நிழலானை

புதிய சிறுகதை. மார்ச் 13. 2026

அவர்கள் ராய பூபதிக்காகக் காத்திருந்தார்கள்.

ஐமீன் பங்களா என்று அழைக்கபடும் ராயவிலாசம் மிகப்பெரிய வீடு. ஒரு காலத்தில் அந்த வீட்டில் ஐந்து குடும்பங்கள் ஒன்றாகக் குடியிருந்தார்கள். ராய பூபதியின் அண்ணன் புகழ்மாற பூபதி தற்கொலை செய்து கொண்டு இறந்தபின்பு ஆளுக்கு ஒரு பக்கமாகப் பிரிந்து போய்விட்டார்கள்.

குடும்பச் சொத்திற்காக நடந்த வழக்கில் பூபதிக்கு இந்த மாளிகையும் கொஞ்சம் நிலமும் மட்டுமே கிடைத்தது. குடும்பத்திற்குச் சொந்தமான கோவிலை நிர்வாகம் செய்யும் பொறுப்பும் அவர் வசமே ஒப்படைக்கபட்டது.

ராய பூபதியின் முன்னோர்கள் அந்தச் சின்னக்கிராமத்தில். விண்முட்டும் கோபுரத்துடன் கூடிய சிவன் கோவிலைக் கட்டியிருந்தார்கள். சோழநாட்டுக் கோவில் ஒன்றில் மரியாதை குறைவாக நடத்தப்பட்ட காரணத்தால் அதை விடப் பெரியதாகக் கோவில் ஒன்றைக் கட்டிக்காட்டுவதாகச் சபதம் செய்து அக் கோவிலைக் கட்டியதாகச் சொல்வார்கள். முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கோவில். நாற்பதடி உயர சுற்றுச்சுவர், அகன்ற, பெரிய பிரகாரம். சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள். உள்மண்டபத்தில் நூற்றுக்கணக்கான வண்ண ஓவியங்கள். நூற்றியெட்டு இசைத்தூண்கள் கொண்ட சிறிய மண்டபம் எனக் காண்பவர்கள் பிரமித்துப் போய்விடுமளவு கோவில் கட்டப்பட்டிருந்தது.

கோவில் நிர்வாகம் முழுவதும் அவர்கள் வசமிருந்தது. கோவிலுக்குரிய நகைகள். நிலம், தானச்சொத்துகள் உள்ளிட்ட நிர்வாகத்தினைக் கவனிக்கக் கோவில் அதிகாரி ஏழுமலையை அவர்களே நியமித்திருந்தார்கள். நிலக்குத்தகையிலிருந்து வரும் பணத்தில் அவருக்கும் கோவில் பணியாளர்களுக்கும் சம்பளம் வழங்கபட்டு வந்தது.

ராயபூபதி அந்தக் கோவிலுக்கு யானை வாங்கித் தருவதாக வாக்களித்திருந்தார். அது அவரது ஐம்பதாவது பிறந்தநாளின் போது கொடுத்த வாக்குறுதி. எட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்பும் நிறைவேற்றப்பட வில்லை.

யானை வாங்குமளவு தற்போது அவரிடம் பணமில்லை. குடும்ப வழக்குகளுக்காக வாங்கிய கடனை இன்னமும் அடைக்க முடியவில்லை. பூர்வீக நிலத்தில் மிச்சம் ஒன்றுமில்லை.

பத்து ஆண்டுகளுக்கு முன்பாக அம்பாசிடர் கார் வாங்கிய வங்கிக் கடனை அடைக்க முடியாமல் போகவே பூர்வீக தங்க வாள் ஒன்றை ஹைதராபாத் வணிகருக்கு விற்று அந்தப் பணத்தில் வங்கிக் கடனை அடைக்க வேண்டியதாகியது. ஆனாலும் காருக்கு டிரைவர். பெட்ரோல் எனச் சமாளிக்க முடியாமல் போகவே கொரோனா காலத்தில் காரை விற்றுவிட்டார்.

இப்போது வெளியூர் போவதென்றால் பேருந்தில் தான் போய் வருவார். ஆனால் பஸ் வரும்வரை டீக்கடையின் முன்பாகக் காத்திருப்பதற்குப் பதிலாகப் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பரமசிவம் வீட்டினுள் உட்கார்ந்திருப்பார். பஸ் வந்து நின்றபிறகே வீட்டிலிருந்து வெளியே வருவார். சில சமயம் அவருக்காகப் பஸ் காத்துக் கொண்டிருப்பதும் உண்டு.

பரமசிவம் வீட்டில் ராயபூபதி உட்காருவதற்கென்றே மர நாற்காலி ஒன்றை வைத்திருந்தார்கள். ஜமீன் குடும்பத்தில் பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார மாட்டார்கள். வெளியூர் பயணம் என்றால் அவரது பெட்டியை தூக்கிக் கொண்டு வருவதற்காகவே சென்னகேசவன் உடன் வருவான்.

ராயபூபதி சட்டைப் பையில் பணம் வைத்துக் கொள்ள மாட்டார். ஆகவே சென்னகேசவன் தான் லெதர் பை ஒன்றில் அவரது செலவிற்காகப் பணத்தை வைத்துக் கொண்டிருப்பான். பஸ்டிக்கெட் எடுப்பது. ஹோட்டல் பில் கொடுப்பது. லாட்ஜ் அறைக்குப் பணம் கட்டுவது, துணிக்கடை பில் எனப் பல்வேறு செலவுகளுக்குப் பணம் கொடுப்பது வழக்கம். ஆகவே அவரது நிழலைப் போலச் சென்ன கேசவன் எப்போதும் உடனிருப்பான்.

மதுரையில் உள்ள ரோமன் டெய்லரிடம் தான் ராயபூபதி உடைகள் தைப்பார். ஆகவே எப்போது மதுரைக்குப் போனாலும் பத்து இருபது துணிகள் எடுத்துத் தைக்கக் கொடுத்துவிட்டு வருவார். தைத்து முடித்தபின்பு அந்த உடைகளை நேரில் கொண்டு வந்து கொடுத்து தையற்கூலி வாங்கிப் போக வேண்டும். இதற்காக டெய்லர் மாரிமுத்து வருகை தரும் நாளில் ஒவ்வொரு உடையாக அணிந்து பார்த்து பூபதி அபிப்ராயம் சொல்வார். அவர் சொல்லிய மாற்றங்களைச் செய்து திரும்பக் கொண்டு வர வேண்டும்.

இப்படி வரும் நேரங்களில் அவருக்குப் பயணத்தொகை தனியே வழங்கப்படும். அத்தோடு லட்சுமி காசு எனப்படும் ஒரு கிராம் பொற்காசு ஒன்றும் பரிசாக வழங்கப்படும். இந்தக் காலத்தில் இப்படியான நடைமுறைகளை யார் செய்கிறார்கள் என்று மாரிமுத்து நினைத்து பெருமைபட்டுக் கொள்வார்.

ராயபூபதி எந்த வரிசையிலும் நின்றது கிடையாது. நிற்பது கௌரக் குறைவு என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. அது போலவே கைதவறி கிழே விழுந்த நாணயங்களையோ, பணத்தையைக் குனிந்து எடுப்பதும் கிடையாது. அதுவும் கௌரவக் குறைவான செயலே.

அந்த ஊரில் ஒரு சினிமா தியேட்டர் இருந்தது. ஆனால் ஒருமுறை கூட அங்கே ராயபூபதி சினிமா பார்க்க சென்றதில்லை. ஒருமுறை மதுரையில் நண்பர்களுடன் பென்ஹர் படம் பார்க்க ஆசைப்பட்ட போது அவருக்காக ஒரு ஷோ காட்டினார்கள். முழுஅரங்கிலும் அவர்கள் நான்கு பேர்கள் மட்டுமே படம் பார்த்தார்கள்.

ராயவிலாசத்தில் ஒற்றை ஆள் சாப்பிடுவதற்காகப் பெரிய டைனிங்டேபிளை வைத்திருந்தார்கள். முன்பு அந்த டேபிளில் பனிரெண்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. தற்போது ஒரேயொரு நாற்காலி. அதுவும் புலிமுகம் பதித்த நாற்காலி போடப்பட்டிருந்தது. அதில் அமர்ந்து தான் சாப்பிடுவார்.

வீட்டின் சமையற்பணிகளைக் கவனித்துக் கொள்ளக் காமாட்சியும் அவளது மகள் சுபத்ராவும் இருந்தார்கள். அந்த வீட்டில் இப்போதும் விறகடுப்பு தான். பழைய வெண்கலப் பாத்திரங்களும். எவர்சில்வர் பாத்திரங்களும் இருந்தன. மண்பானைகளையோ, ஈயக்குவளைகளையோ அந்த வீட்டில் பயன்படுத்தக் கூடாது. வெள்ளித்தட்டில் தான் எப்போதும் சாப்பிடுவார். வெள்ளி டம்ளரில் தான் காபி குடிப்பார். ரங்கூனிலிருந்து பரிசாக அளிக்கப்பட்ட சீனக் குவளைகள் அலமாரியில் இருந்தன. விருந்தினர்களுக்கு அதில் காபி தரப்படுவதுண்டு.

ராயபூபதி காலையில் எழுந்து குளித்து முடித்தவுடன் ஆள் உயரகக் கண்ணாடியின் முன்பாக நாற்காலி போட்டு அமர்ந்து தனது உருவத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார்.

எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருப்பார் என்று தெரியாது. அப்படி என்ன பார்க்கிறார் என்றும் தெரியாது. வானில் செல்லும் பறவைகளை வேடிக்கை பார்ப்பதை போல மனதின் எண்ணங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாரோ என்னவோ

சில நாட்கள் காலை உணவை மறந்து கண்ணாடி முன்பாக வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருப்பார். போதும் என்று சொல்வதற்கு அந்த வீட்டில் உறவு எவருமில்லை.

ராயபூபதி பெரிய மீசையும் நாடக நடிகர் போல நீண்டு தோள்வரை விரிந்த சிகையும் கொண்டிருந்தார். சீரற்ற புருவங்கள். ரகசியங்கள் புதைந்த கண்கள். அவர் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கு நிறையக் கதைகள் உலவின. அதில் ஒன்று வெள்ளைக்காரப் பெண்ணைக் காதலித்தார் என்பது. அந்தத் திருமணம் நடக்கவேயில்லை.

சென்னகேசவனின் அய்யா ஜமீன் பங்களாவில் வண்டியோட்டியாக இருந்தவர். ஆகவே சென்னகேசவன் சிறுவயது முதலே அந்த மாளிகையில் வளர்ந்தான்.

ராயபூபதி தனது இளமையில் பேரழகுடன் இருந்தார். தனது பள்ளிப்படிப்பை ஊட்டியில் படித்திருந்தார். கல்லூரியில் படிக்க லண்டன் அனுப்பி வைக்கபட்டார். ஆனால் படிப்பை விடவும் உல்லாசத்தில் ஆர்வம் அதிகமாகி கைப்பொருளை இழந்தார் என்பதோடு லண்டனில் கிளாரா எட்வின் கொலைவழக்கில் சிக்கிக் கொண்டு கைது செய்யப்படும் நெருக்கடியும் ஏற்பட்டது.

தனது செல்வாக்கை பயன்படுத்தி ராயபூபதியின் தந்தை அவரைப் பிரச்சனையிலிருந்து விடுவித்து இந்தியா வரச் செய்தார். அதன்பிறகு பந்தயக்குதிரைகளை விலைக்கு வாங்குவதிலும். ஊர் ஊராகப் போய்க் குதிரைப் பந்தயத்தில் கலந்து கொள்வதிலும் ராயபூபதி ஆர்வமாக இருந்தார். அதிலும் அதிகம் பொருள் இழப்புகளை மட்டுமே அடைந்தார்,

இரண்டு கட்சிகள் அவரைத் தேர்தலில் நிற்கும்படியாக வற்புறுத்தினார்கள். எவன்கிட்டயும் ஒட்டுக் கேட்டுப் போய் நிற்க எனக்கு விருப்பமில்லை என்று மறுத்துவிட்டார்.

இப்போதும் ராயவிலாசத்தின் வாசலில் யாரும் பைக், காரை நிறுத்திவிட முடியாது. வீட்டுச்சுவரில் போஸ்டர் ஒட்டிவிட முடியாது. தபால் கொடுப்பவர் கூடக் கேட்டில் தொங்கவிடப்பட்ட பையில் தான் போட்டுப் போக வேண்டும். வீட்டைச் சுற்றிலும் இருந்த பூச்செடிகள் கவனிப்பார் அற்று வாடிப்போய்விட்டன. முகப்பில் இருந்த நீருற்றுவேலை செய்யவில்லை. பழைய குதிரைவண்டிகளில் ஒன்று அச்சு முறிந்து வீட்டின் பின்பக்கம் நிறுத்தப்பட்டிருந்தது.

பழைய கௌரவம். பழைய கர்வம் இரண்டும் மட்டுமே அவரிடமிருந்தது. சூரிய வெளிச்சம் மட்டுமே அவர்கள் அனுமதிக்குக் காத்திருக்காமல் வீட்டிற்குள் பிரவேசித்து நிரம்பியது. திறக்கப்படாத நிறைய அறைகள் கொண்ட ராயவிசாலம் தற்போது கைவிடப்பட்ட நோயாளியைப் போலிருந்தது. ஒரு நாள் கனவில் அந்த மாளிகை புதிய வண்ணம் பூசப்பட்டு அலங்கார விளக்குகள் எரிய வீடெல்லாம் ஆட்கள் நடமாட்டமும் சிரிப்பொலியும் இருப்பதாகக் கண்டார். அப்படியொரு காட்சி நிஜத்தில் நடக்கபோவதில்லை என்ற நிதர்சனம் பூபதிக்கு ஆழமான மனவருத்ததை ஏற்படுத்தியது. .

••

ராயபூபதியின் அண்ணன் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என அந்தக் குடும்பத்திற்கே புரியவில்லை. அண்ணனுடன் பூபதி மிகவும் நெருக்கமாக இருந்தார். எல்லாவற்றையும் அவர்கள் வெளிப்படையாகப் பேசிக் கொள்வார்கள். எதற்காகவும் அண்ணன் கவலைப்பட்டோ, புலம்பியோ பூபதி பார்த்ததேயில்லை. அண்ணனுக்குச் சில சினிமா நடிகர்கள். நடிகைகளுடன் நட்பிருந்தது. அவர்களை வேட்டையாட அழைத்துச் சென்று காட்டுபங்களாவில் தங்க வைத்து உபசரித்திருக்கிறார். அண்ணனை சினிமா எடுக்கச் சொல்லி அவர்கள் வற்புறுத்தினார்கள். அது நம்ம கௌரவத்துக்குச் சரிவராது என அண்ணன் மறுத்துவிட்டார்.

அவரது அறையின் சுவரில் நடிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. ஒரு நடிகை அண்ணனுக்கு யாஷிகாகேமிரா ஒன்றை பிறந்தநாள் பரிசாக அளித்தாள். அந்தக் கேமிராவால் அண்ணன் வீட்டில் உள்ள அனைவரையும் நிறையப் படம் எடுத்தார். அதில் சில கொடைக்கானல் பங்களாவில் மாட்டப்பட்டிருக்கின்றன.

அண்ணனுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கையிருந்தது. ரத்தினக்கற்களை ஆராய்வதில் ஆர்வம் கொண்டிருந்தார். நெற்றியில் சந்தனக்கீற்றும், சிரித்த முகமும் கொண்ட அண்ணன் யாரையும் கடிந்து பேசியோ, கோபத்தில் திட்டியோ பூபதி கண்டதேயில்லை.

ஆனால் ஒரு வெள்ளிக்கிழமை மதியம் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருந்த அண்ணன் திடீரெனத் தனது அறைக்குள் சென்று கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு செத்துப் போனதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த மரணம் அவரை உலுக்கிவிட்டது. அதன்பிறகு ராயபூபதி குதிரை பந்தயத்திற்குச் செல்வதை நிறுத்திக் கொண்டுவிட்டார். அண்ணன் இறந்து போன அறையை நிரந்தரமாகப் பூட்டிவிட்டார்கள். ஆனால் இப்போதும் சில இரவுகளில் மூடப்பட்ட அறையின் முன்பாக நின்றபடி அண்ணன் குரலுக்காக ஏங்கிக் கொண்டிருப்பார்.

அண்ணனை சாவை நோக்கித் துரத்திய பிரச்சனை எதுவென அவரால் கண்டறிய முடியவில்லை. ஆனால் அந்த மரணம் வீட்டை பிளவுபடச் செய்தது. உறவுகளின் உண்மை முகத்தை அறிந்து கொள்ள வைத்தது. நிறையப் பொருள் இழப்புகளையும் மனவேதனையினையும் உருவாக்கியது.

பழைய நினைவுகள் உருவாக்கும் கொந்தளிப்பை மறப்பதற்காகக் குடிக்கத் துவங்கினார். ஆனால் குடி பழைய நினைவுகளை அதிகப்படுத்தியது. என்றோ நடந்தவற்றை நேற்று நடந்தது போலக் காட்டியது. ஆனால் அந்த நினைவுகளை அவர் விரும்பினார். நாள்பட்ட தனிமையை இன்றைய வாழ்க்கையின் ஏமாற்றங்களைக் குடி மறக்க வைத்தது. பல நாட்கள் முழு இரவிலும் அவர் குடித்துக் கொண்டிருப்பார். சில சமயம் கையில் ஒரு டார்ச்லைட்டை அடித்தபடியே எதையோ தேடிக் கொண்டிருப்பார். யாரை, எதைத் தேடுகிறார் என்று தெரியாது.

ராயபூபதி பிறந்த எட்டு மாதங்களில் அன்னையை இழந்தவர். ஆகவே அவருக்கு அம்மாவின் முகம் எப்படியிருக்கும் என்று கூடத் தெரியாது. ஜமீன் குடும்பங்களில் பெண் உருவங்களைச் சித்திரம் வரையவோ, புகைப்படம் எடுக்கவோ மாட்டார்கள். ஆகவே அப்பாவின் ஆள் உயர ஓவியம் போல அம்மாவின் சித்திரமில்லை. ஆனால் அம்மாவின் புடவைகள். வளையல்கள். அம்மா கையெழுத்தில் எழுதி வைத்த சாமிபாடல்கள் கொண்ட நோட்டு ஒரு அலமாரியில் இருந்தன அந்தக் கையெழுத்தின் வழியே அம்மாவைத் தொடுவதைப் போல உணருவார். அவரை வளர்த்தது ராஜி அத்தை தான். அத்தையும் ,மாமாவும் அவர்கள் பிள்ளைகளும் அதே வீட்டில் ஒன்றாக வசித்தார்கள். அதே அத்தை தான் பின்னாளில் அவர் மீது சொத்திற்காக வழக்கு போட்டார் என்பது விசித்திரமானது.

ராயவிலாசம் வீட்டிற்குக் கதவு எண் கிடையாது. அது தான் ஊரின் முதல்வீடு. ஊரில் நடக்கும் திருமணம் மற்றும் குடும்ப விழாக்களுக்கு முதல் பத்திரிக்கை அவருக்கே வழங்கப்படும். ஜமீன் பள்ளிக்கூடம் என்று அவர்களின் மூதாதையர்கள் கட்டிக் கொடுத்த பள்ளிக்கூடம் இப்போதும் செயல்பட்டு வருகிறது. அதன் ஆண்டுவிழாவில் அவரது பெயரை தலைமை என்று எப்போதும் போட்டுவிடுவார்கள். ஒரு வருஷம் கூடப் பள்ளிக்கூட விழாவில் அவர் கலந்து கொண்டதில்லை.

ராயபூபதி திருமண வீடுகளுக்குப் போனாலும் அங்கே சாப்பிட மாட்டார். ஊரில் அவருக்கு ஒரேயொரு நண்பன் இருந்தான். அது பள்ளி வயதில் விளையாட்டு தோழனாக இருந்த ஐயப்பன். இருவருக்கும் ஒரே வயது. சிறுவயதில் ஒன்றாகக் கால்பந்து விளையாடியிருக்கிறார்கள். ஒன்றாக முயல்வேட்டைக்குப் போயிருக்கிறார்கள். ராயபூபதியை பதி என்று அழைப்பது ஐயப்பன் மட்டுமே. அப்படி ஐயப்பன் அழைப்பதை பூபதியும் விரும்பினார்

ஜமீன் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியராக ஐயப்பன் வேலை செய்தார். ஐயப்பனுக்கு மட்டும் தான் ராமவிலாசத்திற்குள் எப்போதும் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

மற்றவர்கள் சென்னகேசவனிடம் கேட்டு அனுமதி பெற்று பூபதி சொல்லும் நேரம் தான் அவரைப் பார்த்து பேச முடியும். பெரும்பாலும் எவரையும் அவர் சந்திக்க மாட்டார். அரசு அதிகாரிகள் என்றால் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசி அனுப்பி வைப்பார். அவர் மனதில் என்ன நினைக்கிறார் என்று வெளியாட்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். எந்த முடிவையும் உடனே எடுக்கவும் மாட்டார்.

பூபதியைத் தேடி வரும் நாட்களில் ஐயப்பன் ஊர் நடப்புகளைப் பேசிக் கொண்டிருப்பார். அப்படியா என ஒரு வார்த்தை மட்டுமே பூபதி கேட்பார். மற்ற நேரங்களில் சிந்தனை வசப்பட்டவரை போலக் காரை உதிர்ந்த சுவரை வெறித்துப் பார்த்தபடி இருப்பார். கடந்தகாலம் எனும் புதைசேறிலிருந்து அவரால் விடுபட முடியாது.

ராயபூபதிக்கு அவசரமாகப் பணம் தேவைப்படும் நேரங்களில் ஐயப்பன் எவரிடமாவது கடன் வாங்கிக் கொடுப்பார். சில சமயம் பிரிட்டீஷ் அரசாங்கம் ஜமீனுக்கு அளித்த பதக்கங்கள் மற்றும் பரம்பரை வெள்ளிப்பொருட்களை ரகசியமாக விற்றுப் பணம் கொண்டு வந்து தருவதும் உண்டு. ஐயப்பனின் ஏற்பாட்டில் பெங்களூரில் இருந்து வந்த ஒருவர் ஜமீன் வீட்டிலிருந்த வெளிநாட்டு தபால்தலைகளை விலை கொடுத்து வாங்கிப் போனதுண்டு. பழைய சவுக்கு, மான்கொம்பு போன்றவற்றையும் கூட ஐயப்பன் விற்றுக் கொடுத்திருக்கிறார்.

இவ்வளவு நெருங்கிப் பழகியிருந்தும் ஐயப்பன் வீட்டிற்கு ராயபூபதி ஒருமுறை கூடப் போனதில்லை. அதே ஊரில் சாவடி தாண்டி ஐயப்பனின் வீடு இருந்தது.

ஐயப்பன் தனது பிறந்தநாளின் போது மனைவி பிள்ளைகளுடன் வந்து பூபதியிடம் ஆசி வாங்கிப் போவார் அது போன்ற நேரங்களில் அவனுக்குப் பூபதி கைநடுங்க திருநீறு பூசிவிடுவார். ஒரு துண்டு கற்கண்டை அவருக்கு அளிப்பார்.

ஒருமுறை ஐயப்பன் மனைவியிடம் சொன்னார்

“இவனுக்கு நான் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கும்மா.. காலம் வரணும். “

அப்படிச் சொல்லும் போது அவரது குரல் நடுங்கியது

“அதெல்லாம் இருக்கட்டும் பதி“ என்றார் ஐயப்பன்

“இவன் இன்னும் சின்னபயலாவே இருக்கான். எனக்குத் தான் கிழடுதட்டிப் போச்சு“ என்று மெலிதாகச் சிரித்தபடியே “நீ நல்லா இருப்பேடா“ என்று ராயபூபதி வாழ்த்தினார்

ஐயப்பன் இத்தனை ஆண்டுகளாக அவரோடு நெருங்கிப் பழகிய போதும் எதையும் எதிர்பார்க்கவில்லை.

சில நாட்கள் பூபதி இரவில் ஐயப்பனை அழைத்து வரும்படி சென்னகேசவனை அனுப்பி வைப்பார். இந்துஸ்தானி இசைதட்டு ஒலிக்க பூபதி தனியே குடித்துக் கொண்டிருப்பார். மொழி தெரியாத பாடலை ரசித்தபடி பூபதி குடிப்பதை ஐயப்பன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்.

“என்னம்மா பாடுறான். பாட்டுக் கேட்கும் போது மட்டும் தான் சாமி இருக்குனு நம்பத் தோணுது. ஆண்டவனோட கருணை இல்லாமல் இப்படிப் பாட முடியாது.  அடுத்தபிறவியில நானும் பாடகனாப் பிறக்கணும்“ என்பார் பூபதி.

இந்துஸ்தானி இசை கேட்கும் பழக்கம் ராயபூபதிக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் வருசத்தில் சில மாதங்கள் இசை கேட்பதற்காகவே வட இந்தியா போய்விடுவார். அந்த நாட்களிலும் சென்னகேசவன் உடன் செல்வான். கச்சேரி நடக்கும் இடங்களில் உட்கார இடம் கிடைக்காமல் நின்றபடியே ராயபூபதி இசைகேட்பதை வியந்து பார்த்துக் கொண்டிருப்பான்.

அவரிடம் நூற்றுக்கான இசைத்தட்டுகள் இருந்தன. உஸ்தாத் அப்துல் கரீம் கான். பேகம் அக்தர். அலி பிரதர்ஸ் பாடுவதை ராயபூபதி விரும்பிக் கேட்பார். இசை கேட்டுக் கொண்டிருக்கும் போது அவரது வலதுகை மீசையைத் தடவியபடி இருக்கும். திடீரெனத் தொடர்பில்லலாமல் சொல்லுவார்.

“நான் செத்துப் போனா நீ தான் ஐயப்பா கொள்ளி வைக்கணும்“

“அப்படிச் சொல்லாதே பதி. நீ நூறு வருஷம் இருப்பே“

“எதுக்கு. இன்னும் கிடந்து லோல் படவா.. நான் எல்லாம் படுத்துக்கிட்டா. ஒரு நாயும் என்னைக் கவனிக்காது ஐயப்பா“

“ஏன் நான் பாத்துகிட மாட்டனா“

“அந்தச் சுமையும் உன்மேல இறக்கி வைக்க ஆசைப்படலை. நடமாட்டம் இருக்கும் போதே செத்துரணும். “

“நீயா உன்னை வருத்திக்கிடுறே பதி.. நீ சந்தோஷமா இருக்கலாம்“

“எனக்கு என்னைப் பிடிக்கலை ஐயப்பா.. நான் சரியில்லை.. “

“ஏன் எப்பவும் இப்படிச் சொல்லிகிட்டு இருக்கே.. மனசை கசக்கவிடாதே பதி. “

“பெரிய அண்ணன் இப்படித் தான் சொல்லும். ஏன் ஐயப்பா. எங்கண்ணே செத்துப் போனான். என்ன பிரச்சனை.. உனக்கு ஏதாவது புரியுதா“

“நடந்ததைக் கிளறக்கூடாது. வாழ்ந்தவரைக்கு உங்க அண்ணன் சந்தோஷமா இருந்தார்லே“

“அப்போ ஏன் செத்தார்.. யார்மேல கோவம். என்ன பிரச்சனை. ஏன்கிட்ட ஏன் ஒரு வார்த்தை சொல்லலை“

ஐயப்பனிடம் பதில் இல்லை. அண்ணன் நினைவுகள் வந்தவுடன் குடிப்பதை நிறுத்திவிட்டு மூடப்பட்டிருந்த அண்ணன் அறையை நோக்கி நடந்து போகத் துவங்குவார். அந்தக் கதவை தொட்டுக் கொண்டு ஏண்ணே.. இப்படிப் போயிட்டே என்று சப்தமிடுவார். பின்பு தனது நாற்காலியை நோக்கித் திரும்பி வந்து வேறு இசைத்தட்டை ஒலிக்க விட்டபடி கண்களை மூடிக் கொள்வார். இசை அவரது மனக்கொந்தளிப்பை ஆற்றுபடுத்தும். பின்னிரவின் அமைதி சிறுநதியென ஒடிக் கொண்டிருக்கும். அதன் கரைகளில் இருவரும் அமர்ந்திருப்பார்கள். .

“உனக்குத் தூக்கம் வருதா ஐயப்பா… இங்கேயே படுத்துகிடுறயா.. ஏன் கூடப் பழகுனா.. இந்த இம்சை தான்.. நீ ஏன்டா நான் கூப்பிட்டதும் வந்து நிக்குறே.. மாட்டேனு சொல்ல வேண்டியது தானே“

ஐயப்பன் பதிலற்று சிரிப்பார்

“இந்த வீட்ல குடியிருக்கிற சிலந்தி நான். அதுல வந்து மாட்டிகிட்ட பூச்சி நீ… சரிதானே“

அதற்கும் ஐயப்பன் சிரிப்பார்

“ஐயப்பா.. இந்த வீடு என் தலையில விழுந்து செத்துப் போகணும்னு என் ஆசைடா. நான் எதுக்குடா இந்த வீட்டுக்குள்ளேயே சுத்திகிட்டு இருக்கேன். வேற ஊருக்குப் போய்த் தொலைய வேண்டியது தானே.. ஏன்டா என்னாலே முடியலை“

ஐயப்பன் பதில் சொல்லமாட்டார். போதை முற்றிய நிலையில் ராயபூபதி நாற்காலியிலே உறங்கிவிடுவார். அதன்பிறகே ஐயப்பன் தனது வீட்டிற்குப் புறப்படுவார். ஒரு இரவு கூட அவர் ராயவிலாசத்தில் தங்கியதில்லை.

••

ராயபூபதியின் ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டுக் கோவிலில் விசேச பூஜை நடைபெற்றது. அன்றைக்குப் பூபதி பட்டுவேஷ்டி சட்டையில் கோவிலுக்கு வந்திருந்தார். அவர்களுக்குச் சொந்தமான கோவில் என்றாலும் ஆண்டிற்கு ஒரு முறை அவர் கோவிலுக்கு வருவதே அபூர்வம். நிர்வாகி தான் கணக்கு வழக்குகளை வீட்டிற்குக் கொண்டு வந்து விளக்குவார். சில சமயம் வங்கி அதிகாரிகளையும் அழைத்துக் கொண்டு வந்து விவரிப்பார்.

பூபதியின் பிறந்தநாளை முன்னிட்டுக் கோவிலில் அன்னதானம் போட்டார்கள். திருவிழா கமிட்டியாக நியமிக்கபட்டிருந்த வேதாசலமும் முத்துமணியும் அவரிடம் கோவிலுக்கு யானை வேண்டும் என்ற கோரிக்கையை அன்றைக்கு வைத்தார்கள்

“அதுக்கென்ன நானே யானையை வாங்கிக் குடுக்குறேன் “என்றார் பூபதி

“திருவிழாக்குள்ளே யானை வந்துட்டா. ரொம்ப விசேசம்“ என்றார் வேதாசலம்

“அப்படியே செஞ்சிரலாம்“ என்றார் பூபதி

“யானையைக் கோவில்ல வச்சிகிடுற அரசாங்கத்துகிட்ட அனுமதி வாங்கணும். “ என்று குறுக்கிட்டுச் சொன்னார் ஏழுமலை

“யானையை வாங்கிக் குடுக்க வேண்டியது என் பொறுப்பு. அரசாங்க அனுமதி எல்லாம் நீங்க பாத்துக்கோங்க“ என்றார் பூபதி

“தென்வடல் கோவிலுக்குப் புதுசா யானை வாங்கியிருக்காங்க. அது குருவாயூர்ல வாங்கினதா பேச்சு“

“அதை விசாரிச்சி சொல்லுங்க. அங்கேயே நாமளும் யானை வாங்கிரலாம்“ என்றார் ராயபூபதி

ஒரு வார காலத்தின் பின்பு யானை வாங்குவதற்கு யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதற்கான விபரங்களைக் கோவில் நிர்வாகி கொண்டு வந்து கொடுத்தார்

அடுத்த வாரமே கேரளாவிற்குப் போவது என்று பூபதியும் முடிவு எடுத்துவிட்டார். அந்தப் பயணத்திற்காகப் புறப்பட்ட நாளில் சென்னகேசவன் தயங்கி தயங்கி கேட்டான்

“யானை வாங்குறதுக்குப் பணம்“

“முதல்ல விசாரிச்சிட்டு வருவோம். நாம ஆசைப்பட்ட மாதிரி யானை கிடைச்சா… பணத்தை ஏற்பாடு பண்ணி வாங்குவோம்“

அதுவும் நல்ல யோசனை தான் என்று சென்னகேசவன் தலையாட்டிக் கொண்டான்.

அவர்கள் கேரளப்பயணத்திற்கான செலவிற்காகப் பழைய வேட்டைதுப்பாக்கிகள் இரண்டினை விற்றுப் பணம் ஏற்பாடு செய்து கொடுத்தார் ஐயப்பன்

“நாம தான் வேட்டைக்குப் போறதில்லையே.. சுவத்துல அலங்காரமா துப்பாக்கி மாட்டி வச்சி என்ன ஆகப்போகுது“ என்றார் ராயபூபதி

அந்தப் பணத்தில் அவர்கள் குருவாயூர் சென்றார்கள். நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கினார்கள். யானையை வாங்குவது கார் வாங்குவது போன்ற எளிய விஷயமில்லை. தேடியலைந்து ஏமாற்றமாகி ஊர் திரும்ப நினைத்த நாளில் மங்களத்துவீட்டின் கொச்சுராமனை பற்றி அறிந்து கொண்டார்கள்.

கொச்சுராமன் மங்களத்துமனையின் கணக்குவழக்குகளைப் பார்க்கிறவன். நாற்பது வயது. ஐந்தடிக்குள் இருப்பான். ஏறுநெற்றி. பெரிய உதடுகள். சாயவேஷ்டி சட்டை. கையில் எப்போதும் லெதர்பை. குடை. கொச்சை தமிழ்.

கொச்சுராமன் அவர்கள் தங்கியிருந்த விடுதி அறைக்கு வந்து பெருங்குளத்துமனையில் இரண்டு யானைகள் இருப்பதாகச் சொல்லி அழைத்துச் சென்றான். யானை வாங்க வந்திருப்பவரின் குலம். பெயர். பிறந்த நட்சத்திரம் விசாரித்தார்கள். யானையை நேரில் காட்டுவதற்கு முன்பு ஒரு ஜோதிடர் அவற்றைச் சரிபார்த்தார். பின்பு அவர்களை யானையைக் காட்டுவதற்காகத் தோப்பிற்கு அழைத்துப் போனார்கள். அங்கே கம்பீரமான தோற்றத்தில் பெண் யானை நின்றிருந்தது. அந்த யானையை விற்பதற்கு அவர்கள் முன்வந்தார்கள்.

யானையின் விலை ஒரு கோடி ரூபாய் என்று கேட்டதும் சென்னகேசவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“யானையை ஊருக்கு கொண்டுவந்துட்டுப் பணத்தை வாங்கிட்டு போக முடியுமா“ எனக்கேட்டார் பூபதி

“ராமேந்திரன் முதலாளிக்குப் பணத்தைக் கொடுத்துச் செட்டில் பண்ணினதுக்கு அப்புறமா. தான் யானை நம்ம கைக்கு வரும். அதுவும். கேரளாவில இருந்து யானையைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டு போகப் பெர்மிட் வாங்கணும். நிறையப் பேப்பர் வொர்க் இருக்கு முதலாளி“ என்றான் கொச்சு ராமன்

“அதெல்லாம் நீ தான் பாத்துகிடணும். நான் ஊருக்குப் போய்ப் பணம் கொடுத்து அனுப்புறேன்.. அதுக்குள்ளே யானையை வேற பார்ட்டிக்கு வித்திறக் கூடாது“

“கொடுத்த வாக்கு மாறாது முதலாளி. என் கமிஷன்“ என்று தலையைச் சொறிந்தான் கொச்சுராமன்

சென்னகேசவனை அருகில் அழைத்து ஏதோ சொன்னார் ராயபூபதி

கொச்சுராமன் சந்தோஷமாகத் தனக்கு அளிக்கபட்ட கற்றைபணத்தைப் பெற்றுக் கொண்டு ராயபூபதி ஏறுவதற்காகக் கார் கதவை திறந்துவிட்டான்.

இது நடந்து ஆண்டுகள் ஒடிப்போய்விட்டன. ஆனால் யானையை அவர்கள் வாங்கவில்லை. நாலைந்து முறை கொச்சுராமன் தொலைபேசியில் அழைத்துப் பேசிப் பார்த்து ஒய்ந்துவிட்டான்.

கோவில் நிர்வாகிகளாலும் வற்புறுத்த முடியவில்லை. முடிவாக இந்த ஆண்டாவது யானையை அவர் வாங்கித் தருவாரா எனக்கேட்டுப் போவதற்காகவே இன்றைக்கு வந்திருந்தார்கள்

••

கண்ணாடியில் தெரியும் தனது உருவத்தை ராயபூபதி பார்த்துக் கொண்டிருந்தார். புருவ ரோமங்களில் ஒன்று நீட்டிக் கொண்டிருந்தது. கண்ணுக்கு கீழே கருவளையம் பெரியதாகியிருந்தது. சென்னகேசவன் தயக்கத்துடன் நெருங்கி வந்து சொன்னான்

“கோவில்ல இருந்து பாக்கவந்துருக்காங்க“

“என்னவாம்“

“யானை விஷயமா கேட்டுட்டு போகலாம்னு“

“உட்காரச் சொல்லு. வர்றேன்“

“அவங்க வந்து நேரமாச்சி“

“இருக்கட்டும். பாக்குறேன்“

அவர்கள் பனிரெண்டு மணி வரை காத்திருந்தார்கள். ராயப் பூபதி அவர்களைச் சந்திக்கவேயில்லை. அவர்களிடம் சொல்வதற்குப் பதில் இல்லை.

இது நடந்த சில நாட்களில் அவரது வீட்டின் முன்பாக இரண்டு சிறுவர்கள் யானை வருது.. யானை வருது புளுகுமூட்டை யானை வருது என்று சப்தமிட்டார்கள். சென்னகேசவன் அந்தச் சிறுவர்களை விரட்டியடித்தான். ஆனால் அதன் மறுநாளில் இருந்து பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் ஒன்றுகூடி புளுகுமூட்டை யானை புளுகுமூட்டை யானை எனச் சப்தமிட்டபடியே அந்த வீட்டைக் கடந்தார்கள்.

கோவில் சுவரில் கூடக் கரியில் யானை படம் வரையப்பட்டுப் புளுகுமூட்டை யானை என்று எழுதப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள்.

சென்னகேசவன் அந்தக் கேலிப் பேச்சை வெறுத்தான். கெட்டவார்த்தைகளால் சிறுவர்களைத் திட்டினான். ஆனால் ராயபூபதி கோபம் கொள்ளவில்லை. அவர்கள் உண்மையைத் தானே சொல்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டார்

வாங்கித் தரமுடியாத விஷயத்தை ஏன் ஒத்துக் கொண்டோம் என்று தன்மீதே எரிச்சல் அடைந்தார்.

ஐயப்பன் ஒரு நாள் பேப்பரில் வெளியான செய்தி ஒன்றை காட்டுவதற்காக வந்திருந்தார். அந்தச் செய்தியை வாங்கிப் படித்த பூபதியின் முகம் மாறியது

“நிஜயானைக்குப் பதிலா இயந்திர யானை வாங்கிக் கோவிலுக்குக் கொடுத்துருக்காங்க. நாமளும் அப்படிச் செய்திராலாமே பதி . பாக்க யானை மாதிரியே இருக்கு. ஸ்விட்ச் போட்டா யானை தும்பிக்கையை மேலே கீழே ஆட்டுமாம்“. என்றார் ஐயப்பன்

“சாமியை ஏமாத்தச் சொல்றியா“ எனக்கேட்டார் ராயபூபதி

“இந்த யானை விலை கம்மி. “

“ஆனா இந்த யானை லத்தி போடாதுல்லே“. என்றார் ராயபூபதி

“நிஜயானையை வச்சி பராமரிக்கிறது லேசில்ல பூபதி.. செலவு பிடிக்கும். இந்த மெஷின் யானைய கரண்ட்ல சார்ஜ் பண்ணிகிடலாம்.. “

“அந்தப் பேச்சே வேணாம். திருவிழாக்குள்ளே நிஜயானையை வாங்கிக் குடுக்குறேன். இல்லாட்டி.. நாண்டுகிட்டு செத்து போயிடுறேன். போதுமா“ எனக் கோபமாகச் சொன்னார் ராயப் பூபதி

அப்படிக் கேட்க ஐயப்பனுக்கு வருத்தமாக இருந்தது. இது நடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு ராயபூபதி சென்னகேசவனை அழைத்து “நாளைக்கு மதுரை வரைக்குப் போயிட்டு வரணும் . ஐயப்பனையும் வரச்சொல்லு“ என்றார்

“எத்தனை மணிக்கு புறப்படணும்“

“பஸ்ல போகலை. கார் சொல்லணும். ஐயப்பன்கிட்ட சொல்லு. ஏற்பாடு பண்ணுவான்“

“சொல்லிடுறேன்“

அவர்கள் இன்னோவா காரில் மதுரைக்குக் கிளம்பும் போது கூட எங்கே போகிறோம் என ராயபூபதி சொல்லவில்லை. வழியில் அவர்களும் கேட்டுக் கொள்ளவில்லை. திருமங்கலம் தாண்டும் போது பூபதி கேட்டார்

“உன்கிட்ட கொச்சுராமன் போன் நம்பர் இருக்கா“

இருக்கிறது எனச் சென்னகேசவன் தலையாட்டினான்

“அவனை நான் வரச்சொன்னேனு உடனே மதுரைக்கு வரச்சொல்லு“

“சொல்லிடுறேன்“ என்றான் சென்னகேசவன்

அவர்கள் மதுரைக்குப் போய்ச் சேரும்வரை வேறு எதையும் பேசிக் கொள்ளவில்லை. ஐயப்பனுக்கு அது பழகிப்போயிருந்தது. வழியில் எங்கேயும் காரை நிறுத்தக் கூடாது என்பது பூபதியின் உத்தரவு. அவர்கள் எப்போதும் தங்குகிற பாண்டியன் ஹோட்டலில் அறை எடுத்தார்கள். பூபதி தனியே யாரையோ பார்த்து வருவதாகச் சொல்லி புறப்பட்டுப் போனார். நள்ளிரவு வரை அவர்கள் விழித்துக் கொண்டிருந்தார்கள். பூபதி வந்து சேரவில்லை. மறுநாள் மதியம் வேறு ஒருவருடன் காரில் வந்து இறங்கினார்

ஐயப்பன் அவர் நேற்றிரவு எங்கேயிருந்தார் என்று கேட்டுக் கொள்ளவில்லை

“லோன் விஷயமா பேசிட்டு வர்றேன். நாளைக்கு நம்மளை இம்பீரியல் பேங்குக்கு வரச்சொல்லியிருக்காங்க“ என்று பூபதி சொன்னார்.

அன்று இரவு அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு ஒரு காரில் வந்து இறங்கினார் கொச்சுராமன்

“நாளைக்கு நீயும் எங்க கூடப் பேங்குக்கு வர்றே“ என்றார் பூபதி

கொச்சுராமனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் உடன்வருதாகத் தலையாட்டினார்

மறுநாள் காலை அவர்கள் முனிச்சாலையிலிருந்த வங்கி கிளைக்குப் போன போது பனிரெண்டு மணியாகியிருந்தது. வட இந்தியர் ஒருவர் மேனேஜராக இருந்தார். அவர்களை அழைத்துக் கொண்டு போன நரிக்குடி செல்வம் மேனேஜரிடம் ராயபூபதியை ஐமீன்தார் என அறிமுகம் செய்து வைத்தான்.

“எதுக்கு லோன். என்ன பிசினஸ் பண்ணப்போறீங்க“ எனக்கேட்டார் வங்கி அதிகாரி

“யானை வாங்குற

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 13, 2026 03:10
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.