Jeyamohan's Blog, page 2300

September 11, 2011

ஷரவணா சர்வீஸ் [விவேக் ஷன்பேக்]

-1-


 


 



"இன்னைக்கு வேண்டாம் சார். செவ்வாய்கிழமை." என்று ஷரவணன் சொன்னபோது நான் ஒத்துக்கொண்டேன். அது எனக்கு வசதியாயிருந்தது. சாயங்காலத்துக்குள் முடிக்கவேண்டியவை நிறைய இருந்தன. ஷரவணனோடு போய் மனைகளைப் பார்க்க முடியாது. இந்த 'செவ்வாய்' விஷயம் தோதாக வந்ததால் உடனே சரி என்று சொன்னேன். நானாகவே அதைச் சொல்வதுபோலவே சொன்னேன் "அரே! இன்னைக்கு செவ்வாய்கிழமை! நானும் வேலைக்கு நடுவில மறந்துட்டேன் பாரு."


இரண்டு நாட்கள் கழிந்தபின்னும் ஷரவணன் இடம் பார்க்கப்போவது குறித்து எதுவுமே சொல்லவில்லை. வழக்கமாக அவனது வியாபாரம் காலையில் அலுவலக நேரத்துவக்கத்திலிருந்தே ஆரம்பித்துவிடும், உள்ளே வந்து டீ கப்பை அவன் டேபிளில் வைத்தவுடன். சில வருடங்களுக்கு முன் பியூனாக இந்த அலுவலகத்தில் சேர்ந்தான். பின்னர் மெதுவாவாகக் கூடுதல் சேவைகளைச் செய்து வேலையில் நீடித்தான். அலுவலகத்தில் எல்லோருக்கும் அவனிடம் ஏதாவது சொந்த வேலை இருந்தது. எதுவானாலும், பழைய ஃப்ரிட்ஜ் ஒன்றை வாங்க, பழைய மின்விசிறியைக் கழற்றி எறிய, காரின் பின்புறம் இடிபட்ட இடத்தை சகாய விலையில் சரி செய்ய, தச்சரைக் கூப்பிட்டு வந்து ஆணிக்கு ஐந்து ரூபாய் வீதம் சுவற்றில் ஓட்டை போட, அவனிடம் கேட்டால் போதும், வேலை முடியும். பெங்களூருவில் ஒரு இடம் வாங்க வேண்டுமா, ஆவணங்களை சரிபார்க்க வக்கீல் வேண்டுமா, வீட்டைக் கட்டித்தர ஆள் வேண்டுமா, பூமி பூஜைக்கு பூசகர் வேண்டுமா? அவன் எப்போதும் தயாராயிருந்தான். உங்களுக்கு நாடி சாஸ்திர பண்டிதரோ வாஸ்து சாஸ்திர பண்டிதரோ வேண்டுமென்றாலும், பாபாவை தரிசிக்க வேண்டுமென்றாலும், சாஸ்திரப்படி பூசைக்கு உங்கள் சாதி உட்பிரிவுக்குள் பூசாரி வேண்டுமென்றாலும், அவனிடம் சொன்னால் உடனடியாக ஏற்பாடு செய்வான். கன்னடம் தெலுங்கு தமிழ் ஹிந்தி சரளமாகப் பேசுவதால் அவனுடைய தாய்மொழி என்னவென்று யாருக்கும் தெரியாது. ஆங்கிலம், தப்பும் தவறுமாயிருந்தாலும், புரிந்துகொள்ள முடியும்.


இரண்டு நாட்கள் கழித்து வேலைப்பளு கொஞ்சம் குறைந்திருந்தது நான் சொன்னேன், "இன்னைக்கு நாம போயி இடத்தப் பாக்கலாம் ஷரவணா."


"ஒரு நாள் பொறுங்க சார். வெள்ளிக்கிழமை போகலாம்"


"ஏன்? நல்ல நேரம் பாக்குறியா?" கிண்டலாய்ச் சொன்னேன்.


"அப்படியே வச்சுக்கோங்க. எவ்வளவு சுளுவா வேல நடக்குதுன்னு பாக்கத்தான போறீங்க.."


அந்த வெள்ளிக்கிழமை நாங்கள் போய் இடத்தைப் பார்த்தோம். முழுதாய்ப் பார்க்குமுன்பே அவன் எரிச்சலுடன் சொன்னான்,"இது தெக்கு திசைய பாத்திருக்கும்னு தெரிஞ்சிருந்தா உங்களக் கூப்பிட்டுட்டு வந்திருக்கவேமாட்டேன்." எனக்கு அந்த இடம் பிடித்திருந்தது. ஷரவணன் வேண்டாமென்றான். "இது உங்களுக்கில்ல சார். வேணும்னா இதேபோல இன்னொண்ணு பாக்கலாம் சார்."


"எந்த தெசைய பாத்திருந்தாலும் எனக்குக் கவலையில்ல. வேற ஏதாச்சும் பிரச்சனை இருக்குதா சொல்லு.." என் தொனி 'உன் வேலைய மட்டும் பாரு. எனக்கு அறிவுரை சொல்லாதே' என்பதுபோலிருந்தது.


ஷரவணன் விடவேயில்லை. "உங்க விருப்பம் சார். உங்க நம்பிக்கதான் முக்கியம்…"


"வேலைய முடிச்சுக் குடுப்பியா இல்ல ஆட்களோட ஜாதகத்தப் பாத்துகிட்டிருப்பியா?"


"வாங்குறவங்க நல்லாயிருக்கலைன்னா என்னோட வியாபாரத்துக்குத்தான நஷ்டம்? எல்லாம் நல்லாப் போச்சுன்னா அவங்களாகவே இன்னும் ஆட்கள கொண்டு வருவாங்க. இல்லைன்னா உன் வழியா இந்த இடத்த வாங்கிட்டு நாங்க ரெம்ப கஷ்டப்பட்டுட்டோம்னு சொல்லுவாங்க."


"ஒனக்கு வேணும்னா நான் குறையே சொல்ல மாட்டேன்னு எழுதித் தர்றேன். நாம செவ்வாக்கிழம வந்திருந்தாலும் இந்த இடம் தெக்கு பாத்துதான் இருந்திருக்குமில்லியா?"


"சார் நான் குதர்க்கமாப் பேசுறேன்னு நினைக்காதீங்க. சிந்தனைக்கும், நம்பிக்கைக்கும் அனுபவத்துக்குமிடையே இருக்கிற முடிச்ச யாராலும் அவிழ்க்கமுடியாது சார். நமக்கு ஜோஸ்யத்துல துளி நம்பிக்கையில்லைன்னாலும் பத்திரிகையின் பக்கங்கள திருப்பும்போது நாம சட்டுன்னு ராசி பலன பாக்கிறதில்லையா? ஒரு போலி கைரேகை நிபுணரப் பாக்கப்போனாலும்கூட நம்ம தனிப்பட்ட வாழ்க்கை பத்தி ஏதாச்சும் சொல்லிட்டா நம்ம மனசுல நிக்குறதில்லியா? உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லட்டுமா? எனக்கு இப்ப அது நியாபகம் வருது. சகானே சாகெப் பத்தி .."


இவன் இப்படியெல்லாம் புத்திசாலித்தனமாகவும் மொழிவன்மையோடும் பேசுவான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னை சமன்படுத்திக்கொண்டு அவனிடம் கேட்டேன் "சொல்லு கேப்போம். சகானே சாகெபுக்கு என்ன? அவரு ஜாலியா ரிட்டையர்ட் வாழ்க்கைய அனுபவிச்சிட்டிருப்பாரு."


"அவர் ஒரு இடம் வாங்கி வீடும் கட்டினாரு. நானே ஒரு மகராஷ்டிரிய புரோகிதர கிரகப் பிரவேசத்துக்கு ஏற்பாடு செய்தேன். ரெண்டு மாசத்துக்கப்புறமா அவரப் பாக்கும்போது ரெம்ப கவலையா இருந்தாரு. 'நான் என்ன செய்வேன்? முன்னெல்லாம் என்ன எதிர்த்தே பேசாத என் மனைவி இப்ப ஏதேதோ காரணங்களுக்காக எங்கிட்ட சண்ட போட்டுகிட்டே இருக்கா'ன்னாரு. தழுதழுத்த குரல்ல 'சண்டை போடுறப்பொ அவ பல்ல நற நறன்னு கடிக்க்கிறதப் பாக்கத் தாங்கலை'ண்ணும் சொன்னாரு. அவர் மனைவிக்குத் தெரியாம போய் டாக்டரக்கூடப் பாத்திருக்காரு…


… எனக்கு வாஸ்து சரியில்லைன்னு தோணுச்சு. சென்னப்பான்னு ஒருத்தர் இருக்காரு. வாஸ்து நல்லாத் தெரிஞ்சவர். சகானே வீட்டுக்கு அழைச்சிட்டு போனேன். அவர் வீட்டுக்கு ஜலம் வரும் வழி சரியில்லைன்னு சொன்னாரு. சகானே அதக் கண்டுக்கல. ரெண்டே நாட்களுக்குள்ள ஒரு விபத்து. கதவத் திறந்து வச்சிட்டு அவர் மனைவி காய்கறி வாங்கப் போயிட்டாங்க. இவர் சோஃபால உக்காந்து ஏதோ ஒரு கம்பெனியோட பாலன்ஸ் ஷீட்டப் பாத்துக்கிட்டிருக்காரு, ஸ்டாக் மார்கெட்டுக்காக. திடீர்ணு வேகமாக் காத்து வீசியிருக்குது. கதவு அறையுறதுக்கு முன்னால நிறுத்திடலாம்ணு நினைச்சு ஒருகையில பேப்பரையும் தூக்கிக்கிட்டு இன்னொரு கைய நீட்டிக்கிட்டு எழுந்து போயிருக்காரு. திடீர்னு அந்த நேரம் அவர பேய்பிடிச்சதுபோல தோன்றியிருக்குது. அதுதான் கெட்ட வாஸ்துவோட வேல. வில்லப்போல அவர் உடம்பு வளைஞ்சிருக்குது. கதவப் பிடிச்சிட்டாரு அப்படியே கீழ விழுந்து தளர்ந்துட்டாரு. தாங்கமுடியாத வலி. உடனே ஆஸ்பத்திரிக்குப் போயிருக்காங்க. இடுப்பு எலும்பு நகர்ந்திடுச்சுன்னு சொல்லிட்டாங்க. ஒவ்வொண்ணாப் பல வலிகளும் அவருக்கு வர ஆரம்பிச்சிடுச்சு.


…நான் ஆஸ்பத்திரி போய்ப் பாத்தேன். நீங்க எதுவும் செய்ய வேண்டாம் நானே எல்லாத்தையும் சரி பண்ணிக்கிறேன்னு சொன்னேன். அந்த நாளே போய் அவர் வீட்டுக்குத் தண்ணி வரும் குழாயில வால்வுடைய திசைய மாத்திவச்சேன். அவ்வளவுதான். அவ்வளவுதான் சார் பண்ணினேன். ஏதோ அற்புதம்போல வீட்டுக்கு அமைதி திரும்பிடுச்சு. அதுக்கப்புறம், சத்தியமா சொல்றேன், அவங்க சண்டபோட்டிருக்கவே மாட்டாங்க."


கதை சுவாரஸ்யமாக இருந்தது என்று ஒப்புக்கொள்ளவேண்டும், ஆனாலும் ஜீரணிக்க முடியாமல் நான் சொன்னேன் "காக்கா உட்கார மரம் விழுந்த கத நீ கேள்விப்பட்டதில்லையா?"


"உங்களுக்கு வேணும்னா தற்செயல்னு எடுத்துக்குங்க. ஆனா ஒரு பெரிய மரம் உடைஞ்சு விழுறதுக்கு ஒரு சின்னக் காக்காவோட எடையே போதும். அதுமாதிரிதான் சார், இந்த உலகமே ஒரு மெல்லிய சமன்ல இருக்குது. அந்த சமநிலையக் குலைக்க ஒரு புல்லே போதும், ஒரு பட்டாம்பூச்சியோட சிறகசைவுகூட. கெட்ட வாஸ்துன்னோ துர்ரதிஷ்டம்னோ என்ன வேணும்னா சொல்லுங்க… நீங்க காலையில எந்திரிக்கிற நேரம் கொஞ்சம் மாறினாகூட உங்க நாள் மோசமா போகிறதுக்கு வாய்ப்பிருக்குது."


நான் அவனோடு மேலும் விவாதிக்க விரும்பவில்லை. அந்த இடம் போய்விட்டது. இரண்டு நாட்கள் கழித்து ஷரவணன் அவனாகவே வந்து சொன்னான் "கவலப்படாதீங்க. அது போனது நல்லது."


-2-


"ஒரு வீடு பாத்திருக்கேன். ஏதோ சினிமாக்காரங்களோடது. அவசரமா காசு தேவைப்படுதாம் அதனால விக்கிறாங்களாம். நமக்கு வேணும்னா கொஞ்சம் அங்க இங்க மாத்திக்கலாம். ரெம்ப நல்ல வீடு!" ஷரவணன் தொடர்ந்து தொல்லை செய்தான்.


எனக்கு வீடு வாங்குவதா? நிலம் வாங்குவதா என்பதில் உறுதி இல்லை. வீடு வாங்கும் பெரிய முடிவெடுக்க எனக்குத் தயக்கமிருந்தது. நான் ஒன்றிரண்டு நாட்களுக்குப் பிறகு சொல்கிறேன் என்றதற்கு,"ஐயோ சார். அதுக்குள்ள அது வித்துடும். இதெல்லாம் அப்படித்தான் யோசிச்சிட்டிருந்தா கையிலிருக்கிறது ஓடிப்போயிரும். இந்த மாதிரி வீடு இவ்வளவு குறைச்சலாக் கிடைக்காது சார்." என்று நம்பவைத்தான்.


நாங்கள் வீட்டை சாயங்காலமே போய்ப் பார்க்க முடிவெடுத்தோம். ஐந்துமணிக்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பே கிளம்ப வேண்டும் என்று ஷரவணன் சொன்னான், ஐந்து மணிக்கு மேல் சகுனம் சரியில்லையாம். நான் ஒன்றும் சொல்லவில்லை.


அலுவலகத்தை விட்டு வெளியே வந்தோம்.


ஸ்கூட்டர்களும் பைக்குகளும் நிறுத்தப்பட்டிருந்த இடத்தைத் தாண்டி சாலையோரத்திற்கு வந்தோம்.என்னைப் பார்த்துத் திரும்பி நின்றுகொண்டிருந்தான் ஷரவணன். நாங்கள் பார்க்கப்போகும் அந்த வீட்டைக் குறித்த தகவல்களையும் சினிமாக்காரர்களின் வெட்டி பந்தாக்களையும் ஒவ்வொன்றாக அடுக்கிக்கொண்டிருந்தான். செல்வச் செழிப்பின் உச்சியிலிருந்து தடம்புரண்டு வறுமையின் ஆழங்களில் வீழ்ந்த ஒருவனைக் குறித்து சொன்னான், இன்னொருவன் விண்கற்களைப் போல உயர்ந்தெழுந்தான். அவர்களின் பெயர்களைக்கூட நான் கேள்விப்பட்டிருக்கவில்லை.


அந்தக் கணம்…


வேகமாக வந்த பேருந்து ஒன்று தடுமாறி எங்களை நோக்கி விரைந்து வந்துகொண்டிருந்தது. ஷரவணன் சாலைக்கு எதிர்ப்புறமாய் நின்று என்னைப் பார்த்து முழுக்கவனத்துடன் பேசிக்கொண்டிருந்தான். அந்தப் பேருந்து எங்களருகில் வந்தது மட்டும்தான் எனக்கு நினைவிலிருக்கிறது. நான் அவனை இழுத்தது இருவரும் தடுமாறி விழுந்து மயிரிழையில் சக்கரங்களைத் தப்பியது எதுவுமே என் சுய நினைவினால் நடக்கவில்லை. ஒரு திரைப்படக் காட்சி போல, அந்தப் பேருந்து பார்க்கிங்கில் நுழைந்து அரிவாளால் பயிர்களை நாசம் செய்வதைப்போல ஸ்கூட்டர்களையும் பைக்குகளையும் சின்னாபின்னமாக்கியது. நாங்கள் நடந்துகொண்டிருப்பவற்றை உணர்வதற்குள், அங்கே தூங்கிக்கொண்டிருந்த நாயின் ஊளை முடியுமுன்பே பேருந்து நாயை நசுக்கியிருந்தது. உடைந்து கிடக்கும் வண்டிகளுக்கு மத்தியில் தன் மரணத்தையே கண்ட ஷரவணன் அதிர்ந்துவிட்டான். அந்த உலோகக் குவியலின் நடுவில் தன் பிணத்தையே கண்டதைப்போல என் கையைப் பிடித்துக்கொண்டு தரையில் உட்கார்ந்துவிட்டான். அவன் கைகள் அதிர்ந்துகொண்டிருந்தன, என் கைகளும்தான். நானும் உட்கார்ந்தேன். எங்கள் ஆடைகள் அழுக்காயிருந்தன. பொதுமக்கள் எங்களைச் சுற்றி நின்று நாங்கள் தெய்வாதீனமாக உயிர் பிழைத்ததைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர். கொஞ்சம் முன்புதான் எங்களைக் கடந்து சென்றுவிட்டு இப்போது அசைவின்றிக் கிடந்த நாயின் உடல், முதன்முதலாக வாழ்க்கையின் நிலையின்மையை அப்பட்டமாக எனக்குக் காட்டியது. நானும் பயந்துபோனேன். அவன் கைகளை நான் அழுத்திப் பிடித்திருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன். இரு சகோதரர்களைப்போல அங்கே நாங்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லி உட்கார்ந்திருக்கும்போதே சப்தம் கேட்டு வந்த எங்கள் அலுவலக நண்பர்கள் எங்களைச் சூழ்ந்தனர்.


அந்த நாள் முதல் ஷரவணன் என்னைக் கடவுளாக பாவித்த்தான். கடவுளின் முன்பு நாம் உண்மையுடனும் வெளிப்படையாகவும் சொல்வதைப்போல என்னிடம் அவன் வாழ்க்கையில் நடந்த சில தெய்வாதீனமான, அதிர்ஷ்டவசமான நிகழ்வுகளைச் சொன்னான். ஒரு மாத காலத்தில் அவ்வப்போது துண்டு துண்டாக அவை சொல்லப்பட்டன, அவன் மனநிலைக்கேற்ப. ஒன்றுக்குப்பின் ஒன்றாய் அவன் சொல்லச் சொல்ல சில தகவல்கள் தவறிப்போகும். அவன் வார்த்தையிலேயே அவற்றைச் சொன்னால் அந்நிகழ்வுகளின் உணர்ச்சி வேகம் மிஞ்சலாம்.


–3–


சார், என் பேரு ஷரவணன். நான் ஸ்ரீரங்கப்பட்டினத்துக்குப் பக்கத்தில ஒரு கிராமத்திலிருந்து வந்தேன். நான் என் தொழிலத் துவங்கியப்போ கஸ்டமரெல்லாம் எளிதாகச் சொல்லுறாப்புல என் பேர மாத்திகிட்டேன். அது தமிழ்ப் பெயர்போல இருந்ததால வியாபாரத்துக்கு எந்த பாதிப்பும் இல்ல. என்னோட அப்பா கிராமத்துக் கோவில்ல கணக்குப்பிள்ளையா இருந்தார். அவருக்கு ஜாதகம் பார்த்து லக்‌ஷணம் சொல்லவும் தெரியும். லக்‌ஷணம்னா ஒருத்தருடைய குணாதிசயங்கள சொல்லுறது. அத ஜோஸ்யம்னு சொன்னா அவருக்குப் பிடிக்காது. கோவில் அமைப்பாளர்களோட சண்ட போட்டதுக்கப்புறம் லக்‌ஷணம் பாக்கிறது மட்டுமே குடும்ப வருமானம். ஆனா அந்தமாதிரி சின்ன கிராமத்துக்கு எதிர்காலத்தக் கணிக்க யாராச்சும் வருவாங்களா? அப்படியே எதிர்காலத்தத் தெரிஞ்சு அவங்க என்ன செய்யப்போறாங்க. நகரத்துலயாவது வாழ்க்க மேலும் கீழுமா நிச்சயமில்லாம ஓடும், ஏதோ ஒரு எண்ணையோட விலையோ அல்லது வரியோ கூடினாலே போதும். விடிஞ்சா ஒண்ணு செல்வம் வந்து கொட்டும் இல்ல எல்லாத்தையும் இழந்துட்டுத் தெருவில் நிக்கணும். ஜோஸ்யம் வாழ்க்கை நிச்சயமில்லாத, அடுத்த அடி கால‌ எங்க வைக்கணும்னு முடிவெடுக்க மக்கள் திணறக்கூடிய நகரங்களில சரிவரும். எங்க கிராமத்துல யாரு எதிர்காலம் தெரியலைன்னு கவலப்படுறாங்க? அவங்க வாழ்க்க முழுக்கவும் ஒரே கவலதான்.மகளோட கல்யாணம் அல்லது  பையன் ஓடிப்போவானா இல்ல வழிக்கு வருவானா? இந்த ரெண்டுக்கும் விடை தெரிஞ்சா அதுவே போதும், வாழ்நாளுக்கும் திரும்பி என் அப்பாகிட்ட வரமாட்டங்க. அதனால வீட்டில கஷ்டம் வந்துச்சு. ஒரு நேர சாப்பாட்டுக்கும்கூட முடியல.


நான் மைசூருக்கு தினமும் போய் வந்து உயர்நிலைப் படிப்பு முடிச்சேன். அப்புறம் வேற வழியில்லாம எங்க ஊரு கோஆப்பரேட்டிவ் சொசைட்டில வேல பார்க்க ஆரம்பிச்சேன். எல்லா சில்லறை வேலைகளையும் செய்யணும். சொசைட்டியோட தலைவர் நல்லவரானதால எல்லா வேலைகளையும் சிரத்தையோட செய்வேன். சம்பளம் கம்மிதான். சில வருடங்களுக்குப் பிறகு வாழ்க்கை நிலையானது, வேலையும் நிரந்தரமாயிருக்குதேன்னு நம்பிக்கையில நான் கல்யாணம் செய்துக்கிறதப்பத்தி யோசிக்க ஆரம்பித்தேன்.


லாவண்யா பெங்களூரில் பிறந்து வளர்ந்தவ; எங்களுக்கு தூரத்து சொந்தம். அவங்க குடும்பமும் அவ்வளவு வசதியில்லாததுதான் இருந்தாலும் அவளுக்கு ஒரு கிராமத்துக்கு வந்து வாழுறது பிடிக்கல. பெரியவங்க அவளுக்கு எடுத்துச் சொல்லவேண்டியிருந்தது. இதெல்லாம் பின்னாடிதான் எங்களுக்குத் தெரியும். கல்யாணமான அன்னைக்கு அவ ரெம்ப அழுதப்போ  அப்பா அம்மாவப் பிரிய முடியாம அழுறான்னு நினைச்சோம். போகப் போக எனக்கு இவ கிராமத்து வாழ்க்கைய நினைச்சுதான் கவலப்படுறான்னு தோணிச்சு. உயர்நிலைப் படிப்பு படிச்சிருந்தா. பேச்சிலும் செயலிலும், நடப்பிலும், விருப்பப்படுறதுலேயும் அவ ஒரு படி அதிகம்தான்.ஆரம்பத்துல எனக்கு இது பிடிச்சிருந்தது. போகப்போக அந்த மனப்பாங்கே எனக்கு எரிச்சலானது. அவ உணர்ச்சிவசப்படுறது எங்க வீட்டு மேலான வெறுப்புனாலன்னு தோணிச்சு. என்ன தேயிலைப் பொடி உபயோகிக்கணும்னு அது துவங்கும். எங்க ஊர் சினிமாக் கொட்டகைய அவ குறை சொன்னாக்கூட எங்களத்தான் குறை சொல்றான்னு எனக்குக் கோபம் வரும். இதுக்கெல்லாத்துக்கும் இடையிலேயும் சந்தோஷமாக் கழிஞ்ச அந்த முதல் வருஷத்த நினைக்கும்போது அந்தக் காதலெல்லாம் வேறு யாருடையதோன்னு தோணும். நான் வாழ்நாள் முழுக்கக் கஷ்டப்பட்டாலும் என் வேலையிலையோ வாழ்க்கைத்தரத்திலையோ எந்த மாற்றமும் வரப்போவதில்லைன்னு அவளுக்கு தெரிய ஆரம்பிச்சது. ஒருவேளை அவள் அந்த நிலைமைய ஏத்துகிட்டிருந்திருப்பாளாயிருக்கும். ஆனா அதுவரைக்கும் இதப்பத்தி நினைக்காத நான் எல்லாத்தையும் மாத்திட முடிவெடுத்தவனப்போல நடக்க ஆரம்பிச்சேன்.


ஒருநாள் என் அத்த பையன் பெங்களூரிலிருந்து வந்திருந்தான். ஸ்ரீகாந்துக்கு என் வயசுதான், மெலிசா இருப்பான், படிப்புல கெட்டிக்காரன். அவனுக்கு 'புட்டி'ன்னு பட்டப்பெயர், ஏன்னா சோடா பாட்டில் அளவுக்குக் கண்ணாடி போட்டிருப்பான். இந்தமுறை புட்டி பங்கு வர்த்தகத்தின் மகிமையப்பத்தி பேச ஆரம்பிச்சான். நாடு முழுக்க மாற்றம் நடந்துக்கிட்டிருந்த நேரம் அது. எங்க போனாலும் மக்கள் காசப்பத்தியும், வியாபாரம்பத்தியும்தான் பேசிகிட்டிருந்தாங்க. இராத்திரி சாப்பாட்டுக்கப்புறம் புட்டி பங்கு வர்த்தகத்துல எப்படியெல்லாம் மக்கள் காசு பண்ணிகிட்டிருக்காங்கன்னு பல சுவாரஸ்யமான கதைகள சொல்ல ஆரம்பிச்சான். அவனோட ஆச்சர்யமான பேச்சுக்கு நடுவில என்ன நடந்துச்சுன்னு எனக்கு இப்பவும் சொல்ல முடியல. வாழ்க்கையில வெற்றியடயணும் என்கிற எண்ணமும் பணம் சேர்க்கும் போதையும் எல்லாருடைய தலையிலேயும் கொஞ்சமாவது ஏறிடுச்சு. பேச்சுக்கிடையே லாவண்யாவ அவன் பார்த்த பார்வை இன்னும் என் கண்ணுல தெளிவாத் தெரியுது. எங்கேர்ந்து திடீர்னு அவனுக்கு அந்தத் தன்னம்பிக்கை வந்ததுன்னு நான் ஆச்சர்யப்பட்டேன். அடுத்த கணமே லாவண்யா என்னப் பார்த்தா.  அவன் அவளப் பார்த்தது, உடனே அவ என்னப் பார்த்தது எல்லாம் உங்களுக்கு சாதாரணமானதாத் தெரியலாம். ஆனா அது எனக்குள்ளார ஒரு செய்திய சொல்லுச்சு, நான் நினைக்கிறதுபோல அந்தக் கணத்துலதான் என் வாழ்க்கை ரெண்டு திசைகளாப் பிரிஞ்சது. அந்தமாதிரி சாதாரணமான நேரங்களிலதான்  நம்ம வாழ்க்கையில பிசாசுகளோ அல்லது தேவதைகளோ வர்றாங்க இல்ல?  அதுவரைக்கும் அமைதியா கேட்டுக்கிட்டிருந்த எங்கப்பா "கவனம் மகனே. உழைப்பால அல்லாம வெத்துத் தாளிலே மேலே போகும் இந்த செல்வத்துக்கு மேல எச்சரிக்கையா இருக்கணும்." என்று சொன்னார்.


என் கிராமத்த விட்டு வெளியேறினாலல்லாம என் வாழ்க்கையில சின்ன மாற்றம்கூட இருக்காதுனு எனக்குத் தோணிச்சு. வெளிநாட்டுக்குப் போய் பணம் சம்பாதிச்சிட்டுத் திரும்புறதெல்லாம் தூங்கப்போறதுக்கு முன்ன நாம காணுற கனவு. வரலாற்றப் பாருங்க அல்லது சந்தமாமா கதைகளப் பாருங்க செல்வத்தத் தேடிப்போற மனுசன் எப்பவுமே தன் வீட்டவிட்டுப் போறான் இல்லியா சார்? லாவண்யா இந்தக் கனவ எப்படியோ எனக்குள்ள உருவாக்கிட்டான்னு நினைச்சேன். அன்னைக்கு அவ பார்த்த பார்வை அந்தக் கனவ உருவாக்கிடுச்சுன்னு நினைச்சேன். என்னால அந்தக் கனவ நிறைவேற்ற முடியும்னு அவ நம்பியிருக்கலாம். ஆனா கிராமத்த விட்டு எங்க போறதுன்னு எனக்குத் தெரியல. புட்டிய நச்சரிச்சு பெங்களூர்ல ஒரு வேல வாங்கினேன். அப்பா அம்மா ரெம்ப பயப்ப‌ட்டாங்க. அழுது ஆர்பாட்டம் பண்ணினாங்க. ஷரவண குமார்னு பேருக்கேத்தாப்புல அவங்கள நான் நல்லபடியா கவனிச்சிக்கிட்டேன்னு சொன்னாங்க. மருமகள சூனியக்காரீன்னு திட்டினாங்க. யார் பேச்சையும் கேக்காம நான் கிளம்பிட்டேன்.


பெங்களூர் வந்து ரெண்டு மாசத்துலேயே என்னுடைய முதல் வேலை போச்சு. அதுக்கப்புறம் ஆறுமாசம் ரொம்பக் கஷ்டப்பட்டேன். யாரும் உதவிக்கு வரல. பங்கு வர்த்தக ஊழல் வெளி வந்துச்சு, பங்குகளோட விலை சரிஞ்சு நஷ்டமாச்சு, புட்டியே தெருவுக்கு வந்துட்டான். கைக்குக் கிடைச்ச எந்த வேலையானாலும் செய்ய ஆரம்பிச்சேன். நம்ம ஆபீஸ்ல வேல வாங்கித் தந்தவர் என்னுடைய பழைய கஸ்டமர். பேர் கண்ணன். கூடவே ரியல் எஸ்டேட், இன்னும் சில வேலைகளும் செய்ய ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா ஷரவணா சர்வீசஸ நான் துவங்கினேன். அதுக்கு என்னன்னு நீங்க கேக்கலாம். இது ஒரு வியாபாரம், நானே சிந்திச்சு உருவாக்கினது. உங்களுக்குத் தெரியும் சார், பெங்களூர் பத்து வருஷத்துல நினைச்சுப் பாக்கமுடியாதபடி  வளர்ந்திருக்குது. பல இடங்களிலிருந்தும் மக்கள் இங்க வர்றாங்க. அவங்க ஊர்ல செய்ததுபோல எல்லா வேலைகளையும் அவங்களால இங்க செய்ய முடியாது. பூஜைக்குப் புரோகிதரக் கண்டுபிடிக்க முடியாது, கிரகப் பிரவேசம் செய்யுறது கடல் போல வேல, யாரையும் தெரியாத இடத்துல மகனோட இருக்க வந்த அம்மா இறந்துட்டாங்கன்னா ஈமச்சடங்கெல்லாம் யார் செய்யிறது? அந்த‌க் கஷ்டமான சமயத்துல ஆறுதலும் ஆதரவும் யார் குடுப்பாங்க? எதையுமே சரியா செய்யலைன்னு குற்ற உணர்வு வேற அவங்கள வாட்டிக்கிட்டிருக்கும். இன்னும் மோசம், அந்த நேரத்துல வெளியே போய் ஆட்களத் தேடி அலைய நேரம் இருக்காது. ஆனா எதையும் காசு குடுத்து வாங்கிடலாம்னு நம்பி இருப்பாங்க. அதைவிட முக்கியம் பழக்கமில்லாத சடங்குமுறைகள்னாலும் அவங்க கண்டுக்கிறதில்ல. புகைபிடிக்கிறவங்களுக்கு அவங்களோட சிகெரெட் கிடைக்கலைன்னா என்ன செய்வாங்க? வேற ஒண்ண வாங்கிப் புகைக்கிறதில்லையா? அதுபோலப் பழக்கந்தான் நம்பிக்கையும் சடங்குகளும்.  நான் அவங்களுக்கு அதுபோல சடங்குகளை நடத்திக் குடுக்கிறேன்.


என்னோட வியாபார இரகசியங்கள உங்ககிட்ட சொல்றதுல எனக்கு எந்தத் தயக்கமுமில்ல. ஒரு புரோக்கர் எல்லாத்தையும் நம்பணும் சார். ஒரே விஷயத்துல அதிக நம்பிக்கை வைக்கக் கூடாது. வெச்சா அவன் வேல நடக்காது. முன்முடிவுகளால அடிவாங்கிடுவோம். என்னோட கஸ்டமர்களுக்கு சாதிமேலெல்லாம் ஆழமான நம்பிக்கையெல்லாம் கிடையாது. ஆனா விடவும் முடியாது. அவங்க கட‌வுள் நம்பிக்கை தீர்கமானதில்ல,ஆனா அப்படீன்னு நம்பத்தான் விரும்புறாங்க. ஷரவணா சர்வீசஸ் அவங்களுக்கு ஒரு ஊன்றுகோலத் தருதுன்னு சொல்லலாம். உத்திரப் பிரதேசத்துலேர்ந்து வந்த‌ ஒருத்தர தேவி ப‌னஷங்கரியோட பக்தரா மாத்திட்டேன். லாரி பிசினஸ் வெச்சிருக்கிற சேத்த ஆட்டோ மரம்மா பக்தராக்கிட்டேன், சாட்டர்ஜிக்கு நாடி சாஸ்திரத்த‌ அறிமுகம் செஞ்சேன், ஐ.ஐ.டி இஞ்சினியர் சிங்க ஒரு வாஸ்து பைத்தியமாக்கிட்டேன். விளையாட்டில்ல சார். அதிகமா அறிவுள்ளவன் எளிமையான விஷயங்களக் கொண்டாடுறதில்ல. வாழ்கை எவ்வளவு குழப்பமாத் தோணுதோ அவ்வளவு சந்தோஷம் அவனுக்கு. அதுக்கு வாஸ்துவ விட்டா வேறொண்ணுமில்ல. உள்ள‌ இறங்கிட்டீங்கன்னா இன்னும் நுட்பமானதா தெரியும். என்னுடைய வேல அவனவனுக்குத் தேவையானதத் தர்றதுதான். பாபா வேணும்னு சொல்றவங்களுக்கு பாபா, யு.ஜி வேணுமின்னா யு.ஜி … அது போல இன்னும். மனநிறைவ விக்கிறேன்னு சொல்லலாம் சார்.


மரம் ஏறிக்கு இடுப்பு பெருசா இருக்கணுமில்லையா? என்னுடைய பேச்சும் மாற ஆரம்பிடிச்சு. யாருடைய நம்பிக்கையக் காயப்படுத்துற வார்த்தைகளையும் நான் பயன்படுத்துறதில்ல. அதனால என் பேச்சு ஆழமானதாயிடுச்சு. என் அப்பாகிட்டேர்ந்து நான் ஜோஸ்யம் கத்துக்கல. ஆனா ஒரு விஷயத்த வெளிப்படுத்துற கலையக் கத்துகிட்டேன். அவர் சொன்னது சிலது நியாபகம் இருக்குது: " 'கணவன் மனைவிக்குள்ள சண்டை'ன்னு சொன்னா மக்களுக்குப் பிடிக்காது 'திருமண வாழ்க்கையில சிக்கல்'னா பரவாயில்ல. வேற யார்மேலேயோ பிரச்சனை மாதிரி அவங்கள உணர வைக்கணும், ஆனா பரிகாரம் நாம பண்ணணும். இந்த வேலையில வேறெந்த வகையில நீ பேசினாலும்  யாரும் உன்ன நம்ப மாட்டாங்க"


இந்த வியாபாரத்துல எனக்கு வருமானம் அதிகமாக ஆரம்பிச்சுது. வீடு மனை வியாபாரத்துல கூட இத்தனை காசு பாக்க முடியாது. பிரச்சனைன்னு வந்துட்டா காசப்பத்தி யாருக்கும் கவலை இல்ல. வாஸ்து, நாடி சாஸ்திரம், ஜோஸ்யம், யோகா, யுனானி, பாபா, ஆயுர்வேதம், கனக யாகம் — என்ன வேணும்னா செய்தேன். மக்கள் அவங்களோட கஷ்ட நஷ்டங்கள எங்கிட்ட சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்புறம்தான் பெங்களூருல இந்த மாதிரி எந்த இடமும் சொந்த இடமில்லாம இருக்கிற பெரிய மக்கள் தொகைய நான் கண்டுகிட்டேன். எதையும் ஏத்துக்கொள்ளுற மனப்பாங்கோட அவங்க இருக்கிறாங்க. அவங்களுக்கு வேண்டியதெல்லாம் இந்த நகரத்துல காலூன்றி நிக்கணும். வேர் விட முடியலைன்னாலும் நீர்விட்டுக்கிட்டிருக்கணும், நம்பிக்கை உலராமலிருக்க. சொன்னா ஆச்சரியப்படுவீங்க சார், வெளி ஆட்கள விடுங்க, நம்ம மலநாட்டு ஆட்களுக்கே இந்த கதிதான். சார் இந்த நகரத்துல கால ஊணுறதுக்கு இனியும் இடமில்ல. எதையுமே நாம நமதுன்னு சொந்தம் கொண்டாட முடியாது. எழுதப்படாத விதிகள் எதுவுமில்லாத ஒரு நகரம் எப்படிசார் தன்னுடைய அடையாளத்த கண்டடையுது? நான் அற்புத‌ங்கள நிகழ்த்துவேன் சார். அற்புதங்கள். பூக்கள் கிடைக்கலைன்னா பிளாஸ்டிக் பூக்கள வெச்சு சாஸ்திரங்கள நடத்துவேன். இதுக்கெல்லாம் நம்பிக்கை வேணும். பப்புக்கும் டான்சுக்கும் போறதும் நம்பிக்க சார்ந்த விஷயந்தான். அங்க அவங்க வாழ்கைய அனுபவிச்சிக்கிட்டிருக்காங்க என்பதுதான் அவங்க நம்பிக்கை. நான் படிச்சிட்டிருந்தப்ப பரீட்ச முடிஞ்ச அன்றைக்கே போய் சினிமா பாக்கிறது ஒரு பெரிய கொண்டாட்டம். எனக்கு அது ஒரு பெரிய சந்தோஷமாயில்ல. ஆனா நானும் மகிழ்ச்சியா இருந்ததா நம்பினேன். எது முக்கியமானதுன்னா அடுத்தவங்க அப்படி நம்புறாங்கன்னுறதுதான்.


மூணு வருஷங்களுக்குள்ள காசு கொட்ட ஆரம்பிடிச்சு. ஆனா லாவண்யா கூட நான் கொஞ்ச நேரம்தான் செலவிட முடிஞ்ச‌து. அவளோட எனக்கிருந்த உறவு மொத்தமா மாறிடுச்சு. உங்களுக்கு சிரிப்பாயிருக்கலாம், கிராமத்துல ஒவ்வொருநாள் காலையிலேயும் எங்கப்பா பூஜைக்குப் பூ பறிக்கப் போயிடுவாங்க, அம்மா குளிக்கப் போவாங்க. லாவண்யாவும் நானும் மட்டும் இருந்த அந்தத் தனிமை என்னத் தூண்டிடும். ராத்திரிமுழுக்க நாங்க சேர்ந்து படுத்திருந்தாலும் அந்தத் தனிமைக் கணங்கள் எனக்கு நம்பமுடியாத உற்சாகத்தைத் தந்தன. சார், அவ்வளவு அழகாயிருந்துச்சு சார் எங்க உறவு. உங்ககிட்ட பொய் சொல்ல மாட்டேன் சார். இப்ப என்னன்னா எனக்கு அவ மேல இருந்த காதல் குறைஞ்சிடுச்சுன்னு தோணிடுச்சு சார். அவளுக்காக என் ஊரையும் அப்பா அம்மாவையும் விட்டு வந்தேன். ஒரு காலத்துல அவள சந்தோஷப்படுத்த என்ன வேணும்னா செய்ய நான் தயாரா இருந்தேன். ஆனா இப்ப என் மனம் வேற ஒரு விஷயத்தில நிலைச்சிடிச்சு. பணம் சேர்க்கிற சுகத்தவிட வேறெதுவும் அதிக சுகமில்ல. எப்படியோ அவளும் இதப் புரிஞ்சிகிட்டா. திரும்ப கிராமத்துக்கே போயிடலாம்னு சொன்னா. அவள் வேண்டுதலுக்கு நான் காதுகொடுக்கல.


ஒரு கோடை விடுமுறைக்கு நான் என் மகள கிராமத்துல அப்பா வீட்டில விட்டுட்டு வந்தேன். ரெண்டு நாளைக்கப்புறம் லாவண்யா 'இன்னைக்கு வேலைக்குப் போகாதீங்க. எனக்கு ரொம்ப காய்ச்சலா இருக்குது'ன்னு சொன்னா. அவளத் தொட்டு அவள் உடம்பு சூட்டக் கூட நான் பாக்கல. அன்றைக்கு முக்கியமான வேலைகளிருந்துச்சு. நான் வீட்ட விட்டுப் போனேன். ஆனா அவ முன்னால ஒருநேரங்கூட இப்படி என்கிட்டக் கெஞ்சினதில்லைங்கிற எண்ணம் நாள் முழுக்கவும் என்ன வதைச்சிக்கிட்டேயிருந்துச்சு. ராத்திரி நான் வீடு வந்தப்போ அவ மயங்கினதுபோலத் தூங்கிட்டிருந்தா. உடம்பு கொதிச்சிட்டிருந்தது. படுக்கைக்குப் பக்கத்துல பாத்திரத்துல கொஞ்சம் கஞ்சி. பக்கத்துவீட்டுலேர்ந்து கொண்டுவந்து கொஞ்சம் சாப்பிடக் குடுத்துட்டுப் போயிருக்காங்க. நான் படுக்கையில உட்கார்ந்தப்போ ஒண்ணு ரெண்டு காஞ்சுபோன அரிசிங்க என் கையில பட்டது. கஞ்சி கொட்டியிருந்த விரிப்புப் பகுதி கடினமாயிருந்தது. படுக்கை விரிப்பில‌ அந்தத் தடங்கள நான் வருடிப் பார்க்கும்போது எங்களுக்குள்ள ஏதோ முறிஞ்சு போனத நான் உணர்ந்தேன். அப்போதான் என் கிராமத்துக்குத் திரும்பப் போறதுனால எதுவுமில்லைன்னு நான் முடிவெடுத்தேன். அவள் பக்கத்துல நான் இருந்த அந்த நேரங்கள என்னால மற‌க்கவே முடியாது. ஒரு நாளும்…சார். புட்டி பேசிக்கிட்டிருக்கும்போது அவ பார்த்த பார்வை சொன்னதப் போல இந்த முடிவும் அழுத்தமா என் மனசுல பதிஞ்சிடுச்சு.


யார்கிட்டேயும் சொல்லாம, ஒரு லெட்டர் எழுதி வச்சிட்டு அவ வெளியேறிட்டா. சில நேரங்களில தன்னுடைய மகள விட்டுட்டுப் போறோம்னு அவ துளியும் கவலைப்பட்டிருக்க மாட்டாளோன்னு தோணும்போது துக்கமாயிரும்.


அந்த நாள் முதலா என்னுடைய பொண்ணு புரியமுடியாத ஒரு மௌனத்தோடேயே இருக்கிறா. அத்தியாவசியம்னா மட்டுமே பேசுவா. இல்லைன்னா கம்முன்னு உட்கார்ந்திருவா. அவள பேசச் சொல்ல எங்க யாருக்கும் தையிரியமில்ல.


–4—


விபத்திலிருந்து தப்பியதற்காக ஷ‌ரவணனுடைய அம்மா ஷாந்தி, மிருத்யுன்ஜயா இன்னும் சில ஜெபங்களும் செய்ய வேண்டுமென்று வற்புறுத்தினார். நான் விளையாட்டாகச் சொன்னேன், "இந்தக் குப்பைக்கெல்லாம் வேண்டி ஒண்ணும் நான் உன்ன உயிரக் குடுத்துக் காப்பாத்தல. அது என்னுடைய விருப்பத்தையும் தாண்டி நடந்தது. பஸ்ஸ பாத்துட்டு உன்னப் பிடிச்சு இழுத்ததுக்கு உன்னுடைய வாழ்நாள் முழுவதும் எனக்குக் கடன்பட்டிருக்க வேண்டாம்."


"அப்படி ஏன் சார் சொல்றீங்க? உங்களுக்குள்ள அது இருந்ததாலதான் நீங்க என் உயிரக் காப்பாத்த முடிஞ்சது. இந்த ஏழையோட வீட்டுக்கு நீங்க வரணும், இந்த ஒரு நாளாவது.." நான் மட்டும்தான் விருந்தினர், வேறு யாரும் அழைக்கப்படவில்லை என்று சொல்லி என்னை சம்மதிக்க வைத்தான்.


இந்த ஞாயிற்றுக்கிழமை அவன் வீட்டுக்குப் போயிருந்தேன். வீட்டைக் கண்டுபிடிப்பதொன்றும் கடினமில்லை. அதே தெருவில் இரண்டு வீடுகள் தள்ளிக் கூட்டமொன்று கூடியிருந்தது. ஷரவணா அந்த வீட்டு வாசலில் எனக்காகக் காத்திருந்தான். கேட்டைத் திறந்தவன் "இங்கெ எதுக்கு இத்தனபேர் கூடியிருக்காங்கன்னு தெரியுமா சார்? யு.ஜி வந்திருக்காரு."


எனக்கு ஆச்சர்யமாயிருந்தது. "அவர யார்வேணும்னா போய்ப் பார்க்க முடியுமா?"


"நிச்சயமா.. அந்த வீட்டு ஆட்கள எனக்கு நல்லாத்தெரியும். நீங்க சொன்னா இப்பவே போய்ப் பாக்கலாம்." எனக்கு ஆர்வமாயிருந்தது, "சரி போகலாம்" கிளம்பிக்கொண்டே நான் சொன்னேன்.


அந்த வீட்டுக்கு முன் என் சக அலுவலக ஊழியர் பிரபாவைக் கண்டேன். அவளுக்கு சொந்த ஊர் ஹைதராபாத். வேலை குறித்து லட்சியக்கனவுகளைக் கொண்டிருப்பவள். எதையும் அவசியமன்றி அவள் செய்வதில்லை. "நீ எப்படி இங்க?" என்றேன். "நான் யு.ஜியுடைய சீடர்.  அவர் பெங்களூருக்கு வந்ததும் ஷரவணா எனக்குத் தகவல் சொல்வார். நானும் வந்துடுவேன்." என்னுடைய ஆச்சரியத்தை உணர்ந்தவளாய் "வாழ்க்கையை எந்த ஃபில்டரும் இல்லாம அவரால பார்க்க முடியும். அவருடைய பெருமையே அதான்." அந்த வார்த்தைகள் என் மனதில் நின்றன.


நாங்கள் அந்த வீட்டில் நுழைந்தபொது மணி காலை 11. அதற்குள்ளாகப் பலர் கூடிவிட்டிருந்தனர். வெளியே செருப்புக் குவியல் கிடந்தது. உள்ளே பலரும் திவான் மீது சாய்ந்து தரையில் உட்கார்ந்திருந்தனர். வேறு சிலர் கிடைத்த இடத்தில் நின்றுகொண்டிருந்தனர். ஆழ்ந்த மௌனத்தில் எல்லோரும் கவனமாய் செவிமடுத்துக்கொண்டிருந்தன

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 11, 2011 11:30

நைபால்

அன்புள்ள ஜெயமோகன்,

"V.S.Naipaul" எழுத்து வாசித்து இருக்கிறீர்களா?


நான் புத்தகம் வாங்கும் முன், உங்களைக் கேட்கலாம் என்று இருக்கிறேன்.
ஸ்ரீதர்
அன்புள்ள ஸ்ரீதர்
உங்கள் தேவை நல்ல நடை, நுட்பமான தகவல்கள் கொண்ட எழுத்து மட்டுமே என்றால் நைபால் வாசிக்கப்படவேண்டியவர்.ஆனால், இலக்கியத்தில் நீங்கள் விவேகத்தை, கவித்துவத்தை, தரிசனத்தை எதிர்பார்த்தால் அவர் வீண். நல்ல எழுத்து உருவாக்கும் மனவிரிவை அவரால் அளிக்கமுடியாது. வெறுப்பும் பாவனைகளும் நிறைந்த சின்ன மனிதர். இலக்கிய எழுத்து எழுத்தாளனைக் கொண்டுசென்று சேர்க்கும் உச்சங்களில் கால் வைக்கும் அதிருஷ்டமே இல்லாதவர்ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,
அழகான பதில். இப்போதைக்குத் தேவை இல்லாத புத்தகம்.
நடை பயில வேண்டிய பொழுதில் படித்து விடுகிறேன்.

ஒரு புத்தகம் படிப்பதென்பது சிறிது பிரயத்தனம். நான் அதில் இருந்து மீண்டு வர நாட்கள் ஆகும். அதனால் சரியான தருணத்தில், அழகாக review செய்துள்ளீர்கள்.


நன்றி. மேலும் ஒரு நன்றி, அண்ணாவைக் குறித்து நீங்கள் எழுதிய எல்லாமே எனக்கு ஒரு பாடம்.
நான் "My experiments with truth", "Day to day with Gandhi" (letters to and from gandhi)  இரண்டும் வாசித்துள்ளேன். அதில் கற்காத காந்தியம் உங்கள் ஒரு கதை (காந்தியவாதி குறித்த கதை. பெயர் மறந்து விட்டேன்), மற்றும் உங்கள் பதிவுகள் எனக்குக் கற்றுக் கொடுத்தது. நன்றி.
தற்போது என் மனம் Free will இல் இல்லை என்பதான நிலையில் / சிந்தனையில் உள்ளது. அது குறித்த வலைத்தளம் உங்களுக்கு முன்னரே அனுப்பியுள்ளேன். ஒரு சுய தரிசனம், அதைக்குறித்து எழுத ஆசை இருக்கிறது.
http://harekrishnawomen.wordpress.com/2008/09/01/things-they-would-not-teach-me-of-in-college/
http://harekrishnawomen.wordpress.com/2009/11/16/free-willy/
தர்க்க ரீதியான செயல் மட்டும் அல்ல. தர்க்கமும் உண்டு. அதற்கு மேல் ஏதோ ஒன்றும் இருப்பதாகப் படுகிறது.
சும்மா சொல்லத் தோன்றியது, சொல்லிவிட்டேன். நான் ஹரே கிருஷ்ணா பக்தி இயக்கத்தில், முன்பே இருந்து iskcon என்ற விஷயம் பிடிக்காமல் வெளி வந்தேன்.
நல்ல எழுத்து, நல்ல சிந்தனை, என் அறிவுக்கு, மனதிற்கு நல்ல கல்யாண சாப்பாடு போடுகிறீர்கள்…
என் நன்றி,
ஸ்ரீதர்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 11, 2011 11:30

September 10, 2011

குகா-இந்திரா

அன்பின் ஜெ.,


இந்திராவின் ஆட்சியை இந்தியாவின் இருண்ட காலம் என்று ஒட்டு மொத்தமாகச் சொல்லலாம். ஒரு ஒட்டு மொத்தப் பார்வையில் இது சரியே.


அவரின் பங்களிப்புகளும் சில நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பது என் எண்ணம்.


அவை பின்வருமாறு:


1. வங்கிகள் தேசமயமாக்கப் பட்டு, ஊரகக் கிளைகள் துவங்கப்பட்டது – பணப் பரிமாற்றத்துக்கு பாரதமெங்கும் ஒரு கட்டமைப்பு ஏற்பட்டது. இன்று அவை வங்கிகளின் தொழிலுக்கு மிகப் பெரும் உதவியாக இருக்கின்றன. ஓரளவு, ஊரக மத்திய தரப்பு மக்களுக்கேனும் பயன்படும் ஒரு கட்டமைப்பு - இது தொழிலதிபர்களின் கைகளில் இருந்திருந்தால், வருமானம் குறைவான, இல்லாத ஊர்களில், வ்ங்கிக் கிளைகள் திறந்திருக்கப் படாது.


2. தேசிய பால்வள நிறுவனத்தை ஒரு சட்டம் மூலம் உருவாக்கியது. அதன் தலைமைச் செயலகத்தை, குஜராத்திலேயே வைத்தது. இது, ஏற்கனவே படேலால் துவங்கப்பட்டு, சாஸ்திரியால் ஆதரிக்கப் பட்ட ஒரு இயக்கத்தை மேலும் வலுப்படுத்திய செயல். இன்றும் பாரதத்தின் மிகப் பெரும் புரட்சி பால் உற்பத்தியே.


3. மன்னர்களின் மானியங்கள் ஒழிக்கப் பட்டது. சரியோ தவறோ, இந்திய சமூகத்தில் இருந்து அவர்களின் இருப்பை குறைத்தது. மன்னர்களைக் கடவுளாகக் கருதிய சமூகத்தில், அவர்கள் இல்லாமல் இருப்பது, ஜனநாயகத்துக்கு மிக நல்லது.


ஆனால், 14 ஆண்டுகள் பிரதமராக இருந்த ஒரு ஆளுமை செய்யக் கூடிய சாத்தியக் கூறுகளில் இவை ஒரு சதம் கூட இல்லை.


காமாராஜர் செய்த மிகப் பெரும் தவறு இது.


பாலா


அன்பிற்குரிய பாலா


இன்னும்கூட முக்கியமான சிலவற்றைச் சொல்லலாம்.


1. 1972 ல் The United Nations Conference on the Human Environment ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்றது. சூழியல் பற்றிய முதல் விழிப்புணர்ச்சியை உருவாக்கியது அது. அந்த மாநாட்டில் பங்கேற்ற நாடுகளில் சூழியல்பிரச்சினைகளை உடனடியாகக் கருத்தில்கொண்டு தேசிய வனவிலங்கு சரணாலயங்களை அமைப்பது, வேட்டையைத் தடைசெய்வது,வணிகநோக்கில் காட்டை வெட்டுவதைத் தடைசெய்தது போன்ற நடவடிக்கைகளை எடுத்தது இந்திராவின் அரசே. அதை உடனடியாகப் புரிந்துகொண்டு திட்டவட்டமாக நடவடிக்கை எடுக்கச்செய்தார் இந்திரா. பிறநாடுகள் அது பொருளாதார ரீதியாகப் பாதுகாப்பானதல்ல என்று நினைத்து எண்பதுகளின் இறுதிவரைக்கும் கூடத் தயங்கிநின்றன. இந்தியாவின் சூழியல்காப்பில் இந்திராவின் அந்த உறுதி ஒரு முக்கியமான திருப்பம். ஏனென்றால் 1980களில் இந்தியா முழுக்க பெரும்சாலைகள் போடப்பட்டன. கனரகவாகனங்களின் எண்ணிக்கை பிரம்மாண்டமாகியது. அதற்குள் காடழிவுத்தடுப்பு சட்டங்கள் நிறைவேற்றியிருக்காவிட்டால் இந்தியாவே அழிந்திருக்கும்.


2. பாகிஸ்தானை வெற்றிகரமான உளவு-ராணுவ நடவடிக்கைகள் மூலம் இந்திரா பிளந்தது ஒரு சாதனையே. இல்லையேல் இந்தியாவுக்கு அது ஒரு நிரந்தரத்தலைவலியாகவே இருந்திருக்கும். இந்தியாவை இந்திரா ராணுவமயமாக்கியதும் அணுகுண்டு தயாரித்ததும் முக்கியமான தீர்க்க தரிசனங்கள். இல்லாவிட்டால் ஐரோப்பிய நாடுகள் இயற்கை வளம் மிக்க இந்தியாவின் கையைப்பிடித்து முறுக்கியிருக்கும். ஈராக் போல நேரடியாக வந்து குந்தியிருந்தாலும் ஆச்சரியமில்லை


3. வங்கதேச அகதிகளையும், இலங்கை அகதிகளையும் வெற்றிகரமாக இந்தியாவெங்கும் குடியமர்த்தி அவர்களின் மறுவாழ்க்கையை அமைத்ததில் இந்திராவின் அரசு காட்டிய உறுதியும் கருணையும் நிதானமும் முக்கியமானவை என நான் நினைக்கிறேன். அந்த உறுதியைப் பிறகுவந்த அரசுகள் வெளியுறவுக்கொள்கையிலும் உள்நாட்டு விஷயங்களிலும் காட்டவில்லை.


ஜெ


ஜெ,


உண்மை ஜெ.இவற்றையெல்லாம் தாண்டி அவரில் இருந்த பாதுகாப்பின்மை உணர்வும், அதனால் விளைந்த சர்வாதிகாரமும், அவரின் பங்களிப்பையெல்லாம் மறக்கடித்துவிட்டன.


மிக அருமையான அறிமுகம் குகாவின் நூலுக்கு. நன்றி


பாலா


காந்தியின் தேசம்


காந்தியின் கையிலிருந்து நழுவிய தேசம்






 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 10, 2011 11:30

September 9, 2011

இருவகை எழுத்து

அன்புள்ள ஜெயமோகன்,


நான் ஏற்கனவே ஒரு முறை இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியுடன் அனுப்பி இருந்த மின் அஞ்சலுக்கு நீங்கள் பதில் எழுதியது நினைவிருக்கலாம். இந்தக் கடிதம் அது தொடர்பாக.


சமீபத்தில் சிங்கப்பூருக்கு மாற்றலாகி இருக்கிறேன். இங்குள்ள நூலகங்கள் எனக்கு வியப்பளிக்கிறது. (சிறு வயதில் சென்னை நூலகத்திற்கு சென்றதோடு சரி..அதற்கு பிறகு சென்றதில்லை..இப்போது செல்ல ஆசை, அங்கு எவ்வாறு இருக்கிறது என்று பார்பதற்கு). இக்கடிதம் அதைப் பற்றி அல்ல.


ஒரே நேரத்தில் எஸ் ராமகிருஷ்ணனின் சிறுகதைகளும், சுஜாதாவின் சிறுகதைகளும் அடங்கிய புத்தகங்களை எடுத்திருந்தேன். முதல் முறை என்பதனால் இரண்டும் பெரிய புத்தகங்கள்..மற்றும் மாறி மாறிப் படித்துக் கொண்டிருக்கிறேன். (இப்போது யோசிக்கையில் அது விஷப்பரிட்சை என்றே தோன்றுகிறது).


இது சுஜாதாவைப் பற்றிய உங்கள் இடுகைகளை ஒட்டியும் இருக்கும். இரண்டையும் மாறி மாறிப் படிப்பதில் என் சிற்றறிவிற்கு எட்டிய ஒரு சில வேறுபாடுகள் கீழ்க் கண்டவை:



 


* சுஜாதாவின் கதைகளில் ஒரு தேர்ந்த திரைக்கதையை என்னால் பார்க்க முடிகிறது. மிகவும் தேர்ந்த என்று குறிப்பிடலாம். இடத்தைப் பற்றி, நாயகன்/நாயகி பற்றி வர்ணிப்பு, தேர்ந்த தொடக்கம், ஒரு முடிவு (கிளைமாக்ஸ்!). இவைகள் இல்லாத கதைகளை நான் பார்த்ததே அரிது, சுஜாதாவிடம்.


* என்னைக் கேட்டால் சுஜாதாவின் பெரும்பாலான கதைகளை மிக எளிதாகக் குறும்படமாக உருவாக்கலாம். ஆரம்ப வர்ணனைகள் தவிரக் கதையைப் பெரும்பாலும் வசனங்களே நகர்த்திச் செல்கின்றன. கதாபாத்திரத்தின் உணர்வுகள் கூட வசனங்கள் வழியாகவே வெளிப்படுகிறது, அநேகமாக எல்லாக் கதைகளிலும்.


* இந்தக் கதைகளின் சாரம், அது ஏற்படுத்தும் உணர்ச்சி எல்லாவற்றையும் என்னால் மிக எளிதாக மற்ற நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடிகிறது. மிகவும் வெளிப்படையானது. மேலும் (நீங்கள் சினிமா பற்றி சொன்னது) இக்கதைகள் ஏற்கனவே நமக்கு இருக்கும் பிம்பத்தின் மீதே கட்டப்பட்டுள்ளது. பாமர ஏழை, படித்த வேலைதேடும் இளைஞன். ஒரு வகையான 'settled' கதாபாத்திரங்கள் அல்லது சூழல்கள்.



ராமகிருஷ்ணனின் கதைகள் நான் சொன்ன மேல் மூன்றுக்கும் நேரெதிர்.


*ஒரு கதையைக் கூட என்னால் படமாகக் கற்பனை செய்ய முடியவில்லை.  *வசனங்கள் எப்போதாவது ஒரு முறை, தேவை ஏற்படும்போது மட்டுமே.  அவைகள் கதையை நகர்த்திச் செல்வதில்லை, பெரும்பாலும்.


*மேலும் நிறைய உருவகங்கள்…வெயில், காடு, மரம்..இவைகள் எல்லாம் இவைகள் அல்ல..என்றும் அது ஒரு குறியீடு என்றும் புரிய வருகிறது  (எனக்கு இப்போதைக்கு வெகு சில இடங்களில் மட்டும் அந்தப் புரிதல்  ஏற்படுகிறது :) )


*இவைகள் எல்லாவற்றையும் விட என்னை ஆச்சர்யபடுத்துவது  இதுதான்…இந்தக் கதைகள் ஏற்படுத்தும் உணர்ச்சிகள் அல்லது  கற்பனைகள்தான். அவைகள் எனக்கே எனக்கானதாய் மட்டுமே  இருக்கின்றன. யாரிடமும் என்னால் பகிர முடியவில்லை. அப்படியே  முயற்சித்தாலும் 'ம்ம்..அப்புறம்' என்பது போல பதில்கள் மட்டுமே  கிடைக்கின்றன :) .


மேம்போக்காக இது சுஜாதாவைப் பற்றி மட்டும் சொல்வதாகத் தோன்றினாலும் நான் சொல்ல வந்தது அதைப் பற்றி இல்லை. நான் ஏற்கனவே உங்களிடம் கேட்ட கேள்வி தொடர்பானதுதான். வாரப்பத்திரிகைக் கதைகளுக்கும் மற்ற கதைகளுக்கும் உள்ள வேறுபாடுதான் அந்தக் கேள்வியின் சாராம்சம்.


மன்னிக்கவும் என்னால் இந்த மாதிரி compare செய்து பார்ப்பதை இன்னும் சிறிது காலத்திற்கு விட முடியாது என்றே தோன்றுகிறது. அந்த வேறுபாட்டையும் என்னால் இதுதான் என்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை (அந்தக் கதைகள் தரும் உணர்ச்சியைப் போலவே). நீங்கள் உங்களது 'நவீன இலக்கியம் ஒரு அறிமுகம்' புத்தகத்தில் குறிப்பிட்ட விஷயங்கள் அடிக்கடி நினைவுகளில் வருவதும் இத்தகைய கதைகளைப் படிக்கும்போதுதான்.


நான் இப்போது செய்து கொண்டிருப்பது சரியா தவறா என்று எனக்குத் தெரியவில்லை.ஆனால் நான் ஏற்கனவே கூறியபடி இப்போதைக்கு என்னால் அப்படி செய்யாமல் இருக்கவும் முடியாது என்றே தோன்றுகிறது.


என்ன காரணமும் இல்லை இந்தக் கடிதத்திற்கு..இந்த உணர்வுகளைப் பகிர்வதைத்தவிர!!


அடுத்து உங்கள் ஏழாம் உலகம்..ஆரம்பிக்கிறேன்!! தொல்லைகள் தொடரலாம்!! :)


இவண்,

காளிராஜ்


அன்புள்ள காளிராஜ்,


சிங்கப்பூர் நூலகம் பற்றி எழுதியிருந்தீர்கள். தமிழக நூலகங்களைப்பற்றி நண்பர் ஆர்வி எழுதிய குறிப்பு உங்கள் பார்வைக்காக.


நீங்கள் வாசித்தவற்றைப் பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்ற எளிய இருமைக்குள் அடைக்காமல் பகுத்து ஆராய முயல்வது நல்ல விஷயம். அது இலக்கிய அளவுகோல்களை எளிதில் உருவாக்கும்.


அதேசமயம் இவ்வாறு பகுப்பாய்வுசெய்வதை வாசிக்கும்போதே ஒரு மனப்பயிற்சியாகத் தொடர்ந்து செய்து அப்படைப்பை வாசிக்கும் இன்பத்தை இழந்துவிடுவதிலும் அர்த்தமில்லை. படைப்பை ஒரு குழந்தையின் கள்ளமற்ற தன்மையுடன், நம்பும் மனநிலையுடன் வாசிப்பதே முழுக்க உள்வாங்கும் வழி. அப்படி முழுக்க உள்வாங்கிய பிறகே அதை ஆராயும் மனநிலை கூடவேண்டும்.


சுஜாதா- ராமகிருஷ்ணன் இருவரையும் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். சுஜாதாவின் வகைமாதிரி என்பது வணிக எழுத்து. அது வாசகனை உள்ளே இழுத்து அந்தக் கற்பனை உலகில் உலவச்செய்தாகவேண்டும். அதற்கான நுண்விவரணை, உரையாடல்கள், சகஜமான ஓட்டம் போன்றவை அவருக்குத் தேவை. அவை அவரது வலிமைகள்.


எஸ்.ராமகிருஷ்ணன் வணிக எழுத்துக்கு மாற்றாக சிற்றிதழ்சார் இலக்கிய உலகம் உருவாக்கிய வகைமாதிரிக்குள் நிற்பவர். தன்னை வாசகன் என உணரும் ஒருவன் கவனித்துப் பொறுக்கிக்கொள்ளும் மொழிநுட்பங்களும், சித்தரிப்புநுட்பங்களும் நிறைந்தது அது. வாச்கானை உள்ளே ஈடுபடுத்தாதது. அந்நுட்பங்களின் எல்லையை வாசகன் கண்டுபிடிக்கும் வரை அவன் ஆர்வத்தைப் பிடித்து வைத்துக்கொள்ளும்.


இலக்கியத்தின் வகைமாதிரிகள் முடிவற்றவை. ஓர் இலட்சியவகைமாதிரி என்றால் அது இவ்விரு அம்சங்களும் நிறைந்தது எனலாம். அது வாசகனை உள்ளே இழுத்துக்கொண்டு ஒரு மெய்நிகர் வாழ்க்கையை வாழச்செய்யும்.  அந்த வாழ்க்கை அவன் வெளியே வாழும் யதார்த்த வாழ்க்கையைவிட செறிவும் வேகமும் கொண்டதாக, உச்சதருணங்கள் நிறைந்ததாக இருக்கும். ஆகவே அவன் ஒருவாழ்க்கைக்குள் அதிக வாழ்க்கை வாழ்ந்தவன் ஆகிறான். இலக்கியம் அளிக்கும் முதல் பேரின்பம் அதுவே


அந்த வாழ்க்கையில் அவன் பல தீவிரமான அனுபவங்கள் வழியாக தன்னை மேம்படுத்திக்கொள்கிறான். சுத்திகரித்துக்கொள்கிறான். அரிஸ்டாடில் இதை கதார்ஸிஸ் என்கிறார். இந்த அனுபவஎழுச்சி நிகழும் ஆக்கங்களே எப்போதும் பேரிலக்கியங்கள் எனப்படுகின்றன.


ஆனால் நல்லவாசகன் அவ்வாறு எளிமையாகப் படைப்பில் ஒன்றுவதில்லை. அவனுடைய அறிவுத்தர்க்கம் அந்த ஒன்றுதலை எதிர்க்கிறது. அந்த எதிர்ப்பை தன்னுடைய இன்னும் பலமடங்கு மேம்பட்ட அறிவுத்தர்க்கத்தால் தோற்கடித்து அவனை முழுக்க உள்ளே இழுத்துக்கொள்கிறது பெரும்படைப்பு. அதற்காகவே அதில் தர்க்கமுழுமை கைகூடவேண்டியிருக்கிறது.


மொழிநுட்பம்,சித்தரிப்பு நுட்பம், உத்திநுட்பம் போன்றவை வாசகனின் அழகுணர்வை மட்டுமே நிறைவடையச் செய்கின்றன. ஒரு நல்ல ஆக்கம் பலமுறை வாசித்தாலும் தீராத நுட்பங்களால் ஆனதாக இருக்கும். அழகுணர்வின் நிறைவு என்பது வாசகனைப் புனைவு உருவாக்கும் உலகுக்குள் முழுமையாக ஈடுபடச்செய்கிறது. அழகுணர்வு நிறைவடையும்போது வாசகன் ஒரு நெகிழ்ந்த நிலையை அடைந்து அந்தப்படைப்பின் விவேகத்தின், தத்துவத்தின், மெய்ஞானத்தின் உச்சங்களை நோக்கிச் செல்லும் மனநிலையை அடைகிறான். அதை நான் தரிசனம் என்று சொல்வேன்.


அந்த தரிசனம் மூலம் தான் வாழ்ந்த வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக, சாராம்சமாக மீண்டும் பார்க்கும் பார்வையை வாசகன் அடைகிறான். அதுவே வாசிப்பு அளிக்கும் பலன் ஆகும். பேரிலக்கியங்கள் அங்கே கொண்டுசென்று வாசகனை நிறுத்துகின்றன.


ஆகவே, பேரிலக்கியங்கள் என்பவை நிகர்வாழ்க்கையை வாழச்செய்தல், தர்க்கபூர்வ நிறைவுடன் இருத்தல், நுட்பங்களை அளித்தல் மூலம் அழகியல் செறிவைக் கொண்டிருத்தல், மேலும் இம்மூன்றின் வழியாகவும் தரிசனம் நோக்கிச் செல்லுதல் என நான்கு ஆதார இயல்புகளையுமே கொண்டிருக்கும்.


பேரிலக்கியங்கள் எனப்படும் நூல்களைக்கொண்டு நம் அளவீடுகளை உருவாக்கிக்கொள்வதே நல்ல வழிமுறை. வாசிப்பின் ஆரம்பநிலையிலேயே தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி தொடங்கி தாராசங்கர் பானர்ஜி, சிவராமகாரந்த் எனப் பேரிலக்கியவாதிகளை வாசித்துவிடுவது நல்லது என்று நித்ய சைதன்ய யதி சொல்வார்.


ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 09, 2011 11:30

அயோத்தி தாசர்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் ,


அயோத்திதாசர் உரை என்னளவில் மிக முக்கியமானது.சாதி சார்ந்த வேற்றுமை என்னை சிறு வயதிலிருந்து சங்கடப்படுத்திய ஒன்று. இது மாற வேண்டும் என விரும்பினேன் . உங்கள் எழுத்துக்களை வாசிப்பதற்கு முன்பு சாதி என்பது  இந்து மதத்தினால் நிறுவப்பட்ட கட்டமைப்பு என நினைத்திருந்தேன் . அதன் காரணமாக இந்து மதம் மீது வருத்தமும் இருந்தது .இது சார்ந்து தேடிய போதுதான் எனக்கு விஷ்ணுபுரம் கிடைத்தது . பிறகு என் எண்ணங்கள் மாறின .இப்போது தாழ்த்தப்பட்ட நிலையில் இருப்பவர்கள் தொடக்கத்திலிருந்து அந்நிலையில் இருப்பவர்கள் அல்ல என்பதும் ,அந்நிலைக்குத் தள்ளப் பட்டவர்கள் என்பதும் எனக்கு உண்மையில்  இன்ப அதிர்ச்சியான தகவல்கள்.இக்கருத்துகள் அவர்களிடம் சென்றாலே அவர்களின் சமூகநிலை நாளடைவில்  உயர்ந்து விடும் .


அயோத்திதாசர் உரை என்னை மிக சலனமடைய செய்து விட்டது. இவ்வுரை ஓர் அறைகூவல்.இதிலிருந்து மேலெழ முயல்வேன்.இவ்வுரை மூலமாக புத்தமதம் சார்ந்தும்.


கடந்த காலத் தமிழ் வரலாறு சார்ந்தும் நிறைய தெளிவு பெற்றேன். புத்தரது ஆதிவேதம் பற்றி ஆய்வு செய்ததைப் போல நாளை கொற்றவை சார்ந்து யாரேனும் ஆய்வு செய்தால் தமிழ்ச் சமூக வரலாறு சார்ந்த உண்மைகள் பெருமளவில் தெரியவரும் அனந்தபத்மனாமனின் பொற்குவியல் போல. நன்றி


அன்புடன்


ராதாகிருஷ்ணன்


அன்புள்ள ஜெ


அயோத்திதாசர் பற்றிய உரையை நான் மிகவும் பிந்தித்தான் வாசித்தேன். ஒரு நண்பர்தான் எனக்கு சுட்டி கொடுத்தார். அவர் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர். எனக்கு அரசியல் எல்லாம் கிடையாது. நான் ஓரளவுக்கு என்னால்முடிந்தவரை வரலாற்று ஆராய்ச்சி செய்து வருகிறேன். கொங்கு மண்ணைச் சேர்ந்தவன்.


இப்படி ஆராய்ச்சி செய்யும்போதுதான் கொங்குமண்ணைப்பற்றிய வரலாறு எழுதப்படாமலேயே இருக்கிறது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. போகிறபோக்கிலே ஆங்காங்கே சில விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. கொங்கு மண் மேலே துவரசமுத்திரத்து நாயக்கர்களின் படை எடுப்பு பற்றியெல்லாம் ஒரு நல்ல குறிப்புகூட இல்லை.


உங்கள் கட்டுரை வாசித்தபோது மிகப்பெரிய திறப்புகளை அடைந்தேன். கொங்குமண்ணில் சமணமும் பௌத்தமும் சிறப்புற்றிருந்தது. இங்கே உள்ள நிறைய கிராமத்து தெய்வங்கள் பழைய பௌத்த சமண சாமிகளாக இருக்கலாம். பௌத்தம் எப்படி இங்கே இருந்து அழிந்தது என்றெல்லாம் பாராமல் நம்மால் கொங்கு மண்ணின் வரலாற்றை சரியாக எழுதிவிடமுடியுமா என்ற எண்ணம் வந்துவிட்டது


அயோத்திதாசரை நான் கூர்ந்து வாசிக்கிறேன்


நன்றி


சண்முகசுந்தரம்


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர்-7


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர்- 6


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 5


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 4


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 3


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 2


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 09, 2011 11:30

September 8, 2011

ரசனை கிடைக்கப்பெறுவதா ?

ஆசிரியருக்கு,

நீங்கள் எனக்கு சிற்பக்கலையை அறிமுகப்படுத்திய அந்த அம்பை கோயில் கணங்கள் மறக்க முடியாதவை , பின் முண்டந்துறை செல்லும்போது ஓவியத்தையும், பின் ஓரிரு ஆண்டுகளில் சிதம்பரத்தில்  நடனத்தையும், கடுமையான எதிர்விசை இருந்தும் மெல்ல மெல்லக்  கர்நாடக இசையையும் என சம வீச்சுடன் இவைகள்  அறிமுகமானது , பின் நமது திருவையாறு பயணமும் என இப்போது திரும்பிப் பார்க்கையில் எனக்குக் கிட்டத்தட்ட எல்லாக் கலைகளையும், அதன் அடிப்படைகளையும் நீங்கள்தான் அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள்.  இன்று அந்த சூடு தணிந்த நிலையில்  நான் மெல்ல இவைகளையும் என்னையும்  மதிப்பீடு செய்கிறேன்.


எனக்கு அறிமுகமான எல்லா முதற் கணங்களும் அபாரமானவை, கோட்டை  மதில் சுவர் அகல வீசித் திறப்பது போல, அதிகாலை கோயில் நடை திறப்பது  போல மிக விசாலமானது, அவ்வறிமுகக் கணங்களில் அவ்விடத்தில் யார் இருந்திருந்தாலும் கிட்டத்தட்ட இதே துவக்கமும் பின் தொடர்பும் நிகழ்ந்திருக்கும்.


இலக்கியத்தில் சிறப்புத் தேர்ச்சியும், பிற கலைகளில் உபரி ஞானமும் உள்ள பெரும் கலைஞன்  ஒருவரின் அறிமுகம் இலக்கியத்தின் மீது முதன்மையான அழுத்தமும் பிற கலைகள் மீது ஆர்வமும் நாட்டமும் என என்னை நடத்துகிறது. பிற கலைப்படைப்புகள் கிடைக்கப் பெறுவதைவிட விட (இசை விதிவிலக்கு ) இலக்கியப் படைப்புகள் எளிதில் அகப்படுகிறது, ஊருக்கொரு நூலகம், புத்தகக் கடைகள்,  கண்காட்சிகள் , வாசிக்கும் நபரொருவரை சந்தித்து உரையாடுவதும் ஒப்பீட்டளவில் எளிது, எனவே முதலில் நான் புத்தகம், பிறகு ஜெ மூலமாகத் தீவிர இலக்கியம் என இயல்பில் வந்து சேர்ந்தேன்.


இதே சாத்தியத்தில் , உதாரணமாக ஓவியமோ, சிற்பமோ சமூகத்தில் எளிதில் அகப்படுகிறது,  அதன் பெரும்  கலைஞர்களை , ரசிகர்களை சந்தித்து உரையாடுவதும் எளிது என்ற நிலை இருந்தால் எனக்கு முதலில் எளிதில் அறிமுகமாகும் கலையுடன் பிரதான தொடர்பும் பிற கலைகளுடன்  உபரித் தொடர்பும் இருந்திருக்குமா?  மனிதன் எளிதில் ஆழமாக  ஆட்படக் கூடியவனா ?  நான் உட்பட உங்களின் எத்தனை வாசகர்கள் இலக்கியத்தில்  மிஞ்சுவோம் ? மனிதனின் மானசிகமான உறவென்பது திருமண உறவு போலப் பெரிதும் கிடைக்கப் பெறுவதும் , அணுக சாத்தியமானதும் (availability and accessibility)  என்ற எளிமையான விதி  சார்ந்ததா ?


நமது மதுரை  சந்திப்பில்  கேட்க நினைத்த கேள்வி இது.


கிருஷ்ணன்


அன்புள்ள கிருஷ்ணன்,


சாதாரணமாகப் பார்த்தால் அப்படித்தெரியும். ஆனால் பெறுவது-  அடைவது என்ற இரு தரப்பிலும் நின்று பார்த்தால் அப்படி அல்ல என்பதைக் காணலாம்.

நல்ல கலையும் இலக்கியமும் மக்களுக்குக் கிடைத்தாகவேண்டியிருக்கிறது. அதுவும் உரிய வயதில். அப்போது கணிசமானவர்கள் இயல்பாகவே அவற்றுக்குள் வருவார்கள். மேலைநாடுகளில் சிறுவயதில் மேலை இசையுடன் ஒரு தொடர்பு குடும்பத்திலேயே அளிக்கப்பட்டுவிடுகிறது.  படுக்கைநேரவாசிப்பு மூலம் இலக்கியமும் அறிமுகமாகிறது. எங்கும் இலக்கியமும் கலைகளும் கிடைக்கின்றன. ஆகவே அங்கே ஓரளவுக்கு அடிப்படை ரசனை உடையவர்கள்கூட இலக்கியத்திற்கும் கலைகளுக்கும் வந்து சேர்கிறார்கள்


நம் நாட்டில் நல்ல ரசனை உடையவர்கள் அறிவுத்திறன் உடையவர்கள் நல்ல கலையையும் இலக்கியத்தையும் கடைசிவரை அறிமுகம் செய்துகொள்ளாமலேயே போகும் வாய்ப்பே அதிகம். நல்ல ஒரு வாசகரிடம் எப்படி வாசிக்க ஆரம்பித்தீர்கள் என்று கேட்டால் ஒரு தற்செயலை, ஒரு மனிதரை சுட்டிக்காட்டுவார். இயல்பான அறிமுகம் நிகழ அனேகமாக வாய்ப்பே இல்லை, தற்செயலே ஒரே திறப்பு.ஆகவேதான் இலக்கியமும் கலைகளும் இன்னும் விரிவாக அறிமுகம் செய்யப்படவேண்டும் என்று வாதிடுகிறோம்.


ஆனால் அதே ஐரோப்பியநாடுகளில்கூட எல்லாரும் கலையிலக்கியம் பக்கம் வந்துவிடுவதில்லை. அவர்கள் அங்கும் மிகச்சிறுபான்மையினரே. பிறர் அன்றாடவாழ்க்கையில் மூழ்கி மறையவே வாய்ப்பு. எப்போதுமே மானுட விதி அதுதான். அவனுடைய மூளைக்குள் ரசனையும் அறிவுத்தேடலும் பிறப்பிலேயே இருக்கவில்லை என்றால் புற அறிமுகத்தால் என்ன பயன்?


நாயைப் புலால்மணமே இல்லாமல் வளர்ப்பவர்கள் உண்டு. ஆனால் பிறந்து வெளிவந்த குட்டியானாலும் சரி பத்து வருடம் அசைவ வாசனையே இல்லாமலிருக்கும் நாயானாலும் சரி மாமிசத்தை மணம் காட்டினால் வந்து கவ்விக்கொள்ளும். அதன் உணவு அது என அதன் மூளைக்குத்தெரியும். பலசமயம் ரசனை என்பது இப்படித்தான்.


ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 08, 2011 11:30

ஆங்கில நாடகங்கள்

அன்புள்ள ஜெ.,


நீங்கள் அஜிதனைக் கல்லூரியில் சேர்க்க பெங்களூரு வந்திருந்த போது தங்களைச் சந்தித்திருந்தேன். அப்போது எனது நாடகத் துறை ஆர்வம் பற்றியும் அதில் சந்திக்கும் சில பிரச்சினைகள் பற்றியும் கூறியது நினைவிருக்கலாம். (மேலும், blogswara பற்றியும், பிற சந்தர்ப்பங்களில் படைப்பூக்கம் தொடர்பான மற்றும் வேறு சந்தேகங்களைக் கேட்கவும் தங்களுக்கு எழுதியிருக்கிறேன்.) அந்த சந்திப்புக்குப் பின், மேலும் இரு நாடகங்களுக்குப் பிறகும் திரும்பவும் அதே போன்ற பிரச்சினைகளைச் சந்திக்கின்றேன்!
விஷயம் இது தான்:
இந்திய ஆங்கில நாடக இலக்கியத்தில், தற்கால இந்தியாவின் நிலையை ஒட்டி எழுதப்பட்ட, எல்லா விதங்களிலும் சிறந்த, நாடகங்கள் அதிகம் இல்லை (அல்லது, எனக்குத் தெரியவில்லை). அதனால், திரும்பத் திரும்ப ஏதாவதொரு அமெரிக்க அல்லது ஐரோப்பிய நாடகாசிரியரின் நகைச்சுவை நாடகத்தையே மேடையேற்றிக் கொண்டிருக்கிறோம். (மக்கள் நாடகத்துக்கு வந்து சந்தோஷமாக சிரித்து விட்டுப் போகிறார்கள். எனக்குத்தான், ஏதோ ஒரு விதத்தில் artistic counterfeiting செய்கிறேனோ என்று ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கிறது.)


அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் எழுதப்படும் நாடகங்கள் பல நேரங்களில் ஒரு வித அந்நியத் தன்மையுடனேயே  இருக்கின்றன. இதில் வியப்பேதும் இல்லை. (மேலை நாட்டுக் கலாசார சூழல் புரியாவிட்டால் நாடகத்தில் வரும் ஜோக்குகள் மற்றும் references புரியாது; ஜோக்குகள் புரியாவிட்டால் பார்வையாளர்கள் "சிரி-சிந்தி" என்பதில் முதல் நிலையிலேயே தடுக்கி விடுவார்கள்; references புரியவில்லை என்றால் பார்வையாளர்களுக்குத் தாங்கள் எதைத் தவற விடுகிறோம் என்பது கூடத் தெரியாமலே போகும்.)
பழைய இந்திய நாடக ஆசிரியர்களின் எழுத்துக்களை எடுத்துக் கொண்டால் அவை 1991-க்கு முன்பு எழுதப்பட்டவை. அதனால், liberalisation மற்றும் globalisation போன்ற நிகழ்வுகளுக்கு முந்தைய இந்தியாவைப் பற்றியும் அப்போதிருந்த பிரச்சினைகள் பற்றியும் பேசுகின்றன. (உதாரணத்துக்கு, விஜய் டெண்டுல்கர் அல்லது கிரீஷ் கர்னாட் போன்றவர்களின் பல நாடகங்களில் வரும் சம்பவங்கள் மற்றும் பாத்திரங்கள் தற்காலத்தின் பார்வையில் அர்த்தமற்றவையாகத் தோன்றுகின்றன. அந்த சம்பவங்கள் மற்றும் பாத்திரங்களின் ஊடாக இந்த ஆசிரியர்கள் சுட்டும் அடிப்படை தரிசனங்கள் எல்லாக் காலத்திற்குமானவையாக இருக்கலாம்; ஆனால், சம்பவங்கள் மற்றும் பாத்திரங்கள் எழுபதுகள் மற்றும் எண்பதுகளிலிருந்து வந்தால் பார்வையாளர்களை இவற்றினூடாக அந்த தரிசனத்திற்குக் கூட்டிச் செல்வது முடியாமல் போகிறது!)
புதிதாக நாடக உலகத்திலிருந்தே எழுதுகிறேன் பேர்வழி என்று கிளம்புகிற சிலரும் (எல்லோரையும் சொல்லவில்லை) அடிப்படை இலக்கிய ஆர்வமோ சமூக அக்கறையோ இல்லாமல், நாடகத்தைக் கலையாக இல்லாமல் வெறும் கேளிக்கையாக மட்டுமே பார்ப்பவர்களாக இருப்பதால், பொருட்படுத்தத்தக்க நாடகங்கள் வெளிவருவதில்லை. (இதில் இன்னொரு பிரச்சினை, இதில் பலர் சினிமா மோகத்தால் பெரிதாக பாதிக்கப்பட்டவர்கள்; அதனால், ஒரு ஹிந்தி அல்லது இங்கிலீஷ் படம் நன்றாக ஓடிவிட்டால், அல்லது ஒரு புத்தகத்துக்கு "mass appeal" இருக்கிறதென்று தெரிந்து விட்டால், அதை இங்கங்கு கொஞ்சம் டிங்கரிங் செய்து, இரட்டையர்த்த வசனங்கள் மற்றும் கிளுகிளுப்புக்குத் தேவையான சங்கதிகள் சேர்த்து, மேடையேற்றி கொஞ்சம் புகழ், வெற்றி, காசு பார்க்கலாமா என்று துடிக்கிறார்கள். அண்மைக்கால உதாரணம், சேத்தன் பகத்தின் Five Point Someone.
உயர்ந்த தரத்திலான, தத்துவப் பின்புலம் கொண்ட, முக்கியமான விஷயங்களைப் பேசுபொருளாகக் கொண்ட, வடிவ நேர்த்தி கொண்ட, அழுத்தமான-ஆயினும்-நம்பும்படியான பாத்திரப் படைப்பு அமையப்பெற்ற நாடகங்கள் எழுதப்பட வேண்டும், அவை சிறப்பாக மேடையேற்றப்பட வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுகிற என்னைப் போன்ற சிலருக்கோ, "நாமே எழுதிடலாமோ" என்று நினைக்க முற்படும்போதே அது எவ்வளவு ஒரு அசட்டு எண்ணம் என்பதும், அப்படி ஒரு நாடகத்துக்கான கருவைக் கற்பனை செய்து விடுவதே எளிதல்ல என்பதும் உடனடியாகப் புரியவும் புரிகிறது. அதற்கான தயார் நிலைக்கு வருவதற்கே பெரியதொரு புரிதலும் படைப்பூக்கமும் இசைந்து வர வேண்டும்—அதற்கு மேலாகப் பெரியதொரு உழைப்பு!


இப்போது திரும்பவும் முதல் வரிக்கு வருகிறேன்:
"இந்திய ஆங்கில நாடக இலக்கியத்தில், தற்கால இந்தியாவின் நிலையை ஒட்டி எழுதப்பட்ட நாடகங்கள் அதிகம் இல்லை (அல்லது, எனக்குத் தெரியவில்லை)"


இருக்கின்றன, ஆனால் எனக்குத் தான் தெரியவில்லை என்றால் என் தேடுதலில் நான் எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வருவது பயனளிக்கலாம்?

அல்லது,



நான் ஐயப்படுவது போல, "The post-liberalisation generation of India has not begun to evolve its intellectual, insightful playwrights yet" என்பது உண்மையாக இருந்தால், இதற்குத் தீர்வு எந்த வகையில் அமைய வாய்ப்புண்டு? இந்திய ஆங்கிலத்தில் தான் இல்லையா, அல்லது நமது இந்திய மொழி இலக்கியங்களிலும் தற்காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த, ஆழமான புரிதல் கொண்ட நாடக ஆசிரியர்கள் இன்று பற்றாக்குறை தானா? தற்கால இந்திய ஆங்கில நாடகங்களில் இவை மிக முக்கியமானவை, மேடையேற்றப்பட வேண்டியவை, என்று நீங்கள் ஒரு பட்டியல் தர முடியுமா?

அன்புடன்,

விஜய்
அன்புள்ள விஜய்
பெங்களூரில் தற்செயலாக உங்களைச் சந்தித்தது மகிழ்ச்சி. அதன்பின்புதான் பதில் கடிதம் மிச்சமிருக்கிறது என்ற எண்ணம் ஏற்பட்டது.
பொதுவாக இந்தியாவைப்பற்றி ஆங்கிலத்தில் எழுதுவதில் நடிப்பதில் எனக்கு ஒரு கண்டனம் உண்டு. அதிலிருந்து நம் காலனியடிமைநாட்களின் மனநிலையை நீக்கவே முடியாதென்றே நினைக்கிறேன். முற்றிலும் இந்தியத்தன்மை கொண்டது என ஒரு இந்திய ஆங்கில நூலைக்கூட நான் வாசித்ததில்லை.
ஆனால் நம் இளையதலைமுறை அதிகமும் ஆங்கிலத்திலேயே கல்வி கற்கிறதென்பதனால் வேறு வழியே இல்லை, நாம் ஆங்கிலத்தில் எழுதி நடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்
நானே கவனித்திருக்கிறேன், இந்திய ஆங்கில நாடகங்கள் பெரும்பாலும் மேலைநாட்டு நாடகங்களைத் தழுவி நடிப்பவை அல்லது அப்படியே நடிப்பவை. இதன் இழப்பு என்னவென்றால் அவற்றின் குறியீடுகள் எல்லாமே அன்னியமானவை என்பதுதான். அவை ஒரு விசித்திரமான அனுபவமாகவே ஆகின்றன. உதாரணமாக நான் திருவனந்தபுரத்தில் பார்த்த நாடகத்தில் பிச்சைக்காரன் தொப்பியை நீட்டுகிறான்!
இந்திய ஆங்கில நாடகங்களில் சமகால இந்தியாவை எதிர்கொள்ளும் இலக்கியத்தரமான நாடகங்கள் என எதையுமே நான் வாசித்ததில்லை . நான் கேட்டவரைக்கும் அப்படி ஏதும் இல்லை.
இதைத்தவிர்க்க சிறந்த வழி தமிழில் அல்லது கன்னடத்தில் உள்ள நல்ல நாடகங்களை மொழியாக்கம் செய்து நடிப்பதுதான்.  ஆனால் அப்போதுகூட குப்பம்மா பாட்டி ஆங்கிலத்தில் பேசுவதை எப்படி என்னால் எதிர்கொள்ளமுடியும் என்று சந்தேகமாகவே இருக்கிறது
மராட்டிய நாடகத்தில் மும்பை பெருநகர் வாழ்க்கையைச் சொல்லும் நாடகங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெற்ற்கரமாக நடித்திருக்கிறார்கள் -  மோகன் ராகேஷ், தெண்டுல்கர் நாடகங்களை.
தமிழில் இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்கள் அப்படிப்பட்ட சாத்தியங்கள் கொண்டவை. 'மழை', 'போர்வைபோர்த்திய உடல்கள்' போன்றவை.
ஜெ
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 08, 2011 11:30

இளமாறனின் காடு

சிறுவயதில், காட்டைப் பற்றிய தீராத விருப்பம் ஆத்தாவின் கொள்ளிபத்தை பிசாசு கதைகளிலும், அரிபிசாசு கதைகளிலும் ஆரம்பித்தது. ஊர் பண்ணகட்டுகளுடன், உடும்பைத் தேடி காராம் பத்தைகள், சூராம் பத்தைகள் நிரம்பிய கோயில் காடுகளிலும், கரம்பு நிலங்களிலும் அலைந்து திரிவேன். மிக அரிதாக பழநிக்குச் சென்ற பயணங்களில், வழியில் தென்படும் மொட்டைப் பாறைகளில், காட்டை வளர்த்து, சிறிது நேரம் கானுலா செல்வேன்.  பின்பு மீண்டும் பேருந்தில் புகுந்து கொள்வேன்.  பசும் மரங்கள் நிறைந்த மலைகள் இல்லாத சமவெளியில் பிறந்த அபாக்கியத்தை எண்ணி மனம் வருந்துவேன்.  கல்லூரிப் படிப்பு, வேலை என சில வருடங்களுக்குப் பின், திடீர் என்று ஒரு நாள் விழித்தெழுந்து, கனவில் மட்டுமே கண்ட மலைக்காட்டினை நனவில் கண்டேன். ஊர் திரும்பிய பின், 'காடு' நாவலை வாங்கி படிக்கத் தொடங்கினேன். 6 மாதங்களுக்கு முன்பு 'காடு' நாவலை படித்து முடித்து விட்டு, அதன் பாதிப்பில் இருந்து மீள சில நாட்கள் ஆயின. அந்த பாதிப்பு – சில சிறுகதைகள், சில திரைப்படங்கள், சில வாழ்க்கைச் சம்பவங்கள், சில மறந்து, தொலைந்து போன குழந்தைக் கால நட்புகளின் நினைவுகள் மட்டுமே தரும் பாதிப்பு.


காடு

காடு


இந்த நாவலை நான் வாங்குவதற்குக் காரணம், அதன் பெயர் – 'காடு'. காடு என்ற எளிய ஒற்றைச்சொல், பல்லாயிரம் பக்கங்களுக்கு  எழுதப்பட்டாலும் தீர்ந்தே போகாத, விரிந்தே செல்லக்கூடிய சொல். ஒரு பெருங்காட்டை உருவாக்கக்கூடிய வல்லமை கொண்ட ஒற்றைவிதையை ஒத்த சொல். நாவலைப் படிக்கும் முன், ஒரு வேட்டைக்காரன் வந்து செல்லும் காட்டைப் பற்றிய கதை என்றோ அல்லது பழங்குடிகள் வாழும் காட்டைப் பற்றிய கதை என்றோ தான் நினைத்து இருந்தேன். ஆனால் படிக்க தொடங்கிய பின்தான் தெரிந்து கொண்டேன்.  காடு என்பது நாவல் நடப்பதற்கான ஒரு நிலம் என்று. அந்த நிலத்தை வைத்துக்  கொண்டு, எளிய மனிதர்களைப் பற்றி சொல்ல வந்த கதை என்று. அந்த எளிய மனிதர்களின் காமத்தை சொல்ல வந்த கதை என்று.


கிரிதரன் என்னும் பதின்பருவ சிறுவன் ,  தன் மாமாவின் காண்ட்ராக்ட் வேலையை மேற்பார்வையிட காட்டுக்கு வருகிறான். அவனது காட்டு வாழ்க்கை,  ஊர் வாழ்க்கை , அதற்கு பின்பான நகர வாழ்க்கை அவனது நினைவுகளால் சொல்லப்படுவதே (நனவோடை உத்தி?)  'காடு' நாவல். படித்து முடித்து, ஒரு மாதத்திற்கு பின் நாவலை மீண்டும் நினைவில் கொண்டு வந்தேன். கதை என்று பார்த்தால் எளிமையான கதைதான். ஆனாலும் மிகவும் பாதித்ததிற்குக் காரணம் காட்டின் மீதான என் தனிப்பட்ட பித்தா? இல்லை கதை மாந்தர்கள் சிலரின் வாழ்க்கை, நான் நேரில் கண்ட, கேட்ட சிலரின் வாழ்க்கையைப் போன்றதனாலா? யோசித்த பின், புலப்பட்ட காரணம் – அபத்தக் கனவுகளும், எதார்த்தத்தை மீறிய எதிர்பார்ப்புகளும் கொண்ட பதின்பருவ சிறுவன், அவன் எதிர்பார்த்தே இருக்க முடியாத வாழ்க்கை வாழ நேரிட்டதன் அவலம்.  மலை உச்சியில் பலகாலம் இருந்த பாறை ஒன்று, திடீர் என்று ஒரு நாள் உருண்டோடி, தரையை அடைந்து, மீளவே முடியாத அந்த உச்சியை மீண்டும் மீண்டும் எண்ணி, எண்ணி ஏங்கும் வாழ்க்கை வாழ்வதன் துயரம். நினைத்த வாழ்வையும் வாழ முடியாமல், கிடைத்த வாழ்வையும் வாழ ஒவ்வாமல், அலைக்கழிப்புகளால் ஆன வாழ்வின் அவலம். சொந்த வாழ்க்கையின் இன்ப, துன்ப அனுபவங்களாலும், படித்த, பார்த்த மனிதர்களாலும்  மட்டுமே படைப்புகளை அடையாளப்படுத்தி புரிந்து கொள்பவன் நான்.  இந்த நாவலையும், அப்படியே  அடையாளப்படுத்திப் படித்தேன். என்றாலும்,  ஒரு தனி மனிதனின் ஒட்டு மொத்த வாழ்வைக் கூறி, அது தரும் அனுபவத்தாலும் புரிந்து கொள்ள செய்த படைப்பு இது.


உண்மையில் இந்த நாவலை என் வாசிப்பில் நான் எப்படிப் புரிந்து கொள்கிறேன்? கனவு, காதல், எதார்த்தம் – என்ற மூன்று இணை கோடுகளை, ஊடுருவிச் செல்லும் ஒரு தனிக்கோடாகக் காமம்.  நெற்றியில் பூசப்பட்ட மூன்று சந்தனக்கோடுகளை, ஊடறுத்துச் செல்லும் குங்குமக் கோடு போல.  அந்தக் காமம் ஊடறுத்துச் சென்ற ஒருவனின் வாழ்வைப் பற்றிக் கூற வந்த நாவல் என்றே புரிந்து கொள்கிறேன். கனவை விதைக்கும் சங்கப்பாடல்களைக் கற்ற கிரிதரன் (அருமையான குறியீட்டுப் பெயர்!), காட்டிற்கு செல்கிறான். அங்கே தன்னைப் போலவே சங்கப்பாடல்களில் மனதைப் பறிகொடுத்த அய்யரை (தி.ஜாவின் சாயல்) சந்திக்கிறான். கனவின் இருமுகங்களாக அய்யரும், கிரியும்.


அய்யரின் கனவிற்கும், கிரியின் கனவிற்கும் உள்ள வித்தியாசம் – அய்யரின் கனவு, எதார்த்தத்தைத் தெரிந்து கொண்டு, அதில் இருந்து மேலெழுந்த கனவு. நல்ல படிப்பு, வேலை, குடும்பம், ரசிக்க சங்கீதம், தடவ பெண்கள் எல்லாவற்றுக்கும் மேலே அவர் எப்போதும் காதலிக்கும் காடு என நிறைவான வாழ்வு வாழ்ந்தாலும், அவைகளைத் தாண்டிய, தீரவே தீராத ஏக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டியதன் கனவு. மாறாக, கிரியின் கனவு எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள இயலாத வயதில், 'குண்டியில் கிருமி கடிக்கும் நாய்' போன்றவனின் கனவு . தன்னைக் கவிஞனாகவும் நினைத்துக்கொள்கிறான்.  கனவுகளும், கற்பனைகளும்  கவிஞனுக்குப் பஞ்சமா? கூடவே காதலும், காமமும் சேர்ந்து கொண்டால்? இவர்களுக்கு ஊடாகக் கனவின் பல இணைமுகங்களாக சோதிடக்கனவுகளில் வாழும் கிரியின் அப்பா, மூன்றாவது குழந்தை பிறந்தாலாவது வாழ்க்கை சுபிட்சமாகும் என்ற கனவில் வாழும் அம்பிகா அக்கா, அவளது கணவன்.


கனவுகளின் காதலானாக வரும் கிரி, காட்டில் குளிக்கும் மலைப்பெண்ணான நீலியைப் பார்க்கிறான். அவளுடன் காதல் கொள்கிறான். இங்கே காதலின் இருமுகங்களாக கிரியும், மலை  நீலியும். காதலில்  விழுபவன் காட்டில் அலைகிறான். தான் மேற்பார்வை செய்ய வந்த வேலையில் கவனம் கொள்ளாது போகிறான். இறுதியில் அவன், காண்டிராக்ட் வேலையையே வாழ்வாதாரமாக கொள்கிறான். காட்டில் தான் ஒரு போதும் கற்காத அதன் நெளிவு, சுளிவுகளில் வாழ்வின் எதார்த்தத்தை உணர்கிறான். எதார்த்தத்தை  முற்றிலும் புரிந்து கொண்ட முகங்களாக குட்டப்பனும், மாமாவும். அவர்கள்  கனவுகளோ, காதலோ அற்றவர்கள். அதற்குக் காரணம் அவர்கள் இளவயதிலேயே எதார்த்தத்தின் பிடிக்குள் வந்தவர்கள் என்பதால்தான்.  இவர்கள் எல்லோரும் ஏதேனும் ஒருவகையில் கிரியின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள். இவர்களை  ஊடுருவிச் செல்லும் அந்த தனிக்கோடாகக் காமம்.


நாவலின் இரண்டாம் அத்தியாயத்தில் அறிமுகம் ஆகும் மனிதர்களின்  காமம், கிரிதரன்  பயணப்படும் காடு  மரம், செடி, கொடிகளால் ஆனதல்ல  மனித உறவுகளின் காமத்தால் ஆனது  என்பதைத் தெரிவிக்கிறது. நாவலின் முதல் அத்தியாயத்தில் வரும் மிளாவின் காலடித் தடம் காட்டிற்கான திறப்பு வாசல் என்றால், இரண்டாம் அத்தியாயத்தில் வரும் மாமாவின் இளவயது புணர்ச்சி, காமத்திற்கான திறப்பு வாசலாக  உள்ளது. காமம் என்றவுடன், ஊரில் கொண்டாடப்பட்ட  பண்டிகையான காமாண்டி ஞாபகம் வருகிறது.  தெரு முக்கில், கம்புகளால் போடப்பட்ட சிறு பந்தல், வைக்கோல் பிரிகளால் சூழப்பட்டு இருக்கும். பந்தலுக்கு  15 நாட்கள்  விளக்கு போடப்படும், 16- நாளின் முடிவில் மன்மதன் , ரதி என இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து லாவணி பாடல்கள் பாடப்படும். முடிவில் பந்தல் தீயிட்டுக் கொளுத்தப்படும். வைக்கோல் பிரியில் மூளும்  தீயில் மன்மதனின் காமம் பற்றி எரியும். தீயினை சுற்றி சிறுவர்களும்,  இளஞ்செட்டுகளும் நடனம் ஆடுவார்கள். புரியாத வயதில் நடனமாடி, புரியும் போது பண்டிகை காணாமல் போய், காமம் மட்டும் மீதம் இருக்கும் வயதில், மனிதர்களின் காமத்தைப் புரிந்து கொள்ளும் திறப்பு வாசலாகவும் உள்ளது நாவலின் இரண்டாம் அத்தியாயம்.


எண்ணை செட்டிச்சியின் மகளை, மாமா புணருவதில் தொடங்கும் காமத்தின் ஓட்டம்,  பங்குபணம் போட்ட ஊர் நாயர்கள், செட்டிச்சி மகன், வெள்ளைக்கார பாதிரி, மாமி, போத்தி,  குட்டப்பன், சினேகம்மை, குரிசு, கத்தரிக்கோல் இரட்டையர்கள், அய்யர், மேனத்தி  என  பலவித மனிதர்களின் வழியே ஓடி,  கிரிதரனின், 40-வயதிலும் விடவே முடியாத கைப்பழக்கம் வழியே  தொடர்கிறது. காட்டின்(மரம், மனிதன் ) மறுபக்கமாய் காமம். கசிந்துருகும் பாறை நீராகவும், ஆர்ப்பரிக்கும்  மழைக்கால மலை அருவியாகவும் ஓடும் காமம். கதை மாந்தர்கள் எல்லோரும் வழியாகவும் ஊடுருவி நிற்கும் காமம்.  அவர்கள் எல்லோரின் இருப்பின் மீதான விருப்புக்கு அடிப்படையாக இருக்கும் காமம். கிரிதரன் கனவும், காதலும் கொண்ட பருவத்தில் செய்யும் அந்தச் செயலால், எரிச்சலையும், தனிமையையும் உண்டாக்கும்  காமம்.  அதே செயலால், பிற்பகுதி வாழ்வின் மீதான எரிச்சலையும், தனிமையையும் போக்க உதவும் காமம். கனவோ, காதலோ இல்லாத, கரும்பாறை குரிசுவைக்  கூட  எதார்த்தத்தை நாடச்  சொல்லும் காமம்.


கோட்டயம்  புஷ்பநாத்தின் மோகினியைப் போல வரும் மாமியும், மதம் கொண்ட யானையாக  வரும்  மேனத்தியும் காமத்தின் இரு முகங்கள்.  சிறு வயதில், பட்டினியால் அலைந்தவள் மாமி. செல்வ செழிப்பிற்கு பின், அவள் கொள்ளும் பசி அவளிடம் அதுவரை உறைந்திருந்த காமத்தின் பசி. காண்பவர்கள் எல்லோரிடமும் துளி காமத்தினை விட்டுச் செல்லும் மேனத்தி, ஊரில் வாழும் மாமியின் மலை வடிவம் . நாவலில் வரும் பெரும்பாலான ஆண்கள், பெண்களுக்கு பயந்தவர்களாவோ, அவர்களால் அடக்கி ஆளப்படுபவர்களாவோ, கட்டுப்பட்டவர்களவோ  உள்ளனர். மாமா, மாமியைத் திருமணம் செய்து, பின்பு வந்த பத்து வருடங்களில் அவளின் காலடியில் கட்டுண்டு கிடக்கிறார். மாமாவின் மலைவடிவமான எஞ்சினியர் மேனன், மேனத்தியின் சொல்லுக்கு மறுசொல் கூறாதவராக வருகிறார். மாமியிடம் கொண்ட காமத்தில் சலித்தோ அல்லது அதற்கு ஈடு கொடுக்க பயந்தோ, ரெசாலத்தின் மனைவியிடம் மாமா தொடர்பு கொள்கிறார்.  மலையில் எஞ்சினியர் மேனன், மேனத்தியை விட்டு, ஏதோ ஒரு பங்களாவில் பெண்களுடன் கூடுவது இதே காரணத்தில் தான். இந்த இருவருக்கும் காமம் இங்கே ஒரு இளைப்பாறுதலின் ஒரு வழி. கிரியின் அப்பா, அவனின் அம்மாவிற்குக் கட்டுப்படுகிறார். அவருக்குள் இருக்கும் ஆண் வெளிவரும் நேரம், அவர் தன்னை உணராத  குடிபோதையில் இருக்கும் போதும் மட்டுமே. அந்த நேரத்தில்  கிரியின் அம்மா, காட்டும் காதல் அவரிடம் வெளிப்படும் ஆணை ரசிப்பதால் தான்.


மாறாக, குழந்தையில் இருந்து அம்மாவின் கண்டிப்பு கலந்த காதலை மட்டுமே கண்ட கிரி,  அவன் ஆணாக மாறிய பின்பு, அவளிடம் வரும் மாற்றத்தைக் கண்டு திடுக்கிடுகிறான். அம்மாவின் காதல், எச்சரிக்கை கலந்த அன்பாக மாறுகிறது. மலையில் கண்ட நீலியுடன் கிரி கொள்ளும் காதல், ஒரு வகையில் அவன் அம்மாவிடம் இனி காணவே முடியாத  காதலின் மறுவடிவம். இந்த நேர்-எதிர் என்ற பாகுபாடு இல்லாமல், சமநிலையுடன் வரும் இரு எதார்த்த பாத்திரங்கள்- குட்டப்பனும், சினேகம்மையும். சினேகம்மை குட்டப்பனின் பெண் வடிவம். அவர்களுக்கு இடையே  ஏற்படும் உறவு, தூய காமத்தின் ஒருங்கிணைந்த நிலை மட்டுமே. கிரிதரன் தன் வாழ்க்கை முழுக்க, பெண்களால் அலைக்கழிக்கப்படுகிறான். அவனது வாழ்க்கை பெண்களால் கட்டமைக்கப் பட்டு, அவர்களாலேயே அழிக்கப்படும் வாழ்க்கை. விஷக் கந்தகம் அம்மாவின் அன்பில் வளர்ந்து, கருஞ்சிலை  நீலியின் காதலில் விழுந்து,  காமப் பிடாரி மேனத்தியிடம் தன்னை இழந்து, காம யட்சி மாமியின் மார்புச்சரிவுகளில்  இருந்து தப்பி, கருங்குரங்கு வேணியின் மாறாத முகச்சுளிப்பில்  வாழ விதிக்கப்படுகிறான். முடிவில் கனவு, காதல் என்ற இந்த இரண்டு முகங்களில் இருந்து, காமம் மட்டும் தொடரும் எதார்த்தம் என்ற முகத்தை நோக்கிச் சென்ற அவனின் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிய நாவல் என்றே புரிந்து கொள்கிறேன்.


நாவலைப் படிக்க ஆரம்பித்த நான் முதலில் கவனித்தது அதன் நடையை. சொல்லும் காட்சியை, உணர்வை  துல்லியமாக சொல்ல தேவையான சொற்களால் அமைந்த சிறு சிறு  சொற்றொடர்கள்  கொண்ட நடை. அதே நேரத்தில் ஒரு வித அமைதியுடன்,அவ்வப்போது பொங்கி எழுந்தபடி செல்லும்  எளிய நடை. காட்டையும், காமத்தையும், மனதையும் விலாவாரியாகவும்,  பெரும் சம்பவங்களை போகிறபோக்கிலும் சொல்லிச் செல்லும் கவித்துவமான நடை. ஒரு மையத்தை எடுத்துக்கொண்டு, அதை நாவலாக கற்பனையாலும், சேகரிக்கப்பட்ட தகவல்களாலும்  முழுக்க முழுக்க  வளர்த்து எடுக்காமல், எழுத்தாளன் தான் அனுபவித்த, உணர்ந்த, கேட்ட  சுய வாழ்வின் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட பகுதியை  அதில் சேர்க்கும் போது, அந்த படைப்பு  வலிமை  பெறுகிறது.


உதாரணமாக, நாவலில்   பரவிக் கிடக்கும் காடு பற்றிய அக, புற வர்ணனைகள்  காட்டுக்குள் சாதாரணமாக சென்று வந்த ஒருவருக்கு புதிதாகவே  இருக்கும்.  காடு சிறிதளவாவது தலைக்கேறிய ஒருவரால் மட்டுமே அவ்வாறான  வர்ணனையை எழுத முடியும். அதன் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியும். மேலும் 'சிலந்தி வலைப் பின்னல்களில் மென்மையான குகைகள் ' போன்ற வர்ணனைகளில் இருக்கும் ஒரு குழந்தைப் பார்வை,காட்டை நாம் பார்க்கும் பார்வையை மாற்றிக்கொள்ள தூண்டவும் செய்கிறது. 'ஊமைச் செந்நாய்', 'படுகை' போன்ற சிறுகதைகளில் காடு பற்றிய வர்ணனைகளை படித்து இருந்தாலும், 'அத்தகைய வெயில் முன்பெல்லாம் சமவெளிகளில் மட்டுமே அடிக்கும்', 'காட்டை கண்டவனால் காட்டை விடமுடியாது', 'காடு ஒவ்வொரு கணமும் புதிதாக இருக்கக்கூடிய ஓர் இடம்' போன்ற  'காட்டின்' வர்ணனைகள் மனதில் திடுக்கிடலையும், எரிச்சலையும், கசப்பையும் தூண்டுகிறது. நான் மட்டுமே கவனித்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்ட காட்டின் நுட்பங்களைக் கண்டதன்  திடுக்கிடல் அது. யாரும் ஏறாத  மலைச்சிகரத்தில் ஏறி, பெருமிதம் கொள்ளும் போது, அங்கே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ஒருவனைக் கண்ட திடுக்கிடல் அது.  அப்படியே கவனித்திருந்தாலும், இந்த நுட்பங்களைத் தாண்டி, புதிதாக காட்டைக் காண  வேண்டியதன் எரிச்சல் அது. மனதில் சேமித்து வைக்கப்பட்ட உவமைகள் பல காலியாவதன் கசப்பு அது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், காடு கிளர்த்தும் காம, பெண் நினைவுகளை பற்றிய வரி,  ஆழ்மனதின் ஒரு துளியைத் தொட்டு எழுதியது போன்ற வரி.

காட்டைப் பற்றி எழுதியதிலேயே சிறந்த வரி  என்று நான் நினைப்பது  – 'சாலை என்பது மனிதன் காட்டை உரிமை கொள்ளச் செய்யும் முதல் முயற்சி'  என்ற வரி. காட்டில் புகுந்த சாலை,  நம் அந்தரங்கத்தில் புகுந்த அந்நியன் ஒருவன் போல. அதன் பிறகு காடு, பழைய காடாகவும் இருக்க போவதில்லை. நாம், பழைய மனிதனாகவும் இருக்கப்போவதில்லை. இதைப்  போல பல நுட்பமான வரிகள் நாவலெங்கும் பரவிக் கிடக்கிறது. காட்டைப் போலவே, அதில் வாழும் உயிர்களைப் பற்றிக் கூறும் போதும், அதே நுட்பமான வரிகள். தேவாங்கு காட்டில் வாழும் சிறு விலங்கு.  ஊரில் நரிக் குறவர் ஒருவர் அதைக் கொண்டு வந்தபோது கண்டதாக நினைவு. அதன் பிறகு சில புகைப்படங்களில் மட்டுமே பார்த்த, மங்கலான நினைவு. நாவலில் வரும் மூன்றே வரிகளில், அந்த விலங்கு உயிருடன் எழுந்து வருகிறது.


'தேவாங்கின் அசைவுகளில் ஆயிரம் வயதான அலுப்பு, சலிப்பு' – என்ற முதல்வரியில்  அதன் அசைவுகளும், 'தேவாங்கு 'நான் வேற என்னத்த கண்டேன்' என்பது போல பாவமாய்த்  திரும்பிப் பார்த்தது" – என்ற வரியில் அதன்  எப்போதும் சோர்வான கண்களும், தொடர்ந்து வரும் உரையாடலில், குட்டப்பன் ரெசாலத்திடம் சொல்வதை போல இயல்பாக வரும், 'ஆனை சவிட்டிப் போட்ட குட்டிக்குரங்கு' என்ற வரியில் அந்த மொத்த விலங்கும் உயிர் பெற்று எழுகிறது. முதல் இரண்டு வரிகளும்  ஒரு தொடர் உரையாடலின் போது, மனதில் எழும் வர்ணனைகள். கடைசி வரி, உரையாடலின் ஒரு அங்கமாக வந்து முந்திய இரண்டையும் பூர்த்தி செய்கிறது. தேவாங்கை இதுவரை பார்த்திராதவர்கள் கூட, கடைசி வரியில் அந்த விலங்கை அடையாளம் கண்டுகொள்ள முடியும். ஒரு வேளை இதைத்தான், 'எழுத்தாளனையும் மீறி நிகழும் எழுத்து' என்கிறார்கள் போலும்.


சரி, காட்டை விடுத்து, பெண்களிடம் போகும் போதும்,  'இழைத்த மரத்தில் தெரியும் சரும வரிகள்' போன்ற அதே நுட்பமான  வர்ணனைகள். குறிஞ்சி நிலமான மலையைப் பற்றிய பல சங்கப்பாடல் வரிகள் – கபிலராலும், பரணராலும் பாடப்பட்ட வரிகள் – நாவலில் இறைந்து கிடக்கின்றன. படிக்க, படிக்கத் தூண்டும் அழகிய வரிகள். ஆனாலும் ஒரு வருத்தம். பல பாடல் வரிகளின்  ஆழம் புரியவில்லை என்பதால் அவை வருவதின் சூழலும் புரியவில்லை. தமிழ் ஒழுங்காகக் கற்காததின் விளைவு. ஆனால் 'சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப் புனக்கிளி கடியும் பூங்கட் பேதை'  என்று தொடங்கும் பாடலின் வரிகள்  மட்டும் புரிகிறது. பூத்தொடுத்துக் கொண்டே, கிளிவிரட்டும் அந்தப் பெண்ணை என் வாழ்வில் இதுவரையிலும் காணாது, பெருமூச்சு விடுவதால் என்னவோ நன்றாகப் புரிகிறது போலும். சங்கப் பாடல்களைப் படித்தபின் அந்த சூழலைப் புரிந்து கொள்ளவேண்டும். ஆனால் நாவலின் சம்பவங்களில், சங்கப்பாடல்களின் உரிப்பொருள்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.  நீலியின் மறைவுக்குப் பின், கிரி அவள் நினைவுகளில் ஏங்குவதெல்லாம் பிரிதலும், பிரிதல் நிமித்தமும் கூடிய பாலைத்திணை என்று புரிகிறது.


நாவலின் வடிவம் என்று பார்த்தால், மார்கழியில் வாசலில் போடப்படும் புள்ளிக் கோலம் போன்றது. குறுக்கும் நெடுக்குமாக புள்ளிகளின் வழியே, மாவுடன் பரவும் கை, நிமிர்ந்து எழும்போது , உருவாகி இருக்கும் முழுக் கோலம் போல. சம்பவங்கள் முன்னும் பின்னும் வெட்டி இழுக்கப்பட்டு, ஒரே மூச்சில் எழுதப்பட்டது போல உள்ளது.  நிகழ்வுகள் வந்து இணையும் புள்ளிகள்  அவ்வளவு இயல்பாக உள்ளது. தேர்ந்த தச்சனின் கைத்திறன் போலும்! கச்சிதமாக உள்ளது. நாவலுக்குக் கச்சிதம் தேவை  தானோ?


நாவலின் மற்றொரு பலமான அம்சமாக இருப்பது  உரையாடலில் இருக்கும் அங்கதமும், வட்டார வழக்கின்(மேற்கு கன்னியாகுமரி?)  சரளமும். 'ஏன்வே மோங்குதீரு? ', 'நீக்கம்போ… குருவோ .', 'படு கேமன்', 'கண்ணானை ' போன்ற உரையாடல்கள் எனக்குப் புரியவில்லை என்றாலும், வட்டார வழக்கு படு சரளமாகவே இருப்பதாகவே நினைக்கிறேன்.  கூடவே  மிளா, அயனி, காந்தாரி போன்ற புரியாத உதிரிச் சொற்கள், காட்டில் பூக்கும் பெயர் தெரியாப் பல வண்ண மலர்களின் பட்டியல் தருகிறது. (வட்டார வழக்குச் சொற்களுக்கான பொருள் இணைப்பைத் தராததற்கு நன்றி).


நாவலின் நெருடலாக,  என் முதல் வாசிப்பில் உணர்ந்தது – சி.வி. ராமன் பிள்ளை,சங்ஙம்புழா, போத்தியின் ஜமா என வரும்போது கதை கூறுவது கிரிதரனா, இல்லை ஜெயமோகனா  என்ற  சந்தேகம். இது ஜெயமோகன் அவருடைய கட்டுரைகளில் சொன்ன  மனிதர்களை மீண்டும் இங்கேயும் பார்ப்பதால் ஏற்படுவது. இதனால்  வாசிப்புத் தொடர்ச்சி அறுபடுவதால் சிறு சங்கடம் எழுகிறது.


இரண்டாம் வாசிப்பில் சில இடங்களில் பேசுவது கதாபாத்திரங்களா இல்லை  ஜெயமோகனா என்ற சந்தேகம். அந்த கதாபாத்திரங்களின்  போகிறபோக்கில் வந்து விழும்  சில சரளமான,  உரையாடல் வரிகளில் இருக்கும் ஆழம், அவர்களின் முதிர்ச்சி ஜெயமோகனுடையதோ என்ற சந்தேகம். இது என் வாசிப்பின் கோளாறா இல்லை ஒரு நாவலை எவ்வாறு புரிந்து படிக்க வேண்டும் என்று தெரியாததன் கோளாறா  என்று தெரியவில்லை. ஆனால் என் வாசிப்பில் உணர்ந்த நிஜ உணர்வுகள்.


காடு நாவலைப் படிக்க விரும்பும் எவருக்கும், வாசித்த வாசகனாக சொல்ல விரும்புவது என்னவென்றால்,  தயவு செய்து ஜெயமோகனின் கட்டுரைகள், நாவலின் முன்னுரை, பின்னட்டை வாசகம் என எதையும் படிக்காதீர்கள். மெதுவாக பின்னர் படித்துக் கொள்ளுங்கள்.  நேராக கதைக்குள் சென்று விடுங்கள். அங்கே உங்களுக்கென ஒரு உலகம் காத்திருக்கிறது. அங்கே உங்களை ஒப்படைத்து விடுங்கள்.


நாவலைப் படித்த முடித்த பின்பு எதிலும் நம்பிக்கை அற்ற தன்மை மனதில் ஏற்பட்டது.    "என்ன மயிறு வாழ்க்கை.. இவ்வளதுதான் .. ஒண்ணும் பெருசா புடுங்க முடியாது" என்ற ஒரு எண்ணம். ஐந்து வருடங்களுக்கு முன்னர் படித்து இருந்தால், வேட்டிக்கும், ஜம்பருக்கும் இடையே பிதுங்கி நிற்கும் சிவந்த சதை போல, நீலிக்கும், மாமிக்கும் இடையில் மனம் பிதுங்கி இருந்திருக்கும். இப்போது கிரியின் அழிந்த கனவும், வாழ்ந்த வாழ்வும் பெரிதாகத் தெரிகிறது. இன்னும் பத்து வருடங்கள் கழித்து  மீண்டும் படித்தால் புதிதாக என்ன தெரிந்து கொள்ளப் போகிறேன் என்று தெரியவில்லை.


ஆத்தா அடிக்கடி சொல்வாள் – "பதினாலு வருஷம் வாழ்ந்தவனும்  கிடையாது…பதினாலு வருசம் வீழ்ந்தவனும் கிடையாது". அவள் எந்த  அர்த்தத்தில் சொல்கிறாள் என்று அப்போது புரியவில்லை. கிரி பிற்கால வாழ்வில் சிறுகச், சிறுக காசை சேர்த்து, அவன் பிள்ளைகள் அதில் படித்து, வாழ்வில் சொல்லிக்கொள்வது போல வருகிறார்கள். பட்டமரத்தில் துளிர் விடுவது போல.  அந்த அர்த்தத்தை இப்போது புரிந்து கொள்கிறேன். கிரியாவது பிற்பகுதி வாழ்வில் ஓரளவு முன்னேறுகிறான். ஆனால் கிரி  வாழும் வாழ்க்கையின் பிம்பமாய் வாழும் அண்ணாச்சியின் வாழ்க்கை பின்னர் என்ன ஆனதென்று தெரியவில்லை. யார் கண்டது  அங்கே இன்னொரு நாவல் நிகழ்ந்து முடிந்திருக்கலாம்.


வாழ்வின் பல தோல்விகளுக்கு பிறகு, அய்யரைக் கடைசியாக வந்து சந்திக்கும் கிரிதரன்  அவரிடம் 'நான் என்ன தப்பு செய்தேன்னு நீங்க நினைக்கிறீங்க…' என்று கேட்கிறான். 'எல்லோரும் செய்ற தப்புதான் …அகங்காரம் … உன்னைப்பத்தியே நினைக்கிறது… மத்தவங்க உன்னை பேனனும்னு நினைக்கிறது…' என்று சொல்கிறார். கூடவே அவர் அந்தத் தோல்வியை எதிர்பார்த்தவர் போலத் தன்னைக் காட்டிக்கொள்கிறார். உண்மையில் அய்யருக்கு, கிரிதரனின் தோல்வி அவன் மலைக்கு வந்த நாளே தெரிந்து விட்டதோ?


நாம் எல்லோரும் எப்போதும் நம்மைப் பற்றிய சிந்தனையில் இருக்கிறோம். நம் வாழ்க்கை, நம் எதிர்காலம் என்ற சட்டகத்திற்குள் தான்.எப்போதும் சிந்திக்கிறோம். வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்ற பயத்தில் தான் வாழ்கிறோம். உண்மையில் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என்பது என்ன? கழுத்தில் போட்ட மாலை, அது இருக்கும் வரை கனக்கும் தருணம் போன்றது தானா?


சில சமயங்களில் யோசிக்கும் போது, போத்தி சொல்வது போல 'மனுசன சாமிகள் வட்டா போட்டு விளையாடுதுவ', அதில் வெற்றி, தோல்விகள் அவ்வப்போது வந்து செல்லும் நிகழ்வுகள் என்று தோன்றுகிறது. இருக்கும் கணம் மட்டுமே வாழ்க்கை. அதில் இருந்தபடியே, எல்லாவற்றையும் இழப்பதே வாழ்க்கை என்று தோன்றுகிறது. ஆனாலும் ?????….ஆனாலும் ….?????


நாவலைப் படித்து முடித்த, சில நாட்களுக்குப் பிறகு  சில வருடங்களுக்கு முன்பு படித்த, கண்டராதித்தனின் கவிதை ஒன்று, யதேச்சையாக நினைவில் வந்தது.


" துக்கமாகவும், கண்ணீருடனும்

கடந்து விட்ட நேற்றை

ஒரு நரி கவ்விப் போனதைப் பார்த்தும்

பார்க்காதது போலிருந்து விட்டேன்


கொண்டைத் தலையுடன்

கண்களை உருட்டியுருட்டி

நமக்கெல்லாம்

உயரேயொரு

கிளையிலமர்ந்து

பசியாற்றும் பட்சியின்

அலகிலிருந்து உதிர்ந்தது

இந்த நாள்


நேற்றை

இன்றை

கடப்பது போல

நாளையை கடந்தும்

பறந்து கொண்டிருக்கிறது

ஒரு பறவை"


ஆம், அந்தப் பறவைதான் 'நான் நான் ' என்கிறது. பின்னர் 'ஏன்', 'ஏன்' என்கிறது.


நாவலை முடித்த, இந்த ஆறு மாதங்களாக, மீண்டும் மீண்டும் ஒரு கேள்வி எழுகிறது. அது மனதில் இடைவிடாது தொக்கி நிற்கிறது. படிச்ச தம்புரானாலும் சொல்ல முடியுமா என்று சந்தேகிக்கும் கேள்விதான். இருந்தாலும்  யாராவது பதில் சொல்ல முடியுமா? உண்மையில் காமம், சுயநலம் தவிர மனித உறவுகளுக்கு வேற ஏதாவது அடிப்படை உண்டா?


பி.கு:

1. நாவலைப் பற்றிய என் எண்ணங்களை,எழுதத்தூண்டி, ஊக்கப்படுத்திய 'பராக்கா' அரவிந்திற்கு நன்றி.குரங்குத்தவத்தின் கட்டுரைகள் எனக்கு ஒரு ஊக்கமூட்டி.

2. இதை விரித்து இன்னும் தெளிவான மொழியில், ஒரு கட்டுரையாக எழுத வேண்டும் என்றே எழுதிய பிறகு எண்ணுகிறேன். ஆனால் நேரம் கிடைக்காததால் அதற்கான உழைப்பை அளிக்கமுடியாது. குறைகள் கண்டால் சொல்லுங்கள். திருத்திக் கொள்கிறேன்.


-இளமாறன்


 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 08, 2011 11:30

September 7, 2011

ஜாமீன் சாஹேப்-2

[தொடர்ச்சி]


[image error]


-4-


தனது உறவினரின் மகள் திருமணத்துக்காக ஒருமுறை தயானந்தா,சாகர் வரை செல்ல வேண்டியிருந்தது.அந்த சமயத்தில் மீனாட்சி என்ற பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் அவள் கணவனைக் கைது செய்திருந்தது.மீனாட்சியின் தாய்,தயானந்தாவின் அம்மாவுக்கு தூரத்து உறவினள்;அதை விட அவர்கள் முன்பு அண்டை வீட்டுக்காரர்களாக இருந்தவர்கள் என்பது,இன்னும் கூட முக்கியமானது.அந்தக் குடும்பத்திலிருந்த நான்கு பெண்களில் மீனாட்சியே இளையவள்.அவளுடைய தந்தை வாசுதேவ்,ஒரு மளிகைக்கடை வைத்திருந்தார்.முதல் மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொடுத்த பயங்கரமான அனுபவத்திற்குப் பிறகும்,மெட்ரிக் தேர்வை எழுதி முடிக்கும் வரை மீனாட்சியை அவர் விட்டு வைத்திருந்ததே பெரும் சாதனைதான்.அதற்குப் பிறகு மீனாட்சி,ஷீனாவுக்கு வாழ்க்கைப்பட நேர்ந்தது.


ஷீனாவின் குடும்பம் விறகு விற்பனை செய்யும் தொழிலைப் பிரதானமாகக் கொண்டிருந்தது.ஊரறிந்த பல வினோதமான பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்த அந்தக் குடும்பத்தின் பரம்பரைப் பண்புகளை அப்படியே சுவீகரித்துக் கொண்டிருந்ததோடு அதையெல்லாம் விடக்கூட மோசமானவனாக இருந்தான் ஷீனா.தீய குணங்களின் மொத்த உருவமாகவே இருந்த ஷீனாவிடம் சுய கௌரவம் என்பது கொஞ்சமும் இல்லை.யாராவது தனக்குச் சாபம் விட்டால் கூட அதை அவன் சங்கீதமாகத்தான் எடுத்துக் கொள்வான்.இப்படிப்பட்ட ஒரு மனிதனைத் திருமணம் செய்து கொள்வதை விட இறந்து போய்விடுவது எவ்வளவோ மேலானது என்றுதான் நினைத்தாள் மீனாட்சி.ஆனால் தன்னுடைய பிறந்த வீட்டுக்குத் தான் ஒரு சுமையாகி விடக் கூடாது என்ற எண்ணம் அவளுக்குள் அழுத்தமாக ஊறிப் போயிருந்தது.;தன் தந்தையின் நிராதரவான நிலை அவளுக்குக் கண்கூடாகத் தெரிந்தது.மீனாட்சியின் ஜாதகத்தைப் பையில் வைத்தபடி அவர் வெளியே கிளம்பும்போதெல்லாம் தனது கையாலாகத நிலை குறித்து அவர் புலம்புவதைப் போலவே அவளுக்குத் தோன்றும்.ஷீனாவின் குடும்பத்திலிருந்து அவளைப் பெண் கேட்டு வந்தபோது அதை மறுத்துப் பேசும் நிலையில் அவள் இல்லாததற்குக் காரணம் அதுதான்.


''ஜனங்க அப்படித்தான்…நூறையும் சொல்லுவாங்க! நீதான் தைரியமா இருக்கணும்!ஊரார் பேசறதையெல்லாம் காதிலே போட்டுக்காமெ ஒதுக்கித் தள்ளிடணும்! எல்லா பாரத்தையும் சாமி மேல போடு. எது நிஜம்கிறது அவருக்குத்தான் தெரியும்'' என்று கண்ணீர் மல்கிய கண்களோடு அவளது குடும்பம் அவளைச் சமாதானப்படுத்த முயற்சித்தது.ஷீனாவைப் போன்ற ஒரு ஆளைக் கல்யாணம் செய்து கொள்ள யார்தான் வரப் போகிறார்களோ என்று அதுநாள் வரை பேசி வந்த ஊர்,இப்போது அவனுக்கு வாய்த்திருக்கும் அதிருஷ்டத்தைப் பற்றியும்,மீனாட்சிக்கு ஏற்பட்டுப் போன துர்ப்பாக்கியம் குறித்தும் பேசத் தொடங்கியிருந்தது.


ஷீனா,தன் மனைவியை எப்படியெல்லாம் சித்திரவதை செய்தான் என்பதைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.ஒரு சில நாட்கள் அவன் தன் மனைவிக்கு விசுவாசமாக-அவளுடன் ஒட்டிக் கொண்டிருந்தான்.அதற்குப் பிறகு அவள் எதைச் செய்தாலும் அது பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு குற்றமாகவே அவனுக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டது.ஒரு நாள் அவள் வைத்திருந்த குழம்பு மிகவும் காரமாக இருந்ததால்,கொல்லைப்பக்கம் முழுக்க அவளைத் துரத்தித் துரத்தி விரட்டியபடி அதை அவள் தலையில் அப்படியே ஊற்றிவிடக் கூட அவன் முயன்றிருக்கிறான்.அவளை மிக மோசமாகப் போட்டு அடிப்பான் அவன்;அதில் அவள் உடல் முழுவதும் கடுமையான இரத்தக் காயங்கள் ஏற்பட்டிருந்தன.இரவு நேரங்களில் அவன் மிகவும் தாமதமாகவே வீடு திரும்புவான்;சில சமயங்களில் வராமலும் கூட இருந்து விடுவான்.மிகவும் கொச்சையான வார்த்தைகளால் அவளை ஆபாசமாகத் திட்டுவான்.


ஒரு நாள் அவளைக் கொன்றுவிடப்போவதாக அவன் மிரட்டியபோது பயந்து போன மீனாட்சி,ஒரு அறைக்குள் சென்று அதைப் பூட்டிக் கொண்டாள்.அவள் மட்டும் வெளியே வரவில்லையென்றால் குழந்தைகளின் கழுத்தை நெரித்து விடப் போவதாகப் பயமுறுத்தினான் அவன்.குடி போதையில் இருக்கும்போது எப்படிப்பட்ட கொடூரமான செயலுக்கும் அவன் துணிந்து விடக் கூடும் என்று பயந்து போன மீனாட்சி,அறையை விட்டு வெளியே வர,விறகுக் கட்டை ஒன்றால் அவளைக் கடுமையாகத் தாக்கி விட்டான் ஷீனா.இரத்தம் வழிந்து கொண்டிருந்த நிலையிலேயே தன் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு நேரே போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற மீனாட்சி,தன் கணவன் மீது அங்கே ஒரு புகாரைப் பதிவு செய்தாள்.இரவு நேரத்தில்,அப்படிப்பட்ட ஒரு கோலத்தில் குழந்தைகளுடன் வந்து நின்ற அவளது நிலையைக் கண்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் உள்ளம் இரக்கத்தால் கசிந்தது.ரமாநாயக் என்ற கான்ஸ்டபிளை அழைத்து ஷீனாவின் முந்தைய குற்றப் பின்னணிகள் குறித்து விசாரித்தார் அவர்.ஷீனாவின் கேவலமான கடந்தகால நடவடிக்கைகளைப் பற்றி நாயக் விவரிக்கத் தொடங்கியதுமே அவன் மீது உடனடியாகப் புகாரைப் பதிவு செய்த சப் இன்ஸ்பெக்டர்,ஷீனாவின் வீட்டுக்கு விரைந்து சென்று ,அங்கே குறட்டை விட்டபடி தூங்கிக் கொண்டிருந்த அவனைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துக் கொண்டு வந்தார்.அங்கே கிடைத்த அடி,உதை இவற்றால் அவனுள் ஏறியிருந்த குடிபோதை முற்றிலுமாய்த் தெளிந்து போய் விட்டது.ஷீனா லாக்-அப்பில் அடைக்கப்பட்டான்.கலக்கமடைந்தவளாய் நிலை குலைந்து போயிருந்த மீனாட்சி நேராகத் தன் தந்தை வீட்டுக்குச் சென்றாள்.அங்கேயும் தனக்கு இடமில்லாமல் போனால்,குழந்தைகளோடு கிணற்றில் குதித்துவிடப் போவதாக அறிவித்தாள் அவள். நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட வாசுதேவா, தன் மகள் அந்த வீட்டில் தங்கியிருப்பதற்கு ஒத்துக் கொண்டார்.


ஷீனா கைது செய்யப்பட்ட தகவல்,மறுநாளே ஊர் முழுவதும் பரவி விட்டது.ஆனாலும் அவனை விடுவிக்க யாரும் முன் வரவில்லை.ஜாமீன் சாஹேபும் கூட அந்த சமயம் ஊரில் இல்லை.மதியம் வரை எதுவுமே சாப்பிடாமல் சமாளித்துக் கொண்டிருந்த ஷீனா, பிறகு பசி தாங்காமல் தனக்கு ஏதாவது சாப்பிடத் தருமாறு போலீஸ் எஸ் ஐயிடம் கேட்டான்;அவரோ அவன் மீது வசை மாரி பொழிந்தபடி அடி வெளுக்கத் தொடங்கி விட்டார்;நரக வேதனை இன்னதென்பதை அப்போது உணர்ந்தான் ஷீனா.போலீஸ் எஸ் ஐ வெளியே கிளம்பிச் செல்லும் வரை காத்திருந்த ஷீனா,பிறகு ஒரு கான்ஸ்டபிளை அழைத்து எப்படியாவது ஜாமீன் சாஹேபை அழைத்துக் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டான்.கான்ஸ்டபிளிடம் அவன் ஒரு நூறு ரூபாய் நோட்டையும் நீட்டிவிட்டதால்,அதற்கு ஆசைப்பட்டுக் கொண்டு ஷீனாவத் தேடிச் சென்றான் அந்தப் போலீஸ்காரன்.சாகருக்குப் போய்விட்டு அப்போதுதான் திரும்பிவந்து கொண்டிருந்த தயானந்தா,தன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தான்;வழியிலேயே அவனைப் பார்த்து விட்ட கான்ஸ்டபிள்,நடந்த எல்லாவற்றையும் அவனிடம் விவரித்தான்.இந்த வழக்கைப் பொறுத்த வரை,போலீஸ் எஸ் ஐ இதில் தீவிரமான அக்கறை காட்டி வருவதையும்,மீனாட்சியின் உடல்நிலை பற்றிய மருத்துவ அறிக்கையைக் கூட அவர் வாங்கி வைத்திருப்பதையும் தெரிவித்தான் அவன்.ஷீனாவின் மிருகத்தனமான நடவடிக்கைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டு போகும்போது- மீனாட்சியின் மீது எதிர்பாராமல் ஏற்பட்டு விட்ட இரக்க உணர்வால் கொஞ்சம் மிகையாகவே அவற்றை வருணித்து விட்டான் அவன்.இந்த வழக்கு சற்று சிக்கலானதுதான் என்று தனக்குள் நினைத்துக் கொண்டாலும்,அதனுடன் கூடவே எஸ் ஐ கொண்டிருக்கும் இரக்கத்தை எப்படி அகற்றலாம் என்பதற்கான வழிமுறைகள் பலவற்றையும் யோசிக்கத் தொடங்கி விட்டிருந்தான் தயானந்தா.நேரே போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற அவன்,தன் அறிவுக் கூர்மையின் ஒவ்வொரு அங்குலத்தையும்,மேலும் பல கபடமான தந்திர உத்திகளையும் கையாண்டு ஷீனாவை விடுவித்து விட்டான்.அவனுக்கு ஷீனாவோடு மூவாயிரம் ரூபாய்க்கான பேரம் படிந்திருந்தது.


சற்றும் எதிர்பாராதபடி தன் பக்கம் வீசிய அதிருஷ்டக் காற்றால் பூரித்துப் போனவனாய் வீட்டுக்குள் நுழைந்த தயானந்தாவை மீனாட்சியின் நிலை குறித்த ஆவேசக் குமுறலோடு முதலில் எதிர்கொண்டாள் அவனது தாய்.


''அப்படிப்பட்ட மோசமான ஒரு ஆளை விடுதலை செய்யற காரியத்திலே உன்னாலே கூடத் துணிஞ்சு இறங்க முடியாது'' என்பதையும் தன் பேச்சில் கூடவே சேர்த்துக் கொண்டாள் அவள்.


மிகப் பெரும் வெற்றியடைந்தவனைப் போலத் தன் கைகளைத் தட்டி ஆரவாரித்த தயானந்தா,


''அவனைத்தான் நான் ஏற்கனவே வெளியே கொண்டு வந்தாச்சே?இந்த தயானந்தாவைத் தவிர அவனை விடுவிக்கிற துணிச்சல் ஊரிலே வேற எவனுக்கு இருக்கு?''


என்று அவளுக்குப் பதிலளித்தான்.


அதைக் கேட்டதும் -இதுநாள்வரை அவன் அவளிடம் கண்டிராத கட்டுக்கடங்காத ஆக்ரோஷத்தோடும்,கோபத்தோடும் சீறிப் பாய்ந்தாள் அவள்.


''அப்படீன்னா அதைத்தான் மொதல் வேலையாச் செஞ்சுட்டு வந்திருக்கியா நீ? போயும் போயும் அந்தக் கேடு கெட்ட மிருகத்தை…அந்தக் குடும்பத்துக்கே ஒரு சாபமா இருக்கிற அவனையா நீ விடுவிச்சிட்டு வந்திருக்கே?இந்த ஊரிலே இருக்கிற ஜனங்க எல்லாம் பணத்துக்கு மயங்கிடாதவங்க;நியாயத்துக்குக் கட்டுப்பட்டவங்க…அதனாலேதான் ஷீனாவை விடுதலை செய்யறதுக்கு யாருமே முயற்சி எடுக்கலை..உன்னோட அதிகாரபலத்தைக் காட்டிக்கணும்னா அதுக்கு இதுதான் முதலிலே கெடைச்சதா ஒனக்கு?பணத்துக்காகப் பீயை நக்கறதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்?எல்லாத்தையும் கோர்ட்டே முடிவு பண்ணிக்கட்டும்னு நீ விட்டிருக்கணும்..அந்தப் பாவப்பட்ட மீனாட்சி இருக்காளே…அவளைப் பத்தி நெனச்சுப் பாக்கணும்னு கொஞ்சமாவது ஒனக்குத் தோணிச்சா?''


''சும்மாக் கன்னா பின்னான்னு எதையாவது கத்தாதேம்மா! நான் ஒண்ணும் அப்படி எந்தக் குத்தத்தையும் செஞ்சிடலை. எல்லாத்தையும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டுத்தான் செஞ்சிருக்கேன்..''என்று சற்றுக் குரலை உயர்த்தினான் தயானந்தா.அதைக் கேட்டதும் அவனது அம்மாவின் ஆத்திரம் இன்னும் அதிகமாகி விட,…அவளும் பதிலுக்குக் கத்தினாள்.


''நாறப் பயலே..வெக்கமா இல்லே ஒனக்கு?இவ்வளவுத்தையும் செஞ்சதுமில்லாமே-பண்ணினதெல்லாம் சரின்னு வேற இன்னும் நம்பிக்கிட்டிருக்கே!…ஒருவேளை சட்டப்படி எல்லாம் சரியா இருந்ததுன்னா ஒரு ஆளைக் கொலை பண்ணக் கூடத் தயங்க மாட்டே போலே இருக்கு..! இந்தமாதிரி அருவருப்பான காரியங்களைச் செஞ்சு பொழைக்கறதை விடத் தெருவிலே போய்ப் பிச்சை எடுக்கறது எவ்வளவோ கௌரவமா இருக்கும்..!''


தனது தாயின் மூர்க்கமான ஆவேசம்,இதுவரை அவன் பார்க்காத ஒன்றாக இருப்பதைக் கண்டு,திகைத்துப் போய் நின்றான் தயானந்தா.இன்னும் கொஞ்ச நேரம் வீட்டில் இருந்தால் தொடர்ந்து அவள் தன்னைக் குதறி எடுத்து விடுவாள் என்று அஞ்சியவனாய் அங்கிருந்து வெளியேற முற்பட்டான்.


அவனுடைய மனைவி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.அவன் அங்கிருந்து போவதைப் பார்த்த அவன் அம்மா அவனை நோக்கியபடி கத்தினாள்..


''இப்ப எங்கே போறே நீ ?அந்தப் போலீஸ்காரனோட குண்டியை நக்கறதுக்கா?….இதுக்குள்ளே ஷீனா அந்த மீனாட்சியை அறுத்துக் கூறு போட்டிருப்பான்..''


படிகளில் இறங்கிச் செல்லும்போது அந்த வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் தன் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவதைப் போலிருந்தது தயானந்தாவுக்கு.


-5-


உண்மையில் சொல்லப்போனால் மீனாட்சியைப் பற்றிய ஒரு சின்ன எண்ணம் கூட தயானந்தாவுக்கு ஏற்பட்டிருக்கவில்லை.ஷீனாவைக் குற்றமற்றவனாகக் காட்டுவது எப்படி என்பதிலேயே அவன் தனது கவனம் முழுவதையும் செலுத்தியிருந்தான்.இப்படிப்பட்ட நுட்பமான சிக்கல்கள் வரும்போது-இவ்வாறான வேலைகளில் ஈடுபடும் சமயங்களில்-சில கேள்விகளையும்,பிரச்சினைகளையும் எழுப்பியபடி மனச்சாட்சி போடும் தடைகளை ஒரு பக்கமாக ஒதுக்கித் தள்ளிவிட்டுப் போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான்.சிக்கல்கள் நிறைந்த- வழி தெரியாத ஒரு பாதையில் வளைந்து நெளிந்து சாமர்த்தியமாகச் சென்றுகொண்டிருக்கும்போது,ஒரு கணம் தயங்கி நின்றாலும் கூடத் தடையாகி விடுவதைப் போன்றதுதான் இதுவும்.வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போது- உயரங்களை எட்டுவதற்கான அந்த விளையாட்டின்போது- தனக்குப் பின்னோக்கிப் பார்ப்பதை-அவ்வாறு சிந்திப்பதைக் கூட ஒருவன் விட்டுவிட வேண்டும்;இல்லையென்றால் அவை அவனைக் களைப்படைய வைத்து விடும்.ஒருக்கால் ஷீனாவுக்குப் பதிலாக மீனாட்சிக்கு ஜாமீன் தர வேண்டிய நிலை தயானந்தாவுக்கு ஏற்பட்டிருந்தாலும் கூட – பாலியப் பருவத்தின் ஞாபகங்கள்,சின்னக் குழந்தையாக இருந்தபோது அவளோடு தான் பகிர்ந்து கொண்ட இனிமையான விஷயங்கள் ஆகிய எதுவும் அவனது இதயத்தைத் தொட்டிருக்க வாய்ப்பே இல்லை.


தயானந்தாவும் ,மீனாட்சியும் அண்டை வீட்டுக்காரர்களாக இருந்தபோது ஏழாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில்தான் படித்தார்கள்;பிறகு,அவள் பெண்கள் பள்ளிக்குப் போய் விட்டாள்.இருவரும் ஒன்றாகச் சேர்ந்துதான் பள்ளிக்கூடம் போய் வருவார்கள்.ஸ்கூலுக்குக் கிளம்புவதில் எப்போதுமே சற்றுத் தாமதம் செய்பவன் தயானந்தா.ஆனால் மீனாட்சியோ எப்போதுமே சரியான நேரத்துக்கு வந்து விடுவாள்;தலையில் எண்ணெய் தடவி நன்றாகச் சீவிப் பின்னல் போட்டு ஒரு ரிப்பனால் முடிச்சுப் போட்டபடி வரும் அவள்,வீட்டுக்கு வெளியிலுள்ள நடைபாதையில் அவனுக்காகக் காத்துக் கொண்டிருப்பாள்.அப்போதுதான் தன் புத்தகங்களையெல்லாம் அவசர அவசரமாக ஒழுங்குபடுத்தி அடுக்குவான் தயானந்தா.தன் சிலேட்டுப் பலகையைச் சுத்தமாகத் துடைப்பதற்காக – ஈரமான ஒரு உறியும் பஞ்சை எப்போதும் தன்னுடன் வைத்திருப்பாள் மீனாட்சி.அந்தப் பஞ்சின் மீது தயானந்தாவுக்கு எப்போதுமே ஒரு கண் இருந்தபோதும்,அவளிடம் அதைக் கேட்டுப் பெற முடியாதபடி அவனது அகங்காரம் தடுத்து விடும்.அந்தப் பஞ்சை அவன் பயன்படுத்திக் கொள்ள அவள் அனுமதித்தாலும்,மறக்காமல் அதைத் திரும்ப வாங்கிக் கொண்டு விடுவாள் அவள்.அதை எப்படியாவது திருடி விட வேண்டும் என்ற தூண்டுதல் அவனிடம் இருந்தாலும்,அதைப் பள்ளிக்கூடத்தில் வைத்துப் பயன்படுத்த முடியாது என்ற எண்ணம் அப்படிச் செய்ய முடியாதபடி அவனைத் தடுத்து விட்டது.


அவனுடைய அம்மா, தங்களிடம் மீதமாகிப் போகும் சாப்பாட்டை மீனாட்சி வீட்டுக்கு அவனிடம்தான் கொடுத்தனுப்புவாள்.அவ்வாறான சந்தர்ப்பங்களில் அந்தப் பஞ்சை அவளிடம் எப்படியாவது கேட்டு வாங்கி விட வேண்டுமென்ற ஆசை அவனுக்குள் இருந்தாலும்,அவன் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு விடுவான்.


மாலை நேரங்களில் ஆலமரத்தடியிலிருந்த மேடையில் ஊர்ப்பெண்களெல்லாம் ஒன்று கூடிப் பேசிக் கொண்டிருப்பார்கள். மேடையின் உடைசல்களாகக் கீழே கிடக்கும் விரிசல் விட்ட கல்துண்டுகளை வைத்துக் கொண்டு குழந்தைகளெல்லாம் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.தயானந்தாவும்,மீனாட்சியும் தினமும் அதே இடத்தில் ஒன்றாக விளையாடுவார்கள்.ஆனால் கொஞ்சம் வளர்ந்த பிறகு,தயானந்தா கோலிக் குண்டு விளையாட்டுக்கு மாறி விட்டான்.கோலிக்குண்டு விளையாட்டின் நெளிவு சுளிவுகளை அறிந்த பெரிய பையன்கள்- ஆரம்பத்தில் தயானந்தாவைத் தங்களோடு விளையாடச் சேர்த்துக் கொள்வதில் தயக்கம் காட்டி வந்தார்கள்.நடுவிரலை வில்லைப் போல் வளைத்து வைத்தபடி, கோலிக்குண்டை அடிக்கும் பிற பையன்களின் திறமையால் கவரப்பட்ட தயானந்தா,அவர்கள் செய்வதை ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருப்பான்.அவர்கள் அடிக்கும் கோலிக்குண்டு,தரைக்குப் போய்..அங்கேயிருக்கும் இன்னொரு குண்டை அடித்து மேலே தூக்குவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருப்பான் அவன்.அந்த விளையாட்டில் மிகுந்த ஈடுபாட்டோடு-ஒரே மனதாய்க் கருத்துச் செலுத்திய அவன்,வெகு சீக்கிரத்திலேயே அதில் கை தேர்ந்தவனாக ஆகி விட்டான்.கோலிக் குண்டு விளையாட்டின் மீதான மோகம் வடிந்து போன பிறகு,கில்லி தாண்டும் விளையாட்டை நோக்கி நகர்ந்துவிட்ட தயானந்தாவுக்கு அது ஆர்வமூட்டும் ஒரு புது வரவாயிற்று.அதன் பிறகு,லகோரி,கபடி என்று தொடர்ந்து வேறு பல விளையாட்டுக்களை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தான் அவன்.விளையாட்டுக்கள் மாற மாறப் பழைய நண்பர்கள் ஒரு சிலரே அவனுடன் இருப்பார்கள்.ஒவ்வொரு புது விளையாட்டும் புதிய நண்பர்களைக் கொண்டு வந்து சேர்க்கும்போது பழைய நண்பர்கள் மெள்ள மெள்ளப் பின்னுக்குப் போய் விடுவார்கள்.


கோலி விளையாடத் தொடங்கியதுமே ஆல மரத்தடி மேடைக்குப் போவதை நிறுத்திக் கொண்டு விட்டான் அவன்;ஆனால் மீனாட்சி தொடர்ந்து அங்கேதான் விளையாடிக் கொண்டிருந்தாள். ஒரு முறை தன்னோடு விளையாட வேறு யாரும் அகப்படாததால் தயானந்தாவைத் தன்னோடு விளையாட அழைத்தாள் அவள்.தயானந்தா அதை மறுத்து விட்டதால் அவள் ஏமாற்றமடைந்தாள்.அவளது ஏமாற்றத்தையும்,தனித்து விடப்பட்டது போன்ற உணர்வோடு அவள் திரும்பிச் செல்வதையும் பார்த்து விட்டு அவளோடு விளையாட ஒத்துக் கொண்டான் தயானந்தா.தான் முதலில் அழைத்தபோது அவன் வராததால் இப்போது அவனோடு விளையாட அவளுக்கு விருப்பமில்லை;ஆனாலும் எப்படியோ அவளைச் சமாதானப்படுத்திவிட்டான் தயானந்தா.இருவரும் அமைதியாக விளையாடிக் கொண்டிருந்தனர்.ஆனால்,குச்சிகளைப் பொறுக்கிக் கொண்டு வந்து வீடு கட்டும் அந்த விளையாட்டு,கொஞ்ச நேரத்திலேயே அவனுக்குச் சலித்துப் போய்விட்டது.


இரத்தத்தைச் சுவை பார்த்துப் பழகிப் போன புலியைப் போலக் கோலி விளையாட்டின் இறுதி இலக்கை எப்படி எட்டுவது என்பது பற்றிய சிந்தனையிலேயே நிலை கொள்ளாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தான் தயானந்தா.


[கன்னட மூலம்;விவேக் ஷன்பேக்


ஆங்கில மொழியாக்கம்;என்.மனு சக்ரவர்த்தி,ஷரத் அனந்தமூர்த்தி,


ஆங்கில வழி தமிழாக்கம்;எம்.ஏ.சுசீலா]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 07, 2011 11:35

ஜாமீன் சாஹேப்- [விவேக் ஷன்பேக்]-1

1-



தயானந்தா முதன்முதலாக அளித்த ஜாமீன் அவனுடைய தந்தைக்குத்தான்! அப்போது அவனுக்கு வயது இருபத்திரண்டு. பி.ஏ.,பரீட்சையில் முதல் இரண்டு முயற்சிகளில் தோற்றுப் போனபிறகு,எப்படியாவது அதை முடித்து விட வேண்டும் என்று அவன் போராடிக் கொண்டிருந்த நேரம் அது.


தங்களது விடுமுறை நாட்களில் ஒன்றுகூடும் அவனது பட்டதாரி நண்பர்கள்,தங்களது ஊதிய விகிதம்,கடன் வாங்கும் தகுதி,தங்களுக்குரிய விடுப்புக் காலம்,வீட்டிலிருந்து தள்ளி இருக்கும்போது ஏற்படும் சாப்பாட்டுப் பிரச்சினைகள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது,தானும் ஒரு வேலையைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று தயானந்தாவுக்கும் தோன்றும்.ஒரு சில சிபாரிசுகள்,அறிமுகங்களின் மூலம் வேலை தேடிக் கொள்ளலாம் என்று அவன் செய்த முயற்சிகளுக்கு-அவன் ஒரு பட்டதாரியாக மட்டும் ஆகி விட்டால் நிச்சயமாக உதவி செய்கிறோம் என்ற இனிப்பான வாக்குறுதிகளே பதிலாகக் கிடைத்து வந்தன.


தயானந்தாவின் தந்தை கமலாகர்,ஒரு காலத்தில் கார்வார் முழுவதும் பிரபலமாக இருந்த ஒரு ஜவுளிக் கடையின் உரிமையாளர்.துறைமுகத்துக்குச் செல்லும் வழியில்,பஸ் நிறுத்தத்தை ஒட்டினாற்போல அந்தக் கடை இருந்தது.அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலரும் திருமணத்துக்கான துணிமணிகள் எடுக்க எப்போதும் கமலாகரின் கடைக்கே வந்து குவிந்து கொண்டிருந்தார்கள்.வருடத்துக்கு இரண்டு தடவை ,கமலாகரே பம்பாய் சென்று,தேவையான ஜவுளிகளைத் தேர்ந்தெடுத்து வாங்கி வருவார்;அவற்றுக்கான விலையையும் நிர்ணயம் செய்வார்.மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெவ்வேறு வண்ணக் குடைகள் அங்கே விற்பனைக்கு வந்து விடும்.அந்தக் குடைகள் அங்கே வந்து சேர்ந்ததுமே அவற்றின் உட்புறங்களில் வெள்ளிஜரிகையால் பெயர் பொறிக்கும் தன் வியாபாரத்தைத் தொடங்கி விடுவார் அடுத்த கடைக்காரரான பொற்கொல்லர் மோகன்.


நல்ல முறையில் செழித்து வளர்ந்தபடி,எப்போதும் வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த அந்தக்கடை,கமலாகரின் கண்களுக்கு முன்பாகவே வீழ்ச்சியடையத் தொடங்கியது.காமத் வாத்தியாருடனும் அவரது கூட்டாளிகளுடனும் சேர்ந்து கொண்டு,பணம் வைத்துச் சீட்டாடும் பழக்கத்திற்குக் கமலாகர் ஆட்பட்டுப் போன பிறகு,அந்தக் கடையின் தலையெழுத்தே மாறிப் போக ஆரம்பித்தது.தன் பொறுப்புக்களையெல்லாம் தன் இளைய சகோதரர்களிடம் தள்ளிவிட்ட கமலாகர்,பம்பாய் சென்று துணி வாங்கும் வேலை,கடையின் கணக்கு வழக்குப் பார்ப்பது என்று சகலத்தையும் அவர்களிடமே ஒப்படைத்து விட்டார்.


நிலைமையை இன்னும் மோசமாக்கும் வகையில்-பழைய இடத்தின் பற்றாக் குறையைக் காரணம் காட்டிப் பிற ஊர்களிலிருந்து கார்வாருக்கு வந்து சேரும் பேருந்துகள் நிற்க வசதியாக-முன்பிருந்த பஸ் நிறுத்தமும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு விட்டது.அந்தக் கடைத் தெருவின் உயிர்நாடியே பேருந்து நிலையம்தான் என்பது போலப் புதிய பேருந்து நிலையம் இருந்த இடத்துக்குப் பக்கத்தில் கடைத்தெரு வளர்ச்சியடையத் தொடங்கியது.புதிய கடைகளின் ஜொலிஜொலிக்கும் விளக்குகள்,பழைய கடைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்களைத் தானாகவே அங்கு கொண்டு வந்து சேர்த்தன.குடைகளும் கூட அங்குள்ள எல்லா இடங்களிலுமே கிடைக்க ஆரம்பித்து விட்டன.அந்த ஆண்டின் மழைக் காலத்தில்,கமலாகரின் கடையில் அறுபது குடைகள் விற்பனையாகாமல் தேங்கிப் போயிருந்தன;நாற்பது குடைகள் மட்டுமே எப்படியோ விற்றுப் போயின. அதே போன்ற குடைகள்,பிற கடைகளில் மூன்று ரூபாய் குறைவாகவே கிடைத்தன.


தன்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது உணர்வில் உறைப்பதற்கு முன்னமே கமலாகர் திவாலாகி விட்டிருந்தார்.தான் செலுத்தியாக வேண்டிய தொகை, தனக்கு வர வேண்டிய தொகை என எதற்குமே சரியான கணக்கு வழக்குகள் அவரிடம் இல்லை.புதிதாக ஜவுளிக் கொள்முதல் செய்ய வேண்டிய தேவையே இல்லாதபடி,கடந்த சில ஆண்டுகளாகத் தேங்கிப் போயிருந்த சரக்குகளையே மிகுந்த சிரமத்தோடுதான் அவர் தள்ளி விட வேண்டி இருந்தது.


வண்ண மயமான துணிகளை விளம்பரப்படுத்தி வெளிக்காட்டிக் கொண்டிருந்த கடையின் வெளிப்புற ஜன்னல்களெல்லாம் இப்போது வெறிச்சோடிக் கிடந்தன.காலி அலமாரிகளும்,பல கஜ நீளம் கொண்ட துணிகளைச் சுற்றி வைக்க ஒரு காலத்தில் பயன்பட்டுக் கொண்டிருந்த மரக் கழிகளும் கடையின் ஒரு மூலையில் போட்டு வைக்கப்பட்டன.


ஜவுளி வியாபாரத்தைக் கை விட்டு விட்டுத் தன் கடையின் ஒரு பக்கத்திலேயே தேங்காய் வியாபாரம் செய்ய வேண்டிய நிலைக்குத் தாழ்ந்து போய்விட்டார் கமலாகர்.அவரது தம்பிகள் இருவரும் இதற்காக அவரைப் பழித்ததோடு மட்டுமல்லாமல்,தங்கள் பங்குச் சொத்தைப் பிரித்துத் தரும்படியும் அவரை வற்புறுத்தத் தொடங்கியிருந்தனர்.தன்னிடம் எஞ்சியிருந்த கொஞ்சநஞ்சப் பொருளையும் பங்கு போட்டு இழந்து விட மனம் வராத கமலாகர்,அவர்களது கோரிக்கைக்குப் பணிந்து கொடுக்க மறுத்து விட்டார்.காவல்துறையோடு ஏதோ இரகசிய ஒப்பந்தம் செய்தபடி,பொய் சாட்சிகளை உருவாக்கிக் கொண்ட அவரது சகோதரர்கள் சொத்துத் தகராறு காரணமாக அவர் தங்களை அடித்து விட்டதாக ஒரு பொய்ப் புகாரை அளித்தனர்.அதன் அடிப்படையில் போலீசர்ர் ஒரு நாள் இரவு முழுவதும் கமலாகரை லாக்கப்பில் அடைத்து வைத்தனர்.நிலைமை இந்த எல்லை வரை செல்லக் கூடும் என்பதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராத தயானந்தாவும்,அவனது தாயும் அந்த இரவுப் பொழுதை மிகுந்த கவலையோடு கழிக்க நேர்ந்தது.


மறுநாள் காலையில் வழக்கறிஞர் நாயக்கின் வீட்டை நோக்கி விரைந்த அவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற அவர்,தயானந்தா மூலம் ஜாமீன் வாங்கித் தந்து கமலாகர் விடுவிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.


சகோதரர்களுக்கு இடையிலான சச்சரவில் இப்பொழுது சிக்கிக் கொண்டான் தயானந்தா.


அந்த நகரத்திலிருந்த பெரிய மனிதர்கள் பலரும் சமாதானமாகப் போகுமாறு கமலாகரின் தம்பிகளுக்கு ஆலோசனையளித்தனர்.


''எது சரி..எது தப்புன்னு கோர்ட்டே முடிவு பண்ணிக்கட்டும்''


என்று கூறிய அந்தச் சகோரர்கள் அந்த அறிவுரைகளைப் புறந்தள்ளி விட்டனர்.அவர்களது கொடூரமான மனப்போக்கைப் பார்த்து ஆவேசமடைந்தான் தயானந்தா.


''உங்களை நாங்க அடிச்சதாப் புகார் கொடுத்தீங்களே…உண்மையிலே அப்படியா நடந்தது..சொல்லுங்க!''


என்று உரக்கச் சத்தமிட்டபடி,ஒரு விறகுக் கட்டையைக் கையில் எடுத்துக் கொண்டு தன் சித்தப்பா ஒருவரின் மீது பாய்வதற்குக் கூடத் துணிந்து விட்டான் அவன்.


நிலைமை கை மீறிப் போய்க் கொண்டிருப்பதை உணர்ந்ததாலும்,காவல்துறையோடு போராடி அலுத்துப் போய்விட்டதாலும் நொந்து போய்க் கிடந்த கமலாகர் வேறு வழியின்றி, மூன்று பகுதிகளாகத் தன் சொத்தைப் பிரித்துக் கொடுக்கச் சம்மதித்து விட்டார்.


'கமலாகர் குல்கர்னி இல்லம்'என்ற அஞ்சல் முகவரியோடு இது வரை இருந்த அந்த இல்லம்.,இப்போது'குல்கர்னி காம்பவுண்ட்'என்பதாக மாறிப் போயிற்று.


வீட்டைத் தனக்குரியதாக வைத்துக் கொண்டு,அதைச் சுற்றியிருந்த திறந்த வெளியைத் தன் சகோதரர்களுக்குக் கொடுத்து விட்டார்கமலாகர். அந்த இடத்தில் அவர்கள் சிறியதாக வீடுகளைக் கட்டிக் கொண்டனர்.அதற்கான பணம் அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது என்பதைப் பற்றி அறிந்து கொள்வதில் கூடக் கமலாகர் ஆர்வம் காட்டவில்லை;அந்த அளவுக்கு முழுமையாக உடைந்து நொறுங்கிப் போயிருந்தார் அவர்.


தனது தேங்காய் வியாபாரத்தைத் தொடர்ந்து செய்து வந்த கமலாகரை விட்டேற்றியான ஒரு மனோபாவம் ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது.இவ்வாறு எல்லாக் காரணங்களும் ஒன்றாகச் சேர்ந்து போனதால் அவரது ஒரே மகனான தயானந்தாவே குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டியதாயிற்று.


-2-


பி.ஏ.,தேர்வில் தோல்வியடைந்து விட்டானே தவிர , தயானந்தா அப்படி ஒன்றும் எதற்கும் உபயோகமற்றவனாக ஆகி விடவில்லை.தேங்காய் வியாபாரத்தால் மட்டுமே தங்கள் குடும்ப நிலைமை உயர்ந்து விட்ப்போவதில்லை என்பது, தனது தந்தைக்கு முன்பாகவே அவனுக்குப் புரிந்து விட்டிருந்தது.;அதனாலேயே வருவாயைப் பெருக்கும் ஒரு உப தொழிலாகப் பதநீர் விற்பனையையும் அவன் தொடங்கியிருந்தான்.ஒரு பானை நிறையப் பதநீரை நிரப்பிக் கொள்வதற்காகப் பதநீர் இறக்கும் இடத்திற்குப் பொழுது விடிவதற்கு முன்பாகவே தன் சைக்கிளில் போய்விடுவான் தயானந்தா.பானையைத் தன் சைக்கிள் கேரியரில் வைத்துக் கட்டிக் கொண்டு,அதை விற்பனை செய்வதற்காக நெடுஞ்சாலைக்கு அருகே செல்வான்.பதநீர் விற்பனை என்பது,அத்தனை கௌரவமான ஒரு வேலையாகக் கருதப்படாததால் காலை ஏழு மணிக்குள் அதை முடித்துவிடுவது அவனுக்கு வசதியாக இருந்தது.


'இங்கே பதநீர் விற்கப்படும்'என்ற பெயர்ப்பலகையோடு தன் வாடிக்கையாளர்களுக்காக ஒரு மரத்தடியில் காத்துக் கொண்டிருப்பான் அவன்.அவனிடமிருந்த சரக்கு முழுவதும் விற்பனையாவதற்கு,அந்த வழியாக ஐந்து,ஆறு கார்கள் போனாலே போதுமானதாக இருந்தது.சில நேரங்களில் தன் வாடிக்கையாளர்களின் முகங்களை நோட்டம் விட்டபடி,விலையைக் கொஞ்சம் கூட்டிச் சொல்லிச் சற்றுக் கூடுதான பணத்தைக் கூட அவனால் சம்பாதிக்க முடிந்தது.


ஒரு நாள் அதிகாலை வேளையில் பதநீரை விற்றுவிட்டு தயானந்தா வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது,கார்வாரிலிருந்து வந்து கொண்டிருந்த கார் மூலம் ஒரு விபத்து ஏற்பட்டு விட்டது.தனது சைக்கிளில் இளநீர்க் காய்களைக் கட்டி வைத்தபடி வந்து கொண்டிருந்த ஒரு நபரின் மீது கார் மோதி அவன் கீழே விழுந்து விட்டான்;அவனது பின்புறமாக வந்து கொண்டிருந்த கார் சற்றுத் திரும்பும்போது அவன் மீது மோதியிருந்தது.


காருக்கடியில் அகப்பட்டு அவன் நசுங்கிப் போய்விடவில்லை என்றபோதும் அவனுக்குக் காயம் பட்டு விட்டது.


அவனுக்கு உடனடியாக உதவி செய்ய விரைந்தான் தயானந்தா.அந்தக் காரில் இருந்த வயதான தம்பதிகள்,கோலாப்பூரைச் சேர்ந்தவர்கள்;தங்கள் மகனுடனும்,மருமகளுடனும் அவர்கள் கோவாவிலிருந்து மங்களூருக்குச் சென்று கொண்டிருந்தார்கள .தரையில் சிதறிக் கிடந்த தேங்காய்களைத் தயானந்தாவின் உதவியுடன் ஒன்றுதிரட்டிச் சேகரித்தத அவர்கள்,அடிபட்ட மனிதனுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அரசு மருத்துவ மனைக்கு விரைந்தனர்.அது ஒரு விபத்தாகப் போய்விட்டதால்,மருத்துவ மனை நிர்வாகிகள் போலீசில் புகார் கொடுக்க,அவர்களும் அதை ஒரு வழக்காகப் பதிவு செய்தனர்.தன்னுடைய சைக்கிளைத் திரும்ப எடுத்துக் கொள்வதற்காகத் தான் பதநீர் விற்றுக் கொண்டிருந்த இடத்துக்கு வந்து,தயானந்தா வீடு திரும்பும்போது உச்சிப் பொழுதாகி விட்டது.


அன்று மாலையே வேறொரு வேலைக்காக தயானந்தா அந்த மருத்துவ மனைக்கு மீண்டும் செல்ல வேண்டியிருந்தது.ஏதோ ஒரு ஆர்வத்தால் உந்தப்பட்டவனாக,அந்த இளநீர்க்காரன் எப்படி இருக்கிறான் என்று பார்ப்பதற்குப் போனான் அவன்;ஒரு சில காயங்களால் சிறிது இரத்தசேதம் ஏற்பட்டிருந்ததைத் தவிர – மற்றபடி நன்றாகவே இருந்தான் அவன்.வேண்டுமென்றே ஒரு பதட்டத்தையும்,பயத்தையும் ஏற்படுத்துவதற்காக அவன் மருத்துவ மனையின் கண்காணிப்பில் இருந்தாக வேண்டும் என்று மருத்துவர் சொல்லியிருந்தார்.


அந்த வயதான தம்பதியரும் அவர்களது மருமகளும் – அன்று பகல் முழுவதும் போலீஸ் கெடுபிடிகளைத் தாங்கிக் கொண்டு,ஒன்றும் சாப்பிடாமல் கூட அங்கே இருந்த கோலத்தைப் பார்த்துத் தயானந்தாவுக்குப் பரிதாபமாக இருந்தது.காரை ஓட்டியது அவர்களது மகன் என்பதால் காவலர்கள் அவனைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.அந்த மனிதர்களுக்கு மராத்தியைத் தவிர வேறு எந்த மொழியையும் சரியாகப் பேசத் தெரியவில்லை.தாங்கள் கோலாப்பூருக்குத் திரும்பிச் சென்ற பிறகு,காயம்பட்ட அந்த மனிதனுக்குத் தேவையான பணத்தை அனுப்பி வைப்பதோடு-அவசியம் ஏற்பட்டால் நல்லதொரு மருத்துவ மனைக்கு அவனை மாற்றித் தகுந்த சிகிச்சையளிப்பதாகவும் வாக்களித்தபடி,தங்கள் மகனை விடுதலை செய்யுமாறு அவர்கள் மன்றாடிக் கொண்டிருந்தார்கள்.அவர்களின் நிலையைப் பார்த்து இரக்கம் கொண்ட தயானந்தா,வழக்கறிஞர் நாயக்கின் வீட்டுக்குச் சென்று,அவரையும் அழைத்துக் கொண்டு காவல் நிலையத்துக்குச் சென்றான்.வக்கீலின் ஆலோசனைப்படி அந்த இளைஞனுக்கு ஜாமீன் தந்து அவன் விடுவிக்கப்படவும் உதவினான்.போலீசார் எழுப்பிய கேள்விகளுக்கெல்லாம்..எளிதில் புரிந்து கொள்ள முடியாத சட்ட நுணுக்கங்கள் தொடர்பான கடினமான பல சொற்களைப் பயன்படுத்திக் கச்சிதமாக விடையளித்தார் வழக்கறிஞர்.குறிப்பிட்ட இந்த வழக்கில் நிறையப் பணம் கறந்து விடலாமென்று திட்டமிட்டுக் கொண்டிருந்த போலீசாருக்கு இது மிகவும் ஆத்திரமூட்டியது.


''ஜாமீன் கொடுக்கிறதுன்னா என்னன்னு உனக்குத் தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்..அவன் மட்டும் தலை மறைவாப் போனான்னு வச்சுக்கோ..அப்புறம் உன்னை ஜெயிலிலே போட்டு அடைச்சிடுவேன்..''


என்று அந்த இளைஞனை விடுதலை செய்யும்போது தயானந்தாவிடம் எச்சரிக்கை செய்தார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்.


ஏதோ ஒரு கணம் ஏற்பட்ட அசட்டுத் தைரியத்தில் அந்த விபத்தின் பாரம் முழுவதையும் தன் தலையில் தூக்கிப் போட்டுக் கொண்டு விட்டோமோ என்று அப்போது சற்று யோசித்தான் தயானந்தா.


தங்கள் மகனைப் பார்த்த சந்தோஷத்தில் இருந்த அந்த முதிய தம்பதியர் நன்றிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர்.


தாங்கள் வாக்களித்தபடியே – இரண்டே நாட்களில்,மேலும் மூன்று பேரையும்,ஒரு வக்கீலையும் அழைத்துக் கொண்டு அவர்கள் திரும்பி வந்து விட்டனர்.அந்த இளநீர்க்காரனும் நன்கு தேறிக் கொண்டிருந்தான்.அவனுக்கு ஒரு கணிசமான தொகையை அவர்கள் வழங்கினர்.போலீசுக்கும் கூட அவர்கள் ஏதாவது கையூட்டு தந்திருக்கக் கூடும்.எப்படியோ அந்த வழக்கு சிக்கலின்றி நல்லபடியாக முடிவடைந்து விட்டது.அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பு தயானந்தாவின் கடைக்கு வந்த அந்த மனிதர்கள்,அவனிடம் ஒரு 'கவ'ரைக் கொடுத்தனர்.அதில் பணம் இருக்கலாம் என்பதை ஊகித்து விட்ட தயானந்தா அதைப் பெற்றுக் கொள்ள மறுத்தான்.


''அந்த சாமியே நேரிலே வந்தாப்பிலே நீங்க வந்து தலையிட்டு எங்க மானத்தைக் காப்பாத்தினீங்க..''


என்றபடி அதை அவன் கட்டாயம் பெற்றுக் கொண்டே ஆக வேண்டும் என அவர்கள் தொடர்ந்து அவனை வற்புறுத்தினர்.


வீடு திரும்பி அந்தக் கவரைப் பிரித்துப் பார்த்த தயானந்தா அதற்குள் ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்று இருப்பதைக் கண்டான்;வேறு எவரிடமும் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூடத் தெரிவிக்காமல் தானே அதை வைத்துக் கொண்டான் அவன்.


தானாக முன் வந்து செய்த ஒரு உதவி,இவ்வாறு பணத்தால் அளக்கப்படுவது அவனுக்கு இலேசான மனத் தாங்கலை  அளித்தாலும்,அப்போது அவன் இருந்த மிக மோசமான பொருளாதாரச் சூழ்நிலை காரணமாகவும்,பணத்தைச் சம்பாதிப்பதற்குப் பலவகையான வழிமுறைகளைத் தேடிக் கண்டுபிடித்தாக வேண்டிய போராட்டத்தில் தான் இருந்ததாலும் அந்த அன்பளிப்பை வாங்கிக் கொண்டதில் தவறில்லை என்று தனக்குள் சமரசம் செய்து கொண்டான் அவன்.எதிர்பாராமல் அவனுக்குக் கிடைத்த அந்தப் பரிசுத் தொகை,அவனது தேங்காய்க் கடையின் கொள்முதலை அதிகரித்துக் கொள்வதற்குப் பயன்பட்டது.ஆனாலும் கூட இப்படிப்பட்ட சின்னச் சின்ன வரும்படிகளால் தயானந்தாவின் வருமானம் பெருமளவில் அதிகரித்து விடவில்லை;அதனால் அவன் இன்னும் கூடப் பதநீர் விற்றுக் கொண்டுதான் இருந்தான்.


அந்தச் சம்பவம் நடந்து சில நாட்கள் சென்ற பிறகு,முன்பு தயானந்தாவுடன் ஒன்றாகப் படித்திருந்த பள்ளித் தோழனான உமேஷ்,காவல்துறைப் பணியில் சேர்ந்தான்.தயானந்தாவுக்கு இது பற்றித் தெரிய வந்தபோது முந்தைய ஞாபகம் ஒன்று அவனது மனதுக்குள் மீண்டு வந்தது.பதநீர் வியாபாரத்தால் அதிகம் சம்பாதிப்பது என்பது தயானந்தாவால் முடியக்கூடிய காரியமாக இல்லை.மிகுந்த யோசனைக்குப் பிறகு உமேஷை நாடிச் சென்ற தயானந்தா,தன் உள்ளத்திலிருப்பதையெல்லாம் திறந்து காட்டினான்.உமேஷ் அனுபவமில்லாத ஒரு போலீஸ்காரன் என்பதால் ஒரு 'வாடிக்கையாள'ரைக் கூட்டிக் கொண்டு வர அவனுக்கு ஆறு மாதம் பிடித்தது.விபசார விடுதி ஒன்றில் நடந்த காவல் துறை 'ரெய்'டின்போது அதில் மாட்டிக் கொண்ட வங்கி அலுவலரான அந்த நபர்,கும்தாவைச் சேர்ந்தவர்.உமேஷுடன் காவல் நிலையத்திற்குச் சென்ற தயானந்தா இருநூறு ரூபாய் ஜாமீன் தந்து அந்த ஆளை மீட்டுக் கொண்டு வந்தான்.அந்தத் தொகையில் ஐம்பது ரூபாய் உமேஷுக்கும்,மற்றொரு ஐம்பது ரூபாய் சப் இன்ஸ்பெக்டருக்கும் போய்ச் சேர்ந்தது.வழக்குகளில் சிக்கிக் கொள்ளும் மனிதர்களுக்கு ஜாமீன் அளிக்கும் லாபகரமான ஒரு வியாபாரத்தைத் தயானந்தா தொடங்கியது இப்படித்தான்.


-3-


அந்த வியாபாரத்தின் ஆரம்பக் கட்டத்தில் அறிமுகமில்லாதவர்களுக்கு ஜாமீன் தருவதற்கு தயானந்தா மிகவும் பயந்து கொண்டிருந்தான்;ஆனால் அவனுக்குத் தெரிந்த மனிதர்களுக்கோ ஜாமீன் தேவையாக இல்லை.கார்வார் நகரும் அதன் சுற்றுப் புறங்களும் எவ்வளவு பெரியதாய் இருந்தனவோ அதே அளவுக்கு அங்கே நடக்கும் குற்றங்களும் பெரிதாகவே இருந்தன.முதலில் தன் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே பிற மனிதர்களுக்கு ஜாமீன் அளிக்க முன் வந்து கொண்டிருந்தான் தயானந்தா.தொடக்க காலங்களில்,குறிப்பிட்ட அந்தக் குற்றத்தைத் தானே செய்வது போன்ற உணர்வே அவனைப் பீடித்திருந்தது.கோலாப்பூரிலிருந்து வந்த மனிதர்களுக்கு அவன் ஜாமீன் தர முன் வந்த நேரத்தில் ''அவன் மட்டும் தலை மறைவாப் போனான்னு வச்சுக்கோ..அப்புறம் உன்னை ஜெயிலிலே போட்டு அடைச்சிடுவேன்..''என்று அந்த சப் இன்ஸ்பெக்டர் செய்திருந்த எச்சரிக்கை அவனது உள்ளத்தில் ஆழமாகப்பதிவாகியிருந்தது.ஆனாலும் தான் ஒன்றும் எந்த வகையான சட்ட மீறலையும் செய்து விடவில்லை என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டான் அவன்.


இந்த பேரத்தில் அவனுக்கு மிகவும் தேவையாக இருந்தது போலீசாருடனான நட்பு;அதன் மூலம் அவன் பலதரப்பட்ட குற்றங்களைப்பற்றி நேரடியாக அறிந்து கொள்ள முடிந்தது.சொந்த சகோதரர்களையே கழுத்தறுத்தவர்கள், மனைவிகளைக் கிணற்றுக்குள் தள்ளிவிட்ட கணவர்கள்,வீட்டு வேலைக்காரிகளைக் கர்ப்பவதிகளாக்கிய எஜமானர்கள்,விபசார விடுதிகளில் நடந்த சோதனைகளில்பிடிபட்டவர்கள்,வீடுகளுக்குள் அதிரடியாக நுழைந்து திருட்டில் ஈடுபட்டவர்கள் என்று பல்வேறு வகையான மனிதர்களுக்கு அவன் ஜாமீன் அளித்து வந்தான்.தனது தொழில் மூலம் பெற்ற தொடர்புகளால் வெவ்வேறு வகையான குற்றங்களையும்,குற்றவாளிகளையும் அவன் எதிர்ப்பட நேர்ந்தது.முதன் முறையாகக் குற்றம் செய்பவர்களுக்கு அதைத் தொடர்ந்து ஏற்படும் விளைவுகள் – அதனுடன் சம்பந்தப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகள்,ஜாமீன் தருவது போன்ற எதைப் பற்றியும் தெரிந்திருப்பதில்லை என்பதை அவன் கண்டுகொண்டான்.அவன் மட்டும் நினைத்திருந்தால் அவ்வாறான நபர்களைத் தன்னால் முடிந்த அளவு ஏமாற்றிப் பணம் பறித்திருக்க முடியும்தான்;ஆனால் தன்னாலும் கூட இப்படிப்பட்ட தவறுகளைச் செய்ய முடியும் என அவனது மனதுக்குள் இருந்த மெல்லிய கீற்றுப் போன்ற ஒரு எண்ணம்,அவர்களது நிராதரவான நிலைமையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முடியாதபடி அவனைத் தடுத்து விட்டது.நாளாக ஆக,இந்த விளையாட்டில் கரை கண்டவனாக மாறிவிட்ட தயானந்தா,தான் ஜாமீன் தரும் நபர்களில் சட்டத்துக்குப் புறம்பாக நடந்து கொண்டவர்கள் குறித்த எல்லா விவரங்களையும் தோண்டித் துருவிப் பார்க்கும் பொறுமையைக் கூட இழந்தவனாக ஆகிப் போனான்.


போலீசாருடன் நட்புக் கொண்டிருப்பது மட்டுமே போதாது என்பதை உணர்ந்து கொண்ட பிறகு,வக்கீல் நாயக்குடனும் நல்ல பழக்கம் வைத்துக் கொள்ளத் தொடங்கிய தயானந்தா,பெரும்பாலான தனது நேரத்தைக் கோர்ட்டிலும்,போலீஸ் ஸ்டேஷனிலும் மட்டுமே செலவழித்து வந்தான்.கடையில் இருக்க வேண்டியதும் தவிர்க்க முடியாதது என்பதால் மாலை வேளைகளில் கொஞ்ச நேரம் மட்டுமே அங்கே இருப்பான் அவன்.எந்த வழக்கிலும் தான் மாட்டிக் கொண்டுவிடக் கூடாது என்ற அவனது விருப்பம், சட்ட நுணுக்கங்கள் அனைத்தையும் தெளிவாகப் புரிந்து கொள்ளுமாறு அவனைத் தூண்டியது.இதனால் அவனும்,வழக்கறிஞர் நாயக்கும் மிகவும் நெருக்கமானவர்களாக ஆகி விட்டிருந்தனர்.ஜாமீனளிக்கும் வியாபாரம் மிகவும் லாபகரமான ஒரு தொழிலாக மாறிப் போய்விட்டதால்,வக்கீலுக்கும் அதில் ஒரு பங்கு ஒதுக்கப்பட்டது.வக்கீல்,போலீஸ்-இவர்களுடனேயே தொடர்ச்சியாகப் பழக நேர்ந்ததால் சட்டம் தொடபான அனைத்து விஷயங்களும் அவனுக்கு அத்துப்படியாகிவிட்டிருந்தன.


தான் எடுத்துக் கொள்ளும் வழக்கின் முடிவு வரை அதைத் தொடர்ந்து அவதானிப்பவன் தயானந்தா.அது,அவனுக்கு ஒரு பழக்கமாக-சுவாரசியமான ஒரு விளையாட்டாகவே ஆகிப் போயிற்று. ஒரு குற்றம் சார்ந்த தகவல்களைப் பார்த்த மாத்திரத்திலேயே அதற்கான தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை அவனால் முன்கூட்டியே சொல்லி விட முடியும்.ஆனால்,கடத்தல்காரர்களுக்கு ஜாமீன் தர முற்பட வேண்டாம் என்று வக்கீல் நாயக் கூறியிருந்த ஆலோசனையை மட்டும் அவன் ஒருபோதும் மீறியதே இல்லை.எல்லா விஷங்களையும் சட்டத்தின் கண்ணோட்டத்தில் மதிப்பீடு செய்து பார்ப்பதிலேயே அவனது கவனம் முழுவதும் குவிந்திருந்தது.குறிப்பிட்ட சில வழக்குகளைப் பொறுத்தவரை,மறைவான சில சந்துபொந்துகளை,எவருக்கும் தெரியாத குறுக்கு வழிகளைக் கண்டு பிடித்து இரகசியமாகத் தப்பித்துச் செல்லும் முறைகளைப் பற்றிக் கூட அவன் தொடர்ச்சியாக யோசித்துக் கொண்டிருந்தான்.இவ்வாறு சட்டம் பற்றிய யோசனைகளே அவனது மனதை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததால்,குற்றம் சார்ந்த பிற தகவல்கள் பற்றிய பயமும்,கவலைகளும் இப்போது அவனை விட்டுப் போய் விட்டிருந்தன.தன்னிடம் வருபவர்களின் குற்றங்களுக்கும்,கொடூரச் செயல்களுக்கும் எப்படிப்பட்ட தண்டனைகள் கிடைக்கக் கூடும் என்பதைக் கூட வரையறுத்துச் சொல்லத் தொடங்கியிருந்தான் அவன்.


குறிப்பிட்ட ஒரு குற்றத்தைச் சட்டத்தின் பிடியில் மாட்டிக் கொள்ளாமல் செய்திருக்க முடியுமே என்று ஆச்சரியப்படும் எல்லை வரைக்கும் கூட அவன் சென்று விட்டிருந்தான்.அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஜாமீன் தரும்போது


''என் கிட்டே நீ ஏன் இதைப் பத்திக் கேக்கலை? நீ மட்டும் அந்த மாதிரி நடந்திருந்தா இந்த உலகத்திலே இருக்கிற எந்தச் சட்டத்தாலேயும் உன்னை வளைச்சுப் பிடிச்சிருக்க முடியாது.''என்பான் அவன்.


சரி எது,தவறு எது என்ற முடிவுகள்,குறிப்பிட்ட வழக்குகளோடு பொருத்திப் பார்த்து மறுவரையறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என்பதால் அவ்வப்போது சட்டங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைப் பற்றியும் அவன் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தான்.


''நீ சட்டப் பரீட்சை மட்டும் எழுதிப் பாஸாகலை..அவ்வளவுதான்.மத்தபடி எந்த வக்கீலுக்கும் சளைச்சவன் இல்லைப்பா நீ''என்று வழக்கறிஞர் நாயக் அவனிடம் எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார்.


மாதத்தில் ஐந்து,ஆறு பேருக்கு ஜாமீன் தந்தாலும் கூட தயானந்தாவுக்கு நல்ல வருமானம் கிடைத்து வந்தது.அந்த ஊரிலிருந்தவர்கள் தனக்கு 'ஜாமீன் சாஹேப்'என்று பெயர் சூட்டியிருப்பதும் அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது;அதைத் தன்னால் எந்த வகையிலும் மறுத்துப் பேச முடியாமலிருந்தது அவனுக்கு வருத்தமளித்தது.அவனுக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது என்பதும் கூட சுவாரசியமான ஒரு கதைதான்.தயானந்தா ஜாமீன் தர ஆரம்பித்திருந்த புதிதில்-அந்தத் தொடக்க காலகட்டத்தில்,ரானே என்ற சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் இருந்தார்.ஒரு நாள் சாயங்கால வேளையில்,தன் கால்களை விரித்து நீட்டிக் கொண்டு,போண்டாவை மென்றபடி தேநீரை உறிஞ்சிக் கொண்டு-வேலையில் புதிதாகச் சேர்ந்திருந்த கான்ஸ்டபிள் ஒருவனக் கொடுமைப்படித்தியபடி,தன்னுடைய உலகத்திற்குள் மூழ்கிப் போயிருந்தார் அவர்;சரியாக அதே நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தான் தயானந்தா.ஸ்டேஷனுக்குள் யாரோ வருவதைப் பார்த்த ரானே,அது யாரென்று கான்ஸ்டபிளிடம் கேட்டார்.தயானந்தாவை முதல் நாள்தான் பார்த்திருந்தபோதும் அவனது பெயர் நினைவுக்கு வராமல் தடுமாறினான் அந்த கான்ஸ்டபிள்.உற்சாகமான ஒரு மனநிலையில் இருந்த அந்த சப் இன்ஸ்பெக்டர்,


''எதுக்காக இப்படித் தட்டுத் தடுமாறிக்கிட்டிருக்கே நீ?அது நம்ம சாஹேப்தானே..?உள்ளே வரச் சொல்லு அவரை''


என்று அவனிடம் ஜோக்கடித்தார்.அதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் தயானந்தா.அவனைப் பார்த்ததும்,


''அடேடே வாங்க 'ஜாமீன் சாஹேப்'..வாங்க வாங்க..''


என்று உரக்கக் குரல் கொடுத்தார் அவர். தன்னுடைய ஜோக்கைத் தானே ரசித்து மகிழ்ந்து கொண்டிருப்பவரைப்போலக் காணப்பட்ட அவரைத் திருப்திப்படுத்தும் பாவனையில் மெல்லிதாகப் புன்னகை செய்தான் தயானந்தா.'ஜாமீன் சாஹேப்'என்ற பெயரைத் தொடர்ந்து முணுமுணுத்துக் கொண்டே இருந்தார் ரானே;அப்படி ஒரு பெயரைத் தான் கண்டு பிடித்து விட்டோமென்பதில் தன்னைத்தானே தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார் அவர்.அதற்குப் பிறகு எப்போதும் தயானந்தாவை அந்தப் பெயரை வைத்தே கூப்பிடத் தொடங்கி விட்டார் அவர்.நகரம் முழுவதும் அந்தப் பெயர் பரவ வெகு நாளாகவில்லை.


தயானந்தாவின் குடும்பத்திலிருந்த எவரும் ஒருபோதும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவதில்லை.அவனது மனைவி சுனந்தாவுக்குக் கூடத் திருமணத்துக்கு முன்பே இது பற்றித் தெரிந்திருந்தது.அவளுக்கு இதில் விருப்பமில்லாதபோதும் இந்தப் பிரச்சினையை எழுப்பிக் கணவனோடு சண்டை போடும் துணிச்சல் அவளிடம் இல்லை.போலீஸ்காரர்களுடன் கொண்ட நட்பும்,வக்கீல்களோடான தொடர்பும் தயானந்தாவைச் சுற்றி வித்தியாசமான ஒரு ஒளிவட்டத்தை உண்டாக்கி விட்டிருந்தன.அதனுடன் கூடவே அவனிடம் பணமும் படிப்படியாகச் சேர ஆரம்பித்திருந்தது.குடும்ப கௌரவம்,மரியாதை என்று அவன் தந்தை சிலவேளைகளில் ஏதாவது முணுமுணுப்பார்;ஆனால் மற்றவர்கள் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்து விடுவார்கள்.ஆரம்ப காலத்தில் தொந்தரவு செய்து கொண்டிருந்த மாமாக்களும் கூட,தயானந்தாவின் 'சாதனைக'ளைப் பார்த்த பிறகு மென்மையானவர்களாக மாறிப் போய்விட்டார்கள்.பொதுவாகவே – சமூகத்தை எதிர்கொள்வதென்பது,தன் குடும்ப உறுப்பினர்களுக்குத் தர்மசங்கடம் அளிப்பதாக இருப்பதைக் கண்டு – அது குறித்த மன உளைச்சல் தனக்கு ஏற்படும்போதெல்லாம்,தனது சட்டஞானமும்,போலீசுடனான நெருக்கமும் தன்னைச் சக்தியும்,அதிகாரமும் மிகுந்தவனாக ஆக்கி வைத்திருப்பதை நினைத்தபடி தன்னைச் சமாதானம் செய்து கொள்வான் அவன்.வாய்ப்புக் கிடைத்தால்-தனக்குரிய வரம்புகளையெல்லாம் மீறிக்கூடத் தன் சக்தியை வெளிப்படுத்தி அதை நிரூபித்து விட வேண்டுமென்று அவனுக்குள் குடியிருந்த அதிகார போதை அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது.உலகத்தின் பார்வையில் தன் அதிகார பலத்தை எப்படியாவது காட்டியே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் இயங்கிக் கொண்டிருந்தான் அவன்.


[மேலும்]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 07, 2011 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.