Sukumaran's Blog, page 3
March 7, 2021
வாப்பா - வங்கச் சிறுகதை
வாப்பா
நபரூண் பட்டாச்சார்யா

2002 குஜராத் கலவரத்தின் பின்புலத்தில் நபரூண் பட்டாச்சார்யா எழுதிய கதை இது. பத்துக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்து தொகுத்து நூலாக வெளியிடும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது இந்தத் தமிழாக்கம். வங்க மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குச் செய்யப்பட்ட ஆக்கத்தை அடிப்படையாக வைத்துத் தமிழாக்கம் உருவானது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வி.ராமசாமியுடனான கலந்துரையாடலில் தமிழாக்கப் பிரதி இறுதி வடிவம் பெற்றது.
கலவரத்தில் நேரடியாகப் பங்கேற்ற கும்பலில் சதாசிவ்வும் இருந்தான் என்று சொல்வது சரியில்லைதான். ஆனால் அவன் அந்தக் கும்பலில் இல்லை என்றும் எப்படிச் சொல்ல? அலுவலகம் செல்லும் பாபுக்களும் அவர்களது மனைவியரும்கூடக் காரில் வந்து கடைகளில் கொள்ளையடித்தார்கள்தானே? போலீசும் அந்தத் தீவைப்பில் சம்பந்தப்படாமல் இருந்தார்களா என்ன? சிக்கல் அங்கேதான். சுருக்கமாகச் சொன்னால் கலவரத்தில் பங்கெடுத்தவர்கள், பங்கெடுக்காதவர்கள் என்று பிரித்துப் பார்ப்பது கடினம். கலவரக்காரர்களில் ஒருவனாகச் சதாசிவ்வைச் சேர்த்தாலும் அவன் அவ்வளவு முக்கியமானவன் அல்ல என்றும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு அவன் அயல்வாசிகளைப்போல ஒரு திரிசூலத்தைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது அம்மா கேட்டாள்.
- இதை வெச்சு என்ன செய்வே?
- சண்டை வரப்போகுது. எலிகளைச் சாகடிக்க எல்லாரும் கூட்டமாப் போவாங்க.
- சரி, நீ என்ன செய்வே?
- நானும் போவேன்.
சதாசிவ் அம்மா இன்னும் சொல்லியிருப்பாள். அது கிட்டத்தட்ட அவள் உதடுவரைக்கும் வந்திருந்தது. ஆனால் அவன் எவ்வளவு கள்ளச் சாராயம் குடித்திருந்தான் என்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. சதாசிவ்வின் அப்பா இறந்து நான்கு மாதங்கள் ஆகியிருந்தன. அவரும் முட்டமுட்டச் சாராயத்தைக் குடித்திருந்தார். ஆனால் அது அன்றைய வேலை முடிந்த பிறகுதான். சென்ற வருடமே மில் மூடப்பட்டிருந்தது. அதன் பிறகே அவர் கள்ளச் சாராயம் குடிக்க ஆரம்பித்திருந்தார். ஆட்கள் கள்ளச் சாராயத்தை விடவும் மிகவும் அபாயகரமான எரிசாராயங்களைக் குடித்தார்கள். அதைக் குடித்துச் செத்தார்கள். சதாசிவ்வின் அப்பா ஒரு பெயிண்ட் பாக்டரியிலிருந்து திருடிய ஐசோப்ரொஃஐல் ஆல்கஹாலை அருந்தியிருந்தார். சதாசிவ்வின் அப்பா வேலைக்காக அணிந்துவந்த காக்கி டிரவுசரும் கழுத்துப்பட்டி நைந்த கருநீலச் சட்டையும் அந்த அறைக்குள்ளே கொடியில் தொங்கிக்கொண்டிருந்தன. சதாசிவ்வின் கால்களில் ஒன்று சூம்பிக் கோணலாக இருந்தது. அவனை ஒடிசலானவன் குட்டையானவன் என்று சொல்லலாம். அவனுடைய இடதுகால் ஏடாகூடமாக நீட்டிக் கொண்டிருப்பதால் மேலும் குட்டையாகவும் விகாரமாவும் தோன்றினான். அது அப்படியே இருக்கட்டும். சதாசிவ் நீரில் முக்கி ரொட்டிகளைத் தின்றுவிட்டுப் படுக்கப் போனதும் அவன் அம்மா அந்தத் திரிசூலத்தை எடுத்துப் பரிசோதித்தாள். ஒன்றுக்கும் பயன்படாதது. வார்ப்பிரும்புக் கழிவிலிருந்து செய்தது. ஒருவர் அதைக் கழிவுப் பொருளாக விற்றால் சின்னக் கிண்ணத்தின் விலைகூடப் படியாது. சதாசிவ் அம்மா அவன் தூங்கிக் கொண்டிருக்கும்போதே அவனுடைய சட்டைப்பையிருந்து தீப்பெட்டியை எடுத்தாள். சில குச்சிகளைத் தவிர தீப்பெட்டிக்குள் இரண்டு பீடிகளும் பாதிபுகைத்த பீடியும் இருந்தன. சதாசிவ் அம்மா ஒரு பீடியை எடுத்துப் பற்றவைத்தாள். அதைப் புகைத்துக் கொண்டிருக்கும்போதே அவளால் எதிர்ப்பக்கத்து அறையிலிருந்து காஞ்சியும் அவன் மனைவியும் சண்டையிடுவதை உற்றுக் கேட்க முடிந்தது. காஞ்சியின் மனைவி போன வருடம் அவனுடைய சகோதரனுடன் சூரத்துக்கு ஓடிப் போனாள். பிறகு அவளாகவே திரும்பி வந்தாள். அவர்கள் தினமும் சண்டை போட்டார்கள். ஆனால் ஒத்துப் போகவும் செய்தார்கள். சமாதானமானதும் கேசட் ரிக்கார்டரைப் போட்டார்கள். அந்தத் திரிசூலம் அறையின் மூலையில் சுவரோடு சார்த்தி வைக்கப்பட்டிருந்தது. சதாசிவ் அறையின் வாசல் நிலைக்குக் கதவு இல்லை. மாவு மூட்டைக்கு உபயோகிக்கும் பெரிய பிளாஸ்டிக் பைகளைச் சேர்த்துத் தைத்த திரை தொங்கவிடப்பட்டிருந்தது. டீசலும் சமையலும் கலந்த வாடை அந்த அறையை மூச்சுத் திணறும் இடமாக்கியிருந்தது. ஆனால் அவ்வப்போது நீண்ட இடைவேளை விட்டு வீசிய திடீர்க் காற்று வாடையை ஊதி வெளியே தள்ளியது.
தொழிலாளர் காலனியின் சந்துகளுக்கும் இடைவழிகளுக்கும் நடுவில் சாலை இடுங்கியோ காணாமலோ போயிருந்தது. மீண்டும் புழுங்கத் தொடங்கியது. புழுக்கத்தின் முன்னால் வீசிய காற்று தோல்வியடைந்தன. சதாசிவ் அம்மாவால் தூங்க முடியவில்லை. அவள் அரைகுறையாக உட்கார்ந்து பாதித் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தாள். அரைத் தூக்கத்திலிருந்து விழித்ததும் ஒரு தகர மாவு டப்பாவின் பக்கத்தைத் தட்டிச் சத்தம் எழுப்பினாள். சுண்டெலியை விரட்டி ஓட வைப்பதற்காக அந்தச் சத்தம். தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையில் வட்டமடித்துக் கொண்டிருந்த அவள் வெகு தூரத்திலிருந்திலிருந்து வந்த வேறு ஒரு சத்தத்தையும் கேட்டாள். இந்தப் பின் நேரத்திலும் எங்கோ ஓர் இடத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. யாரோ ஒருவர் சொற்பொழிவு ஆற்றுவதாக உரக்கக் கத்திக் கொண்டிருந்தார். இவ்வளவு பின் இரவுப் பொழுதில் யாராவது எப்போதாவது பொதுக் கூட்டம் நடத்தியிருக்கிறார்களா? இந்த நேரத்தில் யாராவது அதற்குப் போயிருப்பார்களா? உண்மையில் அது கூட்டமல்ல. வெள்ளை அம்பாசிடர் கார் ஒன்று நாற்சந்தியில் நின்றிருந்தது. விரியத் திறந்து போட்டிருந்த அதன் பின்பக்கக் கதவுகளுக்கு வெளியில் இரண்டு பெரிய ஒலிபெருக்கிகள் நீட்டிக் கொண்டிருந்தன. ஒரு கேசட் ரிக்கார்டரிலிருந்து அந்தப் பேச்சு ஒலித்துக் கொண்டிருந்தது. அதை ஒலிக்க விட்டவர்கள் சாலையில் நின்று தமக்குள் அடங்கிய குரலில் பேசிக்கொண்டும் பான்மசாலாவை மென்றுகொண்டும் இருந்தார்கள். ஒருவர் சந்தனநிற சபாரி சூட் போட்டிருந்தார். எஞ்சிய மூன்று பேர் புதிதாகச் சலவை செய்த வெள்ளைநிறக் குர்த்தாவும் பைஜாமாவும் அணிந்திருந்தார்கள். டிரைவர் நடை பாதையில் குந்தி உட்கார்ந்திருந்தான். இதற்கு முன்பு அண்டையில் மூன்று இடங்களில் காரை இதுபோல நிறுத்த வேண்டியிருந்தது. அதனால் அவன் களைத்திருந்தான். அந்த மூன்று இடங்களிலும் அதே காஸட் அரைமணி, அரைமணி நேரமாகப் போடப்பட்டிருந்தது. இன்னும் இரண்டு இடங்களில் அவன் காரை நிறுத்தி ஒவ்வொரு அரைமணி நேரமாக, அதாவது இன்னும் ஒரு மணி நேரத்துக்கு அதே காசட்டை ஒலிக்கவிட வேண்டும். அந்தக் காசட் தேர்ந்த தொழில்திறனுடன் ஒரு ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டிருந்தது. சில பகுதிகளில், உணர்ச்சியைத் தூண்டி விடுவதற்காக, ஜாத்ரா நிகழ்ச்சிப் பாணியில் இசை சேர்க்கப்பட்டிருந்தது. சில சமயங்களில் துயரப்படுபவர்களுக்கு ஆறுதலாக இருந்தாலும் அதன் மற்ற பகுதிகளில் ஏளனமான உரத்த சிரிப்புகளே நிறைந்திருந்தன. தொலைக்காட்சியில் நகைச்சுவைத் தொடர்களைப் பார்த்தவர்களுக்கு அந்தச் சிரிப்பு பழக்கமானது. தொலைக்காட்சி நேரலையில் பங்கேற்கும் பார்வையாளர்கள் பொருத்தமான விநாடியில் சிரிக்க மறந்துபோனால் இதுபோலச் சிரிக்கக் கற்றுக் கொடுப்பார்கள். அது என்னவாக இருந்தாலும், பேச்சு ஒலித்துக் கொண்டிருந்தபோது ஒரு போலீஸ் வேன் வந்து அந்த இடத்தை வட்டமிட்டது. சபாரி ஆசாமி அண்ணாந்து வாயை முழுக்கத் திறந்து பான்மசாலாப் பாக்கெட்டில் மிச்சமிருந்ததைக் கொட்டிக் கொண்டார்.
அநீதிக்கு எதிராகப் போராடும் ரத்த தாகமுள்ள படை வீரர்களாக அந்தக் கலவரக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கருதப்பட்டால் சதாசிவ்வையும் அவர்களில் ஒருவனாகச் சேர்க்கலாம். ஒவ்வொரு நபருக்கும் ஒதுக்கிய சாராயக் குப்பியையும் முன்னூறு ரூபாய் பணத்தையும் ஏற்கனவே வாங்கியிருந்தான். படுகொலைகள் முடிந்து பிணங்கள் தெருக்களில் கிடந்தபோது அவற்றை அப்புறப்படுத்த ஒருவர் கூட வரவில்லை. நரிக்கூட்டமொன்று வந்தது. பட்டினி கிடந்த நாய்களும் தாவும் வல்லூறுகளும் வந்தன. அதன் பிறகு எலிகளுடனும் ஈக்களுடனும் எறும்புகளுடனும் வந்த அணியில்தான் சதாசிவ் இருந்தான். சாராயத்தை அனுபவித்துக் குடித்து மகிழலாம் என்று நினைத்தான். வீட்டில் உட்கார்ந்தே பாதிக் குப்பியைக் காலி செய்திருந்தான். ஆனாலும் போதை ஏறியிருக்கவில்லை. ஐம்பது ரூபாயை அம்மாவிடம் கொடுத்தான். மிச்சம் இருநூற்று ஐம்பது ரூபாயைத் தனக்காகக வைத்துக் கொண்டான். இன்னும் சில நாட்களுக்கு, இல்லை பல நாட்களுக்கு அந்தத் தொகை அவனைப் பார்த்துக் கொள்ளும். எனவே போகவேண்டாம் என்றுதான் நினைத்தான். ஆனால் சங்கரும் காஞ்சியும் போஜாவும் கூட்டமாக வந்து சதாசிவ்வை வெளியே இழுத்து வந்தார்கள். ரிக்யால் நகரில் கொடூரமான தாக்குதல் நடந்திருந்தது. சாலையோரத்திலிருந்தே தீப்பிழம்புகள் தென்பட்டன. கும்பல்கள் லாரிகளில் வந்து சேர்ந்திருந்தன. கேஸ்சிலிண்டர்களை அடுக்கிக்கொண்டு வந்திருந்தார்கள். வாள்களையும் இரும்புத்தடிகளையும் கத்திகளையும் கபாப்குத்தி வைக்கும் கம்பிகளையும் அமிலத்தையும் பெட்ரோல் குண்டுகளையும் வைத்திருந்தார்கள். இப்போது அவனால் அங்கே போய்ச் சேர முடிந்தால் சூறையாட ஏதாவது சரக்கு நிச்சயம் இருக்கும். ஆனால் அவன் சீக்கிரம் அங்கே போயாக வேண்டும். அண்டை அயல் பக்கங்களிலிருந்து ஆட்கள் இதற்குள் வந்து சேர்ந்திருப்பார்கள். சதாசிவ் நொண்டியபடி கும்பலுடன் சேர்ந்து கொண்டான். அறையின் மூலையில் சுவரோடு சார்த்தி வைத்திருந்த திரிசூலத்தை எடுத்துக் கொண்டான். அழுக்குப் பைஜாமாவின் நாடாவை இறுகக் கட்டினான். அதன் பிறகு கால்பக்கத்தை மேலே சுருட்டிவிட்டான். இந்த ஆயத்தங்களுக்கு உயிரூட்டிக் கொண்டிருப்பதற்கு இடையில் அவன் ஒரு வார்த்தையும் உச்சரிக்கவில்லை; எதுவும் பேசவில்லை. போதையின் பிடியில் அர்த்தமில்லாத கூச்சலை மட்டுமே வெளிப் படுத்தினான். தொற்றிக்கொள்ளக் கூடியது அந்த மனநிலை. மற்றவர்களும் அவனைப் போலத்தான் இருந்தார்கள். ஒல்லிப் பிச்சான்களாகவும் வீணர்களாகவும் அலட்டல் காட்டுபவர்களாகவுமே அவர்களும் இருந்தார்கள். அவர்கள் போக்கில் அவர்களும் கூச்சலிட்டார்கள். மில்தொழிலாளர் காலனியின் இடுங்கிய சந்துவழியாக நடந்தார்கள். விசாலமான சந்தைக் கடந்து சாலையை அடைந்தபோது, பற்றி எரிந்து கொண்டிருந்த ரிக்யால்நகரிலிருந்து எழுந்த புகைமேகங்களின் வெளிச்சத்தைப் பார்த்தார்கள். ஒரு சிறு பகுதி காற்றின் வீச்சால் சிதறடிக்கப்பட்டாலும் புகை மேல்நோக்கி உயர்ந்தது. இடது பக்கத்தில் கட்டுப்பாடற்ற கும்பல் ஊர்வலம் போனது. முழுச் சாலையையும் ஆக்கிரமித்துக்கொண்டு அவர்கள் ஆனந்தமாக நடனமாடினார்கள். அவர்களுக்கு எதுவும் நேரவில்லை. அவர்களால் மற்றவர்களுக்கும். புதிதாகக் கட்டி முடித்திருந்த சிவன் அப்பார்ட்மெண்ட்ஸுக்கு முன்னால் மாட்டீஸும் மாருதியும் சாண்ட்ரோவும் உற்சாக எந்திரமான ஃபோர்டு ஐகான் கார்களும் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தன. சதாசிவ்வின் குழுவைச் சேர்ந்த ஒவ்வொருவரும் அப்போது தங்களை ஒரு உற்சாக எந்திரமாகவே உணர்ந்தார்கள். ஆனந்தக் கும்பல் சற்று முன்னேறியது. சந்தியில் வலது பக்கமாகக் கும்பல் திரும்பியும் அவர்கள் தயங்கி நின்றார்கள்.
அநேகமாக அது அவனுடைய சைக்கிளாகவே இருக்கும். அதை மார்பில் சுமந்தபடி செத்துக் கிடந்தான். அழுக்கான டி ஷர்ட்டும் வெளுத்துப்போன கோடுகள் உள்ள வெண்ணிற டிராக் சூட் காலுடையும் அணிந்திருந்தான். அவன் முகம் கிழித்தெடுக்கப்பட்ட சினிமா போஸ்டரால் மூடியிருந்தது. அதன் மேல் ஒரு செங்கல் வைக்கப்பட்டிருந்தது. காற்றின் வீச்சில் போஸ்டர் பறந்து போனாலும் சிதைந்த முகம் வெளியே தெரியாமல் இருக்கும் இல்லையா? போஜா இறந்து கிடந்தவனின் சட்டைப்பைக்குள் கையைவிட்டு கைக்குட்டையையோ மெல்லிய கிழிசலையோ வெளியே எடுத்தான். அதைத் தூர எறிந்தான். சற்று நேரம் அங்கே அமைதியாக இருந்தது. பிறகு மறுபடியும் நடக்கத் தொடங்கினார்கள். முடவனான சதாசிவ் குழுவிடமிருந்து பின் தங்கியிருந்தான். எதிர்த் திசையிலிருந்து ஒரு லாரி வந்தது. டிரைவரின் கேபினுக்கு மேலிருந்த மாடத்தில் உட்கார்ந்திருந்த சிலர் வாள்களையும் ஈட்டிகளையும் அரிவாள்களையும் வீசிக் கொண்டிருந்தார்கள். பழி வாங்குவதைப் பற்றிய முழக்கங்களைத் தாளம் பிசகாமல் எழுப்பினார்கள். லாரியில் அலமாரிகள், தட்டு அடுக்குகள், தலைகீழாக நிறுத்திய ரெஃப்ரிட்ஜெரேட்டர்கள், டி.வி.செட்கள், சூட்கேஸுகள், சமையல் பாத்திரங்கள், திரைகள், ஸ்கூட்டர்கள், கண்ணாடிகள், தேனிரும்பு நாற்காலிகள் எல்லாம் திணிக்கப்பட்டிருந்தன. லாரி அவர்களை நோக்கி முன்னால் நகர்ந்தபோது சாலை ஓரமாக ஒதுங்கி வழிவிட்டார்கள். லாரி வேகமெடுத்தது. லாரியின் பின்பக்கம், அதன் கொக்கியில் தற்செயலாக ஒட்டிக்கொண்ட அல்லது வேண்டுமென்றே அங்கே சிக்கவைத்த ஆகாய நீல நிறமுள்ள செயற்கை இழைத் துப்பட்டா காற்றில் படபடத்தது. சதாசிவ்வின் குழு இப்போது வெற்றி முழக்கங்களை உரக்கப் பாடினார்கள். ஓடத் தொடங்கினார்கள். சதாசிவ்வால் ஓட முடியாததால் இன்னும் பின்னால் விடப்பட்டான். அவன் திரிசூலத்தைக் கைத்தடியாக உபயோகித்தான். அதன் கணகண சத்தம் சாலையில் ஒலித்தது.
அவர்களைப் பின்தொடர்ந்து ரிக்யாலின் மெயின் கேட்டை சதாசிவ் அடைந்த போது அவர்கள் எல்லாரும் வெளியில் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தான். அந்த இடத்துக்குத் தீவைத்த, ஆட்களைக் கொன்ற, பெண்களை வன்புணர்ந்த அதே நபர்கள்தாம் மதில் சுவரால் வளைக்கப்பட்ட இரண்டு கட்டடங்களையும் நெருப்பு சூழ்ந்திருந்ததால் இந்த உதிரிவர்க்கத் திருடர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தார்கள். உள்ளே தீயின் சரசரப்பை மீறிப் பொருட்கள் உடைந்து நொறுங்கும் ஓசையும் கேட்டது. கதவுகள் விழுந்து கொண்டிருந்தன. சட்டங்கள் தீப்பிடித்ததில் ஜன்னல் கிராதிகள் கழன்று தொங்கின. சதாசிவ் சற்று நேரம் தீச்சுவாலைகளின் கோர தாண்டவத்தையும் புகைப்படலத்தையும் பார்த்துக்கொண்டு நின்றான். காம்பவுண்டுக்குள் நிறுத்தியிருந்த கார் ஒன்றும் எரிந்து கொண்டிருந்தது. இந்த அப்பார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸுக்கு சதாசிவ் ஒருமுறை வந்திருக்கிறான். பின் பக்கத்தில் கொஞ்சம் காலி நிலம் இருந்தது. அங்கே களைபறிக்கும் வேலைக்கு பாக்யேஷ் வந்திருந்தான். சதாசிவ்வும் பாக்யேஷுடன் வந்திருந்தான். பின்பக்கத்தில் ஒரு கேட் இருந்தது. பின்பக்க மதிலை ஒட்டி ஆஸ்பெஸ்டாஸ் கூரைபோட்ட மூன்று ஷெட்கள் இருந்தன. அவை பணியாளருக்கான குடியிருப்புகள். ஒருவேளை அவற்றில் கொள்ளை நடந்திருக்காது. யாரும் கவனிக்காமல் பின்பக்கக் கேட் வழியாக உள்ளே நுழைந்தால் தன்னால் எதையாவது கண்டெடுக்க முடியுமா?
சதாசிவ்வின் நினைப்புத் தவறானது. பின்பக்கத்திலும் எரிந்து கருகும் சதையின் வாடை கவிந்திருந்தது. அங்கும் சூறையாடப்பட்டிருந்தது. இறந்த உடல்கள் எரியும் டயர்களைப் பயன்படுத்திச் சிதை மூட்டப்பட்டிருந்தன. செருப்புகள் குப்புறக் கிடந்தன. கதவு திறந்து கிடந்தது. ஒருவேளை சிலர் இந்தப் பக்கமாகத் தப்பிப் போயிருக்கலாம். நொறுங்கிய பீங்கான் பண்டங்கள். பழைய துருப்பிடித்த குழந்தைகளுக்கான தள்ளுவண்டி ஒன்று தலைகீழாகக் கிடந்தது. ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் வேய்ந்த ஷெட்களும் தப்பவில்லை. அறைகளுக்குள் தீ எரிந்து கொண்டிருந்தது. ஓர் அறையில் பாதி எரிந்த காலண்டர் தென்பட்டது. சதாசிவ் வாசலில் நின்று உள்ளே எட்டிப்பார்த்தான். உள்ளே தகித்த வெப்பம் பெருவெடிப்புப் போல அவனைத் தாக்கியது. கதவு பெயர்ந்து வந்தது. அதன் கீழே ஒரு கை தெரிந்தது. உள்ளே போய்த் தேடியிருந்தால் அவன் எதையாவது பார்த்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்வதற்கான வலிமையைத் திரட்டிக்கொள்ள சதாசிவ்வால் முடியவில்லை. அப்போது முனகலோ பயத்தைக் கட்டுப்படுத்த மூச்சை இழுத்துப் பிடிக்கும் ஓசையோ போன்ற அசாதாரணமான சத்தத்தைக் கேட்டு சதாசிவ் திடுக்கிட்டான்; சுற்றிலும் திரும்பிப் பார்த்தான். அங்கே யாரும் இல்லை. கொழுந்து விட்டு எரியும் சுவாலைகளின் ஓசை மட்டுமே. எல்லா நாளையும்போல அந்தி வெளிச்சம் மங்கிக் கொண்டிருந்தது. அத்துடன் எரிசுவாலையின் ஓசையும் குறைந்து கொண்டிருந்தது. ஒருவேளை மேலும் எரிக்க அங்கே எதுவும் இல்லையோ? சத்தம் கேட்டதாக சதாசிவ் நினைத்தது தவறா? அவன் கொஞ்சம் பயந்தான். அதனால்தான் திரிசூலத்தை ஆர்ப்பாட்டமாக உயர்த்திக் கத்தினான்போல.
- யாரு அங்கே?
பதில் இல்லை
- அங்கே யாராவது இருக்கீங்களா?
அதற்கும் பதில் இல்லை.
இங்கே அறைகளுக்குள் நிச்சயமாக யாரும் இல்லையா? சதாசிவ்வுக்கு நிராதரவான உணர்வு ஏற்பட்டது. திரிசூலத்தை இறுகப் பற்றிக்கொண்டான். விலங்குகள் பிற விலங்குகளின் இருப்பை உணர்வது இப்படித்தான்; மனிதர்கள் பிற மனிதர்களின் இருப்பை உணர்வதும் இப்படித்தான். தான் எதையும் கேட்கவில்லை என்றும் சதாசிவ்வுக்கு ஒரு நொடி தோன்றியது. அது சரிதானா? கதவுக்குக் கீழே தெரிந்த கைக்கு உரிய மனிதன் செத்திருக்கவில்லையா? அது அவனுடைய முனகலா? விழுந்த கதவைத் தள்ளும் வலிமை அவனுக்கு இல்லாமலிருந்ததா?
- ஜாக்கிரதை, என் கையில் திரிசூலம் இருக்கு. அதால உன்னைக் குத்துவேன்.
இந்த முறையும் எதிர்வினை இல்லை.
அந்தி வெளிச்சம் மறைந்து கொண்டிருக்கும் அந்தப் பகலின் கடைசி நேரத்தில் எல்லாமும் அசாதாரணமாக உயிர் பெற்றிருப்பதை சதாசிவ் கவனித்தான். இருளில் மூழ்குவதற்கு முன்பாக எல்லாமும் ஒருமுறை சுழல்கின்றனவா? அல்லது அவை பயத்தில் திடுக்கிடுகின்றனவா? ஆனால் அங்கே எதுவும் இல்லை. சிறிது தூரத்துக்கு அப்பால், நீண்டிருந்த தரையில் ஒரு தண்ணீர்த்தொட்டி கட்டிவிடப்பட்டிருந்தது. அது ஏன் அங்கே இருக்கிறது என்று சதாசிவ்வுக்குத் தெரியும். அது கட்டட வேலைக்காகச் செங்கற்களை ஊற வைக்கும் தொட்டி. அங்கே ஒருபுறத்தில் மரப்பலகைகள் அடுக்கப் பட்டிருந்தன. ஒதுக்கமாக இருந்ததால் யாரும் அதற்குத் தீவைக்கவில்லை. ஆனால் தண்ணீர்த் தொட்டிக்குள்? இங்கேயிருந்து அது சரியாகத் தெரியவில்லை. சதாசிவ் திரிசூலத்தை ஈட்டிபோல ஓங்கிப் பிடித்தான். தண்ணீர்த்தொட்டியை நோக்கி நடந்தான். பாசிக் கறை. வண்டல் படிந்த அடிப்பகுதியில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. அதன் மூலையில் சுவரோடு முதுகைச் சாய்த்து அவன் உட்கார்ந்திருந்தான். உள்ளாடை மட்டும் அணிந்த சிறுவன். அவன் தலை மொட்டையாக இருந்தது. தலையில் சிரங்குப்புண் இருந்தது. சதாசிவ்வைப் பார்த்ததும் சிறுவன் எழுந்து நின்றான். சதாசிவ் திரிசூலத்தை வீசப்போவதுபோல ஓங்கினான். குழந்தை அமைதியாக இருந்தான். ஆனால் அவன் வாய் திறந்திருந்தது. சில நொடிகளுக்குப் பிறகு சதாசிவ் கையை இறக்கினான். பகல் வெளிச்சம் மறைந்து கொண்டிருந்ததில் எல்லாம் மங்கலாயின. சதாசிவ் தன்னைக் கொல்ல மாட்டான் என்பது சிறுவனுக்குத் தெரிந்தது. அப்படியே செய்வதானாலும் அதை இங்கே செய்ய மாட்டான். அவன் மறுபடியும் உட்கார்ந்தான். அவனுடைய உள்ளாடை ஈரமாகி இருந்தது. தன்னால் அந்தக் குழந்தையைக் கொல்ல முடியாது என்று சதாசிவ்வும் உணர்ந்தான். வெகு முன்பாகவே அவனுடைய போதை கலைந்து போயிருந்தது. சதாசிவ் திரிசூலத்தைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு சூம்பிய காலை ஒரு பக்கமாக நீட்டியபடி உட்கார்ந்தான். அவர்கள் இருவரும் உட்கார்ந்திருந்தார்கள். சதாசிவ் தொட்டியின் விளிம்பிலும் குழந்தை தொட்டிக்கு உள்ளேயும். சதாசிவ் ஒரு பீடியைப் பற்றவைத்தான். அந்த பீடியைப் புகைத்துவிட்டுப் போய்விடலாம் என்று தீர்மானித்தான். சிறுவனைக் கொல்லாவிட்டாலும் எரிகிற பீடித்துண்டை அவன் உட்கார்ந்திருக்கும் தண்ணீருக்குள் சுண்டி விடத்தான் போகிறான். ஆனால் பீடியைப் புகைத்து முடிப்பதற்கு முன்பே தன்னுடைய யோசனைகளுக்குள் அந்தக் குழந்தை புகுந்திருப்பதை சதாசிவ் புரிந்துகொண்டான். அந்தக் குழந்தையைப் பற்றிய யோசிக்க எனக்கு என்ன அவசியம்? ஏராளமான ஆட்கள் செத்துப் போயிருக்கிறார்கள். இதோ முன்னால் கதவுக்கு அடியில் சிக்கிக்கொண்ட கை கிடக்கிறது. ஒருவேளை உள்ளே இன்னும் ஆட்கள் எரிந்து கொண்டிருக்கலாம். ஒருவேளை தப்பி ஓடியவர்கள் துரத்தப்பட்டு கடைசியில் பக்கத்துத் தெருக்களில் பிடிபட்டிருக்கலாம். மறுபடியும் சதாசிவ் இக்கட்டுக்குள் அகப்பட்டான். செத்துப் போனவர்களில் ஒருவனாக அந்தக் குழந்தையைச் சேர்க்க முடியவில்லை. அவன் அமைதியாக நடந்து போயிருக்கலாம். கையில் திரிசூலத்தைத் தூக்கிக்கொண்டு நொண்டி நடந்து போயிருந்தால் யாரும் எதுவும் சொல்ல முடியாது. அவர்கள் எல்லாரும் பிரதான வாசலில் இருந்தார்கள். சதாசிவ் போன பின்பு, முழுக்க இருட்டிய பிறகும் செங்கற்களை ஊறவைக்கும் தொட்டிக்குள் அந்தச் சிறுவன் உட்கார்ந்து கொண்டே இருக்கலாம். ஆனால் எவ்வளவு நேரம்? இல்லை, எழுந்து வெளியில் வருவானா? என்ன நடக்கும் என்று சதாசிவ்வால் யூகிக்க முடியவில்லை. ஆனால் ஒரு விஷயத்தில் நிச்சயமாக இருந்தான். வெளியில் காத்திருப்பவர்களால் அவனைக் கண்டுபிடிக்க முடியாது. பகல் வெளிச்சம் மறைந்தது. தொட்டிக்குள்ளும் இருட்டாக இருந்தது. அடியில் கொஞ்சம் அழுக்கு நீர் இருந்தது. அதற்குள்ளே ஒரு மூலையில் சிறிய உள்ளாடை அணிந்து தலையில் சிரங்குடன் அவன் உட்கார்ந்திருந்தான்.
ஏய், எந்திரிச்சு வெளியே வா.
இருட்டுக்குள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை.
நான் ஒண்ணும் செய்யமாட்டேன். பயப்படாதே. எந்திரிச்சு வா.
கலங்கிய நீரில் ஏதோ அசைவு.
என் கையைப் பிடிச்சு ஏறி வா.
பிஞ்சுக் கைகள் சதாசிவ்வின் கையைப் பற்றின. சதாசிவ் தன் கைகளால் அவனை மேலே இழுத்தான். தன்னுடைய கையைப் பையனின் கழுத்து, முதுகு, மெலிந்த மார்பு, இடுப்பு, புட்டங்கள், கால்கள் எல்லாவற்றின் மேலும் ஓடவிட்டான். அவனுடைய உள்ளாடை தொப்பலாகிக் கால்வழியாகத் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. குழந்தை குளிர்காற்றில் விறைத்துப் போயிருந்திருந்தான். நடுங்கிக் கொண்டிருந்தான். சின்னப் பற்கள் கிடுகிடுக்கும் ஓசை சதாசிவ்வுக்குக் கேட்டது. சதாசிவ் குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டான். தன்னுடைய சூடான கையால் குழந்தைக்குக் கதகதப்பு ஏற்ற முதுகை வருடினான். குழந்தையை மார்போடு சேர்த்துக்கொண்டு இருளின் பகுதியாக அங்கேயே உட்கார்ந்தான். அவனுடைய இதயம் வேகமாகத் துடித்தது. குழந்தை வேகமாக மூச்சுவிட்டான். சதா சிவ்வை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான். சதாசிவ் குட்டி விரல்களையும் நகங்களையும் உணர்ந்தான். குழந்தை அவனைப் பிறாண்டிக் கொண்டிருந்தான். பிறகு நிச்சலனமாக ஓய்வெடுக்கத் தொடங்கினான்.
சதாசிவ் பின்பக்கத்து வழியாக இருட்டிலேயே வெளியேறினான். அவனுடைய இடது கால் மெலிந்து சூம்பியது. அதனால் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையைத் தனது வலது தோளில் போட்டுக்கொண்டான். கூர்விளிம்புகள் மேல்நோக்கியிருக்கும்படித் திரிசூலத்தை இடது கையில் எடுத்துக் கொண்டான்.
வெளியே சாலைக்கு வந்ததும் வலப்புறமாக நடந்தான். மெயின்கேட் அருகில் இன்னொரு லாரி வந்து நின்றது. அவர்கள் எல்லாரும் கும்பலாகக் காத்திருந்தார்கள். ஒருவேளை இன்னும் பொருட்களைச் சூறையாடியிருக்கலாம். அல்லது மனித உடல்களைக் குவித்திருக்கலாம். கழுத்து அறுக்கப்பட்ட நிர்வாணப் பெண்கள், மரணத்தை அணைத்துக் கொண்ட ஆண்கள். ஒருவேளை அவர்கள் சதாசிவ்வையும் கவனித்திருக்கலாம். அப்படியே இருந்தாலும் அவர்கள் அதைப் பற்றி யோசிக்க வில்லை. ஒருவேளை அவர்கள் கவனித்தது அந்தத் திரிசூலத்தை மட்டுமாக இருக்கலாம்.
அந்தக் கட்டடங்களுக்குள்ளே எரிந்துகொண்டிருந்த நெருப்பு சற்று முன்புதான் அணைந்திருந்தது. ஆனால் தரைத்தளத்திலோ அல்லது அதே தளத்திலிருந்த சமையலறையிலோ கேஸ்சிலிண்டர் திடீரென்று பெருஞ்சத்தத்துடன் வெடித்தது. அவர்கள் அதிர்ந்தார்கள். சதாசிவ்வும் அதிர்ந்தான். குழந்தை திடுக்கிட்டு விழித்தான். புதிதாக எழுந்த நெருப்பு வெளிச்சத்தை அச்சத்துடன் பார்த்தான். கூக்குரலிட்டு அழுதான்.
வாப்பா
அந்த அலறலை அவர்களும் கேட்டார்கள்.
----- 0 -----

நபரூண் பட்டாச்சாரியா ( 1948 – 2014 )
நவீன வங்க இலக்கியத்தில் புரட்சிகர அழகியலின் நடைமுறையாளர்களில் ஒருவர். இந்திய மக்கள் நாடகக்குழு ( இப்டா )வைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரும் நடிகரும் நாடக ஆசிரியருமான பிஜோன் பட்டாச்சார்யா, 2012 இல் நோபெல் பரிசுக்குப் பரிந்துரைக்கப் பட்டவரும் மகத்தான எழுத்தாளரும் செயல்பாட்டாளருமான மஹாஸ்வேதா தேவி இணையரின் ஒரே பிள்ளை. கல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். கவிஞராகவும் எழுத்தாளராகவும் செயலாற்றினார். ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின் வாழ்க்கையை எழுதினார். அவர்களுக்கான செயல் பாடுகளில் முன்னின்றார். சாகித்திய அக்காதெமி விருது உள்ளிட்ட பல பெருமைகளும் பெற்றவர். எனினும் அதிகாரத்துக்கு எதிரானவராகவே இயங்கியவர். 2007 இல் தனக்கு அளிக்கப்பட்ட வங்க இலக்கியத்தின் மிக உயர்ந்த விருதான பங்கிம் விருதை அன்றைய இடதுசாரி அரசின் நந்திகிராம் வன்முறைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் மறுத்தவர். நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் ஆகிய எல்லாத் துறைகளிலும் பங்களித்தார். திரைப்படத் துறையிலும் கணிசமாகப் பங்காற்றினார். புற்றுநோயுடன் நீண்ட நாட்கள் போராடி 2014 இல் மறைந்தார்.
நன்றி : நீலம் - பிப்ரவரி 2021
August 8, 2020
சுகுமாரன் கவிதைகள்
July 24, 2020
வாராணசி கவிதைகள்
ராமநாதனின் சஹானா

ஒளிஇடறிஇடறி உரையாடும் அடர்வனம்ஓசையற்ற ஒலியுடன் ஒசியும் பெருமரங்கள்வானிலிருந்து தடையற்று ஒழுகும் அமுத தாரைஅதல பாதாளத்தில் விழும் தாளக்கட்டுடன்என்னைநோக்கி வருகிறது ஒரு மாறுகண் யானை
அதன் செருமலில் எவரும் அறியாச் சுருதிகள்அதன் பிளிறலில் யாரும் கேளாத சங்கதிகள்அதன் மூச்சிரைப்பில் எவரும் நிரவாத ஸ்வரங்கள்அதன் அசைவில் மந்தர சலனம்அதன் நிமிர்வில் மத்திய சஞ்சாரம்அதன் நடையில் ஆரம்பமும் முடிவுமில்லா ஆலாபனை
அதுஎன்னைநோக்கி வருகிறதுஆயிரம் படைகளைப் புறமுதுகிடச் செய்த அன்பைப்போலஆயிரம் கடல்களைப் பருகிய அமைதிபோலஆயிரம் மலைகளை உலுக்கிய தவம்போலஅஞ்சி நின்ற என்னைத் துதிக்கையால் வளைத்துஅந்தரத்தில் உயர்த்தி முதுகின்மேல் அமர்த்துகிறதுஆகாயத்தில் துழாவி அளவில்லா மலர்கொய்து கைகளில் வைக்கிறது.
அடர்வனத்தின் எட்டுத் திசைகளிலும்எதிரொளிக்கிறது அம்மலரின் தெவிட்டாத தேன்எதிரொலிக்கிறது அம்மலரின் அகலாத நறுமணம்.
10.07.2020
தற்கொலைக் குறிப்பு

தற்கொலைக்கு எத்தனை காரணங்கள் உண்டோ அத்தனை வழிகளும் உண்டு.
ஒரு காரணத்துக்கு நூறுநூறு வழிகள் இருப்பதைப்போலவே ஒரு வழிக்கும் நூறுநூறு காரணங்கள் இருக்கின்றன
தற்கொலை விருப்பத்தின் விளைவு அல்ல விளைவின் விருப்பம்
எவரும் தற்கொலை செய்துகொள்வது விருப்பத்தால் அல்ல விரும்ப முடியாத விளைவால்.
தற்கொலையின் வழி நாம் நினைப்பதுபோல நேரானதல்ல மத்தி மீன்முள்ளைப்போல ஊடுகிளைகள் கொண்டது தற்கொலையின் நிச்சய முனையை அடைவதற்குள் ஏதேனும் கிளைவழியே வெளியேற உந்தித்தள்ளும் கருணைகொண்டது நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கிளைவழியாகப் பயணத்தைப் பாதியில் கைவிட்டுத் திரும்பியவர்கள்தாம் கிளையைக் கவனியாதவர்களே உயிரைத் தொலைக்கிறார்கள்.
நேற்று உயிரைத் தொலைத்தவர் இறுதிக் கடிதத்தில் இப்படி எழுதியிருந்தார்: ‘சாவைப் பகடிசெய்யும் வாழ்வின் சாகசமே தற்கொலை’.
அந்த நாட்களில் ஒன்று

நான் மிக மிக மகிழ்ந்த நாட்களில் அதுவும் ஒன்று
கானகத்தின் அமர வாழ்வுக்குச்சாவா நெல்லி பறிக்க மலையேறிய யானைசறுக்கி விழுந்து காலைச் சிராய்த்துக்கொண்டதுபொந்திடை அணில் பதறி வந்துபச்சிலைகளைக் கொறித்துப்போட்டதுநான் அதை விழுதாக அரைத்தேன்அணில் காயத்துக்குப் பற்றுப்போட்டது
அப்போதுவானம் ஆதுரமாகப் புன்னகை செய்ததுநூற்றாண்டுக் கடம்பமரம் மலர்மாரி பெய்தது
மிக மிக மிக மகிழ்ச்சியாக நானிருந்த நாட்களில் ஒன்று அது.
கனம்

ஒரு கல் கிடக்கிறது
காட்சிக்கு எளியதுகைப்பிடிக்குள் அடங்குவதுகடினம் தோன்றாதது
கையில் எடுக்கிறேன்பார்வை அளந்ததுபோலவேகனம் அவ்வளவு இல்லாதது
காட்சி அலமாரியில் வைத்தால்அழகுக்கு அர்த்தம் கூட்டும் மேஜைப்பளுவாக வைத்தால்தாள் பதற்றம் தணிக்கும்
கல்லை எடுத்ததற்குக் காரணங்கள் கிடைத்ததும்வீட்டுக்குக் கொண்டுபோகத் தீர்மானிக்கிறேன்
வலக்கையால் நினைவையும் இடக்கையால் கனவையும்இறுகப் பிடித்திருக்கிறேன்கையறு நிலை
பிறகு இருகையும் தளர்த்தி இருகையால் எடுத்துசும்மாதானே இருக்கிறது என்றுதலைமேல் சுமந்துபிடிவிட்டவற்றை மீண்டும் பற்றிநடக்கத் தொடங்குகிறேன்
பதில் கிடைக்காமல் விடப்பட்ட கேள்விபோல்நீளும் நெடுவழியில் காண்கிறேன்என்னைப் போலவே கல்சுமந்து நகரும் கூட்டம்ஒவ்வொரு தலைக்கல்லுக்கும் ஒவ்வொரு பருமன்
ஒருதலைமேல் சல்லிஒருதலைமேல் துண்டுஒருதலைமேல் பாறைஒருதலைமேல் குன்று
எல்லா வலக்கையிலும் நினைவுஎல்லா இடக்கையிலும் கனவு
என் தலைமறந்து ஏளனமாய் யோசிக்கிறேன்‘கல் சுமக்கும் சிரத்தினர்நாசி அரித்தால் என்ன செய்வர்?’
அக்கணமே ஞாபகம் வருகிறது
என் தலைக்கல் இட்ட அடி ஒவ்வொன்றுக்கும்ஒவ்வொரு அடியாக வளர்ந்து பருப்பதும்வீட்டை அடையும் முன்பே மலையாக மாறிவிடும் என்பதும்.
ஓவியம்: ஜியோவன்னி பாட்டிஸ்டா லங்கேட்டி ( 1635 - 1676 )
நாம் இல்லாமற் போனால்...

நாம் இல்லாமற் போனால்நம் வீடு என்ன ஆகும்நாம் இல்லாமற் போனால்நம் தெரு என்ன ஆகும்நாம் இல்லாமற் போனால்நம் ஊர் என்ன ஆகும்நாம் இல்லாமற் போனால்நம் நாடு என்ன ஆகும்நாம் இல்லாமற் போனால்நம் உலகம் என்ன ஆகும்நாம் இல்லாமற் போனால்நமது பிரபஞ்சம் என்ன ஆகும்நாம் இல்லாமற் போனால்நாம் என்ன ஆவோம்?
சிற்பம்: சாரதா பிரதிக்ஷா
July 22, 2020
ஞானியுடன் நடந்த தூரம்

வருடம் பற்றிய ஞாபகக் குழப்பம். தேதியையும் மாதத்தையும் பற்றிய கலங்கல். இரண்டையும் கடந்து கோவை ஞானி என்ற கி. பழனிச்சாமியை முதலாவதாகச் சந்தித்த ஞாயிற்றுக்கிழமை நினைவின் ஆழத்தில் இன்னும் மின்னுகிறது. கல்லூரி நண்பரும் அன்றைய இலக்கியத் தோழருமான விஸ்வநாதன் (பாதசாரி) காலை யிலிலேயே வீட்டுக்கு வந்து சாயங்காலம் ஞானி நடத்தும் இலக்கியக் கூட்டத்துக்குப் போகலாமென்று சொல்லிவிட்டுப் போயிருந்தார். போக வேண்டுமா வேண்டாமா என்று தடுமாறுகிற விதத்தில் அந்த மாலை நேரத்தை வேறு காரணத்துக்காக ஒதுக்கியிருந்தேன்.
நாங்கள் வசித்த கோவை ராமநாதபுரம் பகுதியில் பங்கஜா ஆலை இருக்கிறது. நீண்ட காலம் மூடிக்கிடந்த ஆலை அப்போதுதான் மீண்டும் திறக்கப்பட்டு இயங்க ஆரம்பித் திருந்தது.அந்த ஆலைத் தொழிலாளர்களின் குடியிருப்பும் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில்தான். நிர்வாகக் குளறுபடிகளால்குடியிருப்புக் கான அடிப்படை வசதிகள் இல்லாமலிருந்தன. குடிநீருக்காக அந்த வீட்டுப்பெண்கள் எங்கள் தெருவில் குழாயுள்ள வீடுகளைத் தான் நம்பியிருந்தார்கள். எங்கள் வீடும் அதில் ஒன்று. மாலையில் தண்ணீர் விநியோகிக்கப்படும்போது வீட்டுப் பொடக்காலியில் பித்தளை, தகரம், எவர்சில்வர் குடங்களும் வெவ்வேறு பருவத்தைச் சேர்ந்த பெண்களுமாகக் குழுமியிருப்பார்கள். அவர்களில் என்னோடு அன்பாகப் பேசும் ரேணுகா அக்காவும் ஒருத்தி. அவர்கள் வீட்டுக்கு எல்லா சனி,ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரும் உறவுக் காரப் பெண் காஞ்சனா தண்ணீர் பிடிக்க ரேணுகாக்காவுடன் வருவாள். ஜெய சுதா என்ற நடிகையின் சாயல் அவளுக்கு இருந்தது. மீசை அரும்பத் தொடங்கிய பள்ளி நாட்களிலிருந்து பார்த்து வந்த அந்தப் பெண் மீதான ஈர்ப்பைச் சொல்லக் காத்திருந்தேன். அப்போது அதற்கான தகுதி எனக்கு வந்துவிட்டிருந்தது. புகுமுக வகுப்பை முடித்திருந்தேன். கல்லூரியில் மாணவர்களுக்காக மாணவர்களால் நடத்தப்பட்ட மாணவர் பத்திரிகையில் கதையும் கவிதைகளும் எழுதியிருந்தேன். உள்ளூர் நாளிதழில் கதை வெளியாகி அதற்கு சன்மானம் வாங்கியிருந்தேன். தாமரையில் இரண்டு கதைகள் வெளியாகி தலையில் முளைக்கத் தொடங்கி யிருந்த இலக்கியக் கொம்பை அவ்வப்போது வருடிக் கொண்டிருந்தேன். வேறு கல்லூரியில் சேருகிற ஆசையில் ஒரு வருடத்தை அர்ப்பணம் செய்து வீட்டில் உட்கார்ந்து இலக்கியம் படித்துக்கொண்டும் படைத்துக்கொண்டுமிருந்தேன்.ஜெயகாந்தன் புத்தகங்களைத் தேடி வாங்கிச் சேமித்திருந்தேன். ஜெயகாந்தன் வாசகரான காஞ்சனாவின் நைனாவுக்குச் சில புத்தகங்களைஇரவல் கொடுத்திருந்தேன். அடுத்த ஜெயகாந்தன் புத்தகத்தைக்காஞ்சனாவிடம் கொடுக்கும்போது அதன் பக்கங்களுக்குள் என் காதலைச் சொல்லும் கவிதையை எழுதிச் செருகிவைக்க யோசித்திருந்தேன். ஜெயகாந்தனைப் போலவே வாசகர் நைனாவும் புதுக்கவிதையை ஏற்றுக்கொள்ளாதவர் என்பதால் காதல் கவிதையை அறுசீர் விருத்தத்தில் யாப்பதா அல்லது எண்சீர் விருத்தத்தில் யாப்பதா என்ற குழம்பிக்கொண்டிருந்தேன். காதலுக்கு எண்சீர் விருத்தம் தோதானதல்ல என்று இலக்கண அறிவு உறுத்தியது. நவீன உணர்வுள்ளவன் மரபு வடிவத்தை நாடுவது பொருத்தமற்றது என்று புத்திலக்கிய மனம் வலியுறுத்தியது. கடைசியில் காதல் புதுக்கவிதையாக மலர்ந்து கோகிலா என்ன செய்துவிட்டாள்? தொகுப்பில் ஒடுங்கி மணத்தைக் கசிய விட்டுக் கொண்டிருந்தது. அந்த ஞாயிற்றுக்கிழமை மாலையைத்தான் புத்தகத்தை ஒப்படைக்கத் தேர்ந்தெடுத் திருந்தேன். ஆனால் விஸ்வநாதன் வந்து அழைத்தபோது இது எதுவும் நினைவுக்கு வரவேயில்லை. காஞ்சனா தண்ணீர் பிடிக்க வருவதற்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறியிருந்தேன்.
வடகோவையில் ஒரு தனிப் பயிற்சிக் கல்லூரியில்தான் கூட்டம்.இருபதுக்கும் குறைவான எண்ணிக் கையில் ஆட்கள் இருந்தார்கள். ஒரு புத்தக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஜன சுந்தரம் என்பவர் பேசிக்கொண்டிருந்தார். அது ஒரு மலையாளப் புத்தகம். பேராசிரியர் குப்தன் நாயர் எழுதிய இசங்ஙள்க்கு அப்புறம் (இசங்களுக்கு அப்பால்) என்ற கட்டுரைத் தொகுதி. அதிலிருந்த கட்டுரைகளைப் பற்றிய விமர்சனமும் தொடர்ந்து விவாதமுமாகக் கூட்டம் அமைந்திருந்தது. இடையில் ஞானியின் கட்டுரை ஒன்றும் குறிப்பிடப்பட்டது. இ.எம்.எஸ் சின் இலக்கிய விமர்சனக் கோட்பாடு களை விமர்சித்து ஞானி எழுதிய கட்டுரையை அலசிக் காயப் போட்டார்கள். ஞானி பதிலுரை வழங்கினார். நிதானமான குரலில் தன் தரப்புகளை முன்வைத்தார். படைப்பு என்பது ஓர் உற்பத்திப் பொருளல்ல; அது ஒரு மானுடச் செயல்பாடு. அதை ஆணியையும்திருகையும் போன்ற சரக்காகப் பார்ப்பதே மார்க்சியக்கண்ணோட்டத்துக்குப் பொருந்தாதது. மார்க்சியம் கேவலம் சோற்றுப் பாட்டுக்கான பிரச்சாரமல்ல; அது ஆகப் பெரிய தத்துவம்.
இந்த வாசகங்களாக அல்ல; ஆனால் இந்த வாசகத்தின் பொருளில் தான் அவருடைய பேச்சு இருந்தது. அதில் இடம்பெற்று இன்றும் நினைவில்தங்கியிருக்கும் மேற்கோள் ‘பட்டுப்பூச்சி என்ன காரணத்துக்காகப் பட்டிழையை உருவாக்குகிறதோ அதே காரணத்துக்காகத்தான் மில்டன் பாரடைஸ் லாஸ்ட்டை எழுதினார்’. படைப்பாற்றல் பற்றிய மார்க்ஸின் கூற்றை முதன்முதலாகக் கேட்டது ஞானி வாயிலாகத்தான். அவர் பேச்சிலும் எழுத்திலும் அடிக்கடிப் பயன்படுத்தும் ஒரு வார்த்தையும் அதன்பிரயோகமும் அன்று மனதில் பதிந்தன. ‘கேவலம்’ என்ற சொல்லைஅவரளவுக்கு யாராவது புழங்கியிருப்பார்களா என்று இப்போதும்தோன்றுகிறது. நமக்கு அறிமுகமாகியுள்ள எதிர்மறைப் பொருளிலல்ல; வெறும் என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் அதைப் பயன்படுத்தினார். ‘மனிதர்கள் கேவலம் புழுக்களா?’ என்ற கேள்வியில் வரும் தொனியிலான பிரயோகம்.
கூட்டம் முடிந்து விவாதச் சலசலப்புக் கலையாமலேயே போய்எல்லாருடனும் தேநீர் அருந்தியதும் பின்னர் ஞானியுடன் அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டே நடந்து இரண்டோ மூன்றோ கிலோ மீட்டர்தொலைவிலுள்ள காட்டூர் காளீசுவரர் நகரிலிருந்த அவர் வீட்டை அடைந்ததும் இலக்கியப் பயணத்தின் ஆரம்பம். அவர் வீடு வரைக்கும் உடன் வந்த விஸ்வநாதன் எங்கள் வீட்டின் முன்னால் நிறுத்தியிருந்த சைக்கிளை எடுக்க வேண்டும் என்னும் எச்சரிக்கை யுணர்வுடன் பஸ் ஏறினார். ‘இது தான் வீடு, எப்போது வேண்டு மானாலும் வரலாம்’ என்று விடை கொடுத்தார் ஞானி. அதன் பிறகு அந்த வீட்டுக்கு எத்தனை முறை போயிருப்பேன் என்பது எண்ணிக் கையில் அடங்காத கணக்கு. வீட்டை அடைய மிச்சமிருந்த தூரத்தை அந்த இரவில் இலக்கியக் கிறக்கத்துடன் நடந்து வந்து சேர்ந்தேன். புத்தகத்துக்குள் வைத்திருந்த கவிதையை ஒரு நொடி ஆதுரத்துடன் படித்துவிட்டுக் கசக்கிப் போட்டேன். அந்தப் பதின் வயதில் இலக்கியம் அவ்வளவு சிக்கலில்லாத ஈர்ப்பாகத் தோன்றியது. அதை மறைமுகமாகப் பேணியதில் ஞானிக்குப் பங்குண்டு என்று எண்ணுகிறேன். அதன் பிறகு இணக்கமாகவும் அவ்வப்போதுபிணக்குடனும் அந்த உறவு நீடித்தது, நிரந்தரமாகக் கோயம் புத்தூரை விட்டு வெளியேறும் காலம் வரைக்கும். ஞானியுடன் நான் நடந்த தூரம் ஏறத்தாழப் பத்தாண்டுகள். அந்தக் காலப் பகுதியில் கிடைத்த நட்புகள், மேற்கொண்ட வாசிப்புகள், வாய்த்த அனுபவங்கள், அடைந்த பாதிப்புகள்தாம் இன்றைய நான் என்று நம்புகிறேன். இப்படிச் சொல்லக்கூடிய சிலராவது தமிழிலக்கியச் சூழலில் இருப்பார்கள் என்பது அனுமானம். அவர்கள் எல்லாரும் ஞானிக்குக் கடமைப்பட்டவர்கள்.
o
சென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் கோவையில் இயங்கிய இலக்கியச் செயல்பாட்டு மையங்களில் ஒன்றாக இருந்தது ஞானியின் நண்பர் வட்டம். வேறு சிறுசிறு அமைப்புகள் இருந்த போதும் இலக்கியத்தைச் சீரிய பார்வையுடன் அணுகியது இந்த வட்டம்தான். அதன் இலக்கிய ஈர்ப்பு மையமாக ஞானி இருந்தார். இவரது வீடு இலக்கியவாதிகளின் முகாமாகவும் இலக்கிய ஆர்வலர்களின் பயிற்சிக் கூடமாகவும் இருந்தது.
தனி உரையாடல், இலக்கியக் கூட்டங்கள், பத்திரிகை முயற்சிகள் போன்ற செயல்கள் மூலம் கோவையில் இலக்கியச் சூழலுக்குரிய தட்பவெப்ப நிலையை உருவாக்கியிருந்தார். மாதத்தின் எல்லா இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளிலும் வடகோவையிலுள்ள தேசிய தனிப் பயிற்சிக் கல்வியகத்தில் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும். புத்தக அறிமுகங்கள், விமர்சனங்கள், கலந்துரை யாடல்கள், இரங்கல்கள் என்று கூட்டத்தின் போக்கு இருக்கும். இலக்கியத்தின் வாயிலாக நண்பர்களைப் பெற்றது இந்தக் கூட்டங்களில்தான். அன்று நிமல விஸ்வநாதன் என்றுஅறியப் பட்டிருந்த பாதசாரி, அறிவன், அமரநாதன். யமுனா புத்திரன், சி.ஆர்.ரவீந்திரன், சூரியகாந்தன், திலீப்குமார், ஆறுமுகம், அக்கினிபுத்திரன், பா.செயப்பிரகாசம், குறிஞ்சி, இளமுருகு, ஜன சுந்தரம், கோவைவாணன் என்ற துரை, யுகசிற்பி என்ற சுரேந்திரன், டால்ஸ்டாய் மொழிபெயர்ப்பாளரான டி.சி. ராமசாமி, மார்க்சிய நூல்களின் மொழிபெயர்ப்பாளரான சிங்கராயர், அபூர்வமாக விஜயா பதிப்பகம் வேலாயுதம், சமயங்களில் ஈரோட்டிலிருந்து ஓடை பொ. துரையரசன், முத்துப்பொருநன் என்று இலக்கிய ஆர்வத்தின் பன்முகங்களைப் பார்த்ததும் பழகியதும் இந்தக் கூட்டங்களில்தாம்.
ஒரு கட்டத்தில் நானும் பேச்சாளானாக உருமாறியிருந்தேன். கணிசமான கூட்டங்களில் எழுதி வாசித்திருக்கிறேன். இரண்டு கூட்டங்கள் இப்போதும் நினைவில் இருக்கின்றன. ஒன்று - ஓ.வி. விஜயனின் தர்மபுராணம் நாவலை அறிமுகப்படுத்திப் பேசிய கூட்டம். அதைச் சீருடை அணியாத ஒரு போலீஸ்காரர் குறிப்பெடுத்தார். மறுநாள் விசாரணைக்கு அழைத்தார்கள். அது நெருக்கடிநிலைக் காலம். இன்னொன்று - தி.ஜானகிராமனின் மறைவையொட்டி நடந்த இரங்கல் கூட்டம். எழுதிவைத்தபேச்சை அழுகையுடன் வாசித்தேன். இந்த மாதாந்திரக் கூட்டங்கள் அல்லாமல் எல்லா வருடமும் பள்ளி விடுமுறைக் காலத்தையொட்டி ஒரு சிறப்புக் கூட்டம் நடைபெறும். இந்தச் சிறப்புக் கூட்டங்களில் தான் சி.சு. செல்லப்பாவையும் சுந்தர ராமசாமியையும் அசோக மித்திரனையும் வண்ணநிலவனையும் முதன் முதலாகப் பார்த்தேன். மலையாளக் கவிஞர்களான அய்யப்ப பணிக்கர், கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் ஆகியவர்களின் வருகையை யொட்டியும் சிறப்புக்கூட்டங்கள் கூடின.
இப்போது தகவல்களாகத் தென்படும் இந்த விவரங்கள் நிகழ்வு களாக நடந்தேறிய தருணங்கள் சொல்லி மாளாத உத்வேகத்தைக் கொடுத்தன. அதே உத்வேகத்தை ஞானியுடனான உரையாடல் களும் அவருடைய சொற்பொழிவுகளும் தந்திருக்கின்றன. சரியாகச் சொன்னால் ஞானி என்ற எழுத்தாளரைவிடவும் ஞானி என்ற பேச்சாளர் கூடுதல் இலக்கியத் தன்மை கொண்டவர். ஒரு படைப்பைப் பற்றிய அவருடைய சிந்தனைகள் பேச்சில் சோபித்த அளவுக்கு எழுத்தில் வரவே இல்லை. ஜே. கிருஷ்ணமூர்த்தியைப்பற்றி அவர் பேசிக்கொண்டிருந்தவை சிந்தனைக்குள் பெரும் கதவுகளை விரியத் திறந்துவைத்தன. ஆனால் அதே பொருள் பற்றி அவர் எழுதிய மணல் மேட்டில் ஓர் அழகிய வீடு என்ற நூல் ஜே. கிருஷ்ணமூர்த்திக்கு வெகு அப்பால் இருந்தது. பிரமிள் பற்றிய கட்டுரையும் அதே தன்மையில்தான் அமைந்திருந்தது. பிரமிளின் எளிதில் வசப்படாத சிலகவிதைகளை நேர்ப்பேச்சில் ஞானி விளக்கியபோது அடைந்த அனுபவம் ஓர் அரும்பு கட்டவிழ்ந்து மலராக விரிவதை உணரும் பரவசத்தைத் தந்தது. ஆனால் அந்தக் கவிதைகளைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரை - ‘தர்மூ சிவராமு கவிதைகளினோடே ஒரு நெடும் பயணம்’ - மணற் சரிவில்காலிடறிய திகைப்பையே அளித்தது.
இலக்கிய வாழ்க்கையின் எல்லாக் கட்டங்களிலும் ஞானி தன் கைவசம் ஒரு சிறு பத்திரிகையை வைத்திருந்திருக்கிறார். காத்திரமான இலக்கிய நடவடிக்கைகளைச் சிற்றேடுகளின் மூலமே மேற்கொள்ள முடியும் என்ற சீரிய அறிவாளர்களின் அல்லது இலக்கியவாதிகளின் மரபணுக்குணம் அது. அறுபதுகளின் இறுதியில் அல்லது எழுபதுகளின் தொடக்கத்தில் ஆதி என்ற புலவர் இராசியண்ணன் துணையுடன் புதிய தலைமுறை என்ற இதழை நடத்தியிருக்கிறார். எஸ்.என். நாகராசனும் எஸ்.வி. ராஜதுரையும்அதன் பங்கேற்பாளர்கள். இலக்கியம், மாற்றுச் சிந்தனை ஆகியவற்றுக்குக் களமாக இருந்த அந்த இதழ் மரபின் தொடர்ச்சி யாகவே ‘வானம்பாடி’ இயக்கத்தின் தோற்றத்தையும் அந்த விலையிலாகக் கவிமடலின் பரவலையும் கணிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். வானம்பாடி இயக்கத்தின் ஆரம்பகர்த்தர்கள் ஞானியும் முல்லை ஆதவனும்தான். ஆனால் இயக்கம் பிளந்த பின்னர் ஞானி மறக்கப்பட்டார். ‘வெளிச்சங்கள்’ என்ற பெயரில் வெளிவந்த வானம்பாடிக் கவிதைத் தொகுதி அதை ஆவணப் படுத்தியிருக்கிறது. வானம்பாடியின் இழப்பை ஈடுகட்ட வேள்விஎன்ற இதழையும் ஞானி நடத்தினார். வானம்பாடியின் சிறகடிப்பில்வேள்வியின் கனல் அவிந்துவிட்டது. பின்னர் பரிமாணம். தனிச்சுற்றிதழாக வெளியான அது சில இதழ்களோடு முடிவடைந்தது.
தொடர்ந்து வெளிவந்த நிகழ்தான் ஞானியால் நீண்ட காலம் நடத்தப்பட்ட பத்திரிகை. அதன் ஆரம்ப காலத் தலைப்பெழுத்தும் முதலிரண்டு இதழ்களின் ஆசிரியத்துவமும் என்னுடையது என்று யோசிக்கும்போது பெருமிதத்தைவிட ஞானியின் பெருந்தன்மை தான் முன்நிற்கிறது. மனுஷ்யபுத்திரன், ஜெயமோகன், சல்மா போன்றோரின் படைப்புகள் நிகழில் வெளியானது கூடுதல் இலக்கியக் கவனத்துக்குத் துணை புரிந்தது. ஞானியின் இந்த முயற்சிகளெல்லாம் ஓர் இலக்கியத் தோழமையின் வெளிப்பாடுகள். ஒரு சாதாரணப் பள்ளித் தமிழாசிரியரான அவரின் இந்தப்பங்களிப்பு எந்தப் பல்கலைக்கழக இலக்கியத் துறையின்சாதனையையும்விட அழுத்தமானது. விரிவானது.
o
மேற்கத்திய நாடுகளில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி - ஐம்பதுகளும் அறுபதுகளும் - கொந்தளிப்பும் எழுச்சியுமாக இருந்தது. அதுவரை பேணப்பட்ட கருத்தாக்கங்கள் மறு விசாரணைக்குள்ளாயின. அரசியல் கொதிப்புகளும் கலாச்சார மாற்றங்களும் வாழ்வியல் சிந்தனைகளை உலுக்கின. அந்த உலுக்கல்கள் இந்தியச் சூழலில் கொஞ்சம் தாமதமாகஎழுபதுகளில் அதிர்வுகளை ஏற்படுத்தின. குறிப்பாக மார்க்சியவளாகங்களில் பெரும் விவாதங்கள் எழுந்தன. அதன் தமிழ் விளைவுதான் ஞானியின் சிந்தனைகள். அவர் மார்க்சியத்தை வெறும் சமூக அறிவியலாகவோ அரசியல் திட்டமாகவோ பார்க்கவில்லை. அதை முழுமையான தத்துவக் கோட்பாடாக முன்வைத்தார். அதன் முதன்மையான சிக்கல் மார்க்சியத்தை எப்படிப் பார்ப்பது என்பதுதான்.
ஒரு சமூகத்தின் இருப்புக்கும் மேம்பாட்டுக்கும் பொருளாதாரமேஅடிப்படை. பொருளுற்பத்தி, விநியோகம், உற்பத்தி உறவுகள் இவையே ஒரு சமூகத்தை வடிவமைக்கின்றன. அதுவே அடித்தளம். அதன்மீதுதான் பிறமானுடச் செயல்கள் நிகழ்கின்றன. அது மேற்கட்டுமானம். சமூகத்தை முன்னிறுத்தும் ஒரு மார்க்சியர் கவனம் கொள்ள வேண்டியது அடித்தளம் பற்றி மட்டுமே. போராட்டத்தின் மூலம் அடித்தளம் மாற்றப்படுமானால் மேற் கட்டுமானம் தானாகவே மாறிவிடும். இந்த அர்த்தத்திலானமார்க்சியக் கோட்பாடே முன்வைக்கப்பட்டிருந்தது. தமிழ் இலக்கியத் திறனாய்விலும் இந்தப் போக்கே கடைபிடிக்கப் பட்டிருந்தது. இதன் விளைவு மொழியின் முக்கியமான படைப்பாளுமைகள் விலக்கப்பட்டனர். அல்லது பிற்போக்காளர் களாக ஒதுக்கப்பட்டனர்.
மேற்கத்திய மார்க்சியக் கோட்பாடுகளின் அடியொற்றி இங்கும்கையாளப்பட்ட விமர்சனப் போக்குக்கு எதிரான முனையில் இருந்தவர் ஞானி. மேற்கட்டு மானத்தில் உட்படுத்தப்பட்ட பண்பாடு, மதம் ஆகியவை அடித்தளத்தையும் பாதிக்கும் என்ற சிந்தனை ஐரோப்பிய மார்க்சியர்களில் சிலரிடமிருந்தது. இந்திய மார்க்சியர்களில் கே. தாமோதரன், தேவி பிரசாத் சட்டோ பாத்தியாயா, டி.பி. முகர்ஜி போன்றோர் இந்தச் சிந்தனையைக் கொண்டிருந்தவர்கள். ஞானியை அந்த வரிசையில் வந்தவர் என்று சொல்லலாம். பண்பாட்டுக் கூறுகள் சமூக வடிவத்தில் தொடர்ந்துநிலைபெற்றிருக்கும் என்றும் கலாச்சாரம் நிரந்தரமானது என்றும் சொன்ன டி.பி. முகர்ஜியுடன் ஞானியை ஒப்பிடவே எனக்கு விருப்பம். டி.பி. முகர்ஜி இந்திய மரபு என்று வரையறுத்தவற்றைத் தமிழ் மரபு என்று ஞானி மறு ஆக்கம் செய்தார். இந்தக் கோணத்தில்தான் அந்நியமாதல் என்ற கருத்தாக்கத்தையும் முன்வைத்தார். மார்க்சின் கருத்துப்படி மனித உழைப்பு ஒரு படைப்புச் செயல். அது அவனைமகிழ்ச்சியாகவைத்திருப்பது. ஆனால் அந்த உழைப்பு அவனுக்குப்பயனையோ மகிழ்ச்சியையோ அளிக்காத நிலையை முதலாளியம்உருவாக்குகிறது. உழைப்பை மட்டும் வழங்குகிற அவன் அதன்பலனிலிருந்து விலக்கப்படுகிறான். அந்நியப்படுத்தப்படுகிறான். மார்க்சிய ஆய்வுகளிலிருந்து லூயி அல்தூசர் பகுத்தெடுத்த இந்தச் சிந்தனையை ஞானியும் அவரது சகாவான எஸ்.என். நாகராசனும் பரவலான சிந்தனைக்கு விட்டார்கள். அந்நியமாதலின் துக்கத் தையும் அதற்கு எதிரான தனிமனித சமூகக் குறுக்கீடுகளையும் ஆய்வதையே தனது இலக்கியக் கோட்பாடாக ஞானி வகுத்துக் கொண்டார்.
மேற்கத்தியச் சிந்தனையாளர்களில் யூகோஸ்லாவிய மார்க்சியரான மிலோவன் ஜிலாசும் இத்தாலிய மார்க்சியரான அந்தோனியோ கிராம்ஷியும் ஞானியின் முன்னோடிகளாக இருக்கலாம் என்று யூகிக்கிறேன். ஜிலாசின் வாழ்க்கையை பற்றி ஒரு மாலை நேரச் சந்திப்பில் ஞானி பேசிக் கொண்டிருந்தது ஒரு செவ்வியல் திரைப்படம்போல இப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் சோவியத் ஆதரவாளராகவும் ஸ்டாலினின் தோழராகவும் இருந்த ஜிலாஸ் யூகோஸ்லாவிய தேசியப் பிரச்சினையால் ஸ்டாலினுடன் முரண்பட்டார். யூகோஸ்லாவியா சோவியத் யூனியனின் காலனியாக இருந்தால்போதும் என்ற ஸ்டாலின் நிலைப்பாடுதான் ஜிலாசை எதிர்நிலைக்குத் தள்ளியதுஎன்று ஞானி குறிப்பிட்டதாக ஞாபகம்.
ஞானியை வழமையான மார்க்சிய விமர்சகராவும் இலக்கியத்திறனாய்வாளராகவும் மட்டும் சுருக்கிவிட முடியாது. அவரது விமர்சனம் ஒரு பண்பாட்டு ஆய்வாளனுடையது. இலக்கியம் கலைஆகியவற்றுக்கான சமூகத் தேவை பற்றியும் மதத்தின் தேவை பற்றியும் அவர் முன்வைத்த சிந்தனைகள் தமிழில் மார்க்சிய அழகியலுக்கான வாசல்கள். ஆனால் அந்த வாசல்களை தேவைக்கும் அதிகமான தத்துவ முட்டுக்கட்டைகள் போட்டு அனுமதி மறுக்கப்பட்ட பிரதேசமாக மாற்றியவரும் அவர் தான் என்று தோன்றுகிறது. ஒரு கலைப்படைப்பு அளிக்கக்கூடிய அனுபவத்தையும் அதிலிருந்து பெறக்கூடிய நுண் விவரங் களையும் அதன் பயனாளன் பெற உதவுவதற்கு மாறாக மார்க்சியஅடிப்படையில் உருவாக்கிய கருத்துநிலையை முன்வைத்து விடுகிறார் ஞானி. உதாரணத்துக்கு ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலை அவர் மதிப்பிடுவது. ஹென்றி என்ற மையக் கதாபாத்திரத்தை வைத்துத்தான், அவரது விமர்சனக் கருவிகள் செதுக்கிச் செதுக்கி அந்தப் பாத்திரத்துக்கு ஒருரிஷிக்கோலத்தைக் கொடுத்துவிடுகின்றன. அவர் எதிர்பார்க்கும் ஹென்றி அது. ஆனால் அதுவல்ல படைப்புக்குள் நாம் சந்திக்கும் ஹென்றி. ஞானியின் கருத்துக்கிதமான சில அம்சங்கள் உள்ளவன் என்பதனாலேயே ஹென்றி அப்படியாக்கப்படுகிறான். இதே துரதிர்ஷ்டம் ஜோசப் ஜேம்சுக்கும் (ஜே.ஜே: சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி), அழகிரிக்கும் (பிறக - பூமணி) நேர்ந்ததை ஒரு வாசகனாகத் துக்கத்துடன் உணர்ந்திருக்கிறேன். கலையும் படைப்பும் கோட்பாட்டை ஏய்த்துத் தப்பி நிற்கவே விரும்பும்என்ற பாடத்தை ஞானியின் விமர்சனம் பலமுறையும் எச்சரிக்கையாக உணர்த்தியிருக்கிறது.
o
இங்கே விரிவாகக் குறிப்பிட்டுச் சொன்ன எந்த விமர்சனத்தையும் நான் ஞானியுடனான நாட்களில் முன்வைத்ததில்லை. அவர் கருத்துக்கு மாற்றான கருத்துகளை வாசிப் பின் மூலமும் சிந்தனையின் மூலமும் உருவாக்கி வைத்துக்கொள்வதைத் தவிர விவாதத்தில் ஈடுபட்டதில்லை. வெளிக் காட்டிக்கொள்ளாத ஆசிரியப் பற்று காரணமாக இருக்கலாமோ என்னவோ? தெரியவில்லை. எண்பதுகளின் பிற்பகுதியில் அவருடனானதொடர்புகள் மெல்லக் கழன்றுபோயின. வாழிடம் மாறியதும் தொடர்புகள் கிட்டத்தட்ட அறுபட்டேபோயின. அதற்குள் சோவியத் யூனியன் உடைந்து போயிருந்தது. மார்க்சியம் காலாவதியாகி விட்டது என்ற முழக்கங்கள் எழத் தொடங்கியிருந்தன. தொண்ணூறுகளில் கோர்ப்பச்சேவ் பெரஸ்த்ரோய்க்கா, கிளாஸ்நாஸ்ட் என்று உச்சரிக்கத் தொடங்கிய போதே அதன் பின் விளைவுகள் இன்னதாக இருக்கும் என்று முன்கூட்டிச் சொன்னவர் ஞானி. அப்படி உருவான வெற்றிடத்தில் அவர் தமிழ்த் தேசியத்தை நிறுவிக் கொண்டார் என்று சொல்லலாம். அதற்காகவே ஒருசிற்றிதழையும் - தமிழ் நேயம் - தொடங்கினார். தொண்ணூறு களுக்குப் பிந்தைய அவருடைய சிந்தனைகளையும் எழுத்துக் களையும் என்னால் பின் தொடர முடியவில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அவருக்குப் பார்வையில்லை. அதுஅவருடைய செயல்பாட்டுக்குத் தடையாகவும் இல்லை. முன்னைவிடஅதிகமாக வாசிக்கிறார். அதைவிட அதிகமாக எழுதுகிறார். இதுவரைக்கும் ஞானி பல லட்சம் பக்கங்களை வாசித்திருக்கிறார். சில ஆயிரம் பக்கங்களைக் கொடுத்திருக் கிறார். இவை தமிழ்ச் சூழலில் என்ன விளைவுகளை ஏற்படுத்தின என்று அறிய ஆர்வமாக இருக்கிறது.
பொய்யான மௌனமோ தந்திரமான புறக்கணிப்போதான் பதிலாகஇருக்குமென்றாலும் ஆசைப்படுவதில் தப்பில்லை. கல்லூரிப்பருவத்துக்கு வந்த பின்னரும் பள்ளியில் தமிழ் கற்பித்த ஆசிரியருடன் எனக்கு உறவு இருந்தது. அவர் சொன்னார்: ‘பழனிச்சாமிதானே, அவர் தமிழ்ப் பகைவரான தமிழாசிரியர்’. மார்க்சிய ஆதரவாளரான கல்லூரி ஆசிரியர் சொன்னார்: ‘அவர் மார்க்சியத்துக்கு எதிரானவர்’. ஞானியின் இருப்பின் இருமுனைகள் எவையோ அவற்றையே அவர்கள் அசைத்தனர். அவர்கள் மட்டுமல்ல; பண்டிதத் தமிழ் அறிஞர்களும் வறட்டு மார்க்சியர்களும் இதே பொதுப் புகாரை அவர் மேல் சொல்லிக் கேட்டதுண்டு. அந்த அளவுக்கு நவீன மனப்பான்மையுடையவர் ஞானி. தமிழுக்குப் பதிலாக ஆங்கிலத்தில் எழுதியிருப் பாரானால் இன்னும் பெரிய ஆளுமையாகக் கொண்டாடப்பட்டிருப்பார் என்று தோன்றுவ துண்டு. பதின்பருவத்தில் இலக்கிய ஆர்வத்துடன் ததும்பிக் கொண்டிருந்த ஓர் இளைஞனுக்குக் கிடைத்த வழிகாட்டி என்பதே ஞானியின் மீதான என் மரியாதை. அந்த வயதில் அப்படி ஒருவர் வாய்த்தது எனது நல்லூழ். 2009 ஆம் ஆண்டுக்கான இயல் விருது அவருக்கு அளிக்கப்படுகிறது.
அறியப்பட வேண்டிய முறையில் அறியப்படாமலும் அங்கீகரிக்கப் பட வேண்டிய வகையில் அங்கீகரிக்கப்படாமலும் போன இலக்கிய ஆளுமை கோவை ஞானி என்று எப்போதும் யோசிப்பதுண்டு. அந்தக் குறையை இந்த விருது போக்குகிறது. ஓர் இலக்கிய ஆளுமை கௌரவம் பெறும்போது அவருடைய வாசகனுக்கும் பெருமிதம் ஏற்படும். அதைவிடவும் அதிகமான பெருமிதம் அவரால் ஆற்றுப் படுத்தப்பட்ட இலக்கிய ஆர்வலனுக்கு இருக்கும். எனக்கிருப்பது கூடுதல் பெருமிதம். அந்த உணர்வில் ஞானிக்கு வாழ்த்துகள்.
கனடா தமிழ்த் தோட்டத்தின் வாழ் நாள் சாதனைக்கான இயல் விருது ஞானிக்கு 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதையொட்டி எழுதி, காலச்சுவடு இதழில் வெளிவந்த கட்டுரை
July 11, 2020
நீள் கவிதை
நசிகேதன்
தொன்மத்தின் நவீனம்

பி.ரவிகுமார் மலையாளத்தில் அபூர்வமான கவிஞர். அரியவர் என்ற பொருளில்தான் அபூர்வம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். அபூர்வம் என்ற சொல்லுக்கு அரியது என்பதோடு வேறு பல அர்த்தங்களும் உள்ளன. முந்தையதன் தொடர்ச்சி இல்லாதது, புதுமையானது, தற்செயலாக நிகழ்வது, எப்போதாவது சம்பவிப்பது என்று பலவிதமான பொருள்கள் இருக்கின்றன. இந்த எல்லா அர்த்தங்களும் ரவிகுமாருக்குப் பொருந்தும்.
கவிஞர் என்ற அடைமொழியுடன் குறிப்பிட்ட போதும் ரவிகுமார் வழக்கமான கவிஞர் அல்லர்.அவருடைய கவிதை என்று எதுவும் இதழ்களில் வெளியாகிப் பார்த்ததில்லை. கவிதை எழுதுபவராக அல்ல; கவிதைப் பிரக்ஞையுடன் இருப்பவர் என்பதாலேயே அவரைக் கவிஞராகக் கருதுகிறேன். இசைதொடர்பாக அவர் எழுதியிருக்கும் கட்டுரைகள் சிலவற்றில் கவிதைக்குரிய தருணங்களையும் கவிக் கூற்றுகளையும் வாசித்து வியந்திருக்கிறேன். இவை தவிரக் கவிதையாக அவர் எழுதியிருப்பவை இரண்டு உருப்படிகள் மட்டுமே. எம்.டி.ராமநாதன், நசிகேதன் ஆகிய இரண்டு நீள் கவிதைகள். அவரைக் கவிஞர் என்று காணவும் அபூர்வமானவர் என்று சிறப்பிக்கவும் இந்த இரண்டு கவிதைகளும் போதுமானவை. நீள்கவிதைகள் என்ற அளவிலேயே அவை வழக்கத்துக்கு மாறானவை; அபூர்வமானவை. அவற்றின் பேசுபொருள்களும் முன்னுதாரணமற்றவை. முதலாவது கவிதை, இசைப் பெருங்கலைஞரான எம்.டி.ராமநாதனின் வாழ்க்கையைச் சித்தரிப்பது. புராணப் பாத்திரமான நசிகேதனின் அறிவுத் தேடலை விவரிப்பது இரண்டாவது கவிதை. ஓர் இசைக் கலைஞரின் வாழ்க்கையைச் சொல்லும் கவிதை என்ற அளவிலும் தொன்மக் கதையொன்றை நவீன விழிகளால் பார்க்கும் கவிதை என்ற அளவிலும் இவை அபூர்வ நிகழ்வுகள். வெகுஜன இதழ் கலாகௌமுதி யில் தொடராக இந்தக் கவிதைகள் வெளி வந்தன என்பதும் அரியது.
கவிதைகளுக்கான மையப் பொருளைத் தேர்ந்தெடுப்பதில் கடைப்பிடிக்கும் அதே அக்கறையைக் கவிதையாக்கத்திலும் ரவிகுமார் பின்பற்றுகிறார். அவரிடம் கவிதைகள் சொற்களால் உருவாவதில்லை; மையப் பொருள் உயிர்ப்புப் பெறும் தருணமே கவிதையை நிர்ணயிக்கிறது. சொற்களால் சுட்டப்படும் சொற்களை மீறிய உணர்வே கவிதையாக உருக்கொள்கிறது. எளிய உரைநடையில் கவிதையின் சாத்தியங்களைக் கைவசப் படுத்துகிறார் ரவிகுமார். கவிச்சொற்கள் இல்லாமலே கவிதையை மேலெழச் செய்கிறார். இந்த இயல்பு காரணமாகவும் இவை அபூர்வங்களாகின்றன.
ரவிகுமாரின் முதலாவது நீள் கவிதை ‘எம்.டி.ராமநாதன்’ 2004 இல் நூலுருவம் பெற்றது. தொடர்ந்து அதன் ஹிந்தி மொழிபெயர்ப்பு வெளிவந்தது. எழுத்து காலக் கவிஞரும் மும்மொழி வல்லுநருமான மா.தக்ஷிணாமூர்த்தி ஆங்கிலத்திலும் தமிழிலும் மொழிபெயர்த்தார். ஆங்கில மொழிபெயர்ப்பை 2015 இல் ரைட்டர்ஸ் ஒர்க்ஷாப், கல்கத்தா வெளியிட்டது. இரண்டில் முன்னரே முடிந்திருந்தபோதும் தமிழ் மொழிபெயர்ப்பு உடனடியாக நூலாகும் வாய்ப்பு அமையவில்லை. அந்தத் தாமதத்துக்கு நானும் ஒரு காரணம். கவிதை நூல், அதுவும் மொழியாக்க நூல், அதிலும் மிகச் சின்ன அளவில் மட்டுமே ஆராதகர்களைக் கொண்டவரான எம்.டி.ராமநாதனைப் பற்றிய நூல் எந்த அளவுக்கு வாசகர்களிடையே வரவேற்கப்படும் என்ற சந்தேகமே தாமதத்துக்கு முதன்மையான காரணம். எனினும் காலச்சுவடு பதிப்பகம் சென்ற ஆண்டு அதை (2019) நூலாக வெளியிட்டது. நான் செய்ய விரும்பிக் கை நழுவவிட்ட மொழியாக்கம் அது. நூலுக்கான முன்னுரையில் இதைக் குறிப்பிட்டு மிருக்கிறேன்.
எம்.டி.ராமநாதன் தொடராக வெளிவந்து முற்றுப் பெற்ற சந்தர்ப்பத்தில் ரவிகுமாரிடம் விளையாட்டாக, ‘இதுமாதிரி இன்னொரு கவிதையை நீங்கள் எழுதினால் அதை நான்தான் தமிழில் மொழிபெயர்ப்பேன்’ என்று சொன்னேன். அப்படிச் சொன்னபோது விளையாட்டு வினையாகிவிடும் என்று எதிர்பார்க்கவில்லை. எம்.டி.ராமநாதன்கவிதைக்கு மலையாளத்தில் கிடைத்த பாராட்டும் ஹிந்தி, ஆங்கில மொழியாக்கங்களுக்கு முன்னின்ற எதிர்பார்ப்பும் ரவிகுமாரை உந்தியிருக்க வேண்டும். ஒருவேளை என்னுடைய விளையாட்டு வாக்குறுதியும் தூண்டுதலாக இருக்கலாம்.முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மனதுக்குள் தேக்கி வைத்திருந்த நசிகேதன் நீள் கவிதையை எழுதி முடித்து, 2008 இல் கலாகௌமுதி இதழிலேயே தொடராகவும் வெளியிட்டார். அடுத்த ஆண்டே நூலாகவும் வெளிவந்தது. நூலின் பிரதியை அன்பளிப்பாகக் கொடுத்து விட்டு என் வாக்குறுதியையும் நினைவு படுத்தினார்.
‘உடனே வேண்டாம். நிதானமாகவே செய்யுங்கள். ஆனால் கவிதையின் தமிழாக்கத்தை நீங்கள்தாம் செய்தாக வேண்டும்’ என்றார். என்னுடைய வார்த்தைகளுக்குள் நானே மாட்டிக் கொண்டேன். அந்த வாக்குறுதி வலையை அவ்வப்போது பார்ப்பதிலேயே வருடங்கள் கழிந்தன. அதற்குள் நசிகேதன் ஹிந்தி, சமஸ்கிருதம், போலிஷ் மொழிகளில் பெயர்க்கப் பட்டது. ‘ஹிந்தியில் வெளிவந்து விட்டது, போலிஷ் மொழிபெயர்ப்பு முடிந்து விட்டது. சமஸ்கிருத பரிபாஷ தயாராகி விட்டது’ என்று ரவிகுமார் சொல்லும்போதெல்லாம் ஆவேசத்துடன் சில பக்கங்களை மொழிபெயர்ப்பேன். பிறகு கிடப்பில் போடுவேன். இதற்கிடையில் நசிகேதன் தமிழாக்கத்தில் என்னுடைய போட்டியாளராக வரவிருந்த மா. தக்ஷிணாமூர்த்தி அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து முடித்தார். அதுவும் ரைட்டர்ஸ் ஒர்க் ஷாப் வெளியீடாக 2019இல் வெளிச்சம் கண்டது. ‘உதவாது இனி ஒரு தாமதம்’ என்ற மனநிலை உருவானது. தமிழாக்கத்தைத் தொடர ஆரம்பித்தேன்.
நினைத்ததுபோல அவ்வளவு விரைவாகவோ எளிதாகவோ தமிழாக்க முயற்சியில் முன்செல்ல முடியவில்லை. என்னுடைய அடிப்படையான இயல்புக்கும் கவிதைப் பொருளுக்குமான விலகலே முக்கிய காரணம். என்னுடைய சிந்தனைக்குள் கவிதையைப் பொருத்திக்கொள்ள எளிதாக முடியவில்லை. இதை என்னுடைய தனிப்பட்ட இடர்ப்பாடு என்பதை விட ஒரு தலைமுறையின் சிக்கலாகவே உணர்ந்தேன்.
இடமும் பின்புலமும் வேறாக இருந்தாலும் ரவிகுமாரும் நானும் ஏறக்குறைய ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள். ஏறத்தாழ ஒரே மாதிரியான அனுபவங்களைக் கொண்டவர்கள். 1970களின் கருத்துலக ஆவேசங்களில் கிளர்ச்சி பெற்றவர்கள். இடதுசாரிச் செயல்பாடுகளின் சக பயணிகள். ரவிகுமார் சிறிய அளவில் நக்சல்பாரி இயக்கத்துடன் இணைந்து நின்றவர். ஓரளவுக்கு இது எழுபதுகளில் இளைஞர்களின் பொது இயல்பாகவே இருந்தது. தொண்ணூறுகளில் இந்த ஈர்ப்பு மறைந்தது. அதுவரை நம்பிய கருத்துக்களும் செயல்பாடுகளும் ‘மாயை’ என்று விளங்கின. மனம் சோர்ந்த நம்பிக்கையாளர்கள் பலரும் வெவ்வேறு திசைகளிலும் தடங்களிலும் சென்றனர். முன்னாள் பாட்டாளித் தோழர் முதலாளியாகவும் ஏலச்சீட்டுக்காரனைக் கழுவேற்றியவர் கந்து வட்டிக்காரனாகவும் அப்பழுக்கில்லாத நாத்திகர் சாயிபாபா பக்தராகவும் வன்முறையே மாற்றத்துக்கான வழி என்று துப்பாக்கி தூக்கியவர் காந்தியவாதியாகவும் மாறினர். காலடி மண் பிளந்தபோது நம்பிக்கை இழந்தவர்களில் சிலர் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டார்கள். சிலர் சந்தேகப் பிராணிகளாகவே அலைந்தார்கள். முன்னதற்கு பி.ரவிகுமாரையும் பின்னதற்கு என்னையுமே உதாரணங்களாக எடுத்துக் கொள்கிறேன். மனிதர்களையும் உலகையும் கடந்த ஒன்றைப் பற்றிய பதில் அவருக்கு இருக்கிறது. மனிதர்களை மீறாத உலகைத் தாண்டாத ஒன்றைக் குறித்த கேள்வி மட்டுமே என்னிடம் எஞ்சியிருக்கிறது. இந்த இரு நிலைகளையும் விளங்கிக் கொள்வதில் சந்தேகம் ஏற்பட்டது.

புல்லாங்குழல் கலைஞர் குடமாளூர் ஜனார்த்தனன், ரவிகுமார், சுகுமாரன்
கடோபநிடதத்தில் இடம் பெற்றிருக்கும் கதை நசிகேதனுடையது. முனிவரான வாஜசிரவஸ் சகல சௌபாக்கியங்களையும் அளிக்கக் கூடியதாகச் சொல்லப் படும் விஸ்வஜித் யாகத்தை நடத்துகிறார். யாகத்தை முன்னிட்டு இரவலர்களுக்குக் கறவைப் பசுக்களுக்குப் பதிலாக மலட்டுப் பசுக்களைத் தானமாகக் கொடுக்கிறார். தந்தையின் அற்ப குணம் மகன் நசிகேதனுக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது. என்னை யாருக்குத் தானம் கொடுப்பீர்கள் என்று கேட்டு அடம்பிடிக்கிறான். அவனை எமனுக்குக் கொடுப்பதாகத் தந்தை சொல்ல எமனைச் சந்திக்கச் செல்கிறான் நசிகேதன். வாழ்வின் பொருள் என்ன என்று அவன் கேட்கும் கேள்விகளை மெச்சிய எமன் அவனை மீண்டும் மண்ணுலகத்துக்கு அனுப்பி வைக்கிறான்.
இந்தப் புராணக் கதைக்குக் காலங்காலமாக வெவ்வேறு வியாக்கியானங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆன்மீக அடிப்படையிலும் மதநம்பிக்கை சார்ந்தும் விளக்கங்கள் அளிக்கப் பட்டிருக்கின்றன. ஆன்மீகவாதிகள் அளிக்கும் விளக்கங்கள் மானுட இருப்பைக் கடந்த கற்பிதநிலைக்குச் செல்கின்றன. மதச்சார்பாளர்கள் சொல்லும் பொழிப்புரைகள் இறைமையைப் பற்றிய அச்சத்தையே முன்வைக்கின்றன. புழக்கத்திலுள்ள இலக்கணப் படியான ஆன்மீகவாதக் கருத்துக்களுடன் எனக்கு உறவு இல்லை. மானுட இருப்பை மீறாத இம்மைசார்ந்த நிலையாகவே ஆன்மீகம் இருக்கும் என்பது என் எண்ணம். சமூக இணக்கத்துகான அமைப்பாக மட்டுமே மதத்தைக் கருதுகிறேன் அதைத் தாண்டி மதம் மனிதனுக்குத் தவிர்க்கவியலாதது; முற்றானது என்ற பிடிவாதம் கொண்டவன் அல்லன். எனவே இந்தக் கவிதையின் புராணச் சட்டகத்துக்குள்ளே நுழையவும் அதன் பொருளைப் பகுத்து அறியவும் இயலவில்லை. ஆசிரியர் இந்தக் கவிதைக்குள்ளும் வெளியிலுமாக எடுத்தாண்டிருக்கும் உப நிடத, புராண நூல்களை மறுவாசிப்புச் செய்தும் இயலாமை நீடித்தது. இந்தச் சிக்கல் மொழிபெயர்ப்புப் பணியை முடக்கியது. ஒரு கட்டத்தில் இது நம்மால் ஆகிற வேலையல்ல என்ற சோர்வும் சூழ்ந்தது.
தொற்றுநோய்க் கால வீட்டுமுடக்கம் படைப்புக்கான மனநிலையைத் தூண்டிவிட்டபோது மீண்டும் நசிகேதன் மொழிபெயர்ப்பைக் கையிலெடுத்தேன். அதற்குத் துணையாக வாசித்த நூல்களிலிருந்து இரு செப்பக் கருவிகள் கிடைத்தன. ‘கவிதை மிக நல்லதேனும் அக் கதைகள் பொய்’ என்ற பாரதி வரியும் ‘எல்லாவற்றையும் காணுகின்ற கண்ணைக் கண் காண்பதில்லை ‘என்ற நாராயண குருவின் ‘ஆத்ம விலாசம்’ வரியுமே அந்தக் கருவிகள். பொய்யான கதையின் ஆழத்திலிருக்கும் உண்மையையும் கண்ணைப் பார்க்கும் கண்ணையும் தேடியதில் கவிதை வெளிச்சம் கண்டது. மொழி பெயர்ப்பு எளிதாயிற்று. நசிகேதனை ஆன்மீகக் கவிதை, சமயத் தொன்மம் என்று கொள்வதைவிட சமகால மனித இருப்பின் அலைச்சல் என்று எடுத்துக் கொண்டபோது கவிதை நவீன இயல்புக்கு மாறியது. அதற்கு ஏற்ப மொழியும் திரண்டது.
இடையீடாக இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். கருத்துத் தெளிவுக் காகவே பாரதி பாடல்களையும் நாராயண குருவின் படைப்புகளையும் நாடினேன். தற்செயலாக நிகழ்ந்தது இது. எனினும் அந்தத் தருணத்தில் இருவருக்கும் இடையிலிருந்த ஒற்றுமைகள் நினைவுக்கு வந்தன. இருவரும் ஆன்மீகவாதிகளாகக் கருதப்படுபவர்கள். அத்வைதச் சிந்தனையாளர்கள். புலனாகாத விண்ணில் அல்ல; கண்முன் காணும் உலகில்தான் மனிதனின் மேன்மைநிலை என்று கருதியவர்கள். மண்ணில் தெரியுது வானம் என்று கவனப்படுத்தியவர்கள். இந்த ஒற்றுமைகள் வியப்பை அளித்தன.
நசிகேதனில் ரவிகுமார் கையாளும் மொழி சம்ஸ்கிருத ஆதிக்கம் மிகுந்தது. வரியமைப்பும் அதையொட்டியது. மலையாளத்தில் அது ஏற்கத் தகுந்தது. ஆனால் இன்றைய தமிழுக்குப் பொருந்தவில்லை. சிருஷ்டி, அக்னி, ஜலம், பிரளயம், போதம், இந்திரியம் போன்ற சம்ஸ்கிருத வார்த்தைகளுக்குப் பதிலாகப் படைப்பு, நெருப்பு, நீர், பெருவெள்ளம், உணர்வு, புலன் என்ற தமிழ்ச் சொற்களே உவப்பானவையாக இருந்தன. தமிழ் வாக்கிய அமைப்பே பெரிதும் கைகூடி வந்தது. தவிர்க்க இயலாத இடங்களில் மட்டுமே சம்ஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்தி யிருக்கிறேன்.
புராணகாலத்தைப் பின்புலமாகக் கொண்ட இந்தக் கதைக்கும் கவிதைக்கும் நிகழ்காலத்துடன் ஏதேனும் பொருத்தமுண்டா என்ற ஐயம் அவ்வப்போது எழுந்தது. கவிதைக்குள் வரும் நரகலோக வர்ணனைகளும் எமனிடம் நசிகேதன் நடத்தும் உரையாடலும் ஐயத்தைப் போக்கின. ஏறத்தாழ அதே போன்ற நரகத்திலும் அதேபோன்ற காலத்திலும்தான் வாழ்கிறோம்.
இதுவரை தொடர்ந்து வந்த இருப்பு நிலைகுத்தி நின்ற கணத்தில் எல்லா மனிதர்களுக் குள்ளும் இருப்பைப் பற்றிய சிந்தனை எழுந்திருக்கும்; மரணம் பற்றிய கேள்விகள் எழுந்திருக்கும்; வாழ்வின் பொருள் என்ன என்ற பதைப்பு எழுந்திருக்கும். இந்தச் சிந்தனையின், கேள்வியின், பதைப்பின் உருவகமாகவே ரவிகுமாரின் நசிகேதனைப் பார்க்கிறேன். (அவர் அப்படித்தான் சித்தரிக்க விரும்பினாரா என்பது எனது அவதானிப்பின் முகாந்திரம் அல்ல). இன்றையதைப்போல மானுட இருப்பு நெருக்கடியில் ஆழ்ந்த ஏதோ காலத்தில் மனிதர்கள் வெளிப்படுத்திய உணர்வின் படிமம் நசிகேதன். ஆன்மீகம், அந்தப் படிமத்தின்மீது புனுகையும் மதம், எண்ணெய்க் களிம்பையும் பூசிவிட்டிருக்கிறது. பூச்சுக்களைச் சுரண்டித் துப்புரவாக்கியதும் எப்போதும் கேள்வி எழுப்பி விடைகாணும் வேட்கைகொண்ட நிரந்த மனிதன் வெளிப்படுகிறான். அவன் கேள்விகேட்பது தன்னிடமே. பதில் காண்பதும் தன்னுள்ளேயே. கேள்வி தூண்டிவிடும் தேடலும் பதில் கண்டடையும் அமைதியும் மனிதனுக்கு மட்டுமேயான இயல்பு, அல்லவா?
2000ஆம் ஆண்டின் இறுதியில் பணிநிமித்தம் திருவனந்தபுரத்துக்குக் குடிபெயர்ந்தேன். அந்த நாட்களில் அறிமுகமான நண்பர்களில் பி.ரவிகுமாரும் ஒருவர். இரு பதிற்றாண்டுகளுக்குப் பின்னும் இருவருக்கும் இடையிலான நட்பு தொடர்கிறது. தேர்ந்த பத்திரிகையாளர், இசை விரும்பி, இலக்கிய ஆர்வலர், இசை விமர்சகர் என்று அவருக்குப் பல முகங்கள் உள்ளன. அந்த முகத்தோற்றங்கள் அனைத்தும் எனக்கும் விருப்பமானவை என்பது நட்புக்குக் காரணம். இசை தொடர்பாகவும் மலையாள இலக்கியம் தொடர்பாகவும் எனக்கு எழும் சந்தேகங்களுக்கு உடனடி விளக்கத் தீர்வும் அவரே. இசை குறித்த ரவிகுமாரின் பார்வையும் அவதானிப்புகளும் தனித்துவமானவை. அதை முன்னிருத்தியே கட்டாயப் படுத்திச் சில கட்டுரைகளை எழுதுவித்து அவற்றைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டுமிருக்கிறேன். நட்புப் பாராட்டலும் தனித்துவத்தைப் பொருட் படுத்தலுமே அவரது நசிகேதனை மொழி பெயர்க்க என்னைத் தூண்டின. புராண ஐதீக ஆன்மீக விவகாரங்களில் ஈடுபாடு இல்லாதவன் மொழிபெயர்ப்புச் சாகசத்துக்கு ஆயத்தமானதும் மேற்சொன்ன காரணங் களால்தான். அவை எனக்கு உடன்பாடான சில பயன்களைக் கொடுத்தன. புறமுதுகு காட்டி நின்ற சில தொல்பிரதிகளைத் துணிந்து வாசிக்கவும் ஆதாரமான சில சிந்தனைகளை மறு அலசலுக்கு எடுத்துக் கொள்ளவும் அந்தரங்கமான மொழிவளத்தைச் செழுமைப்படுத்திக் கொள்ளவும் இந்த மொழியாக்கம் உதவியது.
‘நசிகேதன்’ கவிதையின் தமிழாக்கத்தை நீங்கள்தான் செய்ய வேண்டும்’ என்ற நம்பிக்கை தொனிக்கும் வாசகத்தை நண்பர் சொல்லாமல் இருந்தால் இந்த மொழியாக்கம் நடந்திராது. அதற்காக பி.ரவிகுமாருக்கு நன்றி.

நசிகேதன்
நசிகேதனிடம் எமன் உரைத்தான்:
இங்கு உள்ளது எதுவோஅதுவே அங்கும் அங்கு உள்ளது எதுவோ அதுவே இங்கும்.
இங்கு
பலவற்றையும் காண்பவன் மரணத்திலிருந்து மரணத்துக்குச் செல்கிறான்1
•
பிறவிகளின் தொட்டிலில்
நசிகேதன் கண்விழிக்கிறான் ஒரு தாலாட்டில் கரையச் செவிகூர்ந்து கிடக்கிறான்
சுக்கில சுரோணித சங்கமமாகத்2
திரவ வடிவில் ஒன்றாம் மாதம் கடந்தது
இலவம் பஞ்சு முகையனைய
பிண்டமாக இரண்டாம் மாதம் கடந்தது.
சிரசுக்கும்
கை, கால்களுக்கும் ஐந்து முளைகள் கிளைத்தன
சிரசின் முனையில்
கழுத்து காதுகள் கண்கள் மூக்கு வாய் அரும்பின
கைகளின் முனையில்
தோள் புயம் மணிக்கட்டுவிரல்கள் உருப்பெற்றன கால்களின் முனையில் தொடைகள் குறி மூட்டுகள்கணுக்கால்கள் விரல்கள் உருப்பெற்றன மூன்றாம் மாதம் கடந்தது.
அங்கங்கள் மேலும் துலங்க
நான்காம் மாதம் கடந்தது.
இதயம் துடிக்க
சிந்தை தெளிய தசை திரளக் குருதி வலுவூற ஐந்தாம் மாதம் கடந்தது.
சூக்கும நரம்புகள்
எலும்புகள் நக சிகை ரோமங்கள் எல்லாம் உருப்பெற
ஆறாம் மாதம் கடந்தது
கால்கள் ஒடுங்கி கைகள் ஒடுங்கி கைகள்கொண்டு காதுகள் பொத்தி நரகக் குறுகலில் ஏழாம் மாதம் கடந்தது.
ஓசைகளின் வருகைக்கு
அஞ்சி நடுங்கி எட்டாம் மாதம் கடந்தது.
எண்ணிலா மாந்தரின்
எரியும் நினைவுகளில் ஏகாங்கியாய் எரிந்து எதையும் தாளாமல் சிரசின் மேல் கைகூப்பி ஒன்பதாம் மாதம் கடந்தது.
பூமியைத் தொட்ட நொடியில்
எல்லாமும் மறதியில் ஆழ்ந்தன
பிறவிகளின் தொட்டிலில்
நசிகேதன் கண்விழிக்கிறான் ஒரு தாலாட்டில் கரையச் செவிகூர்ந்து கிடக்கிறான்
•
இவ்விழியை இன்று
திறப்பது எதற்கோ இம்முலை உறிஞ்சிப் பருகுவது எதற்கோ இம் முடியைக் கோதி மினுக்குவது எதற்கோ இவ்வழகு மாலையைச் சூடுவது எதற்கோ?
இம் மணித் தூளியில்
ஆடுவது எதற்கோ இத் திலகம் நுதலில் சார்த்துவது எதற்கோ இப் பட்டை இடையில் உடுப்பது எதற்கோ இக் காற்சிலம்பை குலுக்குவது எதற்கோஇச்சிரிப்பு இதழில் உறைவது எதற்கோ இப் பாட்டைக் கேட்டு நீஉளைவது எதற்கோ?
•
படைப்புக்கு முன்னர் இங்கே எதுவும் இல்லை பசித்த மரணத்தால் எல்லாம் சூழப் பட்டிருந்தன3•
மரண தரிசனத்தில்
பிரக்ஞை மரத்து உதிரம் குளிர்ந்து உறைந்து அசைவற்றிருக்கும் எலியின் கண்களில் உயிரின் நடுக்கம் மறைவிடம் தேடித் தாவும் முயலின் பிராணப் பாய்ச்சல் அசையாத நீர்த் தொலைவுகளில் திசையின்றி நீந்தும் தலைப்பிரட்டைகள் பிறவிகளின் அழுக்குப் பொதிகள் சுமந்து அனாதியான காலத்தில் துணுக்குற்று
அந்தமில்லா இடத்தில் திகைப்புற்று
வழி மறக்கும் கழுதைகள்.
வலியவை
வலுவில்லாதவற்றை உண்கின்றன உயிர் உயிரைத் தின்று வாழ்கிறது.4
•

எறும்பின் கண்களில்
காலம் இருண்ட நினைவாய் உறைகிறது. கால்களில் இடம் வேதனையாக விம்முகிறது.
ஒரு பாதி நெல்மணியை
உயிரால் உந்தியும் விழுந்தும் புரண்டும் நடுங்கியும் வெருண்டும் எங்கோ மறைவதற்காக மீண்டும் துயரமாய் வந்து பிறப்பதற்காக.
மீண்டும்
ஒரு பாதி நெல்மணியைத் தேட மீண்டும் சின்னஞ்சிறு மோகங்கள் ஊற்றெடுக்க…
காலம்
நினைவாக உறைய இடம் வேதனையாக விம்ம . . .
•
சென்றடைவது எங்கு என்று அறியாமல்
போகின்றன சென்றடைவது எக் காலம் என்று அறியாமல் போகின்றன சென்றடைவது எதற்கு என்று அறியாமல் போகின்றன சென்றடைவோமா என்று அறியாமல் போகின்றன.
எங்கோ மறைவதற்காக
மீண்டும் துயரமாய் வந்து பிறப்பதற்காக.
•
கற்பனைகள் நீங்கிய போதத்தில், ஆடியில் தெரியும் பிம்பமாக எந்தப் பயனும் இல்லாமல் பிரதிபலிக்கிறது இந்தப் பிரபஞ்சம்.5•
அப்போதும் பாட்டி
இருட்டைப் பார்த்து அமர்ந்திருக்கிறாள்
மாட்டு வண்டிகள்
மந்தகதியில் நகர்கின்றன மாடுகளின் கழுத்து மணியோசை விலகிவிலகிச் செல்கிறது
வழி
ஆளற்றும் அரவமற்றும் நீள்கிறது
மலைமுகட்டில் எரிந்து நின்ற
விளக்கும் அணைந்து போகிறது
அப்போதும் பாட்டி
இருட்டைப் பார்த்து அமர்ந்திருக்கிறாள்
வியர்த்தமும்
வேதனையும் கொடூரமுமான கர்ம பந்தங்களின் பகல்கள் இரவுகள் பருவங்கள் ஆண்டுகள் பிறப்புகள் பிறப்பின்மைகள்
அப்போதும் பாட்டி
இருட்டைப் பார்த்து அமர்ந்திருக்கிறாள்
உதிரம் சுண்டி
உலர்ந்து வறண்ட சக்தியின் இறுதித் துளியும் வடிந்து போன எலும்புகள் உந்திய விகாரமான நடுங்கும் கரங்களால் மலைகளை நகர்த்தும் அலுப்புடன் பாட்டி பொழுதைத் தள்ளி நகர்த்துகிறாள்.
காலம்
எங்கும் செல்வதில்லை எங்கிருந்தும் வருவதுமில்லை காலம் அஸ்தமி்ப்பதில்லை உதிப்பதுமில்லை.6
•
வெளியில்
பனிபொழிந்து கொண்டிருக்கிறது எண்ணெய் விளக்கில் எரிகிறது அசையாச் சுடர்.
அசையாச் சுடரின்
நிழல் வட்டம் நிழல் வட்டத்தின் நிறையமைதியில் ஒரு கரப்பான் சமாதி பூண்டிருக்கிறது.
சராசரங்கள் எல்லாம்
நித்திரையில் ஆழ்ந்திருக்கின்றன ஒருவன் மட்டும் விழித்திருக்கிறான்.
அவன்
குப்பை கூளங்கள் சேர்த்துத் தீ மூட்டுகிறான்.
அவன்
கனன்றெரியும் தீக் கொழுந்துகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்
ஓ,
இதோ சிறு சாளரத்தினூடே வரும் கதிரொளிக் கதிரில் மிதந்து புரளும் தூசிபோல அண்டகோடிகள் அலைகின்றன7
நான் நிலைத்திருக்கிறேன்
எண்ணற்ற பிரபஞ்சங்கள் தோன்றி எனக்குள் சுற்றிச் சுழல்கின்றன நான் நிலைத்திருக்கிறேன்.8
குருவே
மன்னர் நகருள் பிரவேசிக்கிறார் குடிகள் மன்னரைக் காணக் கூடுகிறார்கள்9
நாம்
வழியொதுங்கி நிற்போம்
நிதாகா,
இதில் மன்னர் யார்? மக்கள் யார்? யானைமேல் வீற்றிருப்பவர் மன்னர் மற்றவர் மக்கள்
யானையையும் மன்னரையும்
ஒன்றாகத்தானே நீ எனக்குக் காண்பிக்கிறாய் இரண்டுக்கும் அடையாளங்கள் சொல்வாயாக
இதில் எது யானை?
எது மன்னர்?
கீழிருப்பது யானை
யானைமேலிருப்பது மன்னர்
கீழ் என்பது எது?
மேல் என்பது எது?
திடுமென நிதாகன்
இருபுவின் சிரசில் ஏறியமர்ந்து உரைக்கிறான்:
இப்போது நான்
மன்னரைப்போல மேலே நீங்கள் யானையைப்போலக் கீழே.
நிதாகா,
நீ மன்னரைப்போல மேலும் நான் யானையைப்போல கீழும் எனில் இதையும் எனக்குச் சொல்வாயாக.
நீ யார்?
நான் யார்?

மகனே
நீ உனது கர்மங்களை மறந்து விடுகிறாய்.
புற்கொடிகளையும்
புழுக்களையும் பட்சிகளையும் புனல்களையும் அந்தியையும் விண்மீனையும் நிலவையும் பார்த்துத் தன்னை மறந்திருக்கிறாய் நீ.
மகனே
எப்போதும் சிந்தனையில் எரிந்து கொண்டிருக்கிறாய் நீ.
தந்தையே,10
கர்மச் சுழற்சியின் எண்ணில்லா ஆதிப் பிணிகளில் அகப்பட்டு நொந்து இவ்வாறு விலங்குகள்போல வாழ்வைப் பாழாக்க என்னால் இயலாது. வெட்டுபவன் பின்னே ஆதரவற்று அநாதையாக மௌனமாக அதி தீனமாக நொண்டி நொண்டி நகரவே…
பசு
மெல்லத் தலை திருப்பி இறுதியாக என்னைப் பார்த்தது.
அப்போது
அந்தக் கண்களில் நிறைந்த பெரும் பீதியை முற்றிலும் மறைத்துச் சட்டென்று ஒளிர்ந்த அந்த மினுக்கம்.
கடவுளே,
அது என்னை வேட்டையாடுகிறது.
என் புலன்களை
என் இதயத்தை என் பிரக்ஞையை என் ஞானத்தை என் புண்ணியத்தை என் பூமியை என் ஆகாயத்தை என் இருப்பை
நொடிதோறும் அது
எரித்துக் கொண்டிருக்கிறது.
நான் விடைபெறும் நேரமாயிற்று.•
காகபுசுண்டா
காகபுசுண்டா காகபுசுண்டா பறந்து வா.
உன் சிறகின் கருமையால்
என் காட்சிகளை மூடு
உன் நீள்கரைச்சல் பேய்க்குரலால்
என் சொற்களை ஒடுக்கு
உன் அலகின் வலிமையால்
என் சித்தத்தைக் கொத்தி உடை
உன் கண்ணின் தீக் கனலால்
என் மாயங்களை நீறாக்கு
உன் அழிவின்மையால்
என் வாழ்வைச் சட்டென்று அவிழ்.•
இரண்டு எருமைகள்
இருண்ட வழியில் உன்மத்தம் முற்றிப் பாய்கின்றன
எருமைகள் பூட்டிய வண்டியில்
ஒருவன் மறைந்திருக்கிறான்.
இரண்டு தூதர்கள்
இரண்டு கால்களையும் பிணித்துப் பின்னிக் கட்டுகிறார்கள்
குளிர்ந்த கைகளை
இடைக்குப் பின்னால் இழுத்து இறுக்கிக் கட்டுகிறார்கள்.
கறுத்த துணியால்
என் இரு கண்களையும் மூடுகிறார்கள்.•
‘அன்பு மகனே,
நீ எங்களைக் கைவிட்டுச் செல்கிறாயா? இனி யாரிருப்பார் எங்களுக்கு? நீயல்லவா எங்களுக்கு எல்லாமாக இருந்தாய்?’11
கர்மத்தின் பொருட்டு
தேவர்,மானிடர்,மிருகம், விருட்சம், கொடிகளின் யோனிகளில் பிறவியெடுத்துச் சுற்றி அலையும் ஜீவன் நான். கடந்து போயின எண்ணற்ற பிறவிகள் காத்திருக்கின்றன எண்ணற்ற பிறவிகள் இந்தப் பிறவிகள் ஒன்றில் உங்கள் மகனாகப் பிறந்தேன்.
ஒருவன் மற்றவனுக்குப்
பொன்னையும் பிற திரவியங்களையும் விற்கிறான் இன்னொருவன் அவனிடமிருந்து வாங்குகிறான் இவ்வாறாக இந்தச் செல்வங்கள் பலரை அடைகின்றன; பிரிகின்றன.
இதுபோன்றே ஜீவனும்
பெற்றோருள் புகுந்தது பிரிந்தும் போகிறது.
எனக்கு நேரமாயிற்று
இதோ, நான் செல்கிறேன்.•
காசி
கங்கை அடங்காத அலைகள்
மணிகர்ணிகையில்
பிணங்கள் எரிகின்றன பாதி வெந்த பிணங்கள் கங்கையில் மிதக்கின்றன
மணிகர்ணிகையில்
சிதை நெருப்பு ஒருபோதும் அணைவதில்லை.
நரக தரிசனத்தின்
கருணையில்லாக் காட்சிகள்.•
அந்நியனின் தனத்தையும் சந்தானத்தையும்12
மனையாளையும் அபகரித்தவன் அதிபயங்கர எமதூதர்களால் காலபாசத்தால் பிணைக்கப்பட்டு தாமிஸ்ரம் என்ற நரகத்தில் தள்ளப்படுகிறான். அவனுக்கு உணவோ நீரோ கொடுப்பதில்லை பலவித சித்திரவதைகளைச் செய்கிறார்கள் அச்சுறுத்துகிறார்கள் அவன் உணர்விழக்கிறான்.
உடைமையாளனை வஞ்சித்து அவன் மனைவியையும்
செல்வத்தையும் துய்த்தவன் எமதூதர்களால் அந்ததாமிஸ்ரம் என்ற நரகத்தில் தள்ளப்படுகிறான். கொடும் வேதனையால் உணர்விழந்து கண் கெட்டு வேரோடு பெயர்ந்த விருட்சம்போல அவன் கிடக்கிறான்.
உடம்பைத் தனதென்றும்
மனைவி, மக்கள், செல்வம் தன்னுடையதென்றும் அகந்தை கொண்டு அவர்களைப் பேண உயிர்களை வதைத்துக் குடும்பம் நடத்தியவன் எல்லாவற்றையும் பூமியில் விட்டு சுயபாவ கர்மத்தால் இங்கே ரௌரவம் என்ற நரகத்தில் வந்து வீழ்கிறான். இவன் பூவுலகில் வதைத்த உயிர்கள் பாம்புகளைவிடக் கொடிய ருருக்கள் என்ற பிராணிகளாகி இவனை இங்கே வதைக்கின்றன.
உயிர்க்கொலை செய்து உடல்வளர்த்தவன்
மகா ரௌரவம் என்ற நரகத்தில் வீழ்கிறான் கிரவ்யாதங்கள் என்ற ருருக்கள் இவனது மாமிசத்தைப் புசித்து இவனைத் துன்புறுத்துகின்றன. விலங்குகளையும் பறவைகளையும் உயிருடன் வேகவைத்துத் தின்ற கொடும்பாவியை எமதூதர்கள் கும்பீபாகம் என்ற நரகத்தில் கொதிக்கும் எண்ணெயிலிட்டு வறுக்கிறார்கள்.
பெற்றோரையும் ஞானியரையும் துன்புறுத்தியவனை
காலசூத்திரம் என்ற நரகத்தில் அளவிலாத் தூரம் விரிந்ததும் கீழே அக்கினியும் மேலே தகிக்கும் சூரியனும் ஓயாது பொசுக்கும் செப்புத் தகடு பாவிய சமநிலத்துக்குக் கொண்டுவருகிறார்கள். கொடும் வெம்மையில் அகமும் புறமும் ஒருபோலத் தகிக்க அவன் நாற்புறமும் ஓடுகிறான்.
நிரபராதிகளைத் தண்டித்த
கொடிய பாவியான அரசனை சூகரமுகம் என்ற நரகத்தில் தள்ளுகிறார்கள். அங்கே உடல்வலுத்தவர்கள் இந்த அரசனின் அவயவங்களைக் கரும்பை ஒடிப்பதுபோல ஒடிக்கிறார்கள் அவன் ஓலமிட்டலறி மயங்கி விழுகிறான்.
இறை ஆணைக்குப் பணிந்து
இரைதேடும் எறும்பு, பறவைகள் போன்ற உயிர்களை சித்திரவதை செய்தவன் அந்தகூபம் என்ற நரகத்தில் தள்ளப்படுகிறான்.
மற்றெவர்க்கும் பங்கிடாமல்
ஒற்றையாய் உணவுகொண்டவன் கிருமிபோஜனம் என்ற நரகத்தில் தள்ளப்படுகிறான். நூறாயிரம் யோஜனையுள்ள அந்தக் கிருமி குண்டத்தில் அவன் கிருமியாகிறான் கிருமிகளையே தின்கிறான்.
அந்நியனின் சொத்தைக் களவாடியவனை
வழிப்பறி செய்தவனை எமதூதர்கள் சந்தம்சம் என்ற நரகத்தில் தள்ளுகிறார்கள் கனல்துண்டுபோலப் பழுத்த இரும்புத் தண்டுகளால் அவன் உடலைப் பொசுக்குகிறார்கள்.
பேதாபேதமில்லாமல்
எல்லாப் பெண்களுக்குள்ளும் நுழைந்தவன் வஜ்ரகண்டக சால்மலி என்ற நரகத்தில் தள்ளப்படுகிறான் அவன் வஜ்ஜிரம்போன்று கூர்முட்கள் நிறைந்த சால்மலி மரத்தில் நிரந்தரமாக ஏற்றி இறக்கப்படுகிறான்.
அறம் பிறழ்ந்த அரசனும்
அரச மாந்தரும் வைதரணி என்ற நரகத்தில் வீழ்கிறார்கள். இங்கே வைதரணி என்ற நதி ஓடுகிறது. மலம், சிறுநீர், சலம், குருதி, தலைமயிர், நகங்கள், எலும்புகள், தோல், மாமிசம், நிணம் நிறைந்தது வைதரணி. இதில் விழுந்த அரசனையும் அரசமாந்தரையும் நீர்வாழ் உயிர்கள் முற்றுகையிட்டு விழுங்குகின்றன. அப்போது அவர்கள் தமது பாவச் செயல்களை நினைக்கிறார்கள்.
நாணமற்று விலங்குகள்போலக்
காமத்தில் புரண்டவர்களை பூயோதம் என்ற நரகத்தில் இடுகிறார்கள். சலம், மலம், சிறுநீர், கோழை நிறைந்த அந்தக் கடலில் விழுந்தவர்கள் அந்தப் பொருள்களையே புசிக்கிறார்கள்.
வேட்டையை விரும்பி
விலங்குகளைத் துன்புறுத்தியவர்கள் பிராணரோதம் என்ற நரகத்தில் தள்ளப்படுகிறார்கள். எமதூதர்கள் அம்பெய்து அவர்களைக் காயப்படுத்துகிறார்கள்.
வேள்விகளில் மிருகங்களை வதைத்தவர்கள்
விசஸனம் என்ற நரகத்தில் தள்ளப்படுகிறார்கள். எமதூதர்கள் அவர்களது உறுப்புகளைத் துண்டுதுண்டாக வெட்டுகிறார்கள்.
வீடுகளைக், கிராமங்களை, மக்கள் கூட்டத்தைத்
தீவைத்தும் விஷமூட்டியும் அழித்த கள்வர்களையும் அரசர்களையும் படைவீரர்களையும் சாரமேயாதனம் என்ற நரகத்தில் தள்ளுகிறார்கள். வஜ்ஜிரக் கோரைப் பற்களுடன் நாய்கள் உருவிலிருக்கும் எமதூதர்கள் கடுங்கோபத்துடன் இவர்களைக் கடித்துக் குதறுகிறார்கள்.
சாட்சிமொழியிலும் கொடுக்கல் வாங்கலிலும்
பொய்யுரைத்தவனை எமதூதர்கள் அவீசி என்ற நரகத்தில் தள்ளிவிடுகிறார்கள். நூறு யோஜனை உயர ம
Sukumaran's Blog
