Suneel Krishnan's Blog, page 4
February 5, 2024
புவியெனும் கொலைக்களம் – கர்ட் வோன்னுகாட் ‘ஸ்லாட்டர் ஹவுஸ் 5’ சித்திர நாவலை முன்வைத்து

'யாவரும்' சித்திர நாவல் சிறப்பிதழில் வெளிவந்தது.
சிறுவயது முதல் படக்கதைகள் காமிக்ஸ்கள் வாசித்து வந்திருந்தாலும் சித்திர நாவல் உலகிற்கு நான் புதியவன். அவற்றை வாசிக்க முதல் தடை அவற்றின் விலை, மேலும் அவை சிறுவர்களுக்குரியது எனும் மனப்பதிவு. எழுத்தாளராகச் சொற்களின் இடத்தை காட்சிகள் எடுத்துக்கொள்வது என்பது சொற்களின் போதாமையைச் சுட்டுவது எனும் எண்ணம் கூட எனக்கு உண்டு. எனக்கு காணக் கிடைத்த பெரும்பாலான கிராஃபிக் நாவல்கள் வெகுமக்கள் ரசனைக்குரிய மிகு புனைவாகவே இருந்தது. ஆகவே எப்போதாவது யதார்த்தம் அலுக்கும்போது சாய்ந்துகொள்ளும் சாய்மானம் எனும் எண்ணமே எனக்கிருந்தது. சிங்கப்பூர் வாசத்தின்போதுதான் நான் சித்திர நாவல்களை வாசிக்க தொடங்கினேன். வாசித்துப் பார்க்க வேண்டும் எனும் ஆர்வம், அவை நூலகங்களில் இலவசமாக வாசிக்கக் கிடைத்தது என்பவைதான் காரணங்கள். சித்திர நாவல்கள் வாசிப்பதில் உள்ள பெரும் சவால் நல்ல நாவலை / நமக்கான நாவலைக் கண்டடைவதுதான். ஏனெனில் சந்தையில் பதின்ம வயதினருக்கான சித்திர நாவல்கள் காமிக்ஸ்கள் அநேகம் காணக் கிடைக்கின்றன. சித்திர நாவல்கள் மெல்ல என்னை ஈர்த்துக் கொண்டன. ஒவ்வொரு முறை நூலகம் செல்லும்போதும் அங்கேயே ஒன்று அல்லது இரண்டு நாவல்களை வாசித்துவிட்டு வீடு திரும்புவதை வழக்கமாக்கிக் கொண்டேன். சித்திர நாவல்கள் வாசிக்கவே நூலகம் செல்வது எனும் நிலையை நோக்கி வெகு விரைவிலேயே நகர்ந்தேன்.

இலக்கியம் போலவே சித்திர நாவல்களிலும் பொழுதுபோக்கு படைப்புகள் தீவிர இலக்கிய படைப்புகள் எனும் பகுப்பு உண்டு. ஓவியம் வழி கதை சொல்லுதல் என்பது ஒன்றும் நமக்கு புதிதல்ல. சித்தன்னவாசல் ஓவியத்தில் மலர் கொய்யும் துறவியை பெரிய கதையின் பகுதியாக நம்மால் காண முடியும். சித்திர நாவலை திரைக்கதையுடன் ஒப்பிடலாம் எனத் தோன்றுகிறது. திரைப்படம் அசையும் காட்சிகளால் ஆனது எனில் சித்திர நாவல் உறைந்த சட்டகங்கள் கொண்ட ஓவியங்களால் ஆனது. ஓவியம் காட்சியை மட்டும் காட்டுகிறது பொருள்கொள்ளுதலை முழுக்க நம் கற்பனையில் நிகழ்த்த சொல்கிறது. நாவல் பொருள்கொள்ளுதலை எளிதாக்குகிறது ஆனால் காட்சியை கற்பனைக்கு உரியதாகச் சொல்கிறது. சித்திர நாவல் நாம் இதை காண வேண்டும் என நம் கற்பனைக்கு திண்ணமான வழிகாட்டுதலை அளிக்கிறது, திரைப்படம் நாம் இதைக் காண வேண்டும், அதை இன்ன வேகத்தில் தான் காண வேண்டும் என்றும் சொல்கிறது. சித்திர நாவலை திரைப்படத்திற்கும் நாவலுக்கும் இடையேயான ஒரு வடிவமாக வரையறை செய்ய முடியும்.
ஓவியங்களை அதிகமாகப் பயன்படுத்தி சொற்களைத் துணைக்கழைத்து கதை சொல்லும் முறை எனச் சொல்லலாம். ஓவியத்திற்கு எது தேர்ந்தெடுக்கப்படுகிறது? அது எந்த அளவிற்கான சட்டகத்தைப் பயன்படுத்துகிறது? சில ஓவியங்கள் முழு பக்கத்தை எடுத்துக்கொள்ளலாம். அந்த ஓவியத்திற்கான முக்கியத்துவம் என்ன? இப்படியாகச் சித்திர நாவல் காமிக்ஸிலிருந்து வேறுபடுவதை கவனிக்கலாம். முக பாவனைகள், உடல்மொழிகள் எளிதாக கடத்தப்படுகின்றன. இப்படி தனக்கென சில பாதைகளை வகுத்துக்கொண்டு, தனக்கென சில இலக்கணங்களை உருவாக்கிக்கொண்டு சித்திர நாவல்கள் முன் நகர்கிறது.

ஓர் இலக்கிய நாவல் சித்திர நாவலாக உருமாற்றம் அடைந்தால் எப்படி இருக்கும்? அமெரிக்க எழுத்தாளரான கர்ட் வோன்னுகாட்டின் ‘ஸ்லாட்டர் ஹவுஸ் 5’ சித்திர நாவலாக வடிவம் பெற்றுள்ளது. ரியான் நார்த் எழுத்தாக்கத்தில், ஆல்பர்ட் மான்டிஸ் சித்திரங்களுடன் 2020 ஆம் ஆண்டு வெளியானது. ஓர் இலக்கிய நாவல் சித்திர நாவலில் என்னவாக உருமாற முடியும் என்பதற்கு இந்நாவல் மிகச்சிறந்த உதாரணம். ரியான் நார்த்தால் அசல் நாவலாசிரியரின் பகடியையும் பார்வையையும் அபாரமாகக் கொண்டுவர முடிந்திருக்கிறது. தனக்கேயுரிய சுதந்திரத்துடனும் துடுக்குத்தனத்துடனும் நாவலுக்கு சித்திர வடிவத்தை அளித்துள்ளார். உதாரணமாக நாவல் தொடங்கும் இடத்திலேயே இரண்டு வடிவங்களுக்கு இடையேயான ஒற்றுமையைச் சொல்கிறார், இரண்டும் ஒரே இடத்தில் தொடங்குகிறது, ஒரே இடத்தில் முடிகிறது என்கிறார். பின்னர் கதை மாந்தர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். துணைப் பாத்திரங்களின் இயல்புகளைச் சொல்கிறார். ஒவ்வொரு துணைப் பாத்திரங்களையும் மூன்று சட்டகங்களில் அறிமுகப்படுத்தும் உத்தியைக் கையாள்கிறார்.

நாவலின் மையம் பில்லி பில்க்ரிமின் வாழ்க்கையைச் சுற்றி நிகழ்கிறது. பில்லியின் காலக்கோடு என ஒரு சட்டகத்தை வரைந்துள்ளார். அவன் எப்போது பிறந்தான், எப்போது அவனிடம் சிலுவையில் அறையப்பட்ட இயேசு சிலை வந்தடைந்தது, எப்போது ராணுவத்தில் சேர்ந்தான், எப்போது போர்க்கைதியாக ஆனான், எப்போது மனநோயாளியாக ஆனான், பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான், வெற்றிகரமான கண் கண்ணாடி நிபுணராக திகழ்கிறான், அயல்கிரகவாசிகளால் கடத்திச் செல்லப்படுகிறான், பின்னர் தான் காலம் குறித்து அறிந்துகொண்டதை விளக்குகிறான். லயன்ஸ் சங்கத் தலைவராக இருக்கிறான், மரணமடைகிறான். பூமிவாசிகள் காலத்தை நேர்கோடாகக் காண்கையில் அந்நிய கிரகவாசிகளான ட்ராஃபல்டோர்காரர்கள் காலத்தை நான்கு நிலைகளில் காண்பவர்கள். அவர்களுடைய கோணத்திலிருந்து பில்லி ஒரே சமயத்தில் ஒரு இடத்தில் உயிருடன் கண்ணாடி நிபுணனாக இருக்கும்போது இன்னொரு இடத்தில் மரணமடைந்த சடலமாக இருக்கிறான். அவர்கள் கோணத்தில் மனிதர்களுக்கு மரணமே இல்லை. மரணம் என்பது எத்தனையோ செயல்பாடுகள் போல அதுவும் ஒன்று. அந்நிய கிரகவாசிகள் காலத்தை மலைத்தொடரைக் காண்பது போல காண்கிறார்கள்.
பில்லி எப்படியோ ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படுகிறான். அவனுக்கு அதற்கான தகுதியோ விருப்பமோ இல்லை என்பதை அவனது நண்பர்கள் அவனுக்கு சுட்டிக்காட்டுகிறார்கள். ஜெர்மானியர்களின் போர்க்கைதியாக அவனும் அவனது நண்பன் ரோலாண்ட் வியரியும் முகாமிற்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். சரியான காலணி கூட அணியாத பில்லி பரிதாபகரமான நிலையில் உடன்வருகிறான். தலைக்கு தொப்பியோ கவசமோ கூட இல்லை. ரியான் நார்த் ரொலாண்டை அவனது முழு ராணுவ உடையில் ஒரு பக்கம் முழுக்கச் சித்தரித்து இருப்பார், எதிரியைப் பற்றி கையேடு, கிளர்ச்சியூட்டும் நிர்வாணப் படம், பருத்தி உள்ளாடை, அதற்கு மேலாக கம்பளி உள்ளாடை, அதற்கு மேலாகக் கம்பளி மேலாடை, அதன்மேல் ஸ்வெட்டர், ஜாக்கெட், கோட் தொடங்கி முக்கோணக் கத்தி வரை அவனது சகலத்தையும் அட்டவணைப்படுத்தியிருப்பார் நார்த். குரூரங்களின் மீதும் நாயக வாழ்வின் மீதும் அதீத ஈடுபாடு கொண்டவன் வியரி. பில்லியைப் பலமுறை காப்பாற்றியதாகச் சொல்லிக்கொள்வான். வியரியின் இந்த வினோதக் கோலத்தை கண்ட ஜெர்மானியர்கள் அவனிடமிருந்து காலணிகளைப் பிடுங்கி பில்லிக்கு கொடுப்பார்கள். அவனது காலணி பறிக்கப்பட்ட ஒன்பதாவது நாளில் காலில் புண் வந்து மரித்துப் போவான். அவனது மரணத்திற்கு காரணம் பில்லிதான் எனச் சாகும் தறுவாயில் சொல்லிவிட்டு செல்வான். அப்போது உடனிருந்த பால் லாசரோ அவனுக்காக பில்லியைக் கொன்று பழி தீர்ப்பதாக உறுதி எடுத்துக்கொள்வான். அதை இறுதியில் நிறைவேற்றவும் செய்வான்.

இந்த நாவலுக்கு ‘குழந்தைகளின் போராட்டம்’ அல்லது ‘மரணத்துடனான கடமையின் நடனம்’ எனப் பெயரிட்டுள்ளார். ஸ்லாட்டர் ஹவுஸ் போரை நிராகரிக்கும் நாவல். போரில் நியாயம் என்பது என்ன? உண்மையில் நாம் நினைக்கும் அளவிற்கு எதிரெதிர் தரப்புகள் வெவ்வேறானவையா? ட்ரெஸ்டன் நகரத்தின் மீதான அமெரிக்க தாக்குதலின் பின்புலத்திலிருந்து இந்தக் கேள்விகளை எழுப்புகிறார். நாவலின் மையமான பேசுபொருள் மனிதனுக்கு சுயத்தேர்வு என்று ஏதேனும் உண்டா? அப்படி ஏதுமில்லை என அன்னியகிரகவாசிகளின் வழியாக அறிந்துகொள்கிறான் பில்லி. அப்படியானால் நாம் விதியின் அல்லது காலத்தின் கைப்பாவைகள் தானா? தனக்கென எதையும் வகுத்துக்கொள்ள முடியாத, எல்லாவற்றிற்கும் பிறரை சார்ந்திருக்கும் குழந்தைகளின் நிலையிலிருந்து நாம் போரிட்டோம், அவை தவிர்க்க முடியாதது ஆகவே நிகழ்கிறது. ட்ராபல்டோர்வாசிகள் பிரபஞ்சம் எப்படி அழியும் என்பதை விளக்குகிறார்கள், அவர்களில் ஒருவர் ஒரு சுவிட்சை தவறாக இயக்க எல்லாம் அழிகிறது, பில்லி ‘அப்படியானால் அதை நீங்கள் தடுக்கலாமே?” என கேட்பான். இல்லை நாங்கள் அதை அனுமதிப்போம், பிரபஞ்சம் முந்தியும் அழிந்தது, பிறகும் அழியும் அதை எதற்கு தடுக்க வேண்டும்!’ என்பார்கள். விமான விபத்திலிருந்து தப்பிப் பிழைத்த ஒரேயொருவனாக பில்லி மருத்துவமனையில் இருக்கும்போது அவனருகே அமெரிக்க ஜெனெரல் அதே மருத்துவமனையில் படுத்திருப்பார். வெளியுலகிற்கு ட்ரெஸ்டன் குண்டுவெடிப்பு பற்றிய தகவலை மூடி மறைக்க முயலும்போது, நான் அங்கிருந்தேன் என பில்லி அவரிடம் கூறுவான், பேரழிவின் சாட்சியாக குழந்தைகளும் பெண்களும் மொத்தமாக வான்வழி தாக்குதலில் மரணித்ததை அவன் கண்களால் பார்த்திருப்பான். ஜெனெரல் அவனிடம் ‘அது தவிர்க்க முடியாதது’ என்பார். பில்லியம் ஆமோதிப்பான். கர்ட் வோனேனுகாட் மனிதர்களின் இந்தப் பொறுப்பற்ற தன்மையை இடித்துரைக்கிறார். உண்மையில் மனிதன் தனது சுயத்தேர்வு எனும் வாய்ப்பை தவறாக பயன்படுத்திவிட்டு காலத்தின் மீதும் விதியின் மீதும் பழிபோடுகிறான் என்பதே அவரது பிரதான குற்றச்சாட்டு.

நாவல் முழுவதும் ‘இப்படியாக இது நடந்தது’ (So it Goes) எனத் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. நிகழ்வுகளின் தவிர்க்க முடியாத தன்மையைச் சுட்டிக்காட்டுகிறது. உண்மையில் நமது தேர்வுகளின் விளைவுகளுக்கு விதியின்மீது பழி சுமத்துகிறோம் என்பதே நாவலாசிரியர் மனிதர்கள் மீது வைக்கும் குற்றசாட்டு. கில்கோர் எனும் வெளியுலகம் அறியாத அறிவியல் புனைவு எழுத்தாளர் கதைகளால் பில்லி மிகவும் ஈர்க்கப்படுகிறான். ட்ராஃபல்டோர்வாசிகள் மற்றும் அவர்களது காலக்கோட்பாடு கில்கோரின் காலக்கோட்பாடுகளுடன் நெருக்கமாக இருப்பதைக் காண முடியும். தனது மரணம் என்பது உண்மையில் மரணமல்ல, தன்னுடையது மட்டுமல்ல, எவருடைய மரணமும் மரணம் அல்ல, அவை புகைப்பட ‘போஸ்’ போல ஒரு நிலை மட்டுமே எனும் அறிதல் அவனுக்கு ஆசுவாசத்தை அளித்திருக்க வேண்டும். எஞ்சியிருப்பதன் துயரத்தையும் குற்ற உணர்வையும் மட்டுப்படுத்தியிருக்க வேண்டும். உண்மையில் இவை யாவும் பில்லி உலகில் தரித்திருக்க அவனது மனம் உருவாக்கிக்கொண்ட மாயைகள், சல்ஜாப்புகள் என உளவியல் கோணத்திலிருந்து வாசிக்க ஒரு இடமுண்டு.

ரியான் இந்தச் சித்திர நாவலை கர்ட் வோன்னுகாட்டின் மேற்கோள் ஒன்றுடன் தொடங்குகிறார். “ட்ரெஸ்டன் குண்டுவீச்சினால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை, என்னைத் தவிர, இந்த நாவலை எழுதிய வகையில் அங்கே செத்த ஒவ்வொருவரும் எனக்கு இரண்டு டாலரோ மூன்று டாலரோ ஈட்டித் தந்திருக்கிறார்கள்”. சுயமாக முடிவெடுக்கத் தெரியாத, எல்லோராலும் கைவிடப்பட்ட உயிரினமாகவே மனிதன் சித்தரிக்கப்படுகிறான். வாழ்க்கைக்கு எந்த அர்த்தமோ இலக்கோ இல்லை. இனிய நினைவுகள் கொண்ட காலத்திற்கு துன்பம் வரும்போது திரும்பிச் செல்வதைத் தவிர வேறேதும் செய்வதற்கு இல்லை. வேற்று கிரகவாசிகள் பூவுலகிலிருந்து ‘மோண்டானா’ எனும் நீலப்பட நடிகையை கவர்ந்து வருகிறார்கள். அவளுக்கும் பில்லிக்குமான உடலுறவை ஆராய்கிறார்கள். அங்கு அவர்களுக்கு குழந்தையும் பிறக்கிறது. பில்லி ‘காலத்தடையை’ கடந்தவனாக வாழ்கிறான். பில்லி எவ்வித லட்சியவாதமும் இல்லாதவன். பிறரை வென்று முன்செல்லும் திண்மையும் கூட இல்லாதவன். அமெரிக்க நாஜியாக ஆகும் பாப் போல பச்சோந்தியும் அல்ல, அவனை எதிர்த்து குரல்கொடுத்து தேநீர் கோப்பையை எடுத்ததற்காகச் சுட்டுக்கொல்லப்படும் எட்கர் டெர்பி போல நாயகனும் அல்ல. பில்லி தன்னை ‘எவருமில்லாதவன்’ என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறான். லட்சியமற்று, எவருமில்லாதவனாக வாழ இங்கு இடமிருக்கிறதா என்பதே கேள்வி. ஷோபா சக்தியின் நாவல்களுடன் இந்தக் கேள்வியை ஒப்பிட்டு நோக்கலாம் என்றே தோன்றுகிறது.
வன்முறையின் மீதான நமது அதீத நாட்டத்தை சுட்டிக் காட்டுகிறார். நாயகத்தன்மையின் பேராலும் நீதியின் பேராலும் அவை நிகழ்த்தப்படுகின்றன. ரொலாண்ட் வியரி மனிதர்களைக் கொல்வதற்கு தானே சிந்தித்து உருவாக்கிய ஆகக் குரூரமான முறையை விளக்குகிறான். ஏறத்தாழ முக்கால் பக்கத்திற்கு இந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. பாலைவனத்து எறும்பு புற்றுக்களுக்கு அருகே ஒருவனின் கைகால்களைப் பிணைந்து தேனை ஆண்குறி மற்றும் விதைப்பந்துகள் மீது ஊற்றிச் சாகடிப்பதே வியரி கண்டுபிடித்த முறை. பால் லாசரோ எல்லாவற்றையும் விட பழி தீர்ப்பதையே தனது வாழ்க்கைக்கான குறிக்கோளாகக் கொள்கிறான். தொந்தரவு செய்த நாய்க்கு விஷ உணவு கொடுத்துக் கொன்ற அனுபவத்தைப் பெருமையாகச் சொல்கிறான். யூதர்களின் உடல் கொழுப்பிலிருந்து உருவான மெழுகுவர்த்திகள் வெளிச்சத்தில் சிறை முகாம் ஒளிவிடுகிறது என்பது நம்மைக் கடுமையாகத் தொந்தரவு செய்கிறது. நாவல் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் பேசுகிறது.
பில்லிக்கு மிகவும் பிடித்த அறிவியல் புனைவு எழுத்தாளர் கில்கோர் கால இயந்திரத்தின் மூலம் கிறிஸ்துவைக் காணச் செல்லும் நாயகனைப் பற்றி நாவல் எழுதுகிறார். இயேசுவே பாலகனாக இருக்கும்போது தனக்கான சிலுவையை வடிவமைக்கிறார். உண்மையில் சிலுவையில் அறையப்பட்டுதான் இயேசு மரித்தாரா என அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறான். அவன் கொண்டுவந்த ஸ்டெதஸ்கோப் கொண்டு சிலுவையில் தொங்கும் கிறிஸ்துவின் நெஞ்சைப் பரிசோதித்து உறுதிசெய்து கொள்கிறான். மனித குலத்தின் பாவங்களுக்காக தன்னைத்தானே பலியிட்டுக்கொண்ட கிறிஸ்துவின் வாழ்க்கைச் செய்தி கைவிடப்படுவதன் துயரத்தை எழுதுகிறார். ட்ராஃபல்டோர்வாசிகள் இரண்டாம் பைபிளை உருவாக்கி மனிதர்களுக்கு அளிக்கிறார்கள். அப்போதும் கிறிஸ்து சிலுவையில் அறையப்படுகிறார், அப்போதும் மனிதர்களுக்கு சில உபதேசங்களைச் சொல்கிறார். கிறிஸ்துவுக்கும் கிறிஸ்தவத்துக்குமான இடைவெளியை நாவல் சுட்டிக் காட்டுகிறது. நமது வன்முறையின் வெளிப்பாடாகவே சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைக் காண்கிறார். ட்ரெஸ்டனின் கசாப்பு விடுதிக்குள் பதுங்கி உயிர்பிழைப்பார்கள் பில்லியும் அவனது சகாக்களும், நாவலின் தரிசனம் என்பது இந்த உலகத்தையே ‘ஸ்லாட்டர் ஹவுஸாக’ காண்பதுதான். போர் புனிதப்படுத்தபப்டுகிறது. மரணம் ‘உயிர்த்தியாகம்’ எனப் போற்றப்படுகிறது. இன்றைய சூழலில் அவற்றின் அபத்தத்தை நமக்கு உணர்த்தும் முக்கியமான படைப்பாகவே ஸ்லாட்டர் ஹவுஸ் சித்திர நாவலைக் கருத முடியும்.
January 11, 2024
சர்ப்பங்கள், வேதாளங்கள், டைனோசர்கள்- வேணு தயாநிதி கவிதை தொகுப்புக்கான முன்னுரை

(வேதாளத்துடன் செல்வதற்கான இரண்டு விதிகள் எனும் வேணு தயாநிதியின் கவிதை தொகுப்பிற்காக எழுதிய முன்னுரை. பதாகை- யாவரும் வெளியீடாக வெளிவர உள்ளது.)
புனைவெழுத்தாளனாக அல்ல, ஒரு கவிதை வாசகனாக என்னை நிறுத்திக்கொண்டு நண்பர் வேணு தயாநிதியின் முதல் கவிதை நூலுக்கு என் வாசிப்பை அளிப்பதே நியாயமாக இருக்கும். கவிதை குறித்து எழுதுவது அதன் பேசுபொருள் குறித்து எழுதுவது அல்ல. கம்பன் சொல்லை அம்புக்கு இணைவைத்தபடி இருக்கிறான். இராமனின் அம்பு தன்னை துளைத்துவிட்டது என எதிராளி உணர்ந்து கொள்வதற்கு முன்னரே அவன் உயிரை அரிந்துவிடும். நல்ல கவிதையும் அப்படித்தான். அது அர்த்தப்படுத்திக்கொள்வதற்கு முன்னரே நம்முள் ஏதோ ஒன்றை நிகழ்த்திவிடுகிறது. இது நல்ல கவிதை, இது நல்ல கவிதை, இது என்னை என்னமோ செய்கிறது. இப்படி எனக்கு ஏற்படும் பதைப்பை வாசகருக்கு கடத்த முயல்வதே கவிதை குறித்தான எழுத்துக்களின் நோக்கமாக இருக்க முடியும்.
வேணு உயிரியல் / மரபணுவியல் சார்ந்து உயராய்வு செய்து வரும் விஞ்ஞானி. அமேரிக்காவில் வசிக்கிறார். அவரது ‘பீத்தோவனின் ஆவி’ சிறுகதை வெளியாகி கவனம் பெற்ற அதே சமயத்தில் தான் எனது முதல் கதையான ‘வாசுதேவன்’ வெளிவந்தது. ‘சுடோகுயி’ போன்ற அறிவியல் புனைவு கதைகளும் எழுதியுள்ளார். ‘காஸ்மிக் தூசி’ எனும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதி வருகிறார். இந்த முதல் தொகுப்புக்கு அவர் எடுத்துக்கொண்ட காலம் மிக அதிகம் தான். ஆனால் அதற்கான அவரது மெனக்கிடல்களை கவிதை தொகுப்பை வாசிக்கும் போது உணர்ந்துக்கொள்ள முடிந்தது.
வேணுவின் கவிதைகளில் முதன்மையாக என்னை வசீகரித்தது அமேரிக்க பனிக்கால சித்தரிப்புகள். “எண்ண முடியாத இலைகளின் வெறுமை”
என சுட்டப்படும் இலைகள் உதிர்ந்த பிர்ச் மரங்களும், வெண்பனியின் வெறுமையும், தனித்த பறவைகளும், மேப்பிள் மரங்களின் தனிமையும் பல கவிதைகளில் கையாளப்படுகின்றன. குளிர்கால அமெரிக்க நிலக்காட்சிக்கும் ஜனசந்தடி மிக்க மதுரை வீதிகளுக்குமாய் கவிதைகள் அலைபாய்கின்றன. காலமும் வெளியும் மயங்கி மேப்பிள் மர நிழலில் இருந்தபடி ஒரு நொடி மதுரைக்கு சென்று திரும்புகிறார். சுனைநீரில் பால்யகாலத்து கிணற்று குளியலை தேடுகிறார். தூரதேசத்து மலையடி சுனையின் ஒரு துளி இவற்றையெல்லாம் கொண்டு சேர்க்கிறது. புல் வெட்டும் இயந்திரத்தை காணும்போது ஊரிலிருந்த காராம் பசு நினைவுக்கு வருகிறது. “தூய வெண்மையின்/
பொருளின்மையில்,/ எப்படியாவது/
ஒரு துளி அர்த்தத்தை/சேர்த்துவிட/
முயல்வது போல்” என்கிறார். இயற்கை காட்சிகளின் சித்தரிப்பிலிருந்து மீபொருண்மை தளத்திற்கு தாவிட முடிகிறது. இஸ்கான் கீதை பதிப்பில் விஸ்வரூப தரிசன படம் ஒன்றுண்டு. பிரம்மாண்ட விஷ்ணுவைச்சுற்றி கணக்கற்ற குமிழ்கள் மிதக்கும். அவை ஒவ்வொன்றிலும் விஷ்ணு சயனித்திருப்பார்.
பிரபஞ்ச விளையாட்டு
கரைந்து குழைந்து
காற்றைக் குடிக்கும்
சோப்புக்குமிழி
வீங்கிப்பெருத்து
மிதந்தலையும்.
மூப்படைந்து
துளைகள் தோன்ற
வெடித்துச் சிதறும்.
உடையாத குமிழியொன்று
உயர்ந்தெழுந்து
நிறமடர்ந்து
வானவில்லாய்
விரிவடையும்.
மதிய வெய்யில்
மரத்தடியில் அம்முக்குட்டி
ஊதுகிறாள்
விளையாட்டாய்.
அவள் குழல் முன்
தோன்றி வளர்ந்து
விரிந்து மறையும்
எண்ணற்ற
பிரபஞ்சம்.
வேணுவின் கவிதை பிள்ளை விளையாட்டை பிரபஞ்ச விளையாட்டாக உருமாற்றுகிறது. மற்றொரு கவிதையான ‘திருப்பள்ளியெழுச்சி - மினியாப்பொலிஸில்’ உறங்கும் மகளை எழுப்புகிறது.
“நீ கிறுக்கப்போகும் ஓவியத்தில்
உதிப்பதற்கென்று
தயாராகி விட்டது சூரியன்
எழுந்துவிடு
சீக்கிரம்.” எனும் இவ்வரி சட்டென ஒரு மனவெழுச்சியை அளித்தது.
“இந்த அறைக்கு/ எப்படி வந்தேன்?/ இந்தப் படுக்கையில்/ ஏன் கிடக்கிறேன்?/
நான் யார்?” என முழுக்க மீபொருண்மை தளத்தில் நிகழும் கவிதையும் உண்டு. “சாலையைக் கடந்து/ மறுபுறம் அடைந்தால்/நானும்/ அவன் தானா?” (சிவப்பு விளக்கு) எனும் கவிதையில் காலம் ஒரு சாலையாக ஆகிறது. லிடியா டேவிஸின் ‘ரயிலின் மாயாஜாலம்’ எனும் குறுங்கதை நினைவுக்கு வந்தது. “நம்மை விட்டு அவர்கள் ரயில் பெட்டியில் விலகி, கழிப்பறையின் திறந்த கதவுகளை கடந்து, கடைசியில் இருக்கும் நழுவு கதவின் வழியாக, ரயிலின் ஏதோ ஒரு பகுதிக்குள் நடந்து செல்லும்போது, நாம் காணும் அவர்களின் பின்புற தோற்றத்தைக்கொண்டு நம்மால் சொல்ல முடியும், இவ்விரு பெண்கள், அவர்களது இறுக்கமான கறுப்பு ஜீன்ஸில், அவர்களது உயர்ந்த குதியணியில், இறுக்கமான ஸ்வெட்டர் மற்றும் ஜீன்ஸ் மேற்சட்டையின் நூதனமான அடுக்குகளில், நிறைந்து வழியும் நீளமான கருப்பு தலைமுடியில், அவர்கள் முன்னே செல்லும் பாங்கில், அவர்கள் ‘டீன்களின்’ இறுதியை சேர்ந்தவர்கள் அல்லது இருபதுகளின் தொடக்கத்திலிருப்பவர்கள் என்று. ஆனால் அவர்கள் நம்மை நோக்கி, முன்னாள் இருக்கும் விந்தையான மாயாஜாலம் நிறைந்த பகுதியில் கொஞ்சநேரம் சுற்றிபார்த்துவிட்டு, அப்போதும் நன்கு அடிவைத்தபடி, மறுபக்கத்திலிருந்து திரும்பி வரும்போது, நம்மால் அவர்களது முகங்களை இப்போது காண முடியும், வெளிறி, கோரமாக, கண்களுக்கு கீழே ஊதா நிழல்கள் படிய, கன்னங்கள் தோய, பொருத்தமற்ற மச்சங்கள் அங்குமிங்கும் தெரிய, கன்ன கோடுகள் தெரிய, நெற்றியில் காக்கை பாதம் போல் சுருக்கம் விழ, அவர்கள் இருவரும் சற்று மென்மையாக புன்னகைத்தாலும் கூட, ரயிலின் மாயாஜால விளைவின் காரணமாக அவர்கள் இதற்கிடையே இருபது ஆண்டுகள் முதிர்ந்துவிட்டனர் என்பதை நாம் காணவே செய்கிறோம்”
இவை எதுவும் இல்லாமல் சித்தர் பாடல் போல தொனிக்கும் ஒரு கவிதை சட்டென எங்கிருந்தோ சந்தத்துடன் வந்து சேர்கிறது.
“இரவி அணைந்து
இரவு வரக்கண்டு
விடாய் கொண்டு
விழி அயர்ந்து
கடாவு எழ
அனுட்டானம் எனப்
பிரக்ஞை கொண்டு
கண் மலர எழுந்தனன்
யானே இன்று.
எழாவிடின்
உறட்டை சவம்
நிவகம்
எவர்க்கும்
சூதகம்.”
(நிகழ்தகவின் மானுடத்துவம்).
இயற்கை காட்சிகளின் மீபொருண்மை தளம் ஒரு வகை என்றால் வழிபடுதலுக்குரியவை நிகழ் தளத்திற்கு இறங்கி வருவது மற்றொரு வகை. சடாரி, காலபைரவரின் கடைசி பயணம், நவீன சிவபெருமானின் ஒரு ஞாயிறு மதியம், புத்த வீர சாமி ஆகிய கவிதைகளை இந்த வகையில் சொல்லலாம். இவ்வகை கவிதைகளில் ‘நந்தி’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு பிரதோஷ பூஜை கவிதைக்குள் என்னவாக எல்லாம் உருமாறுகிறது என்பதை கவனிக்கலாம்.
நந்தி
ஆலகால விடம் அருந்தி
அம்மை மடியில்
மயங்கிக் கிடக்கையில்
காத்திருக்கும் பக்தர்களின் வரிசைக்கு, காவல்.
தசைச்செழிப்பு புடைத்தெழும்ப
எந்நேரமும் எழுந்துவிடும் ஆயத்தமாய்
பிரகதீஸ்வரர் முன்
வீற்றிருக்கும் நந்தி.
கயிலாயத்துள் நுழையும்
பக்தகோடிக்கு ஜருகண்டி.
அத்துமீறினால்
விஷ்ணுவே ஆனாலும் விபரீதம்.
வெறும் மூச்சுக்காற்று போதும்
கருட பகவானை
தடுமாறி விழவைக்க.
உயிர் பிச்சைக்கு
அந்த சிவபெருமானே வந்து
சொன்னால்தான் ஆச்சு.
அவதார அதிகார கைலாச
சிறிய பெரிய, மற்றும்
சாதாரண நந்திகள் மத்தியில்
ஓரமாய் எங்கோ உடனுறைகிறார்
சிவபெருமான்.
காலத்தில் உறைந்த கறுப்பு உலோகம்
விலாப்புறங்கள் சிலிர்த்து திமில் சரிய
முன்னங்கால் உயர்த்தி
கொம்பசைத்து
வாலைச்சுழற்றி
கழுத்துப்பட்டையின் மணி ஒலிக்க
எழுந்துவிடக்கூடும், எந்நேரமும்.
என்றாலும்,
நந்திகள் ஏன் எப்போதும்
அமைதியாக
அமர்ந்திருக்கின்றன?
பிரதோஷ நேரங்களில்
எண்ணற்ற நந்திகளுள்
ஏதோ ஒன்றை தற்செயலாய் தெரிவுசெய்து
அதன் சிரசின்மேல்
தன் ஏழுதாண்டவங்களுள்
ஏதாவது ஒன்றை
இடக்கால் வீசி
ஆவேசமாய் நடனமிடுகிறார்
சிவபெருமான்.
நடனம் முடியும்வரை
ஈட்டி முனை வேய்ந்த வேலிக்குள்
மூச்சைப்பிடித்தபடி
விழிபிதுங்க
அசையாமல்
அமர்ந்திருப்பதைத் தவிர
வேறு வழியில்லை.
நந்தி
இம்மி அசைந்தாலும்
போதும்.
அவரின்
அடவு
தப்பிவிடும்.
வேணு இலகுவான விளையாட்டு நிறைந்த கவிதைகளும் எழுதியுள்ளார். “படிமங்கள் செறிந்த/ வரிகளுக்குள்/ ஆழமாகவே/ நுழைந்து சென்றிருந்தது/
தோட்டா./ சிரமம் ஏதுமின்றி. (ஒரு புத்தகத்தின் மரணம் அல்லது
கவிதையைக் கொலை செய்வது எப்படி?). ‘அந்த சம்பவத்திற்கு பிறகு’ என்றொரு கவிதையில் ஒரு சின்ன விளையாட்டு நிகழ்கிறது. வடையை தொலைத்த காகம் பாட்டு பயிற்சியை நிறுத்திவிட்டு காதலில் விழுகிறது. வடையை வென்று பின்னர் திராட்சையை சாப்பிடமுடியாத நரியோ ஊர் ஊராக அலைந்து கொண்டிருக்கிறது. பாட்டி கதைக்கும் நிதர்சனத்திற்கும் இடையிலான கோட்டை அழிக்கிறாள். இந்த கவிதையின் ஒருவித கால- வெளி விளையாட்டு தொழில்படுகிறது. ‘தக்காளி காதல்’ உணவாகிப்போன தக்காளிக்கான அஞ்சலி குறிப்பு. தனது நல்லியல்புகளை ஈந்து பிறரை மேன்மையாக்கி தன்னை கரைத்துக்கொண்ட தக்காளி நீடுழி வாழட்டும். சிரிக்கும் புத்தரும் குழந்தையின் மென்பாதமும் அதை விவரிக்க பயன்படுத்தப்படும் உவமை.
வேணுவின் கவிதைகளில் சர்ப்பங்கள், பூனைக்குட்டிகள், டைனோசர்கள், நிழல்கள், வேதாளங்கள் என வெவ்வேறு படிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பூனைக்குட்டியும் டைனோசர்களும் உறவு சிடுக்குகளை சொல்ல உதவுகின்றன. “வெறும்/சாதாரண/ ஒரு பூனைக்குட்டி./அது இல்லாமல்/
வாழவே முடியாது/என்று நினைத்ததுதான்-/எவ்வளவு பெரிய
முட்டாள்தனம்?”. ‘அல்லல் உழப்பது’ என்றொரு கவிதை குடிகாரனுக்கு நண்பனாக இருப்பதைப் பற்றி சொல்கிறது. “இன்றின்/வரஇயலாமையை/ ஏதாவதொரு/ பொய்சொல்லி/ எப்படியாவது/ நிறுவி விடலாம்தான்./
ஆனால்/ இன்றிரவு/அவன் உடலை/ அவன் வீட்டில்/ வேறு யார் /
கையளிப்பார்?” என விசனப்படுகிறது. ‘மயானத்திலிருந்து திரும்பிய பிறகு’ எனும் இறந்து போன முன்னாள் காதலிக்காக வெளிப்படையாக துக்கம் கொண்டாட முடியாத இக்கட்டான துயர நிலையை சுட்டுகிறது.
வேதாளங்கள் நம்மை அசைவுகரியப்படுத்துபவை. நாமாக சென்று தேர்பவை அல்ல. அவை நம்மை வந்து சேர்கின்றன ஆனால் மெல்ல மெல்ல அவற்றை நேசிக்க தொடங்குகிறோம். வேதாளத்திற்கு ஏதோ ஒரு தோள் போதும். நமக்கு தான் வேதாளம் வேண்டியதாய் இருக்கிறது. டைனோசர்கள் பீடிக்க காத்திருக்கின்றன. ‘நிழல்களின் புகலிடம்’ கவிதை வாசிக்கும் போது அவையும் அப்படி காத்திருப்பதை காண முடிகிறது. “என் இருப்பிலிருந்து/
பிரித்துவிட முடியாதபடிக்கு/ ஒன்றி பதுங்கியிருக்கின்றன/ எனக்குத்தெரியாமல்/ எப்படியோ/
எனக்குள் குடியேறிவிட்ட/ நிழல்கள்.” சர்ப்பங்களும் இப்படி நம்முடனேயே வாழ்கின்றன. “இப்போதுங்கூட ஒன்று/
இந்த அறையில் தான்/
எங்கோ ஒளிந்திருக்கிறது/ அப்படியே இருக்கட்டும்./ கைதொடு தூரத்தில் இருந்தாலும்/ அவற்றை கண்டு கொள்ளாதீர்./ நீங்கள் / கண்டுகொள்ளாதவரை/
அவைகளும்/ உங்களை / கண்டுகொள்வதில்லை.” முகமூடிகள் முகத்தின் இடத்தை எடுத்துக்கொள்கின்றன. எது முகம் எது முகமூடி என்பது புரியாமலாகிறது. கார்ல் யுங் ‘நிழல்’ நமக்குள் சேகரமாவது என்கிறார். பலவீனமான தருணத்தில் நம்மை ஆட்கொள்ளும் என்கிறார். நிழலை கண்டுகொள்வதும் அதன் இருப்பை அங்கீகரிப்பதும் இன்றியமைதாததென உணர்வதும் என பல்வேறு நிலைகளில் வேணுவின் கவிதை பயணிக்கிறது. இந்த நிழல் தான் வேதாளமாகவும் டைனோசராகவும் பூதகணங்களாகவும் கவிதைக்குள் வருகின்றன. இந்த இருமை ஒரு கற்பிதம்தானோ எனும் பார்வையை ‘பூதகணங்களின் கனவில் வரும் தேவதைகள்’ கவிதை வழி அடைகிறோம்.
“இமைகளுக்குள்
கருவிழிகள்
உருளும் ஆழ்துயிலில்
தேவதைகள்
தோன்றும்
கனவில்.
தேவதையின் முகம் கண்டு
குழந்தையைப்போல
முறுவல் பூக்கும்
பூத முகம்.
இறுக்கம் அவிழ்ந்து
புன்னகை இடம் மாறி
குடிகொள்கையில்
பூதமும்
தேவதையும்
ஒன்று.”
தற்கால தமிழ் கவிதைகளின் பரப்பில் வேணு தயாநிதியின் கவிதைகளை எங்கு பொருத்திப்பார்ப்பது எனும் கேள்விக்கு என்னிடம் துலக்கமான பதில் ஏதும் இல்லை. நுண் சித்தரிப்புகள், பகடி, இயற்கை சித்தரிப்பு என பல்வேறு கவிஞர்களின், கவிதை போக்குகளின் தாக்கம் உள்ளதை கவனிக்க முடிகிறது. ஏறத்தாழ பத்துவருட காலம் எழுதிய கவிதைகள் என்பதால் இப்படி வெவ்வேறு தாக்கங்கள் புலப்படுவது இயல்பே. எனினும் ஒரு கவிதை வாசகனாக மிகுந்த நிறைவளித்த தொகுப்பிது என்பதை நிச்சயமாக சொல்ல முடியும். நண்பர் வேணுவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
சுனில் கிருஷ்ணன்
22.12.2023
January 6, 2024
சிறுகதை வாசிப்பின் 41 விதிகள்
(சிங்கப்பூரில் சிறுகதை வாசிப்பது பற்றி புங்கோல் வட்டார நூலகத்தில் எடுத்த வகுப்பிற்காக தயார் செய்த குறிப்பு. மயிலனின் ' ஆகுதி' மற்றும் லதாவின் 'பச்சை நிற கண்களுடைய கறுப்பு பூனை' ஆகிய கதைகளை விவாதிக்க எடுத்துக்கொண்டோம்.)

சிறுகதை என்பது சிறிய கதை அல்ல. பக்க அளவோ வார்த்தை எண்ணிக்கையோ அறுதியான வரையறை அல்ல. சிறுகதை என்பது ஒரு கதை கட்டுமானம். முடிவின் வழியாக திறந்து கொள்ளும் கதையமைப்பு.
சிறுகதையை அணுகும்போது நாம் கருத்தில் கொள்ளவேண்டியவை
கதை சொல்லி கரு தலைப்பு சொல்முறை படிமம் உரையாடல் விவரணை தரிசனம் – கண்டடைதல் அசல் தன்மை நுண்மை
சிறுகதை வாசிப்பு- சில அடிப்படைகள்
41. சிறுகதை எழுதுவதிலும் வாசிப்பதிலும் நாம் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விதி - The golden rule is that there is no golden rule! நாம் பின்பற்றியே ஆகவேண்டிய பொன் விதி என ஏதுமில்லை. விதிவிலக்குகள் தான் கலையையும் கலைஞர்களையும் உருவாக்குகின்றன. ஆகவே திறந்த மனதுடன் உங்கள் முழு நம்பிக்கையை படைப்பிற்கு அளித்து வாசிக்க தொடங்கவும். வாசித்ததை விவாதிக்கும் தோறும் புரிதல் பெருகும். நமக்கு புரியாததால் மோசமான படைப்பாக இருக்க வேண்டியதில்லை. நமக்கு புரிகிறதாலேயே உன்னதமான படைப்பாக இருக்க வேண்டியதும் இல்லை.
January 4, 2024
ஈக்களின் பிரபு - மார்கோ டெனெவி- மொழியாக்க குறுங்கதை

அர்ஜென்டினா எழுத்தாளர் Marco Denevi PC- Wikipedia
ஈக்கள் தங்களது கடவுளை கற்பனை செய்தன. அதுவும் ஒரு ஈ தான். ஈக்களின் பிரபு ஒரு ஈ. ஒருகணம் பச்சையாக, ஒருகணம் கருப்பாகவும் பொன்னிறமாகவும், மறுகணம் இளஞ்சிவப்பாகவும், மறுகணம் வெள்ளையாகவும், மறுகணம் கத்திரிப்பூ நிறத்திலும் இருக்கிறது. கற்பனைக்கு எட்டாத ஈ, அழகிய ஈ, மாபெரும் ஈ, அச்சுறுத்தும் ஈ, கருணை மிக்க ஈ, பழிதீர்க்கும் ஈ, நீதியுணர்வு கொண்ட ஈ, இளமையான ஈ, ஆனால் எப்போதுமே அது ஈ தான். சில அதன் அளவை காளையுடன் ஒப்பிடத்தக்க அளவிற்கு பெருக்கின, பிற காணவே முடியாத அளவிற்கு சிறியதாக கற்பனை செய்தன. சில மதங்களில் அதற்கு ரெக்கைகள் கிடையாது (அது பறக்கும் ஆனால் அதற்கு ரெக்கைகள் தேவையில்லை என வாதிட்டன ), அதேசமயம் வேறு மதங்களில் அதற்கு எண்ணிலடங்கா ரெக்கைகள் இருந்தன. அதன் உணர் காம்புகள் கொம்புகளை போல இருந்ததாக இங்கு சொல்லப்பட்டது, அங்கு தலை முழுவதும் கண்களால் சூழப்பட்டதாக சொல்லப்பட்டது. சிலருக்கு அது எப்போதும் ரீங்கரித்துக்கொண்டே இருந்தது , வேறு சிலருக்கு எப்போதும் மவுனமாக இருந்தது. ஆனால் அப்போதும் அதனால் அதேபோல தொடர்புறுத்திக்கொள்ள முடியும். எனினும் எல்லாவையும் நம்பியது- ஈக்கள் இறந்ததும் அது அவற்றை சொர்க்கத்திற்கு கொண்டு செல்லும் என்பதை. சொர்க்கம் என்பது கெட்டு நாறும். அழுகிய மாமிசத் துண்டு. அதை உண்டு அழிக்காமல் செத்த ஈக்களின் ஆன்மாக்கள் நித்திய காலத்திற்கு மொய்த்து திரியலாம். ஆம், இந்த திவ்யமான கழிசல் துண்டு ஈக்களின் குழாமினால் மீண்டும் உற்பத்தி செய்யவும் மீண்டும் பிறப்பிக்கவும் படும். இவை நல்ல ஈக்களுக்குத்தான். கெட்ட ஈக்களும் இருப்பதினால், அவற்றுக்கு நரகம் என ஒன்றும் இருந்தது. சபிக்கப்பட்ட ஈக்களுக்கான நரகம் என்பது மலமற்ற, குப்பைகளற்ற, அழுக்குகளற்ற, துர்நாற்றமற்ற, எதிலும் எதுவுமே இல்லாத, தூய்மையான, பளீரென மின்னும், வெள்ளை விளக்கால் வெளிச்சமடைந்த இடம்தான்; வேறு சொற்களில் சொல்வதானால், கடவுளின் அருகாமையை உணர்த்தாத இடம்.
January 3, 2024
லிடியா டேவிஸ் குறுங்கதைகள்
லிடியா டேவிஸ் (Lydia Davis) அமெரிக்க எழுத்தாளர். ஃபிரெஞ்சிலிருந்து மொழியாக்கங்களும் செய்திருக்கிறார். குறுங்கதைகள் சிறுகதைகள் நாவல்கள் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவரது ‘Cant and Wont’ தொகுப்பிலிருந்து எனக்கு பிடித்த சில குறுங்கதைகளை மொழியாக்கம் செய்துள்ளேன். என் நோக்கில் சமகாலத்தில் குறுங்கதைகளை எழுத எண்ணும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய எழுத்தாளராக லிடியா டேவிஸை கருதுகிறேன். சிறிய சிறுகதைகள், சடுதி கதைகள் (sudden fiction) நுண்கதைகள் (microfiction) மின்னல்வெட்டு கதைகள் (flash fiction) இப்படி பல்வேறு பிரிவுகளாக வடிவம் மற்றும் சொற்களின் எண்ணிக்கை சார்ந்து வகைப்படுத்தப்படுகிறது. தமிழில் ‘குறுங்கதைகள்’ என மொத்தமாக அடையாளப்படுத்துகிறோம். நுண்ணிய அவதானிப்பு, சொற்சிக்கனம், மொழிவளம், அறிவார்ந்த தெறிப்பு, உணர்வுச்சம் என பல இயல்புகள் லிடியாவின் கதைகள் வழி நமக்கு கிடைக்கின்றன. சிங்கப்பூரில் குறுங்கதைகள் அமர்வுக்காக மொழியாக்கம் செய்தவை. அகழ் மின்னிதழில் வெளியானவை.
நாய் முடி
நாய் போய்விட்டது. நாங்கள் அவன் இன்மையை உணர்கிறோம். வாயில்மணி ஒலிக்கும்போது யாருமே குரைப்பதில்லை. நாங்கள் வீட்டிற்கு தாமதமாக வரும்போது எங்களுக்காக எவரும் காத்திருக்கவில்லை. நாங்கள் அவனது வெள்ளை முடிகளை எங்கள் வீட்டிலும் எங்கள் ஆடைகளிலும் அங்குமிங்குமாக காண்கிறோம். நாங்கள் அவற்றை எடுக்கிறோம். நாங்கள் அவற்றை தூர வீசியெறிய வேண்டும். ஆனால் எங்களுக்கு அவை மட்டுமே அவனுடைய மிச்சமாக இருக்கிறது. நாங்கள் தூர வீசியெறிவதில்லை. எங்களுக்கு ஒரு குருட்டு நம்பிக்கை- எங்களால் மட்டும் போதுமான அளவு அவற்றை சேகரிக்க முடிந்தால், எங்களால் மீண்டும் நாயை உருவாக்கிவிட முடியும்.
ooo
ரயிலின் மாயாஜாலம்
நம்மை விட்டு அவர்கள் ரயில் பெட்டியில் விலகி, கழிப்பறையின் திறந்த கதவுகளை கடந்து, கடைசியில் இருக்கும் நழுவு கதவின் வழியாக, ரயிலின் ஏதோ ஒரு பகுதிக்குள் நடந்து செல்லும்போது, நாம் காணும் அவர்களின் பின்புற தோற்றத்தைக்கொண்டு நம்மால் சொல்ல முடியும், இவ்விரு பெண்கள், அவர்களது இறுக்கமான கறுப்பு ஜீன்ஸில், அவர்களது உயர்ந்த குதியணியில், இறுக்கமான ஸ்வெட்டர் மற்றும் ஜீன்ஸ் மேற்சட்டையின் நூதனமான அடுக்குகளில், நிறைந்து வழியும் நீளமான கருப்பு தலைமுடியில், அவர்கள் முன்னே செல்லும் பாங்கில், அவர்கள் ‘டீன்களின்’ இறுதியை சேர்ந்தவர்கள் அல்லது இருபதுகளின் தொடக்கத்திலிருப்பவர்கள் என்று. ஆனால் அவர்கள் நம்மை நோக்கி, முன்னாள் இருக்கும் விந்தையான மாயாஜாலம் நிறைந்த பகுதியில் கொஞ்சநேரம் சுற்றிபார்த்துவிட்டு, அப்போதும் நன்கு அடிவைத்தபடி, மறுபக்கத்திலிருந்து திரும்பி வரும்போது, நம்மால் அவர்களது முகங்களை இப்போது காண முடியும், வெளிறி, கோரமாக, கண்களுக்கு கீழே ஊதா நிழல்கள் படிய, கன்னங்கள் தோய, பொருத்தமற்ற மச்சங்கள் அங்குமிங்கும் தெரிய, கன்ன கோடுகள் தெரிய, நெற்றியில் காக்கை பாதம் போல் சுருக்கம் விழ, அவர்கள் இருவரும் சற்று மென்மையாக புன்னகைத்தாலும் கூட, ரயிலின் மாயாஜால விளைவின் காரணமாக அவர்கள் இதற்கிடையே இருபது ஆண்டுகள் முதிர்ந்துவிட்டனர் என்பதை நாம் காணவே செய்கிறோம்.
ooo
மோசமான நாவல்
எனது பயணத்தில் நான் கொண்டு வந்த இந்த சுவாரசியமற்ற, கடினமான நாவலை வாசிக்க முயன்றபடி இருக்கிறேன். ஒவ்வொருமுறையும் பயந்தபடி, நான் பலமுறை அதனிடம் திரும்ப சென்றிருக்கிறேன், ஒவ்வொருமுறையும் கடந்தமுறையை விட எவ்வகையிலும் மேம்படவில்லை என்பதை கண்டடைந்திருக்கிறேன், அது இதற்குள்ளாக எனக்கு ஒரு பழைய நண்பனை போல ஆகிவிட்டது. மோசமான நாவல் எனும் எனது பழைய நண்பன்.
ooo
குழந்தை
அவள் குழந்தையின் மீது குனிந்து படிந்திருந்தாள். அவளால் அவளை விட்டுச்செல்ல முடியாது. ஒரு மேசையின் மீது குழந்தை அசைவின்றி கிடத்திவைக்கப்பட்டிருந்தது. அவள் குழந்தையை இன்னுமொரு புகைப்படம் எடுக்க விரும்பினாள், கடைசி புகைப்படமாக இருக்கக்கூடும். உயிருடனிருக்கும்போது, புகைப்படத்திற்கு அசையாமல் அமர்ந்திருக்க குழந்தையால் ஒருபோதும் இயலாது. அவள் தனக்குள்ளாகவே சொல்லிக்கொள்கிறாள் “நான் கேமராவை எடுத்து வருகிறேன்” குழந்தையிடம் “அசையாதே” என சொல்வது போல.
ooo
உறைந்த பட்டாணி உற்பத்தியாளருக்கு ஒரு கடிதம்
அன்புள்ள உறைந்த பட்டாணி உற்பத்தியாளருக்கு,
உங்களது உறைந்த பட்டாணி பொதியில் சித்தரிக்கப்பட்ட பட்டாணிகள் மிகவும் ஈர்ப்பற்ற நிறமுடையவை என நாங்கள் எண்ணுவதால் உங்களுக்கு நாங்கள் எழுதுகிறோம். மூன்று அல்லது நான்கு பட்டாணி தோலிகளில், ஒன்று மட்டும் வெடித்து அதிலிருந்து பட்டாணிகள் அருகே உருளும் சித்தரிப்பு கொண்ட 16 அவுன்ஸ் பிளாஸ்டிக் பொதியை பற்றித்தான் இங்கே குறிப்பிடுகிறோம். பட்டாணிகள் மங்கலான மஞ்சள்- பச்சை நிறமுடையவையாக உள்ளன, புதிய பட்டாணிகளின் நிறம் என்பதைவிட பட்டாணி சூப்பின் நிறம், அதுவும் அவை உங்கள் பட்டாணிகளின் பளீரிடும் அடர் பச்சை நிறத்திற்கு எவ்வகையிலும் தொடர்பற்றவை, மேலும், சித்தரிக்கப்பட்ட பட்டாணிகள் பொதிக்குள் இருக்கும் பட்டாணிகளைவிட அளவில் மும்மடங்கு பெரியவை, அதனுடைய மங்கல் நிறத்துடன் இணையும் போது இன்னும் ஈர்ப்பற்றதாக ஆக்குகிறது- அவை முதிர்ந்த நிலையை கடந்ததாக தென்படுகின்றன. மேலும், சித்தரிக்கப்பட்ட பட்டாணிகளின் நிறம் உங்கள் பொதியின் கண்ணைப் பறிக்கும் நியான் பச்சை நிற எழுத்துக்களின் நிறம் மற்றும் பிற அலங்காரங்களின் நிறத்துடன் ஒத்துவராமல் துருத்தி தெரிகிறது. நாங்கள் உங்களது பட்டாணிகளின் சித்தரிப்பை பிற உறைந்த பட்டாணி பொதிகளின் சித்தரிப்புடன் ஒப்பிட்டு பார்த்தோம், இதுவரையில் உங்களுடையவையே மிகவும் ஈர்ப்பற்றதாக உள்ளது. பெரும்பாலான உணவுப்பொருள் உற்பத்தியாளர்கள் பொதிக்குள் இருக்கும் உணவை விட அதிக ஈர்ப்புடையதாக பொதியில் உணவை சித்தரிப்பார்கள், ஆகவே அது ஒரு ஏமாற்று தான். நீங்கள் நேர்மாறாக செய்கிறீர்கள்: நீங்கள் பிழையாக உங்கள் பட்டாணிகளை உள்ளே இருப்பதுடன் ஒப்பிட ஈர்ப்பற்றதாக சித்தரிக்கிறீர்கள். எங்களுக்கு உங்கள் பட்டாணிகள் பிடித்திருக்கின்றன, உங்கள் தொழில் முடங்க நாங்கள் விரும்பவில்லை. ஆகவே தயவு செய்து உங்கள் சித்தரிப்பை மறுபரிசீலனை செய்யவும்.
தங்களுக்கு உண்மையுடன்.
January 1, 2024
பார்ன்ஸ்- எட்மண்டோ பாஸ் சோல்டன் (Edmundo Paz Soldan)
(பொலிவிய எழுத்தாளர்- ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் Kirk Nessat)

இவை எல்லாமே ஏதோ ஒரு பிழை, தனது சிறையில் அடைபட்டிருந்த பார்ன்ஸ் புரிந்துகொண்டார், அவர் உண்மையை சொல்வதே சரியானதாக இருக்கும். எனினும், பின்னர் மங்கலான அறையில், வெளிச்சத்தால் கண்களில் பார்வையற்று போன சமயத்தில், அதிபரை கொன்ற குற்றச்சாட்டு குறித்து விசாரணை தொடங்கியபோது,, தனது வாழ்வின் சாதாரணத்தன்மை குறித்தும், தனது வாழ்க்கையின் மாபெரும் முக்கியத்துவமின்மை குறித்தும் அவர் சிந்தித்ததன் விளைவாக, முதன்முறையாக எவ்வித பயனும் அற்ற முக்கியத்துவத்தின் எடையை உணர்ந்தவராக, ஆமாம், அதிபரை அவரே கொன்றதாக சொன்னார். அதன்பின்னர் தரபாகா படையில் இருந்த இருநூற்றி எண்பத்தியேழு படைவீரர்களை கொன்ற வெடிகுண்டை புதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டார். வெறுப்புடன் சிரித்தபடி, பழியை தழுவிக்கொள்வதை மட்டுமே அவரால் செய்ய முடிந்தது. பின்னர் இடைவெளியே இல்லாமல், பொலிவியாவின் பொருளாதாரம் வீழ காரணமாயிருந்த எரிவாயு குழாயை சிதைத்ததையம்,, கோச்சா பாம்பா வனப்பகுதியின் தொண்ணூற்றி இரண்டு சதவிகிதத்தை கபளீகரம் செய்த நெருப்பை பற்றவைத்ததையும், பாதிவழியில் பறந்துகொண்டிருந்த நான்கு LAB ஜெட் விமானங்களை வெடிக்க வைத்ததையும், லா பாஸின் வட அமெரிக்க தூதுவரின் மகளை வன்புணர்வு செய்ததையும் ஒப்புக்கொண்டார். மறுநாள் சூரியோதயத்தின்போது அவரை அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொள்வார்கள் என அறிவித்தார்கள். ஆம், அவரைப்போன்ற வாழ உரிமையற்ற ஒரு மனிதரை அவர்கள் அப்படித்தான் செய்ய வேண்டும் என அவரும் ஒப்புக்கொண்டார்.
December 29, 2023
சமூகத்தை மாற்றப்போகிறேன் எனும் போலித்தனமான நம்பிக்கைகள் ஏதும் எனக்கில்லை - ராமச்சந்திர குகாவுடனான உரையாடல்

(இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருது விழாவில் இந்திய வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான ராமச்சந்திர குகா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் எனது ஆதர்சங்களில் ஒருவர். அவருடைய அரங்கை வழிநடத்தும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் குகா விரிவாக பதிலுரைத்தார். அவருடைய பதில்களை மேடையில் சுருக்கமாக மொழியாக்கம் செய்தேன். எனினும் அது மேடைக்கென செய்தது, விடுபடல்கள் இருந்தன என்பதால் மொத்த உரையாடலையும் மொழியாக்கம் செய்தேன். ஸ்ருதி டிவியில் இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு சப் டைட்டிலாக கொடுக்கலாம் என்பதே எனக்கிருந்த யோசனை. ஆனால் சப் டைட்டில் சேர்ப்பது எளிதான காரியம் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன். உரையாடலை வாசிக்க விரும்புபவர்கள் வாசிக்கலாம்.)

வரலாற்றை கதையாக காணும் எழுத்தாளருக்கான விருது விழாவில் வரலாற்றிலிருந்து சுவாரசியமான கதைகளை கண்டெடுக்கும் வரலாற்று ஆசிரியர் விருந்தினராக வந்திருப்பது சற்றே சுவாரசியமான முரண். ராமச்சந்திர குகா பற்றி நமக்கு அறிமுகம் தேவையில்லை, அவர் வரலாற்று ஆசிரியர், சூழலியல் எழுத்தாளர், வாழ்க்கை வரலாற்று ஆசிரியர், கிரிக்கெட் குறித்து சமூக வரலாற்று கோணத்திலிருந்து எழுதியவர். அவர் எழுதிய காந்தியின் வாழ்க்கை சரித்திரம் உலகம் முழுக்க கவனிக்கப்பட்டது. எங்கள் மத்தியில் நீங்கள் உரையாட வந்திருப்பது எங்களுக்கு பெருமை. நன்றி.
கே- காந்தி ஏன் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்களுக்கு மிகவும் பிடித்தவராக இருக்கிறார்?
ப- காந்தி வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்களுக்கு மிகவும் பிடித்தவராகவும் இருக்கிறார் அதே சமயம் அவரைப் பற்றி எழுதுவது நோகடிக்கின்ற, எரிச்சல் ஊட்டுகின்ற விஷயமும் கூட. ஏனெனில் ஆயிரக்கணக்கான பக்கங்கள் அவரைப் பற்றி ஏற்கனவே எழுதப்பட்டு விட்டன. உங்களுக்கு தெரிந்திருக்கலாம் சுனில், எனினும் நான் இதை சொல்ல வேண்டும், நான் எழுதிய முதல் வாழ்க்கை வரலாற்று நூல் காந்தியை பற்றியது அல்ல. பல ஆண்டுகளுக்கு முன், அலைந்து திரியும் நாடோடியான ஆங்கிலேயர் ஒருவரை பற்றி நான் எழுதியிருக்கிறேன். அவர் பெயர் வெரியர் எல்வின். அவர் ஒரு ஆக்ஸ்போர்ட் பட்டதாரி. இந்தியாவுக்கு வந்தார், காந்தியுடன் சேர்ந்து கொண்டார், திருச்சபையை விட்டு வெளியேறி மத்திய இந்தியாவின் பழங்குடியினருடன் சேர்ந்து வாழச் சென்றார். மேலும் அவர் பழங்குடி வாழ்க்கை தொடர்பாக பல உணர்வுப்பூர்வமான பதிவுகளை எழுதினார். அவர் அடிப்படையில் ஒரு கவிஞர், அங்கிருந்து மானுடவியலாளராக ஆனவர். அவரது உரைநடை மிளிர்ந்தது. கல்வித்துறை சார்ந்தவர்களுடைய உரைநடையை போலின்றி இலகுவாகவும் இருந்தது. அவருடைய வாழ்க்கை அற்புதமானது. இந்தியராக ஆன ஒரு ஆங்கிலேயர், திருச்சபையை விட்டு வெளியேறிய பாதிரியார், பழங்குடியினருடன் சேர்ந்து வாழ்ந்த உயர் குடி மனிதர், விடுதலைக்குப் பிறகு அவர் அருணாச்சலப் பிரதேச விவகாரங்களுக்கான இந்திய அரசின் ஆலோசகராக திகழ்ந்தார். கவிஞர், புனைகதை ஆசிரியர், ஓரளவு என்னை போன்றே சர்ச்சைக்குரிய ஆளுமை. அவர் எழுதிய கட்டுரைகளால் சர்ச்சைகளுக்குள் உள்ளானார், மக்கள் அவருடன் தொடர்ந்து விவாதித்தபடியே இருந்தனர். அவரைப் பற்றி நான் ஒரு வாழ்க்கை வரலாறு எழுதினேன். அந்நூலை நான் மிகவும் ரசித்து எழுதினேன். ஆனால் அதற்கு முன்பு வரை எவருமே எல்வினை பற்றி வாழ்க்கை வரலாறு எழுதியதில்லை. இனியும் அவரது வாழ்க்கை வரலாறை எவரும் எழுதப்போவதும் இல்லை.
இதற்கு அடுத்து நான் எழுதிய வாழ்க்கை வரலாறு என்பது, ஒரு தலித் கிரிக்கெட் வீரரை பற்றியது. அவரது பெயர் பல்வாங்கர் பாலு. A corner in the foreign field என்று ஒரு புத்தகத்தை எழுதினேன். நூற்றாண்டின் இறுதியில், பம்பாயில் வாழ்ந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மகத்தான தலித் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நூல் அது. டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கொஞ்ச காலம் முன்னர், ரஞ்சி கிரிக்கெட்டிற்கும் முன்னர், ஐபிஎல்லுக்கு 100 ஆண்டுகளுக்கு முன், 1911 ஆம் ஆண்டு அனைத்திந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டது. அந்த சுற்றுப்பயணத்தினுடைய நட்சத்திரம் பல்வாங்கர் பாலு எனும் தலித் கிரிக்கெட் வீரர் தான். பம்பாயில் அவர் மிகப்பெரிய அளவில் சாதி பாகுபாட்டை எதிர்கொண்டார். கிரிக்கெட் போட்டியின் நடுவில் தேநீர் இடைவெளி உண்டு என்பது உங்களுக்கு தெரியும். இவரால் அவரது சக வீரர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்த முடியவில்லை. தேநீர் அருந்த அவரது அணியினர் எல்லோரும் பவிலியனுக்கு செல்லும் போது, இவருக்கு மட்டும் ‘ஒருமுறை பயன்படுத்தப்படும்’ கோப்பையில், வெளியே தேநீர் வழங்கப்படும். ஆகவே அவரது வாழ்க்கையும் போராட்டமாக தான் இருந்தது. அவர்தான் அம்பேத்கரின் முதல் நாயகன். இன்னும் சொல்வதானால், 1911 ஆம் ஆண்டு வெற்றிகரமான சுற்றுப்பயணத்தின் நட்சத்திர வீரராக திகழ்ந்த பாலு, நாடு திரும்பிய பொழுது, அம்பேத்கர் ஒரு புத்திசாலி இளம் மாணவனாக பிரசிடென்சி கல்லூரியில் பயின்று வந்தார். அம்பேத்கர் முதன்முறையாக ஆற்றிய பொது மேடை உரை என்பது பாலுவை கௌரவிக்கும் நிகழ்வில் தான். பாலு எனும் அற்புதமான தலித் கிரிக்கெட் வீரர் என்ன விதமான போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்பதை பற்றி நான் ஒரு வாழ்க்கை வரலாறு நூலை எழுதினேன். ஒரு வரலாற்று ஆசிரியர் பாலுவின் மீது கவனம் செலுத்தியது இதுதான் முதல் முறை. இங்கு அமர்ந்திருக்க கூடிய சில இளைஞர்கள் இந்திய கிரிக்கெட் ஐபிஎல்லில் இருந்து தொடங்கியது என்று எண்ணக்கூடும். வேறு சிலர் 1983 உலக கோப்பை வெற்றியில் இருந்து தொடங்கியதாக நம்பக் கூடும். ஆனால் அது 19ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது, அதன் முதல் மகத்தான கிரிக்கெட் வீரர் ஒரு தலித் என்பதை கண்டடைந்து சொன்னதில் நான் ஒரு முன்னோடி.
ஆனால் காந்திக்கு வந்த பொழுது, முழு நூலகமே நிறையும் அளவிற்கு நிறைய புத்தகங்கள் உள்ளன. ஆகவே புதிதாக நான் என்ன சொல்லி விட முடியும்? நான் காந்தியை பற்றி எழுதுவது என்பதில் தீர்மானமாக இருந்தேன். என்னிடம் சில சுவாரசியமான புதிய தகவல்கள் இருந்தன. எனது பங்களிப்பாக காந்திய இலக்கியத்தில் அவற்றை சேர்த்திருக்கிறேன் என்று நம்புகிறேன். காந்தியை பற்றி எழுதுவது சவாலானது, கடினமானது. ஆனால் அதே நேரத்தில் நவீன இந்தியாவின் வரலாற்று ஆசிரியன் எனும் முறையில் அது முக்கியமானதும் தேவையானதும் கூட. ஏனெனில் காந்தி நவீன இந்தியாவின் மிக முக்கியமான, மிகுந்த செல்வாக்குடைய, மிகுந்த சர்ச்சைக்குரிய ஆளுமை என்பதில் எனக்கு ஐயமே இல்லை. என்னைப் போன்ற ஒரு வரலாற்று ஆசிரியன் அவருடனான கணக்கை தீர்த்துக் கொள்ள வேண்டும். காந்தியைப் பற்றி எழுதாமல் இந்த உலகை விட்டு நீங்கி விடக்கூடாது. ஆகவே ஐந்தாயிரம் புத்தகங்கள் ஏற்கனவே காந்தியை பற்றி எழுதப்பட்டிருந்தாலும் நான் ஐந்தாயிரத்தி ஒன்றாவது புத்தகத்தை எழுதுவேன்.
கே- நீங்கள் அமித் வர்மாவுடன் நிகழ்த்திய உரையாடலை நான் கேட்டுக் கேட்டேன், அதில் நீங்கள் அவ்வளவாக புனைவு வாசிப்பதில்லை என கூறினீர்கள். ‘இந்தியா- காந்திக்கு பிறகு’ போன்ற நூலை வாசிக்கும் போது ஒரு வலுவான கதை சொல்லியின் இருப்பை உணர்கிறேன். நவீன இந்திய வரலாறு சார்ந்து நிறைய தகவல்கள் இருந்த போதிலும், அதிலிருந்து ஒரு சுவாரசியமான கதையை நீங்கள் உருவாக்குகிறீர்கள். சுனில் அவரது அறிமுகத்திலும் இதையே குறிப்பிட்டார் என எண்ணுகிறேன். இந்த இடத்திற்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்?
இரண்டாவதாக, புனைவு வாசிப்பதில்லை என்பது ஒரு பிரக்ஞைப்பூர்வமான முடிவா?
ப- அந்த பதில் முழுக்க நேர்மையான பதில் அல்ல. நான் அவ்வப்பொழுது புனைவிலக்கியம் வாசிக்கிறேன். இளம் வயதினனாக இருக்கும் பொழுது நிறைய வாசித்திருக்கிறேன். எனது உரைநடையின் ஒரு பகுதி நான் இளமையில் வாசித்தபோது நன்றாக எழுதிய ஆங்கில எழுத்தாளர்கள் வழி எனக்கு கிடைத்தது என்று நான் நம்புகிறேன். எனக்கு ஒரு மொழி மட்டுமே தெரியும் என்பதல்ல. சரளமாக ஆங்கிலம் பேச முடியும். இந்தியும் போதுமான அளவு தெரியும். வேறு எந்த மொழிகளும் முழுமையாக தெரியாது. தமிழ் எனக்கு தெரியாது என்பதில் வருத்தம் தான். தமிழ் மட்டுமல்ல வேறு இந்திய மொழிகளும் தெரியாது. இளமையில் நிறைய புனைவு வாசித்தேன். நான் வாசித்த எழுத்தாளர்களை பற்றி எண்ணிப் பார்க்கிறேன். உதாரணமாக எர்னெஸ்ட் ஹெமிங்வே, சோமர்செட் மோம் போன்றவர்கள், இன்னும் சிலர் அதிகம் அறியப்படாதவர்கள், துப்பறியும் கதைகளை எழுதியவர்கள்- ரெக்ஸ் ஸ்டவுட் (Rex Stout), ரேமண்ட் சேண்ட்லர் (Raymond Chandler) போன்றவர்கள். இவர்களுடைய உரைநடைகள் கச்சிதமாகவும் துல்லியமாகவும் இருந்தன. உங்கள் கேள்வியின் இரண்டாம் பகுதிக்கான எனது பதில் என்பது, நான் எப்போதுமே இலக்கியம் மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றின் கிளையாகவே வரலாறை பார்க்கிறேன். வெறும் சமூக அறிவியல் மட்டுமல்ல. வெறும் இலக்கியம் மட்டுமல்ல. வரலாற்று ஆவணங்களை கொண்டு ஆய்வு செய்யும் வரலாற்று ஆசிரியர்கள் நமக்கு ஒரு கதையை மட்டும் சொல்கிறார்கள். கல்விப்புல வரலாற்று ஆய்வாளர்கள் நுணுக்கமாக ஆராய்ந்து, நிறைய தகவல்களுடன், சுவாரசியமற்ற கடினமான துறை சொற்கள் மலிந்த மொழியில், வாசிக்கவே முடியாத புத்தகங்களை எழுதுவார்கள். ஆனால் உங்களுக்கு ஒரு ஆய்வுச் சட்டகம் வேண்டும். ஓரளவு சமூகவியல், அரசியல், பொருளியல் ஆகியவை தெரிந்திருக்க வேண்டும். அதே சமயம் உங்களால் ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும் முடிய வேண்டும். ஆகவே வரலாறையும் நான் இலக்கியத்தின் பகுதி என்றே நம்புகிறேன். புனைவுடன் ஒப்பிடும் பொழுது அது சற்றே தாழ்ந்த கிளையாக இருக்கலாம். புனைவைத் தவிர இரண்டாவது சிறந்த பிரிவு என வரலாற்றை சொல்லலாம். உங்களது பாராட்டுதலுக்கு நன்றி.
என்னால் டால்ஸ்டாய் அளவிற்கு எழுத முடியாது தான், ஆனால் வேறு பல புனைவு எழுத்தாளர்களை விட நன்றாகவே எழுத முடியும். நான் புனைவுகளை வாசிக்கிறேன். இந்தியா குறித்தான புனைவுகளை தவிர்க்கிறேன். ஏனெனில் எனது மொத்த வாழ்வும் இந்தியா குறித்ததே, சில விதிவிலக்குகள் உண்டுதான். நோய் தொற்றுக் காலத்தில் நான் டால்ஸ்டாயை வாசித்தேன்- போரும் வாழ்வும் மற்றும் அன்னா கரீனினா. மிடில் மார்ச் (ஜார்ஜ் எலியாட்) நாவலையும் வாசித்தேன். எப்போதைக்குமான மிகச் சிறந்த மூன்று நாவல்கள் இவை. அவற்றை வாசித்ததற்காக நான் மகிழ்கிறேன். இந்திய புனைவை நான் வாசிப்பதாக இருந்தால் நேரடி ஆங்கிலத்தில் அல்ல, மொழியாக்க நூலையே வாசிக்கிறேன். நான் அண்மையில் வாசித்த மிக அற்புதமான புனைவு ஒன்றை அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன். இவரை இதுவரை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அழைக்கவில்லை என்றால் இனிமேல் அழைக்க வேண்டும் என கோருகிறேன். இவர் ஒரு ஹிந்தி எழுத்தாளர். ஞான் சதுர்வேதி என்ற பெயர். அவரது அலிபுரம் எனும் நாவல் சலீம் யூசுபியால் மிக அற்புதமாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. வட இந்திய சிறுநகரத்தில் சாதியம், ஊழல் மற்றும் மதவாதம் குறித்து மிகுந்த நுண் உணர்வுடன் சமரசம் இன்றி எழுதப்பட்ட புனைவாகும். ஏனெனில் என்னால் புக முடியாத உலகம் அது. இந்திய ஆங்கில எழுத்தாளரின் உலகம் என்பது என்னுடைய உலகம் தான். இப்பொழுது நான் பிறமொழி இந்திய இலக்கியங்களை வாசிக்க தொடங்கி இருக்கிறேன். இது ஒரு இலக்கிய அவை என்பதால் இது சார்ந்து கடைசியாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நான் இளைஞனாக இருந்த பொழுது என் மீது தாக்கம் செலுத்திய எழுத்தாளர்களில் ஒருவர் ஜார்ஜ் ஆர்வல். அவர் புனைவும் புனைவல்லாதவையும் எழுதினார். எவரோ குறிப்பிட்டது போல, அவரது உரைநடை கண்ணாடி சாளரம் போல் தெளிவாக இருக்கும். எனது இலக்கிய வாசிப்பின் வளர்ச்சிப் போக்கில் உள்ள மிக முக்கியமான குறைபாடு , கவிதையின் மீதான ருசியை நான் வளர்த்துக் கொள்ளவே இல்லை என்பதுதான். இது எனக்கு இழப்புதான். என்னால் ஏன் கவிதை மீதான ருசியை வளர்த்துக் கொள்ள முடியவில்லை என்றால், நான் இளைஞனாக இருந்த பொழுது கிரிக்கெட் விளையாட்டில் மிக அதிக நேரத்தை செலவிட்டேன். நீங்கள் கிரிக்கெட் பயிற்சி முடித்துவிட்டு திரும்பும் போது மிகவும் சோர்வாக இருப்பீர்கள். உங்களால் நாவலை வாசிக்க முடியும், சிறுகதையை வாசிக்க முடியும். ஆனால் கவிதை வாசிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு முழுமையான , தெளிவான , புத்துணர்ச்சியுடைய, ஆற்றல் மிகுந்த மனம் வேண்டும். எனது மனைவியை பாருங்கள், கவிதைகளை வரி வரியாக சொல்வார். புனைவு அதிகம் வாசிக்கவில்லை என்பதல்ல, ஆனால் இது ஒரு இழப்புதான். முன்னரே இதற்கு கொஞ்சம் நேரம் கொடுத்திருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன்.
கே- வணக்கம் சார் உங்களுடைய பெரும் வாசகன் நான். கல்விப்புல வரலாற்று ஆய்வாளர் போல இல்லாமல் நீங்கள் பல மகத்தான வாழ்க்கைகளை பதிவு செய்திருக்கிறீர்கள். நீங்கள் வெரியர் எல்வின், பல்வாங்கர் பாலு, காந்தி போன்றவர்களுடைய வாழ்க்கை வரலாறை எழுதியிருக்கிறீர்கள். இப்பொழுது ‘Rebels against the Raj’ வெளிவந்துள்ளது. ஆனால் இது அப்பொழுது வழக்கத்தில் இல்லை. அப்பொழுது இல்லை என ஏன் சொல்கிறேன் என்றால் இப்பொழுது இது மாதிரியான வரலாறுகள் இந்திய வெளியில் எழுதப்படுகின்றன. எனினும் கூட நீங்கள் சஞ்சய் சுப்பிரமணியம் போல வரலாற்று அமைப்புகளை கோட்பாட்டு ரீதியாக விளக்கி எழுதுபவர் அல்ல. வரலாற்றை இப்படி அணுகுவது பற்றிய உங்கள் பார்வை என்ன என்பது ஒரு கேள்வி. இரண்டாவதாக நீங்கள் யாரைப் பற்றி எழுதுகிறீர்களோ அவர்கள் சார்ந்த எல்லையை உணர்கிறீர்களா? வெரியர் எல்வின் போன்ற ஒரு ஆளுமையை பற்றி நீங்கள் எழுதும் பொழுது, அந்த காலகட்டத்தை முழுமையாக சித்தரிப்பதில் அவரது ஆளுமை உங்களுக்கு ஒரு எல்லையை வகுப்பதாக உணர்கிறீர்களா?
ப- எனது படைப்பு பற்றிய உங்கள் பார்வையை நான் சற்று மறுக்கிறேன். எனது வாழ்க்கை வரலாறு எழுத்து குறித்து சொல்வதானால், காந்தி மகத்தான மனிதர் என்பதை மறுக்க முடியாது. ஆனால் வேறு எவருமே எவ்வினை பற்றி நான் எழுதியதற்கு முன்பு கேள்விப்பட்டதில்லை. பல்வாங்கர் பாலு குறித்து நான் எழுதுவதற்கு முன் எவரும் கேள்விப்பட்டதில்லை. Rebels against the Raj நூலில் கூட அன்னிபெசன்ட் என்னும் விதிவிலக்கை தவிர்த்து பிற அனைவருமே அவ்வளவாக வெளியே தெரியாதவர்கள். இவர்கள் எல்லாம் இடைநிலை ஆளுமைகள் என சொல்லலாம். எனது வரலாற்று எழுத்துக்களில் காந்தி மட்டுமே ஒரே விதிவிலக்கு. உங்களுடைய கேள்வியின் இன்னொரு பகுதியை இன்னும் ஒரு நிமிடத்தில் எதிர்கொள்கிறேன். அதற்கு முன் வாழ்க்கை வரலாறு எழுதுவதில் மூன்று முக்கியமான விஷயங்கள் உள்ளன என்பதை சொல்ல விரும்புகிறேன். முதலாவதாக, யாரைப் பற்றி எழுதுகிறீர்களோ அவரைப் பற்றி அவர் எழுதிய கோணத்தில் இருந்து மட்டுமே சொல்லிச் செல்லக்கூடாது. காந்தியைப் பற்றிய இதற்கு முந்தைய எல்லா வாழ்க்கை வரலாறுகளும் 97 தொகுதிகள் கொண்ட அவரது தொகை நூல் தொகுப்பில் இருந்து உருவாகி வந்தவைதான். நான் வேறு வேறு ஆதாரங்களை தேடிச் சென்றேன். காந்திக்கு வந்த கடிதங்கள், காந்தியை பற்றிய கடிதங்கள், உளவுத்துறை குறிப்புகள், நாளிதழ் கட்டுரைகள் என பல தரப்புகள் கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு நாடகம் அல்லது ஒரு திரைப்படம் போல பெரும் எண்ணிக்கையிலான கதாபாத்திரங்கள் இருக்க வேண்டும். அவர்கள் தங்களுக்கான வெளியை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என நம்புகிறேன். இரண்டாவதாக நீங்கள் யாரைப் பற்றி எழுதுகிறீர்களோ அவருடைய தோல்வியை சமரசம் இன்றி அணுக வேண்டும். ஒட்டுமொத்தமாக அவர் மீது உங்களுக்கு பரிவு இருக்கலாம், காந்தியை பொதுவாக எனக்கு பிடிக்கவில்லை என்றால் நான் ஏன் பத்து வருடங்களை அவருக்காக செலவழிக்க வேண்டும்? ஆனால் அவரை குருட்டுத்தனமாக அணுகுவதில்லை. மூன்றாவதாக வாழ்க்கை வரலாறு என்பது வாழ்க்கையை காலத்துடன் பொருத்திப் பார்ப்பதாகும். ஆகவே காலம் என்னும் பெரிய திரையில் வாழ்க்கையை வரைந்து காட்டுவதாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு இளைஞர், ஆகவே எனது அண்மையகால நூல்களைப் பற்றியே அதிகம் அறிந்திருப்பீர்கள் என்பது உங்கள் குற்றம் அல்ல. உங்களுக்கு எத்தனை வயது என்று நான் கேட்கலாமா?
24
24. சரி. எனது முதல் புத்தகம் நீங்கள் பிறப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பதிப்பிக்கப்பட்டது. சரியா? அது இமாலயத்தின் வேளாண் இயக்கங்கள் பற்றி பேசியது. அதன் பின்னர் சூழலியல் தொடர்பாக எழுதினேன். அதன் பின்னர் அடித்தளத்தில் இருந்து சமூக வரலாறை எழுதி இருக்கிறேன். நான் மீண்டும் அங்கு திரும்பி செல்லக்கூடும். ஒரு வரலாற்று ஆசிரியனாக நான் கிரிக்கெட் குறித்து, சூழலியல் குறித்து மற்றும் வேறு சின்ன சின்ன விஷயங்கள் குறித்தும் எழுதியிருக்கிறேன். எனினும் தனி மனிதர்களின் சித்தரிப்பை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளேன் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் மாபெரும் ஆளுமைகளாக தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. அவ்வளவாக அறியப்படாத ஆளுமைகளாகவும் இருக்கலாம். நீங்கள் என்னுடைய பத்திகளை வாசித்து இருந்தால் தெரிந்திருக்கும், உதாரணமாக அண்மையில் இறந்து போன இரண்டு தொண்ணூற்றி ஐந்து வயதினரை பற்றி நான் எழுதினேன். அவர்கள் இருவருமே பொறியாளர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ள நேர்ந்தது. இருவருமே கற்பதற்காக இங்கிலாந்துக்கு சென்று திரும்பியவர்கள். இருவருமே தனியார் பெரு நிறுவனங்களில் பணிக்கு சேரவில்லை. அரசு வேலையில் சேர்ந்தார்கள். ஒருவர் ரயில்வே துறையில் வேலைக்கு சேர்ந்து பரோடா பாம்பே இருப்புப் பாதையை மின்மயம் ஆக்கினார். இன்னொருவர் ஹச் ஏ எல் நிறுவனத்தில் சேர்ந்து சொந்த நாட்டில் விமானங்களை உருவாக்க உதவினார். பொது மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் உடைய இரு பொறியாளர்கள். இந்தியாவில் பணி செய்தார்கள். யாருக்குமே அவர்களை தெரியாது. ஆனால் அவர்களுடைய வாழ்க்கையின் வழியாக ஒரு பெரிய கதையை சொல்ல முடியும். மேலும் 2014க்கு முன்பு இந்தியாவில் நிறைய மகத்தான மனிதர்கள், மகத்தான செயல்களை செய்து கொண்டிருந்தார்கள் என்பதை வாசகர்களுக்கு நினைவுறுத்த வேண்டும். காந்தியைத் தவிர நான் எழுதிய பிறர் அவ்வளவாக அறியப்படாதவர்கள். காந்தி மட்டுமே ஒரே விதிவிலக்கு. நீங்கள் சஞ்சய் சுப்பிரமணியத்தை பற்றி குறிப்பிட்டீர்கள், அவரது சிறந்த புத்தகம் என்பது வாஸ்கோடகாமா பற்றிய வாழ்க்கை வரலாறு தான். நல்ல வரலாற்று ஆசிரியர்கள், சஞ்சய் சுப்பிரமணியத்தை போல, அவர்கள் ஒரே வகையாக வகைப்படுத்தப்படுவதை விரும்புவதில்லை. ஒரே ராகத்தை மீள மீள பாட விரும்புவதில்லை.
கே- நான் என் பங்கிற்கு உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீங்கள் அவ்வளவாக அறியப்படாத ஆளுமைகள் குறித்து எழுதுவதாக சொன்னீர்கள் காந்தியின் வாழ்க்கை வரலாறை நான் வாசிக்கும் பொழுது, எனக்கு ஆச்சரியம் ஏற்படுத்திய ஒரு ஆளுமை, ஷேக் மேத்தாப். காந்தி எழுதிய சுய சரிதையில் அவருக்கு புலால் உணவை அறிமுகப்படுத்திய அதே நபர்தான் பின்னர் அவரோடு தென் ஆப்பிரிக்காவில் சேர்ந்து வாழ்ந்து மீண்டும் தீய நடத்தையால் வெளியேற்றப்படுகிறார் என அறிந்து கொண்டேன். அத்துடன் முடியவில்லை. பின்னர் அவர் இந்தியன் ஒப்பினியினில் போராட்டம் குறித்து தொடர்ந்து கவிதைகளை எழுதி வருகிறார். இது ஒரு அற்புதமான கதை. அதே போல் சோனியா ஷெல்சின் ஒரு மகத்தான ஆளுமையாக வெளிப்படுகிறார். அவரைப்பற்றி நமக்கு இதற்கு முன் எதுவும் தெரியாது.
ப- நான் எழுதிய காந்தியின் வாழ்க்கை வரலாறை எடுத்துக் கொண்டால், பொதுவாக காந்தியின் வாழ்க்கை வரலாறை அவரது பார்வையில் இருந்து, கஸ்தூர்பாவின் பார்வையில் இருந்து, ஹரிலாலினுடைய பார்வையில் இருந்து, அல்லது நேரு அல்லது பட்டேல் அல்லது சரோஜினி நாயுடுவின் பார்வையில் இருந்து எழுதுவது வழக்கம். அவ்வளவுதான். நியூயார்க்கில் வசிக்கும் எனது எடிட்டர் சன்னி மேத்தா உங்கள் நூலில் குறைந்தபட்சம் 150 சுவாரஸ்யமான கதை மாந்தர்கள் உள்ளார்கள் என்றார். அதை ஒரு மகத்தான பாராட்டாக நான் கருதுகிறேன். அவர்கள் சிறிய கதை மாந்தர்கள் என்பதல்ல, நாம் பிற கதை மாந்தர்களுடன் கொண்டுள்ள உறவின் படி வகுக்கப்படுகிறோம். நண்பர்கள் குடும்பத்தினர், எதிர் தரப்பினர், காதலர்கள், சகாக்கள் இப்படி பலர் மீது தாக்கம் செலுத்திய படி வாழ்கிறோம். சோனியா ஷெல்சின் அவரது செயலர். காந்தியை எதிர்த்து விவாதம் புரியக்கூடிய அளவுக்கு குறிப்பிடத்தக்க ஆளுமை கொண்ட யூத பெண்மணி. அவரைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. ஹென்றி மற்றும் மில்லி போலக்கும் அப்படித்தான். காந்தியை மட்டும் மையமாகக் கொண்ட ஒரு வாழ்க்கை வரலாறை எழுத நான் முயற்சிக்கவில்லை. முன்னரே குறிப்பிட்டது போல், ஒரு நாடகம் அல்லது திரைப்படத்தை போல காந்தி தான் மையக்கதாபாத்திரம், ஆனாலும் வெவ்வேறு சுவாரசியமான அசாதாரணமான மனிதர்கள் அதில் இருக்கிறார்கள்.
கே- வணக்கம் சார் நான் உங்கள் ‘கார்னர் இன் த ஃபாரின் பீல்ட்’ புத்தகம் வாசித்திருக்கிறேன். அதில் நீங்கள் மும்முனை நான்கு முனை 5 முனை கிரிக்கெட் போட்டிகளை பற்றி விவரிக்கிறீர்கள். ஒருவகையில் ஐபிஎல்லுக்கான முன்மாதிரி எனக் கொள்ளலாம். உங்களுடைய ஒரு பத்தியில், காந்தி எப்படி இந்த ஐந்து முனை போட்டியை வெறுத்தார் என எழுதி இருக்கிறீர்கள். ஏனெனில் அது மத ரீதியான பிளவுத்தன்மை ஏற்படுத்தி, ஆங்கிலேயர்கள் பிரித்தாளுவதற்கு ஏது செய்கிறது எனக்கருதினார். என் கேள்வி என்னவென்றால், இப்பொழுது காந்தி உயிருடன் இருந்தார் எனில், ஐபிஎல் குறித்து காந்தி என்ன நினைத்திருப்பார்? ஐபிஎல் என்பது இந்திய முதலாளித்துவ கிரிக்கெட் அமைப்பின் லாபம் குவிக்கும் போட்டி என்று கருதி இருப்பாரா? அல்லது இந்திய கிரிக்கெட்டை ஜனநாயகப் படுத்தியிருக்கிறது என கருதுவாரா? உதாரணமாக டெஸ்ட் போட்டி என்பது ஐந்து நாட்கள் நடைபெறுவது. பொருளாதார ரீதியாக வளமுள்ளவர்களே தங்களுடைய வாழ்நாளில் ஐந்து நாட்களை கொடுத்து டெஸ்ட் போட்டியில் விளையாட முடியும். ஆனால் 20 20 கிரிக்கெட் அதனுடைய முதலாளித்துவ கோர முகத்தை மீறி கிரிக்கெட்டை ஜனநாயகப் படுத்தி உள்ளது. வேறு வேலை செய்பவர்கள் கூட ஒரு நான்கு மணி நேரம் செலவழித்து கிரிக்கெட் விளையாடலாம் என்பதால் காந்தி இதை பாராட்டி இருக்க கூடுமா?
ப- மிக நல்ல கேள்வி. காந்தியின் சார்பாக என்னால் பதில் சொல்ல முடியாது. ஆனால் என் தரப்பாக ஒரு பதிலை சொல்ல முடியும். 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட பொழுது நான் ஒரு பத்தி எழுதினேன், அதில் இப்படி குறிப்பிட்டு இருந்தேன் டெஸ்ட் போட்டி என்பது சிங்கிள் மால்ட் விஸ்கியை போன்றது, நீங்கள் ஒவ்வொரு மிடறையும் ரசித்திருப்பீர்கள், எல்லாவற்றையும் நினைவில் கொண்டிருப்பீர்கள். நல்ல கேட்ச் நல்ல விக்கெட் நல்ல பேட்டிங் என எல்லாவற்றையும். 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்பது இந்தியாவில் தயாரான வெளிநாட்டு மதுபானம் போல. உங்களுக்கு ஓரளவு நினைவிருக்கும். ஏதோ ஒரு பேட்டிங் , ஒரு கேட்ச் இப்படி. 20 20 என்பது சாராயம் போல. குடி அடிமை ஒருவனுக்கு சிங்கிள் மால்ட் அல்லது இந்தியாவில் தயாரான வெளிநாட்டு மதுபானம் ஆகியவை கிடைக்காத பொழுது, வேறு வழியின்றி சாராயத்திற்கு செல்வது போல் ஐபிஎல்லுக்கு செல்வான். கிரிக்கெட்டை நேசிப்பவனாக அதனுடைய அழகியல் கோணத்திலிருந்து நான் இதை கூறுகிறேன். வேறொரு உவமையை பயன்படுத்துவதாக இருந்தால், நான் இந்துஸ்தானி சங்கீதத்தை விரும்பி கேட்பவன், கர்நாடக சங்கீதம் அவ்வளவாக கேட்பதில்லை எனினும் உங்களுக்கு இது புரியும், கர்நாடக சங்கீதம் பற்றிய எனது புரிதல் தவறு என்றால் என்னை திருத்தவும், ஒரு டெஸ்ட் போட்டி என்பது ராகம் தானம் பல்லவி போல, ஒரு முழு ராகத்தின் விஸ்தீரனம். ஹிந்துஸ்தானி இசையில் கயால் என சொல்வோமே அது போல். ஒரு நாள் போட்டி என்பது தும்ப்ரி அல்லது ஜாவேரி போல. 20 20 என்பது சினிமா பாட்டு போல. அது அதற்கு உரிய இடம் உண்டு. இதையெல்லாம் சொன்ன பிறகும், ஒன்று சொல்ல வேண்டும், ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னர் முகுல் கேசவன் எனும் முக்கியமான எழுத்தாளர், அரசியல் மற்றும் கிரிக்கெட் பற்றி எழுதி வருபவர், உங்களில் சிலர் அவரை படித்திருக்க கூடும், அவர் தெற்காசிய அளவில் கிரிக்கேட் லீக் போட்டி இருக்க வேண்டும் என எழுதினார். லாகூர் லயன்ஸ் அணியின் கேப்டனாக வீரேந்திர சேவாக், ஜாப்னா டைகர்ஸ் கேப்டனாக வசிம் அக்ரம், தாக்கா அணியின் தலைவராக சச்சின் டெண்டுல்கர், இப்படி ஒன்று நடந்திருந்தால் அது பல்வேறு பிராந்தியங்களை ஒன்றிணைத்திருக்க கூடும். காந்தி இதை ஏற்றுக் கொண்டிருக்க கூடும். தெற்காசிய அளவில் நடந்தால் இந்திய அணியினர் பாகிஸ்தான் அணியில் விளையாடக் கூடும். பாகிஸ்தான் அணியினர் வங்காளதேச அணியில் விளையாடக்கூடும். ஆனால் ஐபிஎல் என்பது இந்தியாவிற்குள் மட்டும் தான். பிசிசிஐயினுடைய அதிகாரத்தை குவிக்க ஏதுவாக இருக்கிறது. வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் விளையாடலாம் ஆனால் இந்திய வீரர்கள் வெளிநாட்டு போட்டிகளில் விளையாட கூடாது. இது மிகவும் தவறானது. ஐபிஎல்லின் இந்த வடிவை காந்தி நிச்சயம் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். முகுல் கேசவன் எதை முன் வைத்தாரோ அதை அவர் ஏற்றிருக்கக் கூடும். மொத்த தெற்காசிய அளவிலான ஒரு போட்டி, அதில் பல்வேறு தேசத்தவர்கள் இணைந்து விளையாடி இருந்தால் அங்கீகரித்திருப்பார்.
கே- எனக்கு இன்னொரு கேள்வி தோன்றியது இந்த கிரிக்கெட் நூலை வாசித்த பொழுது ஆங்கிலேயர்கள் கிரிக்கெட்டை தொடர்ந்து ஆண்மை மிக்க விளையாட்டு என விவரிப்பதை பார்க்க முடிந்தது. இந்த விவரனை எனக்கு சற்றே ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் கால்பந்து ரக்பி போன்றவற்றைத்தானே நாம் அப்படி தொடர்புபடுத்திக் கொள்வோம்.
ப- நீங்கள் சொல்வது புரிகிறது. ஒழுங்கு நேர்மை போன்ற இயல்புகள் வழியாக ஆண்மை தன்மை என்று இது சுட்டப்படுகிறது.
கே- எனது பெயர் மோகன். எனது கேள்வி, ‘இந்தியா- காந்திக்கு பிறகு’ நூலை பற்றியது. அதன் இரண்டாவது பகுதியில்,, நேருவின் மரணம், அவசர நிலை, என ஏதாவது ஒரு எதிர்பாராத விஷயம் நிகழ்ந்தால், வெளிநாட்டு ஊடகங்கள் ஜனநாயகம் மரணித்து விடும், இந்தியா துண்டாகிவிடும் என கணிக்கிறது. ஆனால் இந்த கணிப்பு ஒவ்வொரு முறையும் பொய்த்து தானே போயிருக்கிறது. ஏன் இந்தியாவின் உண்மை நிலையை இத்தனை துல்லியமற்ற முறையில் கணிக்கிறார்கள்?
ப- நான் வெளிநாட்டு ஊடகங்களின் கணிப்பை பரிவோடு புரிந்து கொள்கிறேன். காந்திக்கு பிறகான இந்தியா நூலில் நான் முன்வைத்தது போல், நமது தேசம் என்பது அரசியல் வரலாற்றிலேயே மிகவும் கவனக் குறைவுடன் செய்யப்பட்ட ஒரு பரிசோதனை முயற்சியாகும். இத்தனை வேறுபாடுகள் உடைய இத்தனை பரந்த நிலப்பரப்பு இதற்கு முன் ஒரு தேசமாக உருவானதே இல்லை. பெரும் அளவிலான கல்வியறிவற்றவர்கள் வாழும் தேசம் ஜனநாயகமாக அதற்கு முன் திகழ்ந்தது இல்லை. சோவியத் யூனியன் உடைந்தது. ஆஸ்திரிய ஹங்கேரிய பேரரசுகள் உடைந்தன. நிறைய தேசிய இனங்கள் உள்ள பெரிய நாடுகள் உடைய கூடும். ஆகவே நேரு தான் அதை இறுக பிடித்து இருக்கிறார் என எண்ணினார்கள். ஆகவே அடித்தளம் குறித்து இந்த சந்தேகங்கள் இருக்கவே செய்தன. இதன் அடித்தளம் எத்தனை வலுவானது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. பெரும்பாலான தேசங்கள் ஒற்றை மொழி அல்லது ஒற்றை மதத்தின் அடிப்படையில் உருவானவை என்பதால் அப்படி கருதினார்கள். சில இந்தியர்கள் இப்பொழுது இந்தியா ஒற்றை மொழியில் , ஒற்றை மதத்தின் அடிப்படையில் நிர்வகிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்களுடைய ஐயம் எங்கிருந்து வந்தது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.
கே- திரு குகா அவர்களுக்கு, நீங்கள் பெங்களூர் இலக்கிய விழாவில் ஜனநாயகத்தில் ஆளுமை வழிபாடு குறித்து உரையாற்றியதை கேட்டேன். ஒரு ஜனநாயகத்தில் தனி மனிதனைச் சுற்றி எப்படி ஆளுமை வழிபாடு நிகழ்கிறது என்பதைக் குறித்து நீங்கள் பேசினீர்கள், தனி மனிதனின் இயல்புகள் எப்படி அவரைச் சுற்றி ஒரு வழிபாட்டை உருவாக்குகிறது என்றும் கூறினீர்கள். இதன் தாக்கம் எப்படி பத்திரிக்கை துறை, நீதித்துறை, ஆட்சிப் பணி உட்பட வெவ்வேறு அமைப்புகளில் உணரப்படுகிறது என்பதையும் சொன்னீர்கள். நீங்கள் குறிப்பிடாமல் விட்ட ஒரு பிரிவு என்பது அறிவு ஜீவிகள். ஆளுமை வழிபாட்டை முன்னிறுத்துவதில் அறிவு ஜீவிகளுக்கு ஒரு பங்கு உள்ளது என்று நான் உணர்கிறேன். நாம் இப்பொழுது அறிவு ஜீவிகளின் இடத்தை காணும் கோணமே மாறி இருக்கிறது. ஆளுமை வழிபாடு என்பதே அறிவு ஜீவிகளில் ஒரு பிரிவினரால்தான் முன்னெடுக்கப்படுகிறது. மறுபக்கம் ஆளுமை வழிபாடு என்பது அறிவு ஜீவிகளின் மீது கவிந்து அதன் உரையாடல் முறையை மாற்றி அமைக்கிறது. ஆகவே இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஒரு அறிவு ஜீவியின் பங்களிப்பு என்பது எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.
ப- இது மிக நல்ல கேள்வி. முதலில் உங்கள் கேள்வியின் இரண்டாவது பகுதிக்கு பதில் அளிக்கிறேன். அ
வேடிக்கை பார்ப்பவன்- யுவன் சந்திரசேகருடன் ஒரு உரையாடல்- முன்னுரை
(விஷ்ணுபுரம் விருது விழாவில் வெளியிடப்பட்ட நூலிற்காக எழுதிய முன்னுரை)

எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு ஒரு ரீடர் செய்ய வேண்டும் என்பது அவரது வாசகராக எனது நெடுநாள் கனவுகளில் ஒன்று. இன்னதென்று வகுத்துக்கொள்ள முடியாத மர்மமும் வசீகரமும் நிரம்பிய எழுத்து அவருடையது. கதை எதற்காக சொல்லப்பட வேண்டும் எனும் கேள்வியை வெவ்வேறு காலகட்டத்தில் மீண்டும் மீண்டும் எதிர்கொள்வோம். வேறு எதற்காகவும் இல்லை, அதன் களிப்பிற்காக, அதில் திளைப்பதற்காக என்பதே யுவனிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட விடை. நூல்வனம் வெளியீடாக வரவுள்ள அந்த ரீடருக்காக அவரை நேர்காணல் செய்ய வேண்டும் என உத்தேசித்தேன். மார்ச் மாதம் ஒருமுறையும் ஜூலை மாதத்தில் ஒருமுறையும் என இருமுறை சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கே சென்று உரையாடினோம். முதல் அமர்வில் விக்னேஷ் ஹரிஹரன், காஞ்சி சிவா, அ. க. அரவிந்தன் ஆகியோர் அவருடன் உரையாடினோம். ஜூலை மாத அமர்வில் எழுத்தாளர்கள் சுரேஷ் பிரதீப்பும் காளிபிரஸாத்தும் விக்னேஷ் ஹரிஹரனும் உரையாடலில் பங்கெடுத்தார்கள்.
இந்த நேர்காணலுக்காகவும் ரீடருக்காகவும் அவரை தொடர்ந்து வாசித்தேன். சுரேஷ் பிரதீப்பும் மொத்தமாக மீண்டும் வாசித்தார். நானும் சுரேஷும் அதிகாலை அவர் வீட்டுக்கு சென்று இறங்கிய போதுதான் ஜெயமோகன் விஷ்ணுபுரம் விருது இந்த ஆண்டு யுவனுக்கு அளிப்பதாக முடிவெடுத்துள்ளதாக செய்தி அனுப்பினார். இந்த நேர்காணல் விஷ்ணுபுரம் விருதிற்கு முந்தியே திட்டமிடப்பட்டது. விருது இந்த நேர்காணல் தனி நூலாக பதிப்பாக்கம் பெறுவதற்கு ஒரு முகாந்திரம் அளித்தது. எங்களுக்கே அளிக்கப்பட்ட விருது என உணர்ந்தோம். இந்த நேர்காணலின் ஒரு பகுதியை அகழ் மின்னிதழில் வெளியிட்டோம். நூற்றி எழுபது பக்கங்கள் நீண்ட நேர்காணல் இது. ஒரு பகுதியை அகழ் மின்னிதழில், இன்னொரு பகுதியை ரீடருக்கும் மற்றொரு பகுதியை ஜெயமோகன் இணையதளத்திலும், விழாவில் வெளியாகும் கட்டுரை தொகை நூலின் பகுதியாகவும் வெளியிடலாம் என்பதே எங்கள் யோசனை. ஜெயமோகன் நேர்காணலை முழு தனி நூலாக விஷ்ணுபுரம் பதிப்பகம் வழியாக விழா சமயத்தில் வெளியிடுவோம் என கூறினார். ஜெயமோகனுக்கும் விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் மீனாம்பிகை மற்றும் குவிஸ் செந்தில் ஆகியோருக்கும் எங்கள் நன்றி.

ஒரு நல்ல நேர்காணல் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு அவரே அவரது 'நினைவுதிர் காலத்தில்' ஒரு முன்மாதிரியை வைத்துள்ளார். சிகரங்களும் சமவெளிகளும் பள்ளத்தாக்குகளும் மாறி மாறிவரும் நிலப்பரப்பிற்குள் பயணிப்பதான ஒரு அனுபவத்தை அளிக்கும். அதேபாணியில் நேர்காணலை பேசு பொருள் சார்ந்து அத்தியாயங்களாக வகுத்துள்ளோம். இந்த நேர்காணலில் அப்படிக் குறைந்தது மூன்று சிகரங்களையாவது அடையாளம் காண முடியும். இரண்டாவதாக, இந் நேர்காணலை முடிந்தவரை அவரது பேச்சுமொழிக்கு அருகே கொண்டுவர வேண்டும் என்பதில் மெனக்கெட்டோம். யுவன் அபாரமான உரையாடல்காரர். காரைக்குடிக்கு வந்தபோது கூட "எங்கயாவது போலாமா சார்" என்றால் "வாங்க பேசிக்கிட்டு இருப்போம். அதுதானே நம்ம லாகிரி" என்பார். ஏறத்தாழ ஏழுமணிநேர உரையாடல் பதிவு உள்ளது. இத்தனை பேசிய பின்னரும் நாங்கள் இன்னும் அவரோடு உரையாடுவதற்குப் பல விஷயங்கள் எஞ்சியிருப்பதைக் கண்டுகொண்டோம். காலை பத்து மணிக்கு அவரது அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்றோம். உள்ளே செல்வதற்கு நிறையப் பாதுகாப்பு கெடுபிடிகள் உண்டு. விசாலமான வீடு. ஒவ்வொரு அறையிலும் இசைக்கான ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார். அவரது அறையிலிருந்து கீழே நீச்சல் குளம் தெரியும். விசாலமான ஃபிரெஞ்சு ஜன்னல்கள் வழி போதுமான வெளிச்சமும் காற்றும் உள்ளே வந்தது. "உங்களுக்கு ஒண்ணும் டிஸ்டர்பன்ஸ் இல்லையே" என்றபடி சித்தார் இசையை சன்னமாக ஒலிக்க விட்டார். அநேகமாக இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை "காப்பி சொல்லட்டா?" என்பார். நாங்கள் சென்ற அன்று மகள் வழி பேரன் பிறந்து ஒருமாதம் ஆகியிருந்தது. மதியம் அவருடனேயே வயிறார உண்டோம். இருட்டும்வரை பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினோம். நமக்குப் பிடித்த ஆளுமைகளை எழுத்தாளர்களை நெருங்குவது அவசியமில்லை என்பார்கள். அவர்கள் மீதான நம் மதிப்பு குறைந்துவிடும், ஏதோ ஒருவகையில் நமக்கு அவர்கள் ஒவ்வாதவர்களாக ஆகிவிடுவார்கள் என்பார்கள். எனக்கே கூட அத்தகைய சில அனுபவங்கள் உண்டு. ஆனால் யுவன் இன்னும் இன்னும் என அணுக்கமாகவே தெரிந்தார். உரையாடலில் நேர்மையாக வெளிப்பட்டார் என்பதே காரணம் எனத் தோன்றுகிறது. இந்த உரையாடலை வாசித்தால் ஒன்று புரியும், கேள்விகள் அவரை ஏதேனும் ஒருவகையில் வரையறை செய்ய முயன்றபடி இருக்கும், அவர் அவற்றை மீறிச் சென்றபடியே இருப்பார். ஒருவிதமான கபடி ஆட்டம்போல. இந்த இரு அமர்வுகள் முடிந்தபின்னர் இந்த உரையாடலை நினைவுகூரும்போதும் வாசிக்கும்போதும் திகைப்பே எஞ்சியிருக்கிறது. இங்கே யுவன் ஒரு சிறு வட்டத்திற்கு அப்பால் சென்று சேரவே இல்லை. ஏன் என்பதை ஒருவாறு புரிந்துகொள்ள முடிகிறது. அவர் இருமைகளுக்கு வெளியே இருப்பவர். தீர்ப்பு சொல்பவராக இல்லாமல் வேடிக்கை பார்ப்பவராக இருக்கிறார். நமக்கோ, தீர்மானங்களும் தீர்ப்புகளும் ஆறுதல்களும் அல்லவா வேண்டியதாய் இருக்கிறது. நேர்காணலை தட்டச்சு செய்வதற்காகக் கேட்கும்போது பலமுறை எல்லோரும் சேர்ந்து சிரித்த சத்தத்தைக் கேட்டபடி இருந்தேன். அந்தச் சிரிப்பை நேர்காணலில் கொண்டு வரமுடியுமா எனத் தெரியவில்லை. கிண்டலும் கேலியும் விளையாட்டுமாய் அலுப்பே தட்டாமல் சென்றன அவ்விரு நாட்களும். மற்றொரு விஷயம், நேர்காணல் முடிந்து பலமாதங்கள் ஆகியும் பல்வேறு உரையாடல்களின்போது வெளிப்பட்ட அவரது உடல்மொழியை மனம் அப்படியே படம்பிடித்து வைத்திருக்கிறது. அவரைப் பார்த்தவர்கள், அவருடன் ஒருமுறை உரையாடியவர்கள்கூட இந்த நேர்காணலில் அவரது குரலை அதன் ஏற்ற இறக்கத்தோடு கேட்க முடியும் என்றே நம்புகிறேன். முதன்மையாக தன் முன்னோடிகள் மீதும் சக எழுத்தாளர்கள் மீதும் அவருக்கிருக்கும் மதிப்பும் வாஞ்சையும் இந் நேர்காணலில் வெளிப்படுகிறது.

கவிதைகள் குறித்து ஜெயமோகனுக்கும் யுவனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல், சுகுமாரனுக்கும் அவருக்கும் இடையே நகுலன் கவிதைகள் சார்ந்து நிகழ்ந்த உரையாடல், மின் தமிழ் இதழில் சி. சரவணகார்த்திகேயன் எடுத்த நேர்காணல், புரவி இதழில் கமலதேவி எடுத்த நேர்காணல், அண்மைய வல்லினம் மின்னிதழ் நேர்காணல் என பல்வேறு நேர்காணல்கள் இதுவரை வந்துள்ளன. அவற்றில் பேசப்பட்டவை பலவும் இங்கும் வரக்கூடும். அவற்றில் பேசப்படாத பலவும் இந்த நேர்காணலில் பேசப்பட்டுள்ளன. யுவனையும் அவரது படைப்புகளையும் அவற்றுக்கு ஆதார விசையாக இருக்கும் அவரது கலையிலக்கிய நோக்கையும் வாசகருக்கு இந் நேர்காணல் அறிமுகப்படுத்தும் என எண்ணுகிறேன். நேர்காணலில் நல்ல கேள்விகள் முக்கியம்தான். அதைவிடவும் பதில்கள் மிக முக்கியம். தொடக்கநிலை அடிப்படைக் கேள்விகள் முதல் நுண்ணிய அவதானிப்புகள் வரை பல்வேறு வகையான கேள்விகள் இந்த நேர்காணலில் இடம்பெற்றுள்ளன. இவற்றைத் தங்குதடையின்றி வெளிப்படுத்திய நண்பர்கள் அரவிந்தன், விக்னேஷ், காஞ்சி சிவா, காளி மற்றும் சுரேஷ் பிரதீப்பிற்கு நன்றி. யுவனுடைய அத்தனை கேலி கிண்டல்களிலும் பங்கேற்றபடி எங்களுக்கு இரு நாட்களும் உணவளித்த உஷாம்மாவிற்கு நன்றி. எங்களுக்கு நேரத்தை அளித்து தனது ஆத்மார்த்தமான பதில்களால் இந்த நேர்காணலை உயிர்ப்புடையதாக ஆக்கிய யுவனுக்கு நன்றி.
சுனில் கிருஷ்ணன்
சுரேஷ் பிரதீப்
காளி பிரஸாத்
விக்னேஷ் ஹரிஹரன்
காஞ்சி சிவா
அ. க. அரவிந்தன்
23/11/23
August 11, 2023
போபால் பயணம் - 2- சாஞ்சி

3 ஆம் தேதி காலை ஜனாதிபதி நிகழ்வை துவக்கி வைக்க வருகிறார் என எங்களுக்கு சொல்லப்பட்டது. பாதுகாப்பின் பொருட்டு எக்கச்சக்க கெடுபிடிகள். கைபேசியை எடுத்துவரக்கூடாது, பை ஏதும் கொண்டுவரக்கூடாது, 11.30 மணிக்கு எல்லாம் விழா அரங்கில் அமர்ந்திட வேண்டும். எங்களுக்கு வேறொரு திட்டம் இருந்தது. என்னோடு 2018 ஆம் ஆண்டு யுவபுரஸ்கார் விருது பெற்ற கன்னட எழுத்தாளர் பத்மநாப பட் இங்கு வந்திருந்தார். ஒரு நாவலும் சிறுகதை தொகுப்பும் எழுதியுள்ளார். பிரஜாவாணி எனும் கன்னட துவக்க விழா கேட்டு என்ன புண்ணியம், நாம் கிளம்பி சாஞ்சி செல்வோம் என்றான். சிக்கல் என்னவென்றால், நிகழ்விற்கு சுமார் ஐநூறு எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள் , ஒவ்வொருவரும் போபாலில் ஒவ்வொரு இடத்தில் தங்கியிருந்தோம். கவிஞர் சல்மா "வடநாட்டுல தனியா போறதுன்னா பயம், என்கைனாலும் கூட்டிட்டு போயிடு தம்பி" என சொல்லியிருந்தார். ஆனால் நாங்கள் ஆளுக்கொரு மூலையில் இருந்தோம். இதற்கிடையே எனது விடுதியில் தங்கியிருந்த மது ராகவேந்திரா எனும் கவி எங்களோடு இணைவதாக இருந்தது. மது தஞ்சாவூர் மராட்டிய பின்புலம் கொண்டவர். வளர்ந்தது கொல்கத்தாவில், மணமுடித்திருப்பது அருணாச்சல பிரதேச பெண்ணை, வசிப்பது அஸ்ஸாமில்.
பத்மநாப பட் ஓலாவில் வண்டியை அமர்த்திக்கொண்டு எனது விடுதிக்கு வந்து சேர்ந்தார். இண்டிகா காரில் பின்னிருக்கையில் முடங்கிக்கொண்டு மூவர் அமர்வது சிரமம் என்பதால் மது வரவில்லை. நகரின் மறுமூலையிலிருந்த சல்மாவை அழைத்துக்கொண்டோம். எனக்கும் பத்மநாப பட்டுக்கும் சுமாரான இந்தி அறிவு உண்டு. ஓட்டுநர் கொஞ்சம் ராங்கித்தனம் செய்தார். எப்படியோ சமாதானம் செய்து சென்று வந்தோம். மையசாலையை விட்டுவிட்டு டோல்கேட் இல்லாத சாலையின் வழி அழைத்து சென்றார். மழை தூறி நிலக்காட்சி வெகு அழகாக இருந்தது. நாங்கள் சென்ற சாலையில் ஓரிடத்தில் இங்கு 'டிராபிக் ஆப் கேன்சர்' கடந்து செல்கிறது என அறிவிப்பு பலகை வைத்திருந்தார்கள். விந்திய மலை தொடர் எங்களுடன் வந்தபடி இருந்தது. பீடா வாயர்கள் பானிப்பூரியான்கள் என நாம் பொதுமைப்படுத்தி நக்கலடிக்கிறோம். நாம் நாகரிகத்தின் உச்சத்தில் உள்ள குடிமை சமூகம் எனும் கற்பிதம் நமக்கு உண்டு. தமிழகத்தில் முக்கியமான தொல்லியல் தலங்களுக்கு சென்றிருக்கிறேன். பீர் புட்டிகளும் பிளாஸ்டிக் கப்புகளும் பிஸ்கட் பாக்கெட்டுகளும் இல்லாத தொல்லியல் இடமே இல்லை என சொல்லலாம். என் ஊருக்கு அருகே இருக்கும் திருமயம், குடுமியான்மலை, சித்தன்னவாசல் அனுபவங்களை கொண்டே என்னால் இதை சொல்லிவிட முடியும். சாஞ்சியிலும் சரி பின்னர் சென்ற பிம்பேட்காவிலும் சரி நான் ஒரேயொரு பிளாஸ்டிக் குப்பையை கூட காணவில்லை. பொது கழிப்பறை வெகு சுத்தமாக பராமரிக்கப்பட்டது. இரண்டு மூன்று கிலோமீட்டருக்கு சிறிய பெட்டிக்கடை கூட இல்லை என்பது மிக முக்கியமான காரணமாக இருக்கலாம். யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது என்பதால் அதற்கென சில நெறிமுறைகள் இருக்கக்கூடும் என எண்ணிக்கொண்டேன். சாஞ்சி சிறிய குன்றின் மீது உள்ளது. தூறலில் நனைந்தபடி, ஈரமான சாஞ்சியை கண்டது அபாரமான அனுபவம். ஒவ்வொரு பகுதியைப் பற்றியும் விளக்கமான தகவல்கள் ஆங்காங்கு அளிக்கப்பட்டுள்ளன. கும்மட்டங்களில் ஏறி செல்ல வழி இருக்கிறது. கும்மட்ட வடிவத்தின் பெயர் 'அண்டம்' அதனுள் புத்தரின் சாம்பல் உள்ளதாக நம்பப்படுகிறது. ஸ்தூபிகள் புத்தர் தொடர்பான ஏதோ ஒரு சின்னத்தை தன்னகத்தே கொண்டவை. சாஞ்சி அசோகர் எழுப்பியது. பனிரெண்டாம் நூற்றாண்டிற்கு பின் புழக்கத்தில் இல்லாமல் ஆனது. பின்னர் ஆங்கிலேயர்கள் காலத்தில் 1818 ஆம் ஆண்டு மீண்டும் கண்டடையப்பட்டு மறுநிர்மாணம் செய்யப்பட்டது. பெரும் கட்டிடங்கள் நிறைந்த கோட்டமாக இருந்திருக்க வேண்டும். அடித்தளங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. மூர்த்தங்கள் ஏதுமற்ற கருவறைகள். அமர்ந்து தியானிக்கும் புத்தர் திருவுரு, தலையுடைக்கப்பட்ட புத்தர் உருவம் என பலவற்றையும் கண்டோம்.

இத்தகைய வரலாற்று தலங்களை காணும்போது அவற்றுக்கு பின்னிருக்கும் காலத்தை விஞ்சி நிற்கவேண்டும் எனும் விழைவு படைப்பூக்கமாக எப்படி உருமாற்றமடைகிறது என சிந்தனை தோன்றியது. ஏதோ ஒரு வகையில் அத்தனை படைப்புச் செயல்பாடும் காலத்தை விஞ்சி நிற்க வேண்டும் எனும் பெருங்கனவால் இயக்கப்படுவதாக இருக்க முடியும். ஆனால் எத்தனை உண்மையில் எஞ்சியிருக்கும்? எஞ்சியிருப்பது தான் மேலான படைப்பு என்பதற்கான சான்றா? பயன்படுத்துபவற்றையும், புழக்கத்தில் உள்ளவற்றையும் மதிப்பிடவும் மேம்படுத்தவும் நமக்கு கருவிகள் உண்டு. கலை போன்ற பூடகமான பயன்பாடு உள்ளவற்றை காலம் எப்படி கடத்துகிறது என்பதற்கு திண்ணமான வழிமுறை ஏதுமில்லை. காளத்தி விஞ்சி நிற்கும் ஒரு படைப்பு என்பது காலத்தால் நசுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான படைப்புகளின் பிரதிநிதியும் கூட. சிங்கள சுற்றுலா குழு ஒன்று நாங்கள் சென்றிருந்த சமயத்தில் வந்திருந்தது. நான் மட்டுமே கையில் குடை வைத்திருந்தேன். சல்மாவும் பத்மநாப பட்டும் ஓரளவு நனைந்துவிட்டார்கள். அமர்ந்து தியானிக்க முடியவில்லை என்றாலும் மழையில் சாஞ்சியி கண்டது பெரும் பரவசம் என்றே சொல்ல வேண்டும். இரு பெரும் தூண்களை தனியாக வைத்திருந்தார்கள். படுக்கைவசத்தில் நோக்கும்போது தான் ஒற்றை கல்லால் ஆன அதன் பிரம்மாண்டம் விளங்குகிறது. புதிதாக மணமான இளம் தம்பதியர் சாஞ்சியை பார்க்க வந்திருந்தனர். பையனுக்கு இருபது இருக்கலாம், பெண்ணுக்கு அதைவிட குறைவு. பையன் ஷூ அணிந்திருக்க பெண் வெறுங்காலில் நடந்தது பார்க்க வினோதமாக இருந்தது. சல்மா அவனிடம் நேரடியாக கேட்டே விட்டார். செருப்பு அறுந்துவிட்டது என்று ஏதோ சொன்னான்.
கன்னட - தமிழ் இலக்கிய சூழல் பற்றி போபால் திரும்புகையில் பேசியபடி வந்தோம். பைரப்பா நூல்கள் முப்பதாயிரம் பிரதிகள் விற்கின்றன. பிறருக்கு அத்தகைய வாய்ப்புகள் ஏதுமில்லை. பத்மநாப பட் பிரஜாவாணி இதழில் பணியாற்றியபோது நடிகர் அர்ஜுன் மீதான மீடூ குற்றசாட்டை முதன்முதலில் வெளி கொணர்ந்தவன். நடிகை சுருதி ஹரிஹரன் நேர்காணல் வழியாக இந்த செய்தி அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரஜாவாணி இலக்கிய பகுதியில் நிறைய மதிப்புரைகள் எழுதியுள்ளான். விவேக் ஷான்பகை மொத்தமாக படித்து அவரை நீண்ட நேர்காணல் செய்ததாக கூறினான். இப்படி மொத்தமாக வாசிப்பதும், அதையொட்டிய உரையாடலும் எழுத்தாளரை எப்படி தொகுத்துக்கொள்ள உதவுகிறது என இருவரும் பேசிக்கொண்டு வந்தோம். என் நோக்கில் விமர்சனம் என்பது அப்படியான ஒன்றாகவே இருக்க முடியும். ஒரு படைப்பை பற்றிய மதிப்பீடு என்பது ரசனை அபிப்பிராயம் என சொல்லிக்கொள்ளலாம். அவற்றுக்கு முக்கியத்துவம் இல்லாமல் இல்லை. ஆனால் விமர்சனம் என்பது விரிந்த பின்புலத்தில் எழுத்தாளரையும் அவரது ஆக்கத்தையும் வைத்து நோக்குவது.
ஜனாதிபதியின் வருகையை பொருட்டு போபாலில் சாலைகள் அடைக்கப்பட்டிருந்தன. எங்கள் விழா நடக்கும் ரவீந்திர பவானிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் ஓட்டுநர் இறக்கிவிட்டார். ஓலா காட்டியதைவிட 250 ரூபாய் கூட கொடுத்தோம். சல்மா முழுக்க நனைந்திருந்ததால் விழா அரங்கிற்கு வர தயங்கினார். ஆனால் வேறு வழியில்லை என்பதால் மூவரும் சென்றோம். நாங்கள் சென்றபோது தான் திரவுபதி முர்மு உரையாற்ற தொடங்கினார். எங்களது அடையாள அட்டையை சரிபார்த்துவிட்டு உள்ளே விட்டார்கள். பையிற்கோ கைபேசிக்கோ தடை சொல்லவில்லை. மாடியில் உட்கார்ந்து கொண்டோம். விழா மேடையை புகைபபடம் எடுக்க முயன்றபோது மட்டும் வந்து எச்சரிக்கை செய்தனர். நாட்டுப்புற / பிராந்திய நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவின் வெவ்வேறு பகுதியினர் தங்களுக்கே உரிய தாளவாத்தியங்களுடன், அலங்காரம் செய்துகொண்டு இருபது நிமிடங்கள் ஆடினர். ரவீந்திரபவனின் மைய அரங்கத்தில் ஐயாயிரம் பேர் அமரலாம். நல்ல ஒலியமைப்பு கொண்டது. மொழிபெயர்ப்பாளர் என். கல்யாண ராமன், எழுத்தாளர் இரா. முருகன் ஆகியோர் அங்கே வந்திருந்தனர். நிகழ்வு முடிந்ததும் உணவிற்கு எங்கு செல்வத்த்தேனா எவருக்கும் தெரியவில்லை. ரவீந்திர பவனின் கீழ்த்தளத்தில் உணவு கூடமும் எங்களுக்கான சிறிய நிகழ்வு அரங்குகளும் இருந்தன. சாகித்ய அகாதமி, நேஷனல் புக் ட்ரஸ்ட், சங்கீத் நாடக அகாடமி ஆகியோரின் புத்தக நிலையங்கள் இருந்தன. ரவீந்திர பவன் போபாலில் நகர் மையத்தில் உள்ளது. அத்தனைப்பேரிய இடம் நகர் ஐயத்தில் நன்கு பராமரிக்கப்படுவது வியப்பை அளிக்கிறது. உணவிற்கு பெரிய வரிசை. 2.30 மணியிலிருந்து அமர்வுகள் தொடங்குவதாக அறிவித்திருந்தார். ஒரே நேரத்தில் ஐந்து அரங்குகள் நிகழ்ந்தன. பதாகை- யாவரும் வெளியீடாக வெளிவந்த 'பாகேஸ்ரீ' தொகுப்பை எழுதிய எஸ். சுரேஷ் அவர்கள் வந்திருந்தார். சுரேஷ் ஆங்கிலத்தில் நேரடியாக எழுதக்கூடியவர். இந்திய இலக்கியம் குறித்து ஆழமான வாசிப்பு உடைஅய்வர். அவருடைய பரிந்துரையின் பேரில் குர்தயாள் சிங்கின் ஒரு நூலை சாகித்திய அகாதமி ஸ்டாப்களில் வாங்கிக்கொண்டேன். இசை குறித்தும் கவிதைகள் குறித்தும் தொடர்ந்து எழுதி வருபவர். எனது விடுதியிலேயே அவருக்கும் அறை என்பதாலும், தங்குதடையின்றி இந்தி பேசுவார் என்பதாலும் ஏற்கனவே நன்கு அறிமுகமான நண்பர் என்பதாலும் இருவரும் சேர்ந்தே சுற்றினோம்.
எழுத்தாளர்களாக உருமாறிய மருத்துவர்கள் பங்குகொள்ளும் அமர்வு நிகழ்ந்தது. மருத்துவம் என்பது வேறு எழுத்து என்பது வேறு என அரங்கை தாங்கிய துருபா ஜோதி போரா தொடங்கினார். ஆரத்தி பெல்லாரி எப்படி மருத்துவத்தின் அழுத்தங்களை இலக்கியத்தின் வழி எதிர்கொள்கிறேன் என்றார். அபிஜித் தரப்தார் மருத்துவராக இருப்பது எத்தகைய வாய்ப்பு கதைகளை உருவாக்குவதற்கு என தனது அனுபவத்திலிருந்து சில நிகழ்வுகளையும் அவை கதையாகி போன தருணங்களையும் சுவாரசியமாக சொன்னார். ஆனால் நான் பெரிதும் ஏற்கப்பட்டது காவேரி நம்பீசனின் உரையினால் தான். காவேரி கர்நாடகத்தில் வசிக்கிறார். தனது மருத்துவ வாழ்க்கை முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் அறுவை சிகிச்சை நிபுணராக ஏழை மக்களுக்கு உதவும் வகையில் பணியாற்றி வருகிறார். பல சிறார் கதைகளை எழுதியுள்ள அவர் 'A Luxury called Health' எனும் நூலுக்காக பரவலாக கவனிக்கப்பட்டார். மருத்துவராக இருப்பது எழுத்தை எப்படி பாதிக்கிறது என்பதை தாண்டி எழுத்தாளராக இருப்பது மருத்துவ தொழிலில் எத்தகைய பாதிப்பை செலுத்துகிறது என்பதை பாவனைகள் ஏதுமின்றி தெளிவாக சொன்னார். அமர்வு முடிந்ததும் அவரை அறிமுகம் செய்துகொண்டு கொஞ்சநேரம் பேசினேன். எனக்கு பிடித்த ஆயுர்வேத சுலோகம் ஒன்று உண்டு, அதன்படி ஆதிசேடன் சரகராகவும், பதஞ்சலியாகவும் பாணினியாகவும் அவதரித்து முறையே உடல் மனம் மாற்று வாக் தோஷங்களை சரக சம்ஹிதை, யோக சூத்ரம் மற்றும் மஹா பாஷ்யம் ஆகியவற்றை இயற்றி சீர் செய்கிறார் என கூறும். மருத்துவராகவும் எழுத்தாளராகவும் இருப்பது ஒன்றின் இரு பக்கங்கள், அல்லது ஒன்றே என எனக்கு எப்போதும் தோன்றுவதுண்டு.
'இலக்கியமும் இயற்கையும்' எனும் தலைப்பில் இன்னொரு அரங்கு நடந்தது. ரிக்வேதம் உபநிஷத் தொடங்கி இயற்கை இப்படியொரு பேசு பொருளாக இலக்கியத்தில் வருகிறது, இன்று காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுசூழல் சிக்கல்களில் போதுமான அளவு இலக்கியம் எதிர்கொள்கிறதா? அவற்றை பேச வேண்டிய தேவை என்பதை எல்லாம் பற்றி நல்லதொரு உரையாடல். குறிப்பாக அரங்கை ஒருங்கிணைத்த சேகர் பாதக் மற்றும் விவேக் மேனன் உரை சிறப்பாக இருந்தது. விவேக் மேனன் அமைதி பள்ளத்தாக்கு காக்கப்பட்டதில் சுகதகுமாரி 'டீச்சரின்' கவிதைகள் ஆற்றிய பங்களிப்பை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். அவருடைய கவிதைகள் ஒரு இயக்கமாகவே மாறியதை பற்றி குறிப்பிட்டார். அமிதவ் கோஷின் எழுத்துக்களின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். இயற்கையை அவதானிப்பது, பதிவு செய்வது, கொண்டாடுவது, நன்றி தெரிவிப்பது, சீரழிவை ஆவணப்படுத்துவது, மாற்று வாழ்வை கற்பனை செய்வது என பல்வேறு தளங்களில் செயல்பட முடியும். அருண் பிரசாத் கொண்டு வந்த காலநிலை மாற்ற தொகுப்பு நூலின் முக்கியத்துவத்தை பற்றி எண்ணிக்கொண்டேன். தமிழில் அது ஒரு முக்கியமான தொடக்கம். அமர்வின் இறுதியில் பேசிய சேகர் பாதக் அரசின் சூழலியல் கொள்கைகளை சற்று தீர்க்கமாக விமர்சித்து பேசினார். காஷ்மீர் சிக்கலும் மணிப்பூர் சிக்கலும் நிலம் மற்றும் சூழலியலுடன் தொடர்புடையவை. அக்கோணங்கள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்றார். இந்த அமர்வின் முடிவில் என்னை தொந்திரவு செய்யும் நிகழ்வு ஒன்று நடந்தது. சேகர் பேசி முடித்ததும் எனக்கு முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர் என்னிடம் இப்போது பேசியவர் பெயர் என்ன என கேட்டார். நான் பதில் சொல்வதற்குள் பின்னாடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த குழுவினரிடம் கேட்டார். அவர்கள் சொன்னதும் யாருக்கோ அவசர அவசரமாக கைபேசியில் அனுப்பினார். விடுவிடுவென வெளியேறி சென்றார். உச்சியில் சிகை வைத்திருந்தார், கையில் ஆரஞ்சு கயிறு, டீஷர்ட்டும் பேண்டும் அணிந்திருந்தார். அவருக்கும் இலக்கியத்திற்கும் எந்த தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை. அவர் யார்? எதற்காக அமர்ந்தார்? யாருக்கு செய்தி அனுப்பினார்? என்ன அனுப்பினார்? ஏதும் தெரியவில்லை. விழா முடியும்வரை அவர் மீண்டும் கண்ணில் படுகிறாரா என தேடியபடி இருந்தேன். ஆனால் கண்ணில் படவே இல்லை. திறந்த சாத்தியம் கொண்ட இந்நிகழ்வில் மனம் உச்சபட்ச மோசமான சாத்தியத்தையே கற்பனை செய்கிறது.
அடுத்து 'ஐடியா ஆப் இந்தியா' எனும் அரங்கிற்கு சென்று அமர்ந்தேன். முதல் முரண்பாடு அங்கு பேச அழைக்கப்பட்டவர்கள் அனைவருமே இந்திய மையநிலத்தை சேர்ந்தவர்கள். இந்த தலைப்பிற்கு தென்னிந்தியாவிலிருந்தும் வடகிழக்கிலிருந்தும் ஒருவரையாவது அழைத்திருக்க வேண்டாமா? இந்தியா எனும் கருத்தாக்கத்திற்கும் பாரதம் எனும் கருத்தாக்கத்திற்கும் இடையேயான இடைவெளி என்ன என்பதிலிருந்து தொடங்கியது. பாரதம் என்பது பரதனின் பேரிலிருந்து,அதாவது நம்மை நாமே ஆண்டுகொண்டபோது நமக்கு நாம் இட்டுக்கொண்ட பெயர். இந்தியா என்பது இந்து, சிந்து, அந்நியர்கள் இட்ட பெயர். என்னை வெகுவாக அமைதி இழக்க செய்த அமர்வு இதுதான். பார்ஹ பண்பாட்டில் திருக்குறளுக்கும், தொல்காப்பியத்திற்கு இடமில்லையா? இவர்கள் பாரத பண்பாட்டு என சொல்வது சம்ஸ்கிருத பண்பாட்டை மட்டும்தானா? அதிலேயே எத்தனை வகைகள், எத்தனை பிராந்தியங்கள் உள்ளன. சிந்து- கங்கை சமவெளி பண்பாடு பாரதத்தின் பண்பாடாக இருக்கலாம் அது இந்தியாவின் பண்பாடு அல்ல. நானொரு அத்வைத வேதாந்தி, ஆயுர்வேத மருத்துவன் சம்ஸ்கிருத வெறுப்போ, தமிழ் மேட்டிமையோ எனக்கு இல்லை. ஆனால் இந்திய எனும் கருத்தாக்கம் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஐவர் பேசிய அமர்வில் இந்தியாவின் தரப்பாக பேசிய இருவரும் ஆங்கிலத்திலும் பிறர் இந்தியில் பேசியதும் சுவாரசியம். ஹரிஷ் திரிவேதியின் உரை மிக சிறந்தது. அடையாளம் என்பது என்ன எனும் கேள்வியை அவர் எழுப்பினார். நம்மைப் பற்றி நாம் சொல்லும் கதைகளே நம் அடையாளம் என சுதிர் காக்கர் மேற்கோளை சொல்லிவிட்டு, நம்மை பற்றி பிறர் நம்மிடம் சொல்வதும் நம் அடையாளம் தான், நம்மைப் பற்றி நமக்கு பின்னால் பேசுவதும் நம் அடையாளம் தான் என்றார். ஹரீஷின் இந்த கூற்று எனக்குள் பல சிந்தனைகளை கிளறியது. இந்தியா எனும் கருத்தாக்கம் குறித்து அங்கு பேசிய பலரும் நாம் நம்மை பற்றி சொல்லும் கதைகளையே சொல்வதாக தோன்றியது. நம்மால் கட்டுப்படுத்த முடிகின்ற கதை என்பது நம்மை பற்றி நாம் சொல்லிக்கொள்ளும்

கதையை மட்டும் தான். ஆகவேதான் திரும்பத்திரும்ப அழுத்தி சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஓரளவு செல்வாக்கு அடைந்தால் நாம் விரும்பும் கதையை வற்புறுத்தி பிறரிடம் கேட்டு பெறலாம். ஆனால் இவை இரண்டிற்கும் அப்பாலான நமக்கு பின்னாடி பேசப்படும் கதையே வரலாறாக நின்றுவிடும், பெரும் ஆற்றல் கொண்டு எழும். இந்த அச்சம் எல்லா சர்வாதிகாரிகளையும் ஆட்டிப்படைக்கிறது. ஆகவேதான் அவர்கள் ரகசியங்களையும் காதல்களையும் அஞ்சுகிறார்கள். கதையாடலை கட்டுப்படுத்துவதே அதிகாரத்தை கட்டுப்படுத்துவதும். ஹரிஷ் திரிவேதி தனது உரையில் ஒற்றை மொழியா ஒரு நாடா எனும் விவாதம் முக்கியமானது என்றார்.தனது தாய்மொழி இந்தி என்றாலும் தேசிய மொழியை விட ஒரு தேசமாக இருப்பது முக்கியம் என தான் கருதுவதாக குறிப்பிட்டார்.
அங்கிருந்து விடுதியறைக்கு திரும்பினோம். ராஜ்மோகன், மலையாள கவிஞர் இந்து மேனன், மது ராகவேந்திரா என அனைவரும் நெடுநேரம் பேசியபடி இரவுணவு உண்டோம். மற்றொரு நெடிய நாள் முடிவுக்கு வந்தது.
August 10, 2023
போபால் பயணக்குறிப்பு - உஜ்ஜயினி
இம்முறை ஆகஸ்ட் 3 முதல் 6 ஆம் தேதி வரை என நான்கு நாட்களுக்கு விரிவாக்கப்பட்டிருந்தது. ஒன்றாம் தேதியே மதுரையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு டெல்லி சென்று அங்கிருந்து இன்னொரு விமானம் வழியாக இரவு போபால் விமான நிலையம் சென்று சேர்ந்தேன். மதுரையிலிருந்து தாமதமாகவே புறப்பட்டது. விமானம் ஏறுவதற்கு முன் ஒருமுறை பைகளை சோதனையிடுகிறார்கள். ஆகஸ்ட் மாதம் என்பதாலா அல்லது புதிய வழக்கமா என தெரியவில்லை. சென்னையிலிருந்து கூட போபாலுக்கு நேரடி விமான சேவை இல்லை. ஏன் எனத் தெரியவில்லை. அவல் உப்புமாவின் ஒரு வகையை போஹா என சொல்கிறார்கள். ஏதோ ஒரு விமான பயணத்தின்போது தான் முதல்முறையாக உண்டேன். அதன்பின்னர் ஒவ்வொரு விமான பயணத்திலும் அதையே உண்கிறேன். வயிறை படுத்தாத, ருசியான, லகுவான உணவு. இப்போது உள்ளூர் விமானங்களில் கூட இருக்கைகளுக்கு தனியாக வசூல் செய்கிறார்கள். இலவச இருக்கையாக எனக்கு கிடைத்தது கடைசி வரிசையின் மத்திய இருக்கை. வேறுவழியில்லை.
டெல்லியிலிருந்து போபால் செல்லும் விமானத்தில் எதிர் வரிசையில் வடகிழக்கிலிருந்து இரு பெண்கள் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒருவர் சோர்ந்து சுருண்டு படுத்திருந்தார். பின்னர் விமானத்தின் கழிப்பறைக்கு அருகே கீழே அமர்ந்து கொண்டார். மருந்து ஏதேனும் வேண்டுமா என கேட்டேன். தேவையில்லை இது அவரது முதல் பயணம் என்பதால் சற்று பீதியுற்று இருக்கிறாள் என்றார் அவர் தோழி.
போபால் விமான நிலையம் சற்றே சிறியது. மதுரை அல்லது திருச்சி விமான நிலையத்தை போல என சொல்லலாம். நான் சென்று இறங்கியபோது மழை தூறிக்கொண்டிருந்தது. நிலையத்தின் உள்ளேயே இருந்த வாடகை வண்டி முனையத்தில் வண்டிக்கு பதிவு செய்துகொன்டேன். வெளியே உபர் ஓலா கிடைக்கிறது. ஒப்புநோக்க அவை மலிவு எனும் ஞானத்தை பின்னர் தான் அடைந்தேன். விமான நிலையம் இருக்கும் பகுதி புறநகர் பகுதி. விரிந்த தூய்மையான சாலைகள் மெல்ல மெல்ல போபாலில் பழைய நகருக்குள் குறுகி சென்றது. சிறு சிறு கடைகள், நெரிசல் என பழைய போபால் நம் சென்னையின் சில பகுதிகளை நினைவுபடுத்தியது. தொன்மையான பெருநகரங்கள் எப்போதும் இப்படித்தான். அதன் மையம் நெரிசலும் தொன்மையும் வாய்ந்தவை. அவை ஆழி வட்டங்கள் போல விரிந்து விரிந்து நூதனமாகி பெருகுபவை. போபால் ரயில் நிலையம் விஸ்தாரமானது. இரவு நான் அங்கு சென்று சேர்ந்தபோது பெருங்கூட்டம் நடைமேடைகளில் அமர்ந்தும் உறங்கியும் கிடந்தது. அத்தனைபெரிய திரளை கணக்கில் கொண்டால் ரயில்நிலையம் சுத்தமாகவே இருந்தது என சொல்ல வேண்டும். எங்கிருந்து எங்கு செல்வது என குழப்பம் எனக்கு. படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டியில் முன்பதிவு செய்திருந்தேன். போபாலில் இருந்து இந்தூர் செல்லும் வண்டி.
இரவு 11.10 க்கு புறப்பட்டு விடிகாலை (அல்லது நள்ளிரவின் கடைசி ) 2.50 மணிக்கு உஜ்ஜைன் செல்ல வேண்டும். 2.45 க்கு அலாரமை நிர்ணயித்திருந்திருந்தேன். மழை ஓய்ந்த இரவு. நிலவு தென்பட்டது. ரயில் நிலையத்தில் பிள்ளைகுட்டிகளுடன் மூட்டை முடிச்சுகளை வைத்துக்கொண்டு இத்தனை ஜனம் அமர்ந்திருப்பதை பார்த்தபோது மனதில் இனம் புரியாத கிளர்ச்சி எழுந்தது. எவ்வித அசூயையும் இல்லை. உண்டு மீதியிருந்த குப்பையை என்னுடன் பயணித்தவர் கொடுங்கள் என வாங்கிகிச்சென்று குப்பை தொட்டியில் சேர்த்தார். புரத குறைபாடை காட்டும் செம்பட்டை தலைமயிர்கள். வர்ணங்கள் வாரியிறைக்கப்பட்ட ஆடைகள்.
புதிய இடங்களுக்கு பொது போக்குவரத்தில் செல்லும்போது மனம் அசாதாரண கூர்மையும் விழிப்பும் கூர்மையும் கொள்ளும். ஓய்வுக்கு வழியில்லை. கண் மூடிப்படுத்தாலும் கூட இரவில் சுழலும் அச்சு இயந்திரம் போல் மனம் ஓடிக்கொண்டே இருந்தது. ஒருமணிக்கு பிறகு கண் அயர்ந்திருக்க வேண்டும். ஏதோ ஒரு இடத்தில் நிற்பது போல உணர்வு தட்ட உறக்கத்திலிருந்து விழித்து மணியை நோக்கினேன். 2.25. எந்த நிறுத்தம் என நோக்கினால் உஜ்ஜயினி! 25 நிமிடங்கள் முன்னதாகவே ரயில் வந்து சேர்ந்துள்ளது. வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தேன்.
நீலோத்பல் எனும் இந்தி கவிஞர் உஜ்ஜையினில் உள்ளார். சென்றமுறை சிம்லா சென்றபோது .அறிமுகம் ஆனவர். அரைகுறை இந்தியைக் கொண்டு எப்படியோ சமாளித்து அவரோடு உரையாடியிருக்கிறேன். அவருக்கு நெரூதா மிகவும் பிடித்த கவி. தாமஸ் ட்ரான்ஸ்டோமர், மிரஸ்லோவ் ஹோலுப் என பலரையும் இந்தியில் வாசித்திருக்கிறார். அவசியம் உஜ்ஜையினிக்கு வரவும் என சொல்லியிருந்தார் (ஒரு பேச்சுக்கு சொல்லியிருப்பார் பாவம். அடுத்த ஆண்டே போபாலில் உன்மேஷா நடக்கும், அதற்கு மீண்டும் என்னை அழைப்பார்கள் என்றெல்லாம் அவர் எண்ணியிருக்க வாய்ப்பில்லை). ரயில் நிலையத்திலிருந்து எந்த பக்கமாக வெளியே வர வேண்டும்,எங்கிருந்து ஆட்டோ பிடிக்க வேண்டும், எந்த இடத்தை அடையாளமாக சொல்ல வேண்டும் என்பதை எல்லாம் விலாவரியாக தெரியப்படுத்தியிருந்தார். அதேபோல் அதிகாலை 3 மணிக்கு அவர் வீட்டை சென்றடைந்தேன். மாடியில் தனி பகுதி கட்டியிருக்கிறேன், நீங்கள் தாராளமாக தங்கிக்கொள்ளலாம் என்று சொல்லியிருந்தார். நீலோத்பல் (ஆண் கவிதான்) என்னைவிட குறைந்தது பத்து வயது மூத்தவர். பார்த்தால் தெரியாது. மூன்று கவிதை தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். அலோபதி மருந்துகளின் மொத்த வியாபாரம் செய்கிறார். வீடுதான் அலுவலகமும். அட்டை பெட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன. கவிகளுக்கே உரிய விட்டேந்தி தன்மை உள்ளவர். "மஹாகாலேஸ்வரரை பார்க்க பல ஆண்டுகளாக செல்வதில்லை." என்றார். குளியல் அறையில் சமையல் எரிவாயுவை வாட்டர் ஹீட்டருடன் இணைத்திருந்தார். வெந்நீர் குழாயை திறந்தால் ஹீட்டருக்குள் நெருப்பு பற்றிக்கொள்கிறது. குழாயை மூடினால் அணைந்து விடுகிறது. மின்சார ஹீட்டரை விட சிக்கனமானது என்றார். சற்று நேரம் உறங்கி எழுந்தேன். நீலோத்பலின் வீடு இருக்கும் இடம் சந்தடியற்ற பகுதி. மழை சன்னமாக தூறிக்கொண்டே இருந்தது.
இப்போது ஆலயத்திற்கு எந்த வழியில் செல்ல வேண்டும், எப்படி சீக்கிரமாக செல்வது என்று நீலோத்பல் தனக்கு தெரிந்த ஒவ்வொரு நண்பருக்கும் பேசி பார்த்தார். 9 மணிக்கு வீட்டிலிருந்து அவரது வண்டியில் புறப்பட்டோம். சாலையோர கடையொன்றில் போஹா சாப்பிட நிறுத்தினோம். "விமானங்களில் சாப்பிட்டதே உங்களுக்கு அவ்வளவு பிடித்திருக்கிறந்து என்றால் இங்கே இந்தோரி போஹா சாப்பிட்டு பாருங்கள். போஹா பல்வேறு சுவைகளில் கிடைக்கும், ஆனால் இந்த கடையில் உள்ள ருசி வேறெங்கும் கிடையாது” என்றார். செய்தி தாள் நறுக்கில் இரண்டு கரண்டி போஹாவை சுடசுட அடுப்பிலிருந்து இட்டு, மேலே கொஞ்சம் ஓமப்பொடியை தூவி கொடுத்தார். தொட்டுக்கொள்ள தோக்லாவும் சூடான ஜிலேபியும். தோக்லா குஜராத்தி உணவுதான் என்றாலும் மத்திய பிரதேசத்து உணவு வழக்கத்திற்குள் சேர்ந்துவிட்டது. . இப்போது இதை எழுதும்போது இவற்றின் சுவையை நாநுனி நினைவுகூர்கிறது.


அங்கிருந்து நாங்கள் முதலில் சென்றது கட்காளிகா ஆலயத்திற்கு. சிறிய ஆலயம் தான். சக்தி பீடங்களில் ஒன்று என கருதப்படுகிறது. அதைவிட இவளை சென்று காண எனக்கு முக்கியமான நோக்கம் உண்டு. இவளே கவி காளிதாசனின் நாவில் எழுதி சொல் அருளியவள். ஞானக்கூத்தன் ஒரு கட்டுரையில் ஏதோ ஒரு ஊர் திருவிழாவிற்கு சென்றுவிட்டு திண்ணையில் படுத்துறங்கியபோது நாவில் காளி எழுதியதாக கனவு கண்ட அனுபவத்தை பற்றி எழுதி இருக்கிறார். ஏதோ லேசாக நமக்கும் எழுதி இருக்கிறாள்தான், இன்னும் கொஞ்சம் அழுத்தம் திருத்தமாக எழுதிவிடு என அம்மையிடம் கேட்கும் உரிமை நமக்கும் உண்டுதானே. சிவகங்கையில் கூட உச்சிமாகாளி/ உச்சினிமாகாளி ஆலயம் உண்டு. மதுரை, நெல்லை என தென் தமிழகத்தில் பல இடங்களில் கோவில் கொண்டவள். விக்கிரமாதித்தன் வணங்கிய காளி. தமிழகத்து உச்சினிமாகாளிக்கு என தனி கதை உண்டு. தாந்த்ரீக- சாக்த மரபின் வழியாக இந்த வழிபாடு இங்கு பரவியிருக்க வேண்டும் என்பது என் ஊகம். உஜ்ஜயினியில் உள்ள மற்றொரு காளியான ஹர்சித்தி மாதா தான் விக்கிரமாதித்தன் வணங்கிய காளி, அதுவே தமிழகத்தின் உச்சினிமாகாளி என சொல்பவர்களும் உண்டு.
ஒற்றை விமானமும் சிறிய சுற்று சுவரும் கொண்ட சிறிய கோவில் தான். எடுத்து கட்டப்பட்ட ஆலயம். பிரகாரத்தில் இரண்டு விளக்கு தூண் வடிவிலான கொடிமரங்களை கண்டேன். அவை சற்று புராதனமானவை. வெளி பிரகாரத்தில் மூன்று சிவலிங்கங்களுக்கு சன்னதிகள் உள்ளன. ஏறத்தாழ நம்மூர் சாத்தாவை நினைவுபடுத்தும் சில பின்னமடைந்த சிலைகளை வெளியே கண்டேன். செந்தூர நிறத்தில் இருந்தவள் சிவந்த நா நீட்டி சிறிய வெள்ளி கிரீடம் தரித்திருந்தாள். உள்ளே வருவதும் செல்வதுமாக இருந்தார்கள். பெரிய நெருக்கடி இல்லை. சொல்லையும், கவிதையையும், மனத்திண்மையையும் வேண்டி மனமார பிரார்த்தித்தேன். மனதிற்கு அணுக்கமான சில தமிழ் கவிகளுக்காகவும் எழுத்தாளர்களுக்காகவும் படைப்பூக்கம் வற்றாமல் இருக்க வேண்டினேன். மொழியறியாத ஊரில் இயல்பாகவே மவுனம் நம்முள் குவிகிறது. நாக்கில் அழுத்தி எழுதினாளா எனத்தேறியவில்லை. ஆனாலும் இதுவரை அளித்தவைக்கு நன்றியுடையவனாகிறேன். எப்போதும்.

குற்றால சாரலை போல தூறிக்கொண்டே இருந்தது. உஜ்ஜயினி மொத்தமும் கார்மேகம் சூழ இருந்தது. க்ஷிப்ரா நதியை கடந்து கால பைரவரை காண சென்றோம். அப்பகுதி முழுவதும் சோயா பீன்ஸ் பயிரிடப்பட்டிருந்தது என நீலோத்பல் காண்பித்தார். விந்திய மலை தொடர் குன்று போல ஆங்காங்கு தென்படுகிறது. நீலோத்பல் எந்த ஆலயத்திற்குள்ளும் வரவில்லை. வண்டியை வைத்துக்கொண்டு மனிதர்களை வேடிக்கை பார்த்தபடி வெளியேவே இருந்தார். காலபைரவர் ஆலயத்தில் சுமார் ஒரு மணிநேரம் வரிசையில் நின்றேன். காவல்துறையினரின் தடுப்பு வேலிகள் வரிசைக்காக பயன்படுத்தப்பட்டிருந்தன.விதவிதமான வர்ணங்களுடைய கயிறுகள் அந்த தடுப்பு வேலிகள் முழுக்க கட்டப்பட்டிருந்தன. பலவண்ண சடாதாரியை போல காட்சியளித்தது. நம்மூர் சிறு தெய்வங்கள் சிலவற்றுக்கு படைப்பது போல காலபைரவருக்கு சீமை சாராயம் படைக்கும் வழக்கமும் உண்டு. கோவில் அருகேயே மதுபான கடை உள்ளது. கூட்டம் அலைமோதுகிறது. கருங்கல் முகப்பு காண்பதற்கு பழைய பிரிட்டிஷ் பாணியிலான கட்டிடம் போல தோற்றம் அளிக்கிறது. இங்குள்ள பூசகர்கள் மேற்சட்டை அணிந்து கொள்கிறார்கள். காளியை போன்ற உருவம் தான். அலங்காரத்தில் தான் வேறுபாடு. வெளியே வந்து க்ஷிப்ரா நதியை சற்று நேரம் பார்த்துக்கொண்டு நின்றோம். பேச்சு துணைக்கு எவரும் இல்லை எனும்போது நம்முள் அபூர்வமான ஒரு அமைதி குடிகொண்டு விடுகிறது. மனம் கூர்மை அடைந்து எல்லாவற்றையும் கவனிக்க தொடங்குகிறது. இந்த மத்திய பிரதேச பயணத்தில் அவ்வகையில் உஜ்ஜயினி பயணமே மனதிற்கு நெருக்கமானதாக உணர்கிறேன்.
அங்கிருந்து சந்து சந்தாக வாகன நெரிசலில் ஊடாக மஹாகாலை காண அழைத்து சென்றார். நெற்றியில் சந்தனம் மெழுகி சிந்தூரத்தை மையாக கொண்டு நெற்றியில் ஓம் மஹாகால் என எழுதுவது ஒரு வழக்கமாக உள்ளது. பலரும் உஜ்ஜயினி முழுவதும் இந்த கோலத்தில் திரிகிறார்கள். தலையெழுத்தை மஹாகாலின் எழுத்து மாற்றும் என நம்புகிறார்களா என தெரியவில்லை. 250 ரூபாய் விரைவு தரிசன சீட்டு பெற்றுக்கொண்டு 20 நிமிடங்களில் மஹாகாலேஸ்வரரை காண சென்றேன். ஜெய் மஹாகால எனும் கோஷம் பக்தர்களின் மத்தியே ஒலித்துக்கொண்டே இருந்தது. மஞ்சள் மற்றும் சாம்பல் நிறத்தில் ஓம் மஹாகால என எழுதப்பட்ட ஜிப்பாக்களை பலரும் அணிந்திருந்தார்கள். மஹாகால சுயம்பு லிங்கம். 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்று. சாவன் மாதம் அதாவது ஆடி மாதத்தில் அவரை வழிபடுவது சிறப்பு என நம்புகிறார்கள். ஒப்புநோக்க மஹாகால ஆலயம் பெரியது, மையத்தில் குளம் உள்ளது. சுற்றி நிறைய சிறு சிறு கோட்டங்கள் உள்ளன. மாலை மூன்று மணிக்கு போபாலுக்கு ரயில் இருந்தபடியால் சற்று அவசரமாக நீலோத்பல் வீட்டிற்கு திரும்பினேன். இங்கு ஈ ரிஃஷாக்கள் நிறைய புழக்கத்தில் உள்ளன.நீலோத்பலின் மனைவியும் மகள் கணு ப்ரியாவும் சேர்ந்து எங்களுக்காக பராத்தா தால் காலி பிளவர் சப்ஜி செய்து வைத்திருந்தார்கள். கணு பிரியா பொறியியல் பட்டதாரி, இப்போது தகவல் தொழில்நுட்ப துறையில் பணியில் சேர முயன்று வருகிறார். அவர்களது மகன் அனாகத் பத்தாவது படிக்கிறான். இருவருமே சரளமாக ஆங்கிலத்தில் உரையாடினார்கள். ரஜினி, பிரபாஸ், அல்லு அர்ஜுன், யாஷ் ஆகியோர் வெவ்வேறு மாநிலத்தவர்கள் என்பதை அவர்களுக்கு விளக்கி சொல்ல முயன்றேன்.

நீலோத்பல் கவிதை என்பதே எதிர்ப்பின் வடிவம் என்றார். வால்மீகியின் கதையிலிருந்து இந்த மரபை அடையாளம் காண முடியும் என்றார். மத்திய பிரதேச தேர்தல் வரவுள்ளது, இந்நிலையில் உன்மேஷாவில் பங்குகொள்ளத்தான் வேண்டுமா என தயங்குவதாக சொன்னார். நமது எதிர்ப்பை தெரிவிப்பதற்கு பதிவு செய்வதற்கும் கூட இது ஒரு வாய்ப்பு ஆகவே தவறவிட வேண்டாம் என கூறினேன். கவிதையின் உயர் லட்சிய தளத்தில் நீடிக்கவே விரும்புவதாகவும் அரசியல் நிகழ்வுகள் நுண்ணுணர்வை வெகுவாக பாதிப்பதாகவும், அதற்கு எதிர்வினையாற்றாமல் இருக்க இயலுவதில்லை என்றும் நீலோத்பல் சொல்லிக்கொண்டிருந்தார். இது படைப்பு மனம் சந்திக்கும் சிக்கல்களில் ஒன்று. சூழும் நோய்மை அத்தனையும் நுண்ணறிவு கொண்ட மனத்தையே தாக்கும். படைப்பாளியாக இதை எதிர்கொண்டு கடக்க வேண்டும். பலரும் செயலின்றி சிக்கி கொள்கிறார்கள் அல்லது பாவனைகளுக்குள் வீழ்ந்து விடுவார்கள். நம்மிடம் ஒரு மகத்தான இயந்திரம் உள்ளது, அதைக்கொண்டு நம்மை நாம் அழித்துக்கொள்ளாமல் இருக்க பழக வேண்டும். அதை கையாள பழக வேண்டும். அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டேன். செட்டிநாட்டு பலகாரங்கள் சிலவற்றை அவர்களுக்காக வாங்கிக்கொண்டு போயிருந்தேன். உண்டார்களா எனத் தெரியவில்லை.
மூன்று மணிக்கு உஜ்ஜயினி ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார். அவருக்கு மூன்றாம் தேதி கவிதை அமர்வு இருந்தது. காலையில் வந்தே பாரத் ரயிலில் வருவதாக சொன்னார். போபாலில் புறநகர் ரயில் நிலையமான சந்த் ஹிருதயராம் நகர் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். இரவு வண்டியில் படுக்க வாய்த்தது போல இம்முறை முன்பதிவு செய்த பெட்டியில் வாய்க்கவில்லை. பலரும் ஏறிக்கொண்டார்கள். எனது இருக்கையை இன்னொருவர் பகிர்ந்துகொண்டார். முதலில் அமர்ந்தார், பின்னர் மெல்ல கால் நீட்டினார், படுத்தே விட்டார். அவருக்காக அவர் குடும்பத்தினர் நாணினர். அவரை எழுப்ப முயன்றனர். "உறங்கட்டும்" என விட்டுவிட்டு எழுந்து சென்றேன். வரும்போதும் சரி போகும்போதும் சரி பயணசீட்டு பரிசோதகரை நான் காணவே இல்லை. உஜ்ஜயினியில் இருந்து போபால் வருபவர்களுக்கு ரயிலில் ஒருவர் பயணசீட்டு வழங்கிக்கொண்டிருந்தார். சற்று அனுசரித்து அமர்ந்துகொள்ளுமாறு வேண்டிக்கொண்டார். எங்கள் ரயில் இந்தூரிலிருந்து பட்னா செல்வது. நான் எழுந்து கதவினோரம் நின்று வேடிக்கை பார்த்தபடி வந்தேன். இரண்டரைமணிநேர பிரயாணம் தான் என்பதால் அலுப்பு தெரியவில்லை.

நான் இறங்கிய ரயில் நிலையம் போபால் நகரத்திலிருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவு. இரண்டு நடைமேடைகள் கொண்ட சிறிய நிலையம்தான். அதன் முந்தைய பெயர் பைராகர். ரயில் புறப்படுவதற்கு முன் அவசர அவசரமாக இறங்கிய ஒருவர் "இது பைராகர் என்பதே என் நினைவில் இல்லை, இப்போது சந்த் ஹிருதரராம் என என்னவோ பெயர் மாற்றியுள்ளார்கள். ரயில்வே பலகையில் பெயரை மாற்றினால் போதுமா?" என புலம்பிக்கொண்டே சென்றார். அங்கிருந்து எம்.பி நகர் பகுதியிலிருந்த ஹோட்டல் அதிஷய்க்கு சென்று சேர்ந்தபோது இரவு ஏழுமணி. ஒரிய எழுத்தாளர் சந்திரசேகர ஹோத்தா நான் தங்கியிருந்த அதே ஹோட்டலில் தங்கி இருந்தார். சென்ற முறை நாங்கள் சிம்லாவில் ஒரே விடுதியில் தங்கியிருந்தோம். ஹோத்தா ஒரிய மொழியில் செயல்படும் விமர்சகர்.காவல்துறை துணை கண்காணிப்பாளரும் கூட. "உங்கள் விமர்சனத்தை எதிர்த்து ஒரு சிறிய முனகல்கூட இருக்காதே" என கேலி செய்துகொண்டிருந்தேன். இரவுணவின்போது தாரோ சிந்திக் எனும் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இந்தி கவியை சந்தித்தேன். என் வயது இருக்கலாம். அருணாச்சலில் இந்தி பேராசிரியராக இருக்கிறார். தாவர உணவு பிரியர்களுக்கு ஹோட்டல் அதிசயை தாராளமாக பரிந்துரைப்பேன். காலையும் இரவும் என வகைவகையாக உண்டோம். பனீர் திகட்டும் அளவிற்கு உண்டாகிவிட்டது. எங்கள் விடுதியில் அகாதமி பொறுப்பாளராக கர்நாடகத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி இருந்தார். சிறிய செவ்வந்தி மாலையை அணிவித்து வரவேற்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அன்றைய நாளின் மொத்த அயர்வும் உடலில் எற படுத்ததும் உறங்கிவிட்டேன்.
Suneel Krishnan's Blog
- Suneel Krishnan's profile
- 5 followers
