Jeyamohan's Blog, page 57
July 14, 2025
நீலநிழல் (குறுநாவல்)- 5
( 5 )
நாற்காலியில் எடைமிக்க உடல்கொண்டவன் போல கால் தளர்ந்து அமர்ந்துகொண்டேன். டாக்டர் சற்று அப்பால் பழைய மரநாற்காலியில் தலைதாழ்த்தி, தோள்கள் தளர்ந்து அமர்ந்திருந்தார்.
கடிகாரத்தின் ஓசை மட்டும் அறைக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது. சிறையில் அன்று எவரும் தூங்கவில்லை என்று தோன்றியது. பேச்சொலிகள் முழக்கமாக ஒலித்தன. அவ்வப்போது வார்டர்கள் விசில் ஊதி அதட்டும் ஒலிகள். ஒருமுறை பாரா மாறும் விசில்களும் ஆணைகளும் கேட்டன.
சகாதேவன் வரும் ஓசை கேட்டது. அவருடன் முருகேசன் ஏதோ பேசிக்கொண்டு வந்தார்.
சகாதேவன் “டைம் ஆயிடுச்சு சார்… காலோஸுக்கு போகலாம்” என்றார்.
“நாய்க்கர் என்ன பண்றார்?”
“குளிச்சார், பெருமாளுக்கு பூஜை பண்ணணும்னார். அவரே ரெண்டு சின்ன கால்தடம் மாதிரி சாக்பீஸாலே தரையிலே வரைஞ்சு அதுக்கு பூபோட்டு கும்பிட்டார். புதுவேட்டி சட்டை கொண்டாந்து வைச்சிருந்தோம். அதை உடுத்திக்கிட்டு ரெடியாயிட்டார்… சிரிச்ச முகமாத்தான் இருக்கார்.”
டாக்டர் “அவங்காளுங்க வந்திட்டாங்களா?” என்றார்.
“அவங்க வக்கீலும் மத்த ஆளுங்களும் எல்லாம் அந்தப்பக்கம் விசிட்டர்ஸ் ஏரியாவிலே இருக்காங்க. உள்ள அனுமதி கெடையாது. பாடிய நீங்க செக் பண்ணி ஆளு இறந்தாச்சுன்னு சர்ட்டிஃபை பண்ணினதும் அவங்களுக்கு சட்டபூர்வமா ஹேண்டோவர் பண்ணிடுவோம். அதான் புரசீஜர்.”
“அந்த வக்கீல் அங்கதான் இருக்காரா?”
“ஆமா, நீங்க உள்ள இருக்கிற விஷயம் ஒரு மணிநேரம் முன்னாடித்தான் அவருக்கு தெரிஞ்சுது… அப்டியே டல்லாயிட்டார். அப்டி அவர பாத்ததே இல்ல. தலையை கையாலே தாங்கிட்டு நாக்காலியிலே உக்காந்திட்டிருக்கார்.”
நான் தலையை அசைத்தேன்.
“விசித்திரமான ஒரு ராத்திரி” என்று டாக்டர் சொன்னார். “அவரை செக் பண்றப்ப நான் ஒரு மனுசன்கூட இருக்கிற மாதிரியே இல்லை. ஏதோ தெய்வம் மாதிரி இருக்காரு.”
“சாவோட விளையாடுறார் மனுசர்… இத்தனை வாட்டி உயிர்தப்பியிருக்கார்… உயிர்தப்பியே சலிச்சுப் போயிருக்கும்போல. சாகிறதுக்கு அவரே ரெடியாயிட்டார்… யானையெல்லாம் அப்டித்தான் சாகுமாம். சாக அதுவே முடிவெடுத்து, ஒரு எடத்தை செலெக்ட் பண்ணி, அங்க போயி மரத்திலே சாய்ஞ்சு நின்னுக்கும். சாப்பாடு தண்ணி இல்லாம இருபது முப்பதுநாள் நின்னு அப்டியே விளுந்து செத்திரும்” என்றார் சகாதேவன்.
“எல்லா சாவிலேயும் ஒப்புக்குடுக்கிற ஒரு எடம் இருக்கு. என்னாலே முடியலை, போறும்னு பேஷண்டே ஒத்துக்கிடுவார்… அவ்ளவுதான், அதுக்குமேலே செய்ய ஒண்ணுமில்லை” என்றார் டாக்டர்.
“அவரு கெளம்பியாச்சு… அவருபாட்டுக்கு சிரிச்சுக்கிட்டே போகப்போறார். என்னமோ ஜாலி டிரிப்பு போற மாதிரி” சகாதேவன் சொன்னார்.
“இத்தனை வாட்டி அவர கொல்ல டிரை பண்ணியிருக்காங்க… எப்டி தப்பினார்?” என்று டாக்டர் கேட்டார்
“என்னைக்கேட்டா அவரு நிழல்னு சொல்றாரே அதிலே இருக்கு சூட்சுமம். அவரு எப்பவுமே தன் நிழலை பாத்திட்டிருக்காரு… அது ஒருத்தர் நிலைக்கண்ணாடியிலே பாக்கிற மாதிரித்தான்… நாம ஒருத்தர வெட்டப்போனா என்ன பாப்போம்? அவரு நம்மள பாக்கிறாரான்னு பாப்போம், இல்லியா? கண்ணு வேறபக்கம் திரும்பியிருந்தா நம்மள அவரு பாக்கலைன்னு நினைப்போம். ஆனா அவரு நிழல்ல நம்மள பாத்திட்டிருக்கார்… அதான் டிரிக்கு” சகாதேவன் சொன்னார்.
“ஓகோ” என்று டாக்டர் சொன்னார். அவருக்கு ஒரு சுவாரசியம் வந்தது போல் இருந்தது.
“அதோட அவருக்கு எடதுகை வாக்கு… அதை கவனிக்கணும். மிகப்பெரிய சண்டியருங்க முக்காவாசிப்பேரு எடதுகைக்காரனுக… நாம பெரும்பாலும் வலதுகை ஆளுங்க. நாம மத்தவனும் வலதுகைக்காரன்தான்னுதான் சாதாரணமா நினைப்போம். அந்தக் கணக்கிலேதான் அடிக்கவோ வெட்டவோ போவோம்… இவரு சட்னு இடதுகைய வீசுறப்ப எல்லாமே குழம்பிரும்…” என்று சகாதேவன் உற்சாகமாக சொன்னார். “இவரு எப்பவுமே ஆயுதத்தை வெளியே வச்சிருக்க மாட்டாரு. அது இடதுபக்கம் வேட்டிக்குள்ள இருக்கும். வலதுபக்கமா ஒருத்தன் வெட்டப்போனா சட்னு இடது கையிலே ஆயுதம் வந்திரும்… அதை எதிர்பார்க்கவே முடியாதுல்ல?”
“சரிதான்” என்றார் டாக்டர்.
“அப்றம் பல வாட்டி தப்பிச்சிட்டார். அதோட கொலைய எப்டி செய்வாங்க, என்னென்ன திட்டமிடுவாங்க எல்லாமே நுணுக்கமா தெரிஞ்சாச்சு… அதாவது, அவரோட சப்கான்ஷியஸுக்கே தப்பிக்கிறது எப்டீன்னு தெரியும். அதான் அவரு தப்பிக்கிறதிலே எக்ஸ்பர்ட்… அது தெரியாம வந்து உசிரக்குடுக்கிறானுக முட்டாள்கள்.”
“இப்ப தப்பிக்க முடியலை. சட்டமே பிடிச்சு கொல்லுது அவர” என்றார் டாக்டர்.
“அப்டித்தான் நான் நினைக்கிறேன். அவரோட பிரச்சினை ஈகோதான். அவருக்கு தப்பிச்சு தப்பிச்சு சலிச்சுப்போச்சு… உயிரோடு இருக்கிறதே அலுப்பா இருக்கு. ஆனா எதிரிகையாலே சாவுறது அவரோட ஈகோவுக்கு அசிங்கம்… ஒரு அருவாக்காரன் அவர வெட்டிக்கொன்னான்னா அவன் ஹீரோவா ஆயிடுவான்ல? அத அவரு எப்டி ஒத்துக்கிடுவார்? இப்ப சட்டம் அவரை தூக்கிலே போடுது. இது கௌரவம்தானே? போய்டலாம்னு முடிவு பண்ணிட்டார்…”
“அதைத்தான் வெள்ளையனும் திட்டம்போட்டிருக்கான்” என்றேன்.
சகாதேவன் திகைத்தவர் போலிருந்தார்.
“வெள்ளையன் யாரு?” என்றார் டாக்டர்.
“இவரு சாகணும்னு ஆசைப்படுற ஒருத்தன். ஆனா அவனே கொன்னா அந்த பழி சும்மாவிடாதுன்னும் பயப்படுறான்” என்றேன்.
சகாதேவன் ஒன்றும் சொல்லவில்லை. முருகேசன் உள்ளே வந்து கைக்கடிகாரத்தை காட்டினார்.
“கெளம்பலாம்” என்றார் சகாதேவன்.
நாங்கள் குளிர்ந்த பனிப்படலம் பரவியிருந்த கற்பாளங்களை மிதித்து ஓசையெழுப்பியபடி நடந்தோம்.
சிறையில் ஓசைகள் அடங்க ஆரம்பித்தன. கொஞ்சம் கொஞ்சமாக ஆழ்ந்த அமைதி உருவானது. எங்கள் காலடிகள் முரசொலி போல ஒலித்தன.
தூக்குமேடை அருகே டிஐஜியும் ஏழு ஆயுதமேந்திய காவலர்களும் நின்றிருந்தார்கள். டிஐஜி ஏதோ மென்றுகொண்டிருந்தார். காவலர்கள் பதற்றமடைந்தவர்கள் போலிருந்தனர்.
நானும் டாக்டரும் டிஐஜி அருகே சென்று நின்றோம். அவர் என்னை பார்த்து புன்னகைக்காமல் தலையசைத்தார். சகாதேவன் வாட்சைப் பார்த்தார். நானும் பார்த்தேன். மூன்று ஐம்பது. டிஐஜியிடம் சகாதேவன் மெல்ல சொல்ல அவர் தலையசைத்தார்.
சகாதேவன் நீண்ட வராண்டா வழியாக சென்று கையசைத்தார். தொலைவில் அரையிருளில் வெள்ளை ஆடையின் அசைவை கண்டேன். நாயக்கர் இரண்டு காவலர்களால் அழைத்து வரப்பட்டார். கைகளில் விலங்கு போடப்பட்டிருந்தது. அவர்கள் அவரை தொடவில்லை. அவர் இயல்பாக நிதானமாக நடந்துவந்தார்.
தூக்கு மேடைக்கு அருகே வந்ததும் நாயக்கர் அந்த மேடையையும் அதில் தொங்கிய கயிற்றையும் ஏறிட்டு பார்த்தார். முகம் சாதாரணமாக இருந்தது. பிறகு திரும்பி என்னைப் பார்த்து “இதான் அது, என்ன சார்?” என்றார்.
நான் பேசாமல் நின்றேன்.
“அந்த முதல் அரிவாள்… அதுக்கப்றம் எவ்ளவு அரிவாள், கத்தி, வாள், வேல்கம்பு, துப்பாக்கி… கடைசியிலே இந்த வெறும் கயிறு… சரிதான்” என்று புன்னகைத்தார்.
“கடைசியா ஏதாவது சொல்லணுமா?” என்று நான் கேட்டேன்.
“சொல்லணும்… யாராவது கேட்டா சொல்லுங்க. வெயிலுக்கு பயந்து படமெடுத்த பாம்போட பத்தியோட நெழலிலே போயி உக்காந்திருக்கிற தவளையை பத்தி ராமாயணத்திலே வருது… அந்த தவளைதான் சந்தோசமான தவளை” அவர் புன்னகைத்தார். நான் கண்களை திருப்பிக்கொண்டேன்.
டிஐஜி தலையை அசைக்க அவரை காவலர்கள் மேலே அழைத்துச் சென்றார்கள். ஓர் அமைதியான சடங்கு போல எல்லாம் நிதானமாக நடந்தன. எவரும் பேசிக்கொள்ளவில்லை. பெரும்பாலும் சைகைகள். அல்லது மெல்லிய முனகலோசை.
நாயக்கரின் கைகள் பின்பக்கம் சேர்த்து விலங்கிடப்பட்டன. அவர் கால்களைச் சேர்த்து கயிற்றால் கட்டினார்கள். அவர் முகத்தில் சாம்பல்நிறமான துணி உறை மாட்டப்பட்டது. அவர் மேடையின் பலகை மேல் நிறுத்தப்பட்டார். கழுத்தில் சுருக்கு மாட்டப்பட்டது. சுருக்கின் முடிச்சு கழுத்துக்கு மேல் புறங்கழுத்தில் அமையும்படி ஹேங்மேன் சரியாக பொருத்தினார். அதன்பின் எல்லாம் சரியாக உள்ளது என்று கைகாட்டினார்.
நான் நாயக்கரை பார்த்துக்கொண்டிருந்தேன். புலியின் பதினான்கு ஆயுட்காலங்கள் முடிவடைகின்றன. இவ்வளவு சம்பிரதாயமாகச் சாவதற்காகத்தான் அவர் அத்தனை சண்டைகளை கடந்து வந்திருக்கிறார். அந்த நிழல் எங்கே?
நான் நினைப்பதை சகாதேவனும் நினைத்தார்போல “அவரோட நெழல்” என்றார்.
விளக்கு கீழே இருந்தமையால் நாயக்கருடைய நிழல் சுருக்குக் கயிறுடன் மறுபக்கம் சுவரில் மிகப்பெரிதாக எழுந்து நின்றது. பூதம் நிற்பதுபோல.
டிஐஜி என்னிடம் “உத்தரவு கொடுக்கலாம்ல?” என்றார்.
“ம்” என்றேன்.
அவர் கைகாட்ட சகாதேவன் கைகளை வீசினார். ஹேங்மேன் தன் உதவியாளனுக்குக் கைகாட்ட அவன் நெம்புகோலை பிடித்து இழுத்தான். இரும்பு முனகும் ஓசை. வெடி போன்ற ஓசையுடன் கீழ்த்தளம் திறந்துகொண்டது. அந்த ஓசையின் எதிரொலி எங்கெங்கோ கேட்டது.
நாயக்கர் கயிற்றுடன் விழுந்து அந்த விசையில் சற்றே எம்பி தொங்கி சுழன்றார். சுழன்றவிசையில் முறுகி உடனே மறுபக்கம் அவர் உடல் சுழன்றது. தீ பட்டதுபோல கயிற்றில் அவர் உடல் துள்ளியது. பின்பக்கம் கட்டப்பட்ட கைகளும் தோள்களும் வலிப்பு கொண்டன. நீரை உதைப்பதுபோல சேர்த்துக் கட்டப்பட்ட கால்கள் இழுத்து இழுத்து துள்ளின.
இறுதி உதையுடன் அவர் சற்று மேலெழுந்தார். அக்கணம் ஒரு முறுகலோசை கேட்டது. என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள் கயிறு அறுந்து நாயக்கரின் உடல் கீழே சென்றது.
( 6 )
என் வாழ்க்கையில் மீண்டும் நான் நாயக்கரைச் சந்திக்க முடியுமென நினைக்கவே இல்லை. அத்தனை ஆண்டுகளுக்கு பின், நான் எங்கோ சென்று எவ்வாறோ வாழ்ந்து, முதிர்ந்து, களைத்து, அனைத்தின்மீதும் ஆர்வமிழந்து, அன்றாடத்தை மட்டுமே எண்ணியபடி அன்றன்று வாழ ஆரம்பித்துவிட்ட பின் அவரை அவருடைய ஊரிலேயே சந்தித்தேன்.
அன்று தூக்குமேடையில் அந்நிகழ்வுடன் என் நீதிபதி வாழ்க்கை முடிவுற்றது. நாயக்கரின் உடல் கீழே விழுந்ததும் டாக்டர் “ஓ காட்! ஓ காட்!” என்று கூவியபடி ஓடினார். நானும் டிஐஜியும் உடன் ஓடினோம்.
கீழே அவர் உடல் சுருண்டு கிடந்தது. டாக்டர் ஓடிச்சென்று சுருக்கை அவிழ்த்தார். நாடிபிடித்துப் பார்த்தார் “ஹி இஸ் அலைவ்!” என்றார். டாக்டரின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.
டிஐஜி “லெட்ஸ் ஹேங் அகெய்ன்… இல்லேன்னா பெரிய வம்பு” என்றார்.
நான் “நோ, அதுக்கு ரூல் இல்லை. அவரை உடனே ஆஸ்பத்திரியிலே சேக்கணும்” என்றேன்.
“சார், இந்த விஷயம் நமக்கு மட்டும்தான் தெரியும். வெளியே தெரியாம நிப்பாட்டிடலாம்… இல்லேன்னா எல்லாருக்குமே சிக்கல்” என்றார் சகாதேவன்.
“நோ… இது ஃபேட்… இத நாம ஒண்ணும் செய்ய முடியாது… ஆம்புலன்ஸை கூப்பிடுங்க”
டாக்டர் எழுந்து ”ஆமா, அவரு சொல்றதுதான் ரைட்டு…” என்றார். “இல்லேன்னா நாம எல்லாருக்குமே சிக்கல்.”
டிஐஜி கோபத்துடன் என்னை நோக்கி வந்தார். ஏதோ சொல்ல வாயெடுத்தார்.
நான் “என்னை மிரட்டுறீங்களா?” என்றேன்.
“மெரட்டல்தான்… முடியாது… மறுபடி தூக்கிலே போட்டாகணும்.” என்றார் டிஐஜி.
“அதுக்கு நீங்க எங்க ரெண்டு பேரையும் கொல்லணும்… இல்லேன்னா உங்க தொப்பி போறவரை விடமாட்டேன்” என்றேன்.
டிஐஜி முறைத்தபடி நின்றார்.
நான் முருகேசனிடம் “ஐயங்கார் மறுபக்கம் இருப்பார்… அவர்கிட்ட விஷயத்தைச் சொல்லு” என்றேன்.
முருகேசன் மறுபக்கம் சென்று சொல்ல ஐயங்காரும் ஆட்களும் ஓடிவந்தனர். அவர்கள் வெறிகொண்டவர்கள் போல கூச்சலிட்டனர்.@
“சாவே இல்ல! எங்க ஐயாவுக்கு சாவே இல்ல…!சாவ ஜெயிச்சாச்சு! எங்கடா சாவு? டேய் எங்கடா அந்த சாவு?”
சிறையே ஒரு பெரிய மிருகம்போல அலறிக் கூச்சலிட்டுக் கொண்டிருக்க அவரை அப்படியே ஆம்புலன்ஸில் ஏற்றி பெரிய மருத்துமனைக்கு கொண்டுசென்றோம். கூடவே அவருடைய ஆட்களும் வண்டிகளில் வந்தனர். வழியெங்கும் அவர்கள் கூச்சலிட்டுக்கொண்டே வந்தனர். ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தபோது அவர்கள் மொத்த ஆஸ்பத்திரியையும் கையிலெடுத்துக்கொண்டனர்.
“ஒழுங்கா பாருங்க… தப்பு எதுனா நடந்ததுந்னாக்கா ஆஸ்பதிரி இருக்காது” என்று ஒருவன் கூச்சலிட்டான்.
நாயக்கர் பிழைத்துக்கொண்டார். ஆனால் எட்டுமாதம் படுக்கையிலேயே இருந்தார். அவருடைய தண்டுவடம் சிதைந்துவிட்டது. ஒரு கையும் காலும் தளர்ந்துவிட்டன. பேச்சும் குழறலாகியது. அவருக்கு நிகழ்ந்ததெல்லாம் ஊடகங்களில் பேசுபொருளாகியது. பொதுமக்களின் சீற்றம் பல மாதங்களுக்கு நீடித்தது. அவருக்கு ஜனாதிபதியின் மன்னிப்பு கிடைத்து, மரணதண்டனை ஆயுள்தண்டனையாக மாறியது.
ஓராண்டில் நாயக்கர் முற்றிலும் குணமடைந்தார். மேலும் ஓராண்டுகூட அவர் ஜெயிலில் இருக்கவில்லை. ஏதோ தேசத்தலைவரின் பிறந்தநாள் என அவருக்கு நன்னடத்தை மன்னிப்பு வழங்கப்பட்டது. எல்லாவற்றுக்கும் அதற்கான வழிகள், அதற்கான விலைகள் இருந்தன.
நான் அந்நிகழ்வு நடந்த மறுநாளே என் பணியை துறந்தேன். ஐயங்கார் என்னை பார்க்க வரவே இல்லை. அவர் நாயக்கரின் உடல்நிலைமையை சட்டப்பிரச்சினையாக ஆக்கி, அதன் வழியாக லாபம் அடையும் முயற்சியில் இருந்தார்.
நான் என் மகனுடன் அமெரிக்கா சென்றுவிட்டேன். அங்கிருந்துகொண்டு செய்திகளை மட்டும் கேட்டுத் தெரிந்துகொண்டேன். எட்டு ஆண்டுகளுக்கு பின் சென்னை விமானநிலையத்தில் ஐயங்காரைப் பார்த்தேன். முதலில் அவரை அடையாளம் காணவில்லை. அவர் கருப்பு கோட் அணிந்திருக்கவில்லை. பெரிய நாமம் போட்டிருந்தார்.
அவர்தான் என்னை அடையாளம் கண்டு அருகே வந்தார். அறிமுகம் செய்துகொண்டதும் நான் எழுந்து கைகுலுக்கினேன். “உங்க பந்தயத்திலே ஜெயிச்சிட்டீங்க” என்றேன்.
“நீங்க ராஜினாமா செஞ்சது கேள்விப்பட்டேன்… அது நான் ஏதோ வேகத்திலே சொன்னது, அதுக்குப்போயி ராஜினாமா செஞ்சிருக்கவேண்டாம்” என்றார் ஐயங்கார்.
“இல்லை, எனக்குள்ள ஒரு உடைவு நடந்துபோச்சு. பந்தயம் வச்சிட்டேன்னு ஒரே காரணத்துக்காக நான் ஜெயிலுக்கு போயிருக்கக்கூடாது… அது பெரிய தப்பு.”
“அதுக்கென்ன, உங்க தொழில்தானே?”
“இல்ல, அது என் தொழில் இல்லை” என்றேன். “சரி, விட்டாச்சு. இப்ப நிம்மதியா இருக்க்கேன்… நீங்க எப்டி இருக்கீங்க?”
“அமோகமா இருக்கேன்… ரெண்டு பையன்களும் தொழிலிலேதான் இருக்கானுக” என்றார் ஐயங்கார்.
“வெள்ளையன் என்னானான்?”
“அவனத்தான் மூணு வருசம் முன்னாடி போட்டுட்டாங்களே… எட்டு துண்டு… சந்தை சங்சனிலே ஓட ஓட வெரட்டி வெட்டிக்கிட்டே இருந்தாங்க. அதன்பிறகு அதுக்குப் பழிக்குப்பழின்னு என்னென்னமோ போய்ட்டிருந்திச்சு… இப்பதான் கொஞ்சம் அடங்கியிருக்கு.”
நான் நாயக்கர் பற்றி கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. மேலும் பல ஆண்டுகளுக்குப்பின் சாத்தூர் அருகே நயினார்குளம் என்னும் ஊருக்குப் போயிருந்தேன். அது என் மகனின் மனைவியின் குலதெய்வம் இருக்கும் ஊர். அங்கே உச்சிமாகாளி அம்மன் கோயிலில் பூஜை எல்லாம் முடிந்து பொதுவாக பேசிக்கொண்டிருந்தோம். என் சம்பந்தி சென்னையில் ஆடிட்டர். அவர் பல விஷயங்களைச் சொல்லும் போக்கில் அங்கே பக்கத்தில்தான் நாயக்கர் தங்கியிருப்பதாகச் சொன்னார்.
“நாயக்கரா?” என வியந்துவிட்டேன்.
“ஆமா, அவரேதான். எல்லாத்தையும் முடிச்சுட்டு ஊருக்கே வந்திட்டார். இங்க இப்ப வெவசாயம் பண்றார்…” என்றார் சம்பந்தி. “பெரிய பண்ணை… நூத்தம்து ஏக்கருக்குமேலே இருக்கும். கரும்பு, சோளம். மெளகா எல்லாம் போடுறார்…”
“விவசாயமா? அவருக்கு என்ன வயசு இருக்கும்?”
“யாருக்குத் தெரியும்? எழுபதோ எம்பதோ தொண்ணூறோ… ஆளு அப்டியே மாறாமத்தான் இருக்கார். நாம செத்து நம்ம பேரப்புள்ளைங்க காலத்திலயும் அவரு அப்டியேதான் இருப்பாரு போல.”
நான் அவரைச் சந்திக்க முடிவுசெய்தேன். ஏனென்றால் அப்போது எல்லாவற்றிலுமிருந்து முழுமையாக விலகிவிட்டிருந்தேன். எல்லாமே பழைய நினைவுகளாக பொருளிழந்துவிட்டன.
பொருளிழக்காத ஒன்று இருந்தது, நாயக்கர் சொன்ன ஒரு வரி. நேற்றோ நாளையோ இல்லாமல் அன்றன்றில், அந்தந்தக் கணத்தில் மட்டும் வாழ்வது. வயதாகி, சாவு அணுக்கமாக நின்றிருக்கையில் நான் அப்படித்தான் இருந்தேன். ஒவ்வொரு நாள் கண்விழிக்கையிலும் எழும் நினைப்பு ‘இதோ ஒரு நாள் கிடைத்திருக்கிறது. இன்னும் ஒரு நாள். இன்னும் இருபத்துநான்கு மணிநேரம்…’ அந்த உணர்வு அளிக்கும் இனிமைதான் என் வாழ்க்கையை வாழச்செய்தது.
நான் சந்திக்க விரும்புகிறேன் என சொல்லி அனுப்பினேன். நாயக்கர் வரச்சொல்லி அனுமதி அளித்தார். என் சம்பந்தியின் ஓட்டுநர் செந்தில்குமார் என்னை அவன் ஜீப்பில் அழைத்துச்சென்றான்.
நான் சென்றபோது நாயக்கர் கையால் ஓட்டும் டிராக்டர் போன்ற சிறிய உழவு இயந்திரத்தால் உழுதுகொண்டிருந்தார். முதலில் அவர் நாயக்கர் என எனக்கு தெரியவில்லை. எங்களைக் கண்டதும் அவர் கையசைத்து அழைத்தார். யாரோ வழிசொல்லப்போகிறார்கள் என்று நினைத்து வண்டியை நிறுத்தி இறங்கி அருகே சென்றோம். அது நாயக்கர்தான் என்று கண்டதும் திகைத்துவிட்டேன்.
“வணக்கம்… எப்டி இருக்கீங்க? அமெரிக்காவிலேன்னு கேள்விப்பட்டேன்” என்றார் நாயக்கர்
“ஆமா… தற்செயலா இந்தப்பக்கம் வந்தேன்… அப்பதான் கேள்விப்பட்டேன்” என்றேன். “சந்திச்சு பல ஆண்டு ஆகுது. மறுபடி எப்ப பாக்கப்போறம்?”
“அதென்ன அப்டி சொல்றீங்க? பாத்தா என்ன? இங்கதானே இருக்கோம்?”
“நீங்க இருப்பீங்க… உங்களுக்கு சாவே இல்ல” என்றேன்.
நாயக்கர் உரக்கச் சிரித்தார். “இல்ல, இப்பவும் அது கூடவேதான் இருக்கு” என்றார்.
நாங்கள் வரப்பிலேயே அமர்ந்தோம். நாயக்கர் வேலையாளிடம் இளநீர் போட்டு தரச்சொன்னார். குடித்தபடி பேசிக்கொண்டோம்.
“எனக்கு தெரிஞ்சுக்கிட ஒண்ணுதான் மிச்சமிருக்கு நாய்க்கர்வாள்” என்றேன். “சொல்லுங்க, உங்க நிழல் கிட்ட அன்னிக்கு என்ன பேசினீங்க? உங்க கூட உங்க நிழலும் சேர்ந்ததனாலேதான் அந்த கயிறு அறுந்ததுன்னு நான் நினைச்சுக்கிடுறதுண்டு.”
“இருக்கலாம்… இல்லே அந்த சின்னப்பய முடிச்சிலே ஏதாவது குளறுபடி செஞ்சிருக்கலாம்…” என்றார் நாயக்கர்.
“முகுளம் உடைஞ்சிருக்கும்… ஆனா தப்பிச்சீங்க.”
“அதெல்லாம் ஆராய்ச்சி பண்றதிலே அர்த்தமே இல்லை… இருக்கேன், இந்தா இப்டி… அடுத்த செகண்டு போயிடலாம். அவ்ளவுதான்.”
“சொல்லுங்க என்ன நினைச்சீங்க?”
“கடைசிநாள் வரை நான் உங்களை நம்பி மதிச்சேன். சாட்சிகள்லாம் பொய், கேஸும் பொய்னாக்கூட நான் பண்ணின மத்த கொலைகளுக்காக நீதி நியாயமாத்தான் என்னைத் தேடி வந்திருக்குன்னு நினைச்சேன். என்னை பாத்துட்டு போனீங்கள்ல, அப்ப சந்தேகம் வந்திட்டுது. நீங்களே உங்க நீதியை நம்பலை. அதான் என்னை தேடிவந்து பாத்தீங்க. எங்கிட்ட பேசுறப்ப கண் கலங்கினீங்க…”
“ஆமா”
“அதோட மனசு கலங்கிட்டுது… போறதுக்கு முன்னாடி வெள்ளையனை ஒழிக்கணும்னு நினைக்க ஆரம்பிச்சிட்டேன்… நினைக்க நினைக்க வெறி ஏறிக்கிட்டே இருந்தது. அவனை எங்காளுங்க கொன்னிருவாங்கன்னு தெரியும்… ஆனா நானே கொல்லணும்னு துடிச்சேன். ஆனா முடியாது. என் கதை முடிஞ்சாச்சு… அன்னிக்கு என் நிழலோட பேசிட்டே இருந்தேன். அவ்ளவுதான், அந்த வஞ்சத்தோட நெறைவேறா ஆசையோட சாகப்போறேன்னு தோணிட்டுது. என் பக்கத்திலே நெழல் உக்காந்திட்டிருந்தது… அதப்பாத்தேன்… சரி வா வெளையாடுவோம்னு கூப்பிட்டேன்… வெளையாடினோம்.”
“வெளையாட வெளையாட என் மனசு மாறிட்டே இருந்திச்சு” என்றார் நாயக்கர். “…எப்பவும் நானேதான் ஜெயிப்பேன். இப்ப அது ஜெயிக்கட்டுமேன்னு நினைச்சேன். எப்டியும் எல்லாம் முடிஞ்சுபோச்சு… அது ஜெயிக்கிற காலம் வந்தாச்சு. ஒவ்வொரு ஆட்டமா விட்டுக்குடுக்க ஆரம்பிச்சேன். ஒவ்வொருத்தரையா மன்னிச்சு விட்டுட்டே இருந்தேன். கடைசியா வெள்ளையனை மன்னிச்சேன். ஆமா முழுமனசோட அவனை மன்னிச்சேன்… அதோட முழுசா தோத்துட்டேன். நிழல் ஜெயிச்சுது.”
“அதுக்குமேலே ஆட்டம் இல்லை. எல்லாம் அமைதியாயிட்டுது. சாப்பிட்டேன். நிம்மதியா தூங்கினேன். அந்த நெழல்கூட பேசிட்டே இருந்தேன். என் வாழ்க்கையை அது எப்டியெல்லாம் அர்த்தமாக்கியிருக்குன்னு தெரிஞ்சுது. சாவுன்னா என்ன? இந்த புக்ல எல்லாம் முக்கியமான வரிகளை கோடுபோட்டு வைப்பாங்கள்ல அதுதான்…மனுச வாழ்க்கையிலே எந்த பெரிய அனுபவம்னாலும் சாவோட அடிக்கோடு இருக்கும். அத மட்டும்தான் நாம ஞாபகம் வைச்சுக்கிடுவோம்… மத்ததெல்லாம் மறந்திரும்… பலபேரு வாழ்க்கையிலே நாலஞ்சு வரிதான் அப்டி இருக்கும். என்னோட வாழ்க்கையிலே எல்லா வரியும் அடியிலே கோடு போட்டிருக்கு. எவ்ளவு பெரிய கொடுப்பினை!”
“ஆமா” என்றேன். “இப்ப இந்த வயசிலே அது அப்டி தெளிவா தெரியுது.”
“சாவோட அருமை தெரிஞ்சவன்தான் மலைமேலே ஏறப்போறான். கடலுக்குள்ள நீஞ்சிப்போறான். நான் இந்த பொட்டக்காட்டிலேயே அதை எல்லாம் அனுபவிச்சிட்டேன்… நல்ல வாழ்க்கை. நெறைவாழ்க்கை… அப்றம் என்ன?” என்றார் நாயக்கர். “அன்னிக்கு தூக்குமேடைக்கு போறப்ப அப்டி மனசு நிறைஞ்சிருந்தது. உடம்பே தித்திக்கிற மாதிரி இருந்தது. இது ஒரு பெரிய அனுபவம், இதிலே ஒரு துளியையும் விட்டிரக்கூடாதுன்னு நினைச்சேன். அந்த வழி, அந்த படி எல்லாத்தையும் ரசிச்சேன். அந்த தூக்குமேடையைக்கூட பலதடவை ரசிச்சு பாத்தேன். முகத்த மூடுறதுக்கு முன்னாடி என்னோட நிழல பாத்தேன். பெரிசா பூதம் மாதிரி நின்னுட்டிருந்தது.”
நான் அவர் பேசப்போவதை எதிர்பார்த்து அமர்ந்திருந்தேன்.
“அப்றம் தெரியுமே, மறுபடி இன்னொரு வட்டம்… நான் நிழல்கிட்ட கேட்டேன். ‘நான் தோத்துட்டேனே, அப்றம் ஏன் என்னை தப்பவிட்டே?’ன்னு. சிரிச்சுக்கிட்டே ‘நீயா தோக்கமுடியாது, நான் உன்னை தோக்கடிக்கணும்’னு நிழல் சொல்லிச்சு… ‘உனக்கு மிச்சமில்லாம இருக்கலாம், எனக்கு மிச்சமிருக்கு’ன்னு சொல்லிட்டுது…” நாயக்கர் சிரித்தார். “ஆமா அதுக்கு பல கணக்குகள் மிச்சமிருந்திச்சு… ஒவ்வொரு கணக்கா என்னைய வைச்சு முடிச்சுது” அவர் அவருக்குரிய பாணியில் புறங்கையால் மீசையை நீவிக்கொண்டார்.
அந்த அசைவு வழியாக அவரிலிருந்து அந்த வேட்டைக்காரன் மீண்டெழுந்து வந்ததை கண்டேன். ரத்தமெழுகு போட்ட மீசை. அது அப்போதும் கருமையாகவே இருந்தது.
“இப்ப எப்டி இருக்கீங்க? இப்ப உங்க கணக்குகள் முடிஞ்சிருச்சா?” என்றேன். “இப்ப சாவை காத்து இருக்கீங்களா?”
“இல்லை. நான் பாட்டுக்கு இருக்கேன். எனக்கு கணக்கு மிச்சமிருந்தாலும் இல்லாட்டியும் அதனாலே ஒண்ணுமில்லை. அதுக்கு என்ன மிச்சமிருக்குன்னு நம்மாலே சொல்லிக்கிட முடியாது… அது முடிவே இல்லாதது. புரிஞ்சுகிடவே முடியாதது…”
நான் அவரிடம் பேசிவிட்டு விடைபெற்றுக் கிளம்பினேன். என் கைகளைப் பிடித்து சிரித்தபடி நாயக்கர் சொன்னார். “மறுபடியும் பாப்போம்னு நான் யார்கிட்டயும் சொல்றதில்லை… பாக்கமாட்டோம்னும் சொல்றதில்லை… இப்ப துடுப்ப மடியிலே வைச்சுக்கிட்டு மிதக்கிற போட்ல உக்காந்திட்டிருக்கேன்… போறதுதான் கணக்கு. போற எடம்னு ஒண்ணுமில்லை.”
நெடுந்தொலைவு வரை என்னை பார்த்தபடி அவர் வரப்பில் நின்றிருந்தார். நான் திரும்பும்போதெல்லாம் அவரையே நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் அடுத்தக் கணமே கொல்லப்படலாம். எத்தனை எத்தனை எதிரிகள். எவ்வளவு அரிவாள்கள். அதேசமயம் சாவே இல்லாமல் இங்கே இப்படியே இருந்துகொண்டும் இருக்கலாம். அந்த இடம் அவருடைய மறைவிடம் அல்ல. அவரைத் தேடி வருவார்கள். அவர் அதற்கும் தயாராகத்தான் இருப்பார்.
நான் எண்ணியது சரி. அன்று மாலையே எட்டுபேர் அவரை சூழ்ந்துகொண்டு வெட்டினார்கள். நான் எண்ணியது மேலும் சரி. அம்முறையும் மூன்று மாதம் மருத்துவமனை வாசத்திற்குப்பின் நாயக்கர் பிழைத்துக்கொண்டார்.
(நிறைவு)
நீலநிழல் (குறுநாவல்)- 5
( 5 )
நாற்காலியில் எடைமிக்க உடல்கொண்டவன் போல கால் தளர்ந்து அமர்ந்துகொண்டேன். டாக்டர் சற்று அப்பால் பழைய மரநாற்காலியில் தலைதாழ்த்தி, தோள்கள் தளர்ந்து அமர்ந்திருந்தார்.
கடிகாரத்தின் ஓசை மட்டும் அறைக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது. சிறையில் அன்று எவரும் தூங்கவில்லை என்று தோன்றியது. பேச்சொலிகள் முழக்கமாக ஒலித்தன. அவ்வப்போது வார்டர்கள் விசில் ஊதி அதட்டும் ஒலிகள். ஒருமுறை பாரா மாறும் விசில்களும் ஆணைகளும் கேட்டன.
சகாதேவன் வரும் ஓசை கேட்டது. அவருடன் முருகேசன் ஏதோ பேசிக்கொண்டு வந்தார்.
சகாதேவன் “டைம் ஆயிடுச்சு சார்… காலோஸுக்கு போகலாம்” என்றார்.
“நாய்க்கர் என்ன பண்றார்?”
“குளிச்சார், பெருமாளுக்கு பூஜை பண்ணணும்னார். அவரே ரெண்டு சின்ன கால்தடம் மாதிரி சாக்பீஸாலே தரையிலே வரைஞ்சு அதுக்கு பூபோட்டு கும்பிட்டார். புதுவேட்டி சட்டை கொண்டாந்து வைச்சிருந்தோம். அதை உடுத்திக்கிட்டு ரெடியாயிட்டார்… சிரிச்ச முகமாத்தான் இருக்கார்.”
டாக்டர் “அவங்காளுங்க வந்திட்டாங்களா?” என்றார்.
“அவங்க வக்கீலும் மத்த ஆளுங்களும் எல்லாம் அந்தப்பக்கம் விசிட்டர்ஸ் ஏரியாவிலே இருக்காங்க. உள்ள அனுமதி கெடையாது. பாடிய நீங்க செக் பண்ணி ஆளு இறந்தாச்சுன்னு சர்ட்டிஃபை பண்ணினதும் அவங்களுக்கு சட்டபூர்வமா ஹேண்டோவர் பண்ணிடுவோம். அதான் புரசீஜர்.”
“அந்த வக்கீல் அங்கதான் இருக்காரா?”
“ஆமா, நீங்க உள்ள இருக்கிற விஷயம் ஒரு மணிநேரம் முன்னாடித்தான் அவருக்கு தெரிஞ்சுது… அப்டியே டல்லாயிட்டார். அப்டி அவர பாத்ததே இல்ல. தலையை கையாலே தாங்கிட்டு நாக்காலியிலே உக்காந்திட்டிருக்கார்.”
நான் தலையை அசைத்தேன்.
“விசித்திரமான ஒரு ராத்திரி” என்று டாக்டர் சொன்னார். “அவரை செக் பண்றப்ப நான் ஒரு மனுசன்கூட இருக்கிற மாதிரியே இல்லை. ஏதோ தெய்வம் மாதிரி இருக்காரு.”
“சாவோட விளையாடுறார் மனுசர்… இத்தனை வாட்டி உயிர்தப்பியிருக்கார்… உயிர்தப்பியே சலிச்சுப் போயிருக்கும்போல. சாகிறதுக்கு அவரே ரெடியாயிட்டார்… யானையெல்லாம் அப்டித்தான் சாகுமாம். சாக அதுவே முடிவெடுத்து, ஒரு எடத்தை செலெக்ட் பண்ணி, அங்க போயி மரத்திலே சாய்ஞ்சு நின்னுக்கும். சாப்பாடு தண்ணி இல்லாம இருபது முப்பதுநாள் நின்னு அப்டியே விளுந்து செத்திரும்” என்றார் சகாதேவன்.
“எல்லா சாவிலேயும் ஒப்புக்குடுக்கிற ஒரு எடம் இருக்கு. என்னாலே முடியலை, போறும்னு பேஷண்டே ஒத்துக்கிடுவார்… அவ்ளவுதான், அதுக்குமேலே செய்ய ஒண்ணுமில்லை” என்றார் டாக்டர்.
“அவரு கெளம்பியாச்சு… அவருபாட்டுக்கு சிரிச்சுக்கிட்டே போகப்போறார். என்னமோ ஜாலி டிரிப்பு போற மாதிரி” சகாதேவன் சொன்னார்.
“இத்தனை வாட்டி அவர கொல்ல டிரை பண்ணியிருக்காங்க… எப்டி தப்பினார்?” என்று டாக்டர் கேட்டார்
“என்னைக்கேட்டா அவரு நிழல்னு சொல்றாரே அதிலே இருக்கு சூட்சுமம். அவரு எப்பவுமே தன் நிழலை பாத்திட்டிருக்காரு… அது ஒருத்தர் நிலைக்கண்ணாடியிலே பாக்கிற மாதிரித்தான்… நாம ஒருத்தர வெட்டப்போனா என்ன பாப்போம்? அவரு நம்மள பாக்கிறாரான்னு பாப்போம், இல்லியா? கண்ணு வேறபக்கம் திரும்பியிருந்தா நம்மள அவரு பாக்கலைன்னு நினைப்போம். ஆனா அவரு நிழல்ல நம்மள பாத்திட்டிருக்கார்… அதான் டிரிக்கு” சகாதேவன் சொன்னார்.
“ஓகோ” என்று டாக்டர் சொன்னார். அவருக்கு ஒரு சுவாரசியம் வந்தது போல் இருந்தது.
“அதோட அவருக்கு எடதுகை வாக்கு… அதை கவனிக்கணும். மிகப்பெரிய சண்டியருங்க முக்காவாசிப்பேரு எடதுகைக்காரனுக… நாம பெரும்பாலும் வலதுகை ஆளுங்க. நாம மத்தவனும் வலதுகைக்காரன்தான்னுதான் சாதாரணமா நினைப்போம். அந்தக் கணக்கிலேதான் அடிக்கவோ வெட்டவோ போவோம்… இவரு சட்னு இடதுகைய வீசுறப்ப எல்லாமே குழம்பிரும்…” என்று சகாதேவன் உற்சாகமாக சொன்னார். “இவரு எப்பவுமே ஆயுதத்தை வெளியே வச்சிருக்க மாட்டாரு. அது இடதுபக்கம் வேட்டிக்குள்ள இருக்கும். வலதுபக்கமா ஒருத்தன் வெட்டப்போனா சட்னு இடது கையிலே ஆயுதம் வந்திரும்… அதை எதிர்பார்க்கவே முடியாதுல்ல?”
“சரிதான்” என்றார் டாக்டர்.
“அப்றம் பல வாட்டி தப்பிச்சிட்டார். அதோட கொலைய எப்டி செய்வாங்க, என்னென்ன திட்டமிடுவாங்க எல்லாமே நுணுக்கமா தெரிஞ்சாச்சு… அதாவது, அவரோட சப்கான்ஷியஸுக்கே தப்பிக்கிறது எப்டீன்னு தெரியும். அதான் அவரு தப்பிக்கிறதிலே எக்ஸ்பர்ட்… அது தெரியாம வந்து உசிரக்குடுக்கிறானுக முட்டாள்கள்.”
“இப்ப தப்பிக்க முடியலை. சட்டமே பிடிச்சு கொல்லுது அவர” என்றார் டாக்டர்.
“அப்டித்தான் நான் நினைக்கிறேன். அவரோட பிரச்சினை ஈகோதான். அவருக்கு தப்பிச்சு தப்பிச்சு சலிச்சுப்போச்சு… உயிரோடு இருக்கிறதே அலுப்பா இருக்கு. ஆனா எதிரிகையாலே சாவுறது அவரோட ஈகோவுக்கு அசிங்கம்… ஒரு அருவாக்காரன் அவர வெட்டிக்கொன்னான்னா அவன் ஹீரோவா ஆயிடுவான்ல? அத அவரு எப்டி ஒத்துக்கிடுவார்? இப்ப சட்டம் அவரை தூக்கிலே போடுது. இது கௌரவம்தானே? போய்டலாம்னு முடிவு பண்ணிட்டார்…”
“அதைத்தான் வெள்ளையனும் திட்டம்போட்டிருக்கான்” என்றேன்.
சகாதேவன் திகைத்தவர் போலிருந்தார்.
“வெள்ளையன் யாரு?” என்றார் டாக்டர்.
“இவரு சாகணும்னு ஆசைப்படுற ஒருத்தன். ஆனா அவனே கொன்னா அந்த பழி சும்மாவிடாதுன்னும் பயப்படுறான்” என்றேன்.
சகாதேவன் ஒன்றும் சொல்லவில்லை. முருகேசன் உள்ளே வந்து கைக்கடிகாரத்தை காட்டினார்.
“கெளம்பலாம்” என்றார் சகாதேவன்.
நாங்கள் குளிர்ந்த பனிப்படலம் பரவியிருந்த கற்பாளங்களை மிதித்து ஓசையெழுப்பியபடி நடந்தோம்.
சிறையில் ஓசைகள் அடங்க ஆரம்பித்தன. கொஞ்சம் கொஞ்சமாக ஆழ்ந்த அமைதி உருவானது. எங்கள் காலடிகள் முரசொலி போல ஒலித்தன.
தூக்குமேடை அருகே டிஐஜியும் ஏழு ஆயுதமேந்திய காவலர்களும் நின்றிருந்தார்கள். டிஐஜி ஏதோ மென்றுகொண்டிருந்தார். காவலர்கள் பதற்றமடைந்தவர்கள் போலிருந்தனர்.
நானும் டாக்டரும் டிஐஜி அருகே சென்று நின்றோம். அவர் என்னை பார்த்து புன்னகைக்காமல் தலையசைத்தார். சகாதேவன் வாட்சைப் பார்த்தார். நானும் பார்த்தேன். மூன்று ஐம்பது. டிஐஜியிடம் சகாதேவன் மெல்ல சொல்ல அவர் தலையசைத்தார்.
சகாதேவன் நீண்ட வராண்டா வழியாக சென்று கையசைத்தார். தொலைவில் அரையிருளில் வெள்ளை ஆடையின் அசைவை கண்டேன். நாயக்கர் இரண்டு காவலர்களால் அழைத்து வரப்பட்டார். கைகளில் விலங்கு போடப்பட்டிருந்தது. அவர்கள் அவரை தொடவில்லை. அவர் இயல்பாக நிதானமாக நடந்துவந்தார்.
தூக்கு மேடைக்கு அருகே வந்ததும் நாயக்கர் அந்த மேடையையும் அதில் தொங்கிய கயிற்றையும் ஏறிட்டு பார்த்தார். முகம் சாதாரணமாக இருந்தது. பிறகு திரும்பி என்னைப் பார்த்து “இதான் அது, என்ன சார்?” என்றார்.
நான் பேசாமல் நின்றேன்.
“அந்த முதல் அரிவாள்… அதுக்கப்றம் எவ்ளவு அரிவாள், கத்தி, வாள், வேல்கம்பு, துப்பாக்கி… கடைசியிலே இந்த வெறும் கயிறு… சரிதான்” என்று புன்னகைத்தார்.
“கடைசியா ஏதாவது சொல்லணுமா?” என்று நான் கேட்டேன்.
“சொல்லணும்… யாராவது கேட்டா சொல்லுங்க. வெயிலுக்கு பயந்து படமெடுத்த பாம்போட பத்தியோட நெழலிலே போயி உக்காந்திருக்கிற தவளையை பத்தி ராமாயணத்திலே வருது… அந்த தவளைதான் சந்தோசமான தவளை” அவர் புன்னகைத்தார். நான் கண்களை திருப்பிக்கொண்டேன்.
டிஐஜி தலையை அசைக்க அவரை காவலர்கள் மேலே அழைத்துச் சென்றார்கள். ஓர் அமைதியான சடங்கு போல எல்லாம் நிதானமாக நடந்தன. எவரும் பேசிக்கொள்ளவில்லை. பெரும்பாலும் சைகைகள். அல்லது மெல்லிய முனகலோசை.
நாயக்கரின் கைகள் பின்பக்கம் சேர்த்து விலங்கிடப்பட்டன. அவர் கால்களைச் சேர்த்து கயிற்றால் கட்டினார்கள். அவர் முகத்தில் சாம்பல்நிறமான துணி உறை மாட்டப்பட்டது. அவர் மேடையின் பலகை மேல் நிறுத்தப்பட்டார். கழுத்தில் சுருக்கு மாட்டப்பட்டது. சுருக்கின் முடிச்சு கழுத்துக்கு மேல் புறங்கழுத்தில் அமையும்படி ஹேங்மேன் சரியாக பொருத்தினார். அதன்பின் எல்லாம் சரியாக உள்ளது என்று கைகாட்டினார்.
நான் நாயக்கரை பார்த்துக்கொண்டிருந்தேன். புலியின் பதினான்கு ஆயுட்காலங்கள் முடிவடைகின்றன. இவ்வளவு சம்பிரதாயமாகச் சாவதற்காகத்தான் அவர் அத்தனை சண்டைகளை கடந்து வந்திருக்கிறார். அந்த நிழல் எங்கே?
நான் நினைப்பதை சகாதேவனும் நினைத்தார்போல “அவரோட நெழல்” என்றார்.
விளக்கு கீழே இருந்தமையால் நாயக்கருடைய நிழல் சுருக்குக் கயிறுடன் மறுபக்கம் சுவரில் மிகப்பெரிதாக எழுந்து நின்றது. பூதம் நிற்பதுபோல.
டிஐஜி என்னிடம் “உத்தரவு கொடுக்கலாம்ல?” என்றார்.
“ம்” என்றேன்.
அவர் கைகாட்ட சகாதேவன் கைகளை வீசினார். ஹேங்மேன் தன் உதவியாளனுக்குக் கைகாட்ட அவன் நெம்புகோலை பிடித்து இழுத்தான். இரும்பு முனகும் ஓசை. வெடி போன்ற ஓசையுடன் கீழ்த்தளம் திறந்துகொண்டது. அந்த ஓசையின் எதிரொலி எங்கெங்கோ கேட்டது.
நாயக்கர் கயிற்றுடன் விழுந்து அந்த விசையில் சற்றே எம்பி தொங்கி சுழன்றார். சுழன்றவிசையில் முறுகி உடனே மறுபக்கம் அவர் உடல் சுழன்றது. தீ பட்டதுபோல கயிற்றில் அவர் உடல் துள்ளியது. பின்பக்கம் கட்டப்பட்ட கைகளும் தோள்களும் வலிப்பு கொண்டன. நீரை உதைப்பதுபோல சேர்த்துக் கட்டப்பட்ட கால்கள் இழுத்து இழுத்து துள்ளின.
இறுதி உதையுடன் அவர் சற்று மேலெழுந்தார். அக்கணம் ஒரு முறுகலோசை கேட்டது. என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள் கயிறு அறுந்து நாயக்கரின் உடல் கீழே சென்றது.
( 6 )
என் வாழ்க்கையில் மீண்டும் நான் நாயக்கரைச் சந்திக்க முடியுமென நினைக்கவே இல்லை. அத்தனை ஆண்டுகளுக்கு பின், நான் எங்கோ சென்று எவ்வாறோ வாழ்ந்து, முதிர்ந்து, களைத்து, அனைத்தின்மீதும் ஆர்வமிழந்து, அன்றாடத்தை மட்டுமே எண்ணியபடி அன்றன்று வாழ ஆரம்பித்துவிட்ட பின் அவரை அவருடைய ஊரிலேயே சந்தித்தேன்.
அன்று தூக்குமேடையில் அந்நிகழ்வுடன் என் நீதிபதி வாழ்க்கை முடிவுற்றது. நாயக்கரின் உடல் கீழே விழுந்ததும் டாக்டர் “ஓ காட்! ஓ காட்!” என்று கூவியபடி ஓடினார். நானும் டிஐஜியும் உடன் ஓடினோம்.
கீழே அவர் உடல் சுருண்டு கிடந்தது. டாக்டர் ஓடிச்சென்று சுருக்கை அவிழ்த்தார். நாடிபிடித்துப் பார்த்தார் “ஹி இஸ் அலைவ்!” என்றார். டாக்டரின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.
டிஐஜி “லெட்ஸ் ஹேங் அகெய்ன்… இல்லேன்னா பெரிய வம்பு” என்றார்.
நான் “நோ, அதுக்கு ரூல் இல்லை. அவரை உடனே ஆஸ்பத்திரியிலே சேக்கணும்” என்றேன்.
“சார், இந்த விஷயம் நமக்கு மட்டும்தான் தெரியும். வெளியே தெரியாம நிப்பாட்டிடலாம்… இல்லேன்னா எல்லாருக்குமே சிக்கல்” என்றார் சகாதேவன்.
“நோ… இது ஃபேட்… இத நாம ஒண்ணும் செய்ய முடியாது… ஆம்புலன்ஸை கூப்பிடுங்க”
டாக்டர் எழுந்து ”ஆமா, அவரு சொல்றதுதான் ரைட்டு…” என்றார். “இல்லேன்னா நாம எல்லாருக்குமே சிக்கல்.”
டிஐஜி கோபத்துடன் என்னை நோக்கி வந்தார். ஏதோ சொல்ல வாயெடுத்தார்.
நான் “என்னை மிரட்டுறீங்களா?” என்றேன்.
“மெரட்டல்தான்… முடியாது… மறுபடி தூக்கிலே போட்டாகணும்.” என்றார் டிஐஜி.
“அதுக்கு நீங்க எங்க ரெண்டு பேரையும் கொல்லணும்… இல்லேன்னா உங்க தொப்பி போறவரை விடமாட்டேன்” என்றேன்.
டிஐஜி முறைத்தபடி நின்றார்.
நான் முருகேசனிடம் “ஐயங்கார் மறுபக்கம் இருப்பார்… அவர்கிட்ட விஷயத்தைச் சொல்லு” என்றேன்.
முருகேசன் மறுபக்கம் சென்று சொல்ல ஐயங்காரும் ஆட்களும் ஓடிவந்தனர். அவர்கள் வெறிகொண்டவர்கள் போல கூச்சலிட்டனர்.@
“சாவே இல்ல! எங்க ஐயாவுக்கு சாவே இல்ல…!சாவ ஜெயிச்சாச்சு! எங்கடா சாவு? டேய் எங்கடா அந்த சாவு?”
சிறையே ஒரு பெரிய மிருகம்போல அலறிக் கூச்சலிட்டுக் கொண்டிருக்க அவரை அப்படியே ஆம்புலன்ஸில் ஏற்றி பெரிய மருத்துமனைக்கு கொண்டுசென்றோம். கூடவே அவருடைய ஆட்களும் வண்டிகளில் வந்தனர். வழியெங்கும் அவர்கள் கூச்சலிட்டுக்கொண்டே வந்தனர். ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தபோது அவர்கள் மொத்த ஆஸ்பத்திரியையும் கையிலெடுத்துக்கொண்டனர்.
“ஒழுங்கா பாருங்க… தப்பு எதுனா நடந்ததுந்னாக்கா ஆஸ்பதிரி இருக்காது” என்று ஒருவன் கூச்சலிட்டான்.
நாயக்கர் பிழைத்துக்கொண்டார். ஆனால் எட்டுமாதம் படுக்கையிலேயே இருந்தார். அவருடைய தண்டுவடம் சிதைந்துவிட்டது. ஒரு கையும் காலும் தளர்ந்துவிட்டன. பேச்சும் குழறலாகியது. அவருக்கு நிகழ்ந்ததெல்லாம் ஊடகங்களில் பேசுபொருளாகியது. பொதுமக்களின் சீற்றம் பல மாதங்களுக்கு நீடித்தது. அவருக்கு ஜனாதிபதியின் மன்னிப்பு கிடைத்து, மரணதண்டனை ஆயுள்தண்டனையாக மாறியது.
ஓராண்டில் நாயக்கர் முற்றிலும் குணமடைந்தார். மேலும் ஓராண்டுகூட அவர் ஜெயிலில் இருக்கவில்லை. ஏதோ தேசத்தலைவரின் பிறந்தநாள் என அவருக்கு நன்னடத்தை மன்னிப்பு வழங்கப்பட்டது. எல்லாவற்றுக்கும் அதற்கான வழிகள், அதற்கான விலைகள் இருந்தன.
நான் அந்நிகழ்வு நடந்த மறுநாளே என் பணியை துறந்தேன். ஐயங்கார் என்னை பார்க்க வரவே இல்லை. அவர் நாயக்கரின் உடல்நிலைமையை சட்டப்பிரச்சினையாக ஆக்கி, அதன் வழியாக லாபம் அடையும் முயற்சியில் இருந்தார்.
நான் என் மகனுடன் அமெரிக்கா சென்றுவிட்டேன். அங்கிருந்துகொண்டு செய்திகளை மட்டும் கேட்டுத் தெரிந்துகொண்டேன். எட்டு ஆண்டுகளுக்கு பின் சென்னை விமானநிலையத்தில் ஐயங்காரைப் பார்த்தேன். முதலில் அவரை அடையாளம் காணவில்லை. அவர் கருப்பு கோட் அணிந்திருக்கவில்லை. பெரிய நாமம் போட்டிருந்தார்.
அவர்தான் என்னை அடையாளம் கண்டு அருகே வந்தார். அறிமுகம் செய்துகொண்டதும் நான் எழுந்து கைகுலுக்கினேன். “உங்க பந்தயத்திலே ஜெயிச்சிட்டீங்க” என்றேன்.
“நீங்க ராஜினாமா செஞ்சது கேள்விப்பட்டேன்… அது நான் ஏதோ வேகத்திலே சொன்னது, அதுக்குப்போயி ராஜினாமா செஞ்சிருக்கவேண்டாம்” என்றார் ஐயங்கார்.
“இல்லை, எனக்குள்ள ஒரு உடைவு நடந்துபோச்சு. பந்தயம் வச்சிட்டேன்னு ஒரே காரணத்துக்காக நான் ஜெயிலுக்கு போயிருக்கக்கூடாது… அது பெரிய தப்பு.”
“அதுக்கென்ன, உங்க தொழில்தானே?”
“இல்ல, அது என் தொழில் இல்லை” என்றேன். “சரி, விட்டாச்சு. இப்ப நிம்மதியா இருக்க்கேன்… நீங்க எப்டி இருக்கீங்க?”
“அமோகமா இருக்கேன்… ரெண்டு பையன்களும் தொழிலிலேதான் இருக்கானுக” என்றார் ஐயங்கார்.
“வெள்ளையன் என்னானான்?”
“அவனத்தான் மூணு வருசம் முன்னாடி போட்டுட்டாங்களே… எட்டு துண்டு… சந்தை சங்சனிலே ஓட ஓட வெரட்டி வெட்டிக்கிட்டே இருந்தாங்க. அதன்பிறகு அதுக்குப் பழிக்குப்பழின்னு என்னென்னமோ போய்ட்டிருந்திச்சு… இப்பதான் கொஞ்சம் அடங்கியிருக்கு.”
நான் நாயக்கர் பற்றி கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. மேலும் பல ஆண்டுகளுக்குப்பின் சாத்தூர் அருகே நயினார்குளம் என்னும் ஊருக்குப் போயிருந்தேன். அது என் மகனின் மனைவியின் குலதெய்வம் இருக்கும் ஊர். அங்கே உச்சிமாகாளி அம்மன் கோயிலில் பூஜை எல்லாம் முடிந்து பொதுவாக பேசிக்கொண்டிருந்தோம். என் சம்பந்தி சென்னையில் ஆடிட்டர். அவர் பல விஷயங்களைச் சொல்லும் போக்கில் அங்கே பக்கத்தில்தான் நாயக்கர் தங்கியிருப்பதாகச் சொன்னார்.
“நாயக்கரா?” என வியந்துவிட்டேன்.
“ஆமா, அவரேதான். எல்லாத்தையும் முடிச்சுட்டு ஊருக்கே வந்திட்டார். இங்க இப்ப வெவசாயம் பண்றார்…” என்றார் சம்பந்தி. “பெரிய பண்ணை… நூத்தம்து ஏக்கருக்குமேலே இருக்கும். கரும்பு, சோளம். மெளகா எல்லாம் போடுறார்…”
“விவசாயமா? அவருக்கு என்ன வயசு இருக்கும்?”
“யாருக்குத் தெரியும்? எழுபதோ எம்பதோ தொண்ணூறோ… ஆளு அப்டியே மாறாமத்தான் இருக்கார். நாம செத்து நம்ம பேரப்புள்ளைங்க காலத்திலயும் அவரு அப்டியேதான் இருப்பாரு போல.”
நான் அவரைச் சந்திக்க முடிவுசெய்தேன். ஏனென்றால் அப்போது எல்லாவற்றிலுமிருந்து முழுமையாக விலகிவிட்டிருந்தேன். எல்லாமே பழைய நினைவுகளாக பொருளிழந்துவிட்டன.
பொருளிழக்காத ஒன்று இருந்தது, நாயக்கர் சொன்ன ஒரு வரி. நேற்றோ நாளையோ இல்லாமல் அன்றன்றில், அந்தந்தக் கணத்தில் மட்டும் வாழ்வது. வயதாகி, சாவு அணுக்கமாக நின்றிருக்கையில் நான் அப்படித்தான் இருந்தேன். ஒவ்வொரு நாள் கண்விழிக்கையிலும் எழும் நினைப்பு ‘இதோ ஒரு நாள் கிடைத்திருக்கிறது. இன்னும் ஒரு நாள். இன்னும் இருபத்துநான்கு மணிநேரம்…’ அந்த உணர்வு அளிக்கும் இனிமைதான் என் வாழ்க்கையை வாழச்செய்தது.
நான் சந்திக்க விரும்புகிறேன் என சொல்லி அனுப்பினேன். நாயக்கர் வரச்சொல்லி அனுமதி அளித்தார். என் சம்பந்தியின் ஓட்டுநர் செந்தில்குமார் என்னை அவன் ஜீப்பில் அழைத்துச்சென்றான்.
நான் சென்றபோது நாயக்கர் கையால் ஓட்டும் டிராக்டர் போன்ற சிறிய உழவு இயந்திரத்தால் உழுதுகொண்டிருந்தார். முதலில் அவர் நாயக்கர் என எனக்கு தெரியவில்லை. எங்களைக் கண்டதும் அவர் கையசைத்து அழைத்தார். யாரோ வழிசொல்லப்போகிறார்கள் என்று நினைத்து வண்டியை நிறுத்தி இறங்கி அருகே சென்றோம். அது நாயக்கர்தான் என்று கண்டதும் திகைத்துவிட்டேன்.
“வணக்கம்… எப்டி இருக்கீங்க? அமெரிக்காவிலேன்னு கேள்விப்பட்டேன்” என்றார் நாயக்கர்
“ஆமா… தற்செயலா இந்தப்பக்கம் வந்தேன்… அப்பதான் கேள்விப்பட்டேன்” என்றேன். “சந்திச்சு பல ஆண்டு ஆகுது. மறுபடி எப்ப பாக்கப்போறம்?”
“அதென்ன அப்டி சொல்றீங்க? பாத்தா என்ன? இங்கதானே இருக்கோம்?”
“நீங்க இருப்பீங்க… உங்களுக்கு சாவே இல்ல” என்றேன்.
நாயக்கர் உரக்கச் சிரித்தார். “இல்ல, இப்பவும் அது கூடவேதான் இருக்கு” என்றார்.
நாங்கள் வரப்பிலேயே அமர்ந்தோம். நாயக்கர் வேலையாளிடம் இளநீர் போட்டு தரச்சொன்னார். குடித்தபடி பேசிக்கொண்டோம்.
“எனக்கு தெரிஞ்சுக்கிட ஒண்ணுதான் மிச்சமிருக்கு நாய்க்கர்வாள்” என்றேன். “சொல்லுங்க, உங்க நிழல் கிட்ட அன்னிக்கு என்ன பேசினீங்க? உங்க கூட உங்க நிழலும் சேர்ந்ததனாலேதான் அந்த கயிறு அறுந்ததுன்னு நான் நினைச்சுக்கிடுறதுண்டு.”
“இருக்கலாம்… இல்லே அந்த சின்னப்பய முடிச்சிலே ஏதாவது குளறுபடி செஞ்சிருக்கலாம்…” என்றார் நாயக்கர்.
“முகுளம் உடைஞ்சிருக்கும்… ஆனா தப்பிச்சீங்க.”
“அதெல்லாம் ஆராய்ச்சி பண்றதிலே அர்த்தமே இல்லை… இருக்கேன், இந்தா இப்டி… அடுத்த செகண்டு போயிடலாம். அவ்ளவுதான்.”
“சொல்லுங்க என்ன நினைச்சீங்க?”
“கடைசிநாள் வரை நான் உங்களை நம்பி மதிச்சேன். சாட்சிகள்லாம் பொய், கேஸும் பொய்னாக்கூட நான் பண்ணின மத்த கொலைகளுக்காக நீதி நியாயமாத்தான் என்னைத் தேடி வந்திருக்குன்னு நினைச்சேன். என்னை பாத்துட்டு போனீங்கள்ல, அப்ப சந்தேகம் வந்திட்டுது. நீங்களே உங்க நீதியை நம்பலை. அதான் என்னை தேடிவந்து பாத்தீங்க. எங்கிட்ட பேசுறப்ப கண் கலங்கினீங்க…”
“ஆமா”
“அதோட மனசு கலங்கிட்டுது… போறதுக்கு முன்னாடி வெள்ளையனை ஒழிக்கணும்னு நினைக்க ஆரம்பிச்சிட்டேன்… நினைக்க நினைக்க வெறி ஏறிக்கிட்டே இருந்தது. அவனை எங்காளுங்க கொன்னிருவாங்கன்னு தெரியும்… ஆனா நானே கொல்லணும்னு துடிச்சேன். ஆனா முடியாது. என் கதை முடிஞ்சாச்சு… அன்னிக்கு என் நிழலோட பேசிட்டே இருந்தேன். அவ்ளவுதான், அந்த வஞ்சத்தோட நெறைவேறா ஆசையோட சாகப்போறேன்னு தோணிட்டுது. என் பக்கத்திலே நெழல் உக்காந்திட்டிருந்தது… அதப்பாத்தேன்… சரி வா வெளையாடுவோம்னு கூப்பிட்டேன்… வெளையாடினோம்.”
“வெளையாட வெளையாட என் மனசு மாறிட்டே இருந்திச்சு” என்றார் நாயக்கர். “…எப்பவும் நானேதான் ஜெயிப்பேன். இப்ப அது ஜெயிக்கட்டுமேன்னு நினைச்சேன். எப்டியும் எல்லாம் முடிஞ்சுபோச்சு… அது ஜெயிக்கிற காலம் வந்தாச்சு. ஒவ்வொரு ஆட்டமா விட்டுக்குடுக்க ஆரம்பிச்சேன். ஒவ்வொருத்தரையா மன்னிச்சு விட்டுட்டே இருந்தேன். கடைசியா வெள்ளையனை மன்னிச்சேன். ஆமா முழுமனசோட அவனை மன்னிச்சேன்… அதோட முழுசா தோத்துட்டேன். நிழல் ஜெயிச்சுது.”
“அதுக்குமேலே ஆட்டம் இல்லை. எல்லாம் அமைதியாயிட்டுது. சாப்பிட்டேன். நிம்மதியா தூங்கினேன். அந்த நெழல்கூட பேசிட்டே இருந்தேன். என் வாழ்க்கையை அது எப்டியெல்லாம் அர்த்தமாக்கியிருக்குன்னு தெரிஞ்சுது. சாவுன்னா என்ன? இந்த புக்ல எல்லாம் முக்கியமான வரிகளை கோடுபோட்டு வைப்பாங்கள்ல அதுதான்…மனுச வாழ்க்கையிலே எந்த பெரிய அனுபவம்னாலும் சாவோட அடிக்கோடு இருக்கும். அத மட்டும்தான் நாம ஞாபகம் வைச்சுக்கிடுவோம்… மத்ததெல்லாம் மறந்திரும்… பலபேரு வாழ்க்கையிலே நாலஞ்சு வரிதான் அப்டி இருக்கும். என்னோட வாழ்க்கையிலே எல்லா வரியும் அடியிலே கோடு போட்டிருக்கு. எவ்ளவு பெரிய கொடுப்பினை!”
“ஆமா” என்றேன். “இப்ப இந்த வயசிலே அது அப்டி தெளிவா தெரியுது.”
“சாவோட அருமை தெரிஞ்சவன்தான் மலைமேலே ஏறப்போறான். கடலுக்குள்ள நீஞ்சிப்போறான். நான் இந்த பொட்டக்காட்டிலேயே அதை எல்லாம் அனுபவிச்சிட்டேன்… நல்ல வாழ்க்கை. நெறைவாழ்க்கை… அப்றம் என்ன?” என்றார் நாயக்கர். “அன்னிக்கு தூக்குமேடைக்கு போறப்ப அப்டி மனசு நிறைஞ்சிருந்தது. உடம்பே தித்திக்கிற மாதிரி இருந்தது. இது ஒரு பெரிய அனுபவம், இதிலே ஒரு துளியையும் விட்டிரக்கூடாதுன்னு நினைச்சேன். அந்த வழி, அந்த படி எல்லாத்தையும் ரசிச்சேன். அந்த தூக்குமேடையைக்கூட பலதடவை ரசிச்சு பாத்தேன். முகத்த மூடுறதுக்கு முன்னாடி என்னோட நிழல பாத்தேன். பெரிசா பூதம் மாதிரி நின்னுட்டிருந்தது.”
நான் அவர் பேசப்போவதை எதிர்பார்த்து அமர்ந்திருந்தேன்.
“அப்றம் தெரியுமே, மறுபடி இன்னொரு வட்டம்… நான் நிழல்கிட்ட கேட்டேன். ‘நான் தோத்துட்டேனே, அப்றம் ஏன் என்னை தப்பவிட்டே?’ன்னு. சிரிச்சுக்கிட்டே ‘நீயா தோக்கமுடியாது, நான் உன்னை தோக்கடிக்கணும்’னு நிழல் சொல்லிச்சு… ‘உனக்கு மிச்சமில்லாம இருக்கலாம், எனக்கு மிச்சமிருக்கு’ன்னு சொல்லிட்டுது…” நாயக்கர் சிரித்தார். “ஆமா அதுக்கு பல கணக்குகள் மிச்சமிருந்திச்சு… ஒவ்வொரு கணக்கா என்னைய வைச்சு முடிச்சுது” அவர் அவருக்குரிய பாணியில் புறங்கையால் மீசையை நீவிக்கொண்டார்.
அந்த அசைவு வழியாக அவரிலிருந்து அந்த வேட்டைக்காரன் மீண்டெழுந்து வந்ததை கண்டேன். ரத்தமெழுகு போட்ட மீசை. அது அப்போதும் கருமையாகவே இருந்தது.
“இப்ப எப்டி இருக்கீங்க? இப்ப உங்க கணக்குகள் முடிஞ்சிருச்சா?” என்றேன். “இப்ப சாவை காத்து இருக்கீங்களா?”
“இல்லை. நான் பாட்டுக்கு இருக்கேன். எனக்கு கணக்கு மிச்சமிருந்தாலும் இல்லாட்டியும் அதனாலே ஒண்ணுமில்லை. அதுக்கு என்ன மிச்சமிருக்குன்னு நம்மாலே சொல்லிக்கிட முடியாது… அது முடிவே இல்லாதது. புரிஞ்சுகிடவே முடியாதது…”
நான் அவரிடம் பேசிவிட்டு விடைபெற்றுக் கிளம்பினேன். என் கைகளைப் பிடித்து சிரித்தபடி நாயக்கர் சொன்னார். “மறுபடியும் பாப்போம்னு நான் யார்கிட்டயும் சொல்றதில்லை… பாக்கமாட்டோம்னும் சொல்றதில்லை… இப்ப துடுப்ப மடியிலே வைச்சுக்கிட்டு மிதக்கிற போட்ல உக்காந்திட்டிருக்கேன்… போறதுதான் கணக்கு. போற எடம்னு ஒண்ணுமில்லை.”
நெடுந்தொலைவு வரை என்னை பார்த்தபடி அவர் வரப்பில் நின்றிருந்தார். நான் திரும்பும்போதெல்லாம் அவரையே நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் அடுத்தக் கணமே கொல்லப்படலாம். எத்தனை எத்தனை எதிரிகள். எவ்வளவு அரிவாள்கள். அதேசமயம் சாவே இல்லாமல் இங்கே இப்படியே இருந்துகொண்டும் இருக்கலாம். அந்த இடம் அவருடைய மறைவிடம் அல்ல. அவரைத் தேடி வருவார்கள். அவர் அதற்கும் தயாராகத்தான் இருப்பார்.
நான் எண்ணியது சரி. அன்று மாலையே எட்டுபேர் அவரை சூழ்ந்துகொண்டு வெட்டினார்கள். நான் எண்ணியது மேலும் சரி. அம்முறையும் மூன்று மாதம் மருத்துவமனை வாசத்திற்குப்பின் நாயக்கர் பிழைத்துக்கொண்டார்.
(நிறைவு)
கமலா கந்தசாமி
கமலா கந்தசாமி பொது வாசிப்புக்குரிய புனைவுகளையும், சிறுவர் கதைகளையும் எழுதியவர். திருக்குறளை பொதுவாசிப்புக் களத்தில் விளக்கும் நூல்களை எழுதினார்.. மு. கருணாநிதி உள்ளிட்ட திராவிட இயக்க அரசியல்வாதிகளின் வாழ்வு குறித்தும் நூல்களை எழுதினார்.

கமலா கந்தசாமி
கமலா கந்தசாமி பொது வாசிப்புக்குரிய புனைவுகளையும், சிறுவர் கதைகளையும் எழுதியவர். திருக்குறளை பொதுவாசிப்புக் களத்தில் விளக்கும் நூல்களை எழுதினார்.. மு. கருணாநிதி உள்ளிட்ட திராவிட இயக்க அரசியல்வாதிகளின் வாழ்வு குறித்தும் நூல்களை எழுதினார்.

காவியம் – கதைகளின் கேள்விகள்
காவியம் நாவலைப் பற்றிய தொடர்ச்சியான உரையாடல்களை நண்பர்களுடன் நடத்தி வருகிறேன். பெரும்பாலானவர்கள் நாவலின் கட்டமைப்பை இன்னும் புரிந்துகொள்ளவில்லை. நாவல் என்னும் கலைவடிவம் unity என்னும் அழகியலைக் கொண்டிருக்கிறது. அந்நாவலின் உள்ளே உள்ள சிக்கலும் விரிவும் எல்லாமே அந்த ஒருமைப்பாட்டின் விளைவாக உருவாகி வருபவையாகவே இருக்கும்.
இந்நாவலை metafiction அல்லது antinovel என்று சொல்லலாம். Meta epic என்று சொல்வது இன்னமும்கூட பொருத்தமானது. இந்நாவல் அந்த ஒருமையை உடைத்து வேறொரு வகையில் சிதறிச் சிதறிக் கதைகளைச் சொல்லிக்கொண்டு செல்கிறது. இந்த வடிவத்தில் நீங்கள் உட்பட தமிழில் பலரும் எழுதியிருக்கிறார்கள். ஆனால் இந்த வடிவத்தை பரிசோதனை செய்யத்தான் முயன்றார்கள். இந்த வடிவம் நியாயப்படுத்திய நாவல் விஷ்ணுபுரம்தான்.
நாவலுக்குள்ளேயே நாவல் விவாதிக்கப்படுவது என்ற அளவில் விஷ்ணுபுரம் சரியான மெட்டபிக்ஷனததான். இந்நாவலை விஷ்ணுபுரம் எழுதுவதற்கு முன்னரே யோசித்தீர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்நாவலில் பேசப்படும் பல விஷயங்களின் முன்னோடி விவாதங்கள் விஷ்ணுபுரம் நாவலிலே உள்ளன. குறிப்பாக காவியங்கள் உருவாவதும் மறைவதும். இந்நாவலில் விஷ்ணுபுரம் நாவலின் அம்சம் வந்துவிடக்கூடாது என்ற கவனம் இருந்ததாகவும் சொல்லியிருக்கிறீர்கள்.
இந்நாவல் நாவலுக்குரிய யூனிட்டி கொண்டது அல்ல. மாறாக அந்த யூனிட்டியை உடைத்து உடைத்து மேலே செல்வது. முதலில் ஒரு அஸ்திவாரத்தைப் போட்டுவிட்டு அதை உடைத்து மீண்டும் கட்டி மீண்டும் உடைத்துக்கொண்டு மேலே செல்கிறது. இது கானபூதியின் கதை. அது அருவமான ஒரு மொழியாக முதலில் தோன்றுகிறது. அங்கிருந்து ராமின் மனதில் திரண்டு உருவாகி வருகிறது. சமகாலம், புராணம், வரலாறு மூன்றையும் கலந்து ஒன்றுடனொன்று அவை எப்படிக் கலந்துள்லன என்று காட்டுகிறது. நாம் எண்ணுவனவற்றை உடனே அது மறுத்துவிடுகிறது.
இந்நாவலிலுள்ள கேள்விகள் முக்கியமானவை. பெரும்பாலான கேள்விகளுக்கு அங்கதமாகவோ தத்துவமாகவோதான் பதில் சொல்லப்படுகிறது. சில கேள்விகளுக்கு நேரடியான யதார்த்தமான பதில் சொல்லப்படுகிறது. அந்தக் கேள்விகள்தான் கதைகளாகச் சிதறிப்பரந்து செல்லும் நாவலுக்கு ஒரு வடிவத்தை அளிக்கின்றன. நாவல் பல கேள்விகளை வரலாற்றைப் பார்த்தும் ,சமகால மனதைப் பார்த்தும் கேட்கிறது. கானபூதியிடம் அந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. அல்லது கானபூதி கேட்கிறது. விடைகள் ஒருவகையில் விடைகளுக்கான ஒரு வாய்ப்புதான்.சிலசமயம் இரண்டு விடைகளைச் சொல்கிறது. இரண்டும் சரிதான். மேலும் விடைகள் இருக்கமுடியும். அந்த ஆழமான உரையாடலை நாவலுடன் நடத்திக்கொள்ளும் வாசகனுக்குரிய நாவல் இது.
ஒருவன் எந்த அளவுக்கு இந்நாவல் உருவாக்கும் சிக்கல்களை எதிர்கொண்டு தனக்கான சொந்த விடைகளை உருவாக்குகிறானோ அந்த அளவுக்கு இந்நாவல் விரியும் என நினைக்கிறேன். அந்த வாசகர்களுக்கு மட்டுமே இந்த நாவல் நாவலாக மாறும். மற்றவர்களுக்கு ஒரு கதைக்கொத்தாகவே ஆகிவிடும். கதாசரிதசாகரம் போல ஒரு கதைக்கொத்து. அப்படிப்பார்த்தால் கதாசரித சாகரத்தைக்கூட இந்நாவலைப்போல வாசிக்கலாம் போல தோன்றுகிறது.
ஆர். சந்திரசேகர்
காவியம் – கதைகளின் கேள்விகள்
காவியம் நாவலைப் பற்றிய தொடர்ச்சியான உரையாடல்களை நண்பர்களுடன் நடத்தி வருகிறேன். பெரும்பாலானவர்கள் நாவலின் கட்டமைப்பை இன்னும் புரிந்துகொள்ளவில்லை. நாவல் என்னும் கலைவடிவம் unity என்னும் அழகியலைக் கொண்டிருக்கிறது. அந்நாவலின் உள்ளே உள்ள சிக்கலும் விரிவும் எல்லாமே அந்த ஒருமைப்பாட்டின் விளைவாக உருவாகி வருபவையாகவே இருக்கும்.
இந்நாவலை metafiction அல்லது antinovel என்று சொல்லலாம். Meta epic என்று சொல்வது இன்னமும்கூட பொருத்தமானது. இந்நாவல் அந்த ஒருமையை உடைத்து வேறொரு வகையில் சிதறிச் சிதறிக் கதைகளைச் சொல்லிக்கொண்டு செல்கிறது. இந்த வடிவத்தில் நீங்கள் உட்பட தமிழில் பலரும் எழுதியிருக்கிறார்கள். ஆனால் இந்த வடிவத்தை பரிசோதனை செய்யத்தான் முயன்றார்கள். இந்த வடிவம் நியாயப்படுத்திய நாவல் விஷ்ணுபுரம்தான்.
நாவலுக்குள்ளேயே நாவல் விவாதிக்கப்படுவது என்ற அளவில் விஷ்ணுபுரம் சரியான மெட்டபிக்ஷனததான். இந்நாவலை விஷ்ணுபுரம் எழுதுவதற்கு முன்னரே யோசித்தீர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்நாவலில் பேசப்படும் பல விஷயங்களின் முன்னோடி விவாதங்கள் விஷ்ணுபுரம் நாவலிலே உள்ளன. குறிப்பாக காவியங்கள் உருவாவதும் மறைவதும். இந்நாவலில் விஷ்ணுபுரம் நாவலின் அம்சம் வந்துவிடக்கூடாது என்ற கவனம் இருந்ததாகவும் சொல்லியிருக்கிறீர்கள்.
இந்நாவல் நாவலுக்குரிய யூனிட்டி கொண்டது அல்ல. மாறாக அந்த யூனிட்டியை உடைத்து உடைத்து மேலே செல்வது. முதலில் ஒரு அஸ்திவாரத்தைப் போட்டுவிட்டு அதை உடைத்து மீண்டும் கட்டி மீண்டும் உடைத்துக்கொண்டு மேலே செல்கிறது. இது கானபூதியின் கதை. அது அருவமான ஒரு மொழியாக முதலில் தோன்றுகிறது. அங்கிருந்து ராமின் மனதில் திரண்டு உருவாகி வருகிறது. சமகாலம், புராணம், வரலாறு மூன்றையும் கலந்து ஒன்றுடனொன்று அவை எப்படிக் கலந்துள்லன என்று காட்டுகிறது. நாம் எண்ணுவனவற்றை உடனே அது மறுத்துவிடுகிறது.
இந்நாவலிலுள்ள கேள்விகள் முக்கியமானவை. பெரும்பாலான கேள்விகளுக்கு அங்கதமாகவோ தத்துவமாகவோதான் பதில் சொல்லப்படுகிறது. சில கேள்விகளுக்கு நேரடியான யதார்த்தமான பதில் சொல்லப்படுகிறது. அந்தக் கேள்விகள்தான் கதைகளாகச் சிதறிப்பரந்து செல்லும் நாவலுக்கு ஒரு வடிவத்தை அளிக்கின்றன. நாவல் பல கேள்விகளை வரலாற்றைப் பார்த்தும் ,சமகால மனதைப் பார்த்தும் கேட்கிறது. கானபூதியிடம் அந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. அல்லது கானபூதி கேட்கிறது. விடைகள் ஒருவகையில் விடைகளுக்கான ஒரு வாய்ப்புதான்.சிலசமயம் இரண்டு விடைகளைச் சொல்கிறது. இரண்டும் சரிதான். மேலும் விடைகள் இருக்கமுடியும். அந்த ஆழமான உரையாடலை நாவலுடன் நடத்திக்கொள்ளும் வாசகனுக்குரிய நாவல் இது.
ஒருவன் எந்த அளவுக்கு இந்நாவல் உருவாக்கும் சிக்கல்களை எதிர்கொண்டு தனக்கான சொந்த விடைகளை உருவாக்குகிறானோ அந்த அளவுக்கு இந்நாவல் விரியும் என நினைக்கிறேன். அந்த வாசகர்களுக்கு மட்டுமே இந்த நாவல் நாவலாக மாறும். மற்றவர்களுக்கு ஒரு கதைக்கொத்தாகவே ஆகிவிடும். கதாசரிதசாகரம் போல ஒரு கதைக்கொத்து. அப்படிப்பார்த்தால் கதாசரித சாகரத்தைக்கூட இந்நாவலைப்போல வாசிக்கலாம் போல தோன்றுகிறது.
ஆர். சந்திரசேகர்
குருபூர்ணிமா நிகழ்வு

பத்தாம் தேதி, இந்திய நேரம் காலை 9.30 மணிக்கு ஆஸ்திரியாவிலிருந்து ஜெயமோகன் அவர்கள் கலந்துகொண்ட 2025ம் ஆண்டுக்கான வெண்முரசு இணையவழி சந்திப்பு ஆரம்பிக்க… 2025ம் ஆண்டுக்கான வெண்முரசு நேர் சந்திப்பினை,இந்திய நேரம் மாலை 4.10 மணிக்கு வெள்ளிமலையில் குருஜி சௌந்தர் ஆரம்பித்தார்.
குருபூர்ணிமா, நடனங்கள், இலக்கிய அரங்கு- யோகேஸ்வரன் ராமநாதன்
The short speech on reading our classics in this modern age is a fresh thought. What you said is absolutely right. We are reading literature only to get into our present culture and our personal lives.
Classics nowகுருபூர்ணிமா நிகழ்வு

பத்தாம் தேதி, இந்திய நேரம் காலை 9.30 மணிக்கு ஆஸ்திரியாவிலிருந்து ஜெயமோகன் அவர்கள் கலந்துகொண்ட 2025ம் ஆண்டுக்கான வெண்முரசு இணையவழி சந்திப்பு ஆரம்பிக்க… 2025ம் ஆண்டுக்கான வெண்முரசு நேர் சந்திப்பினை,இந்திய நேரம் மாலை 4.10 மணிக்கு வெள்ளிமலையில் குருஜி சௌந்தர் ஆரம்பித்தார்.
குருபூர்ணிமா, நடனங்கள், இலக்கிய அரங்கு- யோகேஸ்வரன் ராமநாதன்
The short speech on reading our classics in this modern age is a fresh thought. What you said is absolutely right. We are reading literature only to get into our present culture and our personal lives.
Classics nowJuly 13, 2025
நீலநிழல் (குறுநாவல்)-4
( 4 )
சிறை வாசலிலேயே சகாதேவன் எனக்காகக் காத்திருந்தார். இப்போது அவருடைய பாவனைகள் மாறிவிட்டிருந்தன. எனக்கும் அவருக்கும் பொதுவான ஒரு ரகசியத்தை பேணுபவர் போலிருந்தார்.
“வாங்க… எல்லாம் ரெடியா இருக்கு” என்றார்.
நான் அவர் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். அவர் கொடுத்த காகிதங்களில் கையெழுத்திட்டேன்.
“வேணுமானா ஒருவாட்டி எல்லாத்தையும் பாத்திடலாம்” என்றார் சகாதேவன். “ஐஜி அங்க காலோஸ்லதான் இருக்கார்… அவரே எல்லாத்தையும் செக் பண்றார்.”
“பாத்திருவோம்” என்றேன்.
என் மனம் படபடத்துக்கொண்டே இருந்தது. நான் ஏன் வந்தேன்? ஏன் என்னை இப்படி கீழ்மைப்படுத்திக் கொள்கிறேன்? ஆனால் எல்லாருக்கும் ஒரு புள்ளி இருக்கிறது, உடைவுப்புள்ளி… அங்கே முறிந்தாகவேண்டும். நான் நேர்மையானவன், ஆனால் என் அகங்காரம் நேர்மையானது அல்ல. இல்லை, என் அகங்காரம்தான் என்னை நேர்மையாக வைத்திருக்கிறது.
தூக்குமேடை புதியதுபோல பழுதுபார்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டிருந்தது. “எய்ட்டி தௌசண்ட் ருப்பீஸ்ல சரி பண்ணியிருக்கு சார்” என்றார் சகாதேவன்.
ஐஜி அங்கே ஓர் அறையில் இருந்தார். அவருடன் தூக்குபோடுபவர் இருந்தார். ஐம்பது வயதான தடிமனான மனிதர். கூட தூக்குபோடுபவரின் உதவியாளரான இளைஞன்.
ஐஜி என்னிடம் கைகுலுக்கி முகமன் சொன்னார். வறண்ட கண்களும், அடிக்கடி ஏப்பம் விடுவதுபோன்ற பாவனைகளும் உடைய பருத்த மனிதர். பெரிய தொந்தியும் வளைந்த ஆட்டுக்கொம்பு மீசையும் கொண்டவர். “இவரு ஹேங்மேன், நரசய்யான்னு பேரு. தெலுங்கு ஆளுங்க. பழைய நாயக்கர் ஆட்சிக்காலத்திலே இருந்தே இவங்கதான் ஹேங்கிங் பண்றது… வெள்ளைக்காரன் காலத்திலேயும் அப்டியே கண்டினியூ பண்ணிட்டாங்க… தூக்கே இல்லேன்னாலும் இவங்களுக்கு மாசாமாசம் சம்பளம் இருக்கு.”
நரசய்யா வணக்கம் வைத்தார். அந்த இளைஞன் வெற்றுவிழிகளுடன் பார்த்துக்கொண்டு நின்றான்.
“கயிறெல்லாம் செக் பண்ணியாச்சா?” என்றேன்.
“ரெண்டு டம்மி கயிறு இருக்கு… நூறு கிலோ எடைய வைச்சு செக் பண்ணியாச்சு. சுருக்கும் செக் பண்ணியாச்சு.”
அவர் சுருக்கு கயிற்றை எடுத்துக் காட்டினார். அதை தொடவேண்டும் என்று தோன்றியது. ஆனால் கையை நீட்ட முடியவில்லை. படபடப்பாக இருந்தது. ஒரு பெரிய பாம்பு அது என்று தோன்றியது. பளிங்கு போன்ற வெண்மையான பாம்பு. கழுத்தைச் சுற்றி நெரித்து இறுக்கிக் கொல்லவிருப்பது. எனக்கு மூச்சுத்திணறியது. மெழுகு தேய்த்து வழவழப்பாக்கியிருந்தனர். சட்டென்று அது உயிர்கொண்டு நெளியும் என்று தோன்றியது.
“போகலாம்” என்று கிசுகிசுத்தேன்.
ஐஜியிடம் சொல்லாமலேயே திரும்பிவிட்டேன். சகாதேவனின் அறைக்குள் டாக்டர் வந்திருந்தார்.
சகாதேவன் “ரிப்போர்ட் ஓக்கேயா சார்?” என்றார்.
“ஆமா… ஹி இஸ் பெர்பெக்ட்லி நார்மல்…” என்றார் டாக்டர். “வழக்கமா தூக்குக் கைதிகளோட பிரஷர் ரொம்ப உச்சத்திலே இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். அவருக்கு நூறு பர்சண்டேஜ் நார்மலா இருக்கு. ஆளும் அப்டியே கூலா இருக்கார்.”
“நல்லது” என்றார் சகாதேவன்.
நான் அறையில் இருந்து வெளிவந்து திண்ணையில் நின்றேன். சகாதேவன் என்னிடம் “கடைசி ஆசையா மட்டன் குழம்பும் சோறும் கேட்டார். குடுத்தாச்சு. நல்லா திருப்தியா சாப்பிட்டார். தாம்பூலம் போடணும்னு சொன்னார். அதுக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு” என்றார்.
நான் “ம்” என்றேன்.
“ரத்தத்தாலே மீசையை வழிச்சு முறுக்கணும்னு சொல்லுவார்னு நினைச்சேன்… நல்லவேளை கேக்கலை” என்றார் சகாதேவன். அவருடைய புன்னகை மாறியிருப்பது போலத் தோன்றியது.
முருகேசன் ஒரு கூடையுடன் வந்தான். என்னை பார்த்ததும் தயங்கினான்.
“என்னய்யா?” என்றார் சகாதேவன்.
“படுத்துட்டார்”
“தூங்குறாரா?”
“ஆமா”
“ஆச்சரியம்தான்… தூங்குறார்னா பெரிய ஆச்சரியம்”
“அவரே சாகுறதுக்கு சம்மதிச்ச மாதிரித்தான்” என்றேன்.
முருகேசன் “ஆமா சார், அப்டித்தான் தோணிச்சு… அந்த நெழல்கிட்ட பேசிட்டே இருந்தார்.”
“என்ன பேசினார்?”
“இந்த மாதிரி…” என்று முருகேசன் தயங்கினார். “கூட இருக்கப்பட்ட ஓராள்ட்டே பேசுற மாதிரி…”
பெரியசாமி வந்து ஐஜி அழைபபதாகச் சொல்ல சகாதேவன் உள்ளே சென்றார். முருகேசன் என்னிடம் “கொஞ்சம் பைத்தியம் மாதிரி இருக்கார் சார்” என்றார்.
“உங்க கிட்ட ஏதாவது சொன்னாரா?”
“எங்கிட்ட எல்லாம் நார்மலாத்தான் இருந்தார். ஆனா அவரு பேசிட்டே இருக்காரு” என்றான். “வேப்பம்பழம் பொறுக்கிக் குடுத்தேன். அதை நெறையச் சாப்பிட்டார்.”
“என்ன பேசிக்கிட்டார்?”
முருகேசன் தயங்கி பிறகு “அவரே பேசிக்கிட்டார்” என்றார்.
நான் ஒரு கணம் யோசித்தபின் “நான் அவர மறுபடியும் பாக்கணுமே” என்றேன்.
“ஜெயிலர்கிட்ட கேளுங்க சார்”
சகாதேவன் வெளியே வந்தார். “இந்த புரசீஜர்ஸ்லே சிக்கியே நாசமாப்போகுது சர்க்கார்” என்றார். அவரிடம் ஓர் உற்சாகம் இருந்தது. அது ஒரு பெரிய பொறுப்பை நிறைவேற்றும் உற்சாகம் மட்டும்தானா?
நான் சகாதேவனிடம் “அவரை ஒரு வாட்டி பாக்கணும்” என்றேன்.
சகாதேவன் தயங்கினார். “டிஐஜி என்னமாம் சொல்லுவார்” என்றார்.
“அவர் எங்கிட்ட ஏதாவது பேசணும்னு விரும்பினா அனுமதிச்சுத்தான் ஆகணும்.”
“அவரு இப்ப கூலா இருக்கார்… என்ன பேசப்போறார்னு தெரியலை.”
“நான் பேசணும்… அவர் இப்ப என்ன நினைக்கிறார்ங்கிறது எனக்கு முக்கியம்…”
“ஏன்?”
“இதுவரை நான் ஐநூறுபேருக்காவது தண்டனை குடுத்திருக்கேன்… எட்டுபேருக்கு தூக்கு, பலபேருக்கு ஆயுள்… என் சைடை மட்டும்தான் நான் யோசிச்சிருக்கேன். அவங்க மனசு எப்டி இருக்கும்? இதுதான் தண்டனைகளிலே உச்சம்… இப்ப இவரு எப்டி இருக்காரு? அதை நான் தெரிஞ்சுக்கிட்டாகணும்.”
“காலம்பற பேசினீங்க”
“அப்ப அவரு வேறமாதிரி இருந்தார். இப்ப கடைசி நிமிசம். இப்ப எந்த மனுஷனும் நடிக்க மாட்டான். தனக்குத்தானே கூட நடிக்க மாட்டான்… அவர்கிட்ட நான் பேசியாகணும்.”
சகாதேவன் முருகேசனிடம் தலையசைத்தார். முருகேசன் என்னை பார்க்க நான் அவருடன் நடந்தேன்.
ஜெயிலில் தூக்குத்தண்டனை கைதிகளுக்கான கண்டெம்ட் வார்ட் தனியாக இருந்தது. அதிலிருந்த நான்கு அறைகளில் ஒன்றில்தான் நாயக்கர் இருந்தார். மற்ற அறைகளில் எவருமில்லை. பொதுவான சிறை அறைகளை கனத்த கம்பியழிகளால் தனியாக பிரித்திருந்தனர். கண்டெம்ட் வார்டுக்கான கம்பிக்கதவை முருகேசன் திறக்கும்போது சட்டென்று அப்பால் இன்னொரு கம்பிக்கதவை உதைத்து திறந்து ஒரு கைதி மிக வேகமாக ஓடிவந்தான். என்ன ஏது என நான் எண்ணுவதற்குள் அவன் ஒரு கழியை என்னை நோக்கி கம்பிகள் வழியாக எறிந்தான். முருகேசன் என்னை பிடித்து அப்பால் தள்ளினார். நான் மண்ணில் விழுந்தேன். அது என் கழுத்தை உரசி சட்டையை கிழித்தபடி அப்பால் சென்று மண்ணி விழுந்தது.
அந்த கைதியின் பின்னால் ஓடி வந்த வார்டர்கள் அவனை இழுத்துச் சென்றனர். அவன் திமிறியபடி என்னை நோக்கி கைநீட்டி “டேய், உன் சாவு என் கையாலதான்… டேய் டேய்… விடமாட்டேண்டா… டேய்” என்று கூவியபடி, கால்கள் மண்ணில் இழுபட, நரம்பு புடைத்த உடல் இறுகி திமிறி அசைய, சென்றான்.
என்னால் எழ முடியவில்லை. முருகேசன் என்னை நோக்கி கைநீட்ட நான் அவனை பிடித்துக்கொண்டு எழுந்து நின்றேன். என் உடல் துள்ளிக்கொண்டிருந்தது. இடதுகால் தானாகவே ஆடியது.
ஆனால் என் மனம் பிரமித்திருந்தது. நிதானமாக அதில் எண்ணங்கள் ஓடின. தெளிவான துல்லியமான சொற்களாக அகம் நிகழ்ந்தது.
“வேணாம் சார். போயிடலாம்… வார்டருக்கு தெரிஞ்சா என் வாழ்க்கை அழிஞ்சிரும்.”
“தெரியாது… நான் அவர பாத்தாகணும்” என்றேன். “நீங்க கூடவே வாங்க.”
“சார், ப்ளீஸ் சார்”
“பேசாம வாங்க”
“அலுமினியத் தட்டை நசுக்கி ஈட்டி மாதிரி செஞ்சிருக்கான் சார்… கொல்லப்பாத்தான் சார். மயிரிழையிலே தப்பிச்சீங்க” என்றான் முருகேசன் “நினைக்கவே பயமா இருக்கு… ஏதாவது ஒண்ணு ஆயிருந்தா…”
“அதிலே உங்க தப்பு என்ன? பேசாம வாங்க”
“ஏதாவது நடந்திருந்தா சார்…”
“நடக்கலையே… வாங்க பேசாம”
கண்டெம்ப்ட் வார்டை அடையும்போது நான் நிதானமாக ஆகியிருந்தேன். என் சட்டையின் கிழிசலை பார்த்தேன். மெய்ப்பையின் கிழிசல். மெய்யின் கிழிசல் என்றால் இந்நேரம் உயிர் அதன் வழியாகச் சென்றுவிட்டிருக்கும். எத்தனை நொய்மையான பாண்டம்…
நாயக்கர் வெள்ளைவேட்டி வெள்ளைச்சட்டை அணிந்து அறைக்குள் அமர்ந்திருந்தார். வராந்தாவில் லைட் எரிந்தது. அவருக்குப் பின்னால் அவருடைய நிழல்.
நான் அவர் அருகே சென்று நின்றேன். முருகேசன் நாற்காலியை கொண்டு போட்டான்.
“நீங்கதான் சாட்சிக்குண்டான நீதிபதியா?” என்றார் நாயக்கர். “ஆளு மாறியாச்சு போல.”
“ஆமா” என்றேன். “வரவேண்டியிருந்தது. டியூட்டி மஜிஸ்ட்டிரேட்டை கரண்ட் ஷாக் வைச்சு விழவைச்சிட்டாங்க உங்காளுங்க.”
“என்ன செய்றதுன்னு தெரியாம ஏதேதோ செய்றாங்க…” என்றார். மீசையை நீவியபடி “நானே போறதா முடிவு பண்ணிட்டேன். இவனுக கிடந்து அலைமோதறானுக.”
“ஆமா, இப்பகூட என்னை கொல்ல ஒருத்தன் ஈட்டி மாதிரி ஒண்ணை செய்ஞ்சு வீசினான்.”
“ஓ, அதான் கந்தசாமியோட சத்தம் கேட்டுதா? சரிதான்.”
அவர் அதற்கு எந்த அதிர்ச்சியும் காட்டவில்லை. என்னிடம் அனுதாபம் காட்டவுமில்லை. நான் அதனால் சீண்டப்பட்டேன்.
“உங்க ஏற்பாடா அது?”
“அதெப்டி? நீங்க இங்க இப்ப வருவீங்கன்னு எனக்கு எப்டி தெரியும்?”
“என்னை கொன்னிருந்தான்னா நீங்கதான் பொறுப்பு” என்றேன்.
நாயக்கர் சிரித்துவிட்டார் “பொறுப்புன்னா? இன்னிக்கு தூக்கிலே போட்டுட்டு பாடிய மறுபடி நாளைக்கு தூக்கிலே போடுவாங்களா? என்ன சொல்றீங்க?” என்றார்.
நான் எனக்குள் ஓர் உக்கிரமான சீற்றம் எழுவதை உணர்ந்தேன். அவரை சீண்ட வேண்டும், நிலைகுலையச் செய்யவேண்டும் என்னும் வெறி எழுந்தது. “நான் வராம இருந்திருந்தா நீங்க தப்பிச்சிருப்பீங்க. காலையிலே சொன்னீங்கள்ல, என் கடமைய நான் செய்யலாம்னு அதான் வந்தேன்.”
“ஆமா, செய்ங்க.”
“இப்பவும் அதைத்தான் சொல்றீங்களா?”
“ஆமா, ஏன்?”
நான் என் உடலெங்கும் பதற்றமாக நிறைந்திருந்த கோபத்தை மெல்ல அடக்கினேன். சொற்களை தெரிவுசெய்தேன் “உங்க வக்கீல் வந்து எங்கிட்ட கெஞ்சினார். மன்றாடினார். நான் நினைச்சா உங்க மேலே இரக்கம் காட்டலாம்னு சொன்னார். நான் இரக்கம் காட்டுறவன்தான். ஆனா உங்களுக்குத்தான் யார் மேலேயும் இரக்கமே இல்லியே… அப்ப உங்கமேலே ஏன் இரக்கம் காட்டணும்?”
“ஆமா… அதான் நியாயம்… காட்டுலே இரக்கத்துக்கு எடமில்லை.”
நான் அவரையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். பின்னர் “என்ன பண்ணிட்டிருந்தீங்க?” என்றேன்.
அவர் நிழலைச் சுட்டிக்காட்டி “அதுகிட்ட பேசிட்டிருந்தேன்” என்றார்.
“என்ன?”
“ரொம்ப நன்றி… மெய்யாகவே ரொம்ப நன்றி… இப்பதான் எல்லாமே ஒருமாதிரி தெளிவா இருக்கு அப்டீன்னு சொன்னேன்” என்றார் நாயக்கர். “நான் சொன்னது இதான். நான் சபிச்சிருக்கேன் உன்னை. என் வாழ்க்கையை மாத்தினது நீ. இல்லேன்னா நானும் ஒரு சாதாரண சம்சாரியா வாழ்ந்திருப்பேன். அசையாம குளுந்து ஒரு எடத்திலே கெடக்கிற பாறாங்கல்லு மாதிரி இருந்திருப்பேன்… இப்டி மலையுச்சியிலே நிக்கிற மரம் மாதிரி காத்திலே பறந்திட்டே இருக்கிற வாழ்க்கை அமைஞ்சிருக்காது… ஆனா இப்ப தெரியுது எல்லாம். நீ என்னோட ஒவ்வொரு செக்கண்டையும் அர்த்தமுள்ளதா ஆக்கியிருக்கே. பலபேருக்கு வாழ்க்கையோட அர்த்தமும் அருமையும் தெரியலை. எனக்கு தெரிஞ்சிருக்கு. நான் ஒரு நாளைக்கூட தவறவிட்டதில்லை. எதிர்காலத்தை நினைச்சு ஏங்கிட்டிருந்ததில்லை. கடந்த காலத்தை நினைச்சு சடைஞ்சு போனதில்லை… எனக்கு வாழ்க்கைன்னாலே அன்னின்னிக்குதான்… அந்தந்த நாளுதான்… ஒரு பருவத்தையும் வாழாம விட்டதில்லை. வெய்யக்காலத்திலே வேப்பம்பூமணம். மல்லிப்பூ மணம். புழுதி, வெங்காத்து. முதல்மழையோட மணம், மேக்குமலை குளுந்து பச்சையடிக்கிறது, ஊதக்காத்து, காத்தடிக்காலத்திலே கெளக்குமலை சருகுக்காத்து, குளிர்காலத்திலே வெடியக்காலை பனி… எல்லாமே அப்டி அருமையா இருந்திருக்கு. ஒவ்வொரு சொட்டா இந்த வாழ்க்கைய வாழ்ந்திருக்கேன்னா அதுக்குக் காரணம் நீ. அடுத்த செக்கண்டு இல்லை, இந்த செக்கண்டு மட்டும்தான் இருக்குன்னு நினைச்சு நினைச்சு இத்தனை ஆண்டு வாழ்ந்திருக்கேன்… ஒண்ணும் ஒரு கொறையும் இல்லை. ஒரு கடனும் இல்லை. ஒரு துளிகூட மிச்சமில்லை. சரிதான்… நீ ஒரு பேய்னு சொல்லுறாங்க. ‘நாள் என ஒன்றுபோல் காட்டி உயிர் ஈனும் வாள்’னு உன்னைய சொன்னார் வள்ளுவர். இல்ல, நீ தெய்வம். அருள்புரியற தெய்வம் நீ… எங்கூட இரு… என்னை கட்டிப்புடிச்சுக்கோ… மலைப்பாம்பு மாதிரி கட்டிக்கோ… ஒரு கைகால் வெரல் மிச்சமிருக்கப்பிடாது…” நாயக்கர் புன்னகைத்தார் “அப்டீன்னு அதுகிட்ட சொல்லிட்டிருந்தேன்.”
அவர் சிரிப்புடன், கொந்தளிப்புடன் பேசிக்கொண்டே இருந்தார். ஒரு விந்தையான நாடகம்போல. சட்டென்று எழுந்து நின்று அந்த நிழலிடமும் என்னிடமும் சேர்த்து பேசுவதுபோல பேசிக்கொண்டே சென்றார்.
”இந்த சாவு இருக்கே, இது உண்மையிலே என்ன? இதுக்குன்னு ஏதாவது அர்த்தமிருக்கா? இல்ல, நமக்குத்தான் அப்டி தோணுதா? சாவு ஒவ்வொரு முறையும் வேறவேற. நிழலுக்கு வடிவம் உண்டா என்ன? என்னோட நெழலுதான். ஆனா வேளைக்கு ஒண்ணு. எடத்துக்கு ஒண்ணு… வெளிச்சத்துக்கு மாதிரி மாறுது… என்னோட பதினெட்டு வயசிலே முதல்கொலைய பண்ணினேன். தனியா போறதே இல்ல. அப்ப எப்டியோ தனியா அந்த வழியா வர்ர மாதிரி ஆயிட்டுது… அந்தி நெருங்கிட்டிருக்கு. எதிரிங்க எவனாவது பாத்திருவானான்னு துண்ட தலைமேலே போட்டுட்டு, காலை கொஞ்சம் கெந்தி நடைய மாத்திக்கிட்டு வேகமா வர்ரேன். வயலிலே நின்ன ஒருத்தன் ‘ஏய் யார்ராது இந்நேரத்திலே’ந்னு கேட்டான். குரல மாத்தி ‘நான்தான்னு’ சொன்னேன். ‘நாந்தான்னா?’ன்னு கேட்டுட்டு மேலே வந்தான். ‘நான் பெரியசாமி மகன்’னு சொன்னேன். ‘எந்த பெரியசாமி?’ன்னு சொல்லி என் முகத்தப் பாத்தவன் கண்டுபிடிச்சிட்டான். கூப்பாடு போட ஆரம்பிச்சிட்டான். நான் ஓடுறதான்னு தயங்கி நின்னேன். ஓடியிருக்கலாம். ஆனா கேவலமா போயிடும். கத்திக்கிட்டே இருக்கான். சட்டென்று சூரிக்கத்திய எடுத்து அவன் சங்க அறுத்து தூக்கி சோளக்காட்டுக்குள்ள போட்டுட்டேன்.
உள்ள அவன் துடிக்கிறான். சோளம் அசையுது. நான் கத்தியை துடைச்சுக்கிட்டு நிதானமா நடந்தேன். நிலா மேலே வந்திச்சு… நல்ல வெளிச்சம். எல்லாம் அப்டியே ரம்யமா இருக்கு. நான் ஒரு பாட்டை பாடிட்டே நடந்தேன். ஒரு பழைய கீர்த்தனை. ’ராமா நீ சமானமெவரு…’ எனக்கு நானே கேட்டுக்கிட்டேன். ஏன் எனக்கு ஒரு துளிகூட பதற்றம் வரலை? ஏன் செத்தவன்மேலே இரக்கமே வரலை? அதைவிட ஏன் மனசு அவ்வளவு உல்லாசமா இருக்கு? நான் என் நிழல பாத்தேன். நிலாவிலே நிழல் கொஞ்சம் செவப்பா இருக்கிற மாதிரி இருந்தது. நான் அதுகிட்ட சொன்னேன். நீ யாருன்னு எனக்கு தெரியாது. ஆனா உன்னைப்பத்தி ஒரு முக்கியமான விஷயம் எனக்கு தெரியும். சாவுன்னா என்னமோ பயங்கரம்னு நினைச்சிட்டிருக்கானுக. பயங்கரம்தான். ஆனா சாவு ரொம்ப ரொம்ப அழகானது. இனிமையானது. மனுசனுக்கு புடிச்ச முதல் விஷயமே சாவுதான்… ஒரு பொணம் கிடந்தா மனுஷன் அதை பாக்காம அப்பாலே போறதில்லை. சாவுச்செய்திகளைத்தான் ரசிச்சு ரசிச்சு பேசுவான். சாவுகளை மட்டும்தான் ஞாபகம் வைச்சுக்கிடுவான். ஏன் சார், ராமாயணம் மகாபாரதம் எல்லாமே சாவுக்கதைகள்தானே… செத்துக்கிட்டே இருக்கானுக பக்கம்பக்கமா… சினிமாவிலே சாவத்தானே பாத்துக்கிட்டே இருக்கானுக… சாவு மாதிரி தித்திப்பான பண்டம் வேற இல்ல. அப்ப தெரிஞ்சுது…
”அப்றம் எவ்ளவு சாவு… மத்தவங்களோட சாவு, என்னோட சாவு. மார்க்கெட்ல ஒரு சண்டை… என் மேலே அரிவாள ஒருத்தன் வீசினான். நான் பாய்ஞ்சு தப்பினேன். என் பக்கத்திலே நின்னவன் கழுத்திலே அரிவாள் பட்டுது. அப்டியே விழுந்து துடிக்கிறான். வெட்டினவனை நான் உடனே திருப்பி வெட்டிட்டேன். இன்னொரு அருவாக்காரனை என் ஆளுக வெட்டிட்டாங்க. எனக்காக வெட்டுபட்டவன தூக்கி அவன் மூஞ்சிய பாத்தேன். அணில்பிள்ளைய கையிலே வைச்சா அதோட இதயம் துடிக்குமே, அப்டி அவனோட மார் துடிக்குது… ’நாய்க்கரய்யா உங்கள வெட்ட வந்தான்’னு திக்கித் திக்கிச் சொன்னான். வாய் வழியா ரத்தம் செதறுது. அப்டியே செத்துட்டான். அதென்ன அவன் அப்டி கடைசியிலே அப்டி சொன்னான்னு பலநாள் யோசிச்சேன். அவன் கண்ணிலே ஒரு உணர்ச்சி. அடப்பாவி உனக்காக நான் சாகிறேனேன்னு… அதத்தான் சொல்லியிருக்கான்… டேய் வெட்டத்தாண்டா நமக்கு உரிமை இருக்கு, யாரு சாகணும்னு சாவு தீர்மானிக்கும்டான்னு சொல்லிக்கிட்டேன்.
”அதுக்குமேலே சாவு எப்டி எந்த வழியா எதைச் செய்யுதுன்னுதான் பாத்திட்டே இருந்தேன். என்னோட சந்தோஷமே அந்த கணக்க போட்டுப்போட்டு பாக்கிறதுதான். ஒவ்வொரு வாட்டியும் நம்பவே முடியாத படி புதிசா ஒண்ணைச் செஞ்சிரும் இந்த நெழல்… ஒரு வாட்டி ஒரு சண்டை. ஒருத்தன் என்னை வெட்டினான். என் கால் ஒரு செங்கல்லிலே இடறிட்டுது. அதனாலே நான் நொடிச்சு வளைஞ்ச நேரத்திலே அரிவாள் என் வயித்துப்பக்கம் சட்டைய கிழிச்சு, வயித்திலே ஒரு கீறலப்போட்டுட்டு சீவிட்டு போச்சு. அப்டியே விழுந்துட்டேன். அதே நேரம் ஒருத்தன் என்னைய சுட்டான். குண்டு என்னை வெட்டினவனோட நெஞ்ச துளைச்சுது… நான் தப்பிச்சுக்கிட்டேன்… இப்டி ஒருத்தன் சினிமா எடுத்தான்னா நாம பாக்க மாட்டோம்… என்னய்யா கதவிடுறியாம்போம். ஐயா, சாவு தினம் ஒரு கத விட்ட்டுட்டிருக்கு. நிமிசத்துக்கொரு நாடகம் போட்டிட்டிருக்கு… என்னத்த சொல்ல?”
அவர் சொன்னவற்றை அப்போது நான் ஒவ்வொரு சொல் சொல்லாகப் புரிந்துகொண்டிருந்தேன். சாவு அத்தனை அணுகி வரும் அனுபவம் எனக்கு ஏற்பட்டதில்லை. என் வாழ்க்கையே இரண்டாகாப் பிரிந்துவிட்டது போல் இருந்தது. அந்தக் கணம், அந்தக் கணத்தின் நீட்சிதான் இதோ நான் இருந்துகொண்டிருப்பது.
“சாவிலே இருந்து தற்செயலா தப்பிக்காத ஒருத்தன்கூட இருக்கமாட்டான் இந்த உலகத்திலே… எல்லாருக்கும் ஒரு கதை இருக்கும். மடையன் அவனோட புத்திசாலித்தனத்தாலே தப்பிச்சதா நினைப்பான். சாமானியன் கடவுள் அருள்ம்பான்… சாவு வெளையாடுதுன்னு தெரிஞ்சவன் புத்திசாலி. ஐயா இப்ப சாவு உங்களுக்கு ஒரு ருசி காட்டியிருக்கு… இப்ப வாழ்க்கை எவ்ளவு அபூர்வமான அழகான விஷயம்னு தெரியுதுல்ல? புடிச்சுக்குங்க… சாவு குடுத்த வாழ்க்கை உங்களோடது” என்றார் நாயக்கர் “எல்லார் வாழ்க்கையும் அப்டித்தான்… சாவு குடுத்த பிச்சை”
அவர் பேசிக்கொண்டே இருக்க விரும்பினார். அவர் அறிந்தவற்றை எல்லாம் கடைசியாகச் சொல்லிவிடவேண்டும் என்பதுபோல. நான் அதற்கான தகுதியைப் பெற்றுவிட்டேன் என்று உணர்ந்தவர் போல.
”ஒருமுறைகூட, ஒருத்தர் சாவிலேகூட நான் அழுததில்லை. சாவுக்கு அழுறதுமாதிரி அசட்டுத்தனம் எதுவுமில்ல. எதுக்கு அழுறான் மனுஷன்? சாவு தன்னை தோக்கடிச்சிட்டுதேன்னு அழுறான். இப்டி நினைச்சிருக்காம நடந்துட்டுதேன்னு அழுறான். என்னாலே ஒண்ணும் செய்ய முடியலையேன்னு அழுறான். மடப்பய… சாவு எப்டி வரும்னு முன்னாடி சொன்னா மட்டும் புரிஞ்சுகிடுவானா என்ன? புரிஞ்சுக்கிட்டா மட்டும் அவனாலே என்ன செய்ய முடியும்? இந்தா கோடானுகோடி பூச்சி புளுக்கள் இருக்கு. சாதாரணமா மிதிச்சுட்டு போறோம். அதுக்கெல்லாம் என்னத்த சொல்லி புரியவைக்க முடியும்? அசட்டுத்தனம். சாவு வர்ரப்ப சிரிக்க முடிஞ்சா அவன் புரிஞ்சுக்கிட்டவன்னு அர்த்தம்… நான் சிரிச்சிருக்கேன்.
”இருவது வருசம் முன்ன… என் மூணாவது மகனுக்கு அப்ப அஞ்சு வயசு… பிறக்கிறப்பவே அவனுக்கு மூச்சிளைப்பு இருந்திச்சு. அதனாலே பொத்திப்பொத்தி வளத்தோம். அன்னிக்கு நடுராத்திரி இளைப்பு ஜாஸ்தியாயிட்டுது… அப்டியே தூக்கி தோளிலே போட்டுட்டு ஜீப்பை எடுத்தேன். பின் சீட்டிலே பையன் கிடக்கான். டிரைவர் வண்டிய ஓட்டுறான்… நான் அவனுக்கு மூச்சு எளைப்புக்குண்டான ஸ்ப்ரே அடிச்சுட்டு பக்கத்திலே உக்காந்திட்டிருக்கேன்… டவுனுக்குள்ள நுழையறப்ப எனக்கு என்னமோ தப்பா பட ஆரம்பிச்சுட்டுது. கார் ரவுண்டானாவை நெருங்கினதும் ஒருத்தன் சட்டுனு பைக்கை கொண்டுவந்து முன்னாடி போட்டு ஜீப்பை மறிச்சுட்டான். ரெண்டு பைக்குகள் ரெண்டு பக்கமும் வந்து அதிலே இருந்தவனுக சடசடன்னு சுட ஆரம்பிச்சிட்டானுக. இருட்டிலே வெளிச்சம் பளிச் பளிச்சுன்னு தெரியுது. சுடுறவன் முகம் இருட்டிலே. சுத்தி இருக்கிறதெல்லாம் மின்னலா தெரிஞ்சு அணையுது.
”பையன தூக்கி ஜீப்புக்கு அடியிலே என் காலடியிலே போட்டுட்டு நான் திருப்பி சுட்டேன். ஒருபக்கம் வந்த பைக்கிலே இருந்த ரெண்டுபேரையும் சுட்டுட்டு கதவை உதைச்சு திறந்து கீழே இறங்கி ஜீப்புக்கு பின்னாடி மறைஞ்சுகிட்டு மத்தவனுகள சுட்டேன்… நம்ம குறி தவறுறதில்லை… டிரைவர் போய்ட்டான்… எனக்கு தோளிலே ஒரு குண்டு… சுடவந்தவனுக ஆறுபேருமே செத்துட்டான்… பையன் குண்டுபடாம தப்பிட்டான். ’அப்பா அப்பா’ன்னு கத்துறான்… அப்பாலே நின்ன ஒரு கார் என்னைய நோக்கி சுட்டுக்கிட்டே வருது. நான் பையனைத் தூக்கிட்டு தெருவோரமா இருந்த மூடின கடைய நோக்கி ஓடினேன். கால்தடுக்கி பையனோட அப்டியே குப்புற விழுந்துட்டேன். பையன் மேலேயே விழுந்துட்டேன். புரண்டு எந்திரிச்சு ஓடுறப்ப பையன் உடம்பு என் கையிலே துடிச்சுது… அப்டியே தூக்கிட்டு ஓடுறேன். அவன் பின்மண்டை உடைஞ்சு போச்சு… என் கையிலேயே பையன் கொஞ்சம் கொஞ்சமா செத்துட்டான். ஆஸ்பத்திரிக்குள்ள நுழைஞ்சு டாக்டரை பாத்தப்ப என் கையிலே இருந்தது மண்டை உடைஞ்ச சின்ன பொணம்… துப்பாக்கி அவனை கொல்லலை. என்னோட பாதுகாப்பு அவனை கொன்னுட்டுது.
“என்ன செய்றது? சிரிக்கணுமா வேண்டாமா? சிரிச்சேன்… என் நெழலைப்பாத்து சிரிச்சுக்கிட்டே இருந்தேன். யய்யா நீ பெரிய காமெடியன்பா… சர்ரியான கோமாளிய்யான்னு சொல்லிச் சொல்லிச் சிரிச்சேன்… இப்பக்கூட நினைச்சா சட்டுனு சிரிப்பு வந்திரும்” அவர் நிழலை நோக்கி கையை காட்டினார். “பொல்லாதது. நம்மள வைச்சு வெளையாடுது… பூனை எலிய வைச்சு விளையாடுமே அது மாதிரி… இல்லே பக்தனை வைச்சு கடவுள் வெளையாடுறது மாதிரி.”
விந்தையான ஒன்று நிகழ்ந்தது. நானும் புன்னகைத்தேன்.
நாயக்கர் “ஐயா சிரிக்கிறீங்க… சமாச்சாரம் பிடிகிடைச்சுப் போச்சு” என்று சிரித்தார்.
நான் பெருமூச்சுவிட்டேன். நீண்ட நேரத்துக்குப்பின் என் முகம் அப்போதுதான் புன்னகைக்காக நெகிழ்ந்தது என்பதை நினைவுகூர்ந்தேன்.
“என் பையனும் இதே மாதிரி சிரிச்சான்” என்றார் நாயக்கர். “ரெண்டாவது மகன்… அப்ப அவனுக்கு இருபத்தெட்டு வயசு… என்னை கொல்ல வந்தாங்க. எனக்கு வெட்டு விழுந்தது, தப்பிச்சிட்டேன். அவனுக்கு கிட்னி கட்டாயிட்டுது… ரத்தமா போய்ட்டிருந்தது.
”என் இடுப்பிலேயும் தோளிலேயும் கட்டோட வீல்செயர்லே அவன பாக்கப்போனேன். முகம் வீங்கியிருந்தது. டாக்டர் சொல்லிட்டார், அவ்ளவுதான்னு. என்னைப் பாத்ததும் தலையை அசைச்சான். அவன் கையை பிடிச்சுக்கிட்டேன். ’நான் பிழைக்கமாட்டேன்பா’ன்னான். ’தெரியும்’னு நான் சொன்னேன். ’கவலைப்படாதீங்க’ன்னு சொன்னான். ’இல்லை, கவலைப்படலை’ன்னு நான் சொன்னேன். என் கண்ணைப் பாத்தான். பிறகு ’ஆமாப்பா நீங்க நிஜம்மாவே கவலைப்படலை’ன்னு சொன்னான். ’ஆமா, கவலைப்படலை… வருத்தமும் படமாட்டேன்’னு சொன்னேன். அவன் என்னைப் பாத்தான். ’வருத்தப்படுறதிலே அர்த்தமே இல்லை. சாவு அப்டித்தான். அது நினைச்சதைச் செய்யும்’னு சொன்னேன்.
அவன் என்னை வெறிச்சு பாத்துட்டே இருந்தான். ’ஏமாற்றமா இருக்கா?’ன்னு கேட்டேன். ’ஆமா’ன்னு தலையை அசைச்சான். ’அதுக்காக நான் பொய் சொல்லமுடியாது’ன்னு நான் சொன்னேன். ’இது எப்பவும் எங்கூடவே இருந்திட்டிருக்கு… இத புரிஞ்சுகிடவே முடியாதுன்னு எனக்குத் தெரியும்… இது என்ன செய்யும்னு நம்மாலே கண்டுபிடிக்கவே முடியாது’ன்னு சொன்னேன். அவன் என்னைப்பாத்து ’ஆனா நீங்க என் அப்பா, எனக்காக நீங்க ஒரு செகண்டாவது அழணும்ல?’ன்னு சொன்னான். ’அழமுடிஞ்சா அழமாட்டேனா’ன்னு நான் சொன்னேன். ’டேய், நான் தப்பிச்சுக்கிட்டேன்… இப்ப இதோ உசிரோட இருக்கேன். உன் மேலே கைவைச்சு சத்தியமாச் சொல்றேன்… ஒரு செகண்டுகூட தப்பிச்சதுக்காக சந்தோசப்படலை… நல்லவேளைன்னுகூட நினைச்சுக்கிடலை. சாவும் தப்பிச்சுக்கிடறதும் எனக்கு ஒண்ணுதான்’னு சொன்னேன். சட்டுன்னு சிரிச்சுட்டான். என் கையை புடிச்சு ’அப்ப நீங்க அழவேண்டாம்பா, உங்களுக்கு அந்த லைசன்ஸ் இருக்கு’ன்னு சொன்னான்… மறுநாளே போய்ட்டான். நல்ல பய… அப்டி ஒரு முத்து. சரி, அவன் விதி அது. பெருமாள் காலடியிலே வைகுண்டத்திலே இருப்பான்.”
நான் பெருமூச்சுவிட்டேன். அவர் என்னிடம் நாட்கணக்காகப் பேசிக்கொண்டே இருப்பதுபோல் இருந்தது.
நாயக்கர் “நீங்க கேக்க வந்ததை கேட்டிட்டீங்கன்னு நினைக்கிறேன்” என்றார்.
“கேக்கலை, ஆனா பதில் கிடைச்சுது”
“அதேதான் பதில். ஒரு துளிகூட பயமோ வருத்தமோ இல்லை. இது எனக்கும் இதுக்குமான ஆட்டம்…” அவர் நிழலை கைகாட்டினார். “நான் இதை இத்தனை நாள் வைச்சிருந்தேன். செல்லப்பிராணி மாதிரி வெளையாடி வளத்தேன்… இப்ப இதுக்கு என்னைய குடுக்கப்போறேன். அவ்ளவுதான்யா.”
நான் ஒன்றும் சொல்லாமல் எழுந்துகொண்டேன்.
(மேலும்)
கண இராமநாதன்
எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர். சென்னையில் ‘ஸ்டார் பிரசுரம்’ என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார். ‘அமைச்சன்’ என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். புதுமைப்பித்தன், ரா.ஸ்ரீ. தேசிகன், விந்தன், ரகுநாதன் போன்றோரது நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.

Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
