Jeyamohan's Blog, page 2302

August 27, 2011

இந்தப்போராட்டத்தில்…

சமகால அரசியலைப் பற்றிப் பேசக்கூடாது என்பது,என் சுயக் கட்டுப்பாடுகளில் ஒன்று. அதை மீறிய முதல் தருணம் இந்த அண்ணா ஹசாரே போராட்டம்.  அது தன்னிச்சையாக நடந்தது.  தொடக்கத்திலேயே அந்த நிகழ்வு ஒரு முக்கியமான வரலாற்றுத்திருப்புமுனை என்ற எண்ணம் ஏற்பட்டது. அதை சற்றும் புரிந்துகொள்ளாத மேலோட்டமான எள்ளலும் உள்ளீடற்ற தர்க்கங்களும் அதிகமாகக் காதில் விழுந்தபோது எதிர்வினையாற்றினேன். அது ஒரு தொடர் செயல்பாடாக இன்றுவரை நீண்டு வந்துவிட்டது. அவ்வாறு உடனடி எதிர்வினை ஆற்றலாகாது என்ற என் எண்ணம் மேலும் உறுதிப்பட்டது.


என் குழுமத்தில் கிட்டத்தட்ட 450 பேர் இருக்கிறார்கள். வழக்கமாகக் கடிதம் எழுதும் அனைவரும் அங்கேயே நிறைய எழுதிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மிக அதிகமாக விவாதம் நடக்கும் குழுமம் அது. அதற்கு அப்பால் எனக்கு வழக்கமாக வரும் கடிதங்களின் எண்ணிக்கை முன்பிருந்ததில் பாதிதான். ஆனால் இந்தப் போராட்டம் பற்றி எழுத ஆரம்பித்தபின்னர் மீண்டும் என் மின்னஞ்சல்பெட்டி நிறைந்து வழிய ஆரம்பித்தது. நெடுநாட்களுக்கு பகலிரவாக பதில்களை எழுதிக்கொண்டிருக்க நேரிட்டது.


காரணம் இணையத்தில் இலகுவாக அகப்படும், எதிர்வினையாற்றும் எழுத்தாளன் இன்று நான் மட்டுமே என்பதுதான். ஒரு விஷயம் நடந்துகொண்டிருக்கும்போது உணர்ச்சிகள், சஞ்சலங்கள் உச்சநிலையில் உள்ளன. எங்கும் எல்லாரும் அதையே விவாதிக்கிறார்கள். அதே வேகத்துடன் தான் விரும்பும் எழுத்தாளனுடன் பேச விரும்புகிறார்கள். ஆனால் எந்த எழுத்தாளனும் பல்லாயிரம்பேருடன் விவாதிக்கமுடியாது. விவாதிக்க ஆரம்பித்தால் அது வளர்ந்து வளர்ந்து அது அவன் ஆற்றலை உறிஞ்சி காலியாக்கிவிடும்.  நான் தனிப்பட்ட பதிலளிக்காத மின்னஞ்சல்கள் ஆயிரத்திஐநூறுக்கும் மேல் உள்ளன. அவர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.வரும் நாட்களின் வேலையே அவற்றுக்கு பதிலெழுதி முடிப்பதுதான்.


இந்த நாட்களில் அண்ணா ஹசாரே போராட்டம் பற்றி நான் கிட்டத்தட்ட 60 கட்டுரைகள் எழுதியிருப்பேன் என நினைக்கிறேன்.  என் இணையதளமே அண்ணா ஹசாரேவுக்கான தளமாக ஆகிவிட்டது. அதன் கொள்ளளவும் வருகையாளர்களும் அதிகரிக்கவே வேகம் குறைந்து வேறு சர்வர் தேடவேண்டியிருந்தது.ஒருநாள் முழுக்க தளம் இயங்காமல் போனது/எதிர்வினைகளையும் பிரசுரித்திருந்தால் இன்னும் ஐந்தாறு மடங்கு இடம் தேவைப்பட்டிருக்கும். வேறு எந்த விஷயமும் இடம்பெறாது போயிற்று.


அந்தக் கட்டாயம் என்னுடன் விவாதிப்பவர்களால்தான் எனக்கு ஏற்பட்டது. ஐயங்கள் நேர்மையானவை என்பதனால் என்னால் விலக்க முடியவில்லை. அந்த எழுத்துக்கு தமிழ்ச்சூழல் சார்ந்து ஒரு தேவையும் இருந்தது. தொடர்ச்சியாக அண்ணா ஹசாரே பற்றிய விரிவான விளக்கங்களை அளித்த தளம் என்னுடையதுதான். ஆனால் வேறு எதுவுமே செய்யமுடியாமலாகியது. சமகால அரசியல் சார்ந்து உடனடியாக இணையவிவாதங்களில் ஈடுபடுவதன் அபாயம் இது. அந்நிகழ்ச்சி முடிந்தபின் என்றால் எல்லாப் பக்கங்களையும் தொகுத்துப்பார்த்து அதிகபட்சம் இரு கட்டுரைகள் எழுதியிருந்தால் தெளிவாகவே எல்லாவற்றையும் பேசிவிடலாம். ஆகவே இனிமேல் சமகால அரசியல் நிகழ்வுகளை உடனுக்குடன் விவாதிக்கப்போவதில்லை.


இந்த விவாதங்களில் என் நண்பர்களும் தீவிரமாக ஈடுபட்டது நிறைவளிக்கிறது. இதையொட்டி அண்ணா ஹசாரே பற்றிய என் எழுத்துக்களின் ஆங்கில மொழியாக்கம்  http://thesabarmati.wordpress.com   என்ற தளத்தில் பிரசுரமாகிவருகிறது. அண்ணா ஹ்சாரே பற்றிய கட்டுரைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட  http://annahazare-tamil.blogspot.com/ என்ற வலைமனை நண்பர்களால்    http://www.gandhitoday.in/ என்றபேரில் ஒரு வலையிதழாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காந்தி, காந்தியப்போராட்டங்கள் பற்றிய எல்லாத் தகவல்களையும் ஒரே இடத்தில் தொகுப்பதே அதன் நோக்கம்.நண்பர்கள் மொழியாக்கம் செய்து உதவலாம்.


அண்ணா ஹ்சாரே பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு கிழக்கு பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. 'அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிரான காந்தியப்போராட்டம்'


சிறிய அளவிலேனும் இதில் பங்கெடுத்த நிறைவு எனக்குள்ளது. இப்போதைக்கு இது போதும்.


தளங்கள்


காந்தியம் இன்று இணையதளம் காந்திய கட்டுரைகள்


சபர்மதி இணையதளம்  ஆங்கில மொழியாக்கங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 27, 2011 23:33

August 22, 2011

அண்ணா ஹசாரேவின் அரசியல்

ஜெ,


இந்து இயக்கங்கள்தான் அண்ணா ஹசாரே பின்னால் இருக்கின்றன என்பதுதான் அவர் மீது சொல்லப்படும் முக்கியமான குற்றச்சாட்டாக இருக்கிறது. இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள்?


சிவமணி,சென்னை



அன்புள்ள சிவமணி,


லோக்பால் மசோதாவுக்கான இந்தப் போராட்டத்தை கூர்ந்து பார்த்தால் அரசியல் கணக்குகள் எளிதில் மாறிக்கொண்டிருப்பதைக் காணலாம். எல்லா அரசியல்கட்சிகளும் இதில் தள்ளாடும் நிலையையே கொண்டிருக்கின்றன. அது புரிந்துகொள்ளக்கூடியதே.


அண்ணா ஹசாரே போராட்டத்தை ஆரம்பித்தபோது காங்கிரஸ் அஞ்சியது. அந்தபோராட்டம் காங்கிரஸை ஊழல் அரசாக மக்கள் மத்தியில் சித்தரிக்குமென நினைத்தது. அதை தவிர்க்க எளிய வழி என்பது அண்ணா ஹசாரேவை பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவளராக சித்தரிப்பது. அதன் வழியாக இந்த ஒட்டுமொத்தப் போராட்டமே அரசை எதிர்த்து எதிர்க்கட்சியினர் செய்யும் போராட்டம் மட்டுமே என்று காட்டுவது.


அதன் மூலம் எளிதாக அண்ணா ஹசாரேவின் மக்களாதரவை, நம்பகத்தன்மையை குலைக்கமுடியுமென காங்கிரஸ் நினைத்தது. ஏனென்றால் பாரதிய ஜனதாவும் ஊழலில் நனைந்த கட்சியே. லோக்பாலுக்கான கோரிக்கை அரை நூற்றாண்டாக இருக்கிறது. ஒருகாலத்தில் அதற்காக ஜனசங்க நிறுவனர் சியாமபிரசாத் முக்கர்ஜியே பேசியிருக்கிறார். ஆனால் பாரதிய ஜனதாக்கட்சி அதை அவர்களின் ஆட்சிக்காலத்தில் கண்டுகொள்ளவேயில்லை.


இன்று கர்நாடகத்தில் லோக்பால் அளவுக்கு அதிகாரமில்லாத லோக் ஆயுக்தா போன்ற அமைப்பால் அதன் ஊழல்கள் வெளியே இழுத்துப்போடப்பட்டு மிக தர்மசங்கடமான நிலையில் அது உள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஊழலைப்பற்றிப்பேசினால் அதை எவரும் பொருட்படுத்தப்போவதில்லை என காங்கிரஸ் அறியும்.


மேலும் அண்ணா ஹசாரேவின் இயக்கத்தை பிளவுபடுத்தவும் அது உதவும். ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தையும், இடதுசாரிக்கட்சிகளையும் அவரது இயக்கத்தில் இருந்து வெற்றிகரமாக பிரித்துவிட முடியும். அவர்கள் பாரதியஜனதா மீண்டும் பதவிக்கு வருவதை விரும்ப மாட்டார்கள். ஆகவே காங்கிரஸ் ஊடகங்களும் ஊழல்முத்திரை கொண்ட திமுக போன்ற கட்சிகளும் அண்ணா ஹசாரேவை பாரதிய ஜனதாவுடன் சம்பந்தப்படுத்தி எல்லா ஊடகங்களையும் கவர்ந்துகொண்டு பிரச்சாரம் செய்தன. 'நடுநிலை' இதழாளர்கள் அதற்காக உரிய வாடகைக்கு எடுக்கப்பட்டார்கள்.


ஆனால் மெல்ல மெல்ல அது திருப்பியடிக்க ஆரம்பித்தது. பாரதிய ஜனதா என்பது ஒரு ஒற்றையமைப்பு அல்ல. அதற்குள்ளும் ஊழலால் பொறுமையிழந்த ஒரு பெரும் தொண்டர்படை உள்ளது. அவர்கள் பலவருடங்களாகவே தலைமைமேல் சோர்வுற்று இருந்தார்கள். பாரதிய ஜனதா ஊழல் சார்ந்த விஷயங்களில் மென்று முழுங்குவது அவர்களுக்கு தெரியும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட தனிநபரான சுப்ரமணியசாமி செய்ததைக்கூட பாரதிய ஜனதா என்ற பெரிய எதிர்க்கட்சி செய்யவில்லை என அவர்கள் அறிவார்கள்.


ஆகவே தொண்டர்களில் கணிசமானவர்கள் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின்பால் ஆதரவு மனநிலை கொள்ள ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்களால் அண்ணா ஹசாரேவை நம்ப முடியவில்லை. காரணம் இப்போது அண்ணா ஹசாரேகூட இருக்கும் அர்விந்த் கேஜரிவால், கிரண் பேடி, சுவாமி அக்னிவேஷ் போன்றவர்கள் வெளிப்படையான இந்துத்துவ எதிர்ப்பாளர்கள். தொண்டர்களின் மனம் ஊழல் ஒழிப்பை நோக்கிச் செல்வதை கண்ட பாரதிய ஜனதாவின் தலைமை அண்ணா ஹசாரே இயக்கத்தை ஓர் இடதுசாரிக்குழு என்று சித்தரித்து பிரச்சாரம் செய்தது.


ஆக ஒரு விசித்திரமான நிலை. அண்ணா ஒருபக்கம் பாரதிய ஜனதாக்கட்சிக்காரர் என வசைபாடப்பட்டார். மறுபக்கம் அவர் காங்கிரஸுடன் சேர்ந்துகொண்டு ஒரு நாடகம் நடத்துபவராக காட்டப்பட்டார். ஒரே சமயம் இருபக்கமும் வசை.


அண்ணா ஹசாரேவுக்கே சங்கடமான நிலைதான். அவர் தன் போராட்ட வேகத்தை தக்கவைத்துக்கொள்ளவேண்டுமென்றால் பிளவுபடாத மக்களாதரவு தேவை. அவர் எந்தக்கட்சியையும் சாராதவர் என்ற அடையாளமே அவருக்கு மக்கள்கூட்டத்தை திரட்டுகிறது. ஏனென்றால் மக்கள் அந்த அரசியல்வாதிகள்மேல் ஆழமான ஐயம் கொண்டவர்கள். ஆகவே அவர் தன்மேல் இந்துத்துவ முத்திரை குத்த காங்கிரஸ் செய்த முயற்சிகளை தாண்டவேண்டியிருந்தது.


அதற்காக அண்ணா பல சமரசங்களைச் செய்தார். அவர் ஆரம்பத்தில் பாரதஅன்னை படத்தையும் விவேகானந்தர் படத்தையும் வைத்திருந்தார். இந்திய பண்பாட்டுப்பரப்பில் பாரதமாதா என்பது மதம் சார்ந்ததல்ல. இந்திய சுதந்திரப்போரை ஒருங்கிணைத்த குறியீடு அது. சுவாமி விவேகானந்தரை இந்துத்துவத்துடன் அடையாளப்படுத்துவது அயோக்கியத்தனம் அன்றி வேறல்ல. இந்த நாட்டின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மாபெரும் தேசிய முன்னோடி அவர்– அதை அறுதியாக ஆணையிட்டு சொல்லும் குரலை நாம் அம்பேத்காரில் காணலாம்


ஆனால் காங்கிரஸ்-இடதுசாரி ஊடகங்கள் அவ்விரு படங்களையும் வைத்தே அவரை இந்துத்துவர் என்று முத்திரை குத்தின. தன் இயக்கம் பிளவுபடுவதை விரும்பாத அண்ணா அவற்றை நீக்கிக்கொள்ளவேண்டியிருந்தது. இந்த தர்மசங்கடம் காந்திக்கு பல இடங்களில் நிகழ்ந்துள்ளது. ஒவ்வொருமுறையும் ஒற்றுமையை முன்வைத்து சமரசங்களை அவர் செய்திருக்கிறார். ஏனென்றால் பிளவுபடுத்தப்பட்ட மக்கள் போராட்டம் எளிதில் பிசுபிசுக்கும். அதை எதிரிகள் நன்கறிவார்கள்


உதாரணமாக வைக்கம் சத்தியாக்கிரகத்தில் ஆரம்பத்தில் எல்லா காங்கிரஸ்காரர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். ஜார்ஜ் ஜோசப் போன்ற கிறித்தவர்கள், அப்துல் ரகுமான் சாகிப் போன்ற இஸ்லாமியர். ஒருகட்டத்தில் ஆலயபிரவேசம் அனுமதிக்கப்படாவிட்டால் மதம் மாறுவோம் என ஈழவர் தலைவரான குஞ்சுராமன் அறிவித்தார். உடனே ஈழவர்களை ஒட்டுமொத்தமாக மதம் மாற்ற இஸ்லாமிய குழுக்களும் கிறித்தவக்குழுக்களும் களமிறங்கின.


இந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்டு பழமைவாதிகள் இந்த ஒட்டுமொத்த ஆலயநுழைவுப்போராட்டமே இந்துமதத்தை அழிக்க இஸ்லாமியரும் கிறித்தவரும் நடத்தும் சதியே என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். இந்துக்கள் மத்தியில் மிக விரைவில் அந்த பிரச்சாரம் வலுப்பெற்றது, எந்த சந்தேகமும் சீக்கிரம் பரவும். சதி என்று கூச்சலிட்டாலே மக்கள் திரும்பிப்பார்ப்பார்கள்


ஆகவே காந்தி வைக்கம் போராட்டத்தில் உள்ள மாற்றுமதத்தவர் உடனடியாக வெளியேறவேண்டும் என்று கோரினார். அதை ஜார்ஜ் ஜோசப் போன்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுடன் அங்கே தற்காலிக முகாமடித்திருந்த ஈவேராவும் சேர்ந்துகொண்டார். காந்திக்கு எதிரான ஒரு குழுவாக அவர்கள் செயல்பட்டார்கள். ஆனால் காந்திக்கு வேறு வழி இல்லை. போராட்டத்தை அவர் காத்தாகவேண்டும். அதுதான் இங்கேயும் அண்ணா சந்திக்கும் நிலை.


இவ்வாறு பாரதமாதா, விவேகானந்தர் படங்களை அண்ணா ஹசாரே நீக்கியதைச் சுட்டிக்காட்டி அண்ணா காங்கிரஸ் கைக்கூலி என பாரதிய ஜனதாவின் கொள்கை இதழ்கள் பிரச்சாரம் செய்தன. அண்ணா ஹசாரே அரசுக்கு ஒரு வாய்ப்பளித்து தன் போராட்டத்தை ஒத்திவைத்த நிலையில் பாபா ராம்தேவ் களமிறங்கினார். அவருக்கு ஏற்கனவே அரசியல் ஆசைகள் இருந்தன. கட்சி ஆரம்பிக்கப்போவதாகச் சொல்லிவந்தார். இந்த சந்தர்ப்பம் தனக்கு ஒரு தொடக்கமாக இருக்குமென நினைத்தார்


பாபா ராம்தேவ் களமிறங்கியபோது பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் மனத்தடையின்றி அதில் ஈடுபட்டனர். அண்ணா ஹசாரேவின் நோக்கத்தையும் பின்னணியையும் பற்றி ஆயிரம் ஐயங்களை எழுப்பிய இந்துத்துவ இதழ்கள் ராம்தேவை அடுத்த விவேகானந்தர் என்றன. அவரை காங்கிரஸ் தலைவர்கள் ரத்தினக்கம்பளம் விரித்து கொண்டுவந்ததைக் கண்டும் அவர்கள் ஐயப்படவில்லை. காரணம் அவர் அணிந்திருந்த காவி.


ராம்தேவை காங்கிரஸ் அஞ்சியது. காரணம் அவரது மதச்சின்னம். அது பழைய ராமஜன்மபூமி விவகாரம்போல வெடிக்கும் என நினைத்தது. ஆனால் சீக்கிரமே அவர் ஒரு பயந்தாங்குளி என அவர்களுக்கு தெரிந்துவிட்டது. அவருக்கு அவரது சீடர்களும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் மட்டுமே பின்புலம், மக்கள் அல்ல என வெளிப்படையாக தெரிந்தது. ஆகவே சாதாரணமாக அவரை அடித்து துரத்தினார்கள்.


மீண்டும் அண்ணா ஹசாரேவின் போராட்டம் ஆரம்பித்த போது எழுந்த மக்கள் ஆதரவு காங்கிரஸ்,பாரதியஜனதா என இரு கட்சிகளையுமே அச்சுறுத்துகிறது. காங்கிரஸின் அச்சம் இந்த மக்களெழுச்சி அரசு மீதான வெறுப்பாக மாறி அடுத்த தேர்தலை பாதிக்கும் என்பது. அரசுகள் எல்லாமே செய்வதைப்போல முன்னர் செய்ததையே திருப்பி செய்துபார்த்தது காங்கிரஸ். அண்ணாவை கைதாக்கி அச்சுறுத்த முயன்றது. அண்ணா ஹசாரே ராம்தேவ் அல்ல என்று நிரூபணமாயிற்று.


மறுபக்கம் பாரதிய ஜனதாக்கட்சி இந்த மக்கள் எழுச்சியை சாதகமான அலையாக மாற்றமுடியுமா என திட்டமிடுகிறது. ராம்தேவிடம் ஏமாந்த அதன் தொண்டர்படையில் கணிசமானவர்கள் ஏற்கனவே அண்ணா ஹசாரேவுக்குப் பின்னால் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே பாரதிய ஜனதாவின் தலைமை அண்ணா ஹசாரேவை வேறுவழியில்லாமல் ஆதரிக்கிறது.


ஆனால் அவர்களின் அதிதீவிர மையம் அண்ணா ஹசாரேவை ஒரு இடதுசாரியாகவே பார்க்கிறது. காங்கிரஸ் ஏதோ சதி செய்கிறதென்பதே அதன் எண்ணம். அவர்களில் தீவிரவாதிகள் இதை அமெரிக்க சதியாக நினைக்கிறார்கள். அவர்களின் இதழ்களில் அண்ணா ஹசாரே ஒரு ஏமாற்றுப்பேர்வழியாகவே சித்தரிக்கப்படுகிறார்.


காங்கிரஸை அச்சுறுத்துவது லோக்பால் வழியாக பொதுநல ஊழியர்கள் ஆட்சிக்குள் எட்டிப்பார்க்க ஆரம்பித்தால் என்ன செய்வது என்பதே. ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்றவற்றை எதிர்கட்சியுடன் பேரம்பேசி மூன்றுவருடம் பொதுக்கணக்கு குழுவுக்குள் வைத்துக்கொள்ள முடிந்தது, லோக்பால் வந்தால் அது முடியாது. ஆகவேதான் அது லோக்பாலை ஒரு ஒப்புக்குச்சப்பாணி அமைப்பாக ஆக்க முயல்கிறது.


மறுபக்கம் பாரதிய ஜனதாவுக்கும் அதே அச்சம்தான்.அவர்களும் ஆளும்கட்சிதான், பல மாநிலங்களில். நாளை ஒருவேளை மத்தியில். அப்போதும் இதே பொதுநல ஊழியர்கள் உள்ளே வந்தால் என்ன செய்வது? மிதமான அதிகாரம் கொண்ட கர்நாடக லோக் ஆயுக்தா அமைப்பே எதியூரப்பாவை ஓட ஓட துரத்தியிருக்கிறது.


ஆனால் இருதரப்புமே மக்கள் சக்தியை அஞ்சுகின்றன. அண்ணா இந்த அச்சத்தைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். அதுவே சரியானது. இப்போராட்டம் பாரதிய ஜனதாவுக்குச் சாதகமாக சென்றுவிடக்கூடாது என அஞ்சி காங்கிரஸ் சமரசத்துக்கு வநதாகவேண்டும். அதுவே வெற்றியாக அமையும். பாரதிய ஜனதாவைப்பொறுத்தவரை அப்படி சீக்கிரமே சமரசமாகி காங்கிரஸ் தப்பிவிடுமா என்ற ஐயம் காரணமாக அது பதறுகிறது.


இடதுசாரிகளைப்பொறுத்தவரை இந்த எழுச்சி அவர்களுக்குச் சாதகமானதல்ல. ஏனென்றால் இதை அவர்கள் நடத்தவில்லை. இதன் விளைவுகளால் பாரதிய ஜனதா லாபமடையும் என்றால் அவர்களுக்கு அது நஷ்டம். ஆகவே அண்ணாவை எதிர்க்கிறார்கள். ஆனால் லோக்பால் வருமென்றால் அதை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள போகிறவர்கள் அவர்களே. குறிப்பாக தொழிற்சங்க அமைப்புகள். ஆகவே அவர்கள் மென்று முழுங்குகிறார்கள்


கட்சி சாராத ஒரு மக்கள்தரப்பு என்பதை சந்திப்பது இந்த எல்லா அரசியல்தரப்புகளுக்கும் புதிரானதாக உள்ளது ஆகவே ஆளுக்கொரு குரலில் குழப்பிக் குழப்பி பேசிக்கொண்டிருக்கின்றனர். நடுவே அண்ணாவின் இயக்கம் எல்லா மக்களியக்கங்களையும்போல ஒருவகையான தன்னிச்சையான பிரவாகமாக, சமரசங்களும் உத்வேகங்களுமாக முன்னகர்கிறது


அண்ணாஹசாரே இத்தகைய போராட்டத்தில் எந்த நிபந்தனையையும் ஆதரவாளர்கள்மேல் போடமுடியாது. ஏனென்றால் இது தன்னிச்சையான கூட்டம். வருபவர்கள் எல்லாரையும் அவர் ஏற்றாகவேண்டும். அவர்களில் இந்துத்துவர் இருந்தால், அவர்களின் கடைசி நோக்கங்கள் என்னவாக இருந்தாலும், தடுக்கமுடியாது. அதேசமயம் அவர் தன்மேல் இந்துத்துவ அடையாளம் விழுவதை அனுமதித்தால் அதைவைத்தே காங்கிரஸ் அவதூறு செலுத்தும். பாரதிய ஜனதாவின் ஆதரவை விலக்குகிறார். காங்கிரஸையும் பாரதியஜனதாவையும் சமதூரத்தில் வைத்துக்கொள்ள முயல்கிறார். இது ஒரு கத்திமேல் நடை.


ஜெ


இரு இந்துத்துவக்குரல்கள்



1. விஜயவாணி


2.தமிழ்ஹிந்து



இஸ்லாமிய எதிர்ப்பும் அதற்கான எதிர்வினையும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 22, 2011 11:32

அண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?

அன்புள்ள ஜெயமோகனுக்கு,


திரும்ப திரும்ப அன்னாவை பற்றி உங்களிடம் கேள்விகள் வருவதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை. அநேகமாக உங்களுக்கும்? :) . இப்போதைக்கு காந்தியை பற்றி தெரிந்து கொள்ள, இருக்கும் வெகு சிலரில் நீங்களும் ஒருவர் என்ற எண்ணம பரவலாக இருப்பது ஒரு முக்கியமான காரணம் என்றே நினைக்கிறன். ஆகவே கோபப்படாமல் மேலும் ஒரு சில கேள்விகளுக்கு உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். (உண்மையிலேயே உங்கள் கோபம மட்டும்தான் என்னை பயமுறுத்துகிறது அதுவும் எழுத்து மூலமாக மட்டும்!! நேரில் எப்படியோ :) ..)


அன்னாவின் போராட்டத்தை எதிர்ப்பவர்கள் ஆதரிப்பவர்களை அறிவுஜீவிகள் என்றும், இவர்கள் அவர்கள் அறிவு ஜீவிகள் என்றும் குறிப்பிடுவதை நானும் படித்து தெளிவாக நான் அறிவு ஜீவி இல்லை என்ற முடிவுக்கே எப்போதோ வந்து விட்டேன். எனவே தொனியில் ஏதும் பிழை இருந்தால பொறுத்து கொள்ளவும்..!


எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் எப்போதும் உண்டு. அன்னாவின் போராட்டத்திற்கு இப்போது ஆதரவளிக்கும் அத்தனை பேரும் இது வரை குறைந்த பட்சம் பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதற்காகவாது லஞ்சம் கொடுக்காமல் இருந்திருக்கிறார்களா?. மிகவும் முரண்பாடான ஒரு நடுத்தர சமூகம் நமது.


"அவன் திறமை சாலி அரசு வேலையில் சேர்ந்த உடனே புடிக்க வேண்டிய ஆளை பிடிச்சு..மேல போய் அஞ்சு வருசத்தில கார், பங்களா ன்னு செட்டில் ஆயிட்டான்",


"கஷ்ட்டப்பட்டு(?) லஞ்சம் கொடுத்து இந்த சீட் வாங்கி குடுத்திருக்கேன்..ஒழுங்கா படி"..


"திடீர்னு ஆபீஸ்-ல பாரின் போக சொல்லிட்டாங்க. அதான அவசர அவசரமா ஆளை புடிச்சு பத்து நாளில் பாஸ்போர்ட் வாங்கிட்டேன்..எட்டாயிரம் ஆச்சு"..


இதெல்லாம் ரொம்ப சாதரணமாக கடந்து செல்லும்..நடுத்தர கூட்டம்தான்.."ஆமாம் ஆமாம் ஊழல் ஒழிக!" என்று கூச்சல் போடுகிறது.


இவர்களில் யாருக்காவது குப்பை அள்ளுகிற அரசு ஊழியனுக்கு காசு கொடுக்க முடியாது என்று சொல்லும் தைரியம் உண்டா?.. ஆனால் தார்மீக ஆதரவு தரலாம்..காசா பணமா?.. கழுதையை தந்துட்டா போகுது..அப்படிப்பட்ட பொறுப்புள்ள சமூகம்தான் இது??..


பேங்கில் வரிசையில் நிற்கும்போது..வேலையை பார்க்காமல் பேசிக்கொண்டிருந்த ஊழியரை கண்டித்த ஒருவரை..மக்கள் எல்லாரும் சேர்ந்து திட்டியதை பார்த்திருக்கிறேன்.. "பாருங்க உங்களால சார் கோவிச்சிக்கிட்டார். எங்க எல்லாருக்கும் வேலை லேட். ஒரு பத்து நிமிசம் பேசிட்டு வந்து அவர் பாட்டுக்கு வேலை பார்த்திருப்பார்.." என்று கூறி அவரை மன்னிப்பு கேட்க வைத்த கூட்டம்தான் நமது சமூகம்.. ..! தனிப்பட்ட வாழ்கையில் எனக்கு இதை போல நிறைய அனுபவங்கள்..!


"அட விடுங்கப்பா..டிவி-ல பாக்கும்போது..ஆமா..ஆமா ஊழல் ஒழியனும்னு சொன்னா போதும்".. தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மை தேவை இல்லை..என்ற எண்ணம உடையது தானே நம் சிறந்த ஊழல் எதிர்ப்பு சமூகம்?..இதுதான் காந்தி எதிர் பார்த்த மக்கள் எழுச்சியா?..


இவ்வளவு ஏன்.. (இதை எழுதும்போது தான் எனக்கு ரொம்ப பயமா இருக்கு… வேறு ஏதும் காரணம் இருந்து..நீங்கள் என்னை திட்டி விடுவீர்கள் என்று..)

நீங்களே கூட கொஞ்ச நாளுக்கு முன் நாகர்கோவிலில் ஒரு போராட்டம் இருந்தவரை "கோட்டி" என்று குறிப்பிடவில்லை?. (தவறு இருந்தால மன்னிக்கவும்).


அரசியல்வாதிகள் திருந்துவது என்பது..அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகளால் ஏற்படாது என்பதே என் எண்ணம. ஊழல் செய்வதில் என்ன தவறு செய்ததால் மாட்டி கொண்டோம் என்றுதான் யோசிப்பர்களே தவிர ஊழல் தவறு என்று ஒருபோதும் யோசிக்க மாட்டார்கள்.


உண்மையிலே வருத்தமாக இருக்கிறது. 'எனக்கு வேலை ஆகணும்..அதற்காக லஞ்சம் கொடுப்பேன். ஆனா லஞ்சதை ஒழிக்க நானும் குரல் கொடுப்பேன்" என்னவிதமான பொறுப்பை தட்டி கழிக்கும் பாங்கு இது?. இவர்களுக்காக போராட ஒரு காந்தி வேண்டும், அன்னா வேண்டும்..அனால் இவர்கள் அப்படியேதான் இருப்பார்கள்.


எனக்கு தெரிந்தவரையில் (சிறு அறிவுக்கு எட்டிய வரையில்)..இருக்கும் சட்டங்கள் போதும்..எந்த சட்டமும் ஊழலுக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஏற்பட வேண்டிய மாற்றம் மக்களிடம்தான்..ஒரு குறைந்த பட்ச நேர்மை ஒவ்வொருவரிடமும் இருப்பது..அஸ்திவாரத்தை ஆட்டும். அது எல்லா மாற்றங்களையும் கொண்டு வரும். அன்னா இதே எழுச்சியை..'லஞ்சம் கொடுக்க மாட்டோம்' என்று மக்களை உறுதி எடுக்க வைத்தால் அதன் மூலம் வரும் மாற்றம் நிரந்தரமாகவும், ஓட்டு மொத்தமாகவும் இருக்கும் இல்லையா?'. அப்படி வாங்குபவர்களை பற்றி புகார் கூற தைரியம் மட்டும் அல்ல..நேர்மையும் வேண்டும்.. கொடுக்காதவர்கள்தானே வாங்கக்கூடாது என்று சொல்ல முடியும்?..


லஞ்சம் கொடுக்க மாட்டோம் என்ற உணர்வுதான் காந்தியின் அந்நிய துணி பகிஷ்கரிப்பு போன்றது..! "நீங்க அந்நிய துணியை போடுவீர்களோ மாட்டீர்களோ எனக்கு கவலை இல்லை..! ஆனால் அந்நிய துணியை விக்கிறவன் எல்லாத்துக்கும் தண்டனை வாங்கி தர்றதுக்கு புது சட்டம் வரணும்"..இப்படியா காந்தி போராடினார். மாற்றம் ஏற்பட வேண்டியது யாரிடம் என்பது அவருக்கு தெளிவாகவே தெரிந்திருக்கிறது..! இன்றும் அந்த மாதிரியான மாற்றம்தான் தேவை படுகிறது.


அந்த மாற்றத்தை கொண்டு வர அண்ணாவை போன்ற காந்திய கொள்கை உடைவரால் முடியும் என்பதே என் எண்ணம.


மற்றபடி அன்னாவின் போராட்டத்தை கொச்சை படுத்தி வாழ்பவர்கள்..மிக கீழ்த்தரமான அரசியல் வாதிகள் கூட்டம்தான்… ஒரு கூட்டம்..அவரை காந்தியின் நீட்சியாக பார்த்து..அவருக்கு எதிராக இருந்த அதே அடிப்படைவாத மனநிலையை கொண்டுள்ளது..இன்னொன்று..அவர் அருகில் அமர்ந்திருக்கும் காவி நிறத்தை பார்த்து பயபடுகிறது…அவ்வளவுதான். !


எதுவும் தவறு இருந்தால் மன்னிக்கவும்!!




Thanks & Regards,

Kaliraj G


[image error]


அன்புள்ள காளிராஜ்,


உங்கள் கேள்வியில் உள்ளவை சில எளிமையான முன்முடிவுகள் மட்டுமே. வரலாற்றுநோக்குடன் விரிவாகப் பிரச்சினையைப்பார்க்காமல் உடனடி எண்ணங்களை உருவாக்கிக் கொள்கிறீர்கள்.


இன்று இந்திய மக்களிடம் குடிமையுணர்ச்சி இல்லை, பொதுவாழ்க்கையில் நேர்மை தேவை என்ற எண்ணம் இல்லை, அவர்களும் அன்றாடவாழ்க்கையில் எல்லா சமரசங்களுக்கும் தயாராக இருக்கிறார்கள் என்பது உண்மை.


ஆகவே அதற்கு தீர்வு 'ஒவ்வொருவரும் மனம்மாறுவதே' என்று சொல்வதைப்போல அப்பாவித்தனமான பேச்சு ஒன்று உண்டா என்ன? அப்படியானால் அரசியலியக்கமே தேவை இல்லையே.


சரி, ஒவ்வொருவரும் எப்படி மாறுவார்கள்? லஞ்சம் தப்பு என்று நம் மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் இல்லையா? அவர்கள் அதையெல்லாம் தெரியாத அப்பாவி கூட்டம், சொல்லி புரியவைத்தால் உடனே மாறிவிடுவார்கள் இல்லையா?


எந்த சமூகப்பழக்கமும், சமூகக் கருத்தும் ஒரு வாழ்க்கை முறையாக மாறித்தான் நீடிக்கிறது. அந்த வாழ்க்கைமுறை நிலவும்போது ஒரு தனிமனிதர் அதிலிருந்து வெளியே செல்ல முடியாது. தங்கள் இலட்சியத்துக்காக எதையும் இழக்க தயாரானவர்கள் அதைச் செய்வார்கள். சாமானியர் செய்ய முடியாது. அவர்கள் தாங்கள் பிறந்து விழுந்த, தங்களைச்சூழ்ந்துள்ள, வாழ்க்கையையே வாழ்வார்கள்.


அப்படியானால் ஒரு சமூகப்பழக்கம், ஒரு சமூகக் கருத்து எப்படி மாறுதலடைகிறது? ஒட்டுமொத்தமாக சமூகத்தையே பாதிக்கும் கருத்துக்கள்மூலம்தான். அவ்வாறு ஒரு சமூகம் முழுக்க கருத்துக்களை கொண்டு செல்வதற்கு சிறந்த வழி என்ன? ஒட்டுமொத்தமாக சமூகத்தையே கவனிக்கச்செய்யும் பிரம்மாண்டமான சமூகப்போராட்டங்கள் மட்டுமே.


அதைத்தான் காந்தி சொன்னார். இந்தியசமூகத்தின் மனத்தில் ஆழ வேரூன்றியது தீண்டாமை. அதை எதிர்க்க ஆலயப்பிரவேச போராட்டத்தை அவர் நிகழ்த்தினார். அது முதலில் அதிர்ச்சியை பின் குழப்பத்தை பின்னர் மெல்லிய கிளர்ச்சியை உருவாக்கியது. இந்திய சமூகத்தில் அதில் ஈடுபட்டவர்கள் மிகச்சிறுபான்மையினர். அதை வெளிப்படையாக ஆதரித்தவர்கள் சிறுபான்மையினர்.


1923 ல் வைக்கத்தில் கோயில் நுழைவு போராட்டத்தை காந்தி ஆரம்பித்து 1935 வரை இந்தியா முழுக்க விரிவாக்கம்செய்து நடத்தியபோது அன்றைய சமூகம் ஆற்றிய எதிர்வினைகளை இன்று வாசித்தால் ஆச்சரியமாகவே இருக்கும். மதகுருக்களும் அறிவுஜீவிகளும் எல்லாம் காந்தியை இகழ்ந்திருக்கிறார்கள். ஐயப்பட்டிருக்கிறார்கள். ஒதுங்கி நின்று இலவச ஆலோசனைகளை பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார்கள்.


அன்று சொல்லப்பட்ட எல்லாமே இன்று அண்ணா பற்றி சொல்லப்படும் வரிகளே. காந்தி அவசரப்பட்டு விட்டார் என்றுதான் மீண்டும் மீண்டும் எழுதியிருக்கிறார்கள். இந்தியாவை மன அளவில் தயாரிக்காமல் காந்தி களத்தில் இறங்கி அதிரடியாக செயல்படுகிறார் என்றார்கள். 'ஒவ்வொரு மனிதனும் தீண்டாமை தவறு என்று உணர்ந்தாலே போதும் தானாகவே கோயில் நுழைவு நடக்கும்' என்று காந்திக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள்.சில தலித்துக்கள் கோயிலில் நுழைந்தால் என்ன பெரிதாக நிகழ்ந்துவிடப்போகிறது என எழுதியிருக்கிறார்கள்.


ஆனால் அந்த போராட்டம் இந்திய சமூகமனத்தில் ஆழத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கியது. சராசரி இந்துவின் சாதிசார்ந்த இறுக்கங்கள் தளர்ந்து இங்கே ஒரு ஜனநாயக குடிமைச்சமூக அமைப்பு உருவாக அதுவே காரணம். வெறும் இருபதாண்டுகாலம் கழித்து 1947ல் இந்தியாவின் சுதந்திர அரசு அதிகாரபூர்வமாக தலித்துக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தபோது அன்றைய இந்திய சமூகம் அதை இயல்பாக ஏற்றுக்கொண்டமைக்கு பின்னால் உள்ள கருத்தியல்அங்கீகாரம் அந்த ஆலயப்போராட்ட காலத்தால் காந்தியால் உருவாக்கப்பட்டதுதான்.


எந்த சமூகமாற்றமும் இத்தகைய ஒட்டுமொத்தமான சமூகப்போராட்டங்கள் மூலம் உருவாகும் தீவிரமான கருத்துப்பிரச்சாரம் வழியாகவே நிகழும். அன்னியத்துணி போராட்டமும் அப்படித்தான். அன்னியத்துணிகளைப் போடக்கூடாது என்று காந்தி சொன்னால் போதுமே, எதற்காக வீடு வீடாகச் சென்று பேசி வற்புறுத்தி முச்சந்தியில் போட்டு எரிக்கும் போராட்டத்தை நடத்த வேண்டும்?


மேலும், அது அன்னியத் துணிகளுக்கு எதிரான போராட்டம் அல்ல. நாம் நம் தேவையை நாமே நிறைவேற்றிக்கொள்ளவேண்டுமெனக் கோரும் போராட்டம். நாம் பொருளியல் ரீதியாகச் சுரண்டப்படுகிறோம் என நம் மக்களே உணரவைக்கும் போராட்டம். அந்த உணர்ச்சியை அந்த அன்னியத்துணி புறக்கணிப்புப் போராட்டம் மூலம் உருவாக்கியமையாலேயே இந்திய மக்களுக்கு பிரிட்டிஷார்மேல் இருந்த மயக்கம் கலைந்தது. தேசிய இயக்கம் மக்களியக்கமாக மலர்ந்தது.


இப்போது அண்ணா ஹசாரே உருவாக்கும் போராட்டமும் அப்படித்தான். அதன் நிகர விளைவு என்பது நம் சமூக மனத்தில், கோடிக்கணக்கான இளைஞர்களில், பொதுவாழ்க்கையின் ஊழலுக்கு எதிராக உருவாகும் நகர்வுதான். அப்படித்தான் இங்கே ஒரு சமூக மாற்றம் வரமுடியும். ஒரு போராட்டத்தால், ஒரு கோரிக்கை வெற்றி பெறுவதால் அது நிகழாது. அத்தகைய பல போராட்டங்கள் வழியாக மெதுவாக சமூக மனத்தில் அது உருவாகி வரும்.


எல்லா குடிமையுணர்ச்சிகளும் அப்படித்தான் உருவாகி வருகின்றன. பெருந்திரள் போராட்டங்கள் மூலம் உருவாகும் மறைமுகமான ஒட்டுமொத்தமான கருத்தியல் மாற்றமே சமூகத்தை மாற்றியமைக்கிறது. சட்டங்களை செய்வதும், எதிர்ப்பதும் எல்லாம் அந்த மாற்றத்தை நிகழ்த்துவதற்கான மேல்தள முயற்சிகளே


சென்ற கால்நூற்றாண்டை நீங்கள் பார்க்கமுடிந்தால் அப்படி எவ்வளவு மகத்தான மனமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என எளிதில் உணரலாம். ஏன் 2002 ல் நாகர்கோயிலில் ஒரு தொண்டு நிறுவனம் மூன்றாம்பாலினத்தவர்களுக்கு ரேஷன் கார்டு கொடுக்கவேண்டும் என்று ஒரு போராட்டத்தை நடத்தியபோது செய்திகள் கிண்டலான தொனியிலேயே வெளியிடப்பட்டன. மக்கள் கூடி நின்று சிரித்தார்கள். இன்று பத்து வருடம் கழித்து அவர்கள் தங்களுக்கான சட்டங்களுக்காக போராடும்போது 'அவுங்களுக்கும் ரைட் இருக்கில்லாடே' என மக்கள் சொல்வதை கேட்கிறேன்.


இப்படித்தான் மக்களியக்கங்கள் நிகழ முடியும். இப்படித்தான் காந்திய யுகத்தில் நிகழ்ந்தது. உலகமெங்கும் காந்தியப்போராட்டங்கள் இப்படித்தான் நிகழ்கின்றன. நாளையும் இப்படியே நிகழும். வேறு வழியே இல்லை.


ஜெ




வைக்கமும் காந்தியும் 1


வைக்கமும் காந்தியும் 2


ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1


ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2


அண்ணா ஹசாரே கடிதங்கள்..


அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…


அண்ணா ஹசாரே,வசைகள்


அண்ணா ஹசாரே-2


அண்ணா ஹசாரே-1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 22, 2011 11:30

பஷீர் காணொளி

அன்புள்ள ஜெ


வைக்கம் முகமதுபஷீரின் பேட்டி, காணொளி


httpv://www.youtube.com/watch?v=Cj7DqtnGbIE


httpv://www.youtube.com/watch?v=zMAkGaahQzQ


எஸ்.ராம லக்‌ஷ்மணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 22, 2011 11:30

அண்ணா-எதிர்வினைகள்

"நாளையே விளம்பரத்துக்காக மட்டுமே பொதுவாழ்க்கையில் இருக்கும் அருந்ததி

ராய் போன்றவர்களும் இப்படிக் கிளம்பக்கூடும்."


வந்து விட்டார்!


இன்றைய இந்து நாளிதழில் அவரது " நான் அன்னாவாக இல்லாமல் தான் இருப்பேன்

" என்ற கட்டுரையை யாராவது படித்தீர்களா..? அவர் கருத்து, "அன்னாவின்

வழிமுறைகள் வேண்டுமானால் காந்திய வழியிலிருக்கலாம். ஆனால் கோரிக்கைகள்

கண்டிப்பாக அப்படி அல்ல "


அன்னாவின் போராட்டத்தை பல்வேறு வழிகளில் ஆய்வு செய்து எழுதப்பட்டு வரும்

தொடர்கட்டுரைகளைப் படித்துக்கொண்டிருந்தபோது மேசையில் வந்து விழுந்தது

பேப்பர். அருந்ததியின் தன்னம்பிக்கை பிரமிக்க வைக்கிறது. என்ன செய்ய..?


வினோத்


http://www.thehindu.com/opinion/lead/article2379704.ece?homepage=true


அன்புள்ள வினோத்,


அருந்ததி வெளிவராமல் இருக்கமுடியாதென நான் அறிவேன், ஆகவேதான் சொன்னேன். அந்தப் பெண்மணியின் இலக்கு விளம்பரம் மட்டுமே.


இன்று அண்ணா ஹசாரே பற்றி அக்குவேறு ஆணிவேறாக கழற்றி ஆராய்ச்சி செய்யும் கும்பல் இன்றுவரை அருந்ததி பற்றி என்ன சொல்லியிருக்கிறதென பாருங்கள். அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் நேர்மை என்றாவது விவாதிக்கப்பட்டிருக்கிறதா? அவரது ஆர்ப்பாட்டங்களும் அதிரடிகளும் ஜனநாயகச் செயல்பாடுகள் என்றுதானே இவர்கள் பேசினார்கள்? நீதிமன்றத்தை அவமதித்து எழுதி ஒருநாள் சிறையிலிருந்ததை காந்தி சிறைசென்றதற்கு நிகராக எழுதினார்கள். அன்றெல்லாம் அந்த அம்மணியின் கலாட்டாக்களுக்கு ஏதேனும் பயன் உண்டா என்று எவரேனும் கேட்டிருக்கிறார்களா?


குறைந்தபட்சம் அவரிடம் 'ஏய் நீ யார்?' என்றாவது கேட்டிருக்கிறார்களா? உன் பின்னணி என்ன, நாட்டுக்காகவோ மக்களுக்காகவோ நீ எதையாவது எப்போதாவது இழந்திருக்கிறாயா? ஒரு கேள்வி வந்திருக்கிறதா? அண்ணா ஹசாரே எங்கிருந்தார் என்று கேட்பவர்கள் இந்த அம்மணி எங்கிருந்தார் என்று உசாவியிருக்கிறார்களா?


ஒரு அசட்டு பைங்கிளி நாவலை எழுதி அரைநிர்வாண படம் போட்டு விற்ற பெண் எப்படி ஒரு தேசிய குரலாக முடியும் என எவரும் கேட்கவில்லை. ஆனால் காந்திய நிர்மாணத்திட்டத்தில் சாதனைகளைச் செய்து காட்டி முப்பதாண்டுக்காலம் பொதுவாழ்வில் போராடிய மனிதர் எப்படி தேசியக்குரலாக முடியும் என வெட்கம் மானமில்லாமல் வந்து ஊடகங்களில் கேட்கிறார்கள் அயோக்கியர்கள்.


ஏன்? ஏனென்றால் அண்ணா இந்த நாட்டு மக்களின் குரலாக ஒலிக்கிறார். இந்தியா மேல், இதன் கோடானுகோடி மக்கள் மேல், அவர்களின் ஆன்மீகவெளிப்பாடான இதன் ஜனநாயகம் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார். இந்தப்பெண்மணி இந்த நாடு உடைந்து அழிய விரும்புகிறார். இந்த ஜனநாயக மதிப்பீடுகளை அழிப்பதற்காக மட்டுமே எழுதுகிறார். இதன் மக்களின் ஆன்மாவை ஒவ்வொரு கணமும் அவமதிக்கிறார்.


கூலிப்படை அறிவுஜீவிகளுக்கு அப்பால் பார்க்கும் கண் என்று நமக்கு வாய்க்கும்?


ஜெ


ஜெ


http://viduthalai.in/new/headline/16358-2011-08-22-05-45-30.html#.TlH1t-UWIPM.facebook


முடியல!


கார்த்திகா பேச்சிநாதன்


அன்புள்ள கார்த்திகா பேச்சிநாதன்,


நமீதாவை நான் சந்தித்திருக்கிறேன். அவராலும் பிழையில்லாமல் ஆங்கிலம் பேசமுடியும். அருந்ததி ராய்க்கு இருக்கும் தகுதி அவருக்கும் இருக்கிறது.


ஜெ


அன்ணா ஹசாரே, சோ ,ஞாநி


ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1


ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2


அண்ணா ஹசாரே கடிதங்கள்..


அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…


அண்ணா ஹசாரே,வசைகள்


அண்ணா ஹசாரே-2


அண்ணா ஹசாரே-1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 22, 2011 02:42

August 21, 2011

ஜான்சன் சில பாடல்கள்

அன்பு ஜெ,


ஜான்சனைப்பற்றிய உங்களுடைய சுருக்கமான குறிப்பு கண்டேன். மனம் நெகிழ்ந்தேன். நானும் உங்கள் ஊருக்கு பக்கம்தான். களியிக்காவிளை. ஜான்சனின் சிறந்த எல்லா பாடல்களையும் சொல்லமுடியாதுதான் என்றாலும் சில மிகமுக்கியமான பாட்டுகளை விட்டுவிட்டீர்கள் என நினைக்கிறேன். அதை சுட்டிககட்டியிருக்கிறேன்


ஸ்ரீதர்


கல்கத்தா


கண்ணீர் பூவின்றே கவிளில் தலோடி



மௌனசரோவரம் ஆகே உலஞ்ஞு



மதுரம் ஜீவாம்ருத பிந்து



பழந்தமிழ்பாட்டுணரும்


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2011 11:41

காந்தியின் தேசம்

என் நண்பர் ஒருவர் சொன்னார். ஓர் இடதுசாரி அவரிடம் சொன்னாராம்,  ராமச்சந்திர குகா எழுதிய 'இந்தியவரலாறு-காந்திக்குப்பிறகு' என்ற இருபாகங்களினாலான சமகால வரலாற்று நூல் ஓர் இந்துத்துவநூல் என்று.ஒருவேளை ராமச்சந்திர குகா இந்த விமர்சனத்தை வேறெங்கிருந்தும் சந்தித்திருக்க மாட்டார் என நினைக்கிறேன். நான் ஆச்சரியத்துடன் கேட்டேன் 'ஏன் அப்படிச் சொல்கிறார்?' என்று .அது, 'இந்தியாவைப் புகழ்ந்து பேசுகிறது'என்று அந்த நண்பர் சொன்னாராம். நம் இடதுசாரிகள் அளவுக்கு விசித்திரமான பிறவிகளை வேறெங்கும் பார்க்கமுடியாது. இங்கே இடதுசாரி அரசியல் என்பது எந்த மதத்தை விடவும் ஆழமான மூடநம்பிக்கைகளால் ஆனது. வாசிப்புக்கும் சிந்தனைக்கும் எதிரானது.


இந்தியா உடைந்து சிதறவேண்டுமென இடதுசாரிகள் எதிர்பார்க்கிறார்கள். அப்போதுதான் அதை சீனாவின் ஆதிக்கத்துக்குள் எளிதில் கொண்டுசெல்ல முடியும். எளிதில் சிவப்பாக்க முடியும் திபெத் போல நேபாளம் போல. ஒருங்கிணைந்த இந்தியா என்றைக்குமே சீனாவுக்கு எதிரான சக்தி. அவர்களின் வரலாற்றுத்தர்க்கம் இது உடையும் என்றே சொல்கிறது. ஏன் உடையவில்லை என்று புரியவில்லை


கிழக்கு வெளியீடாக ஆர்.பி.சாரதி மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள குகாவின் நூலின் சாராம்சமான கேள்வி உண்மையில் அதுதான். இந்தியா பெருங்குழப்பத்தில் கலவரத்தில் அவநம்பிக்கையில் பிறவிகொண்ட தேசம். 1947ல் நிகழ்ந்த கலவரங்களைக்  கண்ட எந்த அரசியல் நிபுணரும் இந்தியா சில ஆண்டுகள்கூடத் தாக்குப் பிடிக்காது என்றுதான் நினைத்திருப்பார். உண்மையில் தேசியத்தலைவர்களுக்கே அந்த எண்ணம் இருந்திருக்கலாம்.  இந்தியாவைச்சுற்றி இருந்த எல்லா நாடுகளும் ஜனநாயகத்தை இழந்தன. பொருளாதார ரீதியாகப் பெரும் சரிவைச் சந்தித்தன.



[ராமச்சந்திர குகா]


ஆனால் இந்தியா அரைநூற்றாண்டுகளாக ஜனநாயக நாடாகவே நீடிக்கிறது.  மெதுவாக என்றாலும் உறுதியான பொருளியல் வளர்ச்சியை அடைந்துகொண்டிருக்கிறது. அதன் அத்தனை சிக்கல்களுடனும் போராட்டங்களுடனும் இன்னும் உயிருள்ள ஒரு பண்பாட்டையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. அது ஏன் என்ற கேள்வியைத்தான் இந்தப் பெரிய நூல் மிக விரிவாக நுட்பமான தகவல்களினூடாக விவாதித்துக்கொண்டிருக்கிறது. இந்தியா உடைந்து சிதறுவதற்கான எல்லா நியாயங்களும் இருக்கிறது, உடைந்து சிதற எந்த வாய்ப்பும் இல்லை என்றே இந்நூல் முடிகிறது. அந்த விந்தையை இதுவரையிலான அரசியல் வரலாற்றைக் கறாரான தகவல்கள் வழியாக விவரிப்பதனூடாகக் கண்டடைய முயல்கிறது.


ஆகவே நம் இடதுசாரி மூடநம்பிக்கையாளர்களின் கசப்பு விளக்கக்கூடியதுதான். அவர்கள் இந்தியாவின் வரலாறு,பண்பாடு, சமகால ஜனநாயகம்,பொருளியல் அனைத்தைப்பற்றியும் மிக இருண்ட ஒரு சித்திரத்தையே உருவாக்கிவந்திருக்கிறார்கள். ரஜனிபாமி தத்தின் 'இன்றைய இந்தியா' முதல் இன்று வரும் நாளிதழ் கட்டுரைகள் வரை அந்த மனநிலையைக் காணலாம். அவர்கள் அளிக்கும் அத்தனை தகவல்களையும் இன்னும் நுட்பமாகவும் விரிவாகவும் திரட்டி அளிக்கிறார் குகா.  அதேசமயம் கடந்த அறுபதாண்டுக்காலத்தில் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் மேற்கத்திய தாராளவாத அரசியல் ஆய்வாளர்களும் இடதுசாரி ஆய்வாளர்களும் இந்தியா பற்றி முன்வைத்த மிக இருண்ட ஆருடங்கள் எப்படிப் பொய்த்துப்போயின என்று சொல்கிறார். இன்றுவரை அவர்கள் உருவாக்கும் எதிர்மறைச்சித்திரம் எத்தனைதூரம் உள்ளீடற்றது என உடைத்துவைக்கிறார்.


அதேபோல இன்று இந்தியா பற்றி அதே மேலை ஆய்வாளர்கள் முன்வைக்கும் சாதகமான ஆருடங்களையும் தகவல்களின் அடிப்படையில் நிராகரிக்கிறார் குகா. இந்நூல் உண்மையில் இந்தியாவைப் புகழ்வதோ வாழ்த்துவதோ அல்ல. சொல்லப்போனால் இந்நூல் காட்டுமளவுக்கு இருண்ட சித்திரங்களை உள்நோக்கமும் குரோதமும் கொண்ட மேலைஆய்வாளர்களும் இடதுசாரிமூடநம்பிக்கையாளர்களும்கூட முன்வைத்ததில்லை. இந்நூல் அதனூடாக ஓடும் அந்த வசீகரமான மர்மத்தை மட்டுமே அறியமுயல்கிறது.


குகா அவரது நூலை இப்படி முடிக்கிறார். ' இந்தியாவின் எதிர்காலம் கடவுளின் கையில் இல்லை, சாதாரண மனிதர்களின் கையில் உள்ளது என்றுதான் சொல்லவேண்டும். இந்திய அரசியல்சட்ட்டம் உருத்தெரியாத அளவு திருத்தப்படாவிட்டால், தேர்தல்கள் உரிய காலத்தில் முறையாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட்டால், மதச்சார்பின்மை பெரும்பாலும் பரவியிருந்தால்,நாட்டுமக்கள் தாங்கள் விரும்பும் மொழியில் எழுதவும் பேசவும் முடிந்தால், ஒருங்கிணைந்த சந்தையும் சுமார்திறமைகொண்ட ஆட்சிப்பணி அமைப்பும் இருந்தால், கூடவே சொல்ல மறந்துவிட்டேனே இந்திப்படங்கள் பார்க்கப்பட்டுப் பாடல்கள் கேட்கப்பட்டால் இந்தியா நிலைத்துவாழும்'


குகாவின் பட்டியலில் முதலாவதாகச் சொல்லப்படுவது இந்திய அரசியலமைப்புச்சட்டம்தான். ஒரேநாடாக இந்தியாவை இன்றும் காப்பாற்றிவருவதில் அரசியலமைப்புச்சட்டத்தில் இருக்கும் தொலைநோக்குப்பார்வை,ஜனநாயகப்பிடிப்பு,நடைமுறை நோக்கு மற்றும் இலட்சியவாதத்துக்கு பெரும் முக்கிகியத்துவம் உண்டு. இன்றும் இந்தியாவின் எந்த அறச்சிக்கலும் அரசியலமைப்புச்சட்டத்தின் நோக்கங்களுக்கு இசைவாக விளக்கப்படுமென்றால் நியாயமாகவே அதன் எல்லா குடிகளாலும் உணரப்படுகிறது. குகாவின் நூல் முழுக்க அதற்கான ஆதாரங்களைக் காணலாம்.அந்த அரசியல்சட்டம், அடிபப்டையில் காந்தி அரைநூற்றாண்டுகளாகப் போராடிவந்த விழுமியங்களுக்காக நிலைகொள்வதாக உறுதிகொண்ட ஒன்று. . அரசியலமைப்புச்சட்டத்தின் சிற்பிகளான அம்பேத்கார் தலைமையில் அமைந்த குழுவுக்கு இந்தியா கடமைப்பட்டுள்ளது.


ஒரு தேசமாக இந்தியாவை நிலைநாட்டுவதில் காந்தி என்ற குறியீட்டுக்கு, காந்தியம் என்ற கோட்பாட்டுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை விளக்கும் குகாவின் நூல் பலநூறு ஆதாரங்களை சாதாரணத் தகவல்களாகவே அளித்துச்செல்கிறது. உதாரணமாக இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல்.1952இல் இந்தத் தேர்தலை இந்தியா சந்திக்கும்போது அப்போதுதான் அரசியல்சட்டம் எழுதிமுடிக்கப்பட்டிருந்தது. சுதந்திரம் பெற்று ஐந்தாண்டு ஆகாத தேசத்தில் பலபகுதிகளில் சுதேசிமன்னர்கள் அப்போதும்கூட செல்வாக்குடன் இருந்தனர். மக்களில் கணிசமானவர்களுக்கு இந்தியா என்ற தேசம் பற்றிய பிரக்ஞையே இல்லை. ஜாதியால் மதத்தால் இனத்தால் நிறத்தால் மொழியால் பிரிந்து கிடந்த பலநூறு மக்கள்கூட்டங்களின் பெருந்தொகையாக இருந்தது இந்தியா. அனைத்துக்கும் மேலாக ஜனநாயகத்தைப்புரிந்துகொள்ளும் கல்வியறிவு பெரும்பாலானவர்களுக்கு இருக்கவில்லை


ஆகவே இந்தியாவின் முதல் தேர்தல் பெரியதோர் அற்புதமாக இருந்தது. அது வெற்றிகரமாக நிகழ்ந்ததே இன்றும் நீடிக்கும் இந்திய ஜனநாயகத்துக்கான அடிப்படையை அமைத்தது. இந்திய அரசியல்சட்டத்துக்கு இந்தியமக்கள் அளித்த அங்கீகாரம் அது. அந்த அங்கீகாரத்தை இமயம் முதல் குமரி வரை ஒரே குரலில் மிகமிகப்பெரும்பான்மை வாக்குகள் வழியாக இந்திய மக்கள் அளித்ததற்குக் காரணமாக அமைந்தது காந்தி என்ற ஒற்றைச்சொல். அதைத் தன் அடையாளமாக முன்வைத்த நேருவின் ஆளுமை. அதை முதல் தொகுதியிலேயே மிகத்தெளிவாக முன்வைக்கிறார் குகா


இரண்டாவது பகுதி,நேருவின் மரணத்துடன் ஆரம்பிக்கிறது. முதல் பகுதி காட்டிய நேரு உண்மையில் ஆட்சியாளருக்கு அவசியமான நடைமுறை நோக்கு குறைவான இலட்சிவாதி மட்டுமே. அவரது வாழ்க்கையின் இறுதிக்காலம் மனமுடைந்த நிலையில் இருந்தது. சீனா இந்தியாமேல் தொடுத்த போர்,தன் வசீகரத்தின் மீதும், தார்மீகத்தின் அடிப்படை வல்லமை மீதும் நேருவிற்கு இருந்த நம்பிக்கையை குலைத்தது. அவரைக் கிட்டத்தட்ட செயலற்றவராக ஆக்கியது. பெரும் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் அவர் ஐம்பதுகளில் ஆரம்பித்த பெருந்தொழில்மயமாக்கம் வறுமை ஒழிப்புக்குப் பெரிய அளவில் உதவவில்லை. கிராமப்புறங்களில் சுதந்திரத்தின் மறுமலர்ச்சி உருவாகவில்லை என்பதை நேரு கண்டார். வாழ்நாளெல்லாம் காந்தியக்கொள்கைகளை எதிர்த்து நவீனமயமாதலை ஆதரித்துவந்த நேரு அந்நம்பிக்கையை இழந்தார். காந்திய வழிமுறைகளை நோக்கிச் செல்லவும் மனமில்லாதவராக இருந்தார். 1964ல் அவர் மறைந்தார்



வழக்கம்போல நேருவின் மரணத்துக்குப்பின் இந்தியா அழியும் என ஆருடங்கள் கிளம்பின. இந்தியாவின் ஜனநாயகமே நேரு என்ற மனிதரின் ஆளுமையின் கவர்ச்சியால் உருவான ஒரு கொப்புளம் மட்டுமே என்றனர் ஆய்வாளர்கள். அதற்கேற்ப இந்தியா பஞ்சத்தால் இருண்டு கிடந்தது. மொழிவழி மாநிலப்பிரிவினைக்கான கிளர்ச்சிகள் மனக்கசப்புகளாக ஆகிப் பிராந்தியவாதங்களாக வளர்ந்திருந்தன. ஆனால் காங்கிரஸ் எளிதாகவே அடுத்த தலைவரைக் கண்டுகொண்டது. இந்தியாவின் அமைப்பு,சிறு கசங்கலுமில்லாமல் தலைமை மாற்றத்தை ஏற்றுக்கொண்டது.


லால்பகதூர் சாஸ்திரி பற்றிப் பொதுவாக இந்திய ஊடகம் மிக எதிர்மறையான சித்திரத்தையே அளித்து வருகிறது. நானும் அச்சித்திரத்தை வெகுநாள் கொண்டிருந்தேன். அவர் திறமையற்ற கோழையான கூழைக்கும்பிடு ஆசாமி என்ற சித்திரம். இச்சித்திரத்தை உருவாக்கி நிலைநிறுத்தியதில் காங்கிரஸுக்குப் பெரும்பங்குண்டு. நேருவுக்குப்பின் நேரடியாக இந்திரா காந்திக்கு வரும் மனநிலையில் உதித்த தந்திரம் அது. அத்துடன் நம் இதழாளர்களின் மேட்டுக்குடிச்சிந்தனைக்கும் அதில் பங்குண்டு. அவர்கள் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு உயர்குடிப்பிறப்போ ஆங்கில ஞானமோ தோற்றப்பொலிவோ உள்ளவரல்ல சாஸ்திரி . மிக எளிய மனிதர். ஒரு சாதாரண 'தேசி'.


குகா காட்டும் லால்பகதூரின் சித்திரமே வேறு. அவர் ஒரு சமரசமாகவே தலைமைக்கு தேர்வுசெய்யப்பட்டாரென்பது உண்மை. பிடிவாதக்காரரும் அரசியல் அடித்தளம் உடையவருமான மொரார்ஜி தேசாயைத் தவிர்ப்பதற்கான குறுக்குவழி அது. ஆனால்,மிகச்சில மாதங்களிலேயே அரசையும் ஆட்சியையும் தன் முழுப்பிடிக்குக் கொண்டுவந்தார் லால் பகதூர். ஒருகட்டத்தில் அவர் உண்மையான இந்திய ஆட்சியாளராக ஆனார். அவரது காலகட்டத்தில்தான் இந்தியா மேல் முதன்முதலாகப் பாகிஸ்தான் படை எடுத்தது.


ஒரு முதன்மையான ஆட்சியாளர் செய்யக்கூடிய அனைத்தையும் செய்தார் லால் பகதூர்.  உண்மையிலேயே தகுதியான மனிதர்களிடம்  போரை ஒப்படைத்தார். தெளிவான விரைவான ஆணைகளை அளித்தார். நாட்டு மக்களுக்கும் ராணுவத்துக்கும் ஊக்கமூட்டும் அரசியல் கோஷத்தை உருவாக்கி அதை முன்னிறுத்தினார் [ஜெய் ஜவான் ஜெய் கிசான்] முந்தைய சீனப்போரின்போது நேருவால் இவை எவற்றையுமே செய்யமுடியவில்லை என்பதை நாம் கவனிக்கவேண்டும். இந்தியா அடைந்த போர்வெற்றி இந்தியாவின் தேசியத் தன்னம்பிக்கையை மிக ஆழமாக நிலைநாட்டியது. சீனப்போரின் சோர்விலிருந்து இந்தியா அதிசயகரமாக மீண்டு வந்தது


இந்தியாவில் உணவுப்பஞ்சங்களை சமாளிக்கப் பசுமைப்புரட்சியை ஆரம்பித்து வைத்து அதன் ஆரம்பவெற்றிகளுக்குக் காரணமாக இருந்தவரும் சாஸ்திரிதான். இன்னும் சொல்லப்போனால் வெறும் இரண்டு வருடங்களில் நேருவின் பதினைந்து வருட ஆட்சியின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு நடைமுறைத்தீர்வு காண சாஸ்திரியால் முடிந்தது என்பதே உண்மை. அதற்குக் காரணம், அவர் இந்திய சாமானியர்களின் பிரதிநிதி என்பதே. நேருவையும் பின்னர் வந்த இந்திராவையும்போல இந்திய சாமானிய வாழ்க்கையை அறியாத உயர்குடியினர் அல்ல அவர்.


லால்பகதூர் மேலும் பத்து வருடம் உயிருடனிருந்திருந்தால் நேரு குடும்ப ஆதிக்கம் இந்தியாவில் உருவாகியிருக்காதென்பதில் ஐயமில்லை.  ஆனால் 1966ல் சாஸ்திரி இறந்தார். அன்று காங்கிரஸின் பொறுப்பில் இருந்த கு.காமராஜ் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் மத்தியஸ்தங்களுக்குத் தலைமை வகித்தார். அப்போதும் செல்வாக்கு மிக்க போட்டியாளராக இருந்த மொரார்ஜி தேசாயைத் தவிர்ப்பதே முக்கியமான நோக்கமாக இருந்தது. மொரார்ஜிதேசாயை சக்திவாய்ந்த மும்பை- அகமதாபாத் தொழில்கூட்டணி ஆதரித்ததனால் பிற தொழில்வட்டங்கள் அனைத்தும் அவரை எதிர்த்தன. ஆகவே காமராஜ் நேருவின் மகளான இந்திராகாந்தியை முன்னிறுத்த முடிவெடுத்தார்.



[லால் பகதூர் சாஸ்திரி]


காமராஜ் அப்படி முடிவெடுக்கப் பல காரணங்கள் இருந்தன. நேருவின் பெயர் தேர்தல் வெற்றிகளுக்கு உதவும் என நினைத்திருக்கலாம். அதைவிட வெறும் நாற்பத்தொன்பது வயதான அனுபவமற்ற பெண்மணியான இந்திரா,தன் கட்டுப்பாட்டில் இருப்பார் என நினைத்திருக்கலாம். ஆனால் அதன்வழியாக இந்தியாவுக்கு மிகப்பெரிய ஒரு அநீதியை காமராஜ் இழைத்தார் என்பதே உண்மை. பின்னர் தன் வாழ்நாளெல்லாம் அதற்காகக் காமராஜ் வருந்திக் கண்ணீர் சிந்தினார்


ராம் மனோகர் லோகியாவால் குங்கி குடியா [முட்டாள் பொம்மை] என வர்ணிக்கப்பட்ட இந்திரா,படிப்பறிவு குறைந்தவர். மோசமான மாணவியாக அறியப்பட்டவர். வாசிப்போ சிந்தனையோ அற்றவர். தந்தையின் நிழலாக இருந்துவந்தது மட்டுமே அரசியல் தகுதியாகக் கொண்டவர். தாயில்லாமல் வளர்ந்து மேட்டிமைப்போக்கு கொண்ட விஜயலட்சுமிபண்டிட் போன்ற அத்தைகளால் அவமதிக்கப்பட்டு முரட்டுத்தனமும் தனிமையுணர்ச்சியும் கொண்டவராக உருவானவர்.


ராமச்சந்திர குகாவின் இந்நூல்,ஆரம்பம் முதலே இந்து பழைமைவாதத்தை இந்தியாவின் மிகப்பெரிய தேசிய நோயாகச் சித்தரிக்கிறது. இந்தியாவின் பிறவிக்கணத்தில் காந்தியைக் கொலைசெய்தது அது. இந்தியாவின் ஆரம்ப வரலாறு முழுக்க அது உருவாக்கிய அழிவுகள் தேசத்தைப் பின்னுக்கிழுத்தன. அதற்கு நிகரான அழிவுச்சக்தியாக இந்திராகாந்தியைக் காட்டுகின்றன,குகா விமர்சனமே இல்லாமல் வைத்துச்செல்லும் நேரடித் தகவல்கள். தன்னுடைய பாதுகாப்பின்மையுணர்வால் இந்திராகாந்தி காந்தி, அம்பேத்காரும் நேருவும் உருவாக்கிச்சென்ற இந்தியாவின் ஜனநாயகக் கட்டுமானத்தை அழித்தார். இந்தியாவில் பொதுநிர்வாகத்துறை நியமனங்களிலும் ஜனநாயக அமைப்புகளிலும் அரசியல் செல்வாக்கைச் செலுத்திய முதல் ஆட்சியாளர் இந்திராதான். ஆட்சியின் மையத்தில் சதிகார துதிபாடிக் கும்பல் ஒன்றை அமர்த்தி அனைவரையும் அவர்களுக்கு அடிபணிய வைத்தது அவர்தான்.


இந்தியாவின் முதல்பெரும் பிரிவினைக்கோரிக்கையானது உண்மையில் ஜம்முகாஷ்மீரின் டோக்ரி மக்களின் போராட்டத்தை இந்து போராட்டமாக உருமாற்றிக் காஷ்மீர் முஸ்லீம்களின் அவநம்பிக்கையை எழுப்பிய பாரதிய ஜனசங்கத்தின் சிருஷ்டி எனக் காட்டுகிறார் குகா. அன்றுவரை இந்தியாவின் பகுதியே காஷ்மீர் என்று சொல்லிவந்த ஷேக் அப்துல்லாவின் குரல் மாறுபட ஆரம்பித்தது அப்போதுதான். ஆனால் அஸ்ஸாம், பஞ்சாப், மேகாலயா, மணிப்பூர் என எல்லாப் பிரிவினைக்கோரிக்கைகளும் இந்திராகாந்தியின் உருவாக்கங்களே. அவரால் பிராந்திய தன்னதிகாரங்களை சகித்துக்கொள்ளவே முடியவில்லை. மக்களின் ஜனநாயகத் தேர்வுகளை எதேச்சாதிகாரமாக அவர் கலைத்து ஒடுக்கினார். உணர்வுகளை அவமதித்தார்.


அதைவிட மோசமாக, இந்திரா மாநில உணர்வுகளை அழிக்க அதைவிடத் தீவிர மாநிலப்பிரிவினையுணர்வுக்ளை உருவாக்கினார், சிறந்த உதாரணம் பிந்திரன் வாலே. ஒரு ராட்சதனை உருவாக்கி அவனைஅழித்து அரசியல் லாபம் பெறுவதே அவரது வழியாக இருந்தது. அதற்கு தேசம் பெரும் விலை கொடுக்க நேர்ந்தது. இந்திராகாந்தியே அதற்குப் பலியானார். 


இந்திய அரசியல் சூழலில் அரசியல் விவாதங்களை சீரழித்ததில் முன்னோடியான அரசியல்வாதி அவர்தான். தன் கொள்கைக்கு எதிரான எந்தப் பேச்சையுமே தேசத்துரோகம் , அன்னியநாட்டுச்சதி, தன்னைக்கொல்ல முயற்சி என்று வசைபாடுவதையே அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். கடைசியாக, இன்று இந்தியாவில் நீடிக்கும் ஆயுதபேர ஊழல்களுக்கு அடித்தளமிட்டதே அவர்தான்.


அனைத்துக்கும் மேலாக நெருக்கடி நிலை. இந்திராவின் நெருக்கடிநிலைமூலம் இந்தியாவில் உருவானது வெறும் அடக்குமுறை மட்டுமல்ல, இந்த தேசத்தை எப்படி ஏகாதிபத்தியமயமாக்குவதென்ற முன்னுதாரணமும்கூடத்தான். நாளை என்றாவது இந்தியா சர்வாதிகார நாடாகுமென்றால் அதற்கான வழிகாட்டி இந்திராதான். இந்தியாவின் எல்லா அமைப்புகளையும் வெற்றிகரமாகச் சீரழித்ததுடன் இன்றும் இந்தியாவில் நீடிக்கும் போலீஸ் அடக்குமுறைக்கு இந்திய ஆயுதப்படைகளைப் பழக்கியதும் நெருக்கடிநிலையே.


எல்லா சர்வாதிகாரிகளும் அவர்களின் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையால் அழிகிறார்கள். இந்திரா அவரது நெருக்கடிநிலையை ரத்து செய்து தேர்தலைச் சந்தித்ததும் அதனால்தான்.  இந்தியாவின் ஜனநாயகம் திருப்பியடித்தது. இந்தியாவின் பிரச்சினைகள் அரசியல்வாதிகளால் உருவாக்கப்படுபவை, ஆனால் ஜனநாயகம் இயற்கையானது என நிரூபித்த தேர்தல் அது. அதன் நாயகர்களாக உருவாகி வந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் ஆச்சாரிய கிருபளானியின் அழியாத சித்திரத்தை இந்நூல் காட்டுகிறது.


ஜெயப்பிரகாஷ் நாராயணன்


இந்திய ஜனநாயகம் என்பது காந்தியின் கொடை என்பதை மீண்டும் நிரூபித்தது ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் ஆச்சாரிய கிருபளானியின் பங்களிப்பு. காந்தியர்களான அவர்களே இந்திய ஜனநாயகத்தை மீட்டுக் கொண்டுவந்தார்கள். பின்னும் இந்தியாவின் பெரும் மக்களியக்கமான சூழியலியக்கங்கள் காந்தியவாதிகளாலேயே உருவாக்கப்பட்டன. அந்த மரபு இன்று அண்ணா ஹசாரே வரை நீடிக்கிறது.


வரலாறு அளித்த வாய்ப்பை ஜனதா கட்சி வீணடித்ததை குகா சுருக்கமான தகவல்கள்மூலம் விளக்குகிறார்.இரு விஷயங்கள் கவனத்துக்குரியவை. நெருக்கடிநிலைக்காலத்தில் செய்யப்பட்ட கட்டாயக் கருத்தடை மற்றும் காவல்துறை ஒடுக்குமுறை மூலம் தலித்துக்களும் இஸ்லாமியர்களும் காங்கிரஸைக் கைவிட்டார்கள். ஆகவேதான் இந்திரா தோற்றார். ஆனால் ஜனதா வந்ததுமே காந்தியவாதிகளான அதன் வழிகாட்டிகள் கழற்றிவிடப்பட்டார்கள். இரு புதிய அதிகார சக்திகள் உருவாகி வந்தன. இந்துக் கட்சியான பாரதிய ஜனசங்கம் ஜனதாவின் முக்கியமான அம்சமாக இருந்தது. லோகியாவின் சோஷலிசக் கட்சியின் துண்டுகள் பிற்படுத்தப்பட்டோரின் அரசியல் முகங்களாக மாறி ஜனதாக்கட்சியின் இரண்டாவது பெரிய அம்சமாக இருந்தன.


ஜனதாகட்சியின் ஆட்சி பலவகைகளில் முக்கியமானது என்று குகா காட்டுகிறார். முக்கியமாக எளிதில் ஜனநாயகப்படுகொலை செய்யமுடியாதபடி அரசியல்சட்டம் திருத்தப்பட்டது. ஜனநாயக அமைப்புகளின் அதிகாரம் பாதுகாக்கப்பட்டது. இந்திரா உருவாக்கிய பல தேசிய அழிவுகள் சீர்செய்யப்பட்டன. ஆனால் அதிகாரம் பெற்ற இந்துத்துவசக்திகள் இக்காலகட்டத்தில் இந்தியாவின் வரலாற்றில் மிக அதிகமான மதக்கலவரங்களை உருவாக்கினர். கலவரம் எதற்காக யாரால் தொடங்கப்பட்டிருந்தாலும் கடைசியில் இஸ்லாமியரே பாதிக்கப்பட்டனர் என்று குகா காட்டுகிறார்


அதேபோலப் பிற்படுத்தப்பட்டோர் அதிகாரம் பெற்ற மறுகணமே தலித்துக்களுக்கு எதிரான வன்முறை ஆரம்பித்தது. இந்திய வரலாற்றிலேயே தலித்துக்களுக்கு எதிரான அதிக வன்முறை நிகழ்ந்த காலகட்டம் அதுவே. ஆதலால் தலித்துக்களும் இஸ்லாமியரும் மீண்டும் காங்கிரஸுக்கே சென்றார்கள். இந்திரா வெற்றிகரமாக ஜனதா கட்சியைப் பிளந்து சிதறடித்து ஆட்சிக்கு வந்தார். அவரது மரணம் ராஜீவ்காந்தியை அரசியலுக்குக் கொண்டுவந்தது. ராஜீவ் காலகட்டம் அதுவரை இந்தியா கொண்டிருந்த இடதுசாரிப் பொருளியலை முழுமையாகக் கைவிட்டு வலதுசாரிப் பொருளியலுக்குத் திரும்ப வழிகோலியது.


இந்நூலை வாசிக்கையில் தகவல்களாக சரித்திரம் தொகுத்தளிக்கப்பட்டிருப்பதையே காண்கிறோம். அந்தத் தொகுப்பில்தான் குகாவின் கருத்துநோக்கு உள்ளதே ஒழிய அவ்ர் வாதாடுவதில்லை. பலகோணங்களில் இந்திய அரசியல் பொருளியல் நிகழ்வுகளை தொகுத்தளித்தபடி சரித்திர விவரணை ஓடிச்செல்கிறது. வாசகனாக நாம் உருவாக்கிக்கொள்ளும் அவதானிப்புகளே இது அளிக்கும் அனுபவம்.


உதாரணமாக, ஜெபி பற்றி ஓர் அமெரிக்கத் தோழிக்கு இந்திரா எழுதிய கடிதமொன்றில் அவர்  தன் தந்தையின் தோழரான ஜெபியை அவமரியாதையாகப் பேசியிருக்கும் இடம். ஜெபியின் பிரம்மசரிய சோதனைகளைக் கிண்டலடிக்கிறார் இந்திரா. அவருக்குக் காந்திய மதிப்பீடுகளில் இருந்த அவநம்பிக்கைக்கான சான்று இது.அவர் காந்தியத்தைக் குறைத்து மதிப்பிட்டாரென்பதற்கு ஜெபி அவரைக் கீழே இறக்கிக் காட்டியதே சான்று.


இந்திய அரசியலை அவதானிக்கும் மேலைநாட்டு அரசியல்நோக்கர்கள் தொடர்ந்து இந்தியா மேல் முன்வைக்கும் ஆழமான அவநம்பிக்கை ஆச்சரியமளிக்கிறது. பலசமயம் அதற்குத் தர்க்கமே இருப்பதில்லை. ஐம்பதாண்டுகளில் பல்வேறு முறை அந்த மோசமானஆருடங்கள் பொய்யான பிறகும் அவர்கள் அதைப்பற்றி யோசிப்பதில்லை. இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக நீடிப்பதை அவர்கள் நம்பவில்லை என்று முதலில் பட்டாலும் அவர்கள் நம்ப விரும்பவில்லை அல்லது அப்படி இருப்பதையே விரும்பவில்லை என்றுதான் இறுதியாகத் தோன்றுகிறது.


காரணம் ஐரோப்பா,தங்கள் உச்சகட்ட சாதனையாக முன்வைப்பது அவர்களின் ஜனநாயகத்தைத்தான். பலநூறு வருடப் போராட்டங்கள், போர்களுக்குப்பின் அவர்கள் அடைந்த ஒன்றைப் பெரிதும் ஏழை மக்கள் நிறைந்த ஒரு நாடு சாதாரணமாக அடைந்ததை ஏற்க அவர்களால் முடியவில்லை. அதிலும் பேதங்களும் பற்றாக்குறைகளும் நிறைந்த ஒரு நாடு. இந்தியா ஆப்ரிக்க நாடுகளைப்போல ஜனநாயகம் சீரழிந்து வறுமையில் மூழ்கிப்போனதென்றால் அவர்களுக்குள் உள்ள வெள்ளையன் நிறைவடைந்திருக்கக்கூடும்


அதற்கு மாற்றாக உள்ளது இந்நூலின் கடைசியில் இந்தியக்குடியுரிமை பெற்ற பிரிட்டிஷ் அறிவியலாளர் ஹால்டேன் எழுதிய வெளியிடப்படாத கடிதத்தில் இந்தியாவைப்பற்றி சொல்லியிருக்கும் மதிப்பீடு.'ஐரோப்பாவை விட இந்தியாவே அதிக வேறுபாடுகள் கொண்டதாக உள்ளது.இது எதிர்காலத்தில் உடைந்தாலும் உடையலாம். ஆனாலும் இது அற்புதமான சோதனை.எனவே நான் இந்தியக்குடிமகன் என்று சொல்லிக்கொள்வதையே விரும்புகிறேன்'


என் உணர்வுகளைத்தொட்ட வரி இது. சமீபகாலங்களில் இனப்பன்மைக்காக முயலும் கனடா, ஆஸ்திரேலியா நாடுகளுக்குச் சென்று அங்கே இன்னும் தனித்தனியாகவே வாழும் மக்களையும் நடுவே இனக்கலப்பால் உருவான குழந்தைகளையும் காணும்போது நான் நினைத்துக்கொள்வதுண்டு– இப்படியே இவர்கள் இன்னும் சிலநூறு ஆண்டுகள் சென்றால் ஓர் இந்தியாவாக உருமாறக்கூடும் என்று.


பன்மையில் ஒருமையை நிலைநாட்டும் சக்தியாக நான் காண்பது இரு கூறுகளைத்தான். ஒன்று, இந்திய மெய்ஞான மரபு. இன்னொன்று அது காட்டிய சமரச வழியை நவீன அரசியல் சித்தாந்தமாக ஆக்கிய காந்தியம். அத்தனைக்கும் அப்பால் இந்தியா இந்தியாவாக இன்றும் நீடிக்கும் மர்மத்திற்குக் காரணம் அவ்விரு வாழும் பாரம்பரியங்கள்தான்.


அதை நாமறியாவிட்டாலும் நம் எதிரிகள் அறிவார்கள். ஆகவேதான் எப்போதுமே இந்திய ஞானமரபுக்கும் காந்தியத்துக்கும் எதிராக உச்சகட்ட அவதூறுப்பிரச்சாரங்கள் நிகழ்த்தப்படுகின்றன.


நாம் அரசியல் பேச்சுகளில் எப்போதுமே அன்றாட அரசியலை அன்றாடச்செய்திகளில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறோம். ஒட்டுமொத்தமாக அரசியலைத் தொகுத்துப்பார்க்க முடிவதில்லை. அத்தகைய பார்வையை உருவாக்கும் அரிய நூல் இது.


[இந்திய வரலாறு காந்திக்குப்பிறகு. [பகுதி 2]  ராமச்சந்திர குகா. தமிழாக்கம் ஆர்.பி.சாரதி. கிழக்கு பிரசுரம். விலை 350]


 





காந்தியின் கையில் இருந்து நழுவிய தேசம்- இந்திய வரலாறு-காந்திக்கு பிறகு பகுதி ஒன்று





ஒரு வரலாற்று நாயகன் ஜெயப்பிரகாஷ் நாராயணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2011 11:30

அண்ணா ஹசாரே, ஞாநி, சோ

அன்புள்ள ஜெ,


அன்னா ஹசாரேயின் போராட்டத்தைப்பற்றிய சர்ச்சைகளில் ஞாநி போன்ற அறிவுஜீவிகள் தொலைக்காட்சியில் வந்து அது ஒரு போலிப்போராட்டம் என்று வாதிடுகிறார்கள். லோக்பால் மசோதாவுக்கான தேவையே கிடையாது, இப்போதிருக்கும் சட்டங்களே போதுமானது என்று சொல்கிறார்கள். ஞாநி இப்போதே இருக்கும் சட்டத்தைக்கொண்டுதான் கனிமொழியையும் ஆ.ராசாவையும் சிறையில் அடைத்திருக்கிறார்கள் என்றார். அன்னா ஹசாரேயின் கூட இருப்பவர்களெல்லாரும் வட இந்தியர்கள் , மராட்டியர்கள் என்கிறார்கள். லோக்பால் அமைப்புக்காக அன்னா முன்வைக்கும் பட்டியலில் தமிழர்கள் இல்லை என்று சொன்னார். அதே கருத்தைத்தான் சோவும் சொல்கிறார். அதைக்கேட்கும்போது நியாயமாகவும் படுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் ஞாநியை நேர்மையானவர் என்று சொல்லியிருக்கிறீர்கள் என்பதனால் இதைக்கேட்கிறேன்.


வெங்கட் ராமானுஜம்



அன்புள்ள வெங்கட்,


ஒரு பிரச்சினையின்போது வரலாற்றுப்பின்னணியில் வைத்து அதை முழுமையாகப் பார்ப்பவனே சிந்திப்பவன். அவனே பிறரிடம் பேச தகுதி கொண்டவன். நீங்கள் சொன்ன இருவருமே அந்த தகுதி அற்றவர்கள் என்பதை இந்த விஷயத்தில் நிரூபித்திருக்கிறார்கள். அவர்கள் அறிந்த ஒரு சின்ன வட்டத்துக்குள் வைத்து பேசுகிறார்கள். அதன்மூலம் தமிழகச் சிந்தனைக்கு மிகப்பெரிய அநீதியை இழைக்கிறார்கள். அவர்கள் இவ்விஷயத்தில் நேர்மையற்றிருக்கிறார்கள் என நினைக்கிறேன். என் ஆழமான மனக்கசப்பை , ஏன் வெறுப்பை, இப்போது பதிவுசெய்கிறேன்.


இன்று அரசியல்முகம் கொண்ட அனைவருமே ஏதேனும்வகையில் ஊழலுக்கு ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அண்ணா ஹசாரேயை வசைபாடுகிறார்கள். பொதுவெளியில் பேசியாகவேண்டிய அரசியல்பத்தி எழுத்தாளர்களோ இம்மாதிரி சிந்தனை சிக்கி தேங்கி கிடக்கிறார்கள். அவநம்பிக்கை விதைக்கிறார்கள். தமிழகத்தின் துரதிருஷடம் என்றே இதைச் சொல்லவேண்டும்.


கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், இப்போது நடந்துகொண்டிருக்கும் போராட்டம் என்ன? இது பொதுவாழ்க்கையில் ஊழலுக்கு எதிரான ஒரு வெகுஜன இயக்கம். இந்தியச் சமூகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை தடுக்கும் பெரும் சக்தியாக இன்று பூதாகரமாக வளர்ந்து நிற்பது பொதுவாழ்க்கையில் ஊழல். அதை ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் ஏதோ ஒருவகையில் உணர்ந்திருக்கிறான். அதைப்பற்றி ஆழமான மனக்கசப்படைந்திருக்கிறான். அதன் ஒரு வெளிப்பாடுதான் இந்தப் போராட்டம்


ஒரு சாதாரண உதாரணம், சென்ற இருபதாண்டுகளில் ஊழலுக்கு எதிராகப்பேசும் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளன. அந்த பொது உணர்வை தங்கள் ஊடகம் மூலம் உணர்ந்துகொண்ட வணிகத் திரைப்படப் படைப்பாளிகள் தொடர்ந்து அத்தகைய படங்களை உருவாக்குகிறார்கள். அவையெல்லாம் இந்த எதிர்ப்பை மேலும் வலுப்படுத்தும் பிரச்சார சாதனங்களாக மாறியிருக்கின்றன


ஊழல் புதிய விஷயம் அல்ல. பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் இங்கே ஊழலின் பொற்காலமாகவே இருந்திருக்கிறது. சீருடை அணிந்து இந்தியா வரும் பிரிட்டிஷ் நிலக்கரித்தொழிலாளியின் மைந்தன் பெரும் பிரபுவாக ஊர்திரும்பிக் கொண்டிருந்தான். இந்த தேசத்தின் வெப்பத்தை, நோய்களை தாங்கி இங்கே வாழ்வதற்கான உந்துதலை பிரிட்டிஷ் குடிமக்களுக்கு அளித்தது இங்கு கொழித்திருந்த பெரும் ஊழலே. அதற்காகவே அதை பிரிட்டிஷார் ஊக்குவித்தனர். இந்தியச்செல்வம் பிரிட்டனுக்கு ஒழுகிச்செல்ல ஊழலும் முக்கியமான காரணம்


இந்திய தேசிய இயக்கமே பிரிட்டிஷ் ஊழல்ராஜுக்கு எதிரான இயக்கம்தான். ஆகவே அதன் நாயகர்கள் ஊழலுக்கு எதிரானவர்களாக இருந்தார்கள். அந்த இலட்சியவாத வேகம் அரசியல்வாதிகளில் இந்தியா சுதந்திரம் பெற்று கால்நூற்றாண்டுக்காலம் நீடித்தது.



ஆனால் சுதந்திரம் கிடைத்தபின்னரும் பிரிட்டிஷார் உருவாக்கிய நிர்வாகஅமைப்பும் அதிகார வர்க்கமும் அப்படியே நீடித்தன. அவர்கள் பிரிட்டிஷ்காலகட்டத்து ஊழலையே பழகி அதையே செய்துகொண்டிருந்தார்கள். இங்கே நேரு காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரம், அதாவது லைசன்ஸ் ராஜ், அதிகாரிகளுக்கு மேலும் அதிகாரத்தை அளித்தது. ஆகவே ஊழல் பலமடங்காக வளர்ந்தது. அதை பெரும்பாலும் இலட்சியவாதிகளான அன்றைய அரசியல்வாதிகளால் ஆளப்பட்ட நம் அரசுகளால் தடுக்க முடியவில்லை என்பதே வரலாறு.


மெல்லமெல்ல அதிகாரிகளால் அரசியல்வாதிகள் ஊழலுக்கு பழக்கப்படுத்தப்பட்டார்கள். நாடு பொருளியல் வளர்ச்சி நோக்கிச்செல்லச் செல்ல ஊழலின் வேகம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் இதன் செயல்பாடே ஊழலால்தான் சாத்தியம் என்ற நிலை ஏற்பட்டது. சுதந்திரப்போராட்ட நாயகர்களில் அதிகாரத்தை நாடாதவர்கள் அதற்கு எதிராக போராடினார்கள். முதல்பெரும் மக்களியக்கம் என்பது ஜெயப்பிரகாஷ் நாராயணனின் முழுப்புரட்சி இயக்கம். அந்த காந்திய இயக்கம் சீக்கிரத்திலேயே அவசரநிலை மூலம் ஒடுக்கப்பட்டது. அவசர நிலையை வென்று அந்த ஆட்சியை வீழ்த்திக்காட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணனால் முடிந்தது. ஆனால் அவர் நம்பியவர்களே அவரது கனவை சிதைத்தார்கள். அதிகார ருசி கண்டதும் அவர்களும் ஊழலில் மூழ்கி திளைத்தார்கள்.


இன்று உருவாகிவந்துள்ள நம் புதிய தலைமுறையின் அறிவுத்திறன் காரணமாக, அவர்களுக்கு வாய்ப்புகளை அளித்த புதியபொருளாதாரக் கொள்கைகள் வழியாக நாடு மேலும் பொருளாதார வளர்ச்சி காண்கிறது. ஆகவே இப்போது ஊழல் பலமடங்காகப் பெருகிவிட்டிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலையும் போபர்ஸ் ஊழலையும் முந்த்ரா ஊழலையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரியும் அந்த வளர்ச்சியின் விகிதம்.


இந்த ஊழலின் விளைவாக நிகழும் முதல் இழப்பு மக்களுக்கே. வளர்ச்சியின் பெரும்பங்கு வரியாக அரசுக்குச் செல்கிறது. அந்த செல்வம் வளர்ச்சிப்பணிகளாக மக்களிடம் திரும்பி வர வேண்டும். அப்போதுதான் அந்த அடிப்படைக்கட்டுமானங்களைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்ட வளர்ச்சி சாத்தியமாகும். ஆனால் அப்படி வராமல் ஊழல் தடுக்கிறது. ஆகவே இன்று நம் நாடு வளர்ச்சி குன்றித் திகைத்து நிற்கிறது. வளர்ச்சியின் பயன்கள் எளிய மக்களுக்குச் செல்வதில்லை.


ஸ்பெக்ட்ரமே உதாரணம். இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியே அந்தத் துறையில் அத்தனை கோடிகளைக் கொண்டுசென்று கொட்டுகிறது. அந்த கோடிகள் அடிப்படைக் கட்டுமானமாகத் திரும்பி வந்தால் மட்டுமே இந்தியா அடுத்தகட்ட தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியை அடையமுடியும். அந்தப் புள்ளியில் ராஜா-கனிமொழி-மாறன் கும்பல் சென்று அமரும்போது அந்த இயல்பான வளர்ச்சி உறைந்து பெரும் பின்னடைவு நிகழ்கிறது


ஞானி


ஒவ்வொருதளத்திலும் இது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் அடிப்படைக்கட்டுமானத்தளத்தில் இன்று மிகப்பெரிய சிக்கலாக இருப்பதே ஊழல்தான். அமர்த்யா சென் முதல் இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி வரை அதைச் சொல்லிப் புலம்பிவிட்டார்கள். ஒவ்வொரு சாமானிய இந்தியனுக்கும் அது தெரியும்.


அந்த ஊழலே இன்றைய முதல் பெரும் பிரச்சினை. அதைத் தடுக்க என்ன செய்வது? இன்று இந்தியாவிலிருக்கும் சட்டங்கள் கண்டிப்பாகப் போதாது. அதற்கான மிகச்சிறந்த ஆதாரம், இன்றுவரை இங்கே எந்த ஊழல் அரசியல்வாதியும் தண்டிக்கப்பட்டதில்லை என்பதே.


ஏன்? இங்கிருக்கும் சட்டங்கள் இலட்சியவாதிகளான அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டவை. கடைசி அதிகாரம் அவர்களிடம் இருக்கும்படித்தான் அவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அரசியல்வாதிகள் ஆளும்கட்சி எதிர்கட்சியாகச் செயல்பட்டால் எல்லாத் தவறுகளும் சுட்டிக்காட்டப்பட்டு திருத்தப்படும் என அரசியல்சட்டமுன்னோடிகள் நம்பினர்.


கனிமொழியோ ராசாவோ பெரும்பாலும் தண்டிக்கப்பட மாட்டார்கள். காரணம் இத்தகைய வழக்கில் உண்மையான ஆதாரங்கள் ஆவணங்களே. அவை அரசிடம், அரசியல்வாதிகளிடம் இருக்கும். அவற்றை அரசு பெரும்பாலும் நீதிமன்றத்துக்கு கொண்டுவருவதில்லை. அரசியல்வாதிகள் அனைவருமே ஒரே வர்க்கம். நாளையே கூட்டுகள் மாறினால் என்னசெய்வது? அதை கணக்கிட்டே அவர்கள் செயல்படுவார்கள்.


ஞாநி போன்றவர்களுக்கு இந்திய அரசுத்துறைகள் செயல்படும் விதம் பற்றி அரிச்சுவடியே தெரியாது. உங்களுக்குத்தெரியுமா, இந்திய தணிக்கைத்துறை ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு அரசுத்துறைகளைப்பற்றி முன்வைக்கும் தணிக்கை அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்படும் ஊழல்களில் மிகமிகச்சிலவே வெளிவருகின்றன. தணிக்கைத்துறைக்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரமில்லை. அது பொதுக்கணக்குக் குழுவுக்கே அறிக்கைகளைச் சமர்ப்பிக்க முடியும். அந்தக் குழு எப்போதுமே அரசியல்வாதிகளால் ஆனது. அங்கே நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது சதவீதம் ஊழல்களையும் ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் இணைந்து மறைத்துக் கொள்வார்கள்.


இங்குள்ள எல்லா அமைப்புகளும் இப்படியே. முன்னர் சொன்னதுபோல அவையெல்லாமே அரசியல்வாதிகளை நல்லவர்கள் என்று நம்பிய அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டவை. ஆனால் இன்று திருடனும் போலீஸும் சமரசம்செய்துகொள்ளும் காலம். ஸ்பெக்ட்ரம் வழக்கில் பாரதிய ஜனதா ஒத்துழைப்பது எளிது, எதியூரப்பா வழக்கில் காங்கிரஸ் ஒத்துழைத்தால் போதும். பெரும்பாலும் கடைசியில் நடப்பது இதுவே. இன்றுவரை இதுவே இந்திய யதார்த்தம்.


இதை எப்படி தடுப்பது? சமீபத்தைய உதாரணமே பார்ப்போம். இன்று வெடித்திருக்கும் ஸ்பெக்ட்ரம்போன்ற ஊழல்கள் பொதுதணிக்கைக்குழு முன்வைத்தவற்றில் இருந்து தற்செயலாக சில பொதுநல ஊழியர்களின் விடாப்பிடியான அணுகுமுறையால் வெளிக்கொணரப்பட்டவைதான். ஒருபக்கம் இன்றைய பொதுத்தணிக்கைக்குழு தலைவர் வினோத் ராய் போன்ற அசாதாரணமான அதிகாரிகள் இருந்தாலும் மறுபக்கம் பரஞ்சோய் குகா போன்ற இதழாளர்கள் இல்லையேல் இந்த ஊழலே வெளியே தெரியாமலாகியிருக்கும்.


ஆகவே அந்த பொதுநல ஊழியர்களையும் ஊழல்தடுப்பு அமைப்புக்கு உள்ளேயே கொண்டுவருவதற்கான முயற்சி என்று ரத்தினச்சுருக்கமாக லோக்பால் மசோதாவின் சாராம்சத்தைச் சொல்லலாம். அதாவது நீதித்துறையில் ஜூரி முறை இருந்ததுபோல. பொதுநலன்நாடுபவர்கள், நேர்மையாளர்கள் என புகழ்பெற்றவர்களின் கண்காணிப்பு அரசியல்வாதிகளை கட்டுப்படுத்தும் என்பதே லோக்பாலின் நோக்கம்.


இந்திய அரசியல்சட்டத்தை உருவாக்கிய முன்னோடிகள் என்ன நினைத்தார்கள் என்றால், அதிகாரிகளை அரசியல்வாதிகளும் அரசியல்வாதிகளை அதிகாரிகளும் கண்காணித்தால் ஊழல் நிகழாது என. ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் கொள்ளும் முரண்பாட்டால் ஊழல் தடுக்கப்படும் என. ஜனநாயகத்தில் அப்படி முரண்படும் தரப்புகளை உருவாக்கி ஒருவரை ஒருவர் கண்காணிக்கச்செய்துதான் நம்மால் நியாயத்தை உருவாக்க முடியும் , வேறு வழி இல்லை.


இப்போது லோக்பால் மூலம் மூன்றாவதாக ஒரு தரப்பும் வந்து சேர்கிறது. அது ஊழல்தடுப்புக்கான ஒரு மக்கள் அரண் என்று சொல்லலாம். சமகால அரசியல்வாதிகள்மேல் நம்பிக்கை இல்லை என மக்கள் அறிவிக்கும் ஒரு முறை அது. அதற்கான தேவை இன்று வந்துவிட்டிருக்கிறது.


ஏன்? நம் அமைப்பில் அரசாங்கத்தை மக்கள் தேர்தல்மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடிகிறது. நம் முன்னோடிகள் அமைத்த அரசமைப்புச்சட்டம் அப்படி. ஆனால் தேர்தல் என்பது பணபலங்களின் மோதலாக ஆனபின் அதன் வழியாக அரசை மக்கள் கட்டுப்படுத்துவது போதாமலாகிவிட்டிருக்கிறது. ஆகவே இன்னும் நேரடியாக அரசாங்கத்தை மக்கள் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் கோரிக்கை எழுந்துகொண்டே இருக்கிறது.


சொல்லப்போனால் கால்நூற்றாண்டாக பல தளங்களில் இக்கோரிக்கைகள் வலுப்பெற்று மிகச்சிறந்த விளைவை ஆற்றி வருகின்றன. முதன்முதலில் இந்த கோரிக்கை எழுந்தது எண்பதுகளில் சூழியல் சார்ந்துதான் என்பது வரலாறு. இயற்கையை அழிப்பதை அரசின் எல்லா அமைப்புகளும் இணைந்து செய்தபோது, ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் அதில் ஒரேகுரலில் பேசியபோது, பொதுநல ஊழியர்களால் பல்வேறு சூழியல் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவை மக்கள்போராட்டங்கள்ளை முன்னெடுத்தன. சட்டப்போர்களை நிகழ்த்தின. அந்த அமைப்புகள் மக்கள் சார்பில் அரசை கண்காணித்தன. மெல்லமெல்ல அரசை கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெற்றன.


பின்னர் மனித உரிமை அமைப்புகள், பெண்கள் நல அமைப்புகள் அதே பாணியில் உருவாகி வந்தன. அவற்றில் செயல்படும் பொதுநல ஊழியர்கள் மூலம் இன்று இந்திய அரசின் மீதான முக்கியமான மக்கள்கட்டுப்பாடாக அவை ஆகியிருப்பதை எவரும் காணலாம். அவர்களின் போராட்டத்தால், சர்வதேச நிர்ப்பந்தத்தை அவர்கள் உருவாக்க முடிந்தமையால், மனித உரிமைக்காகவும் பெண்களுரிமைக்காகவும் அரசாங்கத்தைக் கண்காணிக்கும் மக்கள் அமைப்புகளை அரசே இன்று உருவாக்கியிருக்கிறது.


1993ல் இயற்றப்பட்ட மனித உரிமை காப்புச் சட்டம் மூலம் தேசிய மனித உரிமை கழகம் [National Human Rights Commission] அமைக்கப்பட்டதை ஓரு உதாரணமாகச் சொல்லலாம். அந்த அமைப்பு இயல்பாக உருவாகிவரவில்லை. பொதுநல ஊழியர்களின் ஒட்டுமொத்த போராட்டத்தின் விளைவாக உருவாகி வந்தது. கண்டிப்பாக அது ஓர் அரசாங்க அமைப்பு. அதற்கே உரிய பலவீனங்களும் சிக்கல்களும் கொண்டது. ஆனால் அந்த அமைப்பு கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் எந்த அளவுக்கு மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டுவந்துள்ளது , அதை இந்திய அரசின் அமைப்புகள் எந்த அளவுக்கு அஞ்சுகின்றன என்று பார்த்தால் அதன் வல்லமை என்ன என்று தெரியும்.


அதேபோன்றுதான் தேசியபெண்கள் உரிமைச்சட்டத்தால் 1992 ல் அமைக்கப்பட்ட தேசிய பெண்கள் உரிமை கழகம் [ National Commission for Women] அதுவும் ஓர் அரசாங்க அமைப்பே. ஆனால் அது உருவான நாளில் இருந்து இந்தியா முழுக்க அது பெண்கள் மீதான என்னென்ன ஒடுக்குமுறைகளை வெளிக்கொண்டுவந்தது என்பதை எவரும் காணலாம். இன்றும் அரசு மீது அதன் கட்டுப்பாடு எத்தகையது என்பதை காணலாம்


இன்று ஒவ்வொரு சூழியல் போராளியும், ஒவ்வொரு மனித உரிமைப்போராளியும் , ஒவ்வொரு பெண்ணுரிமைப்போராளியும் இந்த அமைப்புகளை முன்வைத்தே போராடுகிறார்கள். ஆம், அதை இன்னும் மேம்படச்செய்யவும்தான் போராடுகிறார்கள். அந்த மேம்பாட்டுக்கு எல்லையே இல்லை. எப்போதும் நடந்துகொண்டிருக்க வேண்டிய ஒரு தொடர் போராட்டம் அது. இதெல்லாம் இங்கேதான் நடந்துகொண்டிருக்கிறது. இந்த அரசு அமைப்புகள் அளிக்கும் எல்லா பாதுகாப்புகளையும் பெற்றுக்கொண்டு நம்மில் சிலர் அரசாங்க அமைப்பால் என்ன பயன் என்கிறோம்.


இவ்வாறு பலதளங்களில் அரசு மீதான பொதுமக்களின் கண்காணிப்பு சாத்தியம் என்றும், அது வெற்றிகரமாக செயல்பட்டு சிறந்த விளைவுகளை உருவாக்கி வருகிறது என்றும் நிரூபிக்கப்பட்டபின்னரே ஊழல் தடுப்பு அமைப்பிலும் அது கோரப்படுகிறது. அண்ணா ஹசாரே அதை அவரது கிராமநிர்மாணச் செயல்பாடுகளில் இருந்து கண்டடைந்து முன்வைத்து வாதாடி வருகிறார். அவரது முன்னுதாரணம் மேலே சொன்ன அமைப்புகளே.


மனித உரிமைக் கழகம் போன்ற சட்டபூர்வமான அமைப்புகளில் மக்கள்பங்கேற்பு, அல்லது பொதுநல ஊழியர் பங்கேற்பு என்பது மிக மறைமுகமானதே. அந்நிலையிலேயே அவை பெரும்பங்களிப்பாற்ற முடிகின்றன. நேரடியான மக்கள் பங்கேற்பு, பொதுநல ஊழியர் பங்கேற்புள்ள ஓர் அமைப்பு இன்னும் பெரிதாக செயல்படமுடியும் என்ற எண்ணமே லோக்பால் அமைப்பின் விதை.ஆனால் இது ஊழல் சம்பந்தமானது என்பதனால் போராட்டம் இன்னும் பிரம்மாண்டமான மக்கள் பங்கேற்புடன் இருக்கவேண்டியிருக்கிறது.


இந்தியாவில் அரசு மீதான மக்கள் கண்காணிப்பு என்பது ஒட்டுமொத்தமாக எண்பதுகளில் ஆரம்பித்த ஓர் இயக்கம். அது பல தளங்களில் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. அவ்வாறு சூழியல், பெண்ணுரிமை, மனிதஉரிமை சார்ந்து மக்கள்குழுக்கள் உருவாகி வந்தன. அவை இன்று இந்தியா முடுக்க முக்கியமான ஜனநாய சக்தியாக ஆகியிருக்கின்றன. அவற்றுக்கான ஒரு கருவியாகவே தகவலறியும் உரிமைச்சட்டம் இங்கே கோரப்பட்டது


1990ல் அருணா ராய் முன்வைத்து போராடிய கோரிக்கை. அது இன்றைய வடிவை அடைந்தது அண்ணா ஹசாரே நடத்திய தொடர் மக்கள் போராட்டங்கள்மூலம்தான். அந்தச்சட்டம் இன்று அத்தனை மக்களியக்கங்களாலும் மிகப்பெரிய ஆயுதமாகக் கையாளப்படுகிறது. அரசு மீதான நேரடியான மக்களின் கண்காணிப்பாக அது உள்ளது. அச்சட்டத்தின் அடுத்த விரிவாக்கமே லோக்பால்.


லோக்பால் பெண்ணுரிமைக் கழகம், மனித உரிமைக்கழகம் போன்ற அரசாங்க அமைப்புகளைப்போன்ற ஒன்றாகவே இருக்கப்போகிறது. அங்கும் அதிகார வர்க்க ஊடுருவலும் மெத்தனமும் கண்டிப்பாக இருக்கும். ஆனாலும் அதன் சாத்தியங்கள் அபாரமானவை. அதன் மக்கள் பங்கேற்பு என்பது மற்ற அமைப்புகளை விட பல மடங்கு அதிகம். அதன் அதிகாரமும் பல மடங்கு அதிகம். விளைவாக அரசாங்கத்தின் அத்தனை செயல்பாடுகள் மீதும் நேரடியாக ஒரு மக்கள் கண்காணிப்பு அதன்மூலம் உருவாகி வருகிறது. பிற அமைப்புகள் எப்படி வெற்றிகரமான விளைவுகளை உருவாக்கினவோ அப்படியே அதுவும் நிகழ்த்தும்.சொல்லப்போனால் இன்னும் பெரிய விளைவுகளைக் கொண்டு வரும்.


தேசிய மனித உரிமைக் கழகம் வந்ததனால் மனித உரிமைப்போர் முடிவுக்கு வரவில்லை, உண்மையில் அதன்பிறகே அது தீவிரமாக ஆரம்பித்தது. அந்தப் போருக்கு அந்த அமைப்பு ஒரு கருவியாக அமைந்தது. அதேபோலத்தான் ஊழலுக்கு எதிரான போருக்கு லோக்பால் அமைப்பு ஒரு வெற்றிகரமான கருவி.


கண்டிப்பாக ஊழலைத் தண்டிக்க இப்போதிருக்கும் சட்டங்கள் போதாது. அம்பேத்காரின் தலைமையில் உருவான இந்திய அரசியல் சட்டம் மனித உரிமைகளுக்கு முழு பாதுகாப்பளித்திருந்தது. ஆனாலும் தேசிய மனித உரிமைபாதுகாப்புச்சட்டமும், தேசிய மனித உரிமைபாதுகாப்பு கழகமும் ஏன் தேவைப்பட்டது? அதே காரணம்தான் இங்கும். அவை அரசியல்வாதிகளை நம்பி உருவாக்கப்பட்ட சட்டங்கள். இப்போது மக்கள் கண்காணிப்பு தேவையாகிறது


லோக்பால் அமைப்பு அளிக்கும் வாய்ப்பை இந்தியாவின் சட்டங்கள் அளிப்பதில்லை என்பதில் எந்த ஐயமும் இல்லை. இன்று ஊழல் கண்காணிப்பும் தடுப்பும் அரசு, நீதிமன்றம் இரண்டின் கைகளில் மட்டுமே உள்ளன. நீதிமன்றத்தை அரசு எளிதாக ஏமாற்ற முடிகிறது. லோக்பால் போன்ற மக்கள் அமைப்பு நீதிமன்றத்துக்கும் அரசுக்குமான மக்களிணைப்பாக இருக்கும். நீதிமன்றத்துக்கு அரசை அது காட்டிக்கொடுக்கும். அரசை நீதிமன்றம் அதனூடாக கண்காணிக்கவும் முடியும். சட்டம் தெரிந்தும் சோ,திட்டமிட்டுக் குழப்புகிறார். தெரியாமல் ஞாநி குழப்புகிறார்.


சொல்லப்போனால் மருத்துவம், நீதித்துறை ஆகிய இரண்டிலும்கூட மக்கள் கண்காணிப்புக்கான அமைப்புகளை உருவாக்கியாகவேண்டிய கட்டாயத்தில் இந்தியா இன்றிருக்கிறது. அவற்றின் ஊழல்களால் இந்தியாவின் வாழ்வே அபாயகரமான நிலையில் இருக்கிறது. லோக்பாலுக்கான இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டம் அதுவாகவே இருக்கும்.


ஆம் லோக்பாலில் குறைபாடுகள் இருக்கலாம். சரியான பிரதிநிதித்துவம் இல்லாமலிருக்கலாம். தவறான ஒருசிலர் உள்ளே வரலாம். அதன் சட்டங்களில் ஓட்டைகள் இருக்கலாம். நடைமுறையில் சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் அவையெல்லாமே அதை அடைந்தபின் தொடர் முயற்சிகள் மூலம் சீர்படுத்த வேண்டியவை. அவ்வகையில் சீர்படுத்திக்கொண்டே செல்லவேண்டியிருக்கும். லோக்பாலை விடாபிடியாக செயலூக்கம் கொண்டதாக அமைக்கவேண்டியிருக்கும்.


மாறாக இங்கே என்ன நிகழ்கிறது? அந்தக் கோரிக்கையை முன்வைத்து நடக்கும் போராட்டத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க அதை ஒரு காரணமாக சொல்கிறார்கள். அதை அடைவதற்காகப் போராடும் பொதுநலவாதிகளைக் கொச்சைப்படுத்த அதைக் காரணமாக ஆக்குகிறார்கள். அதில் உள்ள உள்நோக்கத்தை எளிதில் காணலாம்.


அனைத்துக்கும் மேலாக லோக்பாலுக்கான இந்த போராட்டம் லோக்பால் என்ற அமைப்பை வென்றெடுப்பதற்கானது மட்டுமல்ல. அதை முன்வைத்து ஊழலுக்கு எதிரான போராட்டமாக இது நடக்கிறது. எந்த மக்கள் போராட்டமும் அவ்வாறே நிகழ முடியும் . மக்கள் விழிப்புணர்வுக்கான போராட்டமாக வளர்கிறது என்பதை, அந்த மக்கள் எழுச்சியைக் காணும் கண் ஒருவருக்கில்லை என்றால் அவருக்கு என்ன சிந்தனைத்திறன் இருக்கிறது? என்ன நேர்மை இருக்கிறது?


ஞாநியின் நேர்மை மேல் எனக்கு நம்பிக்கை இருந்தது. இப்போது இருவிஷயங்களால் அவர் நேர்மை தவறியிருக்கிறார் என நினைக்கிறேன். ஒன்று அவரது தனிப்பட்ட அகங்காரம். அண்ணா ஹசாரேக்குக் கிடைக்கும் தேசியப்புகழ் அவரைப் பொருமச்செய்கிறது. நாளையே விளம்பரத்துக்காக மட்டுமே பொதுவாழ்க்கையில் இருக்கும் அருந்ததி ராய் போன்றவர்களும் இப்படிக் கிளம்பக்கூடும்.


ஒருபோதும் தன் தனிவாழ்க்கையில் தியாகங்கள் செய்த களப்பணியாளனுக்கு வரும் மக்களாதரவு வெறுமே சொற்களை இறைக்கும் பத்தி எழுத்தாளர்களுக்கு வருவதில்லை. ஞாநியின் இடம் அவ்வளவுதான். அவருடைய பங்களிப்பும் அவ்வளவுதான். அந்த அப்பட்டமான உண்மையை அவரால் ஏற்க முடிந்தால் அவர் நியாயத்தைப் பார்க்கக்கூடும்


இரண்டாவதாக, தன் மீதான பிராமணமுத்திரையைத் தவிர்ப்பதற்காக எப்போதும் முற்போக்கு முத்திரையை தானே குத்திக்கொண்டாகவேண்டிய இடத்தில் இருக்கிறார் ஞாநி. முற்போக்கை விட முற்போக்காகக் காட்டிக்கொள்ளவேண்டியிருக்கிறது. பரிதாபகரமான நிலைதான். சோவைப்பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. எந்த பிஜெபி தொண்டனையும்போலத்தான் அவரும். அவருக்கான நோக்கங்களே வேறு.


ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2011 11:30

August 20, 2011

அண்ணா ஹசாரே- பிரச்சினை நாம்

வணக்கம்,


உங்களது ப்ளாக் சிறிது நாட்களாக படித்துவருகிறேன். எனது தாய் மொழி தமிழ் ஆகினும், படித்தது K .V இல். இதை பெருமைக்காக சொல்ல வில்லை. பிழை இருந்தால் மன்னிக்க கோரி சொல்கிறேன். உங்களது தெள்ள தெளிவான சிந்தனை அற்புதம். அதை தமிழில் படிக்கையில் ஒரு படி மேலே.


விஷயத்துக்கு வருக்கிறேன். அண்ணா ஹஜாரே பற்றிய உங்களது சமீபத்திய கடிதம் ஒரு நெத்தியடி. எனக்கு. பல நாட்களாக யோசித்தும் அண்ணா வின் இந்த போராட்டத்தை முழுமையாக சப்போர்ட் செய்ய என்னால் முடியவில்லை. காரணம் சிலவற்றை நீங்களே சொல்லி விட்டீர்கள். நம் முன்னோர்கள் நம்மை ஒரு முறைக்கு பல முறை யோசி என்று சொல்லியதை தவறாக எடுத்துகொண்டு கோடி முறை யோசிக்கின்றோம். Thoughts without actions . Arm Chair /Tea Shop critics – தேசத்திலேயே நம் ஊரில் தான் அதிகம். இன்று எனது நிலை மாறியிருக்கின்றது. இது நாள் வரை இருந்த கேள்விகளை பற்றி விவாதிக்கையில், இந்த போராட்டத்தில் ஓரளவு கலந்து கொள்ள முயல்வேன்.


கேள்விக்கு வருகிறேன். எனக்கு ஒரு நாளும் அண்ணா மீது சந்தேகம் இல்லை. ஏனெனில் இவ்வளவு நாட்களாக அரசாங்கம் கறையை தேடி தேடி நொந்து விட்டார்கள். அவர் நல்லவரே. அடுத்தது கோக்கு மாக்காக கேள்வி என்னுள் எழ வில்லை. இந்த போராட்டம் இந்த அரசுக்கு எதிராக அவசியமே. சில ஊழல் பேர்வழிகள்(யார் யார் என்று அனைவருக்கும் தெரியும் ) நரகத்துக்கு சென்று பஜ்ஜி சொஜ்ஜி ஆக வேண்டும் என்பது என் ஆசை. இருப்பினும் எதனால் நான் யோசித்தேன் ? குற்ற உணர்ச்சி. நான் பெங்களூர்-இல் வசிப்பவன். என்னால் ஒரு நாள் கூட டிராபிக் ரூல்ஸ் -ஐ முழுமையாக கடை பிடிப்பது சாத்தியமே இல்லை. சத்தியமாக சொல்கிறேன். அடித்தது tax


. நான் tax சரியாக கட்டுவதற்கு ஒரே காரணம், அது என் கம்பெனி யே பிடித்து கொண்டு கொடுப்பதால். நான் பிசினஸ் செய்து இருந்தால் கட்டிருப்பேனா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இதே போல் தான் நான் காணும் அணைத்து பேர்வழிகளும். இத்தனை அய்யோக்ய தனத்துடன் என்னால் பாசாங்கு செய்ய முடிய வில்லை. பாதி கோடி முறை யோசித்து விட்டேன். இன்னும் பாதி மிச்சம்.


இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் "தான் ஒரு உண்மையான குடிமகனாக வாழ்வேன்; நான் காணும் சின்ன சின்ன உழல்களையும் தட்டி கேட்பேன்" என்ற சத்தியத்தை செய்ய முனைந்தாலே 2 விஷயங்கள் சரிஆகிவிடும்: 1 ) moral right to question உண்டாகும் 2 ) சமுதாயம் உருப்படியாகும்.


இது அனைத்தும் எழுத காரணம், இன்று ஒரு வேடிக்கையான நிகழ்வை கண்டது தான். ஒரு இடத்தில ஐ.டி மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக கோஷம் எழுப்பி கொண்டிருந்தார்கள். இன்னும் ஒரு 100 அடி தாண்டி ஒரு U – turn பக்கத்தில் சில ஆசாமிகள் டிராபிக் constable கு லஞ்சம் குடுத்து கொண்டிருந்தார்கள். அந்த கோஷத்தை 100 அடி தாண்டி நடத்தி இருந்தால் சிறிதளவு உபயோகமாக இருந்திருக்கும். என்னை பொறுத்த வரை நமது நாடே குட்டி சுவராக போய் விட்டது. இந்த போராட்டம், ஷங்கர் படத்தை போல ஒரு நல்ல முடிவு குடுத்தால் அற்புதமாக இருக்கும்.


-ரவி



அன்புள்ள நண்பருக்கு


நான் சற்றே தீவிரமான மொழியில் எழுதுவது எந்த கோபத்தாலும் அல்ல. தொடர்ச்சியாக இந்த வகையான வாதங்களை எழுப்பிக்கொள்பவர்கள் தங்களை ஒருகணம் கூட பார்த்துக்கொள்வதில்லை என்பதன் மீதான விமர்சனம்தான் அது. உங்கள் கடிதத்தின் தொனி எனக்கு நிறைவளித்தது.


முதலில் அண்ணா ஹசாரேயின் நேர்மை பற்றிய ஐயம். இதைச்சொல்பவர்கள் சில கணங்கள் திரும்பி தங்களைப்பார்த்துக்கொள்ள முடிந்தால் அந்த ஐயம் வருமா என்ன? முப்பதாண்டுக்காலமாக பொதுவாழ்க்கையில் இருப்பவர் , சர்வதேச புகழ்பெற்றவர், இன்றும் ஒரு கீழ்நடுத்தர வாழ்க்கையில் இருக்கிறார். அவரது குடும்பமும் அப்படியே. அவர் திடமாக பொதுமேடைக்கு வந்து நின்று 'நான் குற்றம்சாட்டுகிறேன்' என்று சொல்வதிலேயே அந்த நேர்மை உள்ளது. மடியில் கனத்துடன் அதைச் சொல்லமுடியாது.


அவர் பதினைந்தாண்டுகளாக அவரது சொந்த மாநிலத்தில் ஊழலுக்கு எதிராக போராடியவர். பல அமைச்சர்களை வீட்டுக்கனுப்பியவர். அவரிடம் பிழை இருந்தால் இதற்குள் சந்தி சிரிக்க வைத்திருப்பார்கள் அரசை கையில் வைத்திருக்கும் நம் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும். அவர் மேல் களங்கம் காண விடாப்பிடியாக முயன்று இரவுபகலாக ஆராய்ந்து ஒரு விழாவில் இரண்டு லட்சம் செலவுசெய்யப்பட்டிருக்கலாம் என ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து விசாரிக்க கமிஷன் போடுகிறார்கள். அதை ஏதோ ஸ்பெக்ட்ரம் ஊழல் கமிஷனும் அதுவும் சமம் என்பதுபோல ஊடகங்களில் பிரச்சாரம் செய்கிறார்கள். [விஷ்ணுபுரம் அமைப்பு நடத்தும் ஒரு கூட்டத்துக்கே சாதாரணமாக ஐம்பதாயிரம் செலவாகிறது]


அதை அலசி பகுத்து ஆராயும் நம் இதழாளர்கள் நட்சத்திர ஓட்டல்களின் வரவேற்பறைகளில் வாழும் அரசியல் தரகர்கள். அதை இம்மிகூட பகுத்தறியாமல் நம்மவர்கள் பேச ஆரம்பிக்கிறார்கள். காரணம் நம்முடைய அடிப்படையான நேர்மையின்மை. நாம் நேர்மையற்றவர்களை எளிதில் நம்புகிறோம். பிறரது நேர்மையை நம்ப மறுக்கிறோம்.


இரண்டாவதாக , அவரை ஏதோ அப்பாவி என்பது போல சித்தரிப்பவர்கள். இவர்கள் மெத்தப்படித்தவர்கள். அண்ணா இந்தி மட்டும் வாசிக்கிறார் என்பதனாலேயே அவருக்கு அறிவு கிடையாது என ஒரு ஆசாமி தொலைக்காட்சியிலே சொல்கிறார். என்ன ஒரு கேவலம்! இந்தியாவில் பல்லாயிரம் மணிநேரம் பேசுவதும் ஆயிரம் பக்கம் எழுதுவதும் மிக எளிது. இந்த மக்களிடையே சென்று ஒரு சின்ன விஷயத்தைச் செய்து பாருங்கள் தெரியும். செய்து காட்டிய ஒரு செயல்வீரரை விட எந்த அறிவுஜீவியும் பெரியவரல்ல. செய்துகாட்டுபவர் மட்டுமே உண்மையான காந்தியவாதி. நம்மால் பேசமட்டுமே முடியும், எதையுமே செய்யமுடியாதென்பதனால் நாம் அண்ணாவை மட்டம் தட்டும் வாய்ச்சொல் வீணர்கள் பக்கம் எளிதில் சேர்கிறோம்.


இதெல்லாம் நடக்குமா, இதற்கெல்லாம் என்ன பயன், இதை வேறுமாதிரி செய்யலாமே என்றெல்லாம் நாம் பேசிக்கொண்டிருப்பது ஒரே காரணத்தால்தான். நம்முடைய செயலின்மையை, கையாலாகாத்தனத்தை நம்மிடமிருந்து மறைப்பதற்காக.


நண்பர் கிருஷ்ணன் சொன்னார். அவர் ஈரோட்டில் ஒருவரை பார்த்தார். பேச்சுவாக்கில் 'நீங்கள் என்ன செய்கிறீர்கள்?' என்றார். 'சிந்தனையாளரா இருக்கேன்' என்றாராம். இவர் அரண்டு போய்விட்டார். அப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவே இல்லை 'அப்டீன்னா?' என்றார். 'அதாங்க சிந்திக்கிறது, அதான் செய்றேன்' கிருஷ்ணன் புரிந்துகொண்டு 'ஓ, எழுதறீங்களா?' என்றார். 'இல்லீங்க' குழப்பத்துடன் 'அப்ப மேடையிலே பேசுவீங்க இல்ல?' என்று கிருஷ்ணன் ஆர்வமாக கேட்டார். ' அதெல்லாம் நமக்கு சரிப்படாதுங்க' என்றார் கிழவர். 'சும்மா பேசிட்டிருப்பீங்களோ' என்றார் கிருஷ்ணன். 'எங்கங்க…அதுக்கெல்லாம் ஒண்ணும் ஆவுறதில்லீங்க' என்றார் பெரியவர். ' வாசிப்பீங்களோ?' என்றார் கிருஷ்ணன். அவர் ' திருக்குறள் அப்பப்ப வாசிக்கிறதுங்க…கண்ணு சரியில்லே அதனால அதிகமா ஒண்ணும் வாசிக்கிறதில்ல' என்றார். 'அப்ப?' என்றார் கிருஷ்ணன் மனம் உடைந்து. 'அதாங்க சிந்திக்கிறதோட சரி'


பிரச்சினை அண்ணாவிடம்தான் ஏன் உறுதியாக இருக்கிறீர்கள்? ஏன் உங்களை நீங்கள் பார்க்கக்கூடாது? ஏன் இப்படி யோசிக்கிறீர்கள்? ஏன் இப்படி ஆவேசமாக எதிர்த்து வாதிடுகிறீர்கள்? உங்களுக்கு இயல்பாக அந்த ஐயங்களும் கசப்பும் தோன்ற என்ன காரணம்?


நம்மில் பலர் சிந்தனையாளர்கள். மிச்சபேர் நிந்தனையாளர்கள். அதுதான் சிக்கலே


ஜெ


ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1


ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2


அண்ணா ஹசாரே கடிதங்கள்..


அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…


அண்ணா ஹசாரே,வசைகள்


அண்ணா ஹசாரே-2


அண்ணா ஹசாரே-1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 20, 2011 21:17

அயோத்திதாசர், கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,


நான் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறேன். உங்களைப்பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருந்தாலும் எதையுமே வாசித்தது கிடையாது. உங்களைப்பற்றி எல்லாரும் சொன்னதுதான் காரணம். நீங்கள் சாதிவெறி உடையவர் என்றார்கள். இந்துத்துவா கொள்கை எனக்குப் பிடிக்காது. ஆகவே படிக்கவில்லை.


விடுதலைச்சிறுத்தைகள் சார்பிலே திருமா ஐயா படம் போட்டு உங்கள் போஸ்டரை மாட்டுத்தாவணியிலே பார்த்துக் கூட்டத்துக்கு வந்தேன். நீங்கள் அயோத்திதாசரைப்பற்றிப் பேசியதைக் கேட்டேன். நான் தமிழாசிரியராகப் பணியாற்றிவருகிறேன். அயோத்திதாசரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதிகமாகத் தெரியாது. உங்கள் உரை பிரமிப்பு அளித்தது.அற்புதமான உரை. மிகச்சிறப்பு. எனக்கு இந்தத் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த சரித்திரத்தையே திரும்பப் பார்க்க வைத்தது. இவ்ளவுதான் நடந்திருக்கிறது என்று தெரிந்துகொண்டபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.


அயோத்திதாசர் போன்ற பொக்கிஷங்களை எல்லாம் மறைத்துவிட்டார்கள். அயோத்திதாசர் அவர்களை ஒரு அசல்சிந்தனையாளர் என்று சொன்னீர்கள். நான் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறேன். ஆனால் இதுவரை இதெல்லாம் கேள்விப்பட்டதில்லை. உங்கள் உரையின் எல்லாப் பகுதிகளையும் நான் புரிந்துகொண்டேன் என்று சொல்லமுடியாது. நிறையப் பகுதிகளை என்னால் சரியாக உள்வாங்கிக்கொள்ளமுடியவில்லை. நீங்கள் மற்ற பேச்சாளர்களைப்போல நிறுத்தி நிறுத்திப் பேசாமல் பேசிக்கொண்டே போனீர்கள். ஒரு கருத்தைப் புரிந்துகொள்வதற்குள் அடுத்த கருத்து வந்துவிடுகிறது. ஆனாலும் எல்லாமே சிந்திக்கவைக்கக்கூடியவை.


நீங்கள் சொல்வது என்ன என்று இப்போது புரிகிறது. நம் மண்ணுக்கேற்ற சிந்தனைக்காகப் பேசுகிறீர்கள். அது இந்துத்துவம் கிடையாது. அதிலே அசலாக சிந்திக்கிறவர்களை முன்நிறுத்திப் பேசுகிறீர்கள். உங்களை சந்தித்து கமலநாதன் ஐயா நூலிலே கையெழுத்து வாங்கிக்கொண்டேன். உங்கள் இணையதளத்தை வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். வலைப்பூ எழுதலாமென்றும் நினைக்கிறேன். நன்றி


முருகேசன்


அன்புள்ள முருகேசன்


தொடர்ந்து வாசியுங்கள். புரியாமல் போவதென்பது சிந்தனையில் அதுவரை என்ன நடந்ததெனத் தெரியாமலிருக்கும்போதுதான். வாசிக்க ஆரம்பித்தால் சிலநாட்களிலேயே எல்லாம் தெளிவாகிவிடும்.


எழுதுங்கள்


ஜெ


அன்பின் ஜெ.எம்.,


அயோத்திதாசர் பற்றி ஓர் ஆய்வே நடத்தி வருகிறீர்கள்.


முதற் சிந்தனையாளர் என்ற தொடரமைப்பே மிகவும் புதுமையான சொல்லாக்கமாக,அடுத்த சிந்தனையின் கண்ணியை-அதை முன்னெடுத்துச் சென்ற சிந்தனையாளர் பற்றி அறியும் ஆவலைத் தூண்டிக் கை பிடித்து அழைத்துப் போகிறது.


வாசிப்பில் ஆர்வமிருப்பவர்களுக்குமே கூட எல்லாத் துறை சார்ந்த எல்லா நூல்களையும் படிக்க நேரமும்,உரிய நூல்களும் கிடைப்பதில்லை.அத்தகையோர்க்கு உங்கள் கட்டுரைகள் அயோத்திதாசரின் சிந்தனைப் பின் புலத்தின் சாரத்தையே பிழிந்து தருவது மிகவும் பயனளிக்கக் கூடியது.


அயோத்திதாசர் குறித்த ஆய்வாக மட்டுமன்றி அது சார்ந்த சிந்தனைகளைப் பல தளங்களில்..பல பரிமாணங்களில்,பலரின் அணுகுமுறை பற்றிய வேறுபட்ட பார்வைகளோடு-அவற்றிலுள்ள முரண் மற்றும் ஒற்றுமை சார்ந்த அலசல்களோடு  விரித்தெடுத்துச் செல்லும் உங்கள் கட்டுரைகள் தமிழுக்கு நிலையாக வாய்க்கப் போகும் கொடைகளாகவே எனக்குப் படுகின்றன.


அன்புடன்,

எம்.ஏ.சுசீலா,

புதுதில்லி.


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர்-7


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர்- 6


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 5


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 4


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 3


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 2


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 20, 2011 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.