒரு கூட்டமே உள்ளே வந்ததில் அவர்கள் கொஞ்சம் திணறிப்போனார்கள். செயற்கை ரசாயனங்கள் இல்லாமல் தயாரிக்கப்பட்ட மீன் உணவுகள் அங்கே கிடைத்தன. சமீபத்தில் நான் சாப்பிட்ட நல்ல உணவு. [ம்கும், மல்லுக்களுக்கு மீனை தொட்டியிலிருந்து நேரடியாக எடுத்து வாயிலிட்டாலும் ருசிதான் என அருண்மொழி எண்ணிக்கொண்டதை அறிந்தேன்]சூழியல்போராளி உதயகுமார் அவர்களின் வீடு அருகில்தான். அவரும் வந்து எங்களுடன் கலந்துகொண்டார்.,


 


சாப்பிட்டு பத்தரை மணிக்கு வீட்டுத்திரும்பினேன். ஒரு முழுநாளும் பிறந்தநாள் கொண்டாட்டமாகவே முடிந்தது. இப்படி முன்னர் நடந்ததில்லை. ஆனால் நாள் அணைகையில் ஒரு நிறைவு இருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2017 12:44

நாகர்கோயிலில் வம்சி நூல் வெளியீட்டு விழா

in


 


நாளை [23- 4-2017 அன்று நாகர்கோயில் கஸ்தூரிபா மகிளா சமாஜம் அரங்கில் வம்சிபதிப்பகம் வெளியிட்டிருக்கும் ஐந்து நூல்களின் நூல்வெளியீட்டுவிழா நடைபெறுகிறது. நான் பேசுகிறேன். மாலை ஐந்து மணி


 


1


2

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2017 11:37

மலமறுத்தல்

mask


பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,


வணக்கம்.


‘மலம்’ படித்தேன்.சற்று அளவுக்கு அதிகமாகவே ‘பொங்கிவிட்டீர்கள்’ என நினைக்கிறேன்!.உண்மையான சுத்தம் சார்ந்த ஆச்சாரத்தை பேணுவதில் தவறில்லையென்றே கருதுகிறேன்.(அதை முடிந்தவரை கடைபிடிப்பவர்களையும் அறிவேன்),அதே நேரத்தில் உங்களின் பெரும்பாலான வைணவ ஆலயங்களின் மடப்பள்ளிகளை பற்றிய அவதானிப்பு நூற்றுக்கு நூறு சரி.


அன்புடன்,


அ.சேஷகிரி.




அன்புள்ள சேஷகிரி,

தவறான கருத்து வேறு ஆபத்தான கருத்து வேறு. ஆபத்தான கருத்து என்பது அடிப்படையில் மானுடவளர்ச்சிக்கே எதிரானது. ஒட்டுமொத்த மானுடச்சிந்தனையை எதிர்ப்பது. இன்று ஒருவர் தீண்டாமையை ஆதரித்து எழுதினார் ‘அது அவரது கருத்து நான் மறுக்கிறேன்’ என்பது அதற்கான பதிலாக இருக்கமுடியாது


சுத்தத்தை எவரும் வேண்டாம் என்று சொல்வதில்லை. சொல்லப்போனால் சுத்தம் குறித்த எண்ணம் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே செல்லும் ஒன்று. அதாவது. ஒருவர் எந்த அளவுக்கு நவீனமானவராக ஆகிறாரோ அந்த அளவுக்கு சுத்தம்குறித்த விழிப்புணர்ச்சி கொண்டவராவார்


சுத்தம் என்னும் இன்றைய கருதுகோள் நவீன அறிவியலால் உருவாக்கப்பட்டது என்பதையாவது நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். சுத்தம் குறித்த தன்னுணர்வு என்றும் உள்ளது. ஆனால் பாக்டீரியாக்கள் வைரஸ்கள் குறித்த சித்திரம் நவீன அறிவியலில் இருந்து நம்மை வந்தடைந்தது. மேலும் நவீன காலகட்டத்தில் நாம் பலவகையான சூழல்களில் வாழும் வாய்ப்பு வந்தபோது சுத்தம் பற்றிய எண்ணத்தை மேலும் மேலும் வகுத்துக்கொண்டிருக்கிறோம்


இக்கோணத்தில் அக்கட்டுரையாளர் செய்யும் திரிபுகளைப் பாருங்கள். ஒன்று சுத்தம் என்பதை பழைமையுடன், மரபுடன் பிணைக்கிறார். நவீன காலம் தூய்மைக்கு எதிரானது, தூய்மை அழிந்துகொண்டிருக்கிறது என்னும் சித்திரத்தை உருவாக்குகிறார். இரண்டாவதாக, சுத்தமும் ஆசாரமும் ஒன்று என்கிறார்..


ஆசாரம் என்பது சுத்தத்துடன் தொடர்புடையது அல்ல- அது அடையாளத்துடன் தொடர்புடையது. எந்தவகையான அடையாளமும் தம்மை தனித்துப் பிரித்துக்கொள்வதிலேயே சென்று முடியும். மிகையான ஆசாரம் மிகையான தனிமைப்படுத்தலாக ஆகும்.


சென்றகாலங்களில் வெவ்வேறு சாதிசார்ந்தும் தொழில்சார்ந்தும் வட்டாரங்கள் சார்ந்தும் ஆசாரங்கள் வரையறுக்கப்பட்டன. அவற்றை கடைப்பிடிக்கவேண்டும் என்னும் சமூகக் கட்டுப்பாடு இருந்தது. அதனடிப்படையில் உயர்வுதாழ்வுகள் உருவாக்கப்பட்டன. இழிவுகள் கற்பிக்கப்பட்டன.


அந்தகாலமே வேறு. அன்று மனிதர்கள் தங்கள் மிகச்சிறிய வட்டத்திற்குள் வாழ்ந்தனர். இருநூறாண்டுகளுக்குமுன் ஒரு பிராமணர் பிராமணரல்லாத ஒருவரை சந்திப்பதே வாழ்நாளில் அரிது என்னும் நிலை இங்கே இருந்தது. அன்றைய வாழ்க்கைமுறை சார்ந்தது ஆசாரம் என்பது


நவீன காலகட்டம் என்பது வாழ்க்கையின் எல்லைகளை திறந்துகொண்டே இருக்கிறது. நேர்வாழ்க்கையிலும் சிந்தனைகளிலும். அந்த புதிய யுகத்தை எதிர்கொள்ள பெருந்தடையாக இருந்தவை நூற்றாண்டுக்கால பழைமைகொண்ட ஆசாரங்கள்.


சென்ற நூற்றாண்டின் இந்திய மறுமலர்ச்சி என்பது ஆசாரங்களுக்கு எதிரான கிளர்ச்சியாகவே தொடங்கியது. குடுமியை வெட்டிக்கொள்வதில் தொடங்கி பெண்கள் கல்விகற்பது வரை அனைத்தும் ஆசாரத்தின் பெயரால் எதிர்க்கப்பட்டன. காஞ்சி சங்கராச்சாரியாரின் எழுத்துக்களைப்பார்த்தால் அவர் அத்தனை மாற்றங்களையும் ஆசாரத்தின் பெயரால் எதிர்ப்பதைக் காணலாம். மற்ற மடாதிபதிகள் அதிகம் எழுதியதில்லை, எழுதியிருந்தால் அவர்களும் அதைத்தான் சொல்லியிருப்பார்கள்.


இந்தியச்சூழலில் நவீனகாலகட்டம் நமக்கு பள்ளி, சாலை, ரயில், உணவகம் போன்ற பொது இடங்கள் உருவாகிவருவதனூடாகவே பிறந்தது. இந்த ஒவ்வொரு இடங்களிலும் அனைத்துமக்களும் கூடுவதற்கான மாபெரும் சமூகப்போராட்டங்கள் இங்கே நிகழ்ந்துள்ளன. அவை அனைத்தும் ஆசாரம் கெட்டுப்போகிறது என்றே எதிர்க்கப்பட்டன.


தீண்டாமை உட்பட ஆசாரங்களை வலியுறுத்திய அத்தனைபேரும் அதை தூய்மை என்னும் காரணம் சொல்லியே நியாயப்படுத்தியிருக்கிறார்கள். சென்றகாலகட்டங்களில் பள்ளிக்குச் சென்ற குழந்தைகளை குளிக்காமல் வீட்டுக்குச் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் – கண்ட கண்ட ஆட்களை தொட்டுவிட்டு வந்துவிடுவார்கள் என்று. அதற்கும் முந்தைய காலகட்டத்தில் உயர்சாதியினருக்கான பள்ளிகள். அதற்கும் முன் சாதிக்கொரு பள்ளி.


ஆகவே ஆசாரத்திற்குத் திரும்புதல் என்னும் குரல் எளிமையாக ‘தூய்மையாக இருத்தல்’ என்னும் பொருள் கொண்டது அல்ல.ஆசாரம் நேரடியாக தூய்மையும் அல்ல. ஆசாரமானவர்கள் தூய்மையானவர்களும் அல்ல. ஆசாரம் என்னும்பெயரில் சாதிமேட்டிமை உள்ளிட்ட பழைய வழக்கங்களை நியாயப்படுத்தும் குரலே தூய்மை எனப்பேசுகிறது.


சென்றகாலங்களில் நாராயணகுரு தன் ‘தூய்மையற்ற’ கைகளால் எப்படி சிவனை நிறுவலாம் என வாதிட்டவர்களின் குரல் இது. தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயங்களுக்குள் நுழைந்தால் தூய்மை கெட்டுவிடும் என வாதிட்டவர்களின் தரப்பு இது.


ஆசாரம், நெறி, நோன்பு,சடங்குகள் ஆகியவற்றை குழப்பிக்கொண்டுதான் சாதியாசாரத்தை நியாயப்படுத்தும் குரல் எழுப்பப் படுகிறது.ஒருவர் தனக்க்கென கொண்டிருக்கும் சில ஒழுகுமுறைகளை நெறி என்று சொல்லலாம். புலால்மறுப்போ, வெளியிடங்களில் உண்ணாமலிருப்பதோ, பருத்தியாடை அணிவதோ அவருடைய நெறி எனச் சொல்லலாம். ஏதேனும் ஒருவகையில் அத்தகைய நெறிகள் அத்தனைபேருக்கும் உண்டு. என் மனைவியால் மாட்டிறைச்சி உண்பதை எண்ணிப்பார்க்கவே முடியாது..


குறிப்பிட்ட தொழிலுக்கோ வழிபாடுகளுக்கோ அதற்கான நெறிகள் இருக்கலாம். ஆலயப்பூசகர் அசைவம் உண்ணலாகாதென்பது அவருடைய தொழில் சார்ந்த நெறி. சமணர்கள் ஊனுண்ணமாட்டார்கள் என்பது அவர்களின் மதம்சார்ந்த நெறி.


நோன்பு என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகக் கொள்ளப்படும் தன்கட்டுப்பாடு. சபரிமலைக்கு மாலைபோடுபவர்கள் சில நோன்புகளைக் கொண்டிருப்பார்கள்.


சிலவகையான தோற்ற அடையாளங்களும் அப்படிப்பட்டவையே. என் நண்பர் ஷாகுல் ஹமீது உம்ரா சென்று மீண்டபின் இஸ்லாமிய தோற்றத்தை நிரந்தரமாக்கிக் கொண்டார். அது அவருக்கு ஒரு தன்கட்டுப்பாட்டை அளிக்கிறது என்றார். நெற்றியில் நாமம் இடுவதோ நீறிடுவதோ எல்லாம் அத்தகையவை.


நெறி நோன்பு  இரண்டும் ஒருவர் தனக்கென விதித்துக்கொள்ளும் கட்டுப்பாடுகள். தன்னை வெல்ல, கடந்துசெல்ல கடைப்பிடிப்பவை. பிறரை விட மேலானவனாக எண்ணிக்கொள்ளவோ பிறரிடமிருந்து விலக்கிக்கொள்ளவோ கைகொள்பவை அல்ல.


சடங்குகள் என்பவை தொன்றுதொட்டுவரும் செயல்முறைகள். அவற்றை முழுக்க நிராகரித்தால் மரபுடனான ஆழ்மனத் தொடர்பு அறுந்துவிடும். அது மிகப்பெரிய இழப்பு. அதேசமயம் ஒருசடங்கு தொன்மையானது என்பதனாலேயே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதில்லை. அச்சடங்கு மானுடவிரோதத் தன்மை கொண்டது என்றால் இன்றைய நிலையில் அநாகரீகமானது என்றால் வெறும் மூடநம்பிக்கை என்றால் அதைத் தவிர்ப்பதற்கான திராணியும் நம்மிடம் இருக்கவேண்டும்.


ஆனால் ஆசாரம் என்பது முற்றிலும் வேறு. அது பழைமையானது , வழிவழியானது என்பதனாலேயே ஒன்றை ஏற்றுக்கொள்வது. அந்தப் பழமையான மனநிலைகளை உடன் சேர்த்துக்கொள்வது. அதன் மேல் விமர்சனங்கள் அற்று இருப்பது.


நவீன காலகட்டத்தின் அடிப்படையே மரபின் மீதான தனிமனித நோக்குதான். நம் தந்தையருக்கும் மூதாதையருக்கும் அது இருக்கவில்லை. ஏனென்றால் உலகமெங்கும் அன்று அது இல்லை. அது மரபை ஒட்டி ஒழுகிய காலம். திரளாக மானுடர் வாழ்ந்த காலம்.


நம் நவீனக் காலகட்டம் முந்நூறாண்டுகளாக உலகமெங்கணுமிருந்த பெருசிந்தனையாளர்களால் மெல்லமெல்ல கருத்தியல்ரீதியாக உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படை அலகு தனிமனிதன். அதன் பெருந்தரிசனம் மானுடம். தனிமனித அறச்சார்புடன், தர்க்கநோக்குடன் மரபையும் சூழலையும் நோக்குவதை அது நமக்குக் கட்டாயமாக்குகிறது. நம் சிந்தனைகள் எவையும் மானுடம்தழுவியதாக இருக்கவேண்டும், மானுடப்பிரிவினை சார்ந்ததாக அமையலாகாது என நமக்கு அது கட்டளையிடுகிறது. அதற்கு நேர் எதிரானது ஆசார நோக்கு.


ஆசாரம் என்பது தூய்மை என வாதிடும் அக்கட்டுரை மரபான ஆசாரநெறிகள் எல்லாமே தூய்மையை இலக்காகக் கொண்டவை என்றும், அவற்றை கடைப்பிடித்தவர் தூய்மையானவர்கள் என்றும். கடைப்பிடிக்காதவர் தூய்மையற்றவர் என்றும், தூய்மையைப்பேணி தன்னை ஆசாரவாதியாக விலக்கிக்கொள்ளவேண்டும் என்றும் சொல்கிறது. அது உருவாக்கும் பிரிவினை அப்பட்டமான சாதிக்காழ்ப்பு. ஒருபோதும் பொதுவெளியில் முன்வைக்கப்படக்கூடாதது


உண்மையிலேயே ஒருவருக்கு அக்கட்டுரையின் அந்த உட்பொருள் புரியவில்லை என்றால் அவர் பத்தொன்பதாம்நூற்றாண்டை கடக்கவே இல்லை. புரிந்துகொண்டும் தன் சாதிமேட்டிமை நோக்கின்பொருட்டு வாதிடுபவர்கள் இருப்பார்கள். அந்தப்பட்டியலில் நாம் சேரக்கூடாது.


ஒர் இந்து இந்துமதத்தை மூடத்தனமாக முழுமையாக நம்பவேண்டியதில்லை. அதன்மேல் விமர்சனரீதியான பற்றைக்கொள்ளவும் அதன்படி ஒழுகவும் இந்துமதம் அனுமதிக்கிறது. அவனே முதன்மைநூல்களை கற்கமுடியும். அவனே உகந்த ஆசிரியர்களைத் தெரிவுசெய்து தன் ஞானப்பயணத்தை மேற்கொள்ளமுடியும். அவனுக்கு ஆணையிடும் அமைப்போ மரபோ ஏதுமில்லை. அவன் மீறக்கூடாத முன்முறைமை என ஏதுமில்லை


சென்றகாலங்களில் இந்துமதத்தில் வந்து படிந்த மூடநம்பிக்கைகளை, பிளவுபடுத்தும் ஆசாரங்களை, இழிவுபடுத்தும் நோக்குகளை இன்று கடுமையாக விமர்சித்து விலக்கும் பொறுப்பு ஓர் இந்துவுக்கு உண்டு. அதன் வழியாகவே இந்துமரபின் மையப்போக்கான மெய்மைத்தரிசனங்களை அவன் மீட்டு இக்காலத்திற்கென முன்வைக்கமுடியும். எக்காரணம் கொண்டும் அந்த சென்றகால இருட்டுகளை அவன் நியாயப்படுத்தலாகாது. நியாயப்படுத்துபவன் அந்த மையத்தரிசனங்களை அழுக்குபடியச் செய்கிறான்.அத்வைத நோக்கில் ஆணவம் கன்மம் மாயை மட்டும் மலங்கள் அல்ல, பேதபுத்தியைப்போல பெரிய மலம் பிறிதொன்றில்லை


அன்புள்ள சேஷகிரி, நவீனகாலகட்டத்தில் விரிந்து பரவிய இவ்வுலகம் இன்று நம் ஒவ்வொருவரின் அணைப்புக்கென அணுகிவந்துகொண்டிருக்கிறது. மானுடரில் எவரும் இழிவென்று நம் மைந்தருக்குக் கற்பிக்காமலிருப்போம். எவரும் எதன்பொருட்டும் ஒருபடித் தாழ்ந்தவர் என எண்ணுவது நம் மண்டையில் ஊறும் மலம் என அவர்களிடம் சொல்வோம். உணவு., ஒழுக்கம், தோற்றம் காரணமாக பிறர் மேல் விலக்கம் கொள்வதனூடாக நம்மை நாம் தோற்கடிக்கிறோம் என அவர்களிடம் சொல்வோம். அத்தகைய ஆசாரங்களை மாறுவேடமிட்டு மேடையேற்றும் கீழ்மையை இனியேனும் தவிர்ப்போம்.


அப்போதுதான் வசுதைவ குடும்பகம் என்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் நம் முன்னோர் அடைந்த மெய்மையை மாற்றுக்குறையாமல் ஏற்றுக்கொண்டவர்களாவோம்

ஜெ


 


எச்சிலில் புரளுதல் என்னும் சடங்கு


சடங்குகள் தேவையா?


சாதி சமூகம் -கடிதம்


சடங்குகளை எப்படி தேர்ந்தெடுப்பது?


சடங்குகள் ஒரு கடிதம்


சாதியும் ஜனநாயகமும்


 

தொடர்புடைய பதிவுகள்

மலம்- கடிதம்
மலம்
மலம் – சிறுகதை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2017 11:35

தேவதேவனும் நானும்


 


தேவதேவனும் நானும்



தேவதேவனின் கவிதையுலகம்


தேவதேவனின் கவித்தரிசனம்


தேவதேவன் கடிதம்

கவிதையின் அரசியல் தேவதேவன்


தேவதேவனின் பரிணாமம்


தேவதேவனின் படிமங்கள்




தேவதேவனின் வீடு:ஒரு குறிப்பு


தேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி


தேவதேவனின் பித்து


ஒளி வாழ்த்து!

கவிதையின் அரசியல்– தேவதேவன்


விரல்நுனி வண்ணத்துப்பூச்சி


நிழலில்லாத மனிதன்


மாசு


பருந்து

பாலையின் மலர்மரம்


மார்கழியில் தேவதேவன்


உதிர்சருகின் முழுமை


தேவதேவன் மகள் திருமணம்


உறவுகளின் ஆடல்

தேவதேவனின் கவியுலகம்

தேவதேவனின் கவித்தரிசனம்

http://www.jeyamohan.in/?p=32529


deva தேவதேவன் கருத்தரங்கம்

தேவதேவனின் பரிணாமம்


தேவதேவனின் படிமங்கள்

தேன்மலர்

தேவதேவனின் வீடு:ஒரு குறிப்பு




தேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி


தேவதேவனின் பித்து



பாலையின் மலர்மரம்


தேவதேவன் மகள் திருமணம்


தேவதேவனுக்கு ஓர் இணையதளம்


 



 


தேவதேவனின் தீவிரவாசகரான ஸ்ரீஇனிவாச கோபாலன் தொகுத்தது


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2017 11:32

காலடியோசை -கடிதங்கள்

ravi


 


அன்புள்ள ஜெ.,


காலடி ஓசையிலே வாசித்தேன்

சிறுவயதில் இந்தப்பாடல் ‘உன் காலடி ஓசையிலே ஒரு காவியம் நான் படைப்பேன்’ என்றே மனதில் நின்றிருந்தது..


கல்லூரிப் பருவத்தில் முதன்முதலாக ‘உன் காலடி ஓசையிலே உன் காதலை

நானறிவேன்’ என்று கவனித்துக்கேட்டபோது ஒருமுறை அதிர்ந்தது இதயம்..


கவிதை உணர்வு எனக்குக் குறைவுதான்.. ஆனால் சிலவரிகள் பொருளைத்தாண்டி

சட்டென்று ஏதோ ஒரு நரம்பைத் தீண்டிவிடுகின்றன.. என்னாலும் மறக்கமுடியாத

ஒருவரி இது..


நன்றி,

ரத்தன்


 


அன்பின் ஜெ


 


நானும் கலந்து ரசித்துத் தோயும் பாடல் ஓராயிரம் பார்வையிலே…


ரஃபியின் குரலிலும் அதை ரசிக்க வைத்ததற்கு நன்றி.


 


பாடல் சார்ந்த உங்கள் வாழ்க்கை அனுபவங்கள்…  அந்தப்பாடல் சார்ந்து ஒவ்வொருவருக்கும் எழும்  வெவ்வேறான அனுபவங்களை மீட்டெடுக்க வைத்திருக்கின்றன.


 


நன்றி அதற்கும் கூடத்தான்


சுசீலா


 


அன்புள்ளஜெ


 


ஓராயிரம் பார்வையிலே எனக்குப்பிடித்த பாடல். அது இந்தி நகல் என இப்போதுதான் தெரிந்தது. இந்தி இன்னும் சிறப்பாகவும் இருந்தது. அது கொஞ்சம் ஏமாற்றம்தான்


 


ஆனாலும் அற்புதமான பாடல். பிளாட்டானிக் லவ் மாதிரி பாடலை அழகாக ஆக்கும் அம்சமே கிடையாது இல்லையா?


 


ராஜேந்திரன்


 


 


அன்புள்ள ஜெ


 


காலடி ஓசையிலே வாசித்தேன். அம்மா மாதிரி நமக்கு மிக அணுக்கமானவர்களை இப்படி வெறும் தின்பண்ட ஞாபகமாக ஆக்கிக்கொள்கிறோம். ஆனால் அதை ஒன்றும் செய்யவும் முடியாது


 


மகேந்திரன்


 


அன்புள்ள மகேந்திரன்


 


அதில் என்ன தப்பு? மூளையெல்லாம் இல்லாமல் வெறும், வயிறாகவும் நாவாகவும் அறியும் உறவுகள் அல்லவா அவை?


 


ஜெ


காலடி ஓசையிலே

 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2017 11:31

மலம்- கடிதம்

அன்புள்ள ஜெ..


மலம் கட்டுரையில் நீங்கள் கொடுத்த இணைப்பை படித்தேன்..[.‘மலம்’ ] எனக்கு அது சாதியக் கட்டுரையாகத் தோன்றவில்லை.. சுஜாதா போல , மாற்றுப்பார்வையை அவரது நடையில் சொல்லிப்பார்க்கும் அசட்டு எழுத்தாகவே தோன்றியது


 


சுஜாதாவை ரசிக்கும் பலர் , அவரது பாணி என அவர்களாகவே நினைத்துக்கொண்டு , அவரைப்போல எழுத முயல்கிறார்கள்..


செய்யலாமா என கேட்டால் , லாமே என பதில் அளிப்பது , போன் டயலினேன் , அவனுக்கு மெயிலினேன் , வாட்ஸ்ப்பினான் ,





ங்

கி’

னா

ன்


என்றெல்லாம் எழுதுவதுதான் சுஜாதா என நினைத்துக்கொண்டு இப்படி எழுதுகிறார்கள்.. இதே நினைப்புள்ள அவர்களது நண்பர்கள் , சுஜாதா மாதிரியே எழுதுறீயே என உசுப்பேத்தி விட , இதை பாராட்டாக எடுத்துக் கொண்டு அதை தொடர்கிறார்கள்


சுஜாதாவைப் பொறுத்தவரை தன் மத சாதி நம்பிக்கைகளை வெளிப்படையாக முன் வைக்காதவர் ..இன்னும் சொல்லப்போனால கடவுள் நம்பிக்கை இல்லாதவர் போல காட்டிக்கொண்டவர்


இருபதில் கம்யூனிசம் பேசாதவனும் , அறுபதில் ஆன்மிகம் பேசாதவனும் உலகில் இல்லை என்கிறார்களே என்ற கேள்விக்கு இருக்கிறேனே என பதில் அளித்தவர் அவர்


ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் அப்படி ஒன்றும் மனிதர் அல்லர் என்பதை அவருடன் நேரில் பழகிய உங்களைப் போன்றோர் அறிவீர்கள்


பிராமணர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற கருத்து அவருக்கு உண்டு.


ஆனால் அவர் எழுத்து , அவர் நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் ஆயுதமாக இல்லாமல் , அவர் அறிவு சார்ந்த தேடலை வெளிப்படுத்தும் ஆயுதமாகவே இருந்தது


சுஜாதாவின் வெற்றிக்கு என்ன காரணம் என புரியாமல் அவரை அரைகுறையாக போலி செய்யும் சில ஃபேக் எழுத்தாளர்கள் எழுதும்போது மேற்கண்ட கட்டுரை போன்ற விபத்துகள் நிகழ்கின்றன..


இதை எழுதியவர் , சுஜாதா இப்படித்தான் எழுதி இருப்பார் என நினைத்தே இப்படி எழுதி இருப்பாரே தவிர , வேறு உள் நோக்கம் இருந்திருக்காது


சுஜாதாவின் நிழல்கள் இவர்கள்.. ஒரு நிழலுக்கு நீங்கள் கொடுத்த முக்கியத்துவம் சற்று அதிகம்தான்…


அன்புடன்


பிச்சைக்காரன்


 


அன்புள்ள பிச்சைக்காரன்,


அக்கட்டுரைக்கு நான் எழுதிய கண்டனத்துக்கு கண்டனம் தெரிவித்து அக்கட்டுரைக்கு  ஆதரவாக எழுதுபவர்களின் குரல்களை மட்டும் கவனியுங்கள், அக்கட்டுரையைப்பற்றி நான் சொன்ன அனைத்தும் முழுமையான உண்மைகள் என்பதற்கு அதுவே சான்று


ஓர் அத்வைதியாக நான் சடங்குகளில் நம்பிக்கை அற்றவன். என் தந்தைக்கான சடங்குகளையே செய்தவன் அல்ல. ஆலயவழிபாடுகளிலும் பூசைகளிலும் கூட ஈடுபடுவதில்லை. ஆனால் அவற்றைப்பற்றிய என் தரப்பை நான் வலியுறுத்துவதில்லை. நான் சொல்வது பொதுத்தரப்பை மட்டுமே.


ஆசாரங்களை மீட்டெடுப்பதென்பது சமீபகாலமாக வலுவடைந்துவரும் குரல். இது ஒரு தனிக்குரல் அல்ல. ஒரு வைணவ உபன்யாசகர் தீண்டாமை உட்பட அனைத்தையும் வலியுறுத்தும் வலுவான சாதியத் தரப்பாக இன்று புகழ்பெற்றுவிட்டிருக்கிறார். பல்லாயிரம் மாணவர்கள் அவருக்கு இன்று இருக்கிறார்கள். உண்மையில் அவருடைய ஓர் உள்வட்டபேச்சின் இணைப்பாகவே இக்கட்டுரை எனக்கு ஒரு வைணவ நண்பரால் அனுப்பப்பட்டது.


இக்குரலை முதன்மையாக, வன்மையாகக் கண்டிக்கவேண்டியவன் நான். ஏனென்றால் இந்து ஞானமரபின் மையத்தரிசனங்களை முன்னிறுத்தி வலுவாகப்பேசிவருகிறேன். அவற்றை ஆசாரங்கள், நம்பிக்கைகள், அமைப்புகளுடன் இணைத்துநோக்கவேண்டியதில்லை என்று வாதிட்டுவருகிறேன்.


இந்தக்குரலை இங்குள்ள இந்துவெறுப்பாளர்கள் வரவேற்பார்கள். ஏனென்றால் இந்துமரபு குறித்து அவர்கள் சொல்லும் அனைத்துக்கும் இது ஆதாரமாக அமைகிறது. இதை நிராகரிக்காமல் நான் முன்வைக்கும் மெய்மையின் தரப்புகளை என்னால் பேசமுடியாது.


நான் பேசுவது இந்துமெய்மை மரபின் கொள்கைகளை இந்த சாதியப்பதர்களிடமிருந்து காக்கவே. திருக்குலத்தோரை அணைத்துக்கொண்ட ராமானுஜரை இந்தச்சாதிவெறியர்களின் ஆசாரவாதங்களில் இருந்து விலக்காமல் பேசுவது கடினம். திரும்பத்திரும்ப இந்துமெய்ஞானத்தை சாதியாசாரமாக மட்டுமே கண்டு முன்வைக்கும் ஒரு கும்பலைத்தான் விவேகானந்தர் காந்தி நாராயணகுரு முதல் அனைவரும் எதிர்கொள்ளநேர்ந்தது


ஜெ


8


அன்புள்ள ஜெயமோகன்


உங்கள் இந்தக் கட்டுரையின்( http://www.jeyamohan.in/97425#.WPZq44... ) தலைப்பையும் படங்களையும் பார்த்து ஒரு நிமிஷம் திகிலடைந்தேன்; உங்கள் அருவருப்பின் குறியைப் படித்து ஆச்சரியம் அடைந்தேன் – நீங்கள் எந்த மனப்பான்மையை கடுமையாக எதிர்க்கின்றீர்களோ , அதே மனப்பான்மையை தீவிரமாக ஒரு வார்த்தையில் வெளிப்படுத்தியுள்ளீர்கள் . பரிசுத்தவாதம் , ஆங்கிலத்தில் – ப்யூரிடேனிசம் எனப்படுவது , தன் சொந்த தூய்மையிலும் அதற்கு மாறானதை அருவருப்புடன் பார்ப்பதிலும் உள்ளது. தனிவாழ்வுதூய்மையையும், அதே சமயம் பொது , கூட்டு வாழ்வின் துப்புரவில் அக்கறையின்மையும் நம் இந்திய மரபு கற்றுக்கொடுப்பவை . இது கலாசாரத்தில் பல இடங்களில் வருவது. உங்களுக்கு “கொள்ளுத்தாத்தாக்களின் காலகட்டத்தைய மனநிலை” அருவருப்பாக இருக்கின்றது, ‘தனிதமிழ்’ ஆர்வலர்களுக்கு ‘மொழிக்கலப்பு’ அருவருப்பாக உள்ளது ; பலருக்கு பிறஜா தி அல்லது மத ஆசாரங்களோ, கருத்துக்களோ  அருவருப்பை கொடுக்கின்றன . படிப்பும் , நகரவாழ்க்கையும் அவ்வளவு சீக்கிரம் இந்த அருவருப்புகளை நீக்கப்போவதில்லை. அருவருப்பின் காரணிகள்தான் மாறுகின்றன


அன்புடன்


வன்பாக்கம் விஜயராகவன்


அன்புள்ள விஜயராகவன்,


உங்கள் ஒவ்வாமை புரிகிறது. நான் எழுதியதற்கும் நீங்கள் எடுத்துக்கொண்டதற்கும் தொடர்பில்லை. நான் சொல்லவந்ததை முடிந்தவரை திரிக்க முயல்கிறீர்கள். பிறிதொருவகையில் உங்களால் செயல்படமுடியாதென நான் அறிவேன். என் கணிப்பில் இவ்விஷயத்தில் எப்படி நடந்துகொள்வார்கள் என நான் எண்ணிய எவருமே மாறாக நடந்துகொள்ளவில்லை.


முன்னரும் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். உங்கள் அயல்நாட்டுவாசம், உங்கள் கல்வி எதுவுமே உங்களுக்குள் இருக்கும் சாதியவாதியை ஒன்றும் செய்யவில்லை. உங்கள் விரிந்தவாசிப்பு, உழைப்பு அனைத்தும் உங்கள் சாதியக்குரலை நிறுவும்பொருட்டு பொதுவெளியில் களமாடவே பயன்படுத்தப்படுகிறது. இந்த மாபெரும் வீணடிப்பு சிலசமயங்களில் அளிக்கும் துணுக்குறல் சாதாரணமானதல்ல


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

மலமறுத்தல்
மலம்
மலம் – சிறுகதை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2017 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.