Jeyamohan's Blog, page 1702
December 20, 2016
பல்லவ மல்லை – சொற்பொழிவு அழைப்பிதழ்
அன்பு ஜெமோ,
தமிழ் பாராம்பரிய அறக்கட்டளையின் பேச்சுக் கச்சேரி குறித்து அறிமுகம் தேவையில்லை. 2011ல் முதல்முறையாக பேச்சுக்கச்சேரி ஆரம்பிக்கப்பட்டபோது, முதல் நிகழ்வாக ‘குறுந்தொகை – தமிழ்க் கவிமரபின் நுழைவாயில்’ என்னும் தலைப்பில் சங்க இலக்கியங்கள் குறித்த தங்களது சிறப்புரை இடம்பெற்றது. வெற்றிகரமாக ஐந்தாண்டுகளைக் கடந்திருக்கிறோம்.
இம்முறை ‘பல்லவ மல்லை’ என்னும் தலைப்பில் மாமல்லபுரத்தின் சிறப்புகளை விளக்கும் தொடர் பேச்சுக் கச்சேரியாக, வரும் டிசம்பர் 24 & 25 ஆகிய இரண்டு நாட்களும் கோட்டூர்புரம், தமிழ் இணையப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்வில், மாமல்லபுரத்தின் வரலாறு, கலைச் சிறப்பு, பல்லவர் காலத்து கல்வெட்டுகள், மல்லையின் இலக்கியச் சிறப்புகள் குறித்து பல்வேறு ஆய்வாளர்களின் உரைகள் இடம் பெறுகின்றன.
விஷ்ணுபுரம் விருது விழாவுக்காக கோவையில் நீங்கள் கூடியிருக்கும் நாளில், நடைபெறும் நிகழ்வு இது என்பதை நன்கறிவோம். விஷ்ணுபுரம் விழாவில் கலந்து கொள்ள இயலாத சென்னை வாழ் வாசகர்களுக்கு இதுவொரு வாய்ப்பாக அமையும் என்று நம்புகிறோம். :-)
அன்புடன்,
ஜெ. ரஜினி ராம்கி
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 63
[ 3 ]
திருவிடத்தின் காடுகள் மாறா இருள் நிறைந்தவை. மயன் அமைத்த அசுரர் மாளிகையின் பெருந்தூண்களென எழுந்த அடிமரங்களின் மேல் சினந்தெழுந்த கொம்புகள் எனத் திமிறி நின்ற கிளைகள்சூடிய பச்சை இலைத்தழைப்பு பிளவிடாக் கூரைவெளியென மூடியிருக்க நிழல்வரைவாகவும் விழியொளிகளாகவும் மூச்சொலியாகவும் காலரவமாகவுமே மான்களும் மிளாக்களும் காட்டெருதுகளும் அங்கே அறியப்படலாயின. செம்புக்கலம் சிலம்பும் ஒலியாக வால்துடிக்கும் அணில்களும் சிறுமுழவு மீட்டும் ஒலியாக குவிந்து துள்ளும் குழிமுயல்களும் இரும்புரசும் ஒலியாக காட்டு ஆடுகளும் இருள்மடிப்புகளுக்கு அப்பால் இருப்புணர்த்தின.
முதலைத் தோலென்றும் யானைக்கால் என்றும் ஆமை ஓடென்றும் தோற்றம் கொண்ட செதில்செறிந்த அடிமரங்களின் வேர்க்கிளைகள் உருகிவழிந்து மண்ணிலூன்றிய கொம்பரக்கின் விழுதுகளெனப் பரவிய மண்ணில் சிற்றிலைப்புற்களும் பச்சிலைப்பூசணங்களும் பரவி மூடியிருந்தன. விழுந்து மண்ணில் பாதி உடல்புதைந்த தொல்மரங்களின் மேல் எழுந்த வெண்ணிறக் காளான் குடைகள் அப்பச்சையலை எழுப்பிய நுரை எனத் தெரிந்தன.
கூரிலை பசலைக் கொடிகளும் ஒட்டிப் பற்றி மேலேறும் இத்திள்களும் மட்டுமே அங்கு கை தொடும் இலைகளெனத் தெரிந்தன. இலைநுனிகள் அனைத்திலும் தளிர்ப்பச்சை உடல்கொண்ட சிறுதவளைகள் விழித்து அமர்ந்திருந்தன. காலடியோசையில் அவை தாவி எழுந்து இலைமாறி அமர்ந்து ஆடின. உடல்மேல் பட்ட சிறுதவளை நீர்த்துளியென்றே நடுக்கம் தோன்றச்செய்தது. காட்டுக்குள் மென்புகையென நீராவி நிறைந்திருந்தது. அடியிலைகளில் அது பனித்து நுனிக்கூம்புகளில் துளித்துச் சொட்டியது. சொட்டுமொலியில் காடு படிகமாலை உருட்டி ஊழ்கநுண்சொல் உரைத்து அமைந்திருப்பதெனத் தோன்றியது. துயிலும் மாடுகளின் காதுகள் போல் கவிழ்ந்தும் இளையோர் கைவிரித்ததுபோல் விரிந்தும் சூழ்ந்திருந்தன இலைகள்.
அவற்றுக்கிடையே சிறு கால்கள் வைத்து வாலை அசைத்து உடுக்குத்தோலை கையால் மீட்டும் ஒலியுடன் குழறியபடி செம்போத்துகள் ஊடுருவி ஓடி அலைந்தன. நுரைக்கொழுந்தென வால் சிலிர்த்த கீரிகள் தாவிச் சென்றன. மெல்ல இழுபட்டு வளைவால் ஒளியெழுப்பி நெளிவை விழியில் எஞ்சவிட்டுச் சென்றது நாகம். பெருமரங்கள் மேல் தொற்றி அமர்ந்து கொண்டை உலைத்து கொத்திய மரங்கொத்திகள் உளியோசை எழுப்பின. அது பல்லாயிரம் கற்தச்சர்களால் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் மாளிகையென அக்காட்டை எண்ணச்செய்தது.
அவ்வடர்காட்டிலும் கால்புழக்கம் பதித்த வழியொன்று சென்றிருப்பதை சற்று விழி தெளிந்த பின்னரே காணமுடிந்தது. அது பசுமைக்குள் வேறொரு பசுந்தடமென கண்ணறிகிறதா கருத்துணர்கிறதா என்னும் மயல்கூட்டி தெரிந்தது. பின்னர் அவ்வழிசென்ற உடல்களையும் அவ்வுடல்களை நாயின் நாக்கு நுனிகளென ஈரக்குளிருடன் நக்கி அசைந்த இலை நுனிகளையும் காண முடிந்தது. மொழியிலும் சித்தத்திலும் எவரெவரோ சென்ற தடங்கள் என பைலன் நினைத்துக்கொண்டான். அவ்வெண்ணம் எழுந்ததுமே கண்முன்விரியும் காட்டை அழுத்திச்சுருக்கி ஒரு ஒப்புமைமட்டுமே என்றாக்க விழைவதுதான் எது என அவன் சித்தம் வியந்தது.
அடர்காட்டின் முகப்பிலேயே நீண்ட கழிகளை வெட்டி முனை கூரச்செய்து அவர்களுக்கு அளித்திருந்தான் சண்டன். கூர்கழியுடன் வைசம்பாயனன் முன்னால் செல்ல ஜைமினியும் சுமந்துவும் பின்னால் சென்றனர். மூங்கில் வளைத்து காட்டுக் கொடி கட்டி இறுக்கிய வில்லை வலக்கையில் ஏந்தி மூங்கில் கூர் கொண்ட அம்புகளை தோள் தூளிகளில் நிறைத்து திசைகள் தோறும் விழி செலுத்தி இலைச்செறிவுகளுக்குள்ளும் மரங்களின் மறைவுக்கு அப்பாலும் கூர்நோக்கியபடி சண்டன் நடந்தான்.
அவர்களின் காலடியோசை பெருகி காட்டின் பசுமை வெளிக்கு உள்ளே எதிரொலித்து ஒரு படை நகர்வென செவிமயக்கு அளித்தது. கையெட்டும் தொலைவுக்கு அப்பால் விழியும் எட்டாதொரு பயணத்தை பைலன் முன்னர் எண்ணியிருக்கவே இல்லை. “இத்தனை தழைக்கக்கூடும் காடு என்று இதற்கு முன்னால் அறிந்ததே இல்லை, சண்டரே” என்றான். “இமயக்காடுகளை கண்டிருக்கிறேன். அவையும் இத்தனை தழைத்து பசுமை மட்டுமே என்றானதில்லை.” மூச்சிரைக்க அவன் நின்றான். மூச்சென நீராவி எழுவதை கண்டான். கொதிகலம் இவ்வுடல். ஆனால் வெளியே உருகுகையில் உள்ளே குளிர்ந்திருக்கிறது இது.
சுமந்து “ஆம், பசுமையை நீலமென்றும் கருமையென்றும் ஏன் சொல்கிறார்கள் என்று இன்றுதான் அறிந்தேன். இதுவே மலைநின்ற மாலின் வண்ணம்” என்றான். ஜைமினி “குளிர்நிறைந்த இமயக்காடு அஞ்சிய எருதின் உடலென சிலிர்த்திருக்கிறது. வறண்ட தண்டகாரண்யம் முட்பன்றியென சினந்திருக்கிறது. இக்காட்டின் ஒவ்வொரு இலையும் இளமைந்தர் கைகளைப்போல் தொட்டு அழைக்கின்றன. கிளைமுனைகள் அன்னையர் வாழ்த்து என தலைதொட்டுத் தழுவுகின்றன” என்றான்.
சண்டன் ”தென்னகமே பெருங்காடுகளின் நிலம். இங்கு ஆண்டுக்கு மூன்று மழைக்காலம். இது வாயுவும் வருணனும் புரக்கும் அரசு. இதோ அடி மரமென பெருத்து பசும்பெருக்கென இலை சூடி நிற்கும் இவை அனைத்தும் தென்கடலில் காற்று மொண்டு வந்த மழைநீரே” என்றான். “பாரதவர்ஷத்தை வேள்வியில் எழுந்த அனல் என்று உரைப்பதுண்டு நூலோர். அதன் கொழுந்து இமயம் என்றால் கரித்தழலே திருவிடம். பாரதம் அறத்தின் குளிர்ச்சுனை என்பர் கவிஞர். அதன் வெள்ளியலைகளே இமயம், குளிர்ந்திருண்ட ஆழமே திருவிடம்.”
“கரியதாகையால் இக்காடு காளிகவனம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள மக்கள் காளிகர் எனப்படுகின்றனர். பாதாளத்தை ஆளும் வாசுகியின் வழிவந்த காளிகன் என்னும் கருநாகத்தின் நச்சில் இருந்து முளைத்தெழுந்த காளர்கள் என்னும் தொல்பிரஜாபதிகள் நூற்றெண்மரால் உருவாக்கப்பட்ட குலம் என அவர்கள் தங்களைப்பற்றி சொல்கிறார்கள். தொல்நாகர்குலங்களுக்கும் இவர்களுக்கும் அணுக்கம் மிகுதி. இவர்களை கருநாகர்கள் என்றும் அப்பால் தாழ்வரைகளில் வாழ்பவர்களை பைநாகர்கள் என்றும் சொல்லும் மரபுண்டு.”
காட்டுப்பூனை ஒன்று மரக்கிளை ஒன்றின் தளிர்க்கொத்து சூடிய நுனி நோக்கி மெல்ல நடந்து வந்தது. அதன் மெல்லிய கால்வைப்புக்கேற்ப கிளை குரங்குவால் போல் வளைந்து தழைந்து இலைகள் குலுங்க அமைந்தது. இரு சுடர்மணிகளென விழிகொண்டு அவர்களை நோக்கி செவிமடித்து தலைதாழ்த்தி வால்தூக்கி அசைத்தது அனல்வரிகள் கொண்ட செம்பூனை. அனல்கொழுந்து என அதன் நாக்கு நீண்டு வளைந்து செல்ல ஆழ்ந்த குரலில் அகவியபின் அக்கிளையை உலைத்து மலர்பொழியத் தாவி எழுந்து பிறிதொரு கிளை பற்றி நிலைகொண்டு நீள்வாலைத்தூக்கியபடி நடந்து அப்பால் சென்று மறைந்தது.
“நிகரென எவருமில்லை என்றறிந்த நிமிர்வு” என்று ஜைமினி சொன்னான். “எளிய பூனை தன் எண்ணத்தால் புலியென்றாகி விட்டது.” பைலன் புன்னகைத்து “முழவுநடனத்தின் தாளம்!” என்றான். அது குரங்குகளின் ஒலி. அலையலையென எழுந்தமைந்து கேட்டது அது. ஆனால் அவை இலைத்தழைப்புக்கு மேல் எங்கோ இருந்தன. அங்கு ஒற்றை ஓசைப்பரப்பென அலைகொண்டு நிறைந்திருந்த பறவைக்குரல்களுடன் அவையும் கலந்து ஒலித்தன.
“இக்காட்டின் முதன்மை விலங்கு யானையே” என்றான் சண்டன். ”இக்காடு போலவே கரியது. இதன் ஆழம்போல ஓசையற்றது. கிளை முறிபடும் ஒலியில் மட்டுமே இங்கு யானையை அறிய முடியும். பெருங்களிறுக்கூட்டம் ஒன்று மிக அருகே கடந்து செல்லும்போதுகூட அச்சிறு ஒலிகளை அன்றி நாம் எதையும் கேட்க முடியாது. நம்மீது கருணை கொண்ட வழிகாட்டிப்பறவைகள் கூறும் மொழி கேட்க பழகிக்கொண்டால் ஒழிய இக்காட்டை எவரும் கடக்க இயலாது.”
“தென்னகத்தின் இப்பெருங்காடு கீழே கடல் சூழ்ந்திருக்கும் நீள்நிலம் சேர்த்து வைத்திருக்கும் செல்வக்குவைகளுக்கான காவலரண் என்கிறார்கள். செல்வம் உறையுமிடமென்பதனால் இது திருவிடம். இங்கு அமைந்துள்ளன நூற்றெட்டு அன்னையர் குடிகொள்ளும் ஆற்றல் மையங்கள். அதற்கப்பால் மும்முடியர்கள் ஆளும் தமிழ்த்தொல்நிலம். மாறாக்கன்னிமை கொண்ட முதல் தெய்வம் அமர்ந்திருக்கும் முக்கடல் முனம்பு. இப்பாரதவர்ஷம் அக்கன்னியின் தவத்தால் ஆளப்படுகிறது” என்றான் சண்டன்.
“சிற்றாடை கட்டி சிறுமியென அங்கிருப்பவள் பாரதவர்ஷமெங்கும் தேவியென, அன்னையென நூறாயிரம் முகம்கொண்டு நிறைந்திருக்கிறாள். பிடாரி என்றும் பேரருள் கொண்டவள் என்றும் உருக் காட்டுகிறாள்” என்று அவன் தொடர்ந்தான். “காளிகம் என்னும் இக்காடும் கன்னி அன்னையின் ஆலயம் என்கின்றன கதைகள். இதன் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளது கருங்குமரித் தெய்வம் கௌசிகையின் ஆலயம். அவளை குமரிமுனை அமர்ந்த கன்னியின் பிறிது வடிவம் என்று வழிபடுகிறார்கள் நூற்றெட்டு தொல்குலத்தோர். ஆண்டிற்கு மும்முறை சூழ்ந்துள்ள ஊர்களிலிருந்து காடுகளுக்குள் புகுந்து அவள் ஆலயத்தை வந்தடைந்து படையலும் பூசெய்கையும் முடித்து திரும்புகிறார்கள். இங்குள பாதைகள் அனைத்தும் அன்னை ஆலயத்திற்குச் செல்லும் மானுடரின் கால் பட்டுப் பிறந்தவையே.”
[ 4 ]
காளிகக்காட்டின் காலடிப்பாதையில் சண்டன் நான்குபக்கமும் ஓடும் விழிகளுடன் காடெனச் சூழ்ந்துள்ள இலைகளையே செவிகளென எண்ணியவன்போல அன்னையின் கதையை சொல்லிக்கொண்டுவந்தான். இளையோர் நால்வரும் அவன் குரல் கேட்கும் பொருட்டு விரைவழிந்து சற்று உடல் நெருங்கிக்கொண்டார்கள். “மகபைரவர் இயற்றிய பிரசண்ட புராணத்தின் கதை இது” என்று சண்டன் சொன்னான். “இமயமலையில் தாட்சாயணியாகப் பிறந்தவள் முதற்சிவத்தின் இடம் அமைந்த சிவை. அவளே தெற்கே திருவிடத்தின் காளிகப்பெருங்காட்டில் அழகிய குறமகளென வந்தாள். அது முதலன்னையும் தந்தையும் கொள்ளும் ஆடல். மானுடரில் விலங்குகளில் பறவைகளில் பூச்சிகளில் புழுக்களில் நுண்ணுயிர்களில் அவர்கள் காதல்கனிந்த இணைகளென பிறந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களின் கூடலாலும் ஊடலாலும் இயக்கப்படுகின்றன உயிர்க்குலங்கள்.”
காளிககுலமே காராமணி நிறம் கொண்டது. அவர்கள் நடுவே கருமணி என அவள் ஒளிகொண்டிருந்தாள். அவளை காளி என்று அழைத்தனர் அவள் குலத்தோர். காளுதல் என்றால் இருளொளி கொள்ளல் என்று அவர்களின் மொழிப்பொருள். அவள் கன்னங்களின் வளைவில் வானொளி மின்னும் என்று சொல்கின்றன தொல்கதைகள். இருளில் இருக்கையில் அவள் உடல்கொண்ட ஒளியே அச்சூழலைத் துலக்கும் என்கின்றன. அவள் கூந்தலொளியை மேனிக்கருமையின் ஒளி மிஞ்சும் என்றும் மேனிக்கருமையை விழிக்கருமை அஞ்சச்செய்யும் என்றும் கூறுகின்றனர் கவிஞர். அவள் நகங்களும் கருவண்ணம் கொண்டவை. அவை நோக்கு கொண்ட விழிகள் என ஒளிர்பவை.
தன் குலம் ஈன்ற அருமுத்தை நிகரற்ற ஒருவனுக்கே அளிக்க வேண்டுமென்று நோற்றிருந்தார் அவள் தந்தையாகிய கராளர். காளிகர் குடியின் தலைக்குடி அவருடையது. ஆயிரத்தெட்டு பேரன்னையர் பிறந்து பேற்றுத்தவமியற்றி நிறைந்து தெய்வமாகி நோன்பிருக்கும் மகளிரின் படையல்கொண்டு விண்ணமர்ந்திருக்கும் குருதிக்கொடிவழி அவருடையது. அவ்வன்னையரின் அருள் கொண்டு எழுந்த மகளை வேட்டு தன் இல்லம் வருபவர் எவராக இருப்பினும் காளிக குலத்தின் முதற்தெய்வமாக அமர்ந்திருக்கும் ஏழுதலைநாகமாகிய காளிகனின் ஆலயத்திற்குள் சென்று அவன் அருளாணை பெற்று வரவேண்டும் என்று அறிவித்திருந்தார்.
அவள் அழகை காட்டுப்பாடலில் கேட்டு உளம் மயங்கி அங்கு வந்த இளையோரில் பலர் அவ்வாணையைக் கேட்டதுமே அஞ்சி விலகினர். துணிந்தவர் அனைவரும் பெருநாகங்கள் செறிந்த புற்றுக்குவை அமைந்த அக்கோயிலுக்குள் சென்று அக்கணமே சீறிச் சொடுக்கும் இமைநோக்குள்ள நச்சு தீண்டி இறந்தனர். அந்நச்சு தொட்டதுமே அவர்களின் உடல்கள் காளிகர்போல் கருமைகொண்டன. முகத்தில் களியுவகை என சிரிப்பு ஒன்று எழுந்து உறைந்தது. கூப்பிய கைகளுடன் விரைத்துக்கிடந்த அவர்களின் உடல்களை மூங்கில் தெப்பத்தில் கட்டி பயோஷ்னியின் பெருக்கில் இட்டு திசைசேர்த்தனர் அக்குலத்தோர். ஒவ்வொரு நாளும் பயோஷ்னியில் ஒழுகும் ஒரு உடல் அவளை ஊருக்கு அறிவித்துச்சென்றது.
பின் அவள் வெல்லமுடியாதவள் என்றே அறியப்படலானாள். உச்சிப்பாறை முகட்டில் கனிந்த தேன்கூடு அவள் என்றனர் அயலூர்களின் அங்காடிப்பாடகர். அரியதேதும் இறைவனுக்கே என்றனர் காடுகளின் முதுகுலத்தோர். அவளையீன்ற அன்னை தன் மகள் கன்னியென்று நின்றுவிடுவாள் என்று அஞ்சி துயர்கொண்டு ஏங்கலானாள். “கன்னியென்று நின்றிருப்பதே அவள் ஊழென்றால் அவ்வண்ணமே ஆகுக!” என்று அவள் தந்தை சொன்னார். ஆனால் தன் ஆழுள்ளத்தில் அமைதியிழந்தமையால் அவளை நோக்குவதையே தவிர்த்தார். நாள்தோறும் ஒளிகொள்ளும் இவள் ஒருநாள் சுடரென்றாகி விண்புகுவாள் போலும் என்றனர் குடிப்பாணர். அவள் நோற்கும் கன்னிமை கனிந்து கணவன் வருவான் என்றார் குலப்பூசகர்.
அவளை மணப்பதற்கென்று அனல்வண்ணன் விந்தியஅடுக்கின் ஏழு மலையை படியென்றாக்கி இறங்கி வந்தான். செஞ்சடைச்சுருள் மகுடத்தில் அனலென காந்தள் மலர் சூடி, நெற்றியில் வெண் சாம்பல் பொடி பூசி, நாகக்குழை அணிந்து, வெள்விடை மேல் வந்தவன் காளிகக் குடிவாழும் ஊர்நடுவே மன்றுநின்று தன் உடுக்கை ஒலித்தான். எவெரெவெரெரெவரென ஒலித்தது குறுந்தோல் வட்டக் கொட்டு. குடில்களுக்குள் இருந்து எட்டிப்பார்த்தவர்கள் “யார் இவன்? எருக்குமாலை அணிந்திருக்கிறான். பன்றிப்பல்பிறை சூடிய செஞ்சடையன். முன்பு கண்டதில்லையே இவனை” என வியந்தனர். தன் மையக்குடில் விட்டு நாகபடம் செதுக்கிய மரக்கொந்தையும் கல்மணிமாலையும் அணிந்து வெளிவந்த கராளரை நோக்கி அவன் முழங்கும் குரலில் “குறவர்க்கரசே, உன் மகளை மணம்கொள்ள வந்துள்ளேன்” என்று உரைத்தான்.
இளிவரல் புன்னகையுடன் கராளன் “மகட்கொடை மறுத்தல் எங்கள் அன்றாட நிகழ்வாகி ஐந்தாண்டுகள் ஆகின்றன, செஞ்சடையரே. முடிகொண்ட மாமன்னர்கள் அனுப்பிய தூதர்கள் வந்து இங்கு நிரைகொண்டு நிற்காது ஒரு நாளும் கடந்து சென்றதில்லை. எங்கள் குலதெய்வமென அமர்ந்திருக்கும் கூர்நஞ்சின் தொடுகையேற்று இறந்தவர் நிரையோ அதனினும் பெரிது. மலைமகனெனத் தோன்றுகிறீர். விரைவிலா விடையேறி வந்திருக்கின்றீர். உமக்கும் அதுவே நெறி” என்றார்.
தன் முப்புரி வேலை தோள்சாய்த்து இனிய புன்னகையுடன் எரிவண்ணன் சொன்னான் “நஞ்சு எனக்குப் புதியதல்ல. நான் உண்ணும் அமுதே அது. காட்டுக, உங்கள் குல தெய்வம் உறையும் புற்றுக்கோயிலை!” அவன் புன்னகையின் தெளிவு அவர்களை குழப்பியது. கராளர் ஒருமுறை தன் துணைவியை திரும்பி நோக்கியபின் “அவ்வண்ணமே ஆகுக!” என்றார். அவள் அவன் மேனிப்பொலிவை நோக்கி கைகூப்பி கண்ணீர்ப்படலம் ஒளிவிட நின்றிருந்தாள். “ஆனால் இது உன் தேர்வு என்றும் இவ்விறப்புப் பழிக்கு எங்கள் குடி பொறுப்பல்ல என்றும் நீரையோ நிலத்தையோ தொட்டு நீ ஆணையளிக்கவேண்டும்” என்றார் கராளர். அவன் நிலம் தொட்டு “ஆணை ஆணை ஆணை. இது என் முற்றுறுதி” என்றான்.
குறுமுழவு மீட்டி குலப்பூசகர் முன்னால் செல்ல குருத்தோலை முடிசூடி குடி மூத்தோர் எழுவர் அவனைச் சூழ்ந்து உடன் அழைத்துச்சென்றனர். விந்தை காண்பதற்காக இளையோரும் பெண்களுமென ஒரு பெருங்கூட்டம் அவர்களைத் தொடர்ந்து சென்றது. அவன் நடந்தபோது இடையணிந்திருந்த வெள்ளெலும்பு குடைந்து செய்த மணிமாலைகள் மெல்ல குலுங்கின. அவன் காலடிபட்ட புற்கள் வணங்கி எழுந்தன. நோக்கநோக்க கிராத வடிவம் நெஞ்சள்ளும் பேரழகுகொள்வதன் மாயமென்ன என்று பெண்டிர் அகத்தே வியந்தனர். பெருமூச்சுவிட்டபடி அவனையன்றி பிறிது நோக்காது உடன் சென்றனர்.
நூற்றெட்டு மூங்கில் கால் நாட்டி எழுப்பிய தன் குடிலின் தெற்குச் சாளரத்தினூடாக விழிகளில் இளநகையொளிர காளி அவன் செல்வதை நோக்கியிருந்தாள். இருபுறமும் நின்ற அவள் தோழிகள் ஜயையும் விஜயையும் ஜயந்தியும் அபராஜிதையும் அவள் நிலைமாற்றம் கண்டு களியாடினர். ”முத்து வயலை அறுவடை செய்யும் பாண்டியன் தோற்றுத் திரும்பியது உன் வாயில். நெல்மலை கொண்ட சோழன் இளிவரலுக்குள்ளானான். பெருங்களிறுகளை கால்களாகக் கொண்ட சேரன் மகள் மறுக்கப்பட்டான். நூறுகாதுகளைக் கொண்ட திருவிட பெருமன்னன் இன்னமும் உன்னை நினைத்து ஏங்குகிறான். இவனோ நீற்றுப்பொடி பூசி புலித்தோல் ஆடையணிந்து வந்திருக்கும் மலைமகன். விழி கண்டால் பித்தனென்று தோன்றுகிறது” என்றாள் ஜயை.
“இவனுடன் சென்று நீ உச்சிமலைக்குகையில் பூதங்கள் ஏவல் செய்ய வாழப்போகிறாயா என்ன? அவனுக்கு புலித்தோல் எனில் உனக்கு மான்தோல். வெள்ளெலும்பில் அணிகள். உனக்கும் இருக்கும் முடிப்பிறைப் பல்லும் முப்புரிவேலும். உன் இதழ்மேல் இதழ் பதித்து அவன் முத்தமிடுகையில் உன் நெற்றியிலும் எழும் ஒரு மூன்றாம் விழி. கரியவளே, காட்டிலிருந்து மேலும் அகக்காட்டுக்குச் செல்வதே உன் ஊழ் போலும்” என்றாள் விஜயை.
“பித்தன். அவனுக்கிணையாக நீயும் பிச்சியென்றாவாயா? அவன் ஆட்டும் உடுக்கொலிக்கு நீ ஆடிக்களிப்பாயா?” என்றாள் ஜயந்தி. “உடனாட அந்த உச்சிமலையில் பூதநிரைகளே எழும். நாதமென்று இந்தக் காளை திமிலசைக்கக்கூடும்” என்றாள் அபராஜிதை. “ஒருகையில் தழலும் மறுகையில் தாளமும் கொண்டிருப்பான். மான் தொடர மழுவேந்தி நின்ற மலைவேடன். அவன் துணைவியாகிய நீ கொள்ளும் ஊர்தி எது?” என்று ஜயை சிரித்தாள். “வெள்ளெருது அஞ்சும் சிம்மம்…” என்று விஜயை சொன்னாள்.
அவளோ அவ்விளிவரலை புகழ்மொழியாக ஏற்று மெய்சிலிர்த்துக் கொண்டிருந்தாள். தன் உடல் இனிய மயிர்ப்பு கொள்வது ஏன்? முலைக்குவைகள் குறுவியர்வையுடன் விம்மித்தணிவது ஏன்? தொண்டை வறள்கையில் இதழ் ஈரம் கொள்வது ஏன்? மூச்சு வெப்பம் கொள்கையில் கண்கள் பனிப்பது ஏன்? அதுவரை அறிந்திராத மெய்ப்பாடுகளால் தளர்ந்து சாளரக்கழிகளை இருகைகளாலும் பற்றிக்கொண்டு தலைசாய்த்து விழித்த கனவிலென அசைவிழந்திருந்தாள். பின் அறியா உள எழுச்சியால் அவள் கண்ணீர்விடலானாள்.
பெருநாகம் குடிகொண்ட ஆலய முகப்பை அடைந்து அதன் கதவென அமைந்த ஏழு மூங்கில்களை விலக்கி பூசகர் சொன்னார் “இதன் வாயிலுக்கு இப்பால் நின்று வழிபடுவதுதான் எங்கள் வழக்கம். நூற்றெட்டு முகடுகள் கொண்டதும் ஆயிரத்தொரு வாய்கள் கொண்டதுமான இந்தப் புற்றுக்குவை பல்லாயிரம் ஆண்டுகளாக இங்குள்ளது. இதன் பணிக்கென்று இக்காட்டில் பிறந்து வந்தவர்கள் நாங்கள். இங்கு இறப்பிலாது வாழும் எழுதலைப்பெருநாகமான காளிகன் நூற்றெட்டுமுறை கரிய மண்ணைக் கொத்தி எங்களை முளைத்தெழ வைத்தது என்பது தொல்கதை. படையலும் பூசைகளும் வெளியிலிருக்கும் இந்த மூன்று பலிபீடங்களில் மட்டுமே நிகழ்வது வழக்கம்.”
அவன் மேல் நீறிட்டு வாழ்த்தி பூசகர் சொன்னார் “நீ எங்கள் குல மகளை கைக்கொள்ள வேண்டுமென்றால் இவ்வெல்லை தாண்டி செல்ல வேண்டும். அப்புற்றுகளில் ஒன்றின் வாய்க்குள் கைவிட்டு மாநாகர்களே அருள்க, இக்குலக்கன்னியை எனக்கு நல்குக என்று கோர வேண்டும். அவர்கள் அருளினார்கள் என்றால் நீ உயிருடன் மீண்டு இப்படிக்கு இப்பால் வருவாய். எங்கள் குலம் உனக்குப்பணியும். எங்கள் குலமகள் உன் குடிக்குரியவளாவாள்.”
புன்னகையுடன் “நன்று, நான் அதை இயற்றுவேன்” என்றபின் தன் முப்பிரிவேலையும் அதில் கட்டிய உடுக்கையையும் அங்கே சாற்றிவைத்து எலும்புமணிக் கங்கணம் ஒலித்த கைகளை நீட்டி படிதொட்டு சென்னிசூடி வணங்கி அவன் வாயில் கடந்து உள்ளே சென்றான். அங்கிருந்த கன்னியர் அஞ்சி மூச்சிழுத்து நெஞ்சழுத்தி ஏங்கி “என்ன நிகழ்கிறது! தென்றிசையன்னையரே, நீங்களே சான்று” என்றனர். இளையோர் அவன் அசைவுகளை நோக்கி அவற்றுக்கேற்ப அறியாது அசையும் தசைகளுடன் இறுகிய நாணில் அம்பென நின்றனர்.
புற்றுக்குவையை அணுகி ஒருகணம் நோக்கிவிட்டு முதற்குவையில் கால் வைத்து இரண்டாம் முகடில் கைபற்றித் தொற்றி அவன் மேலேறினான். வெளியே நின்ற பூசகர் பதற்றத்துடன் “இளையோனே, அறியாது செய்கிறாய். நீ இதன் நூற்றெட்டு வாய்களில் பாதாளப் பெருநாகங்களின் புவிமீள்வழிகள் அமைந்துள்ளன. அது கார்க்கோடகனின் முகடு. அப்பால் அதோ அது திருதராஷ்டிரனுக்குரியது. இது மணிகர்ணனின் முகடு. அதனருகே உள்ளது அஜமுகனின் வழி. இப்பால் வியாஹ்ரன். மேலே உச்சி வாய்திறந்திருப்பது வாசுகியின் மைந்தனும் எங்கள் குலதெய்வமுமான காளிகனின் குகைவாய். ஒருமுறை உமிழ்ந்தால் இப்புவியை முற்றெரித்து சாம்பலாக்கி பறக்கவிடும் வல்லமைகொண்ட அருநஞ்சு அவன் நாவில் உள்ளது” என்று கூவினார்.
“நீ அங்கு செல்லவேண்டியதில்லை. இப்புற்றிலுள்ள அனைத்து நாகங்களும் அவனே. ஏதேனுமொரு புற்றுவாயை அணுகி அதற்குள் கைவிட்டு நாகத்தின் அருள் கொண்டால் போதும்” என்றார் முதுகுலத்தார் ஒருவர். இல்லத்துச் சாளரத்தில் நின்றிருந்த அவளிடம் ஓடிவந்த ஜயை “புற்றுமுகம் பற்றி ஏறுகிறான். பெருநாகங்களை அறைகூவுகிறான்” என்றாள். விஜயை “அவன் சற்றும் அஞ்சவில்லை. இளமைந்தன் மணல்மேட்டிலாடுவதுபோல ஏறிச் செல்கிறான்” என்றாள். அவள் அதை வேறொரு விழியால் அண்மையிலென கண்டுகொண்டிருப்பவள் போலிருந்தாள்.
கூடிநின்றவர்களில் ஒருத்தி தன் நிறையழிந்து “வேண்டாம்! நச்சுப்பெருக்கு அப்புற்று. விலகிவிடுங்கள். இளையோனே, வீண் முயற்சி வேண்டாம்” என கூவினாள். அதிலெழுந்து அலைகொண்ட பெண்டிர் அத்தனைபேரும் அவனைநோக்கி கைநீட்டி “வேண்டாம்… மீள்க!” என்று கூவி அழுதனர். அவன் அச்சொற்களை கேட்கவில்லை. முதன்மைப்புற்றுமேல் ஏறி காளிகனின் பாதைக்குள் தன் கையை விட்டான். புற்று ஒரு பெருஞ்சங்கமென்றாகி உள்ளே கார்வை எழுந்தது. அனைத்து வாயில்களிலிருந்தும் கரிய நாகத்தலைகள் சீறி எழுந்தன.
விறகுக்குவையிலிருந்து எழுந்தாடும் கரிய தழல் நாக்குகள்போல அனைத்து புற்றுவாய்களிலிருந்தும் எழுந்த நாகங்கள் சீறிநெளிந்தன. நீட்டிப் பறந்தன இருமுனை நாக்குகள். சிறுமணிக் கண்களில் அனற்துளி அசைந்தது. அணுகி நின்றிருந்த அனைவரும் அஞ்சி விலகி பின்னடைந்தனர். அலறல்களும் அழுகைகளும் கூக்குரல்களும் எழுந்து சூழ்ந்தன. அவற்றின் சீறல்கள் இணைந்து நீரலை ஒன்று எழுந்தணுகுவதுபோல ஒலித்தன. மையப்பெருவாயிலிலிருந்து ஏழு தலைகளும் பறக்கும் செந்நாவும் செம்மணி விழிகளுமாக அள்ள எழுந்த ஏழுவிரல் கைபோல எழுந்து நின்றாடியது கருநாகமாகிய காளிகன்.
அதன் கழுத்தைப்பற்றி உருவி எடுத்து கையில் சுழற்றித் தூக்கி தன் கழுத்தில் அணிந்துகொண்டு அவன் இறங்கினான். கரிய கடலலை என எழுந்து பேருருக்கொண்டு எழுந்த அதன் படம் அவன் தொட்டதுமே சுருங்கி எடுத்ததுமே மேலும் சிறுத்து கழுத்தில் அணிந்ததும் கருமணிகோத்த ஆரமென ஆன விந்தையை அவர்கள் ஓசையடங்கி வாய்திறந்து விழிமலைத்த திகைப்புடன் பார்த்தனர். என்றும் அவன் நெஞ்சிலேயே அமைந்திருந்தது அது என்று அவர்களுக்குத் தோன்றியது.
புன்னகையுடன் வெளியே வந்து அவன் “நீங்கள் சொன்னதை செய்துவிட்டேன். குலத்தோரே, உங்கள் குலமகளை கைபிடிக்க விழைகிறேன்” என்றான். ஆயிரம் குரல்கள் ஒரே கணத்தில் வெடித்து எழுந்தன “அவ்வண்ணமே ஆகுக! இனி எங்கள் குலம்காக்கும் தெய்வமென நீங்களே நின்றருள்க! இங்கு அளிக்கப்படும் படையல் அனைத்திலும் உங்கள் சுவைதேர் நா வந்து படுக!”
பூசகர் குரல்நடுங்க கைகூப்பி “எந்தையே, துயர்கொள்கையில் எங்கள் குரல் உங்கள் செவிகளை வந்தடையட்டும். அஞ்சுகையில் எங்கள் குரலின்மையை நீங்கள் கேட்குமாறாகட்டும். எங்கள் கொடிவழிகளுக்கு காப்பென்று உங்கள் பேரையே என்றும் உரைப்போம்” என்றார். “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான் அவன்.
ஜயையும் விஜயையும் ஓடிவந்து காளியின் இருதோள்களையும் பற்றிக்கொண்டு “வென்றானடி அப்பித்தன். இனி உன் கைபற்றுவான் அவன்” என்றனர். அவள் கண்ணீர் வழிய அசைவற்று தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். “வருந்துகிறாயா?” என்றாள் ஜயந்தி. “அவள் உடல் சொல்கிறது, அது உவகை” என்றாள் அபராஜிதை. அவள் அச்சொற்களுக்கெல்லாம் அப்பால் எங்கோ இருந்தாள்.
தொடர்புடைய பதிவுகள்
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 62
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 47
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 46
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 41
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 40
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 36
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 35
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 28
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 22
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 14
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 13
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 12
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 7
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 6
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 5
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 2
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 1
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 80
வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 70
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 61
December 19, 2016
ஈராயிரம் தருணங்கள்… சிவா கிருஷ்ணமூர்த்தி
பிள்ளை பிறந்த வீட்டிற்குப் போவெதென்பதே கொஞ்சம் விசேஷம்தான்.கைக்குழந்தையை, வளர்ந்தவர் எடுத்து கொஞ்சுவதைப் பார்ப்பது அருமையாக இருக்கும். குழந்தையின் பின் தலையை தன் இடது கையால் பொத்தி மார்போடு எடுத்து பல்லி சப்தமிடுவது போல் ஒலி எழுப்பிக்கொண்டு வளர்ந்தவர் “யாரு வந்திருக்கா உன்ன பார்க்க?ஆரு… மாமாடா கண்ணு…ஆஆமா…மாமாதான்” என்று தன் உலகிலிருந்து பேச்சைத் தொடங்குவார்.
குழந்தையும் தன்னை தூக்கியவரை உற்று நோக்கும். அதன் உலகிலிருந்து அதன் பாஷையில் தொடர்பு கொள்ள ஆரம்பிக்கும். இருவரும் தத்தம் உலகின் விளிம்பில் நின்று கொண்டு, தம்மைச் சுற்றி இருக்கும் சூழ்நிலைகளை எல்லாம் மறந்துவிட்டு, தத்தம் மொழியின் வழியே அடுத்த உலகை நோக்கவும் அறியவும் முயற்சிக்கும் கணங்கள் பொற்கணங்கள்.எப்பேர்பட்ட “கடுமையான”, பட்டை ப்ரேம் கண்ணாடி போட்டிருக்கும் ஆசாமிகளும் குழந்தையின் உலகினுள் சட்டென போய்விடும் தருணங்கள்.
வண்ணதாசனின் படைப்புகளை வாசிக்கையில் கதை சொல்லியும் வாசகரும், வளர்ந்தவராகவோ அல்லது குழந்தையாக மாறிவிடுகிறார்கள். அவரது படைப்புகளை வாசிப்பு அனுபவத்தை இப்படித்தான், “இது மாதிரிதான் அது” என்றுதான் சொல்ல வருகிறது. அருமையாக இருப்பதை வேறு எப்படித்தான் சொல்வதாம்?
கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக எழுதி வரும் படைப்பாளியின் படைப்புலகத்தை எப்படி மதிப்பிடுவது? நிச்சயம் அவரது ஒரு சில படைப்புகளைக் கொண்டு அல்ல.ஆனால் நான் இந்த கட்டுரையில் அப்படித்தான் முயற்சித்திருக்கிறேன். தனுமை, போய்க்கொண்டிருப்பவள், நிலை போன்ற படைப்புகள் ஓரளவிற்கு அடையாளம் காணப்பட்டவை. ஆனால் இந்தக் கட்டுரைக்கு வேறு சில சிறுகதைகளை எடுத்துகொண்டிருக்கிறேன். அவை இன்னும் அதிகம் வாசிக்கப்படாத அல்லது பேசப்படாதது ஒரு காரணம். இன்னொன்று, இவை மற்ற எந்த முக்கிய படைப்புகளுக்கு சற்றும் குறைந்தவை அல்ல என்பதும் இன்னொன்று.
(“நடேச கம்பரின் மகனும் அகிலாண்டத்து அத்தானும்”)
நெல்லை போன்ற ஒரு நகரத்தில், டவுன் பஸ்ஸினுள் அத்தனை நெரிசல்களினூடும் காவித் துணி கவர் போட்ட தவில், நாதஸ்வர வித்துவான்களில் நாதஸ்வர வித்துவானை அடையாளம் தெரிந்துவிடுகிறது, கதை சொல்லிக்கு. இருபத்திரண்டு வருடங்கள் ஆனால்தான் என்ன? தன் திருமணத்திற்கு வாசித்தவரை, அதுவும் முந்தின நாள் கொலு மேளத்திலிருந்து, கல்யாணத்தன்றைக்கு காலையில் ஆரம்பித்து சாயந்திரம் வரை குளிர குளிர வாசித்தவரின் முகம் மறந்து போகுமா என்ன? ஒரு கை உயர்ந்து பஸ் கம்பியைப் பிடித்திருந்ததில் பக்கவாட்டு முகம்தான் தெரிகிறது அதனால் என்ன?கதை சொல்லிக்கு நாதஸ்வர வித்துவானின் சால்வையிலிருந்து ஓர் ஓடை போல் அவருடைய வாசிப்பு இறங்கி நகர்வது போல் உணர்கிறார்…தவில், நாதஸ்வர கருவிகள் இடைஞ்சலாக, எரிச்சல் பட்டவரின் முகம் கூட தளும்புவது போல்…
கதை சொல்லி திருமண நாளிற்கு போய்விடுகிறார். மாப்பிள்ளை பேசணும்ங்கறார் என்றதும் எழுந்து வந்த, கூடுதல் குறைவில்லாமல் பேசிய நடேச கம்பரின் மகனை சந்தித்த நாளிற்கு போய்விடுகிறார். இறங்கியதும் மனைவியிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொள்கிறார். வெறும் திருமண நாளை பற்றி மட்டுமல்ல, நாதஸ்வர வித்துவானை பற்றி மட்டுமல்ல, இன்னும் என்னென்னவோ சொல்ல வேண்டும் என்று அவர் உலகம் நிறைந்து தளும்பிக்கொண்டு இருக்கிறது. புற உலகில் நெரிசலான டவுன் பஸ் பிரயாணம் என்ன செய்துவிட முடியும்?
நிறுத்தத்தில் ஏற முண்டியடிக்கும் கூட்டத்தைப் பிளந்து வெளி வரும் மனைவியுடன் தன் நிறைந்த உலகின் மாந்தரைப் பற்றிச் சொல்ல காத்துக்கொண்டிருக்கிறார். சிரித்துக்கொண்டு, சிரித்து சிரித்து கண் கலங்கினமாதிரி, பளபளவென நீரில் புரண்டு கொண்டிருந்த பார்வையுடன், புடவை விசிறலும் வதங்கிய பூ வாடை எட்டுகிற தூரத்தில் வரும் மனைவியோ, ஒரே பாராவில் முற்றிலும் வேறு, இன்னொரு உலகை, அவரின் தளும்பிய உலகை முன் வைக்கிறார். அதில் அவரது அகிலாண்டத்து அத்தான்…வெகு காலம் கழித்து சந்தித்த அத்தானைப் பற்றி சொல்லிக்கொண்டே போகிறார்…முழுப்பரிட்சை லீவிற்கு மாமா வீட்டிற்கு போகிற போதெல்லாம் ஆற்றுக்கு வண்டியடித்துக்கொண்டு போகிற அகிலாண்டத்து அத்தான், மாங்காய், நொங்கு எல்லாம் பறித்துக்கொடுக்கும் அத்தான், தினசரி ரயிலில் பேட்டை காலேஜிற்கு வந்து படித்துவிட்டுப் போன அகிலாண்டத்து அத்தான், திடீரென யாரையோ கல்யாணம் பண்ணிக்கொண்டு வடக்கே ஓடிப்போன அத்தான்…
“அவசரமா இறங்கிப் போயிட்டாங்க, நீங்க அவங்களைப் பார்க்கலையே” என்று கேட்கிறார் மனைவி. கதை சொல்லிக்கும் சரி, வாசகருக்கும் சரி, பார்த்துவிட்ட மாதிரிதான் தோன்றுகிறது. நடேசர் கம்பரின் மகனைப் பார்த்தாலே போதுமே, ஒருத்தரைப் பார்த்தாலே இன்னொருத்தரைப் பார்த்தது போலத்தானே?நிறைந்திருக்கும் மனங்கள்/ உலகங்கள் வேறு வேறு இல்லை, எல்லாம் ஒன்றுதான் என்ற ஒன்று பளிச்சிடுகிறது, இறுதியில்.
மாசிலாமணி என்ற, மில்லில் வேலை பார்க்கும் நண்பரை, சைக்கிளை ஸ்டாண்ட்டிலிருந்து எடுத்தவுடன் பழக்க தோஷத்தில் மணி அடிப்பவரை, பொம்பளை புள்ளை பொறந்திருக்கு என்று மிட்டாய் கொடுப்பவர் நமக்கு புதிதில்லை. (“மாசிலாமணிக்கு குழந்தை பிறந்திருக்கிறது”). நிச்சயம் நமது வாழ்வில் வேறு வேறு வடிவிலாவது சந்தித்திருப்போம்.அவருடைய பிரச்சனைகளை எல்லாம் சொல்லி அடுத்த முறை ஊருக்கு போகும் போது தனது குழந்தையை, ஊக்கம் குன்றிய மனைவியை எல்லாரையும் பார்த்து விட்டு வருமாறு கேட்டுக்கொள்கிறார், கதை சொல்லியை. சொல்லும் போதே மாசி அழ ஆரம்பிப்பது தெரிகிறது.
கதை சொல்லி, இன்னொரு நாள், ஊருக்குப் போயிருக்கும் ஓர் நடுப்பகலில், குருக்களைய்யா காம்பவுண்ட்டில் விசாரித்துவிட்டு மச்சியிலிருக்கும் மாசி வீட்டிற்கு ஏறி (“சிமெண்ட்டில் மரக்கட்டை பதித்த, தொம் தொம்மென அதிர்ந்து”) குழந்தை பிறந்த வாசனையோடு இருக்கும் வீட்டிற்கு நுழையும் போது மாசியின் மனைவியும், அத்தையும் எல்லாரும் உறக்கம். சிணுங்கிய குழந்தைதான் எழுப்பி விடுகிறது.குழந்தையை கொஞ்சிக்கொண்டே மாசியைப் பற்றி சொல்லலாம் என்கையில் “அவுங்க மில்லுக்கு வேலைக்குப் போனாங்களா அய்யா ?’ என்று துவங்கி, ‘தெருவுல நிறுத்திவிடுவான் போல இருக்கே எல்லாத்தையும்’ என்று சொல்லிக்கொண்டே மாசியின் அத்தை அழும்போது நாம் இன்னொரு உலகில் இறங்க வேண்டியதாகிறது, அபூர்வ களையுடன் சிரிக்க ஆரம்பிக்கும் குழந்தையுடன்தான்.
“வடிகால்” சிறுகதையில் கதை நாயகன் சுந்தரத்திற்குப் பொறுக்கவில்லை. அவன் தகப்பனார் ஒரு கடுமையான வீட்டு சொந்தக்காரர். குடித்தனக்காரர்களுக்கு சிம்ம சொப்பனம். வாசலில் யாராவது சொம்பை வைத்திருந்தால் எட்டி உதைக்கத் தெரியும். முருங்கை மரத்தின் காய்களை தினமும் எண்ணி எண்ணி வைக்கத்தெரியும். இது எல்லாவற்றையும் விட இன்னொரு குடுத்தன வீட்டின் குஞ்சு எனும் வாயில்லாத பெண்ணின் உறவுக்காரர்களிடம் நடந்துகொண்ட விதம் – யாருக்குமே ஆறாது.
குஞ்சுவின் பாட்டி இறந்துவிட்ட துக்கம் விசாரிக்க ஆறு மாதம் கழித்து பம்பாயிலிருந்து உறவினர் வந்து இறங்குகிறார். இறந்த போது வர முடியவில்லை. ஆறு மாதம் துக்கத்தை பொத்தி வைத்து இப்போது வீட்டிற்கு வந்து “என்னை பிள்ளை போல வளர்த்தியே பெரியம்மே, கடைசி காலத்தல உன்னை பார்க்க கொடுத்து வைக்கலையே” என்று கதறுபவரை யாருக்காவது அதட்டி “இந்த அழுகையெல்லாம் ஆத்து மேட்டுல வைச்சிகிடணும், இங்க நாலு குடித்தனம் இருக்கற இடத்துல கூடாது” என நிறுத்த யாருக்காவது மனம் வருமா?
சுந்தரத்தின் தகப்பனாரால் முடிகிறது. அத்தனை கடுமையாக இருக்க முடிகிறது.மனம் வெம்பிப்போன சுந்தரம் குற்றால அருவியில் குளிக்கையில் மூச்சு திணறி இறந்த செய்தி சொல்ல வரும் பையனைப் போலவே வாசகர் மனமும் ஒரு நிலையில் இல்லாமல் அலை பாய்கிறது. சேதி கேட்டு எல்லா குடித்தனக்காரர்களும் வீட்டு சொந்தக்காரர் வீட்டின் முன் குழுமிவிடுகிறார்கள்.வெளியே போயிருந்த வீட்டு சொந்தக்காரர், சுந்தரத்தின் தகப்பனார் திரும்ப வருகிறார். சேதி கேட்டு திகைத்து குடையும் கையுமாக “ஏ, அய்யா” என்று சுந்தரத்தின் உடலின் மேல் விழுந்து கதறுகிறார்.அதுவரை அமைதியாக இருந்த எல்லாரும் அனுமதி கிடைத்தது போல் வாய் விட்டு அழ ஆரம்பிக்கிறார்கள்.
முருங்கைமரத்துப் பக்கம் தனித்து நின்று வாயைப் பொத்தி பொறுமிக்கொண்டிருந்த, வடக்கிலிருந்து வந்திருக்கும் குஞ்சுவின் மாமாவோ “ஏ பெரியம்மே, உன்னைப் பார்க்க கொடுத்து வைக்கலையே” என்று பெருஞ்சத்தத்தில் அழுகிறார்… சுந்தரத்தின் அப்பா அவனது கால் மாட்டிலிருந்து தலையைத் தூக்கி நிமிர்ந்து பார்த்துவிட்டு பின் தலையை புதைத்து கண்ணீர் பெருக்கும் போது…எல்லாருடைய கண்ணீரும் ஒன்றுதான், துயரத்தில் உன்னுடையது என்னுடையது என்ற பிரிவு உண்டா என்ன என்று தோன்றுகிறது.
வண்ணதாசனின் படைப்புலகம் முழுக்க முழுக்க மனிதர்களால், “உயிர் கொண்ட” மனிதர்களாலும், அருகம்புல், துளசி, அந்த வேப்பம் மரம், கோவைப்பழம், அணில், மஞ்சணத்தி பூ, “நடுகை” தாத்தா, அவரது கன்னுக்குட்டி இவர்களாலும் மற்றும் தருணங்களாலும் நிரம்பியிருக்கிறது.\அத்தருணங்கள் நீங்களும் நானும் தினம் தினம் சந்திக்கின்ற தருணங்கள்தான். ஆனால் வண்ணதாசன் போன்ற ஒரு படைப்பாளியால்தான் நலுங்காமல், அடிக்கும் சாரலில் முற்றிலும் நனையாமல் பொத்தின உள்ளங்கையை மெல்ல விலக்கி புத்தம் புதிய குருவிக்குஞ்சைக் காட்டுவது போல் காட்ட முடிகிறது. அப்படிக்காட்டும் போது அத்தருணங்கள் நிச்சயம் புதிதாய் இருக்கின்றன. இதற்கு அவரது மொழியும் ஒரு முக்கிய காரணி.
சில வாக்கிய அமைப்புகள் சிறுகதைகளிலிருந்து கவிதை வரிகளாக மாறி மாறி வருவதை துல்லியமாக உணரமுடிகிறது. படைப்புகள் வெறுமன தருணங்கள் மட்டும் ஆனவை அல்ல. கதையின் கூரிய மையப்புள்ளியை நோக்கி தருணங்கள் புடை சூழ செல்கின்றன.
“உப்பு கரிக்கின்ற சிறகுகள்” என்ற சிறுகதையில், அரசு எனப்படும் திருநாவுக்கரசின் பிடிவாத தகப்பனாரால் நிராகரிக்கப்பட்ட தோழி (“அவியலும் பொரியலும் வச்சு சாப்பாடு போட்டு ஊஞ்சல்ல உட்கார்த்தி வச்சு அழகு பார்த்துக்கிட்டா இருக்கே மூதேவி” என்று அரசின் அம்மாவை அறைகிறார், கல் பொறுக்கிக் கொண்டிருக்கின்ற மடிச்சுளகிலிருந்து பாசிப்பயறு பட்டாசல் முழுவதும் விசிறுகிறது. அரசின் அம்மா குனிந்து கூட்டுகையில், சிறு உள்ளங்கைக்குள் உருண்டு உருண்டு இளம்பச்சை குவிந்து கொண்டிருக்கையில் உதை விழுகிறது) திரும்ப அந்த வீட்டிற்கு அரசை பார்க்க வர சில காலம் ஆகிவிடுகிறது.
அதற்குள் அரசு அம்மா இல்லை; அப்பா துரும்பாக, நினைவு தவறி முதுமையின் ஆழத்திற்கு, மிக ஆழத்திற்கு போய்விடுகிறார். அரசுதான் குளுப்பாட்டி பவுடர் போடுதல், சவரம் செய்தல் எல்லாம். (“அப்பாவிற்கு சவரம் செய்வதுதான் என் இப்போதைய தியானம்…அப்பாவின் சவரக்கத்தி பிரசித்தமானது. அப்பாவின் தீட்டுக்கல் பிரசித்தமானது. நான் அப்பாவின் சவரக்கத்தி போல கூர்மையாக இருக்கிறேன். அந்த கத்தியை உபயோகிக்கிற போது உயர்ந்து நிற்கின்ற என் சுண்டு விரலை நீ பார்க்க வேண்டும்” அரசின் கடிதம்).
தோழி வந்து வாசல் மணியை அழுத்தும்போது வீட்டு வேலைக்காரிதான், இசக்கிதான் கதவைத் திறக்கிறார்; பேசுகிறார். அந்த நேரத்தில் அரசு கல்லூரியில் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறது. தோழியும் இசக்கியும் சற்று நேரத்தில் இலகுவாகிவிடுகிறார்கள். புறவாசல் நடை சில சமயங்களில் தடுக்கிறது, சில சமயங்களில் தாண்டிப் போகச்சொல்கிறது. உட்காரச் சொல்கிறது. அன்று தோழியை உட்காரச் சொல்கிறது. இசக்கி தொழுவத்தில் பால் கறந்து கொண்டிருக்க, தோழிக்கு இசக்கி அல்லது அரசு, யாராவது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு மத்தியானத்தை பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் போல இருக்கிறது.
“இப்படி வந்து உட்காரேன்” என்று இசக்கியை கையை பிடித்து உட்கார வைக்கும் போதுதான், “நீங்கள் யாருன்னு சொல்லவே இல்லையே?” என்று இசக்கி சிரித்துக்கொண்டு கேட்கையில்தான் வெளியில் மோட்டார் பைக் வந்து நிற்கும் சத்தம்.அழைப்பு மணி ஒலிப்பதற்கு சற்று தாமதமாகிறது. வாசலில் கிடக்கிற தோழியின் செருப்புகளை அரசு பார்த்திருக்க வேண்டும்…உண்மையில் அந்தth தாமதம் என்னவொரு ஒரு முடிவுறாத, நித்ய கணம்…
என் நண்பர் ப்ரபு கவிதையைப் பற்றி அவர் எங்கோ படித்ததை சொன்ன விதம் நினைவிற்கு வருகிறது. கவிதை என்பது அனுபவங்களில் இருந்து பழக்கத்தின் பாசியை அகற்றும் ஒரு செயல்.முதன் முறையாக ஒன்றை அனுபவிக்கும் போது நமது அகம் அதை முழுவதும் உள்வாங்கி கொள்கிறது. பின் வரும் ஒவ்வொரு அனுபவத்திலும் நமக்கும் அதற்கும் நடுவில் ஞாபத்தின் திரை விழுகிறது. அதை விலக்கி மீண்டும் அந்த அனுபவத்தை புதிதாக அடைவது இயல்வதில்லை. ஆனால் முதன்முறை அடைந்த அந்த அனுபவத்தின் பரவசம் மனதில் தங்கி விடுகிறது.
ஆனால் வண்ணதாசனால் பழக்கத்தின் பாசியை அகற்றி ஒவ்வொரு முறையும் தருணங்களை புதிதாக வாசகரோடு பகிர முடிகிறது. இவரது படைப்புகள் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு இது ஒரு முக்கிய காரணி என எண்ணுகிறேன்.உதாரணத்திற்கு “நடுகை”யில் ஒரு நெல்லையப்ப மாமா. இரவு முழுவதும் ரயிலில் பயணம் செய்து எழுந்திருந்து வந்தவர். வீட்டைச் சுற்றி மண்டியிருக்கிற செடி கொடிகளை வெட்டி துப்புரவு பண்ணினால்தான் நல்லது” – கையில் வெதுவெதுப்பான காப்பித் தம்ளரை வைத்துக்கொண்டு ஒரு வாய் குடிப்பதும், கொஞ்சம் நேரம் அந்த செடிகளின் அடர்த்திகளையே துளாவுவதுமாக இருந்து கொண்டு இப்படிச் சொல்கிறார்.
“அவர் விடியக்காலம் நாலரை அஞ்சு மணிக்கு வந்து சேர்கிற ரயிலில் இப்படி வருவதும், பல் தேய்த்த கையோடு இப்படி காப்பி தம்ளருடன், முன் வாசலிலோ, புற வாசலிலோ வந்து நின்றுகொண்டு பார்ப்பதும் எதையாவது சொல்வதும், வேறு யாரும் சொல்லாததாக இருக்கும். வாசல் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்த என்னிடம் ஒரு தடவை “இங்க வா” என்று கூப்பிட்டு, விடிய ஆரம்பிக்கிற அந்த நேரத்தில் நீலக்குமிழ் போல ஜொலித்துக்கொண்டிருந்த ஒரு நட்சத்திரத்தைப் பற்றிச் சொன்னார். சொல்லச் சொல்ல நட்சத்திரம் மட்டுமே ஆயிற்று வானம். அப்போது வீசிய குளிர்ந்த காற்றை நட்சத்திரம் அனுப்பியது போல இருந்தது.”
சிவா கிருஷ்ணமூர்த்தி
*
ஒரு படைப்பாளியின் களம் எத்தனை முக்கியம் என்பது நாம் அறிந்த ஒன்று.நெல்லை நகரம், சரி, மாவட்டமே இருக்கட்டும், என்ன பெரியதாக இருந்துவிடப்போகிறது? ஆனால் இந்த சின்ன வட்டத்திலிருக்கும் மாந்தர்கள், உறவுகள் எத்தனை பெரியதாக வியாபித்து இருக்கிறார்கள்… ஆச்சி, மாமா, அத்தை, அக்கா…அத்தனை கோபங்களுடனும் எரிச்சல்களுடனும், பொறாமையுடனும், அக்கறையுடனும் மானிடத்தின் அத்தனை குணங்களும் சேர்ந்த உறவுகள்…கிட்டதட்ட உறவுகளின் ஓர் ஆவணம் போலவே ஆகியிருக்கின்றன, வண்ணதாசன் படைப்புகள். இன்னும் இருபது, முப்பது வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது இந்த உறவுகள் ஆவணத்தில் மட்டுமே எஞ்சியிருக்கும் என்றாலும் கூட…
பெரும்பாலும் நெல்லைதான் களம் எனினும் வண்ணதாசனின் பார்வையில், சென்னையை காண்பது என்பது இன்னொரு ஓர் அனுபவம். “நடுகை” தொகுப்பிற்கு ஆசிரியரின் முன்னுரை அவர் சென்னையில் வசித்த காலத்தில் எழுதப்பட்டது. சென்னை மின்சார ரயில் பயணங்கள் -ஸ்டேஷன் பெஞ்சில் அமர்ந்தவாறே தற்செயலாக இடது புறம் திரும்பிப் பார்த்தால் யாரோ படுத்துக்கிடப்பது போலத்தான் தெரிகிறது.சரியாகப் பார்த்தால் பிணம், ரயிலில் அடிப்பட்டவரை மூடி மேலேயே ஒரு மஞ்சள் பையயும் வைத்து…பிணங்களோடு பயணம் செய்வது போலேயே பூக்களுடனும் பூக்கட்டுபவர்களோடும் பயணம்…வாய் பேச முடியாத பெண், பூக்கட்டிக்கொண்டே, அவளோடு பூக்கார சிநேகிதனோடு சைகைகளில் “பேசிக்” கொண்டும், பேச்சை விட அதிகம் சிரித்துக்கொண்டும்…
எல்லா ஊரையும் போலவே இங்கேயும் கண் தெரியாத இசைஞர்கள் இசைக்கும் பாடல்களுக்கு சம்பந்தமே இல்லாமல் ரயில் அடையாறு சாக்கடை பாலத்தைத் தாண்டிக்கொண்டிருக்கும். நுங்கம்பாக்கம் இடுகாட்டு புகையின் நிணம் பரவும். நிண வாடையில் வண்ணதாசனும் நீங்களும் நானும் என்றென்றோ கலந்து கொண்ட ஈமச்சடங்குகளும் தோள் கொடுத்த இறுதி ஊர்வலங்களும் நினைவில் விரியும். உதிர்த்து உதிர்த்து வீசிய ரோஜாப்பூக்களின் பாதையில் நண்பனின் உடல் அசைந்தசைந்து நகரும். குளிப்பாட்டி திருநீறு பூசப்பட்ட ஏழு வயது, ஐந்து வயதுச் சிறுவர்கள் தூக்ககலக்கத்துடன் மையவாடியுல் தாய் மாமா மடியில் உட்கார்ந்திருக்கும் காட்சிகள் என சென்னையில் ஆரம்பித்தாலும் திரும்ப அதிரும் நினைவுகளுக்கு போய்விடுகிறது. வண்ணதாசன் சொல்வது போல் இத்தனை மின்சார வண்டி தடங்களுக்கு மத்தியிலும் எங்கோ அவரது தாமிரபரணி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.
சென்னை வாழ்க்கையில், ராஜு நாயக்கன் தெருவில், இரண்டாம் தளத்திலிருந்து எதிரில் இருக்கும் மாமரங்களோடு அவரது காலைகள் துவங்குகின்றன. முக்கியமாக, வீட்டுச் சொந்தக்காரரின் எண்பத்தி நான்கு வயது தாயாரான அந்த மனுஷி, ஒவ்வொரு நாள் காலையிலும் அந்த மாமரம் வரை போய் தன் கூனல் முதுகும் கைத்தடியுமாக உதிர்ந்து கிடக்கின்ற மாம்பிஞ்சுகளை பொறுக்குகின்ற தருணங்கள் முக்கியமானவை என்று அவர் சொல்லவே வேண்டியதில்லை. உணர்கிறோம்.
உடல் முழுவதும் ரத்தமும், தூசிகளும் பூசப்பட்ட, குண்டுகளால் தகர்க்கப்பட்ட கட்டிட இடிபாடுகளிலிருந்து எடுத்து வரப்படும் சிரிய அலப்போ நகர குழந்தைகளை காண நேரும் இன்றைய தினங்கள், சக மனிதர்களை, சக உயிர்களை, மதமோ, எல்லையோ, மொழியோ ஏதோ ஒரு சில அற்ப காரணங்களுக்காக அழிக்க சலிக்காமல் முயன்றுகொண்டிருக்கும் இந்த தினங்கள் மானிடத்தின் மேல் கடுமையாக அவ நம்பிக்கை கொள்ளும் தினங்கள்.
மானிடம் என்றுமே, வாழ்க்கை வரைப்படத்தில் ஒரே சீரான, நேர் கோடாக இருப்பதில்லை. வண்ணதாசன் படைப்புகள் அவற்றை மொத்தமாக, கீழ்ப்புள்ளிகளுடனும் மேல், உச்சப் புள்ளிகளுடனும், கீழ்மை மின்னும் தருணங்களோடும், மகத்தான தருணங்களோடுமேதான் வாசகர் முன் வைக்கின்றன. வைக்கப்படும் விதத்தில் மானிடத்தின் மேல் நிச்சயம் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. அதையே வண்ணதாசன் படைப்புகளில் நான் கண்டு கொள்ளும் தரிசனம். இந்த நம்பிக்கை வேறு எப்போதுமில்லாது இன்றைய தினங்களில் ஒரு அத்தியாவசிய தேவை.
தேவாங்கு வளர்க்கும் நரிக்குறவ இளைஞன்; காலையில் பொக்லைன் இயந்திரத்தால் வீட்டை இழந்தாலும் ராத்திரி வந்து வளர்த்த செடியைப் பாதுகாக்கிற பையன்; மலையப்பசாமியை வரைகிறவரைப் பார்த்து ‘டீ சாப்பிடலாமா?’ என்று கேட்கத் தோன்றும் ஒருவர்;பன்னீர்ப் பூ உதிர்ந்துகிடக்கிற இடத்தில் சிறுநீர் கழிக்க மனமில்லாத பள்ளிச்சிறுவன்; அத்தனை நெரிசல் நேரத்திலும், சுற்றி அத்தனை கூட்டமிருப்பினும் பாலத்தின் உச்சி வளைவில் காற்றை உணர்ந்து ‘ஹா!’ என்று சொல்லும் கண்டக்டர் என நம்மைச்சுற்றி தினமும் நம்பிக்கைகள் சுடர் விட்டு எரிந்து கொண்டிருப்பதை காட்டுவது என்பது எத்தனை முக்கியமான ஒன்று.
மானுட உச்சங்களைக் காட்டுவதற்கு, அவற்றின் மேல் நம்பிக்கை வைப்பதற்கு “கதவுகளை ஓங்கி உதைக்க வேண்டியதில்லை”, ஏரி நீர் பரப்பில் நடமாடும் பூச்சிகள் போன்ற ஒரு மென் தொடுகையே சாத்தியமாக்கும். சாத்தியமாக்கியிருக்கின்றன வண்ணதாசனின் படைப்புகள்.நெல்லையோ, சென்னையோ, சிரியாவோ, இங்கிலாந்தோ வேறு வேறு அல்ல, எல்லாமே ஒன்றுதான்.
வண்ணதாசன் கேந்திப்பூவின் மணம் ராஜகோபாலன்
வண்ணதாசன்- சாளரத்தில் குவியும் ஒளி சுனீல் கிருஷ்ணன்
வண்ணதாசன் குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம் எம் ஏ சுசீலா
வண்ணதாசன் -வண்ணமும் மென்மையும் – சௌந்தர்
வண்ணதாசன் – சிவசக்தி நடனம் கடலூர் சீனு
==============================================================================
==========================
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3
தொடர்புடைய பதிவுகள்
மனிதமுகங்கள் -வளவ. துரையன்
கேந்திப் பூவின் மணம் – ராஜகோபாலன்
சாளரத்தில் குவியும் வெளி- சுனீல் கிருஷ்ணன்
‘குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம்’ – எம். ஏ. சுசீலா
வண்ணமும் மென்மையும்…. சௌந்தர்
புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்?
அடுத்தகட்ட வாசிப்பு
வண்ணதாசனுக்கும் சிவக்குமாருக்கும் விருது
பளிங்கறை பிம்பங்கள்
மின் தமிழ் பேட்டி 2
சாரல் உரை -கடிதம்
சாரல் விருது
வண்ணதாசனின் சினேகிதிகள்
கலாப்ரியா-வண்ணதாசன் கடிதம்
வருகையாளர்கள் 3 -பவா செல்லத்துரை
பவா செல்லத்துரை எனக்கு சகஎழுத்தாளர் என்பதைவிட முப்பதாண்டுக்கால நண்பர் என்று சொல்வதே பொருத்தம். நான் 1987ல் அவரை அறிமுகம் செய்துகொண்டேன். இன்றுவரை நீடிக்கும் அணுக்கம் அவருடையது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இணக்கமான முகமாக ஒரு காலகட்டத்தில் பவா அறியப்பட்டார். கட்சியின் துணையமைப்பாக, வெறும்பிரச்சாரக்குழுமமாக இருந்த அதை அனைத்து இலக்கியவாதிகளுடனும் தொடர்புள்ளதாகவும் அனைத்து இலக்கியவிவாதங்களிலும் பங்கெடுப்பதாகவும் மாற்ற அவரால் முடிந்தது. அவர் திருவண்ணாமலையில் நிகழ்த்திய கலையிலக்கிய இரவு என்னும் நிகழ்ச்சி பின்னர் தமிழகம் முழுக்கவே பரவியது. மார்க்ஸியத்தை ஏற்காதவர்கள் கூட வந்து அமர்ந்து விவாதிக்கும் மேடையாக அவருடைய நிகழ்ச்சிகள் மாறின
விளைவாகத் தமிழிலக்கியத்தின் அமைப்பிலேயே ஆழமான செல்வாக்கைச் செலுத்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தால் முடிந்த்தது. மாய யதார்த்தவாதம் முதலிய எழுத்துமுறைகளை இலக்கியத்திற்குள் கொண்டுவந்தது அந்த உரையாடலே. இனிய நட்புக்கூடல்களாக இருந்தவை அந்த நாட்களைப்பற்றி பவா தன் எல்லாநாளும் கார்த்திகை என்னும் நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்
அந்நாட்களில் எழுதப்பட்டு தொகுக்கப்பட்ட ஸ்பானியச்சிறகும் வீரவாளும் நான், கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் போன்று இன்று எழுதிக்கொண்டிருக்கும் பலருக்கும் ஒரு அடித்தளமாக அமைந்த தொகுப்பு. பலவகையான எழுத்துக்களின் கலவை அது. பவா செல்லத்துரையும் அந்த மேடையிலிருந்து உருவாகிவந்தவர்
நாட்டாரியலில் இருந்து உருக்கொண்ட மாயயதார்த்தத் தன்மையும் முற்போக்கு எழுத்தின் மனிதாபிமான நோக்கும் கலந்த கலைப்படைப்புக்கள் என பவா செல்லத்துரையின் எழுத்துக்களைச் சொல்லலாம். தமிழ் முற்போக்கு இலக்கியத்தின் உச்சகட்டச் சாதனைகளாக அமைந்தவை அவர் எழுதிய கதைகளில் சில.
பவா செல்லத்துரை சில சிறுகதைகள்
======================================
பவா செல்லத்துரை கதைசொல்கிறார் சுரேஷ் கண்ணன்
=========================================
பிற அழைப்பாளர்கள்
கு சிவராமன் அறிமுகம்
தொடர்புடைய பதிவுகள்
வருகையாளர்கள் -2 இரா முருகன்
வருகையாளர்கள் -1.எச் .எஸ்.சிவப்பிரகாஷ்
விஷ்ணுபுரம்- விண்ணப்பம்
விழா 2015 கடிதங்கள் -8
விழா 2015 கடிதங்கள் 7
இலக்கியமெனும் கனவு
விழா 2015 கோபி ராமமூர்த்தி பதிவு
விழா 2015 கடிதங்கள் 6
விழா, சந்திப்பு, மீட்பு
விழா 2015 – விஷ்ணுபுரம் விருது
விழா பதிவுகள் 3
விழா படங்கள்
விழா கடிதங்கள்
விருதுவிழா, முதல்நாள்
இன்று விஷ்ணுபுரம் விருது விழா
அனைவரும் வருக!
விஷ்ணுபுரம் விருது விழா வருகைப்பதிவு
விஷ்ணுபுரம் விருது விழா காணொளிப்பதிவு
விழா 2014 உவப்பக்கூடி உள்ளப் பிரிதல்
விழா கடிதங்கள் 2
ஒண்ணுமே படிச்சதில்லை -கடிதங்கள்
அன்புள்ள ஜெ.மோ அவர்களுக்கு,
”சாரி சார், நான் ஒண்ணுமே வாசிச்சதில்லை” என்னும் கட்டுரையைப் படித்தேன்…..நானும் இதே முட்டாள் தனத்தை செய்தேன். அதுவும் [ நீங்கள் இக்கட்டுரையில் பெயர்சொல்லாமல் குறிப்பிட்டிருக்கும் ] நாஞ்சிலிடமே!
அவர் வேலை செய்த Brady & Co கம்பெனியில் என் தந்தையாரின் நண்பரும் வேலை செய்தார்….அவரை சந்திக்க சென்ற போது “குரு, உனக்கு ஒரு எழுத்தாளரை அறிமுகம் செய்கிறேன் எனக்கூறி நாஞ்சிலை அழைத்து அறிமுகம் செய்தார்….நான் அவர் எழுத்தை வாரப்பத்திரிக்கைகளின் வாயிலாக மட்டுமே படித்திருந்தேன்.
என்ன பேசுவது என தடுமாறி ஒரு மாதிரி உளறிக்கொட்டி விட்டேன்….உங்கள் கட்டுரையில் அந்த வாசகி குறிப்பிட்டிருந்தாரே ….“நான் வாசிச்சிருக்கேன். கதைகள் ஞாபகமும் இருந்தது. ஆனால் அவரை மாதிரி இருக்கிறவங்ககிட்ட நுணுக்கமா அறிவாப் பேசணும், அது நமக்குத் தெரியாதேன்னு நினைச்சேன். தப்பா பேசுறதவிட வாசிக்கலைன்னு சொன்னா நல்லதுன்னு தோணிச்சு” கிட்டத்தட்ட அதே எண்ணங்களில் தான் நானும் அப்படி செய்தேன்! பின்னாளில் நண்பர் ஓவியர் ஜீவாவிடம் இதை சொல்லி திட்டு வாங்கிக் கட்டிக்கொண்டது தனிக்கதை!
குரு பிரசாத்
அன்பு ஜெமோ,
‘நான் ஒண்ணுமே வாசிச்சதில்லை’ கட்டுரையை வாசித்தேன். நீங்கள் அமெரிக்கா வந்தபோது உங்களைப்பார்க்க வந்த அமெரிக்கப் பேராசிரியர்களை நினைத்துக்கொண்டேன்.
உங்களை சந்திக்க வந்த அறுவரில் இருவர் உங்களுடைய படைப்புகளைப்பற்றி கேள்விப்பட்டவர்கள். அவர்களுடைய உயர் ஆராய்ச்சி வட்டத்தில் ‘இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள்’ பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். மற்ற நால்வரும் என் வழியாக மட்டுமே உங்கள் பெயரைக் கேட்டிருக்கிறார்கள். சந்திப்பு நாளுக்கு 3 வாரம் முன்பிருந்து ‘முன்னேற்பாடு’ செய்யத்தொடங்கினர். ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் நான் அதற்கு உதவ வேண்டும் என்பது எனக்கிடப்பட்ட கட்டளை (கரும்புதின்ன கூலி)!
அவர்கள் யாருக்கும் தமிழ் தெரியாதென்பதால், முதலில் உங்களைப்பற்றி வந்த ஆங்கிலக்கட்டுரைகளை எல்லாம் தேடித்தேடி வாசித்தார்கள். வாரம் ஒருமுறை எல்லாவற்றையும் தொகுத்து என்னிடம் கொடுத்து கருத்தைக்கேட்பார்கள்!நானும் ‘இது உண்மையில்லை’, ‘இது எல்லாத் தரப்பையும் சொல்லவில்லை’ என்று செய்திக்கு தகுந்தாற்போல் பதில் சொல்வேன். மிக விரைவில் அவர்களுக்கு ஒரு வியப்பு வந்துவிட்டது- என்னவென்றால், எப்படி ஒருவர் இவ்வளவு எதிர்ப்புகளை சந்தித்து ‘அசராமல் தாம்பாட்டுக்கு’ எழுதிக்குவிக்கிறார் என்பதே! நீங்கள் சொன்ன “யானை Vs பூரான்” கதையை அவர்களுக்கு சொன்னேன், கண்ணில் நீர்வர சிரித்தார்கள்!
பிறகு உங்கள் ஆக்கங்களில் ஏதேனும் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றனவா என்று தேடி, காடு நாவலை படித்தனர். ஒரு 100 பக்கம் முடித்தவுடனே, நண்பர் ழாக் சொல்லிவிட்டார் “இவர் படிமங்களை வைத்துக் கதை சொல்கிறார்; மொழிபெயர்ப்பெல்லாம் ஒத்து வராது ” என்று.
கடைசியாக சிறுகதைக்கு வந்தார்கள். உங்களது சிறுகதைகளில் எனக்குப்பிடித்த இரண்டு கதைகளை எடுத்து ‘பத்தி பத்தியாக’ சொல்லவேண்டும் என்று ஏற்பாடு. மாடன் மோட்சத்தையும், யானை டாக்டரையும் எடுத்துக்கொண்டேன்.
ஏசு கையில் என்ன ஆயுதம் வைத்திருந்தார் என்று மாடன் கேட்குமிடம் அனைவரையும் கவர்ந்த தருணம். அது மட்டுமே ஒரு மணிநேர விவாதமாய் நீண்டது. அப்படி எந்த ஆயுதமும் இல்லாத ஒருவர் மேய்ப்பராக ஆனதே அவரின் சிறப்பு என்று ஒருதரப்பும், மகாவீரரோ, புத்தரோ, கிருஷ்ணரோ சொல்லாத எதை அவர் சொல்லிவிட்டார் என்று இன்னொரு தரப்பும் விவாதித்தனர். யானை டாக்டர் கதை ஒரு ‘தரிசனம்’ என்பதே அனைவரின் கருத்தும்.
சந்திப்பு நாளன்று நிகழ்ந்தது உங்களுக்கு நினைவிருக்கும். மாலை 5:30 மணிக்குத்தொடங்கி 2 மணி நேரம் சந்திப்பு என்று நிரல். ஆனால், விவாதம் சூடு பிடித்து தட தடவென ஓடி ஒரு வழியாய் முடிவுக்கு வந்தபோது இரவு 11:30 மணி! நடுவில் இரண்டு முறை மட்டும் அணைத்து வைத்திருந்த செல்பேசியை பயன்படுத்தினர்- குழந்தைகளை வீட்டில் பார்த்துக்கொள்வதற்காக ஏற்பாடு செய்திருந்த காப்பாளரை சிலமணி நேரங்கள் மேலும் நீட்டிக்கச்செய்ய.
அன்புடன்,
ராஜன் சோமசுந்தரம்
அன்புள்ள ஜெ
நான் ஒண்ணுமே வாசிச்சதில்லே அனுபவம் எனக்கும் உண்டு. நான் பிரபஞ்சனைச் சந்தித்தபோது அவருடைய மானுடம் வெல்லும் வானம் வசப்படும் இருநாவல்களையும் வாசித்திருந்தேன். இரண்டையும் ஞாபகமும் வைத்திருந்தேன். ஆனால் அவரிடம் உளறக்கூடாது என்பதனால் வாசித்ததே இல்லை என்று சொல்லிவிட்டேன். அவர் பேசுவதைக் கேட்போம் என நினைத்தேன். ஆனால் வாசிக்கவில்லை என சொன்னதுமே பிரபஞ்சன் சர்வசாதாரணமான விஷயங்களைப்பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார் .பெரும்பாலும் ஓட்டல் உணவுகளைப்பற்றியும் சென்னை திரையரங்குகள் இடிப்பதைப்பற்றியும்
நான் பெரிய சோர்வுடன் திரும்பி வந்தேன். அதன்பின் உங்களை சந்தித்தேன். அப்போதும் இதேதான் நடந்தது. அங்கே வந்த நான்குபேரில் மூவருமே உங்களை வாசிக்கவில்லை என்றார்கள் நீங்கள் சினிமா பற்றிப் பேசினீர்கள். அன்றைக்குத்திரும்ப வரும்போது பெரிய சோர்வு. ஏன் இப்படி நிகழ்ந்தது என்றே நினைத்தேன். எழுத்தாளர்களைச் சந்திக்கச்செல்வது அவர்கள் முக்கியமான எதையாவது சொல்வார்கள் என்பதனால்தானே?
திடீரென்று ஒரு விஷயம் புரிந்தது. நாம் நம்மை, நம் தகுதியைக் காட்டிக்கொள்ளவேண்டும். நம்மை கொஞ்சமேனும் நிரூபிக்கவேண்டும். இல்லாவிட்டால் நம்மை அவர்கள் பாமரர் என்றே நினைத்துக்கொள்வார்கள். பாமரர்களுக்கு உரியவகையில் பேச ஆரம்பிப்பார்கள். மிக இன்ஸ்பைரிங் ஆகப் பேசக்கூடியவர் நீங்கள் என என் நண்பர்கள் பலர் சொல்லியிருக்கிறார்காள். ஆனால் பேசவைப்பது கேட்பவர்கள் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறார்கள், எந்த அளவுக்குத் தகுதியுடன் இருக்கிறார்கள் என்பதுதான்.
அன்றைக்கு உங்களிடம் பேசியபோதும் சரி பிரபஞ்சனிடம் பேசியபோதும் சரி வாசித்தவர்கள் சும்மா இருந்தோம். வாசிக்காத ஒரே ஒருவர் சாப்பாடு சினிமா என்று பேச்சைக்கொண்டுபோனார். எந்த நல்ல உரையாடலும் கேட்பவரை ஒட்டியே உருவாகிறது என்று அன்று புரிந்தது. அதெல்லாம் மிகப்பெரிய இழப்புகள்
உண்மையில் வாசகர்களிடம் சாதாரணமான விஷயங்களை ஓர் எழுத்தாளர் பேசுகிறார் என்றால் அவர் அவர்களை உள்ளூர மிகச்சாதாரணமாக எடைபோட்டுவிட்டார் என்றுதான் அர்த்தம். அதற்கு முழுக்கமுழுக்க அந்த வாசகர்கள்தான் காரணம்
முத்துராஜ் ஆறுமுகம்
*
வாசிச்சதில்லை…யை விட ஒருபடி மேல்:
இந்த வருடம் ஒரு இலக்கியக்கூட்டத்தில் ஒரு பெண்மருத்துவர் வந்திருந்தார். ஆங்கிலத்தில் ஒரு தொகுதி (யோ ஒரு கதையோ) எழுதி இருப்பார் போல.
கூட்டத்திற்கு வந்திருந்த இ.பா’வை, தமிழின் முக்கியமான எழுத்தாளர் என்று அவருக்கு யாரோ போட்டுக் கொடுத்து விட்டார்கள்.
நான் ஒரு (குருதிப்புனல், மழை தவிர) ‘ஒண்ணுமே வாசிச்சதில்லை சார்’ – category என்பதால், கொஞ்சம் அகலாது-அணுகாது அமர்ந்திருந்தேன்.
மருத்துவரோ நேராக வந்து, அடுத்த இருக்கையில் அமர்ந்து, வாஞ்சையோட முறுவலித்து Sir, can you please give me some tips on how to write என்றாரே பார்க்கலாம்.
கூட்டம் தொடங்கி இ.பா’வைக் காப்பாற்றியதாக எனக்கு நினைவு, அல்லது நம்பிக்கை.
பிரபு
சாரி சார் ஒண்ணுமே படிச்சதில்லை
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
எச்.எஸ்.சிவப்பிரகாஷ் கவிதைகள்-3
1.இரவு முழுதும்
இரவு முழுதும்
ஓவென்ற காற்றின் ஊளை
உடல்மீது பாய்வதுபோல இருந்தது
இந்நேரம்
சுக்குநூறாகச் சிதைந்திருக்கலாம்
என் வாடகை வீடு
பகல் முழுதும்
பொழிந்தபடியே இருந்தது
மழைமழைமழை
இந்நேரம்
கரைந்துபோயிருக்கலாம்
என் வாடகை வீடு
இந்தக் கோடை முழுவதும்
எரிந்தபடியே இருந்தது
வானுயர்ந்த நீல அடுப்பு
இந்நேரம்
எரிந்து பொசுங்கியிருக்கலாம்
என் வாடகை வீடு
குளிர்காலம் முழுவதும்
கவிந்து மூடிக்கொண்டிருந்தது
கடுமையான குளிர்
உறைந்துபோயிருக்கலாம்
என் வாடகை வீடு
இன்னும் உயிரைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது
என் வாடகை வீடு
காத்துக்கொண்டிருக்கிறது
என் வாடகை வீடு
என்னுடையதாக மாறாத என் சொந்த வீடு
2.அடுப்பு
திருமணம் திவசங்களெல்லாம்
முடிந்துவிட்டன.
பூமியகலமுள்ள அடுப்பு
இப்போது அணைந்திருக்கிறது.
கோடானுகோடி வயிறுகளுக்கு
உணவு கிடைக்கட்டுமென
சுட்டழித்த காடு.
வடதுருவத்திலிருந்து தென்துருவம் வரைக்கும்
பச்சைப்பசேலென நீண்டிருந்த காடு
இப்போது எரிந்து சாம்பலாகிவிட்டது.
நீங்களே தொட்டுப் பாருங்கள் !
எவ்வளவு குளிர்ச்சி.
காடு விழுங்கிய நெருப்பு
நாட்டிலும் எரிந்து
நாட்டினரின் கதைகளும் முடிந்துவிட்டன.
அந்த அழிவுகளின் விசித்திர அலங்கோலப் படங்களை
நான் தன்னந்தனியே தீட்டிக்கொண்டிருக்கும்போது
அந்தச் சாம்பலின் அகன்ற பரப்பில்
இதோ
சூரியன் !
அந்த மாபெரும் அடுப்பின் கருப்பையின் ஆழத்தில்
புதிய கரு.
கட்டிட வேலைக்காரர்கள்
சுடுகாட்டுச் சாம்பலுடன் கலந்த மண்
கல்குவியலையும் பாதி வெந்த விறகுகளையும்
தாண்டியும் தடுக்கியும் வெளியே வந்தேன்
ஒருமுறையாவது
இதமான காற்றால் நெஞ்சை நிரப்ப
மண்திமிங்கலம் எழுந்து நின்றதுபோல
வர்ணம் பூசாத மாளிகை
அதன் தோள்களை நிறைக்கும்
கூலியாட்களின் வரிசை
முதலில் செங்கல்லாக மாறும் மண்
அப்புறம் கட்டடமாகும்
மெல்ல மெல்ல உயரும் வாழ்க்கை எல்லை
கைக்குக் கைமாறும் மண்சட்டியொன்று
இறக்கை முளைக்காத உலோகப்பறவை
ஏறித் தாழும் தோளிடுக்கில்
நீல வானமே எரிந்தாலென்ன?
வேகமாய்ப் புகையுயர்ந்து அடர்ந்தாலும் என்ன?
மண்பிளந்து படிப்படியாய்
உயிரிறிந்து நெடிதுயர்ந்த
அழகான மாளிகை
சடசடக்கும் கிணற்றுராட்டினம்
கூவி விடுக்கும் அழைப்புக்கு நடுவில்
சுடுமணல் குவியல்களின்
சிறுசிறு நிழலடியில்
அரைவிழி திறந்த குழந்தைக்கு
அமுதூட்டும் அம்மா
உன் ரகசியக் கருவறையில் புரளும்
நகரங்கள் எத்தனை, நாடுகள் எத்தனை?
அபூரண கதை
எனக்கு நீதான் காட்டினாய்
ஓர் உதிர்ந்த தலைமுடியை
அதன் கதையை முழுசாய்
அறிந்துகொள்ளும் முன்பு
மேலே பறந்து மறைந்தது
ஒரு கொக்கைப்போல
நான் உனக்குக் காட்டினேன்
உதிராத தளிர்களை
அதன் கதையை முழுசாய்
அறிந்துகொள்ளும் முன்பே
கீழே உதிர்ந்து மறைந்தது
மாரிக்காலம்போல
நீ காட்டியது – முழுமை பெறாத கதை
நான் காட்டியது – முழுமை கிட்டாத கதை
தமிழில்: பாவண்ணன்
எச்.எஸ்.சிவப்பிரகாஷின் மதுரைக்காண்டம்
தொடர்புடைய பதிவுகள்
வருகையாளர்கள் -1.எச் .எஸ்.சிவப்பிரகாஷ்
எச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்-2
மதுரைக்காண்டம் -கடிதம்
எச்.எஸ்.சிவப்பிரகாஷ், மதுரைக்காண்டம்
நாடகங்கள்
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 62
பகுதி ஐந்து : பாசுபதம்
[ 1 ]
பைலனும் ஜைமினியும் சுமந்துவும் தொடர திருவிட நிலத்திற்குள் நுழைந்தபோது சண்டன் அர்ஜுனனின் இந்திரபுரிபுகுகை குறித்த ஏழு வெவ்வேறு காவியங்களின் கதைகளை சொல்லி முடித்திருந்தான். அவர்கள் கேட்ட ஐயங்கள் அனைத்திற்கும் பிறிதொரு கதையையே அவன் மறுமொழியாக சொன்னான். ஒரு கட்டத்தில் அவர்கள் முற்றிலும் வினாக்கள் அழிந்து கதைச்சுழலுக்குள் மூழ்கி செவியும் விழியும் மட்டுமேயென தொடர்ந்து வந்தனர்.
“விண்ணிலிருந்து மீண்டும் இந்திரகீலமலைக்கு வந்து விழுந்தான் இளையபாண்டவன் என்கின்றன கதைகள். அங்கிருந்து அடர்காடுகளின் வழியாக அவன் இமயமலையடுக்குகள் வரை சென்றான். இமயத்தின் இடுக்குகள் வழியாக கடல்தேடிவரும் பீதர்நாட்டு வணிகர்களுடன் சேர்ந்து சென்றான். அவர்களைப் பிரிந்து கின்னரகுடியினருடன் இணைந்துகொண்டு மேற்குநோக்கி சென்றான். பதினெட்டு மாதங்களில் அவன் கயிலைக்குச் செல்லும் மாவிரதர்களைக் கண்டு அவர்களுடன் இணைந்துகொண்டான். எங்கும் நில்லாதவன் என்பதனால் அவனை சலன் என அழைக்கின்றன நூல்கள்” என்றான் சண்டன்.
அவர்கள் பயோஷ்னி என்னும் சிற்றாற்றின் கரையை வந்தடைந்திருந்தனர். பாறைகள் செறிந்திருந்த மலைச்சரிவில் நுரைத்தும் சீறியும் சென்றுகொண்டிருந்தது நீர்ப்பெருக்கு. சண்டன் நாணல்களைப் பறித்து இணைத்துக்கட்டி நீள்கூம்புவடிவ மீன்கோரியை முடையத்தொடங்கினான். களைத்த கால்களுடன் இளையோர் அவனைச்சூழ்ந்து அமர்ந்தனர். ஜைமினி “அவன் அங்கே கற்ற வேதம் எது?” என்றான். “அவன் அங்கே கடந்தது இந்திரனை முதன்மையாக்கிய மகாவஜ்ரம்” என்றான் சண்டன்.
“அவ்வேதம் இன்றில்லையா?” என்றான் ஜைமினி. சண்டன் புன்னகைத்து “எந்தவேதமும் முற்றழிவதில்லை, அந்தணரே. அது மண்ணுக்குள் வேரென்று நீடிக்கும். ஒவ்வொரு சொல்லிலும் அதன் பொருளும் இணைந்திருக்கும்” என்றான். ஜைமினி பெருமூச்சுடன் “நான் கற்றதே வேறு” என்றான். “சொல்க!” என்றான் சண்டன். ஜைமினி தயங்க “சொல்க அந்தணரே, இக்காடே ஒரு கல்விநிலை அல்லவா?” என்றான் சண்டன். ஜைமினி “பிரம்மனின் நாவிலிருந்து எழுந்து ககனவெளியில் ஒலியலைகளாக நீடித்தவை வேதங்கள். மானுடரால் உருவாக்கப்பட்டவை அல்ல என்பதனால் அவை ஔபௌருஷேயங்கள். மானுடனுக்கு சொல்லப்பட்டவை என்பதனால் சுருதிகள்” என்றான்.
“வேதம்பெற்ற அனைவருமே முனிவர் என்றும் வேதச்சொல்லைத் தொகுத்த அனைவருமே வியாசர்கள் என்றும் முன்னோரால் அழைக்கப்பட்டனர். சொல்தேர்ந்து வேதம்தொகுத்த முதல்வியாசர் நூறாயிரம் நூல்களாக வேதங்களை வகுத்தமைத்தார். அவற்றை ரிக், யஜூர், சாமம், அதர்வமெனப் பகுத்தார். ரிக்கால் ஹௌத்ரத்தையும் யஜுஸால் அத்வார்யவத்தையும் சாமத்தால் ஔல்காத்ரத்தையும் அதர்வத்தால் பிரம்மதத்துவத்தையும் அடையலாகுமென நிறுவினார். அழைப்பும் அளிப்பும் உசாவலும் பெறுதலுமாக வேதம் அமைந்தது.”
சண்டன் “எதனடிப்படையில் அந்த நூறாயிரம் நூல்கள் தொகுக்கப்பட்டன? எப்படி அவற்றில் இன்றிருப்பவை மட்டும் எஞ்சின?” என்றான். ஜைமினி “அது மானுடரின் வீழ்ச்சி. முன்பிருந்த மூதாதையர் வானென விரியும் உளம்கொண்டிருந்தனர். அவர்கள் வேதமன்றி பிறிதொன்றிலாது வாழ்ந்தனர். மானுடம் வளர்ந்ததும் விழைவுகள் பெருகின. வேதம் அறியமுடியாமைக்கு ஆற்றும் கடமைகளையே வேள்வியெனக் கொண்டது. விழைவுக்கு இலக்காகும் பொருளுக்கென ஆற்றப்படும் கடமைகளனைத்தும் வேதமறுப்பே. வேதமறுப்பு மானுட உள்ளத்தை குறுகச்செய்தது. அதற்கேற்ப வேதம் குறைந்துவந்தது. ஒவ்வொருநாளும் ஒரு பாடலென வேதம் மானுடரால் கைவிடப்படுகிறது” என்றான்.
சண்டன் “அந்தணரே, வேதமென இங்குவந்த மெய்ச்சொல் வடக்கே எழுந்த பனிமலையடுக்குகளைப்போன்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் ஒருபகுதி முதன்மைகொள்கிறது. சிலபகுதிகள் கண்டெடுக்கப்படுகின்றன. சிலபகுதிகள் கைவிடப்படுகின்றன. பெரும்பகுதி எவராலும் காணப்படாமல் அங்கிருக்கிறது. அறிந்தவேதமே நாம் பேசும் வேதம். அறியாவேதத்தின் நுனியே அது என்று அறிக!” என்றான். “இமயமலையடுக்குகளுக்குள் பயணம் செய்பவர்கள் அங்கு அசுரரும் அரக்கரும் கின்னரரும் கந்தர்வரும் வாழ்ந்து விட்டுச்சென்ற பெருநகர்கள் ஒழிந்து கிடப்பதை காண்பார்கள். அவர்கள் எதை வென்றார்கள்? எதை இழந்தார்கள்?” என்று சண்டன் கேட்டான்.
“வேதங்களுக்குள் விடப்பட்ட வேதங்கள் புதைந்திருக்கின்றன என்று அறியாதவன் வேதங்களை பொருள்கொள்ள இயலாது” என்று அவன் தனக்குத்தானே என சொல்லிக்கொண்டான். பின்னர் கூடையை எடுத்தபடி மீன்கொள்ளும்பொருட்டு பாறைகளின் மேல் தாவிச்சென்றான். இருபாறைகளின் நடுவே பீரிட்டு வளைந்து விழுந்த நீர்ப்பெருக்கின் குறுக்காக அந்தக்கூடையை சற்றுநேரம் வைத்து நீர் வளைந்து தெறிக்கச் சுழற்றி வீசி எடுத்தான். அதில் வெள்ளியிலைகளென மீன்கள் துள்ளின. அவற்றை செவிள்கள்வழியாக நாணலில் கோத்து இடையிலணிந்துகொண்டான்.
“செல்வோம், நாமும் உணவு தேடி மீளவேண்டும். இருட்டிக்கொண்டிருக்கிறது” என்றான் சுமந்து. பைலன் “வெள்ளித் திறவுகோல்களை கொத்தாகக் கட்டி இடைசூடி நின்றிருக்கும் வாயிற்காவலன் போலிருக்கிறார்” என்று சண்டனை நோக்கி சொன்னான். “யார் அவர் என என் உள்ளம் வினவிக்கொண்டே இருக்கிறது. ஒரு வழிகாட்டி என உணர்கிறேன். எதன்பொருட்டு நம்மை அவரிடம் ஒப்படைத்துள்ளது ஊழ்? நாம் எங்கு சென்றுகொண்டிருக்கிறோம்?” என்றான் ஜைமினி. “நெடுந்தூரம் வந்துள்ளோம். இக்கொடும்பயணத்தை நமக்கு அமைத்த நெறி வீண்விளையாட்டை விரும்பாதென்றே கொள்வோம்” என்றான் பைலன்.
காட்டுக்குள் நுழைந்தபோது அவர்கள் அமைதிகொண்டிருந்தனர். முட்காடுகள் வழியாக வந்திருந்த அவர்களுக்கு பேரிலைச் செடிகள் கொண்ட பசுங்காடு அறியாமலேயே உவகையை அளித்தது. சருகுமெத்தையில் அவர்கள் கால்கள் புதைந்தன. உடல்தொட்ட மரங்களிலிருந்து மலர்ப்பொடிகள் உதிர்ந்தன. புதர்களுக்குள் செம்போத்து ஊடுருவி ஓடியது. ஆர்வத்துடன் ஒரு குரங்கு இறங்கி வந்து அவர்களை நோக்கியது. அதன் தோழி கீழிறங்கி வர மேலே செல்லும்படி அதை எச்சரித்தது.
பைலன் அருகே நின்ற வாழையின் மடல்களைப் பிய்த்து வாயில் வைத்து தேனுண்ண உறிஞ்சினான். “இது அந்தி. வாழைத்தேன் காலையிலேயே இருக்கும்” என்றான் சுமந்து. “ஆசிரியரின் மெய்ச்சொற்களை புலரியிலேயே அடையவேண்டும், அவை மலர்த்தேனைப் போன்றவை என்று ஒரு நெறிநூல் உரைக்கிறது” என்றான் ஜைமினி. “இந்தக்காட்டில்கூட நாம் நூல்களிலிருந்து விடுதலை பெறமாட்டோமா என்ன?” என்றான் பைலன். “காடாகச் சூழ்ந்திருக்கின்றன நாம் கற்ற நூல்கள்” என்றான் சுமந்து. “இலக்கணமற்றது, ஏடென்றும் பாதமென்றும் பிரிக்கப்படாத நூல் இது.”
“நாம் கனிகொள்ள வந்தோம், அதைச்செய்வோம்” என்று ஜைமினி எரிச்சலுடன் சொன்னான். “எதையும் தத்துவமாக ஆக்கவில்லை என்றால் உங்களுக்கு சொல் திகட்டுகிறதுபோலும். இதோ இந்த மரங்களும் செடிகளும்கூட உவமைகளாக ஆகிவிடுவோமா என அஞ்சி நடுங்கி நிற்கின்றன.” சுமந்து வெடித்துச்சிரித்துவிட்டான். பைலன் சிரித்தபடி “ஜைமின்யரே, நீங்கள்கூட வேடிக்கை பேசமுடியும் என இன்று அறிந்தேன்” என்றான்.
ஜைமினி கொடிகளைப் பற்றி இழுத்து வேர்புதைந்த இடத்தைச் சுட்ட பைலன் சிறுகூர்கழியால் அகழ்ந்து கிழங்குகளை வெளியே எடுத்தான். உச்சிக்கிளைகளில் இருந்த காய்களை அக்கொடியிலேயே கவண் கட்டி வீசி எறிந்து பற்றி இழுத்து பறித்தனர். அக்கொடிகளைப்பின்னி கூடையாக்கி அவற்றில் காய்களையும் கிழங்குகளையும் சேர்த்து தூக்கிக்கொண்டனர். அச்செயலில் அவர்கள் மூழ்கியபோது சொல்லாடல் இயல்பாக நின்று அமைதி சூழ்ந்துகொண்டது.
“வேதம் பிரம்மனிலிருந்து பிறந்தது என்று அனைத்து நூல்களும் சொல்கின்றன” என்று எண்ணியிராத தருணத்தில் ஜைமினி தொடங்கினான். சுமந்துவும் பைலனும் அப்போது பிரம்மனைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருப்பதை உணர்ந்து சற்று திடுக்கிட்டனர். “ஆனால் ஒவ்வொரு நூலும் பிரம்மனின் தோற்றம் பற்றி ஒவ்வொரு கதையை சொல்கிறது.” அவன் என்ன எண்ணிக்கொண்டிருக்கிறான் என்பதை நுட்பமாகத் தொடர்ந்தன இருவரின் உள்ளங்களும். “அவ்வாறென்றால் ஒவ்வொரு பிரம்மனும் படைத்த வேதங்களும் வேறுவேறா?” என்று அவன் கேட்டபோது அம்புவிடுபட்ட வில்லென அவர்களின் அகங்கள் நிலைமீண்டன.
ஏனோ இத்தருணத்தில் முன்புகற்ற அன்னைநெறியின் கதையே என் நெஞ்சில் முதன்மையென எழுகிறது” என்றான் ஜைமினி “யுகத்தொடக்கத்தில் விஷ்ணு ஒரு கைமகவாக ஆலிலையில் கிடந்தார். அவரில் தன்னுணர்வு எழுந்தது. அது அச்சமென்றாகியது. அந்த மகவு வீரிட்டழுதது. அப்போது விண்ணிலிருந்து மெல்லிய மூச்சு அதன்மேல் பட்டது. “நான் யார்? எனையீன்றது எவர்? எதன்பொருட்டு?” என அவர் உள்ளம் வினவியது. விண்நிறையும் இடிமுழக்கமாக ஓர் ஒலியெழுந்தது. சர்வ கல்விதமாமேகம், நான்யாஸ்தி சனாதனம். இவையனைத்தும் நானே. நானன்றி தொடக்கமென ஏதுமில்லை.”
விஷ்ணு நிமிர்ந்து நோக்கினார். நான்கு கைகளில் சங்கும் சக்கரம் கதையும் மலரும் கொண்டு அன்னை அவர்முன் தோன்றினாள். அவள் நிழலும் வண்ணம் கொண்டிருந்தது. ரதி, ஃபூதி, புத்தி, மதி, கீர்த்தி, திருதி, ஸ்மிருதி, சிரத்தை, மேதை, ஸ்வதை, ஸ்வாகை, க்ஷுதை, நித்ரை, தயை, கதி, துஷ்டி, புஷ்டி, க்ஷமை, லஜ்ஜை, ஜ்ரும்பை, தந்த்ரி என்னும் அன்னையாற்றல்களாக அந்நிழல் பெருகிச்சூழ்ந்தது. அறியாமகவு அலகிலா அன்னையரைக் கொண்டதாக ஆகியது.
தன் கனிந்த விழிகளால் நோக்கி அன்னை சொன்னாள் “மைந்தா, நீ என் காலத்தின் ஒரு கணம். முடிவிலாது பிறந்து அழிந்து மீள்கிறாய். நீ வளர்க!” அவள் அதை எடுத்து தன் முலைகள்மேல் சேர்த்தாள். அமுதை உண்டு இளமைந்தன் கண்மயங்கலானான். அவன் செவிகளில் அன்னையின் சொல் எழுந்தது. “நீ பெருகுக! நீ சத்வகுணத்தான். பெருநிலை கொண்டமைந்தவன். மெய்மைக்கடல்மேல் அறிதுயில்கொள்க! உன் தொப்புளிலில் இருந்து ரஜோகுணத்தான் எழுக! செயல்நிலை கொண்ட அவனை பிரம்மன் என்று அழைக்கட்டும் முனிவர். பிரம்மன் புடவிப்பெருக்கை படைப்பான். அது வளர்ந்து தன் விசையால் மையம் கொள்கையில் அதிலெழுக தமோகுணத்தானாகிய மகாருத்ரன்! எதிர்நிலை கொண்ட அவனை அழிவிலா நஞ்சென்றும் அனல்வண்ணனென்றும் அழிப்போன் என்றும் ஆடவல்லான் என்றும் அறியட்டும் மெய்யுணர்ந்தோர்.”
“அவ்வாறு பிறந்தனர் மூன்று தெய்வங்களும் முப்பத்துமுக்கோடி தேவர்களும் எண்ணிலாப்புடவிகளும் அவற்றை இணைத்தாடும் ஊழ்ப்பெருக்கும்” என்றான் ஜைமினி. “பிறிதொரு நூலில் உள்ள கதை சற்றே மாறுபடுகிறது. காலத்தொடக்கத்தில் இங்கிருந்தது விண்நீர் மட்டுமே. அதன் அலைகளென தன்னை நிகழ்த்திக்கொண்டிருந்தவள் அன்னை. அவள் தானென்றும் தோழியரென்றும் உடல்கள் கொண்டு அதில் நீராடித்திளைத்தபோது அவள் அண்டத் துளி ஒன்று அந்நீர்ப்பரப்பில் விழுந்து பொற்துகளென சுடர்விட்டது. அன்னை அதைக்கண்டாள். நீ தவத்தான் படைப்பவனாகி எழுக என ஆணையிட்டாள். பின் தானே அதன் உயிரென புகுந்து எழுந்து வளர்ந்து புடவிகளை படைத்தெடுத்தாள்.”
“முடிவிலாக்கதைகள்” என்று பைலன் சொன்னான். “பிரம்மனின் பிறப்பு குறித்த கதைகளை நாம் இங்கு பேசுவோம் என்றால் நம் அகவை முதிர்ந்து சிதைசேர்வதுவரை ஒருகணமும் ஒழியாது பேசிக்கொண்டிருக்கலாம். இங்குள்ள குலங்கள் அனைத்தும் பிரம்மனைப்பற்றி ஒரு கதையை வைத்துள்ளன. குடிகளுக்கு ஒரு கதை அப்பெருங்கதைக்குள் இருக்கும். நூல்களில் அக்கதைகள் நூறுமுகங்கள் கொண்டு வளரும்.” ஜைமினி “அன்னையைப்பற்றி வேதங்கள் என்ன சொல்கின்றன என்று எண்ணிக்கொண்டேன்” என்றான். மூவரும் சிலகணங்கள் அமைதிகொண்டனர்.
“வாக்தேவி என்றும் அதிதி என்றும் அன்னையின் முகங்கள் உள்ளன. ராத்ரி, உஷை, சந்த்யை என அன்னை முகம் காட்டுகிறாள். ஆனால் வேள்விக்குரிய முதன்மைத்தெய்வமாகவோ தேவர்களை ஈன்ற பேரன்னையாகவோ அவளை வேதங்கள் உரைப்பதில்லை” என்றான் சுமந்து. ஜைமினி “உரைக்கும் வேதங்கள் எங்கேனும் உள்ளனவா?” என்றான். அவர்கள் மீண்டும் அமைதியானார்கள். “அறியாவேதங்கள் என சண்டர் சொல்வது அவற்றைத்தானா?” அவர்கள் தங்கள் தனித்த எண்ண ஓட்டங்களில் மூழ்கியவர்களாக நடந்தனர்.
நீண்டநேரம் கழித்து மீண்டும் ஜைமினி சொன்னான் “அப்படியென்றால் திசைநான்கையும் வென்று அர்ஜுனன் அடைந்த வேதமெய்மையின் பொருள்தான் என்ன? வேதங்களை அறிந்து கடப்பது ஒருவனுக்கு இயல்வதாகுமா?” பைலன் “ஒவ்வொரு வேதமும் பிறிதொன்றை முழுமைப்படுத்துகிறது என்கின்றன நூல்கள்” என்றான். அவன் சொன்னதென்ன என்று அவர்களுக்கு புரியவில்லை. அவர்கள் அவனை திரும்பிப்பார்த்தனர். அவனும் தான் சொன்னதன் பொருளென்ன என்று உணராதவன்போல திகைத்து அவர்களை நோக்கினான். பின்னர் புன்னகைத்து “கற்றவை அனைத்தையும் முற்றிலும் கலைத்துவிட்டார் சூதர்” என்றான். அச்சொல்லில் எளிதாகி அவர்கள் நகைத்தனர்.
சுமந்து “கிழங்குகளின் வேதம் விதைகளுக்கில்லை. காய்களுடன் இணைந்து வேதமும் கனிகிறது” என்றபின் “அரிய சொல்லாட்சி… எனக்கே இதை எங்கேனும் எழுதவேண்டும் போலிருக்கிறது” என்றான். “மானின் வேதத்தை மானை உண்ணும் புலி தானும் அடைகிறது” என்றான் பைலன். “பைலரே, வேண்டாம். வேதமறுப்பும் வேதநகையாட்டும் பழிசேர்க்கும்” என்றான் ஜைமினி. “வேதப்பழி பிறிதொரு வேதமாகிறது” என்றான் பைலன். சுமந்து “ஆ, மெய்யாகவே அது ஓர் அரிய எண்ணம். நம் மெய்யாடலின் வரலாற்றை அதனூடாகச் சென்று அணுகியறியமுடியுமென்று தோன்றுகிறது” என்றான்.
“வேடிக்கை வேண்டாம்” என்றான் ஜைமினி சினத்துடன். “வேதங்களை நாம் கிளிகளுக்கு கற்பிப்போம். பாரதவர்ஷமெங்கும் அவை சென்று அத்தனை கிளிகளையும் வேதமொழிசொல்லப் பயிற்றும். வேதமொலிக்கும் காடுகளில் வேதம் கனிந்த கனிகள் எழும். அவற்றை உண்ட மானுடர் அவியுண்ட தேவர்களென்றாவார்கள்” என்றான் பைலன். “அக்கனிகள் அழுகி நிலத்தில் விழுந்தால் பாதாளநாகங்களால் உண்ணப்படும். அவை பொன்னுடல்கொண்டு நெளியும். வேதம் கீழுலகங்களை முற்றழிக்கும்” என்றான் சுமந்து. “வேண்டாம், இங்கேயே நிறுத்திக்கொள்வோம்” என்று ஜைமினி குரல் உடையச் சொன்னான்.
“உண்ணப்படும் கனிகளைவிட உதிரும் கனிகளே மிகுதி. அவியுண்ட அடியுலகோர் விண்ணவராவர். ஆழம் விண்ணென்றாகும். மணல்கடிகை திரும்புவதுபோல ஏழுலகும் தலைகீழாகும்” என்று பைலன் சொன்னான். “விஷ்ணு ஆழுலகில் பாற்கடலில் படுத்திருப்பார். வானெங்கும் நாகங்கள் நெளியும்.” ஜைமினி நின்று அழுகை கலந்த உரத்த குரலில் “வேண்டாம்! வேண்டாம்! போதும்!” என்று கூவினான். “சரி போதும்” என்று பைலன் சிரித்துக்கொண்டே சொன்னான். சுமந்து “வேதங்களைப்பற்றிய மெய்யறிதலை இனிமேல் நாம் இவரிடம் பகிர்ந்துகொள்ளவேண்டாம்” என்றான். “வேதங்களை இவர் அன்னை சொன்ன தந்தையின் பெயர் என நம்புகிறார்” என்றான் பைலன். “பைலரே” என ஜைமினி கூவ “சரி, இனி இல்லை” என்றான் பைலன்.
அவர்கள் திரும்பி ஆற்றங்கரையை அடைந்தபோது காட்டுக்குள் இருள் பரவி பறவைகள் சேக்கேறும் ஒலிகள் எழுந்துகொண்டிருந்தன. ஜைமினி தலைகுனிந்தவனாக நடந்தான். ஆற்றங்கரை மணலில் அவர்களின் கால்கள் புதையும் ஒலி எழுந்தது. ஜைமினி “நகையாடலாயினும்…” என்றான். “என்ன?” என்றான் பைலன். “நகையாடலாயினும் எண்ணவேண்டிய சொற்களே” என்றான் அவன். பைலன் சிரித்து “நகையாட்டிலன்றி எவரும் கூரியவற்றை சொல்லமுடியாது ஜைமின்யரே” என்றான்.
[ 2 ]
பயோஷ்னியின் நீரில் ஒளி கலங்கி அலையடித்துக்கொண்டிருந்தது. ஈரப்பாறைகளில் சிந்தியகுங்குமம் போல செம்மை வழிந்தது. நாணல்களுக்கு அப்பால் பாறை ஒன்றின் பரப்பில் சண்டன் அனல்மூட்டி அதில் மீன்களை சுட்டுக்கொண்டிருந்தான். அவன் மீனைச் சுட்டு முடிப்பதற்காக அவர்கள் காத்திருந்தனர். சுட்ட மீன்களை இலையொன்றில் அடுக்கி வைத்துக்கொண்டிருந்த அவன் அவர்கள் வருவதைக் கண்டும் விழிதிருப்பவில்லை. சரியான பதத்தில் மீன் வெந்து நீலச்சுடர் எழுவதற்காக அவன் விழிகள் கூர்ந்திருந்தன.
மீன்களைச் சுட்டு முடிந்ததும் அவன் எழுந்துகொண்டு “நீங்கள் உங்கள் உணவை சுடலாம்” என்றான். ஜைமினி தன் கிழங்குக்கூடையுடன் முன்னால் அடிவைக்க “அனல் ஊனுண்டு செழித்திருக்கிறது, அந்தணரே” என்றான் சண்டன். அறியாது ஜைமினி தயங்க நகைத்து “தூய அனலைத் தேடுகிறீர் போலும்” என்றான்.
ஜைமினி திரும்பி தன் தோழர்களை நோக்கிவிட்டு முன்னால் சென்று கிழங்குகளை சுடத்தொடங்கினான். கண்களில் புன்னகையுடன் பிற இருவரும் வந்து அருகமைந்து கிழங்குகளை சுட்டனர். சண்டன் அப்பால் அமர்ந்து மீனை உண்டு முட்களை அருகிருந்த இலைமேல் வைத்தான். ஜைமினி திரும்பிப்பார்க்க “முன்பு மீன்கள் வானில் பறந்திருந்தன என்று சொல்கிறார்கள், அந்தணரே” என்றான். “மெய்யாகவா?” என்றான் சுமந்து. “ஆம், நான் இமயமலையின் உச்சிப்பாறை ஒன்றில் மீன்கள் பதிந்து உருவான முள்வடிவை கண்டிருக்கிறேன்” என்றான்.
“அவை எப்படி நீர்வாழ்வில் அமைந்தன?” என்றான் ஜைமினி அறியாமல். “அவற்றின் வேதம் சொல்மாறியிருக்கும்” என்றான் சண்டன். பைலனும் சுமந்துவும் சிரிக்க சுட்ட கிழங்குகளை எடுத்துக்கொண்டு ஜைமினி அப்பால் சென்று திரும்பி அமர்ந்து உண்ணத்தொடங்கினான். “சினம் கொள்கிறார்” என்றான் பைலன். “சினப்பது அவருக்கு நன்று. சினத்தினூடாகவே அவர் கற்றுக்கொள்கிறார்” என்றான் சண்டன்.
புதர்களுக்குள் ஓர் அசைவு கேட்க சண்டன் எட்டி அனலில் இருந்த கொள்ளிவிறகொன்றை கையிலெடுத்துக்கொண்டான். “மானா?” என்றான் பைலன். “அல்ல” என்ற சண்டன் “யார்?” என்றான். அங்கிருந்து “நீங்கள் யார்?” என குரல் கேட்டது. “இளையவர்” என்றான் சண்டன். பின்னர் உரக்க “நான் சூதன். மூன்று அந்தண இளையோரும் என்னுடனிருக்கிறார்கள்” என்றான். அங்கிருந்த குரல் “நான் அந்தணச் சிறுவன். என் பெயர் வைசம்பாயனன்” என்றது.
சண்டன் எழுந்து அந்தக்கொள்ளியை காற்றில் சுழற்றி அனலூட்டி கொழுந்தாடச்செய்தான். அந்த ஒளியில் தொலைவில் நின்ற இளையவனை காணமுடிந்தது. “வருக, அந்தணரே! நீங்கள் உரிய குழுவுடன் இணைந்துள்ளீர்கள்” என்றான் சண்டன். வைசம்பாயனன் ஆற்றின் பாறைகளை மெல்லக்கடந்து அருகே வந்தான். “முதலில் உண்ணுங்கள்” என்றான் சண்டன். “ஆம், நான் பசிகொண்டிருக்கிறேன். என்னிடம் சற்று கிழங்குகள் உள்ளன” என்றபடி அவன் அனலருகே அமர்ந்தான். “அவற்றை பின்னர் சுடுவோம். இப்போது சுட்டவற்றை உண்ணுக!” என்றான் சண்டன்.
அவன் உண்பதை அவர்கள் நோக்கி அமர்ந்திருந்தனர். உண்டு முடித்து கமுகுப்பாளைத் தொன்னையிலிருந்து நீரை அருந்திவிட்டு அவன் நிமிர்ந்து “கடும்பசி. வரும் வழி அடர்காடு. ஏதேனும் நீர்க்கரையில் இரவு தங்கவேண்டுமென்பதற்காக கடுநடையிட்டு வந்தேன்” என்றான். “அன்னம் அன்னத்தை அறியும் தருணத்தை நோக்கியிருப்பதுபோல நிறைவளிப்பது பிறிதொன்றில்லை” என்றான் சண்டன். “ஆம், இந்த நெடும்பாதையில் நான் மெய்யென்று முதலில் அறிந்தது பசியையே” என்றான் வைசம்பாயனன்.
அவன் வாயிலிருந்து ஏப்பம் ஒன்று எழுந்தது. “வேதநாதங்களில் முதன்மையானது உயிர்கள் கொள்ளும் ஏப்பம் என்று ஒரு சூதனின் சொல்லை வைசாலியில் கேட்டேன்” என்றான் வைசம்பாயனன். “ஜடரவேதம் என அதை அவர் சொன்னார்.” பின்னர் பைலனை நோக்கி தலைவணங்கி “விசும்ப குலத்தில் வந்தவன். என் பெயர் என வைசம்பாயனன் என்பதை கொண்டிருக்கிறேன்” என்றான். பைலனும் சுமந்துவும் ஜைமினியும் குலமும் குருமுறையும் பெயரும் சொல்லி தங்களை அறிமுகம்செய்துகொண்டார்கள்.
அவர்கள் வாழ்த்துரைத்து முடித்ததும் சண்டன் “நான் சூதனாகிய சண்டன்” என சுருக்கமாக தன்னை சொன்னான். “எங்கு செல்கிறீர்கள்?” என்று பைலன் கேட்டான். வைசம்பாயனன் “நொதித்த கள் கலம்விட்டு எழுவதைப்போல மாணவர்கள் குருநிலைகளிலிருந்து வெளியே செல்கிறார்கள் என்று ஒரு சூதன் சிலநாட்களுக்கு முன் பாடக்கேட்டேன்” என்றான். “எனக்கு மெய்மையை அறிவிக்கும் ஆசிரியர் ஒருவரை தேடிச்செல்கிறேன்.” ஜைமினி “அந்த ஒப்புமை எனக்குப்புரியவில்லை” என்றான். வைசம்பாயனன் “அது ஒரு பகடி, ஜைமின்யரே. புளித்தெழும் நுரை ஆணவமே. வழிவதே நிகழ்கிறது, வெளியேற்றம் அல்ல.”
ஜைமினி “அப்படி சொல்லமுடியுமா என்ன?” என்றான். பைலன் “அது பகடி. அதை அவரே சொல்லியும் விட்டார். பகடியை ஆராய்வதென்பது உடையை பஞ்சாக்கிப்பார்ப்பது போல” என்றான். ஜைமினி “வெளியேறாதவர்கள் எதை கண்டடைய முடியும்?” என்றான். “முற்றிலும் வெளியேறுபவர்களே கண்டடையமுடியும் என்று அதற்குப்பொருள்” என்றான் வைசம்பாயனன். “வெளியேறும்போதே முழுமையாகத்தானே கிளம்புகிறோம்?” என்றான் ஜைமினி. சுமந்து “பகடியையே வேதமெய்ப்பொருள் என ஆய்பவர் அவர், வைசம்பாயனரே” என்றான். “ஆம், அதை அவரைப் பார்த்ததுமே அறிந்துகொண்டேன்” என்றான் வைசம்பாயனன்.
சண்டன் சிரித்து “நன்று, நால்வரும் நிகரானவர்களே” என்றான். வைசம்பாயனன் “நானும் அதையே உணர்ந்தேன், சண்டரே” என்றான். “திசையானைகளைப்போல கிளம்பியிருக்கிறீர்கள்” என்றபின் சண்டன் உரக்க நகைத்து “அல்லது திசையாமைகளா?” என்றான். வைசம்பாயனன் “அது இலக்கு அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்தது. செல்லுமிடம் எங்கிருக்கிறதென்று தெரியவில்லை என்றால் விரைவும் அமைவும் நிகர் அல்லவா?” என்றான்.
“வைசம்பாயனரே, உங்களிடம் ஒரு வினா. நாங்கள் சற்றுமுன் அதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம்” என்றான் பைலன். “இவர் அன்னைநெறி வந்த நூல்களில் பிரம்மனை முதலாற்றலாகிய பேரன்னை படைத்தமை குறித்து சொன்னார். அன்னை படைத்த பிரம்மனின் சொல்லில் எழுந்த வேதங்கள் ஏன் அன்னையைப் பாடவில்லை?” என்றான். சுமந்து “அல்லது பாடும் வேதங்கள் எங்கேனும் உள்ளனவா? நீர் அறிவீரா?” என்றான்.
“இருக்க வாய்ப்பில்லை” என்றான் வைசம்பாயனன். “வேதமென்றால் வேர்நீர் செடியை என தேவர்களை வளர்க்கவேண்டும். குன்றாது குறையாது என்றுமிருப்பவளை வேதம் வழுத்தவும் பெருக்கவும் வேண்டியதில்லை.” சற்றே முன்னகர்ந்து “இங்குள அனைத்தும் அவள் வடிவே என்றால் வேதமும் அவளே. வாக்கென வந்து வேதமென அமைந்தவள் அன்னை” என்றான்.
சண்டன் முகம் மாறியது. அனலை உந்தி செம்பொறி பறக்க விறகமைத்தபோது அவன் முகமும் அனலொளி கொண்டது. “நீர் கற்றவர், அந்தணரே” என்றான். “தொன்மையான பாடல் ஒன்று அவளை வேதமே உடலென்றானவள் என்கின்றது. சிக்ஷை அவள் குரல். சந்தம் அவள் நடை. வியாகரணம் அவள் ஆடை, நிருக்தம் அவள் காலடி, கல்பம் அவள் அருட்கை, ஜ்யோதிஷம் அவள் அளிக்கை. வேதமென்று இங்கு ஓதப்படும் அனைத்தும் அவளென்று அறிகின்றனர் அன்னைநெறி அமைந்த படிவர்.”
அனல்மேல் எடைமிக்க காட்டுவிறகுகளை ஒன்றன்மேல் ஒன்றென சாய்த்து அமர்த்தினான் சண்டன். அனல் மெல்ல அவற்றில் பரவி எழலாயிற்று. “அகலாது அணுகாது அறிக, இகல்வென்று நின்றாடும் அனலை!” என்றபின் அவன் தன் உடலை சுருட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான். பிறநால்வரும் செந்தழலின் ஆடலை, உடனாடும் நிழல்வெளியின் பெரும்பித்தை நோக்கி அமர்ந்திருந்தனர்.
தொடர்புடைய பதிவுகள்
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 36
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 35
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 47
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 46
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 41
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 40
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 28
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 22
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 14
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 13
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 12
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 7
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 10
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 21
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 61
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 60
’வெண்முரசு’ –நூல் பன்னிரண்டு –‘கிராதம்’– 59
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 58
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 57
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 55
December 18, 2016
மனிதமுகங்கள் -வளவ. துரையன்
[1999—இல் வெளிவந்த வண்ணதாசனின் “மனுஷா..மனுஷா…” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து]
வண்ணதாசனின் கதைகளில் எப்பொழுதுமே ஒரு மௌனம் ஒளிந்திருக்கும்.. அது பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுக்கும். வாசகர்களுக்கு அந்த மௌனம் பேசாதவற்றை எல்லாம் பேசும். அந்த மௌனத்தின் ஊடே புகுந்து பயணம் செய்து புதிய வழிகளைக் கண்டறிவதுதான் வாசகருக்குப் பெரிய சவால். அதில் வாசகன் வெற்றி அடையும் போது படைப்பாளருடன் அவனும் ஒன்றிப்போய் விடுகிறான். வண்ண நிலவனின் கதைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் எஸ்தரில் இருக்கும் மௌனம் இவரின் தொடக்ககாலக் கதைகளிலேயே காணப்படுவதுதான் வியப்பான செய்தியாகும்.
இந்தத் தொகுப்பின் பெயரைத் தாங்கியுள்ள ”மனுஷா..மனுஷா” கதையில் கதைசொல்லி மட்டும்தான் வெளிப்படையாகப் பேசுகிறான். அவன் மனைவி கூட அதிகமாகப் பேசி வார்த்தைகளைக் கொட்ட வேண்டிய வேளையில் ’மனுஷா, மனுஷா’ என்று கூறிவிட்டுப் போய்விடுகிறாள். கதைசொல்லியை விசாரிக்கக் கூப்பிட்ட அவன் தந்தையும் “சின்னப் பிள்ளையா நீ? ஈஸ்வரா!” என்பதுடன் தன் பேச்சை முடித்துக் கொள்கிறார். அதிகம் பேசி இருக்க வேண்டிய பிரமு அண்ணாச்சியோ அதைத் தவிர்த்து வேறெல்லாம் பேசுகிறார்.
ஒரு எதிர்பாராத நேரத்தில் எந்தவித எண்ணமுமின்றி முப்பத்து நான்கு வயதான கதைசொல்லி அவன் வீட்டுக்குப் பின்னால் குடி இருந்த பிரமு அண்ணாச்சியின் பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதுள்ள மகளுக்கு முத்தம் கொடுத்து விடுகிறான். அதை அவன் மனைவியும் பார்த்து விடுகிறாள். அண்ணாச்சி உடனே வேறு வீடு மாற்றிப் போய்விடுகிறார். ஆனாலும் அவனுக்கும் அண்ணாச்சிக்கும் இடையில் இருந்த சிநேகம் குறையவில்லை. ஒரு நாள் இரவு அதிகமாகக் குடித்த அவனை அண்ணாச்சி தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய் படுக்க வைத்துக் கொள்கிறார். காலையில் கண் விழித்ததும் அவனுக்கு அதிர்ச்சியாய் இருக்கிறது.
“இந்தப் பிரமு அண்ணாச்சி என்னைப் புரிந்து கொண்டது போல, என் மனைவி இந்தப் பெண் என்னையும் புரிந்து கொள்ளல் ஆகாதா?” என்று கதைசொல்லி மனத்துள் நினக்கிறன். அப்போது மனைவி பற்றிய நினைவு வந்தவுடன் அவள் சொன்ன மனுஷா மனுஷா என்பது அவன் நினைவுக்கு வருகிறது. “அதுவே என் பெயராக அழைக்கிறது போலக் கேட்டது இப்போது” என்று அவன் நினைப்பதாகக் கதை முடிகிறது
எல்லாரும் சாதாரண மனிதர்களே என்றுதான் இந்த உலகம் நினைக்கிறது. அறிவு ஜீவிகளையும் அப்படி நினைத்ததால்தான் அவர்கள் வாழ்வில் மனக் கசப்போடு வாழ நேர்ந்திருக்கிறது. ஆனால் அவன் மனத்தில் எந்தவிதத் தவறான எண்ணமும் இல்லை என அவனைத்தவிர வேறு யாரறிவார் என்ற எண்ணமும் நமக்குத் தோன்றுகிறது. பனை மரத்தின் கீழ் நின்று பால் குடித்தாலும் கள் குடித்ததாகத் தானே இந்த உலகம் சொல்லும்.
இந்தத் தொகுப்பில் இன்னுமொரு முக்கியமான கதை “சிறிது வெளிச்சம்”. இக்கதையில் கதைசொல்லியின் தாத்தா இறந்து அவரைத் தூக்கிக் கொண்டு போகும் போது சின்னம்மை யாருமே அழாத அளவிற்கு மிக அதிகமாக அடித்துக் கொண்டு அழுகிறாள். அதுதான் கதையின் முடிச்சு. உரக்க என்னைப் பெத்த ராசா’ என்று அவள் அடித்துக் கொண்டு அழுதாலும் அவளின் அழுகைக்குப் பின்னல் ஒரு மௌனம் புதைந்துள்ளது என்பதுதான் இறந்தவரின் மனைவியால் கூறப்படுகிறது.
திருமணம் ஆவதற்கு முன்னமே பிறந்த குழந்தையைப் புதைத்த சின்னம்மை தானும் தற்கொலை புரிந்து கொள்ளப் போக தாத்தாதான் அவளைத் தடுத்து எல்லாவற்றையும் மறைத்து வேற்றூருக்குக் கொண்டு போய் வைத்திருந்து நல்ல மாப்பிள்ளைக்கும் மணம் செய்து கொடுத்திருக்கிறார். இந்தக் கதை சொல்லியை அந்தச் சின்னம்மைக்கு கதை எழுதுபவராகத் தெரியும். கதையின் இறுதியில் கதை சொல்லி சின்னம்மையையும் அவளுக்குப் புதிதாகப் பிறந்த குழந்தையையும் பார்க்க மருத்துவ மனைக்கு எதிர்பாராதவிதமாகப் போக நேரிடுகிறது. அப்போது சின்னம்மை கேட்கிறாள். “கதை எழுத மாமா வந்திருக்கா? என் கதையை எழுதச் சொல்லவா? உன் கதையை எழுதச் சொல்லவா?”
ஆனால் இவனோ “எதை எழுத வேண்டும் என்கிறது போல எதை எழுதக் கூடாது என்கிறதும் எனக்குத் தெரியாதா சின்னம்மா?” என்று நினைத்துக் கொள்கிறான்.
கதையின் தொடக்கத்திலேயே வெண்ணெயைப் பூனையைத் திருடுவது சின்னம்மை வைத்துக் கொண்டு கூறப்படுவது ஒரு குறீயீடுதான். இத்தனை நாள்கள் மௌனமாக இருந்த விஷயம் தாத்தாவின் மறைவுக்குப் பிறகு கதைசொல்லிக்கு மட்டுமே வெளிச்சமாகத் தெரிந்தாலும் எப்படியோ சின்னம்மையின் வாழ்வில் சிறிது வெளிச்சம் வந்துள்ளது என்றுதான் நாம் ஊகிக்க வேண்டி உள்ளது.
வளவதுரையன்
வளவ துரையன் திராவிட இயக்க ஈடுபாட்டால் அண்ணாத்துரையின் துரையையும் தன் சொந்த ஊரான வளவனூரின் முன்னொட்டையும் சேர்த்து தனக்குப் பெயர்சூட்டிக்கொண்டவர். பாண்டிச்சேரி மாநிலத்தில் வளவனூரைச் சேர்ந்தவர். கடலூரில் வசிக்கிறார். ஓய்வுபெற்றத் தமிழாசிரியர். இன்று திருபபவை, மகாபாரதச் சொற்ப்பொழிவுகளுக்காகப் புகழ்பெற்றவர். சங்கு என்னும் சிற்றிதழை நடத்தி வருகிறார். ஆச்சாரிய வைபவம் என்னும் வைணவ நூலை எழுதியிருக்கிறார். இவரது சிறுகதைகள் வளவ துரையன் சிறுகதைகள் என்னும் பெயரில் முழுத்தொகுப்பாக வெளிவந்துள்ளன
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வருகையாளர்கள் -2 இரா முருகன்
நவீனக்கலை விதவிதமான பாவனைகளுடன் தன்னை முன்வைக்கிறது. அறமுரைக்கும் தோரணை கொண்ட பழையபாணி எழுத்திலிருந்து தன்னை வேறுபடுத்திக்கொள்வதே அதன் இலக்கு. அந்தப்பாவனை மேலோட்டமானது, வாசகனை சற்றே ஏமாற்றுவது. அதன் அடியில்தான் ஆசிரியனின் நோக்கும் விமர்சனமும் இருக்கும்.
அதில் முக்கியமானது விளையாட்டுத்தனம் என்னும் பாவனை. தமிழில் அந்த கலைப்பாவனையின் தொடக்கம் கல்கி. மிகச்சிறந்த உதாரணம் சுஜாதா. நடை, கூறுமுறை அனைத்திலும் சரிதான் இப்ப என்ன என்னும் ஒரு வேடிக்கைநிலை அவருடையது. அந்த பாவனையின் நீட்சி என்று இரா முருகனைச் சொல்லலாம். சுஜாதா அவருடைய தாவுமேடை மட்டுமே. நுணுக்கமான மாய யதார்த்தம் வழியாக அவர் சுஜாதாவைக் கடந்துவந்தார். வரலாற்றை குறுக்கும் நெடுக்குமாக பிளந்து இஷ்டத்துக்கு அடுக்கி விளையாடும் அரசூர் வம்சம், விஸ்வரூபம் நாவல்கள் வழியாக அவர் தன் தனிமொழியையும் தனிநோக்கையும் தமிழிலக்கியத்தில் நிறுவிக்கொண்டார்
இவற்றிலுள்ள விளையாட்டுத்தனம் வாசகனை ஏமாற்றுவது. அதைக் கடப்பவனே இவ்வெழுத்தின் உண்மையான வாசகன்.. அந்த விளையாட்டுத்தனத்தை அகற்றி அடியிலிருக்கும் சமூகவிமர்சனத்தையும் வரலாற்று அணுகுமுறையையும் நோக்குவது ஒரு நுண்வாசிப்பு. ஆனால் ஆசிரியனுடன் தானும் விளையாடியபடி அங்கே சென்றுசேர்வதென்பதுதான் உண்மையான வாசிப்பு. பொருளற்ற வாழ்க்கைப்பிரவாகமாக, எல்லா தருணங்களிலும் உரிய அபத்தங்களுடன் நிகழும் வரலாற்றை முருகன் அவருடைய கதைகளினூடாகச் சித்தரிக்கிறார். தமிழிலக்கியத்தின் தனிச்சுவைகளில் ஒன்று அது
வாழ்ந்து போதீரே என்னும் நாவலை தன் இணையதளத்தில் இரா முருகன் தொடர்ச்சியாக எழுதிவருகிறார்
========================================================
இரா முருகனின் சிறுகதைகள் சில சிறுகதைகள் இணையதளம்
இரா முருகனின் விஸ்வரூபம் – சுரேஷ் கண்ணன்
இரா முருகனின் விஸ்வரூபம் அர்விந்த்
========================================
=======================================
பிற அழைப்பாளர்கள்
தொடர்புடைய பதிவுகள்
பஷீர்-இரா.முருகன்– கடிதம்
ஆற்றூர்– இரா.முருகன்:கடிதம்
வருகையாளர்கள் -1.எச் .எஸ்.சிவப்பிரகாஷ்
எச் எஸ் சிவப்பிரகாஷ் கன்னடத்தின் நவீனத்துவ இயக்கமான நவ்யாவின் எதிர்வினையாக உருவாகி வந்த படைப்பாளி. மேலைநாட்டு வழிபாட்டு நோக்கு கொண்ட நவீனத்துவத்தை மூர்க்கமாக எதிர்த்து கன்னடத்தின் பண்பாட்டுத்தனித்தன்மைகளில் இருந்து தன்னை உருவாக்கிக்கொண்டவர். கன்னட வீரசைவ மரபின் ஆன்மீக சாரம் அவரது எழுத்துக்களில் உண்டு. அன்றாட யோகி என்னும் அவருடைய குறிப்புகள் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கின்றன. https://harpercollins.co.in/book/everyday-yogi/
ஆனால் ஆன்மிகம் மதமாக ஆவதற்கு முற்றிலும் எதிரானவர் எச்.எஸ் சிவப்பிரகாஷ். வீரசைவ மரபு வெறும் சடங்குகளில் சிக்குவதை கடுமையாக விமர்சித்த அவரது நாடகமான மகாசைத்ர மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியது. அவர் கன்னட வீரசைவ வெறியர்களால் தெருவில் இழுத்துச்செல்லப்பட்டு அந்த மடாதிபதிமுன் மண்டியிடவைக்கப்பட்டார் என அன்று செய்திகள் வெளியாகின. கீதா ஹரிஹரனின் In Times of Siege (2003), என்னும் நாவல் இந்நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது.
கன்னட இலக்கிய உலகில் ஆணவம் மிக்க கலகக்காரர் என்றும் தனிவழிச்செல்லும் மூர்க்கர் என்றும் துடுக்கான விமர்சகர் என்றும் சிவப்பிரகாஷ் குற்றம்சாட்டப்படுகிறார். அவருடைய ஆளுமை அதற்கு அப்பால் இலக்கியத்திற்கென முழுமையான அர்ப்பணிப்பு கொண்டது.
சிவப்பிரகாஷ் நாடக வடிவம் மேல் காதல்கொண்டவர். தன் கவிதைகளை அவர் சிறப்பாக மேடையில் பாடுவதுமுண்டு. தமிழ்ப்பண்பாட்டின் கூறுகளை கன்னட இலக்கியத்தில் நிறுவியவர் சிவப்பிரகாஷ். கன்னட மரபின் அடியிலுள்ள தமிழ்ப்பண்பாட்டு அம்சத்தை எப்போதும் கவனப்படுத்தியவர். அவருடைய மதுரைக்காண்டம் சிலப்பதிகாரத்தை அடியொற்றிய நாடகம். அது ஏராளமானமுறை வெற்றிகரமாக நடிக்கப்பட்டிருக்கிறது
=================================================================================================
எச் எஸ் சிவப்பிரகாஷ் அறிமுகம் விக்கி
மதுரைக்காண்டம் நாடகம் முழுவடிவம்
எஸ் எஸ் சிவப்பிரகாஷின் மதுரைக்காண்டம்
எச் எஸ் சிவ்பப்பிரகாஷ் கவிதைகள்
எச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள் 2
எச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள் 3
தொடர்புடைய பதிவுகள்
மதுரைக்காண்டம் -கடிதம்
எச்.எஸ்.சிவப்பிரகாஷ், மதுரைக்காண்டம்
நாடகங்கள்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

