சிறிய நகரத்திலிருந்து ஒரு குரல்
Spring in a Small Town 1948ல் வெளியான சீனத் திரைப்படமாகும். சீனாவின் மகத்தான திரைப்படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது

ஜியாங்னான் பகுதியில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் ஒரு பாழடைந்த குடும்ப வளாகத்தில் கதை நடைபெறுகிறது
படம் ஒரு பெண்ணின் குரலில் துவங்குகிறது. பதினெட்டு நிமிஷங்கள் நீளும் காட்சிகள் முழுவதும் யுவென் என்ற இளம்பெண்ணின் குரலில் விவரிக்கபடுகின்றன. போருக்குப் பிந்திய இடிபாடுகள் கொண்ட நகரச் சுவரில் நின்றபடி யுவென் தனது வாழ்வினை விவரிக்கிறாள்
கையில் காய்கறிக்கூடையும் கணவனுக்குத் தேவையான மருந்துப் பொருட்களும் வைத்துள்ள அவள் சிறுநகரில் காலம் உறைந்து போயிருப்பதையும். எந்த மாற்றமும் இல்லாமல் அன்றாடம் கடந்து போவதையும் சலிப்புடன் நினைவு கொள்கிறாள்.
ஒரு சிறிய நகரத்தில் வசிக்கிறேன் … எதுவும் மாறாத வாழ்க்கையை வாழ்கிறேன் … ஒவ்வொரு நாளும் மளிகைப் பொருட்கள் வாங்கி முடித்த பிறகு , இடிபாடுகள் கொண்ட நகரச் சுவரின் உச்சியில் சிறிது நேரம் நடப்பது எனக்குப் பிடிக்கும் . அது எனக்குப் பழக்கமாகிவிட்டது . நகரச் சுவரில் நடந்து செல்லும் போது , நான் இந்த உலகத்தை விட்டு வெளியேறியது போல் உணர்கிறேன் … என் கண்கள் எதையும் பார்க்கவில்லை … என் மனம் வெறுமையாக உள்ளது … என் கையில் காய்கறி கூடையும் , என் கையில் என் கணவருக்கு மருந்தும் இல்லையென்றால் , நான் நாள் முழுவதும் வீட்டிற்குச் செல்லாமல் இருக்ககூடும் .
லியான் என்னை ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் பார்ப்பதில்லை . நாங்கள் ஒருவருக்கு ஒருவர் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசிக் கொள்தில்லை . நான் காலையில் மளிகைப் பொருட்கள் வாங்கப் புறப்படுவேன் . அவர் தோட்டத்திற்குள் செல்கிறார் , அங்கு யாரும் அவரைக் கண்டுபிடிக்க முடியாது .
அவருக்குக் காசநோய் இருப்பதாகச் சொல்கிறார்கள் .. அது நரம்புக்கோளாறு என்று நான் நினைக்கிறேன் . எனக்கு இறக்க தைரியமில்லை . அவருக்கு வாழ தைரியம் இருப்பதாகத் தெரியவில்லை .
என்று விவரிக்கும் அவளது குரலின் வழியே யுவெனின் வாழ்க்கை தெளிவாக விவரிக்கப்படுகிறது. காற்றில் அலைபாயும் கூந்தலுடன் அவள் நிற்கும் காட்சி கவித்துவமானது. மறக்கமுடியாத திரைப்பிம்பமாகும்.

போருக்குப் பிந்திய இடிபாடுகள் கொண்ட சிறுநகரம். வீட்டின் ஒரு பகுதி மட்டுமே வாழ்வதற்கான இடமாக உள்ளது. பழமையான வீடுகள். காசநோய் பாதித்த லியான் . பள்ளிக்குச் செல்லும் அவனது தங்கை. வீட்டின் பராமரிப்பாளர் லாவோ ஹுவாங் என்று ஒவ்வொருவராக அறிமுகமாகிறார்கள்.
எட்டு ஆண்டுகள் கடந்து போன திருமணமவாழ்வில் யுவென் ஏமாற்றமடைந்திருக்கிறள். சமைப்பது. வீட்டுப்பணிகள் செய்வது பூத்தையல் செய்வது, கணவனுக்குத் தேவையான பணிவிடைகள் செய்வது, எனத் தொடரும் அவளது வாழ்வில் மாற்றமேயில்லை. ஆனால் மாற்றத்திற்காக ஏங்குகிறாள்.
ஒரு நாள் அவளது கணவனின் நண்பன் ஜிச்சென் விருந்தினராக வருகை தருகிறான். அவன் யுவெனின் பழைய காதலன். அந்த உண்மை அவளது கணவனுக்குத் தெரியாது. மருத்துவரான ஜிச்சென் லியானை பரிசோதனை செய்கிறான். காசநோயின் தீவிரத்தை விடவும் இதயம் மிகவும் பலவீனமாக உள்ளதாகச் சொல்கிறான்.
யுவான் தனது பழைய காதல்நினைவுகளில் மூழ்க ஆரம்பிக்கிறாள். ஜிச்செனுக்குள்ளும் அந்தக் காதல் துளிர்விடுகிறது. ஆனால் நோயாளியான கணவனை விட்டு அவனுடன் வந்துவிட முடியாது என யுவான் உறுதியாகச் சொல்கிறாள். தான் இப்போதும் அவளைக் காதலிப்பதாக ஜிச்சென் மன்றாடுகிறான். அவளுக்குக் கணவனைப் பிடிக்கவில்லை. ஆனால் காதலனை ஏற்றுக் கொள்வதில் மனத்தடை இருக்கிறது
இந்நிலையில் லியானின் தங்கை சியு மருத்துவரான ஜிச்செனுடன் நெருங்கிப் பழகுகிறாள். அவர்கள் ஒன்றாக நடனமாடுகிறார்கள். நகரச்சுவரில் கைகோர்த்து நடக்கிறார்கள். விளையாடுகிறார்கள். அது யுவெனைப் பொறாமை கொள்ள வைக்கிறது.
ஜிச்சென் தனது தங்கையை மணந்து கொண்டால் நன்றாக இருக்கும் என லியென் நினைக்கிறான். இதைப்பற்றிப் பேசும்படி யுவானிடம் வேண்டுகிறான். யுவான் வேண்டுமென்றே தனது காதலனிடம் அவன் லியெனின் தங்கையைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறாள். இதைக் கேட்டு ஜிச்சென் கோபம் கொள்கிறான்

பழைய காதலைத் தொடர வேண்டுமா. அல்லது கணவனுக்கு உண்மையாக நடந்து கொள்ள வேண்டுமா என்ற யுவெனின் மனக்குழப்பத்தைப் படம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறது.
இரவில் ஜிச்செனைத் தேடி அவனது அறைக்கு வரும் போது யுவென் நடந்து கொள்ளும் விதம். படகில் செல்லும் போது அவளது மனநிலை. ஒன்றாகக் குடிக்கும் போது வெளிப்படும் உணர்ச்சிகள் என அவளது மனச் சலனங்களைப் படம் உண்மையாகப் பதிவு செய்திருக்கிறது.
ஒரு நாள் இரவு ஜிச்சென், லியான், யுவென் மற்றும் சியு என அனைவரும் சேர்ந்து மது அருந்தியபடி விளையாடுகிறார்கள். அப்போது லியான் தனது நண்பனுக்கும் மனைவிக்கும் இடையிலுள்ள காதலை அறிந்து கொள்கிறான். அவள் சந்தோஷமாக இருப்பதற்குத் தான் தடையாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறான். நண்பனிடம் பேச்சுவாக்கில் அவன் யுவானை மணந்து கொண்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று சொல்கிறான். ஜிச்சென் மனதில் இப்போதும் அந்த எண்ணம் இருப்பதால் அவன் குற்றவுணர்வு கொள்கிறான்.
நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்தினைக் கதையை இப்படம் நினைவுபடுத்தியது. அதிலும் மருத்துவர், நோயாளி. பழைய காதலி கதை தான் மையச்சரடு. சீனப்படத்தின் கிளைமாக்ஸ் வேறுவிதமாக உள்ளது.
ஐந்தே கதாபாத்திரங்கள். ஒரே வீடு. மேடைநாடகம் போலவே காட்சிகள் அமைக்கபட்டிருக்கின்றன. நீண்ட காட்சிகள் மெதுவாகவும் நீளமாகவும் இருக்கின்றன. , மேலும் கேமரா கதாபாத்திரங்களைப் பின்தொடரும்போது சின்னஞ்சிறு அசைவுகள் கூடத் துல்லியமாக வெளிப்படுத்தபடுகின்றன.

விளக்கை அணைப்பது. விளக்கைத் தூண்டிவிடுவது. கதவை மூடுவது. கண்ணாடி முன்பாக நின்று தன்னைப் பார்த்துக் கொள்வது என யுவெனின் இயல்பான செயல்கள் கூட அவளது மனதின் குழப்பத்தையே வெளிப்படுத்துகின்றன. யுவென் கதாபாத்திரத்தில் வெய் வெய், சிறப்பாக நடித்துள்ளார்.
தன்னைத் திருமணம் செய்து கொண்டு வாழ்வில் எந்த இன்பத்தையும் யுவென் அனுபவிக்கவில்லையே என லியான் வருந்துகிறான். நோயிலிருந்து தான் மீள முடியாது என அவன் நம்புகிறான். தனது மரணம் அவளுக்கு விடுதலை அளிக்கும் என்றும் நினைக்கிறான். ஆனால் பழைய நண்பனின் வருகை அவனது மனதில் வாழும் ஆசையை உருவாக்குகிறது.
ஒரு காட்சியில் யுவென் தனது கணவன் இறந்து போனால் மட்டுமே தான் முடிவு எடுக்க முடியும் என்று சொல்கிறாள். தன்னை வருத்திக் கொள்ளும் லியான் தூக்க மாத்திரைகள் இல்லாமல் உறங்க முடியாத நிலையில் இருக்கிறான். அதே தூக்க மாத்திரை தனக்கும் வேண்டும் என மருத்துவர் ஜிச்சென் கேட்டு வரும் காட்சி அழகானது.
தனது உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு வாழும் யுவென் ஒருமுறை கணவன் முன்பாகவே தனது மனதில் ஒளிந்துள்ள ஆசையை வெளிப்படுத்திவிடுகிறாள். அன்றிரவு அவளுக்கும் தூக்கமில்லாமல் போய்விடுகிறது
வசந்தகாலத்தின் வருகை என்பது ஒரு குறியீடு. நகரச்சுவர் என்பது அவர்களின் எல்லை. அதுவும் குறியீடே. யுவென் டாக்டர் அறையில் கொண்டு வந்து வைக்கும் பூச்செடி, சியூ தரும் போன்சாய். என ஒவ்வொரு பொருளும் மனதில் உள்ள ஆசையின் அடையாளமே,
ஆடம்பரங்கள், பிரம்மாண்டங்கள் எதுவுமில்லாமல். எளிய கதை சொல்லலில் நிஜமான உணர்ச்சிகளை, நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கபட்ட இத்திரைப்படம் சிறந்த கலைப்படைப்பாக விளங்குகிறது.
.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 676 followers

