அயோத்திதாசர், கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,


நான் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறேன். உங்களைப்பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருந்தாலும் எதையுமே வாசித்தது கிடையாது. உங்களைப்பற்றி எல்லாரும் சொன்னதுதான் காரணம். நீங்கள் சாதிவெறி உடையவர் என்றார்கள். இந்துத்துவா கொள்கை எனக்குப் பிடிக்காது. ஆகவே படிக்கவில்லை.


விடுதலைச்சிறுத்தைகள் சார்பிலே திருமா ஐயா படம் போட்டு உங்கள் போஸ்டரை மாட்டுத்தாவணியிலே பார்த்துக் கூட்டத்துக்கு வந்தேன். நீங்கள் அயோத்திதாசரைப்பற்றிப் பேசியதைக் கேட்டேன். நான் தமிழாசிரியராகப் பணியாற்றிவருகிறேன். அயோத்திதாசரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதிகமாகத் தெரியாது. உங்கள் உரை பிரமிப்பு அளித்தது.அற்புதமான உரை. மிகச்சிறப்பு. எனக்கு இந்தத் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த சரித்திரத்தையே திரும்பப் பார்க்க வைத்தது. இவ்ளவுதான் நடந்திருக்கிறது என்று தெரிந்துகொண்டபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.


அயோத்திதாசர் போன்ற பொக்கிஷங்களை எல்லாம் மறைத்துவிட்டார்கள். அயோத்திதாசர் அவர்களை ஒரு அசல்சிந்தனையாளர் என்று சொன்னீர்கள். நான் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறேன். ஆனால் இதுவரை இதெல்லாம் கேள்விப்பட்டதில்லை. உங்கள் உரையின் எல்லாப் பகுதிகளையும் நான் புரிந்துகொண்டேன் என்று சொல்லமுடியாது. நிறையப் பகுதிகளை என்னால் சரியாக உள்வாங்கிக்கொள்ளமுடியவில்லை. நீங்கள் மற்ற பேச்சாளர்களைப்போல நிறுத்தி நிறுத்திப் பேசாமல் பேசிக்கொண்டே போனீர்கள். ஒரு கருத்தைப் புரிந்துகொள்வதற்குள் அடுத்த கருத்து வந்துவிடுகிறது. ஆனாலும் எல்லாமே சிந்திக்கவைக்கக்கூடியவை.


நீங்கள் சொல்வது என்ன என்று இப்போது புரிகிறது. நம் மண்ணுக்கேற்ற சிந்தனைக்காகப் பேசுகிறீர்கள். அது இந்துத்துவம் கிடையாது. அதிலே அசலாக சிந்திக்கிறவர்களை முன்நிறுத்திப் பேசுகிறீர்கள். உங்களை சந்தித்து கமலநாதன் ஐயா நூலிலே கையெழுத்து வாங்கிக்கொண்டேன். உங்கள் இணையதளத்தை வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். வலைப்பூ எழுதலாமென்றும் நினைக்கிறேன். நன்றி


முருகேசன்


அன்புள்ள முருகேசன்


தொடர்ந்து வாசியுங்கள். புரியாமல் போவதென்பது சிந்தனையில் அதுவரை என்ன நடந்ததெனத் தெரியாமலிருக்கும்போதுதான். வாசிக்க ஆரம்பித்தால் சிலநாட்களிலேயே எல்லாம் தெளிவாகிவிடும்.


எழுதுங்கள்


ஜெ


அன்பின் ஜெ.எம்.,


அயோத்திதாசர் பற்றி ஓர் ஆய்வே நடத்தி வருகிறீர்கள்.


முதற் சிந்தனையாளர் என்ற தொடரமைப்பே மிகவும் புதுமையான சொல்லாக்கமாக,அடுத்த சிந்தனையின் கண்ணியை-அதை முன்னெடுத்துச் சென்ற சிந்தனையாளர் பற்றி அறியும் ஆவலைத் தூண்டிக் கை பிடித்து அழைத்துப் போகிறது.


வாசிப்பில் ஆர்வமிருப்பவர்களுக்குமே கூட எல்லாத் துறை சார்ந்த எல்லா நூல்களையும் படிக்க நேரமும்,உரிய நூல்களும் கிடைப்பதில்லை.அத்தகையோர்க்கு உங்கள் கட்டுரைகள் அயோத்திதாசரின் சிந்தனைப் பின் புலத்தின் சாரத்தையே பிழிந்து தருவது மிகவும் பயனளிக்கக் கூடியது.


அயோத்திதாசர் குறித்த ஆய்வாக மட்டுமன்றி அது சார்ந்த சிந்தனைகளைப் பல தளங்களில்..பல பரிமாணங்களில்,பலரின் அணுகுமுறை பற்றிய வேறுபட்ட பார்வைகளோடு-அவற்றிலுள்ள முரண் மற்றும் ஒற்றுமை சார்ந்த அலசல்களோடு  விரித்தெடுத்துச் செல்லும் உங்கள் கட்டுரைகள் தமிழுக்கு நிலையாக வாய்க்கப் போகும் கொடைகளாகவே எனக்குப் படுகின்றன.


அன்புடன்,

எம்.ஏ.சுசீலா,

புதுதில்லி.


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர்-7


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர்- 6


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 5


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 4


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 3


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 2


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 20, 2011 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.