ஹெர்டா முல்லரின் கைக்குட்டை

2009ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற ஹெர்டா முல்லர் தனது நோபல் சொற்பொழிவில் தனது அன்னை கேட்கும் ஒரு கேள்வியைக் குறிப்பிடுகிறார்.

ஹெர்டா முல்லர் வீட்டைவிட்டு வெளியேசெல்லும் ஒவ்வொரு காலையிலும் வீட்டுவாசலில் நின்று கொண்டு அவரது அம்மா “உன்னிடம் கைக்குட்டை இருக்கிறதா? “ என்ற கேள்வியை எழுப்புவார். ஹெர்டாவிடம் கைக்குட்டை இருக்காது. உடனே வீட்டிற்குள் திரும்பிச் சென்று தனது கைக்குட்டையை எடுத்துக் கொண்டு வெளியே செல்வார்.

அம்மாவின் இந்த நினைவுறுத்தல் அவரது அன்பின் மறைமுக வெளிப்பாடாகும். அன்பு ஒரு கேள்வியாக வேடமிட்டது என்கிறார் ஹெர்டா.

“உன்னிடம் கைக்குட்டை இருக்கிறதா?” என்ற கேள்வி நெருக்கடியை சந்திக்கத் தயாராக இருக்கிறாரா என்பதன் மறுவடிவமே. அது போலவே கைக்குட்டையைக் கையில் வைத்துக் கொள்வது அம்மாவே துணைக்கு இருப்பதைப் போன்றது என்றும் சொல்கிறார் ஹெர்டா

தனது பணியிடத்தில் நெருக்கடியை அனுபவித்த போது அந்தக் கேள்வி இன்னொரு வடிவம் கொண்டது போல அவரது இயக்குநரிடமிருந்து வெளிப்படுகிறது

ஒரு காலத்தில் எனது அம்மா, “உன்னிடம் கைக்குட்டை இருக்கிறதா?” என்று கேட்டது போலவே, இப்போது இயக்குநர் ஒவ்வொரு காலையும், ” வேறு வேலை கண்டுபிடித்துவிட்டாயா?” என்று கேட்டார் என்கிறார் ஹெர்டா

இந்த நினைவுறுத்தல்கள் நம்மை நமக்கே அடையாளம் காட்டுகின்றன. கைக்குட்டை என்பது அக புற நெருக்கடிகளில் நம்மைக் காக்கும் மாயத்துணையாகிறது.

ஒருமுறை ஹெர்டாவின் தோழி தனது அலுவலகத்தில் வேலை கொடுத்து பணியாற்றிய செய்கிறார். அங்கே ஹெர்டாவை உளவாளி என யாரோ புரளியை பரப்புகிறார்கள். உடனே. அந்த வேலை பறிபோகிறது. அப்போது தனது மனநிலை எப்படியிருந்தது என்பதற்கும் அதே கைக்குட்டையை ஹெர்டா நினைவுபடுத்துகிறார்

“என்ன செய்வதென்று தெரியாமல் நான் படிக்கட்டில் தயங்கியபடி நின்றுகொண்டிருந்தேன். திடீரென்று நான் மீண்டும் என் அம்மாவின் குழந்தையாகிவிட்டேன், அதே கைக்குட்டைக் கேள்வியைச் சந்திப்பது போலிருந்தது“. என்கிறார்

அவரது வீட்டில் கைக்குட்டைகள் வைப்பதற்கெனச் சிறிய இழுப்பறை இருந்தது. அதில் இரண்டு வரிசைகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வரிசையிலும் மூன்று கட்டுகளாகக் கைக்குட்டைகள் வைக்கப்பட்டிருந்தன.

இடதுபுறத்தில் ஆண்களின் கைக்குட்டைகள் இருந்தன. தந்தை மற்றும் தாத்தா பயன்படுத்துபவை. வலதுபுறத்தில் அம்மா மற்றும் பாட்டிக்கான பெண்களின் கைக்குட்டைகள் வைக்கபட்டிருந்தன. நடுவில் தனக்கான குழந்தைகளின் கைக்குட்டைகள்.

ஆண்களின் கைக்குட்டைகள் மிகப் பெரியவை; அவற்றின் ஓரங்களில் பழுப்பு, சாம்பல் அல்லது பர்கண்டி நிறத்தில் அடர் நிறக் கோடுகள் இருந்தன. பெண்களின் கைக்குட்டைகள் சிறியவை; அவற்றின் ஓரங்கள் வெளிர் நீலம், சிவப்பு அல்லது பச்சை நிறத்தில் இருந்தன. குழந்தைகளின் கைக்குட்டைகள் மிகவும் சிறியவை: அவை ஓரங்களற்ற, பூக்கள் அல்லது விலங்குகள் வரையப்பட்ட வெள்ளைச் சதுரங்களாக இருந்தன.

இந்த மூன்று வகைக் கைக்குட்டைகளில் முன் வரிசையில் இருந்தவை அன்றாடப் பயன்பாட்டிற்கானவை, பின் வரிசையில் ஞாயிற்றுக்கிழமைக்காக விசேசமாகப் பயன்படுத்தபட்டவை ஞாயிற்றுக்கிழமைகளுக்கான கைக்குட்டை ஆடையின் நிறத்துடன் பொருந்தமாக இருக்க வேண்டும், வீட்டில் இருந்த வேறு எந்தப் பொருளும் எங்களுக்குக் கைக்குட்டையைப் போல இவ்வளவு முக்கியமானதாக இருந்ததில்லை.

அவரது வீட்டில் கைக்குட்டையின் பயன்பாடு பல்வேறுவிதமாக இருந்தது: மூக்கு ஒழுகுதல்; மூக்கில் இரத்தம் வடிதல்; கை, முழங்கை அல்லது முழங்காலில் காயம் படுதல், அல்லது அழுகையை அடக்க கைக்குட்டையினை கடித்தல். தலைவலிக்கு நெற்றியில் கட்டுவதற்கும், காய்ச்சலின் போது குளிர்ச்சியான ஈரமான கைக்குட்டை கட்டுவதற்கு. கைக்குட்டையின் நான்கு மூலைகளிலும் முடிச்சிட்டு, வெயிலிலோ மழையிலோ இருந்து தலையைப் பாதுகாப்பதற்கு எனப் பயன்பட்டன. அது போலவே. எதையாவது நினைவில் கொள்ள வேண்டுமென்றால்,கைக்குட்டையில் முடிச்சுப் போடுவது. கனமான பைகளைச் சுமக்கும்போது, கைக்குட்டையினைக் கையைச் சுற்றிக் கட்டுவது. ரயிலில் புறப்படும்போது, விடைபெறுவதற்காகக் கைக்குட்டையை அசைப்பது எனப் பல்வேறு வகைகளில் கைக்குட்டை பயன்படுத்தபட்டதாக நினைவு கொள்கிறார்.

தண்டனை முகாமில் இருந்த ஒருவருக்கு ரஷ்யப் பெண் அளித்த கைக்குட்டையை நினைவுபடுத்தும் ஹெர்டா ‘உங்களிடம் கைக்குட்டை இருக்கிறதா?’ என்ற கேள்வி எல்லா இடங்களிலும் செல்லுபடியாகும் ஒரு அடையாளமாக மாறிவிடுவதைக் குறிப்பிடுகிறார்.

ஹெர்டா சிறுமியாக இருந்தபோது, அவரது விருப்பத்திற்கு மாறாக அக்கார்டியன் வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அப்போது அக்கார்டியன் அவரது தோள்களிலிருந்து நழுவி விடாமல் இருக்க இசை ஆசிரியர் ஒரு கைக்குட்டையைக் கொண்டு அதனை ஹெர்டாவின் முதுகில் ஒன்றாகக் கட்டிவிடுவார் என நினைவு கொள்கிறார்.

கைக்குட்டை என்பது துண்டிக்கபட்ட நினைவின் வடிவமாக மாறுகிறது. கைக்குட்டையைப் பற்றி பேசுவது என்பது ஆறுதல் படுத்தபடுவதைப் பற்றி பேசுவதாகவே அர்த்தம்.

வாழ்க்கையில் மிகவும் வேறுபட்ட விஷயங்களை இணைப்பவை கைக்குட்டைகள் போன்ற மிகச்சிறிய பொருட்களே என ஹெர்டா சுட்டிக்காட்டுகிறார்

ஹெர்டாவின் அம்மா ஒருமுறை விசாரணைக்காகக் காவலர்களால் அழைத்துச் செல்லப்படும் போது உங்களிடம் கைக்குட்டை இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறார். தனி அறையில் அடைக்கபடும் போது கண்ணீரால் நனைந்த கைக்குட்டைக் கொண்டு அங்கிருந்த பொருட்களைத் துடைக்கிறார்.

ஒருவேளை, கைக்குட்டையைப் பற்றிய கேள்வி என்பது ஒருபோதும் கைக்குட்டையைப் பற்றியதாக இல்லாமல், மாறாக ஒரு மனிதனின் ஆழ்ந்த தனிமையைப் பற்றியதாக இருந்திருக்கலாமோ என்ற கேள்வியை எழுப்புகிறார் ஹெர்டா முல்லர்

நோபல்பரிசு சொற்பொழிவில் தனது இலக்கியப்பணிகளை, தனது குடும்ப வரலாற்றை, இலக்கிய முன்னோடிகளை. மரபை. தேசம் தழுவிய பிரச்சனைகளை, அரசியல்நிலைப்பாடுளை முன்வைத்து இலக்கியவாதிகள் பலரும் பேசியிருப்பதை வாசித்திருக்கிறேன். ஆனால் ஒரு கைக்குட்டையை முன்வைத்து தனது காலகட்ட அரசியல் அதிகாரத்தை, தனிமையை, துயரை, பால்ய வயதின் நினைவுகளை, அன்னையின் அன்பை ஹெர்டாவைப் போல எவரும் வெளிப்படுத்தியதில்லை..

ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ நாடகத்தில் , டெஸ்டிமோனாவின் கைக்குட்டை நிகரற்ற நேசம், விசுவாசம் மற்றும் பொறாமையின் குறியீடாக மாறுவதை அறிந்திருக்கிறேன். ஆனால் ஹெர்டா கைக்குட்டையாக இருப்பதைப் பற்றிப் பேசுகிறார். மனிதர்கள் கைக்குட்டை போல மாறுவதைக் குறிப்பிடுகிறார். ஆண்களின் கைக்குட்டையும் பெண்களின் கைக்குட்டையும் ஒன்றல்ல என்பதை நினைவுபடுத்துகிறார்.

ஹெர்டா முல்லர், ருமேனியாவின் டிமிசோராவுக்கு அருகிலுள்ள நிச்சிடோர்ஃப் என்ற இடத்தில் வாழ்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். ஹெர்டா முல்லரின் படைப்புகள், ஒடுக்குமுறை மற்றும் துன்புறுத்தலிற்கு ஆளாகும் தனிநபரின் வலியை, நினைவுகளைப் பேசுகின்றன

ஹெர்டாவின் அம்மா தனது மகள் ஒரு தையல்காரியாக ஆக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் ஹெர்டா படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். தனது நோபல் பரிசு ஏற்புரையில் பால்ய வயதின் நினைவுகளை ஹெர்டா பகிர்ந்து கொள்கிறார்.

அதில் “தனது கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் பழைய காலத்தில் வாழ்ந்தார்கள்; அவர்கள் வயதானவர்களாகப் பிறந்தார்கள் என நினைத்தேன்: மாற்றத்தை விரும்பினால், சீக்கிரமோ அல்லது தாமதமாகவோ கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என விரும்பினேன்.. கிராமத்தில் அனைவரும் அரசாங்கத்திற்கு அஞ்சி நடுங்கினார்கள், தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் அளவிற்கு வெறித்தனமான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார்கள். இதே கோழைத்தனமும் கட்டுப்பாடும் நகரத்திலும் இருந்தது . ஒருவேளை, சர்வாதிகார ஆட்சியின் போது அன்றாட வாழ்க்கையை விவரிக்க இதுவே மிகச் சுருக்கமான வழியாக இருக்கலாம்“ என்று குறிப்பிடுகிறார் ஹெர்டா

Use language to invent a truth that shows what happens in us and around us when values become derailed

என ஹெர்டா முன்மொழிவது இலக்கியத்தின் அடிப்படையாகும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 10, 2026 23:45
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.