Jeyamohan's Blog, page 764

June 11, 2022

திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் -பெயரின் பிழை

ஒரு கலைக்களஞ்சியத்தில் வணிகநிறுவனங்களின் பெயர்கள் இடம்பெறக் கூடாது. புத்தகப் பிரசுரம் என்பது ஒரு வணிகம். ஆனால் திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பெயர் இல்லாமல் தமிழ் கலைக்களஞ்சியம் நிறைவடைய முடியாது. ஏனென்றால் அது ஒரு பெரும் பண்பாட்டு இயக்கம்.  மறைமலையடிகள் தொடங்கி வைத்த தனித்தமிழியக்கத்தை அறிவுலகில் நிலைநாட்டியதில் அவர்களுக்கு பெரும்பங்கு உண்டு. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திய செந்தமிழ்ச்செல்வி இதழ் தமிழாய்வில் மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றியது.

பெயர் குறிப்பிடுவதுபோல சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஒரு மதநூல் வெளியீட்டு நிறுவனம் அல்ல. அதன் செயல்பாடுகளுடன் தேவநேயப் பாவாணர் மிக அணுக்கமான உறவு கொண்டிருந்தார். பெயர் சுட்டுவதுபோல அது நெல்லை சார்ந்த நிறுவனமும் அல்ல. அதன் பெரும்பாலான செயல்பாடுகள் சென்னையை மையமாக்கியவை. மறைமலையடிகளின் மகள் நீலாம்பிகை சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வழிகாட்டியாகச் செயல்பட்டார்

திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 11, 2022 11:35

வான்மலரும் மண்மலரும் -கடிதம்

வான்மலரும் மண்மலரும் மயங்கும் மாலை

வான்மலரும் மண்மலரும் மயங்கும் மாலை வாசித்தேன். வழங்கும் பெரும்கொடையின் வழியாக என்னை தொட்டுக்கொண்டே அழைத்து நெடுமலை நோக்கி பயணிக்கின்றீர்கள். நடைபாதை வழியோரம் விழிநீந்தும் பூங்குளங்கள். உங்கள் தொடுதல் உடன் பயணிப்பதில் அந்த நெடுமலை குனிந்து தொடுமலையாகி நடையளவு துாரத்தில் இருப்பதில் மகிழ்கின்றேன். இது உங்கள் மாயக்கரம் தீண்டலில் மனதில் எழுதப்படும் பொன்வண்ண ஓவியம்.

நடைமுறையில் மண்ணுளி பாம்பென நெளியும் சங்கப்பாடல் உரைகளில். ஒரு ராஜநாகம் எழுந்து கவிவான்நிலா வதனத்தில் ஓரு மாணிக்கப்பொட்டு வைக்கும் கவி நடை உரை தந்து உள்ளத்தை விரிய வைக்கின்றீர்கள்.

/தேனைக் கொண்டுவந்து சேர்க்கும் தேனீக்களுக்கு தேனில் மூழ்கி தவம் செய்யும் உரிமை இல்லை. அவற்றுக்கு கூட்டுக்குள் வேறு தேனீக்கள் உண்டு/-எத்தனை அர்த்தம் பொதிந்த உவமை. இரண்டுமே தேனீக்கள்தான். அவற்றின் உள்ளமும் உணர்வும் ஒன்றல்ல. கவிஞனும் காதலனும் மனிதர்கள்தான். கவிஞன் கவிதைத்தேனை அள்ளிவந்து சேர்த்துவிடுகின்றான். வாழும் முப்பது நாளுக்குள் நாளுக்கு ஐந்துசொட்டென நுாற்றைம்பது சொட்டுகள் சேர்த்துவிடவேண்டும் என்ற ஆற்றலுடன் பறக்கிறான். காதலனுக்கு சொட்டுக்களின் எண்ணிக்கை தேவை இல்லை. கடலளவு இருந்தாலும் அவனுக்கு அது துளி. துளி அளவு இருந்தாலும் அவனுக்கு அது கடல். காதலன் சுவையில் மூழ்கி அதன் வசீகரத்தில் மூழ்கி தியானத்தில் மலர்கிறான். கவிஞன் விதையை காடென எழச்செய்து செல்கின்றான். காதலன் காட்டின் மலர்மணத்தில் தேன்சுவையில் ஆழ்ந்து காட்டின் உச்சியில் ஒரு மலரில் மையம் கொண்டு ரீங்கரிக்கிறான்.

அடர்ந்து வளர்ந்து மண்ணை நிறைக்கும் பசலைகொடியும். ஒங்கிவளர்ந்து வானைமறைக்கும் அசோகம் தளிரும். ஒரு வண்ண வாசமாலையில் முரணாக இணைந்து வாசபிணைப்பாக இருக்கமுடியும் என்பதை குறிப்பால். காதலன் காதலை ஏற்றுக்கொள் என்று தோழி அறிவுருத்துவதாக அமைந்த கவிதை.

//எள்ளுச்செடியுடன் கலந்த உளுத்தஞ் செடியின் பின்னல்போல
மலைச்சாரலில் படந்த பசலைக்கொடியின் தழையையும்
அங்கே
தலை ஒங்கி நின்றிருக்கும் அசோகமரத்தின் தளிர்களையும்
முரண்படத் தொடுத்த இந்த மாலையைக் கொள்க
இல்லையேல்
வாடிவிடும் தோழி//

இந்த கவிதையில் “இல்லையேல் வாடிவிடும்“ என்ற சொற்களை நீக்கிவிட்டாலும் இது நல்ல கவிதைதானே.

தோழி!
எள்ளுச்செடியுடன் கலந்த உளுத்தஞ் செடியின் பின்னல்போல
மலைச்சாரலில் படந்த பசலைக்கொடியின் தழையையும்
அங்கே
தலை ஓங்கி நின்றிருக்கும் அசோகமரத்தின் தளிர்களையும்
முரண்படத் தொடுத்த இந்த மாலையைக் கொள்க.

காதலனுக்கும் காதலிக்கும் அவ்வளவுதானே தேவை. எள்ளுச்செடி கொஞ்சம் வான்நோக்கி வளரும். பின்பு கிளைத்து தழைத்து மலர்ந்து காய்க்கும் வெடிக்கும். உளுந்துச்செடி முளைக்கும் வான்பற்றி நினைக்காமல் கிளைக்கும் தழைக்கும் மலரும் காய்க்கும் வெடிக்கும். எள்ளுச்செடி அளவுக்கு வளர்ந்தால்போதும். எள்ளுச்செடி அளவுக்கு வாசமும் வண்ணமும் உடைய வாழ்க்கை மலர்ந்தால்போதும். உளுந்து செடி அளவுக்கு படர்ந்தால். வளர்ந்தால். வண்ணம் கொண்டால்போதும். இந்த புவியை நிறைந்துக்கொண்டு நிறைந்த வாழ்க்கை வாழ்ந்துவிடலாம். அந்த பசலைக்கொடிமாலையில் அசோகம் தளிர்வந்து சேரத்தான் வேண்டுமா? அந்த முரண் நிகழத்தான் வேண்டுமா?

பெண்ணைப் பெற்றவர்களுக்கு அந்த முரண் நிகழவேண்டாம் என்ற தவிப்பு இருந்துக்கொண்டே இருக்கிறது. காலம் என்ன செய்கிறது. ஒரே அலையில் தான் மேட்டையும் பள்ளத்தையும் வைத்து அலையவிடுகிறது. எனக்கு தெரிந்த எழுத்தாள காதலர்களில் காதலர்கள் வானுக்கு வானுக்கு வளர்கிறவர்கள். காதலிகள் மண்ணில் மண்ணில் என உழைத்து உழைத்து படர்கிறவர்கள். எந்த தோழி இந்த முரணை ஏற்றுக்கொள் என்று அவர்கள் இடம் சொன்னாள். நெஞ்சம் என்னும் தோழியா?

இந்த முரண் நிகழும் என்று பெண்ணுக்கு தெரிவதே இல்லை. அறியா தெய்வம் ஒன்று அந்த முரணை நிகழ்த்தி நீங்கி நின்று வேடிக்கைப்பார்க்கிறது. நிகழ்ந்தது தெரியாமல் நிகழப்போவது அறியாமல் தன்னில் ஏறிய இனிப்பறியாமல் பெண் இனித்து நிற்கிறாள். அந்த இனிப்பை அறிந்து முரணில் நின்று சுவைக்கும் ஆற்றல் காதலனும் வந்துவிடுகிறான்.இந்த மாய முரண் நிகழும் தருணத்தில், பெற்றவர் காதலி காதலன் மும்முனை மையத்தில் நிற்கும் தோழியின் நிலை என்ன?

/முரண்படத் தொடுத்த
இந்த மாலையைக் கொள்க
இல்லையேல்
வாடிவிடும் தோழி/ அவள் ஏன் உள்ளம் வெம்பி வெடிக்கிறாள்.

அன்பு ஜெ. உங்களுடன் உயரத்திற்கு சென்று உங்கள் கண்களால் பார்க்கும்போதுதான் தோழியின் உள்ளம் புரிகிறது. தோழியின் உள்ளம் எள்ளு நெற்றுப்போல. உளுந்தம் நெற்றுப்போல வெடிக்கும் ஓசை கேட்கிறது. அந்த கொடியும் தழையும் தளிரும் வாடிவிடக்கூடாது என்ற ஏக்கம் வெடியோசை கேட்கிறது. கபிலர் அந்த தோழியாக நிற்கிறார். அது முரண் காதல்தான். அது வாடாமல் வாசம்பெற வேண்டும் என்று தோழியாக நிற்கின்றார்.

தொடுத்தமாலை கொள்ளாவிட்டால் மட்டும் வாடபோவதில்லை. கொண்டாலும் வாடிப்போய்விடும் என்பது தோழிக்கு தெரியாதா? பயன்படாமல் அழிவது அகாலமரணம் பயன்பட்டு அழிவது ஜீவமுக்தி. வாழ்தலின் பயன் பயன்பட்டு ஜீவமுக்தி அடைதல். தலைவனுடன் தலைவி கொண்ட முரண்பட்ட காதல்வாழ்வில் முரணில் நுழைந்து முன்னேறி பயன்படு. பயன்பெறு என்கிறாள் தோழி.

அந்த தோழியின் இதயம் எந்த மலரால் செய்யப்பட்டது. இதை செய் என்று தூண்டுவதன் மூலம் அவள் வாழ்வு என்னாகும்? அவள் ஏன் தன்னையே அதற்கு பலியிடுகிறாள். கபிலர் ஏன் அந்த தோழியாக நின்று அந்த கவிதையை செய்கிறார்?

இந்த கவிதையில் காதலன் மனம் இல்லை. காதலியின் மனமும் இல்லை. அவர்கள் முன் நிற்கும் முரண் மட்டும் இருக்கிறது. அந்த முரணின் கனம் ஏறி தோழியின் உள்ளத்தை மட்டும்தான் அழுத்துகின்றது. அந்த அழுத்தத்தில் வெளிப்படும் கவிதை. மலரினும் மெல்லிய காதல். முரணோ வான்தொட வளர்ந்த மலைக்கனம் கொண்டது. தோழிக்கு வலிக்கிறது. தோழியின் வலியைத்தான் முரணின் வழியாக கவிஞர் நமக்குள் இறக்குகிறார்.

அந்த காதல் முரண்காதல் என்று காதலியைவிடவும் காதலனைவிடவும் நன்றாக அறிந்தவள் உய்த்து உணர்ந்தவள் தோழிதானே. அது முரண் என்று சொல்லி விளக்க முழு தகுதி உடையவள் அவள்தானே. அவள் ஏன் அந்த முரணை ஏற்க சொல்கிறாள்?. அங்குதான் கவிதையின் அழகும் அற்புதமும் ஒளிர்கிறது. முரணை ஏற்று வாழ்தல்தான் உயர்வாழ்வா? உயிர்வாழ்வா? அதில்தான் வாழ்தலின் சுவை கனி உள்ளதா? அந்த முரணை அஞ்சி வாழ்தல் சுளையிருப்ப தோல்சுவைத்தல் போன்றதா? முரணுக்கு அப்பால்தான் வாழ்தலின் பொன்னுலக பொக்கிஷம் இருக்கிறது. கவிஞன் மானிடர்களை தொடவைப்பது அந்த பொன்னுலகத்தைதான்.

அருண்மொழி அக்காவிற்கு நீங்கள் எழுதிய கடிதம் வழியாக இந்த கவிதை உணர்ந்து உரைக்கின்றீர்கள் அற்புத உணர்வு.

வெண்முரசு இந்திரநீலம் அமிதையாக நின்ற ஜெயமோகன் கண்கள் வழியாக இந்த கவிதையை பார்க்கிறேன். தோழியாக நின்ற கபிலரும், அமிதையாக நின்ற ஜெயமோகனும் உருகி ஓன்று இணையும் பொன் தருணம் இந்த கவிதை.

இந்த கவிதையை நன்றாக உள்வாங்க வேண்டும் என்றால் கண்ணன் மீது காதல் கொள்ளும் ருக்மிணி செவிலி தாய் அமிதை மனம் போகும் உயரத்திற்கு இந்த கவிதை போகின்றது.

அனலே உருவமாய் அம்பலத்தில் ஆடுகிறான் ஆடல்வல்லான். மலரே வடிவமாய் கண்மலர் விரிய நோக்கி நெகிழ்கிறாள் சிற்றம்பலசுந்தரி சிவகாமி. அனலே வடிவாய் ஆடுபவனுக்கு முன்னே கைதீபம் தாங்கி தனலென எரியும் பாவையென நிற்பது எதன் பொருட்டு?.

முரண்களில் இருப்பவர்களை தெய்வம் படைப்பதுபோலவே. முரண்களில் இருப்பவர்களை நோக்கி அருகில் இருந்து எரியவேண்டியவர்களையும் தெய்வம் படைக்கிறது.

விதர்ப்ப நாட்டு இளவரசி ருக்மிணிக்கு வரதாவில் நீந்தி அன்னம் விளைவித்து அன்னம் உண்டு அன்னமாகி இருப்பவன் மணவாளனாக அமைந்தால்போதும். வெண்முரசியில் ருக்மிணியின் அண்ணன் ருக்மி சிசுபாலனை மணமகனாக ஆக்கவிழைகிறான். வரதாவை ஐந்துமுறைக்குமேல் நீந்தி ஆற்றல் காட்டுகின்றான் சிசுபாலன். ருக்மிணியின் தந்தை அண்ணன் அனைவரும் அவன் கால்களுக்கு கீழே சென்று அடைக்கலம் தேடுகிறார்கள் . அவனை ருக்மிணி தாய் உள்ளத்துடன் இனியன் என்கிறாள். கதை ஆசிரியர் ஜெயமோகன் “பெருவிழைவு ஒன்றாலேயே அவள் கண்படும் பேறு பெற்றவன்.“ என்கிறார். அதற்கும் அப்பால் என்று அறியா ஒருவனுக்காக ருக்மிணி காத்திருக்கிறாள். கரைதல் அறியாமல் தன்னில் கரைகிறாள்.

“பெருவிழைவு ஒன்றாலேயே அவள் கண்படும் பேறு பெற்றவன்.“ என்கிறார். இந்த இடத்தை நான் தாண்டி சென்றுவிட்டேன். அன்பு மகன் அமுதீசன் கூப்பிட்டு, இந்த மொத்த அத்தியாயத்தையும் வேறு யாரவது எழுதினாலும் இந்த“பெருவிழைவு ஒன்றாலேயே அவள் கண்படும் பேறு பெற்றவன்.“ என்ற வரியை எழுத ஜெயமோகன்தான் வரவேண்டும் என்றான். அதனால்தான் அந்த அத்தியாயத்தில் அந்த வரி முத்தாக அமைந்தது என்றான். அந்த வரியில் லயித்து ருக்மிணி கண்ணன் மீது கொள்ளும் காதலை வாசித்தேன். அமிதையின் உள்ளம்தான் என்னை உருக்கியது. கபிலரின் இந்த கவிதையில் வாழும் தோழிதான் அமிதையா?

ஜெயமோகனின் அமிதை கண்ணீருடன் கைகளைக் கூப்பியபடி “எப்பழியையும் ஏற்க நான் சித்தமாக இருக்கிறேன் அரசி. என் கன்னியின் நெஞ்சை உரைக்கவே இங்கு வந்தேன். என் சொற்களை இங்கு வைக்க ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்றாள்.

ருக்மி ‘சேதிநாட்டு அரசர் அவள் கொழுநன் அல்ல என்று எண்ணச் செய்தது உன் சொல் என சமையப்பெண்ணாக அங்கிருந்த சேடியும் உளவு சொன்னாள். ஆயினும் இந்நகரின் தொல்குடிகளின் கொடி வழி வந்தவள் என்று உன்னை அறிவேன். உன் சித்தம் இவ்வரியணைக்கும் இதில் அமர்ந்த எனக்கும் கட்டுப்பட்டது. என் ஆணை இது“ என்றான்.

“ஆம் இளவரசே. முற்றிலும் இதற்குரியவள் நான். இச்சொற்களையே இளவரசியின் காதுகளில் விழச்செய்வேன்” என்று சொல்லி தலைவணங்கி அமிதை மீண்டாள். ‘என்ன செய்வேன் மூதன்னையரே? இம்மண்ணுக்கு நீங்கள் அளித்த அனைத்தும் உப்பென்றும் உயிரென்றுமாகி நிறைந்துள்ளன. நானோ உங்கள் சொல் சென்று தொட்டு மீளும் சிற்றுயிர். தானே நகரும் உரிமையற்றது நிழல். ஆயினும் என் உள்ளம் எப்படிச் சுழன்றாலும் அங்கேயே சென்றமர்கிறது. இவள் அவனுக்குரியவள். எங்கோ கடல் விளிம்பில் பெருநகர் ஒன்றில் கதையோ என சொல்லில் ஊறி குழல்விழித்த பீலியுடன் அமர்ந்திருக்கும் அவனே இவளுக்குரியவன். இவையனைத்தும் மானுடர் அறியும் நெறிகள். அது விண் வகுத்த வழி.’

அன்புடன்

ராமராஜன் மாணிக்கவேல்

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 11, 2022 11:31

கடுத்தா சாமியின் வருகை- கடிதங்கள்

எழுகதிர் வாங்க

அன்புள்ள ஜெயமோகன்,

மாயப்பொன் சிறுகதையை வாசித்தேன். எல்லாருக்கும் ஒரு மாயப்பொன் கணம் உண்டில்லையா? ஆப்பிள் மரத்தடியில் நியூட்டனுக்கு  மாயப்பொன்  கணம் தொடங்குகிறது. புவியீர்ப்பு விசையை கண்டறிந்த கணம் எப்படி உணர்ந்திருப்பார். தான் நிலத்தில் நிற்பதற்கான காரணத்தை, பொருட்கள் கீழே விழுவதற்கான  காரணத்தை , கடல் இன்னும் பூமியில் இருப்பதற்கான  காரணத்தை , உலகம் முழுதும் உணரும் பொதுக் காரணத்தை கண்டறிந்த நொடி அவருக்கு பொன் கிடைத்த மாயக்கணம் தானே!.

அந்த மாயக்கணத்தை தேடுவது எது? ஆழுள்ளம். அது எதை தேடுகிறது?. பிரம்மத்தோடு இணையும் புள்ளியை தேடுகிறது. இதே மாயக்கணம்  ஆர்க்கிமிடிஸ்க்கு குளியல் ஃடப்பில் கிடைத்தது. ஆழ்மனம் விழிப்பு மனத்தை மீற யுரேகா, யுரேகா கத்திகொண்டே ஓடுகிறார்.நேசையனுக்கு கடைசியாய் கிடைக்கும் கோப்பை மாயப் பொன்கணம்.மாயப்பொன்னை குடித்தபின் அவனுக்கு என்ன வேண்டும். யாருமே ஏறாத மலை உச்சியை அடைந்தவனின் நிறைவு கூடவே தனிமை. அத்தனிமைக்கு துணை இப்புவியில் யாருமில்லை. பிரம்மம் கை நீட்டி அணைக்க அழைக்கும் தருணம். அதன்பின் வாழும் தருணமெல்லாம் மறுபிறப்புதானே. முற்பிறப்பு ஞாபகம் முழுவதுமுள்ள மறுபிறப்பு.

அன்புடன்

மோகன் நடராஜ்

அன்புள்ள ஜெ

மாயப்பொன் கதையை இத்தருணத்தில் நினைத்துக் கொள்கிறேன். வாஷிங்டனில் சிறுமைகளை சந்தித்து, கடந்து நீங்கள் தமிழ் விக்கியை அறிமுகம் செய்யும்போது கடுத்தா சாமி பொன்னொளியுடன் உங்கள் அருகே வந்து அமர்ந்திருக்கும் என்று எண்ணிக்கொள்கிறேன்.

ராஜேந்திரன்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

info@vishnupurampublications.com

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 11, 2022 11:31

சிற்றெறும்பு- கடிதம்

அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம்.

நலம்தானே? அமெரிக்கப்பயணம் இனிதே நடந்துகொண்டிருக்கும் என்று எண்ணுகிறென்.

அண்மையில் மீண்டும் சிற்றெறும்பு சிறுகதை படித்தேன். அற்புதமான கதை. சிறுகதை என்னும் சட்டகத்தில் கனகச்சிதமாகப் பொருந்துகிறது. முக்கியமான பாத்திரங்கள் நான்கே பேர்தான். துரை, அவரின் அடியாள் [இவனுக்குப் பெயர் இல்லை] துரையின் மனைவியான தெரேஸா, செவத்தான் ஆகியோர். ஆனால் கதையின் நம்பகத்தன்மைக்காக சிலுவைநாதன், ரியாஸ் அகமது, திம்மையா, மரியா, கொம்பன் போன்றோரும் தேவையாயிருக்கிறார்கள்.

தொடக்கத்தில் கதாசிரியர் வழியாக வரும் கதை பின்னால் முழுமையாய் துரையின் அடியாள் வழியாகவே சொல்லப்படுகிறது. துரையைக் காண அவரின் அடியாள் வரும்போது காட்டப்படும் அந்த இல்லத்தின் உள்பக்கம் கதைக்கு வலுவூட்டி நம்மை அங்கே அழைத்துச்செல்கிறது. அடியாள் அப்பொழுது அவனை அறியாமல் அவன் உள்ளத்தையும் வெளிப்படுத்துகிறான்.

”பீங்கான் மற்றும் கண்ணாடிப் பாத்திரங்களில் நாம் உண்ணக்கூடாது. நம்மீது எஜமானர்களுக்கு எப்பொழுதும் அச்சமும் ஐயமும் இருக்கும், நம்மை கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள்.” இது அவன் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த அவமானமும் சகிப்புத்தன்மையும்தான். அவனை கதையின் இறுதியில் செவத்தானை மன்னித்துப் போகச்சொல்லும்போது, “நாமளும் பதிலுக்கு என்னமாம் செய்யணும்லடே” என்று கூறவைக்கிறது.

அடியாள் துரைக்காக எல்லா அடிமட்ட வேலைகளையும் செய்பவன். செவத்தானைக் கொல்லவேண்டும் என்னும்போது அவன், “கட்டைவிரலுக்கும் போதாத சிற்றெறும்பு” என்கிறான். ஆனால் சிறுவயதில் கதை படித்திருப்போம். எறும்பு யானையைப் பழிவாங்க வேண்டுமானால் காது அல்லது துதிக்கை வழியாக அதன் உடலில் புகுந்து விடுமாம்.  யானை எறும்பை ஒன்றும் செய்ய முடியாமல் துடித்துக் கொண்டே இருக்கும். இறுதியில் உயிரை விட்டுவிடும்.

அப்படித்தான் செவத்தானாகிய சிற்றெறும்பு துரையாகிய யானையின் மனத்தில் புகுந்து தொல்லைப்படுத்துகிறது. எறும்பை நசுக்க வந்த அடியாள் அந்த எறும்பை அப்படியே இருக்கட்டும் என்று செவத்தானைத் தண்டிக்காமல் மன்னித்து விட்டுத் துரையைப் பழிவாங்குகிறான். அவனால் செய்ய முடிந்தது அவ்வளவுதான்.

புதிதாகப் படிக்கும் வாசகருக்குக் கதை பல ஊகங்களையும் வினாக்களயும் எழுப்புகிறது. துரைசானி செவத்தானை ஏன் அப்படித் திட்டினாள்? செவத்தான் எந்த நோக்கத்தோடு அடித்துணியை எடுத்தான்? துரை செவத்தானைப் பற்றி என்ன நினைக்கிறான்? அடியாள் ஏன் அவனை விட்டுவிட்டான்?

சிலவற்றிற்கு கதையிலேயே விடை மறைமுகமாகக் காண்பிக்கப்படுகிறது. சிறுகதையின் இறுதி வரிகள்  முக்கியமானவை. செவத்தான் சென்ற பிறகு அந்த அடியாள்நெடுநேரம் நின்றுகொண்டிருக்கிறான். அப்பொழுதுதான் இத்தனை ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருக்கும் அடிமைத்தனம் அவமானம் பாராமுகம் எல்லாவற்றுக்கும் சேர்த்து நாமும் ஒன்றைச் செய்து விட்டோம் என்னும் எண்னம் வந்திருக்க வேண்டும்.  அதைச்செய்ததால் மகிழ்ந்தான். அதனால் புன்னகை பூக்கிறான். ஆனால் உடனே அதை மறைத்து விடுகிறான். அவன் முகத்தில் அது வெளிப்படவில்லை. அவன் சொல்கிறான். “நான் மிக நன்றாகப் பழக்கியிருப்பது என் முகத்தைத்தான்.

உள்ளே நினைப்பது முகத்தில் தெரிந்தால் வேலைக்கு மட்டுமன்று. உயிருக்கும் ஆபத்து. எனவே முகத்தைப் பழக்கியிருக்கிறான். ஆனால் மனம் எல்லாவற்றையும் அசைபோட்டுக் கொண்டிருக்கிறது. சமயத்தில் கட்டைவிரலுக்கும் போதாத செவத்தானாகிய சிற்றெறும்பைக் கூட விட்டுவிட்டு மகிழ்கிறது.

வளவ துரையன்.

விஷ்ணுபுரம் பதிப்பகம்

info@vishnupurampublications.com

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 11, 2022 11:31

இன்று சென்னையில் காலை….குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழா

நண்பர்களுக்கு,

2022 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது கவிஞர் ஆனந்த் குமாருக்கு வழங்கப்படுகிறது. விழா வரும் 11 ஜூன் 2022-ல் சென்னையில் நிகழ்கிறது. ஜூன் 10 குமரகுருபரனின் பிறந்த நாள்.

இடம் :கவிக்கோ மன்றம் சி.ஐ.டி காலனி

நாள் : 11-6-2022

விழாவில் கவிஞர் போகன் சங்கர் , மலையாளக் கவிஞர் வீரான்குட்டி, எழுத்தாளர் பார்கவி  மற்றும் ஜெயமோகன் கலந்துகொள்வார்கள்.

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 11, 2022 06:55

June 10, 2022

நமது குழந்தைகள்

நேற்று ரயிலில் நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு வந்தேன். அதற்கு முன் காசர்கோட்டுக்கு ரயிலில் சென்று வந்தேன். என் வாழ்க்கையின் பெரும்பகுதி ரயிலில் கழிகிறது. ரயில் பற்றிய இனிய நினைவுகளே மிகுதி. ரயில் பற்றிய கசப்புகள் அவ்வப்போது உண்டு, ரயில் பயணிகள் பற்றி.

எனக்கு மிகப்பெரிய குறை உள்ளது நம் குழந்தைப் பயணிகள் பற்றி. அதிலும் சென்ற பத்தாண்டுகளாகவே இக்குறை உள்ளது. முன்பெல்லாம் ரயிலில் வரும் குழந்தைகள் புத்தம்புதிய அனுபவத்தின் திகைப்பில் அல்லது பரவசத்தில் இருக்கும். தயங்கியபடி, உத்வேகம் கொண்டபடி தந்தையிடமோ தாயிடமோ மெல்லிய குரலில் ஐயங்கள் கேட்டுக்கொண்டிருக்கும். கொஞ்சம் கழிந்ததும் சலிப்படைந்து மெதுவாக தூங்கிவிடும்

இப்போது வரும் குழந்தைகள் முற்றிலும் வேறுவகை. இரண்டு அடிமைகளை உடனழைத்துவரும் மனநலம் குன்றிய எஜமானன் போலிருக்கின்றன நம் குழந்தைகள். காசர்கோடு செல்லும் ரயிலில் ஒரு குழந்தை நள்ளிரவில் சோடா வேண்டும் என்று கூவி அழுதது. கையில் கிடைத்தவற்றை தூக்கி வீசியது. அதன் அப்பா அம்மா இருவரும் அதனிடம் கெஞ்சினர். மன்றாடினர். அது வெறிகொண்டு கூச்சலிட்டுக்கொண்டே இருந்தது. எர்ணாகுளத்தில் அதன் அப்பா வெளியே ஓடி மூச்சிரைக்க திரும்பி வந்து ஒரு கோக் புட்டியை அதற்கு கொடுத்தார். அதை ஒருவாய் குடித்துவிட்டு வேண்டாம் என்றது. ரயில் கிளம்பி பத்தே நிமிடத்தில் லேய்ஸ் வேண்டும் என்று கூச்சல்.

நேற்று நாகர்கோயில் ரயிலில் ஒரு குழந்தை மேல் பெர்த்தில்தான் படுப்பேன் என கூச்சலிட்டது. இரண்டு வயதுதான் இருக்கும். அதன் அப்பாவும் அம்மாவும் கெஞ்சிக்கொண்டே இருந்தனர். பொறுமையை மிகமிகத் திரட்டிக்கொண்டேன். எனக்கு நல்ல சளி பிடித்திருந்தது. பகலில் தூங்கவில்லை. ஆகவே தூங்கிவிட்டேன். ஆனால் நள்ளிரவில் அந்தக்குழந்தை மீண்டும் கூச்சலிட்டபோது விழித்துக்கொண்டேன். அது தூக்கு என்னை தூக்கு என்று கூவியது. அதை அதன் அப்பா தூக்கிக்கொண்டு வெளியே சென்றார். தூக்கி உள்ளே கொண்டுசெல் என்று மீண்டும் கூச்சல்.

இந்தப்பெற்றோர் குழந்தைகளை ஏதோ அரிய பொக்கிஷம் என நினைக்கிறார்கள். அப்படி நாமும் நினைப்போம் என நம்புகிறார்கள். ஒரு சிறு முகச்சுளிப்பு எழுந்தால்கூட திகைக்கிறார்கள். உலகுக்கே அரிய செல்வமான தங்கள் குழந்தைமேல் ஒருவர் அதிருப்தி கொள்ளக்கூடுமா என்ன?

குழந்தைகளை இந்த அளவுக்கு கொஞ்சி, அவற்றுக்கு அடிமைப்பணி செய்யும் சமூகம் வேறெந்த நாட்டிலாவது உருவாகியிருக்கிறதா என்ற ஐயம் ஏற்படுகிறது. நானும் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். இதோ ஒருமாதம் அமெரிக்காவின் சாலைகளிலேயே வாழ்ந்துவிட்டு மீண்டிருக்கிறேன். அமெரிக்காவில் எங்கும் இப்படி ஒரு குழந்தையைக்கூட பார்க்க முடியவில்லை. அங்கே ஒரு குழந்தை சற்று சத்தம்போட்டால் ‘உஷ், இங்கே மற்றவர்கள் இருக்கிறார்கள்’ என்றுதான் தந்தையோ தாயோ சொல்கிறார்கள். குழந்தை அமைதியாகிவிடுகிறது. இங்கே இக்குழந்தைகள் மற்றவர்களை தொந்தரவு செய்யும்பொருட்டே கூச்சலிடுகின்றன, கவனத்தை கவர நினைக்கின்றன என நன்றாகவே தெரியும். ஏனென்றால் கூச்சலிடும்போது அவை நம்மைத்தான் பார்க்கின்றன.

எண்ணிப்பார்க்கிறேன், நான் வயக்கவீட்டில் பாகுலேயன் பிள்ளையிடம் எனக்கு சோடா வேண்டும் என்று அடம்பிடித்திருக்க முடியுமா? அவரிடம் ‘எனக்கு போர் அடிக்கிறது’ என்று சொல்ல முடியுமா? திகைப்பிலேயே மனிதர் மண்டையைப்போட்டிருப்பார். இன்று குழந்தைகள் பெற்றோரிடம் ‘என்னை குஷிப்படுத்து’ என ஆணையிடுகின்றன. பெற்றோரும் கோமாளிக்கூத்து அடிக்கிறார்கள். ரயில் போன்ற பொது இடங்களில் அவர்களின் கோமாளித்தனம் இன்னமும் கூடியிருக்கிறது. குழந்தைக்கு ‘எல்லாவற்றையும்’ அளித்துவிட துடியாய் துடிக்கிறார்கள். அது எதையாவது கேட்டால் பதறிவிடுகிறார்கள். அது எதையாவது தூக்கி வீசினால் மகிழ்ச்சி அடைந்து கொண்டாடுகிறார்கள்.

பெரும்பாலான குழந்தைகளின் முகங்கள் எப்போதும் அதிருப்தியும் சிணுங்கலும் கொண்டவையாக இருக்கின்றன. இந்த உலகத்தையே அளித்தாலும் அவற்றால் மகிழ்ச்சி அடைய முடியாது என்று தோன்றுகிறது. நான் அந்தக்குழந்தைக்காகவே பரிதாபப்படுகிறேன். நாகர்கோயிலில் ஒரு பையன் பெற்றோர் பைக் வாங்கி தரவில்லை என்பதனால் தற்கொலை செய்துகொண்டான் என்று படித்தேன். அது ஓர் உச்சநிலை. ஆனால் அதற்கு முந்தைய நிலையில்தான் பல குழந்தைகள் இருக்கின்றன. எண்ணியவை எண்ணிய உடனே கைக்கு வந்தாகவேண்டும். ஏன் வரவேண்டும்? எப்படி வரமுடியும்? அந்த யதார்த்தத்தின் மேல் முட்டிக்கொள்ளும்போது அவை அடையப்போகும் துயரின் அளவை கற்பனைசெய்து பார்க்கிறேன். உலகமே தனக்குச் சேவை செய்யவேண்டும், தான் இன்னொருவருக்காக எதுவும் செய்யவேண்டியதில்லை என எண்ணி வளரும் குழந்தை உறவுகளை எப்படி கையாளும்?

நேற்று என் அருகே படுத்திருந்த ஒருவர் எழுந்து கூச்சலிட்டார். “ஏம்மா புள்ளைய கொஞ்சம் பேசாம இருக்க வைக்கிறியா? நாங்க கொஞ்சம் தூங்கணும்”

பிள்ளையின் அம்மா சீற்றமடைந்து “அவன் சின்னப்புள்ளை” என்றாள்.

“சின்னப்புள்ளைன்னா தூக்கி வெளியே கொண்டுட்டு போ… இனிமே இங்க சத்தம் கேக்கப்பிடாது”

இன்னொருவரும் பொறுமையிழந்திருந்தார்போலும். அவர் “சார், இப்பல்லாம் ரயில்வேயிலே அஃபிசியலா அறிவிச்சிட்டான். சின்னப்புள்ளைங்க சும்மா சும்மா கத்தினா கம்ப்ளெயிண்ட் பண்ணலாம்… பேரண்ட்ஸை எறக்கி விட்டிருவான்… கம்ப்ளெயிண்ட் பண்ணுங்க”

அதில் அந்த குழந்தையின் அம்மா கொஞ்சம் பயந்துவிட்டாள். “அவன் அப்டித்தான்… சொன்னா கேக்கமாட்டான்…”

“நாங்களும்தாம்மா புள்ள வளத்திருக்கோம்… அப்ப புடிச்சு பாக்குறேன். என்னமோ கொஞ்சிட்டே இருக்கீங்க” என்றவர் சட்டென்று அந்தக்குழந்தையிடம் “டேய் மறுபடி சத்தம்போட்டே அறைஞ்சிருவேன் பாத்துக்க” என்றார்.

குழந்தை திகிலுடன் அமைதியடைந்தது. அதன்பின் காலைவரை அமைதி. ‘அப்பன் அடிக்காதவனை ஊர் அடிக்கும்’ என்ற மலையாளப் பழமொழியை நினைத்துக்கொண்டேன்.

நிஜமாகவே இந்திய ரயில்வே அண்மையில் அறிவித்திருக்கிறது, ரயிலில் தூங்கவிடாமல் குழந்தைகள் கூச்சலிட்டால் முறைப்படி புகார்கொடுக்கலாம். நடவடிக்கை எடுக்கப்படும். ரயிலில் எழுதியே வைத்திருக்கிறார்கள்.

வியப்பாக இருந்தது. இந்தியா முழுக்க இதுதான் நிலைமை. எத்தனை ஆயிரம் புகார்கள் வந்திருந்தால் ரயில்வே இப்படி ஒரு விதியை உருவாக்கும். எத்தனை நூறுபேர் பொறுமையிழந்திருந்தால் ஒருவர் புகார் கொடுப்பார் என எண்ணிப்பார்த்தால் இது எத்தனைபெரிய பிரச்சினை.

நாம் நம் குழந்தைகளை ஒருவகை மனநோயாளிகளாக வளர்த்துக்கொண்டிருக்கிறோமா?

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 10, 2022 11:35

பட்டாம்பூச்சியும் இன்னொரு பட்டாம்பூச்சியும் -கடிதம்

ரா.கி.ரங்கராஜன் பட்டாம்பூச்சி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

உங்களுடைய ஒரு கட்டுரையை மீண்டும் வாசிக்க நேர்ந்தது. பட்டாம்பூச்சியின் இறகுகள்.

அந்தக்  கட்டுரையை முதல் வாசிப்பு செய்யும் போது நானும் அவ்வாறே நினைத்து இருந்தேன் – ஹென்றி ஷரியாரின் பாபிலோன் நாவல்தான் ரா. கி. ரா அவர்களின் மொழி பெயர்ப்பான பட்டாம்பூச்சி தொடர், என்று.

குமுதத்தில் நான் சிறுவனாக இருந்த காலத்தில் அத்தொடரை வாசித்து இருந்தேன். கல்லூரி காலத்தில் ஹென்றி ஷரியாரின் பாபிலோன் வாசிக்கக் கிடைத்தது. இரண்டின் வேறுபாடும் கேள்விகளை எழுப்பினாலும் மொழிபெயர்த்தவரின் சுதந்திரமோ என எண்ணி வாசித்து ரசித்து முடித்தேன்.

ஒன்று இரண்டு ஆண்டிற்கு முன் ஹென்றி ஷாரியார் காலத்திலேயே வேறு ஒரு பிரெஞ்சு தீவாந்திரக் கைதி அதே சிறையில் இருந்ததும் அவர் ஒரு ‘ஆட்டோ பிக்ஷன்’ ஷாரியார் போலவே எழுதி இருந்ததும் பற்றி  அறிந்தேன். அவர் பெயர் Felix மிலானி. அந்த புத்தகம் ‘தி கன்விக்ட்’

அப்போது எனக்கு உறைத்தது,  ரா.கி.ராவின் நாயகனும் பெலிக்ஸ் மிலானி என்பது. மற்றும் அவரது மொழிபெயர்ப்பின் தலைப்பு இன்னொரு பட்டாம்பூச்சி என்பது.

பலரும் நினைப்பது போல ரா.கி.ரா மொழி பெயர்த்து ஷரியாரை அல்ல, பெலிக்ஸ் மிலானியை.

மிலானியின் நாவலின்  கேப்ஷன்  – “ஒன்ஸ் தேர் வாஸ் எ பாபிலோன், நவ் தேர் இஸ்  எ கன்விக்ட்”. ராகிரா அதனால்தான் இன்னொரு பட்டாம்பூச்சி என்று தலைப்பிட்டார் போலும்.

தமிழ் விக்கியில் ராகிரா கட்டுரையிலும் இதே தகவல் (சாரியார்- ராகிரா-பட்டாம்பூச்சி). அவர்களுக்கும் நான் கன்விக்ட்  பற்றி மெயில் அனுப்பி உள்ளேன்.

நன்றி.

அன்புடன்
ஆனந்த ராஜ்குமார். கே

அன்புள்ள ஆனந்த் ராஜ்குமார்

ரா.கி.ரங்கராஜன் முதலில் மொழியாக்கம் செய்தது ஹென்றி ஷாரியரின் பாப்பில்யான். பட்டாம் பூச்சி என்றபெயரில். இது 1972-ல் குமுதம் இதழில் தொடராக வெளிவந்தது. அதன்பின் பத்தாண்டுகள் கழித்து 1983-ல் மிலானியின் நாவலை இன்னொரு பட்டாம்பூச்சி என்ற பெயரில் குமுதத்திலேயே மொழியாக்கம் செய்து தொடராக வெளியிட்டார். ஆனால் அது அவரால் முடிக்கப்படவில்லை. போதிய வரவேற்பு இருக்கவில்லை. எழுதியவரைக்கும் நூலாக்கினார்.

தமிழ்விக்கியில் உள்ள செய்தி சரியானதே. பட்டாம்பூச்சி என்னும் பதிவை பார்க்கவும்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 10, 2022 11:33

ஆர்.சண்முகசுந்தரம், கடிதம்

ஆர். சண்முகசுந்தரம் ஆர். சண்முகசுந்தரம் – தமிழ் விக்கி ஆர்.சண்முகசுந்தரம், தமிழ் விக்கி

அன்புள்ள ஜெ,

நான் ஆர்.சண்முகசுந்தரம் பற்றி முனைவர் பட்டத்துக்கு ஆய்வுசெய்யும் நோக்கத்துடன் இருக்கிறேன். தமிழ் விக்கியில் ஆர்.சண்முகசுந்தரம் பற்றிய பக்கத்தை பார்த்தேன். அதிலுள்ள செய்திகள், அதிலிருந்து விரியும் சுட்டிகள் ஆகியவை முழுமையாக ஒரு சித்திரத்தை அளித்தன. படித்து முடிக்கமுடியாமல் சுட்டிகள் வழியாக நீண்டுகொண்டே சென்றது. கல்வித்துறை ஆய்வுகளுக்கு தமிழ் விக்கி ஒரு பெரிய செல்வம். ஆர்.சண்முகசுந்தரம் பற்றி ஆய்வுசெய்தவர்களின் பட்டியல்கூட பதிவில் உள்ளது.

ஒரு நல்ல கல்வித்துறை ஆவணமாகவே விக்கி பதிவுகள் உள்ளன. பெரும்பாலான பதிவுகளை ஒரு கதைபோல வாசிக்க முடிகிறது. கட்டுரைகள் அனைத்திலும் தெளிவான திட்டமும், கட்டமைப்பும் உள்ளது. ஆகவே வேண்டிய தகவல்களை எளிதாக எடுக்க முடிகிறது. இந்தக் கட்டுரைகளின் பகுப்புகள் மிகமிகச் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன

முனைவர் அ.கா.பெருமாள் போன்று தேர்ந்த ஆய்வாளர் ஒருவரின் மேற்பார்வையில் தமிழ் விக்கி வருகிறது என்பது அதன் நம்பத்தன்மைக்குச் சான்று. ஒரு கல்வித்துறை ஆய்வில் தமிழ்விக்கியை தாராளமாக சுட்டி கொடுக்கலாமென நினைக்கிறேன்.

ஆய்வாளனாக என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

செல்வராசன் தங்கவேல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 10, 2022 11:31

அருண்மொழி பேட்டி- கடிதம்

இலக்கியவாதியெனும் மனைவி

அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு,

அருண்மொழி  அவர்களின் “சியமந்தகம்” தளப் பதிவுகள் ‘பெருந்தேன் நட்பு’  முகிழ்த்து வளர்ந்த நாட்களின் தொடக்கத்தை வெகு அழகாக கண்முன் நிறுத்துகின்றன. அவர் திருமதி. ஜெயமோகனாக நின்றே இக்கட்டுரைகளைத் தந்திருக்கிறார் என்று தெரிந்தே வாசித்த போதும் கூட, ‘காதல் கைகூட வேண்டும்; அனைவரும் ஏற்கும் வகையில் திருமண வாழ்வு அமைய வேண்டும்; பெரியவர்கள் சம்மதிக்க வேண்டும்’ என ஒருவித பதற்றத்துடன் தான் வாசிக்க முடிந்தது. அந்தக் காலகட்டத்திற்கே வாசகரைக் கொண்டு சென்ற அருமையான பதிவுகள்.

‘வாழ்க்கைத்துணை’ என்று இணையராகப் பயணிக்கும் வாழ்வின் இனியதொரு மைல்கல்லைத்  தங்களின் ‘இலக்கியவாதியெனும் மனைவி’ பதில் சொல்லிச் செல்கிறது. அன்பெனும் பெயரில் அழுத்தங்களுக்கு ஆட்படுத்தாமல் இடைவெளியுடன்,  இருக்கவும்  வளரவும்  வெளியினைத்(space) தரும் உறவுப்புரிதல் கனிந்து, கணவன் மனைவி இடையே பரஸ்பர மதிப்பாக மலர்வதை வெகு அழகாக தொட்டுக் காட்டுகிறது இப்பதிலின் கடைசிப் பத்தி.

“எழுத்தாளனுக்கு மனைவியோ, குழந்தைகளோ சுமை ஆகிவிடக் கூடாது” என்று அருண்மொழி சொல்வதும், “அருண்மொழி மிகுந்த நுட்பமும் ரசனையும் கொண்டவள் என தெரியும். அவளுடைய படைப்பூக்கம் மேலும் பிரியத்தை உருவாக்குகிறது.” என்று தாங்கள் சொல்வதும், ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என வெளிப்படுகின்றன. அருமை!

அன்புடன்

அமுதா

***

அன்புள்ள ஜெ

தீராநதி இதழில் அருண்மொழி நங்கையின் பேட்டி சிறப்பாக இருந்தது. நேர்த்தியான உற்சாகமான பதில்கள். உங்களிடம் எப்போதும் நான் காண்பது சோர்வுறாத இயல்பு. அது அருண்மொழி நங்கையின் படங்களிலேயே கூட தெரிகிறது. சிறப்பு

எம்.மகேஷ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 10, 2022 11:31

சுழற்சி- ரம்யா

அன்பு ஜெ,

சொல்வளர்காடு நாவலில் ”ஐதரேயம்” காட்டில் மகிதையின் வரிகள் பல சிந்தனைகளுக்கு இட்டுச் சென்றது. ”இப்புடவி பெரும் சுழற்சியால் மட்டுமே உருவாகி வரமுடியும்” என்ற வரிகள் எத்துனை மெய்மையானது.

சுழன்று கொண்டிருப்பதாக நான் கற்றவை யாவும் நினைவில் ஓடியது. புவியே சுற்றிக் கொண்டிருக்கிறது தான். அதன் கூறுகளான அழுத்தம் மிகப்பெரிய அழுத்த பெல்டுகளாக புவியைச் சுற்றி ஹேட்லி செல்லாக, போலார் செல்லாக என சிறு சிறு பெல்டுகளாக சுழன்று கொண்டிருக்கிறது. வெப்பம் சலனமடைந்து வெப்ப பெல்டுகளாக சுழல்கிறது. நீர் சுழற்சியாகிறது. காற்று சுழற்சியாகிறது. ஒட்டுமொத்த சமுத்திரமும் பல சமுத்திர கரெண்ட்டுகளாக சுழல்கிறது. அதிலுள்ள ஒரு கூறான உவர்தன்மை சுழன்று சுழன்று ஒரு சம நிலைத்த்னமையை அடைந்திருக்கிறது.

நாளும் புவி சுழன்று இன்னொரு நாளாகிறது. நிலவு தேய்ந்தும் வளர்ந்தும் ஒரு சுழற்சிக்குள் இருக்கிறது. சூரிய குடும்பத்திலுள்ள யாவும் சுழல்கிறது. சூரிய குடும்பமே சுழல்கிறது. அண்டங்களும், பேரண்டங்களும் யாவும் சுழல்கிறது. இந்த சுழற்சியே ஒரு நிலைத்தன்மையை அளிக்கிறது.

அணுக்கருவைச் சுற்றியும் சுழற்சி நிகழ்கிறது. துகள்களும் தூசிகளும் சுழற்சியிலுள்ளது. உயிரியலில் படித்த சுழற்சிகளும் நினைவில் முட்டியது. கார்பன் சுழற்சி, ஆக்சிஜன் சுழற்சி, நைட்ரஜன் சுழற்சி என யாவும் சுழற்சியில் தான் இருக்கிறது. மலேரியா நோய் பற்றி படிக்கும் போது கூட ராஸ் சுழற்சி என்ற கோட்பாட்டைத்தான் சொல்கிறார்கள். நோய்களும் சுழற்சி எனும் பிடிக்குள் தான் உள்ளன. இப்படி இயற்பியல், வேதியியல், உயிரியியல், புவியியல் என அனைத்து அறிவியல் கோட்பாட்டின் வழியும் சுழற்சியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். வரலாற்றிலும் கூட “History Repeats itself” என்ற வரி வந்து முன் நின்றது.

நான் கூட சுழன்று கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டேன் ஜெ. இன்று அனைவருமே தங்கள் வாழ்வின் குறிக்கோளாக “மகிழ்ச்சி” என்பதைச் சொல்வதில் பெருமையடைகிறார்கள். போட்டித்தேர்வின் நேர்காணலில் இந்த பதில் மிகவும் பிரபலாமனது. உலகமே “ஹேப்பினஸ் இண்டெக்ஸ்” நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது. ஒவ்வொரு நாளையும் மகிழ்வாக நிறைப்பதைப் பற்றி இன்று பலரும் பேசுகிறார்கள். நானும் கூட இது நாள் வரை அதையே சிந்தித்து வந்தேன். இன்று இந்த சுழற்சியின் வழி அவற்றை ஓட்டிப் பார்த்தேன் ஜெ. மகிழ்வும், துக்கமும் கூட சுழற்சியில் தானே இருக்க முடியும். அதை உணர்பவர்கள் மிகையுணர்ச்சிகள் அடைய மாட்டார்கள் தானே. அதீத துக்கமோ, அதீத மகிழ்வோ அடையமாட்டார்கள் அல்லவா? அத்தகைய சம நிலையை முகத்தில் வைத்திருப்பவர்களை கற்பனை செய்து கொண்டேன். எனக்கு வெண்முரசின் இளைய யாதவனின் முகமும், புத்தரின் முகமும் நினைவில் எழுந்தது. சுழற்சியை அறிந்ததன் புன்னகையை/மென்னகையைக் கொண்டவன் இளைய யாதவன். சுழியத்தின் மையத்தில் புத்தர். இவர்கள் இருவருமே அதை அறிந்தவர்கள். அறிந்து கொண்டவர்களால் தான் பற்றறுக்க முடியும் என்று நினைக்கிறேன் ஜெ.

உறவும்-பிரிவும், பிறப்பும்-இறப்புமென யாவும் சுழல்கிறது. நான் அறியாத ஏதோ ஒன்றும் சுழன்றுகொண்டிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டேன்.

தன் வாலைத்தானே உண்ணும் பாம்பு நினைவிற்கு வந்தது ஜெ. அப்படியானால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நீட்டிக் கொண்டு முன் செல்லவில்லை. சுழன்று கொண்டே இருக்கிறது. சுழற்சி நம்மை மரணத்தை நோக்கி இட்டுச் செல்கிறது. மீண்டும் பிறப்பதைப் பற்றி நான் இதுவரை எந்த முடிவுகளுக்கும் வரவில்லை. ஆனால் இன்று இந்த பிறப்பும் ஒரு சுழற்சி தானோ என்று சிந்திக்கிறேன். ஆனால் கர்மத்தின் பால் உள்ளவர்கள் முந்தைய சுழற்சியை விட நேர்த்தியாக ஏதோ செய்யத்துடிக்கும் சுழற்சியில் சுழன்று கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது ஜெ.

என் வாழ்க்கைப் பயணத்தில் மிகக் குறைவான மனிதர்களையே என்னை பாதிக்க அனுமதித்திருக்கிறேன். சில உறவுகள் நம்மை மீறி நிகழ்கின்றன. ஏதோ சுழற்சியில் அவர்களை நாம் கண்டடைகிறோம். விலகுகிறோம், விலக மறுக்கிறோம், பற்றிக் கொள்கிறோம். மிகுந்த மகிழ்ச்சியோ, துக்கத்தையோ அளிக்கும் மனிதர்கள் அல்லது நான் முக்கியமாகக் கருதும் மனிதர்களை கூர்ந்து நோக்குந்தோறும் நான் உணர்வது இது முன்னெப்போதோ நிகழ்ந்தது என்பதைத்தான். அத்தருணத்திற்காக அந்த சுழற்சியில் நான் காத்துக் கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். மிகத்துல்லியமாக சில விடயங்களை நான் முன்பே கண்டது போல நிகழ்வது போன்ற பிரமை உண்டு.

கடலில் ஒரு துளி நீர் கலக்கும் போது அது முந்தைய கணத்திலிருந்த கடல் என்றல்லாது மாற்றமடைகிறது என்று சொல்லியிருப்பீர்கள். நான் என்பது கூட முந்தைய நொடியிலிருந்த நானல்ல என்று சொல்லியிருப்பீர்கள். அந்த கருத்தை இக்கருத்து முழுமையாக நிராகரிக்கக் கூடுவது. இவை நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. புதிய நான் என ஏதுமில்லை. ஏதோ ஒரு காலத்தில் ஏற்கனவே நிகழ்ந்தது தான் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் முந்தைய சுழற்சியை விட நேர்த்தியோ, சொதப்பலோ எனில் அதுவும் மாற்றம் தான். ஆக அறுதியாக நிராகரிக்கவும் முடியவில்லை.

”சுழற்சியினால் உருவான எதுவும் சுழற்சியால் அழியுமாறும் ஆகும்.” என்ற மகிதையின் வரிகள் என்னை ஒரு கணம் அசைத்துவிட்டது. ஆம் அனைத்தும் உருவானது போல அழியும். மகிழ்ச்சியோ, துக்கமோ, புகழோ, ஆக்கமோ, பிறப்போ ஆவது போல அழியும். அழிந்து தீர்வதுபோல பிறக்கும் என்று நினைத்துக் கொண்டேன். நான் செய்யக்கூடுவது அந்த கணத்தில் வாழ்வது மட்டுமே.

”முடிவிலாத அசைவு எதுவும் சுழற்சியே. எங்கும் செல்லாது தன்னைத்தான் நிகழ்த்திக் கொண்டிருக்கும் செலவு அது.” இந்த வரிகளில் என்னைச் சுற்றி நான் அசைந்து கொண்டிருப்பதாக நினைத்த யாவையும் நிறுத்திக் கொண்டேன். யாவும் முடிவிலா அசைவு கொண்டவை எனில் எதுவும் எங்கும் செல்லவில்லை தானே. யாவும் சுழல்கிறது. நானும் சுழல்கிறேன். எங்கும் எதிலும் சுழற்சி நிகழ்கிறது. “நான்” உள்ளும் புறமும் என சுழற்சியில் தான் இருக்கிறது. யாவும் சமநிலையை நோக்கியே நகர்கிறது.

புவியைப் போலவே சுழற்சி வேகம் கொண்ட கோள் நகராதது போலத் தெரிகிறது. அதிவேக சுழற்சி கொண்டது இல்லாதது போல தெரிகிறது என்ற ஐன்ஸ்டீனின் கோட்பாட்டை நினைத்துக் கொண்டேன். நகராதிருக்கும் கோள்களை அறிந்த விடயங்கள் என வைத்துக் கொண்டால் அதிவேகமாக சுழன்று இல்லாமலிருப்பது போல மயக்கும் கோள்களை அறியமுடியாமை என்று கொள்ளலாம். எந்தப் பரிமாணமும் நேரியலாக (Linear) இருக்காதோ என்றே தோன்றுகிறது ஜெ. காலம் உட்பட அனைத்துப் பரிமாணமும் சுழல்வதாக கற்பனை செய்து பார்த்தேன். அது மேலும் பல சிந்தனைகளை இட்டுச் சென்றது.

”மெல்லிய தொடுகையை அதுவே பெருக்கிக்கொள்கிறது. ஏனென்றால் அது உருவெடுக்க விழைகிறது” என்ற மகிதையின் வரிகள் மேலும் திறந்தது. ஆனந்த் ஸ்ரீநி மாமா விழைவைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் போது, “ஆணும் பெண்ணும் உறவு கொள்வது, உறவுச்சிக்கல் என்று சொல்வது என யாவுமே உயிரின் விழைவு என்பதற்குள் அடைக்கலாம். காதலோ காமமோ எந்தப் பெயரை வைத்துக் கொண்டாலும் ஒரு உயிர் தன் இணையைக் கண்டதும் உணர்வது இன்னொரு உயிரை உருவாக்கும் விழைவைத்தான். உன் காம விழைவென்பது உன் கருப்பையின் விழைவு மட்டுமே என்று நித்யா சொல்வார்” என்றார். அறிவியல் ரீதியாக ஹார்மோன்கள், தூண்டல்கள் எனக் கொண்டாலும் அந்த விழைவின் போது தூண்டப்படுவது கருப்பையின் விழைவு தான் என்பதை உணர்கிறேன். சந்ததியை உருவாக்கிய பின்னும் பிற இணை மேல் வரும் விழைவென்பது தன்னை மேலும் பெருக்கிக் கொள்ளும் வேட்கையே. அது இயலாது, தேவையில்லை என்று முடிவெடுத்துவிட்டால் அந்த விழைவின் சிக்கல்களிலிருந்து விடுபடலாம் என்று நினைக்கிறேன்

”சுழற்சியே பொருள்களின் இயல்பான அசைவு. இப்புவியில் இருக்கும் அனைத்து அசைவுகளும் ஏதேனும் சுழற்சியின் பகுதிகளே. இதோ விழிநோக்கும் அனைத்துக் கிளைகளும் சுழன்றுகொண்டிருக்கிறன. காற்றிலேறும் அத்தனை தூசிப்பருக்களும் சுழல்கின்றன. இங்கு கலமென குடமென வட்டை என கும்பா என நிறைந்திருக்கும் அத்தனை பொருட்களும் அந்த சுழற்சியின் வடிவங்கள்தான்.”

ஆம் அனைத்தும் சுழல்கின்றன. மேலும் எண்ணங்களைச் இது சார்ந்து சுழற்றிக் கொண்டிருக்கிறேன் ஜெ. யாவும் சுழற்சி தானா ஜெ? முடிவிலா இந்த சுழற்சியின் பாதையில் தான் யாவரும் சந்தித்துக் கொள்கிறோமா? கண நேரமும் ஒவ்வொன்றும் அசைந்து கொண்டிருப்பதாக கற்பனை செய்து கொள்கிறேன்.

இங்கிருந்து மகிதையின் தாசன் அடைந்த “பிரக்ஞையே பிரம்மம்.” என்பது எத்துனை மெய்யான அடைதல். ஆனால் இங்கிருந்தும் பல கேள்விகளும், சிந்தனைகளும் எழுந்து வந்தன ஜெ.

”அறியமுடிவதையே அறிவெனக் கொள்கிறோம் என்னும் பெருஞ்சிறையிலிருந்து எப்போதேனும் விடுதலை கொள்ளுமா மானுடம்?” இந்த வரிகளை இறுதியில் நிறைத்துக் கொள்கிறேன். அறிந்து கொண்ட சுழற்சியைப் பற்றி பிரமிக்கும் அதே நேரம் அறியமுடியாமையின் சுழற்சியை கண்டும் திகைக்கிறேன்.

இதை ”ஐதரேயம்” சார்ந்த சிந்தனை எனக் கொண்டால் இதை நான் ஏற்கிறேன் என்று தான் கொள்ள வேண்டும். ஆனால் சுழற்சியாக இல்லாமல் இருக்கும் விடயமாக ஏன் இருக்கக்கூடாது என்றும் சிந்தித்தேன். அது ஏன் ஒரு பரவளையமாக(parabola)/சைன் அலையாக இருக்கக் கூடாது. பெருவெடிப்பொன்று நிகழ்ந்து அதன் உச்சமடைந்து பழைய நிலைக்குத் திரும்பும் ஒன்று பழைய நிலையாக அல்லாமல் அதன் அருகமைந்த ஒன்றாக ஏன் இருக்கக்கூடாது என்று சிந்திக்கிறேன் ஜெ. முழுமுற்றாக ஒரு சுழற்சி நிகழ்ந்துவிட முடியாது என்றும் தோன்றியது. ஏனெனில் சுழற்சி பற்றிய ஞான மயக்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

ஐதரேய சிந்தனையை தொகுத்துக் கொள்ள முற்பட்டேன் ஜெ. சொல்வளர்க்காட்டின் ஒவ்வொரு சிந்தனையையும் தொகுத்துக் கொள்ள முற்படுகிறேன். இந்தப் புரிதல், கேள்விகள் சரிதானா என்பதையும் சொல்ல வேண்டும் ஜெ.

பிரேமையுடன்
ரம்யா.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 10, 2022 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.