Jeyamohan's Blog, page 2303

August 10, 2011

திருவிதாங்கூர் வரலாறு பற்றிய குறிப்புகள்

அன்புள்ள ஜெ,


ஷரத் சுந்தர் ராஜீவ் என்று ஒருவர் தொடர்ந்து திருவிதாங்கூர் அரசின் காலகட்டத்தை நேரில் கண்டு ஆராய்ந்து பல விவரங்கள் எழுதிவருகிறார். இவரது ப்ளாக் இங்கே: http://sharatsunderrajeev.blogspot.com/. மிகவும் நல்ல தொகுப்பு என்று தோன்றுகிறது.
-ராம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 10, 2011 11:30

சில்லறை [கன்னடச் சிறுகதை]

மூலம் :விவேக் ஷன்பேக்


தமிழாக்கம்: கனகா


 


[image error]


-1-


இப்போது அவர்களின் பேச்சு புதிய திறந்த பொருளாதாரம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது. வாணிபம் செய்ய இந்தியாவில் நுழைந்திருக்கும் அயல்நாட்டு நிறுவனங்கள், அதன் மூலம் கிடைக்கும் வருமானம், ஆதாயம் குறித்துப் பேசிகொண்டிருந்தவர்களிடையே இனி திறக்கவிருக்கும் புதிய உலகின் அச்சங்கள் படராமல் இல்லை. இதற்கிடையே நுழைந்த சதீஷ், வியப்புடன் உதிர்த்த வார்த்தைகள்-


"நம்பி பெங்களூரூக்கு வர்றான்… இன்னும் ஆறு மாசத்துல இங்க குடும்பத்தோட தங்கிடுவான்"


இன்னும் அவர்கள் கிளப்பில் அமர்ந்து குடித்துக் கொண்டேயிருந்தார்கள். நம்பியினுடைய வருகை அவர்கள் பேச்சின் உயிர்ப்பை இன்னும் கூட்டியிருந்தது. சதீஷுடன், பிரவீண் சுக்லா மற்றும் ஜனார்தன ராவ் இருவரும் இணைந்து கொண்டனர். மூவரும் பன்னாட்டு நிறுவனத்தின் மூத்த மேலாளர் பதவியிலும், நாற்பதின் மத்தியிலும் இருக்கிறார்கள். முன்பொரு காலத்தில் நம்பி இந்த மூவரின் கீழும், பின்பு இந்த மூவருடனும் வேலை பார்த்தவன். கொழுத்த சம்பளத்தில் வேலை கிடைத்தவுடன் துபாய் கிளம்பிய நம்பியைப் பார்க்கையில்…. பொறாமை, ஆசை, கர்வம் என மூவருக்கும் பீறிட்டெழுந்த உணர்வுக் கலவையை,  இந்த உயரம் அவர்களுக்கும் வசப்படும் தூரத்தில் தான் இருக்கிறது என்ற உள்மனஆறுதல் மட்டுமே அமிழ்த்தியிருந்தது.


இந்தியாவில் இருந்திருந்தால் இந்த உயர்வு நம்பிக்கு நிச்சயம் சாத்தியப்பட்டிருக்காது, வெளிநாட்டு வேலைதான் அவன் அசுரவேக வளர்ச்சியின் ரிஷிமூலம் என்பது அவர்களின் எண்ணம்.  இப்போது சதீஷ் விலக்கியிருக்கும் திரையை எப்படி எடுத்துக் கொள்வதென்று தெரியாமல், ஒரு கெட்ட செய்தியாகவே இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மற்ற இருவரும் முன்னிறுத்திய கேள்விகள்… " அவன் ஏன் ஊர் திரும்பறான்" "எதனாலயாவது அவன் கம்பெனி நஷ்டமடைஞ்சிட்டதா….?"  "ஒரு வேளை அவனை வேலையிலிருந்து தூக்கியிருப்பாங்களோ…?''


மற்றுமொரு உறிஞ்சலுடன், சதீஷ் கைகளை வான் நோக்கி உயர்த்திக் காட்டியவாறே தொடர்ந்தான் "திரு. நம்பியார் இப்போது இன்னும் உயர்ந்துவிட்டார்..கிட்டத்தட்டக் கடவுள் அளவுக்கு…. அவன் நிறுவனம் இந்தியால அலுவலகம் திறக்கறாங்க அதுக்கு நம்பிதான் தலைவர். சம்பளம் வெளிநாட்டு டாலர்லன்னு பேச்சு"


"உனக்கு எப்படிடா தெரியும்…" என்று வினவினான் பிரவீண்.


"என் பிரண்டு துபாய் போயிருந்தப்போ நம்பியப் பார்த்திருக்கான். இந்த விஷயத்தை ஒரு நம்பகமான இடத்துல இருந்து கேட்டிருக்கான்… பூசாரிக்குப் பகவானே சொன்ன மாதிரி"


நம்பியின் இந்த வெற்றிக்குப் பின் தன் பயிற்சிதான் காரணம் என்று பறைசாற்றிக் கொள்ள விரும்பிய பிரவீன் பேச்சை இடைமறித்தான் ''நம்பவே முடியல நம்பியா இது….? அவன் ரொம்ப ரகசியமான ஆள் ஆச்சே… ஆறு மாசத்துக்கு அப்பறம் வரபோறத இவ்ளோ சீக்கிரம் சொல்லிட்டானே"


சதீஷ் தன் நண்பன் துபாயில் இருக்கும் நம்பியின் வீட்டிற்குச் சென்றபோது அந்த வீடு எத்தனை பிரம்மாண்டமாகவும் நவீனமாகவும் இருந்தது என்று உற்சாகத்துடன் சொன்னான். அவன் சென்ற அதே நாள் நம்பி சீனாவில் இருந்து வரவழைத்த இரண்டு பறவைப் படங்கள் ஒவ்வொன்றும் லட்சம் மதிப்பாம்.


'நீ அதே நம்பியாரைப் பத்திதான் சொல்றீயா…?' இன்னும் வியப்பு மறையாமல், மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்டான் பிரவீண். நம்பிக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பையும் அந்த வெற்றிக்குக் காரணமான அவனுடைய ஆற்றல்களையும் பற்றி சிரிப்பும், பேச்சுமாய் மூவரும் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தார்கள்.



-2-


திருவனந்தபுரத்தின் அருகிலிருக்கும் ஒரு சிறு நகரத்தைச் சேர்ந்தவன் நம்பி . நடுத்தரக் குடும்பத்தின் ஒரே மகன். சிறுநிறுவனம் ஒன்றில் சேரும் முன் பள்ளி, கல்லூரிப் படிப்பைத் திருவனந்தபுரத்திலும், முதுநிலைப் படிப்பை பம்பாயிலும் முடித்திருந்தான். பெங்களூரில் இருக்கும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியமர இரண்டாண்டுக்கால அனுபவம் அவனுக்கு உதவியது. பணிமாற்றத்திற்கிடையே திருமணமும் அரங்கேறியது. வெகு நேர்த்தியாய், அவன் துறையின் வணிக ரகசியங்களைக் காப்பாற்றிய விதம், அவன் நேர்மையை அழகாய்ப் பிரதிபலித்ததோடு வெகு குறுகிய காலத்தில் நற்பெயரையும் பெற்றுத் தந்திருந்தது. தலைமை அதிகாரியின் தனிப்பட்ட அன்பு நம்பிக்குத்தான். பிரவீன் சுக்லா, துறையில் மற்ற யாரிடமும் இல்லாத அளவில், தனிப்பட்ட முறையிலேயே நம்பியை நடத்தினான். நம்பியின் வருகை, பிரவீணின் வேலையை மேலும் மிருதுவாக்கியிருந்தது. வெகு விரைவில் நம்பி, நிறுவனத்தின் ஏணியாகவே ஆகிவிட்டிருந்தான். எப்போது நேரம் தாழ்ந்து வேலை செய்வதும் வீட்டிற்க்கு உறங்க மட்டுமே செல்வதும் அவன் வழக்கமாகிவிட்டிருந்தது. அவன் மனைவி வரிணி, இவை அனைத்தையும் உதறிவிட்டிருந்தாள். அவனோடு பணிபுரிபவர்களின் மனைவிகளை விருந்துகளில் சந்திக்கும் போதும் கூட் எந்தப் புகார்களும் வரிணியிடம் இருந்ததேஇல்லை. பார்க்கிறவர்களைப் பொறாமைக்குள்ளாக்குகிற திருமண தம்பதிகளாய் இருந்தனர் நம்பி தம்பிகள்.


இப்போது பிரவீணால், நம்பி ஏதோ ஒரு விஷயத்தை அடைகாத்துத் திரிவதை உணரமுடிந்தது. இரண்டு மாதங்களாகவே, நம்பியின் எண்ணம் சிதறியிருப்பதைப் பார்க்க முடிந்தது. அவன் வேலையில் எந்தக் குறையையும் கண்டுபிடிக்க இயலாத போதும் அவன் மனம் வேறு எதிலோ புதைந்திருப்பது பிரவீணுக்குத் தெரிந்தேயிருந்தது. அதனால் ஒரு சனிக்கிழமை மதியம், பிரவீண் நம்பியை உணவுக்கு அழைத்துச் சென்றான். பீரோடு சேர்ந்து உணர்ச்சிகளும் பொங்கின.


" நம்பி… உன்னஏதோ ஒண்ணு தொந்தரவு செய்றது எனக்குத் தெரியுது…. எங்கிட்ட என்ன தயக்கம் என்னன்னு சொன்னா என்னால உதவ முடியுமான்னு பார்பேன்." நம்பி யாரிடமும் அவன் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசுவதேயில்லை. பேசுவதற்கும் அவனுக்கு யாரும் பெங்களூரில் நண்பர்கள் என்று இருந்ததில்லை. பிரவீன் தன்னிடம் இருக்கும் மாற்றத்தை உணர்ந்துவிட்டான் என்ற விழிப்பால் நம்பியின் சோகம் வார்த்தைகளாய்த் தெறித்துவந்தது.


"பணம் தான் என்னுடைய பிரச்சனை பிரவீண்"


"உன்னால கட்ட முடியாம போன கடனா…? உன்னப் பத்தி எனக்குத் தெரிஞ்சளவுல பெரிய கடனல்ல மாட்டிக்கிறவன் நீ இல்லை. உன் அப்பாம்மாவும் உன் பணத்த நம்பி இல்ல. எல்லாமே தலகீழா இருக்கு சொல்லு நம்பி உனக்கு என்ன பிரச்சனை" பிரவீணின் கேள்விகளில் இறுக்கம் கூடிக்கொண்டே போனது.


"அது அப்படியில்ல… பணம் கஷ்டம்ன்னும் எதுவும் இல்லை. என் கணக்கு எங்கேயோ இடிக்குது. அது எல்லா விஷயத்தையும் கோணல்மாணலா ஆக்குது. ம்ம்ம்ம்….. அத நான் விளக்கமா சொல்ல ரொம்ப நேரம் வேணும். இதத் தீக்க யாராலேயும் உதவ முடியாது" என்று உதவியற்றவனாய்ப் பார்த்தான் நம்பி.


"எவ்வளோ பணம்?"


"பன்னிரண்டு ரூபாய்."


பிரவீண் பின்வாங்கினான். அவனுக்கு என்ன சொல்வது என்றும் தெரியவில்லை. மெளனமாக பீரை மட்டும் மெல்ல உறிஞ்சினான். அவனால் நம்பியை அளக்கவே முடியவில்லை, எப்படி ஒரு மனிதன் ஐந்து இலக்க சம்பளம் வாங்கிக் கொண்டு இரண்டு மாதங்களாக வெறும் பன்னிரண்டு ரூபாய்க்காய் இவ்வளவு மனமுடைந்து போக முடியும்?? இந்தக் கஞ்சத்தனம், நம்பியின் புதிய பரிமாணமாகப் பிரதிபலித்தது. ஒரு வேளை இப்பொது அவன் தொண்டையை நனைத்துக் கொண்டிருக்கும் பீரின் ஒவ்வொரு துளிக்கான விலையையும் கணக்குப் போட்டுகொண்டிருக்க கூடும் என்று கூடத் தோன்றியது பிரவீனுக்கு. ஆனால் எத்தனை முயன்றும், நம்பி அளவுக்கு அதிகமாய்ச் சிக்கனமாக இருந்த எந்த ஒரு நிகழ்ச்சியையும் நினைவு கூரவே முடியவில்லை அவனால்.


இன்னும் பிரவீணின் எண்ணம் விரிந்து கொண்டேயிருந்தது. "எதுவானலும் சரி, கஞ்சத்தனத்திற்கும் ஒரு அளவு உண்டு… ஏன் இந்தத் துக்கினியூண்டுப் பணம் உன்னை இவ்ளோ தொந்தரவு பண்ணுது? நீ இவ்வளவு தூரம் போகும் போது உன் மனைவியாவது உனக்கு எடுத்துச் சொல்லக் கூடாதா..?"நம்பிக்கு அவன் நிலையை விளக்க முழு அரை மணிநேரம் தேவையாயிருந்தது. "பிரவீண்… அது வெறும் பன்னிரண்டு ரூபாய் இல்லை."


நம்பியின் குடும்பத்திற்குச் செலவுகளைக் கணக்கில்  வைக்கும் பழக்கம் உண்டு. இது அவன் அப்பாவின் அப்பாவிடமிருந்து வந்தது. குடும்பம் செலவிடும் ஒவ்வொறு அணாவும் கணக்கில் வைக்கப்படும். அந்த நாளின் இறுதியில் மீதமிருக்கும் பணத்தை மிக எச்சரிக்கையாகக் கணக்கில் கொள்வார்கள். கணக்கின் இறுதியில் எந்த வித வித்தியாசமும் வரவே கூடாது. இந்த உன்னிப்பான கணக்குப் பார்க்கும் முறை மூன்று தலைமுறைகளாய்ப் பழக்கத்தில் இருக்கிறது. வடக்கில் இருந்த ஒரு பிரிட்டிஷ் அதிகாரியிடமிருந்து இந்தப் பழக்கத்தை நம்பியின் தாத்தா எடுத்துக் கொண்டார். நம்பி கல்லூரி செல்லத் துவங்கிய நாள் முதல், அவன் செலவுக்குக் கொடுத்த பணத்தோடு சேர்த்து ஒரு கணக்குப் புத்தகத்தையும் கொடுத்தார் அவன் அப்பா. அந்தப் புத்தகமும் அவன் கல்லூரி முடிக்கும் வரை சரியாகவே வந்திருக்கிறது.


நம்பிக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, அவன் தந்தை தினமும் இரவு அமர்ந்து,  குடும்பச்செலவுகளைக் கணக்கில் எழுதுவதை நினைவில் திரட்ட முடிகிறது. அவன் தந்தை எப்படிப் புத்தகத்தைத் திறப்பார், செலவாகாத பணத்தை, ரூபாய் நோட்டுகளாகவும், நாணயங்களாகவும் பிறகு நாணயங்களை எண்ணுவதற்கு லாகவமாய்க் குவித்து வைப்பதையும் கூட நினைவில் மீட்க முடிகிறது. அவர் பெரிய தாள்கள் நிறைந்த நோட்டுப் புத்தகத்தை உருவாக்குவதும் அதில் அளவுகோல் கொண்டு கோடு வரைவதும், பின்பு நடுப்பக்கத்தை மடித்து அதைத்தடிமனான நூலில் தைத்து,அடர்த்தியான அட்டையை மடித்த காகித அளவிற்குக் கத்தரித்து இணைப்பது வரை அனைத்தும் நினைவில் உண்டு. ஒவ்வொறு புத்தகமும் ஆறு மாதத்திற்க்குப் போதுமானதாய் இருக்கும். இப்போது நம்பி உபயோகிக்கும் ஒரு புத்தகம் கூட அவன் அப்பா கொடுத்தது தான். பலவருடங்களாய்த் தொகுக்கபட்ட குடும்பக் கணக்குகள்,  அவன் மூதாதையர் வீட்டின் உப்பரிகையில் குவிந்து கிடக்கிறது.


அவர்கள் செலவு செய்த ஒவ்வொரு பைசாவும், கணக்கில் இடம்பிடித்தாலும், நம்பியின் தந்தையோ அல்லது தாத்தாவோ கஞ்சர்களாக இருந்ததில்லை.  "அதிகம் செலவழிப்பது ஒரு விஷயமே அல்ல. …அந்தக் கணங்கள் கழிந்த பிறகு இந்தப் புத்தகம் சொல்லும், நாம் நம் எல்லையில் இருந்தோமோ, சரியகத்தான் செலவு செய்தோமா என்று'. நம்பியின் தாத்தா ஒரு முறை அவர் மகனிடம் கூறியது பின்னால் நம்பிக்கும் வந்து சேர்ந்தது. அவர் தாத்தா உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் செலவுகளைக் கணக்கு வைக்கச் சொல்லி ஊக்க்குவிப்பார். சிலர் இதை ஊக்கத்துடன் துவங்கினாலும் அதன் பதற்றத்தைத் தாங்கமுடியாமலும் இடையிலேயே பலரும் கைவிட்டுவிடுவார்கள். ஒவ்வொரு நாளும் கணக்கைத் தவறவிடுவதும், சிறிய சிறிய பணத்தைக் கணக்கில் வைக்க மறப்பதும் பின்னாளில் ஒரு பிரமாண்டமான தொகையை வித்தியாசப்படுத்திக் காட்டும். ஒரு சிலர் செலவுகளை எழுதினார்களே தவிர சரியாக மீதத் தொகையைக் கணக்குப் பார்க்கவில்லை இன்னும் சிலர் இரண்டு ரூபாய்க்கு மேற்பட்ட செலவுகளுக்கு மட்டும் கணக்கு எழுதினார்கள். இவர்களைப் பெரும்பாலானவர்கள் கேலியும் செய்தார்கள்.  பின்னாளில் இவர்கள் குடும்பத்திற்குச் "சித்திரகுப்தர் குடும்பம்" என்ற பட்டப்பெயரும் கிடைத்தது.


யார் எதைச் சொன்னாலும் நம்பியார் குடும்பம், இன்று கணக்கில் வர மறுக்கும் அந்தப் பன்னிரண்டு ரூபாய் உட்பட அனைத்துக் குடும்பச் செலவுகளைக் கச்சிதமாகக் கணக்கு வைத்திருந்தார்கள். நம்பி எல்லாச் செலவுகளையும் எல்லா நாளும் எழுதி வந்தாலும் கொஞ்சம் நாகரீகமாக இருந்ததால் ஒரு வாரத்திற்கு ஒரு முறை கணக்குப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.  இந்தப் பழக்கம் தான் இப்போது கணக்கில் வராமல் போன பன்னிரண்டு ரூபாய்க்குக் காரணமாக இருக்கும் என்றும் நினைத்தான். வரிணி அவன் மாமன் மகள். அவளுக்கும் இந்த விநோதப் பழக்கம் பற்றித் தெரிந்திருந்தது. அவள் வீட்டிலேயே கூட இந்தப் பழக்கத்தை சில காலம் செய்து வந்து பின்பு உதறிவிட்டிருந்தார்கள். திருமணமான நாள் முதல் இதை சரியான விதத்தில் எடுத்து கொண்ட வரிணி, தன்னைத் தகுதியான மருமகளாய் நிரூபித்துக் கொண்டாள். இப்போது இடிபடும் இந்தக் கணக்கு அவளையும் கஷ்டப்படுத்தியிருந்தது. காலம்காலமாய் இருந்து வந்த பழக்கம் இந்தச் சின்ன வித்யாசத்தில் தவறிப்போனதில் அவளுக்கும் மனவருத்தம்.


நம்பி அடிக்கடி "ரூனானுபந்தா" என்னும் "சந்தாமாமா"வில் படித்த கதையை நினைவுகூர்வதுண்டு. ஒரு தம்பதியருக்கு  இரண்டு குழந்தைகள். இரண்டுமே நீண்ட காலம் வாழாமல் போனதைக் குறித்த கதை.  ஒரு நாள்  புதிதாகப் பிறந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஒரு துறவியிடம் சென்றனர். "ஒவ்வொரு படைப்பும் ஏதோ ஒரு வேண்டுகோளுடனேயே வருகிறது. அது நிறைவு பெற்றதும் இந்த உலகத்தை விட்டுச் செல்கிறது. உங்கள் குழந்தைக்கு சிறிய வேண்டுகோள் இருந்திருக்கக் கூடும் அதனால் நீண்ட காலம் வாழாமலும் போயிருக்கும். இப்போது இந்தக் குழந்தைக்கு ஒரு பாத்திரம் நிறைய எண்ணெயைப் பெற்றோரிடம் கொடுக்க வேண்டும் என்பது வேண்டுகோள். இந்த எண்ணெய்ப் பாத்திரத்தைக் குழந்தையிடம் இருந்து பெற்றோர் வாங்காத வரை இந்தக் குழந்தை உயிரோடு இருக்கும்." என்றார் துறவி. அந்த தம்பதியர் அந்தக் குழந்தையை மிகுந்த அக்கறையுடனும் எச்சரிக்கையுடனும் வளர்த்தனர். அவன் 18 வயதை நெருங்கும்  இடைவெளியில்,  ஒரு மதியம், அடுப்படியில் வேலையாய் இருந்த அவன் தாயிடம் " அம்மா இதை எடுத்துக் கொள்" என்று கூறி அவளுக்குப் பின்னால் ஒரு பாத்திரம் நிறைய எண்ணெயை வைத்தான். இதைக் கவனிக்காத தாய், "அந்தப் பக்கம் வைத்து விடு, பிறகு எடுத்துக் கொள்கிறேன்" என்று கூறினாள். சிறிது நேரம் கழித்து இந்தப் பாத்திரம் இங்கு எப்படி வந்தது என்ற வியப்பில் அதை அள்ளி எடுத்தாள். அவள் மகன் மரணமடைந்தான்.


எப்போதெல்லாம் இந்தக் கதை நினைவில் வருகிறதோ அப்போதெல்லாம் எங்கோ யாரோ ஒரு கணக்குப் புத்தகத்தில் உலகத்தில் நடக்கும் எல்லா பரிவர்த்தனைகளையும் கணக்கு வைத்துள்ளார் என்பது அவன் மனதில் மின்னிப்போகும். இந்தக் கதை எந்தவிதமான முக்கியத்துவமும் இல்லாதது என்றும் இந்தக் கணக்கு வைக்கும் பழக்கத்தால்தான் அது அடிக்கடி நினைவுக்கு வந்துகொண்டிருக்கிறது என்றும் தெரிந்தும் நம்பி சற்று தவிப்புடன் பிரவீணிடம் இந்தக் கதையைச் சொன்னான்.



 


-3-


அனைத்து வார்த்தைகளையும் இழந்து, வெறும் பொறுமையுடன் மட்டுமே அமர்ந்திருந்த பிரவீணுக்குத் தோன்றியது இதுதான். இது முட்டாள்தனங்களின் உச்சம்.


"இங்க பாரு நான் உனக்குப் பன்னிரெண்டு ரூபா தரேன். உன் கணக்க சரி பண்ணிக்க.''


"அது எப்படி முடியும்? அதையும் நான் கணக்குப் புத்தகத்துல எழுதணும் எப்படிக் கணக்கு சரியாகும். இது வேலைக்காகாது"


இப்போது பொறுமை இழந்தவனாய், மீண்டும் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு. " நாளைக்கு உன் வீட்டுக்கு வரேன் உன் பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறேன். "


நம்பியின் கிறுக்குக்கு ஒரு நல்ல சிகிச்சையை யோசித்துக்கொண்டு அடுத்த நாள், நம்பியின் வீட்டிற்குச் சென்றான் பிரவீண்.  கணவனுக்கும் மனைவிக்கும் பேசுவதற்கான வாய்ப்பைக் கடுகளவும் கொடுக்காமல், அவர்களை அமரச் செய்து உரக்கக் கத்தினான்.


"முதல்ல இது போலக் கணக்கு வைக்கிறத நிறுத்துங்க… இதுக்கும் மூட நம்பிக்கைக்கும் எந்த வித்யாசமும் இல்லை. ஏதோவொரு காலத்துல, கொஞ்சமும் கவலையும் உசிதமும் இல்லாம உங்க தாத்தா பழக்கிய பழக்கத்துனால, இரண்டு மாசமா பன்னிரண்டு ரூபாய்க்காக கவலைப் படுறது கொஞ்சமும் நியாயம் இல்லை. போதாத குறைக்கு, சின்ன பிள்ளைய இருக்கையில் படிச்ச கதையால பெருசா ஞானம் வந்துட்டதா நினைக்குற… இதனால உன்னோடு அறிவிலும், முடிவெடுக்கற தன்மையிலும் சுதந்திரமே இருக்கலைன்னு தெரியுது. நம்பி… நீ இந்த நடுத்தரக் குடும்ப வாழ்க்கையின்ற ஓட்டை ஒடச்சுக்கிட்டு வெளிய வரணும்.இது போல அற்பக் காரணங்களுக்காக வருத்தப் படக்கூடாது. நீ வீட்டிலயும் வெளியலயும் வெவ்வேறு மனிதனா இருக்க முடியாதுங்கிறத இந்த நிமிஷத்துல உணரணும். இப்ப உன் வேலையில தெரியிற ஒவ்வொரு வளர்ச்சியும் நீ வருங்காலத்திலே ஒரு நிறுவனத்துக்குத் தலைவரா வருவேன்னு சொல்லுது. இப்போ ஒரே மனசோட உன் இலக்கை மட்டுமே நோக்கிப் போ."


நம்பிக்கு , பிரவீண் போதித்தான். மிரட்டினான், வார்த்தைகளால் வசீகரிக்கவும் செய்தான். நம்பியிடம் எந்த வார்த்தைகளும் இல்லை. நம்பியின் நாவு அடங்கியிருந்தற்கு அவன் பிரவீணுக்குக் கீழ் வேலை செய்வதும், அவனுடைய போதனை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதும் மட்டும் காரணமாக இருக்க முடியாது. பிரவீண் பேசப்பேச அவர்கள் முகத்தின் உணர்வுகளை மிகுந்த எச்சரிக்கையோடு உள்வாங்கிக் கொண்டிருந்தான். குறிப்பாக வரிணி அவன் கூறிய அனைத்திற்கும் ஒத்துப் போவது போல் கூடத் தோன்றியது.  இரண்டு மணி நேர அறிவுரைக்குப் பிறகு பிரவீண் மேலும் தொடர்ந்தான். " நீ கணக்கு எழுதுவதை நிறுத்துவேன்னு சத்தியம் செய்"


இந்த நிலைக்கு வரும் என்று அறியாதவனாய்த் திடுக்கென்று விழித்தான் நம்பி. பிரவீணிடம் அவன் சொல்ல வந்த அனைத்து வார்த்தைகளும் தீர்ந்துவிட்டிருந்தது. " உன்ன இரண்டு நாளுக்கு அப்பறம் சந்திக்கிறேன்… என்ன முடிவு பண்ணியிருக்க சொல்லு" என்று கூறி மீண்டும் ஒரு முறை, வரிணியின் கண்களை நினைவில் இருந்து உருவினான்… ஒவ்வொரு முறை பிரவீண் நம்பியின் வளர்ச்சியைப் பற்றிச் சொல்லும் போதும் அந்தக் கண்கள் சுடர்ந்ததை உணர்ந்தவனாய்… அவள் அவனின் எண்ணத்தை மாற்றக்கூடும் என்று நம்பினான்.


பின்பு இதைப் பற்றி அலுவலகத்தில் கூட நம்பியிடம் எதையும் பேசவில்லை பிரவீண். சொன்னதைப் போல இரண்டு நாட்கள் கழித்து, மாலையில் நம்பியின் வீட்டுக்குச் சென்றான். பிரவீண் வீட்டினுள் நுழையும் முன்னமே, நம்பியின் நீண்ட நாள் கணக்கு எழுதும் பழக்கத்திற்குப் பிரியாவிடை கொடுத்ததற்கான அறிவிப்பு அவனை எட்டியிருந்தது. இது இத்தனை விரைவில் நடந்ததை பிரவீண் சற்றும் எதிர்பார்க்காமல் உறைந்து நின்றான். அடுத்த ஆயுதத் தாக்குதலுக்கு அவன் தயார் செய்திருந்த வெடிப்பொருள்கள் அனைத்தும் வீணாகிப்போனது. "பன்னிரண்டு ரூபாய் என்னாச்சு"என்று கேலியாய்க் கேட்க "எந்தப் பன்னிரண்டு ரூபாய் ஞாபகம் இல்லையே" என்று நம்பி சொன்னதும். தான் ஒரு சிறப்பான அறிவுரையை வழங்கியிருப்பதாய்ப் பெருமையில் சிலிர்த்துப் போனான் பிரவீண்.


[image error]


-4-


பிரவீண் சென்றுவிட்ட சிறிது நேரத்திற்கெல்லாம், நம்பியும் வரிணியும் உறங்கச் சென்றனர், இத்தனை காலம் பழகிப் போயிருந்த கணக்குகளைப் பார்க்காமலேயே. வரிணி அவனை உற்றுப் பார்த்தாள் "நான் அதை எல்லாம் கட்டி ஒரு பெட்டியில போட்டிடறேன்" என்றான் அவன். திருமணமான வருடத்திலிருந்து அவன் எழுதி வந்த கணக்குகள் அவை.


லால்பாக் செல்ல ஆட்டோவிற்குக் கொடுத்த பணம், தின்பண்டமும் பாப்கார்னும் வாங்கியது என அனைத்தும் அந்தப் புத்தகத்தில் உண்டு. உண்மையில் எப்படியோ அவர்கள் திரும்ப வந்த போது கொடுத்த ஆட்டோ கட்டணம் கணக்கில் இருந்து தவறிப்போயிருந்தது. அந்தக் கட்டணத்தை அவள் தான் கொடுத்தாள், நிச்சயம் அவள் கணக்குப் புத்தகத்தில் இருக்க வேண்டும். அவன் பக்கங்களைப் புரட்ட, சட்டை, ஜட்டி, பிரா என அனைத்துக் கணக்குகளும் புரண்டன. அவர்கள் கருத்தடை மருந்து வாங்கியதை "ஹெல்மட்" என்று குறிப்பால் எழுதியிருந்ததும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. பக்கங்கள் புரளப்புரள மிகவும் தளர்ந்து போனான் நம்பி. புகைபிடிப்பதற்கும் புகையிலைக்கு அடிமையாய் இருப்பதற்கும் இந்தப் பழக்கத்திற்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இருக்கவில்லை. ஒவ்வொரு நாள் கணக்குப் பார்க்கும் நேரத்திலும் நம்பி உற்சாகம் ஆகிப் போனான். ஒவ்வொரு முறை கணக்கை முடிக்கிற போதும் ஒரு விநோதமான நிறைவு அவனை நிரப்பியிருக்கும். யோசித்துப் பார்க்கையில் இந்தப் பழக்கம் தான் அவன் வெற்றிக்கு இத்தனை நாளும் உடன் வந்திருக்கிறது.  மாணவப் பருவத்தில பல நாட்கள் தேநீரைத் தவிர்த்து எச்சரிக்கையோடு இருக்க உதவிய கணக்கு. சினிமாவுக்கு அதிகம் செலவு செய்யாமல் குறிப்பாகப் பரீட்சை நெருங்குகிற நேரத்தில், விழிப்புடன் செயல்பட வைத்த கணக்கு. வாரம் ஒரு முறை வீட்டிற்குக் கடிதம் மூலம் பேசும் போதெல்லாம், "இந்த வாரக் கணக்கு சரியா இருந்தது" என்று எழுத வைத்த கணக்கு. இன்னும் அவன் நினைவுகள், ஏராளமானவைகளை அவனுக்குத் தந்து கொண்டேயிருந்தது.


பல்வேறு நிலையில் தேர்வில் வெற்றி பெற்றது, பெற்றோரின் ஆசைகளை அவன் நிறைவேற்றிய கணம், அவன் தொழில் முறையில் வளர சந்தித்த சவால்கள், தாண்டிய தடைகள், என அனைத்திலும் இந்தக் கணக்குப் புத்தகம் உணர்வு பூர்வமாய்ப் பங்கேற்றிருந்ததை அவனால் உணரமுடிந்தது. இவன் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பிரவீண் கூறிய வார்த்தகள் நம்பியைத் தொந்தரவுக்குள்ளாக்காமல் இல்லை. இப்போது அந்த வார்த்தைகள் அவன் மனைதை முழுவதுமாக நிரப்பிவிட்டிருந்தன.  இனி ஒருபோதும் அவன் கணக்கு எழுதத் தேவையேயில்லை என்ற அந்த நிமிடத்தின் எண்ணம், அவனுள் அடங்காத ஒரு சுதந்திரத்தை ஏற்படுத்தியிருந்தது. பீர் புட்டிகள், முந்திரிக் கொட்டைகள், செருப்பு என இன்று அவன் வாங்கிய அனைத்தும் நினைவில் வந்தது. அந்த அனைத்துப் பொருட்களின் விலையையையும்  குறித்துக் கொள்ளும் மனோபாவத்தால் இன்னும் அவன் மனம் நிரம்பியிருந்தது. இனி எந்தக் கணக்குகளையும் வரவு வைக்கவோ குற்ற உணர்வோடு இருக்கவோ தேவையில்லைதான். யாரிடமும் இந்தக் கணக்கை சமர்ப்பிக்கவேண்டியதும் இல்லை தான். இந்தஎண்ணம், அவனைப் பாவத்திற்கும் நல்லொழுக்கத்திற்கும் இடையே ஒரு விதமாய் உணரச் செய்திருந்தது. இப்போது மிக மென்மையாகவும், அந்த மென்மையோடு கூடிய வலியையும் அவனால் உணர முடிந்தது.


இந்தக் குமிழை எப்படி உடைப்பது? வழக்கம்போலப் புது வருடத்திற்காகச் சில நாட்கள் தன்னோடு தங்க வரும் பெற்றோர்களிடம் இந்தப் பழக்கத்தைத் துறந்து விட்டேன் என்று எப்படிச் சொல்வது என்று அமர்ந்து ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்தான். இது அவர்களுக்கு இயல்பை மீறிய கோபத்தைக் கொடுக்கலாம், அளவிட முடியாத வலியைக் கூடக் கொடுக்கலாம். அதே நேரம் இந்தக் குற்ற உணர்ச்சியைத் தாண்டி விட்டால் மீண்டுவிடலாம் என்பதை உணர்ந்தேயிருந்தான். பெற்றோர் வந்ததும் இதைச் சொல்லிவிடுவதற்காகக் காத்திருப்பதா வேண்டாமா என்று தனக்குள் முட்டிக்கொண்டபின் நேரடியாக அவர்களுக்கு எழுதியேவிடலாமென முடிவெடுத்தான்.


[கன்னடமூலம் சஸேஷா. ஆங்கில மொழியாக்கம் சரத் அனந்தமூர்த்தி. தமிழாக்கம் கனகா]


[மொழிபெயர்ப்பாளர் கனகலட்சுமி பட்டிமன்றப்பேச்சாளர். எழுத்தாளர்.  கோவையில் வசிக்கிறார். கால்செண்டர் ஊழியர்களின் வாழ்க்கையைப்பின்னணியாகக் கொண்டு ' இருள் தின்னும் இரவுகள்' என்ற நாவலை எழுதியிருக்கிறார்]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 10, 2011 11:30

என் சரித்திரம் இணையத்தில்

அன்பின் ஜெமோ,


யதேச்சையாக கீழ்க்கண்ட இணைப்பில் என் சரித்திரம்- உ.வே.சா PDF வடிவில் பார்த்தேன்.
http://www.mediafire.com/?ejtzqzmotzd
நண்பர்களுக்கு உதவும்.

அன்புடன்

 Tyagarajan.J.K

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 10, 2011 07:23

August 9, 2011

தன் வரலாற்று நாவல்கள்

அன்புள்ள நவீன்


ஓர் ஆசிரியர் அதை புனைகதை என்று சொல்லிக் கொண்டாரென்றால் அதை பிறகு தன்வரலாறாகக் கொள்ளக்கூடாது. தன் வரலாற்று அம்சம் பெரும்பாலும் எல்லா புனைகதைகளிலும் இருக்கும். சில கதைகளில் அதிகம். அவற்றை தன்வரலாற்று நாவல் என்கிறோம்.


உதாரணமாக 'குழந்தைகள் ஆண்கள் பெண்கள்' [சுந்தர ராமசாமி] தன் வரலாற்று அம்சம் உள்ள நாவல். ஆனால் 'சிலுவைராஜ் சரித்திரம்' [ராஜ் கௌதமன்] தன்வரலாற்று நாவல்.


சில தன்வரலாற்று நாவல்களை பட்டியலிடுகிறேன்.


1. சுதந்திரதாகம் – சி.சு.செல்லப்பா


2. காதுகள் -எம்.வி.வெங்கட்ராம்


3. தேரோடும் வீதி- நீலபத்மநாபன்


4.உறவுகள் -நீல பத்மநாபன்


5 சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ்கௌதமன்


6. கருக்கு -பாமா


7. புதியதோர் உலகம்- கோவிந்தன்.


8. நிலாக்கள்தூர தூரமாய் – பாரததேவி


9. நிறங்களின் உலகம்- தேனி சீருடையான்


10. உண்மைகலந்த நாட்குறிப்புகள் -அ.முத்துலிங்கம்


ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 09, 2011 11:30

அழகிய அசடுகள்

சமீபத்தில் நான் எழுதும் இரு படங்களுக்காக நடிக்க விழையும் புதுமுகங்களின் ஒளிக்காட்சித் துண்டுகளைப் பதிவுசெய்துவந்து எனக்குக் காட்டினார்கள் இயக்குநர்கள். நடிகைகளில் பெரும்பாலும் எல்லாருமே அழகிகள். ஆனால் எல்லாருமே ஒரே மாதிரி ஒப்பனைசெய்து, ஒரேபோல நின்று, ஒரேபோலக் கையசைத்து, ஒரேபோல முகம் திருப்பி முடிதள்ளி சிரித்து, ஒரேபோன்ற உச்சரிப்பில் பேசினார்கள். ஆச்சரியமென்னவென்றால் உளறல்கள் மட்டும் வேறுவேறு.


படமெடுக்கும் உதவி இயக்குநர் 'உங்க பேரென்னம்மா?' என்று கேட்க வசீகரமாக நாணி, முடியைத் தள்ளிக் கண்களை சுழற்றி யோசித்து, புருவம் தூக்கிப் பிரியமாக ஆச்சரியப்பட்டு, 'வெல்…ஆக்சுவலி மை நேம் இஸ் ஸாத்னா' என்றார்கள். 'எந்தூரும்மா?' அதற்கும் அதேபோன்ற பாவனைகளுடன் 'வெல்..யூ நோ…ஆக்சுவலி…அட் த எண்ட் ஆஃப்த டே..'


இதையெல்லாம் சில நிறுவனங்கள் கடும் கட்டணம் வாங்கிக் கற்றுக்கொடுக்கின்றன. நிறையப் பயிற்சிகள் உண்டாம். பயிற்சி வழியாக மூளையைக் காலிசெய்கிறார்களா இல்லை காலிசெய்வதற்காகத் தனிப் பயிற்சி உண்டா தெரியவில்லை. யாரைத் தேர்வு செய்யலாமென்று மண்டை குழம்புவது இதனால்தான். அவர்களுக்கு நடுவே வேறுபாடே இல்லை.


நண்பர் இந்த இணைப்பை அனுப்பியிருந்தார். தமாஷாக இருந்தது. என்ன மேதாவித்தனமான கருத்துக்கள். நம் பிளாக்கர்கள், டிவிட்டர்கள், பஸ்ஸர்கள்கூட இன்னும் பரவாயில்லை போல.









www.youtube.com/watch?v=9QBv2CFTSWU

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 09, 2011 11:30

யானை டாக்டர் இலவச நூல் வினியோகம்

ஜெயமோகன் எழுதிய யானை டாக்டர் சிறுகதை இயற்கை குறித்தும் , வன உயிர்கள் குறித்துமான அக்கறையையும் கவனத்தையும் கோருகிறது , டாக்டர் கிருஷ்ணமூர்த்தி எனும் மகத்தான மனிதரை உலகிற்கு சரியான பார்வையில் அறிமுகப்படுத்துகிறது .


இந்த கதை சமூகத்திற்கு பரவாலாக போய் சேர்வதன் மூலம் வன உயிர்கள் குறித்தான விழிப்புணர்வு உண்டாகும் என்ற நோக்கில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் யானை டாக்டர் சிறுகதையை 40 பக்கங்கள் கொண்ட சிறு புத்தகமாக அச்சிட்டு இலவசமாக வினியோகிக்கிறோம் , முதல்கட்டமாக 6000 பிரதிகள் (பிரதிக்கு ரூ.மூன்று செலவானது) அச்சிட்டுள்ளோம்.மொழிபெயர்ப்பை ஆங்கிலத்திலும் அச்சடிக்க உள்ளோம் .


கல்லூரிகள் , நிறுவனங்கள் , சூழல் ஆர்வலர்கள் ,வனகாப்பகங்களுக்கு இந்த பிரதி அளிக்கப்படவேண்டுமென விரும்புகிறோம் , எங்களிடமுள்ள பிரதிகளை சரியான இடத்திற்கு உங்களால் கொண்டுசேர்க்க இயலுமானால் எங்களிடமிருந்து பெற்று வினியோகிக்கலாம் நண்பர்களே .


இந்த கதையை பொறுத்தவரை திறந்த காப்புரிமை வழங்கப்படுகிறது , யார் வேண்டுமாயினும் சுருக்காமல் , வெட்டி ஒட்டாமல் அச்சிட்டு வழங்கலாம் (ஒரு மின்னஞ்சலில் அறியப்படுத்தினால் போதுமானது),அச்சடிக்க விரும்புவோர் 94421 10123 , vishnupuram.vattam@gmail.com தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.


இந்த நூலை வினியோகிக்க விரும்பும் நண்பர்கள் உங்கள் முகவரி விவரங்களை இங்கே நிரப்புங்கள் , பிரதிகளை அனுப்பி வைக்கிறோம் ,


இந்த பிரதிகள் மறுஅச்சிட செலவை பகிர்ந்துகொள்ள விரும்பும் நண்பர்கள் தொடர்புகொள்ளலாம்.


மேலும் http://vishnupuram.wordpress.com/2011/07/06/123/


 


 


https://spreadsheets.google.com/spreadsheet/embeddedform?formkey=dHJlVnBFVGtpYWV1SDhKZTBKak9lc3c6MQ" frameborder="0″ marginwidth="0″ marginheight="0″ width="455″ height="1243″>

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 09, 2011 01:23

August 8, 2011

கவிதை,கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,


இன்றைய சாதனைக் கவிதை பற்றிக் கடிதங்களை வாசித்த பிறகுதான் அது ஒரு நகைச்சுவை என்றே புரிந்து கொண்டேன். (ச்சே, ஒரு நிமிஷம் உங்களையே தப்பா புரிஞ்சிக்கிட்டேனே) ஆனால், இப்படி மூன்றாம் தர, நான்காம் தர வசனங்களில் எல்லாம் எதற்கு நேரத்தை வீணாக்க வேண்டும்? ஏற்கனவே, பழகிய பாவத்திற்காக வரும் மொக்கை SMS களைத் தாங்க வேண்டியிருக்கிறது (கவிதை என்ற பெயரில்) நிற்க


சுஜாதாவிற்கு கூட தேர்ந்த கவிதை ரசனை இருப்பதாய்த் தோன்றவில்லை. பல கவிதைகளை அவர் மாற்றம் செய்தோ அல்லது நல்ல கவிதைகள் என்று தரும்போதோ, அதில் அந்தளவு குறிப்பிடும்படி ஏதும் இருக்காது. பத்தில் ஒன்று தேறும். அவர் எழுதிய கவிதைகள் கூட மட்ட ரகமே. நிறையப்பேர் இலாவகமாய்ச் சிந்திக்கத் தெரிந்தாலே அழகாய்க் கவிதை எழுதலாம் என்று நினைத்து விடுகிறார்கள் (எழுதியும்). ஒரு நேர்த்தியான விலகல் பார்வை அல்லது கரைந்து போகும் தன்மையே கவிதைக்கு முக்கியம் என்று நினைக்கிறேன். யுவன் கவிதையரங்கின் பதிவுகளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.


பாலா

கோவில்பட்டி


*


அன்புள்ள ஜெ


குப்பைத் தொட்டியையே

குப்பைத் தொட்டி

என்று எழுதினால் தான்

புரிகிறது.

நகைச்சுவையும்

அப்படியே .

குறிப்பிடாமல் விட்டது

குற்றம் குற்றமே

அன்புடன்

Dr.ராமானுஜம்

சென்னை 600033


(எப்படி என் கவிதை?)

(பின் கோடையும் பின் நவீனத்துவக் கவிதையில் சேர்த்துக் கொள்ளலாம்)


*


அன்புள்ள ஜெ,


திண்ணையில் ஒரு கமெண்ட் பார்த்தீர்களா? நீங்க எழுதியது கவிதை என்ற வடிவத்தைப் பற்றி ஒரு கிண்டல். அதை அந்த சினிமா பற்றின கடுமையான விமர்சனமாக ஒரு வாசகர் எடுத்துக்கொண்டு கன்னா பின்னாவென்று எழுதியிருக்கிறார். இந்தமாதிரி வாசகர்களுக்கு என்ன புரிந்து விடப் போகிறது? இவர்களெல்லாம்தான் இங்கே  இணையம் வாசிக்கிறார்கள். நகைச்சுவை என்றால் கீழே நாலைந்து ஸ்மைலி போடவேண்டும் சார்…


சாம்ராஜ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 08, 2011 17:55

தன்வரலாறுகள்

குழுமத்தில் நண்பர் ஒருவர் தமிழின் சிறந்த அபுனைவுகள் பற்றிக் கேட்டிருந்தார். அதற்காக நான் தன்வரலாறுகளின் பட்டியல் ஒன்றைத் தயாரித்தேன்.  பாரதி, வ.உ.சி ஆகியோர் செய்யுளில் தன்வரலாறுகள் எழுதியிருக்கிறார்கள். அவற்றைத் தவிர்த்துவிட்டேன்.


என் பார்வையில் தமிழில் நல்ல தன்வரலாறுகள் மிகமிகக் குறைவு. சுயசரிதையை எழுதுபவர் தான்வாழ்ந்தகாலகட்டத்தை நேர்மையாகப் பதிவுசெய்திருந்தாலே அது முக்கியமான நூலாகிறது. ஆனால் பெரும்பாலும் அது நிகழ்வதில்லை. அதற்கு அவருக்குத் தன்னைவிட்டு வெளியே பார்க்கத் தெரிந்திருக்கவேண்டும். பல பிரபலங்களால் அது முடிவதில்லை


சிறந்த உதாரணங்கள், எம்.ஜி.ஆர் எழுதிய 'நான் ஏன் பிறந்தேன்?' மு.கருணாநிதி எழுதிய 'நெஞ்சுக்கு நீதி'.இரண்டுமே வீங்கிப்போன அகந்தை மட்டுமே மாறுவேடமிட்டு ஆடும் மோசமான நூல்கள். தமிழின் பெரும்பாலான தன்வரலாறுகள் இந்தவகையானவை.


இன்னொன்று, ஒரு காலகட்டத்தை ஒரு பெரிய வாழ்க்கைப்பரப்பை எழுதுகிறோம் என்ற பொறுப்பே இல்லாமல் போகிறபோக்கில் எழுதுபவை. சிறந்த உதாரணம் கண்ணதாசனின் 'வனவாசம்'.


நல்ல  தன்வரலாறு,ஒரு ஆளுமை தன் வாழ்க்கையைப்பற்றி எழுதும் போக்கில் வரலாற்றின்,பண்பாட்டின் ஒரு காலகட்டத்தையே எழுதிவிடுபவைதான். தன்னைச்சுற்றியுள்ள நிகழ்வுகளை நுட்பமாகப்பார்த்துச் சொல்லும்  ஒருவராலேயே அது சாத்தியமாகிறது.


முட்டிமோதி என் தேர்வுக்குச் சிக்கும் 12 முக்கியமான  தன்வரலாறுகளைச் சொல்லியிருக்கிறேன்


1. என் சரித்திரம் -உ.வே.சாமிநாதய்யர்


2. ஜீவித சரிதம்- ரெட்டைமலை சீனிவாசன்


3. என் கதை- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை


4.வாழ்க்கைக்குறிப்புகள்-திரு.வி.க [இருபகுதிகள்]


5. எனது வாழ்க்கைப்பயணம்- கோவை அய்யாமுத்து


6. என் வாழ்க்கை – ந. சுப்புரெட்டியார்


7. எனது நாடகவாழ்க்கை – அவ்வை டி.கே. சண்முகம்


8 .நினைவுகள்- க.சந்தானம்


9. உலகம் சுற்றும் தமிழன் – ஏ.கே.செட்டியார்


10. எனது வாழ்க்கை அனுபவங்கள்- ஏ.வி.மெய்யப்பச்செட்டியார்


11. நினைவலைகள் -தி .செ. சௌ. ராஜன்


12. நினைவலைகள் – நெ.து.சுந்தரவடிவேலு

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 08, 2011 11:30

கல்வி கடைசியாக…

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,


முதலில் என் கடிதத்தினைப் பிரசுரித்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள், அக் கடிதம் எழுத என்னைத் தூண்டியது தாங்கள் பிரயோகப்படுத்தியிருந்த வார்தைகளே (மானுட மிருகங்கள், வஞ்சகர்கள், பொறுக்கிகள் , மாபியா மற்றும் புல்லர்கள்). இதை ஒரு சில அற்பர்களுக்கு மட்டுமே தாங்கள் எழுதியதாகக் கூறவில்லை. மாறாகப் பொதுமைப்படுத்தப்பட்ட சித்திரமாக அனைத்து ஆசிரியர்களையும் உள்ளடக்கி (தாங்கள் பெருமையாகக் குறிப்பிட்டிருந்தவர்கள், தங்கள் மாமனார், மற்றும் திரு வேதசகாயகுமார் ஆகியோரயும் சேர்த்தே) தாக்குவதாகவே அது அமைந்திருந்தது. நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல நல்லவர்கள் மைனாரிட்டியாக இருக்கலாம் அதற்காக அவர்களும் அந்த அவப்பெயரினைச் சுமக்க வேண்டும் என்பது எவ்வகையில் நியாயம்?


எனக்குப் புரியவில்லை இவ்வளவு வெறுப்பு ஏன்? ஒரு வேளை ஆசிரியர்கள் கையாலாகதவர்கள் என்பதாலா? (அல்லது ஊதியம் ஒரு காரணமாக இருக்கலாம் – இதன் அடிப்படையிலேதான் மென்பொருள் வல்லுனர்களும் பரவலான எதிர்ப்பினைப் பெற்றுள்ளனர் எனக் கருதுகிறேன்) இதே போன்ற வசைகளைப் பிற துறை அலுவலர்களிடம் பயன்படுத்தமுடியுமா? கிராம நிர்வாக அதிகாரிகளிடம் செருப்பைக் கழற்றி வெளியே போட்டு விட்டு ரேசன் கார்டு விண்னப்பத்திற்கும் வருமான, சாதிச் சான்றிற்கும் ரூ 100 உடன் நமது பல்லிளிப்புடன் 'கொஞ்சம் சீக்கிரமாp பாத்து செஞ்சா பரவாயில்லை' என்று கோரிக்கை வைப்பவர்கள்தாமே நாம். அவர்களிடம் நம் வீரம் எடுபடவில்லையே. இன்னும் இலஞ்சம் வாங்காத அல்லது வாங்க இயலாச் சூழலில் இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்பதால்தான் மரியாதை இல்லையோ? (அதிகமாக இலஞ்சம் வாங்குவரிடம்/ அமைப்புகளிடம் நாம் காண்பிக்கும் மரியாதையும் / பயமும் அதிகமாக இருப்பது ஏன் எனத் தெரியவில்லை)


நான் உண்மை நிலை உணராமல் எழுதியிருப்பதாக நண்பர்கள் வருத்தப்பட்டுள்ளனர். தெளிவாக விளக்குகிறேன்.தற்போதைய உண்மை நிலை என்னவென்றால், 1வது மற்றும் 6ம் வகுப்புகளில் மாணவர்களின் சேர்க்கையானது மிகக் குறைந்த அளவே நடைபெறுகிறது. இது தொடருமேயானால் பள்ளிகளில் ஆட்குறைப்பு முதல் பள்ளியினையே இழுத்து மூட வேண்டிய சூழல் ஏற்படும் ( தற்போதே தொடக்கப் பள்ளிகள் சேர்க்கைக் குறைவு காரணமாகப் பரவலாக இழுத்து மூடப்பட்டு வருகின்றன). இதனைப் பெரும்பாலான ஆசிரியர்கள் உணர்ந்தே உள்ளனர். தன் வேலைக்கே ஆபத்து என்ற சூழலில் நிச்சயம் சிறப்பாகச் செயல்படுவார்கள் என நம்பலாம் (வேறு வழியே இல்லை என்பதால்)


இன்றைய சூழலில் அரசுப் பள்ளிகளைக் குறை கூறுபவர்கள் ஓருமுறையேனும் தான் படித்த பள்ளிக்குச் சென்று இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என எப்போதாவது நினைத்ததுண்டா? (என்னை இந்நிலைக்குத் தாழ்த்திய பள்ளிக்கு நான் எவ்வாறு செல்வது எனக் கருதவேண்டாம் – படித்தபோது இருந்த ஆசிரியர்கள் இன்று இல்லையே-அதனால் தாராளமாக செல்லலாம்-குறைந்தது உங்களைப் போல் பிற மாணவர்களும் ஏமாறுவதைத் தடுக்கவாவது செல்லலாம்) அவ்வாறு நினைத்து அப் பள்ளிக்கு அடிக்கடி சென்றிருந்தால் மிகுந்த உரிமையுடன் அங்கு நிலவும் குறைகளைச் சுட்டிக்காட்டி சரிசெய்யலாமே. அல்லது உண்மை உணர்வதற்காகவாவது ஒரு வாய்ப்புக் கிட்டும். பள்ளியின் புரவலர் திட்ட்த்தில் வெறும் ஆயிரம் ரூபாய் நன்கொடை தந்துவிட்டு அப்பள்ளியில் உரிமையுடன் சென்று பிரச்சனைகளைத் தீர்க்கலாமே. இன்னும் கூறப்போனால் பணமும் வள்ளல்தன்மையும் இருந்தால் ஒரு பள்ளியினையே தத்தெடுத்து அதைத் தலைகீழாக மாற்றும் சக்தி,குறைகூறும் நண்பர்களுக்கு வாய்ப்பாகக் காத்துள்ளது செய்வார்களா?


இதற்கு இரு உதாரணங்களை என்னால் காட்ட இயலும்.


நாமக்கல், கொக்கராயான்பேட்டை அரசுப் பள்ளியில் ஒரு காலத்தில் ஆசிரியர் பற்றாக்குறையினால் வெறும் 120 மாணவர்களையும் மேல்நிலைத் தேர்வில் 30 சதவீத தேர்ச்சியையும் பெற்ற பள்ளி,2005க்குப் பிறகு ஆசிரியர்களின் முயற்சியால் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றது.பிறகு இன்றளவு வரை அப்பள்ளிக்கு வெற்றிமுகம்தான். இதைக் கண்ணுற்ற அப்பள்ளியின் முன்னாள் மாணவர் சென்னை பொன் பியூர் கெமிக்கல்ஸ் தலைவர் அவர்கள் அப்பள்ளியினைத் தத்தெடுத்துத் தனியார் பள்ளிகளின் கட்டமைப்பினை ஏற்படுத்தித் தந்து உதவியுள்ளார். தற்போது அப்பள்ளி மாவட்ட அளவில் முன்னோடிப் பள்ளியாகத் திகழ்கிறது.


இரண்டவதாக நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்ட்த்தில் தமிழக அளவில் தனியார்பள்ளிகள் கோலோச்சி வரும் இன்றைய சூழலில் ஆர்.புதுப்பாளையத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் 100% மிகச் சிறப்பான ஆங்கில வழிக் கல்வி நிலவுகிறது (அட்மிஷனுக்குப் பரிந்துரைக் கடிதம் கொண்டு வருமளவிற்கு நிலைமை உள்ளது). இதற்குக் காரணம் ஆசிரியர்கள் மட்டுமல்ல, அப்பகுதியின் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு பள்ளியின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுகிறார்கள்.


நண்பர்களே, அனைத்துப் பள்ளிகளும் 100க்கு 100 மிகச் சரியாகச் செயல்படுகின்றன என்ற கருத்தினை முன் வைக்கவில்லை. ஆனால் 20 கி.மீ. சுற்றளவில் குறைந்தது 5 அரசுப் பள்ளிகளாவது இருக்கும். அதில் நிச்சயம் ஓரிரண்டு பள்ளிளாவது உறுதியாக நல்ல பள்ளியாக இருக்கும். அந்த நல்ல பள்ளியில் படிக்கவைத்துக் குறையுள்ள பள்ளியைப் புறக்கணியுங்கள். சேர்க்கை குறையும் போது நிச்சயம் தவறு செய்யும் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் திருந்துவார்கள். (இல்லையென்றால் பள்ளியினையே இழுத்து மூடவேண்டி வருமே). முறையான வழியில் அப்பள்ளிகளின்/ ஆசிரியர்களின் குறைபாடுகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லுங்கள். நிச்சயமாகத் தீர்வு கிடைக்கும். இது ஆசிரியர்களைக் கடலில் கொண்டு தள்ளுவதைவிடச் சற்று சுளுவான வேலை.


குறைகூறுபவர்கள் களத்தில் நின்று குறைகளைச் சரி செய்யுங்கள். அதற்கு ஆயிரம் வழிகள் உள்ளன. இங்கு உங்களது மேலான அக்கறை மட்டுமே தேவைப்படுகிறது. படித்தவன் சூதும் வாது செய்தால் அய்யோ என்று போவான் என பாரதியார் ஒரு முறை அல்ல மூன்று முறை கூறுகிறார். ஆசிரியர் மட்டும் படித்தவனல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.


இறுதியாக ஒரு சிறிய நையாண்டியுடன் முடித்துக் கொள்கிறேன்,


ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்குத் (கணித ஆசிரியர் உட்பட) தன் சம்பளத்தினைக் கூட எண்ணத்தெரியாது என்பதைத் தம்மம்பட்டி நண்பர் கண்டுபிடித்துவிட்டதால் இப்போது ATM மூலம் பணம் வழங்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டிருந்த 1 ரூபாய் நாணயத் தட்டுப்பாடு நீங்கிவிட்டது. ஆனால் எனக்குத்தான் இன்னும் குழப்பம் உள்ளது.பணத்தை எண்ணத் தெரியாதவர்கள் வட்டித் தொழில் மிகச்சிறப்பாகச் செய்வதாக நண்பர் எப்படிக் கூறுகிறார் எனத் தெரியவில்லை (வட்டித் தொழில் செய்பவர்களுக்கு பிரெயிலி முறைகூடத் தெரியும். இருட்டில் கூடப் பணத்தை எண்ணும் ஆட்கள் அவர்கள்)


மிகுந்த அன்புடன்,


ந.மகேஷ்குமார்,


நாமக்கல்


பி-கு. அண்ணாச்சிக்கு (இவ்வாறு அழைக்கலாம்தானே), சென்ற கடிதத்தில் தங்களை மரியாதைக் குறைவாக நான் எழுதியதாக என் மனைவி வருத்தப்பட்டாள். என்னால் ஒரு போதும் அவ்வாறு தங்களுக்கு எதிராக மரியாதைக் குறைவாக எழுதமுடியாது எனவும், கருத்தினை விமர்சிப்பது தனிமனித அவமரியாதையல்ல என்றும் கூறினேன். மீண்டும் கூறுகிறேன்,தங்கள் மேல் கொண்ட மிகுந்த அன்பின் காரணமாகவே அப்போதும் இப்போதும் எழுதுகிறேன். வேறு ஒருகாரணமும் அல்ல.


மேலும் கடிதம் எழுதிக் கருத்துக்களை முன்வைத்தல், மற்றும் நுணுக்கமான செய்திகளைத் தேர்ந்தவர்களுக்கு மட்டும் புரியுமாறு எழுதுதல் ஆகியவற்றில் நான் ஒரு சதவீத தேர்ச்சி (இனி) பெற்றாலும் அதன் பெருமை நிச்சயம் தங்களையே சாரும். இதை உறுதிபடக் கூறுவேன்.


தீட்டிய மரத்தில் கூர் பார்த்த குற்ற உணர்வு சற்று உள்ளது. என்ன செய்வது,நமது பாரம்பரியம் அதுதானே.


 


அன்புள்ள மகேஷ்


மன்னிக்கவும் தாமதம். பயணங்கள் , எழுத்துவேலை


பரவாயில்லை, நீங்கள் கூர் பார்க்கலாம். அது மரியாதைக்குறைவெல்லாம் இல்லை, மறுப்புத்தானே?


உங்கள் எழுத்துக்களில் பிரச்சினை ஒன்றுமில்லை. உரைநடை கச்சிதமாகவும் நையாண்டி வெளிப்படுமிடங்களில் கூர்மையாகவும் உள்ளது. எதையுமே எழுதிப்பார்ப்பது நல்லது என்பது என் கருத்து. அது எண்ணங்களைச் சுருக்கமாக செறிவாக தர்க்கபூர்வமாக அமைக்க உதவும்.  தொடர்ந்து எழுதுங்கள்.


அன்புடன்


ஜெ


'ஒரு தற்கொலை'

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 08, 2011 11:30

சாதனைக்கவிதைபற்றி

ஒரு கவிதைச்சாதனை


ஜெ,


பகடி உங்களுக்கு இயல்பாகவே கைவருகிறதென்றாலும் சிலசமயம் ரொம்பவே நுட்பமாகப் போய்விடுகிறது. எனக்குப் பெரும்பாலும் நீங்கள் ஆரம்பிக்கும் இரண்டாவது வரியிலேயே சிக்னல் விழுந்து விடும். இம்முறை ஏமாந்துவிட்டேன். கவிதையின் தலைப்பைப்பார்த்ததும் உடனே சிரிப்புவந்தது. அலுவலகத்திலே சிரித்துக்கொண்டு பாய்ந்து எழுந்திருந்து விட்டேன். 'என்னது'என்று கேட்டார்கள். அற்புதமான கவிதை. கண்டிப்பாக ஒரு கவிதைச்சாதனைதான்.


'இதுவரை வெளிவந்த தமிழ்க்கவிதைகளின் நெடியே இல்லாமல், சொல்லப்போனால் உலகமொழிகளில் எழுதப்பட்ட எந்தக் கவிதையின் சாயலும் இல்லாமல்,  புத்தம்புதிதாக வெளிவந்திருக்கிறார்'-  அருமையான வரி. கவிதையை வாசித்தபின்னர்தான் அந்த வரிக்குப் பொருள் தெரிந்தது. ஒட்டுமொத்த மனித அறிவுடன் எந்தத்தொடர்புமே இல்லாமல் தூய்மையாக அவதரித்திருக்கிறார் ருத்ரா.


திரும்ப உங்கள் குறிப்பை வாசித்தேன். வரிவரியாக சிரித்தேன். 'அனுபவம் நேர்மையாக, அப்பட்டமாகப் பதிவாகியிருக்கிறது' 'தமிழ்நாட்டில் பல லட்சம்பேர் இதன் உணர்வெழுச்சியுடன் ஒன்றுவார்கள்' ஒன்றமாட்டார்களா பின்னே?


காலையில் ஒரு நல்ல அருமையான தொடக்கம் ஜெ. நன்றி


அருண்

சென்னை


அன்புள்ள அருண்,


நகைச்சுவை என்று போட்டால் உடனே சிரித்துவிடுகிறார்கள். ஆகவேதான். இனிமேல் பின்னணியாக அஹ்ஹாஹாஹாஹாஅஹஹஹஹஹாஹஹாஆஹாஅஹஹாஹாஹா என்ற பயங்கரப்பேரொலி எழுப்பப்பட மென்பொருள் தயாராகிறது. அதன்பின் குழப்பம் இருக்காகது


ஜெ


==================================


நகைச்சுவைக் கட்டுரை எழுதும் போது அதை நகைச்சுவை என்று தெளிவாகப் பதிவு செய்வது, தமிழ் மரபுக்கு எப்போதுமே நல்லது.


(எனக்குக் கவிதை அறிவு கம்மிதான்… அது உண்மையிலே சீரியஸ் கட்டுரை இல்லையே… )


நன்றி

ரத்தன்


 


அன்புள்ள ரத்தன்,


திண்ணையில் அந்தக் கவிதைக்குப் பக்கத்திலே அப்படிப் பதிவுசெய்திருக்கவேண்டும் என்கிறீர்கள் இல்லையா? அதை நீங்கள் திண்ணைக்கு அல்லவா சொல்ல வேண்டும்?


ஜெ


==================================



 ஒரு படத்துல வரும் ஒன்னு கீழ ஒன்னு அதானே கவிதைன்னு. அப்படிப்பட்ட கவிதை இது இல்லையா?

அசோக் சாம்ராட்
அன்புள்ள அசோக்,

உரைநடை    தண்டவாளம் என்றால் கவிதை ஏணிப்படி
ஜெ

+++++++++++++++++++++++++++++++++++





அன்புள்ள ஜெயமோகன்
இதில் கவிஞர் ருத்ராவின் புதிய நடையையும், கவித்துவத்தையும் புகழ்ந்துள்ளீர்கள்.
இதே ருத்ரா ஈவேரா, பாவாணர் போன்றவர்களின் மோசமான இனவாதத்தையும் உள்வாங்கியவர்.
அவருடைய கூகிள் குருப்பில் ஒரு கவிதையில் உங்களையே ஏதோ "தீய ஆரிய" ஆர்கிடைப்பாகச் சாடுகிறார்
http://groups.google.com/group/zooza/browse_frm/thread/9369c26a8fdf2496?hl=en
இவருக்குக் கவித்திறன் இருந்தாலும், இனவாதத்திற்குத் தீனியானவர்.  "ஆரியரகள்"  ஏதோ " திராவிடர்களை"க் களங்கப்படுத்த வந்தவர்கள் போல் எழுதுபவர்.
மதிப்புடன்
வன்பாக்கம் விஜயராகவன்





அன்புள்ள விஜயராகவன்,


அது  ஒரு பகடி என்று சொன்னால் அதையும் சீரியஸாக எடுத்துக்கொள்வீர்களா என்று பயமாக இருக்கிறது


ஜெ


=================================


ஜெயமோகன்,


நீங்கள் அற்புதம் என்றெல்லாம் சொல்லிப் பரிந்துரைத்திருந்த கவிதையை வாசித்தேன். அந்தக்கவிதையிலே [கவிதையா அது கர்மம்] என்ன இருக்கிறது என்று இப்படி சொல்கிறீர்கள்? வெட்கமாக இல்ல? அதை எழுதியது பெண் என்பதனால்தானே அதைக் கவிதை என்று தூக்கி விடுகிறீர்கள்? உங்களைப் போன்றவர்களின் நோக்கம் என்ன? வாசகர்களுக்கு ஒன்றுமே தெரியாதென்று நினைக்கிறீர்களா?


நிற்க, இது கவிதையே கிடையாது. சினிமா விமர்சனத்தைக் கீழே அடுக்கினால் கவிதையா? அப்படியென்றால் தினமலர் பொன்னையா எழுதும் சினிமாச்செய்தியும் கவிதைதானே? தெரிந்தால் பேசுங்கள். இல்லாமால் இருந்தால் வாயைமூடுங்கள்


செல்வ ஜெகதீசன்


அன்புள்ள செல்வா,


அப்படியென்றால் பொன்னையா கவிஞர் இல்லையா? யாருமே என்னிடம் சொல்லவில்லையே?


அப்படியே நிற்க, ருத்ரா என்பது பெண் கிடையாதாம். வன்பாக்கம் விஜயராகவன் சொல்கிறார். பரமசிவம் என்பவராம்.


ஜெ


+++++++++++++++++++++++++++++++++


அன்புள்ள ஜெ


நீங்கள் பரிந்துரைத்த கவிதையைக் கண்டேன். அற்புதமான கவிதை. நானும் அந்தத் திரைக் கவிதையை இப்போது பார்த்து ரசித்திருந்தேன். ஆதலினால் என்னால் கவிதையுடன் ஒன்ற முடிந்தது. அருமையான வரிகள்.  'மேய்ச்ச‌ல் புரியும் ம‌ந்தைக‌ளின் ச‌ந்தைக‌ளால்' என்ற வரி சிறப்பானது


மேலும் நீங்கள் http://www.lankasripoems.com  என்ற இணையதளத்திலே வரக்கூடிய கவிதைகளை வாசிப்பீர்களா? அருமையான கவிதைகள். நான் சமீபத்திலே


உள்ளம் விறகாகி

உயிரில் தீ மூண்டது

சொல்ல முடியாத சோகம்

விழிகள் விம்மின


என்ற கவிதையை மிகவும் ரசித்தேன்


விஜயா அம்ருத்


அன்புள்ள விஜயா


'புதிய‌ புதிய‌ ப‌ரிமாண‌ங்க‌ளுக்குள் எல்லாம் பரிணாமம் செய்யும்' என்ற வரிதான் சிறப்பான கவிதை என நினைக்கிறேன். முதல்தடவை வாசித்தபோது எனக்குப் புல்லரித்தது. பிறகு சரியாகப்போய்விட்டது.


நீங்கள்கூட  http://tamilkkavithai.blogspot.com/ என்ற இணையதளத்தை வாசிக்கலாம்.


காத்திருக்கும் கண்களுக்கு

வியர்த்துப் போனால்

அது கண்ணீர்..!

காத்திருக்கும் கண்கள்

கவிதை பாடினால்

அது காதல்..!

இந்த இரண்டையும்

ஒரு சேரக் கொடுத்தவளும் நீ..!

கொடுத்துப் பிரிந்தவளும் நீ..!


என்ற அருமையான காதல்கவிதை காதலிக்காத எல்லாருக்குமே பிடிக்கும்


ஜெ


=========================


எதுக்கு சார் கொலை வெறியைத் தூண்டறீங்க? இதை யாராவது சீரியஸாக வேறு எடுத்துக்கப் போறாங்க என்று பயமாக இருக்கிறது…


ஆர்வி


ஆர்வி,


ஏன் நல்ல கவிதைதானே? 'கலைஞரிய' அழகியல் கொண்ட கவிதை இல்லையா?


 


ஜெ


 


 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 08, 2011 02:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.