சுண்டோகு
புத்தகங்களை வாங்கிக் குவித்துப் படிக்காமலே வைத்திருப்பதைக் குறிக்கும் ஜப்பானியச் சொல் சுண்டோகு (Tsundoku ).
வாசிக்கப்படாத புத்தகங்கள். பாதி வாசிக்கபட்டுக் கைவிடப்பட்ட புத்தகங்கள். ஒன்றிரண்டு பக்கங்கள் மட்டுமே புரட்டப்பட்ட புத்தகங்கள். திரும்பத் திரும்ப வாசிக்கபடும் புத்தகங்கள். தேவையில்லாமல் வாங்கிய புத்தகங்கள், மின்புத்தகங்கள், பரிசளிக்கப்பட்ட புத்தகங்கள். நகலெடுக்கபட்ட புத்தகங்கள் என நிறைய வகைகள் இருக்கின்றன.
எனது நூலகத்தில் ஒரு புத்தகம் எங்கேயிருக்கிறது எனத் தேட முடியாமல் அதன் இன்னொரு பிரதியை கடையிலிருந்து வாங்கி விடுவேன். தேடிய புத்தகம் அதன் மறுநாள் கண்ணில்படுவது வேடிக்கையானது.
வாங்கிய புத்தகங்கள் அத்தனையும் உடனே வாசிக்கபட வேண்டுமா என்பது கேள்வி. புத்தகங்கள் எதற்கும் காலாவதியாகும் நாள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அவை மூலிகைப் பொருட்கள் போல எப்போது தேவையோ அப்போது பயன்படுத்த கூடியவை என எண்ணுகிறேன். புத்தகங்களை வெறும் அலங்காரப் பொருள் போல வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்வது பொருந்தாது.
ஒரு புத்தகத்தின் தேவையை நமது மனநிலையே உருவாக்குகிறது. அதுவே புத்தகத்தினைத் தேர்வு செய்கிறது. தண்ணீரால் ஒரு தாவரம் வளர்ந்து பெரியதாகிப் பூப்பதைப் போல வாசிப்பால் நாம் வளருகிறோம். மகிழ்ச்சி அடைகிறோம். புதிய முடிவுகளை எடுக்கிறோம். புதிய கனவுகளை, நம்பிக்கைகளை உருவாக்குகிறோம், செயல்படுத்துகிறோம்.

எண்ணிக்கையற்ற பாடல்கள் நமது செல்போனில். கம்ப்யூட்டரில், சேமிக்கப்பட்டுக் காத்திருப்பதைப் போலப் படிக்கப்படாத புத்தகங்களும் காத்திருக்கின்றன. புத்தகத் துயில் எப்போது கலையும் எனத் தெரியாது.
புத்தகக் கடைக்குச் செல்லும் பலரும் பெரிய புத்தகங்களை வாங்கவே ஆசைப்படுகிறார்கள்.அதிலும் வரலாறு மற்றும் நாவல்கள் பெரிய அளவில் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். உண்மையில் பெரிய நூல்களே அதிகம் படிக்கப்படாமல் இருக்கின்றன.
எனது தாத்தா வாங்கிப் படித்த சில புத்தகங்களை அவரது மறைவிற்குப் பிறகு நான் ஆசையாகப் படித்தேன். அந்தப் புத்தகங்கள் முப்பது நாற்பது வருஷமாகப் புரட்டப்படவேயில்லை. அவர் அடிக்கோடிட்டுள்ள வரிகள் அவரது விருப்பத்தின் சாட்சியமாக இருக்கின்றன. அந்தப் புத்தகங்களின் வழியாக அவரது கைகளைப் பற்றிக் கொள்வது போலவே உணர்ந்தேன்.
புத்தகங்கள் பெரும் சந்தையாகிவிட்ட இன்றைய சூழலில் சுண்டோகு என்ற வார்த்தை பிறக்கவில்லை. மெய்ஜி சகாப்தத்திலே (1868-1912) இச் சொல் உருவாகியிருக்கிறது. ஆனால் இன்றுள்ள பொருளில் பயன்படுத்தபடவில்லை. உம்பர்த்தோ ஈகோ இப்படிப் படிக்கப்படாத புத்தகங்களின் சேமிப்பை ” ஆன்டிலைப்ரரி ” என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.
புதிய புத்தகங்களுக்கு இடம் கொடுப்பதற்காகப் பழைய புத்தகங்களைக் கிடைக்கும் இடத்திலோ, பரணிலோ, அட்டைப் பெட்டியிலோ போட்டு வைக்கிறோம். பின்பு அவற்றைத் திரும்ப எடுத்துப் படிப்பது அபூர்வம். ஆனால் அவற்றை வேண்டாம் என வெளியேற்றவும் மனம் வருவதில்லை.
1931-ஆம் ஆண்டு வால்டர் பெஞ்சமின் “Unpacking My Library: A Speech on Collecting,” என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் வாசகர்களுக்கும் அவர்களது சேகரத்திலுள்ள உள்ள புத்தகங்களுக்கும் இடையிலான உறவை பற்றிச் சிறப்பாக எழுதியிருக்கிறார்.
அதனைத் தனது கட்டுரையில் குறிப்பிடும் மாங்குவேல் பெட்டியிலிருந்து புத்தகங்களை வெளியே எடுத்து உரிய இடத்தில் அடுக்கி வைப்பது ஒரு படைப்புச் செயல்பாடு என்கிறார். எந்த நூலை எதற்கு அருகில் வைப்பது, எப்படி வரிசைப்படுத்துவது, எதை நீக்குவது என்பது படைப்பூக்கம் கொண்டதே.
ஒரு நூலகம் என்பது நினைவுகளின் இருப்பிடம் என்கிறார் வால்டர் பெஞ்சமின் அரிய நூல்களை தான் வாங்கிய நகரங்களின் நினைவுகள், புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த கடந்தகால அறைகளின் நினைவுகள், அவை வாசிக்கப்பட்ட இரவின் நினைவுகள் எனப் பல்வேறு நினைவுகள் புத்தகங்களின் மீது படிந்திருப்பதால் அவை கால ஒட்டத்தில் நினைவுச்சின்னங்களாகி விடுவதாகப் பெஞ்சமின் குறிப்பிடுகிறார்

எழுத்தாளர் ஆல்பர்டோ மாங்குவேல் தனது கட்டுரையில் “ புத்தகங்களை இரவல் வாங்குபவராகவும் இருக்காதே, கடன் கொடுப்பவராகவும் இருக்காதே” என்று தனது நிலைப்பாட்டினைக் குறிப்பிடுகிறார். ஆனால் எல்லோரது சேமிப்பிலும் சில இரவல் வாங்கிய புத்தகங்கள் திருப்பித்தரப்படாமல் இருக்கின்றன. அதில் ஒன்றோ இரண்டோ பொது நூலகத்திலிருந்து எடுத்து வந்து திருப்பித் தராத புத்தகங்கள்.
தனது வாழ்விடத்தை விட்டுப் புலம் பெயர்ந்து செல்பவர்கள் தங்கள் புத்தகங்களைப் பிரிவதை பெரிய இழப்பாகக் கருதுகிறார்கள். எந்தப் புத்தகங்களை உடன் கொண்டு செல்வது எதை விட்டுப் போவது என்பதை முடிவு செய்ய முடியாமல் இருந்த நாளை நினைவில் வைத்திருக்கிறார்கள். விருப்பமான புத்தகங்களை யாரிடம் ஒப்படைப்பது எனத் தெரியாத தடுமாற்றத்தை குறிப்பிடுகிறார்கள்.
புத்தகங்களை வாங்கி வாங்கிச் சேமிப்பதும், அவற்றைக் கொண்டு தனக்கான நூலகத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதும் எழுத்தாளர்கள் அனைவரின் ஆசையாகும். இதில் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப சிறியதாகவோ பெரியதாகவோ வீட்டுநூலகத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் அவற்றைப் பராமரிப்பது எளிதானதில்லை. அதற்காக அதில் பாதியை இழப்பதும் எளிதாகயில்லை.
எனக்குத் தெரிந்த ஒரு எழுத்தாளர் முதுமையில் வீடு மாறும் போது தனது மகனின் கட்டளையால் தன்னிடமிருந்த புத்தகங்கள் அத்தனையும் பழைய புத்தகக் கடைக்குக் கொடுத்துவிட்டார். ஆனால் அந்தப் புத்தகங்களின் பட்டியல் கொண்ட பதிவேட்டினை தன்னோடு வைத்துக் கொண்டிருந்தார். எப்போதாவது அந்தப் பதிவேட்டினை புரட்டி தான் விரும்பி சேகரித்த புத்தகங்களின் பெயரை உச்சரித்துக் கொள்வார். அதைக் கூட அவரது மகன் விரும்பவில்லை என்பது தான் துயரம்.
ஆல்பர்டோ மாங்குவேல் எழுதிய ‘ Packing My Library: An Elegy and Ten Digressions’ ஒரு எழுத்தாளருக்கும் அவருடைய தனிப்பட்ட நூலகத்திற்கும் இடையிலான உறவை பற்றிய சிறந்த புத்தகமாகும்.
வாசிப்பில் விருப்பம் கொண்ட எல்லோரிடமும் வாசிக்கபடாத புத்தகங்கள் கொஞ்சம் இருக்கவே செய்யும். அது இயல்பானதே. அந்த வகையில் நாம் எல்லோரும் சுண்டோகுகளே.
••
,
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 676 followers

