Jeyamohan's Blog, page 1664

March 18, 2017

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–47

47. நாகநடம்


இரவுணவுக்குப் பின்னர் நாகர்கள் வந்து முற்றத்தில் எரிந்த களநெருப்பைச் சுற்றி அமர்ந்துகொள்ள தண்டகரை இரண்டு நாகர்கள் கைபற்றி கொண்டுவந்து பீடத்தில் அமர்த்தினர். சிறுவர்கள் கைகளில் எஞ்சிய ஊனுணவுடன் வந்து அமர்ந்து கடித்து மென்றுகொண்டிருந்தனர். குழந்தைகளை மடியிலிட்டு மெல்ல தட்டி துயில்கொள்ளச் செய்தனர் பெண்டிர். பீமன் தன் குடிலில் இருந்து கைகளைத் தூக்கி சோம்பல்முறித்தபடி வந்தபோது அத்தனை விழிகளும் அவனை நோக்கி திரும்பின. பெண்கள் மெல்லிய குரலில் ஏதோ சொல்ல ஆண்கள் சினம்ஒலித்த சொற்களால் அவர்களை கடிந்தனர்.


பீமன் வந்து அமர்ந்ததும் அங்கிருந்த குழந்தைகள் அஞ்சி எழுந்து விலகின. அவன் அருகே நின்ற குழந்தையை நோக்கி புன்னகை செய்தான். அது  மூக்கில் விரல்விட்டபடி இடைவளைத்து நின்றது. அவன் ஒன்றும் பேசாமல் திரும்பி இன்னொரு குழந்தையை நோக்கி சிரித்தான். முதற்குழந்தை சற்றே காலடி எடுத்துவைத்து அணுகியது. அவன் அதை நோக்கியதாகவே காட்டவில்லை. மீண்டுமொரு குழந்தையை நோக்கி சிரித்தான். இரண்டாம் குழந்தை அவனை அணுகியது. அவ்வசைவைக் கண்டதும் முதல் குழந்தை மேலும் அணுகி அவன் தோளை தொட்டுக்கொண்டு நின்றது.


அவன் அதை நோக்கி திரும்பாமல் இன்னொரு குழந்தையை நோக்கினான். இரண்டாவது குழந்தையும் அவன்மேல் சாய்ந்துகொண்டது. இன்னொரு குழந்தை வந்து அவன் தோள்மேல் ஒட்டியது. அவன் முதற்குழந்தையை தூக்கி தன் மடியிலமர்த்த அது நாணத்துடன் கண்களை கைகளால் மூடிக்கொண்டது. சற்றுநேரத்தில் அவன் உடலெங்கும் குழந்தைகள் மொய்த்துக்கொண்டன. அங்கிருந்த அத்தனை குழந்தைகளும் அவனுடன் ஒட்டியிருக்க விரும்பின. அவற்றின் பேச்சும் சிரிப்பும் அங்கே மைய ஒலியாக எழ மற்றவர்கள் புன்னகையுடன் அதை நோக்கியிருந்தனர். இளம்நாகர்களின் முகச்சுளிப்பும் மெல்ல விலகலாயிற்று.


தண்டகர் அவர்களை நோக்கி சிரித்து உடல் குலுங்கினார். “ஓசையடங்குக!” என ஒருவர் குரலெழுப்பினார்.  அப்பாலிருந்து முண்டன் அவன் உடலுக்குப் பொருத்தமில்லாத மிகப்பெரிய மரவுரியாடையை தோளும் இடையும் சுற்றி  அணிந்து அது கால்களை அடிக்கடி தடுக்க இடக்கையால் தூக்கிப்பிடித்தபடி வலக்கையில் ஒரு கோலுடன் துள்ளி நடனமிட்டபடி வந்தான். குழந்தைகள் எழுந்து நின்று கூச்சலிட்டு சிரித்தன. நாகர்களும் சிரிக்கத்தொடங்கினர். அவன் கூட்டத்தையும் ஓசையையும்  கண்டதும் அஞ்சி திரும்ப ஓடி தன் பின்னால் வந்த நாகனைக் கண்டு அஞ்சி மீண்டும் முன்னால் வந்தான். பதுங்கி மிரண்ட நோக்குடன் வந்து அனைவரையும் பணிந்தான். தண்டகர் “வருக, முண்டரே!” என்றதும் அக்குரல் பட்டு தெறிப்பதுபோல பலமுறை சுழன்று அப்பால் சென்று நின்றான். அங்கிருந்தவர் ஏதோ சொல்ல திரும்பத் தெறித்து வந்து அதே விரைவில் தண்டகரைக் கடந்து அப்பால் சென்றான். சிரிப்பொலிகள் எழுந்து சூழ்ந்தன.


தண்டகர் “நில்லும், குள்ளரே… நீங்கள் இன்று ஆடப்போவது என்ன?” என்றார். “நாகர்களின் தொல்கதையை ஆடும்படி என்னிடம் சொன்னார்கள்” என்று அவன் அஞ்சியபடி சொன்னான்.  “ஆனால் எனக்கு அந்தக் கதை தெரியாது.” தண்டகர் சிரித்து “பிறகு ஏன் ஒப்புக்கொண்டீர்?” என்றார். “வழக்கமாக நான் தெரியாத கதைகளைத்தான் சொல்வது…” என்றான் முண்டன். “ஏன்?” என்றார் தண்டகர். “தெரிந்த கதையை ஏன் சொல்லவேண்டும்? அதுதான் தெரியுமே?” என்றான் முண்டன். தண்டகர் சிரித்து “உம்மிடம் சொல்லாட இயலாது என்னால்…” என்றார். “ஆணை” என்று வணங்கி சென்று அனல்வெளிச்சத்தில் நின்ற முண்டன் கோலைச் சுழற்றி அனைவரையும் உடல் மடித்து வணங்கினான்.


“அவையினருக்கு வணக்கம்… என்னவென்றால் நான் நாகர்களின் கதையை சொல்லவேண்டியிருக்கிறது. நாகர்களிடம் அதை சொல்வதிலுள்ள சிறப்பு என்னவென்றால் என்னைப்போலவே அவர்களுக்கும் அது தெரியாது.” நாகர்கள் சிரித்தனர். “ஆகவே நான் அதை என் மாயக்கோலிடம் கேட்கலாம் என நினைத்தேன். இது எளிய கோல் அல்ல, இது செங்கோல். ஆமாம், பாரதவர்ஷத்தை ஆளும் தொல்குடிமன்னர்களின் செங்கோல்களில் ஒன்று  இது.” அவன் திரும்பி “ஐயம் வேண்டாம்… தொல்லரசான மகதத்தின் அரசர் ஏந்திய செங்கோல் இது. முடியும் கொடியும் நகரும் கோட்டையும் கொண்டு அரியணை அமர்ந்து ஆட்சி நடத்தியது” என்றான்.


“இதை எப்படி அடைந்தேன் என்கிறீர்களா? மகதர் நடத்திய ராஜசூயவேள்விக்கு சென்றிருந்தேன். அனல்வணக்கத்தின்போது அரசர்கள் அனைவரும் கோல்தாழ்த்தி வணங்கினர். நான் என் கையில் ஒரு பொய்ச்செங்கோலை செய்து வைத்திருந்தேன். அதை வைத்துவிட்டு அதேபோலத் தோன்றும் அரசச்செங்கோல் ஒன்றை எடுத்துவருவதென்று என்ணியிருந்தேன். நிழலுடன் நிழலென பதுங்கியிருந்தேன். ஒருகணம் அத்தனை பேரையும் விழிமாயத்தால் விலக்கி என் கோலை அங்கே வைத்து இதை எடுத்துக்கொண்டேன். அவையினரே, இது பாரதவர்ஷத்தை முழுதாளும் மகத சக்கரவர்த்தியின் கோல்…”


அதைச் சுழற்றி தரையில் ஊன்றி அதன்மேல் உடல் அமைத்து அமர்ந்து “உறுதியானது. ஆம், நெகிழ்வற்றது. துலாவின் நடுக்கோல் வளையலாகாது. அவையோரே, இல்லத்தின் உத்தரக்கோலும் வளையலாகாது. ஆம், கொடிக்கம்பம் வளைய இயலாது. நுகமரம் வளையாது. கொலைக்களத்து தூக்குமரமும் வளையமுடியாது” என்றான். அந்தக் கோல் வளைந்து அவன் நிலத்தில் விழுந்தான். பாய்ந்து அதை பிடிக்க அது வளைந்து நெளிந்தது. “வளைகிறதே…! உருகிவிட்டதா? ஆ!” அது ஒரு கரிய நாகமென்றாகி அவன் கையில் சுற்றிக்கொண்டது. “ஆ, நாகம்… நாகமேதான். அய்யய்யோ” என அலறியபடி அவன் துள்ளிக்குதித்து சுற்றி வந்தான். தீ சுடுவதுபோல கையை உதறினான். நாகம் அவன் கையை இறுக சுற்றிக்கொண்டு படமெடுத்து அவனை கொத்தச் சீறியது. அதன் மணிக்கண்கள் ஒளிவிட்டன.


பாம்பைப் பற்றிய குரங்கின் அச்சத்தையும் பதற்றத்தையும் நடித்தான். உடல் மெய்ப்பு கொள்ள கைகால்கள் நடுங்க அச்சத்தால் இளித்தபடி அந்தப் பாம்பைப் பற்றிய கைப்பிடியை விடாமலேயே தரையில் தலைகுத்தி விழுந்து உருண்டு எழுந்து சுழன்றான்.  அதை நோக்கவில்லை என நடித்து இயல்பாக இருக்க முயன்றான். பின்னர் விம்மி அழுதான்.  அழுகையும் சிரிப்புமாக தவித்தபோது நாகம் மீண்டும் கோலாகியது. என்ன நிகழ்கிறதென்று வியந்து கூட்டத்தை நோக்கினான். ஐயத்துடன் மீண்டும் கோலை நோக்கியபின் அதை சுழற்றினான். வீசிப் பிடித்தான். முதுகைச் சொறிந்தான். அது கோலாகவே இருந்தது.


சிரித்துக் கொந்தளித்த கூட்டத்தைச் சுற்றிவந்தபின் அந்தக் கோலை ஓர் இடத்தில் நாட்டினான். அதனருகே கைகூப்பி நின்று “செங்கோலே, அறம்விளையும் மரமே, சொல்க! உன் வேர் என்ன? நீ விளைந்த நிலமென்ன?” என்றான். அதை தன் மேலாடையை சாமரமாக்கி வீசி இளைப்பாற்றினான். “சொல்க, நீ வந்த வழிதான் என்ன?” கோல் தளர்ந்து கீழே விழுந்து நாகமாகி சீறி படமெடுத்தது. “ஆ! மீண்டுமா?” என்றான். “சொல்க, நீ யார்?” நாகம் “நான் தொல்நாகம்…  நான் இட்ட முட்டை இவ்வுலகம். மலைகள் எழுந்து முகில்கள் சூடிஅமர மரம்செறிந்து நதிகள் விரைய கடல்கள் அலையடிக்கும் விரிந்த இந்நிலம் முழுக்கவும் எனக்குரியது” என்றது. சீறி தரையைக் கொத்தி எழுந்து “அறிக மூடரே, பிற குலங்களெல்லாம் செடிகள், மரங்கள், கொடிகள். நான் வேர்” என்றது.


“வேர் மண்ணுக்குள் இருப்பதை நானும் அறிவேன்” என்றான் முண்டன். “நானே பற்றுகோல். நானே உயிர்த்தளம்” என்றது நாகம்.  “என்ன ஆயிற்று பின்னர்?” என்றான் முண்டன். “நான் கோலென்றாக முடியவில்லை. நான் நெருப்பு. நான் நீர். நானே வேர். நெருப்பும் நீரும் நெளிந்தாகவேண்டும். நீர்நோக்கி வளைந்தாகவேண்டும் வேர். அடிமரம் வளையாது எழுந்து நிற்கும். கிளைகள் நெகிழாது விரிந்துபரவும்…” நாகத்தின் குரலிலும் அவனே பேசுகிறான் என்பதை முண்டனின் தாடை இறுகியசைவதைக்கொண்டு பீமன் கண்டடைந்தான். அவ்வாறென்றால் அந்த நாகம் அவன் அணிந்துவந்த பெரிய ஆடைக்குள் இருந்திருக்கிறது. அப்படியென்றால் கோல் எங்கே?


முண்டன் அந்த நாகத்தை சுற்றி நடனமிட்டான். தன் மேலாடையை எடுத்துச் சுழற்றி தோளிலிட்டபடி சென்று அந்த நாகத்தை எடுத்து தலையில் வைத்தான். அது நெளிந்து அவன் முகத்தில் வழிந்து படம் தூக்க அது துதிக்கையென்றாகியது. ஆடைக்குள் இருந்து உடைந்த தந்தத்தை எடுத்து ஒருகையில் பிடித்து மறுகையால் அருள்காட்டி அவன் கணபதியென கால்மடித்தமர்ந்தான். பாம்பு ஊர்ந்து அவன் தோளைச்சுற்ற சுழன்றாடி இடக்கால் தூக்கி நின்று நடனசிவன் ஆனான். அது இடைவளைக்க தேவியென அமர்ந்தான். அது வழிந்து காலடியில் சுருள தன் கையில் தோன்றிய கோலை ஊன்றி நின்று முருகனானான். பாம்பு நீண்டு ஓட அதன் வாலை மிதித்து அதன்மேல் படுப்பதுபோல் நடித்து விஷ்ணுவானான்.


நாகர்கள் கைகளைத் தூக்கி கூச்சலிட்டு அவனை ஊக்கினர். நாகம் சீறி நிலத்தைக் கொத்தி படம் திருப்பியது. முண்டன் அந்நாகத்தை நோக்கி கோலுடன் ஓட அது அவனைக் கொத்தியது. வலிப்பு வந்து அவன் விழுந்து மண்ணில் சுழன்றான். மெல்ல உடல்நெளிவுகொண்டு எழுந்து  நாகமென நெளிந்தான். தன் மேல் இருந்த அணிகளை அவை அனலென சுடுவதுபோல நடித்து கழற்றி வீசினான். சீறி நெளிந்தும் சொடுக்கி எழுந்தும் நாகமென்று சுழன்று இரு கைகளையும் தலைக்குமேல் விரித்து படம் காட்டி குனிந்து மூன்றுமுறை தரையைக் கொத்தியபின் மெல்ல படிந்து புன்னகையுடன் கண்மூடினான்.


தண்டகர் சிரித்தபடி கைதூக்க நாகர்கள் தங்கள் கோல்களைத் தூக்கி அவனை வாழ்த்தினர்.  அவன் பணிந்தபடி சென்று தண்டகரை வணங்கினான். அவர் கையை அசைக்க அடிக்கப்போகிறார் என அஞ்சி திடுக்கிட்டு இரண்டு முறை சுழன்று பின்னால் சென்றான். அவர் சிரித்துக்கொண்டே அருகழைக்க மீண்டும் அணுகினான். அவர் பரிசு கொடுக்க திரும்புகையில் மீண்டும் துள்ளி பின்னால் சென்றான்.  பீமனைச் சூழ்ந்திருந்த குழந்தைகள் சிரித்துத் துள்ளி குழைந்து விழுந்தனர். பீமனே சிரித்துக்கொண்டிருந்தான். தண்டகர் அளித்த பரிசை முகர்ந்து பார்த்தான். பின்னர் அதைக்கொண்டு இடையை சொறிந்தான். முழுமையாகவே குரங்காக மாறி பாய்ந்து ஒருவன் தோளிலேறி தாழ்ந்த கிளையொன்றில் அமர்ந்து உர்ர்  என பல்லைக் காட்டியபின் அப்படியே கிளைகளினூடாகச் சென்று மறைந்தான்.


குழந்தைகளும் முதியவர்களும் ஒரேபோல சிரித்து அமைய தண்டகர் எழுந்து வணங்கினார். தன் கோல்தூக்கி அனைவரையும் வாழ்த்திவிட்டு இருவர் தோள்பற்ற நடந்து சென்றார். பீமன் ஒவ்வொரு குழந்தையையாக மேலே தூக்கிப்போட்டு பிடித்து அவர்களின் அன்னையரை நோக்கி வீசினான். “நான் நான்” என குழந்தைகள் வந்து நின்றன. அதில் ஒருவன் உளமும் உடலும் வளராத இளைஞன். பீமன் அவனையும் தூக்கி முத்தமிட்டு இருமுறை தூக்கி வீசினான். அவர்கள் “இன்னும் இன்னும்” என்று துள்ளினர். மூதன்னை ஒருத்தி “போதும், செல்லுங்கள்” என பொய்ச்சீறல் விடுக்க பீமன் “நாளை… இனிமேல் நாளை” என்றான். அவர்கள் ஒவ்வொருவராக கலைந்துசென்றனர்.


மீண்டும் தன் குடிலை அவன் அடைந்தபோது முண்டன் ஆடைகளை கழற்றிக்கொண்டிருந்தான்.  இரண்டு மரவுரியாடைகளை அவன் அணிந்திருந்தான். ஒன்று எளிதில் பலவகையாக கழற்றும் தன்மைகொண்டிருந்தது. கீழே அவனுடைய கோல் வளைந்து கிடந்தது. பீமன் குனிந்து அதை எடுத்தான். அதை சற்றே திருப்பியபோது உறுதியான கோலென்றாயிற்று. மறுபக்கம் திருப்பியபோது கொடியென்று தோன்றியது. அதை அழுத்திச் சுருக்கி ஒருகணுவுக்குள் இன்னொன்றைச் செலுத்தி உள்ளங்கையளவுள்ள குழாயாக ஆக்கமுடிந்தது. “இதை கொண்டுவந்திருந்தீரா?” என்றான் பீமன். “இல்லை, இப்போது செய்தேன். ஒன்றுவிட்டு ஒன்றென மூங்கில் கணுக்களைவெட்டி செருகிச் செய்வது. மிக எளிது” என்றான் முண்டன்.


“இனியவர்கள்” என்றபடி பீமன் பாயை எடுத்து தரையில் விரித்தபின் தலையணைக்காக தேடினான். மென்மரத்தாலான தலையணை நன்கு தேய்க்கப்பட்டு தலைக்கான குழிவுடன் அப்பால் கிடந்தது. அதை எடுத்துக்கொண்டுவந்து போட்டான். “இனிய குளிர்… நாம் நன்கு துயின்றே நாளாயிற்று எனத் தோன்றுகிறது.” முண்டன் “இல்லை, நாம் காலையில் எழுந்தாகவேண்டும்” என்றான். “ஏன்?” என்றபடி பீமன் படுத்தான். “இங்கே காலையில் நாகதேவர்களுக்கு பூசெய்கை செய்கிறார்கள்” என்றபடி வெறுந்தரையில் முண்டன் படுத்தான். “அங்கே அவர்களின் தெய்வநிரையை கண்டேன். படையலுணவையும் மலர்களையும் காலையில் படைத்திருப்பார்கள் என எண்ணினேன்.” பீமன் அவன் மேலும் சொல்லட்டுமென காத்திருந்தான். “அத்தெய்வநிரையில் குருநகரியின் அரசர் நகுஷனையும் கண்டேன்” என்றான் முண்டன்.



tigerகாலையில் சிறுமுழவின் ஒலி கேட்டதுமே முண்டன் எழுந்து பீமனை உலுக்கி எழுப்பினான்.  “பூசெய்கை தொடங்கிவிட்டதென எண்ணுகிறேன். எழுக!” என்றான். “நான் அதற்கு ஏன் வரவேண்டும்? நீரே சென்று வந்து என்ன நடந்தது என்று சொல்லும்” என்றபடி பீமன் புரண்டு படுத்தான். “சரி, நானும் துயில்கொள்கிறேன்” என முண்டன் திரும்ப படுத்துக்கொள்ள சில கணங்களுக்குப்பின் பீமன் மெல்ல திரும்பி “நான் எழுவதற்கு சித்தமாகவே இருக்கிறேன். ஆனால் ஏன் செல்லவேண்டும்? அவர்களின் பூசனை அவர்களுக்குரியது அல்லவா?” என்றான். முண்டன் ஒன்றும் சொல்லவில்லை. “மேலும் நான் எந்தப் பூசனைகளிலும் அரசுமுறைச் சடங்குகளிலும் பொதுவாக கலந்துகொள்வதுமில்லை.”


முண்டன் குறட்டையொலி எழுப்பினான். பீமன் எழுந்து அவனை உலுக்கி “சரி, செல்வோம்” என்றான். முண்டன் கண்களைத் திறந்து “எங்கே?” என்றான். “பூசனைக்கு.” முண்டன் “எந்தப் பூசனைக்கு?” என்றான். “விளையாடாதீர். நாகர்களின் குலதெய்வ வழிபாட்டுக்கு.” முண்டன் “நல்ல துயில் வந்து அமைகிறது… நாளைக்கு செல்வோமே” என்றான். “கிளம்பும்” என பீமன் அவனைப் பிடித்து உலுக்கினான். “நாம் இன்றே இங்கிருந்து கிளம்பியாகவேண்டும்” என்றான். முண்டன் வாயைத் துடைத்தபடி “இனிய துயில். எடைமிக்க வெம்மையான மரவுரிப் போர்வைபோல என்னை மூடியது. அதில் நான் குரங்காக இருந்தேன்” என்றான்.


அவர்கள் கைகால்முகம் கழுவி பூசெய்கை நிகழ்ந்த இடத்திற்கு சென்றனர். தொலைவிலேயே அங்கே பந்தங்கள் எரிவது தெரிந்தது. நிழல்கள் எழுந்து அகன்று மரக்கிளைகளின் இலைப்பொதிகளின்மேல் விழுந்து ஆட மனித உடல்களும் தழலென செந்நிறம் கொண்டிருந்தன. ஓசைக்கு அஞ்சிய பறவைகள் எழுந்து வானில் சிறகடித்தன. வானில் விடிவெள்ளி இல்லை என்பதை பீமன் கண்டான். “இன்னும் முதற்புலரியே எழவில்லை” என்றான். “நாம் விழித்துக்கொள்வதே புலரி” என்றான் முண்டன். பீமன் சினத்துடன் திரும்பி நோக்க “காலையில் நாம் பேசுவதே தத்துவம். சினம் கொள்ளவேண்டாம்” என்றான் முண்டன். பீமன் “மேலும் வேடிக்கைகள் வேண்டாம்… நான் சீர்நிலையில் இல்லை” என்றான். முழவொலி குரைப்பதுபோல கேட்டுக்கொண்டிருந்தது. அங்கே நாலைந்துபேர் மட்டுமே நின்றிருந்தனர்.


அவர்கள் அணுகியதும் அனைவரும் திரும்பி நோக்கினர். ஒருவர் ஏதோ சொல்லவர பிறிதொருவர் மெல்லிய ஒலியால் அடக்கினார். அவர்கள் சென்று நின்றுகொண்டதும் ஒருவர் குங்குமத் தாலத்தை எடுத்துவந்து அள்ளி அவர்களின் முகத்தில் பூசினார். ஓலையாலான நாகபடமுடியை அவர்களுக்கும் சூட்டினார். அங்கே நிரையாக அமைந்திருந்த தெய்வங்களில் நகுஷனை பீமன் கண்டடைந்தான். இடைக்குக்கீழே நாக உடலும் மேலே மானுட உடலும் முகமும் கொண்டிருந்தான். வலக்கையில் அமுதகலமும் இடக்கையில் செங்கோலும் இருந்தது. அப்பால் ஒரு சிறிய உலையில் மண்பானையில் அன்னம் வெந்துகொண்டிருந்தது. அருகில் ஒரு முயல் கால்கள் கட்டப்பட்டு காத்திருந்தது.


முழவோசை நடைமாறுபாடு கொண்டது. தண்டகர் வருகிறார் என எண்ணி திரும்பி நோக்கிய பீமன் அங்கே இருவர் கைகளில் தாலங்களுடன் காத்து நிற்பதைக் கண்டான். ஒருவரின் தாலத்தில் மலர்களும் இன்னொருவரிடம் செந்தூரமும் இருந்தன. பந்தத்துடன் ஒருவர் அருகே நின்றிருந்தார். முழவு விசைகொண்டு துள்ளிச்செல்லத் தொடங்கியது. மலையிறங்கும் புரவி. அனைத்தையும் வாளால் கிழித்து எழுவதுபோல அலறலோசை கேட்டது. உடலை விதிர்க்கச் செய்யும் மானுடம் கடந்த ஓசை.  குடிலில் இருந்து பாய்ந்து வந்தவரை தண்டகர் என ஒருகணம் கழித்தே பீமன் அறிந்தான். சிறுத்தையின் பாய்ச்சலுடன் வந்து அந்தப் பந்தத்தை பிடுங்கிக்கொண்டார். அதைச் சுழற்றியபடி வெறிகொண்டாடியபோது அனலால் ஆன சுழலுக்குள் அவர் நீந்துவதுபோலிருந்தது. அனல்வளையங்களைச் சூடி அதனுள் வருவதாகத் தோன்றியது.


இருமருங்கும் நின்றவர்கள் மலரும் செந்தூரமும் அள்ளி வீச அவர் சிவந்து பந்த ஒளியில் காற்று விளையாடும் தழலென்று நின்றாடினார். புலியின் உறுமல். யானைப் பிளிறல். ஓநாய்க் கூவல். ஒன்றோடொன்று கலந்து அவை உருவாக்கும் பிறிதொரு பெருங்குரல். அவர் வந்து தெய்வங்களின் முன்னால் சென்று நின்றார். பந்தச்சுடரால் தெய்வங்களை உழிந்தார். அந்த முயலை எடுத்து அவர் முன்னால் இட்டனர். நாகமென உடல்வளைத்து அதை கவ்வி எடுத்தார். பற்களாலேயே அதன் வயிற்றைக் கவ்வி உடைத்து குருதி வழிய தலையை உதறினார். குருதி அவர் உடலில் பரவியிறங்கியது. துடித்த முயலை எடுத்து நாகமூதாதையருக்கு முன்னால் படைத்தார்கள். ஆடி நின்று உடல்நடுங்கி மெய்ப்புகொண்டார். பின்னர் அப்படியே இருட்டிலிருந்து அறுபட்டு பின்னால் சரிந்து விழுந்தார்.


அவரை இருவர் முகத்தில் நீர் தெளித்து விழிக்கச் செய்தனர். இருவர் அந்த முயலைப் பகுந்து குருதியை அச்சோற்றுடன் பிசைந்து சிறிய கவளங்களாக்கி மலருடன் இலைகளில் வைத்து தெய்வங்களுக்கு படைத்தனர். பந்தங்களின் ஒளியில் கற்சிலைகள் உயிர்கொள்வது தெரிந்தது. இளைய பூசகர் ஒவ்வொரு தெய்வத்திற்கும் மலரிட்டு அடிவணங்கி மலர் எடுத்து சென்னிசூடி சுடராட்டு காட்டினார். மெல்ல கையூன்றி புரண்ட தண்டகர்  இருவர் பற்றி தூக்க  உடல் சொடுக்கி நடுங்க எழுந்து நின்று தெய்வங்களை கைகூப்பி வணங்கினார். முதல்சுடர் அவருக்கு காட்டப்பட்டதும் தொட்டு வணங்கினார்.


அவர் செல்லும்பொருட்டு திரும்பியதும் முண்டன் “முதுநாகரே, நீங்கள் எங்களுக்காக அனந்தம் நோக்கி நெறியுரைக்கவேண்டும்” என்றான். அவர் திரும்பி “நான் அதை நோக்கி நெடுங்காலமாகிறது” என்றார்.  “நாங்கள் இங்கிருந்து எங்கு செல்வதென்று அறியாமலிருக்கிறோம். அதில் ஏதேனும் வழி தெரியுமென எண்ணுகிறோம்” என்றான். “அது வழிகாட்டக்கூடியதல்ல இளையவனே, வழி கலக்கும் சுழி” என்றார் தண்டகர். “கலங்கித் தெளிகையில் எழும் என எண்ணுகிறேன்” என்று பீமன் சொன்னான். அவர் இருவரையும் நோக்கியபின் தன்னை மீண்டும் அமரவைக்கும்படி தூக்கியவர்களிடம் சொல்லிவிட்டு மெல்ல அமர்ந்தார். காட்டில் சுள்ளிகள் ஒடிவதுபோல அவர் எலும்புகள் ஒலித்தன. அமர்ந்ததும் அவர்களையும் அமர்க என கைகாட்டினார்.


நாகநச்சு கலக்கப்பட்ட ஏனத்தை இரு நாகர்கள் கொண்டுவந்து அவர் முன் வைத்தனர். அவர் கைகளைக் கோத்து மடியில் வைத்து விழிமூடி உளம் குவித்து நெடுநேரம் இருந்தார். பின்னர் விழிதிறந்தபோது நாகமென மூச்சு சீறினார். விழிகளும் நாகங்களின் இமையாநோக்கு கொண்டிருந்தன. “நோக்குக!” என அவர் பீமனிடம் சொன்னார். “கூர்ந்து நோக்குக! இந்நீர்ச்சுழி ஒரு ஆடி. ஆடியல்ல சாளரம். சாளரமல்ல இளையவனே, இது ஒரு வானம். வானமல்ல, முடிவின்மை என்றறிக! நோக்குக!” பீமன் அதை குனிந்து நோக்கினான். நீலநீர்ப்பரப்பில் அவன் நிழல் தெரிந்தது. ஒரு குமிழி அதன் மேல் அலைந்தது. இன்னொரு சிறுகுமிழி வந்து ஒட்டிக்கொண்டது.


“தெரிவது என்ன?” என்றார் தண்டகர். அவன் தன் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தான். அவன் விழிகள் பதைப்புடன் அவனை நோக்கின. விழிவிலக்க எண்ணினாலும் அவ்விழிகளால் அவன் ஆட்கொள்ளப்பட்டான். “சொல்க, நீ பார்ப்பதென்ன?” என அவனிடம் எவரோ கேட்டனர். அவனை நோக்கிய விழிகள் திகைப்பு கொண்டன. பின்னர் அடையாளம் கண்டுகொண்டன. அந்த முகம் தெளிவுகொண்டபடியே வந்தது. அது தன் முகம் அல்ல என அவன் உணர்ந்தான். மென்புகையென மீசை அரும்பிய இளைய முகம். பெருந்தோள்கள், மஞ்சள்நிறம். “அவன் பெயர் புரு” என்றார் தண்டகர். “அவன் தன் முதுதாதை புரூரவஸின் அதே முகம் கொண்டு பிறந்தான். ஆகவே புரு என அவனுக்கு பெயரிட்டனர்.”


பீமன்  அந்த விரிந்தகன்ற தோள்களை நோக்கினான். “அவன் அரக்கர்குலத்துக் குருதிகொண்டவன். ஆகவே அப்பெருந்தோள்கள் அமைந்தன அவனுக்கு…” என்றார் தண்டகர்.  அவனால் அத்தோள்களை விட்டு விழியகற்ற முடியவில்லை. அறியாது எழுந்த நீள்மூச்சால் அவன் தோள்கள் அசைந்தபோதும் அத்தோள்கள் அலைகொள்ளவில்லை. ஆனால் மெல்ல நீர்ப்படலம் நெளிந்தது. பிறிதொரு பெருந்தோள் தெரிந்தது. “அவன் பிரவீரன், ஏழுபுரவித் தேரை கைகளால் பற்றி நிறுத்தியவன். அவனை சந்திரகுலத்து அரக்கன் என்றனர் கவிஞர்” என்றார் தண்டகர்.


மீண்டுமொருமுறை உருவம் மாறியது. “சிங்கத்துடன் விளையாடிய அவனை பரதன் என்றனர்” என்றது அவர் குரல். மீண்டுமெழுந்த முகத்தை அவன் நோக்கியதுமே “யானைகளை வென்றவன், ஹஸ்தி. பெருநகரை அமைத்து கோல்சூடியவன்” என்றது குரல். “அதோ, அவன் குரு. பின்னர் எழுந்தவன் பீமன்.” பீமன் தோள்விரிந்த திருதராஷ்டிரனின் முகத்தை நோக்கினான். அவர் உதடுகளால் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். “உன் முகம்” என்றார் தண்டகர். பீமன் பெருமூச்சுவிட்டான். அவன் உடல் மெல்ல அசைய மீண்டும் அலையிளகியது நீர்ப்பரப்பு.


“நகுஷனின் தனிமை யதி என்னும் மைந்தனாகப் பிறந்தது. அவன் துயரம் சம்யாதியாகியது.  அவன் சினம் ஆயாதியாகியது.  வஞ்சம் அயதியாகியது. விழைவு துருவனாக ஆகியது. பாண்டவனே, அவன் கொண்ட  காமம் யயாதியெனும் மைந்தனாகியது. கணுக்களில் கூர்கொள்வதே முளையென மரத்திலெழுகிறது. அறிக, தந்தையரில் கூர்கொள்வதே மைந்தரென்று வருகிறது”  தண்டகர் சொன்னார். “ஒருமடங்கு விழைவும் இருமடங்கு வஞ்சமும் மும்மடங்கு சினமும் நான்மடங்கு துயரும் ஐந்து மடங்கு தனிமையும் கொண்டிருந்தான் நகுஷன். அவன் நூறுமடங்கு கொண்டிருந்த காமமே யயாதி.”


“யயாதி பிற ஐவரையும் வென்று குருநாட்டின் முடிசூடினான்” என்றார் தண்டகர். “தன் பொன்றாப் பெருவிழைவாலேயே சக்ரவர்த்தியென்றானான். ஐவகை நிலங்களையும் வென்றான். முடிமன்னர் கொண்டுவந்து காலடியில் சேர்த்த பெருஞ்செல்வத்தால் கருவூலத்தை நிறைத்தான். அள்ளிக்கொடுத்து அதை ஒழித்து புகழ்நிறைத்தான். வேள்விகள் செய்து விண்ணமர்ந்த இந்திரனுக்கு நிகரென்றானான்.” பீமன் நீலச்சுழியில் தெரிந்த புருவின் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். அது துயர்கொண்டிருந்தது. ஒருபோதும் சொல்லென உருக்கொள்ளாத துயரம் தன்னை விழியொளியென முகத்தோற்றமென உடலசைவென ஆக்கிக்கொள்கிறது. அத்துயரம் பெய்யாத் துளி. இறுகி முத்தென்றாகும் ஒளி. அவன் பெருமூச்சுவிட்டான்.  புரு புன்னகை செய்தான்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–46
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–45
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–43
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–29
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–28
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–16
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–14
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–13
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–12
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–9
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–7
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–6
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–5
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 47
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–15
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–11
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–10
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–8
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–4
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 18, 2017 11:30

March 17, 2017

குரு நித்யா காவியமுகாம், ஊட்டி

reception


 


2017 ஆம் ஆண்டுக்கான ஊட்டி காவிய முகாம் ஏப்ரல் மாதம் 28, 29, 30 [வெள்ளி சனி ஞாயிறு] தேதிகளில் நிகழும். மரபிலக்கியம், நவீன இலக்கியம், நவீனக் கலை ஆகிய தளங்களில் விவாதங்கள் நிகழும். சிறப்பு விருந்தினரும் சிலர் கலந்து கொண்டு வகுப்புகள் எடுப்பார்கள்.


முன்னரே இளம் வாசகர் சந்திப்புகளில் கலந்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை. ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக சொல்லி முன்னரே அறிவிக்காமல் வராமலிருந்தவர்கள் தயவுசெய்து விண்ணப்பிக்க வேண்டாம்.


ஊட்டி குருநித்யா நினைவு காவிய முகாம் மற்றும் சந்திப்புகளின் நிபந்தனைகள் இருபதாண்டுகளுக்கும் மேலாக மாறாதவை.



அனைத்து அமர்வுகளிலும் கண்டிப்பாகக் கலந்துகொண்டாகவேண்டும்
மது அருந்துவது கூடாது
வெளியே தங்குவதற்கு அனுமதி இல்லை
அழைக்கப்படாதவர்களுக்கு அனுமதி இல்லை
தனிப்பட்ட தாக்குதல்களும் நேரடியாக ஒருவரை நோக்கிப் பேசுவதும் தவிர்க்கப்படவேண்டும்.
விவாதங்களுக்கு மட்டுறுத்துநர் உண்டு

பங்கெடுக்க விரும்புபவர்கள் தங்கள் பெயர் மற்றும் கேட்கப்பட்ட தகவல்களை கீழே உள்ள படிவத்தில் நிரப்பவேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உறுதி செய்து தனியாக மின்னஞ்சல் அனுப்பப்படும்.


மேலும் விவரங்களுக்கு 95976 33717 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.


meetings.vishnupuram@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.


விண்ணப்ப படிவம்


நன்றி


விஷ்ணுபுர இலக்கிய வட்டம்.


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 17, 2017 11:40

பார்வதிபுரம் கணியாகுளம் பாறையடி ஓர் ஏக்கம்


மதிப்பிற்க்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,


நான் நவீன். நாகர்கோயில் நான் பிறந்த ஊர். தங்களது அறம் தொகுதி வாசித்துவிட்டு சொல்லவியலாத உணர்வு நிலைகளுக்கு ஆட்பட்டேன். முக்கியமாக சோற்றுக் கணக்கு கதையைப் பல முறை படித்துவிட்டு திருவனந்த்புரம் சாலை தெருவில் உள்ள kethel’s kitchen தேடிப் பிடித்து கோழி குஞ்சு வறுவலும், குழம்பும் வயிறு முட்டும் அளவுக்கு சாபிட்டது ஒரு மறக்க முடியாத அனுபவம். அளவில்லா சாப்பாடு மற்றும் போஞ்ச், ஆனால் மீன் கிடைக்கவில்லையே! அந்த கடையைப் பற்றியதுதானே உங்கள் புனைவான சோற்றுக் கணக்கும்?


உங்கள் இணைய எழுத்துக்களுக்குத் தொடர் வாசகன். பல நேரங்களில் தங்கள் கருத்துக்கள் அபாரமான திறப்புகளைத் தந்திருக்கின்றன. மனதில் படிந்து விட்ட அற்ப எண்ணங்களை இனம் கண்டு கட்டுடைத்திருக்கின்றது. தங்கள் எழுத்துக்களைப் படிக்கையில் என் மனதில் ஒரு surgical strike நடப்பது போலவே இருக்கும். அவ்வளவு துல்லியமாகத் தேர்ந்தெடுத்து தகர்த்து புனரமைப்பும் செய்துவிடும


எங்கள் வீடு இருப்பது கோணம் என்னும் ஊரில். பதினைந்து வருடங்களுக்கு முன், பள்ளி விடுமுறைகளில் மிதிவண்டியில் அனந்தன் கால்வாய் சாலை வழியாக பார்வதிபுரம் வந்து ஆலம்பாறை மலையில் ஏறி அங்கிருக்கும் பாறையில் பகலைக் கழித்துவிட்டு, அந்தி சாயும் நேரத்தில் ஆலம்பாறை ஆலமரத்திற்க்குப் பின்னால் இருக்கும் குளத்தில் குளித்துவிட்டு வீடு வருவது வழக்கம். அந்த மலை, குளம், வயல்வெளிகள் அந்த நிலக்காட்சியே பேருவகையைத் தருவதாயிருந்தது. இன்றோ அந்த வயல்கள் குறுகி வீடுகளுக்கு வழி விட்டுக் கொண்டிருக்கிறது. குளம் குட்டையாகிப் போனது. மலைகளின் பாறைகள் உடைக்கப்பட்டு கல்வி மையங்களாக மாறுகின்றன. இப்போதும் ஊருக்கு வருகையில் அதே ஆலம்பாறைக்கு எப்படியாவது ஒரு அந்தி சாயும் பொழுதை ஒதுக்கிவிடுவது வழக்கம்.முன்பு இளைப்பாறிய பாறையை அடிவாரத்திலிருந்து ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு நின்றிருப்பேன். அந்த குளத்தங்கரையில் நிற்கையில் ஆற்றாமையுடன் பெருமூச்சை மட்டும் விட முடிகிறது. கண்கள் பனிக்க திரும்பி வந்துவிடுகிறேன் ஒவ்வொரு முறையும்.


நில பகுதியின் மாண்பை அதைச் சார்ந்தவர்கள் உணராததே இதன் காரணமா அல்லது கால மாற்றத்தில் இது போன்றவை தடுக்க முடியாததா என்று தெரியவில்லை. நான் படித்திருக்கிறேன், நான் சார்ந்த நிலப்பகுதியின் தனித்துவத்தை உனார்ந்திருக்கிறேன் என்று உறுதியுடன் அதன் தனித்துவத்தையும் முக்கியத்துவத்தையும் முன்னிறுத்தி பேச இயலாதவனாகி நிற்க்கிறேன். இதற்காகவே தங்களிடம் ஒரு உதவி . இந்த நிலப்பகுதியின் வரலாற்றையும் அதன் இயற்க்கை வளங்களையும்,நில அமைப்பையும் பேசும் நூல்களையும் அப்புனைவெழுத்துக்களையும் பரிந்துரைக்க வேண்டுகிறேன்.


நன்றியுடன்


நவீன்


 


alampaaRai


அன்புள்ள நவீன்


நாகர்கோயிலில் அழகான பகுதிகளில் ஒன்று பார்வதிபுரம். தெரிசனங்கோப்பு செல்லும்பாதை இன்னொரு இடம். பலர் இன்றும் இங்கே வருகிறார்கள்


ஆனால் சென்ற இருபதாண்டுகளாக இது பெருநகராக ஆகிக்கொண்டே இருக்கிறது. பார்வதிபுரம் மூன்றுகூட்டு மேம்பால வேலை தொடங்கிவிட்டது. ஆரல்வாய்மொழி இணைப்புச்சாலை வேலைமுடிந்துவிட்டால் இப்பகுதிதான் நாகர்கோயிலின் மையநகரம். சரிதான், காலகதி.


கணியாகுளம் வரலாற்றுச்சிறப்பு மிக்கது. இங்குதான் இரவிக்குட்டிப்பிள்ளைப்போர் நிகழ்ந்தது. பழைய வணிகச்சாலை இவ்வழிச் சென்றது. இன்றும் மூலம்திருநாள் கட்டிய கல்மண்டபங்கள் சில உள்ளன


இங்கு மூன்று பெரும் ஏரிகள் உள்ளன. கணியாகுளம் அருகே இரண்டு ஏரிகள். ஒன்று சோழர்கால ஏரி. ஒன்று மூலம்திருநாள் வெட்டியது. என் வீட்டுக்குமேல் உள்ள ஏரி சோழர்காலத்தையது. மூன்றிலுமே பத்தாண்டுகளாக தண்ணீர் இல்லை. தூர்வாரப்பட்டு அரைநுற்றாண்டு ஆகிவிட்டது. சேற்றுக்குழிகளாக கிடக்கின்றன. தூர்வாரினால் நீர் தேங்குவது மிக எளிது. ஏனென்றால் மழை மிக அதிகம். பேச்சிப்பாறை அனந்தவிக்டோரியா சானல் இவ்வழித்தான் செல்கிறது.


ஆனால் ஏரிகளை சென்ற சில ஆண்டுகளாக ஆக்ரமித்துக்கொண்டே இருக்கிறார்கள். அதைக்குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க மக்களுக்கு ஆர்வமில்லை. சொல்லப்போனால் மக்கள் ஏரிகள் அழியவேண்டுமென விரும்புகிறார்கள். அப்போதுதான் இப்பகுதி ‘வளரும்’ என நினைக்கிறார்கள். என் வீட்டுக்குமேலே தண்டவாளத்திற்கு அப்பால் உள்ள சோழர்கால ஏரி சென்ற இரண்டு ஆண்டுகளில் கால்வாசியாகச் சுருங்கி பட்டா நிலமாக ஆக்கப்பட்டு பிளாட் போடப்படுகிறது. ஆனால் மறுபக்கம் அதை தூர்வாரியதாகக் கணக்கு எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள்.


இது தமிழகம் முழுக்க நிகழ்கிறது. பாறையடி மலையின் அழிவுக்கு என்ன காரணம்? அங்கே நான்கு பொறியியல்கல்லூரிகள் அரசியல்வாதிகளால் மலையை ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ளன. ஒரு மலையை முழுக்கவே சவேரியார் கல்லூரி ஆக்ரமித்துள்ளது. ஏதாவது செய்யப்படுகிறதா? இங்குள்ள நகர்ப்புற மக்களுக்கு அதில் எந்த ஆர்வமும் இல்லை. நீங்களே பார்க்கலாம், நகரிலிருந்து மிகச்சிலரே அங்கே நடைபயிற்சிக்குக்கூட வருகிறார்கள். கணிசமானவர்கள் செல்வது ஸ்காட் கிறித்தவக் கல்லூரி மைதானத்துக்குத்தான்.


சென்ற இருபதாண்டுக்காலத்தில் நான் கண்ட சீரழிவு இந்த அற்புதமான சானலில் கழிவுகளைக் கலந்துவிடுவது. வீடுகள் பெருகப்பெருக மாநகராட்சியே ஓடைகளைக் கட்டி இந்த நல்லநீரில் சாக்கடையைக் கொண்டுசேர்க்கிறது. நீர் பாதிப்பங்கு சாக்கடைதான் இன்று. நன்னீரில் சாக்கடையைக் கலக்கும் அரசு அனேகமாக உலகில் இதுமட்டும்தான்.


மறுபக்கம் மொத்த குமரிமாவட்ட கடலோரமும் தாதுமணல் கொள்ளையரால் சூறையாடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றைய ஊடகங்களில் ஒரு கட்டுரைகூட அதைப்பற்றி எழுதமுடியாது. சமஸ் எழுதிய கட்டுரை பாதியில் நின்றது நினைவிருக்கலாம்.


நாம் போலியான எதிரிகளை உருவாக்கி போலியான எதிர்ப்பில் திளைக்கும் முகநூல்சமூகம். எனக்கு இன்று ஒரு கடிதம் ‘ஒட்டுமொத்த தமிழகத்தின் சுற்றுச்சூழலை அழிப்பவர் ஜக்கி வாசுதேவ். பல்லாயிரம் யானைகளைக் கொன்றவர். ஜக்கியை துரத்தினால் தமிழ்நாட்டின் நிலவளம் பாதுகாக்கப்படும்”


 என்னத்தைச் சொல்ல?


ஜெ


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 17, 2017 11:37

சினிமாவின் வேகம்

kutram23


 


நேற்று தபால்துறை போராட்டம். அருண்மொழிக்கு விடுமுறை. ஆகவே குடும்பகொண்டாட்டமாக நாங்கள் இருவரும்  ஒரு சினிமா பார்க்கச்சென்றோம். குற்றம் 23. நேர்த்தியான குற்றக்கதை. சீரான திரைக்கதையுடன் கடைசிவரை அடுத்தது என்ன என்று பார்க்கச்செய்தது. குறிப்பிடத்தக்க அம்சம் பெரும்பாலான உரையாடல்கள் அண்மைக்காட்சிகளில் அமைக்கப்பட்டிருந்தன. ஆனலும் நடிப்பு மிக இயல்பாக இருந்தது. குறிப்பாக பெண்களின் நடிப்பு. அண்மைக்காட்சிகளை பெரும்பாலான இயக்குநர்கள் தவிர்ப்பதே தமிழில் வழக்கம், ஏனென்றால் நடிப்பு செயற்கையாகத் தெரியும். நல்ல நடிப்பை வாங்குவது இங்கே மிகக்கடினம். அண்மைக்காட்சிகள் பெரும்பாலும் மின்னி மறைவது அதனால்தான். அறிவழகன் ஒர் இயக்குநராக வெற்றுபெறுவது வில்லன்களைத் தவிர அனைவரிடமும் நல்ல நடிப்பை பெற்றிருந்ததில்தான்


 


ஆனால் திரும்பிவந்து விமர்சனங்களை சும்மா ஓட்டி வாசித்துப்பார்த்தேன். ஓர் எண்ணம் எழுந்தது, அதைப்பதிவுசெய்யலாமெனத் தோன்றியது. பல விமர்சனங்களில் இரண்டாம்பகுதியில் சிலகாட்சிகள் இழுவை, கத்திரிபோட்டிருக்கலாம் என்னும் வரி இருந்தது. இதை ஒரு தேய்வழக்காகவே பயன்படுத்துகிறார்கள் என நினைக்கிறேன். இரண்டாம்பகுதியில் முதல்பகுதியின் முடிச்சை விளக்கும் காட்சிகள் அன்றி எதுவும் இல்லை. எந்தக்காட்சியுமே இரண்டு மூன்றுநிமிடங்களுக்கு மேல் நீளவில்லை. எல்லா காட்சிகளுமே தீவிரமான நிகழ்ச்சிகள் கொண்டவை. அப்படியென்றால் எதைச் சொல்கிறார்கள்?


 


சினிமா என்றாலே அது கதிகலங்க ஓடவேண்டும் பறக்கவேண்டும் என்னும் நம்பிக்கையை தமிழ்சினிமாவின் தொடக்க காலம் முதலே இங்குள்ள விமர்சகர்கள் உருவாக்கி நிலைநிறுத்திவிட்டனர். நல்ல சினிமா எடுக்க தடையாக இங்கே இருப்பது இந்த மனநிலைதான். இதைவெல்லாமல் இங்கே ஒரு சினிமா இயக்கமே எழ முடியாது. பலசமயம் ‘இரண்டாம்பகுதியில் ஐந்துநிமிடம் போரடிக்கிறது, இழுவை’  என எழுதுகிறார்கள். ஓர் ஐந்துநிமிடம் பொறுத்திருந்து என்ன நிகழ்கிறதென்று பார்த்தால்தான் என்ன? சினிமா என்பது காட்சிக்கலை. காட்சி கண்ணில்பதிந்து எண்ணமாக ஆகி எண்ணத்தைக் கடந்து செல்ல கொஞ்ச நேரம்பிடிக்கும். ஒருநிலக்காட்சியை ஒரு கதாபாத்திரத்தின் முகபாவனையை உடல்மொழியை ஒரு நிகழ்ச்சியின் நுட்பங்களை காட்ட சற்றுமெதுவாகவே காட்சிநகர முடியும். சிலசமயம் காட்சி நிலைகொள்ளவும் வேண்டும். தமிழ்சினிமாவில் நிலைக்காட்சிகளே இல்லை என்றாகிவிட்டிருக்கிறது. காரில் நூறுகிமீ வேகத்தில் பறந்தபடி வெளியே தெரியும் காட்சியைப்பார்ப்பதுபோல படம்பார்த்தால் என்னதான் பதியும்?


 


உலகமெங்கும் சினிமா மெல்லத்தான் செல்கிறது. கலைப்படங்கள் மெல்லத்தான் நகரமுடியும், இல்லையேல் அவை எதையும் ‘காட்ட’ முடியாது. நம் திரைவிழாக்களில் ‘ரசிகர்கள்’ கலைப்படங்களுக்கு ஆற்றும் எதிர்வினைகளைக் கண்டு நொந்திருக்கிறேன். காரணம் சினிமா என்றால் அது ராக்கெட் என்னும் நம்பிக்கை. ஹாலிவுட் வணிகசினிமாக்கள்கூட அவ்வப்போது மிகமெல்ல செல்வதைக் காணலாம். ஜேம்ஸ்பாண்ட் படங்களில்கூட நிதானமான நீண்ட காட்சிகள் உண்டு. இங்கே அதே படத்தை எடுத்திருந்தால் ’நான்குநிமிடம் பொறுமையைச் சோதிக்கிறார் பாண்ட்’ என விமர்சனம் எழுந்துவிடும்.


 


இந்த மனநிலையை எதிர்கொள்ளவே சினிமாக்களை ‘வேகமானதாக’ காட்ட ஏகப்பட்ட உத்திகளை தமிழ் சினிமா கண்டடைகிறது. சரசரவென கேமராவை ஓடவிடுவது, வெட்டிவெட்டிக் காட்டுவது, பலமுறை காட்டுவது, ஓசையை உரக்க ஒலிக்கவிடுவது, ராம்பிங் என. இவற்றை நாம் ஹாலிவுட் படங்களில் காணமுடியாது. நம்மவர்களின் மனநிலையே நம் சினிமாவை இப்படி ஆக்கிவிட்டிருக்கிறது. எந்த சினிமா உத்தியையும் படத்தை ‘வேகமானதாக’ காட்டும்பொருட்டு தமிழ்சினிமா கையாள்வதைக் காணலாம்.


 


உண்மையில் குற்றம்23  மேலேசொன்ன செயற்கையான வேகஉத்திகள் இல்லாமல் ஆனால் கதைவேகம் ஓட சிறப்பான படமாகவே இருந்தது. ஆனால் ’பிற்பகுதியில் ஏழு காட்சிகளில் தலா ஒருநிமிடம் இழுவை’ என்பதுபோல பிரபல இதழ்கள் எழுதுமென்றால் அடுத்த சினிமாவில் அறிவழகன் காமிராவைச் சுழற்றும் கட்டாயத்துக்கு ஆளாவார் இதுதான் இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.


 


வேகம் குறித்த இந்த முதிராமனநிலை உண்மையில் திரைக்கதையை பாதிக்கிறது. குற்றப்புலனாய்வுப்படம் படிப்படியாகத்தான் முடிவைநோக்கிச் செல்லமுடியும். ஆனால் இரண்டாம்பகுதி ‘பறந்தாக’ வேண்டும். ஆகவே அதுவரை வந்த நிதானமான குற்றச்சித்தரிப்பும் புலனாய்வுவிளக்கமும் விலகி திருப்பங்கள் தற்செயல்கள் என பரபரப்பு ஊட்டியாகவேண்டியிருக்கிறது. ஏராளமான கதைகளை கொண்டுவந்து நிறைக்கவேண்டியிருக்கிறது. கடைசி 30 நிமிடம் சினிமாவில் புயலை எதிர்பார்க்கும் மனநிலையால் உத்வேகமான சம்பவங்களை மட்டுமே சொல்லியாகவேண்டியிருக்கிறது. அப்போது அவற்றுக்கி இடையே உள்ள தர்க்கபூர்வமான விளக்கத்தை முன்வைக்க இடமில்லாமலாகிறது. காட்சிகள் துண்டுதுண்டாக நிற்கநேர்கிறது. அப்போது அடுத்த விமர்சனம் எழுகிறது. ரசிகன் ஊகிக்கட்டும் என இயக்குநர் விட்டுவிட்ட இடங்களை எல்லாம் சுட்டிக்காட்டி அவையெல்லாம் தர்க்கப்பிழை என விமர்சகர்கள் சொல்வார்கள்.

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 17, 2017 11:33

‘முங்கிக்குளி’ கடிதங்கள்

mungkikuli


அன்பின் ஜெ.


முங்கிக்குளி வாசித்தேன்


நீங்கள் சென்ற அதே கல்லிடைக் குறிச்சியில், ரயில் நிலையத்துக்கு எதிரே உள்ள ஒரு வீட்டில் (பங்களா) இரண்டரை ஆண்டுகள் வசித்தேன். கீழே அலுவலகம்; முதல் மாடியில் வீடு.


காலையில் 6 மணிக்கு அக்கிரஹார அய்யர் ஒருவர் இந்து பேப்பர் கொண்டு வந்து வீசி விட்டுச் செல்வார். கல்யாணி அம்மை வந்து காஃபி போட்டுத் தருவார்கள். அந்த வீட்டில் முதல் மாடியில் அருமையான முற்றம் உண்டு. அங்கே அமர்ந்து காஃபியோடு, இந்துப் பேப்பரைச் சுவைத்துக் (ஃபில்டர் காஃபியும், இந்து பேப்பரும் சுவைக்காத நாவென்ன நாவே.) கொண்டிருக்கும் போது, நெல்லையில் இருந்து தென்காசி வரை செல்லும் அன்று இருந்த ஒரே ஒரு நீராவி எஞ்சின் ரயில் வந்து நிற்கும்.


பின்னர் கல்யாணி அம்மை சுட்டுத் தரும் இட்லியை விழுங்கி விட்டு, அன்று நாங்கள் உருவாக்கிக் கொண்டிருந்த கங்கணாங்குளம் கரிம வேளாண் பண்ணைக்குச் செல்வோம். பின் மதியம் வரை சூரிய ஒளியில் உலாவி விட்டு, உணவுக்கு மீண்டும் வீடு. உண்ட பின் அரைமணி பாவூர்ச் சத்திரம் கல் பாவிய தரையில் கிறங்கல்.


மாலை அலுவலக வேலைகள் முடிந்து வீடு திரும்பி, ஒரு குளியல். 8 மணிக்கு, அம்பாசமுத்திரம் ஹோட்டல் ஒன்றில் டிஃபன்.


ஜூன் / ஜூலை மாத இள வெயிலில், மேல் முற்றத்தில் மஸ்லின் துணி போலத் தொட்டுச் சென்ற சாரல்.


அங்கே அக்கிரஹாரத்துக்கு ஒரு நாள் வந்த ஸ்ருங்கேரி பாரதி தீர்த்த ஸ்வாமிகளைப் பார்க்கச் சென்றதும். அவர் தந்து சென்ற புகைப்படமும்.


மானே தேனேன்னு ஒரு கவிதை எழுதி, அன்று எங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பேரில், அனுப்பிப் பிரசுரமாகி, அந்தக் குழந்தையின் பெயரில் வந்த 50 ரூபாய் செக்கும்.


என்றேனும் சென்னை செல்லும் போது, தக்காளி சாதமும், வடாமும் கட்டிக் கொண்டு, நெல்லை எக்ஸ்ப்ரஸைப் பிடிக்க, உலகின் மிக அழகான அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் காத்திருத்தல். அந்த ரயில் செல்லும் அம்பாசமுத்திரம் தென்காசி வழி. கடையம் தாண்டும் போது மறக்காமல் நினைவுக்கு வரும் காணி நிலம் வேண்டும் பாடல். ஆற்றின் கரையில் நிற்கும் தென்னந்தோப்புகள்.


இன்று திரும்பிப் பார்க்கையில், சதவீதம் அதிகமாகத் தெரிந்தாலும், ஒரு 50% வரை முங்கிக் குளித்தேன் எனப்படுகிறது.


பாலா


***


அன்புள்ள பாலா


முங்கிக்குளி பற்றி ஏகப்பட்ட ஒற்றைவரி ஏக்கங்கள் வந்தன. நம் மக்கள் எங்கே சிக்கியிருக்கிறார்கள் என்று தெரிகிறது


ஜெ


***


அன்புள்ள ஜெ


முங்கிக்குளி வாசித்தேன். சற்று கேலியாக நீங்கள் சொன்னாலும்கூட அது ஒரு மகத்தான வாழ்க்கைதான். வாழ்க்கையின் இன்பங்களை இழந்து இருப்பது மட்டுமே வாழ்க்கையாக ஆனால் என்ன ஆகும். டென்ஷன். அதைப்போக்க யோகா. இயற்கைமருத்துவம். இப்படித்தான் நம்மாட்களின் வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது


செல்வராஜ்


***


அன்புள்ள ஜெ


முங்கிக்குளி பற்றிய கட்டுரைக்குறிப்பை வாசித்தேன். இன்றைக்கு ‘இவ்வளவு போதும்’ என முடிவெடுத்தால் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிடமுடியும். ஒரு ஐம்பது லட்சம் சம்பாதிப்பதற்கு பத்தாண்டு ஆகும். ஒரு நல்ல கார் வாங்கும் செலவுதான்


எஞ்சிய வாழ்க்கையை அப்படி வாழவிடாமலாக்குவது எது? ஸ்டேட்டஸ். அதை நாம் முடிவுசெய்வதில்லை. பிற நிறுவனங்கள் முடிவு செய்கின்றன. அதில் மாட்டி கடன்சுழியில் சிக்கியிருக்கிறோம். அதுதான் சிக்கலே


அண்ணாமலை


***


ஜெ


முங்கிக்குளியை ஒருவகை கிண்டலுடன் முதலில் குறிப்பிட்டிருந்தீர்கள். அதன்பின் அதை ஒரு இளைப்பாறுதலாகச் சொன்னீர்கள். ஆனால் அதுதான் மானசீகமான வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமான வாழ்க்கை என்று நீங்கள் அறிந்திருக்கவில்லை என நினைக்கிறேன். வாழ்க்கை என்பது சும்மா செயல்புரிவதற்குரியது அல்ல. அது ஆழமாக மனசுக்குள்ளே செல்வதற்கும் உரியது. அப்படிப்பட்டவர்களுக்கு உரியது இதேபோன்ற வாழ்க்கைதான். புறவுலகை இப்படிக் கட்டுப்படுத்திக்கொள்வதைத்தான் யமம் நியமம் என்று பதஞ்சலி யோகநூல் சொல்கிறது. பழைய ஆசிரம வாழ்க்கைகள் இதேபோன்றவை. இன்றும் இப்படி வாழ்வதற்குரிய இடங்கள் உள்ளன. இந்தவாழ்க்கையிலிருந்தே மகத்தான பலவிஷயங்கள் எழுந்துவந்தன. ஏக்கமோ தவிப்போ இல்லாமல் இப்படி வாழ்க்கைக்குள் அமிழ்ந்திருக்க முடிந்தால் இதுவே இலட்சிய வாழ்க்கை


ஜெயராமன்


***

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 17, 2017 11:31

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–46

46. ஒற்றைச்சொல்


முழுவிசையுடன் தன் கைகளால் மாநாகத்தின் வாயை மூடவிடாமல் பற்றிக்கொண்டான் பீமன். இருவரின் ஆற்றல்களும் முட்டி இறுகி அசைவின்மையை அடைந்தபோது அதன் விழிகள் அவன் விழிகளுடன் முட்டின. அக்கணமே அவர்களின் உள்ளங்கள் தொட்டுக்கொண்டன. இருவரும் ஒருவர் கனவில் பிறர் புகுந்துகொண்டனர். பீமன் அவன் முன்பு முண்டனுடன் கல்யாண சௌகந்திகமலர் தேடிச்சென்ற அசோகசோலையில் நின்றிருந்தான். அவன் முன் இந்திரனுக்குரிய மணிமுடியுடன் நின்றிருந்தான் நகுஷன்.


“நான் ஆயுஸின் மைந்தனும், புரூரவஸின் பெயர்மைந்தனுமாகிய நகுஷன், உன் குலத்து மூதாதை” என்று நகுஷன் சொன்னான். “குருநகரியில் என் மஞ்சத்தில் படுத்திருக்கிறேன். அரண்மனைச் சாளரம் வழியாக வரும் காற்று என் இடப்பக்கத்தை தழுவிக்கொண்டிருக்கிறது. சாளரத் திரைச்சீலைகள் அசையும் ஓசையை கேட்கிறேன். இது கனவு என நான் நன்கறிவேன். ஆனால் கனவு மேலும் அழுத்தமான மெய்யென்றும் தோன்றுகிறது. நீ இன்னும் மண்நிகழவில்லை, ஆயினும் உன்னை என்னால் காணமுடிகிறது.”


“உங்கள் முகத்தை நான் நன்கறிந்திருக்கிறேன், எந்தையே” என்றான் பீமன். “என் இளையோனின் விழிகள் இவை.” நகுஷன் “ஆம், உன்னையும் நான் நன்கறிந்திருக்கிறேன். என் மூதாதை புரூரவஸின் முகம் கொண்டிருக்கிறாய்” என்றான். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கியபடி நின்றிருந்தனர். ஒருவரை ஒருவர் நன்கறிந்திருப்பதாக உணர்ந்தனர். ஒரு சொல்கூட உரையாடிக்கொள்ள வேண்டியதில்லை என்று தோன்றியது. “ஒரு துலாவின் இரு தட்டுகளில் முழுநிறைநிகர் கொண்டு நாம் நின்றிருக்கிறோம். நீ என்னை ஏற்கவேண்டும், நான் உன்னை உண்டு உடல்கொண்டால் என் அறையில் மீண்டெழுவேன். இன்னொரு நீள்வாழ்வு எனக்கு வாய்க்கும்” என்றான் நகுஷன்.


“நீங்கள் மண்மறைந்தவர். உங்களில் எஞ்சுவதை நான் பெற்றாகவேண்டுமென்பதே நெறி” என்றான் பீமன். “விழைவகலாமல் நான் விண்புக முடியாது… நான் பசித்திருக்கிறேன்” என்றான் நகுஷன். “எந்தையே, உங்கள் ஆறாப்பசி என்பது என்ன?” என்றான் பீமன். “ஏனென்றால் நாங்கள் ஐவருமே ஐவகை பசிகொண்டவர்கள். என் பசி ஊனில். என் இளையோனின் பசி உணர்வில். மூத்தவர் அறிவில் பசிகொண்டவர்.” நகுஷன் அவனை காலத்திற்கு அப்பால் வெறித்திருந்த விழிகளால் நோக்கினான். “என் பசி எங்கு தொடங்கியதென்று எண்ணிப்பார்க்கிறேன்” என்றான். “அவிழா வினாக்களில் இருந்து அது தொடங்கியது என தோன்றுகிறது.”


தனக்குள் என நகுஷன் சொன்னான் “வாழ்க்கை என்பது சில வினாக்களை திரட்டிக்கொள்வது மட்டுமே என்று தோன்றுகிறது. அனைத்து வினாக்களையும் திரட்டி ஒற்றைவினாவென ஆக்கிக்கொள்பவன் விடுதலை அடைகிறான்.” நாகத்தின் விழிகள் இரு நிலைத்த நீர்க்குமிழிகளாக தலைக்குமேல் தெரிந்தன. அதன் உடலில் இருந்து பரவிய குளிரில் அவன் உடல் விரைத்துக்கொண்டது. செயலற்ற உடலில் இருந்து எண்ணச்சொல் என ஏதும் எழவில்லை. “ஒன்றிலிருந்து ஒன்றென அறியா முடிச்சுகள்…” என்றான் நகுஷன். அவன் விழிகள் மாறின. “என் உடல் ஏன் கல்லாகியது? ஏன் மீண்டது அது?”


பீமன் “யார்?” என்றான். நகுஷன் அக்குரலை கேட்காதவன்போல சொல்லிக்கொண்டே சென்றான். “ஏன் அவளை அங்கேயும் கண்டேன்? அவள் ஏன் எனக்கென அங்கும் காத்திருந்தாள்?” பீமன் “எந்தையே, நீங்கள் யார்?” என்றான். மிக அருகே அர்ஜுனனின் குரல் கேட்டது. “யாரது?” என்று நகுஷன் திடுக்கிட்டு திரும்பினான். “இந்திரனா? யார்?” பீமன் “எந்தையே, நீங்கள் அறிய விழைவது எதை?” என்றான். “இங்கே இக்குகைக்குள் இருக்கிறான், என் உள்ளுணர்வு சொல்கிறது” என தருமனின் குரல் கேட்டது. அர்ஜுனனின் அம்பு ஒன்று வந்து குகைமேல் பாறைவளைவை உரசிச்செல்ல அந்த ஒளியில் குகை மின்னி மறைந்தது.


பீமன் விழித்துக்கொண்டு ஒரு கணம் உடல்நடுங்கினான். “விட்டுவிட்டது” என்றான். பின்னர் எழுந்து “எங்கே?” என்றான். முண்டன் “இங்கிருக்கிறீர்கள், பாண்டவரே” என்றான். பீமன் மெல்ல இயல்புமீண்டு “அந்த வினா என்ன?” என்றான். முண்டன் புன்னகை செய்தான். “அதில் திரள்வதுதான் என்ன?” என்றான் பீமன். முண்டன் “நாம் கிளம்புவோம்… இது அல்ல என்றால் இங்கிருப்பதில் பொருளில்லை” என்றான். “என்ன நிகழ்ந்தது?” என்றான். “நீங்கள் அறிந்ததே நானும் அறிவேன்” என்றான் முண்டன். “உங்களுடன் நானும் அங்கிருந்தேன்.” பீமன் முண்டன் அருகே முழந்தாளிட்டு அமர்ந்து “என்ன நிகழ்ந்தது? என் மூதாதை இன்னும் அக்குகைக்குள்தான் இருக்கிறாரா?” என்றான்.


முண்டன் “வருக!” என எழுந்து நடந்தான். அவனைத் தொடர்ந்தபடி பீமன் “சொல்லுங்கள் முண்டரே, அவர் எங்கிருக்கிறார்? நான் அவரை உண்மையில் எப்போது சந்திக்கப்போகிறேன்? அவர் மீள்வது எப்படி?” என்றான். முண்டன் அங்கிருந்த சிறிய சுனை ஒன்றை அணுகி அதன் கரையென அமைந்த பாறையில் நின்றான். பாறையிடுக்கில் ஊறிய நீர் அந்தப் பாறைக்குழிவில் தேங்கி மறுபக்கம் வழிந்து யானை விலாவிலிட்ட பட்டு என மெல்லிய ஒளியுடன் வழிந்து சென்றது. கீழே அது தொட்டுச்சென்ற இடங்களில் பசுமை செறிந்திருந்தது. உள்ளிருந்து எழுந்த ஊற்றால் சுனை அலை ததும்பிக்கொண்டிருந்தது.


முண்டன் அமர்ந்து தன் சுட்டுவிரலை அச்சுனைமேல் வைத்தான். அவன் உளம்குவிகையில் அத்தனை தசைகளும் வில்நாண் என இழுபட்டன. விரிந்தகன்ற அலைகள் திரும்பிவந்து அவ்வூற்றுக்குள் சுழித்து அமிழ்வதை பீமன் கண்டான். மெல்ல சுனை அமைதிகொண்டது. அதன் நீலப்பரப்பில் அவன் நகுஷனை கண்டான். அவனருகே தருமன் அமர்ந்திருந்தான். தருமனின் சொற்களைக் கேட்டு கைகளால் வாய்பொத்தி உடல்வளைத்து நின்றிருந்தான் நகுஷன். பின்னர் குனிந்து அவன் கால்களைத் தொட்டு தலையணிந்தான். அவன் உடலை ஒட்டி விழுந்திருந்த கரிய நிழல் எழுந்து அவனருகே நின்றது. “ஹுண்டன்” என்றான் பீமன். “அவர் ஏன் மூத்தவரை வணங்குகிறார்?”


“அவர் விண்ணேறும் சொல்லை பெறுகிறார்” என்றான் முண்டன். “மூத்தவரிடமிருந்தா?” என்றான் பீமன். முண்டன் “அல்ல, அவர் தந்தை ஆயுஸிடமிருந்து” என்றான். பீமன் விழித்துநோக்கியபடி நின்றான். ஹுண்டனும் நகுஷனும் கைகோத்துக்கொண்டனர். காற்றில் புகை கலைவதுபோல வெளியில் கரைந்து மறைந்தனர். “அவர்கள் விண்புகுந்துவிட்டனர்” என்றான் பீமன். “ஆம்” என்று முண்டன் சொன்னான். “அவர் சொன்னதென்ன?” என்றான் பீமன். “அது ஒற்றைச் சொல்… உதடசைவு ஒரு சொல்லையே காட்டியது.” பீமன் “ஒற்றைச் சொல்லா, அனைத்து வினாக்களுக்கும் விடையாகவா?” என்றான். “ஆம், அது அவர்களுக்குரிய விடை” என்றான் முண்டன்.



tigerமுண்டனும் பீமனும் நாகவனத்திலிருந்து வெளியேறி நீரோடை வறண்டு உருவான காட்டுப்பாதையில் நடந்தனர். அதனூடாகவே மான்களும் பன்றிகளும் நடந்துசென்றிருந்தன என்பது காலடித்தடங்களில் தெரிந்தது. “நாம் திரும்பிவிடுவோம்” என்றான் பீமன். “இது மாயமான்வேட்டை என எனக்குத் தெரிகிறது. நுண்மையைத் தேடுபவன் வாழ்வை இழப்பான் என்று எனக்கு எப்போதுமே தோன்றியிருக்கிறது. இப்புவிவாழ்க்கையில் பருண்மைகளே நமக்கு சிக்குபவை. நுண்மைகள் மறுஎல்லையில் தெய்வங்களாலும் ஊழாலும் பற்றப்பட்டிருக்கின்றன. நுண்மைகளில் அளைபவன் தெய்வங்களை நாற்களமாட அறைகூவுபவன்.”


“உண்மை” என்றான் முண்டன். “ஆனால் நுண்மையென ஒன்றை தன் வாழ்க்கையில் அறியப்பெற்றவன் அதை உதறி மீள்வதே இல்லை. நுண்மை தன் அறியமுடியாமையாலேயே அறைகூவலாகிறது. அறியத்தந்த துளியை நோக்கி அறிபவனின் உள்ளத்தை குவிக்கிறது. பாண்டவரே, அறியமுடியாமையை கற்பனையால் நிறைத்துக்கொள்வது மானுட இயல்பு. கற்பனை பெருவெளியென்றே ஆகும் வல்லமைகொண்டது. பருண்மைகள் கற்பனை கலவாதவை. நுண்மையோ கற்பனையால் கணமும் வளர்க்கப்படுவது. அறிக, இப்புவியில் பருண்மைகளில் மட்டுமென வாழும் ஒரு மானுடனும் இல்லை. அறியா நுண்மைகளை நோக்கி தவமிருந்து அழியும்பொருட்டே மண்ணில் வாழ்வது மானுடம்.”


பீமன் பெருமூச்சுவிட்டான். “ஒரு துளி நுண்மை பருண்மையின் பெருமலைகளை ஊதிப்பறக்கவைத்து தான் அமர்ந்துகொள்கிறது. நுண்மையின் ஒளிகொண்ட பருண்மை ஒருபோதுமில்லாத பேரழகு கொள்கிறது. வேதமென்பது என்ன? நுண்மைகளை நோக்கி சொற்களை கொண்டுசெல்லும் தவம்தானே? வேதச்சொல் என்பது நுண்மையின் வெம்மையால் உருகி உருவழிந்த ஒலியன்றி வேறென்ன? பாண்டவரே, கவிதை என்பது பருண்மைகளை ஒன்றுடன் ஒன்று நிகர்வைத்து நடுவே துலாமுள்ளென நுண்மையை உருவகித்தறியும் முயற்சி அல்லவா?”


“அத்தனை கலைகளாலும் மானுடன் அறியமுயல்வதுதான் என்ன? தோன்றல் சுவைத்தல் திளைத்தல் அடைதல் வெல்லல் நோயுறுதல் துயருறுதல் மறைதல் என கைதொட்டு கண்நோக்கி அறியும் பருண்மைகளுக்கு அப்பால் ஏதுள்ளது எஞ்சி? அவை ஏன் போதாமலாகின்றன? ஒளியெழும் காலைக்கு ஒரு இசைக்கீற்று அளிப்பது என்ன? கார்குழலுக்கு ஒரு மலர் மேலுமென சேர்ப்பது எதை?” முண்டன் சொன்னான் “இந்த முள் உங்கள் வெறுமையை தொட்டுவிட்டது, பாண்டவரே, இதையறியாமல் இனி இதிலிருந்து மீட்பில்லை உங்களுக்கு.”


பீமன் புன்னகைத்து “கட்டுவிரியன் கடித்துவிட்டு மெல்ல பின் தொடரும். கடிபட்ட உயிர் ஓடிக்களைத்து சரியுமிடத்திற்கு வந்துசேரும்” என்றான். முண்டன் உரக்க நகைத்தான். “நாம் செய்யவேண்டியதென்ன?” என்றான் பீமன். “காத்திருப்போம்… நம்மை நோக்கி வருவதென்ன என்று பார்ப்போம்.” பீமன் “வருமென்று என்ன உறுதி உள்ளது? நிகழ்வுப்பெருக்கென ஓடும் இப்பெருவெளிக்கு நம் மீது என்ன அக்கறை?” என்றான். முண்டன் “அது நம்மை கைவிடமுடியாது. கைவிட்டால் அதற்கு ஒழுங்கோ இலக்கோ இல்லையென்று பொருள். பாண்டவரே, மெல்லிய நீர்த்துளிகூட தன்னை சிதறடிக்க ஒப்புவதில்லை” என்றான்.


அன்று உச்சிப்பொழுதில் அவர்கள் நாகர்களின் சிற்றூர் ஒன்றை சென்றடைந்தனர். தொலைவிலேயே நாய்கள் குரைக்கும் ஒலி கேட்டது. உயர்ந்த மரம் ஒன்றின் உச்சியில் கட்டப்பட்டிருந்த பரணிலிருந்து முழவோசையும் எழுந்தது. நாய்கள் தொடர நச்சு அம்புகள் இறுகிநின்றிருந்த விற்களுடன் ஆறு நாகவீரர்கள் அவர்களை நோக்கி வந்தனர். பிறர் நின்றுவிட ஒருவன் மட்டும் நச்சு வேலுடன் அவர்களை அணுகிவந்து “எவரென்று தெரிந்துகொள்ள விழைகிறோம்” என்றான். “நாங்கள் வழிப்போக்கர்கள். நாகவனத்தை பார்க்கச் சென்றோம்” என்று முண்டன் சொன்னான். சட்டென்று எம்பி தலைகீழாக சுழன்று அதேபோல நின்று “ஆடலும் பாடலும் அறிந்தவன். என் கலைகளைக் கண்டு நீங்கள் நகைக்கலாம். இவர் எதையும் அறியாதவர். ஆகவே இவரை வெறுமனே நோக்கி சிரிக்கலாம்” என்றான்.


அவன் முகம் மலர்ந்தது. “நகைக்கூத்தரா? வருக!” என்றான். முண்டன் பாய்ந்து அவன் தோள்மேல் ஏறி நின்று “எழுக புரவியே!” என்றான். அவன் திகைப்பதற்குள் குதித்து நிலத்தில் நின்று “ஆணையிடுகையில் புரவிமேல் அமர்வது எங்கள் வழக்கம்” என்றான். அவன் உரக்க நகைத்து “எங்களூர்களுக்கு நகைக்கூத்தரோ சூதரோ வருவதில்லை. நாங்கள் அவர்கள் தேடும் பொருள் அளிக்கும் வளம்கொண்டவர்களல்ல” என்றான். “நான் பொருள் தேடி வரவில்லை” என்றான் முண்டன். “பிறிது ஏது தேடி வந்தீர்கள்?” என்றான் நாகன். “உணவு, உடை” என்றான் முண்டன். “நல்ல பரிசுப்பொருட்கள், அணிகள், தங்கம், அருமணிகள்.” நாகன் “அதைத்தான் நாங்கள் பொருள் என்கிறோம்” என நகைக்க “ஆ, நீங்களும் என் மொழியையே பேசுகிறீர்கள்” என்றான் முண்டன்.


மூங்கில்புதர்களால் வேலியிடப்பட்ட சிற்றூரில் இழுத்துக்கட்டப்பட்ட யானைத்தோல் கூரைகள்கொண்ட சிறுகுடில்கள் வட்டமாக சூழ நடுவே குடித்தலைவனின் மூன்றடுக்குக் கூரைகொண்ட குடில் இருந்தது. அதன் முன் அமைந்த முற்றத்தில் அவர்கள் கொண்டுசென்று நிறுத்தப்பட்டனர். நாகர்குடிகள் கூச்சலிட்டபடி ஓடிவந்து அவர்களை சூழ்ந்துகொண்டன. இடையில் குழந்தைகளை ஏந்திய பெண்கள். அன்னையரின் ஆடைகளைப்பற்றிய குழந்தைகள். புழுதிமூடிய சிற்றுடல்கள், மரவுரிகள், கல்மாலைகள், மரக்குடைவு வளையல்கள். மலர்சூடிய நீள்கூந்தல்கொண்ட கன்னியர். வேட்டைக்கருவிகளும் படைக்கலங்களுமாக தோள்தசை இறுகி, வயிற்றுநரம்புகள் வரிந்து, வில்லெனும் கால்கள் கொண்ட இளையோர்.


பெருங்குடிலுக்குள் இருந்து முதிய நாகர்குடித்தலைவன் தன் நாகபடக் கோலுடன் இடைவரை கூன்விழுந்த உடலுடன், ஆடும்தலையில் நாகக்கொந்தையுடன், பழைய எலும்புகள் சொடுக்கொலி எழுப்ப, மூச்சொலியும் முனகலுமாக உள்ளிருந்து மெல்ல வெளிவந்து அவர்களை பழுத்த விழிகளால் நோக்கினார். “இவன் யார்?” என்று பீமனை நோக்கி விரல்சுட்டி காட்டினார். கணுக்கள் முறிந்து இணைந்தவைபோல உருவழிந்திருந்தது அவ்விரல். “நகைக்கூத்தர். இவன் அக்குள்ளரின் மாணவன். வித்தைகள் காட்டுவார்கள் என்றார்கள்” என்றான் அவர்களை அழைத்துவந்தவன். நாகர்களின் உடல்கள் சிறியவை, முதுமையால் மேலும் சிறுத்து அவர் ஒரு சிறுவனை போலிருந்தார்.


ஆடும் தலையில் நிலைகொண்ட விழிகளுடன் அவனை நோக்கிக்கொண்டிருந்தார். “நான் உன்னை முன்னரே கண்டிருக்கிறேன். உன்னை அல்ல. உன் மூதாதையரில் ஒருவரை. அல்லது…” என்றபின் “பெருந்தோளனே, உன் குடி என்ன? பெயரென்ன?” என்றார். “அஸ்தினபுரியின் குருகுலத்தில் பிறந்தவன். பாண்டுவின் மைந்தான். என் பெயர் பீமன்” என்றான் பீமன். “ஆம், நினைத்தேன்” என்றார் அவர். “என் பெயர் தண்டகன். உன் குடிமூதாதை ஒருவரை நான் முன்பு கண்டதுண்டு.” பீமன் “எப்போது?” என்றான். “நெடுங்காலத்திற்கு முன்பு… நான் நீணாட்களாக வாழ்கிறேன்” என அவர் புன்னகைத்தார். வாயில் பற்களேதும் இருக்கவில்லை. “என் கண்ணெதிரே நாடுகள் உருவாகி அழிந்துள்ளன. தலைமுறைகள் பிறந்து இறந்துகொண்டுள்ளன” என்றார்.


“நீங்கள் கண்ட என் மூதாதையின் பெயரென்ன?” என்றான் பீமன். “அவர் பெயரை நான் மறந்துவிட்டேன். உயரமானவர். மிகமிக உயரம்… மெலிந்த வெண்ணிற உருவம்… நான் அவரை சிபிநாட்டுப் பாலையில் கண்டேன்.” பீமன் “பீஷ்மர், என் பிதாமகர்” என்றான். “ஆம், அவர் பெயர் பீஷ்மர். காமநீக்க நோன்புகொண்டவர் என்றார்கள்.” அவர் அவனை நோக்கி “ஷத்ரியர்களை நாங்கள் எங்கள் குடிகளுக்குள் ஒப்புவதில்லை…” என்றார். “நான் ஷத்ரியனாக இல்லை இப்போது. காடேகி குரங்குகளுடன் வாழ்கிறேன்.” அவர் புன்னகைத்து “ஆம், உன்னிடம் குரங்குமணம் எழுகிறது. ஆகவேதான் உன்னை என் உள்ளம் ஏற்கிறது” என்றார். “இங்கு ஏன் வந்தீர்கள்?”


“நான் ஒரு மலரை தேடிவந்தேன்” என்றான் பீமன். “அதன் பெயர் கல்யாண சௌகந்திகம் என்றார்கள். அதன் நறுமணத்தை நான் உணர்ந்தேன். அதை என் தேவிக்கென கொய்துசெல்ல வந்தேன்.” அவர் அவனை நோக்கி புன்னகைத்து “அதையெல்லாம் பொருட்டென எண்ணும் நிலையில் நீ இன்னமும் இருப்பது மகிழ்வளிக்கிறது” என்றார். பின்னர் உடல்குலுங்க வாய்விட்டு நகைத்து “நன்று, பொருட்டென எண்ணாமல் அதை அறியமுடியாது, அறியாமல் கடக்கவியலாது” என்றார். பீமன் சற்றே சினம்கொண்டாலும் அதைக் கடந்து “நான் ஏன் அதைத் தேடிவந்தேன் என நானே வியந்துகொண்டிருக்கிறேன், மூத்தவரே” என்றான். “அதை அறிவதும் அம்மலரை அறிவதும் நிகர்” என்றார் அவர்.


“நீங்கள் பீஷ்மபிதாமகரை எப்போது பார்த்தீர்கள்?” என்றான் பீமன். “நெடுங்காலம் முன்பு நிகழ்ந்தது அது. அன்று நான் என் குடியை விட்டு நீங்கி உலகை முழுமையாகக் காணும்பொருட்டு அலைந்து கொண்டிருந்தேன். பாஞ்சாலத்திற்கும் சிந்துவுக்கும் கூர்ஜரத்திற்கும் சென்றேன். அங்கிருந்து சிபிநாட்டுப் பாலையில் சென்று அங்குள்ள மக்களுடன் வாழ்ந்தேன். என் குலத்தின் வருவதுரைக்கும் முறைகளும் உளமறியும் நெறிகளும் எங்கும் எனக்கு தேவையான பொருளை ஈட்டியளித்தன. என் வழிச்செலவுக்கென மட்டுமே அவற்றை பயன்படுத்திக்கொண்டிருந்தேன்” என்றார் தண்டகர்.


“என்னிடம் அனந்தம் என்னும் யானம் இருந்தது. அதில் நாகரசத்தை நிரப்பி அதை பார்ப்பவரின் உளமென்றாக்க என்னால் இயலும். விழிப்பு, கனவு, ஆழ்வு, முழுமை என்னும் நான்கு நிலைகளிலும் ஒருவன் அதில் தன்னை நோக்கமுடியும். அதை நோக்கும்பொருட்டு பீஷ்மர் வந்தார். அன்று அவர் இளைஞர்.” முண்டன் “அன்று தங்கள் வயதென்ன?” என்றான். அவர் மீண்டும் உடல்குலுங்க நகைத்து “அன்றும் நான் முதியவனே…” என்றார். பீமன் “அவர் அதில் தன்னை நோக்கினாரா?” என்றான். “ஆம், நோக்கி அதிர்ந்தார். அவர் கண்டது அவர் எண்ணியதை அல்ல.”


முண்டன் “ஆம், எப்போதுமே எண்ணியது எழுவதில்லை” என்றான். பீமன் “அவர் கண்டது எதை, மூத்தவரே?” என்றான். “அவர் எண்ணியது புருவை, கண்டது யயாதியை” என்றார் தண்டகர். “நான் அவருக்கு அவர் குலமூதாதையரின் கதையை அவருக்குள்ளிருந்தே கண்டெடுத்து சொன்னேன். அஞ்சி அமர்ந்திருந்தார். பின்னர் தெளிந்து விலகிச்சென்றார்.” பீமன் நீள்மூச்சுடன் “ஆம், புரிகிறது” என்றான். முண்டன் “மாறாமலிருக்கும்படி செலுத்தப்பட்ட ஊழ் கொண்டவர்களைப்போல அளிக்குரியோர் எவருமில்லை” என்றான்.


இளந்தலைவன் “மூத்தவரே, இவர்களை நாம் வரவேற்கலாமா?” என்றான். “ஆம், இவர்களுக்கு ஆவன செய். இவர்கள் காட்டும் கலைகளை கண்டு நாமும் மகிழ்வோம்” என்றார் தண்டகர். அவர் கைகளை முட்டில் ஊன்றி முனகியபடி எழப்போனபோது பீமன் “மூத்தவரே, நான் உங்கள் கால்களை தலைசூடலாமா?” என்றான். அவர் புன்னகைத்து “அது வழக்கமில்லை. நீ ஷத்ரியன்” என்றபின் “இங்குள நாகர் அதிர்ச்சியுறக்கூடும்” என்றார். “என் மூதாதை நீங்கள், உங்கள் குருதி நகுஷனிலூடாக என் குலத்திலும் உள்ளது” என்றான் பீமன். அவர் “ஆம்” என்று சொல்ல பீமன் சென்று அவர் காலடிகளை தொடப்போனான். அவனை அழைத்துவந்த நாகவீரன் “அது முறையல்ல… உங்களுக்கு அவர் வாழ்த்துரைத்தால் நீங்கள் எங்கள் குடியென்று ஆகிறீர்கள்” என்றான்.


பீமன் “ஆம், நாகனாகவும் நான் இருக்கிறேன்” என்றான். “எங்கள் குருதி தூயது, அதுவே எங்கள் தகுதி” என்றான் அவன். பீமன் “வீரரே, குருதிக்கலப்பில்லாத குடி என பாரதவர்ஷத்தில் ஏதுமில்லை. என் இளையோன் நாகர்குடிப் பெண்ணை மணந்தவன். நான் அரக்கர்குடிப் பெண்ணை மணந்தேன். எங்கள் குடியிலும் அரக்கரும் நாகரும் குருதி செலுத்தியுள்ளனர்” என்றான். “அப்படியென்றால் குடி என்பது பொய்யா? நீங்கள் தலைக்கொள்ளும் நால்வர்ணமும் பிழையானதா?” என்றான் நாகன்.


“எவன் பிறப்பறுக்கும் பெருஞ்செயலை மட்டுமே செய்கிறானோ அவன் அந்தணன். எது தனித்துவமேதுமின்றி, தான்மட்டுமேயென்றாகி, இயல்புகளனைத்தும் சூடி, ஏதுமில்லையென்றாகி இருக்கிறதோ அதில் தன் இறுதிப்பற்றை கொண்டிருப்பவன் அவன். அதைவிட்டு உலகியலில் உழல்பவன் அந்தணருக்குரிய கருவில் பிறந்தாலும் அந்தணன் அல்ல” என்றான் பீமன். “பிறர்நலம் காக்கும்பொருட்டு வாழ்பவன் ஷத்ரியன். கொடையினூடாக முழுமைகொள்பவன் வைசியன். உருவாக்கி உணவூட்டி வாழ்ந்து நிறைவடைபவன் சூத்திரன். செயல்களால் மட்டுமே வர்ணங்கள் உருவாகின்றன. பிறப்பினால் அல்ல.”


பீமன் தொடர்ந்தான் “நினைப்பறியா தொல்காலத்திலேயே இங்கு குடிகளும் குலங்களும் கலக்கத் தொடங்கிவிட்டன. எனவே குடித்தூய்மை குலத்தூய்மை என்பவை பொய்நம்பிக்கைகளன்றி வேறல்ல. அனைத்து மானுடருக்கும் உடல்சேர்க்கையும் பிறப்பும் இறப்பும் நிகரே. நாங்கள் அந்தணராயினும் அல்லவென்றாயினும் வேள்விசெய்கிறோம் என்னும் வேதச்சொல்லே குலமும்குடியும்வர்ணமும் பிறப்பினாலன்று என்பதற்கான முதற்சொல் ஆகும். பிறப்பில் மானுடர் விலங்குகளே. நெறிகளை ஏற்றுக்கொள்ளும் உபநயனத்தாலேயே குலமும் குடியும் அமைகின்றன.”


நாகவீரன் குழப்பத்துடன் தண்டகரை நோக்கிவிட்டு தலைவணங்கினான். இன்னொரு நாகவீரன் வந்து வணங்கி “குடிலுக்கு வந்து இளைப்பாறுக, விருந்தினரே!” என்றான். அவர்கள் அவனைத் தொடர்ந்து சென்றபோது இருமருங்கும் கூடிநின்ற நாகர்கள் அவர்களை நோக்கி சிரித்தனர். கைநீட்டி பேசிக்கொண்டனர். முண்டன் “நீர் சொன்னவற்றை எங்கு கற்றீர்?” என்றான். “அறியேன், நான் ஏன் அவற்றை சொன்னேன் என்றும் தெரியவில்லை” என்றான் பீமன். பின்னர் நின்று “நான் அஞ்சுகிறேன், முண்டரே… நான் எப்படி அச்சொற்களை சொன்னேன்? அவை நன்கு யாக்கப்பட்டவை. நான் எங்கே கற்றேன் அவற்றை?” என்றான். முண்டன் “காலப்பக்கத்தை புரட்டிப்பார்க்கலாம். ஆனால் அதற்கு நிறையவே உணவு தேவைப்படும்” என்றான். “விளையாட வேண்டாம்… என் சித்தம் பிறழ்ந்துவிட்டதா என்றே ஐயம்கொள்கிறேன்” என்று பீமன் சொன்னான்.


அவர்களை நாகர்கள் ஒரு தோல்குடிலுக்குள் கொண்டுசென்றனர். அவர்கள் அருகே ஓடிய ஓடையில் நீராடி வந்ததும் புதிய மரவுரியாடைகள் அளிக்கப்பட்டன. அடுமனைக்கு அருகிலேயே சிறிய குடிலொன்றுக்குள் அமர்ந்து பீமன் உணவுண்ணலானான். அவன் உண்பதைக் காண நாகர்குடியே சூழ்ந்து நின்றது. சிறுவர்கள் அறியாது மெல்ல அவனை அணுகி அவனருகே சூழ்ந்து அமர்ந்துகொண்டனர். பெண்கள் உளக்கிளர்ச்சியால் ஒருவரை ஒருவர் தழுவிநின்றனர். இளையோர் ஒருவரோடொருவர் விழிதொட்டுக்கொண்டனர்.


முண்டன் உணவுண்டு எழுந்து நின்று “என் உள் அனல் நிறைந்துவிட்டது… இனி காடு பற்றி எரியும்” என்றான். பீமன் அவனை திரும்பிப்பார்க்காமல் உண்டுகொண்டிருந்தான். “நான் காலத்தை புரட்டி நோக்குபவன்…” என அவன் அப்பெண்களை நோக்கி சொல்ல அவர்கள் வாய் பொத்தி சிரித்தபடி பின்னகர்ந்தனர். அவன் துள்ளி பல சுருள்களாக சுழன்று சென்று நின்று “ஆ” என்றான். பீமன் “என்ன?” என்றான். “இது எந்த இடம்? நாகநாட்டில் பீதபுரம் என்னும் நகரம். முன்பு இது ஒரு சிற்றூராக இருந்தது… இதோ, ஒரு சிற்றாலயம். இங்கு பாண்டவனாகிய பீமன் வந்திருக்கிறான். அவன் உணவருந்திய இடத்தில் நாட்டப்பட்ட சிறுகல் தெய்வமாகியிருக்கிறது.”


பீமன் ஆர்வத்துடன் எழுந்து அருகே வந்தான். முண்டன் மீண்டும் பலமுறை சுருள்பாய்ச்சல் கொண்டு அருகே வந்து நின்று “பாண்டவரே, நீங்களா?” என்றான். “ஆம், நெடுந்தொலைவு சென்றீர்களோ?” என்றான். “நாம் எங்கிருக்கிறோம்?” என்றான் முண்டன். பீமன் ஒன்றும் சொல்லவில்லை. அவன் சூழ நோக்கிவிட்டு “இங்குதானா?” என்றான். பீமன் “சொல்லும், நான் சொன்னது எப்படி எனக்குத் தெரிந்தது?” என்றான். “என்ன சொன்னீர்?” என்றான் முண்டன். “நாகர்களிடம் நான் சொன்னது…”


“அவை சர்ப்பநீதி என்னும் நூலில் உள்ள சொற்கள்” என்றான் முண்டன். “நான் அந்நூலை படித்ததில்லை” என்றான் பீமன். “வாய்ப்பில்லை, அந்நூல் இன்னும் எழுதப்படவில்லை.” பீமன் “என்ன சொல்கிறீர்?” என்றான். “நாகத்திடம் நீங்கள் பிடிபட இன்னும் நாளிருக்கிறது. அந்நிகழ்வை சூதர் பாடியலைய மேலும் நாட்கள் தேவை. அதிலிருந்து அஸ்தினபுரியின் கவிஞரான அக்னிபாலர் தன் சிறிய நெறிநூலை யாக்க மேலும் நாள் கடக்கும். அது உங்கள் குருதிவழிவந்த மன்னராகிய ஜனமேஜயனின் காலத்தில்… அன்று இந்நூல் மிகவிரும்பி கற்கப்பட்டது… ஏனென்றால் நாகர்குலத்து முனிவரான ஆஸ்திகன் வந்து நாகவேதத்தை மீண்டும் நிறுவிவிட்டுச் சென்றிருக்கிறார்.”


பீமன் சில கணங்கள் அவனையே கூர்ந்து நோக்கிக்கொண்டு நின்றபின் தலையை அசைத்தான். “நாகவடிவு கொண்டிருந்த நகுஷனுக்கு மூத்த பாண்டவராகிய யுதிஷ்டிரர் உரைத்ததாக இச்சொற்கள் வருகின்றன” என்றான் முண்டன். பீமன் சில கணங்கள் நிலைவிழிகளுடன் நோக்கியபின் வெடித்துச் சிரித்தான்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–45
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–12
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–9
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–7
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–6
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–5
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–43
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–29
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–8
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 58
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 56
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 52
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 51
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 42
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 35
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 17, 2017 11:30

March 16, 2017

வரம்பெற்றாள்

ஞாயிறன்று காலை மூன்றுமணிக்கே எழுந்துவிட்டேன். மூன்றுமணிநேரமே தூங்கினாலும் மனம் துல்லியமாக விழித்திருந்தது. ஆறு மணிவரை எழுதிக்கொண்டிருந்தேன். கீழே சென்று டோராவுக்குச் சில பணிவிடைகள் செய்து குலாவிவிட்டு ஒரு காலைநடை கிளம்பினேன். இருபதடி தூரத்துக்கு அப்பால் தெரியாதபடி நல்ல இருட்டு. சிற்சில நீர்த்துளிகள் காற்றிலேறி வந்து விழுந்தன. மரங்கள் சலசலக்கும் ஒலி. காலையில் எழும் பறவைக்குரல்கள் குறைவாக இருந்தன.



பார்வதிபுரம் கால்வாயில் நீர் இருட்டாக ஓடிக்கொண்டிருந்தது. ஏழெட்டுப்பேர் குளித்துக்கொண்டிருந்தனர். ஒரு பெண்மணி துணிதுவைத்தாள். கால்வாயை ஒட்டியே புதிதாக வந்துள்ள தகரக்கொட்டகை டீக்கடையில் நுழைந்து ஒரு டீ சொன்னேன். டீக்கடைகளுக்கே உரிய மணம். சாம்பார், தோசை, ரசவடை வாசனைக் கலவையை சுமந்து வந்த விறகுப் புகை மணம். ஒரு பெரியவர் ஆவலாக தோசையை தின்றபடி ‘மளை உண்டும்’ என்றார். ‘இண்ணைக்கா?’ என்றேன். ‘ஓ…இந்நா இப்பம்…அதாக்கும் நான் வாளைக்கு வெள்ளம் கோராம வந்துபோட்டேன்’ நேராகப் போய்ப் படுப்பாராக இருக்கும். சாப்பிட்டதுமே இழுக்க ஒரு கட்டு பீடி காத்திருந்தது


நான் டீ குடித்து எழுந்து வரவும் தகரக்கூரைமேல் படபடவென அருவிபோல மழை கொட்ட ஆரம்பித்தது. இரைந்தபடி தகரவிளிம்பில் இருந்து நீர் பொழிந்தது. கால்வாய்நீர் புல்லரித்துப் பின் கொதிக்க ஆரம்பித்தது. மழையைப் பார்த்துக்கொண்டு கொஞ்சநேரம் நின்றிருந்தேன். இருபது நிமிடத்தில் கார்வானம் உருகி வழிந்து காலியாகியது. தெளிந்த நீல வெறுமையில் இருந்து மெல்லிய நினைவுபோல சில துளிகள். சாலையில் ஏறி நடக்க ஆரம்பித்தேன். நனைந்த வாழையிலைகள் பளபளவென அசைந்தன. சேம்பிலைகள் குட்டியானைக்காதுகளாகத் திரும்பின. தென்னைஓலை நுனிகளில் முத்துக்கள் தயங்கின. இரு காகங்கள் பாலத்துமேல் அமர்ந்து சிறகை விரித்துக் குடைந்தன


 



ரயில்பாதைக்கு அப்பால் தேரிக்குளத்தில் பொன்னிறநீர். அதில் நாலைந்து பயல்கள் குதித்துக் கூச்சலிட்டு நீந்தினார்கள். சைக்கிளில் வந்திருந்த ஒருவர் தலைதுவட்டிக்கொண்டிருந்தார். காலையில் குளித்துவிட்டு வயல்வேலைக்குச் செல்லும் மக்கள் அனேகமாக இங்கே மட்டும்தான் இருப்பார்கள். தார்ச்சாலை நனைந்து பளபளத்தது. வெள்ளிநகை அணிந்த கரிய அழகியைப்போல. கால்வாய்ப்பாலம் கடந்து மறுபக்கம் வாத்தியார்விளை சாலையில் நடந்தேன். ஏஇ வீட்டுமுன் சாலையில் முருங்கைப்பூக்கள் உதிர்ந்துகிடந்தன. அப்பால் ஒரு வாசலில் செம்மஞ்சள்நிறமான சீமைப் பூக்கள் ஈரத்துடன் குலுங்கின.


நேர் எதிரில் வேளிமலை சாம்பல்நீலத்தின் அடுக்குகளாக நிறைந்து பரந்து நின்றது. சிகரங்களில் பக்கவாட்டில் ஈரம் சூரிய ஒளிபட்டு இரும்புப்பரப்பு போல மினுங்கியது. பச்சைச்சரிவுகளில் மேகங்கள் கைக்குழந்தைபோலக் கிடந்தன. மலையின் மடிப்புகளில் வெள்ளிச்சரிகைபோல சிற்றருவிகள். நான் வயல்வெளியில் இறங்கினேன். கால்புதையும் சதுப்பில் நண்டுவளைகளில் இருந்து சேற்றுருண்டைகள் வெளியே துப்பப்படுவதைக் கண்டேன். உள்ளே அவை ஜோடியாக உழைத்துக்கொண்டிருக்கும். தவளைகள் க்ராக் க்ராக் என்று ஓலமிட்டன. ஒரு தண்ணீர்ப்பாம்பு அவசரமாக சாட்டையாகச் சொடுக்கப்பட்டு சென்றது. அதற்கான தவளை அப்போதும் சத்தம்போட்டுக்கொண்டிருந்தது.



வயல்களில் ஒருமாத நாற்றுக்கள் பச்சை இருட்ட ஆரம்பித்திருந்தன. காற்று அலையலையாகச் செல்லும் வழி தெரிந்தது. வயல்வெளி வேளிமலையைத் தொடும் எல்லையில் ஒளி கொஞ்சம் அதிகமாக இருப்பதுபோலிருந்தது. சட்டென்று அந்த வானவில்லைப்பார்த்தேன். நீருக்குள் விழுந்த வண்ணம்போலக் கரைந்துகொண்டே இருந்தது. பலகணங்களுக்கு நினைப்பே இல்லை. இப்போதுதான் ஒரு வானவில் தோன்றுவதை எழுதிவிட்டு வெளிவந்திருக்கிறேன். ஆச்சரியம்தான்!


கிருஷ்ணனைத் தொலைபேசியில் கூப்பிட்டேன். தூக்கம் கலைந்து எழுந்தார். நான் காலைநடையில் வானவில்லைக் கண்டதைப்பற்றிச் சொன்னேன். அவர் கனவிலேயே இங்கே வந்துவிடக்கூடியவர். வானில் ஒளி மங்கிக்கொண்டே வந்தது. மேகத்திரைச்சீலைகளைக் காற்று இழுத்து விட்டது. இருட்டில் வயல்வெளிகளில் நீலம் பரவியது. நாற்றுப்புதர்களுக்குள் கருமை. தவளைக்குரல் ஓங்கியது. பின் பல்லாயிரம் கண்ணாடிச்சவுக்குகளாக மழை மண்ணை வீற ஆரம்பித்தது. செல்பேசியை ஒரு சேம்பிலையில் பொதிந்து பைக்குள் வைத்துக்கொண்டேன். கைவீசி நடக்க ஆரம்பித்தேன். மழை குளிரக்குளிர அறைந்தது. காதுகளில் ஓலமிட்டது.



கணியாகுளம் சாலையில் ஏறினேன். உடம்பெல்லாம் சேறுடன் இருவர் மழையில் பீடி பிடித்தனர்.ஆம் சேம்பிலையைப் புனல் போல சுருட்டி எரியும் பீடியை உள்ளே வைத்து இழுத்தால் பிரச்சினை இல்லை. ஈரம் வழியும் உடலுடன் கடந்துசென்றனர். மழையில் சொட்டச்சொட்ட நனைவதை எவரும் வேடிக்கை பார்க்காத ஒரே ஊரும் இதுதான். தென்னைஓலைகள் சுழன்று ஆழ சேம்பிலைகள் ஒரே வீச்சில் கவிழ்ந்து நிறம்மாற மழை வீசியடித்தது. என் சட்டைக்குள் நீர் வழிந்தது. புருவம் சொட்டியது


கணியாகுளம் வந்தபோது மழை நின்றுவிட்டிருந்தது. வயல்களில் மழைபெய்த சாயலே இல்லாமல் வேலை நடந்துகொண்டிருந்தது. ‘மழையா எப்ப?’ என்று நாலைந்து எருமைகள் மேய்ந்துகொண்டிருந்தன. ஒரு எருமை என்னை சந்தேகத்துடன் பார்த்தது. அதன் மேல் வந்தமர்ந்த காகம் ‘சொகமா இருக்கியளா? பாத்து நாளாச்சே’ என்று எருமையிடம் விசாரித்தது. எருமையின் கரிய பள்ளையில் அப்போதும் ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது



கணியாகுளம் ஆலமரத்தடி சந்திப்புக்கு வந்தேன். கலுங்கில் குமரேசன்பாட்டா மழையில் நனைந்து ஈரமாக அமர்ந்திருந்தார். மழையில் நனைந்த ஒரு பெண் ஈரமான குழந்தையுடன் சென்றாள். மூடிய டீக்கடைச் சுவரில் கரிய நிறத்தில் ஒரு சுவரொட்டி. ‘கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்’ யார் என்று பார்த்தேன். கரிய கறையாக உருவம். ஆனால் கிழவியைப் பார்த்த நினைவிருந்தது. ‘வரம்பெற்றாள்’ . நல்ல பெயர்தான். வயது 103. அஞ்சலி செலுத்துவது மகள்கள் மகன்கள் பேரர்கள் பேத்திகள் கொள்ளுப்பேத்திகள் மற்றும் பங்குத்தந்தை.


‘பாட்டா ஆராக்கும் கிளவி?’ என்று கேட்டேன். ‘வரப்பெத்தாளே…இங்கிணதானே கெடப்பா…காலம்பற ஆறுமணிக்கு மலைக்குக் கொழையொடிக்கப்போவாளே’ . ஆமாம் பார்த்திருக்கிறேன். காலை மாலை எந்நேரமும் ஆட்டுக்கான தழையும் வளைந்த துரட்டியுமாக அப்பகுதியில் எங்கும் காணக்கிடைப்பாள். அவளுக்கு நூற்றிமூன்று வயதா? ‘இந்நேற்றுகூட இங்கிண வந்திருந்தா… குமரேசண்ணாண்ணு அருமையா விளிப்பாளே…பாவம் நல்ல குட்டியாக்கும்…’ இது கிழவிக்குக் கொஞ்சம் மூத்தது என்று புரிந்துகொண்டேன். ‘என்னத்துக்கு இங்க இருக்கேரு?’ ‘சாய குடிச்சணும்…பய கட திறக்கல்லலா?’



கணியாகுளத்தின் விதிகளில் ஒன்று பொறுமை. பேருந்து,டீ எதுவானாலும் பொறுத்து பூமியாள்பவருக்கே கிடைக்கும். எங்கும் எந்நேரமும் எவரேனும் காத்திருப்பார்கள். மழையில் வெயிலில். இங்கே காலம் மிக மெதுவாகப்போகிறது. இந்தக் கிழத்துக்கு மூத்தகிழம் ஒன்று உண்டு. எண்பத்தைந்து வயதான எம்.எஸ் சாரின் சித்தப்பா அவர். நூற்றைந்து வயதுக்குள் எட்டுமுறை ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நாகர்கோயிலுக்கும் இரண்டுமுறை பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சுசீந்திரத்துக்கும் போனதை விட்டால் ஊரைவிட்டே வெளியே போனதில்லை. ஆனால் அவருக்கு வேளிமலையில் தெரியாத இடம் இல்லை.




அம்புரோஸ் நாடார் கடைப்பலகையைத் தூக்கி வைத்தார். ‘வாக்கிங்கா?’ என்றார். மழை மறுபடியும் சீறியடித்தது. சேம்பிலைக்குள் செல்பேசி அதிர்ந்தது. பாட்டா மழையில் சொட்டியபடி டீ குடிக்கச்சென்றார். நான் மழை நின்று அசைந்த திரையை ஊடுருவி நடந்தேன். என்ன அருமையான பெயர். வரம்பெற்றாள். இந்த மண்ணில் இந்த மழையில் நூறுவருடம் நலமாக வாழ்வதை விடப் பெரிய வரம் ஏது?


[படங்கள் சைதன்யா சிலவருடங்களுக்கு முன்பு எடுத்தவை]


 


 


மறுபிரசுரம் முதற்பிரசுரம் Aug 6, 2012

தொடர்புடைய பதிவுகள்

மழை,மனிதர்கள்- கடலூர் சீனு
மழை கடிதங்கள்- 3
நிவாரணப்பணிகளுக்குப் பாதுகாப்பு -கடிதம்
மழை கடிதங்கள்- 2
மழை- கடிதங்கள்
நாடகங்கள்
பாரதி விவாதம்-7 – கநாசு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 16, 2017 11:35

தேவதேவன் -தக்காளி

devadevan


வணக்கம்.


நமது வீட்டில் தானாக முளைத்து எழுந்த செடியில் இன்று பறித்த தக்காளி அம்மா கையில் இருக்கிறது. அம்மா ஆஸ்பத்திரி போய் வந்தாள் இன்று. பார்க்கணும் என்று தங்கையிடம் படமெடுத்து அனுப்பக் கேட்டேன். அவள் இந்த படத்தை அனுப்பி “அம்மா கைல என்னன்னு சொல்லு பாப்போம்” என்றாள். நான் “நம்மூட்டு தக்காளி” என்றேன். அவள், “தேவதேவன் தக்காளி” என்று சொன்னாள். ‘கவிதைவெளி’ ஞாபகம் வந்ததுவிட்டது. எல்லாரிடமும் அதைப் பகிர்ந்துகொண்டேன். ஜெ. ‘எல்லாம் எவ்வளவு அருமை’ இல்லையா? அம்மாவின் அந்த படத்தை பெரிதாக சுவர் நிறைக்க மாட்ட வேண்டும். எனக்கு நிறைய தேவதேவன் கவிதைகள் ஞாபகம் வருகின்றன. இந்த இரவு முழுக்க அவ்வளவு தான். நேற்று முன்தினம் தேவதேவனை இரண்டாவது முறையாக சந்தித்தேன். நூறு சொற்கள் பேசியிருப்போம் இருவரும். அதிகம் லௌகீகம். உதிர்சருகின் முழுமை வாசித்துக்காட்டினேன். லால் பார்க்கில் அமர்ந்திருந்தோம். “நிறைய ஆர்ட்டிஸ்டுகள் இங்கே வருவார்கள். அவங்களுக்கு ஏற்ற இடம் இதுதான். நீயும் இங்கே வந்து படிக்கலாம். நானும் அப்படித்தானே. நான் எழுதுறது எல்லாம் இப்படி உட்கார்ந்து பார்த்துட்டு இருக்கிறது தானே” என்றார். நேற்று தங்கை சொன்னாள். ‘காவியம்’ கவிதை.


 


நன்றி.


சீனிவாச கோபாலன்



 


காவியம்


எட்டுத் திக்குகளும் மதர்த்தெழுந்து


கைகட்டி நிற்க


எந்த ஓர் அற்புத விளக்கை


நான் தீண்டிவிட்டேன்?


 


கைகட்டி நிற்கும் இப்பூதத்தை ஏவிக்


காவியமொன்று பெற்றுக் கொள்வதெளிது


ஆனால் திக்குகளதிரத் தாண்டவமாடும் மூர்த்தீ


நான் எதற்காகக் காத்திருக்கிறேன்

 




amma


அன்புள்ள சீனிவாச கோபாலன்


காய்கறிகளில் நான் முயல் என டி பி ராஜீவனின் ஒரு அழகிய கவிதை உண்டு. அது நினைவுக்கு வந்தது


ஜெ


06lr_rajeevan_jpg_380595e

ராஜீவன்


 


காய்கறிகளில் முயல்


தக்காளி கேட்டது


இன்றைக்கு என்ன குழம்பு?


சாம்பாரா அவியலா ஓலனா?


ஆடு கோழி


அயிலை சாளை


ஆகியவற்றுடன் இணைந்து


நாங்கள் இன்று


நெடுக்காகப் பிளக்கவேண்டுமா


துண்டுதுண்டாகவேண்டுமா


கத்தி


பலகையிடம்


ரகசியப்புன்னகையுடன் பேசுவதை


கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்


மேஜைமேல்

பாத்திரங்கள் அவசரப்படுவதையும்


வாணலியில்

எண்ணை துள்ளிக்குதிப்பதையும்


பார்த்துக்கொண்டிருக்கிறோம்

எங்களுக்குத்தெரியும்

இந்தச் சின்ன வெங்காயத்தை


சமையலறையில்

எவரும் சும்மா வெட்டிக்குவிப்பதில்லை


சிரிக்கும் பற்கள்தான்


கடித்துக் கிழித்து மெல்பவை


கருணைக்கிழங்கு அரிக்கும்


பாகற்காய் கசக்கும்


மிளகாய் எரியும்


பலாவுக்கு முள் உண்டு


வாழைக்காயில் கறை.


நாங்கள்


எப்போதும்


அக்கணம் பிறந்தவர்களைப்போல இருப்போம்


காய்கறிகளில்


முயல்!


neruda

நெருதா


 


பிறிதொரு கவிதை. பாப்லோ நெரூதா.   பதாகை இணைய இத்ழ்


தக்காளி போற்றுதும்

பாப்லோ நெரூதா


தமிழில்: செந்தில்நாதன்


 


 


 





தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 16, 2017 11:32

ஐரோம் ஷர்மிளா -கடிதங்கள்

Sharmila1


அன்புள்ள ஜெ


 


 


என் தனிப்பட்ட நிலைபாடுகளை உங்கள் வாதங்களால் அழித்து உங்கள் கருத்துகளை என்னுள் நிறுவுகிறீர்கள். இதனால் புதிதாக தெரிந்துகொண்டேன் என்ற சிறிய மகிழ்ச்சி ஒரு புறமென்றாலும் என் முந்தைய கருத்து குறித்து நான் அறிந்தது குறைவோ, அதனால்தான் எளிதில் உங்கள் வாதங்களால் தோற்கடிக்கிறீர்களோ என்ற எண்ணமும் வருத்துகிறது. மேலும் அறிந்துகொள்ளவும் தூண்டுகிறது. நன்றி.


 


எப்போதும் உங்கள் எதிர் தரப்பாகவே இருக்க விரும்புகிறேன். தினம் தினம் என் கருத்துகள் சாவதைப் பார்க்கும் ஒரு துயர சோகத்திற்கு அடிமையாகிவிட்டேனோ என்றும் தோன்றுகிறது.


 


 


ஐரோம் ஷர்மிளாவை ஒரு எளிய ஒரு பெண்ணாகவே பார்த்தேன். ராணுவ அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட ஒரு எளிய பெண் அதன் பின் உள்ள அரசியல்களை நுணுக்கி ஆய்ந்திருக்க முடிந்திராது. தான் அறிந்த வழியில் அதை எதிர்த்து போராடினார். அதிலும் வன்முறையை நம்பாமல் தன்னை வருத்தி போராடும் அறப்போர் முறையில். தன் போராட்டத்தில் இந்தியா இதற்கு முன் பார்த்திராத அளவுக்கு உறுதியுடனுமிருந்தார். அவரை மையப்படுத்தி ஒரு பெரும் அரசியலும் பிற நாட்டு சூழ்ச்சிகளும் இனக்குழு பிரிவினைவாதங்களும் நீங்கள் சொல்வது  போல வளர்ந்திருக்கலாம். ஆனால் அவருடைய போராட்டத்தின் நோக்கம் தூயதாகவே கருதத்தக்கது இல்லையா?


 


 


அவர் போராட்டம் உண்மையில் அர்த்தமற்றதாக இருப்பினும் அறவழிப்போர் குறித்து அவர் கட்டமைத்த லட்சியவாத பிம்பம் மிக முக்கியமானது இல்லையா? கோக் பெப்சி எதிர்ப்பு போராட்டம் முதல் ஜல்லிகட்டு போராட்டம் வரை அர்பணிப்புப்பான போராட்டத்திற்கான அடையாளமாக ஐரோம் ஷர்மிளா முன்னிறுத்தப்பட்டதைப் பல இடங்களில் பார்த்தேன். தன்னலமற்ற சமூக ஈடுபாடு குறித்து மக்களின் கருத்தாங்களில் ஷர்மிளாவின் பிம்பத்தின் பங்களிப்பு புறக்கணிக்கதக்கது அல்லவே.


 


 


ஷர்மிளாவின் போராட்டம் குறித்தோ, மணிப்பூர் அரசியல் குறித்தோ அறியாத சில மாணவர்கள் ஷர்மிளாவை சிலாகிப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் வரையில் ஷர்மிளா சமூக நோக்கத்திற்காக தன்னை பல ஆண்டுகளாய் வருத்திக் கொள்ளும் தியாகமும் மனதிடமும் கொண்ட இரும்புப் பெண். அவரை போல தாமும் சமூகத்திற்காக வாழ வேண்டும் என்பதே.


 


ஷர்மிளாவின் படுதோல்வி குறித்து பேசுகையில் பல மாணவர்கள் சமூக போராட்டம் குறித்து நம்பிக்கை இழந்து விட்டதையும் கவனிக்கிறேன். இந்த மக்கள் நன்றி கெட்டவர்கள். இவர்களுக்காக இறங்குவது முட்டாள்தனம் எனும் கருத்தாக்கங்களையும். இது போன்ற எண்ணங்கள் தம் சமூகத்தின் மீதான இளைஞர்களின் நம்பிக்கையை அழிக்காதா?


 


 


பிரகாஷ் கோ


 


 


அன்புள்ள பிரகாஷ்,


 


கசப்பானதாக இருந்தாலும், கனவுகளைக் கலைப்பதாக இருந்தாலும் உண்மையை எழுதவேண்டியதன் அவசியம் இதுதான். பொய்யான சித்திரங்களை அளிக்கையில் காலப்போக்கில் மிக எளிதாக அவை உண்மைநிறம் காட்டிவிடுகின்றன. அப்பொய்கள் கலையும்போது இலட்சியவாதமே பொருளிழந்துவிட்டது என்னும் எண்ணம் உருவாகிவிடுகிறது


 


இலட்சியவாதம் என்பது உயர்ந்த இலட்சியத்துக்காக போராடுவதே ஒழிய எளிய அரசியல்கோரிக்கையை முன்வைத்து களமாடுவது அல்ல. வெற்றியானாலும் தோல்வியானாலும் இலட்சியத்திற்காகப் போராடுவதென்பது தன்னளவிலேயே நிறைவளிப்பது. வெற்றிபெறாவிட்டாலும்கூட அந்த இலட்சியங்களை நிலைநிறுத்துவது


 


உதாரணமாக பொட்டி ஸ்ரீராமுலு மொழிவழி மாநிலப் பிரிவினைக்காக உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். அது இலட்சியவாதப் போராட்டமா என்ன? இல்லை. அது ஓர் அரசியல்போராட்டம். தன் தன் அரசியலுக்காக அவர் இறந்தார். அவ்விறப்பு தியாகமே. அது ஒரு போரில் வீரன் இறப்பதற்குச் சமானமானது. அதை ஆதரிப்பவர்களுக்கு முக்கியமானது.  அதை தெலுங்கர் மதிப்பார்கள், நாம் கொண்டாடுகிறோமா?


 


எத்தனையோ புத்தபிட்சுக்கள் சாதாரணமான இனவாதக் கோரிக்கைக்காக தீக்குளித்தும் உண்ணாவிரதமிருந்தும் இறந்திருக்கிறார்கள் இலங்கையில். அது இலட்சியவாதச்செயலா என்ன? நாம் மறுதரப்பு, ஆகவே நமக்கு அது போர்மரணம், நம்மை அழிப்பதற்கானது. ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம் அதைப்போல மிகக்குறுகிய அரசியல்நோக்கம் கொண்ட வன்முறைப்போராட்டத்தின் ஓர் அகிம்சை முகம் அவ்வளவுதான்.


 


 


மாறாக, இலட்சியவாதம் அனைத்து மானுடருக்குமானது. அடிப்படையில் உயர்ந்த நோக்கங்களைக் கொண்டது.நெல்சன் மண்டேலா தன் நாட்டுவிடுதலைக்காகவே நாற்பதாண்டுக்காலம் சிறையிருந்தார். ஆனால் அது பிரிட்டிஷாருக்கு எதிரான காழ்ப்பாக வெளிப்படவில்லை. அவர்களையும் உள்ளடக்கிய ஒரு நவீனதேசியத்துக்காக அது நிகழ்ந்தது. அந்த உயர்ந்த இலட்சியத்தால்தான் அது மாபெரும் இலட்சியவாதமாகியது. உலகமெங்கும் உள்ள மானுடவிடுதலைவிரும்பிகள் அனைவராலும் கொண்டாடப்பட்டது


 


 


மேலும், உயர்ந்த இலட்சியவாதமே ஆனாலும் முதலில் அகிம்சைப்போராட்டம் என்பது மக்களுடனான உரையாடல்தான் என்பதை கருத்தில்கொண்டாகவேண்டும். மக்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் தொடர்ந்து உணர்ந்துகொண்டு அதை தன் செயல்பாடுகள்மூலம் வழிநடத்தவேண்டும். உண்ணாவிரதமிருப்பதே ஒரு பெரிய இலட்சியத்தை மக்களிடையே கொண்டுசென்று சேர்ப்பதற்காகத்தான். மூர்க்கமான பிடிவாதத்துடன் மக்களை முற்றிலும் உதாசீனம் செய்து அவர்களின் உணர்வுகள் என்னவென்றே தெரியாமல் செய்யும் உண்ணாவிரதம் எவ்வகையிலும் அகிம்சைப் போராட்டம் அல்ல. அது உயர்ந்த இலட்சியம்கொண்டிருந்தாலும்கூட வெறும் பிடிவாதமே ஆகும்


 


 


ஜெ


 


 


 


 


 


பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,


 


வணக்கம்.


 


மேற்கண்ட தலைப்பையொட்டி ‘DNA (DAILY NEWS & ANALYSIS)’  ஊடகத்தில் வந்துள்ள பொருள் பொதிந்த அலசல் கட்டுரையை தங்கள் பார்வைக்கு கொண்டுவருகிறேன்,காரணம் அப்போது மோதியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரித்து எழுதியபோது நீங்கள் பொதுவெளியில் வாங்கின ஏச்சுக்களும்,பேச்சுகளும் மேலும் இப்போது ஐரோம் ஷர்மிளாவின் படுதோல்விக்கான உண்மையான காரணங்களை சுட்டிக்காட்டியபோது வருகிற வசைகளும்,கிண்டல்களும்.


 


குறிப்பாக இக்கட்டுரையில் ஐரோம் ஷர்மிளாவின் படு தோல்வி பற்றி வரும் கருத்துக்கள்:


 


 


பல காலமாக மணிப்பூர் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வருவதாக பல ஊடகங்களால் தூக்கி பிடிக்கப்பட்ட ஷர்மிளா,இந்த தேர்தலில் வெறும் 90 வாக்குகளை மட்டும் பெற்று அதிர்ச்சிதரும் உண்மை நிலையை பிரதிபலித்தார்.நமது தேர்தல்கள் பல நேரங்களில் வெறும் பணத்தாலும்,அடிதடி அரசியலாலும் தீர்மானிக்கப்பட்டாலும்,ஒருவர் வெறும் இரண்டு இலக்கத்தில் வாக்குகள் பெறுவது,அம்மாநிலமக்கள் அவரின் பார்வைகளையும், கொள்கைகளையும் சற்றும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே சாமானிய அறிவுள்ளவருக்கும் புலப்படும் உண்மை.


 


 


அதே நேரத்தில் ஷர்மிளா அவர்களின் தனிப்பட்ட நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது,ஆனால் இந்த தோல்வி அவர் பல காலமாக அம்மாநில மக்களுக்காக AFSPA”யை வாபஸ் வாங்குவதற்கு நடத்தி வரும் போராட்டத்தையே ஆட்டம் காண வைத்துவிட்டது.பொது வழக்கில் ஒரு கூற்று ஓன்று உண்டுபாமர மக்கள் எல்லாவற்றையும் அறிவார்கள்“.இவ் விஷயத்தில் பாமரமக்களின் அறிவு,அறிவுஜீவிகளின் கணிப்பையும் மீறிவிட்டது.”  என்று முடித்திருக்கிறது.


 


இதை இங்கு எடுத்தாள காரணம் மற்றவர்கள் எல்லாம் ஒரு நிகழ்ச்சி நடந்த பிறகு கூறும் கருத்துக்களை ,நீங்கள் வெகு முன்பே சரியாக கணித்து எழுதிவிடுவதே.ஆங்கிலத்தில் வந்துள்ள இக்கட்டுரையின் சுட்டியை  கீழே கொடுத்திருக்கிறேன்.


 


http://www.dnaindia.com/india/report-assembly-elections-2017-7-popular-media-narratives-that-were-punctured-2352273


 


அன்புடன்,


அ .சேஷகிரி.


 


 


அன்புள்ள சேஷகிரி,


 


இந்தத் தேர்தலில் மணிப்பூர் அளிக்கும் செய்தி ஐரோம் ஷர்மிளாவின் தோல்வியை விட மிகமுக்கியமாகப் பேசத்தக்கது. அம்மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். பிரிவினைப்போரின் தொடக்கத்தில் அவர்களும் அதை ஆதரித்திருக்கலாம். ஏனென்றால் எந்தவகையான பிரிவினைவாதமும் இரு அடிப்படைகளில் உணர்ச்சிகளைத் தூண்டியபடியே எழும். ஒன்று நாம்  உயர்ந்தோர் என்னும் பெருமிதம். இன்னொன்றும் நம் துயர்களுக்கு பகைவர்களே காரணம் என்னும் வெறுப்பு. இரண்டும் உணர்ச்சிகரமாகப் பரப்பப்படும்போது எளிய மானுடர் அதை ஏற்பார்கள்


 


ஆனால் நடைமுறையில் மணிப்பூரின் ஆயுதந்தாங்கிய குழுக்கள் நாலாந்தர அதிகாரவெறியர்கள், கூலிப்படைக் கொலைக்காரர்கள் என இன்று அம்மக்கள் அறிந்திருக்கிறார்கள். அதை அங்குள்ள எவரும் சொல்வார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை அழித்துவிட்டதை அவர்கள் உணர்கிறார்கள்


 


மணிப்பூரில் அமைதி திரும்பினால் ஐந்தாண்டுகளில் அது இந்தியாவின் முக்கியமான சுற்றுலாமையமாக ஆகமுடியும். அங்குள்ள வறுமை முழுமையாகவே ஒழியும். எனென்றால் மிக வளமான மண் அது. இமாச்சலப்பிரதேசம் செல்லும்போது அங்குள்ள செல்வச்செழிப்பை கண்டு மணிப்பூர் மேகாலயா அனைத்தும் இதைப்போன்ற பகுதிகளாக மாறலாகாதா என ஏங்கியிருக்கிறேன்


 


முக்கியமான வரலாற்று வாய்ப்பு வந்து கதவைத் தட்டியிருக்கிறது. பெரிய ரயில்திட்டங்களும் சாலைத்திட்டங்களும் இன்று முழுவீச்சுடன் வடகிழக்கில் செய்யப்படுகின்றன. சாலைவழியாகவே கல்கத்தாவை சிங்கப்பூருடன் இணைக்கும் பன்னாட்டு பெருந்திட்டம் ஒன்றை நிதின் கட்கரி அறிவித்திருக்கிறார். வடகிழக்கின் கொடியவறுமையை மிக எளிதாக இவை அகற்றிவிடக்கூடும். அதற்கு சீனாவால் தூண்டப்படும் தீவிரவாதம் முற்றொடுக்கப்படவேண்டும்


 


ஜெ


 


 


ஐரோம் ஷர்மிளாவின் படுதோல்வி

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1


ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்- 2


ஐரோம் ஷர்மிளாவின் மனமாற்றம்


ஐரோம் ஷர்மிளா ராணுவம் தேசியம்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 16, 2017 11:31

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–45

45. குளிர்ச்சுழி


மலைச்சரிவில் முண்டன் முயல்போல, பச்சைப் பந்துபோல பரவியிருந்த புதர்களினூடாக வளைந்து நெளிந்து பின்னால் தொடர்ந்து வர, பெரிய கால்களை தூக்கிவைத்து புதர்களை மிதித்து சழைத்து பாறைகளை நிலைபெயர்ந்து உருண்டு அகலச்செய்து பறப்பதுபோல் கைகளை வீசி முன்னால் சென்ற பீமன் நின்று இடையில் கைவைத்து இளங்காற்றில் எழுந்து வந்த மலர் மணத்தை முகர்ந்து ஒரு கணம் எண்ணங்களை இழந்தான். பின்னர் திரும்பி இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி விரித்து “அதே மணம்! ஐயமே இல்லை, அதே மணம்தான். இங்குள்ளது அந்த மலர். இதோ, மிக அருகே!” என்று கூவினான்.


புன்னகையுடன் அவனருகே வந்து மூச்சிரைக்க நின்ற முண்டன் “மரக்கிளைகளினூடாக தாவிச்செல்வது எளிது. அங்கு கைகளால் நடக்கலாம்” என்றான். “மண்ணில் நடப்பதைவிட வானில் நடப்பது எளிது… மண்ணில் நடக்கையிலும் கைகளால் வானிலும் துழாவிக்கொள்கிறோம்.” பீமன் அவன் தலையைத் தொட்டு உலுக்கி “மிக அருகே! அந்த மணம், ஐயமே இல்லை, அதே மணம்தான்” என்றான். “அதோ தெரிகிறது சோலை!” என்று முண்டன் சுட்டிக்காட்டியதுமே பீமன் பாய்ந்து ஓடத்தொடங்கினான்.


மலைச்சரிவின் விளிம்பிலேறி வந்து நின்ற முண்டன் சற்று சரிந்து இறங்கிப்போன நிலத்தில் இரு கைகளையும் விரித்தபடி ஓடி அகன்ற பீமனை தொலைவிலிருந்து நோக்கினான். அச்சோலைக்குள் இருந்த சுனை இளவெயிலில் ஒளி கொண்டிருந்தது. பச்சைப் பட்டால் மூடிவைத்த சுடரகல்போல. பீமன் அம்மரங்களினூடே மறையக் கண்டபின் முண்டன் சிறிய தாவல்களாக தானும் ஓடி அதை அணுகினான். சோலைக்குள் மரங்களினூடே பீமன் புதுமழை மணம் பெற்ற கரடிபோல இரு கைகளையும் விரித்து துள்ளிச் சுழன்று ஓடுவது தெரிந்தது. நறுமணம் மானுடரை பித்தாக்கிவிடுகிறது. காட்சிகளோ ஒலிகளோ சுவைகளோகூட அதை செய்வதில்லை. மணங்கள் புலன்களை எண்ணங்களிலிருந்து விடுவித்து கட்டிலாது கிளரச் செய்துவிடுகின்றன.


ஒரு மரத்தருகே சென்று நின்று திரும்பி நோக்கி “இதுவா…?” என்றான் பீமன். “நானறியேன், கண்டுபிடிக்கவேண்டியவர் நீங்கள்” என்றான் முண்டன். “இதே இடம்! இங்கு முன்பு நான் வந்திருக்கிறேன்” என்றான். பிறகு மூச்சிரைக்க “கனவில் கண்ட இடம். முன்பு கண்ட அதே சோலை” என்றான். மரங்களின் வேர்ப்புடைப்புகளில் ஏறி தாவியிறங்கி  “ஆம், எவ்வண்ணமோ இதுவும் முந்தைய சோலை போலவே அமைந்துள்ளது. அங்கிருந்து பறவைகள் விதைகளுடன் இங்கு வந்திருக்கலாம்” என்றான் முண்டன்.


பீமன் திரும்பி ஓடி பிறிதொரு மரத்தடியில் சென்று நின்றான். “இதே மணம்தான்” என்றான். “பிறகென்ன? அதிலிருந்து மலரொன்றை பறித்துக்கொள்ளுங்கள். அதுதான் கல்யாண சௌகந்திகம்” என்றான் முண்டன். பீமன் குதித்து அம்மரத்தின் சிறிய கிளையொன்றை பற்றினான். அது எடை தாங்காது சற்று சாய்ந்து மலர்களை கொட்டியது. பீமன் ஒரு மலரை எடுத்து முகர்ந்தபோது அவன்மேல் ஒரு வெண்ணிறக் கடலலை பெருகிவந்து சூழ்ந்து அறைந்து முழுக்காட்டியதை காணமுடிந்தது. பட்டு இழுபடுவதுபோல அந்த அலை விலகி மறைய கரிய ஈரத்துடன் பாறை எழுவதுபோல் அவன் குளிர்ந்து நின்றான். பின்னர் “இதுவல்ல…” என்றான். முண்டன் புன்னகைக்க “ஆனால் பெரும்பாலும் இது” என்றான். முண்டன் “நான் எண்ணினேன்” என்றான்.


அருகணைந்த பீமன் சோர்வுடன் “இதே மணம்தான். அகலே நின்றிருக்கையில் எந்த வேறுபாட்டையும் நான் காணவில்லை. கையிலெடுத்து முகரும்போது உள்ளிருந்து பிறிதொரு புலன் சொல்கிறது இதுவல்ல என்று” என்றான். பின்பு அந்த மலரை உதிர்த்துவிட்டு அருகே வந்து “இது நாமறிந்துகொள்ள முடியாத ஏதோ உள விளையாட்டு. என் சித்தம் பிறழ்ந்திருக்கக்கூடும்” என்றான். “திரும்பிவிடலாமென எண்ணுகிறேன், முண்டரே. பொருளற்ற ஒரு ஆழ்துழாவல் மட்டும்தான் இது. இதைத் தொடர்ந்துசென்று நான் அடையக்கூடுவதென ஏதுமில்லை”.


முண்டன் “பாண்டவரே, ஒரு செடியில் எழும் முள்ளில் முதலில் உருவாவது எது?” என்றான். “என்ன?” என்று பீமன் புரியாமல் திரும்பி கேட்டான். பின்னர் அவ்வினாவின் உட்பொருளை உணர்ந்தவனாக “அதன் மிகக்கூரிய முனை. முள்முனையின் இறுதிப்புள்ளி” என்றான். “அப்புள்ளியின் கூர்மையை வலுப்பெறச் செய்வதற்காகவே மேலும் மேலுமென தன் உடலை அது திரட்டிக் கூம்பி நீண்டெழுகிறது.” சிரித்தபடி “நன்று” என்றான் முண்டன். “ஐவரில் தத்துவம் அறியாதவர் நீங்கள் ஒருவரே என்கிறார்கள் சூதர்கள், நன்று.” பீமன் சிரித்து “தத்துவம் அறியேன். ஆனால் முட்களை அறிவேன்” என்றான்.


“தாங்கள் சொன்னதில் மேலுமொரு நீட்சி உள்ளது, பாண்டவரே. அம்முள்முனையின் முடிவிற்கு அப்பாலிருக்கும் வெறுமையைத்தான் அந்த முள் முதலில் அறிந்தது. அதை நிரப்பும் பொருட்டே முனையின் முதல் அணுவை உருவாக்கிக் கொண்டது” என்றான் முண்டன். “அவ்வெறுமைக்கும் அம்முதலணுவுக்குமான உரையாடல் ஒன்று ஒவ்வொரு முள்ளிலும் நிகழ்ந்து கொண்டிருந்தது. முள்முனைகள்  குத்துவதும் கிழிப்பதும் வருடுவதும் அதைத்தான்.” அவன் சொல்வதன் பொருளென்ன என்று விளங்காவிட்டாலும் எவ்விதமோ அதன் உட்பொருளை நோக்கி சென்றுவிட்ட பீமன் புன்னகையுடன் அருகே வந்தான்.


முண்டன் “அந்தச் சிற்றாலயத்தை தாங்கள் இன்னும் பார்க்கவில்லை” என்றான். பீமன் அப்போதுதான் தாழ்ந்த மரக்கிளைகள் இலைக்கொத்துகளால் பொத்தி வைத்திருந்த கரிய சிற்றாலயத்தை பார்த்தான். “அதே வடிவில், அதே அளவில்” என்றபடி அதை நோக்கி சென்றான். ஆலயத்தின் சிறிய வாயில் கதவில்லாது திறந்திருந்தது. அதன் முன் சென்று இடையில் கைவைத்தபடி நின்று உள்ளே பார்த்தான். பின்னர் திரும்பி அணுகி வந்த முண்டனிடம் “அதே சிலையா?” என்றான். “ஏறத்தாழ…” என்றபடி முண்டன் அருகே வந்தான். “இவள் அசோகசுந்தரி” என்றான். “கையில் அசோகம் ஏந்தியிருக்கிறாள். மின்கதிருக்கு மாறாக அமுதகலம்.” குனிந்து நோக்கியபடி “ஆம்” என்றான் பீமன். “ஆனால் அதே முகம்” என்றபின் “ஒளியின் மாறுபாட்டினாலா என தெரியவில்லை. இது ஊர்வசியின் முகத்தில் இல்லாத பிறிதொரு புன்னகை கொண்டுள்ளது” என்றவன் கைகளைக் கட்டி கூர்ந்து நோக்கியபடியே நின்றான். திரும்பி புன்னகைத்து “ஒருவேளை நீர் சொன்ன கதையால் உருவான உளமயக்காக இருக்கலாம். இது இளம்கன்னியின் அறியா புன்னகை. ஊர்வசியின் முகத்தில் இருந்தது துலாவின் மறுதட்டையும் அறிந்தபின் எழும் நகைப்பு” என்றான்.


“ஆம். நமது உள்ளம் கொள்ளும் சித்திரம்தான் அது” என்றபடி முண்டன் அப்படியில் அமர்ந்தான். அவன் முன் அடிமரம்போல் பருத்த உடலுடன் எழுந்து நின்ற பீமன்  “இங்கும் நானறிவதற்கு ஏதேனும் உள்ளதா?” என்றான்.  “வினாக்கள்தான். உறவுகளைப்பற்றி விடைகளை எவர் கூறக்கூடும்?” என்றான் முண்டன். “காலத்தில் பின்னகர்ந்து செல்ல வேண்டுமா என்ன? செல்கிறேன்” என்றான் பீமன்.


“இம்முறை காலத்தில் முன்னகர்ந்து செல்லலாம்’’ என்று முண்டன் சொன்னான். “இமயமலை அடிவாரத்தில் யமுனை நதிக்கரையில் குகையொன்றில் உங்கள் மூதாதை நகுஷன் ஒரு பெரும்பாம்பென இருளில் உறைகிறார். அக்குகைக்குள் வழிதவறி தங்க வரும் உயிர்களை மட்டுமே பற்றி இறுக்கி உணவாகக் கொள்கிறார். ஆகவே தீராப் பசி கொண்டிருக்கிறார். தன் பசியை முழுதடக்கும் பேருடல்  விலங்கொன்றை உண்ணும்போது அவருக்கு மீட்பு என்று சொல்லிடப்பட்டுள்ளது” என்றபின் நகைத்து “தீயூழ் என்னவென்றால் யானைகள் அச்சரிவில் ஏறமுடியாது. குகைகளுக்குள் நுழையும் வழக்கமும் யானைகளுக்கில்லை” என்றான்.


பீமன் முண்டனின் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். “அமர்க!” என்று அவன் சொன்னதும் அசோகசுந்தரியை நிலம்பணிந்து வணங்கிவிட்டு  சிறுவனைப்போல் உடலொடுக்கி படிகளில் அமர்ந்தான். முண்டன் தன் கையை அவன் முகத்தருகே காட்டினான். “காலம் நாமணியும் ஆடையைப் போன்றது. ஆடை நம்மீது படிகிறது. ஆடைக்கு நாம் வடிவளிக்கிறோம். நம்முள் எங்கோ ஆடையே நம் வடிவென்றாகிறது. நோக்குக, ஆடைகள் அனைத்தும் மானுட வடிவொன்றை கரந்துள்ளன. அணியப்படாத ஆடைகளில்கூட அணியவிருக்கும் மானுடர் உறைகிறார்கள். ஆடைகளை மாற்றிக்கொள்கையில் நம் உடல் பிறிதொன்றாகிறது. உடல் பிறிதொன்றாகையில் உளம் பிறிதொன்றாகிறது. ஏனெனில் உளமணியும் ஆடையே உடல். பாண்டவரே, உளம் எது அணிந்த  ஆடை?”


அவன் குரல் தேனீபோல ரீங்கரித்து அவன் தலையைச்சுற்றி பறந்தது. “இது பிறிதொரு காலம். அடர்காடு. யமுனை கரியநீர் பெருகிச்செல்லும் சரிவு. நீர் நோக்கி புடைத்தெழுந்த வேர்த்திரள்களாலான எழுகரை. நீர் உண்டு உரம்பெற்ற பேருடல் மரங்கள் கிளைதிமிறி இலைகொப்பளிக்க அணிவகுத்திருக்கும் கான்தடம்” என்றான். முதலில் சொற்களாக பின்னர் காட்சிகளாக பின்னர் வானும் மண்ணுமாக காலமாக அவன் சொற்கள் உருமாறிக்கொண்டே சென்றன.



tigerதொலைவிலேயே ஆறு இருப்பதை பீமன் உணர்ந்துவிட்டான்.  அவன் உள்ளமும் சித்தமும் அதை அறிவதற்குமுன் உடல் உணர்ந்துவிட்டது. அவனுக்குப் பின்னால் நால்வரும் திரௌபதியும் நடைதளர்ந்து நாவறண்டு ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி விரைவழிந்து நடந்துவந்து இறுதி ஆற்றலும் அகல மூச்சிரைத்தபடி நின்று பாறைச்சரிவின் நிழலில் பூழிமண்ணின் எடையுடன் விழுந்து அமர்ந்தனர். திரௌபதி சரிந்து கண்மூடி படுத்துவிட்டாள். பீமன் பாறைமேல் நின்றபடி “நீர்” என்றான். தருமன் தலைதிருப்பி “மொண்டு வருக, இளையோனே! எங்களால் நடக்கமுடியாது” என்றார்.


அந்த மலைச்சரிவெங்கும் நீருற்றுகளே இருக்கவில்லை. கௌதமரின் தவச்சாலையிலிருந்து களிந்தமலைச் சாரலில் உள்ள கண்வரின் தவக்குடிலுக்குச் செல்வதென தருமன் முடிவெடுத்தபோது அவரது மாணவர்களில் ஒருவர் “இவ்வழி செல்வது மிக அரிது. எவரும் அணுகலாகாதென்பதனாலேயே அங்கு சென்று குடிலமைத்திருக்கிறார் கண்வர். வடகிழக்கு நோக்கிச்சென்று மலைமேல் ஏறி மீண்டும் கீழிறங்கி அங்கு செல்வதே இயல்வது. பன்னிரு நாட்கள் நடைபயணம் தேவையாகும்” என்றான். ஒரு கணம் எண்ணியபின் தருமன் “இல்லை, அவ்வளவு நாட்கள் இங்கிருக்க இயலாது. துவைதக் காட்டுக்கே நாங்கள் திரும்பிச்செல்ல வேண்டியிருக்கிறது. வரும் முழுநிலவு நாளில் அங்கு நிகழும் வேதச் சொல்லாய்வு அமர்வில் நானும் பங்குகொள்ளவிருக்கிறேன்” என்றார்.


அர்ஜுனன் “நாம் இவ்வழியே செல்லலாம். இதுவரை நாம் அறியாத கடுமைகொண்ட பாதையாக இருக்க வாய்ப்பில்லை” என்றான். அனைவரும் திரும்பி பீமனைப் பார்க்க “செல்வோம்” என்று அவன் சுருக்கமாக சொன்னான். அன்று காலை அவர்கள் கிளம்பும்போதே “கையில் நீரெடுத்துக்கொள்ளுங்கள்” என்றார் கௌதமர். “நீள்வழி, ஆனால் எங்கும் ஓடைகள் இல்லை. அனைத்து ஊற்றுகளும் வழிதல்களும் ஆற்றுக்கு மேற்கேதான் உள்ளன. ஆறோ அறுபதடி ஆழத்தில் உருளைப்பாறைக் குவியல்களுக்கு அடியில் பெருகிச் சென்றுகொண்டிருக்கிறது.”


தருமன் “இங்கு இப்படியொரு வறண்ட நிலம் எப்படி உருவானது?” என்றார். கௌதமர் சிரித்து “மண்ணியல்பை அப்படி வகுக்கமுடியுமா என்ன?” என்றார். அர்ஜுனன் “மண்ணுக்கு அடியில் விரிசலே அற்ற  ஒற்றைப்பெரும்பாறைப்பரப்பு இருக்கக்கூடும்” என்றான். நகுலன் மூட்டையை இறுக்கிக் கட்டியபடி “இரக்கமே அற்ற மண்” என்றான். தருமன் அதன் பொருள் அறியாமுள் என தொட்டுச்செல்ல  திரும்பி நோக்கிவிட்டு “ஆம், அது அன்னை என்பதனாலேயே அவ்வாறும் இருந்தாகவேண்டியிருக்கிறது” என்றார்.


இரு பெரும்தோற்பைகளில் நீர் நிரப்பி பீமன் தன் இரு தோள்களிலும் மாட்டிக்கொண்டான். உண்பதற்கு உலர்அப்பமும் காய்ந்தபழங்களும் நிரப்பிய தோல்பையை முதுகிலிட்டான். கச்சையை இறுக்கியபடி அவன் எழுந்து நடக்க அவர்கள் வணக்கங்களுக்குப்பின் தொடர்ந்தனர். உருளைக்கரும்பாறைகள் விண்ணிலிருந்து மழையாகப் பொழிந்தவைபோல சிதறிப் பரந்திருந்த நிலவெளியினூடாக நடக்கத் தொடங்கினர். விரைவிலேயே வானில் முழு வெம்மையுடன் கதிரவன் எழுந்தான். “பெருங்கோடைக்காலம் இது” என்றார் தருமன். “நிமித்திக நூலின்படி பன்னிரண்டாண்டுச் சுழற்சி இக்கோடையை கொண்டுவந்துள்ளது. மழையிலாது இலைகளை உதிர்த்து மரங்கள் தவமிருக்கின்றன.”


“பறவைகள் அனைத்தும் நீர் தேடிச் சென்றுவிட்டன போலும்” என்றான் நகுலன். தருமன் குனிந்து செடிகளைப் பார்த்து “அத்தனை செடிகளும் தங்கள் உயிரை விதைகளில் பொறித்து மண்ணில் விட்டுவிட்டு மடிந்துவிட்டன. பல்லாயிரம் விதைகள். அவற்றில் ஒன்று எஞ்சினால்கூட அவற்றின் குலம் வாழும்” என்றபின் திரும்பி “வேதத்தில் ஒரு சொல் எஞ்சினால் போதும், முழு வேதத்தையும் மீட்டுவிடலாம் என்றொரு நூற்குறிப்புள்ளது, இளையோனே” என்றார். சகதேவன் புன்னகைத்து “முடிவின்மையை ஒவ்வொரு துளியிலும் பொறிக்கும் விந்தையையே இயற்கையில் பிரம்மம் விளையாடிக் கொண்டிருக்கிறது” என்றான்.


ஏன் அவர்கள் அனைத்தையும் சொல்லென ஆக்கிக் கொள்கிறார்கள் என பீமன் எண்ணினான். சொல்லென்றல்ல, அறிந்தவையென ஆக்கிக் கொள்கிறார்கள். உண்மையில் எங்கும் அதையல்லவா செய்கிறோம். அறியாத மானுடன் ஒருவனைக் கண்டால் குலமும் குடியும் ஊரும் பெயரும் கேட்டு உரையாடி அவனை அறிந்தவனென்றாக்கிக் கொள்கிறோம்.  இந்த நிலத்திற்கு ஒரு பெயரிடவேண்டும். இத்தனை பாறைகளுக்கும் எண்ணிடவேண்டும். இவற்றின் நேற்றும் முன்னாளும் தெரிந்திருக்கவேண்டும். அதன்பின் இந்நிலம் நிலமல்ல, வெறும் அறிவு.


உடலுக்குள்ளிருந்து நீர் வெம்மைகொண்டு குமிழிகளாகிக் கொதித்து தளதளத்து ஆவியாகி தோலை வேகவைத்தது. அனைத்து வியர்வைத் துளைகளினூடாகவும் கசிந்து வழிந்து ஆவியாகியது. உலர்ந்த வாய்க்குள் வெந்நீரில் விழுந்த புழுவென நாக்கு தவித்தது. புருவங்களிலும் காதோர மயிர்களிலும் உப்பு படிய திரௌபதி “சற்று நீர் கொடுங்கள், முகங்கழுவிக்கொள்ள” என்றாள்.  தருமன் ஏதோ சொல்ல எண்ணி திரும்பி நோக்கியபின் சொல்லாமல் அமைந்தார். கிளம்பியபோது முதலில் வயிறு நிறையும்படி நீரருந்தி முகம் கழுவி எஞ்சியதை தலையிலும் விட்டுக்கொண்டார்கள். ஏழு இடங்களில் அமர்ந்து உச்சிப்பொழுதைக் கடந்தபோது தோற்பைகளில் நீர் மிகக் குறைவாகவே இருந்தது. அப்போது பிறிதொருவர் நீர் அருந்துவதைக் கண்டால் உடல் பதறியது.


“அச்சமூட்டுவது இது. நம்மிடம் இருக்கும் நீரின் அளவு தெரியும், செல்ல வேண்டிய தொலைவு தெரியாது” என்றார் தருமன். அர்ஜுனன் வில்லுடன் தலை குனிந்து நடந்து அப்பால் சென்று பாறையொன்றின்மேல் அணிலெனத் தாவி ஏறி நாற்புறமும் நோக்கி “நெடுந்தொலைவெங்கிலும் நீர் இருப்பதாகத் தெரியவில்லை. அனைத்து மரங்களும் பசுமை வாடியே தென்படுகின்றன. சிறுசுனையோ ஊற்றோ இருந்தால்கூட தழைத்த மரங்கள் சில தென்படும்” என்றான். பீமன் “பார்ப்போம்” என்றபடி முன்னால் நடந்தான்.


நிழல் நீண்டு கிழக்கே சரியத் தொடங்கியது. தோல்பையில் நீர் முழுமையாகவே ஒழிந்தது. இறுதியாக எஞ்சிய அரைக்குவளை நீரை மூங்கில் குழாயில் நிரப்பி திரௌபதியிடம் கொடுத்த பீமன் “இது உனக்கு, தேவி” என்றான். அவள் அதை வாங்கி தருமனிடம் அளித்து “தாங்கள் வைத்திருங்கள்” என்றாள். “நீர் உனக்கு என்பதுதான் நெறி” என்றார் தருமன். “அதை தாங்கள் அளிக்க வேண்டும்” என்று அவள் சொன்னாள். இறுதியாக எஞ்சிய நீரையும் மரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுக்கையில் அருந்தி முடித்தபோது ஐவரும் அச்சம் கொண்டிருந்தனர். “இவ்வழியை நாம் தேர்ந்திருக்கலாகாது” என்று தருமன் சொன்னார்.


“ஒவ்வொருமுறையும் நாம் அறிந்தவற்றை வைத்து இவ்வுலகை மதிப்பிடுகிறோம். ஒவ்வொருமுறையும் எதிர்காலம் என்பது முற்றிலும் அறியாததாகவே இருக்கிறது. கல்வியைக் கொண்டு வாழ்வை எதிர்கொள்ள முடியாதென்று இளவயதில் முதுசூதன் ஒருவன் என்னிடம் சொன்னான். ஏனெனில் இதுவரை வாழ்ந்த வாழ்வே நூலென மொழியென அமைந்துள்ளது. எழும் வாழ்வின் நெறிகளோ இயல்புகளோ ஏதும் அவற்றிலிருக்க வாய்ப்பில்லை.” அவர் பேசுவது அச்சூழலில் எவ்வகையிலும் பொருந்தவில்லை. ஆனால் பேசாமலிருக்கும்போது எழுந்து சூழ்ந்த அமைதியில் அக்குரல் ஒரு வழிகாட்டி அழைப்புபோல ஆறுதல் அளித்தது.


சகதேவன் “ஒவ்வொரு புல்லும் தன் தலைமுறைகள் வாழ்ந்த அறிதலை சிறுவிதைமணியாக்கி தன் தலையில் சூடியிருக்கிறது. தான் மடியும்போது எஞ்சவிட்டுச் செல்கிறது” என்றான். அவனை திரும்பி நோக்கிய தருமன் சில கணங்களுக்குப்பின் “ஆம், நம்மில் நாளை எஞ்சுமெனில் அது அறிவென்றோ உணர்வென்றோ இருக்காது. உடலில் பழக்கமென, உள்ளத்தில் கனவென, உயிரில் நுண்மையென மறைந்திருக்கும். அதை அறிய இயலாது, நம்பலாம்” என்றார். சகதேவன் சிரித்து “எப்போதும் அறிய இயலாதவற்றை அல்லவா நம்புகிறோம்?” என்றான்.


பீமன் முன்னால் நடந்து அங்கிருந்த பெரும்பாறையொன்றின்மேல் உடும்புபோல தொற்றி ஏறி அதன் உச்சியில் பாறைப்பிளவில் வேர் செலுத்தி எழுந்து கிளை விரித்திருந்த அரசமரமொன்றின் அடிமரத்தைப்பற்றி மேலேறி உச்சிக் கிளையில் நின்று சூழ நோக்கினான். பின்பு இறங்கி வந்து பாறைமேல் நின்று நகுலனிடம் “இளையோனே, அங்கு நீருள்ளது. நான் சென்று மொண்டு வருகிறேன்” என்றான்.


பீமன் பாறையிலிருந்து பாறைக்குத் தாவி மலைச்சரிவில் விரைந்தான். இலை உதிர்த்து வேரில் உயிர் மட்டும் எஞ்ச நின்ற மரங்களுக்கு அப்பால் வானிலெழுந்து சுழன்றமைந்த பறவைகள் அங்கிருக்கும் பசுஞ்சோலையொன்றில் வாழ்பவை என்று தெரிந்தது. அணுகுந்தோறும் பறவை ஒலிகள் தெளிவு கொண்டன. அவை பேசும் மொழி அனைத்தும் தனக்கு நீர் நீர் என்றே பொருள் கொள்வதை அவன் விந்தை என உணர்ந்தான். மொழி என்பது கொள்ளப்படும் பொருள் மட்டுமே என்று எங்கோ கேட்ட சூதர்சொல் நினைவுக்கு வந்தது. மேலும் அணுகியபோது பசும்கோட்டையென எழுந்த சோலை மரங்களை கண்டான். அதற்கப்பால் ஒரு ஆறு ஓடுவதை உணர்ந்தான்.


மரங்களின் பேருருவம் தெளிவடைந்து வந்தது. மலைப்பாறைகளை கவ்விப் பிரித்து உடைத்து பற்றியிருந்தன வேர்கள். சுண்ணப்பாறை கரைந்துருகி வழிந்ததுபோல அடிமரங்கள் கிளை விரித்தன. எழுந்து கிளைவிரித்து பசுந்தழைக் கூரையைத் தாங்கிய அவற்றுக்குமேல் பல்லாயிரம் பறவைகளின் பேரோசை இடையறா முழக்கமென எழுந்து கொண்டிருந்தது. பின்பு அவன் ஆற்றிலிருந்து எழுந்த நீராவியை மெல்லிய வெப்பமாற்றம் என முகத்தில் உணர்ந்தான். பின் வியர்வைக்குளிரென. மேலும் அணுகியபோது நீர்த்தண்மையென. மூச்சை நிறைக்கும் அழுத்தமென, மெல்லிய நடுக்கமென.


அச்சோலைக்குள் நுழைந்து அதன் குளிர்ந்த இருளுக்குள் அமிழ்ந்தான். சீவிடுகளின் ரீங்காரம் பகலிலும் இரவென எழுந்து அனைத்து ஒலிகளையும் ஒன்றென இணைத்திருந்தது. காற்று கடந்து செல்ல கிளைகள் முனகியபடி உரசிக்கொண்டன. காற்றலைகளால் அள்ளப்பட்ட இலைகள் சுழன்றபடி இறங்கின. சிலந்திவலையின் காணாச்சரடில் சிக்கி வெட்டவெளியில் நின்று நீந்தின. அதுவரை வெயில்கொண்டு அனல் உமிழ்ந்த பாறைகளை மிதித்து வந்த அவன் கால்கள் வெம்மையையே அறியாத குளிர்ப்பாறைகளை நீர் உறைந்த குவைகள் என்றே   உணர்ந்தன. உள்ளங்கைகளையும் பாதங்களையும் அப்பாறைகளில் ஊன்றி அத்தண்மையை உடலெங்கும் வாங்கிக்கொண்டான்.


பாறைகளைப் பற்றியபடி தொங்கி தாவி இறங்கியபோது மிக ஆழத்தில் உருளைப்பாறைகளிடையே மோதி நுரைத்து வெண்ணிறமாக ஓடிய யமுனையை கண்டான். பகலெங்கும் அவன் தன் குடுவையிலிருந்து ஒரு துளி நீரையும் அருந்தியிருக்கவில்லை. கால் நகத்திலிருந்து தலைமயிரிழை நுனிவரை எரிந்த பெருவிடாய் அவனிலிருந்து பிரிந்தெழுந்து பேருருக்கொண்டு கீழே ஓடிய குளிர்நீர்ப் பெருக்கை நோக்கி மலைத்து நின்றது. பின்னர் அலையலையாக படிகளெனச் சென்ற வேர்மடிப்புகள் வழியாக தாவி இறங்கினான். பாறைகளின் மேலிருந்து மரக்கிளைகளைப்பற்றி ஊசலாடி மேலும் இறங்கிச் சென்றான்.


இறங்குந்தோறும் யமுனை அகன்று பெருகியது. மேலே நிற்கையில் சிற்றோடையின் வெள்ளி வழிவெனத் தெரிந்த யமுனை அகன்று பெருகலாயிற்று. நூற்றுக்கணக்கான பாறைத்தடைகளில் அறைந்து வெள்ளி நுரை சிதற வளைந்து நீர்க்குவைகளென்றாகி நீர்த்திரைகளென விழுந்தாடி இறங்கிச் சென்றுகொண்டிருந்த நதியின் களித்துள்ளலை விட்டு கண்களை அவனால் எடுக்க முடியவில்லை. இரு பெரும்பாறைகள் தழுவியவை என நின்ற இடுக்கினூடாக புகுந்து மென்மணலும் சருகும் பரவிச்சரிந்த பாறை வழியாக வழுக்கிச் சென்று பெரிய பாறைத்தடம் ஒன்றில் நின்றான். இடையில் கைவைத்து மூச்சிரைக்க ஆற்றை நோக்கிநின்று தன் தோளில் தொங்கிய இரு நீர்க்குடுவைகளையும் சீரமைத்துக்  கொண்டான்.


அப்போது குகைக்குள் மெல்லிய இருளசைவொன்றை ஓரவிழி உணர திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான். திறந்த குகைக்குள் யுகங்களின் இருள் மையென செறிந்திருந்தது. பேருருக்கொண்ட கன்னியொருத்தி சுட்டுவிரல் நீட்டி தொட்டு கண்ணெழுதும் சிறு சிமிழ். விழி அறிந்த அவ்வசைவு உண்மையா என்றெண்ணி அவன் மேலும் கூர்ந்து நோக்கினான். ஓசையின்மை அசைவின்மையாக தன்னை மாற்றிக்கொண்டது. நோக்குந்தோறும் இருள் மேலும் செறிந்தது. அங்கு எது இருந்தாலும் திரும்பிப்பாராது கீழிறங்கி நீரை நோக்கிச் செல்வதே தனக்கு உகந்ததென்று அவனுக்குத் தோன்றியது.


ஆனால் விந்தைகளை எப்போதும் எதிர்நோக்கும் அவனுள் உறைந்த சிறுவன் செல்லும்பொருட்டு அடி எடுத்து வைத்த அவனை பின்னிலிருந்து இழுத்தான். ஐயத்துடன் மீண்டும் கூர்ந்து நோக்கியபின் அவன் அக்குகை நோக்கி சென்றான். நின்ற பாறையிலிருந்து சற்றே சரிந்திறங்கிச் சென்று அக்குகைக்குள் நுழைய வேண்டியிருந்தது. குகைவாயிலை முற்றிலும் மூடி நின்றிருந்த மரங்களின் இலைத்தழைப்பால் உள்ளே ஒளிசெல்லும் வழிகள் முற்றிலும் மூடப்பட்டிருந்தன. அதன் வாயிலில் நின்று உள்ளே கூர்ந்து நோக்கி “யார்?” என்று அவன் கூவினான். மிக ஆழத்திலெங்கோ குகை ‘யார்?’ என எண்ணிக்கொண்டது. “உள்ளே யார்?” என்று அவன் மீண்டும் கேட்டான். அச்சொல் சில கணங்களுக்குப்பின் ஒரு விம்மல்போல திரும்பி வந்தது.


உடலெங்கும் பரவிய எச்சரிக்கையுடன் காலெடுத்து வைத்து அவன் குகைக்குள் நுழைந்தான். முற்றிலும் விழியிருள அக்கணமே அகம் எண்ணங்களை ஒளியென்றாக்கிக் கொண்டது. இருளில் உடல் கரைய உள்ளம் மட்டும் இருண்ட தைலமென வழிந்து முன்சென்றது. மேலும் சில அடிகள் வைத்தபோது குகை தூய வட்டவடிவில் இருப்பது விந்தையெனப் பட்டது. அதன் இருள் ஈரமென மெல்லிய ஒளி கொண்டிருந்ததா? இருண்மை நீர்மையென்றாகி மேலிருந்து கீழென வழிகிறதா? உருகும் பாறையா? மறுகணம் அவன் அனைத்தையும் உணர்ந்தான். அது மாபெரும் பாம்பு ஒன்றின் உடற்சுருள். குகையின் பாறை வளைவை ஒட்டியே தன் உடலை வளைத்துப் பதித்து அவனை சூழ்ந்துகொண்டிருந்தது அது.


குகையிலிருந்து அவன் வெளியே பாய்வதற்குள் பெயர்ந்து விழும் மாபெரும் வாழைத்தண்டு என அதன் தசைப்பெருக்கு சுருள்களாக அவன் மேல் விழுந்தது. நிலைதடுமாறி அவன் விழுவதற்குள் அவனுடலைச் சுற்றிக் கவ்வி இறுக்கி அது தன் உடற்குழிக்குள் இழுத்துக்கொண்டது. குகைக்குள் அதன் உடல் கீழ்ப்பகுதி இருளில் புதைந்திருக்க மேல்பகுதி காலிலிருந்து தலைவரை அவனை முற்றிலும் சுற்றிக்கொண்டு இறுக்கிச் சுழன்றது. குளிர்நீர் பெருகிச் செல்லும் காட்டாறு ஒன்றின் சுழியில் சிக்கிக்கொண்டது போல. இரு கைகளாலும் இறுகும் அத்தசைவெள்ளத்தை தள்ளி விலக்க முயன்றான். கைகள் வழுக்கி விலக அதன் பிடி மேலும் இறுகியது.


தலைக்குமேல் எழுந்த அதன் நாக விழிகளை பார்த்தான். திறந்த வாய்க்குள்ளிருந்து நாக்கு எழுந்து பறந்தது. அதன் அண்ணாக்கின் தசை அசைவு தெரிந்தது. குனிந்து அவன் தலையை அதன் வாய் விழுங்க வந்தபோது கைகளால் அதன் இரு தாடைகளையும் விலக்கி பற்றிக்கொண்டான்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–12
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–9
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–7
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–6
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–5
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–8
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 56
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 16, 2017 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.