Jeyamohan's Blog, page 695

October 23, 2022

அஞ்சலி, பா.செயப்பிரகாசம்

சிறுகதையாசிரியரும், அரசியலாளருமான பா.செயப்பிரகாசம் மறைந்தார். தமிழக அரசின் செய்தித்துறை உயரதிகாரியாகப் பணியாற்றியவர். திராவிட இயக்க ஆதரவாளராக இருந்தவர் பின்னர் தீவிர இடதுசாரிக் கருத்துக்கள் கொண்டவராக ஆனார். அரசியல் கருத்துக்களை நேரடியாக வெளிப்படுத்தும் கதைகளை எழுதியவர்.சூரியதீபன் என்ற பெயரில் மன ஓசை என்னும் இடதுசாரி இதழை நடத்தினார். அஞ்சலி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 23, 2022 07:06

October 22, 2022

இந்து மதம் என ஒன்று உண்டா?-3

இந்து

இந்து என்னும் மதம்

இதுவரைச் சொன்னவற்றில் இருந்து இவ்வாறு தொகுத்துக்கொள்வோம். மதம் (Religion) என நாம் இன்று சொல்வது ஒரு மேலைநாட்டுக் கருதுகோள். அதன் அடிப்படையில் நாம் இன்று இந்து மதம் என ஒன்றை உருவகிக்கிறோம். இது முன்பு வேறுவேறு பெயர்களில் அறியப்பட்டது.

இந்த மரபின் வேர்கள் வரலாற்றுக்கு முந்தைய பழங்குடி வாழ்க்கையில் உள்ளன. அன்று அவை பலநூறு தனித்தனி குலவழிபாடுகளாக இருந்திருக்கலாம். அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து இணைந்து குறுமதங்களாயின. அவை பின்னர் இணைந்து பெருமதங்களாயின. அவை மேலும் இணைந்து இந்துமதம் என இன்று அறியப்படுகின்றன.

இந்த மரபில் மேலும் மேலும் துணைமதங்கள், புதிய வழிபாட்டு முறைகள் இணைந்துகொண்டே இருக்கின்றன. புதிய வழிபாட்டு முறைகளும், துணைமதங்களும் பிரிந்து உருவாகிக்கொண்டும் இருக்கின்றன. இரு உதாரணங்கள். ஷிர்டி சாய்பாபா வழிபாடு தனித்தன்மை கொண்ட ஒன்று. இஸ்லாமிய ஞானி ஒருவரை இந்து முறைப்படி வழிபடுவது அது. இன்று அது இந்து மரபுக்குள் வந்துவிட்டது. பல இந்து ஆலயங்களில் ஷிர்டி சாய்பாபா வந்துவிட்டார். வள்ளலாரின் ஜோதிவழிபாடு இந்து மரபில் இருந்து தனித்து பிரிந்து அவர் உருவாக்கியது. அது இந்து மரபுக்குள் தனி வழிபாட்டுமுறையாக நீடிக்கின்றது.

அமெரிக்கா சென்றால் சமண தெய்வங்கள் இந்து ஆலயங்களுக்குள் இருப்பதைக் காணலாம். ஏனென்றால் சமணர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பார்கள். அவர்களால் தனி ஆலயம் அமைக்க முடியாது. ஆகவே இந்து ஆலய வளாகத்திற்குள் அவர்கள் தங்கள் தெய்வங்களை நிறுவிக்கொள்கிறார்கள். இந்துக்களுக்கு அதில் எந்த சிக்கலும் இல்லை. சமணர்களுக்கும் பிரச்சினை இல்லை. இருநூறாண்டுகளுக்குப்பின் அவை இந்து மரபுக்குள் அமைந்திருக்கலாம்.

இந்த மகத்தான இணைவுச்செயல்பாடை, தத்துவார்த்தமான உள்விரிவை, அனைத்தையும் மறுக்காமல் இணைத்துக்கொள்ளும் நெகிழும் தன்மையை ‘ஆக்ரமிப்பு’ என்றும் ‘அடிமைப்படுத்தல்’ என்றும் நமக்கு விளக்குகிறார்கள் சிலர். எதிர்த்தரப்பாக இருந்த எல்லா மதங்களையும் ஒரு சொல் கூட மிச்சமில்லாமல் அழித்த வரலாறுகள் கொண்ட மதங்களின் மேடைகளில் நின்று அதை நம்மிடம் சொல்கிறார்கள். அந்த மதங்கள் உருவாக்கும் கல்விநிறுவனங்களின் அரங்குகளில் சென்று அப்படி முழக்கமிடுகிறார்கள். அதைக்கேட்டு நாமும் ‘உண்மையா சார்?’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். அறியாமைக்காக நாம் கூச்சப்படவேண்டாம், அலட்சியம் மற்றும் பொறுப்பின்மைக்காக கூச்சப்பட்டே ஆகவேண்டும்.

இந்துமதத்தின் பரிணாம வரலாற்றை நமக்குக் கிடைக்கும் நூல்கள் மற்றும் தரவுகளில் இருந்து இப்படி தொகுத்துக்கொள்ளலாம்.

இந்து மதம் என நாம் இன்று சொல்லும் இந்த மரபு முதன்மையாக ஆறுமதங்கள் (சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம்) ஆறுதரிசனங்கள் (சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வமீமாம்சம், உத்தர மீமாம்சம்) அடங்கியது. ஆறுதரிசனங்களும் ஆறு மதங்களும் ஒன்றுடன் ஒன்று விவாதித்து அது வளர்ந்தது.

அந்த விவாதத்தின் சித்திரம் மிகச்சிக்கலானது. அதை தத்துவப்பயிற்சியும் ஆர்வமும் கொண்டவர்களிடமே விவாதிக்கமுடியும். பிறவி மடையர்களான யுடியூப்வாயர்களுடனும் அரசியலியக்கங்களின் அல்லக்கைகளுடனும் அவற்றை விவாதிக்கப்புகுவது நம் மீதும், நமது முன்னோர் மீதும் சேற்றை அள்ளிப்பூசிக்கொள்வது போல.

ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு சிறு உதாரணம். வைணவம் என பின்னாளில் பெயர்பெற்ற வழிபாட்டுமுறை பொயு ஐந்தாம் நூற்றாண்டில் குப்தர் காலத்தில்தான் ஒற்றை இயக்கமாக ஆகியது. வைணவத்தின் அடிப்படைப் புராணங்கள் உருவாயின. வழிபாட்டுமுறைக்கான ஆகமநூல்கள் உருவாயின. அவற்றின் அடிப்படையில் அனிருத்தன், பலராமன் போன்ற வெவ்வேறு தெய்வங்களும், துணைத்தெய்வங்களும் வைணவத்திற்குள் ஒருங்கிணைந்தன.

வைணவ வழிபாட்டு மரபின் தத்துவ அடிப்படை பொயு 7 ஆம் நூற்றாண்டில் சங்கரருக்கு பின்னர் தெளிவடைய ஆரம்பித்தது. ஆறு தரிசனங்களில் ஆறாவதான உத்தர மீமாம்சம் அல்லது வேதாந்தம் வைணவத்தை தத்துவார்த்தமாக வலுப்படுத்தியது. ராமானுஜர் (விஷ்டாத்வைதம்), மத்வர் (துவைதம்), நிம்பார்க்கர் (துவைதாத்வைதம்) வல்லபர் (சுத்தாத்வைதம்) என வைணவம் வளர்ந்தது. பதினாறாம் நூற்றாண்டில் வல்லபருக்குப் பின்னரே இன்றைய வடிவை அது அடைந்தது.

அதேபோல சைவத்திலும் சாங்கியம், யோகம், வேதாந்தம் முதலிய ஆறுதரிசனங்கள் ஊடுருவி தத்துவார்த்தமாக அதை வளர்த்தபடியே இருந்தன. சைவம் என எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு நூறாண்டிலும் அது வளர்ந்து உருமாறியபடி இருப்பதைக் காணலாம். இன்று நாம் பார்க்கும் சைவம் என்பது பொயு பதினான்காம் நூற்றாண்டில் மெய்கண்டாருக்குப் பின்னர்தான் இவ்வடிவத்தை அடைந்தது.

அதாவது இந்த வழிபாட்டுமுறைகள் எல்லாம் முற்றிலும் வெவ்வேறு ‘மதங்கள்’ (Religions) ஆக இருந்து திடீரென்று ஏதோ ஒரு சதிவேலையால் ஒன்றாக ஆனவை அல்ல. அப்படி எல்லாம் மதங்களை இணைக்கவும் பிரிக்கவும் எவராலும் முடியாது. அணுவளவு வரலாறு அறிந்த எவரும் அதைச் சொல்ல மாட்டார்கள். இந்த வழிபாட்டு முறைகள் தனித்தனித் ‘தரப்புகள்’ ஆக இருந்தபோதிலும் ஒரே அமைப்பின் பகுதிகளாகவே இருந்தன.

ஆறுமதங்கள் பற்றி நமக்குக் கிடைக்கும் தொன்மையான நூல்கள் விஷ்ணுபுராணம், அக்னிபுராணம், பிரம்மாண்ட புராணம் போன்ற முதன்மையான புராணங்கள். அவை பொயு 3 முதல் பொயு 6 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை. அவற்றில் மிகமிகத் தெளிவாகவே ஆறுமதங்களும் ஒரே அமைப்பின் பகுதிகளாக இருந்தமை காணக்கிடைக்கின்றது. ஆறு மதங்களின் தெய்வங்களும் உறவினர்களாகவே காட்டப்படுகின்றனர். ஆறுமதக்கொள்கைகளும் ஒன்றுடன் ஒன்று உரையாடுகின்றன.

பொயு 7 ஆம் நூற்றாண்டில் சங்கரர் ஆறுமதங்களையும் தத்துவார்த்தமாக ஒருங்கிணைத்து ஒரே அமைப்பாக ஆக்கி, அதைப் பின்பற்றும் துறவியர் மரபை உருவாக்கினார். ‘ஷன்மத சங்கிரகம்’ என அது அழைக்கப்படுகிறது. கவனியுங்கள் ஆறு religion களை அவர் ஒன்றாக்கவில்லை. ஆறு தரப்புகளை ஒன்றாக்கினார். அதாவது ஆறு வழிபாட்டுமுறைகளை இணைத்தார். அதன்பின் பொயு 14 ஆம் நூற்றாண்டில் ஆறுமதத்திற்கும் பொதுவான பூசகர் மரபை சிருங்கேரி மடாதிபதியான வித்யாரண்யர் உருவாக்கினார்.

ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் இன்று நாம் இந்துமதம் என்று சொல்லும் இந்த அமைப்பு இன்றிருக்கும் வடிவில் ஒன்றாகவே இருந்துள்ளது. ஒருவர் அதற்குள் சைவத்தையோ வைணவத்தையோ பின்பற்றலாம். ஆனால் பிற வழிபாட்டு மரபுகளுடன் இணைந்தே இருந்தாகவேண்டும். ஆலயங்கள் விஷ்ணுவுக்கோ சிவனுக்கோ உரியதாக இருக்கலாம். ஆனால் அங்கே மற்ற வழிபாட்டு மரபுகளின் தெய்வங்களும் இருக்கும்.

இந்தியாவில் தீவிர வைணவர்கள், தீவிர சைவர்கள் என சொல்லத்தக்கவர்கள் மிகமிகக் குறைவானவர்கள். அவர்கள் ஏதேனும் குறிப்பிட்ட சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள். உதாரணமாக நான்கு வைணவ சம்பிரதாயங்களில் ராமானுஜரின் ஶ்ரீசம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விஷ்ணுவை அன்றி பிறரை வணங்காதவர்கள். ருத்ர சம்பிரதாயம் மற்றும் குமார சம்பிரதாயத்தை சேர்ந்தவர்களுக்கு அந்த தடைகள் இல்லை. மாத்வர்கள் வேறு ஆலயங்களில் அர்ச்சகர்களாகவே இருக்கிறார்கள். கர்நாடகத்தில் பல சமண ஆலயங்களிலேயே மாத்வபிராமணர்களே அர்ச்சகர்கள்.

சைவர்களில் வீரசைவ மரபினரே சிவனை மட்டுமே வழிபடுபவர்கள். மற்றமரபினரில் தீட்சை எடுத்துக்கொண்ட சிலர் மட்டுமே சிவனை மட்டுமே வழிபடுபவர்கள். எஞ்சியோருக்கு அந்த தடைகள் இல்லை. சாக்தர்களுக்கும் சிவ, விஷ்ணு என்னும் வேறுபாடு இல்லை. அதாவது இந்திய மக்கள் தொகையில் இந்துக்கள் ஏறத்தாழ அறுபது கோடி என்றால் அதில் மொத்தமாக ஐம்பதுலட்சம் பேர் சைவர்கள் அல்லது வைணவர்கள் என தனியாக அடையாளம் கொண்டவர்கள். எஞ்சியோர் இன்று நாம் இந்து மதம் என்று சொல்லும் பொதுவான வழிபாட்டு முறையிலேயே இருந்துகொண்டிருக்கிறார்கள். எல்லா தெய்வங்களையும் வழிபடுகிறார்கள்.

ஏறத்தாழ ஆயிரத்தைநூறு ஆண்டுகளாக இது இவ்வாறுதான் இருந்தது என்பதற்கான மாபெரும் சான்று தமிழில் சிலப்பதிகாரமே. ஆய்ச்சியர் குரவையும், வேட்டுவவரியும் ஒரே நூலில் இடம்பெறுகின்றன அதில். குமாரசம்பவம், ரகுவம்சம் இரண்டையும் எழுதிய காளிதாசன் சைவனா, வைணவனா? காளியை வழிபடும் உவச்சர் குடியில் பிறந்து ராமாயணம் எழுதிய கம்பன் சாக்தனா வைணவனா?

இந்த மாபெரும் ஒற்றைப்பேரமைப்பின் மீதுதான் இன்று திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த முறையில், அத்தனை ஊடகங்களையும் பயன்படுத்தி அதை பிளவுபடுத்தும் பிரச்சாரம் நிகழ்கிறது. கவனியுங்கள், அதற்கு எதிராக ஒரு குரலேனும் உண்மையைச் சொல்லும்படி ஒலிக்கிறதா? ஒரு முணுமுணுப்பாவது கேட்கிறதா? ஏன் இல்லை?

விஷயமறிந்தோர் பலர் உள்ளனர். பேசமுடியாது, பேசினால் கீழ்த்தர வசை, அரசியல் முத்திரை, ஏளனம் மற்றும் அரசியல்ரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளாகவேண்டியிருக்கும். ஆகவே அஞ்சுகிறார்கள். அதுவே இங்குள்ள சூழல். நான் பேசுகிறேன், அதன்பொருட்டு ஒவ்வொருநாளும் வசைபாடப்பட்டு அவமதிக்கப்படுகிறேன். அதை கொண்டாடி கும்மியடிப்பவர்களில் என் மேல் தனிப்பட்ட பொறாமை கொண்ட இந்துக்களும் பலநூறுபேர் இருப்பதைக் காண்கிறேன்.

இந்தியாவிற்கு ஐரோப்பிய சிந்தனைகள் வந்தபோது ஐரோப்பிய சிந்தனைமரபின்படி ஒரு மதம் (Religion) என இந்து மெய்ஞான மரபு அடையாளம் காணப்பட்டது. அவர்களுக்கு முன்னால் இருந்த நிர்வாக முறை என்பது முகலாயர்களுடையது. அவர்கள் இந்த மரபை ஒட்டுமொத்தமாக ஹிந்து என்னும் பாரசீகச் சொல்லால் குறிப்பிட்டனர். ஆகவே அதையே பிரிட்டிஷ் நிர்வாகமும் குறிப்பிட்டது. ஆரம்பகால ஆய்வாளர்களும் அச்சொல்லையே கையாண்டனர். அச்சொல்லே இந்த மதத்திற்கு உரியதாகியது. சீனா நம்மை கைப்பற்றியிருந்தால் லின்-டுக் என இந்த மரபு அழைக்கப்பட்டிருக்கும். லின் -டுக் என்று ஒரு மதமே இல்லை, அது சீனர்கள் உருவாக்கியது என ஒரு சாரார் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

இந்துமதம் என்னும் இச்சொல் பல குழப்பங்களை மரபான அறிஞர்கள் நடுவே உருவாக்கியது. இங்கே மதம் என்றால் உறுதியான தரப்பு என்று ஏற்கனவே பொருள் இருந்தது. Religion என்ற கருத்தே இருக்கவில்லை. ஒட்டுமொத்தமாக இந்த மரபு தர்மம் என்று அழைக்கப்பட்டது. ஆகவே இந்து மதம் என்ற சொல் முன்வைக்கப்பட்டபோது மரபான அறிஞர்கள் அதை நிராகரித்தனர். அப்படி ஒன்று இல்லை என்றும், சைவமும் வைணவமும் இன்னும் பிறவுமே மதங்கள் என்றும் சொன்னார்கள். காஞ்சி மடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி முதல் வெவ்வேறு மடாதிபதிகள் அதைச் சொல்லியிருக்கிறார்கள்.

அவர்கள் சொல்வது, இந்து என ஓர் உறுதியான ஒற்றைத்தரப்பும் ஒற்றைவழிபாட்டு முறையும் இல்லை என்பதைத்தான். சைவமும் வைணவமுமே மதங்கள் என சொல்லத்தக்கவை என்றுதான். இவையனைத்தையும் ஒன்றாக்கி தன்னுள் அடக்கி இங்கே நிலைத்துள்ள ஒட்டுமொத்த மரபையே நவீனகால அறிஞர்கள் இந்துமதம் என்கிறார்கள் என அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

மேலும் இந்துமதம் என்று சொல்லி, இன்றுவரை பல்வேறு வழிபாட்டுமுறைகளின் தொகுப்பாக இருக்கும் இந்த மரபை எதிர்காலத்தில் ஒற்றைத்தரப்பாக ஆக்கினால் காலப்போக்கில் சைவமும் வைணவமும் பிற வழிபாட்டு முறைகளும் தங்கள் தனித்தன்மையை இழக்கக்கூடும் என்றும், ஒற்றை நிர்வாகமும் ஒற்றை கருத்தியலாதிக்கமும் உருவாகிவிடக்கூடும் என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள்.

அந்த அச்சம் நியாயமே என்றும், அவ்வாறு இந்து மதம் என்னும் ஒற்றை அமைப்பு உருவாகக்கூடாது என்றும், இந்து வழிபாட்டுமுறைகளின் தனித்தன்மையை அழித்து அதை ஒற்றைப்போக்காக ஆக்கும் எல்லா முயற்சிகளும் தடுக்கப்படவேண்டும் என்றும் நான் திரும்பத்திரும்ப இருபதாண்டுகளாக எழுதி வருகிறேன்.

ஆனால் அதற்கும் இன்று சைவம் வேறு இந்துமதம் வேறு என்றெல்லாம் பேசுபவர்களுக்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளது. இந்து மரபு சென்ற ஆயிரம் ஆண்டுகளாக மெல்லமெல்ல ஒன்றாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுப்பை நிகழ்த்தியவர்கள் சங்கரர் முதல் சித்பவானந்தர் வரை நாம் வழிபடும் மாபெரும் ஞானிகள். தொடர்ச்சியான தத்துவ உரையாடல்கள் வழியாக, மெய்ஞானப் பரிமாற்றம் வழியாக இந்த இணைப்பும் தொகுப்பும் நடைபெற்றுள்ளது.

இன்று இந்து மதம் என அழைக்கப்படும் மொத்தமான ஞானமரபின் ஒவ்வொரு அணுவிலும் அந்த உரையாடலின் அம்சம் உள்ளது. நம் ஆலயங்கள் அனைத்திலும் அந்த இணைப்பின் வெளிப்பாடுகள் உள்ளன. அந்த இணைப்பின் விளைவான தெய்வங்கள் உள்ளன. 2010ல் தமிழ் சைவமரபின் தலைமை ஆளுமையான சீர்வளர்சீர் தருமை ஆதீனம் மிகமிக தெளிவாக அதை விளக்கினார். அந்த மேடையில் நானுமிருந்தேன். மேலும் பலமுறை அவர் அறுதியாக அதைச் சொல்லியிருக்கிறார்.

இன்று சைவம் வேறு இந்துமதம் வேறு என்று கூச்சலிடுபவர்கள் எவரும் நேற்றுவரை சைவத்தில் ஆர்வம் கொண்டவர்கள் அல்ல. சைவத்தை அறிந்தவர்கள் அல்ல. பலர் இந்துமதம் அழியவேண்டும் என அறைகூவியவர்கள். அதன் ஒரு பகுதியாகவே அவர்கள் சைவம் இந்துமதம் அல்ல என கூவுகிறார்கள்.

இறுதியாக, நீங்கள் இந்து மரபின் உள்ளே அமைந்த எப்பிரிவை ஏற்றவர் என்றாலும் இந்துவே. சைவத்தின் ஆறு அகச்சமயம், ஆறு புறச்சமயம் ஆகியவற்றில் எதைச் சேர்ந்தவர் என்றாலும். வைணவத்தின் நான்கு சம்பிரதாயங்களில் எதில் நம்பிக்கை கொண்டவர் என்றாலும்.

இந்து மதமே மூன்று அடுக்குகளால் ஆனது. நடைமுறை தெய்வங்கள் அல்லது நாட்டார் தெய்வங்கள் (குலதெய்வங்கள், குடும்பதெய்வங்கள், காவல்தெய்வங்கள், ஊர்த்தெய்வங்கள்) அதன் முதல் அடுக்கு. இன்று எந்த வேள்வியிலும் எந்த பூஜையிலும் குடும்பதேவதா, கிராமதேவதா என சொல்லி இரண்டுக்கும் பூஜை செய்துவிட்டே அடுத்த கட்ட தெய்வங்களுக்கு வழிபாடு செலுத்துகிறோம்.

இரண்டாவது அடுக்கு பெருந்தெய்வங்களால் ஆனது. ஆறு சமயங்களுக்கும் உரிய மையத்தெய்வங்கள் அவை. சிவன், விஷ்ணு, சக்தி, முருகன், கணபதி, சூரியன். அதற்கு அடுத்த அடுக்கு தூய தத்துவத்தெய்வம். பிரம்மம். உருவற்றது, எந்தவகையான அறிதலுக்கும், வரையறைக்கும் அப்பாற்பட்டது. உணரப்படுவது, ஆனால் அறியவே முடியாதது. இம்மூன்றில் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் நீங்கள் இந்துவே.

இந்து மரபை இன்றைய பொருளில் நாம் இந்து மதம் என்று சொல்கிறோம். சொல்லும்போதே அச்சொல்லில் உள்ள மதம் என்பது மேலைநாட்டு பொருளில்தான் அமைந்துள்ளது, இன்றைய விவாதங்களுக்காகச் சொல்லப்படுகிறது என அறிந்திருக்கிறோம். இன்னொரு தருணத்தில் தர்மம் என்றோ, நெறி என்றோ, வழி என்றோ, மரபு என்றோ சொல்வோம். இந்து மதம் என நாம் இன்று சொல்லும் இது தொல்குடிக்காலம் முதல் இங்கே இருப்பது. ஒவ்வொரு நாளும் புதியவை இணைந்து வளர்வது. உட்பிரிவுகள் வழியாக விரிவது.

இந்து மதம் இன்னும் மாறுதல் அடையும். இன்னும் விரிவாகும். அதில் எது அடங்கும் அல்லது அடங்காது என நம் ஞானியர் முடிவுசெய்யட்டும். நம் அறிஞர்கள் விளக்கட்டும். மேடைப்பேச்சாளர்களும் அரசியல்வாதிகளும் நம் மதத்தை வரையறுக்க வேண்டியதில்லை.

இதைச் சொல்லும்போது ஒவ்வொரு முறையும் தெளிவுபடுத்த வேண்டியது ஒன்று உண்டு. அரசியல்வாதிகள் மதத்தை வரையறுக்க வேண்டியதில்லை என்று சொல்லும்போது எல்லா அரசியல்வாதிகளையுமே உத்தேசிக்கிறோம். இந்து மதத்தை, அதன் பண்பாட்டுக்கூறுகளை அரசியலாக்கும் இந்துத்துவர்கள் அதை ஒற்றை அமைப்பாக ஆக்கி, அதன் உள்விரிவுகளை மறுத்து, ஒரே மேலாதிக்கத்தின்கீழ் கொண்டுவர முயன்றால் அதை வன்மையாகவே கண்டிப்போம். அது இந்து மதத்தை அழிப்பது. கூடவே இந்து மதத்தை உடைத்தும், திரித்தும் விளக்குபவர்களை கண்டிப்போம்.

நேற்றுவரை தர்மம் என அழைக்கப்பட்டு இன்று மதம் என வரையறை செய்யப்பட்டுள்ள இந்த மெய்ஞான மரபு அதற்குள் உள்ள பல வழிபாட்டு மரபுகளும், தத்துவ மரபுகளும் தங்கள் தனித்தன்மையுடன் செயல்படுவதன் வழியாகவே உயிர்த்துடிப்புடன் இதுவரை இயங்கியது. அந்த பன்மைத்தன்மையே நம் ஞானியர், முன்னோர் நமக்குக் காட்டிய வழி. அதை இழக்காமலிருப்போம். ஆனால் அந்த உட்கூறுகள் அனைத்தும் ஒற்றைப்பெரும்பெருக்காக காலப்போக்கில் நம் ஞானியர் வழியாக ஆகியுள்ளன என்றும் உணர்ந்திருப்போம். அந்த உட்கூறுகள் ஒன்றுடனொன்று கொள்ளும் கொள்ளல் கொடுத்தல் வழியாகவே ஒவ்வொன்றும் இதுவரை வளர்ந்தது என்பதையும் மறக்காமலிருப்போம்

(நிறைவு)

***

ஜெயமோகன் நூல்கள்

இந்து மெய்மை வாங்க

ஆலயம் எவருடையது? வாங்க

 

 

[image error]

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 22, 2022 11:35

தமிழர் திருநாள்

கோ. சாரங்கபாணி கோ. சாரங்கபாணி – தமிழ் விக்கி

திருவிழாக்களை பண்பாட்டு அரசியலுக்கும், விடுதலை அரசியலுக்கும் பயன்படுத்திக்கொள்வதில் ஏராளமான முன்னுதாரணங்கள் நமக்குள்ளன. கேரளத்தில் இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு ஓணம் திருவிழாவை மதச்சார்பற்ற கேரளவிழாவாக உருமாற்றம் செய்தார். அவர் கற்பனைசெய்த கேரளதேசியத்தின் விழா அது. அது அடித்தளமக்களின் விழா என்பது அவர் எண்ணம். இன்றைய ஓணம் அவ்வாறு மறுவரையறை செய்யப்பட்ட கொண்டாட்டம்.

தமிழகத்தில் பொங்கல் அப்படி மதச்சார்பற்ற விழாவாக திராவிட இயக்கத்தால் உருவாக்கப்பட்டது. அதற்கு முன் பொங்கல் அனைவருக்கும் உரிய விழாவாக இருக்கவில்லை. பொங்கல் விழாவை தமிழர்திருநாள் என உருமாற்றி மலேசியத்தமிழ் அடையாளத்தொகுப்புக்கு எவ்வாறு கோ.சாரங்கபாணி கருவியாக்கினார் என காட்டும் கட்டுரை இது

தமிழர் திருநாள் (மலேசியா) தமிழர் திருநாள் (மலேசியா) தமிழர் திருநாள் (மலேசியா) – தமிழ் விக்கி

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 22, 2022 11:34

கலீர் கலீர்!

1979 ல் நான் கல்லூரிக்குள் நுழைந்த காலத்தில் வெளிவந்த பாடல். தேவதை என்னும் சினிமாவுக்காக ஷியாம் இசையமைத்தது. பி.என்.மேனன் இயக்கிய இந்தப்படம் அக்காலகட்டத்தில் ஒரு கலையம்சம் கொண்ட ஆக்கம். நெசவுத்தொழில் செய்யும் பெண்ணின் வாழ்க்கையைச் சித்தரிப்பது. இளையராஜா கொடிபறந்த அக்காலத்திலேயே இப்படத்தின் பாடல்கள் அன்று பெரிய பித்தாக இருந்தன. ஆனால் படம் படுதோல்வி அடைந்தது. அனேகமாக எவருமே பார்த்திருக்க வாய்ப்பில்லை (மாந்தளிரே மயக்கமென்ன இன்னொரு பாடல்)

ஷியாம் (இயற்பெயர் சாமுவேல் ஜோசப்) மலையாளத்தில் எண்பதுகளில் மிக அற்புதமான பல பாடல்களை அமைத்தவர். தமிழில் குறைவாகவே இசையமைத்திருக்கிறார். மழைதருமோ என் மேகம் போன்ற பல பாடல்கள் அன்று தமிழில் ஓர் அலையை உருவாக்கின. ஷியாம் சலீல் சௌதுரியின் இசைநடத்துநராக இருந்தவர்.

பி.என்.மேனன் முதன்மையாக கலை இயக்குநர்.மலையாளத்தின் முதன்மை படங்களில் சிலவற்றை இயக்கியவர். ஓளவும் தீரவும், செம்பருத்தி ஆகியவை இன்றும் பார்க்கப்படுபவை. இயக்குநர் பரதனின் தாய்மாமன்

மாந்தளிரே மயக்கமென்ன?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 22, 2022 11:31

விஷ்ணுபுரம் விழா நிதியுதவி

Vishnupuram Ilakkiya Vattamநண்பர்களே,

2022 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் நிகழ்கிறது. வருவதற்கு பயணமுன்பதிவு செய்பவர்கள் செய்துகொள்ளலாம். விருந்தினர்களின் பட்டியல் இன்னமும் அறுதி செய்யப்படவில்லை.

இவ்விழா இன்றைய சூழலில் மிகக்குறைந்த அளவில் நடத்தப்படவேண்டும் என்றாலும் ஓரளவு நிதி தேவை. இம்முறை தேவையான நிதியில் மூன்றிலொரு பங்கு மட்டுமே இதுவரை கிடைத்துள்ளது. நல்லெண்ணம் கொண்டவர்கள், வாசகர்கள் அளிக்கும் நிதிக்கொடைக்காக காத்திருக்கிறோம். (வழக்கமாக, இறுதியில் கூடுதலாக தேவையாகும் நிதியை நாங்களே சொந்தப்பணத்தில் ஒருந்து எடுப்போம். இம்முறையும் அதுவே நிகழும் என்றாலும் முக்கால்பங்காவது வசூலாகவேண்டும் என விரும்புகிறேன்)

ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்பாளர்களும் நிகழ்ச்சிகளும் பெருகிக்கொண்டே செல்கின்றன. இது இன்று தமிழகத்தின் மிகப்பெரிய இலக்கியவிழாவாக ஆகிவிட்டிருக்கிறது. மிகமிகக்குறைந்த செலவில் இதை நடத்துகிறோம் என்றாலும்கூட இதற்கான செலவுகள் மிகுதி. நாங்கள் தனிப்பட்ட முறையில் எவரிடம் சென்று , கோரி நிதிவசூல் செய்வதில்லை. கார்ப்பரேட் நிதியும் பெறுவதில்லை. நண்பர்களை நம்பியே இதுவரை இவ்விழா நிகழ்கிறது.

நிதியளிக்கவேண்டிய முகவரி

Bank Name & Branch:ICICI Bank, Ramnagar Branch, CoimbatoreAccount Name:VISHNUPURAM ILAKKIYA VATTAM TAMIL EZHUTHALARGAL ARAKKATTALAICurrent Account No:615205041358IFSC Code:ICIC0006152

 

வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் அளிக்க விரும்பினால் கீழ்கண்ட மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

jeyamohan.writerpoet@gmail.com

நன்கொடை அளித்தவர்கள் meetings.vishnupuram@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 22, 2022 11:30

பீட்டர் செல்லர்ஸ் – கடிதம்

எழுத்தாளர் அவர்களுக்கு

சாகான் பதிவு கண்டேன் முழு படமும்

https://archive.org/details/1968partythe

The Party – படம் நான் ஒரு எட்டாவது படிக்கும் போது பார்த்தது. பதிவில் வரும் சீன் படத்தின் முதல் சீன் – நாயகன் ஒரு junior artist. அவன் வேலை ஊதுவது மட்டும் தான். ஊதி தீர்ப்பான். ஊதிய பின் அவன் செய்யும் செயல்களால் producer மிக நஷ்ட படுவார்.. அவனை எங்குமே இனி நடிக்க விடாமல் செய்கிறேன் என்று பெயர் குறிப்பெடுத்து வைப்பார். குறிப்பு எழுதியது அவர் இல்ல பார்ட்டி விருந்தினர்கள் பட்டியலில். படம் அங்கு இருந்து வீனை வாசிக்கும் பீட்டர் செல்லர்ஸ்-சில் தொடங்கும்.

படம் Mr Bean போல ஒரு chaotic personality பற்றியது ( அப்படி சொல்வதே பெரும் தவறு Bean பார்ட்டி படத்தின் 100ல் ஒரு பங்கு கூட இல்லை எனலாம். அல்லது அவர் வேறு வகை ). சிரித்து சிரித்து வயரு அந்து போகும் படம். படம் எப்போது முடியும் என்று நோகும் அளவு சிரிக்க வைகும். உச்சமாக producer மகள் ஒரு ஹிப்பி கூட்டத்துடன் வீட்டுக்குள் நுழைவாள்.. கூடவே ஒரு paint அடித்த யானை குட்டி. நம்ம ஆள் “இது எங்க ஊரில் தெய்வம். இப்படி செய்ய கூடாது. இதை குளிப்பாட்டுவோம்” என்று சொல்லி வீடே சோப்பு நுரை ஆகும்..

ஒரு மாதிரி இந்தியர்களின் இயல்பும் innocenceசும் அல்பதனமும் நிறைந்த பாத்திர படைப்பு. முடியும் போது ஒரு அழகான கவித்துவமான படம் போல நாம் உணர வேண்டிய நிலைக்கு வந்து விடுவோம்.

பீட்டர் செல்லர்ஸ் தன் பிங்க் பெந்தர் படங்களுக்காக பிரபலமாக அறியப்படுகிறார். பல வேடங்கள் அதற்கான பிரத்யேக குரல்கள் – கிழவி, இந்தியன், ஃப்ரெஞ்ச் போலீஸ், அனு ஆயுத scientist என்று ஒரு தீவிர கலைஞர். கடைசியாக செய்தது Being There. அவர் 3 கதாபாத்திரங்கள் செய்த Dr Strangelove oru தேர்ந்த ரசிகணுகானது (எந்த referenceசும் இல்லாமல் பார்ப்பவர்களுக்கு சோர்வு அளிக்க கூடியது).  அவர் வாழ்கையை வைத்து எடுக்க பட்ட The Life and Death of Peter Sellers 2004 வருடம் வந்தது. அவர் படங்களை போலவே அவர் ரேடியோ நிகழ்ச்சிகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளுக்காவும் மிக பிரபலம். உங்களுக்கு தெரிந்தே இருக்கும் என் ஆர்வத்தினால் இதை எல்லாம் சொன்னேன்.

அதே படத்தின் இன்னும் ஒரு சீன், மிக பிரபலமானது

நன்றி

ராகவ்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 22, 2022 11:30

October 21, 2022

மைத்ரி, இணைய விவாதம்

வணக்கம்

தகடூர் புத்தகப் பேரவை ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்கு இணைய வழியாக தொடர்ந்து நூல் அறிமுகம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது

 இவ்வாரம் 

 நூல் : மைத்ரி

 அறிமுகம் : மு.தண்டபாணி

 ஏற்புரை: அஜிதன்

                       நூலாசிரியர்

 நிகழ்வில் நூலாசிரியரோடு வாசகர்கள் கலந்துரையாடலாம்.

 நண்பர்களை பங்கேற்க அன்போடு அழைக்கிறேன்.

  நன்றி.

நாள் : 23.10.22 ஞாயிறு இரவு 8 மணி

zoom ID : 9805204425

Password தேவையில்லை.

Link :

https://us02web.zoom.us/j/9805204425

YouTube Live : தகடூர் புத்தகப் பேரவை

–இ. தங்கமணி 

தகடூர் புத்தகப் பேரவை 

தருமபுரி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2022 22:36

இந்து மதம் என ஒன்று உண்டா?- 2

இந்து மதம் என ஒன்று உண்டா? ( தொடர்ச்சி)

மதங்கள் உருவாகி வரும் முறை

மதங்கள் உருவாகி வரும் வழிமுறை என்பது உலகமெங்குமிருந்து பொதுவாக தொகுத்து வரையறுக்கப்பட்டுள்ளது. அவற்றில் இயற்கை மதங்களின் உருவாக்கத்திற்கு என ஒரு பொதுவான போக்கு உலகமெங்கும் உள்ளது.

இயற்கை மதங்கள் மிகமிகத் தொல்பழங்காலத்தில், பழங்குடி வாழ்க்கையில் இருந்து உருவாகி வருபவை. உலகமெங்கும் பழங்குடிகளுக்கு தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் உள்ளன. அவை பெரும்பாலும் மூன்று அடிப்படைகள் கொண்டவை என வகுக்கப்பட்டுள்ளன.

அ.நீத்தார் வழிபாடு, மூத்தார் வழிபாடு

ஆ.குலக்குறி வழிபாடு

இ.இயற்கை வழிபாடு.

இந்தப் பகுப்புகள் மானுடவியலாளர்களால் பொதுவாகச் செய்யப்பட்டவை. இவற்றைக்கொண்டு பழங்குடிகளின் ஆன்மிகத்தை புரிந்துகொள்ள முடியாது. உதாரணமாக, பழங்குடிகள் தங்கள் மறைந்த மூதாதையரை வணங்குகிறார்கள். அது ஓர் எளிய நம்பிக்கையாகவே மானுடவியலாளர் சொல்வார்கள். ஆனால் அது அத்தனை எளியது அல்ல.

பழங்குடிகளிடம் பேசி பதிவு செய்யப்பட்ட உரையாடல்களிலேயே அவர்கள் அதை எப்படி அணுகுகிறார்கள் என்பது கண்டடையப்பட்டுள்ளது. மனிதர்கள் இங்கே பிறந்து வருவதற்கு முன் எங்கோ இருக்கிறார்கள் என்றும் இறந்தபின் அங்கே மீள்கிறார்கள் என்றும் பொதுவான நம்பிக்கை உள்ளது. அதாவது மனிதன் ஒரு கருத்துரு (idea) வாக இருக்கிறான். அந்த கருத்துரு பின்னர் பருவுரு (Matter) ஆகிறது. மரணத்திற்குப்பின் மீண்டும் கருத்துருவாக ஆகிறது.

அப்படியென்றால் அவர்கள் வழிபடுபவது எதை? மனிதன் என்னும் கருத்துருவத்தைத் தான். அது சாவுபயம் அல்ல. சாவை புரிந்துகொள்ளமுடியாமல் செய்வதும் அல்ல. கண்ணால் கண்ட ஒன்றில் இருந்து அதன் சாராம்சமான கருத்தைச் சென்றடையும் மனித முயற்சி அது.

அவ்வாறுதான் மாண்டவர்களை வழிபட ஆரம்பித்தனர். பின்னர் மாண்ட அனைவரையும் ஒன்றாக இணைத்து ஒரே கருத்துருவமாக ஆக்கினர். அத்தனை மனிதர்களும் இணைந்த மிகப்பெரிய ஒற்றை மனிதன் என உருவகித்தனர். மிகப்பெரிய சிலைகளாக அந்த கருத்துருவத்தை நிறுவினர். அதுவே பெரும் ஆள் என்னும் பெருமாள். பரமபுருஷன். மானுடம் என்னும் கருத்துருவம். அதை நீங்கள் சாங்கியம் போன்ற மிகத்தொன்மையான மதங்களில் காணலாம்.

பழங்குடிகள் எங்கெல்லாம் இறைசக்தி ஒன்று வெளிப்படுவதாக உணர்ந்தனரோ அதையெல்லாம் வழிபட்டனர். அவற்றை தங்கள் குலங்களின் அடையாளமாகக் கொண்டனர். பாம்பு, யானை, புலி போன்ற மிருகங்கள். மலை, கடல், நதி போன்ற இயற்கையமைப்புகள். மின்னல், இடி, புயல் போன்ற இயற்கை நிகழ்வுகள். எங்குமே பழங்குடிகள் இயற்கையை வழிபடவில்லை – இயற்கையில் வெளிப்படும் தெய்வத்தையே வழிபட்டனர். இருட்டை, நோயைக்கூட தெய்வ வெளிப்பாடாக கருதினர்.

தெய்வம் என்ற ஒன்று உண்டு என்றால், அது இவ்வகையில் மனிதர்களுக்கு தங்களை வெளிப்படுத்திக் கொண்டது என்று கொள்வதே முறையான ஆன்மிகப்பார்வையாக இருக்க முடியும். உலகமெங்கும், அனைத்து மக்களுக்கும் அது அவ்வாறு வெளிப்பட்டது.

இந்த பழங்குடி வழிபாட்டுமுறைகள் (worships) என்றே அழைக்கப்பட்டன. அந்த வழிபாட்டுமுறைக்கு ஓர் அமைப்பும், கொள்கையும் உருவாகும்போது அவை மெல்ல மெல்ல குறுமதங்கள் (Cults)ஆகின்றன. இணையான இயல்பு கொண்ட குறுமதங்கள் இணைந்து கொண்டே இருக்கின்றன. இணைந்து இணைந்து இன்னும் பெரிய மரபுங்கள். அந்த பெரிய மரபுகளே முன்பு தர்மம் என்றோ, மார்க்கம் என்றோ, நெறி என்றோ அழைக்கப்பட்டன. இன்று நாம் அவற்றையே மதம் (Religion) என அழைக்கிறோம்.

ஒரு நதி உருவாகி வருவது போலத்தான் இது நிகழ்கிறது. ஒரு ஊற்று மெல்ல சிறு ஓடையாக உருவாகிறது. மேலும் மேலும் ஓடைகள் சேர்கின்றன. அதன்பின் துணையாறுகள் இணைந்துகொள்கின்றன. அது திரண்டு திரண்டு முன்னகர்ந்துகொண்டே இருக்கிறது. அந்த முதல் ஊற்று என ஒன்றை நாம் உருவகிக்கலாமே ஒழிய அது இதுதான் என சொல்லவே முடியாது. கங்கோத்ரிக்கு முன்னாலும் கங்கை உள்ளது. நதி பெரிதாகும்போது அதில் இருந்து கிளை ஆறுகள் பிரிகின்றன. அதுவும் மதங்களில் நிகழ்கிறது. பெரிய மதங்கள் பிரிந்துகொண்டே இருக்கின்றன.

உலகிலுள்ள இயற்கை மதங்களை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு நூறாண்டிலும் அதில் புதிய துணைமதங்கள் இணைந்திருப்பதையும் புதிய கிளைகள் பிரிந்திருப்பதையும் காணலாம். மதங்களின் பெயர்கள் காலந்தோறும் மாறுபடும். ஒட்டுமொத்த கட்டமைப்பே காலத்திற்கேற்ப மாறுபடும்.

ஶ்ரீரங்கத்தில் நின்றுகொண்டு இந்த நதி காவேரி அல்ல; கர்நாடகத்தில் காவேரியே கிடையாது; அங்கே ஹாரங்கி, கபினி, சுவர்ணா என்றெல்லாம்தான் இருந்தது என்று சொல்வதற்கு என்ன பொருள்? ஈரோட்டுக்குமேல் இது பவானி என தனி நதியாக இருந்தது என்று சொன்னால் அதை எப்படி புரிந்துகொள்வது? திருச்சியை பொறுத்தவரை நொய்யலும் அமராவதியுமெல்லாமே காவேரிதான். கீழத்தஞ்சையில் காவேரியில் இருந்து வெண்ணாறு பிரிகிறது. மேலும் பல கிளைநதிகளாகிறது. அவையும் காவேரி என்றே சொல்லப்படுகின்றன. காவேரிப்படுகை என்றே அழைக்கப்படுகின்றன.

மதங்களின் இந்த தொடர்ச்சியான இணைவுச்செயல்பாட்டுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. பழைய சமூகங்கள் கூடுமானவரை பிறரை இணைத்துக்கொண்டு பெரியதாக ஆக முயன்றுகொண்டே இருந்தன. அதுவே வலிமை என அவை அறிந்திருந்தன. இரு பழங்குடிகள் இணையும்போது இரு வழிபாட்டுமுறைகளும் இணைந்தன. இரு சமூகங்கள் இணையும்போது அவர்களின் தெய்வங்களும் ஒன்றாயின.

இது சுரண்டலோ, அடக்குமுறையோ அல்ல. இது எவருடைய சதியும் சூழ்ச்சியும் அல்ல. காழ்ப்பே உருவான உள்ளங்களுக்கு அப்படி தோன்றலாம். ஆனால் கொஞ்சம் வரலாறும் சமூகவியலும் வாசிப்பவர்களுக்குத் தெரியும், இது மானுடசமூகப் பரிணாமத்தின் இயல்பான வழிமுறை.

சுவீரா ஜெயஸ்வால் எழுதிய வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் நூல் மார்க்சிய ஆய்வுமுறைமை கொண்டது. அது விஷ்ணு, நாராயணன், திருமால், பிரத்யும்னன், அனிருத்தன், சங்கர்ஷணன், பலராமன், பரசுராமன், ராமன், கிருஷ்ணன் என வெவ்வேறு தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் காலப்போக்கில் இணைந்து இணைந்து இன்றைய வைணவம் எப்படி உருவானது என விளக்குகிறது.

சைவமும் அப்படித்தான். வேதங்களில் பேசப்படும் ருத்ரன் போன்ற தெய்வங்களும்; தொல்குடிகளில் பசுபதியும்; லிங்க வழிபாடு, தூண்வழிபாடு, மலைவழிபாடு, அனல்வழிபாடு முதலிய வழிபாட்டு முறைகளும் இணைந்து இணைந்து சைவம் உருவானது.

இந்த இணைவுக்கான ஆன்மிகமான காரணம் ஒன்றையும் சொல்லலாம். இது மனிதன் பிரபஞ்சத்தின் சாராம்சத்தை வெவ்வேறு துளி அறிதல்களாக அறிவதன் விளைவுதான் தனி மதங்கள். அந்த அறிதல்கள் இணைந்து இணைந்து முழுமையறிதல் நோக்கிச் செல்கின்றன.

ஒவ்வொரு அறிதலும் அவ்வாறுதான் நிகழ்கிறது. இயற்பியல் பிரபஞ்சத்தை எப்படி புரிந்துகொள்கிறது? நியூட்டன், ஐன்ஸ்டீன், ஓபன்ஹீமர், ரிச்சர்ட் ஃபெயின்மான் என பலர் பல கோணங்களில், பல பகுதிகளாக அறிந்தவை இணைந்து இணைந்துதான் பிரபஞ்சம் பற்றிய அறிவு திரண்டுகொண்டிருக்கிறது. மெய்யியல் ஞானமும் அவ்வாறே பல ஞானிகளால், பல அறிஞர்களால் பல பகுதிகளாக உணரப்பட்டவை ஒன்றுடன் ஒன்று விவாதித்தும் இணைந்தும் ஒன்றாகி இறையறிவாக திரண்டுகொண்டிருக்கிறது.

நாம் அந்த இணைவின் பரிணாமத்தை தெய்வ உருவகங்கள் வழியாக காணலாம். பிரத்யும்னன், அனிருத்தன், சங்கர்ஷணன், பலராமன் எல்லாம் விஷ்ணுவின் வடிவங்களே என ஆயின. அது வெவ்வேறு வகை இறையறிதல்கள் இணைந்து ஒரே அறிதலாக ஆவதுதான். பின்னர் ராமனும் கிருஷ்ணனும் அதில் இணைந்தன. ஒரு கட்டத்தில் சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என ஆயின. ஹரிஹரன், சங்கரநாராயணன், சிவராமன், சங்கர ராமன் என்றெல்லாம் தெய்வ உருவகங்கள் அமைந்தன.

ஒருவர் அறிதலின் பொருட்டு காலத்தில் பின்னால் செல்லலாம்.சிவசங்கரன் என்னும் தெய்வ உருவகத்தை சிவன் விஷ்ணு என பிரிக்கலாம். விஷ்ணுவை பலவாக பிரிக்கலாம். அதில் ஒன்றான பலராமனின் மூலம் எது என தேடிச்செல்லலாம். ஏதோ ஒரு காலகட்டத்தில் வேளாண்மக்கள் வழிபட்ட ஒரு தெய்வம். தோளில் மேழியுடன் நின்றிருக்கும் பலராமன் உழவர்களின் அடையாளம். உழவர்கள் அனைவரையும் இணைத்து ஒரே மனித உருவமாக ஆக்கிய வடிவம். அதை மேலும் பின்னுக்கு கொண்டு சென்றால் அதேபோன்ற ஏராளமான உழுபடை தெய்வங்களை நாம் கண்டடையலாம்.

இது வரலாற்றுப்பார்வை. குறியீடுகளின் வரலாற்றைக்கொண்டு சமூக வரலாற்றை ஊகித்தறியலாம். ஆன்மிகப்பரிணாம வரலாற்றையும் ஊகிக்கலாம். மாறாக ‘அய்யய்யோ பலராமனை விஷ்ணுவாக ஆக்கிவிட்டார்களே, அது அடக்குமுறை’ என ஒருவன் கூவுவான் என்றால் அவன் யார்? விஷ்ணுவில் இருந்து பலராமனை பிரிக்கவேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்வான் என்றால் அவன் நோக்கம் என்ன?

ஒன்று அவன் மோசடியாளன். உள்நோக்கம் கொண்ட ஆதிக்கவாதி. பிரித்தாள நினைப்பவன், பிரித்தாளும் கலையில் வல்லுநர்களின் கையாள். அல்லது அவர்களால் ஏமாற்றப்படும் முழு அசடு.

தீர்க்கதரிசன மதங்களுக்கு ஒரு பரிணாமம் உள்ளது. ஒரு தீர்க்கதரிசி தனக்கு முன்னாலிருந்த ஆன்மிகப்பார்வைகளை தொகுத்து, அதற்கு தன் தரிசனத்தின் அடிப்படையில் மையம் ஒன்றை உருவாக்கி, அதை முன்வைக்கிறார். அதையொட்டி பிற்காலத்தில் அவருடைய மாணவர்களால், வழித்தோன்றல்களால் ஒரு மதம் மெல்லமெல்ல உருவாகிறது. அவர்கள் அந்த முதல் தீர்க்கதரிசியை தங்கள் நோக்கில் விளக்கிக்கொள்ளும்போது அந்த மதத்திற்குள் பிரிவுகள் உருவாகின்றன. மேலும் மேலும் ஞானிகள் அந்த மரபில் தோன்றும்போது கிளைகள் தோன்றுகின்றன.

சமணம் இந்தியாவில் ஸ்வேதாம்பரர், திகம்பரர் என்னும் இரு பிரிவாக உள்ளது. அதனுள் பல சம்பிரதாயங்கள் உள்ளன. பௌத்தம் புத்தருக்குப் பின் இருநூறாண்டுகளில் மகா காசியபர் காலத்தில் தேரவாதம் (ஸ்தவிரவாதம், நிலைமரபு) அல்லது ஹீனயானம் மற்றும் மகாயானம் (பெருமரபு) என பிரிந்தது. மேலும் மேலும் பிரிந்துகொண்டே இருந்தது. இறுதியாக இந்தியாவில் உருவான மரபு வஜ்ராயனம். அதுவே திபெத்தில் எஞ்சியிருக்கிறது. மிக அண்மையில் உருவான பௌத்த மரபு என்றால் அம்பேத்கர் உருவாக்கிய நவயான பௌத்த மரபைச் சொல்லலாம். இவ்வாறுதான் மதங்கள் பரிணாமம் அடைகின்றன.

இயற்கை மதங்களும் தீர்க்கதரிசன மதங்களும்

தீர்க்கதரிசன மதங்களின் தோற்றத்திற்கு அந்த தீர்க்கதரிசியை அடையாளப்படுத்தலாம். இயற்கை மதங்கள் எப்போது எப்படித் தோன்றின என்று கூறவே முடியாது. இயற்கைமதங்கள் மிகத்தொன்மையானவை என்பதனால் அவற்றில் தொன்மையான பழங்குடி வாழ்க்கையின் நம்பிக்கைகள், குறியீடுகள், சடங்குகள், வாழ்க்கை ஆசாரங்கள் ஆகியவை நிறைந்திருக்கும். காலந்தோறும் அவற்றை புதுப்பித்தபடியேதான் அவை முன்னகர முடியும். ஆனால் இயற்கை மதங்கள் நெகிழ்வானவையாகவும், உள்விரிவுகளை அனுமதிப்பவையாகவும், புதியவற்றை உள்ளிழுத்து வளர்பவையாகவும் இருக்கும்

இயற்கை மதம், தீர்க்கதரிசன மதம் ஆகியவற்றுக்கு அவற்றுக்கே உண்டான பிரச்சினைகள் மற்றும் எதிர்மறைக்கூறுகள் உண்டு. இயற்கை மதங்கள் தொன்மையான ஆசாரங்கள் நிறைந்தவையாக இருக்கும். உதாரணமாக இந்து மதத்தில் உள்ள நீத்தார்ச்சடங்குகள். சனிக்கிழமை ஒருவர் இறந்தால் ஒரு கோழியையும் கொன்று சிதையில் உடன் வைக்கவேண்டும் என்பது போன்ற நம்பிக்கைகள். இவற்றின் வேரைத்தேடிப்போனால் மனிதர்கள் சமைத்து உண்பதற்கு முந்தைய காலகட்டத்திற்கே சென்றுவிட வேண்டியிருக்கும்.

இவற்றில் எவை இன்று தீங்கானவை அல்லது காலத்துக்கு ஒவ்வாதவை என்றும் எவை தவிர்க்கமுடியாதவை என்றும் கண்டடைவது எளிதல்ல. ஞானிகளே அதைச் செய்ய முடியும். அவர்களும் கூட எளிதாக மாற்றங்களை கொண்டுவர முடியாது. அவற்றின் தொன்மையாலேயே அவை ஆழமாக வேரூன்றியவையாக இருக்கும். ஆகவே இம்மதங்களுக்குள் ஒரு தொடர் போராட்டம் நிகழ்ந்தபடி இருக்கவேண்டும். ராமானுஜர் முதல் வள்ளலார் வரை, கபீர் முதல் காந்தி வரை இந்து மதத்திற்குள் அது நிகழ்கிறது.

மறுபக்கம், தீர்க்கதரிசன மதங்கள் ஒப்புநோக்க தர்க்கபூர்வமானவையாகவும் கொஞ்சம் நவீனமானவையாகவும் இருக்கக்கூடும். ஆனால் அவற்றின் மையச்சிக்கல் ‘நாங்கள் சொல்வதே உண்மை. எங்களுடையது மட்டுமே கடவுள். மற்ற நம்பிக்கைகளும் மரபுகளும் எல்லாமே பிழையானவை, பொய்யானவை, அழிக்கப்படவேண்டியவை, அவற்றை நம்புகிறவர்கள் பாவிகள் அல்லது அறிவிலிகள், அவர்களை மீட்டாகவேண்டும்’ என்னும் அவர்களின் உறுதிப்பாடுதான். உலகில் மாபெரும் மதப்போர்களை உருவாக்கியவை தீர்க்கதரிசன மதங்களே. ஆப்ரிக்காவிலும், தென்னமேரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் மொத்த மக்களினங்களையே கொன்றழித்தவை அவை. மத்தியகால ஐரோப்பாவின் மதவிசாரணைகள் (Inquisition) போன்றவை ஹிட்லரின் யூதப்படுகொலைகள், ஸ்டாலினின் சைபீரிய வதைமுகாம்களை விடக் கொடூரமானவை, இந்தியாவிலும் அவை நிகழ்ந்துள்ளன (Goa Inquisition)

இயற்கை மதங்கள் அவற்றிலுள்ள ஆசாரவாதத்துடனும் தீர்க்கதரிசன மதங்கள் அவற்றின் ஒற்றைப்படையான மூர்க்கத்துடனும் போராடி முன்னகர்ந்துகொண்டே இருக்கவேண்டும். இயற்கை மதங்கள் நெகிழ்வானவை, அனைத்தையும் உள்ளடக்குபவை. அப்பண்பு பேணப்படவேண்டும். அவை இறுக்கமான அமைப்பாக ஆகிவிடக்கூடாது. அவ்வாறு ஆகுமென்றால் இயற்கைமதங்கள் பழமையான ஆசாரங்களின் தொகுப்பாக தேங்கிவிடும். தீர்க்கதரிசன மதங்கள் உறுதியான அமைப்பு கொண்டவை. அவை நெகிழ்வுத்தன்மையை அடையவில்லை என்றால் ஆதிக்க அமைப்பாக மாறி ஒடுக்குமுறையை ஆரம்பித்துவிடும். மதங்களுக்குள் ஞானிகள், சீர்திருத்தவாதிகள் தோன்றி இவற்றை நவீனப்படுத்திக்கொண்டும் விரிவாக்கிக்கொண்டும் இருக்கவேண்டும். அதைக்கொண்டே அந்த மதத்தின் மதிப்பு அளவிடப்படவேண்டும்.

இயற்கை மதங்களிலுள்ள தொன்மையான ஆசாரங்களையும் நம்பிக்கைகளையும் மட்டுமே அந்த மதங்களின் ஒட்டுமொத்தம் என எடுத்துக்கொண்டு, அவற்றை காட்டுமிராண்டி மரபுகள் என அடையாளப்படுத்தி அழிப்பது முந்நூறாண்டுகளாக உலகில் நடந்துகொண்டிருக்கிறது. அந்தத் தாக்குதல்களால் பெரும்பாலான தொன்மையான இயற்கைமதங்கள் அழிந்துவிட்டன. அந்த மதங்களில் சேமிக்கப்பட்டிருந்த தொன்மையான பண்பாடுகளின் குறியீடுகளும், படிமங்களும் மறைந்தன. குறியீடுகளாகவும் படிமங்களாகவும் மாற்றப்பட்டிருந்த பண்பாட்டு அறிவும் தத்துவ ஞானமும் அழிந்தன.

இந்து மதம் போன்ற இயற்கை மதத்தில் இரு எல்லைகள் உள்ளன. ஓர் எல்லையில் அது ஒரு தொன்மையான பழங்குடி மதம். பழமையான சடங்குகள், நம்பிக்கைகள், ஆசாரங்கள் கொண்டது. இன்னொரு எல்லையில் அது தூய தத்துவ மதம். ஒரு கிராமதேவதையின் பூசாரியை நாராயண குரு சந்தித்து வணங்கும் காட்சி பதிவாகியிருக்கிறது. ஒரு புகைப்படமும் உண்டு. இரு எல்லைகள். ஒருவர் பழங்குடிப் பண்பாட்டில் இருக்கிறார். இன்னொருவர் தூய வேதாந்தி. இருவருமே இந்துக்கள்தான்.

பழங்குடி மரபிலிருந்து வந்த நம்பிக்கைகளையும் சடங்குகளையும் ஆசாரங்களையும் தொடர்ச்சியாக தத்துவ அறிஞர்களும் ஞானிகளும் எதிர்கொண்டபடியே இருப்பதை இந்து மரபில் காணலாம். ஒருபக்கம் அவர்கள் அந்த நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் சடங்குகளையும் காலத்திற்கு ஏற்ப புதுப்பித்து, காலத்திற்கு ஒவ்வாதனவற்றை களைந்துகொண்டே இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் அவற்றில் சிலவற்றை தத்துவத்திற்கும் மெய்ஞானத்திற்கும் குறியீடுகளாக ஆக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

சங்கரர் முதல் காந்தி வரை, திருமூலர் முதல் வள்ளலார் வரை அத்தனை ஞானிகளும் இந்த இரண்டு பணிகளையும் செய்துகொண்டே இருந்தார்கள். அந்த மரபு அழிவற்று தொடர்வது. இந்து மரபு தன்னைச் சீர்திருத்திக்கொண்டும் தத்துவார்த்தமாக ஆக்கிக்கொண்டும் செயலூக்கத்துடன் திகழ ஞானியரே காரணம். அவர்கள் நிகழாத காலகட்டமே இருந்ததில்லை. இன்னும் அவர்கள் வருவார்கள்.

ஆகவே, ஒருவர் இன்று நம்மிடம் வந்து இந்துமதம் என்பதே சில ஆசாரங்களும் நம்பிக்கைகளும் சடங்குகளும் மட்டுமே என சொல்கிறார் என்றால் அவர் உண்மையில் சங்கரர் முதல் காந்தி வரையிலான நம் ஞானியரை அவமதிக்கிறார். திருமூலர் முதல் வள்ளலார் வரையிலானவர்களைச் சிறுமை செய்கிறார். அதற்கு அவருடைய மறைக்கப்பட்ட மதவெறியோ, அரசியல் உள்நோக்கங்களோ காரணமாக இருக்கலாம். நாம் அச்சொற்களுக்குச் செவிகொடுத்தோம் எனில் நம்மையே கீழ்மைப்படுத்திக் கொள்கிறோம். அதைக்கூட செய்யலாம், நம் முன்னோரையும் ஞானியரையும் நாம் கீழ்மைப்படுத்திக் கொள்வோம் எனில் நம் தலைமுறைகளுக்குப் பெரும் பாவத்தைச் சேர்த்து வைக்கிறோம் என்றே பொருள்.

(மேலும்)

ஜெயமோகன் நூல்கள்

இந்து மெய்மை வாங்க

ஆலயம் எவருடையது? வாங்கஇந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2022 11:35

ஒரு நாளின் முகங்கள்

நேற்று ஒரே நாளில் பல சந்திப்புகள். தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ராமசுப்புயை அவர் அலுவலகத்தில் சந்தித்தேன். தினமலர் இதழில் நான் ஒரு தொடர் எழுதக்கூடும். அவருடைய தாத்தாவும் புகழ்பெற்ற நாணயவியலாளருமான கிருஷ்ணமூர்த்தியை 1996-ல் சந்தித்திருக்கிறேன். கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு உற்சாகமான, வரலாற்றார்வம் கொண்ட இளைஞராக இருந்தார். தினமலரில் பணிபுரிபவரும், பழைய நண்பருமான எழுத்தாளர் ஆர்.வெங்கடேஷை சந்தித்தேன்.

இன்னொரு சந்திப்பு ஐசரி கணேஷ். வேல்ஸ் பல்கலையின் தலைவர், வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின்  தயாரிப்பாளர். நான் எழுதி அவர் தயாரித்த வெந்து தணிந்தத்து காடு வரும் நவம்பர் 9 அன்று ஐம்பதாவது நாளை கொண்டாடவிருக்கிறது. ஐசரி கணேஷ் வீட்டில் அவருடைய உறவினரும் என் தர்மபுரி வாழ்க்கையில் இலக்கிய நண்பராகவும், இலக்கிய வழிகாட்டியாகவும் திகழ்ந்தவருமான ஆர்.சிவக்குமாரைச் சந்தித்தேன்.

[image error] ஐசரி கணேஷ்

ஆர்.சிவக்குமார் முதன்மையாக மொழிபெயர்ப்பாளராகவே அறியப்பட்டார். தர்மபுரி கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். அவருடைய இலக்கிய சகா அன்று தர்மபுரியில் கல்லூரிப்பேராசிரியராக பணியாற்றிய பிரம்மராஜன். மீட்சி இதழிலும் ஆர். சிவக்குமாரின் பங்களிப்பு உண்டு. அவர் அங்கே பணியாற்றுவதைச் சொல்லி என்னை அவரிடம் அறிமுகம் செய்தவர் தர்மபுரிக்கு வந்த கோணங்கி. ‘அழுத்தமான ஆளுடா. ஒண்ணும்தெரியாதவரு மாதிரி இருப்பார்’ என எச்சரித்து கூட்டிச்சென்றார்.

ஆர்.சிவக்குமார் எழுதிய நாவல்  தருநிழல் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.  நான் இனிமேல்தான் படிக்கவேண்டும். சிவக்குமார் தன் கல்லூரி ஆசிரியர் காலகட்டத்து வாழ்க்கையைப் பற்றி ஒரு நாவல் எழுதவிருக்கிறார். 

ஆர் சிவக்குமார்

இரண்டு சந்திப்புகள் தற்செயலானவை. ஒரு பெருந்தொழிலதிபரை நான் தங்கியிருந்த விடுதியின் மின்தூக்கியில் சந்தித்தேன். அவரே அறிமுகம்செய்துகொண்டார். கொஞ்சம் பேசினேன். அவர் பொன்னியின் செல்வன் பற்றி மிகுந்த உற்சாகத்துடன் பேசினார்.

இன்னொரு சந்திப்பு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். நான் எண்ணியதைவிட மிக இளமையாக இருந்தார். அவரைப் பற்றி கொரோனா காலகட்டத்தில் நான் எழுதிய குறிப்பைப் பற்றிச் சொன்னேன். தமிழக பொதுச்சுகாதார அமைப்பின் வெற்றியை பற்றி இன்னமும் எனக்கு பெருமிதம்தான். விஜயபாஸ்கரும் பொன்னியின் செல்வன் பார்த்திருந்தார்.

பொன்னியின் செல்வன் அலை தொடர்கிறது, தீபாவளிப் படங்களுக்குப் பின்னரும். இப்போதுள்ள போக்கின்படி பார்த்தால் நவம்பர் பாதிவரைக்கும்கூட இதே அளவு தீவிரத்துடன் நீடிக்கவே வாய்ப்பு. மணி ரத்னம் பொன்னியின் செல்வன் 2 ஐ முடித்து அதன் காட்சிவிரிவாக்க பணிகளையும் முடித்துவிட்டார். படம் கிட்டத்தட்ட முடிந்து ஏப்ரல் 2023 இறுதிக்காக காத்திருக்கிறது.

மணி ரத்னம் அலுவலகத்திற்கு சென்றேன். அந்த அலுவலகத்திற்கு 2013 பிப்ரவரி பத்தாம்தேதி சென்றதை நினைவுகூர்கிறேன். கடல் தோல்வியடைந்திருந்தது. மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகம் காலியாக இருந்தது. வாசலில் இரு போலீஸ்காரர்கள் காவலிருந்தனர். படத்தை பல கைமாற்றங்களுக்கு பின் வாங்கி இழப்பு அடைந்த ஓர் விநியோகஸ்தர் இழப்பீடை மணி ரத்னம் தரவேண்டும் என பிரச்சினை செய்துகொண்டிருந்த காலகட்டம். அலுவலகத்தில் எவருமே இல்லை. எப்போதுமே இருபதுபேர் வேலைசெய்யும் அலுவலகம் அமைதியாக இருந்தது

[image error]

மாடி ஏற என்னால் முடியவில்லை. ஐம்பது கிலோ எடையை தூக்குவதுபோல் இருந்தது. ஒவ்வொரு படியிலும் நின்று நின்று சென்றேன். படத்தின் தோல்விச்செய்தி வரும்போது மலையாளப்படம் ஒன் பை டூ எழுதுவதற்காக திருவனந்தபுரத்தில் இருந்தேன். அங்கேதான் கடல் பார்த்தேன். இணையவெளியில் காழ்ப்பு கொண்ட கும்பல் நையாண்டி, எக்காளம் என அதை கொண்டாடிக்கொண்டிருந்தனர். அதை என் ‘நண்பரே போன்ற’வர்கள் எனக்கு நகலெடுத்து அனுப்பிக்கொண்டிருந்தனர். அதெல்லாம் என்னை பெரிதாகப் பாதிக்கவில்லை. ஏனென்றால் கடல் தோல்வி என்னை தனிப்பட்ட முறையில் பாதிக்காத நிலை அன்றிருந்தது. நான்கு மலையாளப்படங்களும் வசந்தபாலனின் ஒருபடமும் தொடங்கவிருந்தன. மணி ரத்னத்தைச் சந்திப்பதுதான் எனக்குப் பெருஞ்சுமையாக தோன்றியது.

மணி ரத்னத்தின் அறைக்குள் சென்றேன். தணிந்த குரலில் ‘ஹாய்’ என்றேன். அவர் சிரித்தபடி ‘ஹாய்’ என்று சொல்லி அமரும்படி கைகாட்டினார். கணிப்பொறியை மூடி வைத்தார். ‘வருத்தமா இருக்கு’ என நான் தொடங்கியதும் ‘அது முடிஞ்சுபோன கதை.நான் சினிமாவிலே அது மாதிரி நிறையவே பாத்தாச்சு….பழகியாச்சு. All in the game…இனி நாம அதைப்பத்திப் பேசவே வேண்டாம்’ என்றார். அதே சிரிப்பு. நான் “சரி” என்றேன். அடுத்த படம் பற்றி பேசலானோம்.

கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு

இம்முறை மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகமே விழாக்கோலமாக இருந்தது. மேலே சென்றபோது இறகுபோல் எடையின்மையை உணர்ந்தேன். உள்ளே சென்றதும் ‘இப்பதான் கடல் படம் முடிஞ்சு பாத்ததுபோல இருக்கு…vindicated” என்றேன். சிரித்தபடி “இப்பவும் அதையே சொல்றேன். இதுவும் முடிஞ்ச கதை. பொன்னியின் செல்வனிலே இருந்து வெளியே போவோம். இனி அதைப்பத்தி பேச்சு தேவையில்லை. அடுத்த படம் பத்தி யோசிப்போம்” என்றார். பேசி முடிவுசெய்து கரு, களம், ஒருவரிக் கதைக்கட்டமைப்பு ஆகியவற்றை முடிவுசெய்துவிட்டோம்.இனி மூளை முழுக்க அதுதான்.

கடந்துசெல்லுதல் என்பதே வாழ்தலுக்கான ரகசியம். தோல்விகளை எளிதாகக் கடந்துசெல்வோம். பலசமயம் வெற்றிகளில் தேங்கிவிடுவோம். மாபெரும் வெற்றியிலும் கடந்துசென்றுவிடுவதென்பது செயல்மேல் பெரும் பற்று கொண்டவர்களால் மட்டுமே இயல்வது.

ஆர்.விஜயபாஸ்கர்

இந்த உரையாடல்களில் நாலைந்து முறை எழுந்து வந்த ஒரு கேள்வி, ஏ.ஆர். ரஹ்மானின் இசை சோழர்காலத்துக்கு பொருந்துகிறதா என்பது. நான் ஏற்கனவே அதற்குப் பதில் எழுதியிருக்கிறேன். ‘இப்படத்தின் இசை எப்படி இருக்கவேண்டும்?’ என்று கேட்டபோது பலர் சொன்னது இதுதான், ‘கர்ணன் படத்தின் இசை அல்லது ராஜராஜசோழன் படத்தின் இசைபோல் இருக்கவேண்டும்’. 

ஆனால் அப்படங்கள் வெளிவந்த காலகட்டத்தில் அந்த இசைகள் அப்படங்களுக்கு பொருந்தவில்லை என்றே விமர்சனம் இருந்தது. குறிப்பாக கர்ணன் படத்தில் உள்ள ‘இரவும் நிலவும்’ என்னும் பாடல் மகாபாரத மனநிலைக்கே எதிரானது என்னும் கடும் கண்டனம் எழுந்தது.  அப்பாடலின் காட்சியமைப்பு, ஆடைகள், பேலூர் ஹளபீடு பின்னணி எல்லாமே எள்ளிநகையாடப்பட்டது. படம் அரங்கத்தோல்வி அடையவும் நேரிட்டது. 

அதேதான் ராஜராஜ சோழனுக்கும் நிகழ்ந்தது. அதிலுள்ள நாதனைக் கண்டேனடி பாட்டு கேலிக்குரியதாகியது. சோழத்து இளவரசி அரங்கில் நாட்டியம் ஆடியதும், அவள் அணிந்திருந்த தாசிகளுக்குரிய உடையும் கடுமையாக ஏளனம் செய்யப்பட்டது. அப்படமும் அரங்கத்தோல்வி. அதை அன்று சிறுவர்களாக இருந்து பார்த்தவர்கள், பின்னர் தொலைக்காட்சியில் ரசித்தவர்கள் சிலர் இன்று அதே இசையை இப்படத்தில் கோருகிறார்கள்.

அப்படி அன்று கர்ணன் படத்தைக் கண்டித்தவர்கள் அதன் இசை சம்பூர்ண ராமாயணம் படத்தின் இசை போல் இருந்திருக்கவேண்டும் என்றனர். ஆனால் அந்த இசையே புராண நாடகங்களின் இசை போல் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. அதிலுள்ள சங்கீத சௌபாக்யமே என்னும் பாடல் ஏளனத்துக்கு ஆளாகியது.

காலந்தோறும் இசையில் இரு முனைகள் உள்ளன. மூத்தவர்கள் கடந்தகால ஏக்கத்துடன் இசை கேட்கிறார்கள். எல்லா இசையும் அவர்களின் இளமையில் கேட்ட இசைபோல இசை இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள். இசை அவர்களில் உருவாக்குவது இசையனுபவம் அல்ல, நினைவுகள் கிளரும் ஏக்கம் மட்டுமே. இன்னொரு பக்கம், இளைய தலைமுறை இசையில் புதியது என்ன என்று மட்டுமே பார்க்கிறது. மரபிலுள்ளவற்றை விரும்புவதில்லை. சினிமா இசையமைப்பாளர் இரு எல்லையையும் நிறைவுறச் செய்யவேண்டும். வெற்றிகரமான இசையமைப்பாளர்கள் எல்லாருமே அதைச் செய்தவர்கள். 

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பொன்னியின் செல்வனில் அதைச் சாதித்துள்ளது. பொன்னியின் செல்வன் முதன்மையாக இன்றைய குழந்தைகளுக்கான படம். அவர்களுக்கு நம் மரபிசை, மெல்லிசை இரண்டுமே அன்னியமானவை. ஆனால் உலகளாவிய புதிய ‘பாப்’ இசைமரபுகள் அறிமுகமானவை. ஆகவே பொன்னியின் செல்வனின் இசை புதிய இசைமரபுக்குள், ஆனால் மரபிசை மற்றும் நாட்டார் இசையின் கூறுகளுடன் அமைந்துள்ளது.

அது ‘சரியா?’ என்பதற்கு ஒரே பதில்தான். ‘வெற்றியா?’ என்னும் பதில் வினா. மாபெரும் வெற்றி என்பது கண்கூடு. பொன்னியின் செல்வனை உலகமெங்குமுள்ள சிறுவர், இளைஞர்களிடம் கொண்டுசென்றது ஏ.ஆர்.ரஹ்மானின் இசைதான். அது மாபெரும் வெற்றி என்பதனால்தான் அது சரியா என்ற கேள்வியே எழுகிறது. அது இவர்கள் எண்ணியபடியே பழையமாதிரி அமைந்து, தோல்வியடைந்திருந்தால் ‘ஏன் மக்களைக் கவரவில்லை?’ என்னும் விவாதம் எழுந்திருக்கும்.

ஒரு திரையரங்கில் முழுக்கமுழுக்க சிறுவர்கள் பொன்னியின்செல்வன் பார்க்கும் காட்சியைக் கண்டேன். படம் ஓடும்போதே அவர்கள் தீயரி எசமாரி’ என பாடுகிறார்கள். அந்த தலைமுறைக்கான, அந்த கொண்டாட்டத்துக்கான இசை இது. 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2022 11:34

எம்.ஏ.இளஞ்செல்வன்

[image error]

எம்.ஏ.இளஞ்செல்வன் மலேசியாவின் தமிழ் முகங்களில் ஒன்று. அவருடைய பங்களிப்பை புரிந்துகொள்ள மலேசியாவில் தமிழ் அடையாளம் என்பது ஓரு போராட்டவடிவம் என்றும், அது தங்கிவாழ்தலுக்கான சமர் என்றும் புரிந்துகொள்ளவேண்டும்

ம்.ஏ.இளஞ்செல்வன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். ஏ. இளஞ்செல்வன் – தமிழ் விக்கி

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2022 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.