தற்கொலைக்கு
எத்தனை காரணங்கள் உண்டோ
அத்தனை வழிகளும் உண்டு.
ஒரு காரணத்துக்கு
நூறுநூறு வழிகள் இருப்பதைப்போலவே
ஒரு வழிக்கும்
நூறுநூறு காரணங்கள் இருக்கின்றன
தற்கொலை
விருப்பத்தின் விளைவு அல்ல
விளைவின் விருப்பம்
எவரும் தற்கொலை செய்துகொள்வது
விருப்பத்தால் அல்ல
விரும்ப முடியாத விளைவால்.
தற்கொலையின் வழி
நாம் நினைப்பதுபோல நேரானதல்ல
மத்தி மீன்முள்ளைப்போல ஊடுகிளைகள் கொண்டது
தற்கொலையின் நிச்சய முனையை அடைவதற்குள்
ஏதேனும் கிளைவழியே
வெளியேற உந்தித்தள்ளும் கருணைகொண்டது
நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கிளைவழியாகப்
பயணத்தைப் பாதியில் கைவிட்டுத் திரும்பியவர்கள்தாம்
கிளையைக் கவனியாதவர்களே உயிரைத் தொலைக்கிறார்கள்.
நேற்று உயிரைத் தொலைத்தவர்
இறுதிக் கடிதத்தில் இப்படி எழுதியிருந்தார்:
‘சாவைப் பகடிசெய்யும் வாழ்வின் சாகசமே தற்கொலை’.
Published on July 24, 2020 10:04