Jeyamohan's Blog, page 807

March 23, 2022

அந்த இருபதாயிரம் நூல்கள்…

அன்புள்ள ஜெ

ஐந்து வயதில் நீங்கள் புத்தகம் வாசித்ததையே நம்பமுடியாத உலகம் இது, 20000 புத்தகங்களை 30 வயதுக்குள் வாசித்திருப்பீர்கள் என நம்புகிறேன், சாத்தியம்தானே?

(5000 நூல்கள் உங்களிடம் இருப்பதாக சொல்லி மயக்கி,திருமணம் செய்தபின் வெறும் 500 நூல்களை தந்து ஏமாற்றியதை ஏற்கனவே சமூகம் அறிந்துவிட்டது – மனைவி எழுத்தாளராவதன் அபாயம்)

வாசிப்பு குறித்து எந்த சர்ச்சை வந்தாலும் அது சுவாரஸ்யம்தானே ?

அரங்கா

***

அன்புள்ள அரங்கா,

ஒரு பெண்ணை கவரவே ஐந்தாயிரம் என்று சொல்கிறோம். ஒரு நாட்டை கவர ஐம்பதாயிரம் என்று சொன்னால் என்ன பிழை? காதலிலும் அரசியலிலும் எல்லாமே சரிதான்.

உண்மையில் பொதுவெளியில் ஒருவர் நூல்களைப் பற்றிப் பேசுவது, வாசிப்பைப்பற்றிப் பேசுவது என்பது, அது எப்படிப்பட்ட பேச்சானாலும் வரவேற்புக்குரியது. அதைநோக்கிச் சிரிப்பவர்கள் புத்தகங்களுடன் தொடர்புடையவர்களாக இருக்க முடியாது.

தமிழ்ச்சூழலில் சாமானியர்களில் ஆயிரத்தில் ஒருவருக்குக் கூட புத்தகங்கள் என உலகில் ஒரு பொருள் உள்ளது, அதை சிலபேர் வாசிக்கிறார்கள் என்று தெரியாது. புத்தகங்களை மேற்கோள்காட்டும் மேடைப்பேச்சாளர்களே அரிதினும் அரிதானவர்கள். ஆகவே புத்தகம், வாசிப்பு பற்றிய எந்தப்பேச்சுமே நம் சமூகத்திற்கு ஒரு நல்ல செய்தியைச் சொல்வதே. திரு அண்ணாமலை அவர் வாசித்த நூல்களைப் பற்றி சொல்லவேண்டும். எந்த நூலாக இருந்தாலும் சரி. வாசிப்பு பற்றி பேசப்பட்டால் போதும்.

உண்மையில் சமீபத்தில் திருமதி பர்வீன் சுல்தானாவுடன் ஓர் உரையாடலின் நடுவே திக் என ஓர் உணர்வு. உயிருடனிருந்தபோது திரு மு.கருணாநிதி பற்றி ஆயிரம் விமர்சனங்கள் இருந்தன. ஆனால் அவர் மறைந்தபோது உருவான வெற்றிடம் அப்போதுதான் தெரிந்தது. வாழ்நாளெல்லாம் தன்னை ஓர் எழுத்தாளனாக முன்வைத்துக்கொண்டிருந்த அரசியல்தலைவர் அவர். அந்த வகைமையில் அவரே ஒருவேளை தமிழ்வரலாற்றின் கடைசி ஆளுமையாகக்கூட இருக்கலாம். அப்போது அவருடைய இன்மையை, அதன் மாபெரும் ஏக்கத்தை மிக ஆழமாக உணர்ந்தேன்.

இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு மறைந்த சில ஆண்டுகளுக்குள் அந்த உணர்வை கேரளத்தில் பலரும் அடைந்தனர். அவர் இருந்தபோது அவர் ஒரு தரப்பு. ஓங்கி ஒலித்த அதிகாரத்தரப்பும் கூட. ஆகவே பெரும்பாலானவர்கள் அவருடன் மானசீகமாக விவாதித்து, மறுத்து எழுந்தவர்கள். ஆனால் அவர் மறைந்தபோது கேரள அரசியல்தலைவர்களில் எழுத்தாளராகவும் அறிஞராகவும் திகழ்ந்த கடைசி ஆளுமை அவரே என உணர்ந்தனர். இனி அந்த ‘மாடல்’ உருவாகவே முடியாது என்பது பெரும் சோர்வை அளிப்பதாக அவருடைய முதன்மை கருத்தியல் எதிரியாக இருந்த பால் சகரியா எழுதினார்.

எழுதுபவர்கள், வாசிப்பவர்கள் அரசியலை நடத்திய ஒரு காலம் நமக்கிருந்தது என்பதையே இன்று இருபது வயதான ஓர் இளைஞருக்கு சொல்லி நம்பவைக்க முடியாத சூழல் உள்ளது. இனி அது நிகழப்போவதில்லை என்றும் கண்கூடாக தெரிகிறது. தேசிய அளவிலேயே அந்த வகைமை அற்றுப்போய்க் கொண்டிருக்கிறது. ஜெய்ராம் ரமேஷ், சசிதரூர் எனச் சிலர் தவிர வேறு முகங்களே இல்லை.

இனி வரப்போகும் அரசியல்வாதிகள் கார்ப்பரேட் நிர்வாகிகள் போன்றவர்கள். பெரும் விளம்பர அமைப்புகளால் திட்டமிட்டு உருவாக்கப்படும் பொது ஆளுமைகள். அதாவது படிமங்கள். படிமங்களுடன் படிமங்களே மோதமுடியும். ஆகவே வேறு வழியே இல்லை

ஆகவே எவர் எதன்பொருட்டு நூல்களை, வாசிப்பைப் பற்றிப்பேசினாலும் நன்றே.

*

நான் மூன்று மொழிகளில் எவ்வளவு வாசித்திருப்பேன்? எப்படி கணக்கிடுவதென தெரியவில்லை. இப்போதும் நான் பார்த்த, கேள்விப்பட்ட எவரை விடவும் வேகமாக வாசிக்கக்கூடியவன். ஒரு நல்ல வாசகரே கூட என்னைவிட பாதிவேகத்தில்தான் வாசிக்கமுடியும். என் வாசிப்பு வேகம் வயதால் குறைந்திருக்கும் என நினைத்தேன். சமீபத்தில் சோதித்துப் பார்த்தேன். 1184 பக்கம் கொண்ட இரா.முருகனின் மிளகு நாவலை மூன்று நாட்களில் படித்தேன். மொத்தம் ஏழுமணி நேரம் ஆகியது. விசை அப்படியேதான் உள்ளது.

ஆனால் நான் எதையும் விட்டுவிட்டு வாசிப்பவன் அல்ல. எல்லா சொற்களையும் வாசிப்பவன். இயல்பாகவே வேகமாக வாசிப்பவன் என்றாலும் 1992-ல் ஊட்டி குருகுலத்தில் பீட்டர் மொரேஸ் நடத்திய விரைவான வாசிப்புக்கான பயிற்சிவகுப்பில் கலந்துகொண்டு பயிற்சி எடுத்துக்கொண்டேன். சில அடிப்படை விதிகள், சில பழக்கங்கள் உள்ளன. எளிதில் பயிலக்கூடியவை.

நான் பொதுவாக மறப்பதுமில்லை. அந்த தன்னம்பிக்கையால் எப்போதும் நூல்களை நினைவில் இருந்தே பேசுகிறேன். எல்லா விமர்சனநூல்களையும் நினைவில் இருந்தே எழுதியிருக்கிறேன். வெண்முரசு நினைவிலிருந்தே எழுதப்பட்டது – ஸ்ரீனிவாசன் சுதா தம்பதியினர் தகவல்களை சரிபார்த்தனர். நினைவில் இல்லாதது நம்மிடமில்லை என்பது என் கொள்கை.

ஐந்து வயதில், அதாவது ஒன்றாவது படிக்கையில், சாண்டில்யனின் ராஜமுத்திரை வாசித்தேன். தொடர்ந்து வாசித்த பி.எம்.கண்ணனின் ’ஜோதிமின்னல்’, க.அ.கயிலைராஜனின் ’அவள் அல்லவோ பெண்’, மாயாவியின் ‘கண்கள் உறங்காவோ’ எல்லா நூல்களும் நினைவிலுள்ளன. ஓவியங்கள், பக்கங்களின் கறைகள்கூட நினைவிலுள்ளன.

1969ல் ஜெயகாந்தனை வாசித்தேன், அதாவது மனிதன் சந்திரமண்டலத்திற்குச் சென்றதற்கு சிலநாட்கள் கழித்து. சந்திரனில் மனிதன் என்ற தினத்தந்தி அட்டை, சந்திரனில் மனிதன் சென்றதை கேலிசெய்து குமுதத்தில் வந்த  அப்புசாமி கார்ட்டூன் (பூனை ஒரு பானையை தள்ளிவிட அப்புசாமி ஸ்பேஸ் சூட் ஹெல்மெட் அணிந்திருப்பதுபோல அவர் தலையில் அது விழுந்திருக்கும்) முதலில் வாசித்த ஜெயகாந்தன் நாவல் பாரீஸுக்கு போ. அதைப்பற்றி பேசிய ஆசிரியர், அவர்கள் விளையாடிய பேட்மிண்டன், எதுவுமே மறக்கவில்லை.

அன்று இரண்டு நூலகங்களில் உறுப்பினர். முழுக்கோடு ஒய்.எம்.சி.ஏ நூலகம். அருமனை அரசு நூலகம். இது தவிர அரசுப்பள்ளி நூலகம். வாரத்துக்கு இரண்டு நூல்கள் ஒரு நூலகத்தில். என் கணக்கு நாளுக்கு குறைந்தது ஒரு நூல். அப்படிப்பார்த்தால் ஆண்டுக்கு எப்படியும் முந்நூறு. பத்தாண்டுகளில் மூவாயிரம் தாண்டியிருக்கும். முப்பதாண்டுகளில் ஐந்தாயிரம் அல்ல மேலேயே வந்திருக்கும் என நினைக்கிறேன்.

காசர்கோடு வாழ்க்கையில் நோய்க்கூறு போல வாசித்துக் கொண்டிருந்தேன். ஒருநாளில் பதினெட்டு மணிநேரம்கூட. மலையாள எழுத்தாளர்களைச் சந்திக்கையில் எவரைவிடவும் மலையாள இலக்கியம் நான் படித்திருப்பதை உணர்ந்திருக்கிறேன். மிக அரியவர்களைக்கூட படித்திருக்கிறேன். நான்கு நூலகங்களில் உறுப்பினர் அப்போது. என் வாழ்க்கையில் உச்சகட்ட வாசிப்பு வெறியுடனிருந்த நாட்கள் அவை.

தமிழிலும் மலையாளத்திலும் வேகமாக வாசிப்பேன். ஆங்கிலத்தில் அதில் பாதி வேகம்தான். என் அகமொழி ஆங்கிலத்துடன் இன்னும்கூட பொருந்தவில்லை. ஆங்கிலத்தை முறையாக வாசிப்பதற்காக 1978-ல் கடுமையான பயிற்சி எடுத்துக்கொண்டேன். சொற்களை ஒரு பெரிய பேரேட்டில் எழுதி மனப்பாடம் செய்து திறனை வளர்த்தேன். 1992ல் சென்னை அமெரிக்கன் கான்சுலேட் உறுப்பினர் ஆகி அவர்கள் அளித்த தபால்வழி நூல்கள் வழியாக பயிற்சி எடுத்தேன்.

இன்று வரை ஆங்கிலத்தில் நிறைய வாசிக்கிறேன். ஆனால் ஆங்கிலத்தில் மொழியின்பம் என்பது இன்றும் கைகூடவில்லை. ஆங்கிலச் சொற்றொடர்களை என்னையறியாமலேயே தமிழாக்கம் செய்துதான் வாசிக்கிறேன் என நினைக்கிறேன். அது சரியான வாசிப்பு அல்ல.

வாசிப்பதன் ரகசியமென்பது ஒருமுகப்படுதல்தான். ஒருமுகப்படாமல் வாசிப்பது போல நேரவிரயம் வேறில்லை. இருபது நிமிடத்தில் வாசிப்பதை நடுநடுவே வாட்ஸப் பார்த்தால் ஒருமணி நேரத்தில்தான் வாசிக்கமுடியும். ஆகவேதான் நான் வாட்ஸப் உட்பட எதிலுமே அகப்படாமலிருக்கிறேன். அழைப்பு எண் பார்த்து நானே பிறரை அழைத்தால்தான் உண்டு. வாசிக்கையில் எப்போதும் முழுமையாக நூலுக்குள் செல்வது என் வழக்கம்,

வேடிக்கையை விடவேண்டாம். ஆனால் கணவர் எழுத்தாளர் மட்டுமல்ல மனைவி எழுத்தாளர்களும் சுவாரசியப் புளுகுகளை எடுத்துவிடுவதுண்டு என்பதை ஞாபகம் கொள்ளவேண்டும். நான் பாலக்கோட்டில் இருக்கையில் மூவாயிரம் நூல்கள் வைத்திருந்தேன். அதற்காகவே தொலைபேசி நிலைய கட்டிடத்தின் மேலேயே மூன்று அறைகள் கொண்ட வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தேன்

ஆனால் 1991ல் தர்மபுரிக்கு மாறி திருமணம் வரை ஒற்றை அறையில் தங்கியாகவேண்டும் என்னும் நிலை உருவானபோது நூல்களை அள்ளி பலருக்கும் அளிக்க ஆரம்பித்தேன். தர்மபுரியிலும் பாலக்கோட்டிலும் பல நூலகங்களுக்கு பெரிய பெரிய அட்டைப்பெட்டிகளில் நூற்றுக்கணக்கில் நூல்களை அளித்திருக்கிறேன்.

ராஜீவ் காந்தி கொலையை ஒட்டி என்னை தேடி போலீஸ் வந்தபோது அறையை காலிசெய்யச் சொன்னார்கள். ஒரே நாளில் காலி செய்தபோது மீண்டும் பாதிநூல்களை பலருக்கும் அளிக்க நேர்ந்தது. ஆவலுடன் வாங்கிச்சென்ற பலர் எம்எல் அமைப்பினர். இப்போது எங்கிருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் தெரியவில்லை.  (நான் மாத்ருபூமி இதழில் இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஒரு நீள்கட்டுரை எழுதியிருந்தேன்)

அன்று ஒரு மனநிலை இருந்தது. மீண்டும் நான் வாசிக்கப்போவதில்லை என உணர்ந்த நூல்களை எவருக்காவது அளித்துவிடவேண்டும் என்று.  அது சுந்தர ராமசாமியின் கொள்கை. அவர் தன் நூல்களை கொடுத்துக்கொண்டே இருந்தவர். நானும் ஆண்டுக்கு ஆயிரம் நூல்களை அளித்துக் கொண்டிருந்தேன். அவற்றில் பெரும்பாலானவை சோவியத் ருஷ்ய நூல்கள், ஏராளமானவை கேளிக்கை வாசிப்புக்குரிய நூல்கள்.

(அவர்களில் பல ஆசிரியர்களை இன்று தேடினாலும் கிடைக்கவில்லை. எச்.ஆர்.சென்னகிருஷ்ணன், பி.ஆர்.நாதன், க.பஞ்சாபகேசன், ய.லட்சுமிநாராயணன், வே.கபிலன்… அந்நூல்களை வைத்திருந்தால் ஒருவேளை அரிய நூல்சேகரிப்பாக இருந்திருக்குமோ?)

பின்னர் கட்டுரைகள் எழுதும்போது குறிப்புகளுக்காக தேடும்போது நூல்கள் இல்லாமலாவது எவ்வளவு பெரிய இழப்பு என தெரிந்தது. ஆனாலும் நூல்களை அள்ளி அளித்துக்கொண்டேதான் இருக்கிறேன்.

என் வீட்டில் ஒன்பது அடுக்குகளாக நூல்கள் உள்ளன. ஒரு நல்ல நூலகம். 2002 முதல் ஏராளமான நூல்களை பா.பிதலீஸ் உள்ளிட்ட உள்ளூர் நூலகர்கள் வாங்கிச்சென்றனர். புதுவாசகர் சந்திப்புகள், விஷ்ணுபுரம் விழாக்கள் ஒவ்வொன்றிலும் நூல்களை கட்டுக்கட்டாக கொண்டு வந்து அளித்தேன். 2016 முதல் மூன்று ஆண்டுகளில் மூவாயிரம் நூல்களை அளித்தேன். அடுக்குகளில் ஒன்று காலியாயிற்று. இப்போது மீண்டும் வைக்க இடமில்லாமல் வீடெல்லாம் நூல்கள். நூல்களை வைக்க வேறொரு திட்டம் இருக்கிறது.

சமீபத்தில் என் நூல்களை அளைந்தபோது நான் வாசிக்காத நூல்கள் அனேகமாக இல்லை என்பதை கண்டேன். உண்மையில் இவ்வளவு நூல்கள் இருக்கின்றன இன்னும் வாசிக்க என்னும் நினைப்பின் கிளுகிளுப்பு இருந்தது. அது சட்டென்று வடிந்துவிட்டது.

ஆனால் ஒரு கட்டத்தில் வாசிப்பில் இருந்து விடுபட்டாகவேண்டியிருக்கிறது என இன்று நினைக்கிறேன். நினைவிலுள்ளவற்றையும் இறக்கிவைக்க வேண்டியிருக்கிறது. என் நினைவுத்திறன் பற்றிய பெருமிதம் ஒரு காலத்தில் இருந்தது. இன்று அந்நினைவுத் தொகுப்பை விட்டு வெளியேறவே எண்ணுகிறேன்.

நூல்கள் நிறைந்த உள்ளம் உலகியல் உள்ளத்தைவிட மேலானது. ஆனால் அங்கே தியானத்தின் அமைதி நிறையவேண்டுமென்றால் நூல்கள் காலியாகவேண்டும். என் நூலக அடுக்குகளை காலிசெய்ததைப்போல மூளையையும் காலிசெய்தாகவேண்டும்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 23, 2022 11:35

தங்கப்புத்தகம்

விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள் வாங்க

தங்கப்புத்தகம் குறுநாவல். மூலநூல்களையும் அதன் வழி வரும் பாடபேதங்களையும் நாம் அணுகும் முறை கொண்டு உருவான கதை. ஒரு சாகசத்தன்மை மீதுரப்பெற்றுள்ள படைப்பு.

மனம்போன போக்கில் புரிந்து கொள்வதைப் பாடபேதம் என்று கூறுவர். அதற்கு வாசகன் மட்டுமே இருப்பான். இக்கதையும் அப்படியான ஒன்றுதான். அந்த இரண்டு வாசகர்கள் பற்றிய கதை இது.

திபேத் என்ற பீடபூமியை ஆக்கிரமிக்க பிரிட்டிஷ், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நீண்டகாலமாகவே விரும்பின. அதற்குள் ஒற்றர்களை அனுப்பி அதன் சமூக-அரசியல்-புவியியல் நிலைப்பாடுகளை அறிய முயன்றனர். எனினும் அதன் ஞான மரபுகளை யாராலும் திருட முடியவில்லை. களவு போகாத பொக்கிஷமாக நிலைத்து நின்றது.

மதங்களையும் சித்தாந்தங்களையும் விமர்சனம் செய்யும் வடிகாலாகவும் இக்கதையை அணுகலாம்.

உதாரணமாக கம்யூனிசத்தின் மூல நூலான கார்ல் மார்க்ஸின் மூலதனம் என்ற நூலை வெறும் ஆணவங்களை மோதவிட்டு பொய்யைப் பிரம்மாண்டமாக கட்டி எழுப்பியிருக்கிற ஒன்றாகவே இக்கதையின் ஓரிடத்தில் கூறப்படுகிறது. உண்மையும் அதுதான்.

முக்தா என்பவர் திபெத் சென்றிருந்தார். அங்கு ஆஸ்ரமத்தில் இருக்கும்போது கனவில் ஒரு தங்கப்புத்தகத்தைக் காண்கிறார். அந்நூலை அடைவதற்கு முக்தாவும் பாட் என்கிற ரஷ்ய உளவாளியும் முனைகின்றனர். அதன் ஒரு பக்கமே ஓராயிரம் அர்த்தங்களாக விரிவுறுகிறது. அந்த மூல நூல் முடிவில்லாத ஒன்றாக அமைகிறது. பாடபேதமே உருவாக்க முடியாத நூல் ஒன்று என்பதை அவர் மிகத் தாமதமாகவே உணர்கிறார்.

“மனிதனின் அகத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் எந்தப்பொருளும் கொலைக்கருவியாகக் கூடும். உதாரணமாக, தன் நினைவின் மீதான நம்பிக்கை மனிதனுக்கு தீங்கு விளைவிப்பது. ஆனால் ஒரு சுழல்வழிப்பாதை அந்நம்பிக்கையைக் கொண்டே அவனைக் கொன்றுவிடும்… இந்த இடமும் இந்த புத்தகமும் அப்படிப்பட்டவை” என்று கதையில் ஒரு உரையாடல் வருகிறது. இக்கதையின் மிக முக்கியமான உரையாடல் பகுதி இதுவாகும். தங்கப்புத்தகம் பற்றிய உண்மையான கருத்து இது.

ஆனால் அவருடன் கூட இருக்கும் ரஷ்ய உளவாளி அந்த நூலை அப்படியே எடுத்துக் கொண்டு செல்ல முனைகிறான். அவன் திரும்பமுடியாத பாதாளத்தில் அகப்பட்டு காணாமல் போகிறான். முக்தா பூரணமாகாத பாடபேதங்களுடன் பழைய ஆஸ்ரமம் திரும்புகிறார்.

“நம்மால் வெறும்வெளியில் ஒரு நூலை உருவாக்கிக் கொள்ளமுடியாது என்று நினைக்கிறேன். முன்பே ஒரு நூல் இருக்கவேண்டும். அதை நாம் கனவு காணவேண்டும். அதைத்தேடி வரவேண்டும். அரியபொக்கிஷம் போல அடையவேண்டும். அதை அணுவணுவாக நகல்செய்தோம் என்று நாம் நம்பவேண்டும். அதை வழிபடவேண்டும். அதைத்தான் நாம் உலகுக்குச் சொல்லமுடியும்.”

இக்கதையின் மிகப் பெரிய அர்த்தமாகத் திருப்தியின்மை அல்லது முடிவின்மை முன்வைக்கப்படுகிறது. அது கற்றலின் தேடலின் ஊழ்கத்தின் முடிவின்மை என்று நாம் கருதலாம்.

சமகாலநூல்களை மட்டுமே படிக்கும் ஒருவனைப்போல மடையனையே நாம் பார்க்கமுடியாது. அவன் அலைகளை மட்டுமே கண்டு கடலை அறியாதவன் என்றும் கூறுகிறார். நிச்சயமாக இக்கதை ஜெயமோகனின் மிகச்சிறந்த குறுநாவல்களில் ஒன்று என்றே கருதமுடியும். இக்கதையைக் கூட தங்கப்புத்தகம் போல பல திசைகளில் இருந்து உருவாகும் முடிவின்மைக்குள் வகைப்படுத்தலாம்.

சுயாந்தன்

***

தொடர்புக்கு

விஷ்ணுபுரம் பதிப்பகம்

info@vishnupurampublications.com

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 23, 2022 11:31

சடமும் சித்தும் – அந்தியூர் மணி

சடம் [சிறுகதை] ஜெயமோகன்

அன்புள்ள ஆசிரியருக்கு,

சடம் சிறுகதையையும் அதற்கு வந்த கடிதங்களையும் படித்தேன். அச்சிறுகதை ஏற்படுத்திய பாதிப்பு குறித்து இங்கு விவாதம் எழவேண்டும் என்று வந்த கடிதங்கள் உணர்த்துகின்றன. அதை இல்லாத நயம் கூறல் கடிதத்திற்கான உங்கள் பதிலும் உறுதி செய்கிறது. ஆனால் நீங்கள் எழுதிய எப்புனைவினைப் பற்றியும் நீங்களே விளக்கம் கொடுப்பதில்லை எனும் நிலைப்பாடு அச்சூழலினை இங்கு ஏற்ப்படுத்தப்போவதில்லை. ஆனால் இச்சிறுகதை தத்துவப்பொருளினைப் புனைவாக எப்படி உரைப்பது என்பதற்கான அடிப்படையினை உணர்த்துவதாக எனக்குத் தோன்றியது. அதைப் பற்றியும் நண்பர்களுடைய கடிதங்களில் இருந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கான பதிலாக என் வாசிப்பு இருக்கிறது என்றும் எனக்குத் தோன்றியதால் இக்கடிதம்.

முதலில் அக்கதை இங்கு இருக்கும் பலருக்கு கலாச்சார அதிர்வினை ஏற்படுத்தி இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.இன்றிருக்கும் அறிவார்ந்த பொதுவெளியில் கிரேக்கத்தில் இராணிகளின் இறந்த உடலுக்கான சிலநாட்கள் பாதுகாப்பும், எதிரிகளிடம் தங்கள் உடல்கூட சிக்கக்கூடாதென முன்னர் இருந்த அரசிகள் செய்த காரியங்களும், மனிதனின் மோசமான இச்செயலினை உணர்த்துவன. ஐரோப்பா அதை நன்கறிந்தது. எனவே அச்செயலினை மோசமான மனப்பிறழ்வெனவே வகைப்படுத்தி வைத்திருக்கிறது. ஆகவே இன்று இந்தியாவின் பொதுப்பார்வையென இருக்கும் ஐரோப்பியப் பார்வையினை தங்கள் பார்வை எனக்கொண்டவர்களுக்கு இது கலாச்சார அதிர்ச்சியினைத்தான் ஏற்படுத்தும். ஆனால் எனக்கு அத்தகைய அதிர்ச்சியென எதுவும் இல்லை. இந்தியாவில் இது ஏற்கனவே சடங்காக இருந்தது என்னும் நான் அறிந்த தகவல் அதிர்ச்சியடைவதற்கான வாய்ப்பினைத் தடுத்துவிட்டது எனவே அச்சிறுகதையினை அத்தத்துவப் பொருளுக்கான விளக்கமாக அமைகிறதா என்று பார்க்கும் மனநிலை ஆரம்பத்திலேயே உருவாகிவிட்டது. அதன் வழியாக சிஜ்ஜடத்தினைப் பற்றிப் புரிந்து கொள்ளும் வாய்ப்பும் அமைந்துவிட்டது. அதனை நண்பர்களின் கேள்விகளை நானே தொகுத்து அதற்கான பதிலாக என் வாசிப்பினைப் பதிவிடுகிறேன்.

சடம் சிறுகதை சைவசிந்தாத்தத்தின் சிஜ்ஜடம் எனும் கருத்துருவினைப் புரிந்து கொள்ள உதவும் புனைவு. ஆனால் அப்புனைவின் களமும் நிகழ்வும் சில கேள்விகளை நண்பர்களிடம் எழுப்பி உள்ளது. அதில் இருக்கும் விவாதத்திற்கு உரிய கேள்விகளாக நான் கருதுபவை.

1.சராசரி மனிதன் கூட ஏற்றுக் கொள்ளாத குற்றங்களை அதிகாரம் தன்னிடம் இருப்பதன் காரணமாகச் செய்யக்கூடியவன் மனப்பிறழ்வு என சமூகம் கருதும் மாபெரும் குற்றத்தினைச் செய்வதை சைவ சித்தாந்தத்தின் தத்துவக் கருத்துருவினை விளக்க எடுத்துக் கொண்டது சரியா?

2.அவ்வாறு எடுத்துக் கொண்டால் அது எம்மோசமான குற்றங்களையும் நியாயப்படுத்தும் நிலைக்கு இட்டுச் செல்லுமே. அது சரியானதா?

3.அச்செயல் மோசமான செயல் என மனதிற்குத் தெரிகிறது.ஆனால் சிறுகதையில் இருக்கும் தத்துவவிளக்கம் புரிபடாத காரணத்தால் தான் அறிந்த தத்துவ விளக்கங்களை வாசகர்கள் கூறுகிறார்களே அது சரியா? அவற்றினை எவ்வாறு எடுத்துக் கொள்வது?

4.பெரும்பாலான எழுத்தாளர்கள் செய்வது போன்று அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக சமூகம் பொதுவில் வைத்து எண்ணாதவை எழுதாதவைகளை எழுதி அதை எழுதியவரின் அறிவின் விரிவினால் தான் உயர்வென எண்ணும் அனைத்தையும் வாசகர்கள் அதற்குரிய விளக்கம் போல கருதிச் சொல்கிறார்களே அது சரியா?

என்று எடுத்துக் கொள்ளலாம்.

முதல் கேள்வி இன்றைய பொதுப்போக்கின் அரசியல் சரிநிலையின்படி எழுப்பக்கூடிய கேள்வி. அரசியல் சரிநிலை என்பது எதிர்கருத்துள்ளவர்களுக்கு எதிரான சிறந்த ஆயுதமாகப் பயன்படுத்தும் சூழலில் அதனைப் பயன்படுத்தாத நபர்களுக்குரிய விளக்கத்தினைக் கோரும் மிகச் சரியான கேள்வி. அக்கேள்வி பெண்களின் பார்வையில் சரியான கேள்வியும்கூட. அதற்கான சரியான விளக்கம் புனைவிற்கான வழிமுறைகளில் அரசியல் சரிநிலைகளுக்கு இடமில்லை என்பதே.

முதலில் இச்சிறுகதையின் இறுதிதான் இங்கிருக்கும் பலருக்கு பெரும் அதிர்வினைக் கொடுப்பதாக இருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சிலசமயங்களில் நாம் எதிர்பார்க்காமல் ஏற்படும் அதிர்வுகள் நம்மை எவ்வகையிலும் சிந்திக்க விடாமல் நிலைகுலையச் செய்வது போல இங்கும் நடந்துவிடுகிறது. அந்நிலைகுலைவே இந்தக் கேள்வியினை எழுப்புகிறது.

அவ்வாறானால் இந்த நிலைகுலைவு ஏன் இங்கு சொல்லப்பட வேண்டும். காரணம் தெளிவானது நிலைகுலைவு மற்றும் ஒருங்கிணைவு ஆகிய இரண்டின் ஊடாட்டத்தில்தான் எத்தத்துவத்தின் கருத்தினையும் நாம் புரிந்து கொள்ளவே முடியும். இது அறிதலின் பொதுவிதி.

சிஜ்ஜடம் என்பது சித்தம் ஜடத்துடன் நடத்தும் பிணைப்பினைப விளக்கும் பொருட்டு புனைவினை உருவாக்க வேண்டும் என்றால் அதன் முன் இருப்பது இரண்டு வழிகள்

1.ஒருங்கிணைவு.

2.நிலைகுலைவு.

இதில் இச்சிறுகதை எடுத்திருப்பது இரண்டாம் வகையினை.

எந்நிகழ்வுகளிலிருந்து தத்துவத்தின் கருத்தினை நோக்கிச் செல்வதாக இருந்தாலும் அதில் இருக்கும் பொதுவானவை செறிவாக்கப்பட்டு அவை சிந்தனைகளாக மாற்றப்பட வேண்டும். பின் சிந்தனைகளின் ஊடாட்டத்தில் அவை தத்துவக் கருத்துவாக மாற்றப்படவேண்டும். அந்த தத்துவக் கருத்திலிருந்து மீண்டும் நிகழ்வாக மாற்றுவதற்கு இச்செயல்முறையினையே தலைகீழாக நிகழ்த்த வேண்டியது கட்டாயமாகிறது.

இங்கிருக்கும் சிஜ்ஜடம் என்னும் கருத்துரு சித்தம் ஜடத்துடன் நடத்தும் பிணைப்பினைக் கூறக்கூடியது. அது சிந்தனையாக மாறும் போது எக்காரணிகள் எவ்வாறு சித்தம் ஜடத்துடன் நடத்தும் பிணைப்பினை உருவாக்கும் என மாறும்.அதுவே நிகழ்வாக மாறும்போது எச்சூழலில் யார் எத்தகைய செயலினைச் செய்வார்கள் என்பதாக மாறும்.

பொதுவாக தான் கூறவருவதை புனைவு மூன்று வழிகளின் வழியாக இங்கு விளக்க முயலும்.

1.நேர்த்தன்மை

எந்தக் குறைவும் இல்லாத கதாபாத்திரம் பிற குறைபட்ட பாத்திரங்களோடு நடத்தும் ஊடாட்டத்தின் வழியாகச் சொல்வது.

2.எதிர்மறைத்தன்மை

குறைகளின் இருப்பிடமான கதாபாத்திரம் பிற குறைவுபட்ட அல்லது குறை இல்லாத பாத்திரங்களோடு நடத்தும் ஊடாட்டத்தின் வழியாகச் சொல்வது.

3.சமநிலைத்தன்மை.

நிறைவும் குறைவும் கலந்த கதாபாத்திரம் தன்னைப் போன்ற அல்லது தன்னைவிட மேம்பட்ட அல்லது கீழான கதாபாத்திரங்களோடு நடத்தும் ஊடாட்டத்தின் வழியாக நடத்துவது.

இம்மூன்று வகைகளில் தான் சொல்ல வருவதனைத் தெளிவாகச் சொல்லவே முதலிரண்டு வகைகளைப் பயன்படுத்த முடியும். கதாபாத்திரங்களின் தெளிவான குண அமைப்பு சொல்ல வருவதை தெளிவாக உணர்த்திவிடும்.ஆகவே இவை முதல் இரண்டையும் பெரும்பாலும் தான் சொல்ல வருவதைத் தெளிவாகச் சொல்ல விரும்புபவரும் பிரச்சார நோக்கில் எழுதுபவரும் மட்டுமே எடுத்துக் கொள்வர். எனவே நவீன இலக்கியத்தில் இத்தன்மை பெரும்பாலும் பிரச்சாரத்திற்கான படைப்புகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. சொல்வதைத் தெளிவாகச் சொல்ல முயலும்வகையில் சொல்லப்பட்டது இச்சிறுகதை.

நவீன இலக்கியம் பெரும்பாலும் மூன்றாம் வகையினையே தன் களமாக எடுத்துக் கொள்கிறது. ஏனெனில் இதில்தான் பல்வேறு வகைகளான நிறைவும் குறையும் கலந்த குணங்களினைக் கொண்ட கதாபாத்திரங்களை உருவாக்க முடியும் .அவைகளின் கலப்பில் ஏற்படும சிறு குணாதிசய மாற்றம் புரியும் பல்வேறுபட்ட செயல்களைச் சொல்ல முடியும். குணங்களின் மாற்றம் 1 சதவீதத்திலிருந்து 99 சதவீதம் என்று கொண்டால் அவைகளின் செயல்களில் ஏற்படும் மாற்றம் முடிவிலியாகவே இருக்கும். எனவே வாசகன் தனக்குத் தோன்றும் அனைத்து வகைகளிலும் இவ்வகையில் சொல்லும் புனைவினை எடுத்துக் கொள்ள முடியும். புனைவின் பெருவழிப்பாதை எப்போதும் இவ்வகையாகவே இருக்கிறது. நிறைவும் குறைவும் கலந்தே அனைத்து மனிதர்களும் இருப்பதால் முதலிரண்டு வகைகளின் கதாபாத்திரத்தோடு வராத நெருக்கம் இவ்வகையின் கதாபாத்திரங்களோடு உருவாகியும் விடும். எனவே நவீன இலக்கியத்தில் இருக்கும் எல்லா சிறுகதை மற்றும் நாவல்களிலும் இத்தன்மையினையே அனைவரும் தேடிக்கொண்டு இருக்கின்றனர். இதற்கு மாறான இரண்டாம் வகைச் சிறுகதையினை இங்கு காணும்போது பெரும் குழப்பம்தான் இங்கு ஏற்படும். இங்கு நிகழ்ந்ததும் அதுதான்.

இக்கருத்தினை நான் மணவாளனிடம் சொன்னபோது இக்கருத்து குழப்பத்தினை ஏற்ப்படுத்துவதாக இருக்கிறது. அதனை இச்சிறுகதையின் பாத்திரங்களைக் கொண்டே விளக்க முடியுமா என்று கேட்டான். அவனுக்குச் சொன்ன விளக்கத்தினையே இங்கும் வைக்கிறேன்.

சித்தம் சடத்துடன் கொள்ளும் பிணைப்பு என்பதற்கான சைவ சித்தாந்தத்தின் விளக்கம் என்பது சித்தம் தான் அறிந்த அறிதல்களின் வழியாக எவ்வாறு சடத்தினை உயிர் கொள்ள வைக்கிறது என்பதே. இது புனைவில் சொல்லப்படக்கூடிய சாத்தியம் உள்ள மூன்று வகைகளில் நேர்தன்மையாக்கம் வகைக்கு இச்சிறுகதையில் இருக்கும் சாமியாரின் கதாபாத்திரத்தினை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

புனைவின் அடிப்படையே நாடகத்தருணங்களை உருவாக்கல் என்பதால் எக்குறைவும் இல்லாத மேன்மையானது சூழலின் ஆடலின் பொருட்டே எக்காரியத்தினையும் செய்யும். விளைவினை உணர்ந்து முன்னரே உள் புன்முறுவலுடன் அக்காரியத்தினையும் இயற்றும்.இக்கதையில் இருக்கும் சாமியார் கதாபாத்திரம் நடக்கப்போவதை நன்கு அறிந்த கதாபாத்திரம். அதைத்தான் தான் அறிந்த தத்துவக் கருத்தால் கூறுகிறார். அக்கதாபாத்திரம் அப்பெண்ணினைத் தேடிச் செல்வது என்றால் அது அப்பெண்ணின் தகப்பனே அல்லது உறவினரில் யாரோ வற்புறுததி அழைத்துச் செல்வதாகவே உருவாக்க முடியும். ஏனெனில் அப்பெண்ணினைத் தேடும் செயலினை செய்ய வைக்க அவரினைப் பணத்தினைக் கொண்டோ அதிகாரத்தினைக் கொண்டே செய்ய வைக்கவே முடியாது. எச்செயலினையும் தான் துச்சமென எண்ணும் எதற்கும் செய்யாத நிறைவுக்குணத்தின் பலவீனமான பக்கமான கருணையினைத் தூண்டியே அக்காரியத்தினைச் செய்ய வைக்க முடியும்.

அவ்வாறு செய்ய வைத்து சாமியாரினை அழைத்துச் சென்று அப்பிணத்தின் முன் நிறுத்தி அப்பிணத்தினை பிறர் வரும்வரை காத்திருக்க வைத்தால் அங்கு என்ன நிகழும். காமம் நிகழுவதற்கான சாத்தியம் இல்லை. அப்பெண்ணின் இருப்பு அவரினை உடல் ரீதியாகத் தொந்தரவு செய்யும் வாய்ப்பில்லை. ஆனால் அப்பெண்ணின் உடலினை நல்லடக்கம் செய்யும் வரை காப்பாற்றும் கடமை அவருக்கு அங்கு உருவாகிவிடும். அக்கடமையினைச் செய்ய அவர் செய்யும் அனைத்து செயல்களும் அவ்வுடலுக்கும் அவருக்குமான பிணைப்பினை உருவாக்கும். அப்பிணைப்பு பிறர் வரும்வரை அச்சடத்திற்கு உயிர் கொடுத்துவிடும். பிறர் வரும்வரை அச்செயலினைச் செய்வது குறித்து அவருக்கு எவ்வகையான இன்பமோ துன்பமோ இருக்காது. இது நேர்தன்மையாக்கத்தின் சிஜ்ஜடம்.

இச்சிஜ்ஜடத்தினைக் கவனித்துப் பாருங்கள். எச்செயலின் விளைவினையும் நன்கு அறிந்த சித்தம் சூழல் ஏற்படுத்தும் தேவையின் காரணமாக தன்நிலையில் இருந்து சற்று கீழிறங்கி சடத்துடன் தொடர்பு கொள்கிறது. சடத்துடன் தொடர்பு கொள்வதால் அதற்குரிய அறிதலோ இன்பமோ எதுவும் இல்லை சூழலின் காரணமாக தான் செய்யும் அச்செயலினைச் கண்டு புன்னகைக்கவும் கூடும். ஏனெனில் அது எக்குறைவும் அற்ற கதாபாத்திரம். ஆனால் சூழல் அதன் மீது ஏற்படுத்தும் தாக்கத்தால் அது சிஜ்ஜடம் என்பதற்கான புனைவின் செயலினைச் செய்கிறது. இது தத்துவ விளக்கத்திற்கான புனைவின் வழியில் ஒருங்கிணைவின் வழி.

இரண்டாம் வழியான எதிர்தன்மையாக்கத்தின் வழிமுறையில்தான் சிஜ்ஜடம் சிறுகதை சொல்லப்படுகிறது. குறைகளை மட்டுமே குணமாகக் கொண்ட சுடலைப்பிள்ளைக் கதாபாத்திரம் தன்னை விட உயர்வான சாமியார் மற்றும் அவரின் சீடன் பாந்தன் தன்னை விடக் குறைவான தரகு நாராயணன் ஆகியோரின் ஊடாட்டத்தின் படி செயல் புரிகிறது.

சுடலைப்பிள்ளையின் குணம் கதையின் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை கீழ்மையின் அடியாழம் வரை செல்வதாகவே இருக்கிறது. சுடலைப்பிள்ளையின் இயல்பு தனக்கு எது இன்பம் எனக் கருதுகிறதோ அதைச் செய்யும் குணம் கொண்டது. தனக்கு கிடைத்த அதிகாரத்தினை பிறரைத் துன்புறுத்த எப்போதும் பயன்படுத்தும் மனநிலையே சுடலைப்பிள்ளையிடம் இருக்கிறது. தன்னிடம் கொடுக்கப்பட்ட மனநிலை பிறழ்ந்த பெண்ணினைத் தேடும் பொறுப்பினை உடனடியாக முடிக்க வேண்டும் என்பதற்க்காக எவ்விசாரணையும் இன்றி யாரையேனும் குற்றவாளியாகப் பிடித்து முடித்து வைக்க வேண்டும் என்றே எண்ணுகிறான். அவ்வாறுதான் சாமியாரையும் பாந்தனையும் அணுகுகிறான். ஆனால் அவர்கள் சுடலைப்பிள்ளையினை விட மேலானவர்கள் என்பதால் அடங்கூ அவர்கள் சொல்லும் வழியில் அப்பெண்ணினைத் தேடிச் செல்கிறார்கள். அப்போது காட்டில் கிடைக்கும் அப்பெண்ணின் சடம் சுடலைப்பிள்ளைக்கு அப்பிணத்தினைக் காக்கும் பொறுப்பினைக் கொடுக்கிறது. தரகு நாராயணன் தகவல் சொல்லச் சென்றபிறகு அப்பிணம் அவனுக்கு காமத்தினை ஊட்டுகிறது. ஆகவே புணர்வில் ஈடுபடுகிறான். அங்கே சிஜ்ஜடம் நிகழ்கிறது. இதற்கும் முதல் வகைக்கும் இருக்கும் வித்யாசம் கீழ்மையோடு சித்தம் ஜடத்துடன் ஏற்படுத்தும் பிணைப்பு பெரும்துயரினைக் கொண்டுவரும் என்பதே.

சுடலைப்பிளளை தன்னுடைய இன்பமாகச் சொல்வது வல்லுறவினையே. பெண்களைத் துன்புறுத்தும் போது அவர்கள் படும்துயரினால் வரும் வேட்டையின் மிருக இன்பமும் இதனை நான் செய்தும் எவ்விளைவும் என்னைப் பாதிக்காமல் இருப்பவன் என்ற மனித மனத்தின் குரூர இன்பத்தினையும் அடைவதையே தனக்குரிய இன்பமாகவும் கொண்டவன். அவனுக்கு உறவின்போது துயருராத பெண் இன்பத்தினைக் கொடுப்பதில்லை. ஆனால் இங்கு இருப்பதோ சடம். சடம் போன்ற நிலையில் உள்ள உயிருள்ள பெண்களே அவனுக்குத் தேவையில்லை எனக்கருதும் நபருக்கு உண்மையான சடத்தின் மீது எவ்வாறு காம உணர்வு எழுகிறது? சூழலால் என்று நண்பர்கள் கருதலாம். ஆனால் அது அல்ல.

மனிதனின சித்தம் எப்போதும் உடலின் கருவிகள் வழியாக அடையும் இன்பங்களையும் துன்பங்களையும் தொகுத்து அறிந்து கொண்டே இருக்கிறது. தொகுத்து அறிதலின் வழியாக எது துன்பம் எது இன்பம் எனத் தனக்கு உகந்த வகையில் முடிவெடுக்கிறது. உயர் தன்மையுடைய சித்தம் நிகழ்வுகளையும் அதன் விளைவுகளையும் உணர்ந்து இன்பம் துன்பங்களிலிருந்து விலகி நிற்கும். கீழ்மையுடைய சித்தம் எப்போதும் துன்பங்களினை நீக்கி அனைத்திலும் இன்பத்தினையே எதிர்பார்த்து நிற்கும். எதன் பொருட்டு துன்பம் நேர்ந்தாலும் அதன் மீதான கோபம் எல்லை மீறிச் செல்லும். தங்களால் முடிந்தவரை எது அப்பொருளினை இழிவுபடுத்தும் செயலில் மிகக் கீழ்மையென எண்ணுகிறதோ அதைச் செய்யும். அதனால் வரும் துயரினைக்கூட கணக்கில் எடுக்காது. தொகுத்து அறிதல் இல்லையென்பதால் பின்விளைவுகளையும் அறியாது. தனக்கான இன்பத்தினை மட்டுமே நாடும். சித்தம் எதிரில் இருக்கும் பொருள் தனக்கு இன்பத்தினை அளிக்காது என்று உணர்ந்த பின்னரும் அதன் இருப்பால் பாதிக்கப்பட்டு தன்னிலை மறந்து சிஜ்ஜடத்தினை உருவாக்கும். சுடலைப்பிள்ளை அப்பெண்ணினைத் தேடும் படலத்தில் அடைந்த அத்தனை துன்பங்களும் அவ்வுடலின் இருப்பும் அவரினைப் பாதிக்க அவர் அறிந்த வழிகளில் மிகக் கீழான இழிவுபடுத்தும் செயலினைச் செய்கிறார்.

இச்சிறுகதைக்கு வந்த வாசிப்பில் அப்பெண்ணின் உடல் சுடலைப்பிள்ளையினை இறுக்கிப் பிடித்தது என்பது சடலத்தின் விறைப்பு என்பதாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் மிகப்பிடித்திருந்தது. அது என் வாசிப்பினைப் பொறுத்தவரை விருப்பம் அல்ல. அது பிணத்தின் விறைப்பு என்பதுதான் என்பார்வையில் சரியான வாசிப்பு.பிணம் இறுக்கிப் பிடித்த பிறகு அதிலிருந்து சுடலைப்பிள்ளை தப்பிக்க முடியாது. அதுவரை நடந்தது போல் நடக்காது. இழிவுபடுத்தப்பட்ட உடலின் உறவினர்களின் அதிகாரம் சுடலைப்பிள்ளையின் அதிகாரத்தினை விட பலமடங்கு அதிகம். அதனால் செய்த தவறிலிருந்து சுடலைப்பிள்ளை தப்புவதற்கான வாய்ப்பே கிடையாது. இவ்வகை நிலைகுலைவின் மூலமாக சிஜ்ஜடம் என்பதன் தத்துவ விளக்கத்தினைக் கொடுக்கிறது.

மூன்றாம் வகைப் புனைவின் வழியில் நிறை குறை இரண்டும் கலந்த கதாபாத்திரம் எவ்வாறு அச்சூழலில் வினை புரியும் என்பதற்கான வழிமுறையினை யோசித்தால் முதலில பாந்தனைக் குறித்துச் சொல்லலாம். பாந்தன் சாமியாரின் சீடனாக இருநதாலும் நிறைகுறை இருகுணமும் இணைந்து இருக்கும் நபராகவே இருக்கிறான். மற்றவருக்கு உதவும் குணம் கொண்டவனாக எங்கு தேட வேண்டும் என்பதனைச் சொல்லும் நபராக இருந்தாலும் சுடலைப்பிள்ளை அதிகாரத்தினைச் செலுத்த முயலும்போது அழித்துவிடுவேன் எனும் அளவு கோபம் கொண்டவனாகவும் இருக்கிறான். அத்தகையோனை அழைத்துவந்து சடத்திற்கான காப்பாற்றும் பொறுப்பினைக் கொடுக்குமாறு சூழல் நிகழ்நதால் என்ன நடக்கும்? அவனுடைய குருவின் ஆணையன்றி எதுவும் அச்செயலினைச் செய்ய வைக்க முடியாது. அப்படி அச்செயலினை அவன் செய்யும்போது குருவின் ஆணையினைக் காக்க வேண்டும் எனும் கட்டாயம் ஒருபுறம் தனக்கு எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லாத சடத்தினைக் காக்கும் பொறுப்பும் இடையே ஊசலாட்டம் ஏற்பட்டு சிஜ்ஜடம் நிகழும். பாந்தன் தத்துவத்தினைப் புரிந்து கொள்ள முடிந்தவன் என்பதால் வாழ்வு அல்லது சாவு குறித்தான எண்ண ஓட்டங்கள் வழியாக சிஜ்ஜடம் எவ்வாறு செயல்படும் என்பதைப் புரிந்து கொள்வதான செயல்களைச் செய்வதுபோலவே கதை நிகழ்வினை அமைக்க முடியும்.ஏனெனில் இரண்டு குணங்களும் கலந்ததாக மேற்பார்வைக்கு இருந்தாலும் பாந்தன் நிறையின் பெரும்பகுதியும் குறையின் சிறுபகுதியும் மட்டுமே கொண்டவன் என்பதால் ஓரளவு உயர்வான செயலினைச் செய்வதன் வழியாகவே அவன் சிஜ்ஜடத்தினைப் புரிந்து கொள்ள முடியும்.சடத்தோடு இருப்பதன் துன்பமும் சிஜ்ஜடத்தினைப் பற்றிய அறிதலின் இன்பமும் இக்கதாபாத்திரத்திற்கு அமையும்.

இச்சிறுகதையில் இருக்கும் தரகு நாராயணன் கதாபாத்திரம் குறைவான நிறையும் அதிகமான குறையும் கொண்ட கதாபாத்திரம். தனக்கு அதிகாரத்தால் மேற்பட்டோரை அண்டி வாழ்ந்து தனக்கான லாபத்தினை அடைய முயலும் வகையினைச் சார்ந்தவன். சடத்தினைக் காப்பதற்கான பொறுப்பு அளிக்கப்பட்டால் இறப்பு குறித்தான அச்சமும் சடத்தின் மீதான அருவருப்பும் சூழலின் இருப்பும் துயரளிக்க அப்பெண்ணின் உடலினை அவளுடைய குடும்பத்தில் கொண்டு சேர்த்தால் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்தான எண்ணம் எவ்வாறு அச்சடலத்தோடு எவ்வகையில் அவனைச் சிஜ்ஜடம் கொள்ள வைக்கின்றது என்பதே புனைவாக அமைய முடியும்.

நவீன இலக்கியம் பெரும்பாலும் இவ்வழிமுறையினையே எடுத்துக் கொள்கிறது. உயர்வு நோக்கிச் செல்ல வேண்டும் என்றால் பாந்தனையும் இழிவு நோக்கிச் செல்வதற்கு தரகு நாராயணனையும் எடுத்துக் கொண்டு நிகழ்வினை உருவாக்கும். இழிவு நோக்கிச் செல்வதற்கு எவ்வாறு நாராயணனை எடுத்துக் கொள்ள முடியும் என்றால் கட்டாயத்தின் பேரில் அப்பெண்ணினைத் தேட வந்தவன் என்றாலும் உதவி செய்யும் எண்ணமும் அவனுக்குச் சிறிது இருக்கிறது. அவ்வுடலினைக் காக்கும் பொறுப்பினை எடுத்துக் கொள்ளும்போது அச்செயலினால் ஏற்படும் வாய்ப்புகள் குறிததான எண்ணம் கீழானதே. ஆனால் அது முழுக்கீழ்மையும் அல்ல. இரண்டும் கலந்த குணங்களின் தன்மை காரணமாக எது எவ்வாறு அமையும் என்று மேலோட்டமாகத் தெரிந்தாலும் முழுமையாக உணர முடியாமல் புகை மூட்டமாகவே நிகழ்வுகளும் செயல்களும் அமையும். இத்தன்மையே பல்வேறு தளத்தினில் திறக்கும் வாய்ப்புள்ளதாக நவீன இலக்கியத்தினை மாற்றுகிறது. இது ஒருங்கிணைவு அல்லது நிலைகுலைதல் இரண்டு வழியாகவும் செயல்படக்கூடியதே

இவ்வகையின் கதைகளையே அதிகம் படித்திருக்கும் எந்த நபருக்கும் இதற்கு மாறான இரண்டாம்வகை கதையினை இதைப்போலவே தவறாகப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புள்ளது. பெரும்பாலான கடிதங்களில் இருக்கும் சிஜ்ஜடம் பற்றிய உயர்வான எண்ணங்கள் அனைத்தும் இவ்வழியிலேயே தோன்றியவை.

இவைகளே புனைவின் வழியாக தத்துவப் பொருளினைக் கூறுவதற்கான வழிமுறைகள் என்ற புரிதலோடு முதற் கேள்விக்கான பதிலினைத் தேடும்போது அரசியல் சரிநிலை என்பதற்கான இடமே இங்கு இல்லை என்பது புரியும். எப்போதும் தத்துவப் பொருளுக்கான எவ்விளக்கமும் தெளிவுற அமையும் படியே அமைய வேண்டும் என்பதன் காரணமாக இச்சிறுகதை அமைக்கப்பட்டு இருப்பதே அடிப்படைக் காரணம் என்று உணர முடியும்.

நிலைகுலைவின் வழிமுறையில் சிறுகதை அமைக்கப்பட்டு விட்டதால் அந்த நிலைகுலைவானது ஏன் அமைக்கப்பட்டது என்பதனை தத்துவப்படுத்திப் புரிந்து கொள்ளாத நபர்களால் தவறான வாசிப்புக்கு இடமளித்தது படைப்பின் போதாமையல்ல.வாசகனின் தத்துவப்படுத்தல் பற்றிய அறிவுக்குறை என எடுத்துக் கொள்ளலாம்.

அடுத்து இரண்டாம் கேள்விக்கான பதில். சிஜ்ஜடத்தினை புனைவின் வழியாகச் சொல்ல இருக்கும் வழிமுறைளைப் பார்த்துவிட்டோம். அவ்வாறான வழிமுறையில் சொல்லப்ட்டு இருக்கும் இச்சிறுகதை எவ்வண்ணமாவது சுடலைப்பிள்ளையின் செயலினைச் சரியெனச் சொல்கிறதா என்று பார்த்தால் எவ்விடத்திலும் இல்லை. அங்கு நிகழும் சிஜ்ஜடத்தினை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதன் இடர் காரணமாகவே இக்கேள்வி எழுந்திருக்கிறது. அச்சிஜ்ஜடத்திற்கான காரணத்தினையும் பின்விளைவுகளையும் புரிந்து கொள்ளும்போது இக்கேள்விகளுக்கான பதில் கிடைத்துவிடுகிறது.

எக்குற்றமாக இருந்தாலும் அது தண்டிக்கப்படாமல் விடப்படுவதுதான் அதனை நியாயப்படுத்தும் செயலாக இருக்கும்.இங்கு குற்றமானது தண்டிக்கப்படுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் கொண்டிருக்கிறது. அவையனைத்தையும் புரிந்து கொள்ள முடியாத கற்பனை இல்லாத நபருக்குக் கூறவேண்டும் என்றால்

அ.சடமானது சுடலைப்பிள்ளையினை இறுக்கிப் பிடித்திருக்கிறது.

ஆ.உடற்சூடு முழுமையாக ஆறாமல் இருப்பதால் வல்லுறவுக்கான அனைத்து சான்றுகளும் உடற்கூறாய்வில் கிடைத்துவிடும்.

இ.அதிகாரத்தினைப் பயன்படுத்தி சுடலைப்பிள்ளை தப்பிப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. அவரை விட மேலான அதிகாரம் கொண்டது அப்பெண்ணின் குடும்பம்.

எனவே சுடலைப்பிள்ளை தப்பிப்பதற்கான வாய்ப்பில்லை என்பதால் இது அக்குற்றத்தினை நியாயப்படுத்தவில்லை.

அடுத்து மூன்றாம் கேள்விக்கான பதில். எக்காரணத்தால் இதுமாதிரியான வாசகப்பார்வைகள் இங்கு உருவாகின்றன என்பதை மேலேயே பார்த்துவிட்டோம். என்னுடைய பார்வை தான் சரியானது என நான் நிறுவவேண்டும் என்றால் அதனை மறுக்கும் பார்வையாகச் சொல்லப்பட்டவை எவ்வாறு தவறானவை என்பதற்கான காரணங்களினைக் கூறவேண்டும்.அவ்வாறான பார்வைகள் என நான் கருதுபவை.

அ.இழிவான செயலினைச் செய்யும் சுடலைப்பிள்ளை தான் புணர்வதை தானே அதிர்ச்சியுடன் பார்க்கிறார். தன்னைக் கவனிப்பவன் யாராயினும் அவன் ஞானத்தின் பாதையில் பயனிப்பவன். இதுவரை மிக மோசமாக நடந்து கொண்டிருந்தாலும் சுடலைப்பிள்ளையின் தன்னைப் பார்க்கும் செயல் அவனுக்கு ஞானத்தின் பாதையினைக் காட்டியிருக்கிறது என ஏன் எண்ணக்கூடாது?.

இது சரியான பார்வையினைப் போலவே அனைவருக்கும் தோன்றும். ஏனெனில் நாம் இதுவரை ஆயிரம் நிகழ்வுகளில் கொள்ளையர்களும் பெண்பித்தர்களும் அடங்கா ஆசை கொண்டவர்களும் திடீரென ஞானமடைந்ததைப் பார்த்திருக்கிறோம். கொள்ளையில் ஈடுபடும் வேடன் மாபெரும் கவிஞனாகிறான். முன்தினம் வரை பெண்பித்தனாக இருந்தவன் ஒற்றை நிகழ்வில் மாபெரும் பக்தனாகிறான். பெரும் செல்வம் சேர்த்தவன் அதனை விட்டுத் துறவியாக ஒற்றைச் சொற்றொடர் போதுமானதாக இருக்கிறது அவ்வாறு இருக்கும் போது ஏன் சுடலைப்பிள்ளை ஞானமடைதலின் பாதையில் செல்லக்கூடாது என்பது நல்ல கேள்வியே.

என் இருபதுகளில் எனக்குள் தோன்றிய கேள்வி நான் பெரிதென எண்ணும் துறவிகளும் ஞானியரும் தங்களைக் கேவலமானவர்களாகவே ஏன் சொல்லி இருக்கிறார்கள் என்பது. பிறருக்காக அவர்கள் கருணையோடு தங்களைத் தாழ்த்தி என்னால் முடிந்தது உன்னாலும் முடியும் என்று சொல்வதற்கும் எளியவர்கள் அனைத்தையும் அடைவதற்கான வழிகளை உரைப்பதற்கும் என அக்கேள்விக்கான பதிலை மரபு எனக்குக் கொடுத்தது.ஆனால் எனக்கு அப்பதில் போதுமானதாக இல்லை.

பின்னர் அவர்களின் வாழ்வினைக் கவனித்து நான் அறிந்தது அவர்கள் இரண்டு வகைகளில் தங்களுக்குள் செயல்பட்டனர் என்பதை. அவை

1.சூழலினைக் கவனித்து கிடைப்பதை கவிதையாக தங்களுக்குள் தொகுப்பது

2.கிடைக்கும் அனைத்து அறிவையும் தங்களுக்குள் தத்துவமாகத் தொகுப்பது

இந்த இரண்டும் இல்லாத எந்த நபரும் ஞானியாகவில்லை. எந்தத் தத்துவமும் அறியாத கொள்ளையினை தன் செயலாகச் செய்த வேடனான வால்மீகி அதிலிருந்து மாறியபோது கவிஞனாக எப்படி மாறமுடிந்தது. அதுவரை இல்லாத கவித்தன்மை திடீரென வந்தது கடவுளின் அருள் என மரபு சொல்லும். என்னைப் பொறுத்தவரை வால்மீகி சிறுவயதில் இருந்தே இயற்கையினைக் கவனித்து நடப்பதினை கவிதையாக தன்னுள் தொகுத்துக் கொள்பவன். அதேசமயம் சூழலினால் கொள்ளையினைச் செய்து வருபவன். இந்த இரண்டுக்கும் நடுவில் அல்லல்பட்டுக் கொண்டிருப்பவனை அறுக்கும் கட்டு மட்டுமே அந்நிகழ்வினில் நடக்கிறது. அருணகிரிக்கும் பட்டினத்தாருககும் நடந்தது அத்தன்மையதே. அவர்கள் இருவரையும் படிப்பவர்களுக்குத் தெரியும். அன்றைய சமகால தத்துவ அறிவு முழுமையும் அவர்களிடம் இருப்பது. அனைத்தையும் துறந்தபின் யாரும் தத்துவம் கற்றுக்கொள்ளப்போவதில்லை. ஏற்கனவே ஞானத்தினை அடைந்தவன் அடையவேண்டியதென எது இருக்கிறது? எதுவும் இல்லை. அனைத்தையும் துறப்பதற்கான அடிப்படையினை அடைய தத்துவம் தேவையானதாக இருக்கிறது. எண்ணிலடங்கா பெண்பித்தர்கள் அத்தனை பேரும் ஏன் அருணகிரி ஆகமுடிவதில்லை. நடக்கும் அனைத்தையும் கவிதையாகவோ தத்துவமாகவோ தொகுக்காத எந்தப் பெண்பித்தனும் அதிலிருந்து வெளிவரவே முடியாது. உடல் கொண்ட போதாமையாலும் சூழல் தரும் கட்டாயத்தாலும் வேண்டுமானால் வெளிப்பார்வைக்கு மாறலாம்.

சுடலைப்பிள்ளை கவிஞனாகவோ தத்துவத்தின் சாயலினைக் கொண்ட எவற்றினையும் அறிந்தவனாகவோ இக்கதையில் காட்டப்படவில்லை. எனவே அவன் ஞானம் அடைவதற்கான எந்தத் தகுதியும் இல்லாதவன். அப்படியானால் ஏன் அதிர்ச்சி அடைவது கதையில் சொல்லப்பட்டிருக்கிறது? கீழ்மை தனக்கு இன்பம் தராத எச்செயலினையும் தான் செய்வதை அதிர்ச்சியுடன்தான் பார்க்கும்.

ஆ.கீழ்மை இன்னும் கீழ்மையினை நோக்கிச்சென்று அதன் எல்லையில் அதனைத் துறக்கும் நிலை என்பது எப்போதும்இலக்கியத்தில் உள்ளது தானே. இதையும் ஏன்அவ்வாறு எடுத்துக் கொள்ளக்கூடாது?

கீழ்மையின் எல்லைக்குச் செல்லுதலைப் பற்றிய எக்கதையினையும் கவனித்துப் பார்த்திருந்தால் அக்கதாபாத்திரங்களும் கீழ்மையின் வழியாக கிடைக்கும் அனைத்தையும் அவனுக்குள் தொகுப்பவனாக இருப்பதைப் பார்க்கலாம். தன் எல்லையினைத் தானேதாண்டிச் செல்பவனாக இருப்பவன் தொகுக்காமல் அதைச் செய்ய முடியாது. சுடலைப்பிள்ளை தற்செயலாகக் கிடைத்த கீழ்மையின் இன்பத்தினை பேரின்பமாக எண்ணி அது மீண்டும்  கிடைக்க முயல்பவன் மட்டுமே. ஏன் அவ்வின்பத்தினை ஆராய்ந்து அதில் தன் எல்லைகளைக் கண்டறிந்து மேலே செல்வதற்கான எந்தச் செயலையும் சுடலைப்பிள்ளை செய்வதில்லை.

இ. இக்கதையில் சிஜ்ஜடம் நிகழ்வதே சுடலைப்பிள்ளையால்தான் எனும்போது சிஜ்ஜடத்திற்கான தத்துவப் பொருளாக சுடலைப்பிள்ளையினைப் பார்ப்பது எவ்வகையில் தவறு. செயல் சுடலைப்பிள்ளை மூலமாக நடக்கும்போது அதற்கான விளைவும் சுடலைப்பிள்ளையைத்தானே சாரும்?.

எச்சிறுகதைக்கும் யாரின்பார்வையில்கதை சொல்லப்படுகிறது என்பது மிகமுக்கியமான அம்சம். ஒருவேளை இக்கதை சுடலைப்பிள்ளையின் பார்வையில் சொல்லப்பட்டு இருந்தால் அதற்கான சாத்தியம் இருப்பதை மறுக்க முடியாது.இக்கதையினைச் சொல்லும் கதைசொல்லி யார் என்பது கதையில் சொல்லப்படவேயில்லை. கதைசொல்லிக்கு நடக்கும் நிகழ்வின்மீது நன்றிது தீதிது என்பது குறித்தான எந்த விமர்சனமும் இல்லை. அதேசமயம் சூழலினைச் சொல்லும்போது கவித்துவத்தினை அடையும் சொற்கள் கதைசொல்லிக்கு சிஜ்ஜடம் பற்றியான புரிதல் உண்டு என்பதினைச் சொல்கின்றன. ஆகவே செயலினைப் புரிவது சுடலைப்பிள்ளையாக இருந்தாலும் அதன் மூலம் அடையப்படும் அறிதல் கதைசொல்லியினுடையதே.

இம்மூன்று கேள்விகளுக்குள் நணபர்களின் பார்வைகள் அடங்கிவிடுகின்றன. எனவே என் பார்வையின்படி அடையும் அறிதல் கதைசொல்லிக்கானதே. அதை நண்பர்கள் உணராமல் தவறான புரிதலை அடைந்திருக்கிறார்கள்.

நான்காவது கேள்விக்கான பதிலாக பொதுவாக சமூகம் பொதுவெளியில் விவாதிப்பதற்குத் தகுதியாக ஏற்றுக்கொள்ளாதவைகளைப் பற்றிய நிகழ்வுகளைக் கூறி அதிர்ச்சியளிப்பது படைப்புகளை வாசகனுக்குள் நிலை நிறுத்தப் பயன்படுத்தும் உத்தி. ஆனால் அது எல்லா இடத்திலும் பயன்தரும் என்பதற்கான சாத்தியம் இல்லை. படைப்பு வெளியிடப்படும் காலமும் மக்களின் மனநிலையும் அதைத் தீர்மானிப்பதால் நிலை சற்று மாறினாலும் அப்படைப்பே கைவிடப்படும். கூடவே அந்நிகழ்வு அப்படைப்பின் மையத்தருணமாக அமைந்தாலும் சிந்தனையினை நோக்கியே தத்துவத்தினை நோக்கியோ செல்லாது. அதிர்ச்சியின் மூலமாக இதுவரை இருக்கும் மன ஒழுங்கினை உலுக்குவதை மட்டுமே அவை செய்யும் அவ்வாறில்லாமல் இதன் நிகழ்வு தத்துவ விளக்கத்தினை நோக்கிச் செல்வதால் வெறும் அதிர்ச்சி நோக்கில் எழுதப்பட்டதல்ல.

இவைகளே அந்த நான்கு கேள்விகளுக்கான பதில்கள்.

இச்சிறுகதைக்கு வந்த நண்பர்களுடைய பார்வைகளில் யாரும் தந்த்ராவினைக் குறிப்பிடவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. ஏனெனில் வந்த வாசிப்புகளில் இருக்கும் வாசிப்புகளை விட தந்த்ராவின் பிணத்தோடான

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 23, 2022 11:31

குமரியின் அழகு- கடிதங்கள்

அன்புள்ள அப்பாவுக்கு,

நீங்கள் நலம் தானே.

குமரித்துறைவியின் காட்சிகள் என்னை கண்ணீர் நிறைந்த விழிகளுடன் வாசிக்க வைத்தது. உயர்ந்த தருணத்திலும் உயர்ந்த தருணத்தை தந்தது எனக்கு. மீனாட்சி அன்னையின் திருமண அரங்கத்தில், அன்னையின் தரிசனத்தை மெய்சிலிர்க்க கண்டு கொண்டேயிருந்தேன். அன்னையின் நாணம், விளையாடும் நிகழ்வுகள் மென்சிரிப்போடு கண்டேன்.

அம்மை அணிகள் பூண்டு, “தன் செல்லக்குட்டி மகள்னு தோணிப் போட்டுதே” என்னும் வரிகள் அம்மையை ததும்பிய குழந்தை வடிவில் காணச் செய்தது. அவள் சிறு குழந்தை போல சிரிக்கிறாள். “எனக்கு அவள் அடங்காப் பிடாரி மகள், அப்பப்ப நல்ல நாலு வார்த்தை சொல்லி கண்டித்து வைப்பேன் அடம்புடிச்சா ஒரு ரெண்டு அடிபோடுறதும் உண்டு” என்று ஸ்தாணுலிங்க சிவாச்சாரியார் சொல்லும் போது அம்மை சிரித்தும், உற்சாகமாக இருக்கிறாள் என தோன்றுகிறது.

மேலும் பிள்ளையாரின் குறும்புகள் என்னை மிகவும் கவர்ந்தது. அம்மை திருமஞ்சன நீராட்டுக்கு செல்கையில் பிள்ளையார் வெளியே நின்று மோதகம் சாப்பிட்டது மகிழ்ச்சியாக இருந்தது. அரசர் மீனாட்சி அம்மையை மடியில் வைத்து உச்சி முகர்ந்தது. அரசரின் காய்ச்சல். அம்மை பல்லக்கில் சரிந்து சிரித்த விளையாட்டு கண்ணீருடன் காணச் செய்தது.

கண்ணீரூடன், மனத்தில் எதும் இல்லாமல் திகைத்து நின்று இருந்தேன் குமரித்துறைவியின் அரும்பெரும் விஸ்வரூபத்தால்…..

ஆசானுக்கு நன்றி. இப்பெரும் தரிசனத்தை அளித்ததற்காக… மிகவும் தெய்வீகமான புத்தகத்தை வெளியிட்ட விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கு மனமார்ந்த நன்றிகள்

காயத்ரி தனசேகரன்

***

அன்புள்ள ஜெ

குமரித்துறைவியின் வாசிப்பு என் நெஞ்சில் ஒரு பெரும் நிறைவை உருவாக்கியது. நான் நவீன இலக்கியங்களை தொடர்ந்து வாசித்து வருபவன். இலக்கியங்கள் எனக்கு ஒரு வகையான விடுதலையை அளிக்கின்றன. தியானம் என்றெல்லாம் பலவற்றை பயில்கிறார்கள். நான் நூல்வாசிப்பே நல்ல தியானம் என நினைக்கிறேன். உண்மையில் இதன் பயன் என்ன என்று பலருக்கு தெரியாது. அன்றாட வாழ்க்கையில் சின்னச்சின்ன சிக்கல்களும் சிறுமைகளும் நம்மை நோக்கி வந்துகொண்டே இருக்கின்றன. வம்புகள், குடும்பப்பூசல்கள், அரசியல் சில்லறைத்தனங்கள் என்று அதெல்லாம் பலவகை. நம் மனம் நம்மையறியாமலேயே அதிலெல்லாம் ஈடுபடுகிறது. அது நம்மை பலவீனப்படுத்துகிறது. நம்மை மனச்சள்ளைகளில் கொண்டுபோய் விடுகிறது. இலக்கியவாசிப்பு நம்மை அதில் இருந்து விடுவிக்கிறது. ஒரு விலகிய தன்மை வந்துவிடுகிறது. அந்த விலகிய தன்மை இருந்தாலே நாம் நம்மை படுத்தும் பாதி விஷயங்களில் இருந்து தப்பித்துவிடலாம்.

இதனால்தான் நாம் வாசிக்கிறோம். ஆனால் அந்த வாழ்க்கை ஆண்டிவைரஸ் சீரம் மாதிரி. வைரஸ்தான். ஆனால் வீர்யமிழந்தது. நிஜவாழ்க்கையிலுள்ள எல்லா அற்பத்தனமும் குரூரமும் அநீதியும் இலக்கியத்திலும் இருந்தால்தான் நம்மால் அதை உண்மை வாழ்க்கை என நம்ப முடியும். அதில் திளைக்க முடியும். அதேசமயம் அது இலக்கியமென அறிந்திருப்பதனால் அது நமக்கு துக்கம் அளிப்பதில்லை. நிஜவாழ்க்கை அளிக்கும் துக்கங்களை இல்லாமலும் ஆக்குகிறது. எனக்கு வயது அறுபத்தேழு. இதுவரை நான் வாழ்க்கையில் கண்ட அனுபவம் இது. வாசிப்பை பிடித்துக்கொள்ளுங்கள். அல்லது தன்னலமில்லாத ஏதாவது சேவையை. அல்லது அதுமாதிரி வேறேதாவது.

ஆனால் இந்த வாசிப்பிலேயேகூட குமரித்துறைவி ஒரு bliss என்பதைச் சொல்லத்தான் வேண்டும். முழுக்கமுழுக்க இலட்சியக்கனவு மாதிரியான நாவல். ஆனால் முழுக்கமுழுக்க வாழ்க்கை என்று நம்பவும் வைக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் சுபாவ முழுமையுடன் வருகிறது. தெய்வங்களுக்குக் கூட துல்லியமான குணச்சித்திரம் இருக்கிறது. திரும்பத் திரும்ப வாக்கவேண்டிய புத்தகம்.

எஸ்.ஆர்.என்.கிருஷ்ணன்

***

தொடர்புக்கு

விஷ்ணுபுரம் பதிப்பகம்

info@vishnupurampublications.com

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 23, 2022 11:31

எரிமலர்-வாசிப்பு

எரிமலர் வாங்க

எரிமலர். வெண்முரசு எனும் மாபெரும் காவியத் தொடரை எழுதி முடித்த ஜெயமோகன் அத்தொடரின் பல கிளை நூல்களையும் எழுதினார். தொடரின் முதல் அங்கமான முதற்கனலின் கிளை நூல் தான் இந்த எரிமலர்.

ஆசிரியரின் முன்னுரையில் இந்த கிளை நூல்கள் அல்லது அவரின் சொற்களில் இந்த ‘நாவல் பகுதிகள்’, எளிதாக வாசிக்க விழையும் வாசகர்களை வெண்முரசு நோக்கி இழுக்க எழுதப்பட்டவை என்கிறார். நான் ஏற்கனவே ஈர்க்கப்பட்டவன். ஆனாலும், அதில் அவர் மற்றவரிடையேயும் வெற்றி பெறுவார் என்பதில் ஐயமில்லை.

மகாபாரதத்தில் சின்ன அங்கமாக மட்டும் வருவது அம்பையின் வஞ்சம். அந்த வஞ்சத்திற்கு விரிவான வடிவத்தை தருகிறது இந்நூல். அம்பை தான் அத்தினபுரத்தில் விழுந்த முதல் கண்ணீர்த் துளி. அந்தத் துளி தான் அந்நகரை எரித்தது. அந்த அம்பையின் கதை இது.மகாபாரதத்தில் எனக்கு பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்று பீஷ்மர். அவரிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. ஒரு சுயம்வரத்தை ராட்சசமாக மாற்றி இளவரசிகளை கவர்கிறார் பீஷ்மர். கட்டளையின் பிரகாரமே! அவராக அல்ல!அவ் இளவரசிகளில் ஒருவர் அம்பை. இந்த அம்பையை நாம் அத்தருணத்திலிருந்த தொடர்ந்து செல்கிறோம். அவளின் வேதனையை அவமானத்தை உணர்கிறோம். அவளின் வஞ்சத்தில் நாமும் இணைகிறோம்.

தெய்வமாகி தன் ஆத்திரத்தை அடக்க முனைகிறாள் அம்பை. அவளின் கனலை சுமக்க வருகிறாள் சிகண்டினி. அவள் சிகண்டினி, அவனாக மாறி சிகண்டி ஆகிறான். சிகண்டி யார் என மகாபாரதம் படித்தவர்க்குத் தெரியும். சிறு நாவலாக இருந்தாலும் அபாரமான எழுத்து. ஜெயமோகன் பற்றி எல்லோர்க்கும் தெரிந்தது தானே! இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறத் தகுதி கொண்ட ஒரே தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் தான் என பாவா செல்லதுரை கூட சமீபத்தில் கூறியிருந்தார்.

வெண்முரசு தொடர் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர். அதன் நாவல் பகுதிகளையும் தேடி வாசியுங்கள். எரிமலர் அவற்றில் ஒரு அருமையான பகுதி.முதற்கண் நூலும் என்னிடமுண்டு. அதை ஆரம்பிக்கும் வரை இருப்புக் கொள்ளவில்லை, எரிமலரை படித்த பின்பு!இதைப் பரிசளித்த என் அன்புத் தோழி க்ரிஸ்டீனாவிற்கு என் மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்!

https://www.facebook.com/BilingualLibrary/

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 23, 2022 11:30

கோவை சொல்முகம், சந்திப்பு

நண்பர்களுக்கு வணக்கம்.

சொல்முகம் வாசகர் குழுமத்தின் வெண்முரசு கூடுகை-15, வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது.

இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் ஆறாவது படைப்பான “வெண்முகில் நகரம்” நாவலின் 7 மற்றும் 8 ஆம் பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.

பகுதிகள்:

மலைகளின் மடிநச்சு முள்

வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இவ்வமர்வில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.

நாள் : 27-03-22, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 10:00

இடம் : தொண்டாமுத்தூர், கோவை.

தொடர்பிற்கு :

பூபதி துரைசாமி – 98652 57233

நரேன்     – 73390 55954

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 23, 2022 11:30

March 22, 2022

எழுத்தாளர் எஸ்.ஜே.சிவசங்கருக்கு உதவி

நண்பர் நட சிவக்குமார் வந்து செய்தி சொல்லித்தான் அறிந்தேன். குமரிமாவட்ட இளம் எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.ஜே.சிவசங்கர் இதயநோயால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அடைப்புகள் இருக்கின்றன. சிகிச்சைக்கு பலவகையிலும் உதவிகள் தேவையாகின்றன. பணமாகவும் பிற உதவிகளாகவும். நண்பர்கள் உதவவேண்டும் என கோருகிறேன்.

எச்.ஜே.சிவசங்கர் கீழ்க்கண்ட நூல்களின் ஆசிரியர்

1 கடந்தை கூடும் கேயஸ் தியரியும்

சர்ப்பம் அவளை வஞ்சிக்க வில்லைஇது கருப்பர்களின் காலம்யா ஓபிக்காசோ ஒரு எருதை வரைகிறார்.அம்பேத்கார் கடிதங்கள்

ஐந்து குறும்படங்களையும் எடுத்திருக்கிறார்

சிவசங்கர் மனைவியின் வங்கிக் கணக்கு

NAME: Ezhilarasi.V

BANK: Indian Overseas Bank

BRANCH: Padmanabhapuram

A/c No:017701000028097

IFSC CODE:IOBA0000177

 

சிவசங்கர் எண்  9841562500

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 22, 2022 12:48

கதைக்குரல்கள்

அன்புள்ள ஜெ,

உங்கள் கதைகளை பலர் யூடியூபில் வாசிக்கிறார்கள். சொல்கிறார்கள். பவா செல்லத்துரை, ஃபாத்திமா பாபு போன்றவர்கள் மிகப்புகழ்பெற்றிருக்கிறார்கள். கிராமத்தான் சிவக்குமார் இதற்கெல்லாம் முன்னே உங்கள் கதைகளை ஒலிவடிவமாக்கிக் கொண்டிருக்கிறார். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இது சரியானதா? கதைகளை திரும்பச் சொல்வது கதைகளை சிதைப்பதாகாதா? கதைகளை வாசித்துக் கேட்பதனால் வாசகர்கள் கதைகளை வாசிக்காமலாகிவிடுவார்கள் அல்லவா?

ராஜ்குமார்

அன்புள்ள ராஜ்குமார்,

நான் ஏற்கனவே பலமுறை எழுதியிருக்கிறேன். மிகக்கறாராக ‘காப்பிரைட்’ விஷயங்களை கடைப்பிடிக்க எனக்கு விருப்பமில்லை. என்ன காரணம் என்றால் இன்னும் இங்கே வாசிப்பு 2 சதவீதம் பேரைக்கூட எட்டவில்லை. காப்பிரைட் கட்டுப்பாடு செய்து அதை மேலும் குறைப்பது இலக்கியம் ஒரு இலட்சியவாதச் செயல்பாடு என நம்பும் என் இயல்புக்கே எதிரானது.

சென்ற பல ஆண்டுகளில் காலச்சுவடில் வந்த எந்தக் கதையாவது, கட்டுரையாவது பேசுபொருளாகிப் பார்த்திருக்கிறீர்களா? இல்லை. ஏனென்றால் அது பணம் கேட்டு பூட்டு போட்டு வைத்திருக்கிறது. எதையும் பகிர முடியாது. இணையத்தில் காலச்சுவடு என்னும் இதழே உண்மையில் இல்லை.

ஆகவே கதைகளை வாசிப்பதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை. அதனால் இழக்கும் வாசகர்களை விட வரும் வாசகர்கள் மிகுதி. ஏனென்றால் நவீன இலக்கியம் செவ்வியல் கலைகளைப் போல. அவற்றை ரசிக்க ஒரு மனநிலை வேண்டும். ஒரு பயிற்சி வேண்டும். அந்த மனநிலையையும் பயிற்சியையும் அடைய மிகச்சிறந்த வழி அதை கொஞ்சநாள் கவனிப்பதே.

நீங்கள் கர்நாடக சங்கீதம் கேட்க என்ன செய்யவேண்டும்? கொஞ்சநாள் ‘சும்மா’ கேளுங்கள். ஒருமணிநேரம் கேட்டே ஆகவேண்டும் என ஒரு ஆண்டு கேளுங்கள். போதும். அதேபோலத்தான் எந்த செவ்வியல் கலையும்.

நவீன இலக்கியம் இன்னமும்கூட இங்கே பொதுவாசகர்களுக்கு அன்னியமானதாகவே உள்ளது. அதன்மேல் ஒரு மிரட்சியும் விலக்கமும் உள்ளது. பவா செல்லத்துரை வழியாக மாயப்பொன் போன்ற ஒரு கதையை கேட்பவர் நவீன இலக்கியம் அவர்கள் ஏற்கனவே நினைத்திருப்பதுபோல ஒன்றும் மிரட்சியடையவைக்கும் பூடகப்பேச்சு அல்ல என உணர்வார். ஏதேனும் ஒரு புள்ளியில் தன் வாழ்க்கையை அவர் அதில் கண்டடைந்தார் என்றால் அவர் நவீன இலக்கியத்திற்குள் வந்துவிடுகிறார்

அக்கதையைப் பற்றி ஒரு தையல்காரர் பேசினார். ஓர் இரவில், தனிமையில், ஒரு கவுனை தைத்ததும் தான் உணர்ந்த நிலை பற்றி. ’தெய்வநிலை சார்’ என்றார். அவ்வளவுதான் அந்தக்கதை. அவர் நவீன இலக்கியத்திற்குள் வந்துவிட்டார். எளிமையான கதையோட்டமும் திருப்பமும் கொண்ட வணிகக்கதைகளில் இருந்து படிமங்கள் வழியாகவே பேசும் நவீனக்கதையின் சூட்சுமத்தை தொட்டுவிட்டார்.

சொல்லப்படுகையில் கதைகள் மாறுபடலாமா? ஆமாம். உலகம் முழுக்க கதைகள் வேறு கலைவடிவுகளுக்கு மாறுகின்றன. நாடகம், அரங்கநிகழ்வு, சினிமா என மாற்றுவடிவம் கொள்கின்றன. அவ்வடிவுக்கு ஏற்ப மாறுகின்றன. ஷேக்ஸ்பியர் கதைகளை நீங்கள் பெரும்பாலும் நிகழ்கலைகளாகவே கண்டிருப்பீர்கள். அதுவும் இலக்கியத்தின் பயணமே அதை எவராலும் தடுக்கவும் முடியாது. ஒரு கதையை வாசித்தவர் அதை இன்னொருவரிடம் சொல்வதை தடைசெய்வீர்களா என்ன?

கதையை கேட்பதென்பது இன்னொரு அனுபவம். சிலருக்கு செவிநுண்ணுணர்வு அதிகம், கேட்பவை நினைவில் தங்கும். இன்னும் சிலர் கல்லூரியில் பள்ளியிலும் தவிர்க்கவேண்டிய பாடமாக தமிழ்கற்றவர்கள். விரைவாக தமிழை வாசிக்கமுடியாதவர்கள். அவர்களுக்கு வாசிப்பு மிக உதவியானது. வேறுவேலை செய்தபடி கதைகளை கேட்கமுடியும் என்பதும் மிக உதவியானது

கிராமத்தான், ஃபாத்திமா இருவரும் அழகாக வாசிக்கிறார்கள். ஃபாத்திமாவின் குரலில் இயல்பாக கூடும் உணர்ச்சிகளும், மிகையில்லா நடிப்பும் கதைகளை மேலும் தீவிரம் கொண்டவையாக ஆக்குகின்றன. இப்படித்தான் பலவகைகளில் கதைகள் சென்று சேரமுடியும்.

நமக்கு இன்று தேவை தமிழகத்தில் ஒரு பத்துசதவீதம் பேருக்காவது நவீன இலக்கியத்தின் ருசி சென்று சேர்வதுதான். அதில் இவர்களெல்லாம் ஆற்றும் பணி மிகமிக முக்கியமானது. நான் எழுதவந்தபோது எவருமே இலக்கியத்தை பொருட்படுத்தியதில்லை. இன்று அது மக்களியக்கமாக மாறுகிறது என நினைக்கிறேன். மாற்றுபவர்களில் கதைசொல்லிகள், கதைவாசிப்பாளர்களின் பங்கு மிகுதி. வரலாறு அவர்களை அடையாளப்படுத்தும்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 22, 2022 11:35

சிக்கவீர ராஜேந்திரன் – மஞ்சுநாத்

ரலாற்று நாவலுக்கு சிறந்த உதாரணம் என்றால் அதில் முதலிடம் பெறுவது சிக்கவீர ராஜேந்திரன் என்கிற கன்னட நாவல்.

அதிகப் பிரதிகள் விற்பனை, வெகுரசனையில் முன்னணி, பல ஆண்டுகள் தொடராக வந்தது, நேர்மறையாக கட்டமைப்பதற்காக வரலாற்றிலிருந்து விலகுவது, ஜனரஞ்சகமான புனைவு வெளி இவைகளால் மட்டும் ஒரு சிறந்த வரலாற்று நாவல் உருவாகி விடுவதில்லை. தமிழில் அப்படி சிறந்த  வரலாற்று நாவல் இதுவரை உருவாகி வந்துள்ளதா? என்பதும்  விவாதத்துக்கு உரியதாகவே இன்றும் தொடர்கிறது.

மிதமிஞ்சிய வர்ணனைகள் கொண்ட வரலாற்று  காவியங்கள் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அவை நாவல் வகைமைக்குள் அடங்குவதில்லை. வழக்கத்தில் பெரும்பாலான வரலாற்று நாவல்கள் தொடர்களாகவே எழுதப்பட்டன… எழுதப்பட்டும்  வருகின்றன. நிறையத் தொடர்கள் வாசகர்களின் ரசனை மற்றும் பதிப்பாளரின் நிர்பந்தம்  பொருட்டு நாவல் என்கிற பெருவெளியிலிருந்து  தன்னை துண்டித்துக்கொண்டு  பயணிக்கிறது.

“புனைவுத்தருக்கத்தின் ஒருமையே தொடரை வாசிக்கத் தூண்டுகிறது. புணைவுத்தருக்கம் அறுபடுவது வழியாகவே நாவலின் வடிவம் உருவாகிறது ” என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

பெரும்பாலா வரலாற்று நாவல்கள் பெண்களின் அங்க அவையங்களையும், காதலையும் , வீரத்தையும் மிதமிஞ்சி பேசுகின்றன. இல்லை, பேசுவதுக்கூட இல்லை. மிதமிஞ்சிய போதை கிழவனின் பால்ய நினைவுகளுடன் மீமிகை கற்பனைகள் கலந்த உளறல்களாக அவை உள்ளன. இது எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டதாக ஒரு வரலாற்று நாவல் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கான கோட்பாட்டின் முழுமையான சாரத்தைப் பிரதிபலிக்கும் நூலாக மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் எழுதிய “சிக்க வீர ராஜேந்திரன்” விளங்குகிறது.

“வரலாற்றை அணுகும் முறையில் ஏற்படும் அடிப்படையான பார்வை மாற்றம் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதற்கு மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் எழுதிய  சிக்க வீர ராஜேந்திரன் என்ற நாவலே உதாரணம்” என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். இவ்வகை தூண்டுதலே இந்நாவலை தேடிக் கண்டறிந்து வாசிக்க போதுமானதாக இருந்தது.

கி.பி. 1820 லிருந்து 1834 வரை மைசூருக்கு அருகில் கூர்க் எனப்படும் குடகு பிரதேசத்தின் மன்னனாக ஆட்சி புரிந்த சிக்க வீர ராஜேந்திரனின் வரலாற்றை இந்நாவல் வெளிச்ச வட்டமிட்டு பேசுவதற்கு காரணம், இம்மன்னனின் ஆட்சி குடகு வரலாற்றின் முக்கியத் திருப்புமுனை. மேலும் இவரே குடகு நாட்டின் இறுதி அரசர். 200 ஆண்டு காலம் தொடர்ந்த ஹலேரி மன்னர் பரம்பரையை முடித்து வைத்தவர். முடிவின் தொடர்ச்சியாக  பிரிட்டிஷ் அரசியலின் சூழ்ச்சி விளையாட்டில் குடகு நாடு கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நிர்வாகத்திற்கு மாறியது.

21 முறை தொடர்ச்சியான படையெடுப்புகளுக்கு பிறகு  1790 -ல் திப்பு சுல்தானின் படைகள் குடகு பிரதேசத்தை ஆக்கிரமித்தன.  பாகமண்டலேஸ்வரர் கோவில் சிதைலமாக்கப்பட்டது ஆயிரக்கணக்கான குடகு பெண்கள் கற்பழிக்கப்பட்டனர் லட்சக்கணக்கான குடகர்கள் கத்திமுனையில் மதம் மாற்றப்பட்டனர். இன்றளவும் குடகர்கள் திப்புவை வெறுப்பதற்கு  முக்கிய காரணமாக  இதுவே முன் வைக்கப்படுகிறது. கிழக்கிந்திய கம்பெனியின் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க திப்பு எப்படி நெப்போலியனின் படை  உதவியை நாடினானோ  அப்போதைய குடகின் மன்னன் தெப்ப வீர ராஜேந்திரனும்   எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் பிரிட்டிஷ் படை உதவியை நாடினான். திப்புவிடமிருந்து   குடகினை மீட்டு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டான்.

பிரிட்டிஷ் படைகளிடம் தொடர்ந்து தோல்வியடைந்த திப்பு குடகர்களிடம் சமாதானம் பேசி கூட்டணி வைத்துக்கொள்வதற்கு முயன்றான்.ஆனால்

“ஆங்கிலேயர்கள் என்னுடைய நன்பர்களாக உதவினார்கள்,  நீ என் நாட்டை சூறையாடி துன்புறுத்தியவன்” என்று அவன் அழைப்பை குடகர்கள் நிராகரித்தனர்.

மைசூர் இராஜ்ஜியத்தின் பொம்மை (உடையார்கள் ஆட்சி) மன்னராட்சியை போல் குடகின் ஆட்சி தொடராமல் பல ஆண்டுகள் அதாவது சிக்க வீர ராஜேந்திரன் ஆட்சி வரை குடகு சுதந்திர நாடகவே இருந்தது. பின்பு பிரிட்டிஷ் வசம் சென்ற போதும் அதன் கலாச்சாரத்தின் மீதான அத்துமீறலுக்கு குடகர்கள் இணங்கவில்லை.

மன்னாராட்சியை பொறுத்தவரை சுதந்திரம் என்பது தனிநபர் விருப்பத்திலிருந்து கிளை விடும் குருத்துப் போன்றது. சில சமயம் அது துளிர்க்காமலும் போகும், துளிர்த்த பின் தழைக்காமலும் போகும். அத்தகைய தொடர் நிகழ்வுகளால் ஒடுக்கப்படும்  உணர்ச்சியுள்ள மக்கள்  போராட்டத்தின் பாதைக்கு   நகர்கின்றனர்.

சிக்க வீர ராஜேந்திரன் அடிப்படையில்  கச்சிதமான வீரன் என்றாலும் அதைவிட பெருமளவு அகம்பாவமும் கர்வமும் கொண்டவன்.   கட்டுக்கடங்காத பெண் பித்தன். மொடாக்குடியன். தனது  சொல் ஒன்றை மட்டும்  கட்டளையாக புகுத்துவதில் பிடிவாதம் கொண்டவன். இந்நூல் ஆசிரியர்  அவன் அரசன் என்பதற்காக நாவலில் எந்தவொரு இடத்திலும் மாயப்பூச்சு புனைவைக் காட்டவில்லை. மாயப்பூச்சு கொண்ட  வரலாற்று நாவல்கள் எதிர்மறை நிகழ்கவுளை மூடி மறைத்து விடுகின்றன. மாய எதார்த்தவாதத்தை கட்டமைப்பதில் தான் அவை கவனம் செலுத்துகின்றன. இந்நாவல் நிகழ்வுகளின் தகவல்களை மட்டும் கச்சிதமான  நடையில் நாவலுக்குரிய பாங்குடன் சொல்வதில் தனி கவனம் செலுத்துகிறது.

சிக்க வீர ராஜேந்திரன் ஆட்சி கட்டிலில் முறையாக அமர்த்தவன் என்று சொல்லிவிட முடியாது. நிலைப்புத் தன்மைக்கு அப்பாற்பட்ட அவனது அரசாட்சியை  தங்கை(தேவம்மாஜி ) சாதகமாக்கிக் கொள்ளக்கூடும் என்கிற வகையில் அவளது கணவனிடமிருந்து ( சென்ன பசவய்யா) அவளைப்  பிரித்து கைது செய்து சிறை வைக்கிறான்.   தனிமை சிறையில் அவளது தங்கை கர்பவதியானது அவனைக் கொதிப்புறச் செய்கிறது.  மர்மத்தின் பின்புலமாக அவளது கனவனுடனான  சந்திப்பிற்கு உதவியாக மகாராணியும் (கெளரம்மாஜி) ராஜகுமாரியும் (புட்டம்மாஜி) நல்லெண்ணம் கொண்ட வழிமுறையே காரணமாகும். மகாராணி தர்மத்தின் வழியை பின்பற்றுபவள். சிறந்த பக்தியும் உதவும் தன்மையும் நிரம்பியவள். அரசனின் குணம் அவளுக்கு முற்றிலும் மாறானது.

ராணியின் கம்பீரம் மற்றும் நேர்மையைக் கருத்தில் கொண்டு மந்திரிகள் போபண்ணாவும்  லக்ஷ்மி நாரயணய்யாவும் அரசரின் அத்துமீறல்களை பொறுத்துக் கொள்கின்றனர். அதே சமயம் அரசனின் வலது கையாக செயல்படும் பசவன் மீது நிராகரிப்பின் வன்மம் எழுகிறது. பசவன் தனது பிறப்பின் ரகசியம் அறியாதவன் ,  கால் ஊனமானவன் அரசரின் தீய நெருப்பு கங்குகளை அணையாது வளர்ப்பவன், அரசனின் துர்குணப் பிரதிபலிபாக செயல்படுபவன் அதற்கு மூலமாகவும் இருப்பவன்  இதனால் மந்திரிகளின் கோபத்திற்கும் மக்களின் வெறுப்பிற்கும் ஆட்படுகிறான்.

இராஜகுமாரியின் மீது மட்டும்  மிகுந்த  அன்பு  கொண்டிருக்கும் அரசன் அவளது கோரிக்கைக்கு ( ராணியின் தூண்டுதல்) செவி சாய்த்து தங்கையையும் குழந்தையையும்  வெறுப்புடன் மைத்துனனிடம் சேர்க்க சம்மதிக்கிறான். மைத்துனனுக்கு அரசன் மீது வெறுப்பும் கோபமும் ஆட்சி அதிகாரத்தின் மீது ஆசையும் உண்டு. அதனால் அவ்வப்போது மங்களூரில் இருக்கும் பிரிட்டிஷ் கலெக்டெருக்கும்,  மைசூரில் இருக்கும் பிரிட்டிஷ் ரெஸிடெண்டுக்கும்  புகார்கள் அனுப்பிய வண்ணம் இருக்கிறான். குறிப்பாக தங்களது ஆட்சி பகுதியிலிருந்து சிக்க வீர ராஜேந்திரன்  பெண்களை கடத்திச் செல்வதை கம்பெனி ஆட்சியினர் விரும்புவதிவில்லை.

பெண் பித்து கொண்ட அரசன் மடிக்கேரியின் செட்டியார்கள் வீட்டு இளம் பெண்கள் மீதும் கண் வைக்கிறான். இதனால் அமைச்சர்கள், வணிகர்கள் மத்தியில் அதிருப்தி நீட்சியடைகிறது. கலகங்களும் முகிழ்கின்றன. பசவனின் அதிகாரத்தாலும் துஷ்டத்தாலும் காவேரி தாய் போன்ற ரகசியப் புரட்சி படைகள் தோன்றுகின்றன.

ஒருபுறம் நட்பு, மறுபுறம் அண்ணன் எப்பொழுது எழுந்து திண்ணையை தருவான் என்கிற எதிர்பார்ப்பு பிரிட்டிஷ் குணம் அதன்படியே அவர்களது  அணுகுமுறையும் இருக்கும்.

மீண்டும் தன்னை சிறைப்படுத்த போகிறான் என்கிற எச்சரிக்கை  உணர்வில் ராஜேந்திரனின் தங்கை தேவாம்மாஜி   தனது கணவன் சென்னபசவனை அழைத்துக் கொண்டு  பிறந்த குழந்தையுடன் குடகு நாட்டைவிட்டு மங்களூர் தப்பிச் செல்லும் ரகசிய முயற்சியின் போது குழந்தையை தொலைத்து விடுகிறாள். தம்பதிகள் பிரிட்டிஷ்   உதவியை நாடுகின்றனர்.  துரதிஷ்டவசமாக   அரசன் வீர ராஜனின் கையில் குழந்தை சென்று சேர்கிறது. தப்பிக்க உதவிய சென்ன பசவனின் உதவியாள் கொடூரமாக  கழுவேற்றப் படுகிறான்.  ஒரு நள்ளிரவில் குழந்தையை இரக்கமின்றி கொன்று விடுகிறான்.

பிரிட்டிஷ் அதிகாரிகளின் கோரிக்கைகள், எச்சரிக்கைகள் மீறப்படுகின்றன.  சென்னை கவர்னர் அனுப்பிய தூதுக் குழுவை வீரராஜன் உதாசீனப்படுத்தியதோடு அவர்களை சிறை பிடித்தும் வைக்கிறான். ஏற்கனவே வெறுப்பில் இருக்கும் அமைச்சர் போபண்ணா ஆங்கிலேயர்களின் படையோடு சேர்ந்து கொள்கிறார். இதனால்  குடகு முற்றுகைக்கு உள்ளாகிறது. இருப்பினும் அமைச்சர் முயற்சியால் போர் தவிர்க்கப்பட்டு  பிரேசர் துரையுடன்  பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த ஒப்பந்தம் (1834) மூலம் மன்னர் பதவி பறிக்கப்பட்டு சிக்க வீர ராஜேந்திரன் பிரிட்டிஷ் கைதியாக்கப்படுகிறான். கைதி என்ற போதிலும் அரசனுக்கான மானியத்துடன் சில நாட்கள் வேலூரில் இருக்கிறான். உட்பூசல் எழாமல் இருப்பதன் முன்னெச்சரிக்காக பிரிட்டிஷ் அரசின் தூண்டுதலால் அவனது இருப்பிடம் காசிக்கும்  மாற்றப்பட்டு இறுதியாக லண்டனுக்கு கொண்டு  செல்லப்படுகின்றான். அரசன் நல்லவனோ கெட்டவனோ அவனால் எந்தவகையிலும் புரட்சி   வந்துவிடக் கூடாது என்பதில் ஆங்கியேர்கள் கவனமாக இருந்தார்கள்

காசியில் வசிக்கும் போது  மகாராணி  மரணமடைந்து விடுகிறாள். வழக்கம் போல் பிரிட்டிஷ் தனது  ஒப்பந்த உறுதிமொழியை மறந்துவிடுகிறது. ராஜகுமாரி வளர்ந்த பின்பும் குடகு ஆட்சி திருப்பி அளிக்கப்படவில்லை. விக்டோரியா கௌரம்மா  என்ற பெயரில் கிறித்துவ மதத்திற்கு மாறிய பின்பும் வீரராஜனின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போகிறது. இந்த எதிர்பார்ப்பின் ஒரு பகுதியாக ஆங்கில அதிகாரியுடன் (காப்டன் காம்பெல்) ராஜகுமாரியை   திருமணம் செய்து வைக்கிறான். ஒப்பந்தம் உயிர் பெறவில்லை. குழந்தை பிறந்த சில ஆண்டுகளில் அவளும் இறந்தும் போகிறாள்.

பேத்தியுடன் லண்டனில் வாழ்ந்த சிக்க வீர ராஜேந்திரனின் இறப்பு (1959) மர்மம் நிறைந்ததாக உள்ளது. பின்னாட்களில் அவனது பேத்தி

எடித் சாது இந்த நாவலுக்கான சாரத்திற்கு  உதவுகிறாள். (இங்கிலாந்து  வட்ட மேசை மாநாட்டுக்கு சென்றிருந்த கதையாசிரியரின் நண்பர் உடனான தற்செயல் சந்திப்பு)

எடித் சாது தனது இருபதாவது வயதில் திருமணம் செய்து கொள்கிறாள். 1910-ல் அவளது கணவன்  இறந்து போகிறான். அவளது ஒரே மகனும் 1918 – ல் ஆஸ்திரேலியாவில் நடந்த போரில் இறந்து போகிறான்.

குடகு மன்னராட்சி பரம்பரையின் இறுதி  வித்து எடித் சாது மட்டுமே. ராஜ வம்சத்தின் மிச்சமும இறுதியில் ஒன்றுமில்லாமல் காலத்தில்  கரைந்து விடுகிறது.

காலம் பல வண்ணங்களை கொண்டது. ஒவ்வொரு படிநிலையிலும் அது வர்ணஜாலங்களை நிகழ்த்திய வண்ணம் நகர்வதோடு ஒருத்துளி வண்ணம் கூட அதன் பிடியிலிருந்து நழுவ விடுவதில்லை .

சிக்க வீர ராஜேந்திரன் நாவல் குடகின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளின் நிறங்களை காட்சிப்படுத்துகிறது. அது காட்சிப்படுத்த மட்டுமே செய்கிறது என்பது தான் அதற்கான அர்த்தம்.

ஒரு நாட்டை அபகரிப்பது என்பது பல வகையில் திட்டமிடப்படுவது. வியாபாரம் என்பது மட்டும் நோக்கமல்ல. ஆங்கிலேயர்கள் ஆட்சி நிலைப்புத் தன்மையின் அஸ்திவாரம் அரசியல் நுணுக்கம் வாய்ந்தது. பிரிட்டன் பாதிரிகள் விவிலியத்தோடு மருத்துவத்தையும் கற்றிருந்ததன் நோக்கம். மருந்துகள் வழியே தங்கள் மத விசுவாசத்தையும்  நோயாளிக்கு புகட்டுவதன் பொருட்டே. அரசர்களுக்கு சிகிச்சையளிக்கும் போதும்   இவர்களது மதமாற்ற போதனைகளை  புகுத்துவதில் தயங்கவில்லை. குடகு பிரதேசத்தின் ராஜவம்சம் அந்த நிலத்திலிருந்து பிடுங்கப்பட்டு அதன் நிறம் மாற்றப்பட்டது என்றாலும் குடகர்கள் இன்று வரை குடகர்களாக இருப்பதில் மட்டுமே பெருமை கொள்கின்றனர்.

அரசர்கள் வைத்தியத்திற்கு கட்டுபடாத தங்கள் நோய்களை மாந்திரீகத்தின் வழியே தீர்த்துக்கொள்ளவும் விரும்பினர். ஜோதிடத்தை நம்புவது அவர்கள் மரபாக இருந்தது. ஜோதிடத்திற்கு எந்தவொரு தட்சணையும் பெறக்கூடாது என்பது விதி. ஜோதிடர்கள் கூறும் குறிப்புகளை  வாழ்வின் ஆதியந்தமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மனிதனுக்கு விதியை வெல்வதற்கான கூர்மையான மதி உள்ளது. இருப்பினும் அதை பயன்படுத்தும் உபயத்தை தான் யாரும் அறிவதில்லை.

இந்நாவலின் பெரும்பாலான வரலாற்று தரவுகள் உறுதி செய்யப்பட்டவை. ஆனால் நாவலில் விடலை பருவத்து பெண் மட்டுமே சிக்க வீர ராஜேந்திரனின் ஒரே மகளாக வருகிறாள்.  குடகு பிரிட்டிஷ் வசம் சென்ற பின்பு காசியில் தங்கியிருந்த   சிக்க வீரராஜேந்திரன் தனது மூன்றாவது மகளான முத்தம்மா என்கிற கங்காவை நேபாள் ராணா வம்சவத்தவரான நேபாள பிரதம அமைச்சர் ஜங்பகதூர் ராணாவுடன் 1850-ல் திருமணம் நிகழ்ந்த தரவுகளை நான் அறிந்துள்ளேன்.

மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் கதை சொல்லும் விதம் புத்தகத்தை மூட விடுவதில்லை. வீரராஜனின் சாதாரண மனித  உணர்வுகளையும் மிதமிஞ்சிய அவனது உணர்ச்சிகளையும் அருமையாக விவரிக்கிறார். மேலும்  குறுநில ஆட்சி பகுதியான குடகின் நிதி நிர்வாகம் அரசரின் கட்டுபாட்டில் இல்லாமல் அமைச்சர்கள் மேற்பார்வையில் இயங்கியதும் அரண்மனையின் செலவினங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் அமைச்சர் குழுவுக்கு இருந்தது என்பதையும் அறிகிறோம். மந்திரிகள் – மக்கள், அரசனின் நண்பனான பசவன்-பகவதி  இவர்களின் தொடர்புகள் வேறுவிதமான இனைப்புகளை  சர்வ சாதரணமாக காட்சிப்படுத்துவது எழுத்தாளரின் திறமையை காட்டுகிறது . கர்நாடகத்தின் பிரபலமான  யக்க்ஷகானம் என்கிற பாரம்பரியமான கலை வடிவங்கள் மக்களின் எண்ணங்களை ஆட்சியாளர்களுக்கு  பிரதிபலிக்கும் ஊடகமாக விளங்கின.

கர்நாடக அரசில் சார்பதிவாளராக பணியாற்றிய வெங்கடேச அய்யங்கார் ஸ்ரீரங்கத்து தமிழர். தனது 96 வயதில் அவர் மறையும் வரை கன்னட இலக்கியங்களில் தளர்வில்லாமல் இயங்கினார். 1985-ல்  சிக்க வீர ராஜேந்திரன் நாவலுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. 90-வது வயதில் அவ்விருது நிகழ்ச்சியில் தமது தீவிர மதநம்பிக்கையிலிருந்து விலகி விட்டதாகவும் மனிதனின் வாழ்வு முழுவதும் விஞ்ஞாணத்தின் புறவயத்தை சார்ந்தே இயங்குவதாகவும் தனது கருத்தை  வெளிப்படுத்தினார். இந்த வெளிப்பாடையான எதார்த்த நிலைப்பாட்டியலின் பிரதிபலிக்கும் விதமாக இவரது நாவல் எந்தவித கற்பனை மற்றும் உணர்ச்சி சாத்தியங்களுக்கு ஆட்படாமல் நகர்கிறது. இவரது எழுத்து வன்மை மாஸ்தி எங்கள் ஆஸ்தி(எங்கள் சொத்து) என்று கன்னட வாசக உலகை கொண்டாட வைக்கிறது.

நேஷ்னல் புக் டிரெஸ்ட் இந்த சிறப்பான வரலாற்று நாவலை மீண்டும் மறுபதிப்பு செய்திட வேண்டும்.

மஞ்சுநாத்

புதுச்சேரி

***

கன்னட மூலம்:

மாஸ்தி வெங்கடேஸ அய்யங்கார் (1891-1986)

தமிழாக்கம்:

ஹேமா ஆனந்ததீர்த்தன்

வெளியீடு :

நேஷ்னல் புக் டிரஸ்ட் , இந்தியா

முதற்பதிப்பு : 1974

2 -ம் பதிப்பு : 1990

பக்கம்: 524+18

விலை 35 ரூ

சிக்கவீர ராஜேந்திரன் ஜெயமோகன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 22, 2022 11:31

பரிந்துரைகள்

 

ஜெயமோகன் சார்,

காலை வணக்கம்

நான் அடிக்கடி புது புத்தகங்கள் வாங்குவதில்லை இந்த புத்தகம் மிகவும் நன்றாக இருந்தது. உங்களுடைய அடுத்த புத்தகம் நான் எதை வாங்கலாம்

பரிந்துரைத்தால் மிகுந்த உதவியாக இருக்கும்.

பிரியமுடன்

பிரசாத்

***

அன்புள்ள பிரசாத்,

நீங்கள் வாசிக்கத் தொடங்குபவர் என்றால் அண்மையில் வெளிவந்தவற்றில் குமரித்துறைவி நாவலை வாங்கலாம் சிறிய நாவல். சிக்கல்கள் இல்லாத கதையோட்டம் கொண்டது.

அதே காலகட்டத்தில் எழுதிய சிறுகதை தொகுதிகளான ‘ஆயிரம் ஊற்றுகள்’ ‘பத்துலட்சம் காலடிகள்’ ‘தங்கப்புத்தகம்’ ‘ஆனையில்லா’ ஆகியவையும் வெளிவந்துள்ளன. கதைச் சுவாரசியத்துக்காகவேகூட அவற்றை வாசிக்க முடியும்.

முன்பு வந்த நூல்களில் வாசிக்கத் தொடங்கும் ஒருவர் இரவு, கன்யாகுமரி போன்றவற்றை வாசிக்கலாம்.

ஜெ

மின்னஞ்சல் : info@vishnupurampublications.com

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 22, 2022 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.