Suneel Krishnan's Blog, page 2
April 17, 2025
அம்புப் படுக்கை - சரத்குமார் வாசிப்பு
எனது முதல் சிறுகதை தொகுப்பு ‘அம்புப் படுக்கை’ வெளியாகி ஏறத்தாழ ஏழாண்டுகள் கடந்துவிட்டன. அவற்றுக்கு இப்போதும் வாசிப்பு கடிதங்கள் வருவது ஒருபக்கம் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் அதற்கு பிந்தைய தொகுப்பிற்கு நாவலுக்கும் அதே அளவு கவனம் கிடைக்கவில்லை என்பது எப்போதும் என்னை வியப்பில் ஆழ்த்தும். சரத்குமார் அனுப்பிய வாசக குறிப்பை வாசித்தபோது நிறைவாக உணர்ந்தேன். நன்றி.
வாசுதேவனின் கதையில் அவரது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலை மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் படி நெருக்கமாக அமைந்திருந்தது. அவருக்கு வைத்தியம் செய்ய செல்லும் சித்த மருத்துவம் படிக்கும் இளைஞனின் எண்ணங்கள், நோயாளியின் பெயர் குறித்து மரபில் இருக்கும் சித்திரத்துடன் முரண் கொள்கிறது. எப்பொதைக்குமான வாழ்வின் பொருள் குறித்த கேள்வியாக அவனுள் மாறிவிடுகிறது. இறுதியில் வாசுதேவனின் மரணத்தையும் அவனது அக்கா குழந்தையின் உயிர் துடிப்பினையும் அருகருகில் வைத்துக் காண்பது மரபிலிருக்கும் வாசுதேவ உருவகத்தின் பொருளான பிரபஞ்ச லீலையினை நேரில் காண்பது போல் அமைந்திருக்கிறது. விடையில்லா அந்த மரணத்தினை இப்போது அவனால் ஏற்றுக் கொண்டிருக்க முடியும் என்று தோன்றுகிறது.
காளிங்க நர்த்தனம் சிறுகதை, புராணத்தை யோக முறையில் மாற்றி கையாளுகிறது. மாணிக்கத்தினது அரைகுறை யோக பயிற்சியால் தோன்றும் சைக்கிளின் பின் அமர்ந்திருக்கும் பெண் உருவம் அவனை கடிக்க வருவதையும், முறுக்கு சாமியின் புராண தலைகீழ் ஆக்கத்தையும் அவர்களது பயிற்சியின் விளைவாக எழும் காமம் விஷமாக மாறி வெளிப்படுவது போல் தோன்றுகிறது. அதனை அடக்குதலை பாம்பின் தலையில் ஏறி நடனமிடும் கிருஷ்ணனில் முறுக்குசாமி காண்கிறார். மாணிக்கத்தின் கனவில் வரும் பாம்பின் தலை வரை ஏறி சறுக்கும் காந்தியையும் ஏற முயற்சித்து தோற்கும் பிற மனிதர்கள் யாவரையும் அந்த யோக பாதையின் வழிகளில் இருப்பவர்களாக காண முடிகிறது. கிருஷ்ணனை பார்த்து தானும் சின்ன வயசிலேயே ஏறி இருக்கணும் என்று சொல்வது, வயதானவர்களை பாம்பின் அல்லது குண்டலினியின் தலை மேல் ஏறுவதில் இருந்து தடுப்பது எது என சிந்திக்க தூண்டுகிறது. சாபம் அடையும் குடும்ப பின் கதை எந்த வகையில் இந்த கதைக்கு வலு சேர்க்கிறது என்பது தெரியவில்லை. குண்டலினியிலிருந்து எழும் காமம் எவ்வாறு அத்தனை மனிதர்களையும் சுழித்து இன்மையில் கரைக்கிறது என்பதாக புரிந்து கொண்டேன்.
குருதி சோறு இந்த தொகுப்பின் மிக முக்கியமான கதை. இதன் முக்கியத்துவத்திற்கு காரணம் இது எழுதப்பட்ட வடிவம் தான் என்று தோன்றுகிறது. காளி கோயிலில் நடக்கும் வருட திருவிழாவில் அனைவரது வீட்டிலிருந்து அரிசி கொண்டு வருவதும், மருளாலியின் ஆடலும், பலியும் சடங்குகளும் நடைபெறுகிறது. சுடலையால் அந்த ஆட்டத்தில் இரண்டற கலக்க முடிவதும் அதே நேரத்தில் சபரியால் கலந்து கொள்ள முடியாது போவதும் மிக முக்கியமான ஒன்று. பின்பு பாலாயியின் பஞ்ச கால வாழ்க்கையும் இறப்பும் சொல்லப்படுகிறது. அதன் மேலடுக்காக அவள் எவ்வாறு அன்ன சௌரக்ஷாம்பிகை புராணமாக மாற்றப்பட்டுள்ளார் என்று வைத்தியரின் வீட்டில் கூறப்படும் கதையாடலில் சொல்லப்படுகிறது.
இந்த அடுக்குகள் ஒன்றோடொன்று பொருந்தி ஒரு அபாரமான சமூக இயங்கியலை வெளிப்படுத்துகிறது. பாலாயியை கடவுளாக மாற்றி அவளது உக்கிரத்தில் உணர்ச்சி பூர்வமாக ஈடுபடும் சுடலையின் சமூகம் ஒருபுறம். அதில் உணர்ச்சி பூர்வமாக ஈடுபட முடியாமல் சபரியை தடுக்கும் பெருந்தெய்வ வழிபாடுடைய சமூக அமைப்பு மற்றோரு பக்கம். பாலாயியை காளியாக மாற்றி ரத்தத்தையும் அன்னத்தையும் படையிலிடும் நாட்டாரியல் வழிபாடும் அந்த திருவிழாவின் இறுதி நாளில் வைத்தியரின் வைதீக குடும்பத்தின் பங்கேற்பும் இணைந்ததாக அது உருமாறியிருக்கும் விதம் மிக முக்கியமானது.பாலாயியை வைதீகம் தனது புராணங்களின் வழி அவளை அன்னலக்ஷ்மியாக்கி திருமகளின் வழியே திருமாலுடன் பிணைக்கிறது. எவ்வாறு ஒரு நாட்டாரியல் தெய்வம் புராண மேல்நிலையாக்கத்தின் வழியே பெருந்தெய்வ மரபோடு இணைக்கப்படுகிறது என்பதை அறிய முடிகிறது. மருலாளியின் பூர்வீகம் தெரியாமல் அவனை பூசாரியாக ஏற்க மறுப்பதை வைத்தியரின் கனவில் தான் அம்மன் வந்து ஏற்றுக்கொள்ள சொல்கிறாள்.
பாலாயியின் வரலாற்றில் இருக்கும் அவளுடைய அடையாளம் புராணத்தில் களையப்படுகிறது. பாலாயியின் வாழ்வில் நடந்தேறிய அவளது பிள்ளைகளின் இறப்பும் அவளது மரணமும் தியாகமாக மாற்றப்படுகிறது. வைத்தியரின் குடும்பத்தின் தெய்வமாகும் பாலாயியின் சந்ததியின் தொடர்ச்சியினை கதைவழியாகவும், சடங்கின் வழியாகவும் பேணும் பொறுப்பினையும் ஏற்றுக் கொண்டுள்ளது என ஒரு அமைப்பின் இரு பக்கமும் ஒன்றை ஒன்று நிரப்பி செயல்படுவதன் சித்திரம் முழுமையடைந்துள்ளது. இந்த சிக்கலான சமூக இயங்கியல் அபாரமாக வெளிப்பட்டுள்ளது. இந்த கதையின் சமூக இயங்கியலின் மறு பக்கமாக ஜெயமோகனின் மூத்தோள் கதையை வாசிக்க முடியும்.
அம்புப்படுக்கை சிறுகதையில் ஒவ்வொரு அம்பாக தப்பிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்ளும் ஆனா ரூனா செட்டியார் இறுதி படுக்கையில் இருக்கிறார். அவரை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அவரது இறப்பினை எதிர் நோக்கியிருக்கிறார்கள். நாடி பிடித்து பார்க்க அழைக்கும் சுதர்சன் அவனுக்கு நம்பிக்கையில்லை என்றாலும் செட்டியாரின் நாடியைப் பார்க்க சம்மதிக்கிறான். நாடி பிடித்து பார்ப்பதில் அவரது நாடி மெல்ல அடங்குவதை உணர்ந்து கொள்கிறான்.
ஆனா ரூனாவின் இயல்பை அவருக்கும் தனது தாத்தாவிற்கும் இடையேயிருக்கும் பழக்கத்தினால் நன்கு உணர்ந்திருக்கும் சுதர்சன் அவர் எதிர் பார்க்கும் ஓரு பதிலை அளிக்கிறான். தான் விரும்பும் போது உயிர் பிரியும் என்ற பீஷ்மரது அம்பு படுக்கையை போல் ஆனா ரூனா வும் சுதர்சனின் பதிலில் திருப்தியடைந்து உயிரை விட சம்மதிக்கிறார் என்று தோன்றுகிறது.
பொன் முகத்தை காண்பதற்கும் என்கிற கதையில் சமகால சிக்கல் பேசப்படுகிறது. குழந்தையை பார்த்துக் கொள்ள மட்டுமே உதவும் பெரியவர்கள், அவர்கள் வாழ்ந்த ஊரினை விட்டு விலகி நகரத்தில் அடைந்து கிடக்கிறார்கள். சிறு குழந்தையின் அன்பில் மட்டுமே தன் இருப்பின் பிடிப்பினை கொண்டவர்கள். ஒரு அவசர நேரத்தில் அவர்கள் சொந்த வேலைக்காக பிரிந்து செல்ல நேரிடும் போது நகர வாழ்வில் உருவாகும் நெருக்கடி. அதனை தொழில் நுட்பத்தை கொண்டு வெற்றிகரமாக சமாளித்து விட்டதாக எண்ணும் நகர மனிதர்கள். தான் இல்லாமலே குழந்தை உறங்க பழகிக் கொண்டதால் தனது இருப்பை சந்தேகிக்கும் பெரியவர்.
இன்னும் சமூகத்தின் கறை படியாத இளம் குழந்தை மனித உறவின் ஆழத்தை அர்த்தப்படுத்தும் நொடியில் தனது வாழ்வின் அர்த்தத்தையும் கண்டு கொள்வது தான் கதை.
2016 சிறுகதை 1984 நாவலின் வின்ஸ்டன் கதாபாத்திரத்தின் இன்றைய முக்கியத்துவம் உணரப்படும் கதை.
முற்றிலும் சுதந்திர சிந்தனையை அனுமதிக்காத வின்சென்ட் வாழ்ந்த நாட்டின் சூழலில் இருக்கும் அம்சத்தை, புரட்சி இல்லாத குடியரசு நாட்டில் வாழும் மக்கள் தங்களது சுதந்திரத்தின் எல்லையை உணர்ந்து கொள்ளும் போது அவரை மீள் கண்டடைவு செய்கிறார்கள்.
கடைசியாக நரோபா வெளியேறும் போது இன்னொரு மேசையில் உட்கார்ந்திருக்கும் வின்ஸ்டனையும் அவரை தேடி வந்திருக்கும் ஆப்பிரிக்கா அமெரிக்கரையும் காண்பது வின்சென்ட் உருவகிக்கப்படும் சூழல் ஆர்வெல் கற்பனை செய்தவாறு உலகம் துண்டுப்படாமலாகியும் தொடர்ந்து அவர் எவ்வாறு கண்டடையப்படுகிறார் அல்லது தேவைப்படுகிறார் என்பதைக் காட்டுவதாக தோன்றுகிறது.
பேசும் பூனை ஒரு கிளாசிக் ஆவது முதன்மையாக அதன் மொழியினால் நிகழ்கிறது என்று தோன்றுகிறது.
வெளிநாட்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு செல்லும் குடும்பத்தில் தனித்திருக்கும் பெண்களின் தீர்க்கப்படாத ஏக்கம் அவர்களை பலவீனமாக்குகிறது. அதே நேரத்தில் இன்றைய குடும்பத்தில் இருக்கக் கூடிய ஆண் பெண் உறவின் முதிர்ச்சியற்ற தன்மை.
ஆணின் தீராத காமமும் பணம் சம்பாதிப்பதும் மட்டுமே வாழ்க்கை என நினைக்கும் மனம். சமூகத்தால் உருவாகியிருக்கும் பெண்ணின் மிதமிஞ்சிய எதிர்பார்ப்புகளும் தன்முனைப்பும்.
அந்த இடைவெளியில் நுழையும் பூனை பதிவேற்றாத எண்ணிலிருந்து வரும் அழைப்பின் வழியே அந்தரங்கங்களை திருடுகிறது. அவளுக்கு பிடித்த பாடல்கள், தகவல்கள் மற்றும் அக்கறையின் வழியே தனது இருப்பை நிலை நிறுத்துகிறது. விதவிதமான சேலைகளை கட்டி அவள் பூனைக்கு காண்பிப்பது என்பது உண்மையில் அவள் மீது அவளே கொண்ட கிளர்ச்சியாகவே தோன்றுகிறது. அவளுடைய ஏக்கம் தணிக்கப்பட்ட பின்பு அவளுக்கும் கணவருக்கும் இடையே நடைபெறும் உரையாடல்கள் சுமூகமாக முடிகிறது.
அவளது குடும்ப செலவுகளை நிர்வகிக்க ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக் அவளது தேவைகளை பூனை முடிவு செய்கிறது. பொருட்களை வாங்கி குவிக்கிறது. தேவைக்கு அதிகமாக செலவு செய்வதை உணர்ந்து தன்னிடம் சொல்லிவிட்டு இனிமேல் வாங்கு என்று சொல்லியதற்கு கோவித்துக் கொள்கிறது. அவளது தன்முனைப்பையும் ஏக்கத்தையும் பூர்த்தி செய்யும் பூனையின் திடீர் மறைவு அவளை குழந்தை பெற்றதற்கு அடுத்ததாக அழ வைக்கிறது.
பின்பும் அவளால் பூனையின் ஆதிக்கத்திற்கு மறுப்பு சொல்ல முடியாது கட்டுண்டிருக்கும் அவள் நிலை என்பது அவளது மன ஆசைகளுக்கும் தன்முனைப்பிற்கும் கட்டுப்பட்டிருக்கும் நிலை தான் என்று தோன்றுகிறது. அவளது மகள் தாயின் அதீத போக்கின் காரணத்தை உணர்ந்து பூனையை அடிக்கும் போது.. அவளை வெறி கொண்டு அடித்து மயங்கச் செய்கிறாள். உன்னால் எனது மகளை அடிக்க நேர்ந்தது என்று சொல்பவளிடம் பூனை சாதாரணமாக அவள் என்னை எத்தனை முறை அடித்தால் தெரியுமா.. ஒரு முறை அடித்ததற்கு இப்படி கவலை படுகிறாயே என்று கேட்குமிடம் மிக வலுவான தாக்கத்தை வாசிப்பவரிடம் உண்டு செய்கிறது. பூனை வெறும் விளையாட்டு என்பதிலிருந்து அவள் வந்து சேர்ந்துள்ள பூனையை தவிர்க்க முடியாத இடமும், அதனது கண்காணிப்பும் அவளை தற்கொலையை நோக்கி தள்ளுகிறது.
ஆரம்பத்தில் அவள் முணுமுணுக்கும் சுவர்ணலதா பாடலின் வரி பாடகியின் குரலில் கேட்கிறது. பின்பு தொலைபேசியில் வரும் நிறுவனத்தின் அழைப்பில் கேட்கும் பாடலில் பூனையின் குரல் ஊடுருவியிருக்கிறது. இறுதியாக அவளது அக மொழியிலே பூனை ஊடுருவி இருப்பதன் முடிவு தீவிரமாக அமைந்துள்ளது.
அறிவியல் புனைவு கதையான திமிங்கிலம் இன்னொரு முக்கியமான கதை. கற்பனை உலகத்தில் தொழில் நுட்பத்தின் சிக்கலை தீவிரப்படுத்தி அணுகும் கதை. அவனுக்கும் அவனது முதல் மனைவி ஜெமீமாவிற்கும் இடையே நடைபெறும் உரையாடலே கதையின் மையம்.
மானுடம் தழைக்க வேண்டும் என்பதற்கும் உலகம் வாழ வேண்டும் என்பதற்குமான முரண். மனித மைய வாதத்திற்கும் பிரபஞ்ச ஒட்டு மொத்த பார்வைக்குமான போர். அதில் மனித தன்முனைப்பின் சிக்கலும் பிரபஞ்சத்தை ஒட்டு மொத்தமாக பார்க்க தவறுவதன் விளைவும் தீவிரமாக விவரிக்கப்படுகிறது.
மக்களில் செயல்படும் வாழ்வதற்கான விழைவு அவர்களை கீழ்மை நோக்கி செலுத்தும் விதமும் ஒரு குறிப்பிட்ட எல்லையை மீறும் போது குற்ற உணர்விற்கு ஆளாகி அதன் பழியை ஆராய்ச்சியாளனின் மீது சுமத்துவதும் வெவ்வேறு நிகழ்விற்கும் பொருத்தி பார்க்க கூடியது.
ஆராய்ச்சியாளனுக்கு இருக்க வேண்டிய அறத்திற்கும் அறிவியலின் கண்டுபிடித்தலில் அவனுக்கு இருக்கும் ஈர்ப்பிற்கும் இடையேயான சிக்கல் இறுதியில் கூர் கொள்கிறது. இந்த கேள்வியின் இன்னொரு வடிவம் தான் விஷக்கிணறு குறு நாவலாக விரிவடைந்துள்ளது.
மனிதன் இந்த உலகில் மற்ற எதையும் சார்ந்திராமல் வாழ்வதற்கான சோதனையை மேற்கொண்டு அவன் வெற்றியடைகிறான். ஆனால் அவன் அவ்வாறு தனியாக வாழும் சாத்தியம் இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி. ஏதோ ஒரு வகையில் குழுவாக வாழ்வதே அவனுடைய இயல்பு என்று தோன்றுகிறது. அதற்காக சமைக்கப்பட்டதே நாகரிகமும் பண்பாடும்.
அதன் எல்லையை அல்லது வெறுமையை உணரும் அவன் தான் உருவாக்கிய அனைத்தையும் நேர் செய்ய முடியுமா என்று நினைக்கிறான். ஜெமீமாவை நெருங்க அவனுள் இருக்கும் அழியா தேடல் அவன் தன்னை இவ்வுலகில் அரக்கனாக எஞ்சியிருக்க கூடாது என்று நினைக்க வைக்கிறது. அந்த கடற்கரையில் அவன் ஓடும் பாத தடங்களை அழித்துக் கொண்டே திரும்பும் போது புது காலடிகள் உருவாகியிருப்பதை உணர்ந்து கொள்கிறான். உண்மையில் இங்கு உருவாக்கும் எதையுமே அழித்து விட முடியாது. ஒன்று உருவாகிவிட்டால் அதனை காலத்தில் பின் சென்று அழிப்பது சாத்தியமற்றது. அதனால் இறந்து போன திமிங்கிலத்தின் எலும்பினை இழுத்துக் கொண்டு கடலில் சென்று மரிக்கிறான் என்று தோன்றுகிறது. தேவைக்கு அதிகமாக தின்று அழிக்கும் திமிங்கிலத்தின் தேவை மக்களுக்கு அவ்வப்போது அவனது எல்லையை நினைவில் நிறுத்திக் கொள்ள அவசியமானது தான் போல.
கூண்டு சிறுகதை ஒரு மிகுபுனைவு.. அந்த கூண்டின் உருவாக்கமும் அதன் நோக்கமாக கதையில் சொல்லப்படுவதும் சேர்ந்து என்னை சிறிது பரவசத்திற்கு உள்ளாக்கி விட்டது. கூண்டு அதுவே குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை அளித்து நீதியை நிலை நாட்டும் என்பதும், கூண்டினை செய்த கொல்லனின் மீசையற்ற ஆயிரக்கணக்கான வருட புன்னகையும் அந்த கூண்டிணை பிரபஞ்சத்தோடு என் மனம் ஒப்பிட்டு கொண்டது. அங்கு நிகழும் மனிதர்களின் தவிர்க்க முடியாத வாழ்வு அவர்களின் தண்டனை என்ற அளவில் சிந்தித்துக் கொண்டிருந்த என்னை கதையின் முடிவு கீழிறக்கியது. எந்த தவறும் செய்யாத ஒருவன் அல்லது சமூகத்தில் சொல்லப்படும் லட்சிய உருவகத்தில் வாழும் ஒருவனின் நிலையை காட்சி படுத்துகிறது.
சமூகம் ஒரு நேரத்தில் தனது உண்மை நிலையினை ஏற்றுக் கொண்டு கூண்டிற்குள்ளேயே இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் போது, எந்த குற்றமும் செய்யாத ஒருவன் இரக்கத்தொடு பார்க்கப்படுகிறான். அவனும் அந்த கூண்டிற்கு செல்ல தனக்கு இருக்கும் காரணங்களை கற்பனை செய்து கூண்டின் தவறால் வெளியிலிருப்பதாக எண்ணிக் கொள்கிறான். சமூகத்தின் அழுத்தம் எந்த அளவிற்கு தனியர்களின் மீது செயல்படுகிறது என்பதும் அவனுக்கு தேவைப்படும் ஆத்ம பலத்தின் தேவையையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.
ஆரோகணம் தருமனின் இறுதி பயணத்தை போல் காந்தியின் இறுதி பயணத்தை படைக்க முயலும் கதை. இந்த கதையை நான் மிக ரசித்தற்கு காரணம் ஒன்று காந்தியை தொன்மமாக்கும் மிக முக்கியமான கதை.
காந்தியின் மனம் யதார்த்தத்தில் செயல்படும் விதத்தை மெல்லிய நூல் போன்ற கதைகளில் அணுகி அறிய முயன்ற முயற்சிகளில் இருந்து இது வேறுபடும் விதம் சிறப்பானது.
இரண்டாவதாக மரபில் இருந்து ஆத்ம சுத்திகரிப்பை அடைய வாழ்நாள் முழுவதும் முயன்று கொண்டிருந்த மனிதர் மரபினால் சொல்லப்படும் சொர்க்கத்தை தனது இயல்பினாலேயே நிராகரிப்பது. இது முக்கியமான மீறல் என்று தோன்றுகிறது.
மிக அற்புதமான கதைகள். தமிழில் இத்தகைய கதைகளை எழுதும் சுனில் நிச்சயமாக முதன்மையான எழுத்தாளர் என்பதில் சந்தேகம் இல்லை.
April 16, 2025
மரப்பாச்சி இலக்கிய வட்டத்தின் ஏப்ரல் மாத கூடுகை சிறுகதை விவாதம்
எழுத்தாளர் அஜிதனின் ‘ஓர் இந்திய ஆன்மிக அனுபவம்’ சிறுகதையும் எழுத்தாளர் சுசித்ராவின் ‘ராம பாணம்’ குறுநாவலும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நாராயணி அம்மா, கோமளா டீச்சர், வேலாயுதம் பெரியசாமி, நாராயணன் மெய்யப்பன், முகமது கபூர், கவிஞர் சிலம்பரசன், எழுத்தாளர்கள் பிரபாகரன், சித்ரன் ஆகியோர் பங்குபெற்றனர். எல்லோரும் கதைகளை வாசித்து வந்ததால் செறிவான உரையாடல் சாத்தியமானது.
முதலில் அஜிதனின் ‘இந்திய ஆன்மிக அனுபவம்’ கதை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மறுவாசிப்பிற்கு உட்படுத்த முடியாத அளவிற்கு அருவருப்பை மைய உணர்வாக கொண்டுள்ளதாக கூறினார்கள். அஜிதனின் கதைகளில் தொழிற்படும் துல்லியமான புற சித்தரிப்புகள் அவரது பலம். அருவருப்பான அனுபவத்தை மொழியில் நுணுக்கமாக விவரிப்பது சவாலானது. சிறுநீர் உப்பு படிவதை பற்றி அவர் எழுதிய சித்திரம் உதாரணமாக சுட்டிக்காட்டப்பட்டது. எதை இந்திய ஆன்மிக அனுபவம் என கூறுகிறார் என்றொரு கேள்வி எழுப்பப்பட்டது. ஏன் கூறுகிறார் என்பதும் இன்னொரு கேள்வி. தலைப்புதான் கதையை வலுவாக்குகிறது. வாமாச்சார மரபு அருவருப்பை ஆன்மிக பாதையாக முன்வைப்பதைப்பற்றி பேசினோம். லிங்கத்தை வெளியே விட்டபடி உறங்கிக்கிகொண்டிருக்கும் பைத்தியக்காரனை சிவனாக உருவகிக்க இடமுண்டு என்றொரு கருத்து வந்தது. ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலில் பிங்கலன் தொழுநோயாளியையும் பள்ளிகொண்ட பெருமாளையும் ஒருவரென காணும் கணம் அவனுக்கு பெரும் தொந்திரவை அளித்தது. ஜெ எழுதிய ‘மலம்’ எனும் கதையும் ‘இந்திய ஆன்மீக அனுபவம்’ கதையுடன் பொருத்தி பார்க்கலாம். கும்பமேளா நிகழ்ந்த சூழலில் இன்று இந்த கதை எழுதப்படுவதில் ஒரு அரசியல் நிலைப்பாடும் உள்ளதாக ஒரு வாசகர் குறிப்பிட்டார். கும்பமேளாவில் வரும் பாபாக்களை பொது சமூகம் ஒவ்வாமையுடன் நடத்தவில்லை. மாறாக அவர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துகிறது என்பதால் அத்தகைய அரசியல் நிலைப்பாடை வலிந்து இக்கதைக்கு அளிக்க வேண்டியதில்லை, இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு பிறகு வாசிக்கும்போது இந்த அரசியல் தூண்டுதல் பெரிய காரணியாக பார்க்கப் படாது. கும்பமேளா அளவிற்கு எல்லாம் செல்லாமல் உள்ளுர் மாரியம்மன் கோவில் திருவிழாக்கள், எச்சிலில் உருள்வது போன்ற சடங்குகளுடன் பொருத்திப் பார்க்கலாம். தினம் தினம் இந்த அருவருப்புடன் வாழ்ந்தபடி தான் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் நாட்களை கடக்கிறார்கள். எளிய மக்களின் ஆன்மிகமும் வாழ்வனுபவமும் இந்திய சூழலில் அருவருப்பை ஏற்றுக்கொள்ளவும் இயல்பாக கடந்து செல்லவும் வழிவகுக்கிறது. ஆகவே இந்த கதை மேலதிகமாக எந்த அதிர்ச்சியும் அருவருப்பையும் கடத்தவில்லை எனும் விமர்சனம் எழுந்தது. எனினும் அருவருப்புடன் இயல்பாக இயைந்து வாழ பழகும் எல்லோருக்கும் அது ஆன்மிக அனுபவமாக பரிணாமம் கொள்வதில்லை. பொது உண்மையை தொடுவதை விட தனி உண்மையை காட்டி நின்று விடுகிறது என்பதே இந்த கதையின் எல்லை. இது சாமானிய மனிதனின் கதை அல்ல, ஒரு நவீன அறிவு ஜீவியின் சிக்கல். அழகும் அருவருப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அருவருப்பை வேறொன்றாக மாற்றி கற்பனை வழி கடந்து செல்லும் திறனுடையவனாக இருக்கிறான் கதைசொல்லி. தொடுகை தான் அவனை தொந்திரவு செய்யக்கூடியது. இருளில் அத்தகைய மாற்றம் சாத்தியமாகவில்லை. முதல்முறை நேருக்குநேர் மெய்யை எதிர்கொள்கிறான். அது அவனது அகங்காரத்தை உடைக்கிறது. அவன் ஒரு தொடுகையை உணர்கிறான். ஆனால் படுத்துக்கிடக்கும் பைத்தியகாரனைத் தவிர அருகே யாருமே இல்லை. அவனுக்குள் இருப்பவை எல்லாம் கரைந்தழிகின்றன. மீட்பவர்கள் பெண்கள் என்பதற்கு சிறப்பான கவனம் ஏதும் இருக்கிறதா என்று பேசப்பட்டது.
இரண்டாவதாக விவாதிக்கப்பட்ட கதை சுசித்ரா எழுதிய ‘ராம பாணம்’ எனும் குறுநாவல். மீனாட்சிநாதன், சாம்பு மற்றும் ராமுடு ஆகிய மூவர் 1896 ஆம் ஆண்டு காவிரிக்கரையில் அமர்ந்து உரையாடுவதே கதை. ராமுடு தனது குருநாதர் ராமாமிர்தம் பிள்ளை தன்னிடம் சொன்ன திருவையாறு பஞ்ச நாத பிரம்மம் எனும் தியாகராஜரைப் பற்றிய கதையை சொல்கிறார். ராமுடு கதைசொல்லும்போது ‘அப்பேர்ப்பட்ட பஞ்சநாத பிரம்மம்ன்ற நாதபிரம்ம பாகவதர என் குருநாதர் கண்ணோட கண் வெச்சுப் பார்த்திருக்காரு. அவர் கண்களை நான் பார்த்திருக்கேன், இப்போ என் கண்கள நீங்கப் பார்க்கரீங்க’ என்று சொல்கிறார்.
ராமுடுவிற்கு அவரது குரு ராம நாமத்தை ஜபம் செய்ய அளித்திருக்கிறார். ராமன் எனும் உருவம் மீது அவருக்கு பெரிய ஈடுபாடு இல்லை. “உச்சிவேளைக்கு வந்தா தெய்வானை கள்ளச்சி தன்னோட இரண்டு வயசுப் பிள்ளைய நிக்க வைச்சுக் குஞ்சாமணி ஆடக் குளிப்பாட்டிட்டிருப்பா. அந்தக் குழந்தையப் பாக்குறதும் வழுவூர் சந்நிதியில ராமனோட உருவத்தைப் பார்க்குறதும் எனக்கு அத்தனை வேத்துமையாத் தெரியல.” மேலும் தனது குடும்பத்தினர் பகலில் ராமா ராமா என்று சொல்லிக்கொண்டே இரவில் காமக்களியில் ஈடுபடுவது எனும் கபடம் அவரை எரிச்சல் கொள்ள செய்கிறது. ஆனால் அவரேதான் பெரும் உவகையோடு தனது குருநாதர் சொன்ன தியாகராஜர் ராம விக்கிரகத்தை காவேரியில் கண்டெடுத்த கதையை சொல்வது பாத்திர வார்ப்பிற்கு முரணாக பட்டது.
தில்லைஸ்தானம் ராமுடுவிற்கு ஒருவித அடையாள சிக்கல். ராமய்யராகவும் இல்லை, ராமையா பிள்ளையாகவும் இல்லை. தாயிடமிருந்து பிரிந்து தந்தையிடம் வளர்கிறார். ஆனால் அங்கு ஏறத்தாழ அடிமை வாழ்க்கை தான் வாய்க்கிறது. ராமுடு தனது குருவாக கருதும் ராமாமிர்தம் பிள்ளை ஏறத்தாழ இதே போன்ற குடும்ப பின்புலம் கொண்டவர். எனினும் அவர் ‘பிள்ளையாக’ வளர்பவர். ராமுடுவிடம் பெண் அனுபவம் உண்டா என்றொரு கேள்விக்கு தாசிகள் எனது தாயர்கள் என்றொரு பதிலை அளிக்கிறார். காவேரியை அதன் நிறைவில் கண்டவனுக்கு எந்த பெண்ணும் நிறைவை அளிக்க மாட்டாள் என்பதே அவரது பதிலாக உள்ளது. இயற்கையே முழுமை. ஆகவே வழிபாட்டுக்குரியது. இயற்கையின் முழுமையை அறிந்தவனால் உலகியலில் அமைய முடியாது என்பதே கண்டுகொண்டவனின் சாபம் என்பதை ராமுடு உணர்த்துகிறார். உ வே சாவின் சீடனை போல வருகிறான் மீனாட்சிநாதன். சுவடிகளின் மீது பித்துக்கொண்டு அலைகிறான். சாம்பு நவீனமானவன். பட்டணத்தில் நவீன வரலாறு படிக்கிறான். ஒருவகையில் இவையிரண்டும் வரலாற்றின் இரண்டு பக்கங்கள் என சொல்லலாம். மீனாட்சிநாதன் காவேரிக்கரையை விரும்புகிறான். மீனாட்சி நாதனின் ஆய்வுகளை பழங்குப்பை என கருதும் சாம்பு பட்டனவாசத்தை விரும்புபவன்.
குறுநாவலை இரண்டு கதைகளாக பிரிக்கலாம். ராமுடு - மீனாட்சிநாதன்- சாம்புவின் பகுதி முதல் 7 அத்தியாயங்கள் வரை நீள்கிறது. அந்த பகுதியின் உச்சம் என்பது மீனாட்சிநாதன் நாகசூடாமணி சுவடியை கண்டெடுக்கும் தருணம். வீடு முழுக்க குவியலாக ஒழுங்கின்றி கிடக்கும் சுவடி கட்டிலிருந்து பூச்சி இட்ட துளை வழியாக தேடிய சுவடிகளை பெரும் பரவசத்தோடு கண்டெடுப்பார்கள்.
குறுநாவலின் இரண்டாம் கதை சரடான தியாகராஜருக்கு அவரது சகோதரர் ஜப்பேசருக்குமான உறவையும் முரனையும் இணைவையும் சித்தரிக்கும் பகுதிக்கு இந்த முதல் பகுதி தேவையற்ற சுமையாக உள்ளது என்றொரு விமர்சனம் முன்வைக்கப்பட்டது. கதைப்படி ஜப்யேசன் சிலநொடிகள் முந்தி பிறந்த மூத்தவர். பஞ்சநாத பிரம்மமும் ஜப்யேசனும் இரட்டை பிறவிகள். ஜப்யேசன் அழுகுரலை கேட்டு பூமிக்கு வந்தவன் பஞ்சநாத பிரம்மம். பஞ்சநாத பிரம்மம் பற்றி அவரது தாயார் ‘யார் அழுதாலும் முன்னே சென்று நின்றுவிடுபவன்’ என கேலியாக குறிப்பிடுகிறார். தந்தை ஒருவருக்கு விக்கிரகமாகவும் இன்னொருவருக்கும் தூபதீப மலராகவும் ராமனை அறிமுகம் செய்கிறார். இருவரும் தங்களுக்கு மறுக்கப்பட்ட வடிவத்தில் ராமனை ஏந்தி கொள்கிறார்கள். முக்திக்கான வழியாக பிரவிருத்தி மார்க்கம் நிவிருத்தி மார்க்கம் என இரண்டு பாதைகள் உண்டு. பல்கி பெருகி அனுபவிப்பது ஒரு வழி, விலகி துறவு கொள்வது இன்னொரு வழி. ஜப்யேசன் திளைக்கும் வழியில் செல்பவன் என்றால் பஞ்சநாத பிரம்மம் துறவின் வழியில் செல்பவன். பொதுவாக விஷ்ணுவை திளைக்கும் மரபிற்கும் சிவனை ஒடுங்கும் மரபிற்கும் உரியவர்களாக வகைப்படுத்துவர். ஜப்யேசனை சிவனோடு இணை வைப்பது இங்கு பொருந்துமா என்றொரு கேள்வி உண்டு. எனினும் கதையின் தொடக்கத்தில் இருந்தே கறுப்பு - சிவப்பு என்றொரு இருமையை எழுத்தாளர் சுட்டுகிறார். இந்தியர்களுக்கு உரிய நிறமாக கறுப்பும் ஐரோப்பியர்களுக்கு உரிய நிறமாக சிவப்பும் முன்வைக்கப்படுகிறது. பெருமாள்- சிவன் இருமையை இதன் நீட்சியாக காணலாம். சிவனை ராஜசிக குணத்தின் பிரதிநிதியாக காண இடமுண்டு. சிவப்பும் ரஜோ இயல்பின் நிறம் தான்.
ராமாமிர்தம் பிள்ளை ஒன்றுவிட்ட சகோதரியான ராஜதாசி ரமாவாணியை ஜப்யேசன் ஏறெடுத்து பார்க்க வேண்டாம் என்பதை அறிவுறுத்த தூது செல்லும் இடத்தில் பஞ்சநாத பிரம்மத்தை சந்திக்கிறார். அவரது தூதும் அதற்கு ஜப்யேசன்பதிலும் என விரிகிறது. ஜப்யேசனும் பஞ்சநாத பிரம்மமும் ஒன்றின் இரு அம்சங்களாக தென்படுகிறார்கள். ரமாவாணி பஞ்சநாத பிரம்மத்தை காணும்போது ஜப்யேசன் இட்டுக்கொள்ளும் நெற்றிக்கண் போன்ற சிவப்பு குறியை நெற்றியில் காண்கிறாள். இந்த மாற்றம் எப்படி நிகழ்கிறது என்பது உணர்த்தப்படவில்லை. ஜப்யேசன் ராமன் விக்கிரகத்தை காவிரியில் வீசுகிறார். சகோதரர்கள் இருவரும் நீரில் குதிக்கிறார்கள். மூன்று நாட்களுக்கு பின்பு ஒருவர் மட்டுமே விக்கிரகத்துடன் கரையேறுகிறார். ஏறியவர் விக்கிரகத்தை கையில் ஏந்தியபடி ஜப்யேசன் குரலில் பாடியபடி வருகிறார். அங்கிருப்பது எவர், காவேரி எடுத்து கொண்டது எவரை என சொல்ல முடியவில்லை. அவர்கள் இருவரையும் ராமபாணம் ஒன்றாக கோர்க்கிறது. பின்னர் அவர் தியாகபிரம்மம் என வழங்கப்படுகிறார்.
ராமபாணம் எனும் உருவகமே குறுநாவலின் மைய இழை. ராம பாணம் என்பது அழிப்பதல்ல. அது கடவுளின் தொடுகை. ஒன்றை மற்றொன்றுடன் கோர்ப்பது, இணைப்பது, ஒன்றை மற்றொன்றாக மாற்றுவது. ஜெயமோகனின் ‘பிழை’ கதை இத்தகைய இறையாற்றலின் இருப்பு/ அல்லது தொடுகையை பற்றி பேசும் அபாரமான கதை. கொரோனா கால கதைகளில் ஜெயமோகன் தாயுமானவரை மையமாக கொண்டு எழுதிய கதைக்கும் ஜப்யேசர்- ரமாவாணி உறவு சித்தரிப்பிற்கும் தொடர்ச்சி இருப்பதாக ஒரு பார்வை முன்வைக்கப்பட்டது.
இந்த கதையின் முக்கியமான சிக்கல் அதில் கையாளப்படும் படிம குவியல் காரணமாக உணர்வு ரீதியான விலக்கத்தை ஏற்படுத்தி படிமங்களை பொருத்திப்பார்த்து புரிந்துகொள்ளும் அறிவு செயல்பாடாக கதை வாசிப்பு ஆகிறது என்பதே. மாறன்- ராமன் எனும் இருமை பேசப்படுகிறது. ஜப்யேசன் மாறனாகவும் பஞ்சநாத பிரம்மம் ராமனாகவும் காண இடமுண்டு. மனதின் மீது நித்தம் நிகழும் சமர் என வாலி - சுக்ரீவன் சமர் உருவகிக்கப்படுகிறது. பலவீனனான சுக்ரீவன் ராமனின் துணை கொண்டு வாலியை வெல்கிறான். சுக்ரீவன் தியாகராஜராகவும் ஜப்யேசன் வாலியாகவும் சித்தரிக்கப்படுகிறான். இறுதியில் மல்லுக்கு அறைகூவல் விடுகிறான் ஜப்யேசன். நெற்றியில் சிவக்குறியுடன் சிவனுக்கு உவமிக்கப்படுகிறான் ஜப்யேசன். ராமாமிர்தம் பிள்ளை படகில் ஜப்யேசனுடன் செல்லும்போது தன்னை ராவணன் என கூறிக்கொள்கிறார். படகில் எனக்காக ஜப்யேசன் பாடுவார் என்று படகோட்டி சொல்லும்போது ‘குகனுக்கு இல்லாத ராமனா’ என்று ஒரு வரி வருகிறது. பஞ்சநாத பிரம்மம் ராமாமிர்தத்திடம் பேசும்போது தன்னை வீடணன் என்றும் பலி சக்கரவர்த்தி என்றும் சொல்கிறார். ஜப்யேசன் ராமாமிர்தத்திடம் நாத வடிவில் தான் ராமனை அறிவதாகவும் ராமனின் உருவத்தின் மீது தனக்கு ஈடுபாடில்லை என்றும் சொல்கிறார். வலியை கலையாக்கும் சாதகனாக அவர் தென்படுகிறார். கலை கலைக்காக என்பதே அவர் கூற்று. பஞ்சநாத பிரம்மம் கலையை இறை அனுபவத்திற்கான வழியாக காண்கிறார். இப்படி தொடர் முரண்பாடுகளை உணர முடிகிறது. இரண்டாவது முக்கிய சிக்கல், குறுநாவல் பாத்திரங்களில் இருந்து தரிசனத்திற்கு செல்லாமல் தரிசனத்தை அடைந்த பிறகு பாத்திரங்களை அதற்கேற்றவாறு வளைக்க முற்படுகிறது. தியாகராஜரை நீக்கிவிட்டு இக்கதையை வாசித்தால் நல்லதோர் புனைவாக காண முடியும். ஆனால் தியாகராஜர் என்பது கதையிறுதியில் தெளிவாக சொல்லப்பட்டு விடுகிறது. தியாகராஜர் வாழ்க்கை சரிதத்தை அறிந்தவர்களுக்கு ஜப்யேசன் பாகவதர் அல்ல என்பது தெரியும். எனக்கு தெரிந்தவகையில் அவருக்கு தனது சகோதரரின் மீதிருக்கும் கோபம் என்பது அவரது ராம விக்கிரக பூஜை அரிசி பருப்புக்கு ஆகவில்லை என்பதுதான். இந்த கதையில் தியாகராஜர் ஒருபடி கீழாகவும் ஜப்யேசன் ஒருபடி மேலாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். ஜெயமோகனின் பல கதைகளில் இந்த போக்கு காண கிடைக்கும். துறவுக்கு சத்வத்தை விட ரஜோ குணத்தை முதன்மைப் படுத்துவார். சத்வ குணமுடையவர் துறவியாவதில் பெரிய ஆச்சர்யம் ஏதுமில்லை. ரஜோ குணமுடையவர் தன்னை, தனது தன்முனைப்பை வெற்றிகொண்ட பிறகே துறவின் பாதையில் பயணிக்க முடியும். ரஜோ குணத்தவரின் போராட்டம் எழுத்தாளர்களை ஈர்ப்பது இயல்பானதே. எனினும் சத்வ குணத்தை குறைத்து அல்லது அலுப்புடன் காட்டுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். வெண்முரசில் யுதிஷ்டிரன் பாத்திர வார்ப்பை உதாரணமாக கொள்ளலாம். சுசித்ராவின் இந்த கதையிலும் பஞ்சநாத பிரம்மத்தின் சித்தரிப்பு இத்தகையதே. பொது சமூகம் சத்வ குணத்தின் மீது காட்டும் மரியாதைக்கு எதிர்வினையாககூட கலைஞர்களின் எரிச்சலையும் உதாசீனத்தையும் பார்க்க முடியுமா என்றொரு எண்ணம் தோன்றியது. மாறன்- ராமன் கவித்துவமான இடமாக இருந்தாலும் வான்மீகிக்கு அளிக்கப்படுவது மரா எனும் சொல்தான். ஜப்யேசன் பாத்திரத்தின் வலிமைக்கு முன் தியாகராஜர் மிகவும் வலுவற்றவராக தெரிகிறார். தியாகராஜரை பக்திமானாகவும் கவியாகவும் காண இடமுண்டு. அவற்றை இருவேறு கூறுகளின் இணைவாக காண வேண்டுமா என்றொரு கேள்வியும் எழுந்தது. கபீர் தாஸரின் ஜீனி சதாரியா அருமையான பாடல். அப்பாடலில் முன்வைக்கப்படும் நெசவு எனும் படிமமும் நௌகா சரித்திரம் எனும் ஜெயதேவரின் பாடலில் இருந்து கோபிகைகள் ஆடையை கொண்டு படகின் ஓட்டையை அடைக்க முயலும் நெசவு எனும் சித்திரமும் இயைந்து வருகிறது. எனினும் ஜீனி சதாரியா பாடல் கதை நிகழும் கால சூழலுக்கு பொருத்தமானதா என்றொரு கேள்வியும் எழுப்பப்பட்டது. அதை நியாயம் செய்வதற்கென மஸ்தானி என்றொரு பாத்திரமும் உருவாக்கப்பட்டுள்ளது. புறசித்தரிப்பில் சில இடங்கள் திரும்பத்திரும்ப வருவதாக தோன்றுகிறது என்றாலும் காவேரியை சித்தரித்த விதம் மிகச் சிறப்பாக இருந்ததாக பேசப்பட்டது. இந்த எல்லைகளை கடந்து வாசகருக்கு ஒரு காலகட்டத்தை கண் முன் நிறுத்தும் அனுபவத்தை கதை அளிக்கிறது. எல்லாவற்றையும் இணைக்கும் ராம பாணத்தால் கூட பெண்ணின் துயரை போக்க முடியவில்லை என்பது அபாரமான இடம். ராமனே தவறிய இடமல்லவா.
மீனாட்சி நாதன் சொல்லும்போது “நமக்கு ஒண்ணு தெரியலன்னு அது நம்மள பிடுச்சு இழுக்குமில்ல… அந்த மாதிரி ஒரு மாயம். ஆதீனத்துல எங்க அய்யா சபாபதி முதலியார் சொல்வாறு. நமக்குள்ள இருக்குறதுதான் அங்க அந்த சுவடியில இருக்குன்னுட்டு. நம்மள்ள உள்ள இருக்கு. அது நமக்குத் தெரியல. அது தான அங்க வெளிய எழுத்தா இருக்கு. ரெண்டையும் இணைக்குற ஒரு திரி கண்ணுக்குத் தெரியாம இத்தனைக் காலத்தையும் தாண்டி வந்திட்டிருக்கு. நமக்குள்ள அந்தத் திரி ஒரு துளை வழியா ஓடுறா மாதிரி அதுக்குள்ளேயும் ஓடுது. அதான் அதைப் பார்த்த உடனே நமக்குள்ள அதைப் பிடுச்சுக்கணும்னு இருக்கும். ஓலையில உள்ள அதை உண்மையிலேயே புரிஞ்சுக்கிட்டா இங்க நம்மள்ள உள்ள இத புரிஞ்சுக்கிடலாம்பாரு.” சுவடிகள் வழியாக பழையகாலம் தன்னை திரும்பி நோக்குவதை பற்றி சொல்கிறான். ராமனையும் அத்தகைய ஆழமான செதுக்காகவும் அது நம்மை திரும்பி நோக்காதா என பார்ப்பதாகவும் ராமுடு குறிப்பிடுகிறார்.
‘ஒக நாம, ஒக மாட, ஒக பாண, ஒக பார்ய’
‘எல்லாம் மட்கி உதிர்ந்து போகர சமாச்சாரம். ஆனால் ஒரு பெயரும் ஒரு சொல்லும் ஓர் அம்பும் ஒரு பெரும் காதலும் இங்க இருக்கு. எல்லாமே உதிந்துபோனப்பிறகும் மிஞ்சி இருக்குற ஒண்ணு தான் அது.’ என்கிறார் ராமுடு. வரலாறை மிஞ்சி நிற்கும் ஆழ்படிமம் ராமன். அதை சொல்லின் வழியாக மீட்டெடுக்க முடியும் என்பதாக பொருள்படுகிறது. ராமுடு தனது குரு தனக்கு அளித்த ராம நாமத்தை பற்றி குறிப்பிடும்போது “கனிச்சாறோட இனிமையும் அடர்த்தியும் கொண்ட சங்கீதமெல்லாம் அவரிட்டேருந்து பரிபோன பிறகு அதோட கொட்டை மட்டும் தான் தன்கிட்ட மிச்சம் இருந்ததா சொல்வாரு. அதான் ராமநாமம். அதைத்தான் அவர் எனக்குக் கொடுத்தாரு. அது எனக்குள்ள முளைக்கணும்னு சொன்னாரு.” என சொல்லும்போது மேற்சொன்ன எண்ணம் வலுப்படுகிறது.
மிக நல்ல குறுநாவலாக வந்திருக்க வேண்டியது, ஒன்றுக்கும் மேற்பட்ட மைய கேள்விகளை பின்தொடர்ந்து, சிதறியதால் அந்த உயரத்தை எட்ட தவறிவிட்டது என்பதே என் எண்ணம்.
April 11, 2025
பாதி இரவு கடந்துவிட்டது - அமிதபா பக்சி- தமிழில் சுபத்ரா- வாசிப்பு
சமகால உலக/ இந்திய இலக்கியத்திலிருந்து நாவல்கள் தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்படுவது குறைவு என்பதே என் எண்ணம். மொழியாக்கங்களுக்கு குறைவில்லை. சமகால கவிதைகள் உதிரி உதிரியாகவாவது நம்மை வந்து சேர்ந்து விடுகிறது. நாவல்கள் எண்ணிக்கையில் குறைவு தான். ‘க்ளாஸிக்குகள்’ இன்னும் பல இங்கே வரவில்லை என்பதே நிதர்சனம். 2018 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த அமிதபா பக்சி எழுதிய ‘பாதி இரவு கடந்துவிட்டது’ நாவல் நான்காண்டுகளில் தமிழுக்கு இல. சுபத்ராவின் மொழியாக்கத்தில், எதிர் பதிப்பக வெளியீடாக வெளிவந்தது நல்ல விஷயம். அமிதபா டெல்லியில் பிறந்து வளர்ந்து பணியாற்றி வருபவர். ஐ.ஐ.டியில் கணினி பேராசிரியர் என்று அறிகிறேன்.
இந்திய ஆங்கில இலக்கியம் சார்ந்து ஏதோ ஒரு மன விலக்கம் எப்போதும் எனக்கு உண்டு. நகர்ப்புற வாழ்வை அதனால் நன்றாக/நம்பகமாக சித்தரிக்க முடியும். ஆனால் அதற்கு வெளியே களங்கள் நகரும் போது வெளிப்படும் மெனக்கிடல்கள் அயர்ச்சியை தருபவை. சாமானிய மக்களின் வாழ்விலிருந்து இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் வெகுதூரம் விலகியிருக்கிறார்கள். ஒருபோதும் ஒன்று சேர முடியாத கண்ணாடி தடுப்பு அவர்களை மக்களிடமிருந்து பிரிக்கிறது. மனிதர்களை காட்சி பொருளாக ஆக்குகிறார்கள் என்றொரு எண்ணம் எனக்கு உண்டு. ரஞ்சித் ஹோஸ்கோட்டே போன்றவர்கள் இந்த எல்லையை வெளிப்படையாக மேடைகளில் அங்கீகரித்தது உண்டு. ஆகவேதான் இந்திய மொழிகளின் ஆங்கில மொழியாக்கத்திற்கு பெரும் சந்தை உருவாகி வருகிறது. ஏனெனில் நகரங்களுக்கு வெளியே ரத்தமும் சதையுமாக வாழ்க்கை நிகழும் களம் இந்திய மொழி எழுத்தாளர்களால் தான் அதிகமும் எழுதப்படுகிறது.
‘பாதி இரவு கடந்துவிட்டது’ அவ்வகையில் வழமையான இந்திய ஆங்கில நாவல்களில் இருந்து மாறுபட்ட தனித்துவம் கொண்டவை. நாவல் சாமானியரின் வாழ்க்கையைத்தான் சித்தரிக்கிறது. ஆனால் அதிசயமாக கண்ணாடி தடுப்புக்கு அப்பால் பாதுகாப்பான தொலைவிலிருந்து மனிதர்களை அணுகவில்லை. சாமானியர்கள் குறித்து மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்ட நாவல். ‘பாதி இரவு கடந்து விட்டது’ எனும் தலைப்பு கிளர்த்திய கற்பனையை தான் முதலில் சொல்ல வேண்டும். விடியலின் மீதான நம்பிக்கையா, அல்லது கரைந்து கொண்டிருக்கும் இரவின் மீதான ஏக்கமா? அல்லது இரண்டுமேவா?
நாவல் இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. விஸ்வநாத் எனும் எழுத்தாளர் தனது சொந்த வாழ்க்கை குறித்து எழுதும் நீள நீள கடிதங்கள் ஒரு பகுதி. பதிப்பகத்திற்கு, அமெரிக்காவில் வசிக்கும் சகோதரனுக்கு, இறந்து போன மகனின் வெளிநாட்டு மனைவிக்கு, தனது மனைவிக்கு கடிதங்கள் எழுதுகிறார். அதுவரையிலான பிழை புரிதல்களை, பாவங்களை, தவறுகளை ஒப்புக் கொண்டு அதற்கு பொறுப்பேற்று மன்னிப்பு கோருவது தான் இந்த கடிதங்களின் பொதுவான பேசுபொருள். எழுத்து, எழுத்தாளர் தொடர்பாக விஸ்வநாத் முன்வைக்கும் பார்வை எனக்கு இணக்கமானவை. இந்த கடிதங்களின் ஊடாக ஒரு கதை நமக்கு சொல்லப்படுகிறது. எழுத்தாளர் விஸ்வநாத், அவரது மனைவி விமலா, சகோதரர் ஜெகன்நாத், அவரது தந்தை, அகால மரணமடையும் அவரது மகன் சுஷாந்த் ஆகியோர் இந்த கடிதங்களில் துலங்கும் பிரதான பாத்திரங்கள். தில்லியில் சமையல்காரராக இருக்கும் தந்தைக்கு தன் விஸ்வநாத் மீது தீராத குறை ஒன்றுண்டு. தன் மகன் பெரிய எழுத்தாளர் என்பதில் பெருமைதான் ஆனால் தந்தையின் சமையல் தொழிலை அவன் இழிவாக கருதினான் என்பதால் அதே தொழிலை கையில் எடுத்த இரண்டாவது மகன் மீது கூடுதல் பிரியம். விஸ்வநாத்தின் சிக்கல் என்ன? “என் வாழ்வில் பிரயோஜனமான சிலவற்றை நான் செய்திருக்கிறேன் என என்னை சமாதானப்படுத்தும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தன. விவாதங்களில் உண்மையில்லை, எழுத்துக்களில் உண்மையில்லை, புகழ்ச்சிக்களில் உண்மையில்லை. எதிலுமே உண்மையில்லை.” அறுபதுகளின் இறுதியில் கோபக்கார இளைஞனாக லட்சியவாதத்தின் வீழ்ச்சியை கண்டு கொதிப்படைகிறான். தனது எழுத்து சமூகத்தில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்று விரும்புகிறான். அவனது கொந்தளிப்புக்களை கதையாக எழுதும்போது சமூகம் அவற்றை பகடி கதைகளாக வகைப்படுத்தி செரித்துக்கொள்ள முயல்கிறது. “இலக்கியம் வரலாற்றின் போக்கில் தாக்கங்கள் எதையும் ஏற்படுத்துவதில்லை- ஏனெனில் வரலாறானது ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கான மக்களினூடாக செயல்படுகையில் இலக்கியமானது ஒரு சமயத்தில் ஒரு மனித மனத்தினுள்ளேயே செயல்படுகிறது” என்பதை விஸ்வநாத் புரிந்து கொள்கிறார். கோபத்தையும் பழியுணர்வையும் இடுபொருளாக கொண்டு சமைத்த இலக்கியத்தின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்.
“பெரும்பாலானவர்களுக்கு சுயநலமாய் இருப்பதற்கு காரணம் தேவைப்படுகிறது, அதை அவர்கள் தவறிழைக்கப்பட்டதான - நிஜமான - எண்ணத்திலிருந்து பெற்றுக் கொள்கிறார்கள்.” தனது நீதியுணர்வு,அறவுணர்வு போலியானது. வஞ்சத்தால் உருவானது என்பதை ஒருவாறு புரிந்துகொள்கிறார் விஸ்வநாத். “ஒழுக்கவாதத்தினடிப்படையிலான கோபங்கள் ஒருவகையில் நியாயமற்றவை: உண்மையிலேயே நீங்கள் சரியான பக்கத்தில்தான் நிற்கிறீர்களா என உங்களை நீங்களே கேட்டுக் கொள்வதில் இருந்தும், ஒரு விஷயத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட நியாயங்கள் இருக்கக்கூடும் என நீங்கள் உணர்வதிலிருந்தும் அவை உங்களைத் தடுத்து விடுகின்றன” என்று எழுதுகிறார். இந்த நாவலும் கடிதங்களும் அவரது வயோதிகத்தில், மகனை இழந்த பிறகு எழுதப்படுபவை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். மகனின் மரணம் ‘நான் என்னை சரியானவனாக காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று’ என உணர்த்தியதன் விளைவே இவை. விஸ்வநாத் செய்த ஆய்வை திருடி பதிப்பித்த பேராசிரியருக்கு சீற்றம் கொண்டு பாதியில் கைவிடுகிறார். பின்னர் அரசு ஊழியராக தேர்வு பெறுகிறார். இவை பிழையான முடிவுகளாக அவருக்கு தோன்றின. “ஆனால் அவ்வப்போது என்னை கிளர்த்திய அந்த இறுமாப்புணர்வையும் ஒரு துரோகியை துரோகி என தைரியமாக அழைத்ததாக பிறர் என்னை புகழ்ந்தபோது நான் உணர்ந்த நீதியுணர்வையும் தாண்டி எனக்கு என்ன கிடைத்துவிட்டது?” எனும் கேள்வியை தனக்குள் எழுப்பிக் கொள்கிறார். “உலகின் தீமைகளை வெளிப்படுத்துவதுதான் இலக்கியம் என எவ்வாறு நம்ப முடிந்தது? நான் எப்படி அப்படி ஒரு குருடாக இருந்தேன்?” என தனது நம்பிக்கையை உடைத்து பார்க்கிறார். “வெறுப்பின் பிரதிகள் ஒருபோதும் மக்களின் இதயத்தை தொடமுடியாது. அன்பின் பிரதிகளால் மட்டும் தானே அதைச் செய்ய முடியும்.” எனும் முடிவுக்கு வருகிறார். எழுத்தாளராக பெயரும் புகழும் பெற்றிருந்தாலும் தன் வாழ்வின் மீது அவருக்கு தீராத வருத்தங்கள் இருந்தன. விஸ்வநாத் தனது வெளிநாட்டு மருமகளுக்கு எழுதும் கடிதத்தில் குர் அதுல்ஜன் ஹைதரின் நாவலில் இருந்து ஒரு பகுதியை சொல்கிறார். நபிகள் சூபிக்களின் தலைவரை தேர்ந்தெடுக்க வைக்கும் தேர்வில் ‘தனிமனிதர்களின் வெட்கக்கேடான குறைபாடுகளை அவர்களது சகமனிதர்களிடமிருந்து மறைப்பேன்’ எனும் பதிலை சொன்ன அலியை தலைவராக ஆக்குகிறார். இதுதான் இந்த நாவலின் மையமும் கூட. சாமானியர்களின் வாழ்வை, அவர்களது பலவீனங்கள் மீது தீர்ப்பெழுதாமல் பரிவுடன் அணுகுகிறது. ‘ஒரு சிறந்த எழுத்தாளராக இருக்க வேண்டுமெனில் அடிப்படையில் நான் ஒரு சிறந்த மனிதனாக இருக்க வேண்டும்’ எனும் செய்தியை தான் விஸ்வநாத் வந்தடைகிறார்.
எழுத்தாளர்களுக்கும், அறிவுத்தள செயல்பாட்டார்களுக்கும் எப்போதும் தாங்கள் செயல் வீரர்களாய் இருக்க முடியவில்லை எனும் குற்ற உணர்வு உண்டு. தனது எழுத்தின் சமூக பெறுமதி என்ன என்றொரு கேள்வி அவர்களை அலைக்கழிக்கும். இத்தகைய கேள்வியை எதிர்கொண்டு விடைகாணும் முயற்சியாக விஸ்வநாத் எழுதும் நாவல் அன்பின், மன்னிப்பின், அரவணைப்பின் செய்தியை தாங்கி வருகிறது. துளசி தாஸரின் ராமாயணம் எழுப்பிய உணர்வின் நீட்சியாய் திகழ்கிறது. ராமனையும், லட்சுமணனையும் அனுமனையும் லட்சியங்களாக கொள்கிறது. இந்நாவல் தனது ஆழத்தில் ஒரு லட்சியவாத, கற்பனாவாத நாவல். ஜெயமோகன் தனது உரையில் குறிப்பிடும் லட்சியவாதத்தின் மீள் வருகையை குறிக்கும் பின்னை பின்நவீனத்துவ கூறுகளுக்கு இந்த நாவலை உதாரணமாக கொள்ள முடியுமா என்று யோசிக்கிறேன். எழுத்தாளரின் வாழ்வும் அவர் எழுதும் நாவலும் இணை வைக்கப்படுகிறது. தினாநாத் - திவான்சந்த் சகோதரர்கள் உறவும் விஸ்வநாத் ஜெகன்நாத் உறவும் ஏறத்தாழ ஒரே மாதிரியானவை. விஸ்வநாத் தன்முனைப்பும், சுயநலமும் கொண்ட எழுத்தாளராக, தனது பிற கடமைகளை சரிவர ஆற்றாதவராக தன்னை உணர்கிறார். தனது மனைவியாகவும் வாசகியாகவும் இருந்தவர் மகனுடைய அம்மாவாக ஆகும்போது எழும் இடைவெளியை நுட்பமாக பதிவு செய்கிறார்.
விஸ்வநாத் எழுதும் நாவல் குதா பக்ஷ் மாங்கே ராமை ரகசியமாக மல்யுத்த வீரராக பயிற்றுவிக்கும் பகுதியிலிருந்து தொடங்குகிறது. நவாபின் ஆஸ்தான பயில்வானாக பல ஆண்டுகளாக இருந்தவர் தனது சீடன் யூசுப் முகம்மதிடம் தோல்வி அடைந்தார். மாங்கே ராமை தயார் செய்வதன் வழி அவனை வென்றுவிட வேண்டும் எனும் முனைப்பு வெளிப்படுகிறது. அதேசமயம் மாங்கே ராம் தோற்றுவிடுவானோ எனும் அச்சமும் இருக்கிறது. ஆகவே அவனை போட்டிகளுக்கு அனுப்பாமல் பதுக்கி வைத்திருக்கிறார். போட்டியில் தோப்புக்கரணமும் தண்டாலும் தான் வழிமுறை. யார் இறுதிவரை தொடர்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள். யூசுப்பை மாங்கே ராம் வெற்றிகொள்கிறான். தோல்வி அடைந்த யூசுப் மாங்கே ராமின் ஆசிரியராக ஆகிறான். வெற்றி என்பது எதிராளியின் வீழ்ச்சி அல்ல, மாறாக நீட்சி எனும் பார்வையை முன்வைக்கிறது.
நவாபிற்கு கடன் கொடுத்த லாலா மோதிசந்த் மல்யுத்தத்தின் மீது ஆர்வம் கொண்டவன். அவனோடு நவாபின் ஆஸ்தான பயில்வான் மாங்கே ராம் மோதுவதாக முடிவாகிறது. மாங்கே ராம் தோற்க வேண்டும் என்பதே நவாபின் விருப்பமாக இருந்தது. அதன்வழி கடன் சுமை கொஞ்சம் குறையும் என்று நம்பினார். ஆனால் நோஞ்சானாக இருந்த லாலாவை ஒரே அடியில் வீழ்த்துகிறான். நவாப்புகளும் மன்னர்களும் பின்னுக்கு சென்று புதிய அதிகார மையமாக வணிகர்கள் உருவாகிவரும் சித்திரத்தை நாவல் அளிக்கிறது. வென்றவன் தோற்றவனை தன்னோடு வருமாறு டெல்லிக்கு அழைக்கிறான். மல்யுத்த வீரன் மெல்ல மெல்ல லாலாவின் அணுக்க வேலைக்காரனாக மாறிப் போகிறான். அவனது வித்தைக்கு நகரத்தில் எந்த பொருளும் இல்லை. மல்யுத்த வீரனாக அனுமன் அவனுக்கு வலிமையின் சின்னமாக இருந்தார். ஆனால் லாலாவிடம் சேர்ந்த பிறகு சேவகத்தின், பக்தியின், பணிவின் சின்னமாக ஆகிறார். லாலா மற்றும் மாங்கே ராம் குடும்பங்களின் கதைதான் நாவல்.
லாலாவிற்கு இரண்டு மகன்கள். மூத்தவன் தினாநாத். லாலாவின் வணிகத்திற்கு சரியான வாரிசு. இளையவன் திவான்சந்த் தத்தளிக்கும் கவியுள்ளம் கொண்டவன். லாலாவின் மகள் முக்கியமான பாத்திரமாக துலங்கவில்லை. லாலாவிற்கும் லஜ்வந்தி எனும் பெண்னின் வழி திருமண உறவிற்கு வெளியே மக்கன்லால் என்றொரு மகனும் பிறக்கிறான். மக்கன்லால் தந்தையின் மீது அன்பு கொண்டவனாக வளர்கிறான். காலப்போக்கில் தந்தை குறித்து உண்மையை அறியும்போது அவரை வெறுக்கிறான். மார்க்சியம் அவனை ஈர்க்கிறது. ஆனால் களத்தில் போராடும் அளவு துணிவும் அவனிடம் இல்லை. திவான்சந்த் ராம சரித மானசில் தன்னை தொலைக்கிறான். அவனது குருவின் அழைப்பிற்கு செவிமடுத்து மகனையும் மனைவியையும் விட்டுவிட்டு காசிக்கு செல்பவன் தந்தையின் மரணப்படுக்கையின் போது துளசிபிரேம்ஜி எனும் துறவியாக திரும்புகிறான். தன் தாயின் மரணத்திற்கு தம்பி தான் காரணம் எனும் உணர்வு அண்ணனுக்கு கடைசிவரை இருந்தது. தம்பி திவானுக்கோ மூர்ச்சை அடைந்து கையறு நிலையில் கிடக்கும் லக்ஷ்மணனாக தன்னை கற்பனை செய்து கொள்வதை நிறுத்த முடியவில்லை. ராமன் அவனை ஏந்திக் கொள்ள வேண்டும் எனும் ஏக்கம் பீடித்திருந்தது அவனுக்கு. உறவுகளின் ஊடாட்டம் தான் இந்த நாவல். சகோதரர்களுக்கு இடையே பகைமை, சகோதரனின் மனைவி ஸ்வர்ணலதாவிற்கும் திவான்சந்துக்கும் இடையேயான அன்பும் வஞ்சமும் கலந்த உறவு, நிறைவேற வாய்ப்பே இல்லாத கமலாவின் காதல், திவான்சந்தின் இங்கிலாந்து வாசத்தில் அவனோடு உடனிருக்கும் ஆல்ப்ரெட் என பல சரடுகள் கொண்டதாக நாவல் விரிகிறது.
மாங்கே ராமின் கதை இன்னொரு சரடு. முதலாளியின் மீதான விசுவாசம் என்பதை தவிர அவன் விழுவது ஒரு படுகுழியில். சதேயி எனும் பணிப்பெண்ணுடன் சேர்ந்து கொள்கிறான். அதிகாரத்தில் திளைக்கிறான். தன்னை அவமானப்படுத்திய கணேஷியின் பதின்வயது மகளை கர்ப்பமாக்கி வஞ்சம் தீர்க்கிறான். முதிர்ந்து பலவீனமான பிறகு சொந்த மருமகளிடம் தவறாக நடக்கிறான். வெளியூருக்கு சென்று சொத்து குடும்பத்தை உயர்த்தியவர் என்பதால் அவரது மகன் பர்சாதிக்கு தந்தை மாங்கே ராம் ஒரு நாயகனாக தான் தெரிகிறான். தந்தைக்கு பிறகு குடும்பத்துடன் டெல்லிக்கு செல்கிறான். ஆனால் அவனால் தந்தையின் இடத்தை ஈட்ட முடியவில்லை.
இந்திய மைய நிலத்தின் ராம பக்தி நமக்கு சற்று அந்நியமானது. அங்கு ராமன் அடைந்திருக்கும் செல்வாக்கு துளசிதாசரால் உருவாக்கி அளிக்கப்பட்டது. வான்மீகி ராமாயணத்தை மக்கள் மொழியான அவுதி மொழியில் யாத்தவர் துளசிதாசர். ராமனை காந்தி தனக்கானவராக கண்டடைந்தது கூட துளசிதாசர் வழியாகத்தான். சீர்ஷேந்து முகோபாத்யாய ‘ராமன் வனவாசம் சென்ற வழி’ நூலில் துளசிதாஸரின் செல்வாக்கு குறித்து அளிக்கும் சித்திரமும் கூட அவர் அங்கு எப்படி சாமானிய மக்களின் கதைகளில் ஊடுருவியிருக்கிறார் என்பதை காட்டுவதாக இருக்கிறது. சதேயி, லஜ்வந்தி என பலரும் இளமையில் தங்களது எல்லைகளை மீறியவர்கள் ராமனிடம் முழுமையாக சரணடைகிறார்கள். மானஸின் வரிகள், ஆங்காங்கு மேற்கோள் காட்டப்படும் கவிதைகள் இந்த நாவலுக்கு அடர்த்தியை சேர்க்கிறது.
உதாரணமாக இரண்டு கவிதைகளை சுட்ட வேண்டும். விஸ்வநாத் மேற்கோள் காட்டும் முநீர் நியாஜின் கவிதை, திவான்சந்த் வாசிக்கும் மாத்யூ அர்னால்டின் கவிதை..
நான் எல்லாவற்றையும் மிகத் தாமதமாக செய்கிறேன்
முக்கியமாகச் சொல்ல வேண்டிய ஒன்றை, காப்பாற்ற வேண்டிய ஒரு சத்தியத்தை
ஒருவரை அனுப்பி வைப்பதில் அவரைத் திரும்ப அழைத்துக் கொள்வதில்
நான் எப்போதுமே தாமதமாயிருக்கிறேன்
ஒரு நண்பனுக்கு உதவுவதில், அவனுக்கு தைரியம் சொல்வதில்
தொன்மையான பாதைகளில் ஒருவரைச் சந்திக்க செல்வதில்
நான் எப்போதும் தாமதமாய் இருக்கிறேன்
பருவ மாற்றங்களில் மகிழ்ச்சியைக் கண்டடைவதில்
ஒருவரை நினைப்பதில் ஒருவரை மறப்பதில்
நான் எப்போதும் தாமதமாய் இருக்கிறேன்
மரணிப்பதற்கு முன் ஒருவரது துயரங்களிலிருந்து அவரைக் காப்பதில்
அவர்கள் நினைத்துக் கொண்டிருந்ததல்ல உண்மை எனச் சொல்வதில்
நான் எப்போதும் தாமதமாய் இருக்கிறேன்
மாத்யூ அர்னால்டின் கவிதை தனக்குள் ஆழ்வதற்கு திவான்சந்தை தூண்டுகிறது. அப்படித்தான் அவன் துளசிதாசரையும், ராமனையும் கொள்கிறான்.
இப்படியான உன் வருகைகள் ஒருபோதும் பலனளிப்பதில்லை
இப்போது நீ வா, நிஜமாகவே வா.
எனது கூந்தலை விலக்கி என் நெற்றியில் முத்தமிடு
என் கண்ணா- நீ ஏன் துயருறுகிறாய் எனச் சொல்!
சுபத்ரா செறிவாக மொழியாக்கம் செய்திருக்கிறார். ஆங்காங்கு களையப்பட கூடிய சிற்சில கவனப் பிழைகள் உள்ளன என்றாலும் அவை வாசிப்பிற்கு தடையாக மாறவில்லை. சொல்லாதே காட்டு எனும் பொது இலக்கிய விதிக்கு மாறாக, நாவல் ‘சொல்லப்படுகிறது’ என்பதே இந்நாவலின் எல்லை. படைப்பின் மீது படிந்திருக்கும் எதிர்மறை போலித்தனங்களை விட்டொழித்து வாழ்வின் மீதும், படைப்பின் மீதும் நன்னம்பிக்கையை மீட்டெடுத்தல் என்பதே நாவலின் மையமாக உணர்ந்து கொண்டேன். நாவலின் பல தருணங்கள், கதாபாத்திரங்கள் மனதிற்கு நெருக்கமாக உணர்ந்தேன். விஸ்வநாத் கொள்ளும் அவநம்பிக்கைக்கு பதில் அவர் எழுதும் நாவலில் கிடைப்பதாக எனக்கு தோன்றியது. வாழ்வை பரிவுடன், கருணையுடன், நன்றியுடன், அன்புடன் அணுகி நோக்க முயல்கிறது. மக்கன்லாலுக்கும் உருது ஆசிரியருக்கும் இடையே நிகழும் உரையாடலின் ஒரு பகுதி இது (நாவலினுடைய ஓட்டத்திலிருந்து சற்றே விலகிய பகுதியாக தோன்றியது). “உண்மையில், செயலே பல சமயங்களில் சிந்தனைக்கும் உணர்வுகளுக்கும் எதிரியாக இருக்கிறது. செயலில் இறங்க விரும்புகிற ஒரு மனிதன் அதற்கு முன்னதாக தனது மூளையை அமைதிப்படுத்த வேண்டும். இல்லையா? படகில் இருந்தபடி பீரங்கியை செலுத்த முடியுமா? சிந்திக்கிற மனிதன் ஒரு படகைப் போன்றவன். இல்லையா?உறுதியாக நின்று பீரங்கியின் அதிர்வை தாங்க முடியாதபடி எப்போதும் அசைந்து கொண்டே இருக்கின்ற ஒரு படகு. செயல் வீரர்கள் செயலில் இறங்கும் முன் தன்னைத்தான் கேள்விக் கேட்டுக் கொள்வதை நிறுத்தியே ஆகவேண்டும். ஆனால் எண்ணங்களின் மனிதன், நிச்சயங்களின் ஆபத்து குறித்து அறிதலும் அச்சமும் உடையவனாய் இருப்பதால் அவனால் கேள்வி கேட்பதை நிறுத்தமுடியவில்லை. ஆனால் செயல் வீரனாய் இருக்க முடியவில்லை என்பதற்காக உங்களை நீங்கள் நிந்தித்துக் கொள்ளத் தேவையில்லை.”
March 19, 2025
அத்தைக்கு மரணமில்லை - சீர்ஷேந்து முகோபாத்யாய் - தமிழில் தி. அ . ஸ்ரீனிவாசன் - வாசிப்பு குறிப்பு
அத்தைக்கு மரணமில்லை ஒரு இந்தியத்தன்மை கொண்ட வங்காள குறு நாவல். மறுபிறப்பை இயல்பாக சொல்லிச்செல்கிறது என்பதையே இந்தியத்தன்மை என்று குறிப்பிட காரணம். மூன்று தலைமுறை பெண்களின் வாழ்வை பேசும் குறுநாவல். ராமன் வனவாசம் போன வழி படித்ததும் சீர்ஷேந்து மனதிற்கு அணுக்கமான எழுத்தாளராக தோன்றினார். அவருடைய சிறுகதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டால் நன்றாக இருக்கும். அலட்டலோ அலங்காரமோ போலித்தனமோ இல்லாத மொழி.
ரஷோமாயி 12 வயதில் விதவையாகி போனவர். குடும்பத்தில் எல்லோருக்கும் அத்தையம்மா. சீரழிந்து கொண்டிருக்கும் ஜமீனை கட்டி ஆள்பவள். எல்லோரிடமும் சிடுசிடுப்பவள். வீட்டின் இரண்டாம் தளத்தை விட்டு வெளியே வராதவள். இளம் மருமகளாக அங்கு வந்து சேரும் ஏழை குடும்ப பெண் லதா. மூழ்கும் கப்பலை மீட்கும் மாலுமி. லதாவிற்கு உறுதுணையாக அவளது மாமியார் இருக்கிறார். தொடக்கத்தில் எதிரியாக பாவிக்கும் ஓரகத்தியும் கூட அவளை இயல்பாக ஏற்றுக் கொள்கிறாள். குடும்பத்தின் ஒரே வாரிசு, லதாவின் மகள் வசந்தா. ஒரு அறையில் ஒடுங்கிக்கொண்டு வாழ்வை இழந்த அத்தையம்மா, விடுதலையை ஓரளவாவது நுகரும் இன்னொரு தலைமுறையின் வசந்தாவாக மறுபிறப்பு எடுக்கிறாள். அத்தையம்மாவிற்கு எல்லாமுமாக இருந்த நகைப்பெட்டியை பேயாக ஆன பிறகும் பாதுகாக்கிறாள். வசந்தாவிற்கு அந்த நகைகள் ஒரு பொருட்டே அல்ல எனும்போது குறுநாவல் முழுமை அடைகிறது. இந்திய பெண்களின் பொருளியல் தன்னிறைவை நோக்கிய பயணம் சமூக சுதந்திரத்துடன் எப்படி பிணைந்திருக்கிறது என்பதை எளிமையாக உணர்த்துகிறது இந்த குறுநாவல்.
எனக்கு இந்த நாவலின் நாயகி என்றால் அது லதா தான். ஒடுக்கப்பட்ட அத்தையம்மாவின் தலைமுறைக்கும் தன் வாழ்வின் செல்திசையை தீர்மானிக்கும் வசந்தாவிற்கும் இடையே இந்த மாற்றத்தை சாத்தியப்படுத்தியது லதா. லதாவும் லதாவின் தலைமுறை பெண்களும். நான் என் அம்மாவை நினைத்துக்கொண்டேன். தான் மட்டும் வளமாக வாழ்ந்துவிட முடியாது எனும் புரிதல் உள்ளவள். சூழ இருப்பவர்கள் துயரில் தவிக்கும்போது தன்னால் மட்டும் மார்கிஸ்ச்சியுடன் வாழ முடியாது என்று நம்புபவள். பொறுப்புணர்வுக்கும் சுதந்திரத்திற்கும் இடையேயான உறவை காட்டுபவள். ஆவியாகி அத்தையம்மா அவளை சுதந்திரத்தின் கனியை ருசிக்க சொல்லி தூண்டுகிறாள். ஊசலாட்டங்களை மனதிடத்துடன் கடக்கிறாள். வீட்டிலிருந்து வெளியே காலடி வைத்து குடும்பத்தை நிமிர்த்துபவள். வீட்டைவிட்டு வெளியே வேலைக்கு வந்த நடுத்தர வர்க்கத்து முதல் தலைமுறை பெண்களை இந்த சமூகம் ஒழுக்கத்தை காட்டி சிறுமை செய்தது. ஒழுக்கமல்ல அங்கே சிக்கல். மாறாக மாறிவரும் அதிகார சமநிலைக்கு எதிரான முரண்டுதான் அது. லதாவினுடைய உழைப்பின் கனியைத்தான் வசந்தா இயல்பாக ருசிக்கிறாள்.
அத்தையம்மாவிற்கு வாழ்வு வெறும் கசப்பு. அவள் இருக்கும்போதும் இறந்த பிறகும் எல்லோரையும் கரித்து கொட்டிக்கொண்டே இருக்கிறாள். சாவு, சாவு, சாவு என்று திட்டிக்கொண்டே இருக்கிறாள். வாழ்வின் மீது அவளுக்கு தீராத கோபம். வாழ்பவர்கள் மீதும், வாழ்க்கையை துய்ப்பர்வகள் மீதும் அவளுக்கு ஓயாத எரிச்சல். சமைத்து சாப்பிடுகிறார்க என்றால் அதை எப்படியாவது குலைத்துவிடுவாள். வசந்தாவாக மறுபிறப்பெடுக்கும் அத்தையம்மா அறிமுகம் ஆவதே கல்லூரி சுற்றுலாவில் பெரிய நிலவை காணும் தருணத்தில்தான். அத்தையம்மாவை முடக்கி வைத்த இரண்டாம் மாடி அறைகள் அவளுக்கு விசாலமாக இருக்கிறது. வசந்தாவிற்கென ஒரு காதல் காத்திருக்கிறது.
சமகாலத்தில் நம்பி வாசிக்கும் மொழிபெயர்பாளர்கள் எனும் எனது சிறிய பட்டியலில் தி.அ. ஸ்ரீனிவாசனுக்கு இடமுண்டு. மொழியாக்கமும் சரி, மொழியாக்க தேர்வுகளும் சரி தொடர்ந்து சிறப்பாக உள்ளன.
February 26, 2025
ராமன் வனவாசம் போன வழி - சீர்ஷேந்து முகோபாத்யாய் - தமிழில் தி. அ . ஸ்ரீனிவாசன் - வாசிப்பு குறிப்பு
வோல்டேரின் மைக்ரோமெகாஸ் கதையில் மைக்ரோமேகாசும் அவனது நண்பனும் வேற்று கிரக வாசிகள். மைக்ரோமெகாசின் கணுக்காலை நனைக்கும் ஆழம் தான் பசிபிக் பெருங்கடல். திமிங்கிலங்கள் ஏதோ சிறு புழுக்கள் போல நீரில் நெளியும். மனிதர்கள் அவனோடு உரையாடுவார்கள். உலகின் அற்பத்தனங்களை, மனிதர்களின் மலினங்களை சித்தரிக்க அவனை காட்டிலும் பன்மடங்கு ஆற்றல்மிக்க கற்பனையும் லட்சியமும் உரைகல்லாக கொண்டு வந்து ஒப்பிடுகிறோம். கால- வெளி தொலைவு எல்லாவற்றையும் அற்பமாக காட்டுகிறது.
சீர்ஷேந்து முகோபாத்யாய் ராமன் வனவாசம் சென்ற தடத்தை பின்தொடர்ந்து பயணிக்க முடிவெடுக்கிறார். புராண காலத்து ராமனை அளவுகோலாக கொண்டு நிகழ்கால இந்தியாவை மதிப்பிடுகிறார். நவீன அறிவுஜீவிக்கு புண்ணிய தலங்கள் ஒரே சமயத்தில் மதிப்பிற்குரியதாகவும் ஒவ்வாமை அளிப்பதாகவும் இருக்கிறது. காந்தி வாரணாசிக்கு சென்ற போது அதன் சீர்கேட்டால் சீண்டப்பட்டார். சீர்ஷேந்து 1981 ல் அயோத்தியும் பிரயாக்கும் வேண்டும். நான் 2010 ல் காசிக்கு சென்றிருக்கிறேன். நம் புனித தலங்கள் ஏன் இப்படி இருக்கிறது என்றொரு கேள்வி எனக்கு எப்போதும் உண்டு. நூலில் அயோத்தியை விக்கிரமாதித்தன் கண்டடைந்த கதையை சுருக்கமாக சொல்கிறார். கருப்பு குதிரையில் ஆற்றில் இறங்கும் ஒருவன் மறுகரையில் ஏறும்போது வெள்ளை குதிரையாக ஆவதை அரசன் நோக்குகிறான். அவன் பிரயாக்ராஜன். பிரயாகையின் கடவுள். பாவங்களை கழுவ வரும் மக்களின் பாவங்களை ஏற்று அவன் உடல் கறுத்துவிடும். அவற்றை நீக்க சரயுவில் முங்கி எழுவதாக சொல்கிறான். காசியையும் கங்கையையும் காண தூய்மை அழுக்கு என்பதையெல்லாம் கடந்த வேறொரு கண் நமக்கு வேண்டும். ’அது அப்படித்தான் இருக்கும். நமக்கு தெரிந்த ஒரே பதில். ஒரே சமாதானம். ராமன் வனவாசம் போன பாதையில் போகப்போக நான் ராமனின் மாபெரும் தோல்வியையும் ராட்சதர்களின் வெற்றியையும்தான் கண்டேன்’என்கிறார். கணேஷ் தேவியின் மகாபாரத நூலில் சாந்தமே அதன் முக்கிய ரசம் என பொருத்திக்கொள்கிறேன். நாம் எல்லாவற்றையும் ஏற்கவும் அனுசரிக்கவும் பழகியுள்ளோம். சித்திரகூடத்தில் குரங்குகளும் பிச்சைகாரர்களும் தொல்லை செய்கிறார்கள். ஆனால் குரங்குகள் சேட்டை செய்வதால் தாங்கிக்கொள்ள முடிகிறது. ஆனால் பிச்சைக்காரர்கள் விஷயம் அப்படியில்லை, ‘முதலாவது அவர்கள் மனிதர்கள். இரண்டாவது அவர்கள் நடத்தையில் பார்த்த மகிழ எதுவுமில்லை’ என்கிறார். ராமனிடம் உன் தேசம் என்னவாக மாறியிருக்கிறது பார் என முறையிடுகிறார். ‘சாவிலும் துக்கத்திலும் வேதனையிலும் கஷ்டத்திலும் பஞ்சத்திலும் பெருவெள்ளத்திலும் இவர்கள் பக்கம் இருப்பதெல்லாம் ராமரோ அல்லது திருப்பதி வேங்கடாசலபதியோ அல்லது காளியோ அல்லது துர்க்கையோதான். பகுத்தறிவு இவர்களுக்கு கட்டுப்படியாகாது. அது இவர்களுக்கு பொறுப்பற்ற ஆடம்பரம்’ என்பது அவரது சொற்கள்.
பாபரி மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பான அயோத்தியையும், எண்பதுகளின் பிரயாகையும், சித்திரகூடத்தையும் சித்தரிக்கிறார். வால்மீகி தனது கவிதையில் சிருஷ்டித்த மரங்கள் அடர்த்த செறிவான காடில்லை, வெறும் மொட்டை பாறைகள் சூழ இருக்கும் அரை பாலை தான் இன்று எஞ்சியுள்ளது. துளசிதாசரின் ராமாயணம், இந்தியின் நடைமுறை பயன் என பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. வால்மீகி சம்பல் கொள்ளைக்காரன் என்பதால் அவனுக்கு பாதை வழி எல்லாம் நன்றாக தெரியும் என்கிறார். பெரும்பாலான கடவுள் மக்களிடமிருந்து தோன்றியவர்கள். ஆனால் ராமன் புத்தர் இருவரும் இளவரசர்கள். ஆகவே அவர்கள் மக்களை அறிய வேண்டும் என்பதற்காக அரண்மனையை விட்டு வெளியேற வேண்டி இருந்தது என்பது முக்கியமான அவதானிப்பு. ‘உண்மையில் நாம் எல்லோருமே அன்னியர்கள்தான். இந்தியாவில் வசிப்பவர்களுக்கு இந்த ஞான திருஷ்டிக் கைவரப் பெற்றதால்தான் அறவுணர்வு இப்போது தலை தூக்குவதே இல்லை’ என்று எழுதுகிறார். திரளில் இருந்து தன்னை அந்நியமாக உணர்கிறார். இந்த அந்நியத்தன்மை கரையாமல், திரளோடு திரளாக ஆகாமல் இந்தியாவின் ஆன்மாவை உணர முடியாது. தன்னிலும் தாழ்வான நிலையில் இருக்கும் ரிக்ஷாக்காரரிடமும் குடிசையில் வழங்குபவரிடமும் அற சீற்றத்துடன் நடந்துகொள்கிறார். காசு கூட கேட்கும் ரிக்ஷா காரரிடம் மனித ரத்தம் பருகுபவர்கள் என்று சொல்லி அவரை அழவைக்கிறார். சீர்ஷேந்து அவரை தேற்ற வேண்டியிருக்கிறது. நமது அற சீற்றம் கூட மிகுந்த கவனத்துடன் வெளிப்படுகிறது. ராமராஜ்ஜியம் எனும் கனவுக்கும் நவீன இந்தியா எனும் நிதர்சனத்திற்கும் இடையே அல்லலுறும் ஒரு ஆன்மாதான் சீர்ஷேந்து. ‘உத்தரபிரதேசத்து மக்கள் சாகவில்லை அவ்வளவுதான்’ என அவர்களின் நிலை கண்டு கொந்தளிக்கிறார். ‘மனித குலத்தின் எனது நேசம் அதிகரிக்கும் தோறும் தனித்த மனிதன் மீதான என் நேசம் குறைந்தபடி இருக்கிறது’ எனும் தாஸ்தாயெவ்ஸ்கியின் கூற்றை நினைத்து கொண்டேன். கூடவே “நீங்கள் மானுடத்தின் மீது நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. மானுடம் என்பது ஒரு பெருங்கடல், அதன் சில துளிகள் அசுத்தமாக இருக்கிறது என்பதால் பெருங்கடலே அசுத்தம் என எண்ணிவிடக் கூடாது” எனும் காந்தியின் சொற்களும்.
February 21, 2025
இத்தா - கீரனூர் ஜாகிர்ராஜா- வாசிப்பு குறிப்பு
நடைமுறை தேவை கருதி உருவாக்கப்பட்ட விதிமுறை சடங்காக ஆகும்போது காலத்தை கடந்து விடுகிறது. அது காலப்பொருத்தமின்மையால் தனிமனித வாழ்வில் நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது. சடங்குகள் மனித வாழ்வுக்கு பொருளளிப்பவை. ஆனால் காலந்தோறும் அவை கேள்விக்கு உள்ளாக்கப்பட்ட வேண்டும். பொது நன்மைக்கு ஊறுவிளைவிக்காத தனியுரிமைகளை மனிதகுலம் படிப்படியாக அங்கீகரித்து ஏற்றுவருவதே இயல்பு.
கீரனூர் ஜாகிர் ராஜா எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். சமீபத்தில் அவரது ‘இத்தா’ நாவலை வாசித்து முடித்தேன். ‘இத்தா’ என்பது கணவர் இறந்துவிட்டாலோ பிரிந்துவிட்டாலோ அதற்கு பின் முஸ்லீம் பெண்கள் ஈடுபாடும் சடங்கு . தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு அறைக்குள் முடங்கி கிடக்க வேண்டும். மறுமணம் புரிந்துகொள்வதற்கு முன் கர்ப்பம் தரித்திருக்கிறாரா இல்லையா என்பதை அறிவதற்கான ஒரு ஏற்பாடு. ஜாகிரின் நாவல் கோவை கலவரத்திற்கு பிந்தைய காலகட்டத்தை பேசுகிறது. திருமண நாளன்று ஆதரவற்ற பெண்ணான மரியத்தின் கணவன் நியாஸ் காவலர்களால் கைது செய்யப்படுகிறான். முஸ்லீம் என்பதாலேயே விசாரணையின்றி பலகாலம் அடைத்து வைக்கப்பட்டதை பற்றி சொல்லும் அதேவேளையில் உள்ளுக்குள்ளே புழங்கிய தீவிர போக்கையும் லேசாக கோடிட்டு காட்டுகிறது. நியாஸ் நிலை என்ன என்பது தெரியவில்லை. மரியம் நியாசின் பெற்றோர்களோடு சேர்ந்து நியாசின் வருகைக்காக காத்திருக்கிறாள். ஒரு அரசியல் சுழலுக்குள் சிக்கிய தனி மனுஷியின் கதை தான் இத்தா. ஜாகிரின் பெண் பாத்திரங்கள் பொதுவாக எப்போதுமே மிகவும் வலுவானவை. மரியமும் அப்படியானவள். சொந்த மகனிடமிருந்து மாமனார் தலாக் பெற்று தருகிறார். ஆனாலும் ஜமாஅத் ‘இத்தா’ இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. மார்க்க நூல்களை துணைக்கு கொண்டு சமூக சேவகராக பஷீரையும் மாமனாரையும் எதிர்கொள்கிறாள். “எழுத்தாளரா இருந்தாலும் சமூக சேவகராகவே இருந்தாலும் ஆம்பளைங்க தந்திரசாலிங்க, சந்தர்ப்பவாதிங்க” என்று தான் மரியாதை வைத்திருக்கும் மாஷேவை விமர்சிக்கிறாள்.சிறுமியாக மரியம் ரஸுலுல்லாவை கனவில் சந்திக்கும் பகுதி முக்கியமானது. அவளுக்கு அவரிடம் சொல்வதற்கு ஏகப்பட்ட புகார்கள் இருந்தன. பெரியவளான பின் அவளால் கனவில் கூட நெருங்க முடியவில்லை. மரியம்மின் மாமியாரான ஆமினா பீவி மருமகளை விட முடியாமல் தவிக்கிறாள். மகன் மீண்டு விடுவான் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள். மரியம்மின் நிலைக்காக மனமிரங்கவும் செய்கிறாள். இரண்டு மன்சூர்கள், இரண்டு நியாஸ்கள், இரண்டு காதர்கள் உண்டு. திரைக்கதையாக எழுதப்பட்டு நாவலாக மாற்றமடைந்து படைப்பு என்று ஜாகிர் குறிப்பிடுகிறார். அதற்கே உரிய சில எல்லைகளும் குழப்பங்களும் உண்டு. 1998 க்கு பிறகு நான்கு வருடங்களில் மரியம் இத்தா இருக்கிறாளா எட்டு வருடங்களுக்கு பிறகு இருக்கிறாளா என்றொரு குழப்பம் ஏற்படுகிறது.
ஜாகிர் எப்போதும் தனது கதைகளின் ஊடாக அமைப்புகளின் அதிகாரத்தை தனி மனிதரின் கோணத்திலிருந்து கேள்விக்குட்படுத்துபவர். ‘இத்தாவும்’ இதையே செய்கிறது. தமிழ் இஸ்லாம் எனும் அடையாளத்தை அவரது கதைகள் எப்போதும் முன்வைக்கும். இந்நாவலில் அத்தகைய உரையாடல்கள் உண்டு. மரியம்மின் தெங்குவிளை பகுதி பால்ய காலத்தை உயிர்ப்புடன் சித்தரிக்கிறது.
February 3, 2025
எல்லாம் செயல் கூடும்
Dr Satya, Dr Bhumi, Thirunavukarasu, Chitran, Suneel, Manasa Bottom row- Prabahakaran Krishnammal Sabarmathi Sudhir Chandran சிபியின் நடைபயண நாட்குறிப்புகளை வாசித்தபோது இதுவரை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனை சந்திக்காதது பெரும் பிழை எனும் உணர்வு வலுபட்டது. இன்ன காரணம் என்றில்லை. சுணக்கம், அல்லது முனைப்பின்மை என்று வேண்டுமானால் சொல்லலாம். திட்டமிடல் ஏதுமின்றி பிப்ரவரி 2 ஆம் தேதி அவரை நேரில் சென்று சந்திப்பது என்று முடிவு செய்து கொண்டேன். குக்கூ சிவராஜிடம் கிருஷ்ணம்மாள் அங்கு இருப்பார்களா என்பதை மட்டும் உறுதி செய்து கொண்டு ஞாயிறு மதியம் புறப்பட்டோம். மனைவி மக்களுடன் சென்றேன். உடன் எழுத்தாளர்கள் சித்ரனும் பிரபாகரனும் வந்தார்கள். குழந்தைகளுக்கு இந்த நூறு வயது பாட்டியை காண்பிக்க வேண்டும் என்று விரும்பினேன். காந்தியை கண்ட விழிகளை அவர்களும் காண வேண்டும். காந்தியை கண்ட விழிகள் இந்த தளிர்களையும் காண வேண்டும். எத்தனை பெரிய காலமாற்றத்தில் சாட்சியாக அவர் நம்முன் வாழ்கிறார். இங்க தான் மார்ட்டின் லூதர் கிங் ஜுனியர் இரண்டு வாரம் தங்கினார் என்றொரு அறையை கைகாட்டினார். காமராஜர் இங்கயே தான் இருப்பார். எங்க வீட்டுக்காரர் இருந்தா வெளிலயே இருக்கிறதை எல்லாம் ஊதி முடிச்சுட்டு உள்ளே வருவார் என்று சொன்னார். வயதுக்குரிய உடல் மாற்றங்கள். மதியம் குட்டி தூக்கத்திற்கு பின் எங்களை காண வந்தார்.
காந்தி கிராம பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே உள்ள ஊழியரகத்தில் தான் அவரை சந்தித்த்தோம். க்ரிஷ்ணாம்மாளின் சகோதரி மகனான இளங்கோ எங்களுக்கு உதவினார். பிள்ளைகள் வெளியே படிப்பதாகவும். அவர் பத்தாண்டுகளாக இங்கேயே இருப்பதாகவும் சொன்னார். கென்யா நாட்டை சேர்ந்த இருவர் ஓய்வெடுத்து கொண்டிருந்தார்கள். சர்வோதய தினத்திற்காக சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். நடன வகுப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது. சபர்மதி அவர்களுடன் சென்று விட்டாள். மலைகள் சூழ அழகிய இடம். உண்டு முடித்து ஓய்வெடுக்கும் நேரம். சற்று நேரம் கூடத்தில் அமர்ந்திருந்தோம். மெல்ல எங்களை நோக்கி நடந்து வந்தார். வயதிற்குரிய நினைவு தடுமாற்றம், குரல் தடுமாற்றத்தை கழித்துவிட்டால் திடமாக உள்ளார். கத்தி பேச வேண்டியிருக்கவில்லை. தொலைவில் நடந்து செல்லும் பெண்களை சரியாக பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு பார்வை நன்றாகவே இருந்தது. கூடத்தில் ஜெகந்நாதனின் படம் ஒரு பக்கமும் டாக்டர் சவுந்தரம் ராமச்சந்திரன் அவர்களின் படம் இன்னொரு பக்கமும் மாட்டப்பட்டு இருந்தது. இன்னும் நிறைய படங்கள் மாட்டப்படுவதற்காக அங்கு இருந்தன. “இந்த இடம் ஊழியரகம்… வேலை செய்யிறவங்க வந்து தங்குறதுக்குன்னு உள்ள இடம். போலீஸ் தேடிக்கிட்டு இருந்த இங்க வந்துருவாங்க” என்று சிரித்தார். கிளம்புவதற்கு முன் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு நூலான ‘சுதந்திரத்தின் நிறம்’ நூலை வாசித்திருந்தேன். பிரிட்டிஷ் காவலர்கள், சுதந்திர இந்தியாவின் காவலர்கள் என எல்லோரும் அவரை விரட்டி இருக்கிறார்கள். பலமுறை பொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறை சென்றிருக்கிறார்கள். அடிப்படை மனிதநேயம் இன்றி நடத்தப்பட்டிருக்கிறார்கள். கொள்கைக்காக சிறை என்பதை பெருமையாக எண்ணிய தலைமுறையின் இறுதி கன்னி. பண்ணையார்கள், கம்யூனிஸ்டுகள், காவலர்கள் என எல்லோருடைய எதிர்ப்பையும் எதிர் கொண்டுள்ளார்கள். எதிர்ப்பு என்றால் வெறும் கருத்து பூசல் இல்லை. உதாரணமாக இந்த நிகழ்வை குறிப்பிடலாம். வினோபா தமிழகம் வருவதற்கு முன் பூதான பயணம் குறித்து ஏற்பாடுகளை செய்வதற்கு பயணிக்கும் போது ஒரு கிராமத்தில் அந்த ஊர் நிலக்கிழார் நன்கு உபசரித்து கைக்குழந்தையுடன் வரும் கிருஷ்ணம்மாளை தங்க வைக்கிறார். அன்றைய தினக்கூலி கேட்டு வரும் வேலையாட்களுக்கு விளக்கு வைத்துவிட்டதால் பணம் கொடுத்தால் லட்சுமி போய்விடும் எனும் காரணத்தை கூறி பண்ணையார் கூலி வழங்க மறுக்கிறார். விருந்தாளியாக சென்ற இடத்தில நமக்கேன் பொல்லாப்பு என ஒதுங்கி நிற்காமல் பண்ணையாரை கண்டிக்கிறார். எங்கள் வீட்டில் இருந்து கொண்டே எங்களை கண்டிப்பீர்களா என்று சொல்லி பெட்டி படுக்கைகளை தூக்கி தெருவில் வீசுகிறார்கள். இரவெல்லாம் கைக்குழந்தையுடன் வெட்டவெளியில் படுத்துறங்கினார். நீதிக்காக பிரச்சாரம் செய்வது சுலபம். நீதிமான்களாக காட்டிக்கொள்வது அதைவிட சுலபம். களத்தில் கண்முன் தெரியும் அநீதிக்கு ஆற அமர எதிர்வினை ஆற்றாமல் உடனடியாக ஆற்றுவதற்கு பெரும் துணிச்சல் வேண்டும். மடத்தின் விருந்தாளியாக தங்கியிருந்தபோது சீனாவை போல் மக்களாக வன்முறையில் இறங்கி பிடுங்கிக்கொள்வதற்கு முன் மடத்தின் நிலத்தை மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்று சொல்லப்போக மடத்தினர் கிருஷ்ணம்மாளை வெளியேற சொல்கிறார்கள். காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியை சந்தித்ததை பற்றி எங்களிடம் சொன்னார். வீட்டிற்கே சென்று நிலமற்ற ஏழை பெண்களுக்கு நிலம் கொடுக்க வேண்டும் என்று கோரி இருக்கிறார். திருவாரூரில் அம்மனுக்கு அவல் பாயாசத்திற்கு என 250 ஏக்கர் எழுதி வைத்துள்ளார்கள். அதை பிரித்து கொடுக்க வேண்டும். அம்மன் அடுப்பில் பாயாசம் வைக்க மாட்டாள். அடுப்பெரிய வேலை பார்க்கும் பெண்களுக்கு அந்த நிலத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். “அரசு எல்லாம் கொடுத்துருச்சு.. நான் இப்ப திருவாரூருக்கு போகணும், கொஞ்சம் வெய்யில் குறையட்டும்னு பாக்குறேன். ஒரு ரெண்டு நாளுல போயி எல்லாருக்கும் பிரிச்சு கொடுத்திருவேன்” என்றார். பழைய நினைவுகளை இப்போது சொல்கிறாரா, அல்லது உண்மையிலேயே செல்ல வேண்டும் என சொல்கிறாரா என்று என்னால் பிரித்தறிய முடியவில்லை.
ஜெகந்நாதன் உழுபவர்களுக்கே நிலம் எனும் நம்பியவர். அதுவே இந்தியாவின் ஏற்றத்தாழ்வுகளை தீர்க்கும் என்று ஆழமாக நம்பினார். வினோபாவுடன் பூதானத்தில் நெருங்கி வேலை செய்தாலும் அவருடைய வழிமுறைகள் மீது விமர்சனம் இருக்கிறது. சர்க்கரை ஆலைகளுக்கு எதிரான முதல் சத்தியாகிரகம் செய்யும்போது காங்கிரஸ் காரர்களே ஜெகந்நாதனை எதிர்க்கிறார்கள். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சரி, சொந்த அரசுக்கு எதிராகவே சத்தியாகிரகம் செய்வதா என்று கேள்வி எழுப்புகிறார்கள். எந்த அரசாக இருந்தாலும் தவறென்று இருந்தால் சத்தியாகிரகத்தை கைக்கொள்வேன் என்கிறார். வெவ்வேறு அமைப்புகளுடன் இயைந்து செயல்படுகிறார்கள், அமைப்புகளை தோற்றுவிக்கிறார்கள். அமைப்புகள் முக்கியமானவை, ஆனால் அவற்றுக்கு சில வரையறைகள் உள்ளன. தாங்கள் அறம் என்று நம்புவதற்கு இடையூறாக தாங்கள் உருவாக்கிய/ பங்கெடுத்த அமைப்புகள் வந்தால் அவற்றை உதறி முன்னகரும் திண்மை பெரும்பாலானவர்களுக்கு இருக்காது. அமைப்புகள் அளிக்கும் பாதுகாப்பில் சுருங்கிக்கொள்ள தோன்றும். அமைப்புகளை பாதுகாப்பதை கடமையென கொள்வார்கள். அமைப்புகளின் நோக்கமே முக்கியம். காந்தியின் வழிமுறையும் அதுதான். ‘சுதந்திரத்தின் நிறம்’ நூலில் குமரப்பா வினோபாவுடன் பிணக்கு கொள்ளும் இடம் அபாரமான சிறுகதைக்குரிய பகுதி. காந்தியும் அய்யன்காளியும் உரையாடும் மெல்லிய நூல் போன்ற ஒரு பகுதி. குமரப்பா வினோபாவின் உன்னத இலட்சியத்தை புரிந்து கொண்டார். ஆனால் வினோபா நடைமுறைவாதியாக இல்லை எனும் வருத்தம் அவருக்கு உண்டு. பூதானத்தில் தானமாக அளிக்கப்பட பெரும்பகுதி நிலம் தரிசு தான். வினோபாவை பொறுத்தவரை இந்த அளவிற்காவது இந்த மாற்றம் நடக்கிறதே, இப்போது தரிசை கொடுத்தாலும் நாளை நல்ல நிலத்தை கொடுப்பார்கள் என்று நம்புகிறார். குமரப்பாவோ கையெழுத்து இட்டு சேகரியுங்கள், உடனடியாக பகிர்ந்து கொடுங்கள், பாசன வசதி ஏற்படுத்தி கொடுங்கள் என்கிறார். வினோபா அவை இப்போதைய தமது பணியல்ல என நம்புகிறார். விவசாய நிலத்தில் அறுவடைக்கு பிறகு தீ வைக்கப்படுவதை காட்டி குமரப்பாவிடம் சொல்கிறார். “அவர்கள் பழைய நிலத்திற்கு தீ வைக்கிறார்கள். நான் பழைய சமூகத்திற்கு தீ வைக்கிறேன். பழைய சமுதாயத்தின் நடைமுறைக்கு தீ வைக்கிறேன். அடுத்த தலைமுறை வரும் உழத்தொடங்கும். புதிய விதைகளை விதைக்கும். என் பணி தீ வைப்பது தான்.” குமரப்பாவிற்கு இந்த பதில் நிறைவளிக்கவில்லை. நடைமுறையை கணக்கில் கொள்ளாத பதில் என்கிறார். விருந்துக்கு வாருங்கள் என அழைத்து இலையில் உப்பை மட்டும் பரிமாறுவது போல உள்ளது . இன்று முதலில் உப்பை சாப்பிடுங்கள், நாளைக்கு சாப்பாடு போடுவேன், அடுத்தநாள் சாம்பார் ஊற்றுவேன் என்பதை போல் உள்ளது உங்கள் பேச்சு என விமர்சிக்கிறார். தினமும் காலை (காலை என்று சொல்லலாமா என தெரியவில்லை) 2.30 மணிக்கு எழும் வழக்கத்தை கொண்டிருந்தவர் என்றார் கிருஷ்ணம்மாள். ஆதி சங்கரரின் பாடல்கள் அனைத்தையும் பாராயணம் செய்வது அவர் வழக்கம். பஜ கோவிந்தம் என சொல்லும்போது அரிக்கேன் விளக்கை தூக்கிக்கொண்டு கிருஷ்ணம்மாள் முன்னே நடக்க தொடங்குவார். விடிவெள்ளியை பார்த்து நிற்கும் வினோபா சொல்கிறார். விடிவெள்ளி வந்துவிட்டது சூரியன் விரைவில் உதித்துவிடும் தானே. குமரப்பா கிளம்பும் செய்தி அறிந்து குடிலுக்கு செல்கிறார். அங்கே எல்லா பொருட்களும் அங்கும் இங்குமாக சிதறி கிடக்கின்றன. வினோபா அவற்றை ஒழுங்காக பெட்டியில் அடுக்கி தருகிறார். ஒரேயொரு விவசாயி கலப்பையுடன் சென்று கொண்டிருக்கிறான். வினோபாவும் குழுவும் நடக்கும்போது எதிர்திசையில் நடக்கும் விவசாயியின் திசையில் குமரப்பா நடக்கிறார். காந்தியம் என்பது வெறும் ஆன்மிகம் அல்ல. வறட்டு லட்சியவாதம் அல்ல. நடைமுறை பயனை எப்போதும் கணக்கில் கொள்வது. உடனடி விஷயங்களை காலாதீதமான விழுமியங்களை கொண்டு எதிர்கொள்ள முற்படுவது. வினோபா காந்தியை காட்டிலும் மேலான ஆன்மீக வாதியாக இருக்கலாம் ஆனால் அவரால் காந்தியாக ஆக முடியாது. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஒருவகையில் காந்தியை சாராம்சமாக உள்வாங்கியவர்கள். காந்தி எதை செய்திருப்பாரோ அதையே இவர்களும் பல சமயங்களில் செய்தார்கள்.
நூலிலும் நேர்பேச்சிலும் வினோபாவை பற்றிய பல சுவாரசியமான சித்திரங்கள் வருகின்றன. வினோபா நாளுக்கு பதினெட்டு முறை தயிர்சாதமும் தேனும் உண்பார். ஒவ்வொரு முறையும் பகவத் கீதையின் முழு அத்தியாயத்தையும் பாராயணம் செய்துவிட்டு ஒரு கவளத்தை உண்பார். வினோபாவிற்கு உடலநிலை சரியில்லாமல் பீகாரில் இருந்தபோது இந்தியா முழுக்க தலையில் சோற்றையும் பருப்பையும் சுமந்தபடி சர்வோதய ஊழியர்கள் அவரை காண வருகிறார்கள். பிள்ளையை விட்டுவிட்டு வா என்றாலும் பூமி கையை இறுக பற்றிக்கொண்டதால் முதல் சில ஆண்டுகள் இவர்களுடனேயே திரிகிறார். மாணிக்கவாசகரின் அச்சோ பத்திலிருந்து முத்தி நெறி பாடலை வினோபா பாடுவாராம். அப்போது அவருக்கு ஓய்வெடுக்க வேண்டும் என பொருள் என்றார். பேசும்போதெல்லாம் குரலில் தெரிந்த நடுக்கம் பாடும்போது இல்லை. வள்ளலாரின் ‘எல்லாம் செயல் கூடும்’ பாடலை கொஞ்சமும் பிசிறின்றி பாடினார்.
துறவியாக செல்ல இருந்தவரை பிடித்து கிருஷ்ணம்மாளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். கதர் துண்டை தலையில் அணிவிப்பது தான் திருமணம். ஜெகந்நாதனும் கிறிஸ்து குல ஆசிரமத்தில் சிலர் தங்களது உடல் தேவைகளை முறையற்ற வழியில் தீர்த்துக் கொள்வதை பார்த்து சமூக வாழ்விற்கு நல்ல இல்வாழ்வு தேவை எனும் முடிவுக்கு வருகிறார். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனை பற்றி சொல்லும்போதெல்லாம், அவர் என்றோ எங்க வீட்டுக்காரர் என்றோ தான் சொல்கிறார். திருமணமான தொடக்கத்தில் தன்னை தனியாக விட்டுவிட்டு அவர் அலைந்தது பற்றிய குறை இப்போதும் கூட இருப்பதாக பட்டது. கீழே சிமெண்டு தரையை காண்பித்து இது அவரே தன் கையால போட்டது இன்ன வரை இருக்குது என்றார். ஜெகந்நாதன் போன்ற கணக்கற்ற தொண்டர்கள் தன்னலமற்று உழைத்த நிலத்தில் தான் நாம் எல்லோரும் இன்று நிற்கிறோம். ஜெகந்நாதன் மண் பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். போட்டதை போட்டபடி விட்டுவிட்டு அடுத்தடுத்து பயணிக்க அதுவே எதுவாக இருக்கும். இந்தியா முழுக்க கால்நடையாக அலைந்து திரிந்திருக்கிறார்கள். தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் நடந்தே சென்றிருக்கிறார்கள்.
ராலே கெய்தான் பற்றி சொல்லி கொண்டிருந்தார். கெய்தான் அமெரிக்க மிஷனரி. இந்திய விடுதலை பற்றி பேசியதால் மிஷனரியில் இருந்து நீக்க பெறுகிறார். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் நெருங்கிய சகாக்களில் ஒருவர். கெய்தான் எல்லாருக்கும் வேலைகளை பிரித்து கொடுப்பாராம். மதியம் வரிசையாக எல்லோர் கைகளையும் சோதிப்பாராம். உடல் உழைப்பிற்கான தடயம் தென்பட்டால் தான் சோறு. மீண்டும் மாலையும் இதே சோதனை நடக்கும். அப்போது உழைத்தவர்களுக்கு ஆளுக்கு இரண்டு சர்க்கரை வள்ளி கிழங்கு கொடுப்பார் என்றார்.
‘சுதந்திரத்தின் நிறம்’ இறால் பண்ணைக்கு எதிரான போராட்டம் நிறைவு பெறாத காலத்தில் எழுதிய வாழ்க்கை சரிதை. சரியாக சொல்வதானால் நீண்ட நேர்காணல், கூடவே லாரா கோப்பாவின் இந்தியா குறித்த அவதானிப்புகள் நிறைந்த நூல். கிருஷ்ணம்மாள் அவர்களின் மகன் டாக்டர் பூமியிடம் ஒரு முழுமையான வரலாறை எழுத வேண்டியதன் அவசியத்தை கூறினேன். வாக்கரசியலுக்கு வெளியே இயங்கும் மகத்தான மனிதர்களை நாம் கண்டுகொள்வதில்லை. முதுகுளத்தூர் கலவரத்தின் போது அமைதியை உருவாக்க ஊர் ஊராக செல்கிறார்கள். கீழ்வெண்மணி கொடுமையின் போது முதல் மனிதர்களாக சென்று சேர்கிறார்கள். காந்தி, வினோபா, ஜெ.பி என மகத்தான மனிதர்களுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார்கள். சமகால அரசியல் விவாதங்களில் அவர்கள் இடம்பெறாமல் போகலாம். வாக்கரசியலே உரையாடலை தீர்மானிக்கும் ஆற்றலாக உள்ளது. ஏதோ ஒரு கட்சியின் ஓட்டு வங்கிக்கு உதவாத ஆளுமைகளை இங்கே நினைவில் நிறுத்துவது கடினம். மக்கள் நினைவுகளில் இவர்கள் என்றென்றும் நீடித்திருப்பார்கள். எத்தனை மகத்தான பெருவாழ்வு! சொற்களில் உழன்று கொண்டிருப்பவனாக மட்டும் இருப்பதற்காக வெட்கினேன். தன் கையால் குழந்தைகளுக்கு ரொட்டி கொடுத்தார். பூமி அவர்களுடனும், சத்யா அவர்களுடனும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.
கிளம்பும் முன் அவர்களிடம் ‘தமிழகம் உங்களுக்கு ரொம்பவே கடன் பட்டிருக்கு’ என்று சொல்லி வணங்கினேன். ‘கடன் என்ன..கடமையை செய்யிறோம். அவ்வளவுதான்’ என்றார் அலட்டிக்கொள்ளாமல். ஆதர்ச எழுத்தாளரான யுவன் சந்திரசேகருடன் அவருடைய நாவல்கள் பற்றி உரையாடும்போது துறவு அல்லது குடும்பத்தை விட்டு வெளியேறுவது என்பது அவரது கதைகளில் தொடர்ந்து தொழிற்படுவதை பற்றி கேட்டேன். “வெளியேறி எங்க போறான்? குடும்பம்ங்கிற சின்ன வட்டத்தை விட்டு வெளியேறி போறவன் உலகமே தனது குடும்பங்கிற பெரிய வட்டத்திற்குள்ள போறான்னு பாக்கலாம் இல்லையா” என்றார். ஜெகந்நாதன் துறவியாக வேண்டும் என்று விழைந்து இல்லறத்தில் ஈடுபட்டவர். அவரை துறவி என்பதா இல்லறத்தார் என்பதா. எல்லா துறவிகளும் இல்லறத்தார் தான். புவி முழுமையும் அவர்களது குடும்பம். தன்னலமற்று நோற்கப்படும் யாவையும் நோன்பே. நான் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து உள்ளூர அனத்தல் பெருகியது. இந்த அனத்தல் நல்லதற்கே. உள்ளூர ஒலிக்கும் சன்னமான ஆனால் திடமான குரல் செவியில் விழக்கூடும்.
February 2, 2025
ஒரு காந்திய பயணம்
ஈரோடு- திருப்பூர் அறக்கல்வி மாணவர்கள் வாக்குக்கு பணம் பெறக்கூடாது என்பதை வலியுறுத்தி கோவை போத்தனுர் காந்தி ஆசிரமத்திலிருந்து வேதாரண்யம் சத்தியாகிரக நினைவிடம் வரையில் 400 கிலோமீட்டர்கள் நடந்து தங்கள் யாத்திரையை ஜனவரி 28 ஆம் தேதி நிறைவு செய்தார்கள். யாத்திரை எனும் சொல்லை குறித்து யோசித்து கொண்டிருந்தேன். தண்டி பயணம் என சொல்லவில்லை, யாத்திரை என்றே சொல்லியிருக்கிறார்கள். இயல்பாக பயணம் எனும் சொல்லுக்கு இருக்கும் உலகியல் வரையறைக்கு அப்பால் யாத்திரை எனும் சொல்லுக்கு ஒரு ஆன்மீக பொருள் சேர்கிறது. பயனத்திற்கொரு புனித நோக்கு சேரும்போது அது யாத்திரையாக ஆகிறது.
சிபி, அனுஸ்ரீ, சௌமியா ஸ்ரீ, கௌதம், லைலா பானு, அர்ச்சனா ஆகியோர் தான் மொத்த பயணத்தை நிறைவு செய்த அறுவர். கொடைக்கானல் சபரீஷ் இவர்களுடன் ஏறத்தாழ ஒரு வாரம் நடந்திருப்பார். சரண்யாவும் நான்கைந்து நாட்கள் நடந்தார் என்று எண்ணுகிறேன். சந்தானிகா, ஸ்ரீவித்யா, மோகன் ராஜ் ஆகிய மாணவர்கள் இரண்டு மூன்று நாட்கள் நடந்திருப்பார்கள். கண்டனூர் நாராயணனும் அவரது பனிரெண்டு வயது மகன் ராம் சிதம்பரமும் இரண்டு நாட்கள் நடந்தார்கள். இந்த பயண நோக்கத்தை பற்றி நிறைய பேசலாம், ஆனால் 18 நாட்கள் நீண்ட நடை பயணம் என்பதே நடந்தவர்களுக்கு ஒரு மகத்தான அனுபவமாக இருக்கும். உணவிற்கோ தங்குமிடத்திற்கோ பெரிய திட்டமிடல் இல்லாமல் மக்களை நம்பி நடந்தார்கள். சிறு இடர்களுக்கு அப்பால் நான்கு பெண்கள் கொண்ட குழுவிற்கு எந்த தொந்தரவும் இல்லை.
புதுக்கோட்டைக்கு அருகே இருக்கும்போது குடும்பத்துடன் சென்று சந்தித்து வந்தோம். நடந்து நடந்து கால்களில் கொப்பளங்கள் ஏற்பட்டிருந்தது. அனைவரும் பிளாஸ்திரிகள் ஒட்டியிருந்தார்கள். வாடை காற்றிலும் மழையிலும் நடந்ததால் லேசான உடல்நலமின்மை சிலருக்கு. பிறகு வேதாரண்யத்தில் நிகழ்ந்த நிறைவு நாள் விழாவிலும் பங்கு கொண்டேன். மணப்பாறை- புதுக்கோட்டை வழியில் சித்தூர் எனும் கிராமத்தில் இருந்த கருப்பர் கோவில் வாசலில் மதிய ஓய்வெடுத்து கொண்டிருந்தபோது சென்று சேர்ந்தோம். அன்று மனைவியின் பிறந்தநாள் என்பதால் மதிய உணவு எடுத்து வருவதாக திட்டம். ஆனால் நாராயணன் கொண்டு வந்த காலையுணவை மதியம்தான் சாப்பிட முடியும் என்று சொல்லிவிட்டார்கள். முந்தைய நாள் தங்கிய இடத்தில அந்த அளவு கவனிப்பு. நடந்து நடந்து இளைப்பீர்கள் என்று பார்த்தால் ஒரு சுற்று பெருத்ததாக தெரிகிறதே என கேலி செய்து கொண்டிருந்தோம். அதுவரையிலான பயணத்தில் அவர்கள் ஆகப்பெரிய சவாலாக உணர்ந்த விஷயத்தை பற்றி பேசினோம். மலைகளுக்கு இடையே இருளில் நடக்கும்போது தனக்கு ஏற்பட்ட அச்சம் காரணமாக திட்டமிட்ட ஊரை அடைவதற்கு முன்பே வேறொரு ஊரில் தங்குமிடம் தேடும் நெருக்கடி ஏற்பட்டதை பற்றி அனுஸ்ரீ கூறினார். தன்னை மிகவும் பலவீனமாக உணர்ந்ததாக சொன்னார். சாலைகளில் துரத்தி வந்த குடிகாரர்கள், அனுமதி அளிக்காத தந்தை, உடல் ஒத்துழைக்குமா எனும் ஐயம் என வேறு வேறு விஷயங்களை சொன்னார்கள். தெரு நாய்களை எப்படி சமாளித்தீர்கள் என்றால் கண்டுகொள்ளாமல் திடமாக நடந்து வந்தால் விட்டுவிடும் என்றார்கள். பயணத்தின் ஊடாக சில நுட்பங்களை கண்டடைந்துள்ளார்கள். ஆண்கள் இருக்கும் வீட்டில் கழிவறை உபயோகிக்க கோரினால் அனுமதிப்பார்கள் என்பது அப்படியான ஒரு கண்டுபிடிப்பு. மாவட்டங்கள் தோறும் தங்களது பிரச்சாரத்திற்கு கிடைக்கும் வரவேற்பு எதிர்ப்பு சார்ந்தும் சில விஷயங்களை சொன்னார்கள். பொதுவாக மனிதர்களின் நல்லதன்மை மீது நன்னம்பிக்கை ஏற்பட்டதாகவே சொன்னார்கள். பிளாஸ்டிக் பேட் பால் கொண்டு சுதீருடன் சிபியும் கௌதமும் விளையாடினார்கள். நாராயணன் ஏற்பாட்டில் இட்டிலி, இடியாப்பம், கவுனி பாயாசம் ஆகியவற்றை மதிய உணவாக உண்டோம். எங்களுடன் வந்த சிங்கப்பூர் கணேஷ் பை நிறைய நார்த்தம் பழத்தை கொண்டு வந்தார். உண்டு முடிக்கும் சமயத்தில் திண்டுக்கல்லில் இருந்து உமையாள் தேனப்பன் தம்பதியினர் அங்கு வந்து சேர்ந்தார்கள். மாணவர்களின் உடைகளை துவைத்து காயப்போட்டு கொண்டு வந்திருந்தார்கள். முதல்முறையாக அவர்களை சந்தித்தேன். தேனப்பன் கட்டுமான பொறியாளராக உள்ளார். உமையாள் ‘வேதாத்திரி மகரிஷி’ வாழ்க வளமுடன் யோக பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மாலை நான்கு மணிக்கு மீண்டும் நடக்க தொடங்கிய போது சுதீரும் அவர்களுடன் நடந்து வருவதாக பிடிவாதம் பிடித்தான். கொஞ்ச தூரம் நடந்தபிறகு நிறைவுநாளில் அவர்களுடன் நடக்கலாம் என்று உறுதியளித்து அழைத்து கொண்டேன்.
நிறைவு நாள் அன்று மதியம் அம்மாவும் என்னுடன் வந்தார். சுதீர், நாராயணன், அவரது மகன் ராம் சிதம்பரம், சிங்கப்பூர் கணேஷ் என எல்லோரும் புறப்பட்டோம். ரோட்டரி சங்கம் ஆங்காங்கு மாணவர்களுக்கு வரவேற்பு அளித்து வந்தது. இறுதி நான்கு கிலோமீட்டர் இருக்கும் போது வந்து சேர்ந்தோம். சுதீர், ராம், நாராயணன், கணேஷ் என எல்லோரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். அறப்போர் ஜெயராமன், கிருஷ்ணன், குக்கூ நண்பர்கள் என ஒரு திரள் நடந்து வந்தது. நானும் அம்மாவும் வேதபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வந்தோம். அரசு சித்த மருத்துவர் ரமேஷ் குமார் வேதாரண்யத்தில் தான் பணிபுரிகிறார். எனது கல்லூரி இளவல். பல ஆண்டுகளுக்கு பிறகு அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. சத்தியாகிரக நினைவிடத்தில் கூட்டம் நடந்தது. ரோட்டரி சங்க கூட்டம் எப்படி நடக்குமோ அப்படி நடந்தது. நிறைய உரைகள். மாணவர்கள் தங்களது அனுபவங்களை செறிவாக பகிர்ந்து கொண்டார்கள். சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். அறப்போர் ஜெயராமன், பேராசிரியர் பழனித்துரை ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட சர்தார் வேதரத்தினம் பிள்ளை வாரிசுகளான இருவரை நிகழ்விற்கு அழைத்திருந்தார்கள். அறக்கல்வி ஆசிரியர்களான அனீஸ் நாயரும், லோகமாதேவி அவர்களும் நிறைவு விழாவிற்கு வந்திருந்தார்கள். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் கையெழுத்திட்ட சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
கிருஷ்ணன் மாணவர்கள் மீது விழுந்திருக்கும் பொறுப்பு சுமையை பற்றி பேசினார். காந்தியிடம் இந்த சிக்கல் உண்டு. காந்திக்கு எல்லாவற்றிலும் தான் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனும் சிக்கல் உண்டு. காலப்போக்கில் அது தான் மட்டும் என்பதாக இல்லாமல், மனைவி பிள்ளைகள், சீடர்கள் என தன்னை சார்ந்த எல்லோருமே முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். இது ஒரு நெருக்கடி. ஹரிலால் இந்த நெருக்கடியில் தாக்குபிடிக்காமல் உதிர்ந்தவன். உள்ளத்திண்மையை சோதிக்கும் சோதனைகள் இனிதான் வரக்கூடும். அப்போது அவர்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
கரியப்பட்டணம் எனும் ஊரில் விஜயலக்ஷ்மி எனும் வாசகர் வீட்டில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடை பயணம் முடித்த மாணவர்கள் வெகுவாக உணர்ச்சிவசப்பட்டிருந்தனர். அவர்களின் பெற்றோர்களின் முகங்களில் பெருமிதம் குடிகொண்டிருந்தது. கௌதம் ஒரு மூலையில் தனியே அமர்ந்திருந்தான். சௌமியா ஸ்ரீ அழுது கொண்டிருந்தாள். சுமார் இருபது நாட்கள் ஒன்றாக செய்த பயணம். திரும்ப முடியாத காலத்துளிகளால் நிறைந்தது தான் வாழ்க்கை. இந்நினைவுகள் வாழ்நாள் சேகரம். பெரும் யாத்திரைகள் எந்த அளவிற்கு புறத்தில் நிகழ்கிறதோ அதே அளவிற்கு அகத்திற்குள்ளும் நிகழும்.
விஜயலஷ்மியின் இல்லம் அழகாகவும் விசாலமாகவும் இருந்தது. இரவு நெடுநேரம் பாட்டு, பேச்சு, கொண்டாட்டம் என சென்று கொண்டிருந்தது. முத்துப்பேட்டையில் இருந்து வேதாரண்யம் வரையிலான பாதை மிகவும் ரம்மியமாக இருந்தது. நிரம்பி ததும்பும் நீர் நிலைகள். வயல் வெளிகள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிராதப ராமபுரம் எனும் ஊரில் ஊராட்சி தலைவராக உள்ளவரை சந்தித்தோம். முழு மூச்சுடன் முன்மாதிரி ஊராட்சியாக கொண்டுவர முனைகிறார். அவரது முயற்சிகள், இலட்சியங்கள் குறித்து பேச முடிந்தது. தன்னலமற்ற செயல் ஒத்த மனமுடையவர்களை ஒன்றிணைக்கும்.
காலை எழுந்து உணவு உண்டுவிட்டு கோடியக்கரை சென்றோம். தை அம்மாவாசையை என்பதால் கடற்கரையில் கூட்டம். குரங்குகளுக்கு உணவிட வேண்டாம் என வனக்காவலர்கள் அறிவுறுத்தினார்கள். கடலில் குளிக்க வேண்டும் எனும் திட்டத்தை நீரை பார்த்ததும் மாற்றி கொண்டேன். நான்கைந்து வண்டிகளில் வனவிலங்கு சரணாலயத்திற்குள் சென்றோம். வெளி மான், காட்டு பன்றி, கீரி, கலைமான் ஆகியவற்றை பார்த்தோம். நாராயணனும் ராம் சிதம்பரமும் எங்களுக்கு விதவிதமான பறவைகளை சுட்டி காட்டினார்கள். உபயம் பறவை பார்த்தல் வகுப்பு, வெள்ளிமலை. ராஜராஜன் எழுப்பியதாக நம்பப்படும் பொன்னியின் செல்வன் புகழ் கலங்கரை விளக்கத்தை கண்டுவிட்டு திரும்பினோம். திரும்பும் வழியில் இரண்டு நரிகளை கண்டோம். (நாங்கள் மட்டுமே கண்டோம் என்பதில் சற்று கூடுதல் பெருமை).
400 கிலோமீட்டர் வாக்குக்கு பணம் பெறாதீர்கள் எனும் செய்தியை தாங்கி ஆறு மாணவர்கள் நடந்து வருகிறார்கள். இது இந்த ஊர்களில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும்? இன்றைய அரசியல் சூழலில் இவர்களின் சன்னமான ஆனால் திடமான குரல் எடுபடுமா? எல்லா அறமின்மைகளும் இயல்பாக்கம் அடையும் காலகட்டம் இது. தேர்தலுக்கு நாளிருக்கிறது. இவர்களிடம் வாங்க மாட்டேன் என உறுதி அளித்தவர்கள் அந்த சொல்லை காப்பாற்றுவார்களா? எந்த கேள்விக்கும் துலக்கமான விடை என ஏதுமில்லை. உடலை மெய் என்று குறிக்கிறது தமிழ் மொழி. உடலை வருத்துதல் என்பது மெய் வருத்தம். உடலே நமக்கு முன் இருக்கும் தூலமான மெய். உடலை காப்பதே நம் அடிப்படை விசை. அதன் எல்லைகளை நகர்த்தி, அதையே பணைய பொருளாக வைக்கும் போது நாம் நம்பும் விஷயத்தின் முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறோம். அதற்கொரு ஆற்றல் உண்டு என நான் நம்புகிறேன். சிறிய அளவிலாவது மாற்றங்கள் நிகழும். விதிமுறைகள் நாமே வகுத்து கொண்டவை. நமக்குள்ளாக ஏற்படுத்தி கொண்ட பொது ஒப்பந்தம். வாக்களிப்பது நம் கடமை. வாக்குகள் சந்தை சரக்குகளாக மாறும் போது நம் நலத்திற்காக நாம் ஏற்படுத்திய அமைப்புகளையும், விதிகளையும் கேள்விக்கு உள்ளாக்குகிறோம். பொது அமைப்புகள், பொது விதிகள் சுயநல தேவைகளுக்காக அலட்சியப்படுத்தப்படும் தோறும் பலவீனமடையும். காந்தியம் தனிமனிதனை மாற்றத்தின் அலகாக கொள்கிறது. இந்த பயணத்தின் ஊடே வெகு சில தனியர்கள் மாறினாலும் கூட சரிதான். முனை மாணவர்களை மனதார வாழ்த்துகிறேன்.
January 29, 2025
என்ன ஆனந்தம்! - ஜென் கவிதைகள் க. நா. சு மொழியாக்கம்.
க. நா.சு மொழியாக்கம் செய்த 41 ஜென் கவிதைகள், ஜென் பற்றி அவர் எழுதிய ஆங்கில கட்டுரையின் மொழியாக்கம், அவதூதர் நாவலின் தொடக்கத்தில் ஜென் குரு ஹகுயின் பற்றி வரும் ‘அப்படியா’ எனும் பிரபல ஜென்கதை ஆகியவை கொண்ட சிறிய நூலை அழிசி ஸ்ரீனிவாசன் பதிப்பித்துள்ளார். க. நா. சு எழுதிய ஜப்பானிய ஹைக்கூ எனும் சிறிய முன்னுரையும் இடம்பெற்றுள்ளது. கவிதைகளுக்கு நடுவே அழகிய ஓவியங்கள் என அழகிய பதிப்பு.
சிறிய முன்னுரையில் திருக்குறளுடன் ஜென் கவிதைகள் வேறுபடும் புள்ளியை விவரிக்கிறார். திருக்குறள் கடுகை துளைத்து ஏழ்கடலை புகட்டுகிறது. ஜென்னுக்கு ஏழ்கடல் முக்கியமல்ல, கடுகு தான் முக்கியம் என்கிறார். பாரி மொழியாக்கம் செய்துள்ள கட்டுரையில் ஜென் குறித்து சில விளக்கங்களை அளித்துள்ளார். சிந்தனை நீக்கம், சிந்திப்பதை நிறுத்துவது, மறு சிந்தனை ஆகியவை ஜென்னின் மூன்று படிநிலைகள் என கிறிஸ்மஸ் ஹம்பரீஸை மேற்கோள் காட்டுகிறார். “புத்தமனம் என்பதோ மகிழ்ச்சியிலும் முடிவிலா திளைப்பிலும் ஆழ்ந்திருப்பது . இருமைகள் அற்ற அந்நிலையில் மகிழ்ச்சிக்கு எதிரீடாக வலியோ துன்பமோ இருப்பதில்லை. உள்ளுணர்வின் வழியாக இங்குள்ள அனைத்துடனும் ஒருமையை உணர்வதன் மூலம் உங்களுக்கு மரணம் இல்லாமல் ஆகிறது” என்று எழுதுகிறார்.
“சிந்தனைகள் அனைத்தும் ஞான விடுதலையின் பாதையில் தடைகளே . சிந்தனைக்கு மாற்றாக உள்ளுணர்வை கொள்ள வேண்டும்” எனும் ஹம்பரீஸின் கூற்றை அறிவுறுத்துகிறார். நல்ல தயாரிப்புடன் மெனக்கெடலுடன் வெளியிட்டிருக்கும் அழிசி ஸ்ரீனிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். நாம் நம் முன்னோடிகளை அவர்களின் ஓரிரு பங்களிப்பை கொண்டு ஒற்றை பரிமாணம் கொண்டவர்களாக சாராம்சப்படுத்திக் கொள்கிறோம். நெருங்கி அறியும் தோறும் அவர்கள் ஆகிருதி விரிந்தபடி இருக்கிறது. சமயங்களில் நமக்கு அப்போது முக்கியமாக தெரிந்ததை விட இப்போது வேறு தளங்கள் திறந்து கொள்ளும். அவை முக்கியமாக ஆகும். முன்முடிவுகள் அற்று நெருங்கி முழுமையாக அறிய வேண்டும். ஸ்ரீனி க.நா.சுவின் வெவ்வேறு முகங்களை பங்களிப்புகளை நமக்கு அறிமுகப்படுத்திய படி இருக்கிறார்.
தொகுப்பில் எனக்கு பிடித்த சில ஜென் கவிதைகள்
என் வீடு பற்றி எரிந்து போய்விட்டது
வானத்துச் சந்திரனை என்னிடமிருந்து மறைக்க
இப்போது எதுவும் இல்லை
மஸாஹிடே
கோடை சந்திரன் மிக அழகாக இருக்கிறது
நல்ல வேளையாக மேகங்கள் வந்து
என் கழுத்துக்கு சற்று ஓய்வு தருகின்றன
ஸர்யூ
கிழட்டுத்தனம்
வருகிறது என்று
தெரியும்போது
வீட்டுக் கதவைச்
சாத்திவிட்டு
வேலைக்காரனை கொண்டு
“யஜமான் வீட்டிலில்லை”
என்று சொல்லித்
திருப்பியடிக்க
இயலுமானால்
எவ்வளவு
நன்றாக இருக்கும்?
கோகின்ஷு கவிதைத் திரட்டு
பண்டைக் காலத்திலிருந்தே
இவ்வுலகம் இவ்வளவு
சோகம் நிறைந்தா உளது
…அல்லது எனக்காக மட்டுமே
இத்துயர வேஷம்
தரித்துள்ளதா?
கோகின்ஷு கவிதைத் திரட்டு
என்ன ஆனந்தம்!
நூறு நாட்கள்
வியர்த்தமாக
வார்ததைகளை
முறுக்கி எடுத்து
கொட்டி அளந்து
ஓயந்துபோன சமயத்தில்
ஒரு கவிதை
அமைந்துவிட்டது
டச்சிபானா அகேமி
மாரி காலத்துக் கடல் நாரைகள்
-வாழ அவற்றிற்கு வீடில்லை
-சாக அவற்றிற்கு கல்லறை இல்லை
காடோ ஷூஸோன்
January 27, 2025
இரட்டை இயேசு - விஜய ராவணன் - வாசிப்பு
பொள்ளாச்சி எதிர் பதிப்பக கடையில் 26.1.25 அன்று நிகழ்ந்த நூல் அறிமுக கூட்டத்தில் ஆற்றிய உரையின் குறிப்புகளை கொண்டு தொகுத்து எழுதிய கட்டுரை
(அறிமுக கட்டுரை அல்ல. கதைகள் கொஞ்சம் விரிவாக பேசப்பட்டுள்ளன.)
விஜய ராவணனின் இரண்டாம் சிறுகதை தொகுப்பான ‘இரட்டை இயேசு’ மொத்தம் ஆறு நீள் கதைகள் கொண்டது. ‘எதிர்’ வெளியீடாக கடந்த ஆண்டு வெளிவந்தது. இந்நூலுக்கு எழுதிய முன்னுரையில் தமிழில் எழுதப்பட்ட உலக கதைகள் என குறிப்பிடுகிறார் எம். கோபாலகிருஷ்ணன். உள்ளூர் உலகமாளவிய எனும் இருமை மெல்ல பொருளிழந்து வருகிறது என தோன்றியது. உலகளாவிய நிகழ்வுகள் ஏதோ ஒருவகையில் உள்ளூர் வாழ்வில் தாக்கம் செலுத்துகிறது.
விஜய ராவணனின் இந்த தொகுப்பை வாசித்தபோது முதலில் தோன்றியது, அவரது புனைவுகளின் வழி எழுப்பும் கேள்விகள் சிலவற்றை நானும் பகிர்ந்து கொள்கிறேன் என்பதே. தொகுப்பின் முதல் கதை ‘ஆரஞர் உற்றன கண்’ பிரியத்திற்குரியவர்களின் பிரிவு துயரால் மூடாத விழிகள் என்று பொருள். திருக்குறளில் இருந்து எடுத்தாளப்பட்ட சொல்லாட்சி. இப்படியான பழந்தமிழ் தலைப்புகள் கதைகளுக்கு ஒரு வசீகரத்தை அளிக்கின்றன. ‘ஹன்னா’ எனும் ஜெர்மனியை சேர்ந்த முதுகலை கலை கல்லூரி மாணவியின் தன்னிலை கூற்றில் கதை சொல்லப்படுகிறது. இன்னொரு பிரதான பாத்திரமான அப்துல் அரீஃப் குர்தீஷ் மொழி பேசும் ஈராக் நாட்டை சேர்ந்தவன். கதை ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் நிகழ்கிறது. ‘அகாலம்’ ஆப்பிரிக்க அமெரிக்கனை முதன்மை பாத்திரமாக கொண்டது. ‘இரட்டை இயேசுவில்’ ஃபிரெஞ்சு நாட்டவருடன் தமிழ் இளைஞனும் வருகிறார். கதை இந்தோனேசியாவில் நிகழ்கிறது. ‘என்றூழ்’ கதையில் ஆபிரகாமை யூதராக புரிந்துகொள்ள இடமுண்டு. ‘தங்க மீன்கள்’ கதை மாந்தர்கள் இஸ்ரேல் பாலஸ்தீனத்தை சார்ந்தவர்கள். போர்முனையில் கதை நிகழ்கிறது. ‘அகாலம்’ ‘என்றூழ்’ ஆகியவை நிலமற்ற வெளியில் நிகழ்கிறது. வெவ்வேறு களங்கள், வெவ்வேறு கதை சொல்லிகள் (நாடு, இனம், பாலினம்) என எழுதும்போது நம்பகத்தன்மை சார்ந்து சில சவால்கள் எழும். பொதுவாசிப்பு எழுத்தில் இத்தகைய போக்குகளை காண முடியும். தீவிர வெவ்வேறான களங்கள் இருந்தாலும் எழுத்தாளர் தனது ஆதார கேள்வியை தொடர்கிறாரா என்பதை முக்கியமான அளவுகோலாக கொள்வேன். அவ்வகையில் விஜய ராவணன் தனது கதைகளின் ஊடாக வரலாறு, கடந்த காலம் குறித்து விசாரணை செய்கிறார்.
புத்தாண்டுக்கு முந்தைய இரவில் கொண்டாட்டங்களில் பங்கேற்காமல் ‘அவன் மட்டும் ஒரு விடுபட்ட சொல்லை போல் தனித்திருந்த படி ’ புத்தகத்தை வாசிப்பவனாக அகமது அரீஃப் அறிமுகம் ஹன்னாவிற்கு அறிமுகம் ஆகிறான். நினைவுகளில் புதைந்து போன பழைய கருப்பு வெள்ளைப் புகைப்படங்களை சமகால வண்ண ஓவியமாக்குவதில் தான் எனக்கு ஆர்வம் அதிகம் என்கிறாள் ஹன்னா. அரீஃபுக்கு எல்லாமே கருப்பு வெள்ளைதான். இந்த இருமை வழியாக அவர்களின் ஆளுமைகளை கட்டமைக்கிறார். நிறங்கள் உயிர்ப்பான கடந்த காலத்தின் குறியீடாக கொள்ளலாம். ஹன்னா கருப்பு வெள்ளை புகைப்படங்களை கூட நிறமுடையதாக மாற்றுபவள். கடந்தகாலத்தை உயிர்ப்பிப்பவள். வரலாற்றை பெருமிதத்தோடு காண்பவள். அதை மீட்பவள் என்று கூட வாசிக்க இடமுண்டு. நிறங்களற்ற நிகழ்காலத்தில் வாழ்பவன் அரீஃப். நிறங்கள் நிறைந்த கடந்த காலத்திற்கு செல்ல விரும்பாதவன். அவனுக்கு அந்த வாய்ப்பு அகதி என்பதாலேயே மறுக்கப்படுகிறது. வண்ணங்களை நேசிப்பவளால் கருப்பு வெள்ளையை நேசிப்பவனை ஏற்க முடியாது என்கிறான்.
முடிவற்ற ஏணியில் ஏறி வானவில்லில் மோதி அதன் வண்ணங்களை பூசிக்கொண்டு கீழே விழும் சிறுவனை பற்றிய கதையை அரீஃப் ஹன்னாவிற்கு சொல்கிறான். நிறங்களற்ற வானவில் வானில் எஞ்சி இருக்கிறது. அரீஃப் தனது பணியிடத்திற்கு அழைத்து செல்லும் போது தான் இந்த கதையின் அர்த்தம் துலங்குகிறது. நூலகத்து தளங்களை சென்றடையும் ஏணிகள் முடிவற்ற ஏணியாக உருமாறுகிறது. புத்தகங்களின் வண்ணவண்ண அட்டைகள் வானவில்லாகிறது. புற உலகத்தின் வண்ணத்தை போர் பறித்துக்கொண்டது ஆகவே அவனுக்கு வெளியே வண்ணங்கள் இல்லை. ஆனால் புத்தகங்கள் வழி அவன் எல்லா நிறங்களையும் உணர்கிறான்.
விஜய ராவணன் கதைக்குள் சொல்லும் குட்டி நாட்டுப்புற கதைகள் மைய கதையை ஏதோ ஒருவகையில் வலுப்படுத்த உதவுகிறது. இந்த கதைகள் அளிக்கும் அடர்த்தியின் காரணமாக செவ்வியல் சிறுகதை வடிவிலலிருந்து மீறியதாக ஆகிறது. ‘ஆரஞர்’ கதையிலே கில்காமேஷ் குறிப்பும் இடம்பெறுகிறது. கில்காமேஷ்- என்கிடு போல அமெரிக்காவும் சதாமும் மோதி கொள்கிறார்கள் என்றொரு வரியை கொண்டு இந்த கதை சுட்டும் அரசியலை புரிந்து கொள்ளலாம். இதே கில்காமெஷ் கதை மரணத்தின் முன்பான கையறு நிலையை சுட்டுவதாக மாறுகிறது.
ஹன்னா தன்னிடமிருந்து சட்டென வெளிப்பட்ட மேலமை உணர்வுக்காக வருந்துகிறாள். அகதிகளை வெறுக்கும் உள்ளூர் காரர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். அரீப்பின் சொற்கள் தீர்க்கமானது. ‘வரலாற்று அகராதியில் ‘அகதி’ என்ற வார்த்தைக்கு மட்டும் பொருள் எப்போதும் மாறிக்கொன்டே இருக்கும்.’ நிறம் நோக்கும் திறனிழந்த அகதிக்கு ஜெர்மனியும் ஈராக்கும் ஒன்றுதான் என சொல்லும்போது அவன் நாடு திரும்பினாலும் கூட அகதி தான் என பொருள்படுகிறது. அரீஃபின் சிறுவயது நினைவுகள் நிறங்களாலானவை. குண்டு வெடிப்பில் அவன் பார்வை திறனை இழக்கிறான்.அகதிகள் பண்பாட்டை அழிக்க வந்தவர்களாக பார்க்கப்படுகிறார்கள். ஆனால் இந்த அகதிகள் உருவாக்கத்தில் வளர்ந்த நாடுகளின் பங்கையும் பொறுப்பையும் சேர்த்தே பேச வேண்டியிருக்கிறது.
‘அகாலம்’ ஒரு டிஸ்டோபிய கதை. புகைப்படங்களை அரசு தடை செய்கிறது. கடந்தகாலத்தை அழிப்பது பெரும் அழித்தொழிப்பு என்று கருதுபவர்களுக்கும் கடந்த காலம் பெரும் சுமை அதை விட்டொழிக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கும் இடையேயான முரண் தான் கதை. முந்தைய கதையின் பேசு பொருளின் தொடர்ச்சி. சுவாரசியமான விவாதங்களை உருவாக்குகிறார்.
‘நமக்கும் கடந்த காலத்திற்குமான சரடை மெல்ல அறுப்பது.’ என்றால் ‘எல்லோருக்கும் கடந்த காலம் பொக்கிஷம் இல்லை.’ என்கிறான்.
‘வரலாறு தெரியாதபோது மனிதன் கீழ்ப்படியும் இயந்திரம்’ என எச்சரிக்கும் போது ‘வரலாறு என்பதே எழுதப்படும் பேனாவை பொறுத்தது தானே’ என வரலாறை நிராகரிக்கிறான். வரலாற்று நூல்கள் தடைசெய்யப்பட்டதை எதிர்க்கும் போது ‘திறக்கப்படாத எல்லை கதவுகளில் போக்கிடமற்றவர்கள் முட்டி நின்றபோதெல்லாம் உங்கள் வரலாற்று நூல்கள் எந்த உண்மையை பேசிக்கொண்டிருந்தன?’ என கேள்வி கேட்கிறான். ‘இனிமையான கடந்த காலத்திற்காக’ ஏங்கும் போது ‘கோல்டன் டேஸ் என்பவை நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது தானே’ என மறுக்கிறான். ‘தனிமனித சுதந்திரம் அடியோடு ஒழியும்’ என பயம்கொள்ளும்போது ‘நீ சிலாகிக்கும் வரலாறு என்பதே அகதிகளையும் அடிமைகளையும் உற்பத்திசெய்ய உதவும் புனைவுதான்’ என பதில் சொல்கிறான்.
இடையிடையே கதைசொல்லியின் வலிமிகுந்த கடந்தகாலம் நினைவு கூறப்படுகிறது. அம்மா அவனை கைவிட்டு சென்ற நினைவுகள் வருகிறது. புகைப்படங்கள் நாம் மறக்க முயலும் பொழுதுகளின் தடயங்கள் தான் என நம்புவதால் அம்மா குழந்தையாக அவனை தூக்கி வைத்திருக்கும் படத்தில் அவளுடைய பரிதவிப்பு தொந்தரவு செய்கிறது. கடந்தகால படிக்கட்டில் நின்று கொண்டு அவனையும் இறங்கிவர அழைக்கிறாள் என அதை கிழித்து போடுகிறான்.
வன்முறையும் அழித்தொழிப்பும் தான் வரலாறு. போரும் பழிவாங்கலும் தான் மானிட சரித்திரம் என சொல்கிறது. வரலாற்றின் கொடுங்கோன்மை அல்லது பயனின்மையை ஏற்கும் அவன் நினைவுகள் விஷயத்தில் தடுமாறுகிறான். நினைவுகள் தான் நாம். வரலாற்று நூல்கள் ஆய்வு கட்டுரைகள் ஆவணங்கள் சரித்திர புனைவுகள் தடை செய்யப்படுகிறது. அவனுக்கு பிடித்த, நெருக்கமான புத்தகத்தை எரிக்கிறான். ஆனாலும் அதில் புதைத்து வைத்திருந்த புறா இறகை தீயிலிருந்து மீட்கிறான். வரலாற்றிலிருந்து அந்தரங்கமான நினைவை மீட்பது. கூட்டு நினைவுதானே வரலாறு. அப்படியான பிரித்தல் சாத்தியமா என்றொரு கேள்வியும் எழுகிறது. அடுக்ககத்தில் அடிபட்ட புறாவை காண்கிறான். புறா அவனது நினைவுகளுக்கான குறியீடாகிறது. அதை பெட்டிக்குள் வைத்து பராமரிக்கிறான். பறக்க யத்தனிக்கும் சிறகுகள் அட்டைப்பெட்டியின் மூலைகளில் முட்டிமோதுகிறது. வெளியே சென்று விட்டு திரும்பும் போது, துர்நாற்றம் வீசுகிறது, அறை முழுவததும் புறா இறகுகள் பிய்ந்து கிடக்கிறது. பூனை புறாவின் தலையை கொய்து கொன்று விடுகிறது. பூனையை அரசாக பார்க்க முடியும். அதற்கு வரலாறு நினைவு என எந்த பாரபட்சமும் இல்லை. அதனளவில் எல்லாமே அழிக்கப்பட வேண்டியது தான். புகைப்படங்கள் நீக்கப்பட்ட சுவரில் மர பறவைகளை மாட்டுகிறான். ஜன்னல் கம்பிகளின் நிழலில் அவை வானளாவிய கூண்டுக்குள் பறப்பதாக தோன்றுகிறது. பறக்கும் பறவைகள் கடந்த காலத்தின் எடையில்லாத நிகழ்த்தருணத்தின் குறியீடு. சென்ற கதையை போலவே கடந்த காலத்திற்கு செல்ல இவனும் விரும்பவில்லை. அரவணைக்கும் மடி இருந்திருந்தால் அவனுக்கும் கடந்த காலம் இனித்திருக்கும். இந்த கதையின் பேசு பொருளையொட்டி இரண்டு கதைகள் நினைவுக்கு வந்தன. பெருந்தேவியின் ‘ஒருகாலத்தில் குறுங்கதை’ நிகழ்காலத்திலிருந்து தப்பிக்க கடந்த காலத்திற்குள் புதைத்துக்கொண்டு அழியும் சித்திரத்தை அளிப்பது. இன்னொரு கதை சித்துராஜ் பொன்ராஜின் ‘கயிற்றரவு.’ நினைவுகளின் தொகுப்பு தான் வரலாறா? ஆம் எனில் நினைவுகளை மாற்றினால் வரலாறு மாறுமா? என்றொரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது.
மூன்றாவது கதை ‘இரட்டை இயேசு.’ கொரோனா காலத்து கதை. இந்த கதையிலும் ஒரு தொன்ம கதை சொல்லப்படுகிறது. விஜய ராவணனின் பெரும்பாலான கதை நிகழ்வதில்லை. சொல்லப்படுகிறது. இது அதன் எல்லையாகவும் தனித்துவமாகவும் கொள்ளலாம். காலன் அருகமர்ந்து இருப்பது போல கனவு காண்கிறான்.
கதைசொல்லி பத்தாவது படிக்கும்போது தற்கொலை முயற்சி செய்தவன் ஆனால் இப்போது மரணத்தை அஞ்சுகிறான். ‘சில நேரங்களில் மரண பயம்தான் வாழ வைக்கிறது’ என்றுணர்கிறான். ‘மரணத்தின் முகம் எப்படி இருக்கும் என்று பார்த்துவிட வேண்டியதுதான் என்று தொடக்கத்தில் துணிவுடன் சொல்லும் ஐரோப்பியர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். மனைவி பிலிப்பைன்ஸ் நாட்டவர், வியட்நாமுக்கு விசா உள்ளது. ஆனால் இத்தனை நாடுகள் இருந்தும் அனாதையாக உணர்கிறார். தன் நாட்டுக்கே திரும்பும் முடிவுக்கு வருகிறார்.
ஐரோப்பியர் சொல்லும் கதையில் சவப்பெட்டி செய்பவன் தனது வாழ்வாதாரம் பெருக வேண்டும் என கர்த்தரிடம் வேண்டுகிறான். காலரா கொத்துக் கொத்தாக உயிர்பலி கொள்ளும் போது அவனது பிரார்த்தனையின் பலனாகத்தான் அது நிகழ்வதாக எண்ணி கொள்கிறான். அவனது குடும்பமே இறந்து போனாலும் நல்லடக்கத்திற்காக சவ பெட்டிகளை செய்து கொண்டே இருந்தான். இனியும் சவப்பெட்டிகளை செய்யக்கூடாது என தீர்மானிக்கிறான். தான் செய்வதாலேயே சாகிறார்கள் என எண்ணுகிறான். தனக்கான சவப்பெட்டியை மட்டும் ரகசியமாக செய்து கொண்டான். சவப்பெட்டி இல்லாமல் நல்லடக்கம் நிகழவில்லை. அரசின் ஆணையை மீறியதற்காக மரண தண்டனை வழங்கப்படுகிறது. தனக்காக தானே செய்த சவப்பெட்டியை முதுகில் சுமந்தபடி நடந்து வருகிறான். ஊரின் ஒட்டுமொத்த பாவத்தையும் அவனே சுமந்தான். இயேசுவை போல. சிலுவையில் தொங்கும் இயேசுவின் உருவத்திற்கு பின்பக்கம் அறையப்படுகிறான். சிலுவை எடை தாளாமல் விழவிருந்த நிலையில், மக்கள் சாபத்தை அஞ்சும்போது, சிலுவையிலிருந்து தேவகுமாரன் உயிர்த்து எழுகிறார். ஊரை காக்கிறார். சிலுவையில் ஒருவர் இருந்தால் போதும் என்று எண்ணினாரா? ஊரை காத்த தேவகுமாரன் அவனை காக்கவில்லை. மனிதன் ஒரு பக்கமும் மீட்பர் மறுபக்கமும் எனும் சிந்தனையே வினோதமாக இருந்தது. இந்த படிமத்தை என்னால் துல்லியமாக கதை தருணத்தில் பொருத்தி பார்க்க இயலவில்லை. இந்த பூடகமே வசீகரமாக உள்ளது. மனிதன் தன்னை பற்றி மிகையாக மதிப்பிட்டு கொள்கிறான். இயற்கையின் திட்டங்களுக்கு அவன் பொறுப்பேற்க முடியுமா? மனித ரத்தம் தேவனை எழுப்புமா? கிறிஸ்தவ இறையியலில் போலி கிறிஸ்துவை இகழ்ச்சியுடன் காண்கிறது. அவனுக்கு சிலுவை தான் தண்டனை. ஒருவகையில் அவன் சிலுவையில் ஏறியதால் தான் கிறிஸ்து உயிர்த்து எழுந்து ஊரை காக்கிறார். தொற்றுநோய் காலத்து களச்செயல்பாட்டினர், முன்கள பணியாளர்கள்- குறிப்பாக மருத்துவர்களை இன்னொரு இயேசுவாக கற்பனை செய்து கொண்டேன். இயேசுவே காப்பவரும் அழிப்பவரும். அழிவுக்கு பின்னே தானே காக்க முடியும்.
‘என்றூழ்’ ஒரு அறிவியல் புனைவு. சூரியனில் செயற்கை நுண்ணுணர்வு ரோபோவை கொண்டு செய்ய முற்படும் ஆய்வு தோல்வி அடைகிறது. சாரா எனும் எட்டாம் தலைமுறை ரோபோவை ஆபிரகாம் வாங்குகிறார். வருங்காலத்தில் நிகழும் கதை என்பதால் விரிவாக தொழில்நுட்பங்களை விவரிக்கிறார். உலகத்தை கட்டமைப்பதில் புதிதாக ஒன்றும் இல்லை. பறக்கும் கார்கள் போன்ற வழக்கமான இயந்திரங்கள் தான். அலுவலகத்தில் மூவர் மட்டுமே மனிதர்கள். பிற அனைவரும் ரோபோக்கள். செயற்கை நுண்ணுணர்வு நம்முள் எழுப்பும் ஆதாரமான கேள்வி என்பது மனிதனாக இருப்பது என்றால் என்பதுதான். அண்மையில் மாலனின் ‘வித்துவான்’ நம்பி கிருஷ்ணனின் ‘இறைவர்க்கோர் பச்சிலை’ ஆகிய கதைகளை முன்வைத்து ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். கதையில் விஜய ராவணன் எழுப்பும் வரையறைகளை நோக்கலாம். ரோபோக்களிடம் பொய் சொல்ல முடியாது. ரசனை உணர்வு மனிதர்களுக்கானது மட்டுமா? சாரா ரசனை உணர்வை வெளிப்படுத்தும் போது அதிர்கிறார். மனிதர்களை போல இயந்திரத்திற்கு வாழும் இச்சை உள்ளதா? சாரா தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயல்கிறாள். குடும்பமும், குழந்தைகளும் கூட அதன் பொருட்டு தான் தேவைப்படுகிறது. இன்னொரு கோணத்தில் இருந்து நோக்குவதாக இருந்தால், சூரியனை அடையும் திட்டம் தோல்வி அடைந்ததற்காக வெறுக்க படுகிறாள். உலகை மாற்றும் இயந்திர- மனித கூட்டு குழந்தையை உருவாக்க விரும்புகிறாள் என்று பொருள் கொள்ளலாம். இயந்திரங்கள் ஒன்று போலவே, தனித்துவம் என்று ஏதேனும் உண்டா? சாரா தனித்துவத்தை வெளிப்படுத்துகிறாள். உயிர் நேசம், பாசம், பந்தம் போன்றவை மனிதர்களின் தனித்தன்மையா? சாராவும் ஏங்குகிறாள்.
கதையில் அண்டார்டிகா பனிக்கட்டிகளை பாலைவன தேசங்களுக்கு திருப்புவது பற்றிய ஒரு சிறிய பகுதி வருகிறது. இயற்கையின் போக்கில் விடுவதே சரி என ஆபிரகாம் சொல்கிறான். ஆனால் மனித இனத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு இயற்கை விரோதமாக இருந்தாலும் இவை காலத்தின் தேவை என்று பதில் உரைக்கிறது. சாராவின் பிள்ளை பேறு சார்ந்த விழைவையும் ஆபிரகாமின் தயக்கத்தையும் இந்த விவாதத்தின் தொடர்ச்சியாக காண வேண்டும். ‘உன்னையும் என்னையும் போல அவளும் இயற்கையின் அங்கம்- உயிராக அங்கீகரித்தல் எது மனிதன்? எது இயந்திரம்? இயற்கைக்கு இருவருமே பிள்ளைகளா? இயற்கைத்தாய் ஒரு முலையில் மனிதனுக்கும் இன்னொரு முலையில் இயந்திரத்துக்கு தாய்ப்பால் ஊட்டுகிறாளா? அப்படியானால் இங்கு எல்லா நியதிகளும் இருவருக்கும் பொதுதானே.’ என்று யோசிக்கிறான். செயற்கை நுண்ணுணர்வு சார்ந்து நான் வாசித்த இறைவர்க்கோர் பச்சிலை தொடங்கி டெட் சியாங்கின் கதைகள் வரை ஏறத்தாழ இதே முடிவை நோக்கி வருவதை காண்கிறேன். விலக்கி நோக்காமல் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக நோக்குவது.
அறிவியல் புனைவில் மனிதன் எதிர் இயற்கை எனும் இருமை மிக முக்கியமான பேசுபொருள். இந்த இருமையே கூட கொஞ்சம் அபத்தம் தான். மனிதனை இயற்கைக்கு எதிராக நிறுத்த முடியுமா என்ன? அவனும் அதன் ஒரு பகுதிதான். சமயங்களில் அவனது விழைவுகளுக்கு ஒத்துழைப்பு நல்குகிறது சமயங்களில் நல்குவதில்லை. நவீன இலக்கியத்தின் முதல் அறிவியல் புனைவாக கருதப்படும் மேரி ஷெல்லியின் ‘பிரான்காய்ன்ஸ்ட்டின்’ தொடங்கி இயற்கை- மனிதன் முரண் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அறிவியல் புனைவுகள் அறிவியலின் ஆபத்துகளையே தொடர்ந்து பேசிக்கொண்டு உள்ளது. மனிதனின் சுயேச்சையின் மீதான ஐயம் பைபிளின் தடுக்கப்பட்ட கனியை உண்பதிலிருந்தே தொடங்குகிறது. எதிர் அறிவியல் புனைவு அத்தனையிலும் இந்த உணர்வு செயல்படுகிறது. இந்த கதையிலும் ஒரு தொன்ம கதை சொல்லப்படுகிறது. பூலோக சக்கரவர்த்தியின் மகளை சூரியன்களை அழிக்கும்படி கடவுள் பணிக்கிறார். ஒரேயொரு சூரியனை மட்டும் அதன் பிரம்மாண்டத்தில் மயங்கி வீழ்த்தாமல் விடுகிறாள். கடவுள் அவளுக்கு கன்னி தன்மையை இழக்காமல் பிள்ளை பெற்றுக்கொள்ளும் வரத்தை அளிக்கிறார். அவள் சிருஷ்டித்தவை தான் இந்த கணக்கற்ற நட்சத்திரங்கள். சாராவின் கதையோடு இந்த தொன்ம கதை ஊடாடுகிறது. சாராவின் பிள்ளைப்பேறு கோரிக்கையை ஏற்க மறுக்கிறான். இந்த கதையின் முடிவு அபாரமானது. அவனுடைய துணையின்றியே பிள்ளைப்பேறுக்கான வழியை கண்டடைந்த்துவிட்டாள் என்பதால் அவள் மானுட பெண் தோற்றத்தில் இருக்க வேண்டிய தேவையில்லை என்று உணர்ந்து உலோக நிர்வாணத்தில் வயிற்றை தடவியபடி சூரிய ஒளியில் கிடக்கிறாள். அல்லது குந்தியை போல் நேராக இயற்கையின் வடிவமான சூரியனிடம் தனக்கு பிள்ளை வரம் வேண்டுகிறாள் என்றும் வாசிக்க முடியும்.
‘இன்னொருவன்’ முட்டை மனிதனை பற்றி சொல்ல தொடங்குகிறது. வீடு தேடி அலைபவனுக்கு மிக குறைந்த வாடகையில் நகரின் மையத்தில் வீடு கிடைக்கிறது. அந்த வீட்டை சுற்றி மர்மம் கட்டமைக்கப்படுகிறது. நட்சத்திரம் கருந்துளைக்குள் காணாமல் போவது போல, முட்டைக்குள் விழித்து எழுகிறான். வேத தொன்மம் ‘ஹிரண்ய கர்ப்பம்’ என சொல்கிறது. பிரபஞ்சம் ஒரு முட்டையிலிருந்து புறப்பட்டதாக. பூட்டப்படாத கூண்டிற்குள் அடைப்பட்டு கிடக்கிறான். முயன்றால் திறந்து வெளியேறிவிட முடியும். தன்விருப்பின் பேரில் மனிதன் கூண்டுக்குள் தன்னை அடைத்து கொள்கிறான். உருவகங்கள் கொண்ட கதைகள். கண்ணாடிக்குள் நுழைந்து கண்ணாடிகளால் ஆனா உலகிற்குள் நுழைகிறான். கண்ணாடி பேழைக்குள் வெவ்வேறு ‘நான்’களோடு உரையாடுகிறான். சிதறிய ‘நான்’கள் சேர்ந்து வெடிக்கிறது. விழித்து எழும்போது முழுமையாக உணர்கிறான். பேழைக்குள் மட்டும் சுதந்திரமான குரலை கேட்கிறான். கடிகார முட்களுக்கு அஞ்சி ஓடவேண்டாம் என்பதே போதுமானதாக உள்ளது. அங்கே எவருடைய பெயரும் தெரிந்துகொள்ளவில்லை. அடையாளமற்ற இருப்பு. அங்கே தூவும் அழிவதும் இல்லை. எனினும் அந்த வாழ்க்கையும் அலுக்கிறது. அதையும் சிறையாக உணர்கிறான். என்றூழ் கதையில் சாரா உதிர்க்கும் ஒரு வசனம் தான் இந்த கதையின் சாரம் என்று புரிந்து கொள்கிறேன். ‘மனிதன் ஒரு விசித்திரமான சமூக பிராணி, குழுவாய் இருக்கும்போது தனிமையை விரும்புவான். தனித்து விடப்பட்டதும் துணைக்காக ஏங்குவான்.’ அன்றாடம் அலுப்பாக இருக்கிறது. தப்பிக்க மனம் ஏங்குகிறது. ஓய்வும் தனிமையும் அலுக்கிறது. அன்றாடத்திற்கு மனம் ஏங்குகிறது. இந்த சிக்கலை பேசுவதாக புரிந்து கொண்டேன்.
தொகுப்பின் இறுதி கதை ‘தங்க மீன்’ போர் களத்தில் எதிரெதிர் தரப்பில் இருக்கும் ராணுவ வீரனும் போராளியும் உரையாடுவது தான் கதை. கூறிய விதம், பேசு பொருள் சார்ந்து சற்று பழகிய தன்மை இக்கதைக்கு. தங்க மீன்களை பிரசவிக்கும் தனியொருத்தி. அவளது மர்மமான வசீகரம், இவையெல்லாம் மெலீனா திரைப்படத்தை எனக்கு நினைவூட்டியது. பதின்ம வயதில் அக்கா மீது ஏற்படும் இனம் புரியாத ஈர்ப்பு என்பதும் தமிழில் நிறைய எழுதப்பட்ட களம் தான். எனினும் இந்த எல்லைகளை தாண்டி தங்க மீன் என்பதை வலுவான படிமமாக வளர்த்தெடுத்துள்ளார். போர் களத்தில் அழகுக்கும் ரசனைக்கும் என்ன வேலை? கலை தான் போருக்கு எதிராக இருக்க முடியும் என்று எண்ணி கொண்டேன். ‘என்றூழ்’ கதையும் ஏறத்தாழ இதே தரிசனத்தை கொண்டுள்ளது. கலை ரசனை அளிக்கும் கூருணர்வு மீதான நன்னம்பிக்கை. சண்டை மூளாத சிறு நிலம், அவளின் படத்துக்கு பத்து மீன் கடையாக தான் இருக்கும். வண்ண மீன்கள் சாந்தமான சூழலை உருவாக்க. அவளது மீன் எதுவும் போரில் இறப்பதில்லை. இரண்டு நியாயங்கள் மோதும் போது புனைவு எழுத்தாளருக்கான வேலை தொடங்குகிறது. போராளியும் ராணுவ வீரனும் ஒரே பாலியத்தின் சுனையில் நீரருந்த தான் முயல்கிறார்கள். தங்களது கடந்தகாலத்தை மீட்டு எடுக்க போராடுகிறார்கள். ஒருவகையில் கடந்த காலத்தை மீட்டெடுப்பதன் வன்முறையை விஜய ராவணன் கதைகள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறது. போராளியின் தங்க மீன்கள் சிறுவனாக இருந்த ராணுவ வீரனிடம் சென்று சேரும்போது கூழாங்கற்களை நிரப்ப முடியாமல் தோட்டா ரவைகளை கொண்டு மீன்தொட்டியை அலங்கரிக்க தொடங்குகிறான் என்பதாலா என்னை வெகுவாக தொந்தரவு செய்தது. போராளியும் ராணுவ வீரனும் ஒரே நிறுவனத்தின் துப்பாக்கியை கொண்டு எதிரெதிர் நின்று போர் புரிகிறார்கள்.
தமிழுக்கு அந்நியமான புதிய உலகை உயிர்ப்புடன் சித்தரித்த வகையில் விஜய ராவணன் முக்கியமான எழுத்தாளராக ஆகிறார். உலகளாவிய அரசியல் விஷயங்களை கருப்பொருளாக கொள்ளும்போது பிரசாரம் ஏதும் இல்லாமல் சரியான செல்திசையில் கதைகளை அவரால் கொண்டு செல்ல முடிகிறது.
Suneel Krishnan's Blog
- Suneel Krishnan's profile
- 4 followers


