ஒளி
இடறிஇடறி உரையாடும் அடர்வனம்
ஓசையற்ற ஒலியுடன் ஒசியும் பெருமரங்கள்
வானிலிருந்து
தடையற்று ஒழுகும் அமுத தாரை
அதல பாதாளத்தில் விழும் தாளக்கட்டுடன்
என்னைநோக்கி வருகிறது
ஒரு மாறுகண் யானை
அதன் செருமலில் எவரும் அறியாச் சுருதிகள்
அதன் பிளிறலில் யாரும் கேளாத சங்கதிகள்
அதன் மூச்சிரைப்பில் எவரும் நிரவாத ஸ்வரங்கள்
அதன் அசைவில் மந்தர சலனம்
அதன் நிமிர்வில் மத்திய சஞ்சாரம்
அதன் நடையில் ஆரம்பமும் முடிவுமில்லா ஆலாபனை
அது
என்னைநோக்கி வருகிறது
ஆயிரம் படைகளைப் புறமுதுகிடச் செய்த அன்பைப்போல
ஆயிரம் கடல்களைப் பருகிய அமைதிபோல
ஆயிரம் மலைகளை உலுக்கிய தவம்போல
அஞ்சி நின்ற என்னைத் துதிக்கையால் வளைத்து
அந்தரத்தில் உயர்த்தி முதுகின்மேல் அமர்த்துகிறது
ஆகாயத்தில் துழாவி
அளவில்லா மலர்கொய்து கைகளில் வைக்கிறது.
அடர்வனத்தின் எட்டுத் திசைகளிலும்
எதிரொளிக்கிறது அம்மலரின் தெவிட்டாத தேன்
எதிரொலிக்கிறது அம்மலரின் அகலாத நறுமணம்.
10.07.2020
Published on July 24, 2020 10:07