Jeyamohan's Blog, page 2235
May 24, 2012
ஓணம்பாக்கம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சமீபத்தில் சென்று வந்த ஓணம்பாக்கம் என்ற ஊரை பற்றியும், அங்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஓணம்பாக்கம் மதுராந்தகம் வட்டம், செய்யூரில் இருந்து, 6 கி மீ தொலைவில் மேல்மருவத்தூர் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது. இங்குள்ள குரத்திமலையிலும் கூசமலையிலும் சமண படுக்கைகளும், பிம்பங்களும் இருப்பதை கேள்விப்பட்டு, அங்கு சென்றேன்.
பாலாஜி என்ற MCA படிக்கும் மாணவரின் உதவியோடு குரத்திமலையில், இரண்டு இடங்களில் படுக்கைகள் இருப்பதை கண்டறிந்தேன். மலைக்கு கிழக்கே இருக்கும் ஐந்து படுக்கைகள் இதுவரை பதிவாகவில்லை. இந்த புதிய படுக்கைகளை பற்றி, சமண ஆய்வாளர் அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தியிடம் தகவல் தெரிவித்தேன். தானும் வந்து பார்த்துவிட்டு, செய்தி கொடுத்து விடலாம் என்றார். பிறகு அருகில் உள்ள கூசமலை சென்றேன். அந்த மலையில் பந்தக்கல் என்னும் இடத்தில் ஐந்து படுக்கைகள் காணப்படுகின்றன. மலையின் ஒரு பகுதி, அருகில் உள்ள ஒரு கல் குவாரியால் உடைக்கப்பட்டுள்ளது (ஓராண்டுக்கு முன்னர் நடந்த போராட்டத்தால், கூசமலையின் பிற பகுதிகள் காப்பாற்றப்பட்டுள்ளன).
பிறகு சில நாள்கள் கழித்து, குரத்திமலையில் உள்ள சமணபிம்பங்களுக்கு (பார்சுவநாதர், ஆதிநாதர், மகாவீரர்) பூஜை செய்யும் ஜீவகுமார், மலையில் புத்தர் போல காணப்படும் சுடுமண் பொம்மை இருப்பதாகக் கூறினார். பின் இரண்டாவது முறையாக அங்கு சென்றேன். இம்முறை அந்த ஊரை சேர்ந்த அய்யனார் என்பவர் அறிமுகமானார். என்னை கூசமலைக்கு அழைத்துச் சென்று அனைத்து இடங்களையும் சுற்றிக் காட்டினார். கூசமலையில் இருக்கும் குகை குறித்து சில தகவல்களை சொன்னார். பின் என்னை குறித்து விசாரித்தார். நான் அவரிடம் உங்கள் ஊரை பற்றி இணையத்தில் எழுதப் போகிறேன் என்று கூறினேன். மிகவும் சந்தோஷப்பட்டார். பின் கூசமலை முழுவதும் சுற்றிக் காட்டினார். அவரிடம், உங்கள் ஊர் வரலாற்று சிறப்பு வாய்ந்தது, அதை நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்று கூறினேன். அவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது, அங்கிருக்கும் மக்களுக்கும் கல் குவாரி இருப்பது பிடிக்கவில்லை என்று அறிந்தேன். பின் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு, ஜீவகுமாரிடம், சுடுமண் சிற்பத்தை பெற்றுகொண்டேன்.
இரண்டு நாட்கள் கழித்து, அய்யனாரிடம் இருந்து கைபேசியில் அழைப்பு வந்தது. அவர் குரல் மிகவும் பதற்றமாக இருந்தது. கல்குவாரியில் வெடி வைத்ததில், பாறைத்துண்டு ஒருவர் தலையில் விழுந்து இறந்து விட்டார் என்று கூறினார். நான் அதிர்ச்சி அடைந்தேன். கல் குவாரி மீது நடவடிக்கை எடுக்க நான் ஏதாவது செய்யுமாறு கூறினார். நான் என்னுடைய எல்லைகளை விளக்கி, என்னால் முடிந்தவரை முயல்கிறேன் என்று கூறினேன். பின், உடனடியாக, அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி அவர்களை தொடர்பு கொண்டு, இந்த விஷயத்தை சீக்கிரம் செய்தியாக்க வேண்டும் என்று கூறினேன். அவரும் தினமலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசினார். அவர்களும், தங்கள் நிருபரை அனுப்பி வைப்பதாக கூறினர்.பின் அடுத்த ஞாயிற்று நாங்கள் செல்வதாக முடிவானது. ஆனால், அதிர்ஷ்டவசமாக, ஓணம்பாக்கம் மக்களின் ஒருங்கினைந்த போராட்டத்தால், (http://www.dinakaran.com/District_Det...) அந்த குவாரி சீல் வைக்கப்பட்டது (ஜனநாயகத்தில், மக்கள் தங்களை ஒன்று திரட்டி போராடினால் நிச்சயம் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்ற, தங்களது வரிகளை நினைத்து கொண்டேன்). மூன்றாவது முறையாக சென்றபோது, தமிழாக்கம் செய்யப்பட ஓணம்பாக்கம் விக்கிபீடியா கட்டுரையை நகல் எடுத்து அய்யனார் மூலமாக மக்களிடம் விநியோகித்தேன்.
அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, கூசமலையில் மேலும் சில படுக்கைகள் இருந்ததற்க்கான அறிகுறிகள் காணப்படுகிறது என்றார். மேலும் படுக்கைகளில் காணப்படும் குறியீடுகளையும் பற்றி சில தகவல்களை சொன்னார். இக்குறியீடுகள் பெரும்பாலான சமண படுக்கைகளில் காணப்படுகிறது. இவை மூலம் காலத்தையும், மழை வரும் நேரத்தையும் முனிவர்கள் கணித்தனர் என்றார். பின் அவரிடம் சுடுமண் பொம்மையை அளித்தேன். 60 வயதாகியும், வெயிலில் எங்களுக்கு இணையாக அவர் அலைந்தது ஆச்சர்யமாக இருந்தது.
இந்த செய்தி, 04-05-2012 தினமலர் நாளிதழ் சென்னை பதிப்பில் வெளியாகி இருக்கிறது. அதை இக்கடிதத்துடன் இணைத்து இருக்கிறேன்.
இவை குறித்து இணையத்தில் பதிவு செய்தவை:
விக்கிப்பீடியா கட்டுரை
ஓணம்பாக்கம்
யு டியூப் காணொளிகள்
1) http://www.youtube.com/watch?v=KwUs8G... ( பார்சுவநாதர், ஆதிநாதர்)
2) http://www.youtube.com/watch?v=K0EQyh... ( மகாவீரர்)
3) http://www.youtube.com/watch?v=DNsR9k... (குரத்திமலை சமண படுக்கைகள்)
4) http://www.youtube.com/watch?v=UZWaUe... (கூசமலை சமண படுக்கைகள்)
5) http://www.youtube.com/watch?v=SExt-k... ( புதிதாக கண்டறியப்பட்ட குரத்திமலை சமண படுக்கைகள் )
6) http://www.youtube.com/watch?v=AFgTwS... (அய்யனார் பேட்டி)
7) http://www.youtube.com/watch?v=hvjTHD... (கூசமலை வறண்ட குளம் )
8) http://www.youtube.com/watch?v=lj9X3v... (விளக்குமலை)
9) http://www.youtube.com/watch?v=Ywn9rE... (சுடுமண் பொம்மை)
விக்கிமப்பியா இணைப்பு சுட்டி
1) குரத்திமலை
2) கூசமலை
நன்றி,
தங்கள் அன்புள்ள,
சரவணக்குமார்.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
ஊட்டியிலே
இன்று காலை ஊட்டி நாராயண குருகுலத்தில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் குருநித்யா ஆய்வரங்கு ஆரம்பிக்கிறது. திடீரென்று யோசிக்கையில் ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது. இந்த சந்திப்பு நிகழ்ச்சிகள் ஆரம்பித்து பதினேழுவருடங்களாகின்றன!
தமிழில் இவ்வளவு காலம் தொடர்ச்சியாக நிகழ்ந்துவரும் இலக்கியச் சந்திப்புகள் மிகமிகக் குறைவே. வேடந்தாங்கலில் இலக்கியவீதி என்ற சந்திப்பு பலகாலம் நிகழ்ந்தது. அதை நிகழ்த்திய இனியவன் பலராலும் நினைவுகூரப்படுகிறார். காஞ்சிபுரம் இலக்கியவட்டம் வெ.நாராயணனால் நடத்தப்பட்டது.
சற்றே பெரிய இலக்கிய அமைப்புகளால் நடத்தப்பட்டவை என்றால் இலக்கியசிந்தனை அமைப்பின் சந்திப்பு நிகழ்ச்சியையும் கணையாழி இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியையும் குறிப்பிடலாம். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற கட்சிக்குழுக்களை நான் கணக்கில் கொள்ளவில்லை.
பல அமைப்புகள் சிலரால் ஆரம்ப உற்சாகத்துடன் ஆரம்பிக்கப்பட்டு மெல்லமெல்ல தேய்ந்து ஓரிரு நண்பர்களுடன் முடிவடையும். சில அமைப்புகள் தனிநபர் முயற்சிகளாக இருக்கும். அந்த தனிநபரின் உத்வேகத்தாலேயே அவை முன்னெடுக்கப்படும்.பெரும்பாலான சந்திப்புநிகழ்ச்சிகளில் கொஞ்சம் கொஞ்சமாக மனக்கசப்புகளும் பிரிவுகளும் உருவாகும். தமிழ் சிற்றிதழ்சார் இலக்கியச் சூழலில்
மாறாக இந்தச் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒரு பொதுவான ஆர்வத்தின் அடிப்படையிலேயே நிகழ்ந்து வருகின்றன. இவற்றில் எப்போதும் நான் ஒரு மைய விசையாக இருந்து வருகிறேன் என்பதை மறுக்கவில்லை. ஆனால் நான் இவற்றில் எப்போதுமே பெரும்பங்கு வகித்ததில்லை. வேறு நண்பர்கள்தான் உடலாலும் அறிவாலும் உழைத்து இதை நிகழ்த்துகிறார்கள்.
இந்த சந்திப்புநிகழ்ச்சிகள் ஆரம்பித்த காலத்தில் மிக ஊக்கத்துடன் இவற்றில் ஈடுபட்டு பின்னர் இலக்கிய ஆர்வமிழந்து தொடர்பற்றுப்போன பல நண்பர்கள் உண்டு. ஆனால் அனேகமாக எவருமே மனமுறிவடைந்து விலகிச்செல்லவில்லை. இன்றும் அந்த நட்புகள் அப்படியே தொடர்கின்றன. ஆரம்பகாலத்திலேயே இருந்து வருபவர்களுக்கெல்லாம் வயதாகிவிட்டது . துடிப்பான இளைஞராக அன்றிருந்த சூத்ரதாரி [எம்.கோபாலகிருஷ்ணன்] நரைமுடியுடன் தோற்றம் தருகையில் ஒரு இனிய சங்கடம் மனதை வந்தடைகிறது.
இந்த கூட்டங்களுக்கு முறையான வரலாற்றுப்பதிவுகள் எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. 1994 முதலே நித்ய சைதன்ய யதியை பார்க்க நான் செல்லும்போது நண்பர்களைக் கூட்டிச்செல்வதுண்டு. பலர் நித்யாவின் ஆளுமையால் கவரப்பட்டவர்கள்.
ஒருமுறை நித்யா நவீனக்கவிதைகளைப்பற்றி ஒரு உரையாடல் ஏற்பாடுசெய்யலாமே என்றார். நான் நவீனக்கவிஞர்கள் சிலரை அழைத்து அந்த உரையாடலுக்கு ஏற்பாடு செய்தேன். நித்யாவுக்காக அக்கவிதைகளை நானே மலையாளத்தில் மொழியாக்கம் செய்தேன். நித்யா அந்த உரையாடலில் கலந்துகொண்டு கவிதைகளைப்பற்றிப் பேசினார்.
நித்யா இருக்கும்போதே ஏழு சந்திப்புகள் நடந்தன. அதன்பின் தொடர்ச்சியாக ஊட்டியில் இந்தச் சந்திப்புகளை ஏற்பாடு செய்தோம். நித்யா மறைந்தபின் கலாப்ரியா உதவியுடன் குற்றாலத்தில் மூன்று சந்திப்புகள். ஒருமுறை நண்பர் மூக்கனூர்ப்பட்டி தங்கமணி ஏற்பாட்டில் ஒகேனேக்கலில். ஸ்ரீதரன் ஏற்பாட்டில் திற்பரப்பில் ஒருமுறை. நீலகண்டன் அரவிந்தன் ஏற்பாட்டில் கன்யாகுமரியில் இன்னொரு முறை
வருடத்தில் மூன்று சந்திப்புகள் நிகழ்ந்து வந்தன. நான்குகூட நடந்திருக்கிறது. இப்போது வருடத்தில் இரண்டாகக் குறைந்துவிட்டது. ஊட்டியில் வருடத்திற்கு ஒருமுறைதான். பொதுவாக நான் இப்போதெல்லாம் எந்த முன்முயற்சியும் எடுப்பதில்லை. நண்பர்களே கூப்பிட்டு கூப்பிட்டு வற்புறுத்தி ஏற்பாடுகள் செய்து அவர்களே கூடி அவர்களே நடத்திக்கொள்கிறார்கள்.
பல வருடங்கள் ஒரு அடிப்படைப்பிடிவாதத்தை கொண்டிருதோம். ஆரம்பகால சந்திப்புகள் முழுக்க என் சொந்தச்செலவிலேயே நடந்தன. ஆகவே ஓர் அளவுக்குமேல் சந்திப்பாளர்கள் தேவை இல்லை என்று கணக்கிட்டிருந்தோம்.அப்படியே நடத்திவந்தோம்
ஆனால் இன்று மெல்லமெல்ல சந்திப்புநிகழ்ச்சி பெரிதாகிவிட்டது. இன்று இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து நண்பர்கள் வருகிறார்கள். மலேசியாவிலும் இலங்கையிலும் இருந்துகூட வருகிறார்கள். குருகுலத்தில் அதிகபட்சம் நாற்பதுபேர்தான் தங்க முடியும். ஆகவே பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறோம்.
ஆனாலும் நெருக்கமானவர்களை தவிர்க்கமுடிவதில்லை. இப்போதெல்லாம் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்கிறார்கள். சென்றமுறை வெளியே அறைபோட்டிருந்தோம். இம்முறை அருகிலேயே ஒரு விடுதியை வாடகைக்கு எடுத்திருக்கிறோம். செலவில் பெரும்பகுதியை பங்கேற்பாளர்கள் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று நடைமுறை வந்துவிட்டது. செலவிட முடியாதவர்கள் பணம் தரவேண்டியதில்லை.
என்ன சிக்கல் என்றால் இந்த சந்திப்பு நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை இணையத்தில் எங்கள் குழுமத்துக்குள் வெளியிட்ட உடனேயே பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை முழுமையடைந்துவிட்டது. இருந்தாலும் பொது அறிவுப்பு தேவை என்பதற்காக இணையதளத்தில் வெளியிட்டோம். ஆனால் மூன்றே மணி நேரத்தில் பங்கேற்பாளர் பதிவை நிறுத்திக்கொள்ள நேர்ந்தது.
இதனால் பல நண்பர்கள் மனவருத்தம்டைந்து எழுதினார்கள். அச்சு ஊடகம் வழியாக வாசிப்பவர்கள் பலர் நான் இணையமாநாடு நடத்துகிறேனா என கோபம் கொண்டு கேட்டார்கள். இப்பிரச்சினையை சமாளிப்பது எப்படி என்று தெரியவில்லை. குருகுலம் அளிக்கும் இலவச இடம் இல்லாமல் இப்படி ஒரு வருடாந்தர சந்திப்பை நடத்துவது எளிதல்ல. குருகுலம் மிகச்சிறியது. இதற்குமேல் பெரிய நிகழ்ச்சிகள் அங்கே நடக்கமுடியாது.அந்தக்கூடத்தில் அறுபதுபேர் நெருக்கியடித்து அமரலாம். அதற்குமேல் சாத்தியமில்லை.
இந்தச் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடங்கிய நாள்முதல் இன்று வரை இதன் அச்சாணியாக இருப்பவர் என் நண்பரான நிர்மால்யா. அவருக்கு நான் நன்றி சொல்லக்கூடாது. நான் அவரிடம் பேசுவதே இப்போதெல்லாம் குறைந்துவிட்டது. சந்திக்கும்போதும் பிரியும்போதும் மார்போடு கட்டித்தழுவுவதுதான் எஞ்சியிருக்கிறது
நாராயணகுருகுலமும் வசவு இணையதளமும்
திற்பரப்பு
யுவன் கவிதையரங்கு
ஊட்டி பெண்களுக்கு இடமுண்டா?
ஊட்டியிலிருந்து கொண்டுவந்தவை
ஊட்டி இருகடிதங்கள்
ஊட்டி சந்திப்பு அலைகள்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
May 23, 2012
ஃபேஸ்புக்கில் மீண்டும்
சற்று முன் ஒரு நண்பர் இந்த இணைப்பை அனுப்பி இது நானா என்று கேட்டிருந்தார்.
நான் ஏற்கனவே இதை தெளிவுபடுத்திவிட்டேன். நான் ஃபேஸ்புக்கில் இல்லை. ஏதோ அறிவிலி திட்டமிட்டு இந்த செயலைச் செய்கிறான். இந்த பக்கத்தில் வருவனவற்றுக்கு நான் பொறுப்பல்ல்ல.
இதேபோன்ற செயல்களை இணையத்தில் எதிர்கொள்வது மிக கடினம். முளைத்தபடியே இருப்பார்கள். ஆகவே இந்த விஷயத்தை வாசகர்கள் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டுமென விரும்புகிறேன்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
நிபந்தனைகள்[மறுபிரசுரம்]
ஊட்டிசந்திப்பு http://www.jeyamohan.in/?p=7441
ஊட்டி சந்திப்பு குறித்து http://www.jeyamohan.in/?p=7620
அன்புடையீர்,
ஊட்டி இலக்கியச்சந்திப்பின் நிபந்தனைகளை தங்களுக்கு தபாலில் அனுப்புவதில் பேருவகை கொள்கிறோம். இவ்வகையான உவகைகள் எங்களுக்கு எப்போதாவதுதான் கிடைக்கின்றன என்பதனால் அவற்றை தவிர்க்க விரும்பவில்லை.இலக்கியக்கூட்டங்கள் இலக்கிய வாசகர்களுக்காக நடத்தப்படுபவை என்பதை நீங்கள் அறிவீர்கள். இலக்கியவாசகர்கள் பொதுவாக இலக்கியம் என்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்று அறிந்தவர்கள். இந்தச்சிக்கலைச் சமாளிக்கவே கீழ்க்கண்ட நிபந்தனைகள் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
எங்கள் இலக்கியக்கூட்டம் தரையில் அமர்ந்து நிகழ்த்தப்படுவது. மொத்தம் எட்டு அமர்வுகள். ஆகவே அரங்கில் படுப்பதும் நிற்பதும் அனுமதிக்கபப்டுவதில்லை. அப்படி வேறுவழியில்லாமல் அனுமதிக்கப்படுமென்றால் அவற்றுக்கு நிற்பு மற்றும் கிடப்பு என்று பெயர்சூட்டப்படும் . பேசும்போது ஒலி உரத்தலாகாது, குருகுலத்தில் ஆவிக்குரிய எழுப்புதல் நிகழ்வதாக அபவாதம் ஏற்பட ஏதுவாகும்.
தேனீர் உடைவு போன்றவற்றுக்கு நேரம் ஒதுக்கப்பட முடியாது. உடைந்தவற்றை சீர்செய்ய நெடுநேரமாகிறது என்பதுடன் பெரும்பாலான பேச்சாளர்கள் அந்த உடைவு வழியாக சொந்தக்கவலைகளுக்கு திரும்பிச்செல்லுதலும் நிகழ்கிறது. இயற்கை உபாதைகளில் அப்பகுதியிலேயே கடைசியில் எஞ்சக்கூடியவற்றில் கவிதை தவிர பிற அனுமதிக்கப்படுவதில்லை.
அரங்கில் புரட்சி குறித்த பேச்சுகள் வரவேற்கப்படுகின்றன. ஆனால் அப்போதே அங்கேயே அதை நிகழ்த்திவிடவேண்டும் என்ற அதீத உற்சாகம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. சம்பந்தப்பட்டவர் ஊருக்குத்திரும்பினால் மேலதிகாரி மற்றும் மனைவியின் அனுமதியை அதற்கு வாங்க முடியாது என்ற காரணமும் நிராகரிக்கப்படுகிறது. மிக அவசியமென்றால் அவர் தன் தனியறைக்குள் அதைச் செய்துகொள்ளலாம். ஒலி வெளியே கேட்கக்கூடாது.
பார்ப்பனீயம் பற்றி உரையாடுவது அனுமதிக்கப்படுகிறது. கூடவே கவுண்டரீயம் நாடாரீயம் வேளாளரீயம் [தங்கம் என்று சொல்லவேண்டும் என்ற சிலருடைய வாதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை] நாயரீயம் [இது உத்தரீயம் என்றும் சொல்லப்படும்] முதலியாரீயம் போன்றவையும் அனுமதிக்கப்படும். பின்னவை பிரச்சினைகளை உருவாக்கும் என நம்புபவர்கள் முதலில் உள்ளதையும் வேண்டாமென ஒத்துக்கொள்ளவேண்டும் என்று கோரப்படுகிறது.
கருத்துக்களை டிவிட்டர் அல்லது குறள் வடிவில் சுருக்கமாகச் சொல்வது வரவேற்கப்படுகிறது. அதற்காக தேவதேவன் பாணியில் தலையசைப்பு மற்றும் புன்னகை வழியாக இலக்கியக் கருத்துக்களை வெளிப்படுத்துவது சிறந்த முன்னுதாரணமாக அமையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். காரணம் இந்த இலக்கியவிவாதம் தமிழில் நிகழ்கிறது, மேலேசொல்லப்பட்ட வெளிப்பாடுகள் தமிழுக்குள் வருமா இல்லையா என்பதைப்பற்றிய சந்தேகம் அறிவுலகில் நீடிக்கிறது.
விவாதங்கள் ஆரோக்கியமாக நிகழவேண்டியிருக்கிறது. ஆகவே அனைவரும் குளித்துவிட்டு வந்தமர்தல் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறொம். அத்துடன் பிறர் பேசும்போது கண்களைமூடி ஆழமாகச் சிந்தனை செய்வதன் விளைவாக தலைப்பகுதி மென்மையாக அசைவது, தத்துவ விவாதங்களை கொட்டாவி மூலம் எதிர்கொள்வது ஆகியவை தவிர்க்கப்படவேண்டும். தோள்களைக் குலுக்குவது கைகால்களை நீட்டிக்கொள்வது இடுப்பை அசக்கி அமர்வது போன்றவை அனுமதிக்கப்படுகின்றன. ஏப்பம் விடுமளவுக்கு உணவு அமையாது.
கேள்விகளில் ‘இப்ப தமிழ்க்கவிதையை எடுத்துக்கொண்டா நான் என்ன சொல்ரேன்னாக்க பொதுவா பாக்கிரப்ப கவிதை சம்பந்தமான விஷயங்களிலே சொல்ரதுக்கு இருக்கிற விஷயங்களிலே என்னைப்பொறுத்தவரை எது முக்கியம்னா ஒரு நல்ல கவிதை ஆக்சுவலா எப்டி இருக்கணும்னா நாம எல்ல்லாருக்குமே தெரிஞ்சதுமாதிரி அந்தக் கவிதையோட சாராம்சத்திலே இருக்கிறத எப்டிச் சொல்ரதுன்னே தெரியலை இருந்தாலும் டிரை பண்றேன் .எதுக்குச் சொல்றேன்னா’ போன்று அதிகமான அசைச்சொற்றொடர்களை பயன்ப்டுத்துவதை தவிர்க்கலாம். தவிர்ப்பது கடினம் என்றால் அவற்றை விவாதம் முடிந்த பிறகு தனியாக வைத்துக்கொள்லலாம்.
கவிதைகளில் நுண்ணிய அர்த்தங்கள் எடுப்பது வரவேற்கபப்டுகிறது, அரைப்புள்ளி காற்புள்ளி ஆச்சரியக்குறிகளை குறியீடுகளாக எடுத்துக்கொள்ளும் அணுகுமுறைக்கு அனுமதி இல்லை, நேரம் கருதி. அரங்குக்கு வெளியே கருத்துப்பரிமாற்றம் இருசாராருக்கும் உடலூறு நிகழாவண்ணம் நடப்பது ஊக்குவிக்கப்படும்.
எந்தக்கருத்தும் மறுக்கப்படலாம் என்பதை தெரிவித்துக்கொள்ளும் அதேசமயம் மறுக்கப்பட்டவர் மிஞ்சிய அரங்கு முழுக்க மறுத்தவரை மறுக்கும் கட்டாயத்துக்கு ஆளாகிறார் என்பதை நினைவில்கொள்ளுமாறு இந்த அரங்கமைப்பாளர் அரங்கசாமி கோருகிறார். அவரை அரங்காசாமி என்று குறிப்பிடுவது தடைசெய்யப்படுகிறது.
விவாதங்களில் மட்டுறுத்தல் உண்டு. பேச்சு மிக நீளமாக செல்லுமென்றால் அது தொட்டுறுத்தலாகவும் அமையும். அதுசார்ந்த உறுத்தல்கள் ஏற்படக்கூடாதென்பதனால் முன்னரே சொல்லிக்கொள்கிறோம். விவாதங்கள் திசைமீறி செல்லுவதை தவிர்க்க வேண்டும். தேவதேவனைப்பற்றி பேசும் போது தேவேந்திரநாத தாகூரைப்பற்றி பேசுவது எப்படியோ தவிர்க்கமுடியாததாக ஆகிவிடுகிரதென்றாலும் தேடிவந்த மாப்பிள்ளையைப்பற்றி பேசுவது கொஞ்சம் அதிகச்சுற்றலாகவே கருதப்படும்.
அரங்கு இந்திய முறைப்படி நிகழும். இந்து ஞானமரபின்படி முமுட்சு அல்லது ஞானதாகி என்னும் மாணவர் லௌகீகமாக கடும்துன்பங்களை அனுபவிப்பதன் மூலம் கல்வியை இன்பமானதாகக் காணும் மனநிலைக்குக் கொண்டு செல்லப்படும் வழக்கம் உள்ளதை சுட்டிக்க்காட்ட விரும்புகிறோம். ஆகவே உணவு பௌத்த முறைப்படியும் உறைவிடம் சமண முறைப்படுயும் அமைக்கப்படும். உடைகளை இந்து முறைப்படி அணிதல் வேண்டும், சமணமுறை கண்டிப்பாக விலக்கப்படுகிறது- கதவைமூடிக் குளிக்கும்நேரம் தவிர.
அரங்கில் சோமபானம் சுராபானம் ஆகியவற்றை மட்டுமே அருந்த அனுமதி. வேத முறைப்படி அந்தந்த பானங்கள் அந்தந்த தேவர்களின் அனுமதியுடன் அருந்தப்படவேண்டுமென்பதனால் அவர்களின் கையெழுதிடப்பட்ட சான்றொப்பக் கடிதங்கள் அவசியம். பிற மதுவகைகள் அனுமதிக்கப்படுவதில்லை. அறிவுஜீவிகள் தாங்களே உலகின் மையம் என்ற எண்ணம் கொண்டவர்கள். மது அருந்தும் போது தன்னகங்காரம் மீதூறி உலகமே தங்களை மையம் கொண்டதாக எண்ண ஆரம்பிக்கிறார்கள். பிற அறிவுஜீவிகள் அதை ஒத்துக்கொள்வதில்லை.
மேலும், வேறுபல கருத்தரங்க விளைவுகளில் இருந்து அறியப்பட்டதென்னவென்றால் மது அருந்தியவர்கள் கோட்ப்பாடுகளை முன்வைத்துப் பேசும்போது அவர் வழக்கம்போல உளறுகிறாரா மதுவால் உளறுகிறாரா என்று கண்டுபிடித்து பின்னதை மன்னிப்பது கடினமாக ஆகிறது. மது அருந்தியவர்களுடன் மதுஅருந்தாதவர்கள் தீவிரமாக உரையாடும்போது பின்னவர் மது அருந்தியிருப்பதாக மனைவியர் எண்ணுவதற்கு இடையாகிறது. மது அருந்தியவர்கள் மது அருந்தியவர்களிடம் உரையாடும்போது அவர்கள் சந்தித்துக்கொள்ளும் அந்தர புள்ளியை மது அருந்தாதவர்கள் கண்டுபிடிக்க முடிவதில்லை. மது அருந்தியவர்களுக்கு அது நினைவில் நிற்பதும் இல்லை.
மேலும் இலக்கிய நுண்ணுணர்வற்ற காவல்துறையினர் கவிஞர்கள்,மது அருந்திய கவிஞர்கள்,மது அருந்தாத கவிஞர்கள்,மது அருந்திய கவிஞரல்லாதவர்கள், மது அருந்தாத கவிஞரல்லாதவர்கள், மது அருந்தியதாக கருதப்படும் கவிஞர்கல், மதுஅருந்தியதாக கருதப்படும் கவிஞரல்லாதவர்கள், மது அருந்தாதவர்களாக கருதப்படும் மது அருந்திய கவிஞர்கள், மது அருந்தியதாக கருதப்படும் மது அருதாத கவிஞரல்லாதவர்கள் ஆகியோருக்கிடையே தெருமுனை விவாதங்களில் நிலவும் நுண்ணிய வேறுபாட்டைக் கண்டுபிடிக்க முயலாமல் மொத்தமாக கொத்தோடு அள்ளிக்கொண்டு போகும் அவலம் தமிழகத்தில் நிகழ்கிறது. பீதியில் அவர்கள் அழுவதானால் கவிதையை தற்காப்புக்கு அவர்களால் பயன்படுத்த முடியாத நிலையும் உள்ளது.
மேலும் லாத்தி முனையில் பெயர் கேட்கப்படும்போது புனைபெயரையா நிஜபெயரையா எதைச் சொல்வதென்றறியாமல் கவிஞர்கள் கண்ணீர் விட்டு இரண்டையும் கலக்கிச் சொல்லி அடிபெறும் நிலை நீடிக்கிறது. ‘அண்டப்பிரவாகன்’ என்று சொல்லிய கவிஞனை நோக்கி உள்ளூர் ஏட்டு ”சார் அண்டப்புளுகன்னு சொல்றான் சார்” என்று சொல்லி மேலும் தீவிரமாக விசாரிக்க தலைப்பட்டதாகவும் அவரிடமிருந்த பின் நவீனத்துவக் கவிதைத்தொகுதியை பிடுங்கி அவரே அமர்ந்து வாசித்து கடும் பீதியடைந்ததாகவும் தெரியவந்துள்ளது. அதன் பின் அவர் ‘சுரோணித நாயே’ என்று கைதிகளை திட்டியிருக்கிறார்.
நிலையத்தில் நிலைமறந்திருக்கும் கவிஞர்களை ஜாமீனில் மீட்கச்செல்லும் அமைப்பாளர்களை நிலைய காவல் ஆய்வாளர் ‘நானும் கவிஞந்தான் சார்’ என்று சொல்லி ‘தைமகளே வருக தமிழ்கொண்டு தருக’ என்று தொடங்கி மேலே செல்லும் நாநூற்றிச் சொச்சம் வரிகள் கொண்ட கவிதை ஒன்றை வாசித்துக்காட்டி வன்முறையை செலுத்தி மேற்கொண்டு கவிதையரங்குகளே தேவையில்லை என்ற நிலைக்கு அவரை ஆளாக்கிய வரலாறும் உள்ளது.
அரங்குக்கு வெளியே மது அருந்துவது முற்றிலும் தடைசெய்யப்படுகிறது. படிமக்கவிதைக்கும் படியாத கவிதைக்குமான உறவைபப்ற்றி 1962ல் க.நா.சு சி.சு.செல்லப்பாவிடம் என்ன சொன்னார் என்பது சம்பந்தப்பட்ட இருவருக்குமே நினைவுக்கு வராத நிலையில் அதைப்பற்றி விடிய விடிய விவாதிப்பதையும் மறுநாள் நாற்பது முறை பேதிபோன பிஷன்சிங் போல வெளுத்துப்போய் அரங்கிலமர்ந்திருப்பதையும் மன்னிக்கலாமென்றாலும் ‘செல்லப்பாவைச் சொன்னவனை நில்லப்பான்னு சொன்னாலும் விடேன்’ என்று வன்முறையில் ஈடுபடுவது அரங்கமைப்பாளர்களுக்குச் சட்டச்சிக்கல்களை உருவாக்குவதை தெரிவிக்க விரும்புகிறோம்.
பங்கேற்பாளர்கள் எல்லா அரங்கிலும் கலந்துகொண்டாகவேண்டும். இந்த நிபந்தனைக்கான முக்கியமான காரணம் பெரும்பாலான கவிஞர்களும் இலக்கிய ஆர்வலர்களும் அவசியமில்லாத விவாதங்களில் கலந்துகொள்ள விரும்புவதில்லை, தங்களைத்தவிர பிறவற்றை அவசியமென கருதுவதும் இல்லை. அத்துடன் படிமக்கவிதை விவாதத்தின் நாலாம் நாள் பதிமூன்றாம் அமர்வுக்கு அன்றலர்ந்து வந்தமர்ந்து ‘படிமம்னாக்க இந்த தாசில்தார் ஆபீஸிலே குடுப்பாங்களே’ என்று கேட்கும் வாசகர்களையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டியிருக்கிறது. மேலும் விவாதநேரத்தில் கடைத்தலுக்கு [ஷாப்பிங்] போய் மீண்டு நுண்ணுணர்வின் அடித்தளங்களைப்பற்றிய விவாதம் நடுவே காகிதம் சொரசொரக்க பொருட்களை எடுத்து மறுபரிசீலனைசெய்பவர்களை தவிர்க்கவேண்டிய தேவையும் உள்ளது.
இலக்கிய அரங்குகள் இருவகை. முதல்வகை அரங்குகளை கலகரங்கு என்று சொல்கிறார்கள். வருடம் முந்நூற்று அறுபது நாளும் அலுவலக விதிகளுக்குக் கட்டுப்பட்டு மனைவிக்குக் கட்டுப்பட்டு போக்குவரத்துப்போலீஸ¤க்கு மாமூல்பட்டு வாழும் இலக்கியவாதிகள் நான்குநாள் ஓர் இடத்தில் கூடி பலர்மீது நீட்டிய மொந்தை வாங்கி பெரிய கள் பெற்றால் பிறர்க்கீந்து தானருந்தி சிறிய கள்பெற்றால் தானே அருந்தி சேற்றில் விழுந்த ஜெல்லிமீன் போல இலக்கிய விவாதங்களில் திளைத்து சுவர்மூலைகளில் வாந்தி எடுத்து காலிப்புட்டிகளால் சககலைஞர்களை தாக்கி இலக்கியநிகழ்ச்சிகளில் சுவர்பற்றி நுழையும்போது அமைப்பு சற்றே ஆட்டம் காண்கிறது. மூன்று லார்ஜுக்குமேல் என்றால் குப்புற விழுந்தும் விடுகிறது.
நிபந்தனைகள் உள்ள எங்கள் அரங்கு மேலே சொன்ன கலகரங்குக்கு எதிரான கலகம். இது கலகலரங்கு என்று சொல்லப்படுகிறது. முதலில் சொன்ன அரங்குகளில் பங்கேற்றவர்கள் பேசியவற்றையும் கேட்டவற்றையும் நினைவில்கொண்டுவர முயன்றபடி திரும்புவார்கள் , இதில் பங்கேற்பவர்கள் அவற்றை மறக்க முயன்றபடி திரும்பிச் செல்வார்கள் என்பதே மையமான வேறுபாடாகும்.
அன்புடன்
அமைப்பாளர்
பி.கு இந்நிபந்தனைகள் மூலம் எங்களுக்கு கட்டுப்படியாகுமளவுக்கு பங்கேற்பாளர் எண்ணிக்கை மறுநிர்ணயமாகாவிடில் மேலதிக நிபந்தனைகள் விதிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
தொடர்புடைய பதிவுகள்
ஊட்டியிலிருந்து கொண்டுவந்தவை — கடலூர் சீனு
அறிவுஜீவிக்குரங்கும் ஆப்பும்
இலக்கியக்கோட்பாடுகள்
கவிதை,கடிதங்கள்
சாதனைக்கவிதைபற்றி
அசோகவனம் — விமர்சனம்
கடிதங்கள் — அசோகவனம்
அசோகவனம்
பரிந்துரை
மோவாயிசம், தாவாயிசம்-கடிதங்கள்
மோவாயிசம்
பரிபாஷை பரவிய நிமிடங்கள்!!!
கடிதங்கள்
செட்டி நாட்டு மருமகள் மான்மியம்
வினவு
செட்டி நாட்டு மாமியார் மான்மியம்
கடிதங்கள்
ஓர் இரவு
இருநாய்கள்
கூட்டமோ கூட்டம்
வாவிகள்
அன்புள்ள ஜெ,
நலமாகயிருப்பீர்கள் என நம்புகிறேன். தங்களின் அருகர்களின் பாதை பயணத்தின்போது எடுக்கப்பட்ட வாவிகளின் புகைப்படங்கள் போல வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுள்ள நடைவாவி தண்ணீர் குளங்களின் அருமையான புகைப்படங்களை இந்த இணைப்பில் காணலாம். மொத்தம் நான்கு பக்கங்களுள்ளன.
இந்தமுறையும் ஊட்டி சந்திப்பிற்கு என்னால் வர இயலாது, ஜெ. கூட்டம் எப்பொழுதும் போல சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.
அன்புடன்
தங்கவேல்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வேதஞானம் எவருக்கு இருந்தது?
அன்புள்ள ஜெ,
வழக்கம் போல உங்களின் விசாலமான பார்வையுடன் எழுதப்பட்ட கட்டுரை. நன்றி.
வேதக்கல்வி பிராமணரல்லாதவர்களுக்கு மறுக்கப்பட்டது என்ற வாததை நான் ஏற்கவில்லை.
ஆம் ஜெ, எங்கள் ஊரில் விஸ்வகர்மா கர்மா இனத்தவர்க்கு உபநயனம், கல்யானம், இறுதிக் கருமங்கள் என சடங்குகள் செய்து வைக்கும் அவர்கள் குல வைதீகரை அறிவேன். ஆச்சார்லு என்று அழைப்பார்கள். அவரிடம் கிரந்த லிபியில் வேத நூல்கள் மற்றும் பிரயோக விதிகள் பற்றின பழைய கையெழுத்துப்பிரதிகள் பார்த்திருக்கிறேன். அவர் வேதம் கற்றவர். பல கோயில்களுக்கு தலைமைப் பொறுப்பில் இருந்து கும்பாபிஷாகம் நடத்தி வைத்துள்ளார். இப்போது உயிருடன் இல்லை. அவருடைய தந்தை தான் அவர்கள் குல பாடசாலையில் ஆசிரியராக இருந்திருக்கிறார். வேதக் கல்வியில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. பாரம்பரியம் அறுபடக்கூடாது என்று தனது மகனுக்கு கற்றுக் கொடுத்திருந்திருக்கிறார். அவர்கள் குடும்பத்திலேயே அடுத்த தலைமுறை அதைக் கற்கவில்லை. எனக்குத் தெரிந்து பிராமணரல்லாத வேதமறிந்த ஒரு குடும்பத்தின் தொடர் அறுபடுவதைக் கண் முன்னால் காண்கிறேன்.
இன்னொரு ஸ்தபதியை அறிவேன், பல யஜுர் வேத மந்திரங்களை அழகாகச் சொல்வார். அவரும் பாரம்பரியமாகக் கற்றவர் தான். பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அநேகமாக அவர் பிள்ளைகளும் பாரம்பரிய வேதக் கல்வியை படிக்காமல் விட்டிருக்க வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட குடும்பங்களை கேள்விப்பட்டிராதவர்கள் வேதக்கல்வி என்பது பிராமணரல்லாதவர்க்கு மறுக்கபட்டது என்றே வாதிடுவார்கள். இது போலவே தொடர்ந்து அனைவரும் கைவிடும் போது, இயல்பாகவே வேதக்கல்வியில் பிராமண முற்றதிகாரம் என்ற மாயை உருவாக ஆரம்பிக்கும்.
எனக்கு ஒரு சந்தேகம். பிராமண, சத்திரிய, வைஸ்ய என மூன்று வர்ணத்தவரும் கண்டிப்பாக வேதம் பயில வேண்டும் என்பது இந்துமதத்தின் விதியாக இருந்த பொழுது, பிராமணர் அல்லாதவர் வேதக் கல்வியை கைவிட்டதற்கு ஏதாவது வரலாற்றுக் காரணம் உண்டா? எந்தக் காலக் கட்டத்தில் அப்படி பெருவாரியான பிராமணரல்லாதவர்கள் வேதக்கல்வியை கைவிட ஆரம்பித்தனர். இஸ்லாமியர் ஊடுருவலின் போதா அல்லது ஐரோப்பிய ஆதிக்கத்தின் போதா, இல்லை இவற்றுக்கெல்லாம் முன்பேவா?
வேதம் கற்பித்தலும், சடங்குகள் செய்வித்தலும் தொழிலாக இருந்த பிராமணர்களில் மாறிவரும் காலச்சூழலில் அதன் பொருளியல் ரீதியான லாபமின்மையைக் கருதி மிகக் கணிசமானவர்கள் வேதகல்வியை கைவிட்டிருக்கின்றனர். ஆனால் சத்திரிய, வைசியர்களுக்கு அது தொழிலாக இல்லாததால் பொருளியல் காரணமும் இருந்திருக்கமுடியாது என்று எண்ணுகிறேன். மேலும் வேதக்கல்வி என்பது பெருமைக்குரிய, பிறருக்கு கிடைக்காத சிறப்புத் தகுதியாக, கௌரவமாகக் கருதப்பட்ட காலகட்டத்தில் ஏன் வேதக் கல்வியை தொடராமல் விட்டார்கள்?
நன்றி,
பிரகாஷ்
அன்புள்ள பிரகாஷ்,
இந்தியமெய்ஞானம் சம்பந்தமான விஷயங்களில் இன்று நிலவும்பெரும்பாலான கருத்துக்கள் அரைகுறையான ஆரம்பகட்ட புரிதல்களுடன் அல்லது தெளிவான உள்நோக்கத்துடன் ஐரோப்பிய ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டவை. இன்றுகூட நம் கல்வித்துறையை அந்த எல்லைகளை விட்டு விலகிச்சிந்திக்க ஐரோப்பிய ஆதிக்கம் அனுமதிப்பதில்லை.
ஓர் ஆய்வுக்கு ஐரோப்பிய அங்கீகாரம் தேவை என்ற தாழ்வுணர்ச்சி நம்மிடம் உள்ளது. பல்வேறு கருத்தரங்குகள், நிதியளிப்புகள் வழியாக தங்கள் ஆதிக்கத்தை நம் கல்வித்துறையில் நிலைநாட்டி வருகிறது ஐரோப்பியமைய நோக்கு. அதன் கூலிப்படைகளின் கூச்சல்களையே நாம் அதிகமும் கேட்டு வருகிறோம்.
இதிலிருந்து விலகிச் சிந்திப்பதற்குத் தேவையானது இந்தப்பொது மரபுக்கு வெளியே உள்ள ஏதேனும் குருமரபுகளுடனான தொடர்பு. நீடித்ததும் தொடர்ந்ததுமான ஆராய்ச்சி. என்னைப்பொறுத்தவரை இவ்விஷயத்தில் பிற ஆய்வாளர்கள் செய்யும் ஆய்வுகளை வாசித்தறியும் இடத்திலேயே உள்ளேன். அசலான ஆய்வுகளைச் செய்ய என்னுடைய மனநிலையும் நான் ஈடுபாடு கொண்டுள்ள கலையும் என்னை அனுமதிப்பதில்லை.
இந்தியஞான மரபு பற்றிய என்னுடைய பார்வை இவ்விஷயத்தில் விரிவான ஆய்வுகளைச் செய்த நித்ய சைதன்ய யதி மற்றும் முனி நாராயணபிரசாத், சுவாமி வியாஸப்பிரசாத் போன்றவர்களின் நூல்கள் மற்றும் விவாதங்கள் வழியாக உருவானது. இவற்றிலிருந்து நான் அடைந்த சிலப்பொதுப்புரிதல்களைக் கொண்டே இவ்விஷயத்தில் கருத்துச் சொல்கிறேன். இவை இந்தக்கோணத்தில் சிந்திப்பவர்களுக்கான தொடக்கமாக அமையும் என்ற நம்பிக்கையில்.
இந்தியா என்ற மாபெரும் நிலப்பரப்பு எப்போதுமே ஒற்றைப்போக்கு கொண்டதாக இருந்ததில்லை என்ற யதார்த்தத்தில் இருந்தே நாம் ஆரம்பிக்கவேண்டும். ஏதேனும் ஒரு விஷயம் இந்தியா முழுக்க ஒரேசமயம் ஒன்றுபோல கடைப்பிடிக்கப்பட்டது என்று சொல்வதைப்போல அபத்தமான ஏதுமில்லை. இந்தியா பல்வேறு சமூக சக்திகளின் முரணியக்கத்தின் விளைவாக பல்வேறு கலாச்சாரப்படிநிலைகளில் வளர்ந்து வந்தது. பல்வேறு கருத்தியல்நிலைகள் ஒரே சமயம் இருந்துகொண்டிருந்தன.
மிக எளிமையாக இந்தியாவை ஒற்றைக் கலாச்சாரவெளியாகவும் , இங்கே நிலவிய கருத்தியலை ஒற்றைப்படையான இயக்கமாகவும் வகுத்துக்கொண்டதே ஆரம்பகால இந்தியவியலாளர்களின் மிகப்பெரிய பிழையாகும்.
அதற்கு மிகச்சிறந்த உதாரணம் மனுநீதிக்கும் வர்ணாசிரமதர்மத்துக்குமெல்லாம் ஐரோப்பியர்களால் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம். இந்தியாவையே மனுநீதி என்னும் நெறிநூல்தான் ஆட்சி செய்கிறது என்றும், இந்தியாவின் ஒட்டுமொத்த சமூக அமைப்பும் மனுநீதியால் வகுக்கப்பட்ட வர்ணாசிரம அமைப்புக்கு கட்டுப்பட்டு உருவானது என்றும் அவர்கள் வகுத்துக்கொண்டார்கள்.
இன்றுவரை இந்தியாவின் பொதுவான கருத்தியல்விவாதத்தளத்தில் மையக்குரலாக ஒலிப்பது இந்தக்குரலே. இதை திட்டவட்டமாக நிலைநிறுத்த ஐரோப்பிய ஆய்வாளர்கள் இன்றுகூட அவர்கள் நூல்களில் படும்பாடு ஆச்சரியமூட்டுவது. மேற்கோள்காட்டுவதையே சிந்தனை என்று கற்றுக்கொண்ட நம்மூர் அசடுகள் அதற்கு உரிய பின்பாட்டும் பாடிவருகிறார்கள்.
வேறு ஒரு கோணத்தில் சாதாரணமாக ஒருவர் சிந்திக்கமுயல்வதுகூட பெரும்பிழையாக, அத்துமீறலாக இவர்களால் கருதப்படுகிறது. கல்வித்துறையில் ஒருவர் அப்படிச் சிந்திக்கப்புகுந்தால் அவர் பல்வேறு முத்திரைகுத்தல்களுக்கு ஆளாவார். விலக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு அழிவார் என்பதே இன்றைய நிலை. ஆனாலும் எதிர்காலத்தில் இந்த கோணத்திலான ஆய்வுகள் உருவாகி வரும் என்றே நான் நினைக்கிறேன்.
வியாசமகாபாரதம் பல்வேறு ஸ்மிருதிகளைக் குறிப்பிடுகிறது.பல ஸ்மிருதிகள் பெயர் மட்டுமே அறியப்பட்டவை. உதாரணம் லஹிமாதேவி என்ற சத்ரியப்பெண் எழுதிய விவாதசந்த்ரம் என்ற ஸ்மிருதி. ஸ்மிருதிகள் உருவாகிக்கொண்டே இருந்திருக்கின்றன. என் வீட்டிலேயே நான் யாக்ஞவால்கிய ஸ்மிருதி உட்பட மூன்று ஸ்மிருதிநூல்களை வைத்திருக்கிறேன். அவற்றில் ஒன்றே மனுஸ்மிருதி
ஸ்மிருதிகள் ஓர் அதிகாரச்சூழலில் அச்சூழலின் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டவை. பல ஸ்மிருதிகள் நான்குவருணத்தவரும் அவரவருக்கான வேதமந்திரங்களை கற்று அவரவருக்குரிய வேள்விச்சடங்குகளை செய்யவேண்டுமென அறிவுறுத்துகின்றன. நாரதஸ்மிருதி சூத்திரர்கள் உட்பட அனைவருக்கும் வேதஞானத்தை கட்டாயப்படுத்துவதோடு வருணம் விட்டு வருணத்துக்கு மாறுவதையும்கூட அங்கீகரிக்கிறது.
இந்த ஸ்மிருதிகள் ஒரேசமயம் இந்தியாவின் பல இடங்களில் செல்வாக்குடன் இருந்தன. பொதுவாக புரோகிதப் பிராமணர்களுக்கு அதிக இடம் கொடுக்கும் மனு ஸ்மிருதி அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. எங்கே புரோகிதமரபு செல்வாக்கு பெறுகிறதோ அங்கு மனுஸ்மிருதி நிறுவப்பட்டது. பத்தாம் நூற்றாண்டுக்குப்பின்னர்தான் மனுஸ்மிருதியின் இடம் மையமான ஒன்றாகியது.
அப்போதுகூட மனுஸ்மிருதி உட்பட எந்த ஸ்மிருதியும் இந்தியாவின் கோடானுகோடி சாமானிய மக்களின் சமூக அமைப்பை வடிவமைத்தது , அவர்களை நேரடியாக கட்டுப்படுத்தியது என்று சொல்லிவிடமுடியாது. பத்தொன்பதாம்நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட இந்தியாவின் பெரும்பாலான மக்கள் தங்கள் குலநீதிகளின்படியே ஆளப்பட்டனர். குல ஆசாரங்களிலேயே வாழ்ந்தனர். அவை அம்மக்களின் வாழ்க்கையின் போக்கில் தொல்பழங்காலம் முதலே உருவாகி வந்தவை.
மனுநீதி உட்பட்ட ஸ்மிருதிகள் எல்லாமே பெரும்பாலும் உயர்மட்டத்தில்தான் இருந்தன. சொல்லப்போனால் அவை செல்வாக்குடனிருந்த இடங்களில்கூட ஒருவகையில் கொள்கையடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக மட்டுமே இருந்தன, திட்டவட்டமான நடைமுறைகளாக அல்ல.
அப்படி இறுக்கமான நடத்தைவிதிகளின் படி இந்தியா என்ற இந்த மாபெரும் மக்கள்பரப்பு செயல்பட்டிருக்க முடியாது என்பதே யதார்த்தம். மனுஸ்மிருதி இரண்டாயிரம் வருடம் முன்னரே வர்ணக்கலப்பை கடுமையாக தடைசெய்துவிட்டது. அப்படியென்றால் அடுத்த இரண்டாயிரமாண்டுக்காலம் இந்தியாவில் சாதிக்கலப்பும் இனக்கலப்பும் நிகழவில்லை என்றா பொருள்?
மனுஸ்மிருதியின் விதிகள் மகாபாரதத்தில் எங்குமே செல்லுபடியாவதில்லை என்பதை எவரும் உணரலாம். பாரதத்தின் மையமான சத்ரிய குலமான குருவம்சம் மீனவப்பெண்ணான சத்யவதியின் கொடிவழி வந்தது. சத்யவதி பட்டத்தரசியாக இருந்து அஸ்தினபுரியை ஆள அன்றைய புரோகித மதமோ,சமூக அமைப்போ, அல்லது பிற சத்ரியர்களோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சில குரல்கள் ஒலிக்கின்றன, அவை வலுப்பெறமுடியவில்லை.
இந்தியாவின் பிரம்மாண்டமான சாதியசமூக அமைப்பை வர்ணாசிரமபிரிவைக்கொண்டு விளக்க முயன்ற ஆரம்பகட்ட இந்தியவியலாளர்கள் எவரும் ஷத்ரியர் என்ற வர்ணத்தை அடையாளம் காண முடியவில்லை. அப்படி ஒரு வர்ணமே இந்தியாவில் இருக்கவில்லை. பெரும்பாலான இந்திய ஆட்சியாளர்கள் யாதவர்களோ , நாடோடி மலைச்சாதியினரோ, விவசாயக்குடிகளாகவோ இருந்து நாடாள்பவர்களாக உருவானவர்களே
தேவகிரியின் யாதவர்கள் முதல் கடைசியாக விஜயநகர நாயக்கர்கள் வரை பெரும்பாலானவர்கள் மேய்ச்சல்தொழில் செய்துவந்தவர்கள். அவர்கள் பெரும்திரளாக ஆகி நிலத்தைக் கைப்பற்றி அரசை உருவாக்கும்போது இயல்பாகவே ஷத்ரியர்கள் ஆகிவிடுகிறார்கள். தக்கலை அருகே உள்ள தலக்குளம் என்ற கிராமத்தைச்சேர்ந்த நாயர்குடும்பம் ஒன்று திருவிதாங்கூர் அரசர்களாக ஆனபோது அவர்கள் ஷத்ரியர்களாக ஆனார்கள். நம்பூதிரிகள் அவர்களை ஷத்ரியர்களாக அங்கீகரித்து தங்கள் வேள்விகளுக்கு காவலர்களாக ஆக்கினார்கள்.
இந்தப்பரிணாமம் ஓர் அன்றாடச்செயலாக நடந்துகொண்டிருந்தது. மனுஸ்மிருதியைக் கொண்டு அல்லது வேறு ஸ்மிருதிகளைக்கொண்டு இதை விளக்கிவிடமுடியாது. ஒற்றைப்படையான எளிய வாய்ப்பாடுகள் எவையும் இதை விளக்க உதவாது.
நான் இப்படித்தான் புரிந்துகொள்கிறேன். இந்தியாவின் நிலப்பரப்பின் பல்லாயிரம் இனக்குழுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ,ஒருவர் மேல் ஒருவர் மேலாதிக்கம் பெற்று, அதற்கேற்ப சமூக அதிகார அமைப்பை உருவாக்கிக் கொண்டார்கள். அந்தப்பரிணாமத்தில் அதற்குத்தேவையான அளவுக்கு ஸ்மிருதிகளை பயன்படுத்திக்கொண்டார்கள்.
இந்தியாவிலிருந்த ஸ்மிருதிகள் பல அனைவரும் வேதங்கள் கற்பதை அனுமதித்திருந்தன. ஆகவே வைத்தியம் , சிற்பவியல், ஆயுதவித்தை போன்ற தொழில்கற்பவர்களும் வேதம் கற்றிருக்கிறார்கள். ஆனால் பழங்காலம் முதலே வேதங்கள் ஒரு தொன்மையின் தொடர்ச்சியை நிலைநிறுத்தும் மந்திரங்களாகவே ஓதப்பட்டிருக்கின்றன. சிற்சில குருமரபுகள் தவிர்த்து வெளியே அவை கற்று ஆராயப்படவில்லை.
மனுஸ்மிருதி பிற வர்ணத்தவர் வேதம் கற்பதை விலக்கினாலும் பற்பல இனக்குழுவினர் மனுஸ்மிருதியின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. குறிப்பாக இந்தியாவில் மருத்துவம், ஆயுதவித்தை, சிற்பவியல் போன்ற கலைகளை குலமரபாக கற்பவர்கள் பொதுச்சமூகத்தின் கட்டுப்பாடில்லாத தனித்த துணைச்சமூகங்களாகவே இயங்கிவந்தனர். அரசனால் கூட கட்டுப்படுத்தமுடியாதவர்களாக அக்குழுக்கள் இருந்தன.
அவர்களிடம் தாந்த்ரீக வழிபாடுகள் செல்வாக்குடன் இருந்தன. அவற்றின்பகுதியாக அதர்வ வேதம் போன்றவையும் இருந்தன.அவர்களின் ஆசாரங்களும் வழிமுறைகளும் பிறருக்கு ரகசியங்களாகவே இருந்தன. சமீபகாலம் வரைக்கும் கூட இந்தநிலை நிலவியது.
புரோகிதர்களின் ஆதிக்கம் இந்தியாவில் சீராக அதிகரித்து அதன் விளைவாக மனுஸ்மிருதி மையமாக ஆனபோது பிறர் வேதங்களை ஓதுவது இல்லாமலாகி தொழில் சார்ந்த சடங்குகளுக்குள் மட்டுமே ஒடுங்கியிருக்கலாம்.
பொதுவாக ஒன்றைப்பார்க்கிறேன். மரபான ஞானத்தில் எது நடைமுறைத்தேவை கொண்டதோ அது எளிதாக அழிந்துவிடுகிறது. இன்னும் நடைமுறைத்தேவை கொண்ட ஒன்று வந்து விடுகிறது. மருத்துவமும், தச்சு சாஸ்திரமும், ஆயுதவித்தையும் வேகமாக தொடர்ச்சியறுந்து அழிந்தன.
ஆனால் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் அழிவதில்லை. நம்பிக்கை அவற்றை பிடிவாதமாக நிலைநிறுத்துகிறது. வேள்விச்சடங்குகள் மட்டுமல்ல சோதிடம்கூட அப்படித்தான் தாக்குப்பிடித்தது.
இந்தியாவின் மருத்துவம் சிற்பம் ஆயுதவித்தை போன்றவை எல்லாமே பதினாறாம் நூற்றாண்டு முதல் சரிவுக்கு ஆளாயின. அவற்றைப்பேணுவதற்கான அதிகார அமைப்புகள் இல்லாமலாயின. அவற்றை நிலைநிறுத்தியிருந்த தொழில்சார்ந்த குலக்குழுக்கள் அவற்றின் கட்டமைப்பை இழந்தன. இந்தியாவின் இருபெரும் பஞ்சங்களுக்குப்பின்னர் இந்த தொழிற்குழுக்கள் அனேகமாக மறைந்து சாதிசார்ந்த சில செயல்முறை பயிற்சிகள் மட்டுமே எஞ்சின.
வேதக்கல்வி என்பது பெருமைக்குரிய, பிறருக்கு கிடைக்காத சிறப்புத் தகுதியாக, கௌரவமாக இருக்கவில்லை. தொழிலின் ஒரு பகுதியான உச்சாடனச் சடங்காக மட்டுமே இருந்தது. அந்த தொழில் அழிந்தபோது அதுவும் அழிந்தது.
இந்தியாவின் இந்த நடைமுறைசார்ந்த ஞானங்கள் பெரும்பாலும் ஏட்டுச்சுவடிகளில் இருந்து பின்னாளில் மீட்கப்பட்டன என்பதைக் காணலாம். உதாரணமாக மருத்துவம். எந்த மருத்துவக்குடும்பத்தைக் கேட்டாலும் நூறு வருடம் முன்பு ஒரு துறவி அவர்களுக்கு ஒரு சுவடிக்கட்டை கொடுத்தார் என்றும் அதைக்கொண்டு வைத்தியம் செய்வதாகவும் சொல்வார்கள். அந்தச்சுவடியை வாசிக்கும் முறையும் அதனுடன் ஒட்டிய ஆசாரங்களும் எல்லாம் மறைந்துவிட்டன.ஆங்கிலவழிக்கல்வி வந்த பின்புள்ள சூழலில் அச்சுவடிகள் வாசிக்கப்ப்பட்டு பொருள்கொள்ளப்பட்டு அந்த ஞானம் மீட்கப்பட்டுள்ளது. அதற்கும் மரபுக்கும் தொடர்பில்லை.
கேரளத்து கோயில்களில் கூம்புவடிவக்கூரையின் மையத்தில் எல்லா கழுக்கோல்களும் சென்று இணையும் இடத்தை குடம் என்பார்கள். அந்த மையம் மிகநுட்பமான கணக்குகளால் ஆனது. ஆனால் நூறுவருடம் முன்னரே குடம்கூட்டத் தெரிந்த மூத்தாசாரிகள் மறைந்துவிட்டார்கள். பேச்சிப்பாறை அணையைக் கட்டிய பொறியாளர் தச்சுநூல்களை வாசித்து அந்த முறைக்கு ஒரு புதிய வரைபடத்தை உருவாக்கினார் என்று சமீபத்தில் ஒரு ஆசாரி சொன்னார்..
ஆதிக்கவாதிகள் அளித்த எளிய அரசியல் வரைபடங்களைச் சுமந்தலையாமல் நம்முடைய பண்பாட்டையும் அணுகும் புதிய தலைமுறை உருவாகி வரக்கூடும். அவர்கள் நமக்கு புதிய வெளிச்சங்களை அளிக்கலாம்
ஜெ
ஜெ,
அருமையான கட்டுரை. மிக்க நன்றி.
இவரது புரிதல் எவ்வளவு மேம்போக்கானது என்று இதிலிருந்து தெரிகிறது. ராமனும், கிருஷ்ணனும், சிவனும் திடீரென்று எங்கிருந்தோ முளைத்தவர்களல்ல – வேத தெய்வங்களின் பரிணாமும் நீட்சியுமே அவர்கள். ஸ்ரீஅரவிந்தர் பிற்காலத்திய புராண தெய்வங்களின் உருவாக்கம் அனைத்தும் எப்படி அக்னி, ருத்திரன், விஷ்ணு போன்ற வேத தெய்வங்களிலிருந்தே உருவானது என்று தெளிவாக விளக்கியிருக்கிறார். வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபன் என்று வைணவ மரபில் புக்ழப் படும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் ஏராளமான வரிகள் ரிக்,யஜுர்,சாம வேத மந்திரங்களின் நேரடி மொழியாக்கம் போலவே உள்ளன என்பதனை இருமொழியும் கற்றறிந்த பெரும்புலவர்களான வைணவ அறிஞர்கள் விளக்கியுள்ளார்கள். கார்காத்த வேளாளர் குடியில் பிறந்த திருநாவுக்கரசர் ‘உருத்திர திருத்தாண்டகம்’ என்ற பதிகத்தைப் பாடியுள்ளார். இதன் வரிகள் கிருஷ்ண யஜுர்வேதத்தில் உள்ள ஸ்ரீருத்ரம் என்ற துதியின் சாரமாக, அதன் நேரடி மொழிபெயர்ப்பாகவே உள்ளது என்றும் சைவ அறிஞர்கள் விளக்கியுள்ளனர்.
மந்திரத்தின் சப்தம் மட்டுமே முக்கியம் பொருளல்ல என்று கூறும் சடங்கர்களைப் பரிகசித்து நிருக்தம் என்ற வேத இலக்கணம் வகுத்த யாஸ்கர் என்பவரே தன் நூலில் எழுதியுள்ளார். சடங்கில் பொருளறியாது மந்திரங்களை ஓதுவது என்பது ஒருவகைப் புரோகிதப் போக்கு. அது பண்டைக்காலம் முதல் தொடங்கி இன்று வரை நீடித்து வரும் ஒன்று தான். ஆனால் அந்தப் போக்கு மட்டுமே அல்ல வேதம். உண்மையில் தெய்வீக ஞானம் அனைத்தின் தொகையே அது என்று தான் தமிழ் பக்தி இலக்கியங்களைப் பாடிய ஆழ்வார்களும் நாயன்மார்களும் கருதினார்கள், புறநானூற்றுப் புலவர்கள் கருதியது போல. அதனால் தான் அவர்கள் பாசுரம் தோறும் சிவனையும் திருமாலையும் வேதத்துடன் இணைத்தே பாடினார்கள். வேதம் என்றால் என்ன என்று மிகச் சரியாகவே புரிந்து கொண்டிருந்தவர்கள் தான் அவர்கள்.
அன்புடன்,
ஜடாயு
அன்புள்ள ஜடாயு
சமணாநூலான நீலகேசியில் இருந்து நாஞ்சில்நாடன் எடுத்துக்காட்டிய செய்யுளை சற்றுமுன் வாசித்தேன்.
தோற்றமும் நாற்றமும் சுவையுடன் ஊறு இவற்றால் தொடங்கி
ஆதரவும் ஆயிருவல்லார்கள் அஃது அறிந்துரைப்ப
மேற்குலத்தோரோடு இழிந்தவர் என்பது மெய்மைபெறா
நூற்றிறம் செய்தவர் அறிகுவர் நுழைந்தறிவு உடையவரே
இதற்கான உரையாசிரியர் கூற்று. மருத்துவநூல் கற்று தேர்ந்தவர்கள் மலத்தில் நிறம் நாற்றம் சுவை ஊறு என்னும் தன்மைகளால் ஆராய்ந்து அது நோயாளியின் மலமா ஆரோக்கியமுள்ளவனின் மலமா என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் அது மேற்குலத்தாரின் மலமா இல்லை கீழைக்குலத்தோரின் மலமா என்று சொல்லமுடியாது. அதைப்போல நுண்ணறிவுடைய சான்றோர் வேதத்தைச் செய்தவர் சிறந்த அறிவுடையவரா அல்லது அறிவில்குறைந்தவரா என்று நூலை ஆராய்ந்து சொல்ல முடியும். அதனைச்செய்தவர் மேற்குலத்தாரா அல்லது கீழ்க்குலத்தாரா என்று சொல்லிவிடமுடியாது
இந்திய மரபில் சாதியப்போக்கும் சாதிமறுப்புப்போக்கும் என்றும் இணையான வலுவுடன் இருந்துள்ளன. எல்லா காலத்திலும் அறிவார்ந்த போக்குகள் ஆசாரங்களை தாண்டிசென்றுள்ளன. சாதி மறுப்பு நோக்கை இல்லையென மறுத்து இந்தியாவை ஒற்றைப்படையாக காட்டும் முயற்சிகளுக்குப்பின்னாலுள்ளது வெறும் ஆதிக்க அரசியல்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
May 22, 2012
பெண்ணின் கதை
நான் எழுதி மதுபால் இயக்கும் ஒழிமுறி மலையாளப்படத்தின் படப்பிடிப்பு 18 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. முப்பத்தாறு நாளில் படப்பிடிப்பு முடிந்தது. படத்தைப்பற்றி டைம்ஸ் ஆப் இண்டியாவின் ஓரு செய்திக்குறிப்பு
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
கொற்றவை- ஒரு கடிதம்
அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு ,
நலம் அறிய ஆவல், எட்டு மாதகள்ளுக்கு முன்பு வாங்கிய “கொற்றவை ” புத்தகத்தை கொஞ்சம் கொஞ்சமாக, கவனமாக தற்போதுதான் வாசித்து முடித்தேன். எனக்கு 60% தான் புரிந்து கொள்ள முடிந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாகத்தான் நான் புத்தகம் வாசித்து கொண்டு இருக்கின்றேன்.எனக்கு இன்னும் இந்த நாவலை உள்வாங்கி கொள்ள பக்குவம் வரவில்லை என்ற குற்ற உன்னர்வு வந்துவிட்டது. ஆனால் புரிந்த வரை எனக்கு மிகுந்த வியப்பு தந்தையும் ஒப்புகொள்ள வேண்டும். நிஜமாகவே எனக்கு பிரமிப்பை இந்த நூல் தந்தது. இன்னும் இந்த நூலை புரிந்து கொள்ள இன்னும் சில வருடம் விட்டு மீண்டும் படிக்க வேண்டும் என நினைகின்றேன்.
நான் விஸ்வகர்மா வகுப்பை சேர்த்தவன் ” கொற்றவையில்” ஒரு பகுதியில் ஒரு தலைமை பொற்கொல்லன் தனது சிஷ்யனிடம் ” இவ்வுலகில் களவு கொள்ளா பொற்கொல்லன் எங்கு உள்ளான்”. என்ற வரி என் நினைவுகளை எங்கெங்கோ இட்டு சென்றது.என் தந்தை அவர்கள் காலத்தோடு எங்கள் குல தொழில் நசிந்து விட்டது.நான் MBA முடித்து விட்டு பெங்களூரில் வேலை செய்து வருகின்றேன்.முன்பு ஒரு கட்டுரையில் நீங்கள் திரு.தேவதச்சன் அவர்களை சந்தித்த போது அவர்கள் நகை தொழிலை பற்றி கூறிய ஒரு பகுதியில் அவர் “முன்பெலாம் திருமணம் நிச்சயம் ஆனவுடன், நகை செய்பவரிடம் தான் முதலில் வருவார்கள், அவர்கள் குடும்ப விஷ்யகளை பகிர்ந்து கொள்வார்கள்.இப்போது காலம் மாறிவிட்டது என்று கூறி இருந்தார்.அதை படித்த போதும் எனது சிறு வயது நினைவுகளில் மூழ்கினேன்.எனக்கு சிறு சந்தேகம் ” கொற்றவையில்” ஒரு பகுதியில் சேர மன்னனின் படை எதற்காக 100 பொற்கொல்லர்களை பலி இட்டார்கள் என தெரிந்து கொள்ள அவளாக உள்ளேன்.உங்களுக்கு நேரம் இருந்தால் விரிவாக கூறவும்.
எனக்கு உங்களின் படைப்புகள் பற்றி நிறைய குற வேண்டும் போல இருக்கிறது, ஆனால் அதை வார்த்தையில் கோர்க்க வரவில்லை.நிச்சயம் உங்களை நேரில் சந்திக்கும் வாயப்பு வரும் போது உறையாடலில் வரும் என நினைகின்றேன்.
உங்களின் இணையதளத்தை கடந்த 4 வருடங்களாக வாசித்து வருகின்றேன், உங்களின் ரப்பர், கன்னியாகுமரி , ஏழாம் உலகம், காடு, சங்க சித்திரங்கள் இன்றைய காந்தி, தற்போது கொற்றவை படித்துளேன்.அடுத்தது “விழ்னுபுரம்” வாங்க உள்ளேன்.
எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும்.
இப்படிக்கு அன்புடன்
ரா. அ. பாலாஜி
பெங்களுரு
அன்புள்ள பாலாஜி,
பொற்கொல்லர்களை பலியிட்டது சேரன் அல்ல பாண்டியன். அவனுடைய குலத்துக்கு பழிவந்தமையால் அப்படிச் செய்திருக்கலாம். ஆனால் அது கூட பின்னர் உருவாக்கப்பட்ட ஒரு பொய்ச்செய்தியாகவே இருக்கும். அப்படி நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. அந்த தொன்மம் பாண்டியர் குலத்தின் மீது சிலப்பதிகாரம் வழியாக உருவான பழியை துடைக்க உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
May 21, 2012
நாட்டார் கதைமரபு- ஒரு கடிதம்
கட்டுரையில் ஜெ சொன்ன ஒரு சுவாரசியமான கதை – கேரளத்தில் ‘இளையது’ என்றழைக்கப்படும் விலக்கப்பட்ட பிராமணப் பிரிவு உருவான கதை. மேற்குமலைக் காடுகளின் மரங்களின் எண்ணிக்கைக்குச் சமமாக யக்ஷிகளும், நீலிகளும், சாத்தன்களும், கதைகளும் உள்ள கேரளத்தில் உள்ள ஒரு செவிவழிக் கதை. இக்கட்டுரையுடன் சேர்த்து வாசிக்கலாம். ஜாதி, வேதம் பற்றின பல விசித்திரமான தகவல்கள் உடையது. ஜெ சொன்ன ‘இளையது’ பற்றியும் அதில் உண்டு.
விக்ரமாதித்த மகாராஜாவின் அமைச்சராக இருந்த வரருசி என்கிற பிராமணனுக்கும் ஒரு பறைக்குலப் பெண்ணுக்கும் பிறந்த பன்னிரு குழந்தைகளைப் பற்றிய கதை இது. ‘பறயி பெற்ற பந்திருகுலம்’ என்று கேரளத்தில் இக்கதை பிரபலம். இவர்கள் மகனாகப் பிறந்த ‘வாயில்லாக் குந்நிலப்பன்’, ‘நாராணத்து பிராந்தன்’ ஆகியோரும் இன்றும் தெய்வமாகவும், ஞானியாகவும் போற்றப்படுபவர்கள்.
கதை இப்படிப் போகிறது….
விக்ரமாதித்தன் ஒருமுறை வரருசியிடம் மகாபாரதத்தில் மிக முக்கியமான வரி எது என்று கேட்கிறார். வரருசியால் சொல்ல முடியவில்லை. ராஜா நாற்பத்தியொரு நாட்கள் கெடு விதிக்கிறார். வரருசி அறிஞர்களைக் கேட்டுப்பார்க்கிறார், ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. நாற்பதாம் நாள் இரவில் ஒரு ஆலமரத்தின் அடியில் கவலையுடன் அமர்ந்து ஓய்வெடுக்கும் பொழுது, இரண்டு ஆவிகள் காலமேனிப் பறவைகளின் உருவில் அம்மரத்தின் மீது வந்தமர்ந்து பேசத் தொடங்குகின்றன. அவை ராமாயனத்தைப் பற்றிப் பேசி, அதில் மிக முக்கியமான வரியாக, ராமனுடன் காட்டுக்குப் புறப்படும் லக்ஷ்மணனுக்கு சுமித்ரை சொல்லும் அறிவுரையாக வரும், “ராமனைத் தந்தை தசரதனாக நினைத்துக்கொள், ஜனகன்மகள் சீதையை நானாக (தாயாக) நினைத்துக்கொள், காட்டை அயோத்தியாக நினைத்துக்கொள், பயணம் சுகமாகிவிடும்” என்ற செய்யுள் வரிகளைக் கூறி, அதிலும் “ஜனகன் மகளைத் (நானாக) தாயாக நினை” (மாம் விதி ஜனகாத்மஜம்) என்னும் வரி மிகமுக்கியமானது என்று கூறுகின்றன. கூடவே வரருசி இப்பொழுது பிறந்திருக்கிற ஒரு பறையர்குலப் பெண்ணை மணக்க வேண்டும் என்பது விதி என்றும் பேசிக்கொள்கின்றன.
மறுநாள் விக்ரமாதித்தனிடம் ராமாயனத்தின் முக்கியமான வரி என்ற விடையைக் கூறி அவன் பாராட்டுக்கு ஆளான வரருசி, இதுதான் சமயமென்று கருதி முன்கூட்டியே தெரிந்து விட்ட விதியை மாற்ற எண்ணி நேற்று பிறந்த பறையர் குலப் பெண்குழந்தையால் அரசனுக்கு ஆபத்து என்று கூறுகிறான். அரசனது ஆணைப்படி படை அந்தக் குழந்தையைத் தேடிக் கண்டுபிடித்து, சிறு தெப்பத்தில் வைத்து ஆற்றில் விடுகிறது.
பலவருடங்கள் கழித்து ஒருமுறை வரருசி பிரயாணத்தில் ஒரு அந்தணர் வீட்டில் உணவு உண்ணச் சம்மதிக்கிறார். உணவு உண்பதற்கு அவர் விதிக்கும் நுட்பமான சங்கேத மொழியில் அமைந்த விதிகளை வீட்டிற்குள் இருந்து ஒரு பெண்குரல் புரிந்து கொண்டு பதிலளிக்கிறது. அவளின் அறிவில் கவரப்பட்டுப் பின் அவளை மணக்கிறார். உண்மையில் அந்தப் பெண் நிளா நதியின் (பாரதப்புழை) கரையில் உள்ள கொடுமுண்டா கிராமத்தில் நரிபட்டாமணையைச் சேர்ந்த ஒரு பிராமண குடும்பத்தால் எடுத்து வளர்க்கப்பட்ட பறைக்குலத்தில் பிறந்த அதே பெண் தான். இந்த உண்மை தெரியவந்ததும் விதியின் வலிமையை உணர்ந்தவராக வரருசி தன்னைத் தானே சாதி விலக்கு செய்து கொண்டு மனைவியுடன் அடர்ந்த காடுகளின் வழி யாத்திரையைத் தொடங்குகிறார்.
ஒவ்வொரு முறை மனைவி பிரசவிக்கும் போதும், ’குழந்தைக்கு வாய் இருக்கிறதா? என்று கேட்கிறார். மனைவி ‘இருக்கிறது’ என்று சொன்னவுடன், “வாயைக் கொடுத்த இறைவன் அதற்கு உணவையும் கொடுப்பான். குழந்தையை அங்கேயே விட்டுவிடு!” என்று சொல்லிவிடுகிறார். இப்படிப் பதினோரு குழந்தைகளை இழந்த மனைவி, பண்ணிரண்டாவது குழந்தை பிறந்தவுடன் அதற்கு வாய் இல்லை என்று பொய் சொல்லி விடுகிறாள். ‘சரி குழந்தையை எடுத்துகொள்’ என்று கூறுகிறார் வரருசி. பின்னர் பாலூட்ட எண்ணிக் குழந்தையைப் பார்க்கையில் நிஜமாகவே அதற்கு வாய் இல்லை. பதறிய மனைவி ஞானிகளின் வாக்கு பலிக்கும் என்பதை உணர்கிறாள். தன் தவறால் தன் குழந்தைக்கு நேர்ந்ததை எண்ணி வருந்துகிறாள். வரருசி அந்தக் குழந்தையை அந்தக் குன்றின் மேலேயே தெய்வமாகப் பிரதிஷ்டை செய்கிறார். அது ‘வாயில்லா குந்நில் அப்பன்’ (குன்றில் இருக்கும் வாயில்லா தெய்வம்) என்று அழைக்கப்படுகிறது. அந்தக் கோயில் பாலக்காடு மாவட்டம் கடம்பாழிபுரம் என்னும் ஊரில் இன்றும் உள்ளது.
அதற்கப்புறம் வரருசி கேரளத்தின் மண்ணூர் என்னும் இடத்தில் சமாதியடைந்தார் என்று கதை முடிகிறது. வரருசிக்கும், பறைக்குலப் பெண்ணுக்கும் பிறந்த பதினோரு பிள்ளைகளும் பின்னாளில் வளர்ந்து ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்கின்றனர். அவர்கள் அனைவரும் மூத்த மகனின் வீட்டில் தந்தை இறந்த நாளன்று கூடி அவருக்கு நீர்க்கடன் செய்கின்றனர். இன்றும் அவர்கள் பரம்பரையினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், பதினோரு பிள்ளைகளும் வெவ்வேறு ஜாதி, மதங்களில் வளர்க்கப்பட்டனர். பதினோரு பிள்ளைகளும் முறையே; மேழத்தோள் பிரம்மதத்தன் அக்னிஹோத்ரி (பிராமணர்), பாக்கனார் (பறையர்), ராஜகன் (வன்னார்), நாராணத்து பிராந்தன் (இளையது), காரக்கல் மாதா (உயர்குல நாயர்), அகவூர் சாத்தன் (வைஸ்யன்), வடுதல நாயர் (படை நாயர்), வள்ளோன் (வள்ளுவர் குலம்), உப்புக்கொட்டான் (இஸ்லாமியர்), பாணனார் (பாணர்), பெருந்தச்சன் (தச்சர்). (வாயில்லா குந்நிலப்பன் – தெய்வம்)
பெரும்பாலானவர்களின் தலைமுறைகள் இன்றும் பாலக்காடு மாவட்டத்தின் தெற்குப் பகுதிகளில் (ஷொரனூர், பட்டாம்பி, த்ரிதல) வசிக்கின்றனர்.
எனக்கு இந்த நாட்டார் செவிவழிக்கதை முக்கியமாகப் படுவதற்குக் காரணம் உண்டு. கேரளத்தின் ஜாதி வேறுபாடுகள் மிகுந்த சூழ்நிலையில் வித்தியாசங்களை அழித்து எல்லாரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்னும் கருத்தை முன்னிறுத்த இந்தக் கதை ஏற்பட்டிருக்கலாம். எல்லோருடைய உடம்பிலும் பறைச்சி பார்ப்பனன் இருவரின் ரத்தமும் கலந்து ஓடுகின்றது, எனவே பிறப்பால் வித்யாசமில்லை என்று சொல்ல வந்திருக்கலாம். இந்தக் கதையின் படி வெவ்வேறு ஜாதியில் பிறந்தவர்கள் வேதக்கல்வி கற்று அதில் முக்கிய ஆளுமைகளாக உருவாகியிருக்கின்றனர். ஆளும் தம்பிரான்கள் யாரென்று நியமித்திருக்கின்றனர். உதாரணமாக சில..
1. பறையர் குலத்தில் வளர்க்கப்பட்ட பாக்கனார் தான் நம்பூதிரிகளில் இருந்து ‘ஆழ்வாஞ்சேரி தம்பிராக்கள்’ என்கிற தம்பிராக்களை (ஒருவகையான ஆளுனர்கள்/ தலைவர்கள்) உருவாக்கி அந்தப் பகுதியின் தலைவர்களாக நியமித்தார்.
2. வன்னார் குலத்தில் வளர்ந்த ராஜகன் என்பவர் மிகப்பெரும் வேத நிபுணராக இருந்துள்ளார். பூர்வ மீமாஸ்கரான குமாரிலபட்டரின் மாணவராக இருந்து அவரின் பட்டா பள்ளியிலிருந்து மாறுபட்டு பிரபாகர பள்ளியை கேரளத்தில் பிரபலமாக்கியவர். அவர் தொடங்கியது தான் கடவல்லூரிலுள்ள வேதவித்யாலயம். கேரளத்தின் மிகமுக்கியமான வேதக்கல்வி நிலையம் இது. மாநிலத்தின் எந்த கல்விக்கூடத்தில் வேதம் பயின்றாலும் ராஜகன் தொடங்கிய கடவல்லூர் கல்வி நிலையத்தில் தேர்வில் வென்றால் மட்டுமே அவர்கள் கல்வி அங்கீகரிக்கப்படும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. கடவல்லூர் அன்யோன்யம் என்று இன்றளவும் இந்தப் பாரம்பரியம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஜெ கூட ஒரு அங்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அதன் புதியபரிணாம வளர்ச்சியை எழுதியது ஞாபகம் இருக்கலாம்.
3. கீழ்சாதி பிராமண குலத்தில் வளர்ந்த நாராணத்து பிராந்தன் வானவியல் பண்டிதர். ஹரிதகாரணம் என்னும் சோதிட நூலை எழுதியவர். ஆத்மஞானியான இவர் சுடுகாட்டில் சாம்பலில் புரண்டு கொண்டும், மலையில் கல்லை உருட்டிவிட்டுக் கொண்டும், ஆற்றின் கரையில் இரவில் மல்லாந்து படுத்தபடி நட்சத்திரங்களையும் பார்த்தபடி இருந்ததனால் பிராந்தன் (பைத்தியம்) என்று அழைக்கப்பட்டார். நாராயணமங்கலம் மனை என்னும் நம்புதிரிக் குடும்பத்தில் வளர்ந்து நாராணத்து பிராந்தன் என்று அழைக்கப்பட்டார்.
4. வள்ளுவர் குலத்தில் வளர்ந்த பிள்ளையே தமிழில் திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் என்கிறது கேரள நாட்டார் மரபு. கேரளத்திலும் வள்ளுவர் குலம் வானவியல், சோதிடம், மருத்துவம், மந்திரவாதம் முதலியவற்றில் பாரம்பரியமாக தேர்ந்தவர்கள்.
5. பாணர் குலத்தில் (இசைக்கலைஞர்கள், கேரள சாதி அடுக்கில் தாழ்த்தபட்ட வகுப்பினர்) – தொல்காப்பியம், அகநானூறு, பதிற்றுப்பத்து போன்றவற்றில் குறிப்பிடப்படும் பாணர் இவர்களே என்கிறது நாட்டார் மரபு.
6. மேழத்தோள் அக்னிஹோத்ரி குழந்தைத் திருமணத்தை ஒழிப்பதிலும், சைவ-வைணவ ஒற்றுமைய உண்டாக்கியதிலும் கேரளத்தில் மிகமுக்கியமானவர்.
ஆராய்ந்தால் இன்னும் பல தகவல்கள் பல திறப்புகளைக் கொடுக்கக் கூடும். வரருசி என்னும் பெயரில் இந்தியாவின் பல பகுதிகளிலும் பலகாலகட்டத்தில் பலர் குறிப்பிடப்படுகின்றனர். கேரளத்தில் குறிப்பிடப்படுபவரின் காலம் பொது ஆண்டு 4ம் நூற்றாண்டு. ஆனால் தொன்மக் கதையாக (விக்ரமாதித்தனும் வேதாளமும்) விக்ரமாதித்தரின் காலம் பொது ஆண்டுக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன். ஆனால் விக்ரமாதித்தன் என்ற பெயரிலும் பல அரசர்கள் இருந்துள்ளதால் இவர் வேறு விக்ரமாதித்தன் என்று கொள்ளலாம். அதன்படி ராஜகன் குமரிலபட்டரின் மாணவர் என்னும் செய்தியிலிருந்து சங்கரர் காலத்தை பற்றிய கணக்கீடுகளை ஆராயலாம். நாட்டார் கதைகள் எப்பொழுதும் வரலாற்றெழுத்தில் எழுத்திலறியா சுவாரஸ்யமான புதிய தகவல்களைக் கொடுக்ககூடியவை- உரிய கவனம் கொடுக்கப்பட்டால்!
-பிரகாஷ்.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
இருண்மை-கடிதங்கள்
ஜெயமோகன் அவர்களுக்கு, மருது என்பவரின் கடிதத்தில் ஒரு சிறு தகவல் பிழை. அவர் ‘சோளகர் தொட்டி’ எழுதிய ச.பாலமுருகனையும் ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ எழுதிய கே.பாலமுருகனையும் ஒருவரென நினைக்கிறார் போலும். அவர் தமிழகம் இவர் மலேசியர். கடிதத்தை வாசிப்பவர்களும் இருவரும் ஒருவரெனக் கருதக்கூடும்.
நவீன்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களது “ஏன் இருண்மையை வாசிக்கவேண்டும்?” என்ற தலைப்பிலான பதிவைப் பார்த்தபிறகு, என்னுள் எழுந்த சில கேள்விகள் தங்கள் பார்வைக்கு. தங்களின் வசதியைப் பொறுத்து தயவு செய்து பதிலளிக்கவும்.
புராதான செவ்விலக்கியங்கள் எவை இவ்வாறு இருண்மையைப் பற்றிப் பேசுகின்றன என்று தாங்கள் கூறியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் ஒருமுறை திருவிளையாடற் புராணத்தில் அம்மாதிரி ஒரு சம்பவம் குறிப்பிடப் பட்டதைக் கண்டிருக்கிறேன். வேறு ஏதும் உதாரணங்கள் இருந்தால் தயவு செய்து பகிர்ந்து கொள்ளவும்.
மேலும், அந்தக் கதாபாத்திரங்களை முதன்மைப் பொருளாக வைத்து அவை எழுதப் பட்டுள்ளனவா என்றும் அறிய விரும்புகிறேன். நான் படித்தவற்றிலும், கேள்விப் பட்டவற்றிலும், எதிர்மறையாகவே அந்தக் கதாபாத்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. Pls correct me if I am wrong.
புராணங்கள் பற்றி முழுதும் தெரியவில்லை ஆனால் இதிஹாஸங்களைப் பொறுத்தவரையில், எனக்குத் தோன்றும் ஒரு கருத்து. அக்கதா பாத்திரங்களின் உயர்நிலைமையை சாதாரண மனிதனை விட அதிக உயரத்திலும், அவை வாழ்க்கையில் தாழும்போது அம்மனிதனைவிட பல படிகள் தாழ்ந்து பின் தன் முயற்சியினால் மீண்டும் அந்த உயர் நிலைக்கு சென்று சேர்வதாக அமைக்கப்பட்டுள்ளன என்பது. இதன் மூலம் அதைப் படிக்கும் ஒரு சாதாரணனுக்கு, தன்னம்பிக்கையையும், ஏற்படும் தளர்ச்சியை அகற்றும் வகையிலும் அப்பாத்திரங்கள் அளிக்கின்றன. இவ்வாறு ஒரு positive energy கொடுக்கும் கதைகள்/நிகழ்ச்சிகள்தானே ஒரு மனிதனுக்குத் தேவை?
தாங்கள் கூறுவது போல் இது ஒரு ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனின் மனநிலையாகவே இருக்கலாம். ஆனால் துன்பம் ஏற்படும்போது எந்த ஒரு மனிதனும் (சில காலமேனும்) இந்த ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனின் நிலையைத்தானே அடைகின்றனர்? அப்படி இருக்கையில், இப்படி ஒரு negative energy கொடுக்கும் கதைகள் (அவற்றை இலக்கியங்கள் என்று என்னால் சொல்லமுடியவில்லை) எந்த வகையில் உபயோகம்?
எனது பாட்டி, “ஆனானப் பட்ட ராமனே அவ்வளவு கஷ்டப்பட்டான்.. நாமெல்லாம் எம்மாத்திரம்” என்று அங்கலாய்ப்பதைப் பார்த்திருக்கிறேன். (அவரே தனது மிக முதிய காலத்தில் “ராமா ராமா” என்று சொல்லலாமே என்று சொன்னதற்கு “ஆமா.. அந்த ராமனே, ஸீதையை விட்டுட்டுத்தானே போனான்? அவனை நான் ஏன் நினைக்கணும்”னு என் வாயை அடைத்தது வேறு விஷயம்) :) எனினும் துன்பம் வரும்போது, புராண கதாபாத்திரங்களை ஒரு pain killer போன்றாவது நினைத்துக் கொள்ளலாம் இல்லையா?
நீங்கள் சொல்லும் இந்த எதிர்மறைக் கதைகள் சமுதாயத்தின் இன்னொரு பக்கத்தை வேண்டுமானால் நமக்கு அறிமுகப் படுத்தலாம். ஆனால் இக்கதைகளை வாசிப்பதனால் பெறும் அறிவை விட ஆபத்துகள்/அபத்தங்கள் தானே அதிகம்? ஆகவே அவற்றை நிராகரிப்பதுதானே நியாயம்?
எப்படி வேண்டுமானாலும் இலக்கியம் இருக்கலாம் என்பதையும் என்னால் ஏற்க முடியவில்லை. இப்படி வேண்டுமானால் சொல்லலாம் என்று நினைக்கிறேன். ”யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் எழுதலாம். அவற்றை இலக்கியமாக்குவதோ அல்லது குப்பைக்குக் கொண்டு செல்வதோ காலத்தின் கையில் இருக்கும்”. எனது இந்தக் கருத்து சரிதானா?
அன்புடன்,
கணேஷ்.
அன்புள்ள கணேஷ்
நான் இவ்வினாக்களுக்கு விரிவாகவே பதிலளித்திருக்கிறேன். ‘அறிதல்’ என்பது எந்நிலையிலும் பயனுள்ளதே. ஆன்மீகம் என்பது அறிதல்களின் தொடர்தான்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
ஏன் இருண்மையை வாசிக்கவேண்டும்?
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
