முணுமுணுப்புக் கட்டணம்

புதிய சிறுகதை. மே 10 2026

ராஜாராமன் அந்தப் பாடலை மெதுவாக முணுமுணுத்துக் கொண்டார். சில நாட்களாகவே பழைய சினிமா பாடல் ஒன்றின் வரிகள் மனதில் கொப்பளித்துக் கொண்டிருந்தன. குளிக்கும் போதும், நடைப்பயிற்சியின் போதும், சலூனில் காத்திருக்கும் போதும், பால்கனியிலிருந்தபடி காகங்களை வேடிக்கை பார்க்கும் போதும் அந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டார். அப்படி முணுமுணுக்கும் போது அது யாருக்கும் கேட்டுவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தார்.

தண்ணீரின் மேற்பரப்பிற்கு வரும் மீன்குஞ்சினைப் போல எதற்காக அந்தப் பாடல் மனதின் மேற்பரப்பிற்கு வந்து விளையாடுகிறது. அந்தப் பாடலை முதன்முறையாக இருபது வருஷங்களுக்கு முன்பாகக் கேட்டிருந்தார். இத்தனை ஆண்டுகளாகியும் மனதில் அப்பாடல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

இந்தப் பாடலைப் போலப் புத்தகத்தில் படித்த சில கதைகள். சில கவிதை வரிகள். சிலரது அறிவுரைகள். சில திரைப்படக் காட்சிகள். மனதில் பதிந்து போயிருக்கின்றன. பகடையை உருட்டி விளையாடுவதைப் போல அதை நினைத்துப் பார்த்துக் கொள்வதில் சந்தோஷம் கொண்டார்.

உண்மையில் அந்தப் பாடல் அல்ல. அதன் வழியாகவே வேறு ஏதோ நினைவுகள். மகிழ்ச்சியான தருணங்கள் வெளிப்படுகின்றன. பாடல் அந்த மகிழ்ச்சியைத் திறக்கும் சாவி மட்டுமே.

ராஜாராமனைப் போலவே அவரது மனைவியும் சமையல் செய்தபடி சில நேரம் பாடல்களைச் சற்றே உரத்த குரலில் பாடுவதைக் கேட்டிருக்கிறார். தனது தெருமுனையிலிருந்த தள்ளுவண்டி பழக்காரன் கூட இப்படி பக்திப் பாடல் ஒன்றை முணுமுணுப்பதைக் கேட்டிருக்கிறார். மண்பானையிலிருந்து கசியும் தண்ணீரைப் போல மனதிலிருந்து மகிழ்ச்சியின் குரல் தானே கசிந்து வெளியேறுகிறது போலும்.

ஒருமுறை காரில் போகும் போது இப்படி எதையோ முணுமுணுக்கவே அவரது மகள் நிவேதா சந்தேகத்துடன் கேட்டாள்

“அப்பா ஏதாவது சொன்னயாம்“

“இல்லையே“

“சொன்ன மாதிரி இருந்துச்சி“

“எனக்கு நானே சொல்லிட்டு இருந்திருப்பேன்“

“உனக்கு ஏன்பா நீயே சொல்லிகிடுறே. நீ இன்னும் சின்னப்புள்ளையா“

“அப்படி இருக்க ஆசையா தானம்மா இருக்கு“.

“அப்படி என்ன பேசிகிட்டு இருக்கே“

“பெரிசா ஒண்ணுமில்லை. நீ சூயிங்கம் மெல்லுற மாதிரி எனக்கு இப்படி ஒண்ணு தேவைப்படுது“

அதைக்கேட்டு நிவேதா சிரித்தாள். அவர் சொன்னது உண்மை என்பதை அவர் வயது நண்பர்கள் ஆமோதித்தார்கள். நினைவுகளைச் சுவைப்பதில் விருப்பம் இருக்கத்தானே செய்கிறது. அதிலும் புருஷோத்தமன் என்ற நண்பர் சொன்னார்

“இப்படி எதையாவது முணுமுணுக்கும் போது சின்னபையன் கையைப் பிடிச்சிகிட்டு நடக்கிறது மாதிரி இருக்குப்பா“

“சரியாச் சொன்னே“ என்று உடனே அதைப் பாராட்டினார் ராஜமாணிக்கம்.

ஒரே பாடலை இருவர் இப்படி முணுமுணுப்பதில்லை. இருவருக்கு ஓரே கதை ஒரே நேரம் நினைவிற்கு வருதுவமில்லை. கொடியில் காயப்போட்ட துணிகள் தன்னிஷ்டம் போல் காற்றில் அலைவுறுவது போன்ற செயலது. மனதைச் சந்தோஷப்படுத்திக் கொள்ள ஒவ்வொருவரும் ஒரு வழியைத் தானே கண்டுபிடித்து விடுகிறார்கள். உலகிடம் அதைப் பகிர்வதில்லை.

வீட்டுச்சுவரில் வந்து அமர்ந்த பறவை ஏதோ ஒரு கணத்தில் தானே பறந்துபோய்விடுவதைப் போல முணுமுணுத்த பாடல் தானே மறைந்து போய்விடுவது வழக்கம். பின்பு என்றைக்கு அது திரும்ப நினைவிற்கு வரும் என்று தெரியாது. விரும்பி நினைவுபடுத்திக் கொள்ளவும் முடியாது.

அப்படி ஒரு பாடலை சில நாட்களாகவே முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அதில் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார். ஒரு குறுஞ்செய்தி அந்த முணுமுணுப்பை சட்டென நிறுத்த வைத்தது.

அவரது அலைபேசிக்கு வந்திருந்த அந்தக் குறுஞ்செய்தி கே1 என்ற நிறுவனத்தால் அனுப்பி வைக்கபட்டிருந்தது. அதில் மூன்றே வரிகள் இருந்தன

“நீங்கள் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் பாடல் எங்களது மகிழ்ச்சிப் பட்டியலில் உள்ளது. அதற்கான கட்டணத்தை நீங்கள் உடனே செலுத்த வேண்டும். ரூ 15 பணம் செலுத்த வேண்டிய வங்கிக் குறியீட்டு எண் KBAN11616 23520. “

இந்தக் குறுஞ்செய்தியை அவரால் நம்ப முடியவில்லை. ஒருவர் தனது நினைவிலிருந்து முணுமுணுக்கும் பாட்டிற்குக் கட்டணம் செலுத்தப்பட வேண்டுமா. அப்படியான நடைமுறை எப்போது துவங்கியது. எப்படித் தான் முணுமுணுக்கும் பாடல் அவர்களுக்குத் தெரிந்தது. ஒருவரின் மனதையும் கண்காணிக்கத் துவங்கிவிட்டார்களா என்ன.

தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை மறைத்துக் கொண்டபடி அவர் தனது மனைவியிடம் கேட்டார்

“உன் போன்ல ஏதாவது மெசேஜ் வந்துருக்கா. “

“நான் எதையும் பாக்குறதேயில்லை“ என்றார் அவரது மனைவி விஜயா.

ராஜாராமன் அவராக மனைவியின் அலைபேசியில் ஏதாவது குறுஞ்செய்தி வந்திருக்கிறதா என்று பார்த்தார். எந்தச் செய்தியும் வரவில்லை. ஒரு வேளை அவள் நினைவிலிருந்து எதையும் முணுமுணுக்கவில்லையே என்று எண்ணியபடி தான் இனிமேல் எதையும் நினைவு கொள்ளக் கூடாது. முணுமுணுக்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டார்.

அப்படி முடிவு செய்வது எளிதாக இருந்தது. ஆனால் செயல்படுத்த எளிதாகயில்லை. கொதிக்கும் நீரிலிருந்து எழும் குமிழிகள் போல மனதிலிருந்து தானே சில வரிகள். கதைகள் குமிழ்விட்டபடி இருந்தன.

எதற்காக மனது இப்படிப் படித்த,கேட்ட பார்த்தவற்றை நினைவு வைத்துக் கொண்டேயிருக்கிறது. எல்லாமும் அப்படி மனதில் பதிந்தும் இருப்பதில்லை. நினைவில் ஒன்று பசுமையாக இருப்பதற்குக் காரணம் என்ன. அவருக்குப் புரியவில்லை.

சந்தோஷத்தை விடவும் துயரங்கள். அவமதிப்பு, கஷ்டங்கள் தான் நினைவில் அதிகம் பதிந்திருக்கின்றன. அவை மறைவதுமில்லை. சினிமாப் பாடல்கள், சினிமாவில் பார்த்த காட்சிகள் ஏன் திரும்பத் திரும்ப நினைவிலிருந்து மேல் எழுந்து வருகின்றன. அவை எதையோ நினைவூட்டுகின்றன.

பத்து வயதில் பார்த்த சினிமாவில் இடம் பெற்ற ஒரு காட்சி பசுமையாக நினைவிலிருக்கிறது. அந்தப் படம் பார்க்க போன போது அணிந்திருந்த சட்டையின் நிறம் நினைவில் இல்லை. இது வியப்பாக இருந்தது.

முணுமுணுப்புக் கட்டணம் நடைமுறைப்படுத்துள்ளதா என இணையத்தில் தேடினார். எந்தத் தகவலையும் அறிந்து கொள்ள முடியவில்லை.

மறுநாள் அவர் நடைப்பயிற்சிக்காகக் காந்தி பூங்காவிற்குச் சென்ற போது அவருக்கு முன்பாக அவரது நண்பர்கள் தங்களுக்கு வந்துள்ள முணுமுணுப்புக் கட்டணம் பற்றி அதிர்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்கள்

“இதுக்கெல்லாம்மா கட்டணம் வசூலிப்பார்கள்“ என ஒருவர் வருத்தமான குரலில் கேட்டார்

“பதினைந்து ரூபாய் பெரிசில்லைப்பா. நாம முணுமுணுக்கிறதை யாரோ எப்படியோ கேட்கிறாங்களே. அதான் பயமா இருக்கு. “

“நாம எது எதுக்குத் தான் பயப்படணும்கிற விவஸ்தையே இல்லாம போச்சு.. “ என்றார் மற்றவர்

“டெக்னாலஜி பெரிசானதும் மனுஷன் சின்னதாகிப் போயிட்டான். நிம்மதி போயிருச்சி“. என்றார் விநாயம்.

“நம்மாலே என்ன செய்ய முடியும். நாம கட்டணத்தைக் கட்டாம விட்டா அவனா பேங்க் அக்கவுண்ட்ல இருந்து பணத்தை எடுக்கிடுவான். அது என்ன பெரிய விஷயமா“ எனக்கேட்டார் நடராஜன்

“அது எப்படி எடுக்க முடியும். “ என்று திகைப்புடன் கேட்டார் மனோகரன்

“முணுமுணுக்கிறதை கண்காணிக்கிறவனுக்கு அது எல்லாம் பெரிய விஷயமா என்ன“ என்று சலிப்போடு சொன்னார் மாணிக்கம்

அவர்கள் மனதில் எழுந்த பயத்தை மறைத்தபடியே அமைதியாக இருந்தார்கள். எதையும் முணுமுணுக்கக் கூடாது. நினைவுபடுத்திக் கொள்ளக் கூடாது. பரணிலிருந்த பழைய பொருட்களைத் தேவையில்லை என வீசி எறிந்தது போல நினைவில் உள்ளவற்றை நீக்கிவிட வேண்டும் என ராஜாராமன் முடிவு செய்து கொண்டார். ஆனால் அந்தத் தருணத்திற்குப் பொருத்தமான சினிமாப் பாடல் ஒன்று நினைவிலிருந்து எழுந்தது. அதை மனதிற்குள்ளாக அடக்கிக் கொண்டார்.

பசுமையான இலையின் ஒரங்கள் திடீரெனக் கறுப்பாகி விடுவதைப் போல இந்தக் கட்டண வசூல் அவரது அன்றாட மகிழ்ச்சியினைக் கட்டுப்படுத்தியது. அச்சுறுத்தியது.

ஒரு நாள் இதைப் பற்றித் தயங்கி தயங்கி அவரது மனைவியிடம் சொன்ன போது அவள் கேட்டாள்

“சாமி பாட்டுக் கூடவா பாடக்கூடாது. அதுக்கும் காசு கேட்பாங்களா“

“எல்லாத்துக்கும் தான்“ என்றார் கோசல்ராம்

“நான் எதுக்காக எவனுக்கும் காசு குடுக்கணும். ஒரு பைசா தர மாட்டேன். என்ன செய்வாங்கன்னு பாத்துருவோம்“. என்றாள் விஜயா

இந்தத் தைரியம் ஏன் தனக்கு வரமறுக்கிறது என நினைத்தபடியே அமைதி அடைந்தார்.

மறுநாள் ஒரு மின்னஞ்சலில் கட்டணம் செலுத்துவதற்கான நினைவூட்டல் வந்திருந்தது. அதற்குத் தனது தரப்பினை விளக்கி பதில் எழுதினார். அடுத்தச் சில நிமிஷங்களில் பதில் மின்னஞ்சல் வந்திருந்தது.

“உங்கள் பதில் ஏற்புடையதாகயில்லை. நீங்கள் கட்டணத்தைச் செலுத்தியாக வேண்டும். ஒரு வேளை எங்கள் நிரந்தர உறுப்பினராக நீங்கள் இணையும் பட்சத்தில் சிறப்புச் சலுகையாகக் கட்டணத்தில் 30 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என்றிருந்தது“

முணுமுணுப்புக் கட்டணம் செலுத்தி உறுப்பினராக வேண்டும் என்பது அபத்தமாக இருந்தது. அவர் அந்த மின்னஞ்சலுக்குப் பதில் எழுதவில்லை.

ஆனால் அதே நிறுவனத்திடமிருந்து இன்னொரு பில் தபாலில் அனுப்பப் பட்டிருந்தது. அதில் இந்நாள் வரை அவர் முணுமுணுத்த பாடல்களின் எண்ணிக்கை. எந்தத் தருணத்தில் அவற்றை நினைவு கொண்டார். எந்தக் கதையை, எந்தச் சினிமா காட்சியை யாரோடு பகிர்ந்து கொண்டார் என்ற முழு விபரமும் அனுப்பி வைக்கபட்டிருந்தது. அத்தோடு அதற்கான முழுக்கட்டணத்தையும் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. வாசித்தவுடன் கோபமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அந்தத் தபாலிற்கு அவர் பதில் அளிக்கவில்லை.

இது நடந்த சில தினங்களுக்கு அவர் வெளியே செல்லவில்லை. வீட்டிற்குள் அமைதியாகச் சாய்வு நாற்காலியில் இருந்தபடி தொட்டிச்செடிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்

அடுத்த நாள் இன்னொரு மெயில் கே1 நிறுவனத்திடமிருந்து வந்திருந்தது

“நீங்கள் அமைதிக்கட்டணம் செலுத்த வேண்டிய பட்டியலில் இணைந்திருக்கிறீர்கள். அமைதியின் முழு உரிமையை எங்கள் நிறுவனம் வாங்கியிருக்கிறது. நீங்கள் பயன்படுத்தும் அமைதிக்கு ஏற்ப கட்டணம் செலுத்தபட வேண்டும் என்பதை நினைவு படுத்துகிறோம். இலவச மௌனம் என்பது இனி கிடையாது. உங்கள் முணுமுணுப்புக் கட்டணத்தை விடவும் அமைதிக்கான கட்டணம் அதிகம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்“

இந்த நெருக்கடியிலிருந்து எப்படி விடுபடுவது எனத் தெரியவில்லை.

கே1 நிறுவனத்தின் பல்வேறு பிளான்களில் எதைத் தேர்வு செய்வது என்பதைப் பற்றி ராஜாராமன் கலக்கத்துடன் ஆராய்ந்து கொண்டிருந்தார்.

திடீரென மேகம் இருண்டு பலத்த காற்றுடன் மழை பெய்யத் துவங்கியது. ஒரு வேளை அதற்கும் கட்டணம் செலுத்தபட வேண்டுமோ என்ற அச்சத்தில் மழையை அவர் வேடிக்கை பார்க்கவில்லை

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2026 23:26
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.