Suneel Krishnan's Blog, page 5
January 16, 2023
காந்தி சாதியவாதியா?
காலச்சுவடு ஜனவரி காந்தி சிறப்பிதழில் வெளியான கட்டுரை.
மகாத்மா விஷயத்தில் அவருக்கு எதிராக அவரது மேற்கோள்களையே பயன்படுத்துவதென்பது கடினமானதல்ல- ஜோசெப் லெபீல்ட்

2017ஆம் ஆண்டில் அம்பேத்கரின் நூலுக்கு அருந்ததி ராய் எழுதிய முன்னுரை காந்தியை இனவாதியாகவும் சாதியவாதியாகவும் சித்தரித்திருந்தது. அருந்ததி ராய் தனது கூற்றுக்கு ஆதாரமாக காந்தியின் மேற்கோள்களையே பயன்படுத்தியிருந்தார். ராய் எப்படி மேற்கோள்களைத் திரித்துத் தவறாகப் பயன்படுத்தினார் என்பது அப்போது பெரிய விவாதமாக ஆனது. அதே ஆண்டு காந்தி சாதியவாதியா என்பதை ஆய்வு நோக்கில் விவாதிக்கும் இன்னோரு நூல் வெளியானது. நிஷிகாந்த் கோல்கே எழுதிய Gandhi Against Caste காந்தியின் மீது அருந்ததி ராய் போன்றோர் முன்வைக்கும் சாதியவாதி எனும் விமர்சனத்துக்குத் தரவுகளுடன் பதில் அளிக்கிறது. நிஷிகாந்த் கோல்கே சென்னை ஐ.ஐ.டி.யில் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்தவர். வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். 2014ஆம் ஆண்டு சமர்ப்பித்த முனைவர் பட்ட ஆய்வின் செறிவாக்கப்பட்ட வடிவம்தான் இந்நூல்.
ராஜ்மோகன் காந்தியின் முன்னுரையும் ஐந்து அத்தியாயங்களும் அருந்ததி ராய்க்கு மறுப்பாக கோல்கே எழுதிய கட்டுரையும் கொண்டது இந்நூல். முக்கியமாக 'பாபா சாகே’புக்கு இந்நூல் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோல்கே இந்நூலில் இரண்டு கேள்விகளை எதிர்கொள்கிறார். காந்தி சாதியவாதியா என்பது முதல் கேள்வி. புத்தகத்தின் பெரும்பகுதி இக்கேள்வியை விவாதிக்கிறது. சாதியத்துக்கு எதிரான காந்தியின் வழிமுறையின் பங்களிப்பும் இன்றைய பொருத்தப்பாடும் என்ன? இது இரண்டாவது கேள்வி. காந்தியின் சமகாலத்து இயக்கங்களான அம்பேத்கரின் இயக்கத்தையும் ஆர்ய சமாஜத்தின் சுத்தி இயக்கத்தையும் ஒப்பிட்டு காந்திய வழிமுறையின் நிறைகுறைகளை விவாதிக்கிறார்.

சாதி: காந்தியின் நிலைப்பாடு என்னும் புதிர்
ஐந்து அத்தியாயங்களில் முதல் நான்கு அத்தியாயங்கள் முதல் கேள்வியையே எதிர்கொள்கின்றன. கோல்கேவிற்கு எதையும் எவரையும் நியாயப்படுத்தியே ஆக வேண்டும் எனும் நிர்பந்தமில்லை. எடை எதையும் சுமக்க வேண்டியதில்லை என்பதாலேயே அவரால் பிறர் கவனிக்கத் தவறிய கோணங்களைக் காண முடிகிறது. கோல்கே காந்தியின் மேற்கோள்களை மட்டும் கொண்டு ஒரு முடிவுக்கு வரவில்லை. காந்தியின் வாழ்க்கையோடும் அதன் நிகழ்வுகளோடும் பொருத்திப்பார்க்கிறார். மேலும் வெவ்வேறு காலகட்டத்தில் காந்தியின் நிலைப்பாடுகளுக்கு இடையேயான உறவை, தொடர்ச்சியைத் தொட்டுக்காட்டுகிறார். காந்தியின் சொற்களில் இருந்த முரண்பாடுகள் என்பது பலரும் கருதுவதுபோல கபடமான ஏமாற்று வேலையோ, படிப்படியான பரிணாம மாற்றமோ இல்லை மாறாக அவை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கிய நீண்டகாலச் செயல்திட்டத்தின் படிநிலைகள் என்பதே கோல்கே இந்த நூலில் முன்வைக்கும் கோட்பாடு.
கோல்கே காந்தியின் 'உத்தி' என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார். சாதி வேரோடு ஓழிய வேண்டும் என்பதே காந்தியின் இலக்கு. ஹிந்த் ஸ்வராஜ் (இந்து சுயாட்சி) எழுதிய 1909ஆம் ஆண்டே அவர் அந்த இலக்கைத் தீர்மானித்துவிட்டார். இந்தியாவிற்கு வந்த பின் அவர் தொடர்ந்து அந்த இலக்கை நோக்கி மெல்ல மெல்லப் பயணித்தார். மேம்போக்காக வாசிக்கும்போது காந்தியின் சொற்களுக்கு இடையே முரண்பாடுள்ளதாகத் தோன்றும் ஆனால் காந்தி தனது சொற்கள் குறித்து அப்படி எண்ணியவர் இல்லை. அவரது 'இந்து சுயாட்சி’யைக் கோட்பாட்டு நூலாக, கனவுப் புத்தகமாக விளக்கிக்கொள்ள இயலும். அதன் சில பகுதிகள் சார்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டபோது காந்தி அதிலிருந்து தான் எந்த வகையிலும் பிறழவில்லை என்றார்.
காந்திய அறிஞர்கள் பலருக்கு அவர் ஒரு ஆன்மிகத் தலைவர். அவரது மகத்தான போராட்டங்களைவிடப் புனித வாழ்வின் மீதுதான் அவர்களுக்கு ஈடுபாடு என்கிறார் கோல்கே. உத்தி என்றோ அரசியல் மதியூகி என்றோ சொல்வது அவரது இடத்தைக் குறைத்துக்காட்டுவதாகப் பொருள் கொள்ளப்படக்கூடும். உமாஷங்கர் ஜோஷி எனும் கவிஞருக்கும் காந்தியின் வாரிசுகளில் ஒருவரான மெய்யியலாளர் ராமச்சந்திர காந்திக்கும் இடையேயான உரையாடலை ஆஷிஷ் நந்தி பதிவுசெய்கிறார். மோகன்தாஸ் காந்தி எத்தகைய ஆன்மீகவாதி என ராமச்சந்திர காந்தி அடுக்கிக்கொண்டே போகும்போது குறுக்கிடும் உமாஷங்கர் ஜோஷி "காந்தி ஆன்மீகவாதிதான். ஆனால் இந்தியா எல்லாக் காலகட்டங்களிலும் ஆயிரக்கணக்கான ஆன்மீகவாதிகளைக் கண்டுள்ளது. காந்தி அரசியல்வாதியும்கூட. அதனால்தான் அவர் மீண்டும் மீண்டும் நாடப்படுகிறார்" என்றார்.
காந்தி தன்னை அடிக்கடி தளபதி, போர் வீரர் என அடையாளப்படுத்திக்கொள்கிறார். 'இந்து சுயாட்சி’ கோட்பாட்டு நூலென்றால் சவுரி சவுராவிற்குப் பின்னர் ஒத்துழையாமைப் போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்ட சூழலில், சிறையிலிருந்தபோது எழுதிய 'தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம்' நூலை நடைமுறைக் கையேடு எனச் சொல்லலாம். படைத் தளபதி தனது உத்திகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டது இது. அரசியல் தளத்தில் 'வன்முறையற்ற போர்' எனும் தொழில்நுட்ப உத்தியை வளர்த்தெடுத்த முன்னோடி ஆளுமையாக காந்தியை காண இயலும் என வாதிடுகிறார் ஜீன் ஷார்ப். சமூகத் தளத்தில் இதேபோன்ற உத்திகளை காந்தி கடைப்பிடித்தார் என கோல்கே காட்டுகிறார். உத்தி என்பதை எதிர்மறையாகக் காண வேண்டியதில்லை. நேர்மையற்றதாகவோ பொய்யானதாகவோ கருத வேண்டியதில்லை. கோல்கே பவுத்தத்தில் நடைமுறையிலிருக்கும் 'திறமைவாய்ந்த வழிமுறை' எனும் பதத்தின் பின்புலத்தில் 'உத்தி' எனும் பயன்பாட்டை விளக்குகிறார். அனுபவத்தைக் கொண்டு சத்தியத்தைக் காணக்கூடிய தயாரிப்பு இல்லாதவருக்கு சத்தியத்தை அறிவிக்கக் கூடாது என்பதை புத்தர் உணர்ந்தார். அந்த திசை நோக்கி 'திறமைவாய்ந்த வழிமுறை'யின் துணையுடன் நகர்த்திச்செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். இது முழுக்க முழுக்க உண்மையான வழிமுறையா என்றால் இல்லைதான். ஆனால் கருணையால் வழிநடத்தப்படும் செயல் துயரத்திலிருந்து விடுவிப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கும் என்கிறார். இதையே காந்தியின் 'உத்தி’க்கான அடிப்படையாகக் கொள்கிறார். 1915-1920, 1920-27, 1927-1932, 1932-1945, 1945-மரணம்வரை என காந்தி இந்தியாவிற்கு வந்த பின்பான காலத்தை ஐந்து காலகட்டங்களாகப் பிரிக்கிறார். காந்தி எல்லோரும் மறுப்பின்றி ஒப்புக்கொள்ளும் புள்ளியிலிருந்து தொடங்கிப் படிப்படியாகத் தனது பிடியை இறுக்கிக்கொண்டே செல்வதைக் காட்டுகிறார்.
இந்தக் கோட்பாட்டுக்கான தரவுகளை அளிக்கும் முன்னர் காந்தியின் நிலைப்பாடுகள் குறித்த வெவ்வேறு தரப்புகளை எடுத்துக்கொண்டு அவற்றைத் தர்க்கப்பூர்வமாக நிராகரிக்கிறார். காந்தி கனவுகண்ட லட்சிய சமூகம் எத்தகையது? அதன் அடித்தளம் எத்தகையது? பலரும் விமர்சித்ததுபோல சாதிய / வர்ண சமூகம்தானா?
சாதி, வர்ணம், காந்தி: முன்று விதமான பார்வைகள்
சாதி, வர்ணம் சார்ந்த காந்தியின் எழுத்துக்களைப் பொறுத்தவரை மூன்று விதமான பார்வைகளை அறிஞர்கள் முன்வைக்கிறார்கள். ராஜ்மோகன் காந்தி காந்தியின் வர்ணாசிரமக் கருத்துக்களை 'கசப்பு மாத்திரை எனும் சீர்திருத்தத்தை மக்கள் விழுங்குவதற்காக மேலோட்டமாகச் சர்க்கரை தடவியது போலத்தான் காண வேண்டும்' என்கிறார். ஏதோ ஒரு அளவில் காந்தியின் இக்கருத்துக்கள் அவருடைய உத்தியின் பகுதி எனும் பார்வையை இத்தரப்பினர் முன்வைக்கின்றனர். இரண்டாவது தரப்பு காந்தியின் கருத்துக்கள் காலப்போக்கில் மாற்றமடைந்தன என கருதுகிறது. காஞ்சா இல்லய்யா போன்றோர் காந்தியை வர்ணாசிரமவாதியாகவும் சாதியவாதியாகவும் கண்டனர். இம்மூன்று தரப்புகளுமே தத்தமது தரப்பிற்கு ஆதாரமாக காந்தியின் சொற்களையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. அவருடைய நடத்தையைக் கணக்கில் கொள்ளவில்லை என்பதே கோல்கேவின் வாதம். தீண்டாமை, சேர்ந்து உண்ணுதல், சாதி கடந்த திருமணம், புனித நூல்கள் தொடர்பான அணுகுமுறை உட்படப் பல்வேறு அளவுகோல்களை காந்தியின் தனிவாழ்வின் மீது பொருத்திக் காட்டுகிறார்.
காந்தி தனிவாழ்வில் சாதியை எப்படி அணுகினார்? அக்காலகட்டத்தில் சாதி இந்துக்களின் பொதுவான இயல்புகள் என நான்கு கூறுகளை கோரா, மார்க் லின்லே ஆகியோரை மேற்கோள்காட்டிப் பட்டியலிடுகிறார் கோல்கே. 1. தீண்டாமை 2. தாழ்ந்த சாதியினருடன் சேர்ந்து உணவு உண்ணாமை. 3. சுய சாதித் திருமணம். 4. பரம்பரைத் தொழிலைப் பின்பற்றுதல். இவற்றில் காந்தி பால்ய காலத்தில் தன் சொந்த சாதியில் திருமணம் செய்துகொண்டார் என்பது மட்டுமே பொருந்தும். பிற எதுவுமே அவருக்குப் பொருந்தாது. தனது மகன்களுக்கு வேறு சாதிகளிலும் வர்ணங்களிலும் திருமணம் செய்வித்தார். தோட்டிக்குடியில் பிறந்த வளர்ப்பு மகளான லக்ஷ்மிக்கு மாருதி எனும் தென்னிந்திய பிராமணருடன் மணமுடித்துவைத்தார். பொதுவாகத் தாய் தந்தை பேச்சைத் தட்டாதவர் காந்தி. அவரது வீட்டிற்கு வந்த ஊக்கா எனும் தோட்டியைத் தற்செயலாகத் தீண்டினால்கூட சுத்தச் சடங்குகளைப் பின்பற்ற வேண்டும் என வீட்டில் நிர்பந்தப்படுத்தும்போதெல்லாம் முரண்டுபிடித்ததைப் பற்றிக் குறிப்பிடுகிறார். தீண்டாமைக்கு எதிரான முதல் விதை அப்போது விதைக்கப்பட்டது என பியாரிலால் இந்நிகழ்வை அடையாளப்படுத்துகிறார்.
காந்திக்கு இளமையிலேயே ஷேக் மேதாப் எனும் இஸ்லாமிய நண்பரின் அறிமுகம் கிடைக்கிறது. அவர் வழியாகவே காந்திக்குப் புலால் பழக்கமாகிறது. இங்கிலாந்திலும் தென்னாப்பிரிக்காவிலும் ஐரோப்பியர்களுடன் சேர்ந்து இயல்பாக வாழ்ந்தார். உணவு உண்டார். தாவர உணவைத் தனது சுய தேர்வாக லண்டனில் தேர்ந்தார். கடல் கடந்து செல்லக் கூடாது எனும் சாதியாச்சாரத்தை மீறினார். சாதியின் பாரம்பரியத் தொழிலைத் தொடரவில்லை. தென்னாப்பிரிக்காவில் இருக்கும்போதே சாதியை முழுமையாகவும் வெளிப்படையாகவும் நிராகரித்தவர் காந்தி. அவரமைத்த ஆசிரமங்கள் அனைத்திலும் பொதுச் சமையலறையை வலியுறுத்தி நடைமுறைப்படுத்தினார். சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் தோட்டி வேலை பகிர்ந்தளிக்கப்பட்டது. காங்கிரஸ் கூட்டத்தில் மதராஸ் மாகாணத்து பிராமணர்களுக்கு தனி சமையலறை இருந்ததைப் பற்றி ஆற்றாமையுடன் பதிவு செய்துள்ளார். உலக சமூகம் நோக்கிய கனவைக் கொண்டிருந்த ரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதனத்தில் சமையலறையில் எவரையும் அனுமதிக்காத பிராமணர்கள் சமைத்தபோது தன்னார்வலர்களைக் கொண்டு சமைக்கும் மாற்றுத் திட்டத்தை முன்வைத்தார். காந்தி அங்கிருந்து அகன்ற பிறகு குறுகிய காலம் மட்டுமே அது நீடித்தது என்பது வேறு விஷயம்.
சாதி, மத இனப் பாகுபாடின்றிக் கூடி வாழும் முன்மாதிரி சமூகத்தைத் தனது ஆசிரமங்களில் உருவாக்கினார் காந்தி. வின்சென்ட் லாரன்ஸ் எனும் தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்த தனது குமாஸ்தாவின் மல ஜாடியைச் சுத்தம் செய்ய கஸ்தூர்பா மறுத்தபோது அவருடன் சண்டையிட்டதைத் தன்னுடைய சுயசரிதையான ‘சத்திய சோதனை’யில் பதிவுசெய்திருக்கிறார். காந்தியின் ஆசிரமங்களில் பொதுவாக இந்துக்கள் கடைப்பிடிக்கும் மாதவிடாய் காலத் தீண்டாமையைக்கூடக் கடைபிடித்ததில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார் கோல்கே. இவற்றையும் இன்னபிற நிகழ்வுகளையும் கொண்டு காந்தி தனி வாழ்வில் எவ்விதத்திலும் பாகுபாடைப் பேணவில்லை என்பதைக் காட்டுகிறார்.
சாதியம் குறித்த கதையாடலின் உருமாற்றம்
இந்தியாவிற்கு வந்த பிறகு சாதியும் வர்ணமும் நன்மை பயக்கும் அமைப்புகள் எனப் பேசத் தொடங்குகிறார். இந்தியா வந்த பிறகும்கூடத் தனிவாழ்வில் காந்தி எந்தத் தருணத்திலும் சாதியைப் பின்பற்றியதில்லை எனும்போது வர்ணாசிரமத்தையும் சாதிப் பிரிவுகளையும் ஆதரித்துப் பேச வேண்டியது ஏன்? காந்தி இப்படிக் கூறியதற்கு என்ன பின்புலம் இருக்க முடியும் என ஆராய்கிறார் கோல்கே. 'நான் எழுதியவையோ பேசியவையோ அல்ல, என்ன செய்திருக்கிறேனோ அதுவே காலம் கடந்து நிற்கும்' என்கிறார் காந்தி. மற்றொரு தருணத்தில் 'எனது நடத்தைகளிலிருந்து உங்களுக்கு என்ன கிடைக்குமோ அது எனது சொற்களிலிருந்து உங்களுக்குக் கிடைக்காது' என்கிறார். எழுத்தாளரும் ஆய்வாளருமான ஸ்டாலின் ராஜாங்கம் ஒரு உரையாடலின்போது, காந்தி - அம்பேத்கர் உறவை மட்டும் வைத்துக்கொண்டு காந்தியை புரிந்துகொள்வது அத்தனை சரியானதல்ல என்றும் களப்பணியில் காந்தியின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டதாகவும் கூறினார். சொற்களைத் தாண்டி காந்தியின் மீது அடிப்படையான நன்னம்பிக்கையைக் கொள்ள முடிந்தால் காந்தியின் உத்தி நமக்குப் பிடிபடலாம்.
காந்தியின் வர்ண / சாதி பற்றிய பார்வைக்கு இரண்டு தரப்பினர் எதிர்வினையாற்றினார்கள். தலித் அறிவுத் தரப்பு காந்திய அறிவுத் தரப்பு எனப் பொதுவாக இரண்டு பிரிவுக்குள் இவர்களை அடக்கிவிடலாம். தலித் தரப்பு காந்தியை பிராமணியத்தின் முகமாகச் சித்தரித்து மொத்தமாக நிராகரித்தது. தலித் தரப்பின் முதன்மை எல்லை என்பது அவர்கள் அம்பேத்கரிய அறிஞர்கள் என்பதால், அவரது பார்வையின் முக்கியத்துவத்தை நிறுவும் பொருட்டு காந்தியின் தரப்பை எளிமைப்படுத்தினர் என்கிறார் கோல்கே. தனிவாழ்வில் காந்தி பிராமணிய உலகப் பார்வையை ஏற்றுக்கொண்டவர் என்பதால் சாதி / வர்ணச் சார்புடையவர் என எளிமையாகச் சுருக்கிவிடலாம் என்பதே அவர்களின் தரப்பு.
இதற்கு மாறாக, காந்தி எப்படி பிராமணியப் பார்வையை முற்றிலும் மறுதலிக்கிறார் என்பதை நூலின் பிற்பகுதியில் ஆர்ய சமாஜத்தின் 'சுத்தி' இயக்கத்துடன் ஒப்பிட்டு கோல்கே நிறுவுகிறார். காந்திக்கு ஆலயங்கள்மீது பெரிய ஈர்ப்பு இருந்ததில்லை, சிறு வயதில் சாவிக்கொத்துக்களைப் பூணூலில் அணிந்து செல்லும் பிராமணச் சிறுவர்களைப் போல் தானும் அணிந்துகொள்ள வேண்டும் என யோசித்ததற்கு அப்பால் அதில் அவருக்கு ஆர்வம் இருந்ததில்லை. ஆரிய சமாஜம் வேறு மதங்களிலிருந்து இந்து மதத்திற்குத் திரும்புவர்களைச் 'சுத்திகரிக்கும்' சடங்கு வழி ஏற்றுக்கொண்டது. அவர்களுக்குப் பூணுல் அணிவித்தது. சமஸ்கிருதமயமாக்கத்தை முன்வைத்தது. இந்து எனும் அடையாளத்தைப் பெருமையுடன் தாங்கிச் செல்ல அறிவுறுத்தியது. காந்தி அனைவரையும் பிராமணர்களாக ஆக்க விரும்பவில்லை. அப்படி செய்வதென்பது மறைமுகமாக பிராமணியத்தின் கதையாடலான உயர்வு தாழ்வு என்பதை அங்கீகரிப்பதாகும். நேரெதிராக காந்தி அனைவரையும் அதிசூத்திரர்களாக ஆக வேண்டும் என வலியுறுத்தினார். 'ஆரிய சமாஜத்தின்' நிலைப்பாடு இன்றைய இந்துத்துவத்தின் மூல வடிவம். காந்தி சாதி இந்துக்களிடம் பெருமிதம் கொள்ளக் கோரவில்லை மாறாக குற்றவுணர்வு கொள்ளவே கோரினார்.
சாதி, வர்ண ஆதரவு நிலைப்பாடை காந்திய அறிவுப் புலம் எப்படி நோக்கியது? வெவ்வேறு அறிஞர்களின் கூற்றைத் தெரிவித்து ஒவ்வொன்றாக மறுக்கிறார் கோல்கே. தொழில்மயமாதலை எதிர்த்த காந்தி சாதியையும் எதிர்த்தால் பரம்பரைத் தொழிலை இழந்து லட்சக்கணக்கானவர்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என காந்தி கருதினார் எனும் மார்கரெட் சாட்டர்ஜி கருத்தை மறுக்கிறார். காந்தி அனைவருக்கும் உடலுழைப்பை வலியுறுத்தினாரே ஒழிய பரம்பரைத் தொழிலை ஒருபோதும் பரிந்துரைத்ததே இல்லை. காந்தி தொழில்மயமாதலை எதிர்க்கக் காரணம் அது மனிதத்தன்மையை அகற்றிவிடும் என்பதுதான். அந்நியமாதல் நிகழும் என்பதால்தான். காந்தியின் சமூகம் தனிமனிதனின் முழு சுதந்திரத்தை லட்சியமாக முன்வைப்பது. சாதி, நுகர்வு, அரசு, மரபான அமைப்புகள் என எவையெல்லாம் தனி மனிதனின் முழு சுதந்திரத்திற்கு தடையாக இருக்குமோ அவற்றையெல்லாம் எதிர்த்தார். நிராகரித்தார். காந்தியின் லட்சிய சமூகம் என்பது அவரது விமர்சகர்கள் சுட்டிக்காட்டுவதுபோல மேல் கீழ் அடுக்குகளைக் கொண்ட வர்ணாசிரம அமைப்பு அல்ல. பொறுப்புணர்வுடனும் சக உயிர்களின் மீதான கருணையுடனும் தங்களது தேர்வுகளைத் தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் தனிமனிதர்களை அலகாகக் கொண்டது என்பதை கோல்கே எடுத்துக்காட்டுகிறார்.
காந்திக்குக் கர்ம கோட்பாட்டின் மீது நம்பிக்கை உண்டு அதன் இயல்பான நீட்சியாக சாதிகளையும் வர்ணங்களையும் ஏற்றுக்கொள்கிறார் என்கிறார் பிகு பரேக். காந்திக்கு கர்ம கோட்பாட்டின் மீது நம்பிக்கை உண்டுதான். ஆனால் இந்து மதத்தில் உள்ளபடி அல்ல. கீதை, கர்மம் உட்பட இந்து மதத்தின் பல்வேறு கூறுகளை அதன் மரபான பொருளில் காந்தி கையாள்வதில்லை. மாறாகத் தனக்கேயுரிய வகையில் புதிய வகையில் பொருள்கொள்கிறார் என்பதை நிறுவுகிறார் கோல்கே.
காந்தி தனிமனிதராக சாதி வர்ணப் பாகுபாடைக் கடைப்பிடிக்கவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால் அதை சமூகத்திற்கு பரிந்துரைத்து, வலியுறுத்தினாரா? இந்தியாவில் தனக்குக் கிடைத்த அனுபவத்தின் காரணமாகவே தனது இலக்கை படிப்படியாக அடைவது எனும் உத்தியை காந்தி வந்தடைந்திருப்பார் என்கிறார் கோல்கே. கோச்ரபில் 1915ஆம் ஆண்டு சத்தியாகிரக ஆசிரமம் தொடங்கப்பட்டபோது தக்கர் பாபாவின் அறிவுறுத்தலின் பேரில் துதா பாய், அவரது மனைவி தானி பென், அவர்களது கைக்குழந்தை லக்ஷ்மி ஆகிய மூவரையும் அங்கமாகக் கொண்ட தோட்டி இனத்தைச் சேர்ந்த குடும்பம் ஆசிரமத்திற்குக் குடிவருகிறது. ஆசிரமத்திற்குள்ளேயும் வெளியேயும் கடும் எதிர்ப்பை காந்தி எதிர்கொள்கிறார். ஆசிரமத்திற்கு அளிக்கப்பட்டுவந்த நிதிக்கொடைகள் நிறுத்தப்பட்டன. கையிருப்பு கரைந்தது. தோட்டிகளின் வசிப்பிடத்திற்கே நாம் செல்வோம், அங்கு கிடைப்பதைக் கொண்டு வாழ்வோம் என காந்தி முடிவெடுத்திருந்தபோது அம்பாலால் சாராபாய் நிதியளித்தார் என திரிதீப் சுஹ்ருத் குறிப்பிடுகிறார்.
காந்தியால் வெளி எதிர்ப்பைப் புரிந்துகொள்ள முடிகிறது ஆனால் உள் எதிர்ப்பைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை. தென்னாப்பிரிக்க சத்தியாகிரகத்தில் காந்தியோடு உடன் நின்ற முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் மகன்லால் காந்தி. மகன்லாலின் மனைவி சந்தோக் தென்னாப்பிரிக்க சத்தியாகிரகத்தில் பங்குபெற்று சிறை சென்றவர். அவர்கள் இருவரும் துதாபாய் குடும்பம் குடியேறுவதைக் கடுமையாக எதிர்த்தார்கள். அவர்களை அனுமதிக்கும் காந்தியின் முடிவுக்கு எதிராக சந்தோக் உண்ணாவிரதமிருந்தார். சந்தோக் தன் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும என காந்தி பதிலுக்கு உண்ணாவிரதமிருந்தார். கஸ்தூர்பாவும் மகன்லால் - சந்தோக் தரப்பைத் தேர்ந்தது காந்திக்கு அதிர்ச்சியளித்தது. தென்னாப்பிரிக்காவில் பாகுபாடின்றி ஒருங்கிணைந்து செயலாற்ற முடிந்த இவர்களால் இப்போது ஏன் இயலவில்லை? காந்தி ஸ்ரீனிவாச சாஸ்திரிக்கு எழுதிய கடிதத்தில் கஸ்தூர்பாவிடம் நாம் நண்பர்களாகப் பிரிவோம் என துதாபாய் விவகாரத்தில் தெரிவித்ததாக எழுதுகிறார். அறிமுகமற்ற தீண்டத்தகாத குடும்பத்திற்காக தனது மனைவியையே விட்டுவர அவர் துணிந்தார். இந்தியாவில் சாதிக்கு எதிரான போராட்டம் அத்தனை எளிதல்ல என்பதை முதல் வருட இந்திய வாசத்திலேயே புரிந்துகொண்டார். ஆகவேதான் நீண்டகாலச் செயல்திட்டம் எனும் உத்தியை கையிலெடுத்தார் என்பதே கோல்கேவின் வாதம்.
அவரது உத்தி எப்படிச் செயலாற்றியது? தனது சீர்திருத்தம் இந்து மரபின் தொடர்ச்சியே அன்றி அதை அழிக்க வந்த எதிர்த்தரப்பு அல்ல எனும் நம்பிக்கையைச் சாதி இந்துக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கிலேயே சாதி, வர்ண ஆதரவை எடுக்கிறார் என்கிறார் கோல்கே. தீண்டாமை இந்து மதத்திற்கு களங்கம், அதை களைய வேண்டும் என்பதில் தொடக்கம் முதலே உறுதியாக இருக்கிறார். தொடக்கத்தில் சாதி கடந்த திருமணங்களையும், சேர்ந்து உண்ணுதலையும் அவசியமில்லாதவை எனப் பேசினார். முதல் கட்டத்தில் தீண்டாமை என்பது தொட்டால் தீட்டு என்பது மட்டுமாகத்தான் இருந்தது. அடுத்த காலகட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு என்பது சமமாக நடத்துவது என விரிகிறது. பள்ளிகளில் தீண்டத்தகாதோர் பிள்ளைகளை தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து கற்க அனுமதிக்க வேண்டும் எனக் கோருகிறார். காந்தி ஒன்றைக் கோருவதற்கு முன் அதற்குரிய அமைப்பை உருவாக்கிவிடுவார். கல்விக்கூடங்களில் தீண்டாமையைக் கடைப்பிடிக்கக் கூடாது என அறிவுறுத்தும் முன்னரே குஜராத்தி வித்யா பீடத்தை உருவாக்குகிறார். அதன் துணை கல்விச் சாலைகளில் எங்குமே தீண்டாமை கடைப்பிடிக்கப்பட மாட்டாது என நிர்வாக சபையைக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றுகிறார்.
விடுதலைப் போராட்டம் எனும் இலக்கில் ஒரு பகுதி சாதிக்கு எதிரான போராட்டம் என நாம் பொதுவாகப் புரிந்துகொண்டுள்ளோம். மாறாக அவர் உருவாக்க நினைத்த சுதந்திர தனிமனிதர்களால் ஆன லட்சிய சமூகம் எனும் இலக்கின் தொடக்கப்புள்ளிதான் அரசியல் விடுதலை. சி.எப். ஆண்ட்ரூசுக்கு எழுதிய கடிதத்தில் தீண்டாமை ஒழிப்பு என்பது அரசியல் விடுதலையைவிடக் கடினமான இலக்கு என்பதை நன்கு உணர்ந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார். 1927-35 காலத்தில் தீண்டாமை ஒழிப்பின் வரையறை இன்னும் விரிகிறது. ஆலய நுழைவையும் சேர்த்துக்கொள்கிறார். 1915- 20, 20-27 காலகட்டத்தில் சாதி, வர்ணத்தை நடைமுறைத் தேவை கருதி ஆதரித்ததாகச் சொல்வதும் சனாதனி எனத் தன்னைப் பறைசாற்றிக்கொண்டதும் நிறைய முறை நிகழ்ந்தது என்றால், 1927க்குப் பின் அவை படிப்படியாகக் குறைந்து காணாமல்போகிறது. முதலில் சாதிகளும் வர்ணங்களும் வேண்டும் என சொன்னவர், பின்னர் சாதிகள் இந்து மதத்தின் தேவையற்ற பகுதி, அனைத்துச் சாதிகளும் நான்கு வர்ணங்களாகத் தங்களை ஒருங்கிணைத்துக்கொள்ள வேண்டும் என்றார். அடுத்த நிலையில் இப்போது பிறப்பால் வர்ணம் நம்மை வந்து அடைந்தாலும் நமது செயலால்தான் நாம் அதை ஏற்கிறோம் என்றார். அதற்கடுத்த நிலையில் வர்ண பேதமே இல்லை. ஒரேயொரு வர்ணம் மட்டுமே உள்ளது. நாம் அனைவருமே சூத்திரர்கள், அதிசூத்திரர்கள் என்றார். இந்திய விடுதலை ஏறத்தாழ உறுதியான காலத்தில் அதுவரை வர்ணம் தொடர்பாகத் தான் கொண்டிருந்த கருத்துக்களைத் தொகுத்து ‘வர்ண வியவஸ்தா’ என்ற நூலை வெளியிடுகிறார். அதன் முன்னுரையில் இதுவரை சொன்னவற்றை எல்லாம் விட்டுவிட்டு இந்த முன்னுரையில் சொன்னதை மட்டும் ஏற்றுக்கொள்ளும்படி கூறுகிறார். மணமக்களில் எவரேனும் ஒருவராவது தீண்டத்தகாத பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தத் திருமணத்திற்கு எனது ஆசி கிடைக்கும் என்றார். காந்தியோடு தனிப்பட்டமுறையில் நெருக்கமாக இருந்த பல இளைஞர்களின் திருமணங்களுக்குக்கூட காந்தி செல்லவில்லை என்பதை நாராயண் தேசாய் சுட்டிக்காட்டுகிறார்.
புனா ஒப்பந்தத்தில் காந்தியின் நிலைப்பாடு
நாடு முழுவதும் உணர்ச்சி அலையில் இருக்கும்போது காந்தி தம் மக்களிடம் இன்னும் அதிக செயல்வேகத்தை எதிர்பார்க்கிறார். நாடகீயத் தருணங்களை தனது இலக்கிற்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார். புனா ஒப்பந்தம் சார்ந்து கோல்கே எழுதிய பகுதி விரிவாகப் பேசப்பட வேண்டியது. தனிப் பிரதிநிதித்துவத்திற்கும் ஈரடுக்குக் கொண்ட பொதுத்தொகுதியில் இட ஒதுக்கீட்டிற்கும் உள்ள வேற்றுமை என்ன, அம்பேத்கர் எதை விரும்பினார் போன்ற கேள்விகளை விரிவாக விவாதிக்கிறார். வட்ட மேசை மாநாட்டிலேயே காந்தி ஈரடுக்கு இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்திருந்தால் இத்தனை சிக்கலாகியிருக்க வேண்டியதில்லை என அம்பேத்கர் எழுப்பிய கேள்வி சரியானதே. ஏனெனில் இரண்டு விதமான பிரதிநிதித்துவத்திற்கிடையேயும் பெரிய வேறுபாடு ஏதுமில்லை என்கிறார் கோல்கே. ஏதோ ஒரு தரப்பிற்குச் சிறிய அளவில் கூடுதல் சலுகை கிடைத்திருக்கக்கூடும்; அதற்கு ஏன் உயிரைப் பணையம்வைத்தார் எனும் கேள்வியை எழுப்புகிறார்.
தலித் அறிஞர்களின் மிக முக்கியமான விமர்சனம் என்பது அரசியல் ஆற்றலாக தலித்துகள் திரளுவதை காந்தி தடுத்துவிட்டார் என்பதே. இன்றுவரை கடுமையுடன் நோக்கப்படும் இந்நடவடிக்கைக்கு ஓரளவு நியாயமான காரணம் என ஏதேனும் ஒன்றை காந்தி தரப்பிலிருந்து கூற முடியுமா என ஆராய்கிறார் கோல்கே. வெவ்வேறு பதில்களைப் பரிசீலித்த பிறகு பிகு பரேக், ஜோசெப் லெபீல்டு ஆகியோரின் கூற்றுகளை உகந்ததாக முன்வைக்கிறார். லெபீல்டு 'தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பியதிலிருந்து அவர் ஒட்டுமொத்த இந்து மதிப்பீடுகளின் மீது எந்த சீர்திருத்தத்தைத் தொடர்ந்து வலியுறுத்திவந்தாரோ அதன் பொருட்டு மட்டுமே தனிப் பிரதிநிதித்துவத்திற்கு எதிரான அவரது போராட்டத்தை நியாயப்படுத்த முடியும்' என்கிறார். பிகு பரேக் 'இந்துக்களை உலுக்கி எழுப்பி, தீண்டாமையின் மீது திண்ணமான, நாடகீயமான தாக்குதலை நடத்த காந்தி ஒரு வாய்ப்பைக் கண்டுகொண்டிருக்கலாம்' என எழுதுகிறார். அக்காலகட்டத்தில் சாதி இந்துக்கள் ஆலயங்களைத் திறந்துவிட்டனர், பொதுக் கிணறைப் பயன்படுத்த அனுமதித்தனர், பல இடங்களில் சேர்ந்து உண்டனர். சாதி இந்துக்களிடையே தீண்டாமை ஒழிப்பும் சாதி எதிர்ப்பும் அதுவரை இல்லாத அளவு தீவிரத்துடன் சென்று சேர்ந்தன.
கோல்கே எழுப்பிய இரண்டாவது கேள்விக்குச் செல்லலாம். காந்திய வழிமுறையின் எல்லைகள் என்ன? இன்றைய முக்கியத்துவம் என்ன?
கோல்கே மூன்று முக்கியமான எல்லைகளைச் சுட்டுகிறார். பொருளியல், அரசியல் தளங்களில் சாதி இந்துக்களுக்கும் தலித்துகளுக்கும் இடையேயான உறவை காந்தி வகுத்துக்கொள்ளவில்லை. தூய்மை, தீட்டு எனும் இருமையைக் கொண்டு சமூகம் மேல்கீழ் அடுக்குகளை உருவாக்குகிறது. உடலுழைப்பின் மீதான சமூக விலக்கத்தை நீக்கி அதை மதிப்பு மிக்கதாக ஆக்குவதால் சமத்துவத்தைக் கொண்டுவர இயலும் என காந்தி எண்ணினார். மக்களின் மனதில் உருவாகியிருக்கும் போலியான உயர்வு தாழ்வு மனப்பான்மையைப் போக்க வேண்டும். இதுவே காந்தியின் முதன்மைப் புரிதலாக இருந்தது. இந்தப் புரிதல் நிச்சயம் முழுமையானதல்ல. ஆனால் பொருளியல் சிக்கலை காந்தி புரிந்துகொண்டார் என்றே எண்ணுகிறேன். காதி, கிராமத் தொழிற்சாலைகள் என 1934க்குப் பிறகு பொருளியல் திடத்தன்மையை உருவாக்க முயன்றார். மேலும் நிலப் பகர்வில் பூமி தான இயக்கம் மிக முக்கியமான முன்னெடுப்பு. வினோபா ஒரு காந்தியர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இரண்டாவது விமர்சனம் காந்தி நவீனமயமாதலையும் அரசின் தலையீடையும் சீர்திருத்தத்திற்கு ஏதுவான காரணிகளாகக் கருதவில்லை என்பது. அவற்றை ஐயத்துடன் நோக்கினார். சீர்திருத்தம் என்பது மக்களிடமிருந்து வருவது என திடமாக நம்பினார். அரசு என்பது ஆன்மாவற்ற இயந்திரம் என்பதே அவரது புரிதல். புத்தொளிக் கால தொழில்மயமாதல் சமத்துவத்தைக் கொண்டுவரும் என்னும் கனவை நேரு, அம்பேத்கர் ஆகியோருடன் காந்தி பகிர்ந்துகொள்ளவில்லை. அது வேறொரு வகையான சமத்துவமின்மையையே கொண்டுவரும் என அவர் கணித்தார். அந்தவகையில் காந்தி தீர்க்கதரிசிதான். முழுக்க அரசை நம்பவில்லை எனவும் சொல்ல முடியாது. ஆலய நுழைவுச் சட்டம், தீண்டாமையைத் தண்டனைக்குரிய குற்றமாக கருத வேண்டியது ஆகிய இடங்களில் அரசின் குறுக்கீடை அவர் வரவேற்றார்.
மூன்றாவது போதாமை என்பது காந்தியின் வழிமுறை தலித்துகளின் சுயமரியாதைக்கு இழுக்கு விளைவித்தது என்பது. டி.ஆர். நாகராஜ் அவரது சுய தூய்மையும் சுய மரியாதையும் கட்டுரையில் இந்தக் கோணத்தை விரிவாக எழுதியுள்ளார். சாதி இந்துக்கள் தங்களது பாவங்களைப் போக்கிக்கொள்வதற்கான ஒரு கருவியாகத் தலித்துகளின் இடம் சுருங்கியது. பாவத்தைப் போக்கிக்கொள்பவர்கள் பெரும் தியாகிகளாகவும் நாயகர்களாகவும் பீடத்தில் அமர்ந்தார்கள். காந்தியால் தலித்துகளிடமிருந்து நேருவைப் போன்றோ அம்பேத்கர் போன்றோ அடுத்த தலைமுறை தலைவரை உருவாக்க இயலவில்லை. இந்த விமர்சனம் ஏற்புடையதே. காந்தி சாதி இந்துக்களை நோக்கியே பேசினார். தன் உண்ணாநோன்பை முடித்துவைக்க காந்தி ஒரு தீண்டத்தகாத இளைஞனுக்கு அழைப்பு விடுத்திருந்ததை டி.ஆர். நாகராஜ் சுட்டிக்காட்டுகிறார். தயங்கித் தயங்கி காந்தியிடம் உரையாட வந்தவன் அவரது உண்ணாவிரத நாளில் வரவில்லை. காந்தியின் போராட்டத்திலிருந்து தலித் அரசியல் உருக்கொண்ட புள்ளியாக நாகராஜ் இந்த தருணத்தை அடையாளம் காண்கிறார்.
காந்திய வழிமுறையின் இந்தத் தன்மையே இன்றைய காலகட்டத்தில் அவருடைய தேவையையும் பங்களிப்பையும் காட்டுவதாக ஆகிறது என்கிறார் கோல்கே. முதன்மையாக காந்திய வழிமுறையில் சாதி இந்துச் சமூகமும் தலித்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது தவிர்க்கப்படுகிறது. ஆகவே கலவரங்கள் நிகழ்வதில்லை. இரண்டாவதாக அம்பேத்கரின் இயக்கம் தலித்துகளுக்குத் தனி அடையாளத்தைப் பெற்றுத்தந்தது என்றாலும் சாதி இந்துக்களிடம் இருந்த முன்முடிவையும் வெறுப்பையும் தணிக்க அதனால் இயலவில்லை. பிளவு அதிகரித்துள்ளதையே நாம் காண்கிறோம். காந்தியின் வழிமுறை இச்சிக்கலுக்குத் தீர்வு அளிக்கிறது.
இத்தகைய ஒரு ஆய்வை மேற்கொள்ள கோல்கேவை எது தூண்டியிருக்கும்? காந்தி அளவிற்கு வேறெவருடைய வாழ்க்கையாவது நுண்நோக்கிக்குள் அங்குலம் அங்குலமாக அலசப்பட்டிருக்கிறதா? தரவுகளை எவ்வளவு வேண்டுமானாலும் அடுக்கலாம். ஆனால் அடிப்படை நன்னம்பிக்கையை அதனால் உருவாக்க இயலுமா? காந்தி சாதியவாதியா இல்லையா என்பது இன்று அத்தனை முக்கியமான கேள்வியா? அவரது வழிமுறை நமக்கு இன்று பயன்படுமா என்பது மட்டும்தானே இன்றைய கேள்வி? இதுபோன்ற எண்ணங்கள் எழுந்து அயர்வை உருவாக்கும். வரலாற்று ஆளுமையுடன் சென்று முட்டிமோதி எதையேனும் நிறுவ வேண்டியதன் தேவை என்ன? ஒ
January 5, 2023
எனது நூல்கள்
சிறுகதைகள்
அம்புப்படுக்கை - யாவரும் பதிப்பகம்
விஷக்கிணறு - யாவரும் பதிப்பகம்
நாவல்
நீலகண்டம் - யாவரும் பதிப்பகம்
கட்டுரைகள்
அன்புள்ள புல்புல்- யாவரும் பதிப்பகம்
வளரொளி (நேர்காணல்கள்/ விமர்சனங்கள்)- யாவரும்/பதாகை பதிப்பகம்
நாளைய காந்தி- யாவரும் பதிப்பகம்
ஆயிரம் காந்திகள்- நன்னூல் பதிப்பகம்
சமகால சிறுகதைகளின் பரிணாமம்- யாவரும் பதிப்பகம்
மரணமின்மை எனும் மானுடக்கனவு- யாவரும் பதிப்பகம்
மொழியாக்கங்கள்
இந்து ஞானம் ஒரு எளிய அறிமுகம்- க்ஷிதி மோகன் சென் (மொழியாக்கம்)- சொல்புதிது- அச்சில் இல்லை, கிண்டியில் கிடைக்கும்.
சுதந்திரமும் சமூக நீதியும்- ராஜ் மோகன் காந்தி (மொழியாக்கம்)- சரோதயா இலக்கியப்பண்ணை
மகாத்மாவிற்கு அஞ்சலி- பப்பிளிகேஷன் டிவிஷன் இந்தியா
தொகை நூல்கள்
பின்நவீனத்துவவாதியின் மனைவி (தொகுப்பாசிரியர். சுரேஷ்குமார இந்திரஜித்தின் சிறுகதைகள்)- காலச்சுவடு
காந்தி எல்லைகளுக்கு அப்பால் ( மொழியாக்க தொகை நூல்)
காந்தியை சுமப்பவர்கள் - பரிசல் புத்தக நிலையம்
Mahathma Gandhi in Tamil- Bharatiya Vidya Bhavan.
மரணமின்மை எனும் மானுடக் கனவு- நூல் முகம்
குறைந்தது ஐந்தாறு தலைமுறைகளாக சித்த மருத்துவம் பார்த்துவரும் குடும்பத்தில் பிறந்தவன் நான். எங்கள் குடும்பத்திற்குள் சித்த மருத்துவம் எப்போது, எப்படி வந்தது என்பதே எனக்கு இன்று சுவாரசியமான ஆராய்ச்சியாக இருக்கும். இளவயதில் அரசு சித்தமருத்துவராக எங்கள் பகுதியில் புகழோடு இருந்த தந்தையை இழந்து விட்டிருந்தாலும், வெற்றுடலுடன் நோயாளிகளை பார்க்கும் என் தாத்தாவின் அலுமினிய மருந்து பெட்டியை தூக்கிக்கொண்டு அவருடன் சென்ற வகையில் சில மருத்துவ அனுபவங்களை பால்யத்திலேயே பெற்றிருக்கிறேன். அவர் நாடி நோக்குவதில் விற்பன்னர். மரண குறிகளை கச்சிதமாக அறிந்தவர் எனும் பெயரும் உண்டு. கண்கூடாக சில அசாதாரண தருணங்களுக்கு சாட்சியாக இருந்தபோதிலும் கூட அவருடைய முறைமைகளின் மீது நம்பிக்கை ஏற்பட்டதில்லை. 'அம்புப் படுக்கை' கதையில் அவரது சித்திரம் உள்ளது.
பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் போல் தமிழகத்தில் பாவப்பட்ட ஜீவன்கள் வேறு எவரும் இல்லை. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. அதுவும் நான் நவீன மருத்துவராக ஆக வேண்டும் எனும் வேட்கை கொண்டிருந்தவன். அரைமணிநேரம் கூட சேர்ந்தார்போல் அவருடைய இறுதி நாட்களில் அவரோடு செலவழித்ததில்லை. நாடியின் நுணுக்கங்களை கற்பிக்க முயன்றார், சித்தர் பாடல்களை கூறி விளக்கமளிக்க முயல்வார். ஆனால் இவையேதும் என் சிந்தையை எட்டியதே இல்லை. அன்றைய காலங்களில் என்னை சித்த மருத்துவனாக நான் கற்பனை செய்து கொண்டதில்லை. நான் இச்சூரணங்களையும் லேகியங்களையும் தைலங்களையும் சீந்த போவதில்லை. சட்டையணியாத எளிய கிராமத்து வைத்தியனாக என்னால் வாழ்ந்திட முடியாது என உறுதியாக நம்பினேன். தாத்தா அவ்வாண்டே உடல் நீங்கினார் காலம் என்னை ஆயுர்வேத மருத்துவனாக ஆக்கியது.
ஒருவகையில் தாத்தாவை, அவரின் அறிவை உதாசீனபடுத்திவிட்டேன் எனும் குற்ற உணர்வு எப்போதும் எனக்குண்டு. இப்போது பார்க்கும்போது இது ஏதோ ஒரு ஊரில் ஒரு பேரன் தனது தாத்தாவை உதாசீனப்படுத்தினான் என்பதல்ல. காலனியம் அறிவுத்தொடர்ச்சியை எப்படி மழுங்கடித்தது என்பதற்கான விடையாக இருக்கலாம். மீறலும் தொடர்ச்சியும் கொண்டதே தலைமுறைகளுக்கு இடையேயான உறவு. காலனியம் இந்த சமன்பாடை குலைத்தது. மரபு மீறலுக்கான சாத்தியத்தை குறைவாகவும் தொடர்ச்சிக்கான சாத்தியததை அதிகமாகவும் முன்வைத்தது என்றால் நவீனம் இதை தலைக்கீழாக்கியது. அவரின் நினைவுகளுக்கும் அவரளித்த ஆசிகளுக்கும் நான் செலுத்தும் சிறிய மரியாதை எனும் உணர்வு இந்நூலை எனக்கு மேலும் நெருக்கமாக்குகிறது.மூன்று பகுதிகளை கொண்டது இந்நூல். முதல் பகுதி ஆயுர்வேதத்தை வரலாறு, மானுடவியல் மற்றும் சமூக நோக்கில் அணுகுகிறது. 'காந்தியும் ஆயுர்வேதமும்' ஏற்கனவே நாளைய காந்தியின் இடம்பெற்றுள்ளது. இந்த நூலின் மிக முக்கியமான பகுதி இதுவே. மூன்றாம் பகுதி 'ஆரோக்கிய நிகேதனம்' மற்றும் 'சுளுந்தீ ' ஆகிய மரபு மருத்துவம் தொடர்பான நாவல்கள் குறித்த விரிவான விமர்சனங்களை உள்ளடக்கியது. இரண்டாம் பகுதியில் இடம்பெற்றிருக்கும் 'பிஷக் உத்தமன்' கட்டுரை மருத்துவர் மகாதேவனுடனான நேர்காணல் நூலான 'முதற்கால்' நூலில் இடம்பெற்றுள்ளது. அக்கட்டுரையைத்தவிர்த்து பிற அனைத்தும் புத்தக மதிப்புரைகள். எழுத வந்த தொடக்க எழுதியவை. இன்று வாசிக்கும்போது இக்கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள சில கருத்துக்களை அதே உறுதியுடன் இன்று நான் சொல்ல மாட்டேன். நவீன மருத்துவம், நவீன அறிவியல் அன்று எனக்கிருந்த அதீத அவநம்பிக்கை இன்று இல்லை. அறிவியல் ஆயுர்வேதத்தை அங்கீகரிக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு ஈடேறாததன் கசப்பு என சொல்லலாம். அறிவியலின் அங்கீகாரம் அல்லது அறிவியல் எனும் அடையாளத்தை ஆயுர்வேதம் சுமக்க வேண்டியதில்லை. தேவையில்லாத சிலுவை எனும் எண்ணம் எனக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே ஆயுர்வேதம் அதன் எல்லைகளுக்குள் நின்றபடி, அது எடுத்துக்கொண்ட உலக பார்வைக்கு உண்மையாக இருந்தால் போதும். 'மருத்துவத்திற்கு மருத்துவம்' கட்டுரையை வாசிக்கும்போது நவீன மருத்துவத்தின் அற சிக்கல்களை எளிமைப்படுத்தியிருக்கிறேன் எனும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது. மருத்துவத்தை தொண்டு என நோக்கும் மக்கள் திரளுக்கும் அதை தொழில் என நோக்கும் நிபுணர் தரப்பிற்கும் இடையேயான விழுமிய உரசலில் இருந்து என் பார்வை எழுந்துள்ளது. மருத்துவம் தொண்டிலிருந்து தொழிலுக்கு இடம்பெயர்ந்துவிட்டது. நிலப்பிரபுத்துவ கால புனிதம் எனும் விழுமியத்தை அத்துடன் இணைத்து காணவேண்டியதில்லை. மேலும் அற மீறல்கள் நவீன மருத்துவத்தில் மட்டுமே உள்ள ஒன்றும் இல்லை. மூலிகை மருந்துகளில் நவீன மருந்துகளை கலப்பது, கலப்படம் செய்வது, விளம்பரம், மருந்துகளை புட்டியிலிருந்து நீக்கி அதீத விலை வைத்து விற்பது, மருந்து சீட்டில் மருந்தின் பெயர் எழுதுவதில்லை, பஞ்சகர்மா சிகிசிச்சைகளின் அதீத விலை, போலி வாக்குறுதிகள், போலி மருத்துவர்கள் என இந்திய மருத்துவ முறைகளும் எவ்வகையிலும் குறைவில்லை. பெரும்பாலான சமயங்களில் பரிசோதனைகள் வெறுமே காசு பறிக்க செய்யப்படுவதில்லை என்பதை அனுபவத்தின் ஊடாக புரிந்துகொண்டேன். நோயை உறுதிப்படுத்த, அதன் தீவிரத்தை அறிய, அறுவை சிகிசிச்சை தேவையா என முடிவெடுக்க, மருத்துவர்களின் சட்டரீதியான பாதுகாப்பை உறுதி செய்ய என பல நியாயமான காரணங்கள் உள்ளன. கட்டுரைகளில் என் கருத்துக்களை திருத்த நான் விரும்பவில்லை. அது அந்த காலகட்டத்தில் எனது மனநிலையை உண்மையாக பிரதிபலித்தது என்பதால் முன்னுரையில் இந்த விளக்கங்களை அளிக்கிறேன். ஆயுர்வேதம் தொடர்பாக இன்னும் சில கட்டுரைகளை எழுதுவேன் என்றே எண்ணுகிறேன். தொகுக்கப்படாத குறிப்புகள் மட்டுமே சில நூறு பக்கங்கள் நீளும்.
இந்நூல் உருவாவதற்கு சிலருக்கும் நான் நன்றிகடன் பட்டிருக்கிறேன். நான் ஆயுர்வேத மருத்துவனாக தொடர்வதற்கு முக்கியமான காரணிகளில் ஒருவர் ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் மகாதேவன். ஆயுர்வேதம் குறித்த எனது குறை புரிதல்களை நீக்கி அதுகுறித்தான நேர்மறை சிந்தனையை என்னுள் விதைத்தவர். மற்றொரு வகையில் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றியுடையவனாகிறேன். பல சமயங்களில் அறிவியல் சார்ந்த அவருடைய உறுதியான நிலைப்பாடுகள் என்னை சீண்டி இருக்கின்றன. நல்லவேளை நான் அவருக்கு சமூக ஊடகங்களில் எதிர்வினையாற்றாமல் அவ்வினாக்களுக்கு விடை தேடி நிறைய வாசிக்க தொடங்கினேன். ஆயுர்வேதத்தின் சிக்கல்களை உள்ளிருந்து நோக்கவும் அதன் சாதக பாதகங்களை இயன்றவரை வெளியிலிருந்து எடைபோடவும் முயன்றுள்ளேன்.. காலஞ்சென்ற சித்த மருத்துவர் டாக்டர். திருநாராயணன் மற்றும் மருத்துவர் கு. சிவராமன் ஆகியோருடன் இந்திய மருத்துவ முறைகளின் சிக்கல்கள் குறித்து விவாதித்து பல புரிதல்களை எட்டியுள்ளேன். மருத்துவ மானுடவியல் பேராசிரியர் டாக்டர். ப்ரிஜிட் செபாஸ்டியா, இந்திய மருத்துவ முறைகள் குறித்து ஆய்வுகளை செய்து வருபவர். அவருடைய நட்பும், அவர் வழி பாண்டிச்சேரி ஃபிரெஞ்சு மையத்திலிருந்து கிடைத்த புத்தகங்களும் எனது புரிதல்களை விஸ்தரித்தன. இந்த நூலை எனது தாத்தாவிற்கு கல்லூரிக்கும் சமர்ப்பணம் செய்துள்ளேன். ஆயுர்வேதத்தின் இருவகையான கற்றல் முறைகளும் ஒன்றை ஒன்று நிரப்பும். கண்ணன், தினேஷ், ஷியாம் ஆகிய என் கல்லூரி நண்பர்களையும், சீனியர்களான மகேந்திரன், சுந்தர், பிரின்ஸ் ஆகியோரையும், எனது கல்லூரி ஆசிரியர்களான சந்திரசேகர், ஸ்ரீ ராமகிருஷ்ணன், சக்கரவர்த்தி ஆகியோரையும் இத்தருணத்தில் எண்ணிக்கொள்கிறேன் நான் தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவனாக வருவேன் என என் ஆசிரியர்கள் நம்பினர். ஆனா;ல் எனக்கு வேறொரு கிறுக்கு பிடித்துக்கொண்டது. வாசிக்கவும் எழுதவும் அனுமதிக்கும் சுதந்திரத்துடன் கூடிய இலகுவான தொழில் வாழ்க்கையையே நான் தேர்ந்தெடுத்தேன். 'ப்ரித்வி' அமைப்பின் பிரதீப் மற்றும் பரிதோஷ ஆகிய நண்பர்களுடனான வாதங்கள் எனக்கு பலவகையில் உதவியுள்ளன. எழுத்தாளர் போகன், அனீஸ் கிருஷ்ணன் நாயர், யோக ஆசிரியர் சவுந்தர் குருஜி, நவீன மருத்துவர் மாரிராஜ், எழுத்தாளர் நாகப்பிரகாஷ் ஆகியோருடன் ஆயுர்வேதம் குறித்து உரையாடியவை, விவாதித்தவை என்னை தொகுத்துக்கொள்ள உதவியிருக்கிறது.
நூல் உருவாக்கத்தில் பெரும் உறுதுணையாக இருந்தவர் என் மனைவி டாக்டர்.மானசா. நூலை வாசித்து ஆலோசனைகளை வழங்கிய நண்பர் நட்பாஸ் பலவகையிலும் முக்கிய பங்காற்றி இருக்கிறார். எழுத்து முயற்சியில் எப்போதும் உடனிருக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு விஷ்ணுபுரம் நண்பர்களுக்கும் நன்றிகள். பல சமயங்களில் நன்றியுடனும் சில சமயங்களில் நறநறப்புடனும் நான் ஆயுர்வேதம் படிக்க காரணம் நீதான் என அம்மாவிடம் சொல்வேன். அவருக்கு என் வணக்கம். அத்தனை எளிதில் என்னுடைய நேரத்தை எனக்கு விட்டுக்கொடுக்காத சுதீருக்கும் சபர்மதிக்கும் முத்தங்கள். நண்பர் ஜீவ கரிகாலன் நச்சரிக்கவில்லை என்றால் இது நூலாகியிருக்காது. 'யாவரும்' நண்பர்களுக்கு நன்றி.
வழமையான மருத்துவ ஆலோசனைகள், எளிய மூலிகை மருந்து பிரயோகங்கள் போன்றவை அற்ற நூலாக ஆயுர்வேதத்தை பற்றி தமிழில் எழுத அனேக விஷயங்கள் உண்டு. இந்நூல் அப்படியான ஒரு முயற்சியே. மாதகணக்கில் மூல பிரதிகளை வாசித்து குறிப்புகள் எடுத்தேன். நீண்ட மேற்கோள்களை தமிழாக்கம் செய்தேன். பல ஆய்வு கட்டுரைகளை வாசித்து சிந்தனைகளை தொகுத்துக்கொள்ள வேண்டியதாய் இருந்தது. இந்திய மருத்துவமுறைகள் குறித்து புரிந்துகொள்ள உண்மையில் ஐரோப்பிய அறிஞர்களையே சார்ந்திருக்க வேண்டி இருக்கிறது. டொமினிக் உஜாஸ்டிக், டாக்மர் உஜாஸ்டிக், முள்ளன்பால்ட், டேவிட் கோர்டன் வைட், கென்னெத் ஜிஸ்க், ரிச்சர்ட் வெய்ஸ், ராச்சல் பெர்கர், ஃபிரான்சிஸ் ஜிம்மர்மேன், அரியான் ரோசு போன்ற ஆய்வாளர்களுக்கு உண்மையில் நான் கடன் பட்டிருக்கிறேன். காந்தியை, இந்தியாவை, இந்திய வரலாறை நாம் ஐரோப்பாவின் கண்களிலேயே அறிந்து கொள்கிறோம். கோயம்பத்தூர் ஆர்ய வைத்திய பார்மசி நவீன ஆயுர்வேத ஆய்வுகளுக்கு மிக முக்கிய பங்காற்றி வருகிறது. அவர்களுடைய ‘Ancient science of Life’ இந்திய மருத்துவ வரலாறு சார்ந்து மிக முக்கியமான சர்வதேச தரம் மிக்க ஆய்வுகளை தொடர்ந்து பதிப்பித்து வந்தது. அது நின்று போய் விட்டது வருத்ததுற்குரிய செய்தி. லண்டனின் வெல்கம் இன்ஸ்டிட்யுட் உலகளவில் மருத்துவ வரலாறைப் பற்றி பல முக்கியமான ஆய்வுகளை நூலாக்கி தொடர்ந்து வெளிக்கொண்டு வருகிறது. இந்த நூல் மூன்று நான்கு வருட தொடர் வாசிப்பின் விளைவு. இவை நானே செய்த ஆய்வுகள் அல்ல. ஒருவகை சிந்தனை தொகுப்பு, உரையாடல். நான் வாசித்தவற்றைக் கொண்டு சில இடைவெளிகளை நிரப்பி இருக்கிறேன், ஊகங்களை முன்வைத்திருக்கிறேன், அவதானங்களையும் சிந்தனைகளையும் பதிவு செய்திருக்கிறேன்.
‘ஆயுர்வேதம் மாறாதது’ என்றே ஆயுர்வேத அடிப்படைவாதிகளும், ஆயுர்வேதத்தை புறந்தள்ளும் நவீன அறிவியல் அடிப்படைவாதிகளும் ஒரே குரலில் இதே கருத்தையே வலியுறுத்துகிறார்கள். இக்கூற்று உண்மையா? என ஆராய துவங்கியதே இந்நூலின் துவக்கம். ஒரு உயிருள்ள மருத்துவ மரபின் இயல்பான வளர்ச்சியையும், நிகழ்கால சிடுக்குகளையும் பேசுகிறது. ஒரு ஆயுர்வேத மாணவனாக, மருத்துவனாக இந்நூல் எனக்கு பெரும் நிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறது நான் ஒரு பண்பாட்டு தொடர்ச்சியின் முனையில் நின்றுகொண்டிருக்கிறேன். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீளும் மரபு இது. எனது முன்னோர்கள் விட்டு சென்ற வாழ்க்கை பற்றிய அவதானிப்புகள், புரிதல்கள், அவர்கள் எதிர்கொண்ட இடர்கள், அதற்கு அவர்கள் கண்டடைந்த தீர்வுகள் என எல்லாமும் என்னை வந்தடைந்திருக்கிறது. இந்த அறிவு களனில் என் பங்கிற்கு எதையாவது சேர்க்க வேண்டும். சேர்த்த பின்னர் அதை அடுத்த தலைமுறைக்கு கையளிக்க வேண்டும். அதுவே என் கடமை. இந்நூல் அத்தகைய என் கடனை நிறைவு செய்வதற்கான ஒரு சிற்றடி அவ்வளவே.
-சுனில் கிருஷ்ணன்
காரைக்குடி
4, 7 ஆவது வீதி, வடக்கு விஸ்தரிப்பு, சுப்பிரமணியபுரம், காரைக்குடி – 2
drsuneelkrishnan@gmail.com
சமகால சிறுகதைகளின் பரிணாமம் & பிற கட்டுரைகள் - முன்னுரை

2012- 2013 ஆண்டுகளில் ஆம்னிபஸ் என்றொரு இணைய தளத்தை நண்பர்கள் கிரி ராமசுப்பிரமணியமும் நட்பாஸும் தொடங்கினார்கள். அப்போது சமூக ஊடகங்களில் 365 நாட்கள் சவால் என்றொரு விஷயம் பிரபலமாக இருந்தது. கிரி 365 நாட்கள் 365 புத்தக அறிமுகங்கள் செய்யலாம் எனும் யோசனையை முன்வைத்தார். ஏழு நண்பர்கள, ஒவ்வொருவாரமும் ஒரு புத்தகத்தை அறிமுகம் செய்து எழுத வேண்டும். புத்தகத்தை வாசித்து தொகுத்துக்கொள்ளும் வழக்கத்தை அங்குதான் கற்றுக்கொண்டேன். வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. 2018 ஆம் ஆண்டிற்கு முன்னர் எழுதிய கட்டுரைகளை இப்போது வாசிக்கும்போது சில இடங்களில் முதிர்ச்சியின்மை புலப்படுகிறது. மொத்தம் நான்கு பகுதிகளை உள்ளடக்கியது இந்நூல். முதல் பகுதி பொதுவான விமர்சன கட்டுரைகள். பரந்த பரப்பை தொடுபவை. இரண்டாம் பகுதி ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் முழு தொகுப்பை முன்வைத்து எழுதப்பட்டவை. இக்கட்டுரைகள் தனிப்பட்ட அளவில் எனக்கு நிறைவை அளித்தவை. புனைவு எழுதிய நிறைவையும், துப்பறிந்து எதையோ கண்டடையும் போது ஏற்படும் உவகையும் அளித்தவை. இவ்வகையான கட்டுரைகளை வருடத்திற்கு இரண்டுமுறையாவது எழுத வேண்டும் என எண்ணிக்கொண்டேன். மூன்றாம் பகுதியில் மூத்த எழுத்தாளர்களின் சில கதைகளை வாசித்து எழுதியவை. இவை முழுமையானவை அல்ல. நான்காம் பகுதி இளம் எழுத்தாளர்களின் முதல் தொகுப்புக்கள் பற்றிய கட்டுரைகள். சமகால சிறுகதைகள் தொகுப்பில் மயிலன், திருச்செந்தாழை ஆகியோர் முக்கியமான விடுபடல்கள். வேறு பலரும் அடுத்தடுத்த தொகுப்புக்களை கொணர்ந்துள்ளார்கள். இந்த எல்லைகளை எப்போதுமே நினைவில் கொண்டிருக்கிறேன்.

இந்த தொகுப்பை நண்பன் வினோத்திற்கு சமர்ப்பணம் செய்துள்ளேன். இன்று 'கனாத்திறமுரைத்த கதைகள் ' எழுதிய சித்ரனாக அறியப்படும் வினோத் என் கல்லூரி நண்பன். கல்லூரி மருத்துவமனைகளில் ஒன்றாக இரவுப்பணி பார்த்த்தோம். அவன் வழியாகத்தான் ஜெயமோகனும், ஷோபாவும், லக்ஷ்மி சரவணகுமாரும் எனக்கு அறிமுகம் ஆனார்கள். இன்றுவரை நட்பு தொடர்கிறது. எப்போதும் போல் விஷ்ணுபுரம், சிற்றில், பதாகை மற்றும் மரப்பாச்சி நண்பர்களுக்கு நன்றிகள். விமர்சன நோக்கை கூர்மைப்படுத்தியதில் பங்காற்றியவர்கள். எனது விமர்சன முறைமையை நான் ஜெயமோகன் வழியாகவே கூர்மைப்படுத்திக்கொண்டேன். ஆசிரியரான அவருக்கு எனது நன்றி.. அவரிடமிருந்து வேறுபடும் புள்ளிகளை இத்தொகுப்பின் கட்டுரைகளில் வாசகர் காணக்கூடும். எனது முதன்மை கேள்வி படைப்பாளி பின்தொடரும் கேள்வி எது? அவரை எழுதத்தூண்டும் காரணிகள் எவை? எவை அவரை தொந்திரவிற்கு உள்ளாக்குகின்றன? ஆகியவை தான். எழுதும் சூழலை உறுதி செய்யும் அம்மா, மானசா, சுதிர், சபர்மதி ஆகியோருக்கு அன்பு. இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளை வெளியிட்ட கனலி , தமிழினி, சொல்வனம், பதாகை, ஜெயமோகன் இணையதளம், ஓலைச்சுவடி மற்றும் வாசகசாலை ஆகிய இதழ்களுக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் நன்றி. விமர்சன கட்டுரைகளை தொகுப்பாக்கி புத்தகம் ஆக்குவது என்பது பதினெட்டாம் பெருக்கில் ஓலைச்சுவடிகளை வீசுவதற்கு சமானமானது என்று உணர்ந்தும் நண்பர் ஜீவ கரிகாலன் இதைப் பதிப்பிக்க முன்வந்திருக்கும் தியாகச்செயலையும் தீரத்தையும் மெச்சியாக வேண்டும். 'யாவரும்' பதிப்பகத்துக்கு இன்னும் பல தியாகங்கள் வாய்க்கட்டும்.
சுனில் கிருஷ்ணன்
காரைக்குடி
2-12-2022
December 31, 2022
2022 நினைவுப்பாதை

வழக்கம் போல் வருடக் கடைசியில் கொஞ்சம் நினைவுகளை ஓட்டிப்பார்க்கும் நேரம். பெரிதாக ஏதும் கதைகள் எழுதவில்லை, புதிய புத்தகங்கள் எதையும் வாசிக்கவில்லை. இது பயணங்களின் ஆண்டு. ஜெயமோகனின் அறுபதாம் ஆண்டு நிறைவு, அதையொட்டி சியமந்தகம் வெளியீடு. தமிழ் விக்கி என தொடர் செயல்பாடுகளின் காலம். 2022 எனது இதுவரையிலான வாழ்வில் முக்கியமான ஆண்டு என கருதுகிறேன்.மூன்று பெரிய பயணங்கள் செய்து வந்தேன். மூன்று பெரும் ஆளுமைகளை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த ஆண்டு. ஜூனில் சிம்லா இலக்கிய விழாவில் இந்திய இலக்கிய முன்னோடிகளின் ஒருவரான எஸ். எல். பைரப்பாவை சந்தித்தேன், நவம்பர் மாதத்தில் சிங்கப்பூரில் எனது ஆதர்சங்களில் ஒருவரான டெட் சியாங்கின் உரையை நேரில் கேட்டேன். எல்லாவற்றிற்கும் மேலாக செப்டம்பரில் தரம்சாலாவிற்கு சென்று தலாய் லாமாவை சந்தித்ததை இப்பிறவி பேறாக கருதுகிறேன். அவருடன் இருந்த இருபது நிமிடங்களை என் வாழ்வின் ஆக சிறந்த தருணமாக கருதுகிறேன். இலக்கியத்தில் இனி எனக்கு எந்த விருது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், இதில் இயங்கியதற்காக பயன்மதிப்பை அடைந்துவிட்டேன்.

காந்திக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் என்னை தலாய் லாமாவரை கொண்டுவந்து விட்டார். இதை இப்போது எழுதும்போது கூட அவரது தொடுகையின் சிலிர்ப்பை, அவரது உரத்த சிரிப்பை நினைவுகூர்கிறேன். அவருடைய ஆசிகளுக்கு நான் தகுதியுடையவனா என தெரியவில்லை. ஆனால் அதை ஈட்டிக்கொள்ள வேண்டும். அதுவே எஞ்சிய வாழ்வின் இலட்சியமாக இருக்க வேண்டும். சிம்லா பயணத்தைப் பற்றி அங்கு சந்தித்த பிற மொழி எழுத்தாளர்களை பற்றி எழுத வேண்டும் என எண்ணியிருந்தேன். நேரம் வாய்க்கவில்லை. தலாய் லாமாவிடம் ஆசிபெற்றதைப்பற்றி என்னால் எழுத முடியுமா எனத்தெரியவில்லை. சொற்களாகாத பகுதியிலேயே அது சேகரமாகட்டும்.
இந்த ஆண்டு ஒண்ணெயோன்னு கண்ணே கண்ணு என ஒரேயொரு சிறுகதைதான் எழுதினேன். அதுவும் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் தீபாவளி மலருக்காக கேட்டதனால். நெடுநாட்களுக்கு பின் எழுதினாலும் கதையெழுதும் ஆற்றல் நம்மை கைவிடவில்லை எனும் நிறைவை தக்கவைத்துக்கொண்டேன்.

முதலில், நாமெல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அந்த நற்செய்தியை (நற்செய்தியா- தெரியவில்லை, ஆவலோடு எதிர்பார்க்கிறார்களா என்ன- சும்மா சொல்லிப்பார்ப்பதுதான்) இயம்பி- ஆம் நாவல் எழுதத் தொடங்கியிருக்கிறேன். நிதானமாக நகர்கிறது, எத்தனை அத்தியாயங்கள், எத்தனை பக்கங்கள் என ஏதும் தெரியவில்லை. விஷ்ணுபுரம் விழாவில் ஜெயமோகனிடம் 'புனைவு எழுத வருமா என்றே எனக்கு ஐயம் வந்துவிட்டது. அதைத் தவிர்க்க அடுத்தடுத்து ஏதோ செய்துகொண்டே இருக்கிறேன். இப்போது நான் என்ன செய்ய?' என கேட்டேன். அவர் என்ன சொல்வார் என்பது எனக்கு தெரியும். ஆனாலும் அவரிடமிருந்து அந்த சொல்லை பெறுவது நல்லது. பிடிவாதமாக எழுதவும் என்பதே ஜெ எனக்கு சொன்ன ஆலோசனை. விடாமல் பத்துநாட்கள் எழுதவும், தானாக சரியாக வரும் என்றார். விழா முடித்து மறுநாள் எழுத தொடங்கினேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதிய நீள்கதையை நாவலாக மாற்ற முடியும் என தோன்றியது. அந்தக் கதையை ஜெ பலிக்கல் எழுதுவதற்கு முன்னரே எழுதியிருந்தேன். நிறைய ஒற்றுமைகள். கதையை கைவிட மனமில்லை. வேறொரு புள்ளியிலிருந்து வேறொரு கேள்வியுடன் அணுக முடியுமா என பார்க்கிறேன். ஆகவே எழுத தொடங்கியுள்ளேன். முதல் சில நாட்கள் ஏனோதானோவென சில வரிகள் எழுதினேன். பழகிய தடங்களில் , வசதி வட்டத்திற்குள் மனம் உழன்றபடி இருந்தது.

நாவல் எழுதுவது என்பது மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவம். ஒரேமனநிலையில் நீண்டகாலம் திளைத்திருப்பது. புதிதாக ஏதோ ஒன்றை கண்டறிவது. நாம் நன்கறிந்த பொருளையே புதிய ஒளியில் காண்பது. மொழியும் போதமும் கூராகும். சிலவகையான இசை, சில வகையான புத்தகங்கள் மட்டுமே வாசிப்பது என அந்த மனநிலையிலேயே நீடிப்பது ஒரு போதை. பார்க்கும், படிக்கும், கேட்கும் விஷயங்கள் எல்லாம் நாவலின் ஒரு பகுதியா இல்லையா எனும் அளவையைக் கொண்டே அளக்கப்படும். கடந்த திங்கள்கிழமை இதுதான் நாவலின் முதல் அத்தியாயம் என கருதத்தக்க ஒரு புள்ளி அகப்பட்டது. அதுவரை இருளில் துழாவிக்கொண்டுதான் இருந்தேன். இந்த தூரத்து வெளிச்சம் போதும். நாவலை எழுதிவிட இயலும் எனும் நம்பிக்கையை எனக்களிக்கிறது. தொன்மத்தில் இருந்து வரலாற்றுக்கு என்னை இட்டுச் சென்றுள்ளது. தொடர்பான வாசிப்புகளையும் தேடல்களையும் நிகழ்த்தி வருகிறேன். எப்படி வருகிறது என பார்ப்போம்.

கடந்த ஆண்டு இறுதியில் மொத்தம் ஐந்து நூல்கள் வெளியாகின (நண்பர் பழுவேட்டையரையும் சேர்த்து). பழுவேட்டையர் அவருக்கென ரகசிய வாசிப்பு வட்டத்தை அடைந்துள்ளார். அவரிடம் கூறியபோது "சந்தோஷப்பட முடியல தம்பி" என கண்ணாடியை கழட்டிவிட்டு கண்ணை துடைத்துக்கொண்டார். "நம்ம கதைங்களுக்கு ஏற்பு இருக்குதுன்னா இந்த இலக்கிய சூழல் எம்புட்டு ஆபத்தான நிலைமையில இருக்குன்னு கவனிக்கணும்." என்றார். "எல்லாம் சேர்ந்தது தான் இலக்கிய சூழல்" என ஆறுதல் படுத்திவிட்டு வந்தேன்.

இந்த வருடம் உருப்படியாக செய்தவற்றில் ஒன்று கம்பராமாயண கற்றல். நேற்றோடு ஆரண்யகாண்டம் முடித்தோம். இம்பர்வாரி குழுமத்தில் வாரம் மூன்று நாட்கள் சேர்ந்து கம்பனை வாசிக்கிறோம். பிரபு, பார்கவி, சுந்தரவடிவேலனோடு சேர்ந்து கம்பனுக்கு உரிய மாசிமாத அஸ்த திருநாள் அன்று நாட்டரசன்கோட்டை கம்பர் சமாதிக்கு சென்றோம். உள்ளேயே அமர்ந்து சில பாடல்களை பாடினோம். பரவசமான அனுபவம். மீண்டும் போகனை அங்கே அழைத்துச் சென்றேன். சத்திய சோதனை வேலையில் பலநாள் இடையில் கம்பன் அமர்வுகளில் பங்குபெறாமல் இருந்தேன். இப்போது ஓரளவு தொடர்ச்சியாக பங்குபெறுகிறேன். ஸ்ரீனிவாசனும் பார்கவியும் அலுப்பில்லாமல் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். ஐநூறு, ஆயிரம், காண்டம் நிறைவு என முற்றோதல்கள் செய்கிறோம். முற்றோதல்கள் பெரும் கொண்டாட்டமானவை. விதவிதமான மெட்டுக்கள், என ஒருவாரம் முன்பிருந்தே தயாராவோம். ரம்யா தாடகைக்காக பிரத்யேக மேக்கப் எல்லாம் செய்து வந்தார். கூனிக்கு என தனிக்குரல் கொடுத்தார் பார்க்கவி. ஜமீலாவும் பார்க்கவியும் அபாரமான பாடகர்கள். கம்பனை கற்பதில் நான் இன்னும் கொஞ்சம் உழைப்பு போட வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.

காந்தியர்களைப் பற்றிய 'ஆயிரம் காந்திகள்' நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பதிப்பு முடிந்ததாக அறிகிறேன். நீலகண்டம், அன்புள்ள புல்புல், அம்புப்படுக்கை ஆகியவை புதிய பதிப்பை கண்டதாக ஜீவ கரிகாலன் சொன்னார். 'நீலகண்டம்' 'அம்புப்படுக்கை' ஆகியவற்றுக்கு புதிய வாசிப்புகள் வந்தவண்ணம் உள்ளன. 'அம்புப்படுக்கை' விருது பெற்ற நூல் என்பதால் கவனிக்கப்படுவதில் ஆச்சரியம் இல்லை. நீலகண்டம் வெளியான காலத்தில் கலவையான ஏற்பையே பெற்றிருந்தது. நாம் ஏதும் செய்வதற்கு இல்லை என்றாலும், இப்போது கூடுதல் ஏற்பை பெறுவது மகிழ்வளிப்பதாக உள்ளது. பரிசல் வெளியிட்ட 'காந்தியை சுமப்பவர்கள்' தொகை நூலும் ஓரளவு கவனம் பெற்றது என்றே எண்ணுகிறேன். ஆயுர்வேத மருத்துவர் டாக்டர். இல. மகாதேவனுடனான நேர்காணல் நூலான 'முதற்கால்' பற்றி பெரிய எதிர்வினை ஏதும் வரவில்லை.
இந்த ஆண்டு எனது நேரத்தின் பெரும்பகுதியை எடுத்துக்கொண்ட பணி 'சத்தியத்துடனான எனது சோதனைகளின் கதை' (சத்திய சோதனைக்கு உள்ள அசல் தலைப்பு) மொழியாக்கம் தான். அடிக்குறிப்புகளுடன் ஆயிரம் பக்கங்கள் வரும். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இழுத்த வேலை. இந்த ஆண்டு முடித்தே ஆகவேண்டும் எனும் முனைப்புடன் ஈடுபட்டேன். அக்டொபர் மாதம்தான் மொழியாக்கம் நிறைவானது. இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு வந்துவிடும் என எதிர்பார்த்தேன். ஆனால் மீள்வாசிப்பிற்கு உட்படுத்தப்படுவதாக அறிகிறேன். வரும் ஆண்டில் 'காலச்சுவடு' வெளியீடாக வெளிவரும் என நம்புகிறேன்.

இந்த நூலின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நூலை முடித்த கையோடு 'இனி மொழியாக்கம் செய்வதில்லை' எனும் முடிவுக்கு வந்துள்ளேன். எப்போதாவது எனது தேர்வின் பேரில் நானே ஏதேனும் செய்தால் உண்டு. புனைவற்ற எழுத்துக்களை மொழியாக்கம் செய்வதில்லை என்பதே தீர்மானம். மொழியாக்கம் தேவையில்லை என்றோ அல்லது இழிவானது என்றோ கருதவில்லை. எனது ஆற்றலை அதிகமும் அதற்கு அளிக்க விரும்பவில்லை. அதேப்போல் மற்றொரு தீர்மானமும் உண்டு. கடந்த ஆண்டு உள்ளூர் வெளியூர் என எக்கச்சக்க மேடையுரைகள். என்னால் அத்தனை எளிதில் 'மறுப்பு' சொல்ல முடியாது எனும் பலவீனத்தினால் விளைந்தது. இனி கொஞ்ச நாட்களுக்கு மேடையுரைகள் நிகழ்த்தக்கூடாது என முடிவெடுத்த நேரத்திலேயே. அஜியின் மைத்ரி நாவல் விமர்சன கூட்டத்தில் பேச ஒப்புக்கொண்டுள்ளேன். கொல்கத்தாவில் சாஹித்ய அகாதமி ஏற்பாடு செய்யும் இளம் எழுத்தாளர் கூடுகையில் பங்குபெற ஒப்புக்கொண்டுள்ளேன். சமூக ஊடகங்களிலும் நான் இல்லை என்பதால் இத்தகைய நிகழ்வுகளைத் தவிர்த்தால் முற்றிலும் இப்படியான ஒரு ஆள் இருப்பதையே தமிழில் மறந்துவிடுவார்களோ எனும் குழப்பமும் உண்டு. மறந்தால் என்னவாம்? எனும் பதில் கேள்விக்கு என்னிடம் விடையில்லை. மேடையுரைகள் அல்லது நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக்கொள்வது அத்தனை எளிதான காரியம் இல்லை. வண்ணநிலவன் படைப்புலகம் குறித்தோ அழகிரிசாமி கதைகள் குறித்தோ உரையாற்ற வேண்டும் என்றால் எனக்கு ஒரு மாதம் ஆகும். மொத்தமாக வாசித்து, குறிப்பெடுத்து, கட்டுரையாக்கி, மேடைக்கு தகுந்த வடிவில் சுருக்கி. ஆனால் இந்த வகை முயற்சிகள் பலனளிப்பவையும் கூட. ஏனெனில் இப்படியான ஒரு நிர்பந்தம் இல்லையென்றால் அழகிரிசாமியையோ வண்ணநிலவனையோ முழுமையாக வாசிக்க மாட்டேன். பொது தலைப்புகளில், காந்தி உரைகள் ஆற்றும்போது முடிந்தவரை திரும்ப சொல்வதை தவிர்க்க விரும்புகிறேன். மூன்று நாட்களாவது ஆகும். கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டால் அங்கே வரும் அத்தனை எழுத்தாளர்களையும் வாசித்திருக்க வேண்டும் என்பது எனக்கு நானே விதித்துக்கொண்டது. பல சமயங்களில் இதையெல்லாம் ஏன் செய்கிறோம் என தோன்றும். அன்பு,பொருளியல் வரவு, மரியாதை என இவற்றில் ஏதேனும் ஒன்றாவது இருக்க வேண்டும். இந்த ஆண்டு சத்திய சோதனைக்கு இட்ட மற்றொரு பலி மரப்பாச்சி கூடுகைகள். மொத்தமே மூன்று நாங்கோதான் நடத்தினோம். மயிலான் பங்குபெற்ற மார்ச் மாத கூடுகை மிக சிறப்பாக நடந்தது. அதற்கு பின்னர் எழுத்தாளரை அழைத்து நடத்தவே இல்லை. வரும் ஆண்டில் மீண்டும் ஒழுங்காக நடத்த வேண்டும்.

புத்தக கண்காட்சிக்காக இரண்டு நூல்கள் வெளியாகவுள்ளன. இரண்டுமே யாவரும் பதிப்பக வெளியீடு. 'சமகால சிறுகதைகளின் செல்நெறி & பிற கட்டுரைகள்' சிறுகதைகள் பற்றி எழுதிய விமர்சன கட்டுரைகளின் தொகுப்பு. விமர்சன கட்டுரைகளில் சில அசலான கண்டுபிடிப்புகளை தொட்டறியும்போது புனைவின் அதே திளைப்பை என்னால் அடைய முடிகிறது. 'மரணமின்மை எனும் மானுடக் கனவு' ஆயுர்வேத கட்டுரைகளின் தொகுப்பு. இதற்கு இன்னொரு பகுதி வரும் என எண்ணுகிறேன்.

ஜெ அறுபது நிகழ்வு முடிந்த கையேடு அங்கிருந்தே விமானம் ஏறி அமிர்தசரஸ் சென்று சேர்ந்தேன். விழா அன்று காலையில் பேரூர் சிவன் கோவிலில் ஜெயும் அருணா அக்காவும் மாலை மாற்றிக்கொண்டது மனதை பொங்க செய்தது. நண்பர்கள் சேர்ந்து கொண்டு வந்த சியமந்தகம் நூலை பார்த்தபோது நிறைவாக உணர்ந்தேன். அழிசி ஸ்ரீனிவாசன் இந்நூல் உருவாக்கத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பை ஆற்றியுள்ளார். நூல்வனம் மணிகண்டன் அற்புதமாக அச்சாக்கி கொடுத்தார். முன்மாதிரியற்ற மணிவிழா மலர்.

இந்தவருடம் மற்றொரு மிக முக்கியமான தொடக்கம் 'தமிழ் விக்கி'. காளிபிரசாத் ஒருமுறை ஜெயை விஸ்வாமித்ரனோடு ஒப்பிட்டு பேசினான். நீ என்னடா எனக்கு சொர்க்கத்தை கொடுக்கிறது, நானே எனக்கான சொர்க்கத்தை உருவாக்குகிறேன் என திரிசங்கை உருவாக்கிய முனி. 'வாயில் காப்பாளர்களை' எரிச்சல் படுத்தும். ஏனெனில் அவர்கள் தங்களுக்கு வரம்பற்ற அதிகாரம் உள்ளதாக கற்பிதம் செய்கிறார்கள். ஜெ அவற்றை தகர்க்க மாற்று அமைப்புகளை உருவாக்கியபடி இருக்கிறார். உரியநேரத்தில் நாஞ்சில் நாடனுக்கும், வண்ணதாசனுக்கும் சாகித்திய அகாதமி கொடுக்கப்பட்டிருந்தால் விஷ்ணுபுரம் விருதே தேவைப்பட்டிருக்காது என எண்ணிக்கொள்வேன். பல்வேறு சர்ச்சைகள், எதிர் கருத்துக்கள் என தமிழ் விக்கி நெருப்பாறை நீந்தி நிலைக்கொண்டுவிட்டது. இதில் எனது பங்களிப்பு என்பது 'மக்கள் தொடர்பு அதிகாரி' என்ற அளவில் தான். அதிக எண்ணிக்கையில் கட்டுரைகளை எழுதவில்லை. ஆசிரியர் பொறுப்பிற்கு உகந்தபடி வரும் ஆண்டில் மேலும் முனைப்புடன் எழுத வேண்டும். 'நித்ய வனத்தில்' செம்பக மரத்தை நட்டபோது வெகுவாக உணர்ச்சி வயப்பட்டிருந்தேன்.

2019 ஆம் ஆண்டு ' Mahathma Gandhi in Tamil' நூலை தொகுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மிக குறுகிய காலத்தில் வேண்டும் என கேட்டதால், மூன்று மாதத்தில் தொகுத்துக்கொடுத்தேன். நண்பர் த. கண்ணன் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். 2020 ஆம் ஆண்டில் எங்கள் கைப்பிரதியை ஒப்படைத்துவிட்டோம். கொரோனா காரணங்களால் அது பதிப்பிக்கப்பட்ட தாமதம் ஆனது. இந்த ஆண்டு பாரதிய வித்யா பவன் அந்நூலை நல்லவிதமாக வெளியிட்டது. இந்திய மொழிகளில் இப்படியான ஒரு வரிசையை கொண்டு வரும் முயற்சியில் பாரதிய வித்யா பவன் உள்ளது.

வங்காளம், கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழி தொகுதிகளை தரம்சாலாவில் தலாய்லாமா வெளியிட்டார். அங்கு ஷோடங் ரின்போச்சே அவர்களையும் சந்தித்த்தோம். ரமேஷ் ஓசா, ஜெகதீஷ் லக்கானி , ஷியாம் பக்ரே, மற்றும் அவரது கல்லூரி முதல்வர், ஆகியோருடன் நானும் சென்றேன். அம்ரிஸ்தர் தங்கக்கோவிலை பார்த்துவிட்டு அங்கிருந்து சாலைவழி மாலையில் சென்று சேர்ந்தோம். என் வாழ்நாளில் அத்தனை அழகான சூரிய அஸ்தமனத்தை நான் பார்த்ததில்லை. எழுத்தாளர் கணேஷ் தேவிக்கு நன்றி சொல்ல வேண்டும். ஷ்யாம் தான் எடிட் செய்த இம்மூன்று தொகுதிகளில் தமிழே முதன்மையானது என சொன்னது மிகுந்த நிறைவை அளித்தது. புத்தகத்தை தலாய்லாமா வெளியிடவுள்ளார் என்பதை தகவலாகத்தான் சொன்னார்கள். நான்தான் இதை விட்டால் வாய்ப்பு கிடைக்காது என வண்டியில் ஏறிக்கொண்டேன். பலமுறை திட்டமிடப்பட்டு தள்ளி போனது. மொழியாக்கம் செய்த கண்ணன் தண்டபாணியையும் இழுத்துக்கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் நானே வேண்டா விருந்தாளி என்பதால் கண்ணனுக்காக என்னால் குரல் கொடுக்க முடியவில்லை எனும் குற்ற உணர்வு எனக்கு உண்டு. ஷியாம் இந்த பயணத்தின் ஊடே நல்ல நண்பராக ஆனார்.
இந்த ஆண்டு நிறைய வெளிமாநில/ வெளிநாட்டு எழுத்தாளர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டியது. சிம்லாவில் சம வயது எழுத்தாளர்களின் நட்பு கிட்டியது. குஜராத்தியில் சம்விதி எனும் அமைப்பை நடத்திவரும் தர்ஷினி தாதாவாலா, வங்காள எழுத்தாளர்களான நபணீதா தாஸ் சென்குப்தா, அமித் ஷங்கர் சஹா, நீலோத்பல், அருணி சவுரப் ஆகிய இந்தி எழுத்தாளர்கள். மொழிபெயர்ப்பாளர் கல்யாணராமன். சிங்கப்பூரில் சந்தித்த அமெரிக்க இந்திய எழுத்தாளரான அகில் சர்மா. சிங்கப்பூர் எழுத்தாளர்களான கிளாரா சோ, போயே கிம் செங், பதிப்பாளர் எட்மண்ட் வீ என பெரும் பட்டியலை போடலாம். இறுதியாக மமங் தாய் எனும் அருணாச்சல பிரதேச எழுத்தாளரையும் ரைட்டர் சைடு கனிஸ்கா குப்தாவையும் விஷ்ணுபுர விழாவில் சந்தித்தேன். .

வருமாண்டில் எழுதிக்கொண்டிருக்கும் நாவலை நிறைவு செய்ய வேண்டும். கொஞ்சம் குறுங்கதைகள் எழுத வேண்டும். இரண்டோ மூன்றோ மொத்த படைப்புலக கட்டுரைகளை எழுத வேண்டும். நிறைய வாசிக்க வேண்டும். உருப்படியான பயணங்களில் ஈடுபட வேண்டும். உடலும் மனமும் ஒத்துழைக்க வேண்டும். ஆயிரம் மணிநேர வாசிப்பு போட்டியை நடத்துகிறோம். அதை நிறைவு செய்ய முயல வேண்டும். படைப்பூக்கம் மிக்க ஆண்டாக அமைய வேண்டும் என்பது மட்டுமே கனவு. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
December 25, 2022
காயா கோப்பியுடன் சில கதைகள் - சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2022 – சில நினைவுகள்
(நண்பர் சிவானந்தம் நீலகண்டன் கேட்டுக்கொண்டதன் பேரில் சிராங்கூன் டயம்ஸ் இதழில் எழுதிய குறிப்பு. இந்த பயணத்தை இனிமையாக்கிய நண்பர்கள் சரவணன், சித்துராஜ், சத்யா, ராம், சுஜா, ஷானவாஸ், லதா, இன்பா, சித்ரா, அயிலிஷா, லோஷினி, சிவானந்தம், மகேஷ் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. கிருத்திகா, பொன். சுந்தரராசு, மணிமாலா மதியழகன் ஆகிய படைப்பாளிகளை சந்திக்க முடிந்தது மகிழ்ச்சியளித்தது. )

இது எனது மூன்றாவது சிங்கப்பூர்ப் பயணம். முதலிரண்டு முறை இருந்த ஊர்சுற்றும் பரபரப்பும், ஊருக்கு ஏதேனும் வாங்கிச்செல்ல வேண்டிய ஆர்வமும் இம்முறை வடிந்துவிட்டன. அனைத்துலக இலக்கிய விழாவான ‘சிங்கப்பூர் எழுத்தாளர் விழா’ நிகழ்ச்சிகளில் முடிந்தவரை பங்கேற்று அனுபவத்தைச் செறிவாக்கிக்கொள்ள வேண்டும் என விரும்பினேன். ஏனெனில் நான் அழைக்கப்பட்டிருந்தாலும் அது என் ஒருவனுக்கான தனிப்பட்ட அழைப்பு அல்ல. ஒரு மொழியின், நவீனத் தமிழ் இலக்கிய மரபின் பிரதிநிதிக்கான அழைப்பு.
நவம்பர் 4 தொடங்கி 21 வரை நீடித்த 25-ஆவது சிங்கப்பூர் விழாவிற்கு ஆசிய படைப்பூக்க எழுத்து செயல்திட்டத்தின் மூலமாக அழைக்கப்பட்டேன். எழுத்தாளர் எம்.டி. முத்துக்குமாரசாமி, ஓவியர் மருது ஆகியோர் நான் செல்வதற்கு முந்தைய வாரம் அழைக்கப்பட்டிருந்தனர். விழா நடக்கும் ‘ஆர்ட்ஸ் ஹவுஸ்’ வளாகத்திற்கு அருகிலேயே எனக்குத் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நண்பர் சரவணன் எனக்காக விடுதியில் காத்திருந்தார். எனக்கு ஒதுக்கப்பட்ட அறையின் எண் 420. "நம்பரே சரியில்லையே" என சிரித்துக்கொண்டோம்.
நானும் சரவணனும் விடுதியிலிருந்து ‘மிண்ட்’ (Moment of Imagination and Nostalgia with Toys) அருங்காட்சியகத்திற்கு சென்றோம். விடுதி அருகிலேயே என்பதால் நடந்தே சென்றோம். ஐந்து தளங்கள் கொண்ட அருங்காட்சியகம். தொல்காலத்திலிருந்து பொம்மைகள் அடைந்துள்ள பரிணாமத்தைக் குறித்து ஒரு சித்திரம் கிட்டியது. பொம்மைகளின் உருவாக்கத்தில் பொதிந்துள்ள வணிகம், அரசியல் என மிக சுவாரசியமான தகவல்கள். இரண்டாம் உலகப்போர்ப் பின்புலத்தில் உருவான ராணுவ வீரர்கள், சீனக் கலாச்சாரப் புரட்சியைக் குறிக்கும் பொம்மைகள், விண்கலங்கள், வேற்றுகிரக வாசிகள், ‘பார்பி’க்கள், ‘பாப்பாய் தி செய்லர்’ என ஒவ்வொன்றுக்கும் பின்னுள்ள வரலாறு காட்டப்பட்டிருந்தது.
மைக்கேல் லீ எனும் பொம்மை வடிவமைப்பாளரை அறிந்துகொண்டேன். ஹாங்காங் அகதிகளை மையமாகக் கொண்டு கையாலேயே பொம்மைகள் செய்தவர். புனைவுக்குரிய வாழ்க்கை. பொம்மைகளின் வடிவமைப்பும் இடுபொருட்களும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நிலபரப்பில் எப்படி மாறிவந்திருக்கின்றன எனப் பறவைக் கோணத்தில் பார்க்கமுடிந்தது. இன்று அத்தகைய பண்பாட்டுத் தனித்துவங்கள் பொம்மைகளில் இல்லை என்றே தோன்றுகிறது. மி யிங் யீ எனும் தைவான் எழுத்தாளரின் 'ஸ்டோலன் பைசைக்கிள்' நாவலில் சைக்கிள் வடிவங்களின் பரிணாமம் வழியாகவே ஒரு வரலாறு சொல்லப்படும். இப்படி நாம் புழங்கும் எந்த ஒன்றையும் வரலாற்று நோக்கில் பார்த்தால் அதிலிருந்து கதையாக ஆக்க முடியும் எனத் தோன்றியது.

மாலையில், விழா நடக்கும் ஆர்ட்ஸ் ஹவுஸ் வளாகத்திலிருந்த, தற்காலிகப் புத்தகக்கடையில் என் புத்தகங்களைக் கொடுத்துத் திரும்பினேன். இரவு விளக்கில் சிங்கப்பூர் நதியையொட்டிய நகர்ப்பகுதியைக் காண்பது ஒரு தனி அனுபவம்.
அடுத்தநாள், முற்பகலில் எனக்கான அரங்கு ஆசிய நாகரிக அருங்காட்சியகத்தில் இருந்தது. எழுத்தாளர்கள் அகில் சர்மா, போயெ கிம் செங், கிளாரா சோ, சோபியா மரியா மா ஆகியோருடன் நானும் பங்கேற்ற ஆங்கில அமர்வு அது. எங்கள் அமர்வின் தலைப்பு ‘Glocalized Identity’. தோராயமாகத் தமிழில் ‘உலகவுள்ளூர் அடையாளம்’ எனலாம். ஆங்கிலம் அன்றாடம் புழங்கும் சூழலில் நான் இல்லை என்பதால் நாக்கு புரண்டு சிந்திப்பது சரியாக வெளியே வரவேண்டுமே என்ற பதட்டம் எனக்கிருந்தது. மற்ற அனைவருமே நேரடியாக ஆங்கிலத்தில் எழுதுகிறவர்கள். கிளாரா சோ சீனத்திலும் எழுதுகிறார்.
கிளாரா சோவின் 'Bare bones' கதை எனக்குப் பிடித்திருந்தது. சிங்கப்பூரில் டைனோசர் எலும்பு கண்டடையப்பட்ட பின்புலத்தில் எழுதப்பட்ட கதை. நுகர்வுப் பண்பாட்டை நுண்மையாக விமர்சிக்கிறது. சோபியா மரியா மா இளம் எழுத்தாளர். இரண்டோ மூன்றோதான் கதைகள் எழுதியுள்ளார். பருவநிலை மாற்றம் பற்றிய சுவாரசியமான புனைவு. போயெ ஒரு கவிஞர். ஏழெட்டுக் கவிதைகளை வாசித்த அளவிலேயே எனக்கு மிகவும் பிடித்துப்போனார். அமையமுடியாமை, அமைதிக்கான ஏக்கம் ஆகியவற்றை அவரது கவிதைகளில் உணர்ந்தேன். நகரத்திற்குள் இருந்தபடி அங்கிருந்து சதா தப்பித்துப் போக நினைப்பவர், தப்பிக்கும் கனவுகளைக் கொண்டவர். அகில் சர்மா இந்திய வம்சாவளி அமெரிக்க எழுத்தாளர். அவரது An Obedient Father நாவல், தந்தை மகள் பிறழ் உறவை மையமாகக் கொண்டது. அதை அவர் எழுதியிருந்தவிதம் உண்மையில் பெரும் வியப்பை அளித்தது. கதை நாயகனின் மீது நமக்கு ஏற்படும் அசூயையே அவரது நாவலின் வெற்றி.

“உங்கள் எல்லோரையும் படித்து என் வீட்டுப்பாடத்தை முடித்துவிட்டுதான் வந்தேன். ஆனால் உங்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டாது. ஏனெனில் எனது எந்தக் கதையும் ஆங்கிலத்தில் இல்லை” எனத் தொடங்கினேன். உண்மையில் நான் என் நிலத்தின் உலகளாவிய குரலா? என்ற கேள்வியை எனக்குள் எழுப்பிக்கொண்டபோது சற்றுப் பொருத்தமற்றவனாக உணர்ந்தேன். ஆனால் அவர்களுடையதைவிட சற்றும் என் எழுத்தைக் குறைவாக உணரவில்லை.
அறிவியல் புனைவு எழுத்தாளராக அறிமுகப்படுத்தப்பட்டேன். எத்தனை அறிவியல் புனைவுக் கதைகள் எழுதியிருக்கிறேன் எனக் கேட்கப்பட்டபோது ஒவ்வொரு சிறுகதைத் தொகுப்பிலும் இரண்டு கதைகள் எனச் சொன்னதை அதிர்ச்சியுடன் எதிர்கொண்டார்கள். மேற்கைப்போலத் தனித்த வகைமைகளாக (genres) அல்லாமல் தமிழில் ஒரேதொகுப்பில் பல்வேறுவகைக் கதைகள் அமைவதை விளக்கினேன். என்னுடைய 'இமாம் பசந்த்' கதையிலிருந்து ஒரு பகுதியை நண்பர் நம்பி மொழிபெயர்ப்பு செய்து கொடுத்திருந்தார். அதை வாசித்தேன். ஒரளவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றது.
சில கேள்விகளுக்கு உருப்படியாக பதில் சொன்னேன் என்றே நினைவு. “நான் உலகத்தை நோக்கிப் பேசவேண்டும் என்பதில்லை, எனது கதையில் லேய்ஸ் சிப்ஸோ, சாம்ஸங் கைபேசியோ வருகிறது எனில் உலகம் என்னை நோக்கி என் கதைக்குள் வந்துவிட்டது எனப் பொருள். படைப்பூக்கம் உலகளாவியப் பொதுத்தன்மையுடையது. சிவன் தலை கங்கையைப் போல், மண்ணுக்கு இறங்கி நிலப் பரப்புக்கு ஏற்ப மாறி வருகிறது. பண்பாடும் சூழலும் உலகளாவியப் பொதுத்தன்மைகளுக்குச் சில திசைவழிகளை உருவாக்குகிறது” என்றேன்.

அமெரிக்கவாசிகளுக்காக இந்தியர்களின் வாழ்வை எழுதுகிறேன் என்றார் அகில். ஆகவே அந்த பிரக்ஞை கதையின் பேசுபொருள், விவரிப்பு என எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்றார். நல்ல வேளையாக நமக்கு அத்தகைய இக்கட்டு ஏதுமில்லை. தமிழில் நாம் வருங்கால வாசகர்களுக்காக அல்லவா எழுதுகிறோம்! ஏனோ அந்த அமர்வு எடுத்துக்கொண்ட பேசுபொருளை சரியாக விவாதிக்கவில்லை எனும் எண்ணம் ஏற்பட்டது. சம்பந்தமில்லாத கேள்விகளால் அகில் சற்றுக் கடுப்பானார்.
அவ்வமர்வு முடிந்ததும் நானும் நண்பர் சத்யாவும் கணினி விளையாட்டுக்கு எழுதுவது பற்றிய அமர்வுக்குச் சென்று அமர்ந்தோம். பெரும் எண்ணிக்கையில் இளைஞர்கள் கூடியிருந்தார்கள். விளையாட்டு எழுதுதல், விளையாட்டுக் கதையாடல் வடிவாக்கம் (Game writing, Narrative design) என இரண்டு தளங்கள் உள்ளன. கதையாடல் வடிவாக்கம் செய்பவர் ஏறத்தாழ ஒரு திரைக்கதை ஆசிரியர்தான். ஒரு திரைக்கதையாசிரியர் தான் உத்தேசிக்கும் அதே உணர்வைப் பார்வையாளருக்குக் கடத்திவிட்டால் போதும். ஆனால் விளையாட்டுக் கதையாடல் வடிவமைப்பாளரின் நிலை சிக்கலானது. இதில் பார்வையாளரைப் போலன்றி விளையாடுபவர் கதைக்குள்ளேயே உள்ளவர். அவருக்குக் கதைக்குள் சில தேர்வுகள் சாத்தியம். மிக நல்ல அமர்வு. வழக்கமான இலக்கிய விழாக்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் சாத்தியமில்லை.
அன்று பிற்பகல் 4 மணிக்கு எழுத்தாளர் ஷாநவாஸ், முகமது அலி, வசுந்தரா ஆகியோர் பங்குபெற்ற உணவுக்கும் இலக்கியத்திற்குமான உறவைப்பற்றிய உரையாடல் அரங்கு ஏற்பாடாகியிருந்தது. பதினைந்து இருபது பார்வையாளர்கள் இருந்திருக்கலாம். ஷாநவாஸ் அருமையான உரையாடல்காரர். சிங்கையில் லோட்டா நிரம்பக் காபி குடித்துப் பழகியவர்கள் சென்னையில் தக்குனூண்டு டம்ப்ளரில் குடிக்க நேரும்போது ஒரு ஆளுக்கு நாலு காபி ஆர்டர் செய்யும் வழக்கத்தைப் பற்றி ஷாநவாஸ் வேடிக்கையாகச் சொன்னார். அவர் பேசுவதைக் கேட்டே நாம் சில கதைகளை எழுதிவிடலாம். முதல்முறை சிங்கப்பூர் வந்தபோது நாளைக்கு மூன்றுமுறை மைலோ குடித்து தலைசுற்றிய அனுபவத்தை நினைத்துக்கொண்டேன். வசுந்தரா தகவல்களுடன் செறிவாகப் பேசினார். சிங்கப்பூர் உணவென்பது எப்படி வெவ்வேறு பண்பாடுகளின் கலவையில் உருவானது என்பதைக் குறித்து அறிந்துகொள்ள முடிந்தது. உரையாடல் செறிவாக இல்லாமல் அலைபாய்ந்ததாக ஓர் உணர்வு எனக்கு.
அந்த அமர்வு முடிந்தவுடனேயே எனது அமர்வு தொடங்கியது. கவிஞர் இன்பா நெறியாள்கை செய்தார். ஒன்றரை மணிநேரம் காந்தி குறித்துப் பேசினோம். அதிகம் பேர் கலந்துகொள்ளவில்லை எனினும் நான் எழுத்தாளர், பேச்சாளர் அல்ல. பேச்சாளர்கள் கூட்டத்திலிருந்து தங்கள் ஆற்றலைப் பெற்றுக்கொள்பவர்கள். எழுத்தாளருக்கு அப்படி ஏதுமில்லை. ஒருவர் இருந்தாலும் ஆயிரம்பேர் இருந்தாலும் என் உரைக்கு பாதிப்பு ஏற்படாது. எனது சிறந்த உரைகளுள் ஒன்றாக நான் கருதுவது தென்காசி புத்தகத்திருவிழாவில் ஆயிரம் காலி இருக்கைகளும் பத்துப் பதினைந்து மனிதர்களும் இருந்த சபையில் ஆற்றியதுதான்.
அடுத்தநாள், எழுத்தாளர் விழாவின் இயக்குனர் பூஜா நான்சியுடன் காலையுணவுக்கு அழைப்பு வந்திருந்தது. ‘காயா டோஸ்ட்’ உண்டோம். அவர் எல்லோருடனும் ஓரிரு நிமிடங்கள் பேசியாக வேண்டும். என்னருகே அமர்ந்த இருவருடன் பேசினேன். ஒருவர் இஸ் யுனியாத்தோ (Is Yuniarto). இந்தோனேசிய வரைகதை (காமிக்ஸ்) கலைஞர். The Grand Legend of Ramayana என்ற ஒரு வரைகதைத் தொடரை ஜப்பானிய ‘மாங்கா’ பாணியில் உருவாக்கியுள்ளார். இராமனும் இலட்சுமணனும் கோட்டு சூட்டுடன் இருந்தார்கள். சீதையின் கற்பெல்லாம் அங்கு சிக்கல் இல்லை. அவளிடம் இருக்கும் அபூர்வ ஆற்றலைக் கவர முயல்கிறான் இராவணன். தான் வரைந்திருந்த சில ‘பேனல்’களைக் காட்டினார். படைப்பூக்கம் மிகுந்திருந்தது.
இஸ் யுனியாத்தோ, 'கருடாயன' என்று இன்னொரு வரைகதைத் தொடரும் செய்துள்ளார். கடோத்கஜன்தான் அதில் நாயகன். இந்தோனேசியாவில் கடோத்கஜன் பெரும் ஆளுமை என்றார். குட்டி கருடனை பாண்டவர்களும் கடோத்கஜனும் அசுர சக்திகளிடமிருந்து காப்பதே கதை. அது ஒரு விளையாட்டாகவும் பெரிய வெற்றிபெற்றுள்ளது. ஆய்வாளார் அ.கா. பெருமாளின் இராமாயண, மகாபாரதக் கதைகள் சிலவற்றை அவருக்குச் சொன்னேன்.
ஜெஸ்ஸிகா வில்கின்சன் எனும் ஆஸ்திரேலியக் கவிஞரை சந்தித்தேன். அவர் வாழ்க்கை வரலாற்றுக் கவிதைகளை எழுதுபவர். ஆஸ்திரேலியாவின் ஒரு நடிகை, ஓர் இசைக்கலைஞர், ஓர் ஓவியர் என மூவரின் வாழ்க்கை வரலாறுகளையும் கவிதையில் எழுதியுள்ளார். நம்மூரில் மரபிலக்கியத்தில் இந்தவகை உண்டு. காந்திக்கு அசலாம்பிகை, அரங்க சீனிவாசன் போன்றோர் அப்படியான காவியங்கள் எழுதியுள்ளனர். சிங்கப்பூரிலும் லீ குவான் இயூவிற்கு அ.கி. வரதராசன் ஒரு பிள்ளைத்தமிழ் எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். நவீன கவிதையில் கணிதமேதை இராமானுஜம் பற்றி சபரி எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. ஆனால் முழுநூலாக ஆக்குவதற்கு நாம் யோசித்ததில்லை. கவிஞர் பெருந்தேவியிடம் இதைச் சொன்னபோது புதுமைப்பித்தனும் ஆத்மாநாமும் அப்படி எழுதப்பட வேண்டியவர்கள் என்றார்.
சிங்கையில் கலாச்சார விருதாளர் படைப்புகள் வாசிக்கப்பட்ட அரங்கிற்குச் சென்றோம். சீன எழுத்தாளர் ஒருவரின் கவிதை வாசிக்கப்பட்டது. மலாய் எழுத்தாளர் ஒருவரும் வந்திருந்தார். தமிழ்க் கவிஞர் இக்பால் தன்னுடைய கால்களுக்கு நன்றி சொல்லுதல் பற்றிய கவிதையை வாசித்தபோது சட்டென உணர்ச்சிவசப்பட்டார். இத்தனை நாளாக என்னைச் சுமந்து சென்ற கால்களே, நன்றிக்கடனாக உன்னை என்றேனும் என் நண்பர்கள் தங்கள் தோள்களில் சுமந்துசெல்வார்கள் என்பதாகச் செல்லும் மரணத்தைப்பற்றிய நேரடியான கவிதை. அவர் வயதும், அவர் வாசித்த விதமும் சேர்ந்து அவரது உணர்ச்சி எனக்கும் தொற்றிக்கொண்டது. மலாய், சீனம், தமிழ் என மூன்று தரப்பினருமே ஆங்கிலம் தங்கள் இடத்தை எடுத்துக்கொள்கிறது எனக் கவலை தெரிவித்தார்கள். இது ஓர் உலகளாவிய சிக்கல்தான்.
இந்த விழாவிற்கு டெட் சியாங் (Ted Chiang) வருகிறார் என்பதை அறிந்தேன். அவருடைய Story of Life and Others, Exhalation தொகுப்புகளைப் பெரும் பரவசத்துடன் வாசித்திருக்கிறேன். அறிவியல் புனைவின் முகத்தையே மாற்றியவர் என அவரைச்சொல்வேன். ஆசிய ஆன்மீக மரபு, குறிப்பாக பவுத்தத்தின் ஊடுருவல் அறிவியல் புனைவுகளில் அவர் வழியாகவே நிகழ்ந்தது. சிக்சின் லியு, கென் லியு, சார்லஸ் யூ எனப் பலரும் தொடர்கிறார்கள். எனது அமர்வு மூன்று மணிக்கு. பாதியில் எழுந்து வருவதாக இருந்தால் அதில் பங்கேற்கலாம் என்றார்கள்.
மிகச்சரியாக 2 மணிக்கு உரையைத் தொடங்கினார் டெட் சியாங். ‘காலயந்திரமும் மனிதனின் தன்விருப்பும்’ என்பது தலைப்பு. காலப் பயணத்தில் கடந்தகாலத்தை அறிவியல் ரீதியாக மாற்ற இயலாது என்றாலும் மனிதன் தன் தன்விருப்பைப் பயன்படுத்தி மாற்ற முடியும் என்பது எத்தனை வலுவான கற்பனை! எதற்காகக் கால இயந்திரம் வரும்வரை காத்திருக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார். பல்வேறு உதாரணங்களுடன் 40 நிமிடம் நீண்டது அவ்வுரை. கலந்துரையாடலுக்கு என்னால் இருக்கவியலாத சூழல். டெட் சியாங் அரங்கில் பாதியில் எழுந்து வந்தவன் நான் ஒருவன் மட்டும்தான். டெட் சியாங் அரங்கில்கூட காணொளிப் பதிவு செய்யப்படவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. பெரும் எழுத்தாளுமைகளின் அமர்வைப் பதிவுசெய்து இணையத்தில் ஏற்ற வேண்டுகோள் விடுக்கிறேன்.
பட்டுக்கோட்டை பிரபாகருடன் 3 மணிக்கு தீவிர இலக்கியம், பரப்பிலக்கியம் பற்றி விவாதிக்கும் ஒரு அரங்கு. சித்ரா ரமேஷ் நெறியாள்கை செய்தார். எனக்கு இந்த அமர்வில் பங்குகொள்ள முதலில் தயக்கமிருந்தது. பரப்பிலக்கியம் முக்கியமில்லாதது என நான் கருதவில்லை. ஆனால் ஒரு விவாதமாக கசப்பின்றி இது முடியுமா என்ற சந்தேக உணர்வு இருந்தது. ஆகவே இயன்றவரை கவனமாக விவாதிக்க எண்ணினேன். நல்லவேளையாக விவாதம் நன்றாகத்தான் போனது. பரப்பிலக்கியம், தீவிர இலக்கியம் என்று எப்படி வகைப்படுத்துவது, அப்படி வகைப்படுத்தத்தான் வேண்டுமா எனப் பல்வேறு அடிப்படைக் கேள்விகளில் தொடங்கி, தீவிர இலக்கியம் யாருக்காக எழுதப்படுகிறது, எழுத்தாளரின் தேர்வு, வாசகரின் ரசனையும் தேர்வும் என விரிந்து சென்றது.
சிங்கையின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான அருண் மகிழ்நனை அன்றுமாலையில் சந்தித்து சிங்கைத் தமிழ் இலக்கியச் சூழலைப்பற்றிப் பேசினோம். தமிழகச் சூழலில் இருந்து சிங்கை வேறுபடும் புள்ளிகள் குறித்து ஒரு சித்திரம் கிடைத்தது. இவ்வாண்டு சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்கான நடுவராகச் செயல்பட்டிருந்ததால் சிங்கப்பூர் புத்தக மன்றத்துக்கு ஒரு சம்பிரதாயமற்ற சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். வில்லியம், செலின், ஹனீஸ் ஆகியோரை ஒரு கஃபேயில் சந்தித்து உரையாடினேன். புத்தக மன்றத்தின் பணிகள் குறித்து தெரிந்து கொண்டேன். சிங்கையின் பிறமொழி இலக்கியச் சூழல் குறித்த பரிச்சயம் எற்பட்டது. சிங்கையில் இலக்கியம் சார்ந்த ஒவ்வொன்றுக்குமே பணம் கொடுத்து மக்கள் பங்குபெற வேண்டும். தமிழகத்தில் அத்தகைய பண்பாடே இல்லை. ஜெயமோகனின் கட்டண உரைகள் அந்தத் திசையில் ஒரு முன்னோடி முயற்சி.
சிங்கப்பூர்ப் பயணத்தில் மிக முக்கியமான சந்திப்பு என ‘எபிக்ராம்’ பதிப்பக உரிமையாளர் எட்மண்ட் வீயுடனான சந்திப்பை சொல்லலாம். எபிக்ராம் சிங்கப்பூரின் மிக முக்கியமான ஆங்கிலப் பதிப்பகம். மொழியாக்கம், வரைகலை நாவல்கள், வரைகதைகள், குழந்தைக் கதைகள் எனப் பல தளங்களில் புத்தகங்களை வெளியிடுகிறது. குறிப்பாக சிங்கப்பூர் இலக்கியத்தை முன்வைத்துச் செயல்படுகிறது. பத்தாயிரம் சிங்கப்பூர் வெள்ளிப் பரிசுக்கு வருடாவருடம் நாவல் போட்டி நடத்துகிறது. இந்தாண்டு எழுபது நாவல்கள் வந்துள்ளதாகச் சொன்னார்! படைப்பாளர் சுதந்திரம், இலக்கியத்தின் சிக்கல் என சுமார் இரண்டுமணி நேரம் அவருடன் உரையாடினேன். அவர் பதிப்பித்த / பரிந்துரைத்த புத்தகங்கள் சிலவற்றை வாங்கிக்கொண்டேன். சிங்கப்பூரின் லட்சுமண ரேகைகள் குறித்துச் சில தெளிவுகளைப் பெற்றேன்.
வெள்ளிக்கிழமை காலையில் சாங்கி விமான நிலையத்தில் வந்திறங்கியது முதல் திங்கட்கிழமை மீண்டும் திரும்பியதுவரை உறங்கும் நேரம் தவிர்த்துப் பிற சமயங்களில் எல்லாம் எவருடனோ உரையாடியபடியேதான் இருந்தேன். நம் மரபின் அத்தனை படைப்பாளிகளின் தோள்களின்மீதும் ஏறிநின்றுதான் நான் சிங்கப்பூர் சென்றேன் எனும் தன்னுணர்வு எனக்கு உண்டு. ஆகவே அப்பெரும் தொடர்ச்சியின் ஆகச்சிறந்த அம்சங்களை முன்வைக்க வேண்டிய கடமை எனக்கிருந்தது. மேலும், இங்கிருந்து அளிக்கவேண்டியதை அளித்து அங்கிருந்து பெறவேண்டியதைப் பெற்றுவர வேண்டியதும் என் நோக்கமாக இருந்தது. நிறைய சந்திப்புகள், உரையாடல்கள் வழியாக அந்நோக்கம் ஓரளவு ஈடேறியது என்றே சொல்லவேண்டும்.
December 22, 2022
ஆயிரம் மணிநேர வாசிப்பு - 2023
சில ஆண்டுகளுக்கு முன் முதல்முறை ஓராண்டில் ஆயிரம் மணிநேரம் வாசிக்க வேண்டும் எனும் சவாலை அறிவித்தோம். சிலரே அதை நிறைவு செய்தார்கள் எனினும், தொடக்கத்தில் நிறைய பேர் சேர்ந்தார்கள். வாசிக்கும் முறையில் உள்ள சிக்கல்களையும் எல்லைகளையும் உணர்ந்துகொள்ள உதவியது. சாந்தமூர்த்தி அவர்கள் இன்னமும் அந்த பக்கத்தில் நிமிடங்களை நிரப்பிக்கொண்டிருக்கிறார். 7000, 8000 என சென்று கொண்டிருக்கிறது. புத்தாண்டு பிறக்க உள்ளது. ஆகவே ஆயிரம் மணிநேர வாசிப்பு சவாலை மீண்டும் தொடங்கலாம் என எண்ணம். நண்பர் மயிலாடுதுறை பிரபுவின் தூண்டுதல் முக்கிய காரணம். அவரது ஆலோசனைகள் சிலவற்றை பரிசீலித்து இந்த ஆண்டில் அவற்றையும் கணக்கில் கொள்ளலாம் என எண்ணினேன். இந்த ஆண்டு சில புதிய / எளிய விதிமுறைகளையும் வசதிகளையும் சேர்த்துள்ளோம்.
விதிமுறைகள்
இந்த ஆண்டு நட்சத்திர குறி அளிக்கலாம் என திட்டம். நாளைக்கு ஒருமணிநேரம் என 365 மணிநேரம் வாசிப்பை நிறைவு செய்பவருக்கு ஒற்றை நட்சத்திரம். 555 மணிநேரத்தை கடப்பவருக்கு 2, 777 மணிநேரத்தை கடப்பவருக்கு 3, 1000 மணிநேரத்தை கடப்பவருக்கு 4, 1111 மணிநேரத்தை கடப்பவருக்கு 5.
இந்த ஆண்டு ஐந்து நட்சத்திரத்தை முதலில் பெறுபவருக்கோ, அல்லது ஐந்து நட்சத்திரங்களை பெறும் அனைவருக்குமோ போட்டி காலம் முடிந்த பிறகு புத்தக பரிசளிக்கலாம் என முடிவு. என் யோசனை 2000 ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள். புரவலர்கள் கிட்டுவார்கள் என நம்புகிறேன்.
சவால் ஜனவரி 1, 2023 அன்று தொடங்கி டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியது. ஜனவரி 10 வரை மட்டுமே புதிய பங்கேற்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
நாள்தோறும் குறைந்தது ஒருமணிநேரமாவது வாசிக்க வேண்டும்.
இதற்கென பகிரப்படும் கூகிள் ஷீட்டில், அவரவர் பேருக்கு நேராக நாள்தோறும் நிமிடங்களை பதிவு செய்ய வேண்டும்.
இன்னொரு ஷீட்டில் புத்தக தலைப்புகளை பகிர வேண்டும்.
இம்முறை 365, 555, 777 என நண்பர்கள் அவர்களுக்கு உகந்த இலக்கை நிர்ணயித்துக்கொள்ளலாம். பரவலான பங்கேற்பை உறுதி செய்யத்தான். முன்னரே தெரிவித்துவிட வேண்டும்.
புத்தகம், கிண்டில், கைப்பேசி, மடிக்கணினி என எதிலும் வாசிக்கலாம். புனைவு, அபுனைவு, துறை சார்ந்த நூல்கள், இணைய இதழ்கள், தமிழ் விக்கி என எதையும் வாசிக்கலாம். கவனம் சிதறாமல் வாசிக்க வேண்டும். நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளக்கூடாது.
இம்முறை புத்தக பரிந்துரைக்கு என ஒரு ஷீட் போடலாம் என யோசனை. அதில் பிறருக்கு வாசித்த நல்ல புத்தகங்களை பரிந்துரைக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்க
forgandhitoday@gmail.comother links
1000 மணிநேர வாசிப்பு- அருண்மொழி நங்கை அவர்களுக்கு வாழ்த்துக்கள்
December 1, 2022
உடலின் தாண்டவம்- எம்.வி.வி குறுநாவல்கள்.
மொழி வெளிப்பாடு மற்றும் நிகழ்வுகளின் முரண் என இரண்டு கூறுகளை பொதுவாக இலக்கிய ஆக்கங்களின் இரு அடிப்படை கட்டமைப்புகளாக காண முடியும். ஒரு பிரதி முதன்மையாக எதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது? மொழி வெளிப்பாடு தான் நோக்கம் எனில் மொழி ஒரு திறவுகோலாக புறத்தை அகத்துக்கு திறந்து வைக்கிறது. அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பது போல மொழியால் அள்ளப்படுவது யாவும் மொழிக்கு சிக்காத அக ஓட்டத்தின் தடையங்களைக் குறிக்கின்றன. புறத்தில் உள்ள ஒவ்வொன்றும் அகத்தில் உள்ள ஒவ்வொன்றையும் பிரதிபலிக்கின்றன. மொழியை முதன்மை ஊடகமாக கொள்பவர்களை இலக்கியவாதி என சொல்லலாம். இலக்கியவாதியின் கதை வாசிக்க உகந்தது சொல்வதற்குகந்தது அல்ல. மொழியின் வலுவில் நிற்பது.
நிகழ்வுகளின் முரணை பேசுபவை கதைசொல்லிகளால் எழுதப்படுபவை. வாய்மொழியாக சொல்வதற்கு உகந்தவை. இவ்விரு போக்குகளும் ஒருங்கமைந்த எழுத்துகளும் அரிதாக அமைவதுண்டு. எழுத்து மரபு வாய்மொழி மரபு என பொதுவாக வகைப்படுத்தலாம். வாய்மொழி மரபு நெடுங்கால வரலாறுடையது. எழுத்து மரபுக்கு முந்தையது. நவீன உரைநடை உருவாகிவந்த போது அது வாய்மொழி மரபின் நீட்சியாகவே திகழ்ந்தது. நவீனத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய பங்களிப்பு என்பது வாய்மொழி மரபுக்கு மாற்றாக எழுத்து மரபை வலுவாக முன்னெடுத்தது என்பதே. விளைவாக கதைசொல்லல் சற்றே குறைவானது எனும் கருத்து வலுப்பெற்றது. எழுத்து மரபு நிகழ்வுகளை விட அக வெளிப்பாட்டுக்கே அதிக முக்கியத்துவம் அளித்தது. கதையிலிருந்து நம்மால் பொருள் செறிந்த மேற்கோள்களை தனித்து எடுத்துக்காட்ட முடிந்தால் அது எழுத்து மரபின் ஆக்கம் என சொல்லலாம். நவீன இலக்கியத்தின் பெரும்போக்கு நம்பிக்கை இத்திசையில் இருந்தாலும் இதன் எல்லையை உணர்ந்து அதை விரிவுபடுத்தி கதைசொல்லலையும் அனுமதிக்கும் பாணிக்கான தேடலும் தொடங்கியது. புதுமைப்பித்தன் வெற்றிகரமாக இந்த இரண்டு போக்குகளையும் ஒருங்கிணைத்தார். ஆனாலும் அது பொது போக்காக மாறவில்லை. பின்நவீனத்துவத்தின் அறிமுகம் நவீனத்துவத்தின் மதிப்பீடுகளை கேள்விக்குள்ளாக்கியது. கதைசொல்லல், வாசிப்பின்பம், சரளம் போன்றவை எல்லாம் வெகுமக்கள் இலக்கியத்துக்கு உரியது ஆகவே நவீன இலக்கியத்துக்கு எதிரானது எனும் நம்பிக்கை மறு பரிசீலனைக்கு உள்ளானது.
இந்த பின்புலத்திலிருந்து எம்.வி.வியுடைய படைப்புலகத்தை அணுகும் போது அவர் எழுத்து மரபை உள்வாங்கிக்கொண்ட ஒரு கதைசொல்லி எனும் எண்ணமே ஏற்பட்டது. ஒப்பு நோக்க 'குற்றமும் தண்டனையும்' மற்றும் 'உயிரின் யாத்திரை' கதைகளில் மட்டுமே சில மேற்கோள்களை தனித்து பிரித்து எடுக்க முடியும். என் வாசிப்பின் எல்லைக்குள், இதுவரை நான் வாசித்த எம்.வி.வியின் ஆக்கங்கள் ஒன்று கூட
வாசிப்பதற்கு அயர்ச்சியாக இல்லை என்பதையே அவருடைய முதன்மை கலைவெற்றியாக கருதுகிறேன். 'வாசிப்பின்பத்தை' அளவுகோலாக முன்வைப்பதில் உள்ள சிக்கல் யாதெனில் வெகுமக்கள் இலக்கியத்திற்கும் தீவிர இலக்கியத்திற்கும் இடையேயான வேறுபாடை அழிப்பதாகும். அகவயமான அளவுகோலை மட்டும் முன்வைப்பதின் சிக்கலும் சேர்ந்துகொள்ளும். ஆனால் இலக்கிய மதிப்பீடு ஒரு எல்லைக்கு அப்பால் அகவயமானதாகவே இருக்க இயலும். எம்.வி.வியின் 'குற்றமும் தண்டனையும்', 'அம்மையே! அப்பா' போன்ற குறுநாவல்கள் சற்று பிறழ்ந்தாலும் வெகுமக்கள் கதையாக புரிந்துகொள்ளப்பட்டிருக்க கூடும். ஒரு கதை வெகு மக்கள் பிரதியா தீவிர இலக்கியப் பிரதியா என்பதை பேசு பொருளோ, அதன் எழுத்து மொழியோ முடிவு செய்வதில்லை. அது தேய்வழக்கா என்பதுதான் முதன்மை அளவுகோல். தேய் வழக்கு என்பது முதன்மையாக கூறுமுறை சார்ந்ததே. 'உயிரின் யாத்திரை' குறுநாவலைத் தவிர்த்து பிற ஆறு குறுநாவல்களுமே வலுவான கதையமைப்பு கொண்டவை. 'அம்மையே அப்பா' ஒரு குடும்பஸ்தன் திடீரென்று முருகன் அருளால் கொஞ்ச காலத்துக்கு பெண்ணாக மாறிவிட்டு மீண்டும் ஆணாகிறான். பெண்ணாக இருக்கும்போது பிறக்கும் குழந்தையை என்ன செய்வது என குழப்பமாக இருக்கிறது. பல்வேறு புனைவு சாத்தியங்கள் விரிகின்றன. 'குற்றமும் தண்டனையும்' மனோகரன் எனும் ஒரு மணிதனின் மூன்று கட்ட வாழ்வை சொல்வது. பெரும் பணக்காரனாக பிறந்து சொத்துக்காக சகோதரனை கொன்று விபத்தில் தன்னை இழக்கிறான். நினைவுகளை இழந்தவன் வேறொரு குடும்பத்தில் தன்னை பொருத்திக்கொள்கிறான். மீண்டும் ஒரு விபத்தில் முந்தைய நினைவுகளை மீட்கிறான். அப்போது எழும் அறச்சிக்கலே கதை. மனோகரன் நமக்கு பொய்த்தேவு சோமு முதலியையும் பசித்த மானுடம் கனேசனையும் நினைவுறுத்தக்கூடும். 'அப்பாவும் பிள்ளையும்' சற்று வெள்ளந்தியான கடன்கார தந்தைக்கும் சாமார்த்தியசாலியான சுயமையம் கொண்ட மகனுக்குமான உறவை சித்தரிக்கும் கதை. ஜப்தி ஆணை வாங்கிக்கொண்டு வரு தந்தையின் கடன்காரனை எப்படிச் சமாளிக்ககறான் என்பதை சுவாரசியமாக சொல்கிறது. 'மாய்ஃபாப்' தத்தெடுத்துக்கொண்ட பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே உறவில் உள்ள கண்ணாடி சாளரத்தை சுட்டிக்காட்டுகிறது. 'பெட்கி' ஒரு வயதடைதல் கதை. சற்றே அதிக வயதுடைய உறவினர் பெண்ணுடன் உள்ள உறவுச் சிடுக்கை பேசுகிறது. 'நானும் உன்னோடு' மணமாகி சென்ற வீட்டில் பெண் எதிர்கொள்ளும் அக வன்முறையை உணர்வுப்பூர்வமாக சித்தரிக்கும் கதை. சொல்லால் சுடும் மாமியார் நழுவிச்செல்லும் கணவன் என அழுத்தங்களை சந்தித்துக்கொண்டிருக்கும்போது பிறந்த வீட்டுக்கு பிரசவத்திற்கு சென்று இளைப்பார எண்ணுகிறாள். சரியாக அதை தகர்க்க மாமியார் திட்டமிடும்போது தன் முடிவை நிலைநாட்ட எந்த எல்லைவரை செல்கிறாள் என்பதே கதைதான். நன்கு அறிந்த கதையாக இருந்தாலும் அதன் உண்மைத்தன்மை மற்றும் தொனி காரணமாகவும், கதைமாந்தரோடு நமக்கு ஏறபடும் தொடர்புறுத்தல் காரணமாகவும் அதன் வலுவில் கதை நிற்கிறது. இந்த ஆறு கதைகளுமே வலுவான கதை முடிச்சுகளை கொண்டது. நிகழ்வுகளின் முரண்கள் வழியாக கதையை இறுக்கி செறிவாக்குகிறார். சில கதைகளில் இந்த முரணை சரியாக எதிர்கொள்ளாமல் வழுவிடவும் செய்கிறார். உதாரணமாக பெண்ணாக மாறிய வெங்கட்ராமனுக்கு பிறக்கும் குழந்தையை மீண்டும் ஆணாக மாறிய பின் என்ன செய்வது, குடும்பத்திற்கு அவரை எப்படி அறிமுகம் செய்வது போன்றவை மிக முக்கியமான முரணாக உருவாகும்போது குழுந்தை சட்டென ஓரிரு நாள் சீக்கில் இறந்துவிடுகிறது. இந்த மரணம் ஒரு தப்பிப்பும் கூட.
எம்.வி.வியின் கதைகளில் தானொரு எழுத்தாளர் எனும் தன் உணர்வு வலுவாக வெளிப்படுகிறது. 'உயிரின் யாத்திரையில்' கனவின் முக்கியத்துவம் பற்றி ஒரு எழுத்தாளராக தனக்கு தெரியாதா என கதைசொல்லி வினவிக்கொள்கிறான். 'அம்மையே! அப்பா' கதை தொடங்குவதே ஒரு கதைக்கான அலைக்கழிப்பில் தான். 'மாஃப்பாப்' மற்றும் 'பெட்கி' ஆகிய கதைகளில் வடூவுர் துரைசாமி ஐயங்கார் பாதிப்பில் கதைகளை எழுதித்தள்ளும் பதின்ம வயது எழுத்தாளரே கதைசொல்லி. 'அப்பாவும் பிள்ளையும்' கதையில் எம்.வி.வி ஒரு கதைமாந்தராக வருகிறார். எழுத்தாளர் என்பதற்காக கதைசொல்லியிடம் வசையும் வாங்கிக்கட்டிக்கொள்கிறார். 'குற்றமும் தண்டனையும்' மற்றும் 'நானும் உன்னோடு' ஆகிய கதைகள் ஓரளவு பெண் மைய கதைகள் என்பதாலேயோ என்னவோ எழுத்தாளர் எம்விவி கதைக்குள் பாத்திரமாகவில்லை.
கதைகளின் மற்றொரு பொதுத்தன்மை என்பது 'குற்றமும் தண்டனையும்' தவிர பிற அனைத்து கதைகளுமே சவுராஷ்டிர பட்டுநூல் நெசவாளர்களின் வாழ்க்கையை பின்புலமாக கொண்டவைதான். கதைக்களமும் கும்பகோணமும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள்தான். மிகச்சரளமாக சவுராஷ்டிர மொழியை உரையாடல்களிலும் கதைகளின் தலைப்புகளிலும் பயன்படுத்தியுள்ளார். கும்பகோண சவுராஷ்டிரர்களுக்கும் மதுரைக்காரர்களுக்கும் இடையேயான புடவை கச்சத்தில் உள்ள வேறுபாடு தொடங்கி புதிதாக திருமணமான மாப்பிள்ளைக்கு மாமனார் வீட்டில் ஒரு வருடம் வரை நான்கு வேளை விருந்திடவேண்டும் எனும் பழக்கம் வரை பல சுவாரசியமான தகவல்களை கதைகளின் ஊடாக சொல்லிச்செல்கிறார் எம்விவி.
'மாய்ஃபாப்' மற்றும் 'பெட்கி' ஆகிய இரண்டு கதைகளுமே பள்ளி பருவத்து நினைவுகளை அடிப்படையாக கொண்டவை. இரண்டிலும் வெங்கட்ராம் சொன்னா எனும் பதின்ம வயது பையனாக வருகிறான். வளர்ப்பு தாய், தந்தையர் விதவையான அத்தை லட்சுமி பாய் ஆகியோரின் சித்தரிப்பு மற்றும் கதை களத்தின் சித்தரிப்பு ஓன்றே. தன்வரலாற்றுத்தன்மை கொண்டவை. சவுராஷ்டிர சொற்களை தலைப்பாக கொண்டவை. 'மாய்ஃபாப்' கதை சிடுக்கென்பது எம்.வி.வியின் சொற்களில் சொல்வதானால் 'நான் அவர்கள் பெற்ற பிள்ளை அல்ல, வளர்ப்புப் பிள்ளை.' என்பதுதான். ஐந்து வயதுவரை மாமா மாமி என்று அழைத்தவர்களை அப்பா அம்மா என்றழைக்க மனம் பழகவில்லை. அப்பா அம்மா என மனமார கருதினாலும் கூட கூச்சமும், கூச்சத்துடன் பிடிவாதமும் சேர்ந்து கொண்டது. சற்றே எள்ளல் கலந்த தொனியில் பதின்ம அனுபவத்தை நினைவுகூரும் வடிவத்தில் கதை நகர்கிறது. வளர்ப்பு பெற்றோரின் குழுந்தைகள் பிறந்திறந்து போகும் சித்தினத்தை ஒரு பத்தியில் அளித்திருப்பார். ஆனாலும் அது மனதை தொந்திரவு செய்வதுதான். அம்மா அப்பாவென அவனை அழைக்கவைக்க அவர்கள் மேற்கொள்ளும் சில விபரீதமான நடவடிக்கைகள் வேடிக்கையாக உள்ளன. குளித்து முடித்துவிட்டு ஆடையை பெற தூணில் ஒளிந்துகொண்டு உடைகளை எடுக்க அலமாரி சாவியை கேட்கும்போது அப்பாவென கூப்பிடு என்கிறார். பிறகு சாவியை அம்மாவிடம் வீசிவிட்டு அங்கும் இதே கதைதான். வளர்த்தவர்கள் திட்டியதும் நேராக அவன் கால்கள் அசல் பெற்றோரின் வீட்டை நோக்கிச் செல்கிறது. அவனே இயல்புக்கு திரும்பிவிட்டாலும் அவ்வுறவில் உள்ள 'எளிதாக உடையும்' தன்மை புலப்படுகிறது. எப்போதும் நிரூபணம் கோரும் உறவு நிலையானதாக இருக்க முடியாது. தற்கொலை முயற்சி என எண்ணி மாமாங்க குளத்திற்கு ஆளனுப்பி தேடிக்கொண்டிருக்கும்போது சொன்னா கூச்சத்துடன் வீடு திரும்புகிறான். லகுவான மொழியில் நுட்பமான உணர்வுகளை பேசும் கதை. 'பெட்கி' ஒரு பதின்ம வயது உறவுக்கார அக்காவுடனான பாலியல் அனுபவத்தைப் பற்றி பேசும் கதை. பெட்கியின் வாழ்க்கைச் சித்தரிப்பு கூர்மையானதாக வந்துள்ளது. பொதுவாக எம்.வி.வி கதைகளில் பெண்கள் வேட்கை கொண்டவர்களாக, துணிந்தவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். 'உயிரின் யாத்திரை' லீலா, 'குற்றமும் தண்டனையும்' நீலா, 'அம்மையே அப்பாவில்' பெண்ணாக தோற்றமெடுக்கும் ராணி என இவர்களின் உச்ச வடிவம்தான் 'காதுகள்' நாவலில் மாலியின் மீது பாயும் நாசகாளி. வேட்கையுள்ள சவுந்தர்யத்தின் மறுபுறம் மாபெரும் கோரம் உள்ளது எனும் சித்தரிப்பை தொடர்ச்சியாக காணமுடிகிறது. ஏறத்தாழ உருமாறும் சூணியக்கார கிழவி எனும் தொல்படிமம். அழகு ஆபத்தானது என எச்சரிக்கைக்கொள்ளும் மனதின் பதிவு. மறு எல்லையில் நிறைவான குடும்ப வாழ்க்கை வாழும் பெண்களும் சித்தரிக்கப்படுகிறார்கள்.
எம்.வி.வி அடிப்படையில் ஒரு மறைஞான எழுத்தாளர். அவருடைய ஆகப்பெரும் கேள்வி என்பது செறிவான ஆன்மீக வாழ்க்கைக்கும் மறைஞான அனுபவத்திற்கும் குறுக்கே உள்ள சதையுடலின் காம வேட்கையை என்னச் செய்வது என்பதுதான். 'அப்பாவும் பிள்ளையும்' சாமி தொடங்கி, 'அம்மையே அப்பா' ராணி, 'குற்றமும் தண்டனையும்' நீலா என அனைவரும் கண்ணாடி முன் தங்களை ரசிப்பவர்களாகவே இருக்கிறார்கள். நீலா உடலை வழிபடுபவள். சாமி தன் தோற்றத்தை முதலீடாக கொண்டவன். 'அம்மையே அப்பாவில்' முருகக் கடவுளுடன் எழுத்தாளர் வெங்கட்ராமனுக்கு ஒரு சுவாரசியமான உரையாடல் நிகழ்கிறது. முருகன் கேட்கிறார் 'உடலாசை இப்படி உன்னைப் பேச வைக்கிறது. உடலை ஒழிப்பதென்றால் உனக்கு அச்சமாக இருக்கிறது. உன் கதைகளில் உடல்தானே தாண்டவமாடுகிறது! இல்லையா?' என. கிட்டத்தட்ட இது எம்விவி தன் படைப்புலகைப் பற்றி அவரே வைக்கும் அவதானிப்பு. முருகன் ஒரு வரமளிக்க முன்வரும்போது, ஆணாகவும் பெண்ணாகவும் ஏழு பிறவிகள் எடுத்து இடையீடற்ற இன்பத்தை நுகர வேண்டும் என வரம் வேண்டுகிறார். அதற்கு மாற்றாக பதினெட்டு மாதங்கள் பெண்ணாக வாழ்ந்து இன்பத்தை துய்ந்தபின் மீளும் வரம் ஒன்றை அளிக்கிறார் முருகன். பெண்ணாக தன் உருவின் மீதே பிரேமை கொள்கிறான். அவனுக்குள் உள்ள ஆண் மனம் 'இந்தப் பெண்மையைத் தானே நுகர முடியாதே என்கிற தாபம் சற்று நிழலாடிவிட்டு மறைந்தது.' என மருகுகிறது.
கதைகளின் ஊடாக அவருடைய கேள்வியுடன் அவர் ஃபிராய்டை எதிர்கொள்கிறார். அவருடைய படைப்பில் நிகழ்ந்த முக்கியமான இடையீடு என இதைச்சொல்வேன். ஒரு மரபான மனம் ஃபிராய்டை எதிர்கொள்ளும் போது நேரும் உராய்வும் அதனூடாக அவருக்கு ஏற்படும் அறிதலும் கவனிக்கத்தக்கது. உடல் வேட்கையை புரிந்து கொள்ள ஃபிராய்டை அணுகுகிறார். 'உயிரின் யாத்திரை' மற்றும் 'அம்மையே அப்பா' ஆகிய இருகதைகளிலும் பிரம்மச்சாரிகள் காமத்தில் வீழும் ஏமாற்றுக்காரர்களாக வருகிறார்கள் என்பதும் கூட ஒரு ஃப்ராய்டிய கோணம்தான். 'குற்றமும் தண்டனையும்' கதை கணவனின் வருகைக்காக காத்திருக்கும் நேரத்தில் மனைவி ஹரிணி ஃபிராய்டை வாசித்தும் அது குறித்து சிந்தித்தும் கழிக்கும் சித்திரத்துடன் தொடங்குகிறது. எல்லா செயல்களுக்கும் அடியில் பாலுணர்வு தொழிற்படுகிறது எனும் ஃபிராய்டிய சிந்தனையைப் பற்றி ஹரிணி 'வக்கிரமாகவும் விபரீதமாகவும் ஏதாவது சொல்வதுதான் அறிவாளியின் லட்சணம் போலும்' என எண்ணுகிறாள். ஆனால் அதை தவறென சொல்லிவிட இயலுமா என குழம்புகிறாள். 'கணவனைத் தவிர யாரையும் மனதான நினைத்ததில்லை- இந்த மன நலன் உடைய பெண்மணியைத்தான் பதிவிரதை என்கிறோம் இல்லையா? ஆனால் இந்தப் பெருமைக்கு அடிப்படை உடலின்பம் என்பது கொடுமையாகத் தோன்றலாம், அதற்காக, வேறு காரணங்களை கற்பனை செய்து கொள்ளலாம். ஆனால் அவளுடைய உடலோடு புத்தியும் மனமும் கணவனிடம் அடைக்கலம் ஆவதற்கு இதுதான் அதிகாரணம்' என ஒரு முடிவுக்கு வருகிறாள்.
மேலும் இயற்கையை வெல்வதே மனிதனுடைய வெற்றி என்றால் பிறவி முதல் தொடரும் பாலுணர்வை வென்றடக்கும் முறையாக இந்து மதம் வகுத்த பதிவிரதா தர்மத்தை காண முடியும் என எண்ணுகிறாள் ஹரிணி. இத்தகைய 'தர்ம விசாரம்' கூட பாலுணர்வை சுற்றியே சுழல்வதை உணர்கிறாள். கணவன் காணாமல் போய் சில ஆண்டுகளுக்கு பின் திரும்பி வரும் காலகட்டத்திற்குள் அவளிடம் சில மாறுதல்கள் ஏறபடுகிறது. அப்போது அவள் 'ஃபிராய்டு போன்ற அறிஞர்களின் நூல்களை அணுகி பாலுணர்ச்சியின் ஆதியை ஆராய்வதில்லை. பாலுணர்ச்சியை மட்டும் அல்ல; எல்லா உணர்ச்சிகளையும் ஒழுங்குபடுத்துவது எப்படி என்று விளக்கும் இந்நாட்டு நூல்களோடு பழகலானாள். மனிதப் பிறவி எடுப்பவர்கள் தங்கள் வாழ்க்கை விதியை வகுத்துக்கொண்டு பிறக்கிறார்கள். வாழும் முறையால் விதியை வகுத்துக்கொள்கிறார்கள். அவர்களுடைய உணர்ச்சிகளும் இயல்புகளும் அவர்கள் வகுத்துக்கொண்ட விதிக்கு ஏற்பத்தான் அமைகின்றன; ஃபிராய்டு போன்ற அறிவாளிகளின் அளவுகோலுக்கு எந்த உணர்ச்சியும் இயல்பும் அடங்காது என்று அவள் தெளிவு செய்துகொண்டாள்.' என அவள் மனநிலை விவரிக்கப்படுகிறது. திருமணம் மற்றும் இந்திய குடும்ப அமைப்பை ஃபிராய்டிய நோக்கில் மறு பரிசீலனை செய்கிறது அவரது கதை. 'உடலுறவும் மனவுறவும் ஆத்மீக அடிப்படையில் வைப்பதால் இந்துக்களின் மணவினை பல்லாயிரம் ஆண்டுகளாய் ஒழுங்காக ஓடுகிறது.' என மனோகர் நீலாவுக்கு இடையேயான உறவைக்குறித்து விவரிக்கும்போது எழுதுகிறார். 'பெட்கி' கதையில் இரவு முழுவதும் பெட்கி அளிக்கும் பாலியல் அழைப்புக்கு தன்னை ஒப்புகொடுக்காமல் கட்டுப்படுத்திக்கொள்வதையொட்டி 'தீனி தந்துதான் காமத்தை அடக்க வேண்டும் என்ற அவருடைய (ஃபிராய்டிய) சித்தாந்தம் தவறானது என்பதை அன்றிரவு நான் நிலைநாட்டிவிட்டேன் என்று அப்போது எனக்குத் தெரியாது.' என எழுதுகிறார். கட்டற்று இன்பத்தை நுகர்தலுக்கும் கட்டுப்பாடுக்கும் இடையிலான தேர்வு சார்ந்து ஒரு ஊசலை அவர் கதைகளில் காண முடிகிறது. மனோகர் ஹரிணியிடம் தனது வாதத்தை வைக்கிறான் 'வரையறுக்கப்பட்ட எந்த சுகமும் சுகமாய்த் தோன்றவில்லை.
தன்னை மறக்கும் போதுதான் ஒருவனால் இன்பத்தை முழுமையாக நுகர முடிகிறது.' மேலும் பாவத்திற்கு அஞ்சுவது கோழைத்தனம் என கருதுகிறான் 'பாவம் என்பது என்ன? ஒரு வெறும் கருத்துதானே? கருத்துக்கள்தான் உலகத்தை அழிக்கின்றன.' விபத்துக்கு பின் நீலாவின் கணவனாக முந்தைய நினைவுகள் அழிந்தபின் இதற்கு நேரெதிரான நிலைப்பாடிற்குச் செல்கிறான். முன்பு கோழைத்தனத்தை இழிவாக கருதியவன் அப்போது அதை மனிதத்தன்மையின் லட்சணமென கருதினான். கதை நாயகர்கள் மீண்டும் காமத்தை எதிர்கொள்கிறார்கள். அதற்கு ஆட்படாமல் தப்புகிறார்கள். 'காதுகள்' மற்றும் 'உயிரின் யாத்திரை' ஆகிய இரண்டு கதைகளிலும் காமத்தை கிளர்த்தும் பெண் உரு விடுதலையை மறைக்கும் மாயையின் உருவமாக மேல்நிலையாக்கம் அடைகிறதது. நவீனத்துவ எழுத்துலகை கட்டமைத்ததில் ஃபிராய்டுக்கு மிக முக்கிய பங்களிப்பு உண்டு. எம்விவி எழுதிய காலகட்டம் நவீனத்துவம் உச்சத்தில் இருந்த காலகட்டம். ஃபிராய்டிய பகுப்பாய்வு எனும் புதிய கருவியை இந்திய எழுத்தாளர்கள் ஊக்கத்துடன் அனைத்து தளங்களிலும் பயன்படுத்தி உலகையும் வாழ்க்கையும் புரிந்துகொள்ள முற்பட்டிருக்க வேண்டும். எம்விவி இந்திய மெய்யியலில் காலூன்றியபடி ஃபிராய்டை எதிர்கொள்கிறார். ஃபிராய்டை முழுமையாக ஏற்கும்போது அவர் நம்பிய, அனுபவப்பூர்வமாக உணர்ந்த இந்திய ஆன்மீகத்திற்கு அங்கு இடமில்லை. ஆகவே அவர் அதை அதற்குரிய மதிப்பை அளித்துவிட்டு மறுத்தும் கடந்தும் செல்கிறார்.
சவுந்தர்யத்தின் மறு எல்லை கோரம் என்பது போலவே காமத்தின் மறு எல்லை இறையனுபவம் என்பதை எம்விவி உணர்த்துகிறார். 'அம்மையே அப்பாவில்' 'ஆணுக்காயினும் பெண்ணுக்காயினும் இன்பம் வலிக்கத்தான் செய்கிறது. வலியில் பல சாயல்கள் இருக்கின்றன, இந்தச் சாயல்களில் தான் மனிதன் இன்பம் தேடிக்காண்கிறான் என்கிற உண்மை அவனுக்கு தெளிவாக புரிந்தது.ஆனால் இன்பம் தேடும் ஆர்வம் என்னவோ புரிந்து பின்னும் குன்றிவிடவில்லை.' என எழுதுகிறார். இன்பமும் வலியும் தவிர்க்க முடியாத இருமை எனும் தரிசனத்தை முன்வைக்கிறார்.
இறையனுபவத்திற்கும் காமத்திற்கும் இன்றியமையாத உறவிருப்பதை கண்டுகொள்கிறார். காமத்திலிருந்து கடவுளுக்கு என்பது இந்திய பண்பாட்டில் தொன்றுதொட்டு வழங்கப்படும் வழிமுறை. எம்.வி.வி முதன்மையாக ஒரு மறைஞான எழுத்தாளர் என குறிப்பிட்டிருந்தேன். காதுகளை அத்வைத வேதாந்த நாவலாக வாசிக்க இடமுண்டு. 'உயிரின் யாத்திரையையும்' அந்த வகையில்தான் வாசிக்க வேண்டும். அவருடைய அறிதல் புலத்திலிருந்து அரிய அனுபவங்கறளையும் கற்பனைகளையும் கதையாக்க அவர் தயங்குவதில்லை. பகுத்தறிவுக்கு அது உவப்பானதா பிழையாக புரிந்துகொள்ளப்படுமா, பிரச்சாரம் என கருதப்படுமா என்று தயங்குவதில்லை. உயிரின் யாத்திரை கதையில் வரும் சதாசிவம் இரண்டைக் கடந்தவன் என்கிறார். இரண்டை கடந்த தன்னை வெளிப்படுத்தாத முழு மனிதனை சித்தரிக்க முயல்கிறார். மோகமுள் நாவலில் பாபுவின் தந்தைக்கு குருவான ராஜூவின் சித்தரிப்பின் சாயலை காண முடியும். 'உயிரின் யாத்திரை' கதைசொல்லி ராஜாவால் தன்னிலையில் சொல்லப்படுகிறது. மணமாகி சில ஆண்டுகளே ஆன பிரியத்துற்குரிய மனைவியின் மரணப்படுக்கையை சித்தரிப்பதில் தொடங்குகிறது கதை. கிட்டத்தட்ட தெய்வத்தை பழித்து பிலாக்கணம் வைக்கிறான் ராஜா. 'மரணத்தை வரவேற்பதற்கு மனிதர் கூறும் முகமன் மௌனம் போலும்.' என படுக்கையில் படுத்துக்கிடக்கும் மனைவியை சுற்றி நிலவும் அமைதியைப்பற்றி எண்ணுகிறான். ஆடாது அசையாது எரியும் தழல் போலிருக்கும் சதாசிவம் அருமருந்தை அளிக்கிறார். ராணியின் மரணத்தை நெருங்கி அனுபவம் நவீனத் தமிழ் இலக்கியத்தில் எனக்கு தெரிந்து முதன்முதலாக பதிவான மரணத்தை அணுகும் அனுபவம் (Near death experience) என்று ஊகிக்கிறேன். மரணத்தருவாயில் இருந்து பிழைத்து வந்தவள் வெள்ளமாய் ஓடும் ஆற்றுள் மூழ்குவது போலும் பிறகு எவரோ பிடித்து மேலே இழுத்து வருவதை போலவும் உணர்ந்ததாகச் சொல்கிறாள். ஆனால் அந்த சமயத்தில் அவள் துளி கூட அச்சத்தை உணரவில்லை. அவளால் எதிர்வினையாற்ற முடியவில்லை என்றாலும் தன்னைச் சுற்றி நிகழும் அனைத்தையும் முழு பிரக்ஞையுடன் காண்கிறாள்.
சதாசிவத்துக்கும் ராஜாவுக்கும் இடையேயான முற்பிறவி உறவு ராஜாவுக்கு கனவெனும் ஊடகம் வழியாக துலங்குகிறது.
'கனவுதானே, அர்த்தம் இருந்துதான் ஆக வேண்டுமா என்று லேசாக அதைத் தள்ளிவிட முடியவில்லை என்னால் வாழ்க்கை ஒரு கனவு என்கிறார்கள்; கனவுக்குள் இக்கனவு. வாழ்க்கை என்னும் கனவு காரணகாரியச் சுழலுக்குக் கட்டுப்பட்டது என்றால், கனவில் கண்ட கனவும் அதற்கு உள்பட்டதுதானே?' என கர்ம கோட்பாடையும் அத்வைத வேதாந்த விசாரனையும் மேற்கொள்கிறார்.
மறைஞான அனுபவத்தை சொல்லாக்கி கடத்துவது மிகச்சவாலான விஷயம். சற்று தப்பினாலும் கேலியாகிவிடும். இந்திரா சவுந்தரராஜன் இத்தகைய கருவில் பலகதைகளை எழுதியருக்கிறார். ஒன்பதாவது அத்தியாயமான 'உயிரின் விழிப்பில்' வரும் விவரனையின் வெம்மையே இக்கதையை பிற வெகுமக்கள் படைப்புகளில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. 'காதுகளில்' நாசகாளியின் பேருருவிற்கு இணையான பகுதி லீலாவின் மாயைத்தோற்றம். சதாசிவத்தை காண விடாமல் மரித்து நிற்கிறாள். முதலில் மயக்கவும் பின்னன் அச்சுறுத்தவும் செய்கிறாள். திண்ணமான ஒரு உட்குரல் அப்போது அவனை வழிநடத்துகிறது. 'காதுகள்' இத்தகைய வழிநடத்தும் குரல்களால் ஆனதே. 'குற்றமும் தண்டனையும்' கதையில் மனோகர் நீலாவை கொல்லும்போதும் துல்லியமான குரல் அவனை வழிநடத்துகிறது. அதன் பின் அவனுக்கு வினோதமான அனுபவம் ஏற்படுகிது. 'என் தலையுச்சியில் யாரோ ஒரு சொடுக்கு சொடுக்கி விட்டாற் போல் டப் என்றோர் ஓசை உண்டாகிறது.' உடல் முழுவதும் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அவனே அவனுக்கு சாட்சியாகிறான்.
அச்சுறுத்தும் பேயுரு கொண்ட பயங்கரியிடம் 'அண்டங்களையும் அகிலாண்டங்களையும் ப்ரமாண்டங்களையும் உண்டாக்கி உண்டு உமிழும் சதாசிவம் நான். ஞானவாளுருவி எறிவேன்.' என திடமோடு அவன் பேசுவதை அவனே கேட்கிறான். போர்ஹேஸின் 'அலெஃப்' பற்றி நாம் பேசுகிறோம். அவ்வனுபவத்துடன் இணைத்து பார்க்க வேண்டிய கதை இது.
கடந்த ஆண்டு முதன்முறையாக அவருடைய 'காதுகள்' நாவலை வாசித்தபோது, இப்படி ஒரு நாவலை எழுத அபார மன திண்மையும் தன்னுணர்வும் வேண்டும் எனத்தோன்றியது. எம்.வி.வியே குறிப்பிடுவது போல் இது ஒரு தன்வரலாற்று நாவல். மெல்லிய புகைச் சங்கிலிக்கு அப்பால் நின்று தனது பித்து நிலையை சாடசியாக நோக்குவது, அதுவும் பல வருடங்கள் தொடர்ச்சியாக உள்ளுக்குள் பித்துநிலை நுரைத்து கொண்டிருந்தாலும், வெளியே இயல்பு வாழ்க்கை வாழ்ந்து புத்தகங்களும் கதைகளும் எழுதி பிள்ளைகளை வளர்த்தபடி இருப்பது என்பதை கற்பனை செய்வது கூட சாத்தியமில்லை. எம்.வி.வி பெரும் வீரர்தான்.
இந்திய மெய்யியல் மொழியில் சொல்வது என்றால் தனது கனவு நிலையை விழிப்பு நிலையை சாட்சியாக கொண்டு காண்பதும் அதை சொல்லாக வடிப்பதும் அரிய சாதனை. கவிதைகளின் இத்தெறிப்புகளை அவ்வப்போது காண முடியும். எல்லா பெருங்கவிகளும் ஓரிரு கவிதைகளிலாவது இப்படி வெளிப்படுவார்கள். பிரமிளின் கவிதைகள் நினைவுக்கு வருகின்றன. உரைநடை இலக்கியத்தில் இத்தகைய பித்து வெளிப்படுவது வெகு அரிது என்றே எண்ணுகிறேன். புயலிலே ஒரு தோனியில் வரும் மதுக்கூட உரையாடல், ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரல் இறுதியில் வரும் அபத்த நாடகம், ஆகியவை இவ்வகையான எழுத்து தன்மையை கொண்டவை என சட்டென நினைவில் எழுகின்றன.
நவீன உளவியல் கோணத்தில் நோக்கினால் உளச் சிதைவு எனும் ஸ்கீசோப்ரினியாவின் இலக்கியப் பதிவு என சொல்லலாம். தாந்த்ரீகத்தில் பரிச்சயம் உள்ளவர்கள் இது ஒரு குண்டலினி கோளாறின் முதன்மை பதிவு என சொல்லக்கூடும். இத்தகைய கணமான அனுபவத்தை எழுதும்போதும் அதை தலைகீழாக்கும், கேலி செய்யும் பகடியை அவர் கைவிடாதிருப்பது பெரும் வியப்புதான். இதே போன்று இறையருளைப் பேசு பொருளாக கொண்ட கதை 'அம்மையே! அப்பா!' பழனியாண்டவர் சட்டென ஓரிரவு வெங்கட்ராமனுக்கு முன் தோன்றி பெண்ணாக மாறும் வரத்தை அளிக்கிறார். பெண்ணாக மாறியதும் முருகனையே மணக்க விரும்புவதாக சொல்லும் இடமும் குறத்தி திட்டுவாள் என முருகன் மறுக்கும் இடமும் புன்னகைக்க வைப்பவை. கதையிறுதியில் பதினெட்டு மாத பெண் அனுபவம் போதவில்லை என்பதால் அடுத்து ஒரு பிறவி மட்டும் பெண்ணாக பிறந்து சுகம் அனுபவிக்க முருகனிடம் அருள் கோருகிறார். 'காதுகள்' நாவலில் பல இடங்கள் தன்னிச்சையாக கூர்மையான பகடி வெளிப்படுகிறது. அதுவும் இருண்ட நகைச்சுவை பகுதிகள். உதாரணமாக மாலியின் மகள் இறந்துவிட்டதாக குழப்பும் பிரமை நிலையில் ஒப்பாரி பாடல்கள் ஒலிக்கின்றன. மாலி நடுங்கிக் கொண்டிருக்கிறான். அதன் முடிவில் ஒரு குரல் சொல்கிறது. 'பாட்டு அருமை எல்லாரும் கைத்தட்டுங்க'. என்று. கந்தர் அனுபூதியை சொல்லிக்கொண்டே பிரமையை கடக்க முற்படுகிறான். அப்போது ஒரு குரல் 'இலக்கண பிழைகள் மலிந்த நூல். என் சிற்றறிவுக்கு எட்டியவரை இருபத்தியாறு பிழைகள் புலப்பட்டுள்ளன. மேலும் ஆய்வு செய்து..' என சொல்கிறது. இத்தகைய இரண்ட நகைச்சுவைக்கு தமிழில் எம்.விவிக்கு ஒரு தொடர்ச்சி உண்டு என்றால் அது இரா. முருகனின் 'அரசூர் வம்ச' நாவல் வரிசையில் தான். இதேபோல் சட்டென புன்னகைக்க வைக்கும் சில தருணங்களையும் விவரணைகளையும் சுட்டிக்காட்ட முடியும். உதாரணமாக 'மாய்பாஃப்' கதையில் வரும் ஒரு பகுதி 'என்ன அறியா வயசு? கலியாணம் பண்ணினா ரெண்டு பிள்ளை பெறுகிற வயசாச்சு…'
சத்தியமாய்ச் சொல்கிறேன், எனக்கு அப்போது அந்தப் பாவம் தெரியாது. கலியாணம் செய்திருந்தால் ஒரு குழந்தையை கூட எனக்கு பெறத் தெரியாது. ஆனால் அப்பாவே குற்றம் சாட்டும்போது நான் எப்படி மறுக்க முடியும்.' அதேகதையில் எலிவால் எனும் பாத்திரம் பற்றிய விவரனை இது 'சட்டைக்குள் கைவிட்டுத் தேடினால்தான் அவன் உடம்பு கையில் கிடைக்கும்.' அப்பாவும் பிள்ளையும் கதையில் வரும் வக்கீல் குமாஸ்தா ஆராவமுதுவின் இயல்பை நிறுத்த இந்த ஒரு விவரனை போதும். 'எதுகை மோனை பிசகாமல் சம்பிரதாயப் பூர்வமாக சாப்பிட்டார்.'
எம்.வி.வியின் கதைகளில் கவனித்த மற்றொன்று அவர் உருவாக்கும் தந்தை மகன் உறவு. 'தந்தையர்கள் எல்லோருமே சர்வாதிகாரிகள் கொடுங்கோலர்கள்.' என ஒரு கதையில் எழுதுகிறார். தாய் தந்தையரை குறைசொல்லக்கூடாதுதான் ஆனால் அவர்கள் ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை என்றால் என்ன செய்வது என அங்கலாய்க்கிறார். 'மாய்ஃபாப்' மற்றும் 'அப்பாவும் பிள்ளையும்' ஆகிய கதைகள் இரண்டுமே தந்தை மகன் உறவை பேசுபவை. 'குற்றமும் தண்டனை' ராமநாதன் இரும்பு மனிதராக வருகிறார். இழப்புகள் வழியாக வாழ்க்கை பாடத்தை கற்கிறார். உயிரின் யாத்திரை சதாசிவம் முற்பிறவியில் தந்தையாக இருந்தவர். அப்போது ஈட்டிய கர்மக் கடனை கழிக்க இவர்களுக்கு உதவுகிறார். 'அப்பாவும் பிள்ளையும்' ஒரு சீரழிந்த குடும்பத்தை காட்டுகிறது. தாயும் தந்தையும் பேசிக்கொள்ளாமலேயே பல ஆண்டுகள் கடந்தவர்கள். தந்தை சாமார்த்தியமின்மையால் பூர்வீக சொத்தை இழந்தவர். மகன் அந்த பொறுப்பின்மையின் சுமையை சுமக்க வேண்டியிருந்தது. மகன் தந்தையின் பாத்திரத்தை ஏற்கிறான். தந்தையிடம் தன்னை நிறுவும் உந்துதலும் அவரை மட்டம் தட்டும் விழைவும் அவனை இயக்குகிறது. அவருடைய கடனை ஏற்க மறுக்கிறான். ஜப்தி வரை வந்தபின்னரும் அதை தவிர்க்க முயல்கிறான். சிக்கலில் இருந்து தற்காலிகமாக மீண்ட பின்னர் தந்தையை கைவிடுகிறான்.
எழுத்தாளருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி என்பது அவரை வாசிப்பதுதான். வாசிக்கப்படும்வரை எழுத்தாளர் உயிர்த்திருக்கிறார். இந்த தருணத்தில் எம்.வி.வெங்கட்ராமின் முழுத்தொகுதி பெரும் உழைப்பில் நேர்த்தியுடன் வெளிவந்திருப்பது மிக முக்கியமான விஷயம். தொகுப்பாசிரியர்கள் ரவி சுப்பிரமணியம் மற்றும் கல்யாணராமனுக்கும் வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்திற்கும் நன்றி. எம்.விவி மீண்டும் வாசிக்க இது ஓரு முகாந்தரம். மறுவாசிப்பில் மேலும் முக்கியத்துவம் வாய்ந்தவராகவே எம்விவி எழுந்துவருகிறார்.
சுனில் கிருஷ்ணன்
.
வீழ்ச்சியும் மீட்சியும் - வண்ணநிலவனின் சிறுகதைகளை முன்வைத்து

1
ஒரு பந்தென இருக்கிறோம்
கடவுளின் கைகளில்
அவரதைத் தவறவிடுகிறார்
தொப்பென வீழ்ந்து விடாதபடிக்குத்
தன் பாதத்தால் தடுத்து
முழங்காலால் எற்றி
புஜங்களில் உந்தி
உச்சந்தலை கொண்டு முட்டி
இரு கைகளுக்கு இடையே
மாறி மாறித் தட்டி விளையாடுகிறார்
மறுபடியும் பாதத்திற்கு விட்டு
கைகளுக்கு வரவழைக்கிறார்
‘' நான் உன்னை விட்டு
விலகுவதுமில்லை;உன்னைக் கைவிடுவதுமில்லை''
பிதாவே தயவு பண்ணி எம்மைக் கைவிடும்.
- பிதாவே, இசை
வண்ணநிலவனின் சிறுகதைகள் வாசித்து முடித்தபோது இசையின் இக்கவிதை மனதை அறுவியபடி இருந்தது. இக்கவிதையில் தொனிப்பது ஆத்திரமா? ஆற்றாமையா? அல்லது மன்றாடலா? திண்ணமாக வரையறுத்துவிட இயலவில்லை. அதுவே அதன்மீதான வசீகரத்தை அதிகரித்தது. வண்ணநிலவனை வாசித்து முடித்த மனநிலையில் எனக்கது மறைமுக மன்றாடலாகவே தொனித்தது. வண்ணநிலவன் படைப்புகளின் ஊடே எழுப்ப விரும்பும் கேள்வியெது? படைப்புகளின் ஊடே மீண்டும் மீண்டும் சென்று முட்டிமோதி திறக்க/ விடுவிக்க முயலும் புதிர் எது? இக் கேள்விகளை தொடர்வதே இக்கட்டுரையின் நோக்கம்
நவீன இலக்கிய கதைகளுக்கும் மரபிலக்கிய கதைபாடல்களுக்கும் இடையேயான வேறுபாடுகள் என்னென்ன? பல சமயங்களில் மரபிலக்கியங்களில் பாடலுக்குரிய கதை நாயகர் நாம் தலைமுறைகளை கடந்து நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டிய ஏதோ ஒரு விழுமியத்தின் பிரதிநிதி. நாட்டார் தெய்வங்களின் கதை பாடல்கள் சாமானியர்களின் கதைகளை சொன்னாலும் அவர்களை தெய்வ நிலைக்கு உயர்த்தித்தான் சொல்கிறது. நேர்மாறாக நவீன இலக்கியம், சாமானியர்களின் கதைகளை சாமானிய தளத்திலேயே பேசுகிறது. காவிய, வரலாற்று நாயகர்களைப் பற்றி பேசும்போது கூட அவர்களை சாமானியனாக காட்டவே முற்படுகிறது. அவர்களது உன்னதங்களுக்கு மாறாக வீழ்ச்சிகளையும் பலவீனங்களையும் சித்தரிக்கிறது.
உதாரணத்திற்கு வண்ணநிலவனின் 'வார்த்தை' எனும் சிறுகதையை எடுத்துக்கொள்ளலாம். பிலாத்துவின் மனைவியின் பார்வையிலிருந்து இயேசு கிறிஸ்து சித்தரிக்கப்படுகிறார். பிலாத்துவுக்குமே கூட அவரை தண்டிக்க பெரிய விருப்பமில்லை. ராணி தன் தோழியான எஸ்தர் வழி அவனை அறிந்தவள். விசாரணையை உப்பரிகையிலிருந்து காண்கிறாள். சுற்றி இருப்பவர்கள் கேலி செய்து வசைப்பாட, தலை குனிந்து அதை கேட்டுக்கொண்டிருக்கிறார். தனது அன்னை மேரியை தேடுகிறார். அவளை சந்திக்க முடியாததற்காக வருந்தி குற்ற உணர்வு கொள்கிறார். அனைவரும் வெறுத்து முகத்தில் எச்சில் உமிழும் போது உப்பரிகையில் காணும் பெண்னின் மெல்லிய தலையசைப்பு அவருக்கு பெரும் ஆறுதலை அளிக்கிறது. 'தீங்கு நேராமல் பார்த்துக்கொள்ளவும்' எனும் வார்த்தை வழியாக அளவற்ற பிரியத்தை தெரிவிப்பது போதுமானதாக உள்ளது. எனக்குத்தெரிய வண்ணநிலவன் எழுதிய ஒரே தொன்ம கதை இதுதான். அதிலும் இயேசு கையறு நிலையில் இருக்கும் சாமானியனாக வருகிறார்.
வண்ணநிலவனின் சிறுகதையுலகின் சில பொதுத்தன்மைகளை இக்கதையைக் கொண்டே புரிந்து கொள்ளலாம்.
1. வீழ்ச்சியின் சித்திரம் - கையறு நிலையில் தவிப்பது- இயேசுவின் நிலை
2. மீட்சி- ஆறுதல் அளிக்கும் ஒரு மாயக்கரம்- பிலாத்துவின் மனைவியின் தலையசைப்பும், சொல்லும்
'வீழ்ச்சியின் பாணன்' என வண்ணநிலவனை சொல்லலாம். பல்வேறு வகைகளில், ஆழங்களில் விதவிதமான வீழ்ச்சிகளையும் சிதைவுகளையும் காட்டியபடி இருக்கிறார். வாழ்க்கையின் நிறங்கள் பலவகையானவை ஆனால் சிதைவின் நிறம் என்னவோ சாம்பல் மட்டும் தான். அவர் காட்டும் எல்லா வீழ்ச்சிகளுக்கும் மீட்சி இருப்பதில்லை. பல கதைகளில் சிதைவை மட்டுமே காண்பித்து நகர்கிறார். குறிப்பாக தொடக்கக்கால கதைகளில் இந்த போக்கை தீர்க்கமாக காண முடிகிறது.
வண்ணநிலவனின் கதை மாந்தர்களின் வீழ்ச்சிக்கு பெரும்பாலும் வெளியிலிருந்து எவரும் காரணமில்லை. சமூகத்தை நோக்கி ஆவேசத்துடன் விரல் சுட்டுவதில்லை. 'அழைக்கிறவர்கள்' கதையில் வரும் சீக்காளி கணவன் போல அவர்கள் மவுனமாக தங்களைத்தாங்களே ஆடியில் நோக்கி நொந்துக்கொள்பவர்கள். இரண்டு விதமான வீழ்ச்சிகளை அவருடைய கதைகள் சித்தரிக்கின்றன. சில சமயங்களில் அவர்களின் வீழ்ச்சிக்கு அவர்களே பொறுப்பு வேறு பல சமயங்களில் மேலிருக்கும் ராட்டின இருக்கை கீழேயிறங்குவது எப்படி சக்கரச் சுழற்சியில் தவிர்க்கமுடியாத விதியோ அப்படித்தான் இந்த வீழ்ச்சியும் நிகழ்கிறது.
2
'விமோசனம்' கதையில் மதிப்பாக இருந்த சமையல்காரர் முத்தையா பிள்ளை குடியில் வீழ்கிறார். 'தலையில் சுழிதான் சரியில்லை' என அவர் நிலை குறித்து குறிப்பிடப்படுகிறது. 'ராஜாவும் வாரிசுகளும்' கதையில் பொருளியல் நிலைக்காக குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு செல்லும் சிவனு செட்டியார். 'அன்று' கதையில் தேருக்கு சக்கை போடுவதில் நிபுனத்துவம் பெற்ற மாரியப்பன் குடியில் மூழ்குகிறான். 'துன்பக் கேணி' கதையில் கணவன் சிறையிலிருக்க வயிற்றுப்பிள்ளையோடு வண்டி மலைச்சி சாராயம் கடத்த வந்த முதல் இரவிலேயே சிக்கிக்கொள்வதை காலத்தின் கோலம் என்பதைத் தவிர வேறெப்படி சொல்ல முடியும். சிதைவை முழு தீவிரத்தில் சித்தரித்து எழுதப்பட்ட மிக முக்கியமான கதைகளில் ஒன்று 'மிருகம்'. ஒரு வகையில் 'எஸ்தரின்' தொடர்ச்சியாக, அவர்கள் இடம்பெயர்ந்து சென்ற பின்பு எஞ்சும் சூனியத்தை துலக்கமுறச்செய்யும் கதையாக வாசிக்க இடமுண்டு. கவிதைக்கு நெருக்கமான மொழியமைப்பு கொண்டது. ஆழத்தின் வன்மம் வெளிப்பட ஏந்த காரண காரியமும் இல்லை. யார் மிருகம்? எது மிருகத்தின் இயல்பு? எனும் முக்கியமான கேள்வியை இக்கதை எழுப்பியது.
வண்ணநிலவனின் கதைகள் மனித அகத்தின் சாம்பல் நிற அடர்வுகளை காட்டும்போது மேலும் மேலுமென ஆழமும் நுட்பமும் பூணுகின்றன. 'பிழைப்பு' ரத்தினம் பிள்ளை எனும் முன்னாள் சண்டியரின் கதை. 'பாம்பும் பிடாரனும்' உருவகமாக நமக்களிக்கும் அதே தரிசனத்தை நிகழ்வுகள் வழியாக இக்கதையும் முன்வைக்கிறது. ரத்தினம் பிள்ளை அறிமுகமாகும்போதே வயதான, பழைய கீர்த்திகள் மட்டுமே எஞ்சும், மதிப்பற்ற முன்னாள் சண்டியராகத்தான் அறிமுகமாகிறார். வாடகையை நம்பி வாழும் பரிச்சயமான பெண் வாடகையளிக்காத குடித்தனக்காரர்களை காலி செய்வதற்கு ரத்தினம் பிள்ளையின் உதவியை நாடுகிறாள். அவருக்கு இந்த பாவம் இனியும் செய்ய வேண்டுமா எனும் எண்ணம் எழுகிறது. 'பல மாசமாக ஒருத்தன் வாடகை கொடுக்க முடியாமல் குடியிருக்கிறான் என்றால் அவன் எவ்வளவு கஷ்டப்பட்டவனாக இருக்க வேண்டும். ஆனாலும் அவர் அந்த குடும்பத்தை மிரட்டுகிறார். வக்கற்ற அந்த குடும்பத்தை பாடாகப்படுத்தி வளவுகாரர்கள் முன் தலைகுனியச்செய்ததற்காக வருந்துகிறார். அறமின்மை என்றறிந்தும் அவரால் அதை தவிர்க்க முடியவில்லை. எவர் பிழை? எது அறம்? எதையும் வரையறுக்க இயலாது.
இலக்கியபிரதி எதையும் இரு துருவங்களாக அணுகாமல் அதை சிடுக்காகவும் சிக்கலாகவும் ஆக்கும்போது முழுமையை நோக்கி நகர்கிறது. வாழ்க்கையை எளிய சமன்பாடுகளுக்குள் வகுத்துவிடக்கூடாது என்பதே இலக்கியத்தின் நியதியாக இருக்க முடியும். 'மீண்டும்' இத்தகைய சரி தவறுகளுக்கு இடையேயான வெளியில் ஊடாடும் கதை. ஜமக்காள விற்பனை பிரதிநிதியான தண்டபாணியிடம் ஜமுக்காளம் வாங்குவதற்காக முன்பணம் கொடுத்தவன் ஜெகன். ஜமக்காளம் ஜெகன் வீட்டுக்கு வந்த நாளில் அவன் வீட்டில் இல்லை. வந்த தபால் எங்கு சென்றது என தெரியவில்லை. ஜெகனைப் பொருத்தவரை இதற்கு தண்டபாணி பொறுப்பு, தண்டபாணியை பொருத்தவரை இது தன் பொறுப்பல்ல. குடித்துவிட்டு முன்பணமாக அளித்த காசை திரும்பி கேட்கிறான் ஜெகன். 'அன்று' கதையை அறச்சிக்கல் என சொல்லிவிட. முடியாது, எனினும் தேருக்கு சக்கை போடும் மாரியப்பனை அழைக்க சென்ற இடத்தில் அவனுடைய நிர்பந்தத்தின் பேரில் ஈஸ்வரனும் குடிக்கும் போது இனி தன்னை நம்பி தர்மகர்த்தா ஒரு காரியத்தையும் ஒப்படைக்க மாட்டார் என்று உணர்கிறான். நம்பிக்கை உடைவினால் ஏற்படும் தர்ம சங்கடம் அவனை பீடிக்கிறது.
விளைவுகளை நன்கு உணர்ந்தும் உளத்திடமின்மையால் தீமையை தவிர்க்க முடியாதவர்களாகவும் சூழல் கொண்டு வந்து சேர்த்த இக்கட்டை தங்களது உள சலனத்தையும் மீறி கடப்பவர்களாகவும் என இரண்டு விதமான பாத்திர வார்ப்புகளையும் வண்ணநிலவன் உருவாக்கி இருக்கிறார். வீழ்பவர்களாலும் மீள்பவர்களாலும் நிறைந்தது அவரது கதையுலகம்.
'நட்சத்திரங்களுக்கு கீழே' கதையில் ஞானப்பிரகாசம் முதலாளியின் ஆணையின பேரில் பாலையாவை பராமரித்துக்கொண்டிருந்தான். பாலையாவின் நிலத்தை எழுதி வாங்குவதற்கான தந்திரம் என ஞானம் உணர்ந்துகொண்டதும் பழிபாவத்தின் மீதான அச்சத்திற்கும் நன்றியுணர்வுக்குமிடையே ஊசலாடுகிறான். நட்சத்திரங்கள் அவனுக்கே அவனுக்கென ஏதோ ஒரு செய்தியை அறிவிக்கிறது. பாவத்திற்கு உடன்படாமல் தப்புகிறான்.
3
வண்ணநிலவனின் சிறுகதையில் வரும் பெரும்பாலான கதை மாந்தர்கள் தனித்தவர்கள். மனைவியையோ கணவரையோ தந்தையையோ என எவரையோ இழந்தவர்கள் அல்லது பிரிந்தவர்கள். அல்லது முடங்கிப்போனவர்கள். அன்றாட வாழ்க்கையை நடத்துவதே அவர்களுக்கு பெரும்பாடு. எனும் அளவிற்கு வறுமையில் உழல்பவர்கள். மான அவமானங்களால் அலைக்கழிபவர்கள். ஆகவே சமயங்களில் சந்தர்ப்பவாதிகளும் கூட. மனித இயல்புகளின் நம்பகமற்றத்தன்மையை பிரதிபலிப்பவர்கள்.
உறவுகளுக்குள், வன்முறையும், மனிதர்களின் போலித்தனங்களின் மீதான அசூயையும் என நவீனத்துவ அழகியலின் பல்வேறு கூறுகள் மிகக் கூர்மையாக பல கதைகளில் வெளிப்படுகின்றன. மொத்தமாக இந்த சிறுகதைகளை வாசித்து முடித்த போது வண்ணநிலவனின் கதைமாந்தர்கள் எதிர்கொள்ளும் முதன்மை சிக்கல் என்பது உறுதுணையின்மை என தோன்றுகிறது. வீழ்ச்சி தவிர்க்க முடியாததாக இருக்கலாம் ஆனால் அதை எதிர்கொள்ளவும் கடந்து செல்லவும் உறுதுணையிருந்தால் கூட போதும். வீழ்ச்சியின் ஒரு பகுதியாக உறுதுணையை இழக்கிறார்கள் அல்லது உறுதுணையின்மையாலே கூட வீழ்ச்சியை எதிர்கொள்கிறார்கள்.
மனித உறவுகளுக்குள் உள்ளோடும் வன்மத்தையும், கணக்குகளையும், சுரண்டல்களையும் கதையாக்குகிறார். 'விடுதலை' கதையில் வயதில் மூத்த கோபால் பிள்ளை பெரிய முதலாளியிடம் அற்ப பொய் சொன்னதற்காக வசை வாங்குகிறார். அவமானத்தில் புழுங்கி தூக்கில் தொங்கி மரணிக்கிறார். பொதுவாக அவமானங்களை சகித்துக்கொண்டு வாழும் நடுத்தர வர்க்கத்தினரின் சித்தரிப்பிலிருந்து விலகிச் செல்லும் பாத்திர வார்ப்பு. தற்கொலையை பற்றிய கதைக்கு விடுதலைஎன தலைப்பு. 'இரண்டு பெண்கள்' 'மைத்துனி' போன்ற கதைகள் பெண்களுக்குள்ளேயே இருக்கும் உரசல்களை சித்தரிப்பவை. 'மனைவி' கதையில் குழந்தைக்கு காய்ச்சல். மருந்துவாங்கக்கூட காசில்லை. கணவன் நண்பனை வீட்டுக்கு அழைத்துவருகிறான். அந்த நண்பன் மனைவியையே நோக்குகிறான். முலையில் கைபட குழந்தையை வாங்குகிறான். இது எதுவுமே தனக்கு புதிதில்லை என மனைவி உணர்கிறாள். கணவருக்கு இதெல்லாம் புரியாது என எண்ணுகிறாள். அங்கிருந்து கிளம்பிச்செல்லும் போது நண்பனிடம் தனது பிள்ளைக்காக இரண்டு ரூபாய் கடன் கேட்கிறான். ஒருவகையில் தன் மனைவியை காட்சிபொருளாக்கி சூதாடுவதுதான் இது. 'விமோசனம்' மீனா குடிகார தகப்பனால் தொந்திரவுக்கு உள்ளாகிறாள். 'மல்லிகா' வை அவனது சொந்த மாமனே சுரண்டுகிறான். அவளுக்கு ஒரு வாழ்க்கை அமையாமல் பார்த்துக்கொள்கிறான். 'துருவங்கள்' பிடிக்காத திருமண வாழ்வில் அகப்பட்டுக்கொண்டு மீள முடியாதவளின் அகக்குரலாக ஒலிக்கும் கதை. 'பேச்சி' சாமார்த்தியசாலியின் கதை. யார் யாரை ஏய்க்கிறார்கள் என்பதை கவனிப்பத ஒரு வேடிக்கை. 'துக்கம்' சிறுவயதிலேயே இறந்து போன மருமகன் பொருட்டு மகள் அழுது தீர்க்கவில்லை, அவனுக்காக அளிக்கப்படும் தொகையை இளைய மகளின் திருமணத்திற்கு பயன்படுத்தும் எண்ணத்தில் இருக்கிறாள் இறந்தவனின் மாமியார். குரூரம் என சொல்லலாம்தான் ஆனால் அது நடைமுறையும் கூட. பிறர் அவளிடம் அந்த யோசனையை கூறும்போது புதிதாக வியப்படைவதுபோல காட்டிக்கொள்கிறாள். 'குடும்ப சித்திரம்' குடும்பம் குறித்த எந்த கற்பிதமும் இல்லாமல் அதற்குள் இருக்கும் பிணக்கங்ளை காட்டிச்செல்கிறது.
'ஒரே ஒரு நாள்' எனும் அவரது குறுநாவல் அவரது ஆகப்பெரிய கதை. இதையும் எஸ்தரையும் தவிர்த்து பார்த்தால் அனைத்து கதைகளுமே ஆறேழு பக்கங்கள் நீள்பவைதான். நகரத்து வேலையற்ற பட்டதாரி வாழ்க்கையின் சித்தரிப்பு. நவீனத்துவ அழகியலை முழுமையாக பறைசாற்றும் ஆக்கம் என சொல்லலாம். அக்காலகட்டத்தின் வெறுமையையும் விரக்தியையும் ஆழமாக விவரிக்கிறது. நன்மையின் மீது அவநம்பிக்கை வெளிப்படும், அனைத்தின் மீதும் எரிச்சலும் வெறுப்பும் படர்கிறது. தான் தனித்தவன் எனும் நம்பிக்கை, அனைத்தும் போலி எனும் உணர்வு என 70-80 களின் இருத்தலியல் கேள்விகளை சுமக்கும் கோபக்கார இளைஞனின் அத்தனை இயல்புகளும் கொண்டவன் கதை நாயகன் ராதா. ஒரு நாள் என்பது எத்தனை சுமை மிக்கது? அந்த நாளின் இறுக்கத்தையும் சுமையையும் வாசகருக்கு கடத்துகிறார். ஒளியின் மீதான எரிச்சலும் கோபமும் அபாரமாக வெளிப்பட்ட கதை என 'வெளிச்சம்' கதையை சொல்லலாம். இரவெல்லாம் தெருவில் எரியும் மெர்க்குரி வெளிச்சம் ஆபாசமாக வீட்டிற்குள் விழுகிறது. அந்த ஒளி வெள்ளத்தில் வாழ பழகிக்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை. ஆனால் அது அவனை தொந்திரவு செய்கிறது. தெருவில் எரிந்த மெர்க்குரி விளக்கை கல்லெறிந்து உடைக்கிறான். தெருவிளக்கைப் பற்றிய கதையாக மட்டும் இதை சுருக்கி புரிந்து கொள்ளாமல் அவரது அக்காலகட்டத்து பிற கதைகளுடன் மொத்தமாக காணும் போது இக்கதை குறியீட்டு ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. கு. அழகிரிசாமியின் 'இரவு' எனும் சிறுகதை நினைவுக்கு வந்தது. நவீன எழுத்தாளனுக்கு இருளின் மீது பெரும் ஈர்ப்பு எல்லா காலத்திலும் உண்டு.
4
பிற இருத்தலியல் எழுத்துக்களிடமிருந்து வண்ணநிலவன் வேறுபடும் புள்ளி என ஒன்றைச் சுட்ட வேண்டும் எனில் உறுதுணையற்றதாக தோன்றும் சூழலில் எதிர்பாராத திசையிலிருந்து கரிசனத்துடன் நீண்டு இறுகப் பற்றிக்கொள்ளும் கரம் ஒன்றை பல கதைகளில் நாம் காண முடியும். தொடக்கக்கால கதைகளிலிருந்து அவரது பிற்கால கதைகளை நோக்கி நகரும் தோறும் இந்த மாற்றம் தெளிவாகவே புலப்படுகிறது. அவரது 'ஒரு நாள்' குறுநாவலுக்கு பின்னர் இருண்மையை மட்டும் அப்பட்டமாக சித்தரிக்கும் கதைகள் அருகி, அறச்சிக்கலை பேசு பொருளாக கொண்ட கதைகளை நோக்கி நகர்கிறது.
உறவுக்குள் இழையோடும் வன்மத்தை சித்தரிப்பது துலாத்தட்டின் ஒரு பக்கம் என்றால் உறவுக்குள் தனது இணையின் தேவையை குறிப்புணர்ந்து கணக்கு வழக்குகளுக்கு அப்பால் பெருந்தன்மையுடன் நடந்துகொள்வது என்பது மற்றொரு எல்லை. வண்ணநிலவன் கதைகளில் உடைமை உணர்வு நீத்த பெண்/ஆண் பாத்திரங்கள் மீண்டும் மீண்டும் ஆராதிக்கப்படுவதை நம்மால் காண முடியும். உறவின் ஆதாரமே உடைமையுணர்வுதான் எனும் நம்பிக்கை இங்கு உண்டு. உடைமையுணர்வு நீங்கும்போது உறவுக்குள் முகிழும் மெல்லிய மலர்ச்சியை வண்ணநிலவன் வனைகிறார்.
'அயோத்தி' 'மனைவியின் நண்பர்' 'வார்த்தை தவறிவிட்டாய்' போன்ற கதைகளை குறிப்பிட்டுச் சொல்லலாம். பெண்களின் உளவியலை எழுதிய அளவிற்கே ஆண்களின் அக விஸ்தீரனத்தை பேசியவை வண்ணநிலவனின் கதைகள். 'அயோத்தியில்' சந்திரா திருமணத்தை சிறையாக உணர்கிறாள். கணவன் புத்தகம் படிக்கும், பிள்ளைக்கு பால் டின் வாங்கிவரக்கூட வக்கற்ற உலகியல் சாமார்த்தியமற்றவன். தன்னை புரிந்துகொள்ளவில்லை எனும் வருத்தம் எப்போதும் அவளுக்கு உண்டு.
திருமணம் செய்துகொள்ள விரும்பிய முறைமாமனை எண்ணி ஏங்குகிறாள்.
பெரும்பாலான மனைவிகளைப் போலவே கணவனோடு எப்படியாவது தன்னைப் பின்னிக்கொள்ள வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டாள். அவளுடைய அத்தானை மறக்க எவ்வளவோ பிரயாசைப்பட்டும் ஒன்றும் முடியவில்லை. உணர்வுகளை புரிந்து கொள்ளாத புத்தகப்புழு கணவன் அவளுடைய தவிப்பை எப்படியோ உணர்ந்து கொண்டு அத்தானை காண அழைத்துச்செல்லும் புள்ளியில் கதை நிறைவுறுகிறது. கதையின் தலைப்பு 'அயோத்தி'. ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி எனும் வழக்கிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
'வார்த்தை தவறிவிட்டாய்' காதலித்து கைவிட்ட பெண்னை திருமணத்திற்கு பின் சந்திக்கும்போது அவள் தனது மனைவியுடன் நெருங்கி நட்பாக பழகுவதை கண்டு பதறுகிறான். கடந்தகாலத்தைப் பற்றி ஏதேனும் சொல்லிவிடுவாளோ எனும் அச்சம் அவனுக்கு. ஆனால் அவள் அப்படி எதையும் சொல்லிவிடவில்லை. அவள் சொல்லிவிடக்கூடும் என அவன் எண்ணியதே கூட அவளை சீற்றமடையச்செய்கிறது. 'ராதா அக்கா' இந்த வரிசையில் வரவேண்டிய மற்றொரு கதை. வீட்டைவிட்டு வெளியேறி ஏற்கனவே திருமணமான கோபால் வீட்டிற்கு அவனுடனேயே வாழும் நோக்கில் செல்கிறாள் ராதா. ராதாவை அவர்களுடைய வீட்டார் தேடிவரும்போதுதான் கோபாலின் முதல் மனைவி லீலாமதினி சிக்கலை உணர்ந்துகொள்கிறாள். 'தஞ்சம்ன்னு வந்துட்டா .. இன்னமே அவ என் தங்கச்சிதான், ஏங்கூடத்தான் இருப்பா' என அவளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறாள். 'அவன் அவள் அவன்' பரிமளா குடியில் சீரழியும் தனது கணவரின் மூத்த சகோதனை கவனித்துக்கொள்கிறாள். 'அனுசரனை' அல்லது 'கரிசனம்' எனும் சொல் நினைவுக்கு வந்தபடியுள்ளது.
'மெஹ்ருன்னிசா' ஒரு நல்ல ஆளுமை சித்திரம். வீழ்ச்சியின் கதைதான் சொல்லப்படுகிறது. வீட்டைச் சித்தரிக்கும் போது முன்பக்கம் வளமாகவும் பின்பக்கம் சிதைந்தும் காணப்படுகிறது என்பதே சிதைவை நமக்கு அறிவிக்கிறது. மச்சில் அமர்ந்து தனியாக ஃபிடில் வாசிக்கக்கூடியவள். தன் வழி கணவருக்கு பிள்ளை வாய்க்காது என்றுணர்ந்தவள் அவளே முன்நின்று கணவருக்கு சுலைகாவுடன் திருமணம் நடத்தி தனியே குடித்தனம் அமைத்துக்கொடுக்கிறாள். அவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைக்கு மெஹ்ருன்னிசா என்றே சுலைகா பெயரிடுகிறாள்.
5
வண்ணநிலவன் கதைகளை எளிய இருமைகளுக்கு அப்பாலான வெளியில் நகர்த்துமாபோது கதைகளின் கணம் கூடுவதை உணர்கிறோம். 'அந்திக் கருக்கல்' கதையில் மருமகள் ரெஜினாளின் துயரத்தை கண்டு மகன் சேர்த்துக்கொண்டு வாழும் பரிமளாவின் வீட்டிற்கு நியாயம் கேட்கச் செல்கிறார். அங்கே அவள் மிக பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறாள். சரி தவறுகளுக்கு அப்பால் அவரவர் நியாயங்களை பேசுகிறது. காலில் விழும் பரிமளாவிற்கு ஆசியளித்துவிட்டு நகர்கிறார் பெரியவர். 'மனைவியின் நண்பர்' கத்தி மீது நடப்பதான கவனத்துடன் எழுதப்பட்ட கதை. ஈர்ப்பு, நட்பு, காதல் என எதுவாகவும் வரையறுக்கப்படாத எல்லையில் நிகழ்கிறது. கணவனின் மனநிலை மிக லேசாக தொட்டுக்காட்டப்படுகிறது. பரந்த மனமா அல்லது வேறு வழியில்லாமல் அனுமதிக்கிறானா? ஐயம் கொள்கிறானா? 'அவன் அவள் அவன்' கதையில் கணவன் பொறாமை கொள்வது வெளிப்படையாகவே பதிவாகியிருக்கும். 'மனைவி' மற்றும் 'மனைவியின் நண்பர்' கதைகளில் கணவன் பலவீனத்தை பயன்படுத்திககொள்ளும் சந்தர்ப்பவாதியாகவே தோன்றுகிறான்.
'அழைக்கிறவர்கள்' சற்றே சிக்கலான, அமைதியிழக்கச்செய்யும் கதை. சீக்காளியாகிவிட்ட கணவரைக் கொண்டு குடும்பமே பிச்சை எடுக்க வைத்து வாழ்கிறது. மனைவி, குழந்தைகள் என அனைவரும் நாடக பாணியில் தயாராகிறார்கள். கணவனை தயார்படுத்துகிறார்கள். குடும்ப அமைப்பின் உறவின் சுரண்டலைச் சித்தரிக்கிறது என வாசிக்க முடியும். இன்னோரு பக்கம் மனைவியை விட்டு வெளியே கஸ்தூரி எனம் பெண்னுடன் கொண்ட உறவின் வழி மொத்தத்தையும் இழந்த கணவன் குற்ற உணர்வில் பிழைநிகர் செய்ய முழு கரிசனத்தோடு ஒத்துழைக்கிறான் என்றும் வாசிக்க முடியும். இதே வரிசையில் வைக்கத்தக்க மற்றொரு கதை 'அரெஸ்ட்' அலுவலக பணத்தை எடுத்துவிட்டு வீட்டுக்குள் ஒளிந்திருப்பதால் குடும்பத்தினருக்கு ஏற்படும் இக்கட்டுகளை பேசுகிறதே. ஒரு கட்டத்தில் தன் தவறுக்கு தான் பொறுப்பேற்று குடும்பத்தை விடுவிக்க முயல்கிறான். 'அழைக்கிறவர்கள்' கதையைப்போலவே சுரண்டல் என்றும் கரிசனம் என்றும் இரண்டு கோணங்களில் இருந்தும் காண இயலும். 'கடன்' குற்ற உணர்வை பேசும் கதை தான். 'பிழைப்பு' கதையை போலவே இங்கேயும் தன் செயலின் இழிவு குறித்து முழு ஓர்மை உள்ளது. யாருக்கும் தெரியாமல் கடன் கொடுத்த அத்தை இறந்து போகிறாள். அதை திரும்ப செலுத்துவதா வேண்டாமா எனும் ஊசலாட்டத்தில் உள்ளான் பாலையா. மனைவி லீலா அவர்களாக கேட்டால் பார்க்கலாம், பேசாமல் இருங்கள் என சொல்லிவிடுகிறாள். லீலா அறிவுறுத்தியது அவனுக்கு ஏற்புடையதாக இருந்ததாலேயே அதை மவுனமாக பின்பற்றினான். லீலாவுக்கு எந்த குழப்பமும் இல்லை. இவன்தான் உறக்கம் வராமல் தவிக்கிறான்.
வீழ்ச்சியும், அற ஊசலாட்டமும், அரவணைக்கும் பெண்னின் பெருந்தன்மையும், அகத்திற்கும் புறத்திற்குமான முரண்பாடும் என வண்ணநிலவனின் முக்கிய புனைவியல்புகளின் அற்புதமான கலவையில் உருவாகி வந்துள்ள கதைதான் 'எஸ்தர்'. தமிழில் அதிகம் கொண்டாடப்பட்ட, பரவலாக பேசப்பட்ட கதைகளில் ஒன்று. அரிசி சோறிலிருந்து கம்புஞ்சோறுக்கு சென்றுவிட்டதை சொல்லும்போதே வீழ்ச்சியின் சித்திரமும் இடப்பெயர்வக்கான காரணமும் துலங்கி வருகிறது. நெருப்புக்குச்சி கூட இல்லாத அளவு வறுமை. ஊரே காலியாகிக்கிடக்கிறது. தந்தையின் ஒன்றுவிட்ட சகோதரியான எஸ்தர் சித்தி மகன் முறையிலான சகோதரர்களால் தத்தமது மனைவிகளைக் காட்டிலும் அதிகமாக நேசிக்கப்பட்டவள். எல்லாவற்றையும் நிர்வகிக்கிறாள். இரண்டு மருமகள்களின் எதிரெதிர் இயல்புகள் கோடிட்டுக்காட்டப்படுகின்றன. பெரிய அமலத்திற்கு மனதை துக்கத்தில் ஆழ்த்திக்கொள்வதே மகிழ்வளிப்பதாக உள்ளது. இருட்டை அழிப்பது வீடுகளிலிருந்து கேட்ட பேச்சு குரல்களும் நடமாட்டமுமே. இருட்டின் முனுமுனுப்பை எஸ்தர் கேட்கிறாள். பாட்டிக்காக நல்ல வேலைக்காரனான ஈசாக்கை விட்டுச்செல்ல முடியாது என முடிவெடுக்கிறாள் எஸ்தர். ஈரமற்ற வறண்ட காற்று வீசுகிறது எஸ்தரின் உள்ளத்தைபோலவே. பாட்டியின் மரணத்தை பெருங்கருணையின் பாற்பட்டு எடுத்த முடிவா அல்லது சுயநலமா? முடிவற்ற நியாயங்களை உற்பத்தி செய்யும் கதை. மொழியும் கூறுமுறையும் பேசு பொருளும் என அனைத்தும் இயைந்து வந்ததே இக்கதையின் வீச்சுக்கு முக்கிய காரணம்.
6
படைப்பு என்பதே காலத்துக்கு எதிராக தனி மனிதன் தனது நினைவுகளை தக்கவைக்கப் பிடிக்கும் முரண்டு என எனக்கு தோன்றுவதுண்டு. 'மனச்சிற்பங்கள்' ஒரு அக உரையாடல் தன்மை கொண்டது. 'கடந்த காலத்துடன் வாழ்வது பிணத்துடன் வாழ்வது போல' எனும் சுற்றத்தாரின் கூற்றை மறுத்து உரையாடல் நகர்கிறது. 'பச்சோந்தி போல காலத்துக்கு காலம் அவ்வக்காலத்து நடையுடை பாவனைகளில் தங்களைப் பறிகொடுத்துத் திரிந்தது அவனுக்கு கஷ்டமாக இருந்தது.' புதுமையின் மீதும் மாற்றத்தின் மீதும் சலிப்பு கொள்கிறான். 'சலனமே இல்லாமல் காலமும் சம்பவங்களும் உறைந்து போகக்கூடாதா?' என ஏங்குகிறான். வண்ணநிலவனின் படைப்புலகை புரிந்துகொள்ள இவையாவும் உதவும். 'ஒரு வேனில் காலத்திலே' ஏறத்தாழ ஒரு நினைவுக்குறிப்பின் தன்மையை கொண்டது. நிர்மலா எனும் பெயருக்கே ஈர்ப்பு இருப்பதாக வண்ணநிலவன் தோன்றச்செய்கிறார். 'விதி' எனும் கதையில் நண்பரின் காதலியை (என்றுதான் எண்ணுகிறேன்) சந்திக்கிறான். அவள் திருமணத்திற்கு பின்பான தனது வாழ்க்கை கதையை சகஜமாக பேசுவாள். நண்பன் மரணமடைந்துவிட்ட செய்தியை அவளுக்கு சொல்ல வேண்டும் என துடிப்பான். ஆனால் அவனைப்பற்றி எதுவுமே கேட்காமல் உரையாடுவாள். பேசிக்கொண்டே அவள் சாலையை கடந்து செல்வாள். அவனோ கடக்க முடியாமல் சாலையின் குறுக்கே நெடுக்கே போகும் வண்டிகளை பார்த்தபடி நிற்பான். அவன் கடந்த காலத்தில் உறைந்தவன். அவளோ போய் கொண்டே இருப்பவள். 'மழை' கதையில் தீபாவளியையொட்டி தனக்கு பிடித்த நண்பனை காணச்செல்கிறான். அவனை தேடியலைந்த பின் அவன் மரணமடைந்துவிட்ட செய்தியை அறிகிறான். நண்பன் மரணமடைந்து கொஞ்ச காலமாகியிருந்தாலும் கூட அந்த செய்தியை கேட்கும் வரை அவனளவில் அவர் வாழ்ந்துகொண்டுதான் இருந்தார். மரணமடைந்துவிட்ட நண்பனின் ஃபேஸ்புக் பக்கம் மரணத்திற்கு பின் அப்படியே இருக்கிறது எனும்போது அண்மையில் இருப்பவர்களைத் தவிர பிறருக்கு இன்மை பொருள்படுவதில்லை.
அகம் புறம் என காலமாற்றம் இரண்டு தளங்களை கொண்டது. 'யுக தர்மம்' போன்ற கதை புற காலமாற்றத்தை வரவேற்கிறது. வேறு சில இடங்களில் பெண்களின் உடைமாற்றம் குறித்து கதையில் கவவை வெளிப்படுகிறது (நல்ல வேளையாக இன்னும் பெண்கள் சல்வார் கமீஸ் அணிய ஆரம்பிக்கவில்லை- இரண்டு பெண்கள்). மேம்பட்ட சமூகம் எனும் கனவை நல்ல இலக்கியம் ஒருபோதும் மறுதலிக்காது. பெண்னுக்கு திருமணம் முடித்து வைக்க வழியில்லாத குமாஸ்தா பிள்ளை மூத்த மகள் எப்படியாவது தனது வழியைத்தேடிக்கொண்டால் சரி என எண்ணுகிறார். அவளும் வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறாள். பேருந்திற்காக நிற்கும் பெண்னிற்கு வாங்கி வந்த ரிப்பனை இளைய மகள் வழி கொடுத்தனுப்பும் தருணம் அபாரமான இடம். அவரது ஏற்பு, ஆசுவாசம், ஆசிர்வாதம், கையறுநிலை என எல்லாவற்றையும் அந்த ஒற்றை சமிக்ஞை நமக்கு கடத்திவிடுகிறது. எனக்கு கதை அந்த புள்ளியில் நிறைவடைந்துவிட்டதாக தோன்றியது. ஏறத்தாழ இதேகதையின் வேறொரு சாத்தியத்தை அல்லது தொடர்ச்சியை 'தாசன்கடை வழியாக அவர் செல்வதில்லை' காட்டுவதாக எனக்கு தோன்றியது. மரணத்திற்கு முன் எல்லாம் அற்ப சச்சரவுகளாகிவிடுவதை சொல்லும் கதை.
'எதனாலோ ஒரு விஷயம் மனசுக்கு பிடித்துவிட்டால் அதை லேசில் விட்டுவிட முடிவதில்லை. ஆனால் அதுவே மற்றவர்களுக்கு ரொம்ப அற்பமாகப் படலாம். இதையா இவ்வளவு பிரமாதப்படுத்தினான் என்று தோன்றும்.' (ராதா அக்கா) தனிமனிதனாக தனது நினைவை காலத்தை கடந்து நிறுத்தும் முயற்சி கலைக்கான ஆதார விசைகளில் ஒன்று. 'எஸ். ஆர். கே' கதையில் வரும் அவர் காலமாற்றத்திற்கு எதிராக மார்க்கண்டேயன் காலனுக்கு எதிராக லிங்கத்தை இறுக தழுவிக்கொள்வதுபோல தனது கடந்த காலத்தை இறுக தழுவிக்கொள்கிறார். 'ஆடிய கால்கள்' சினிமா புகழ் சிதம்பரம் பிடிவாதமாக தனது பழைய காலத்தில் உறைபவன். 'பயில்வான்' குத்துச்சண்டை வீரரையும் 'ஒர்க்ஷாப்' அருணாசலத்தையும் இந்த வரிசையில் வைக்கலாம். 'குணச்சித்திர நடிகர்' கதையில் காலஞ்சென்ற கே.எஸ் ராஜகோபால் எனும் நடிகனை நினைவில் நிறுத்த ஏன் கே.எஸ் ராமன் இத்தனை போராடுகிறான். நன்றியா? அன்பா? கடமையுணர்வா? அல்லது அதன் வழி அவனுக்கு கிடைக்கும் அடையாளமா? திண்ணமாக தெரியவில்லை. காலத்துடன் பொருத்திக்கொள்ள இயலாதவர்கள். மனநிலை பிறழ்ந்தவர்களாக, சாமார்த்தியமற்றவர்களாக, கேலிக்குரியவர்களாகவே சமூகம் அவர்களை நோக்குகிறது. சமூகத்தால் நகையாடப்படுபவர்களின் மீது இயல்பாகவே கலைஞனுக்கு ஒரு கரிசனம் உண்டு. அவர்களை தம்மவர்களாகவே நோக்குகிறான். காலம் குறித்து தனக்கிருக்கும் பதட்டமே அவர்களிடமும் உள்ளது என்பதை உணர்கிறான். 'தோல்வியுற்ற கலைஞன்' என்பது ஒரு ஆழ்படிமம். அத்தனை எழுத்தாளர்களும் ஒரு கதையாவது இதை தொட்டு எழுதியிருப்பார்கள். 'சிற்பியின் நரகம்' தொடங்கி 'புலி கலைஞன்' 'முருகேசனும் முழுக்கை சட்டை போட்டவரும்' 'அம்மையப்பம்' 'கானல் நதி' என பல கதைகளும் நினைவில் எழும்பி அமைகின்றன. தன் காலத்திற்கு பின் தான் யார்? உடல் நீத்த பின் தன் ஆயுள் என்ன? கலைஞனை அலைக்கழிக்கும் கேள்வி. 'தேடித்தேடி' இலக்கிய ஆர்வத்தில் வீட்டை விட்டு அடிக்கடி வெளியேறிச்செல்பவனைப் பற்றி குடும்பத்திற்கு இருக்கும் பதட்டத்தை பற்றிய கதை. 'அயோத்தி' 'உள்ளும் புறமும்' கதைகளின் நாயகனின் அதே வார்ப்புடையவன்.
7
'பலாப்பழம்' இவரது கதை மாந்தர்கள் பலருக்கு பொருந்தும் உருவகம் என தோன்றியது. புறத்தில் முள்ளும் உள்ளே கனிவும் கொண்டவர்கள். 'உள்ளும் புறமும்' நீலாவையம் சங்கரனையும் கவனித்தால் நீலாவிற்கு புறத்தில் சலிப்பும் உள்ளே அன்பும் உள்ளது, சங்கரனுக்கு உள்ளே அன்பும் புறத்தில் அக்கரையின்மையும் உள்ளது. இதற்கு நேர் எதிரான சித்தரிப்புகளும் கூட உண்டு. வண்ணநிலவன் தொடர்ந்து மனிதனின் கபடங்களையும் போலித்தனங்களையும் சித்தரித்தபடி உள்ளார். உன்னதங்களுக்கு அடியில் ஒளிந்திருக்கும் வன்மத்தை தொட்டுகாட்ட முயல்கிறார். மனித இயல்புகளின் இந்த அக புற இசைவின்மையில் எழும் முரண்கள் மீது அவருடைய கதைகள் உருக்கொள்கின்றன. 'சமத்துவம் சகோதரத்துவம்' இஸ்லாமிய சமூகத்திற்குள் அதன் லட்சியத்திற்கும் நடைமுறைக்கும் இடையே உள்ள முரண்பாடை சுட்டிக்காட்டுகிறது. மார்க்கத்திற்குள் இருக்கும் ஏழை இஸ்லாமியருக்கு ஜமாஅத் உதவுவதைவிட புதிதாக மாறி வருபவர்களுக்கு கூடுதல் மதிப்பும் மரியாதையும் அளிக்கப்படும் முரண்பாடை பேசகிறது.
வண்ணநிலவனை கோபுரங்களின் சுதை சிற்பி அல்லது கோட்டோவியக்காரர் என சொல்லலாம். நுண்மையே அவரது பலம். குறைவான சித்தரிப்பின் வழியே ஆழத்தின் அலுங்கல்களை சித்தரிக்க முயல்கிறார். 'பலாப்பழம்' போன்ற கதை எனக்கு முழுதாக பிடிகிட்டியதா என சொல்வதற்கில்லை. அந்த பூடகத்தன்மையே மீண்டும் மீண்டும் அக்கதையை நாட வைக்கிறது. 'பெண்ணின் தலையும் பாம்பின் உடலும்' எனும் தலைப்பில் உள்ள பூடகமும் வசீகரமும் அந்த கதையை மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டுகிறது. புழக்கத்தில் உள்ள நாகக்கன்னி எனும் சொல்லை தவிர்த்து இத்தகைய தலைப்பை தேரும்போது அதன் அர்த்த சாத்தியங்கள் பெருகுவதை கண்கூடாக காண முடிகிறது. சில உவமைகள் நினைவைவிட்டு அகலவில்லை. 'வண்டி மை மாதிரி இருட்டு அப்பிக்கிடந்தது- (அந்த இரவில்).' பல இடங்களில் நுண்ணிய புலன் அனுபவங்களை அளிக்கிறார். உதாரணமாக 'ஏக்கம்' கதையில் உள்ள ஒரு பத்தியை இங்கு அளிக்கிறேன். 'குத்
October 25, 2022
பேழை- சிறுகதை
1
"அப்பா… சும்மா பாதைய மறிச்சுகிட்டு நின்டுக்கிட்டே இருக்காதிக, காலு கடுக்குதுன்ன அப்புடி திண்ணையில செத்த சாஞ்சுகிடுங்க" என்று உள்ளே நுழையும்போதே சொன்னான் சிதம்பரம். முட்டிவரைக்குமான பூ போட்ட காற்சட்டைக்கு கீழே இருந்த ரோமத்தை காணவில்லை. மழித்திருக்க வேண்டும். அவன் பின்னாடியே வால் பிடித்து வந்த குமரப்பன் வெள்ளை வேட்டிச்சட்டையில் கைச்செயின், கழுத்துச்சங்கிலிகளும் மோதிரங்களும் ஜொலிக்க இருந்தான். தேக்கு பீரோலை சுமந்துக்கொண்டு வந்த வேலையாட்களிடம் "பைய்ய தூக்குங்கப்பா..மூனு நாலு லட்ச ரூநாய்க்கு போவுற உருப்படி" என்றான்..
சிலரை முதன்முதலில் கண்டவுடனேயே, இன்ன காரணம் என ஏதமின்றியே உள்ளுக்குள் இருக்கும் முள்ளம்பன்றி சிலிர்த்துக்கொள்ளும். அவரை நெருங்கவிடக்கூடாது என எச்சரிக்கைக்கொள்ளும். குமரப்பன் அத்தகையவன்தான். சிதம்பரம் நான்கு மாதங்களுக்கு முன் அவனை அழைத்துக்கொண்டு வந்தான்.
"அப்பா வீட்டை ரிசார்டுக்கு விடலாம்னு இருக்கேன். இவரு குமரப்பன்.. மாத்தூர் கோயில்காரரு, நெற்குப்பைல இருக்கார். எல்லாத்தையும் பாத்துக்கிடுவாரு"
"வணக்கம். தம்பி எல்லாத்தையும் சொன்னுச்சு. நல்லபடியா முடிச்சுபுடுவோம் அய்யா கவலைப்படாதீங்க." எனச்சொல்லிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தான். பின் கட்டுக்கு சென்று பின் வாசலைத் திறந்தான். "முன் வாச ஒரு தெருவுலயும் பின் வாச இன்னோரு தெருவுலயும் உள்ள மூனு கட்டு வீடு. நம்ம ராசாவூட்டு அரண்மன கணக்கா பெருசாத்தான் இருக்கு. ஒரு 35 சென்ட் இடம் இருக்குமா அப்பச்சி?" என்றான்.
"தெரியலை. பத்தரத்த பாக்கனும்"
"நூறு வருஷம் மேல இருக்கும் போலயே"
"எங்க அய்யா காலத்துல கட்டுனது..120 வருஷமிருக்கும்"
"அம்புட்டும் பர்மா தேக்கு. பர்மால இருந்தீகளோ?"
"அய்யா அங்கதான். அப்பச்சி கொஞ்ச காலம் இருந்தாக."
"சொவரெல்லாம் முட்ட பூச்சு பெயராம வழுவழுன்னு இருக்கு.. நல்லது, மரத்தூணுக்கு மட்டும் வார்னிஷ் போடனும். கறையான் மருந்து அடிச்சிகளா? உத்தரக் கட்டையெல்லாம் பத்தரமா இருக்குதானே.. நல்லா நெடுக்க ஓடுது ஒவ்வொரு கட்டையும் இன்னிக்கு தேதிக்கு ரெண்டு லட்சம் போகும்"
"மருந்தெல்லாம் அடிச்சிருக்கு"
"இந்தாருக்கே மச்சுக்கு போற சுருள்படி, இது வெளிநாட்டுக்காரவுகளுக்கு ரொம்ப புடிக்கும். எத்தன அற மொத்தம்?"
"மேல ஆறு.. கீழ ஆறு.."
"நாள் வாடகை ஒரு அறைக்கு 6000 ரூவான்னு வச்சிக்கிடுங்க. நாளைக்கு 72000 சம்பாதிச்சு கொடுக்கும் லட்சுமி இந்த வீடு."
சிதம்பரம் முகத்தில் பூரிப்பைக்கண்டதும் எனக்குள் எரிச்சல் மூண்டது. நான் முற்றத்தில் அமர்ந்துகொண்டேன். முற்றத்தில் வெயில் மெல்ல மெல்ல நிழலை கைப்பற்றிக்கொண்டிருந்தது.
"கதவு எல்லாம் நயம் தேக்கு, ஆனா தச்சு வேலைப்பாடு எதுவும் இல்லாம மொட்டையாருக்கு. அவசரத்துல கட்டிப்புட்டாய்ங்க போல..சொக்கநாதபுரம் சாவன்னா வீட்டுல லட்சுமி பொறிச்ச கதவு ஒன்னு உண்டு. கதவு மட்டும் பத்து லட்சத்துக்கு போச்சு" எனச்சொல்லிக்கொண்டே போனான்.
எழுந்து பின்கட்டு முற்றத்திற்குச் சென்றேன். 555 சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு கிணறை பார்த்தபடி கிடந்த உரல் மீது அமர்ந்து ஆழ இழுத்தேன். நான் வேறொரு காலத்திற்குள் புகுந்துக்கொண்டது போல இருந்தது. பால்யத்தில் பிரம்மாண்டங்களை காலம் மெல்ல மெல்ல கரைத்து விடும் என்பதே பொதுவழக்கு ஆனால் நான் சிறுவனாக இருந்த போது விளையாட போதாமலிருந்த வீடு இப்போது ஆட்கள நீங்கிச்செல்லச்செல்ல மேலும் மேலும் என பெருத்தும் விலகியும் சென்றுக்கொண்டே இருக்கிறது. இப்போதெல்லாம் இரண்டு இரவுகளுக்கு மேல் தனித்து தங்க முடிவதில்லை. இந்த வீடே ரகசியங்கள் நிறைந்த புதிர்பாதை என மாறிவிட்டது. ஆனால் திரும்பத்திரும்ப வந்துகொண்டேயிருக்கிறேன்.
வாயிலின் இருபுறமும் நீளும் மூன்றடி உயர திண்ணையில் பதிக்கப்பட்ட கறுப்பு வெள்ளை கற்கள் பிரம்மாண்ட சதுரங்க பலகையைப்போல் தோன்றியது. அனைத்து காய்களும் வெட்டப்பட்டு நான் மட்டுமே எஞ்சியிருக்கிறேன். ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்கும் போதும் ஆட்டம் தொடர்கிறது. எழுந்து நடக்கத்தொடங்கினேன். சட்டென ஒரு வரி அமர்ந்துகொண்டது. நான் விளையாடுவது காலத்துடன். ஆம், அதுதான். ஓங்கரித்தது. பாதி புகைந்த சிகரெட்டை நசுக்கிவிட்டு முன் கட்டுக்கு சென்றேன். "மாதங்கள் மாதங்களில் கரையட்டும், வருடங்கள் வருடங்களில் மூச்சு விடட்டும்." எமிலியின் கவிதையில் வரும் ஒரு வரி. என்னால் அங்கு இருக்க முடியவில்லை.
"""
அன்றிரவு சிதம்பரம் சிங்கப்பூரிலிருந்து கொண்டு வந்திருந்த க்ளென்ஃபிதுக் பாட்டிலைத் திறந்து இருவருக்குமாக ஊற்றினான். இருவரும் மவுனமாக மிடறுகளை ருசித்தோம். அப்படியே முற்றத்தில் படுத்துக்கொண்டான். நான் அப்பச்சியின் அறைக்கு எதிரே இருந்த கல்தூணில் சாய்ந்து கொண்டேன். முற்றத்து அழியின் வழியாக நிலவு வழிந்து கொண்டிருந்தது. எனக்கு அவனது யோசனை பிடிக்கவில்லை என்றேன்.
"வீட்ட நாசாமக்கிருவாய்ங்கடா தம்பு.. எனக்கு பொறுக்காது. எங்காலம் வர இப்படியே கிடக்கட்டும்..பொறவு உன் இஷ்டப்பிரகாரஞ்செய்."
மெதுவாக கையூன்றி எழுந்தமர்ந்தான்.
"நான் வருஷத்துக்கு ரெண்டுவாட்டி கல்யாணத்துக்கு, படப்புக்குன்னு வாரேன். நீங்க மாசாமாசம் வருவீகளா? வந்தோமா போனோமான்னு இருக்க முடியுதா? பொம்பளயில்லாத வீடு. ஒவ்வொருதாட்டியும் மூனு நாள் முன்னாடியே வந்து பெருக்கி மொழுகி, சுத்தம் செய்யனும். திரும்பவும் எல்லாத்தையும் ஒழுங்குப்படுத்தனும். எதையோ தேடித்திரியுறீக. உங்கபபச்சி உங்களுக்கு என்ன பொதையலா வச்சுட்டு போயிருக்கார்? என்ன எளவுன்னும் சொல்ல மாட்டுறீக. நீங்க ஒண்டியாள இங்கன இருக்க முடியாது. களவானிங்க வேற முத்தத்துல இறங்கி மரத்த பேக்குறாய்ங்க. இம்புட்டு பெருசா என்ன மயித்துக்கு கட்டுனாய்ங்கன்னே தெரியலை. யானைக்கி தீனி வச்சாப்புலதான். ரிசார்ட் காரய்ங்க கொடுக்குற லீசு பணத்த வச்சு காரக்குடில ஒரு அப்பார்ட்மென்ட வாங்கி போடுவோம். வர போக தங்கிக்க கைக்கடக்கமா ஒரு இடமாயிரும்."
"உனக்கு கல்யாணம் காட்சி ஆச்சன்ன புழங்குவோமே தம்பு."
" அய்யா சாமி! அந்தப்பேச்ச விடுங்க. எனக்கு அது தோதுப்படாது."
"தம்பு இப்படிச்சொன்னா என்னடா செய்ய. எவளயாவது மனசுல நினைச்சேன்ன சொல்லு, எந்த சாதியாருந்தாலும் பேசுவோம்டா."
" உங்களுக்கு நான் சொல்றது விளங்காது. அந்தப் பேச்ச விட்டுருங்க" என சொல்லிவிட்டு ஒருக்களித்து படுத்துக்கொண்ட வேகத்தில் குறட்டைவிட்டான்.
என்னால் உறங்க முடியவில்லை. இன்னோரு சுற்று அருந்திய பிறகு மெல்ல வெளித்திண்ணையில் வந்து அமர்ந்தேன். அய்யா இந்த வீட்டை ஏன் இத்தனைப் பெரிதாக கட்டினார்? தெரியவில்லை. ஏதோ ஒரு பெருங்கனவு கண்டிருப்பார். அப்படிப்பட்ட கனவுகளோடு தானே இங்குள்ள அத்தனை வீடுகளும் கட்டப்பட்டிருக்கும். கட்டி முடித்து இந்த வீட்டில் அய்யா நூறு நாட்கள் கூட இருந்திருக்க மாட்டார்.
நான் இந்த வீட்டில் எதைத்தேடுகிறேன்? பெரும் புதிரின் இறுதித் துண்டை. என்னை ஆட்கொண்ட கேள்வியை, என் அப்பச்சியை, "நான் விட்டுச்சென்ற வாழ்வை." இதுவும் எமிலியின் வரிதான். அப்பச்சியிடமிருந்து நான் எனக்கென எடுத்துக்கொண்டது, அல்லது அவர் எனக்கென விட்டுச்சென்றது எமிலி டிக்கன்ஸை மட்டும்தான்.
***
சிதம்பரம் ஊருக்கு புறப்பட்டுச்சென்ற மறுநாள் குமரப்பன் வந்தான். "நீஙக குழப்பத்துல இருக்கீகன்னு தம்பி சொன்னுச்சு. செத்த வெளிய போய்ட்டு வருவோம்" என்றழைத்தான். விடுதிகளாக மாறிய வீடுகளைச் சுற்றிக் காண்பித்தான். பிரம்பு நாற்களிகளில் அமர்ந்து வெளிநாட்டவர்கள் புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்கள். புடவையும் வேட்டிச்சட்டையும் தான் பணியாட்களுக்கு சீருடை. முற்றத்தில் மாலை வேளையமர்ந்து இன்னிசையை கேட்டபடி ஸ்காட்ச் அருந்திக்கொண்டிருந்தார்கள். ரெட்டைமாட்டு கூண்டு வண்டியில் கிராமத்து சிறார்களுக்கு கையசைத்தபடி உலா வந்தார்கள். எல்லாமே அபத்தமாக தெரிந்தது. குமரப்பனிடம் பேச எனக்கு ஏதுமில்லை. அவன் பேச முற்பட்டபோதும் அதைத் தவிர்த்தேன். என் முடிவில் தீர்க்கமாக இருந்தேன்.
திரும்ப வரும்போது வண்டியை ஒரு புதர் அருகே நிறுத்தச்சொன்னான். கவிந்திருந்து முழு இருளை சில்வண்டுகளின் ரீங்காரம் மேலும் அடர்த்தியாக்கியது. "ஒண்டுக்கு இருந்துட்டு வாரேன். நீங்களும் இறங்கி வாரீகளா அப்பச்சி?" எனக்கேட்டான். வேலையை முடித்துவிட்டு வந்தவன் "அப்பச்சி ஒரு சிகரெட் கொடுங்க" என்றான். இருவரும் புகைக்கத்தொடங்கினோம். இருளுக்கு விழி மெல்ல பழகியது. நாங்கள் சிறுநீர் கழித்த இடத்தைச் சுட்டிக் காட்டினான். ஒரு வீட்டு முகப்பு வளைவு துலங்கியது. புதர் மண்டிக்கிடந்தது. ஆலிலை குப்பைகள் சரசரத்தன. கைப்பேசி வெளிச்சத்தில் வளைவுக்கு மத்தியில் முண்டமாக கால் மாற்றி நின்றிருந்த கண்ணனைக் காண்பித்தான். உடல் சன்னமாக ஆடத் தொடங்கியது. பசுவின் தலையை பிளந்துகொண்டு ஒரு செடி முளைத்திருந்தது. மானிட்டர் குப்பிகள் கிடந்தன. என்னால் அங்கு நிற்க இயலவில்லை. காருக்குள் சென்று அமர்ந்து கொண்டேன். "அப்பச்சி இந்த நெலம நம்ம வீட்டுக்கு வராம பாத்துக்கிடுறது உங்க கையில இருக்கு.. அப்புறம் சொத்து நம்மூட்டுதான். 30 வருஷம் லீசுக்குத்தான் விடுறோம். நல்ல முடிவாச் சொல்லுங்க." எனச்சொல்லி வீட்டில் இறக்கிவிட்டான்.
2
"முகப்புல உள்ள புல்லாங்குழல் கண்ணன் சொதை வேலை இருக்குல்ல.. அம்புட்டையும் ஊதிக்கொண்டு போயிருவான்னு ஒரு பயம் அவுகளுக்கு. அத எடுத்தாலும் எடுப்பாக. அங்கன கெஜ லட்சுமியோ மகாலட்சுமியோ வருவா." என சிதம்பரத்திடம் சொல்லிக்கொண்டிருந்தான் குமரப்பன்.
பணியாட்கள் சாமான்களை அகற்றிக்கொண்டிருந்தார்கள். முற்றத்தில் மழை நீர் சேமிக்க வைக்கப்பட்ட தேக்சாக்கள், பின்கட்டிலிருந்த ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல், உலக்கை, தேங்காய் துருவிகள், அருவாமனைகள் என ஒவ்வொன்றாக தூக்கி வந்தார்கள்.
"இதையெல்லாம் சாப்பாட்டு கூடத்துக்கு கொண்டு போங்க. அத அவுக மூசியமா மாத்துராக." என ஏவிவிட்டான் குமரப்பன்.
இரண்டாம் கட்டின் கூடத்தின் இரண்டு எல்லைகளிலும் இருந்த ஆளுயர பெல்ஜியம் கண்ணாடிகளைத் தூக்கிக்கொண்டு வந்தார்கள்.
"இதை ஏன்டா கொண்டாந்தீங்க? அங்கனயே சாய்ச்சு வைங்கடா." என பொறிந்தான் குமரப்பன்.
அறைகளை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார்கள். "அப்பா இப்படி திண்ணையிலேயே உக்காந்துக்கிட்டு இவிங்கள மேப்பார்வ பாருங்க. வேண்டியது வேண்டாததெல்லாம் நானும் குமரப்பனும் பாத்துகிடுறோம்."
வீடு மனிதர்கள் வாழ்ந்த தடத்தை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருந்தது. மொத்த சாமான்களையும் நான்காக பிரித்தார்கள். ஓட்டை ஒடைசல் ஒருபுறம், விலைக்கு கொடுப்பவை இன்னோரு பக்கம், இங்கேயே போட்டு வைக்க வேண்டியவை மறுபக்கம், காரைக்குடி அடுக்குமாடி குடியிருப்புக்கு வேண்டியவைத் தனியே. முந்தைய இரண்டும் மளமளவென பெருகுவதைப் பார்த்தேன். சக்கரம் உடைந்த நடைவண்டிகள், பொத்தல் விழுந்த திவான் நாற்காலி, அழுக்கு துணிகளில் சுற்றப்பட்ட பொதிகள். அழுக்கு வேட்டியில் கட்டப்பட்ட சிறிய பொதியை கண்டதும் மனம் விழித்துக்கொண்டது. சட்டென எழுந்து அதனருகில் சென்றேன். அந்த பொதியை கையில் எடுத்ததுமே உணர்ந்துகொண்டேன். அதன் விளிம்புகளைத் தடவி பார்த்தேன். தலை சுற்றுவது போலிருந்தது. மெதுவாக அதை தூக்கிக்கொண்டு முற்றத்து கல்தூணில் சாய்ந்து கொண்டேன். பழுப்பேறிய அழுக்கு வேட்டியின் முடிச்சுகளை அகற்றியபோது அதனுள் இருந்ந தந்த பேழை படிப்படியாக வெளிப்பட்டது. வியர்வை ஊற்றெடுத்தது. செவிப்பறையில் இதயத்துடிப்பு அறைந்தது. காதுமடல்கள் சூடேறின.
"என்ன அப்பச்சி சட்டை நனையிற அளவுக்கு வேர்த்து ஊத்துது? ஒடம்புக்கு ஒன்னுமில்லையே?" என்றான் குமரப்பன்.
பொதி என் கையில் இருப்பதை கண்டான். "அப்பச்சி அது ஏதோ நகப்பெட்டி போல தெரியுதே? தந்தமா? இருபது முப்பது ரூபாய்க்கு போகும் போலயே" என்றான். சிதம்பரமும் வந்து நின்றான்.
"அதெல்லாம் ஒன்னுமில்ல..சும்மா ராமேஸ்வரத்துல வாங்கினது" எனச்சொல்லி பெட்டியை பொதிக்குள் தள்ளினேன். குமரப்பன் மட்டும் சற்று நேரம் அங்கேயே நின்றுக்கொண்டிருந்தான். அவன் எதையும் லேசில் விடுபவனில்லை. நான் பொதியைக்கொண்டு போய் காரில் வைத்துவிட்டு வந்தேன். இப்போது, இங்கே அதைப்பிரிக்க முடியாது. பிரிக்கவும் கூடாது. இத்தனை ஆண்டு காத்திருந்தாகிவிட்டது. இன்னும் கொஞ்ச காலம்தான். மனம் கற்பனையில் மிதக்கத் தொடங்கியது. அதில் அரிய வைரம் இருக்கும், இரும்புக்கை மாயாவி படக்கதைப் புத்தகம் இருந்தால் எப்படியிருக்கும், அல்லது அப்பச்சசி எனக்காக எழுதிய கடிதம், அல்லது அம்மாவுக்கோ அப்பத்தாவுக்கோ எழுதிய கடிதங்கள், எனக்காக எழுதிய கவிதைகள், கிழிக்கப்பட்டிருந்த எமிலி டிக்கன்ஸ் கவிதைத்தொகுதியின் பக்கங்கள் அல்லது அப்பச்சியின் நாட்குறிப்பு, அல்லது விளக்கப்படங்களுடன் கூடிய கொக்கோக உரை. புன்னகைத்தேன். சிகரெட்டை நாடியது மனம். புகை மெல்ல என்னை ஆற்றுப்படுத்தியது.
இந்தப் பேழை என் அப்பச்சியுடையது. பல ஆண்டுகளாக காணாமல் போயிருந்தது. நான் சிறுவனாக இருந்தபோது இரண்டு முறை பார்த்திருக்கிறேன். தும்பிக்கை தூக்கி நிற்கும் இரண்டு யானைகள் இரு பக்கமும் செதுக்கப்பட்டிருக்கும். நடுவே ஒரு மலர். மேல் மூடியில் இரண்டு அண்ணங்கள் மூக்குடன் மூக்கு உரசி நிற்கும். இரண்டு முறையும் ஆத்தா புழக்கடையில் இதை கையில் வைத்துக்கொண்டு விசும்பிக்கொண்டிருந்தது ஒரு ஓவியம் போல மனதில் கணநேரம் துலங்கி அமிழ்ந்தது. அவள் அழுவதற்கு இந்தப் பேழைதான் காரணம் என தோன்றி, பலநாட்கள் அதைத்தேடி இருக்கிறேன். எப்படியாவது அதைக் கண்டுபிடித்து காணாமலாக்கிவிட்டால் ஆத்தாளை நிரந்தரமாக போர்த்தியிருக்கும் துக்கம் பறந்துவிடும் என கனவு கண்டேன். அவளிடம் அந்த பேழையைக் காட்டு என கொஞ்சி, கெஞ்சி, அழுது, அரற்றி என எல்லாம் செய்து பார்த்திருக்கிறேன். அழுத்தமான மவுனத்தைத் தவிர அவளிடமிருந்து வேறெந்த பதிலும் எனக்கு கிடைத்ததில்லை. ஒருமுறை முற்றத்தில் சுற்றிச்சுற்றி ஓடி பைத்தியம் போல் அழுதேன். அப்பத்தா, பெரியப்பச்சி, பெரியம்மா என எல்லோரும் கூடிவிட்டார்கள். ஆத்தா சட்டென விசும்பியபடி மச்சுக்குள் புகுந்துக்கொண்டாள். அப்பத்தா "இப்ப எதுக்காண்டி இம்புட்டு அழுது அழிச்சாட்டியம் செய்றான்" என்றதும் "நீ போ ஆத்தா, சின்னப்புள்ள, அவென் அப்பச்சி நாபகம் வந்துருக்கும்" என மெல்ல என் தலையை வருடிக்கொடுத்தார் பெரியப்பச்சி. என்னை அவரது ராஜ்தூத்தில் ஏற்றிக்கொண்டு சொக்கட்டான் கோயில் குளத்தின் படித்துறைக்கு கூட்டிவந்தார். "அண்ணாமலை, ஆத்தாளை நீயும் கஷ்டப்படுத்தக்கூடாது, நிறைய சிரமப்பட்டுட்டா" என எங்கேயோ பார்த்தபடி சொன்னார். நான் அதன் பின் ஆத்தாவிடம் பேழை வேண்டுமென கேட்கவில்லை. ஆனால் தேடுவதையும் நிறுத்தவில்லை. எப்போதும் என் கண்கள் பேழைக்காக துழாவியபடியே தான் இருந்தன. விடுதியை விட்டு வீடு திரும்பும் கல்லூரி நாட்களிலும், பின்னர் வங்கியில் பெரியப்பச்சி வேலை ஏற்பாடு செய்து கொடுத்து ஊர் ஊராக வாழ்ந்து, விசேஷ நாட்களுக்கு மட்டும் ஊர் திரும்பும் போதும், திருமண சமயத்தில் பெண் அழைப்பிற்காக வீட்டில் சுண்ணாம்படித்த போதும், திருமணத்திற்கு பின்பான நாட்களிலும் என பல ஆண்டுகளாக தேடியபடிதான் இருக்கிறேன்.
பத்து வருடங்களுக்கு முன் ஆத்தா வாதம் வந்து படுக்கையில் கிடந்து கடைசி மூச்சை விட்டுக்கொண்டிருக்கும் போது குழறிக்குழறி, ஓசைகளுக்கும் மவுனங்களுக்கும் இடையே "ப்பெட்டி" என கையால் கட்டம் போட்டுக்காண்பித்தாள். கூடியிருந்த பங்காளிகள் பணப்பெட்டி, ஓலைப்பெட்டி, வெற்றிலைப்பெட்டி என ஒவ்வொன்றாக கொண்டுவந்தார்கள். அவளுடைய கண்களில் எரிச்சலும் சலிப்பும் தோன்றின. அவள் விழிகள் சுற்றியிருப்போர் மத்தியில் என்னைத் துழாவின. ஏனோ கணக்கை நேர் செய்ய வேண்டும் எனும் விசை அப்போது என்னை ஆட்கொண்டது. அவள் பார்வைபடாத இடத்திற்கு ஒதுங்கினேன். தவிப்பு அடங்கி சலிப்பு கண்களில் குடிகொள்வதைப் பார்த்தேன். பின்னர் அதுவும் மாறி, உறக்கத்தில் புன்னகைக்கும் பால்குடி குழந்தையின் களங்கமற்ற சிரிப்பை அவள் முகம் சூடிக்கொண்டதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சட்டென கூட்டத்தை விலக்கிக்கொண்டு அவளை உலுக்கினேன். "பெட்டிய தேடி எடுத்தாரேன்..போயிராத ஆத்தா" என அரற்றினேன். என் கண்கள் அவள் அறையில் மேலும் கீழும் துழாவின. அவள் அத்தனை ஆண்டுகளாக என்னிடமிருந்து காத்து வந்த ரகசிய இடத்தை என்னால் எப்படி இரண்டு நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியும்? இரண்டே நெடுமூச்சு. மீளா ஆழத்திற்குள் சென்றிருந்தாள். அதன்பின்னர் அவள் புழங்குமிடத்தில் எல்லாம் இன்னும் தீவிரமாக
தேடினேன். அண்மைய காலங்களில் அப்படியொரு பெட்டியை நான் கண்டேனா அல்லது வெறும் கற்பனையா எனத் தெரியவில்லை.
கடைசித்துண்டை சிதம்பரம் வாங்கி இழுத்தான். "உங்க முகமே சரியில்ல. எல்லாம் நல்லபடியா நடக்கும் கவலப்படாதீங்க." என்றான். "படங்களை எல்லாம் கழட்டுறாங்க சாமி படங்க எல்லாம் ஏற்கனவே இருக்கு. இதுல முக்கியமானது இருந்தா பாத்து எடுத்து வைங்க. வீட்ல மாட்டுவோம்."
3
முற்றத்தையொட்டி அறைகளுக்கு இடையே வரிசையாக புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. தூசடர்ந்த கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களை துடைத்தபோது அதன் மேல் படிந்த காலமெல்லாம் மறைவது போல ஒரு பிரமை. அய்யா சட்டை போடாமல் சிவப்பழமாக அப்பத்தாவுடன் காட்சியளிக்கும் படத்தை எடுக்க வேண்டாம் என சொல்லிவிட்டான் குமரப்பன். "வெள்ளக்காரனுக யாரு கட்டுனா யாரு நொட்டுனான்னு கேப்பாய்ங்க. இருக்கட்டும்." என்றான்.
பெரியப்பச்சி முறுக்கு மீசையுடன் வெற்றிலை வாய் தெரிய சிரிக்கும் படத்தில் சந்தனப் பொட்டின் தேசல் புலப்பட்டது.பெரியப்பச்சி திருமண புகைப்படத்தில் கூட முரட்டு மீசையும் இறங்கிய கிருதாவுடனும் தானிருந்தார். பெரியம்மா முகத்தில் வெட்கம். அப்பத்தா நாற்காலியில் அமர்ந்திருக்க ஆத்தாவின் சீலைக்குள் நான் ஒளிந்திருந்தேன். பெரியப்பச்சியின் மடியில் நான் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படம், இந்த படத்தில் மட்டுமே என் முகத்தில் சிரிப்பிருக்கிறது. அப்பச்சியின் ஒரு புகைப்படம் கூட கூடத்தில் மாட்டப்பட்டதில்லை. அப்பத்தா இருந்தவரை மாட்ட அனுமதித்திருக்க மாட்டாள். ஆனால் அவள் காலத்திற்கு பின்னும் ஏன் மாட்டவில்லை?
"இதெல்லாம் மேலயிருக்குற நடு ரூம்புல கிடந்துச்சு.. அண்ணே உங்கட்ட கொடுக்கச் சொன்னாரு" என நான்கைந்து புகைப்படங்களை கொண்டுவந்து போட்டான். அது என் அறைதான். வியப்பாக இருந்தது. அவை எப்படி, எப்போது, என் அறையை வந்தடைந்திருக்கும்? தெரியவில்லை. இத்தனை ஆண்டுகளாக நான் இவற்றை கவனித்ததே இல்லை. வீட்டை அங்குலம் அங்குலமாக தேடிவிட்டேன் என எண்ணியிருந்தேன்.
அப்பத்தா மட்டும் அமர்ந்திருக்க கிராப்பு தலையுடன் இரண்டு விடலைகளாக அப்பச்சியும் பெரியப்பச்சியும் நின்றிருந்தார்கள். மீசையற்ற வழுவழு முகமும் சுருள் முடியும் கொண்ட அப்பச்சியின் இளமைக்கால புகைப்படம் ஒன்று. ரங்கூன், 6.4. 1941 என புகைப்படத்தின் கீழே இருந்த அட்டையில் மையால் எழுதப்பட்டிருந்தது. அதே காலகட்டத்தைச் சேர்ந்த இன்னோரு புகைப்படம். அப்பச்சியின் தோள்மீது கைப்போட்டு ஒருவர் நின்றார். அவர் முகம் கிழிபட்டிருந்தது. அவர் படத்தில் ஆங்காங்கு கூர்முனையால் குத்தியதற்கான அடையாளங்கள் இருந்தன. நிற்கும் தோரனையும் தெரிகின்ற பாகத்தையும் கொண்டு அவர் ஒரு ஆங்கிலேயராக இருக்க வேண்டும் என தோன்றியது.
பட்டுவேட்டி தலைப்பாகையுடன் அப்பச்சியும் கழுத்திருவும், கருகமணியும் பட்டுப்புடவையும் அணிந்த ஆத்தாவும் கையெடுத்து வணங்கும் கோலத்தில் இருக்கும் திருமண புகைப்படம். அப்பச்சியின் முகத்தில் துடிப்பில்லை. புகைப்படத்தின் கீழே மெட்ராஸ் ஸ்டூடியோ 25.1.1947 என அழகான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. அப்பச்சியின் கண்ணங்கள் ஒட்டி இருந்தன. கண்களில் சுரத்தேயில்லை. ஆத்தாவின் முகத்தில் ஒருவித பூரிப்பும் பெருமிதமும் ததும்பியது. சட்டென ஒரு திடுக்கிடல் ஏற்பட்டது. அப்பச்சி எனக்கு எட்டு வயதாகும்வரை உடனிருந்தவர்தான் ஆனால் அவர் அசல் முகத்தை என்னால் நினைவில் மீட்கவே முடியவில்லை.
அப்பச்சியின் ரங்கூன் படத்துக்கும் திருமண படத்துக்கும் இடையேதான் எத்தனை மாறுதல்! அப்பச்சி இரண்டாம் உலகப்போர் காலத்தில் குற்றுயிரும் குலையுயிருமாய் ஊர் வந்து சேர்ந்தார் என பலரும் சொல்லக்கேட்டிருக்கிறேன். ஊருக்கு கிளம்பிய எவருடனும் அவர் ஊர் திரும்பவில்லையாம். எவரழைத்தாலும் "சண்டயெல்லாம் இப்ப முடிஞ்சுரும். இங்கிலீஷ்காரன்ன என்ன சும்மாவா. போட்டத போட்டபடி எல்லாம் வரமுடியாது" என்றே பதில் சொன்னாராம். அப்பச்சியைப்போலவே இன்னும் சில இளவட்டங்கள் இப்படியே சவடால் பேசித்திரிய, பெருசுகள் தப்பிப்பிழைத்தால் போதுமென ஊர் திரும்பினார்கள். திருமணத்துக்கு வாழ்த்த வந்த ஒரு பெரியவர் "அடேய் சிதம்பரம் மவனே, உங்கப்பங்காரன் நல்ல பயதான் ஆனா என்னத்த சொல்ல சகவாசக்கேடு. நாசமாயிட்டான். நீயாவது குடும்பப் பேரு விளங்க வாழனும்" என சொல்லிச்சென்றது என் மனதை அருவியது. அப்பச்சியைப்பற்றி எந்த தகவலும் தெரியாமல் தவித்திருந்த காலத்தில் லேனா மேனா வீட்டுத்திண்ணையில் ஈ மொய்க்க படுத்திருந்தவரை அப்பச்சி என கண்டுபிடுத்து தகவல் சொன்னார்களாம். மதுரைக்கு கூட்டிச்சென்று எப்படியோ பிழைக்க வைத்தார்கள்.
அப்பச்சியைப் பற்றி யாரும் என்னிடம் பேசக்கூடாது என்பது அப்பத்தாவின் ஆணை. பதின்ம வயதில் அதுவே அவரைப்பற்றிய ஆர்வத்தை என்னுள் தூண்டியது. இல்லாத தந்தையின் மீது எனக்கிருந்த விருப்ப கற்பனைகள் அனைத்தையும் ஏற்றியபோது அவருக்காக ஏங்கினேன். சகாக்கள் அவரவர் அப்பாக்களை வெறுக்கும் பருவத்தை எட்டியபோது வெறுக்கக்கூட நமக்கொரு அப்பன் இல்லையே எனும் ஏக்கத்திலிருந்தே அவர் மீதான வெறுப்பு பிறந்தது. "உங்கொப்பன் ஊருக்கு வந்ததுலேந்து நிதமும் குடிதான். உங்காத்தா மவராசிக்கு சீதன்னு சும்மா பேரு வைக்கல. அம்புட்டையும் எப்படியோ சகிச்சுக்கிட்டா" என்றாள் சமைக்க வந்த தங்கம்மா பாட்டி "செதம்பரத்த மாதிரி கொணத்துல தங்கம் எவனுமில்ல" என்றார் அப்பச்சியின் பர்மா கூட்டுக்காரர் சொக்கலிங்கம். "மோகினிப் பிசாசு அடிச்ச மாதிரி பித்து பிடிச்சே திரிவான்" என்றார் சாமியாடி வேலப்பன். எல்லாமே சிறு சிறு தனித்துண்டுகள். ஒன்றோடொன்று பொருத்த முடியாத அளவிற்கு முரண் கொண்டவை. அவரது எமிலி டிக்கின்ஸன் கவிதைத்தொகுப்பை அப்போதுதான் வாசிக்கத்தொடங்கினேன். புரிந்து கொண்டேனா என சொல்வதற்கில்லை. ஆனால் எனக்கு அது ஏனோ அப்பச்சியின் நாட்குறிப்பு எனும் எண்ணத்தை உண்டாக்கியிருந்தது. ஏதோ ஒன்றை துப்பறியும் வேகத்தில் கவிதைகளையும் அப்பச்சியின் பென்சில் குறிப்புகளையும் மீள மீள வாசித்தேன். அப்பச்சியைப் பற்றி தெரிந்து கொண்டேனா என தெரியவில்லை ஆனால் கவிதைகள் என்னைத் தொற்றிக்கொண்டன.
அப்பச்சியின் பெயரைத்தான் என் மகனுக்கு வைத்தேன். என் மகன் பிறந்தபோது உயிரோடிருந்த அப்பத்தா கொள்ளு பேரனுக்கு தன் இளைய மகனுடைய பெயரை வைக்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தாள். "ஒன்னும் ஓராயிரமா இருக்கனும். குடும்பம் செய்ய லாயக்கில்லாத அந்த தறுதலை பேரை போய் வைக்கிறேங்கிர." என்று கறுவினாள். அவளுக்கு அப்பச்சியை நினைத்தாலே ஆங்காரம் பொங்கும். அப்பச்சி வயிறுவீங்கி ஆசுபத்திரியில் கிடந்த கடைசி நாட்களில் கூட அவரைப் பார்க்க வரவில்லை என்பதை பெரியம்மா ஒவ்வொரு சண்டையின் உச்சகட்டத்தின் போதும் "புள்ளைய முழுங்குன கருநாகம் தான.. கிளவி நீ" என சொல்லிக்காட்டுவாள். எத்தனைப்பெரிய சண்டையாக இருந்தாலும் அப்பத்தா அதற்கு பிறகு பேசமாட்டாள். அப்பச்சியின் அத்தனை சாமான்களையும் வருவோர் போவருக்கெல்லாம் கொடுத்து அப்புறப்படுத்தினாள். அப்பச்சி செத்து ஒரு மாதத்திற்கு பிறகு அப்பச்சி சேகரித்து வைத்திருந்த சாமான்களையெல்லாம் அப்பத்தா தூக்கிப்போட்டு சல்லிசல்லியாக நொறுக்கி சாமியாடிக்கொண்டிருந்தாள். புத்தகங்களையெல்லாம் தெருவில் வீசி எறிந்தாள். எல்லோரும் மவுனமாக சுற்றி நின்றுக்கொண்டிருந்தனர். தோளிலும் இடுப்பிலும் லாவகமாக அணைத்தபடி இருக்கும் கிரேக்கச்சாயல் கொண்ட மங்கு பொம்மைகள் மட்டும் முப்பதோ நாற்பதோ அவரிடமிருந்தன. அத்தனையையும் அப்பத்தா தூள்தூளாக ஆக்கினாள். அந்த பொம்மை வேண்டும் என அடம்பிடித்து அழுதபோது முதுகு பழுக்க ஒன்று கொடுத்தாள். பெரியப்பச்சி தான் அழும் என்னை சமாதானப்படுத்த தெருவில் கிடந்த எமிலி டிக்கின்ஸன் புத்தகத்தை கொண்டு வந்து கையில் கொடுத்தார். 'உன் அப்பச்சி எப்பவும் இதத்தான் வச்சிக்கிட்டே திரிவான். யாரு கண்ணுலயும் காட்டாம வச்சுக்க.' என்றார்.
*"*
"அப்பா.. பாத்துட்டிங்களா?"
"இந்த அஞ்சு மட்டும் போதும்"
"அப்பச்சரி… நீங்க வீட்டுக்கு போங்க. மிச்சத்தை நான் பாத்துட்டு ராத்திரி வரேன்."
4
அப்பார்ட்மென்ட் கூடத்திலும் சிதம்பரத்தின் அறையிலும் சாமான்களாக விரவிக் கிடந்தன. மூன்று நாட்களில் வேலையை முடித்துக்கொண்டு சிதம்பரம் நேற்றிரவு சிங்கப்பூருக்கு கிளம்பிச்சென்றான். அவன் வாங்கி வந்த 'ப்ளூ லேபில்' மேசையில் இருந்தது. ஒரு கோப்பையில் ஊற்றி, கொஞ்சம் சோடாவை சேர்த்துக்கொண்டு ஒரு மிடறு அருந்தினேன். ஏசியை இயக்கினேன். 555 சிகரெட்டைப் பற்ற வைத்து ஆழமாக இழுத்தேன். புகையும் மதுவும் உள்ளே கொந்தளித்து ஆர்ப்பரித்த கடலை அமைதிப்படுத்தின. ஏதோ ஒன்றுக்கு என்னைத்தயார் படுத்திக்கொள்வதைப்போல இருந்தன இந்தச் சடங்குகள்.
மனம் தன்னியல்பாக எமிலியை நாடியது. புத்தக அடுக்கில் கெட்டி அட்டைகொண்ட கருப்பு புத்தகத்தை கண்கள் தேடின. அதன் பழுப்பேறிய பக்கங்கள் காட்டிக்கொடுத்தன. எமிலிமின் தேர்ந்தெடுத்த கவிதைகள் கொண்ட ஆங்கில தொகுப்பு. அப்பச்சி சில பக்கங்களில் கைப்பட எழுதியிருப்பார். அடிக்கோடிட்டிருப்பார். சில கவிதைகளை மொழிபெயர்த்து கவிதைக்கு பக்கத்திலேயே எழுதியிருப்பார். சில கவிதைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டிருந்தன. 'என்னால் மரணத்தை நிறுத்த முடியாததால்' எனத் தொடங்கும் கவிதைக்கு கீழ் பென்சிலில் 'சீதாவுக்கு.. மன்னிப்பு வேண்டி' என எழுதப்பட்டிருந்தது. அருகிலேயே கூப்பிய கரங்கள் நேர்த்தியாக வரையப்பட்டிருந்தன. அந்த கவிதை தொகுப்பில் இருபக்கங்கள் மட்டும் கிழிபட்டிருந்தன. அப்பச்சி எனக்கு ஏதும் செய்தி விட்டுச்செல்லவில்லை. ஆனால் ஏனோ அந்த கிழிப்பட்ட பக்கங்கள் எனக்கானவை என நான் ஆழமாக நம்பினேன். மறு உலகத்திலிருந்து எனக்கு அவர் கடத்த விரும்பிய செய்தி அதுதான் என கற்பனை செய்தேன். ஆனால் அவ்விரு பக்கங்களும் கிடைக்கவில்லை. ஒரு கவிதையை மொழியாக்கம் செய்து அன்புடன் ஜானுக்கு என எழுதியிருந்தார்.
'இதயமே நாம் அவனை மறப்போம்!
நீயும் நானுமாய், இன்றிரவே!
அவனளித்த வெம்மையை நீ மறப்பாய்,
நான் ஓளியை மறப்பேன்.
நீ முடித்துக்கொண்டதும், தயவுகூர்ந்து என்னிடம் சொல்
அப்போது எனது எண்ணங்கள் மங்கும்;
விரைக! நீ தாமதித்து பின்தங்கும் நேரத்திற்குள்,
நான் அவனை நினைத்திடுவேன்!
சட்டென்று போதையிறங்கி அகம் தெளிந்தது. ஒன்றுடன் ஒன்று பொருந்திக்கொண்டது. கண்களில் நீர் பொங்கியது. இன்னோரு சுற்று அருந்தினேன்.
அழுக்கு வேட்டி பொதியை எடுத்தேன். மெல்ல அதை அகற்றியபோது வேலைப்பாடுகள் மிக்க தந்தப்பேழை என் கையில் அமர்ந்தது. அதை மெல்ல வருடினேன். செதுக்குகளில் தூசு படிந்திருந்தது. கண்ணாடித் துடைக்கும் மெல்லிய துணியைக்கொண்டு துடைத்தேன். பேழையை உற்று நோக்கினேன். அப்பச்சியின் இளமை முகம் கருவிழிக்குள் கலங்கியமைந்தது. உடலெங்கும் நடுக்கம் ஒரு அலைபோல பரவுவதை உணர்ந்தேன். வெறுமே அந்தப்பேழையை வெறித்தபடி எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன் எனத்தெரியவில்லை. மீண்டும் பேழையை அழுக்கு வேட்டியில் பொதிந்து கட்டினேன். சிதம்பரத்தின் அறையில் இருந்த அலமாரியில் மறைவாக உள்ள ஓரிடத்தில் வைத்தேன்.
மறுநாள் உறக்கம் விட்டெழும்போது பதினோரு மணி. தலை கனத்து வலித்தது. எலுமிச்சை தேநீரை ஒரு கோப்பை சுடச்சுட அருந்தினேன். சிதம்பரம் நான்கு முறை அழைத்திருந்தான். அப்பச்சியின் புகைப்படத்தை எங்கே மாட்டச்சொல்லலாம் என சுவரை நோட்டம் விட்டேன். பேழையில் என்ன இருக்கக்கூடும் என ஒரு கேள்வி தன்னிச்சையாக கிளர்ந்தது. கண்களை மூடிக்கொண்டு, என்னவாக இருக்கும் என கற்பனைச்செய்யத் தொடங்கினேன்.
Suneel Krishnan's Blog
- Suneel Krishnan's profile
- 5 followers
