Jeyamohan's Blog, page 2303
August 20, 2011
அஞ்சலி, ஜான்சன்
நான் கல்லூரியில் காலடி எடுத்துவைத்த காலகட்டத்தில் மலையாள திரையுலகில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. மிகப்புகழ்பெற்றிருந்த அடிதடி கதாநாயகனாகிய ஜயன் விபத்தில் மறைந்தார். அது ஒரு நிமித்தம்போல, ஒரு அடையாளம் போல தோன்றியது. மிக விரைவிலேயே மலையாள அடிதடிப்படங்கள் மறைய ஆரம்பித்தன. யதார்த்தமான கலையம்சம் கொண்ட படங்கள் வர ஆரம்பித்தன. இன்று மலையாளத்தை உலகசினிமாவின் வரைபடத்தில் நிறுத்திய முக்கியமான இயக்குநர்கள் ஓர் அலைபோல மலையாளத்தில் நிகழ்ந்தனர்.
ஒருபக்கம் அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன் போன்றவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கலைப்பட இயக்கம். மறுபக்கம் பரதன், பத்மராஜன், மோகன் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட வணிக அம்சம் கொண்ட கலைப்படங்கள். அந்தப்படங்களின் வணிக வெற்றி பொது ரசனையை மாற்றியமைத்தது. செயற்கையான காட்சியமைப்புகளும் நாடகத்தருணங்களும் மறைந்தன. மிகப்பெரிய வணிக இயக்குநர்களாக இருந்த ஐ.வி.சசி, ஜோஷி,ஹரிஹரன் போன்றவர்களும் கலைநடுத்தரப் படங்களை நோக்கி வந்தனர். மலையாள சினிமாவின் பொற்காலம் எண்பதுகளில் தொடங்கி தொடர்ச்சியாக இருபதாண்டுக்காலம் நீடித்தது. அனேகமாக இந்தியாவில் எந்த மொழியிலும் அப்படி ஒரு நீண்ட மலர்ச்சிக்காலம் இருந்ததில்லை.
1978ல் ஆரவம் என்றபடம் வெளிவந்தது. விசித்திரமான படம். ஒரு சின்ன கிராமத்தின் வேறுபட்ட மனிதர்களின் சித்திரம் மட்டும் கொண்டது. அங்கே ஒரு சின்ன சர்க்கஸ் கம்பெனி வந்து சேர்ந்து பண்பாட்டை மாற்றியமைத்துவிட்டு அது பாட்டுக்கு கிளம்பிச்செல்கிறது. மலையாள திரையின் பிற்கால நாயகர்கள் பலர் அறிமுகமான படம். படத்தை எழுதியவர் 'நட்சத்திரங்களே காவல்' என்ற நாவல் வழியாக உச்சபுகழுடன் இருந்த பி.பத்மராஜன். இயக்கியவர் கலை இயக்குநராக இருந்த பரதன். காவாலம் நாராயணப்பணிக்கரின் நவீனநாடகத்தில் நடித்த நெடுமுடி வேணு, பிரதாப் போத்தன் ஆகியோர் நடிகர்கள்.
அந்தப்படத்தில் ஓர் இசை இயக்குநரும் அறிமுகமானார், ஜான்ஸன். அன்றுமுதல் மலையாள நவீன திரைப்படங்களின் முக்கியமான ஒரு அடையாளமாக இருபத்தைந்தாண்டுக்காலம் இருந்தவர் ஜான்ஸன். முதல் படத்தில் 'முக்குற்றீ திருதாளீ' என ஆரம்பிக்கும் நாட்டுப்புறப்பாடல் கவனத்தைக் கவர்ந்ததென்றாலும் அடுத்து வந்த பரதன் படமான 'தகரா' மூலம் ஜான்ஸன் கேரளத்தை கவனிக்கச்செய்தார்.
தகரா பலவகையிலும் முக்கியமான படம். ஒருவகையில் ஒரு பாலியல்கிளர்ச்சிப்படம் அது. அன்று வரை சினிமாவில் இருந்துவந்த எந்த பாவனைகளும் இல்லாமல் காமத்தைக் காட்டியது. நாயகிக்குரிய அழகற்ற, ஆனால் மிகக்கவர்ச்சியான கிராமத்து கதாநாயகி. சப்பையான கதாநாயகன். சர்வசாதாரணமான சம்பவங்கள், இயல்பான உரையாடல். அதன் காட்சியமைப்புகளும் சரி ஒளிப்பதிவும் சரி அன்று ஒரு பேரனுபவமாக இருந்தன. இன்றும், இத்தனை தொழில்நுட்ப வளர்ச்சிக்குப்பின்னரும் அந்தப்படத்தின் அழகும் நேர்த்தியும் மனதைக் கவர்கிறது. ஒருமேதையின் அறிமுகம் உண்மையில் நிகழ்ந்த படம்.
தகரா அன்று அது இளைஞர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக இருந்தது அன்று. அது அடைந்த வெற்றி தொடர்ச்சியாக அத்தகைய படங்களை உருவாக்கியது. நடுத்தரக் கலைப்படங்களுக்கான சந்தையும் அதற்கான நடிகர்களும் தொழில்நுட்பக்கலைஞர்களும் உருவாகி வந்தார்கள். அனைவருமே பெரும்புகழ்பெற்றார்கள். ஜான்ஸனும். மலையாளத்தில் எப்போதுமே இன்னிசைமெட்டுகளே பெரும்புகழ்பெறும். அன்று சலீல் சௌதுரியும் தேவராஜனும் உச்சத்தில்தான் இருந்தார்கள். ஆனால் புதிய படங்களுக்கான புதிய இசையுடன் வந்தார் ஜான்ஸன்.
1953ல் திரிச்சூர் அருகே நெல்லிக்குந்நு என்ற ஊரில் இசைப்பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தார் ஜான்ஸன். அவரது தந்தை ஒரு வங்கி ஊழியர். ஜான்ஸன் சர்ச்சில் புகழ்பெற்ற பாடகராக இருந்தார். பெண்குரலில் பாடுவதில் இருந்த திறமையால் மெல்லிசை நிகழ்ச்சிகளில் பாடும் வாய்ப்புகள் வந்தன. 1968ல் ஜான்ஸனும் அவரது நண்பர்களும் சேர்ந்து வாய்ஸ் ஆஃப் திரிச்சூர் என்ற இசைக்குழுவை உருவாக்கினார்கள். ஜான்ஸன் சிறந்த ஆர்மோனிய கலைஞர். புல்லாங்குழல், டிரம்ஸ், வயலின் போன்றவற்றையும் அவர் இசைப்பார்
விரைவிலேயே மெல்லிசைக்குழு மிகவும் புகழ்பெற்றது. ஒருகட்டத்தில் அதில் ஐம்பது உறுப்பினர்கள்கூட இருந்தார்கள். அவர்களின் குழுவின் நிகழ்ச்சிகளில் பாடகர் ஜெயச்சந்திரன் வந்து பாடுவதுண்டு. ஜெயச்சந்திரன் அவரை இசையமைப்பாளர் ஜி தேவராஜனுக்கு அறிமுகம் செய்தார். 1974ல் தேவராஜன் தன்னுடன் சேர்ந்து பணியாற்ற ஜான்ஸனை சென்னைக்கு கூட்டிவந்தார். ஜான்ஸன் தேவராஜனின் இசைக்குழுவில் அக்கார்டின் வாசிக்க ஆரம்பித்தார்.நான்குவருடங்களில் ஆரவம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்
ஜான்சன் இசையமைத்தபிரேமகீதங்கள் என்றபடத்தின்'ஸ்வப்னம் வெறுமொரு ஸ்வப்னம்' போன்றபாடல்கள் கேரளத்தில் இன்றுவரை பெரும் புகழுடன் இருப்பவை. ஜான்ஸன் பத்மராஜனிடமும் நெருக்கமானவராக இருந்தார். யதார்த்தச்சித்தரிப்பும் நுட்பமான மெல்லுணர்வுகளும் கொண்ட பத்மராஜன் படங்களில் அவரது இசை உணர்ச்சிகரமான ஒரு அம்சமாக இருந்தது. பத்மராஜனின் கடைசிப்படமான ஞான் கந்தர்வன் வரை அவரது 17 படங்களில் ஜான்ஸன் பணியாற்றியிருக்கிறார். இயக்குநர் சத்யன் அந்திகாடும் ஜான்ஸனுக்கு மிக நெருக்கமானவர். அவரது 25 படங்களில் ஜான்ஸன் பணியாற்றியிருக்கிறார். கணிசமான பரதன் படங்களுக்கும் இசையமைத்தவர் அவரே
ஜான்சன் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை 1994ல் பொந்தன்மாட என்ற படத்துக்காக பெற்றார். அடுத்த வருடம் சுகிர்தம் படத்துக்காக மீண்டும் தேசியவிருது பெற்றார். சிறந்த இசையமைப்புக்காக ஓர்மைக்காய் [1982] வடக்கு நோக்கி யந்திரம் , மழவில் காவடி [1989] அங்கினெ ஓரு அவதிக்காலத்து [1999] ஆகிய படங்களுக்காக மூன்றுமுறை கேரள அரசு விருது பெற்றார். பின்னணி இசைக்காக சதயம் [1992] சல்லாபம் [1996] ஆகியபடங்களுக்காக கேரள அரசு விருது கிடைத்தது. 2006ல் மாத்ருபூமி விருது போட்டோகிராபர் படத்துக்காக கொடுக்கப்பட்டது
ஆனால் 1995களுக்குப் பின் அவரது இசையில் தளர்ச்சி ஏற்பட்டது. அவர் மெல்லமெல்ல ஒதுங்கிக் கொண்டார் என்றே சொல்லவேண்டும். 2000த்துக்குப் பின்னர் அவர் ஆறுவருடம் இசையமைக்கவேயில்லை. 2006ல் ஃபோட்டோகிராஃபர் என்ற படத்துக்கு இசையமைத்தார். அந்தப்படத்தின் பாடல்கள் அதே தரத்தில் இருந்தன, வெற்றியும் அடைந்தன. ஆனாலும் அவருடைய இசை வேகம் கொள்ளவில்லை
மேற்கண்ட தகவல்களை விக்கிபீடியாவில் இருந்து எடுத்திருக்கிறேன். ஜான்ஸன் ஒரே ஒரு பாடல் பாடியிருக்கிறார், தமிழில். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கண்களால் கைது செய் படத்துக்காக தீக்குருவி என்றபாடல் என விக்கிபிடியா சொல்கிறது.
ஜான்ஸன் சென்ற ஆகஸ்ட் 18 அன்று சென்னையில் மாரடைப்பால் இறந்தார். அவர்ருக்கு ஷான் , ரென் என இரு பிள்ளைகள். மனைவி ராணி.
ஜான்சன் லோகியின் நெருக்கமான நண்பர். லோகி எழுதிய பல படங்களுக்கு ஜான்ஸன் தன் இசையால் உயிரூட்டியிருக்கிறார். நான் சென்னையில் ஒரே ஒருமுறை குமரகம் உணவகத்தில் ஜான்ஸனைப் பார்த்திருக்கிறேன். அவரது இசை என்னை என் இளமையில் கனவில் ஆழ்த்தியதைப்பற்றிச் சொன்னேன். [ஆனால் அவர் புகழுடன் இருந்த காலகட்டத்தில் அவரது பேரையெல்லாம் நான் கவனித்ததில்லை] அதிகம் பேசாதவரான ஜான்ஸன் புன்னகை செய்தார். செல்லும்போது என் கைகளை பற்றி மெல்ல அழுத்திவிட்டு சென்றார்.
ஜான்ஸனின் முக்கியமான பங்களிப்பு பின்னணி இசைக்கோர்ப்பிலேயே என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள். மலையாளத்தில் உருவாகிவந்த புதிய அலை திரைப்படங்களுக்கு பொருத்தமான மென்மையான, மௌனம் நிறைந்த இசையை அவர் அளித்தார். படத்தை விளக்கவோ மிகையாக்கவோ முயலாமல் மெல்லிய உணர்ச்சிகர இணைப்பை மட்டுமே அளிக்கக்கூடியது அவரது பின்னணி இசை.
ஜான்ஸனின் பல மெட்டுகள் என் இளமையின் நினைவுகளாக நெஞ்சில் தேங்கிக்கிடக்கின்றன. ஆடிவா காற்றே பாடிவா காற்றே ஆயிரம் பூக்கள் நுள்ளி வா , மெல்லெ மெல்லெ முகபடம் தெல்லொதுக்கி அல்லியாம்பல் பூவினே தொட்டுணர்த்தி , கோபிகே நின் விரல் தும்புரு மீட்டி , ஸ்வர்ணமுகிலே ஸ்வர்ண முகிலே ஸ்வப்னம் காணாறுண்டோ? , தங்கத்தோணி தென் மலயோரம் கண்டே' 'ஸ்யாமாம்பரம்' எல்லாமே இனிய வேதனையை மனதில் ஊறச்செய்யும் மென்மையான பாடல்கள்.
ஜான்ஸனுக்கு அஞ்சலி
சியாமாம்பரம்
ஸ்வப்னம் வெறுமொரு ஸ்வப்னம்
மெல்லெ மெல்லே முகபடம்
கோபிகே நின் விரல்
சுவர்ண முகிலே
அஞ்சலிகள்
தமிழினி
'அன்னா ஹஜாரேவுக்கு இது புதிது அல்ல. அவருடைய போராட்டம் நாற்பது ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது. தனது சொந்த கிராமத்தை சீர்திருத்தி வளப்படுத்துவதில் தொடங்கிய அவருடைய சமூக, அரசியல் விழிப்புணர்வு போராட்டம் இன்றும் தேசம் தழுவிய ஒரு பெரும் போராட்டமாக வளர்ந்து நிற்கிறது.'
காந்தியம் இன்னும் சாகவில்லை என்ற கட்டுரையில் எம்.கோபாலகிருஷ்ணன் [மணல்கடிகை நாவலாசிரியர்] எழுதுகிறார்
தமிழினி பதிப்பகத்தின் வெளியீடான தமிழினி மாத இதழின் இணையப்பதிப்பு இப்போது வெளிவந்துகொண்டிருக்கிறது. தமிழினி பெரும்பாலும் தமிழாய்வுகள், பண்பாட்டாய்வுகளை முன்னிறுத்தும் இதழ்
[image error]
தமிழினி இணைய இதழ்
August 19, 2011
தறி-ஒருகடிதம்
ஜெ,
நீங்கள் முன்பொரு முறை குழித்தறி குறித்து ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்போதே கேட்க நினைத்து விடுபட்டு விட்டது. அதில் தாங்கள் சமூகப் படிநிலையில் ஒரு உப ஜாதியைக் கீழ் இறக்கும் முகமாக உருவாக்கப் பட்டது என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.
நானும் என் தங்கையும், அவள் கல்லூரி ஆவணப் படத்திற்காக விசாரித்த போது கிடைத்த தகவல் அடிப்படையிலேயே இதைக் கேட்கிறேன்(படம் படு மோசமாக வந்தது வேறு கதை).
ஆனால் நான் அறிந்தவரை குழித்தறி தானே பழைய தறி. பட்டுத் தவிர மற்றவை எல்லாம் குழித்தறியில் தானே நெய்யப் பட்டிருக்கிறது. மேசைத்தறி அல்லது சப்பரத் தறி எனக்கு குறிப்பிடப்படுவது காலத்தால் மிகப்பிந்தியது என்று நினைக்கிறன். பட்டுக்கான தறி அமைப்பே வேறு, ஒடக்கோள் கையாலேயே நகர்த்தப் படுவது. சில 40 -50 வருட நெசவாளர்களிடம் பேசிய போது குழித்தறியில்வரும் தயாரிப்பு நேர்த்தி மற்றைய தறிகளில் வருவதில்லை என்று கூறினார்கள்.
உங்களுக்கே தெரிந்து இருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் கைத்தறி சார் தொழில் நகரம். நான் இங்க விசாரித்து அறிந்த வரை மேசைத் தறிகள் வந்தது ஒரு 50 – 60 வருடங்களுக்கு உள்ளாகத்தான். இங்கு நெசவு செய்யும் வெவ்வேறு சமூகத்தினர் உண்டு, எல்லோருக்கும் பொதுவாகவே இந்த நிலை இருக்கிறது!
தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன்.
நன்றிகளுடன்,
சுவ.
அன்புள்ள சுந்தரவடிவேலன்
நான் சொன்னது அப்படி அல்ல. அ.கா.பெருமாள் அவர்கள் அவரது குமரிமாவட்ட ஆய்வுகளில் இங்கே கைக்கோளமுதலியார் என்ற சாதி இருப்பதைப்பற்றிச் சொல்லியிருந்தார். அவர்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டுவாக்கில் தஞ்சையில் இருந்து வந்தவர்கள். அந்தக் கைக்கோளமுதலியார்கள் தஞ்சையில் சாதிப்படியின் உச்சியில் போர்வீரர்களாக,கைக்கோளபப்டையாக இருந்தவர்கள். நாடுவிட்டு நாடுவந்து தொழில் மாற நேர்ந்தமையால் சாதி இறங்குமுகமாகி ஓர் உபசாதியாக மாறியது என சொல்லியிருந்தார். இருபதாம் நூற்றாண்டில் மேஜைத்தறி இங்கே அறிமுகமானபோது இங்குள்ள நெசவாளர்கள் வெளியே இருந்து வந்த அந்த 'வரத்தர்'களை மேஜைத்தறி போடக்கூடாது குழித்தறியிலேயே இருந்து நெசவுசெய்ய வேண்டும் என்று வகுத்துத் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்டிக்கொண்டார்கள் என்றார். அதை நான் மேற்கோள் காட்டியிருந்தேன்.
ஜெ
கோவை
பத்து வருடம் முன்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புத்தகக் கண்காட்சிகள் ஆரம்பித்தன என்றாலும் சென்னை, மதுரை கண்காட்சிகளை மட்டுமே பதிப்பாளர் கூட்டமைப்பு தொடர்ந்து நடத்துவதாக முடிவெடுத்திருக்கிறது. நெல்லை கண்காட்சி ஆரம்பத்திலேயே படுதோல்வி எனத் தெரிந்து அப்படியே விட்டுவிட்டார்கள். திருச்சி கண்காட்சியும் எடுபடவில்லை. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் புத்தகம் மட்டும் விற்பதில்லை.
அது எழுத்தாளனாக என் அனுபவம்சார்ந்து நான் ஏற்கனவே சொல்லிவருவதற்கு ஒத்தே உள்ளது. தஞ்சை ஓர் அறிவுப்பாலைவனம் இன்று. அங்கிருந்து ஒருவாசகர் கடிதம் வருவதென்பது அனேகமாக சாத்தியமே இல்லை என்பதே உண்மை. மதுரையில் இருந்து வாசக எதிர்வினைகள் மிகக் குறைவென்றாலும் சாத்தூர், சிவகாசி, தேனி போடி என சுற்றுவட்டாரங்களில் இருந்து எப்போதுமே நல்ல வாசக எதிர்வினை இருக்கும். மதுரையில் அது தெரிவதில் ஆச்சரியமில்லை. நெல்லை குமரியில் கணிசமாக இருக்கும் சிஎஸ்ஐ கிறித்தவர்கள் தொழிலுக்குத் தேவையான படிப்புக்கு வெளியே பைபிளை மட்டுமே படிக்கவேண்டுமென்ற மதக்கொள்கை கொண்டவர்கள். அவர்களிடம்தான் பணமும் இருக்கிறது.
சென்னைக்கு வெளியே எப்போதுமே நல்ல வாசகர்கள் உள்ள வட்டாரம் கொங்கு மண். இருந்தும் சேலத்தில் வெற்றிகரமாகப் புத்தகக் கண்காட்சி ஒருங்கிணைக்கப்படவில்லை, அதற்கான ஆட்கள் அங்கே இல்லை. ஈரோட்டில் ஸ்டாலின் குணசேகரன் முயற்சியில் உருவான புத்தகக் கண்காட்சி மிகவெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது, குறிப்பாக இவ்வருடக் கண்காட்சி அனைவருக்கும் மிகுந்த உற்சாகமளித்திருக்கிறது. இன்றைய காந்தி நல்ல விற்பனையால் வசந்தகுமார்கூட உவகையுடன் இருந்தார்.
சென்னைக்கு அடுத்தபடியாக நல்ல வாசகர்வட்டம் கொண்ட கோவையில் ஏனோ புத்தகக் கண்காட்சி வெற்றிபெற்றதே இல்லை. அதற்கான காரணங்கள் பல சொல்லப்படுகின்றன. அதில் ஒன்று கோவையின் புத்தகவணிகர்கள் சிலர் புத்தகக் கண்காட்சி வெற்றிபெறக்கூடாது என்றே பலவழிகளில் முயல்கிறார்கள் என்பது. செம்மொழிமாநாட்டை ஒட்டி நடந்த புத்தகக் கண்காட்சிகூடப் படுதோல்வி. முக்கிய காரணம் செம்மொழிக்கும் புத்தகங்களுக்கும் உள்ள உறவு ஆட்சியாளர்களால் புரிந்துகொள்ளப்படவில்லை. கண்காட்சி ஏதோ சம்பந்தமற்ற மூலையில் ஒதுக்கப்பட்டது. அதற்கு விளம்பரமும் அளிக்கப்படவில்லை.
ஆகவே மேற்கொண்டு கோவையில் புத்தகக் கண்காட்சி நடத்தப் பதிப்பாளர்கள் எவரும் ஆர்வம் கொள்ளவில்லை. அதையும் மீறி சில தனியார் விடாமுயற்சியுடன் அங்கே புத்தகக் கண்காட்சியை ஒருங்கிணைக்க முயன்று இவ்வருடமும் நடத்தினார்கள். ஆனால் சென்றகால அனுபவங்கள் காரணமாகக் கடைபோட அதிக பதிப்பாளர்கள் வரவில்லை. மிகச்சிறிய அளவிலேயே அமைக்க முடிந்தது. கோவையின் பிரமுகர்கள், தொழில் அமைப்புகள் , கல்விநிறுவனங்கள் ஆகியவை ஒத்துழைக்கவில்லை. ஆகவே விளம்பரம் மிகமிகக் குறைவு. அரசு ஒத்துழைப்பும் குறைவு.
ஆக, இந்த புத்தகக் கண்காட்சிக்கு வந்த பதிப்பாளர்கள் செலவு செய்தபணம்கூடக் கிடைக்குமா என்று தெரியவில்லை என்றே சொன்னார்கள். ஈரோடு புத்தகக் கண்காட்சியில் இருபதாயிரம் பேர்வரை ஒரேசமயம் உள்ளே இருந்தார்கள் என்றால் இங்கே எந்நிலையிலும் நூறுபேர் கூட இல்லை. அடுத்தவருடம் இந்த பதிப்பாளர்களும் வரமாட்டார்கள். ஒரு முக்கியமான பண்பாட்டுமையம் என்ற அளவில் கோவை மிகமிக வெட்கவேண்டிய விஷயம் இந்தத் தோல்வி.
புத்தகக் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான என் நண்பர் 'ஓஷோ' ராஜேந்திரன் என்னை அழைத்துப் புத்தகக் கண்காட்சியில் பேசவேண்டுமெனக் கோரியபோது நான் ஒத்துக்கொண்டமைக்கான காரணம் இதுவே. என்னுடைய சிறிய பங்களிப்பும் இருக்கவேண்டுமென நினைத்தேன். எஸ்.ராமகிருஷ்ணனையும் அழைக்கும்படி சொன்னேன். அவர் ஊரில் இல்லை
ஆகஸ்ட் 17 ஆம் தேதி கோவைசென்றுசேர்ந்தேன். அரங்கசாமி அருண் வந்தார்கள். பின்னர் ஈரோட்டில் இருந்து நண்பர்கள் கிருஷ்ணன்,. விஜயராகவன் வந்தார்கள். கோவை தியாகு புத்தகநிலையம் தியாகு வந்தார். முந்தைய அரங்குகளில் மிகமிகக் குறைவாகவே கூட்டம் இருந்தது என்று சொன்னார்கள். மிகச்சிறந்த ஜனரஞ்சகப்பேச்சாளரும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நட்சத்திரமுமான பாரதி கிருஷ்ணகுமார் பேசியகூட்டத்தில்கூட நூறுபேர் இல்லை என்றார்கள். நண்பர்கள் தொலைபேசியில் அழைத்துக்கொண்டே இருந்தார்கள். ஒரு எட்டுப்பேர் இருப்பதாகத் தகவல் கிடைத்துக் கிளம்பிச்சென்றோம். என்னுடன் பதினைந்துபேர் இருந்தார்கள்.
ஆச்சரியமாகக் கூட்டம் ஆரம்பிக்கும்போது போடப்பட்ட இருக்கைகள் நிரம்பிப் பலர் நிற்கும் அளவுக்குக் கூட்டம் வந்தது. எதிர்பாராத கூட்டமென்பதனால் கொஞ்சம் உற்சாகமடைந்துவிட்டேன் போல, நன்றாகவே பேசினேன். எழுதி மனப்பாடம் செய்து 'தன்னியல்பாக'ப் பேசுவது என் பாணி.
என் ஆசிரியர் ஞானி வந்திருந்தார், கோவையில் நான் பேசிய எந்தக்கூட்டத்திலும் அவர் வராமலிருந்ததே இல்லை. அது எனக்கு மிகப்பெரிய கௌரவம். நாஞ்சில்நாடன் வந்திருந்தார். பேச்சுக்குப்பின் ஒரு ஐம்பதுபேர் என்னைச்சுற்றிக்கொண்டார்கள். இணையதளக்கட்டுரைகளைப்பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொன்னேன். ஒன்றரை மணிநேரம் நின்றுகொண்டே பேசிக்கொண்டிருந்தோம்.
பொதுவான அவதானிப்புக்களாக எனக்குப்பட்டவை. அவர்களில் பெரும்பாலானவர்கள் முப்பதுக்குக் கீழே வயதுள்ள புதியவாசகர்கள். நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் அனேகமாக யாருமில்லை. அத்தனைபேருமே இணையதளம் வழியாக மட்டுமே என்னைக் கேள்விப்பட்டு வாசித்து நூல்களை வாங்கி வாசிக்க ஆரம்பித்தவர்கள். நிறையப்பேருக்க்கு இலக்கிய அறிமுகமே என் இணையதளம் வழியாகத்தான். அதுவும் ஒருவிவாதத்தின் பகுதியாக எவரோ அவர்களுக்கு ஏதோ ஒரு கட்டுரையைப் பரிந்துரைத்து அதனூடாக உள்ளே வந்திருக்கிறார்கள்.
என் எல்லா நூல்களையும் வாசித்திருப்பதாகச் சொன்ன பல இளைய வாசகர்களைப் பார்த்துக் கொஞ்சம் அரண்டுபோனேன், எனக்கே எல்லாப் பெயரும் ஞாபகமில்லை. வாசகர்களில் ஆச்சரியப்படத்தக்க ஒரு சிறிய வட்டம் கடந்த பதினைந்து நாட்களுக்குள் என்னை வாசிக்க ஆரம்பித்தவர்கள் -ஆம், அயோத்திதாசர் கட்டுரைக்குப்பின்.
அந்த வாசகர்கள் பெரும்பாலானவர்களுக்குப் புத்தகக் கண்காட்சி பற்றிய தகவலே என் இணையதளம் வழியாகத் தெரியவந்தது என்பது ஆச்சரியமளித்தது.
பொதுவாக வாசகர்களுக்கு என்னிடம் கேட்க ஏற்கனவே கேள்விகள் இருந்தன. அந்த உரை சார்ந்து ஏதும் கேட்கவில்லை. கேள்விக்கான பதில் முடிவதற்குள் அடுத்த கேள்வி. ஆனால் சமகால சினிமா அரசியல் இலக்கிய வம்பு பற்றிய கேள்விகள் ஏதுமில்லை. எல்லாமே பல்வேறு கருத்தியல்கள் சார்ந்தவை. வாசிப்பின் சிக்கல்கள் சார்ந்தவை.
இரவு அறைக்குத்திரும்பினேன். நண்பர்களுடன் வழக்கம்போல இரவு இரண்டுமணிவரை பேசிக்கொண்டிருந்தேன். பெரும்பாலும் அண்ணா ஹசாரே பற்றி. அண்ணா ஹசாரே பற்றி இன்று வந்துகொண்டிருக்கும் 'அறிவுஜீவி' ஐயங்களைப்பார்க்கையில் இவர்கள் எவருக்கும் இந்திய வரலாறோ, சென்ற நூறுவருடங்களில் உலகமெங்கும் நிகழ்ந்த காந்தியப்போராட்டங்களின் வரலாறோ தெரியவில்லை என்ற எண்ணமே எழுந்தது. குறிப்பாக நம் இதழாளர்களின் வாசிப்பும் அறிவும் பரிதாபத்துக்குரியவை.
எங்கும் எப்போதும் காந்திய போராட்டம் சிறிய இலக்குகளை எடுத்துக்கொண்டு சிறிய சிறிய வெற்றிகளை ஈட்டியபடித்தான் முன்னகரும், எங்கும் அது போராட்டங்களைக் குறியீடுகளுக்காகவே நிகழ்த்தும் [ காந்தியின் உப்பு, அன்னியத் துணி அல்லது மண்டேலாவின் வசிப்பிடப் பதிவு நிராகரிப்பு] எங்கும் எல்லாவகை மக்களையும் கலந்தே அது நிகழும். மக்கள்கூட்டத்துக்குரிய உணர்ச்சிவேகமும் ஒழுங்கின்மையும் கொண்டதாகவே அது இருக்கும். ஆம் அது ஒருவகை அரசின்மைவாதம். ஆனால் ஜனநாயகபூர்வமானது, வன்முறையற்றது.
சொல்லப்போனால் 'முறை'யான அரசு அமைப்புகள் செயலிழந்து மக்கள் விரோதத்தன்மை கொள்ளும்போது அவற்றைக் கலைத்துப் புதிய ஒன்றை உருவாக்குவதற்காக மக்கள் அரசை எதிர்த்து அரசுநிராகரிப்பை நிகழ்த்துவதே சத்தியாக்கிரகப் போர். காந்தியின் சட்டமறுப்பு உட்பட எல்லாமே இதுதான். ஆகவேதான் அதில் வன்முறையோ தனிநபர் எதிர்ப்போ கூடாதென்கிறார் காந்தி.
காந்தியப்போராட்டம் பற்றி இந்த அறிவுஜீவிகள் எழுப்பும் எல்லாக் கேள்விகளுக்குமான விடைகள் 1930களிலேயே சொல்லப்பட்டுவிட்டன. அவை நூறுவருடங்களில் மீண்டும் மீண்டும் வெற்றிகரமானவை என நிரூபிக்கப்பட்டும் விட்டன. அதன் பின் இன்று புதியதாகக் கிளம்பி 'என்னது இது சட்டவிரோதமாக்குமே' என்று விவாதிக்கவருகிறார்கள் 'லோக்பால் வந்தா ஆச்சா?' என்கிறார்கள். 'உப்பு காச்சினா சுதந்திரமா' என்று கேட்ட அதே ஆசாமிகளின் வாரிசுகள்.
இரவு ,இலக்கியம் அரசியல் என்று பேச்சு பரவிச்சென்றபின் விடிகாலையில்தான் தூங்கினோம். காலையில் கோவைக்குத் தமிழருவி மணியன் வருவதாகச் சொன்னார்கள். தமிழருவி மணியன் ஈரோடு சென்ற சில மாதங்களாகவே இன்றைய காந்தி நூலைப்பற்றி நிறைய பேசிவருகிறார். அந்நூல் பரவலாகச் சென்றடைந்தமைக்கு அவர் முக்கியமான காரணம். ஈரோடு புத்தகக் கண்காட்சியில் அந்நூல் சிறப்பாக விற்றமைக்கு அவர் ஆற்றிய உரை காரணம் என்றார்கள். நான் அவரைச் சந்தித்ததில்லை. அபாரமான நேர்மைகொண்ட மனிதர் என நாஞ்சில்நாடன் சொல்லியிருக்கிறார்.
அவரைக் காலையில் சென்று சந்திக்க விரும்பி ஓஷோ ராஜேந்திரனிடம் சொன்னேன். இல்லை அவரே உங்கள் அறைக்கு வருவார் என்று சொன்னார். காலை பத்துமணிக்கு அவரை அரங்கசாமி கூட்டிவந்தார். இரண்டுமணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவரது இலக்கிய ஆர்வங்கள் பற்றிச் சொன்னார். அவரது இலக்கிய ஆசான் நா.பார்த்தசாரதி. அதன்பின் ஜெயகாந்தன். எப்போதும் பாரதி.
நா.பார்த்தசாரதியை நவீன எழுத்தாளர்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது பற்றிச் சொன்னார். அது நா.பார்த்தசாரதியின் நெருக்கமான நண்பராகக் கடைசிவரை இருந்த சுந்தர ராமசாமியின் தரப்பு, அது நவீனத்துவ அழகியலின் நோக்கு, ஆனால் நான் அப்படிச்செய்பவனல்ல என்றேன். நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் போன்ற நூல்களில் விரிவாகவே அதைப்பற்றி எழுதியிருக்கிறேன் என்று சொன்னேன். ஒரு வாசகன் கல்கி, நா.பார்த்தசாரதி அகிலன் போன்ற இலட்சியவாத எழுத்துக்கள் வழியாக இலக்கியத்துக்குள் வருவதே நல்லது. இல்லையேல் அவன் நவீன இலக்கியத்தின் விமர்சன நோக்கால் வெற்று அவநம்பிக்கையாளனாக ஆகிவிட வாய்ப்பு அதிகம் என்பதே என் எண்ணம். ஒரு சமூகத்தில் இலட்சியவாதம் ஏதேனும் வடிவில் எப்போதும் இருந்தபடியேதான் இருக்கவேண்டும்.
பொதுவாகத் தரமான எழுத்தாளர்கள் உள்தூண்டலுக்காகக் காத்திருப்பார்கள் , ஆகவே குறைவாகவே எழுதுவார்கள் என்கிறார்கள், நீங்களோ தரமாகவும் நிறையவும் எழுதுகிறீர்களே என்று கேட்டார். நான் விளக்கினேன். இருவகை எழுத்தாளர்கள் உண்டு. ஒருசாரார் அவர்களின் வாழ்க்கைசார்ந்த ஒரு சிறிய இடத்தை, நுண்மையான ஒரு பகுதியை, மட்டுமே மீண்டும் மீண்டும் அறிய முயல்பவர்களாக இருப்பார்கள். அவர்களின்பார்வை ஒட்டுமொத்தமானது அல்ல. முழுமை நோக்கி விரியக்கூடியதும் அல்ல. மௌனி, ஜானகிராமன், சுந்தரராமசாமி எனத் தமிழின் பெரும்பாலான எழுத்தாளர்கள் அவ்வகைப்பட்டவர்கள். உலகம் முழுக்க அப்படிப்பட்டவர்கள் உண்டு
ஆனால் இன்னொருவகை எழுத்தாளர்கள் உண்டு. அவர்கள் ஒட்டுமொத்தமாகப் பார்க்க நினைப்பவர்கள். தன் ஆழ்மன அறிதல்களை வரலாறு அரசியல் சமூகம் என எல்லா திசைகளுக்கும் விரிப்பவர்கள். அவர்களின் ஆர்வங்களும் தேடல்களும் பல திசைப்பட்டவை. என் நோக்கில் அவர்களே பேரிலக்கியவாதிகள். நான் அவர்களையே முன்னுதாரணமாகக் கொள்கிறேன். தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, தாமஸ் மன், சிவராம காரந்த் போன்றவர்கள் எழுதிய அளவில் சிறுபகுதியைக்கூட நான் உருவாக்கவில்லை என்றேன்.
அவருக்குத் தெரிந்த பல எழுத்தாளர்கள் என்னைப்பற்றித் தன்முனைப்புக் கொண்டவர் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றார். என்னுடைய எழுத்துக்கள் பலநூறு பக்கங்கள் விரிந்து கிடக்கின்றன. இந்தப் பக்கங்களில் நான் என் தரப்பை முன்வைத்திருக்கிறேன். ஆனால் ஒருபோதும் என்னை முன்வைத்ததில்லை. மாறாக ஒரு இலக்கிய மரபையே நான் முன்வைக்கிறேன். ஒரு சிந்தனை மரபையே முன்வைக்கிறேன். புதுமைப்பித்தன் சுந்தர ராமசாமி அசோகமித்திரன் தேவதேவன் என நான் எப்போதும் தமிழின் பிற முக்கியமான எழுத்தாளர்களையே முன்னிறுத்துகிறேன், என்னைத் தன்முனைப்புக் கொண்டவன் என்று சொல்லும் எழுத்தாளர்கள் மொத்த எழுத்துவாழ்க்கையில் ஒருமுறைகூட இன்னொரு எழுத்தாளர் பெயரைச் சொல்லியிருக்க மாட்டார்கள். சுயமேம்பாடு தவிர எதற்காகவும் செயல்பட்டிருக்கவும் மாட்டார்கள்.
ஆனால் எனக்கொரு தன்முனைப்பு உண்டு. அது நான் பாரதி முதலான ஒரு மரபில் வந்தவன் என்பதனால். கபிலன் சங்கரன் நாராயணகுரு நித்யா என ஒரு மரபில் வந்தவன் என்பதனால். சிறுமை என்னைத் தீண்டாது என எந்த மேடையிலும் வந்து நின்று சொல்லக்கூடிய தன்முனைப்பு அது. என் சொந்த வாழ்க்கையின் எந்த ஒரு பகுதியும் எப்போதும் வெளிப்படையானது, என் வாசகரோ எதிரியோ எவரும் எப்போதும் அதை ஆராயலாம் என்று சொல்லும் துணிவை எனக்களிப்பது அந்த தன்முனைப்பே.
அதற்கு அப்பால் எழுத்தாளனுக்கு என ஓர் ஆழமான தன்முனைப்பு உண்டு. ஒரு படைப்பை எழுதும்போது படைப்பு அவனைமீறி நிகழும் அற்புத கணங்களைக் கண்டிருப்பான். அப்போது அவனுக்குத் தெரிந்திருக்கும் அது என்ன என்று. அந்தப் பெருமிதமே எழுத்தாளனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய பரிசு. அந்தத் தருணங்கள் வழியாக வந்தவன் எப்போதும் தன்னை உயர்வாகவே நினைப்பான். நான் அறிவேன், என் படைப்புகளில் தமிழின் ஈராயிரம் வருட இலக்கிய மரபின் உச்சநிலைகள் சில நிகழ்ந்துள்ளன என்று. உலக இலக்கியத்தின் இந்தக் காலகட்டத்தின் மிகச்சிறந்த படைப்புநிலைகளில் அவையும் உண்டு என்று. அதை எவருமே அங்கீரிக்காவிட்டாலும் எனக்கு ஒன்றுமில்லை. அந்த நிமிர்வை நான் விடப்போவதுமில்லை.
நான் விரிந்த வாசகர் வட்டம் கொண்டவன். ஆனால் மிகச்சாதாரண பள்ளி ஆசிரியராக மட்டும் இருந்தவர் தேவதேவன். சர்வசாதாரணமான வாழ்க்கை கொண்டவர். ஒருபோதும் நூறு வாசகர்களைச் சேர்த்துப் பார்த்தவரல்ல. ஆனால் அவரிடம் கூடும் அந்த இயல்பான நிமிர்வு, சிருஷ்டி கர்வம், எனக்கே பலசமயம் ஆச்சரியமளிக்கிறது. ஆம், படைப்பாளிக்குத்தெரியும் படைப்பாளியாக இருப்பதென்றால் என்ன என்று. மற்றவர்களுக்குத் தெரிந்தாலென்ன தெரியாவிட்டாலென்ன?
தமிழ்நாட்டில் இலக்கியத்தின் நிமிர்வை உள்ளூர உணர்ந்தவர்கள் சிலரே. பலர் இலக்கியத்தைப் பள்ளிகளில் கற்றதுடன் சரி. அதற்குமேல் எந்தவிதப் பண்பாட்டுக்கல்வியும் அவர்களுக்கு இருப்பதில்லை. அவர்கள் அறிந்தவரை இலக்கியவாதி என்பவன் அக்குளில் துண்டை இடுக்கிக்கொண்டு கைகட்டி நிற்கவேண்டியவன். பரிசில்வாழ்க்கை வாழவேண்டியவன். செல்வமும் அதிகாரமும் உள்ளவர்களைப் புகழவேண்டியவன். அந்தப் பெரும்பான்மைக்கு இலக்கியவாதியின் சுயநிமிர்வு புரிவதில்லை. அதை ஒரு சாமானியனின் அர்த்தமற்ற ஆணவம் என்றே புரிந்துகொள்கிறார்கள்.
ஆம், பல தருணங்களில் ஆணவத்தையே பதிலாக அளித்ததுண்டு. அது ஜெயகாந்தன் எனக்களித்த வரி. 'அற்பத்தனங்களை அகங்காரத்தால் எதிர்கொள்கிறேன்' என்றார் அவர். அகங்காரம் மட்டுமே பதிலாக அமையுமளவுக்கு அற்ப எதிர்வினைகளை ஜெயகாந்தனைவிட அதிகமாகக் காணநேர்ந்தவன் நான்
காந்தியைப்பற்றி, நவகாந்திய சிந்தனையாளர்களைப்பற்றி விரிவாகப்பேசிக்கொண்டிருந்தோம். தமிழருவி மணியனுக்கு என் நூல்களைப் பரிசாகக் கொடுத்தேன். அவருடனான சந்திப்பும் அந்தத் திறந்த உரையாடலும் மிகுந்த நிறைவூட்டுவதாக இருந்தது.
சேலத்தில் இரு பெண்கள் வானவன்மாதேவி, இயலிசைவல்லபி என்று பெயர். எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களைப்பற்றி எழுதியிருக்கிறார். Muscular Dystrophy என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள். சூழலில் மிகையாகி வரும் கதிரியக்கம் மற்றும் ரசாயனங்கள் மனித மரபணுக்கூறுகளில் உருவாகிவரும் நோய்களில் ஒன்று அது. அவர்களின் உடல் தசைகள் செயலிழந்து வருகின்றன. அந்நிலையிலும் தட்டச்சு வேலைசெய்து சம்பாதிக்கிறார்கள். ஏராளமாக வாசிக்கிறார்கள் அவர்களைப்பற்றிய செய்திகள் வரவர அவர்களைச்சுற்றி இலட்சிய நோக்குள்ள சேவைமனமுள்ள ஒரு இளைஞர்வட்டம் உருவாகியிருக்கிறது. குறிப்பாக குக்கூ அறிவியக்கம் என்ற அமைப்பை நடத்திவரும் சிவராஜ் மற்றும் நண்பர்கள்.
ஈரோட்டுக்கு வந்த எஸ்.ராமகிருஷ்ணன் இவ்விரு பெண்களையும் பற்றிச் சொல்லக்கேட்டு கிருஷ்ணன் உட்பட ஈரோட்டு நண்பர்கள் அவர்களைப்பார்க்கப் புத்தகங்களுடன் சேலம் சென்றிருந்தார்கள். சென்றுவந்தபின் என்னை அழைத்துப்பேசினார்கள். நான் அவர்களைப் பார்க்க விரும்பினேன். அவர்களுக்கும் ஒரு சிறு பயணமாக இருக்கட்டுமே எனக் கார் ஏற்பாடு செய்து கோவை வரச்சொன்னேன். எல்லாருமாக நாஞ்சில்நாடன் வீட்டுக்குச் சென்றோம்.
நாஞ்சில்நாடன் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக நிறையப்பேர் வந்துவிட்டார்கள். பலதுறைகளில் சேவைசெய்யக்கூடியவர்கள். அரசுப்பேருந்து ஏறிக் கால் சிதைந்த கீர்த்தனா என்ற 7 வயதுக் குழந்தையுடன் அந்தக் குழந்தையின் தாய் வந்திருந்தார். 12 முறை அதன் காலில் அறுவைசிகிழ்ச்சை செய்யப்பட்டிருக்கிறது. மிகச்சாதாரணமான பொருளியல் சூழல். பெரியமனிதர்களாகத் தேடிச்சென்று நிதி திரட்டிச் சிகிழ்ச்சைசெய்கிறார்கள். இன்னும்சில அறுவைசிகிழ்ச்சைகள் தேவை. அழகான குழந்தை. கண்ணாடியிலும் தாளிலும் ஓவியங்கள் வரைகிறாள். எனக்கு ஓர் ஓவியம் பரிசாகக் கொடுத்தாள்.
நாஞ்சில்நாடன் வீட்டிலேயே மாலைவரை பேசிக்கொண்டிருந்தோம். தமிழக வரலாற்றாய்வுச்சிக்கல்கள், தமிழ்நூல்களைப் பொருள்கொள்ளுதல் பற்றியெல்லாம். கீர்த்தனா மலர்ந்த சிரிப்புடன் பேச்சுக்களை முழுக்க உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். 'அவளைப்போட்டு அறுக்கிறோம்..' என்றார் கிருஷ்ணன். உண்மையில் அப்படி அல்ல. ஓரளவு புத்திசாலியான குழந்தை கூட புரியாத பெரிய விஷயங்களை அதி தீவிர கவனத்துடன் கேட்டுக்கொண்டிருக்கவே முயலும் என்பதைக் கவனித்திருக்கிறேன். பேசப்படுவது சிக்கலானதாக இருக்க இருக்க அவர்களின் கவனம் அதிகரிக்கிறது.
ஆனால் அவர்களுக்கு அதை போதித்தால் அவர்கள் சலிப்படைகிறார்கள். நாம் பேசும்போது நம்மில்கூடும் உத்வேகமே அவர்களை அதிகமாகக் கவர்கிறது. ஆகவே 'உனக்கு இது புரியாது' என்று சொல்லப்படுவதைக் குழந்தைகள் வெறுக்கின்றன. எல்லாக் குழந்தைகளுமே தங்களை அறிவார்ந்தவர்களாக, உலகின் மையங்களாக நினைப்பவை. 'உனக்கு போர் அடிக்கிறதா?' என்றெல்லாம் கேட்பது அவர்களின் அறிவுத்திறனை அவமதிப்பதென்றே எடுத்துக்கொள்வார்கள்.
சைதன்யாவிடம் அதை மிகவும் கவனித்திருக்கிறேன். இன்னொரு முறை தெளிவாகக்கூற முயன்றால்கூடக் கடுப்பாகிப் 'புரியுது மேலே பேசு' என்பாள். ஊட்டி புதுக்கவிதை அரங்கில் முழுக்க அமர்ந்திருந்தாள். எல்லாக் கவிதையையும் கேட்டுப் புரிந்துகொள்ளவும் செய்தாள். 'பாவம் பாப்பா, போய் வெளையாடு' என்று அவளிடம் சொன்ன ஒருவரைக்கூட அவள் மன்னிக்கவில்லை. 'அவங்களுக்கெல்லாம் என்ன தெரியும்?' என்று உதட்டை அலட்சியமாகச் சுழிப்பாள்.
ஆனால் புத்திசாலியான குழந்தைகள் அறிவார்ந்த விஷயங்களை ஏளனம் செய்வதும் 'செம போர்' என அலட்சியம் செய்வதும் நம் நாட்டில் சகஜம். காரணம் பெற்றோர்தான். சின்னவயதிலேயே குழந்தைகளுக்கு முன்னால் அவர்களுக்குப் புரியாத அறிவார்ந்த விஷயங்களை, நுண்கலைகளைக் கிண்டல்செய்கிறார்கள். குழந்தைகளும் அப்படி இருக்கப் பழகிக்கொள்கிறார்கள். அதுவே இயல்பானது என்று நினைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அந்த மனநிலை கடைசி வரை நீள்கிறது.
ஆகவேதான் பட்டமேற்படிப்பு படித்தபின்னரும்கூட நான்கு பக்கம் கொண்ட கட்டுரையை 'செம நீளம்' என்று கூச்சமே இல்லாமல் சொல்வார்கள். கொஞ்சம் சிக்கலான ஒரு விவாதத்தை 'மொக்கைப்பா' என்பார்கள். விஜய்க்கு அசின் நல்ல ஜோடியா இல்லை அனுஷ்காவா என்பதை மணிக்கணக்கில் நாள்கணக்கில் விவாதிப்பது மட்டும் மிக இயற்கையானதாகத் தெரிய ஆரம்பித்துவிடும். அபாரமான அறிவுத்திறன் கொண்ட நம் குழந்தைகளை, குறிப்பாகப் பெண் குழந்தைகளை, நாம் அறிவுக்கு எதிரானவர்களாகத் திட்டமிட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறோம்.
இயலிசைவல்லபி, வானவன்மாதேவி இருவரும் இன்றைய காந்தி வாசித்ததாகச் சொன்னார்கள். காந்திய விவாதத்தில் சில மார்க்ஸிய கலைச்சொற்கள் அல்லாமல் எங்கும் வாசிப்புக்கு இடர் ஏற்படவே இல்லை என்றார்கள். என் கதைகளைப்பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம்
இருவரிடமும் அவர்கள் எழுத முற்படவேண்டும் என்று வலியுறுத்திச் சொன்னேன். எழுதுவது வேறு எதற்காகவும் அல்ல, அதிலுள்ள திறப்புகளின் இன்பத்துக்காக. அது அளிக்கும் முழுமையான தன்னிலை நிறைவுக்காக. தங்களிடம் மொழி இல்லை என்றார்கள். வாசிக்கவாசிக்க அது அமையும் என்று சொன்னேன். சாதாரணமான மொழியில் ' அதிகம்போனா இன்னும் அஞ்சு வருசம் இருப்போம் சார், அதுக்குள்ள நரம்புநோயாளிகளுக்கான ஒரு ஹோம் கட்டணும்னு ஆசை. இடம் பாக்கிறோம். ' என்று சொன்னார்கள்.
ஏராளமாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதற்கும் அப்பால் ஒவ்வொருவரிடமும் அவர்கள் மட்டுமே எழுதும் ஓர் உலகம் உள்ளது. அதை அவர்களால் எழுதமுடியும் என்றேன்.
அந்த நாள் நிறைவூட்டுவதாக இருந்தது என்று சொன்னார்கள். மாலையில் கிளம்பி அறைக்கு வந்தேன். இரவு எட்டரை மணி ரயிலில் திரும்பி நாகர்கோயில்.
அண்ணா ஹசாரே- ஒரு புதிய கேள்வி
வணக்கம்.
தொந்தரவுக்கு மன்னிக்கவும். அண்ணா ஹசாரேயின் போராட்ட்டத்தை பற்றி சில சொல்லவேண்டிஇருக்கிறது.
தற்போதைய அரசியல் வாதிகள் அனைவரும் தங்கள் கை காசை செலவழித்து தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வருவது எப்படியாவது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற காரணத்தினாலா?. அல்லவே. எப்படியாவது ஊழல் செய்து பணம் சேர்க்க வேண்டும் என்பதே. அப்படி பட்டவர்களிடம் ஊழலுக்கு எதிராக சட்டம் கொண்டுவரும் படி கூறினால் எப்படி முடியும். கந்தியப்போராட்டமே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுவது தானே. ஆனால் ஹசாரே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேருவதாக தெரிய வில்லையே. ஒரே அடியில் எதிரியின் கோட்டையையே அல்லவா தகர்க்க முனைகிறார்.
மேலும் ஹசாரேவுடன் உள்ளவர்கள் அனைவருமே வருமான வரியை சரியாக செலுத்தியவர்கள்தானா?.அரசியல் வாதிகள் இந்த கேள்வியை ஹசாரே விடமும் அவர்கள் ஆதரவாளர்களிடமும் கேட்டால் ஹசாரே என்ன பதில் கூறுவார்? கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் நாற்பது சதவிகிதம் வரியாக கட்டசொன்னால் யார்தான் கட்டுவார்கள்?. சட்டத்திற்கு உட்பட்டு எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதியுங்கள் அதில் பத்து சதவிகிதம் வரியாக கட்டினால் போதும் என்று இருந்தால் இங்கே கருப்பு பணம் தான் இருக்க முடியுமா?. முதலில் தங்களிடம் உள்ள குறைகளை களைந்து விட்டு; களைவதற்கான போராட்டங்களை நடத்திவிட்டு அதாவது அரசாங்கத்திடம் வருமான வரியை குறைக்க சொல்லி போராடி வெற்றி பெற்று விட்டு ஹசாரே அடுத்த கட்டத்திற்கு போகலாமே!. ஊழலுக்கு எதிராக போராடுபவர்கள் எத்தனை பேர் குறைந்த பட்சம் சாலை விதிகளையாவது ஒழுங்காக கடைபிடிக்கிறார்கள். எனது நண்பர் 2 ஜி உழலைபர்ரியும் அதை செய்தவர்களை பற்றியும் மணிக்கணக்காக என்னிடம் பேசிவிட்டு உழல் செய்தவர்களை திட்டிவிட்டு எந்த கூச்சமும் இல்லாமல் சாலையின் அடுத்த பக்கம் போவதற்கு இடது புறம் சென்று U டர்ன் எடுப்பதற்கு பதிலாக ராங் ரூட்டிலேயே ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்கிறார்.குறைந்த பட்சம் சாலை விதிகளையே மதிக்கத்தெரியாதவர்கள் ஊழலை பற்றி பேசுகிறார்கள்.
திருமணத்திற்கு முன்பு ஆண் பெண் இருவர்க்கும் ஏதாவது நோய் உள்ளதா? என்று பரிசோதித்து விட்டுதான் திருமணம் செய்யவேண்டும் என்ற சட்டம் இப்பொழுது எவ்வளவு முக்கியம் என்பது தாங்கள் அறியாததா? இதை போன்ற மிக அவசரமான சட்டங்களை வேண்டி ஹசாரே போராடுவதுதானே இப்போது முக்கியம்?இதிலெல்லாம் வெற்றி பெற்று படிப்படியாக தானே மேலே செல்லவேண்டும். ஹசாரே இப்பொழுது கையிலெடுத்திருப்பது கடைசியாக செய்ய வேண்டிய போராட்டம் என்பது எனது கருத்து. ஹசாரே வுக்கு இலக்கியப் பரிச்சயம் இருந்திருந்தால் அவ்வாறு செய்ய முற்பட்டிருப்பார் என்பது எனது எண்ணம். இதில் தங்கள் கருத்தை அறிய முற்படுகிறேன்.
பணிவன்புடன்
கண்ணன்
திருச்சி
அன்புள்ள கண்ணன்,
நல்ல கடிதம். இதே கடிதத்தை ஏன் இன்னும் விரிக்கக்கூடாது? இப்போது ரேஷன் கார்டுகளில் பெயர்களை நிறையபேருக்கு தப்பாக அச்சிட்டு கொடுத்திருக்கிறார்கள். அதை எதிர்த்து ஏன் அண்ணா ஹசாரே உண்ணாவிரதமிருக்கக்கூடாது? பான்பராக் போட்டுக்கொண்டு கண்ட இடங்களில் துப்புகிறார்கள் அதை எதிர்த்து அல்லவா அண்ணா ஹசாரே முதலில் போராடியிருக்கவேண்டும்?
உங்களுக்கே இதெல்லாம் சங்கடமாக தெரியவில்லையா? உண்மையிலேயே மனமறிந்துதான் இதையெல்லாம் பேசுகிறீர்களா? இத்தகைய அபத்தமான குரல்கள் மட்டும் ஏன் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் அதிகம் ஒலிக்கின்றன்றன?
வரலாற்றை பாருங்கள். எப்போதுமே இப்படித்தான் இருந்திருக்கிறது என காணலாம். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது வடமாநில மத்தியவற்கம் போராடித்தான். தென்னகத்தில் சுதந்திரப்போராட்டம் பெயரளவுக்கே நடந்தது. காந்தி மீண்டும் மீண்டும் இங்கே வந்து போராடியும்கூட இங்குள்ள நடுத்தரவர்க்கம் அஞ்சி, சோம்பியே கிடந்தது. இந்திராவின் ஊழலுக்கு எதிராஜ ஜெயப்பிரகாஷ் நாராயணனின் போராட்டமும் சரி, அவசரநிலைக்கு எதிரான ஒட்டுமொத்த போராட்டமும் சரி முழுக்கவே வடஇந்திய நடுத்தரவர்க்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. தென்னக அறிவுஜீவிகள் பெரும்பாலும் அரசுக்கு ஆதரவான நியாயங்களை புனைந்துகொண்டிருந்தார்கள்.
இந்தியாவின் எந்த ஒரு அரசியல்போராட்டமும் தென்னகத்தில் முனைகொள்ளவில்லை என்பதே உண்மை.நமது நடுத்தரவர்க்கம் கோழைத்தனத்தால், சுயநலத்தால் கட்டுண்டது. அதற்கான நியாயங்கள் புனைய தன்னுடைய முழுச் சிந்தனையையும் கற்பனையையும் பயன்படுத்தக்கூடியது. அதற்காக விதண்டாவாதம் செய்துகொண்டு நிறைவுகொள்வது.
காந்தியப்போராட்ட காலத்திலும் இதெல்லாம்தான் இங்கே பேசப்பட்டன . அன்றும் விதண்டாவாதத்தின் இரு முகங்கள் இவையாகவே இருந்தன. ஒன்று, போராட்டத்தின் இலக்கை குறைகூறி அதைவிட முக்கியமான போராட்டங்கள் உள்ளன, அவற்றுக்காக போராடியிருக்கலாமே என்று பேசுவது. இரண்டு, போராடுபவர்களின் தனிப்பட்ட தகுதியை ஐயப்படுவது.
அன்னியத்துணி புறக்கணிப்பின்போது அன்னிய ரயில்வேயை புறக்கணிக்கவேண்டியதுதானே என்ற கேள்வி பக்கம்பக்கமாக கேட்கப்பட்டிருக்கிறது. இந்தியா அன்று பிரிட்டிஷாருக்கு இந்திய மக்கள் அளித்த ஆதரவால்தான் பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழே இருந்தது. பிரிடிஷாரை நீதிமன்றம் ரயில் எல்லாம் கொண்டுவந்த நல்லவர்களாக அன்றைய எளிய மக்கள் நினைத்தனர். ஆனால் மறைமுகப் பொருளாதாரச்சுரண்டல் மூலம் இந்தியாவின் பல்லாயிரம் வருடத்தைய பொருளியல் அடித்தளமே ஆட்டம்கண்டுவிட்டிருந்தது . அந்த உண்மையை மக்களுக்கு கொண்டுசெல்லவே அன்னியதுணி புறக்கணிப்பு போராட்டம் என்பது காந்தியால் வடிவமைக்கப்பட்டது. ஆனால் நம்முடைய அறிவுஜீவிகளுக்கு அது புரியவில்லை, அல்லது புரிந்துகொள்ள அவர்களின் சுயநலமும் கோழைத்தனமும் அனுமதிக்கவில்லை.
[image error]
அன்னியத்துணி புறக்கணிப்பை விட உடனடியாகச்செய்யப்படவேண்டியவை என ஒரு ஐம்பது நூறு போராட்டங்கள் ஒதுங்கிநின்றவர்களால் சொல்லப்பட்டன. அவற்றில் முக்கியமானது வங்கத்திலும் பிகாரிலும் எழுந்த பெரும் பஞ்சங்கள். அந்த பஞ்சங்களின்போதும்கூட பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்துகொண்டிருந்தது. உடனடியாக காந்தி அங்கே போய் அந்த மக்களுக்காக போராடவேண்டும், துறைமுகம் சென்று ஏற்றுமதியாகும் தானியங்களை மறிக்கவேண்டும் என்று சொல்லப்பட்டபோது சில காந்திய ஆதரவாளர்களுக்கும் சஞ்சலம் வந்திருக்கிறது.
ஆனால் காந்தி தெளிவாகவே இருந்தார். அவரது போராட்டம் மக்களுக்கு உண்மையை கற்பிக்கும் நோக்கம் கொண்டது. அப்பட்டமான ஓர் நடைமுறை உண்மையை தொகுத்து சொல்லும்போது மட்டுமே மக்களுக்கு அது சென்று சேர்கிறதென அவர் அறிந்திருந்தார். இந்தியாவில் அன்றுவரை எந்த காங்கிரஸ் போராட்டமும் மக்கள் பங்கேற்புடன் நிகழ்ந்ததில்லை. காரணம் மக்களுக்கு பிரிட்டிஷார் மேல்தான் நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையை அன்னியத்துணி புறக்கணிப்பும், அதன் வழியாக அப்பட்டமாக தெரியவந்த பிரிட்டிஷ் சுரண்டலும் அழித்தபின்னர்தான் இந்திய சுதந்திரப்போரில் பெருவாரியான மக்கள் பங்கேற்பு நிகழ ஆரம்பித்தது. காங்கிரஸ் படித்தபண்டிதர் கைகளில் இருந்து விலகி மக்களிடம் வந்து சேர்ந்தது.
காந்தியப்போராட்டங்களின்போது அன்றும் போராடுபவர்கள் மேல் ஐயம் உருவாக்கப்படுவது ஓர் உத்தியாகவே கடைப்பிடிக்கப்பட்டது. எப்போதுமே அரசியல் போராட்டத்துக்கு முதலில் வருபவர்கள் படித்த உயர்குடிகளே. நேருவும் பட்டேலும் சுபாஷும் எல்லாருமே படித்த உயர்தட்டினரே. அவர்களை சுட்டிக்காட்டி காந்தியப்போராட்டம் ஒரு போலி உயர்குடிக்கலகம் என்று அன்றும் சொல்லப்பட்டது. ஆனால் கோடிக்கணக்கான எளியமக்களை தெருவில் போராட வைத்தது அவ்வியக்கமே. உலக வரலாற்றில் மிக அதிகமான மக்கள் நேரடியாக ஈடுபட்ட போராட்டங்களில் ஒன்று இந்திய சுதந்திரப்போர்.
உங்களைப்போன்ற கேள்விகேட்டு நிற்பவர்களுக்கு சொல்லவேண்டியது ஒரே பதில்தான், அண்ணா அவருக்கு முக்கியமென படுவதற்காக தெருவில் இறங்கி போராடுகிறார். நீங்கள் முக்கியமென நினைப்பதற்காக நீங்கள் ஏன் போராடக்கூடாது? அப்படி எல்லா முக்கியமான விஷயங்களுக்காகவும் இங்கே போராட்டங்கள் நடக்கட்டுமே, யார் வேண்டாமென்றார்கள்? நடக்கும் போராட்டத்தை மட்டம்தட்ட நடக்காத போராட்டங்களை பற்றி பேசும் அற்பத்தனத்தை என்று விட்டொழிப்போம்?
அண்ணா ஹசாரேயின் போராட்டம் அவர் ஏதோ திடீரென ஆரம்பித்த ஒன்றல்ல. அவர் முப்பதாண்டுக்காலமாக பொது வாழ்க்கையில் இருக்கிறார். கிராம நிர்மாணத்திட்டங்களைச் செயல்படுத்திக்காட்டியிருக்கிறார். அந்த திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் எதிரியாக இருப்பது ஊழலே என உணர்ந்து நடைமுறையில் சந்திக்க நேர்ந்த ஊழலுக்கு எதிராக போராட ஆரம்பித்தார். அவரது நேர்மையும் அவரது உறுதியும் அவர் இதுவரை சாதித்துக்காட்டியதும் சேர்ந்துதான் அவரை மக்கள் நாயகனாக ஆக்கின.
இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உணர்வது இன்று இந்தியாவின் ரத்தத்தை விஷமாக்கும் ஊழலைப்பற்றி. அந்த வேகமே அவருக்குப்பின்னால் இந்த பெரும் திரளை கூடச்செய்திருக்கிறது. எந்த ஒரு மக்கள் போராட்டமும் வெளியே இருந்து கொண்டுவரப்படுவதல்ல. அந்த மக்களின் உள்ளார்ந்த எதிர்ப்பாக அது ஏற்கனவே திரள ஆரம்பித்திருக்கும். அதற்கு ஒருவடிவமும் திசையும் கொடுப்பதே மக்கள்நாயகர்களின் பணி.
ஆகவேதான் ஆங்கிலம்பேசி, கோட்பாடுகளை விவாதித்து, இரவுபகலாக தொலைக்காட்சியில் தோன்றிக்கொண்டிருக்கும் ஆசாமிகளை மக்கள் பொருட்படுத்துவதில்லை. மக்கள் தேடுவது அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் தலைவர்களை. அவர்களுடன் பேசும் தலைவர்களை. தர்க்கத்தால் பேசுபவர்களை அல்ல, இதயத்தால் பேசுபவர்களை.
அண்ணா ஹசாரேவைப்பற்றி 'ஆய்வு'கள் நடத்திக்கொண்டிருக்கும் நம் அறிவுஜீவிகளிடம் நம் மக்கள் 'டேய் நீ யாரு?' என்று கேட்பது அவர்கள் காதுகளில் விழுவதில்லை. உண்மையான காந்தியவாதி தியாகத்தால் உருவாகி வருகிறார். தியாகம் மூலம் அவரது சொற்கள் அடிக்கோடிடப்பட்டிருக்கின்றன. வெட்டிவிவாதங்கள் மூலம் எவரும் அவரை விமர்சிக்கும் தகுதியைப்பெறுவதில்லை.
இத்தனை நீண்ட கடிதத்தை எழுதும் நீங்கள் குறைந்தது நான் இக்கேள்விகள் அனைத்துக்கும் ஏற்கனவே பதில் சொல்லியிருப்பதை அந்த நேரத்தில் பாதியைச் செலவிட்டு வாசித்திருக்கலாமே.?
ஜெ
ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1
ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2
அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…
August 18, 2011
யதார்த்தம் என்பது
குழும விவாதத்தில் கிருத்திகாவின் வாசவேஸ்வரம் பற்றி நான் இப்படி சொல்லியிருந்தேன். ஆன்மா தேங்கிப்போய் த் தீனி காமம் எனப் புலன் சுவைகளில் மூழ்கிப்போன ஒரு கிராமத்தின் சித்திரம் இது. அவ்வகையில் முக்கியமானது. ஆனால் சித்தரித்து என்ன நிகழ்த்துகிறார் என்றால் ஏமாற்றமே'
போகன் அதற்கு பதிலிட்டிருந்தார். 'சித்தரித்து என்ன நிகழ்த்துகிறார் என்றால் ஏமாற்றமே என்கிறீர்கள்.'
எனக்குப் புரியவில்லை.ஒரு உச்சத்தை நோக்கிப் போகவில்லை என்கிறீர்களோ?சித்தரிப்பே போதாதா?'
கண்டிப்பாகப் போதாது. பொதுவாகத் தமிழிலே ஒரு நம்பிக்கை எழுபதுகளில் உருவாக்கப்பட்டது. வாழ்க்கையை நம்பகமாகச் சித்தரித்தாலே இலக்கியத்துக்குப் போதும் என்ற எண்ணம். காரணம் வணிக எழுத்தின் பொய்யான ஜோடனைகள். இலக்கியம் அதற்கு மாற்றாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு. கல்கி வாசித்த வாசகனுக்குக் கிருத்திகா பெரும் மனஎழுச்சியைக் கொடுப்பது இயல்பே.
ஆனால் தொண்ணூறுகளில் இலக்கியம் அடுத்தகட்டம் நோக்கி வந்தது. வணிக எழுத்து முக்கியமழிந்து இலக்கிய ஒப்பீட்டுக்கே வராமலாகியது. இலக்கியங்கள் சொந்தக்கால்களில் நிற்கவேண்டிய கட்டாயமேற்பட்டது. இந்நிலையில் அதே பழைய நாவல்களை வாசிக்கையில் ஏமாற்றமே வந்தது. அவை ஒரு 'யதார்த்தச்' சித்திரத்தைக் காட்டுகின்றன. சரி, அதற்கென்ன?
யதார்த்தம் என்பதே ஒரு புனைவுதான். இலக்கியத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும். நாம் நம்மைச்சுற்றி உள்ள சில விஷயங்களை நம் தேவைக்கேற்பத் தெரிவுசெய்து அவற்றைக்கொண்டு உருவாக்கிக்கொண்டிருப்பதே நம் யதார்த்தம். அன்றாட யதார்த்தம் சமூக யதார்த்தம் எல்லாமே அப்படித்தான்.
உதாரணமாக வன்முறையும் பரிதவிப்புமாகக் கொப்பளிக்கும் சேரிக்கு அருகே வாழும் ஒரு சென்னை மத்தியவர்க்கத்தினன் மிக மிகச் சாதாரணமான சம்பிரதாயமான ஒரு வாழ்க்கையைத் தனக்கான வாழ்க்கை யதார்த்தமாக உருவாக்கிக் கொண்டிருக்க முடியும். அந்தச் சேரிவாழ்க்கை அவனுடைய யதார்த்தம் அல்ல.
இலக்கியத்தில் காட்டப்படும் யதார்த்தம், நாம் புனைந்துள்ள இந்த அன்றாட, சமூக யதார்த்ததுடன் பொருந்திப்போகும்போது நாம் அதை யதார்த்தமான கதை என்று சொல்கிறோம்.இணையாதபோது அது யதார்த்தக்கதை இல்லை என்கிறோம். ஜி.நாகராஜனின் நாவல்கள் ஒருகாலகட்டத்தில் யதார்த்தமானவை அல்ல என்று சொல்லப்பட்டன. சிங்காரம் நாவல்கள் இன்றும் அப்படிச் சொல்லப்படுகின்றன.
நாமறிந்த அன்றாட யதார்த்தமே 'உண்மையான' யதார்த்தம் என்ற நம்பிக்கையில் இருந்து யதார்த்தம் X கற்பனை என்ற ஒரு பிரிவினை அக்காலகட்டத்தில் உருவாக்கப்பட்டு அதிகம் வாசிக்காதவர்களிடையே இன்றும் நீடிக்கிறது. இலக்கியத்தில் எல்லாமே கற்பனைதான். மிகமிக 'நம்பகமான' யதார்த்தமும் கற்பனையே. 'உள்ளது உள்ளபடி' சொல்வதற்கு இலக்கியத்தில் இடமே இல்லை. எந்தச் சித்தரிப்பிலும் இலக்கியவாதிக்குரிய தேர்வு என்று ஒன்று இருக்கும். நிகழ்ச்சிகளில், படிமங்களில், சொற்களில்.
அந்தத் தேர்வை ஏன் அவன் நிகழ்த்துகிறான், அதன் மூலம் அவன் என்ன விளைவை உருவாக்குகிறான் என்பதே அந்த யதார்த்தச் சித்தரிப்பை அர்த்தமுள்ளதாக்குகிறது. அதன்மூலம் அவன் முன்வைக்கும் வாழ்க்கைத் தரிசனம் என்ன, வாசகனை அவன் எங்கே கொண்டு செல்கிறான் என்பதுதான் இலக்கியத்திடம் கேட்டுக் கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி.
நல்ல படைப்பு முதலில் ஒரு மெய்நிகர் வாழ்க்கையனுபவத்தை வாசகனுக்கு அளிக்கிறது. அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் புற யதார்த்தத்தைக் கற்பனையால் மீறி இன்னும் பல யதார்த்தங்களில் அவன் வாழச் செய்கிறது. அதன் வழியாக அவனை அது ஒரு சுயதரிசனத்துக்கு, வாழ்க்கைத் தரிசனத்துக்கு, பிரபஞ்ச தரிசனத்துக்குக் கொண்டு செல்கிறது. இலக்கியம் மூலம் அப்படிச் செல்லத் தெரிந்தவனே வாசகன்.
ஐம்பது அறுபதுகளைச்சேர்ந்த இலக்கியவாதிகளுக்கு இந்த யதார்த்தம் சார்ந்த பிரமைகள் இல்லை. மிகமிக அன்றாட யதார்த்தம் சார்ந்தவர் என்று சொல்லப்படும் அசோகமித்திரனின் படைப்புலகில் பலவகையான மாயயதார்த்தங்களை, கொந்தளிப்பான அக யதார்த்தங்களை வாசகன் காணமுடியும். ஆனால் எழுபது எண்பதுகளில் வந்த எழுத்தாளர்களுக்கு இது பெரும் சுமையாக ஆகி அவர்களின் படைப்பியக்கத்தையே சோர்ந்து போகச் செய்தது.
நான் எழுதவந்தகாலம் முதலே இந்த தரிசனம் என்ற மையத்தை மிக முன்வைத்து வாதாடியிருக்கிறேன். என் காலகட்டத்தில் பேசப்பட்ட நெல்லை எழுத்தாளர்களின் கதைகள் அளித்த பெரும் சலிப்பே முக்கியமான காரணம். ஒரே முடுக்கு, ஒரே ஸ்டோர்வீடு, ஒரே போன்ற மக்கள், ஒரேபோன்ற செயற்கை நெகிழ்ச்சி கொண்ட மொழி. உள்ளீடாக எப்போதுமே அடக்கப்பட்ட காமம். காமம் பற்றி எல்லாருக்கும் தெரிந்ததைப் பூடகமாக்கினால் நுட்பமான கலை என்ற நம்பிக்கை மேலோங்கியிருந்தது.
'ஆம், மனிதமனம் காமக் குரோத மோகங்களால் ஆனதே. மேலே சொல்லு' என்று இவர்களிடம் கேட்டால் மொத்தப் படைப்புலகமே திகைத்து நின்றுவிடும். இன்று இவர்களின் கதைகள் பெரும்பாலும் ஈசல்போல இறகுதிர்ந்து கிடக்கின்றன.
யதார்த்தத்தை ஆசிரியன் சித்தரிப்பது வாசகனின் ஆழ்மனத்தை இது மெய் என நம்ப வைப்பதற்காகவே. அப்படிப் புனைவின் தளத்தில் நம்ப வைக்கப்பட்ட எதுவும் யதார்த்தமே. மாய யதார்த்தமும் மிகை புனைவும் எல்லாம் புனைவு முறைகளே.யதார்த்தவாதமும் அப்படி ஒரு புனைவுமுறை மட்டுமே. அவற்றினூடாக ஆசிரியனும் வாசகனும் சேர்ந்து சென்றடையும் ஆழங்கள் உச்சங்களே புனைவை அர்த்தமுள்ளதாக்குகின்றன. அவ்வகையில் எல்லாவகையான புனைவுக்கும் இலக்கியத்தில் சம மதிப்புத்தான்.
'அன்றாட யதார்த்தத்தைச் சொல்கிறது என ஒருபடைப்பை மதிப்பிடுவது அதை அவமதிப்பது மட்டுமே' என நான்1992ல் எழுதிய வரியை மீண்டும் நினைவுகூர்கிறேன்.
ஜெ
August 17, 2011
இந்திய நிர்வாகிகள்
நேற்று டைம் வாரப் பத்திரிகையில் இந்தக் கட்டுரையைப் படித்தேன் http://www.time.com/time/magazine/article/0,9171,2084441,00.html . பெரிய பன்னாட்டுநிறுவனங்களின் தலைவராக அமெரிக்கர்களுக்கு அடுத்தபடியாக இந்தியர்கள்தான் அதிகமாக நியமிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய செய்திக் குறிப்புடன் அது ஏன் என்று ஆராயவும் செய்கிறது. வழக்கம் போல இந்தியாவின் பன்முகத் தன்மை, கடுமையான கல்விப் போட்டி, இந்திய சிகப்பு நாடா அதிகாரத்துவம் அளிக்கும் விசேஷப் பயிற்சி போன்றவை காரணமாக சுட்டிக் காட்டப்பட்டன. கடைசியில் இந்தியர்களின் நெறிமுறைகள் எப்படி அவர்கள் வெற்றி பெறுவதற்குத் துணையாக இருக்கிறது என்பது பற்றியும் ஆராய்ந்தது வியப்பாக இருந்தது. நீங்களே மேலும் படிங்கள்..
சிவா
வாழும் கணங்கள்
ரயிலில் ஒருவர் கூடவே பயணம் செய்தார். என்னைப்பற்றி விசாரித்தார். நான் எழுத்தாளன் என்று பொதுவாகச் சொல்லிக்கொள்வதில்லை, உடனே எழுத்தாளன் என்றால் யார், அவனுக்குப் பொதுவாகத் தமிழில் என்ன வருமானம் வரும், அவன் எப்படி முதல்வகுப்பு அறையில் பயணம்செய்யக்கூடியவனாக ஆனான், எல்லாவற்றையும் நான் விளக்கியாகவேண்டியிருக்கும். 'பிஸினஸ் செய்கிறேன்' என்று மட்டும் சுருக்கமாகச் சொல்வேன். 'என்ன பிஸினஸ்?' என்று கேட்டால் 'கொடுக்கல்வாங்கல்' என்று சொல்வேன். உண்மையில் இந்த வார்த்தைக்குச் சரியான அர்த்தம் என்ன என்று எனக்கு இன்றுவரை தெரியாது. ஆனால் அதைக்கேட்டதுமே எதிர்த்தரப்பு அனேகமாக மௌனமாகிவிடும்.
ஆனால் இந்த நபர் அங்கே நிற்கவில்லை. என் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். 'உங்கள எங்கியோ பாத்திருக்கேனே?' என்றார். 'கேரளாவிலே இருந்தீங்களோ?' என்றார். ஒரே கணம் யோசித்து 'ஆ, உங்க படத்தை மாத்ருபூமியிலே பாத்தேன்' என்றார். என் அனுபவமென்னவென்றால் பொதுவாக அச்சிட்டபடங்களை வைத்து அதிகம்பேர் மனிதர்களை நேரில் அடையாளம் கண்டுகொள்வதில்லை.ஒரேமுறை தொலைக்காட்சியில் வந்தால் போதும் சிக்கல். நான் கூடுமானவரை தொலைக்காட்சியைத் தவிர்ப்பேன்.
'நீங்க தமிழ் எழுத்தாளர் இல்லியா சார்? ஜெயமோகன்னு பேரு..இல்லசார்? கிளாட் டு மீட் யூ' . ஆச்சரியம்தான். வாசகர் போலிருக்கிறது. 'வாசிப்பீங்களா?' என்றேன். 'எங்க சார்? அதுக்கெல்லாம் நேரமே இல்ல.நான் மார்க்கெட்டிங்லே இருக்கேன்…என்னோட வேல ராத்திரி ஒரு ஒம்பது மணிக்கு முடியும். உடனே ஒரு லார்ஜ் போட்டுட்டு அப்டியே தூங்கிடறதுதான்…நியூஸ்பேப்பர் மட்டும்தான் வாசிப்பேன்' எனக்குப் புரியவில்லை. 'எர்ணாகுளத்திலே என் ஓட்டல் லௌஞ்சிலே மாத்ருபூமி பத்திரிகை கெடந்தது. எனக்கு மலையாளம் கொஞ்சம் தெரியும். புரட்டிப்பாத்தேன். உங்க படம் இருந்தது. நாலஞ்சு வரி வாசிச்சுப் பாத்தேன்…'
சிரித்துக்கொண்டு 'என்ன எழுதியிருந்திச்சுன்னு ஞாபகமில்ல சார். படமும் பேரும் மட்டும் பதிஞ்சிட்டுது..அது என்னோட கிஃப்ட். எனக்கு மனுஷ முகமும் பேரும் மட்டும் எப்பமுமே மறக்கிறதில்லை…' நான் 'அப்படியா?' என்றேன் மையமாக. 'நான் ஆரம்பத்திலே பலவேலைகள் செஞ்சிருக்கேன். செய்யாத வேல கெடையாது. எவ்ளவு தொழில் செஞ்சிருப்பேன்னு நினைக்கிறீங்க?' நான் வேடிக்கையாக 'அம்பது?' என்றேன் 'இருக்கும்சார் ,அம்பது இருக்கும்' என்றார் ஆவலாக.
'படிப்பு வரலை சார்…எஸ்எஸ்எல்சியோட சரி. அந்தக்காலத்திலே எவன் வேலைகுடுக்கான்? திண்ணவேலியில மளிகைக்கடையிலே நின்னேன். நானே சின்னதா மளிகைக்கடைவச்சேன். என்னென்னமோ செஞ்சிருக்கேன். தியேட்டர் முன்னால பிளாஸ்டிக் செருப்பு வித்திருக்கேன். கேரளாவிலே வட்டிக்குப் பணம் விட்டிருக்கேன். முந்திரிக்கொட்டை வாங்கிக் கடையிலே போட்டிருக்கேன். ஒண்ணுமே வெளங்கல்லை. நல்லவேள நமக்குப் பெரிய குடும்பம் கெடையாது. அம்மா மட்டும்தான்… ஒருகட்டத்திலே வெக்ஸ் ஆயிட்டேன். இனிமே நமக்குத் தொழில் கதியில்லேன்னு ஒரு ஓட்டலிலே கணக்கு எளுதினேன். அங்கயும் மரியாதையா வேலைசெய்யமுடியலை சார். கணக்கு தப்புன்னு அனுப்பிட்டாரு ரெட்டியாரு.
'சரீன்னு நேரா குருவாயூர் போய்ட்டேன். என்னத்துக்கு போனேன்னா, தற்கொலைக்குத்தான். போய் ஒரு சின்ன ரூமைப்போட்டுட்டு ராத்திரி வரை படுத்தே கெடந்தேன்.ராத்திரி கெளம்பி ரோட்டிலே நடந்து போனேன். எதுத்தாப்ல ஒருத்தரைப் பார்த்தேன். தூரத்துச் சொந்தக்காரரு. அப்பாவோட மச்சினன் மொறை. பரமக்குடியிலே இருக்கிறவரு. எனக்குத் தெரிஞ்சவங்கள பாத்தாலே மனசு நெறைஞ்சு ஒரு சிரிப்பு வந்திரும்சார். 'மாமா நல்லா இருக்கேளா'ன்னு கேட்டுட்டேன் 'தம்பி ஆரு'ன்னு அவரு கேக்காரு…பாத்து முப்பத்தாறு வருசமாயிருக்கு. நான் எங்கப்பா பேரைச்சொன்னேன். அவரோட பேரையும் வீட்டையும் எல்லாத்தையும் சொன்னேன்…அடடான்னு கட்டிப்புடிச்சாரு…என் நெலைமைய சொன்னேன். நீ என் கூட வான்னு கூட்டிட்டு போனாரு'
'அவருகூட சில்லறை வேலைகள் செஞ்சுட்டு ஒரு வருஷம் இருந்தேன்… அவரு ஊரூரா போய் வத்தல் மல்லி மொளகா மொத்தமாப் புடிப்பாரு. அதைக் கேரளாவுக்கு ஏத்தி அனுப்புவாரு. நான் கணக்குப்புள்ள. அவருக்கு டூவீலர் ஆக்ஸிடெண்ட் ஆகிப் படுத்திட்டார்.எங்கிட்ட அவருக்குப்பதிலா போகச்சொன்னார். எனக்கானா அப்டி ஒரு இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெஸ் சார். ஆளு கறுப்பா இருக்கேன். பேச்சும் சரியா வராது. மனுஷங்க கிட்ட பேசிக் கவுக்கிறதுக்குண்டான சாமர்த்தியமும் கெடையாது…மாட்டேன்னு சொன்னேன். கோவிச்சுகிட்டார். வேற வழியே தெரியல்லை…சரீன்னு கெளம்பிட்டேன்.
''சொல்லப்போனா ஒரு மூணுநாளு ஒருத்தரையுமே பாக்கலை. மஞ்சப்பையோட கெளம்பிப் போறது வெயிலிலே சுத்தி நாலெஞ்செடத்திலே டீயக்குடிச்சிட்டுத் திரும்பி வர்ரது. இதான்… ஒண்ணுமே ஓடலை. எங்கேயாவது ஓடிப்போய்டலாம்னு ஒரு நெனைப்பு…அதுக்கும் தைரியமில்லை…அப்டியே போய்ட்டிருக்கு சார்…அப்ப ஒருநாள் ரோட்டிலே ஒருத்தர பாத்தேன். பாத்ததுமே ஆளைத்தெரிஞ்சுகிட்டு 'என்ன மாமா நல்லாருக்கேளா'ன்னு கேட்டேன். அவருக்கு நம்மளத் தெரியல. பழைய மளிகைக்கடைக்கு வார ஆளு. நான் அவரப்பத்தி சொன்னதும் 'ஏலே மறக்காம வச்சிருக்கியே'ன்னு சொல்லி டீ குடிக்கக் கூப்பிட்டார். டீ குடிச்சுட்டிருக்கிறப்ப அவரே என்ன செய்றேன்னு கேட்டார். சொன்னேன். 'டேய் நான் மல்லி வச்சிருக்கேண்டா…நீ வெலையச்சொல்லு குடுக்கறேன்'னார்
'என்ன சொல்றது? ரொம்ப சகாயவெலைக்கு நாப்பதுமூட்ட மல்லியோட திரும்பிவந்தேன். அன்னைக்கு நில கொள்ளல்ல. துள்ளலா இருக்கு. நேரா கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டேன். சுத்திட்டு வர்ரப்ப ஒரு வெளிச்சம் மாதரி தெரிஞ்சுது சார். நம்ம கிட்ட ஒரு தனித்தெறம இருக்கு. நமக்கு மனுஷங்கள மறக்கிறதே கெடையாது. இந்த ரயிலிலே ஒருத்தர ஒருவாட்டி பாத்து ஹலோ சொல்லிட்டேன்னா ஆயுசுக்கும் அவரையும் அவரப்பத்தின எல்லா டீட்டெயிலையும் மனசுக்குள்ள வச்சுக்கிடுவேன்
'அது சாதாரண விஷயம் கெடையாது…நாட்டிலே பெரும்பாலும் சனங்களுக்கு மத்தமனுஷங்க முகம் ஞாபகத்திலே நிக்காது சார். அவனவன் தன்னைப்பத்தியே தான் நினைச்சுட்டிருக்கிறான் பாருங்க. நான் ஆரைப்பாத்தாலும் என்னையறியாமலேயே சிரிச்சு வணக்கம் சொல்லி மாமா சித்தப்பான்னு கூப்பிட்டு எல்லா விசயமும் கேட்டிருவேன். சின்னவயசுப் பழக்கம். அந்தத் தெறம இருக்கக்கொண்டுதானே நான் குருவாயூரிலே சாவாம தப்பினேன். அதனாலத்தானே இப்ப வியாபாரம் அமைஞ்சுது.
'அப்ப ஆரம்பிச்சேன் சார். நம்ம ஏரியா சேல்ஸுன்னு தெரிஞ்சுது. முதலு போடுறது, வாங்கி விக்கிறது, கணக்கு வச்சுகிடுறது ஒண்ணும் நமக்கு ஒத்துவராது. ஆனா மனுஷங்க கிட்ட பழக முடியும். இந்த மண்டைக்குள்ள ஒரு லெச்சம்பேருக்க முகமும் அட்ரஸும் மத்த விசயங்களும் இருக்கு… தொண்ணித்தி ஒம்பதிலே ஆடர் புடிச்சுக் குடுக்கிற வேலைய ஆரம்பிச்சேன். 'தனா சேல்ஸ் செர்வீஸஸ்'னு பேரு. எல்லாத்துக்கும் ஆர்டர் புடிச்சுக் குடுப்பேன்…நாலஞ்சு பயக இருக்கானுக. ஆனா நான்தான் மெயின்… ராத்தூக்கம் ரயிலிலேன்னு வச்சுக்கிடுங்க…ஆனா இப்பம் நாலஞ்சுகோடி தேத்திட்டேன் சார்'
ஆச்சரியமாக இருந்தது. கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கேட்டேன் 'சரியா எப்ப உங்களுக்கு இந்த நினைப்பு வந்தது? அதாவது உங்க ஒரிஜினல் திறமை இதுன்னு எப்ப தோணிச்சு' 'கோயிலிலே சார்' 'ஆமா…ஆனா கோயிலிலே எப்ப? என்ன செஞ்சுட்டிருந்தப்ப?' அவர் முகம் மலர்ந்து 'அதுகூட நல்லா ஞாபகமிருக்கு சார். சுத்தி வர்ரப்ப ஒரு செலையப் பார்த்ததும் என்னமோ அது என் மாணிக்கமாமா முகம் மாதிரின்னு ஞாபகம் வந்தது. சிரிச்சுக்கிட்டேன். உடனே இப்டித் தோணிச்சுது'
'அதுதான் ஜென் தருணம்னு சொல்றாங்க' என்றேன். 'அப்டீன்னா?' 'கடவுள் நமக்கு ஞானத்தைக் குடுக்கிறது கொஞ்சம் கொஞ்சமா இல்ல…சட்டுன்னு ஒரு நிமிஷத்திலே அப்டியே வாசலத் தெறந்திடுறார். அந்த வாசலை நாம தட்டிக்கிட்டே இருக்கலாம். சிலசமயம் ஆயுசுபூராக்கூடத் தட்டலாம். ஆனா நினைச்சிருக்காத நேரத்திலே சட்டுன்னு அது தெறந்திருது…' 'ஆமாசார்…நான் இப்பமும் மாசம் ஒண்ணாம்தேதி திருச்செந்தூரு போய்டறது' என்றார்.
அறிதல் என்று நாம் சாதாரணமாகச் சொல்கிறோம். ஆனால் தெரிந்துகொள்ளுதலுக்கும் அறிதலுக்கும் நிறைய வேறுபாடுண்டு. தெரிந்து கொள்ளுதல் நம் அன்றாட வாழ்க்கையில் சாதாரணமாக நடந்துகொண்டே இருக்கிறது. நாம் ஒன்றைத் தெரிந்துகொள்ளும்போது நம்மிடம் ஒரு தகவல் அல்லது ஒரு அனுபவம் வந்து சேர்கிறது. சிலசமயம் நமக்கு அது பயன்படுகிறது. பெரும்பாலும் பயன்படுவதில்லை. நம்மிடம் வந்துசேரும் விஷயங்களில் பெரும்பாலானவை நம்மிடமிருந்து உதிர்ந்து விடுகின்றன. நல்லவேளை, அப்படி அவை உதிர்வதனால்தான் நாம் மனச்சமநிலையுடன் இருக்கமுடிகிறது.
என்னென்ன விஷயங்கள் வந்துசேர்கின்றன! முருங்கைக்காயில் இரும்புச்சத்து இருக்கிறது, வீட்டுக்கடனைத் தனியார் வங்கியில் வாங்கினால் கூட்டுவட்டி போடுவார்கள், பெங்களூர் சென்னை ரயிலுக்கு சதாப்தி எக்ஸ்பிரஸ் என்று பெயர்….தகவல்களைத் தெரிந்துகொண்டே இருக்கிறோம். தகவல்கள் வழியாக நாம் சென்றுகொண்டே இருக்கிறோம். இல்லையேல் தகவல் நம் வழியாக சென்றுகொண்டே இருக்கிறது. பலவருடங்களாக நாம் வார இதழ்களை வாசிக்கிறோம். சென்ற இதழ் விகடனில் என்ன இருந்தது சொல்லுங்கள் பார்க்கலாம்.
நம்முடைய கல்வி என்பதே தெரிந்துகொள்வதைத்தான் நடைமுறைப்படுத்துகிறது. தகவல்களை நம்மீது இருபது வருடங்கள் வரை கொட்டிக்கொண்டே இருக்கிறது அது. இருபத்தைந்து வயதில் நாம் கல்விமுடித்து வாழ்க்கையை எதிர்கொள்ளும்போதுதான் அனேகமாக முதல் அறிதல் நிகழ்கிறது. 'நாம் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை'; என்ற அறிதல்!
அறிதல் என்பது வேறு. தெரிந்துகொள்ளுதல் என்பது எப்போதுமே ஒரு துண்டு அறிவைத்தான். அறிதல் என்பது ஒரு முழு அறிவை. எல்லா அறிதலும் நம்மை அறிவதுதான். நம்மைச்சுற்றி உள்ள உலகை நாம் அறிவதும்கூட நம்மை அறிந்துகொள்ளுதல்தான் இல்லையா?
அறிதலை எப்படி வகுத்துக்கொள்வது? தெரிந்துகொள்ளும் விஷயங்களில் இருந்து அதைப் பிரித்துப்பார்ப்பதன்மூலம்தான்.தெரிந்துகொள்ளும் விஷயங்களில் நமக்குப் பயனற்றவை உள்ளன. ஆனால் அறிந்துகொள்ளும் விஷயங்களில் பயனற்றவையே இல்லை.
தெரிந்துகொள்ளும்போது சலிப்பும் சோர்வும் உண்டு. நம் கல்விக்கூட வகுப்புகள் பெரும்பாலும் அப்படித்தான். ஆனால் அறிந்துகொள்ளுதல் ஒருபோதும் சோர்வோ சலிப்போ அளிப்பதில்லை. சொல்லப்போனால் மனித வாழ்க்கையிலேயே உச்சகட்ட இன்பம் என்றால் அறிதலின் இன்பம்தான். ஆகவேதான் உண்மையான குரு சீடனுக்கு அளிக்கும் ஆனந்தத்தை வேறெந்த மனிதரும் அளிப்பதில்லை என நம் மரபு சொல்கிறது.
சிலசமயம் அறிதலின் அந்த முகாந்திரம் வேதனை மிக்கதாக இருக்கும். பெரும் இழப்புகள் வழியாக பெரும் அவமதிப்புகள் வழியாக உச்சகட்ட துயரங்கள் வழியாக நம் அறிதலின் கணங்கள் நிகழக்கூடும். அப்போது அது கடினமாகவே இருக்கும். ஆனால் நாம் வாழ்நாளெல்லாம் அந்தத் தருணங்களை நினைவில் கொண்டிருப்போம். அதையே சொல்லிக்கொண்டிருப்போம். மீளமீள நினைக்க ஆசைப்படுவோம். அப்போது ஒன்று தெரியும், நாம் உள்ளூர அந்த அறிதலின் கணத்தை விரும்பவும் செய்கிறோம். உண்மையிலே நாம் விரும்பாத ஒன்றை நாம் பிறகு நினைக்கவே மாட்டோம். அப்படி அந்த எதிர்மறை விஷயங்களையும் நம்மை ரசிக்கச்செய்வது எது? அப்போது நிகழும் அந்த அறிதலில் மாயம்தான்.
தெரிந்துகொள்ளுதல் நம் நினைவை நிரப்புகிறது. அறிதல் அப்படி அல்ல. அது நம் ஆளுமையை மாற்றியமைக்கிறது. ஒன்றைத் தெரிந்துகொண்டதுமே நாம் மாறிவிடுகிறோம். அதற்கு முன்பிருந்த நாம் அல்ல அதற்குப்பின். அதற்குமுன் இருந்த உலகம் அல்ல அதற்குப்பின்.
நாம் மானசீகமாக வளர்வதே அறிதலின் மூலம்தான். நாம் ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக வளர்வதில்லை, ஒவ்வொரு அறிதல் அறிதலாக வளர்கிறோம். நாம் வளர்வதை எப்படி உணர்வதில்லையோ அப்படித்தான் நாம் அறிவதையும் பெரும்பாலும் உணர்வதில்லை. இருபது வயதில் உங்களுக்கு உறவுகளைப்பற்றி என்ன எண்ணம் இருந்தது , இப்போது என்ன இருக்கிறது என்று மட்டும் பாருங்கள். ஒரு பெரிய அறிதல் நிகழ்ந்திருக்கிறது. அந்த அறிதல் வழியாக நீங்கள் வளர்ந்திருக்கிறீர்கள்.
ஆனால் அந்த அறிதல் எப்போது நிகழ்ந்தது என்று உங்களால் வகுத்துக்கொள்ள முடியுமா? பலசமயம் நாம் நினைப்போம், அந்த அறிதல் படிப்படியாக, கிணற்றில் நீர் ஊறி நிறைவது போல கொஞ்சம் கொஞ்சமாக ஊறியது என்று. ஆனால் நம்மை நாமே கூர்ந்து நோக்கும் வழக்கம் நமக்கிருந்தால் , நம்முள் என்ன நிகழ்கிறதென்பதை நாம் கவனித்திருந்தால், ஒன்று தெரியும் அந்த அறிதல் ஒரு விதை மரமாவது போல நம்முள் வளர்ந்து வந்த ஒன்று என.
அந்த விதை நம்முள் விழுந்த கணம்தான் அறிதலின் கணம். அதன் மேல் நாம் நம் கற்பனையை நீராக ஊற்றுகிறோம். நம்முடைய சிந்தனைகளை உரமாகப் போடுகிறோம். நம்முடைய தர்க்கத்தால் வேலி கட்டுகிறோம். அது நம்முள் மரமாக ஆகிறது. அந்த விதை விழுந்த கணத்தை நம்மால் கொஞ்சம் கவனித்தால் கண்டுபிடிக்கமுடியும். அத்தகைய கணங்களே வாழும் கணங்கள். நாம் மிக முக்கியமாக நினைத்து மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கும் கணங்கள். நாம் அறிதலின் பரவசத்தை அடைந்த கணங்கள்.
சிலசமயம் சில தருணங்கள் ஓர் அர்த்தமும் இல்லாமல் நம் நினைவில் கிடக்கும். ஏனென்றே தெரியாது. சும்மா ஒருமுறை சேர்மாதேவி போய் பேருந்து நிலையத்திலே நின்றுகொண்டிருக்கும்போது ஒருவர் வெள்ளரிக்காய் வேணுமா என்று கேட்ட தருணமாக இருக்கும். ஆனால் கவனியுங்கள் அங்கே நாமறியாத ஏதோ ஓர் அறிதலை நம் ஆழ்மனம் அடைந்திருக்கும். நமக்குள் உள்ள சிப்பி வாய்திறந்து ஒரு மணலை உண்டிருக்கும். அது அங்கே முத்தாக ஆகிவிட்டிருக்கிறது
அறிதல் என்பது ஒரு மாயக்கணத்தில் நிகழ்கிறது. அதன் சாத்தியங்கள் எல்லையே இல்லாதவை. சட்டென்று நம் மலர்ந்து விடுகிறோம். சட்டென்று உலகம் தெளிவாகி விடுகிறது. சட்டென்று சத்தங்கள் சங்கீதமாகிவிடுகின்றன. சட்டென்று நிறங்கள் ஓவியமாகிவிடுகின்றன
பூதப்பாண்டி கோயிலில் நின்று பின்னால் பார்த்தால் ஒரு மலை தெரியும். அது தாடகை மலை என்று சொல்வார் ஒருவர். எது கூந்தல் எது மூக்கு நுனி எது மார்பகம் எது இடுப்பு என்று சுட்டிக்காட்டுவார். சட்டென்று மல்லாந்து படுத்திருக்கும் பேருருவம் கண்ணுக்குத்தெரியும். அதன்பின் அதை நம்மால் மலை என பார்க்கமுடியாது. அது அரக்கிவடிவமாகவே தெரியும். அதுதான் அறிதலின் கணம்.
அறிதல் எனபதை வெவ்வேறு வகையாக விளக்கமுயன்றிருக்கிறார்கள் இந்திய ஞான மரபில். ஓஷோ,அறிதல் என்பது கடந்துசெல்லுதலே என்கிறார். அறிதல் என்பது எப்போதுமே ஒருகணம். அது நிகழ்ந்ததுமே நாம் அதைகடந்து வந்துவிட்டோம். அந்த அறிதலால் ஆன ஓர் உலகில் வாழ ஆரம்பித்துவிட்டோம். ஆகவே ஒன்றைகடந்துசெல்வது என்பது அதை அறிதலே என்கிறார்
தொன்மையான கருத்து. அந்தி இருளில் சுருண்டுகிடக்கும் கயிறை பாம்பு என நினைக்கிறோம். அந்த பாம்பை நாம் கடந்து செல்ல ஒரே வழிதான், அது கயிறென அறிதல். அத்வைதத்தின் முக்தி என்பதே அறிதல்தான். முழுமையான அறிதலின் மூலம் அடையும் விடுதலை.
அறிதல் நிகழும் கணத்தை அறிவும் அறிபடுபொருளும் அறிபவனும் ஒன்றாக ஆகும் கணம் என்கிறார் நாராயணகுரு. அதை அறிவிலமர்தல் என்கிறார். ஆம், அந்தக் கணத்தில் அந்த அறிவு நாமே ஆகிவிடுகிறது. நாம் அந்த அறிவே ஆகிவிடுகிறோம். நாம் அறியும் அந்த உச்ச பரவச கணத்தில் நாம் இருப்பதே நமக்குத் தெரிவதில்லை. அந்த அறிதல் மட்டுமே நமக்குத்தெரிகிறது. அதைத்தான் நாம் மெய்மறத்தல் என்று சொல்கிறோம்
ஏன் அப்படி நிகழ்கிறது? நாம் என நம்மைப்பற்றி சொல்கிறோமே அந்த சுயம் என்பது என்ன? நாம் இதுவரை அடைந்த அறிதல்களின் தொகை அல்லவா? ஆறுமாதத்தில் பாப்பா எங்கே என்று அம்மா கேட்கும்போது குதூகலமாக சொந்த குட்டித்தொப்பையில் தட்டி எம்பி எம்பி குதிக்கிறோமே அந்த முதல் அறிதல் முதல் எத்தனையோ அறிதல்களால் ஆனது நம் சுயம். நாம் ஒன்றை அறியும்போது நாம் என நாம் வகுத்திருக்கும் இந்த சுயம் உடைபடுகிறது. அந்த அறிவை உள்ளிழுத்து அந்த சுயம் இன்னொரு வடிவத்தை அடைகிறது.
நம்முடைய ஒரு வாழ்க்கையில் சாதாரணமாக அப்படி எத்தனை அறிதல்கள் நமக்கு நிகழமுடியும்? மிக சாகசத்தனமாக வாழ்பவர்களுக்குக் கூட வாழ்க்கையனுபவங்கள் என்பவை மிகமிகச் சிலவே. மற்றவர்களுக்கு என்ன பெரிய வாழ்க்கை? சின்னவயசில் எல்கெஜி யுகெஜி எனப் பள்ளிக்கூடம். கோடைவிடுமுறையில் கொஞ்சம் கிரிக்கெட். பிளஸ்டூ பரீட்சை. காலேஜ் தேர்வுகள். வேலை. ஒருபெண்ணைப்பார்த்துக் காதல் கல்யாணம்,குழந்தைகுட்டி, லோன்போட்டு ஒரு வீடு,பிள்ளைகளுக்குக் கல்யாணம் ஓய்வு,கிருஷ்ணா ராமா……அவ்வளவுதான்.
நாம் அறிதல்களை நோக்கி நம்மைத் திறந்து வைப்பதே இல்லை. நாம் நம்மைச்சுற்றி ஒரு வேலி கட்டியிருக்கிறோம். அது நம்மை ஆபத்துகளில் இருந்து காக்கிறது என்று நினைக்கிறோம். உண்மையில் அது நம்மை அறிதல்களில் இருந்து தடுக்கிறது. நாம் நிச்சயமின்மையை அஞ்சி அறிதல்களே இல்லாத வழக்கமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
நம்மை ஒரு வாழ்க்கைக்குள் பல வாழ்க்கை வாழச்செய்கிறது இலக்கியம். நாம் செல்லாத இடங்களுக்கு நம்மைக் கற்பனைமூலம் செல்லச்செய்கிறது. நாம் அனுபவிக்காதவற்றை அனுபவிக்கசெய்கிறது. வாழ்க்கையில் மிக அதிசயமாக, மிகமிக அபூர்வமாக நிகழும் அறிதல்கணங்களை எளிதாக நாம் அடையச்செய்கிறது. அதனூடாக நாம் வளர்கிறோம்.
தெரிந்துகொள்வதற்கான நூல்கள் பல உள்ளன. அவற்றை நாம் பயனெழுத்து என்று சொல்கிறோம். கோழி வளர்ப்பது எப்படி ,நண்பர்க்ளை சேர்ப்பது எப்படி, லெபனானின் பொருளாதாரம், ஹோஸ்னி முபாரக்கின் எதிர்காலம் எல்லாவற்றையும் நாம் தெரிந்துகொள்ளலாம். ஆனால் சிலநூல்களே அறிதலின் கணங்களைச் சாத்தியமாக்குகின்றன.
அந்தக் கணங்களைத்தான் ஒரு நல்ல நூலில் நாம் அடையும் பேரனுபவம் என்கிரோம். அது ஒரு மெய்ம்மறந்த நிலை. தான் அழியும் நிலை. மனிதனுக்கு இந்த பூமியில் சாத்தியமானதிலேயே மிகப்பெரிய ஆனந்தம் அதுவே என்கிறார் சாக்ரடீஸ். அறிவின் ஆனந்தம் பிற எதற்குமே நிகராகாது. அதை அறிந்தவன் அதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்கிறான்
எதற்கு நூல்கள் என்று கேட்பவர்கள் உண்டு. நூல்கள் தேவை என்று சொல்பவர்கள்கூட இந்த நூல் அருமையான செய்திகளைச் சொல்கிறது, நல்ல கருத்துக்களைச் சொல்கிறது என்கிறார்கள். அதைப்போல அசட்டுத்தனமான பேச்சே கிடையாது. ஒரு நல்ல நூல் அளிக்கும் அறிவனுபவத்தை அடைந்தவர் அது செய்திகளை அளிக்கிறது கருத்துக்களை அளிக்கிறது என்று ஒருபோதும் சொல்லமாட்டார்.
இன்னும் சிலர் அசட்டுத்தனமாக எல்லாத் தகவல்களும் எல்லாக் கருத்துக்களும் இணையத்திலேயே உள்ளன, புத்தகங்கள் எதற்கு என்பார்கள். இணையத்தில் நிறையப் புத்தகங்கள் உள்ளன. ஆனால் ஒட்டுமொத்தமாக இணையம் வெறும் தகவல் வெளி. அந்தத் தகவல்களை நாம் அறிதலாக ஆக்காவிட்டால், சிந்தனையாக ஆக்காவிட்டால் அவற்றால் பயனில்லை. சொல்லப்போனால் வெற்றுத்தகவல்களாக நினைவை நிரப்பி நம்மை முட்டாள்தனமான தகவல்மூட்டைகளாக ஆக்கவும்கூடும்.
நூல்களை அவை அளிக்கும் அறிதல்களுக்காகத் தேடுங்கள். அந்த அறிதல்கணங்கள் ஒவ்வொன்றும் நாம் வாழும் கணங்கள். நாம் வளரும் படிகள்.
அசோகமித்திரனின் அற்புதமான சிறுகதை ஒன்றுண்டு. 'திருப்பம்'. மல்லையா என்ற ஆந்திர கிராமத்து இளைஞன் சென்னைக்கு டிரைவிங் கற்பதற்காக வருகிறான். ஊரிலே அவன் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தான். அவன் அண்ணன் இங்கே டிரைவர். அவன்தான் இவனுக்குப் பணம் கட்டி டிரைவிங் கற்றுக்கொள்ள சேர்த்திருந்தான். ஆனால் மல்லையாவுக்கு எவ்வளவு சொல்லியும் கிளட்ச் பிடித்து கியர் மாற்றும் நுட்பம் பிடிகிடைக்கவில்லை. எல்லாமே சொல்லிக்கொடுத்துவிட்டார். ஆனால் ஒவ்வொருமுறையும் ஏதோ தப்பாக ஆகும். வண்டி உதறும். கிரீச் என்று ஓலமிடும். அந்த விஷயம் ஒரு தகவலாக மூளைக்குள் இருந்தது. அறிதலாக ஆகிக் கைக்கு வந்துசேரவில்லை.சொல்லிக்கொடுக்கும் மாஸ்டர் பொறுமையிழந்து வெறிபிடித்தது மாதிரி அடிக்கிறான். கொடுமை என்னவென்றால் தனக்குத் தெரியாத தெலுங்கில் தப்புத்தப்பாக வசைபாடியபடி அடிக்கிறான்
வீங்கிய கன்னங்களுடன் அன்றும் மல்லையா டிரைவிங் கற்கச் செல்கிறான். தனக்கு டிரைவிங் வராது, ஓடிவிடவேண்டியதுதான் என்று நினைத்தபடியே கிளம்புகிறான். எவ்வளவோ விளக்கியாகிவிட்டது. எவ்வளவோ சொல்லியாகிவிட்டது. என்னென்னவோ செய்தும் அவனுக்கு கியர்மாற்றி கிளட்ச் போடுவது பிடிகிடைக்கவே இல்லை. அன்றும் கார் சாலையில் செல்லும்போது கிளட்சைப்போடு என்று மாஸ்டர் கத்துகிறான். மல்லையா தப்பாகப் போட கார் எங்கோ ஓட அவனை மாஸடர் 'நீங்கள் இறங்குங்கள் கீழே இப்போது நானே' என்று தெலுங்கில் உளறிக்கொண்டு அடிக்கிறான். காருக்கும் மல்லையாவுக்கும் சம்பந்தமே இல்லாததுபோல் இருக்கிறது.
மீண்டும்மீண்டும். மல்லையாவுக்கு டிரைவிங் தனக்கு வராது என உறுதியாகிவிட்டது. அன்றோடு ஊருக்குப் போக முடிவெடுத்தும்விட்டான். மீண்டும் சாலையில் கார் செல்கிறது. மல்லையாவை மீறி கார் ஒரு திசை நோக்கிச் செல்கிறது. அவன் பீதியுடன் செயலற்று இருக்க மாஸ்டர் கத்திக்கொண்டே இருக்கிறான். கார் பிடிவாதமாக ,சடமாக, ஒரு லாந்தர் கம்பம் நோக்கியே செல்கிறது.ஒரு போலீஸ்காரன் கையைத் தூக்குவதை மல்லையா கண்டான். மல்லையா வெறி பிடித்தது போல கன்னாபின்னாவென்று கிளட்சைத் திருப்ப அப்போது சட்டென்று அதன் நுட்பம் அவனுக்குத் தெரிந்துவிட்டது. எப்படி? சொல்லமுடியாது. ஆனால் அவன் கைக்கு அது தெரிந்துவிட்டது. மீண்டும் பலமுறை போடுகிறான். ஒவ்வொருமுறையும் சரியாக விழுகிறது. அவ்வளவு சின்ன விஷயம் அது என அவனுக்குத் தெரிகிறது. ஆச்சரியமாக இருக்கிறது. உற்சாகமாக இருக்கிறது.
அவ்வளவுதான். அவன் டிரைவர் ஆகிவிட்டான். ஒரு பரவசக் கணத்தைத் தொட்டுவிட்டான். அந்த வாசலைத் தாண்டிவிட்டான். அதற்கு முன் அவன் டிரைவர் அல்ல. அதன்பின் அவன் டிரைவர். இதுவே அறிதலின் கணம். ஜென் கணம். அற்புதமாக அதைத் தன் சிறுகதையில் தொட்டுக்காட்டியிருக்கிறார் அசோகமித்திரன். தமிழில் எழுதப்பட்ட மகத்தான சிறுகதைகளில் ஒன்று அது.
ஜென் பௌத்தம் அத்தகைய மாயக்கணங்களைப்பற்றியே பேசுகிறது. வானத்தில் ஒரு பறவை பறக்கிறது. 'என்ன பார்க்கிறாய்?' என்கிறார் குரு. 'வானில் பறக்கும் ஒரு பறவை' என்று சீடன் சொல்கிறான். பறவை பறந்து போய்விட்டது. 'இப்போது என்ன பார்க்கிறாய்?' 'பறவை பறந்துசென்றுவிட்டது' என்றான் சீடன். குரு தன் கைத்தடியால் அவன் மண்டையில் ஓர் அடிபோடுகிறார். சீடனுக்குச் சட்டென்று மொத்தமும் புரிந்து விடுகிறது. பறவையும் அவனும் காலமும் தூரமும் எல்லாம் கலந்த அந்த பிரம்மாண்டமான ஆடல். ஜென் குருக்கள் அப்படி ஓர் அதிர்ச்சி மூலம் சீடனின் பார்வையை விரியச்செய்வதைக் காணலாம்.
நல்ல இலக்கியம் அத்தகைய அடிகளை நமக்குப் போட்டபடியே இருக்கும். நாம் பல நூல்களை வாசிக்கிறோம். ஆனால் மிக அபூர்வமாக நாம் ஒரு எழுத்தாளனை மிக அந்தரங்கமாக நேருக்கு நேராக மிக அந்தரங்கமாகச் சந்திக்கிறோம். அது ஒரு மகத்தான கணம். நான் சின்னப்பையனாக இருக்கும்போது என் அறைக்குள் வந்துவிட்ட ஒரு பூனையை அடிக்கத் துரத்தினேன். பூனை பலபக்கங்களுக்குத் தாவியது . ஒரு சுவர்முடுக்கில் சரியாக மாட்டிக்கொண்டது. நான் அதை நோக்கிச் சென்றபோது அது என் கண்களைச் சந்தித்தது. உடல்முடிகள் எல்லாம் சிலிர்க்க மிக மெல்ல ர்ர்ர் என்றது. அந்தக்கணம் நான் அதையும் அது என்னையும் அறிந்தோம். என் உடம்பும் சிலிர்த்தது. நான் விலகிக்கொண்டேன். அது மிக நிதானமாக, எந்த அச்சமும் இல்லாமல் மிக நிதானமாக நடந்து வெளியே சென்றது. இரு மிருகங்கள் ஒன்றை ஒன்று கண்டுகொண்ட தருணம் அது.
நாம் ஒரு பெரிய எழுத்தாளனை முதலில் அந்தரங்கமாகச் சந்திக்கும் தருணமும் அத்தகையதே. புதுமைப்பித்தனின் மகாமசானம் என்ற கதையை முதன்முதலில் வாசித்த தருணத்தை சுந்தர ராமசாமி எழுதியிருக்கிறா. உடல்ரீதியாகவே ஓர் கிளர்ச்சி, உயிர் போவது போல ஓர் வலிப்பு, அவருக்கு ஏற்பட்டது என. அதன்பின் அவர் பழைய சுந்தர ராமசாமி அல்ல. அதுதான் வாசிப்பின் ஜென் கணம்.
ஒரு வாசகனாக நான் தல்ஸ்தோயை, தஸ்தயேவ்ஸ்கியை, ஹெர்மன் ஹெஸ்ஸை, பஷீரை, அசோகமித்திரனை அந்தரங்கமாகச் சந்தித்த தருணங்கள் பல. இரு மனிதர்கள் மிகமிக ஆழத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்து 'சிருஷ்டியின் ஆதிகாலம் முதல் நாம் அறிவோம்' எனப் பரஸ்பரம் அங்கீகரிக்கும் தருணங்கள் அவை.
இங்கே கூடிக்கிடக்கும் நூல்களில் நாம் தெரிந்துகொள்ளவேண்டியவை அடங்கிய நூல்கள் பல்லாயிரம். அவை இந்தத் தகவல்நூற்றாண்டின் சிருஷ்டிகள். நாம் அறிந்து அதுவாக வேண்டிய மாயக்கணங்கள் கொண்ட நூல்களும் பல இங்குள்ளன. நீங்கள் யார் என்பதே அந்த நூல் எது என்பதைத் தீர்மானிக்கிறது. அதை நோக்கிச் செல்லுங்கள். வேட்டைநாய் இறைச்சியைக் கண்டுகொள்வது போல, முமுட்சு ஞானத்தைக் கண்டுகொள்கிறான். நீங்களும் கண்டுகொள்வீர்கள்.
அவ்வாறே நிகழ்வதாக
வணக்கம்
[17-08-2011 அன்று கோவை புத்தகக் கண்காட்சி அரங்கில் ஆறிய உரை]
August 16, 2011
அசோகமித்திரன் பேட்டி
அன்புள்ள ஜெ
அசோகமித்திரன் உங்களைப் பற்றிச் சொன்னதை வாசிக்க அந்த இணைப்பைச் சுட்டினேன். அது வேலை செய்யவில்லை. அவரது பேட்டி அங்கே இல்லை. அவர் உங்களைப் பற்றி சொன்னதை அறிய ஆவலாக இருக்கிறேன்
சரவணன்
அன்புள்ள சரவணன்,
அச்சு இதழை அனைவரும் வாங்கவேண்டும் என்ற நோக்கமாக இருக்கலாம். அவரது முழுப்பேட்டி அச்சிதழில்தான். என்னைப் பற்றி சொன்னவை என் நண்பரால் எனக்கு அனுப்பப்பட்டிருந்ததை இணைக்கிறேன்
தற்கால தமிழ்ப் படைப்புலகத்தில் உங்களைக் கவர்ந்த தமிழ் எழுத்தாளராக யாரைக் குறிப்பிடுவீர்கள்?
"ஜெயமோகன். இந்தத் தலைமுறையில் என்னைக் கவர்ந்த தமிழ் எழுத்தாளர் இவர்தான். சில விஷயங்களில் இவரது ஆழமும் படிப்பறிவும் வேறு யாருக்கும் இல்லை. இவருக்கு முன்னால் ஆய்வு என்கிற விஷயத்தில் இவரைப் போன்ற தேர்ச்சியை கொண்டிருந்தவர் க.நா.சுப்பிரமணியன்தான். இதுதவிர ஜெயமோகன் படைப்புகளில் சில இடங்கள் மிகவும் அபாரமாக இருக்கின்றன. அவரது குறுநாவல்கள் தொகுப்பு ஒன்று படித்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. இந்தத் தலைமுறையில் சிறந்த எழுத்தாளர் என்று சொல்லக் கூடிய எல்லாத் தகுதியும் ஜெயமோகனிடம் இருக்கிறது."
அண்ணா ஹசாரே மீண்டும்
அண்ணாஹசாரே அவர்கள் நடத்திய உண்ணா விரதப் போராட்டத்தில் டெல்லி அரசு அடக்குமுறையைக் கையாள்வதும், சில நாட்களுக்கு முன் பிரதமர் இவ்விசயத்தில் பொறுப்பில்லாமல் பதில் அளித்ததும் பார்க்கும் போது ஹசாரே குழுவினரின் வேண்டுகோளை முற்றிலும் நிராகரிக்கும் எண்ணம் கொண்டுள்ளதாகத் தெரிகிறது,
இருந்தாலும் தடையை மீறி உண்ணாவிரதப்போராட்டம் நடத்த இருக்கும் ஹசாரே அவர்களைக் கைது செய்து 7 நாட்கள் காவலில் வைப்பதாக அறிவித்த போலீஸ் நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பால் அவர் இன்று விடுதலை செய்யபடுவதாகத் தெரிகிறது, கூடிய விரைவில் ஹசாரே குழுவினரை அரசு அழைத்துப் பேசலாம், அகிம்சைப் போராட்டத்தின் பலம் என்ன என்பதை இப்போது புரிகிறது, காந்தியின் அகிம்சைப்போராட்டத்தின் மீது இப்போது உள்ள இளைய தலைமுறைக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதாக இருக்கிறது,
"சத்யாக்கிரகப்போராட்டம் என்பது ஒரு எதிர்ப்புக்கருத்தை மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்லவும் மக்களிடையே அந்தக்கருத்து செல்வாக்குப் பெறும்போது அதை ஒரு முனையில் குவிக்கவும் உதவக்கூடிய ஒரு போராட்ட வழிமுறை. அவ்வாறு குவிக்கப்படும் வெகுஜனக்கருத்து என்பது ஒரு பொருண்மையான அதிகார சக்தி. அது எந்த அரசதிகாரத்தையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது"
ஜெவின் இந்த வரிகள் கண்முன் நடப்பது தெரிகிறது,
கார்த்திகேயன் [குழுமத்தில்]
அன்புள்ள கார்த்திகேயன்,
காந்தியின் முதல் எதிரி பிரிட்டிஷ் அரசு அல்ல, இந்தியர்களிடம் இருந்த அச்சம்தான். அவர் அந்த அச்சத்தை எதிர்த்தே இருபதாண்டுக்காலம் போராடினார், அதன்பின்னரே அவரால் பிரிட்டிஷ் அரசை எதிர்க்க முடிந்தது.
அண்ணாவின் முதல் எதிரி இந்திய அரசு அல்ல. நம்மில் உள்ள அவநம்பிக்கைதான். அண்ணா அவரது போராட்டத்தை ஆரம்பித்தபோது, நம் அறிவுஜீவிகள் உருவாக்கிய அவநம்பிக்கைப் பிரச்சாரத்தைக் கவனியுங்கள். நம் சிற்றிதழ்களில் நம் சில்லறைஅறிவுஜீவிகள் எழுதிய தலையங்கங்களை வாசியுங்கள். எவ்வளவு அவநம்பிக்கை. அதிலிருந்து எவ்வளவு இளக்காரம், எவ்வளவு நக்கல்!
அந்த அவநம்பிக்கையின் ஊற்றுமுகம் எது? நம் சிற்றிதழ்களின் தரம் என்ன? கடந்த ஆட்சியில் நூலக ஆணைக்குழுவைக் கையில் வைத்திருந்தார் என்பதற்காகவே தமிழச்சி என்ற பெண்மணியைக் கவிஞர் எனக் கற்பிதம் செய்து அட்டையில்போட்டு மகிழ்ந்த சிற்றிதழ் ஒன்று அண்ணா ஹசாரேயை நையாண்டிசெய்து கட்டுரை வெளியிட்டது. கனிமொழி வழிபாட்டில் மூழ்கியிருந்த சிற்றிதழ்கள் அண்ணாவை நடுத்தர வர்க்கத்தின் போலிநாயகன் என ஏளனம்செய்தன.
எந்த சமரசத்துக்கும் துணிந்த சுயநலவாதிகளான க.திருநாவுக்கரசு, எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ் போன்ற அரசியலெழுத்தர்கள் சிற்றிதழ்களில் கட்டுரை எழுதி தங்களை அனல் கக்கும் புரட்சியாளர்களாகக் காட்டிக்கொண்டார்கள். இவர்களுடைய அன்றாட அயோக்கியத்தனங்கள் , சரிவுகள் இவர்களுக்குத் தெரியும். ஆகவே இவர்களால் ஒரு நல்ல விஷயத்தை உண்மையிலேயே நம்ப முடியவில்லை என்பதே உண்மை.
அப்படித்தான் இருக்கிறார்கள் இந்திய இதழாளர்கள். அரசியல் தரகர்களாக, அரசியல் கையாட்களாக, வெளிநாட்டு நிதிக்கு ஏற்பக் கருத்துக்களை உருவாக்கி முன்வைப்பவர்களாக இருப்பவர்களே நாம் இதழாளர்களில் மிகப்பெரும்பாலானவர்கள். இவர்களே நம் சிந்தனையை இன்று தீர்மானிப்பவர்களாக நடந்துகொள்கிறார்கள்.
நேற்று தினமணி சிறப்பிதழில் ஒரு இதழாளர் எழுதியிருந்ததை வாசித்து மொத்த இதழையே கிழித்து குப்பைக்கூடையில் போட்டேன். அண்ணா யோக்கியமானவரல்ல என்கிறார். காரணம் அந்த நிருபரும் அண்ணா ஹசாரேயும் ஜீ தொலைக்காட்சி நிறுவனத்துக்குச் சென்றார்களாம். அண்ணாவை அவர்கள் உடனே உள்ளே அழைத்துச்சென்றார்களாம், இந்த மாமேதை பாதுகாப்புமுறைகளைக் கடைப்பிடித்துக் காத்திருக்க நேரிட்டதாம். இவர் கேட்ட 'ஆழமான' தத்துவக் கேள்விகளை அண்ணா அறிவுபூர்வமாக எதிர்கொள்ளவில்லையாம். இருந்தாலும் அண்ணா பரவாயில்லை என்கிறார் கடைசியில்.
இந்த அசட்டு அற்பர்களால் நிறைந்திருக்கிறது நம் ஊடகம். அண்ணாவின் மிகப்பெரிய பலவீனம் என்பது அவர் வேறுவழியில்லாமல் இதைச் சார்ந்திருக்கிறார் என்பது. காந்தியைப்போலத் தனக்கென ஒரு மக்கள் தொடர்பை அண்ணாவால் உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. அதற்கான சாத்தியம் இன்று உள்ளதா என்றும் தெரியவில்லை.
இந்த மூடுவலையை மீறியே அண்ணா போன்ற சிலர் எழுந்து வருகிறார்கள். அண்ணா அவரது தகுதியை நிரூபித்தவர். பல ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களை வெற்றிகரமாக ந்டத்தியவர். தகவலறியும்சட்டம் போன்றவற்றின் வழியாக வெற்றிகளைக் காட்டியவர். ஆயினும் அவர் சந்தித்த ஏளனங்கள் எவ்வளவு!.
நம் அயோக்கிய அறிவுஜீவிகள் உருவாக்கும் பிம்பங்களில் இருந்து, நம் சொந்த அவநம்பிக்கையில் இருந்து நாம் வெளிவர வேண்டியிருக்கிரது. நம்மாலும் சில செய்யமுடியும் என்ற நம்பிக்கை, ஜனநாயகம் ஆற்றலுள்ளதே என்ற நம்பிக்கை நம்மில் நிகழ்வேண்டியிருக்கிறது. அண்ணா மலையளவு பிரயத்தனப்பட்டு அந்நம்பிக்கையை மயிரிழையளவு உருவாக்கியிருக்கிறார். அது எவ்வளவுதூரம் நீடிக்கும் என்பதைப்பொறுத்தே வெற்றி இருக்கிறது
அந்நம்பிக்கையைக் குலைக்கவே காங்கிரஸ் முயல்கிறது. அண்ணாவும் பிற அரசியல்வாதிகளைப் போன்றவரே என்று காட்ட மோசடிகளில் ஈடுபடுகிறது. அவர் மேல் ஊழல், மதவாத முத்திரைகளைப் போடுகிறது. இடதுசாரிகள் அவரைச் சிறுமைப்படுத்த முயல்கிறார்கள், அவர்கள் காந்தியையே சிறுமைப்படுத்திய பாரம்பரியம் கொண்டவர்கள். பத்துரூபாய் சில்லறையை நீட்டினால் ஓடிப்போய்க் கவ்வும் நம் இதழாளர்களும் எதிர்காலத்தில் அந்தப்பிரச்சாரத்துக்கு விலைபோவார்கள் என்றே நான் நினைக்கிறேன். அதைமீறி இந்நாட்டு மக்களின் மனசாட்சி சிந்திக்கத் துணியவேண்டும். இளைஞர்கள் அவர்களின் அலட்சியம், அவநம்பிக்கையை மீறி இதயத்தால் இதைப் பார்க்கமுடியவேண்டும்.
காந்தியப்போராட்டம் என்பது எதிரிக்கு எதிரானது அல்ல. நம்முடைய உள்ளே உள்ள பலவீனத்துக்கு எதிரானது. உடனடிப்புரட்சி அல்ல. மிக மெல்லப் படிப்படியாக நிகழும் ஒரு மாற்றம் அது. இந்த லோக்பால் மசோதாவுக்கான போராட்டம்மூலம் நிகழ்ந்துகொண்டிருப்பது என்னவென்றால் மெல்லமெல்ல இந்திய சமூகம் ஊழலுக்கு எதிராகப் போராடும் மனநிலையை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கிறது என்பதே. அந்நகர்வு இன்னும் வெகுதூரம் செல்லவேண்டும். லோக்பால் மசோதா அண்ணா கோரியபடியே அப்படியே நிறைவேறினால்கூட காந்திய வழிமுறைகளின்படி உடனே அடுத்த போராட்டம் அடுத்த நடைமுறைக்கோரிக்கையுடன் ஆரம்பிக்கப்படவேண்டும். தொடர்ச்சியாக இலக்கை நோக்கிப் பிடிவாதமாகச் சென்றபடியே இருக்கவேண்டும்.
அது நடக்கும் என நம்புவோம். காந்திய வழி வெற்றிகரமானதா என்பதை நாம் விவாதிக்கலாம். ஆனால் அதைவிட்டால் வேறு வழியே இல்லை என்பதில் மட்டும் விவாதிப்பதற்கே ஏதுமில்லை
ஜெ
ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1
ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2
அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

