காற்றில் மிதக்கிறோம்

புதிய சிறுகதை. பிப்ரவரி 9 2026.

அப்பாவும் அம்மாவும் மராத்தானில் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

இருவரும் ஒரே போலக் கறுப்பு நிற டிராக் பேண்ட். மஞ்சள் நிற காலர் இல்லாத டீசர்ட். கழுத்தில் போட்டியில் தரப்பட்ட அடையாள அட்டை. காலில் ஸ்போர்ட்ஸ் ஷு.

மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்த மினி மாரத்தான் போட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். பத்துகிலோமீட்டர் தூர ஓட்டமது. அப்பாவும் அம்மாவும் சாலையில் ஓடிக் கொண்டிருப்பதை யார் வீடியோ எடுத்தார்கள் எனத் தெரியவில்லை. இருவரும் சீராக ஓடிக் கொண்டிருந்தார்கள்.

கார் ஒட்டியபடியே சுமா செல்போனில் அந்த வீடியோவை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

அம்மா ஓடுவதை இன்றைக்குத் தான் பார்க்கிறாள். அப்பா தனது கல்லூரிநாட்களில் விளையாட்டு வீரராக இருந்தார் என்று அவளுக்குத் தெரியும். பழைய புகைப்படங்களைப் பார்த்திருக்கிறாள். ஆனால் அம்மா எந்த விளையாட்டிலும் ஈடுபட்டதாக அவளுக்கு நினைவில்லை. பக்கத்திலுள்ள முருகன் கோவிலுக்கு நடந்து போய் வருவாள். ஒருமுறை பழனி வரை பாதயாத்திரை போயிருக்கிறாள். ஆனால் இப்படிக் காலில் ஷு மாட்டிக் கொண்டு அம்மா ஓடுவாள் என நினைத்துக் கூடப் பார்த்ததில்லை

ஒய்விற்குப் பிறகு அப்பா நிறைய மாறியிருந்தார். அம்மா அப்பா இருவரும் வீட்டைச் சுற்றிய பெரிய தோட்டம் அமைத்திருந்தார்கள். அதைப் பராமரிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். சதுரங்கம் விளையாடக் கற்றுக் கொண்டு பகலில் சதுரங்கம் ஆடினார்கள். அம்மா தானே ஒருவகை வாசனைத் திரவியத்தைச் செய்யக் கற்றுக் கொண்டு வீட்டிலே அதனைத் தயாரித்தாள். தெரிந்தவர்களுக்குப் பரிசாக அளித்தாள்.

சுமா நியூசிலாந்திற்கு வேலைக்குப் போய்ப் பனிரெண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது. தனது அலுவலகத்தில் வேலை செய்யும் மலையாளியான பென்னியைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட போது அப்பா மறுக்கவில்லை. கல்யாணத்தை எப்படி நடத்த வேண்டும். சர்ச்சில் தானே கல்யாணம் நடத்தச் சொல்வார்கள் என்று மட்டும் கேட்டார்.

அம்மாவும் மறுக்கவில்லை. பதிலாக பென்னி உனக்குப் பொருத்தம் தானா எனத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தாள். பென்னி வீட்டிலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர்கள் இரண்டு வீட்டிற்கும் பொதுவாகத் திருமணத்தைக் கொச்சியிலுள்ள ஒரு ஹோட்டலில் வைத்துக் கொள்வோம் என்று சொன்னார்கள். அப்படித் தான் அவளது திருமணம் நடந்தது. ஆக்லாந்தில் அவர்கள் புது வாழ்வை துவங்கி இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிவிட்டாள். ரிச்சர்ட் பிறந்த போது பிரசவத்திற்காக ஊருக்குப் போயிருந்தாள். ரீனா பிறந்த போது பென்னியின் அம்மா ஆக்லாந்து வந்திருந்தாள்.

இரண்டு வருஷங்களுக்கு ஒரு முறை சுமா இந்தியா வருவதை வழக்கமாக வைத்திருந்தாள். ஆனால் கொரோனாவிற்குப் பிறகு பென்னி வேலை மாறியதால் கடந்த சில வருஷங்களாக வரவில்லை. பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டு வேலைக்குப் போய்வரவே நேரம் சரியாக இருந்தது.

பெரும்பாலும் ஞாயிற்றுகிழமையில் அப்பா அம்மாவிடம் போனில் பேசுவாள். அப்பா அடிக்கடி பென்னியோடு பேசுவதுண்டு. அம்மா பேசுவாள் என்பதையும் விடவும் அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பாள் என்பதே நிஜம்.

சுமாவின் திருமணம் நடந்த இரண்டு வருஷங்களில் அவளது தம்பி விக்ரம் அமெரிக்காவிற்குப் போய்விட்டான். வேறுவேறு கம்பெனிகள். வேலைகள் என மாறிக் கொண்டேயிருந்தான். எப்போதாவது இரவில் அவனை அழைத்துச் சுமா பேசுவதும் உண்டு. பெரும்பாலும் ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே பதில் சொல்வான்.

“உனக்குக் கல்யாணம் பண்ற ஐடியா இல்லையா.. யாராவது லவ் பண்ணுறயா“ எனப் பலமுறை அவனிடம் கேட்டிருக்கிறாள்

“ஐடியா இல்லை“ என்று மட்டும் பதில் சொல்வான். இத்தனை ஆண்டுகளில் யாரையாவது காதலிக்காமலா இருப்பான். அதைப் பற்றி அவளுடன் பேச விரும்பவில்லை என்றே புரிந்து கொண்டாள்.

ஒருமுறை அம்மாவிடம் பேசும் போது “கல்யாணத்தைப் பற்றி நீ அவன் கிட்ட கேட்க வேண்டியது தானம்மா“ என்றாள்

“அவன் என்ன சின்னபயலா.. அவனா சொன்னா பண்ணி வைக்கப் போறோம். நீ சொல்லலையா“ எனக் கேட்டாள்

அது தன்னைக் குத்திக் காட்டுவது போலவே சுமாவிற்குத் தோன்றியது.

“நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது உனக்குப் பிடிக்கலையா“ என நேராகக் கேட்டாள்

“அதெல்லாம் இல்லை. உனக்குத் தான் ரெண்டு பிள்ளை ஆகிருச்சே. சந்தோஷமா தானே இருக்கே“ என்றாள்

“அது தெரியலை. சந்தோஷமா இருக்க டிரை பண்ணிட்டு இருக்கேன்.. நீயும் அப்பாவும் இங்க வந்து எங்களோட இருக்க வேண்டியது தானே. அட்லீஸ்ட் மூணு மாசம் கூட இருக்கலாம்லே“

“வீட்டை போட்டுட்டு வர முடியாது “

“அந்த வீட்ல அப்படி என்னம்மா இருக்கு.. வீட்டை யாரையாவது பாத்துகிட சொல்லிட்டு கிளம்பி வாங்க“

“உங்கப்பாவை வரச்சொல்றேன்“ என்று மட்டும் அம்மா பதில் சொன்னாள்.

“அவர்கிட்ட கேட்டா நீ வரமாட்டேனு சொல்றார்“.

“அதெல்லாமில்லை. வர்றோம் “என்று சமாளித்தாள்.

இப்படிப் பலமுறை சுமா பேசிவிட்டாள். ஆனால் அப்பாவும் அம்மாவும் ஒருமுறை கூட ஆக்லாந்து வரவில்லை.

விக்ரம் கடந்த ஐந்து வருஷங்களாக வீட்டிற்கே வரவில்லை. அதைப் பற்றி அப்பா குறையாக ஒரு வார்த்தை சொல்லவில்லை.

“எங்கே இருந்தா என்னம்மா. வரணும்னு தோணிச்சின்னா வருவான்“ என்றார்

இப்படி ஒரு அப்பா அம்மாவை என்ன செய்வது எனச் சுமா சலித்துக் கொண்டாள். முதுமையில் அப்பாவும் அம்மாவும் ஒன்று போல ஆகிக் கொண்டிருப்பதாக உணர்ந்தாள். யார் யாருடைய நிழல் என்று தெரியாத வண்ணம் நடந்து கொண்டார்கள்.

ஒருமுறை சுமாவின் தோழி பரிமளா தனது தங்கையின் கல்யாணப் பத்திரிக்கை கொடுப்பதற்காக அவர்கள் வீட்டிற்குப் போயிருந்தாள். அப்பாவும் அம்மாவும் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு வியந்து போனவளாகச் சொன்னாள்

“உங்க அம்மா ரொம்ப மாறிட்டாங்க சுமா. ஆளே அடையாளம் தெரியலை. ஹேர் எல்லாம் கூட ஷார்டா கட் பண்ணியிருக்காங்க. அதுவும் பிரிண்டெட் பனியன். பேண்ட் போட்டுட்டு இருந்தாங்க. என்னாலே நம்பவே முடியலை. இப்போ தான் லைப்பை என்ஜாய் பண்ணுறாங்க “

“அப்படியா எனக்குத் தெரியாதே. அம்மா வீடியோ கால்ல வரமாட்டாங்க. நான் அவங்க ஹேர்கட் பண்ணினதை பாக்கலை“

“செமையா இருக்காங்க. உங்கப்பாவுக்குத் தான் தலை கம்ப்ளீட்டா நரைச்சி போச்சு. ஆனா ஹேண்ட்சம்மா இருக்கார். “

அப்பா அம்மாவை உடனே போய்ப் பார்க்க வேண்டும் போல ஆசை எழுந்தது.

பரிமளா உற்சாகமாகச் சொன்னாள்

“உங்க வீட்ல மிண்ட் டீ குடுத்தாங்க. அதுவும் சூப்பர்“

“நீ சொல்றது எல்லாம் எங்க வீடு தானானு எனக்கே சந்தேகமா இருக்குடி. அம்மா அப்பா ரெண்டு பேரும் எப்பவும் காபி தான் குடிப்பாங்க. அதுவும் பில்டர் காபி. எப்பவாது அப்பா கூட டீ குடிப்பார். அம்மா டீ குடிச்சி நான் பார்த்ததேயில்லை“

“அப்படியா… இது புதுவிதமான புதினா டீ.. உங்கம்மாவும் குடிச்சாங்க. “

“உங்க அப்பா அம்மா எப்படியிருக்காங்க“

“திடீர்னு ரொம்ப வயசானவங்களா ஆகிட்டாங்க. ஹெல்த் இஷ்யூ. அப்பா பகல் புல்லா தூங்கிட்டே இருக்கார். அம்மாவுக்கு டிவி சேனல். வேற எதிலும் இன்ட்ரெஸ்ட் இல்லை. நீ எப்படி இருக்கே. டென்னிஸ் ஆடுறயா. யோகா பண்ணுறயா.. “

“அதெல்லாம் விட்டுட்டேன்.. டைம் இல்லே.. ஆபீஸ் டென்ஷன். நல்லா வெயிட் போட்டுட்டேன்“

“நானும் தான்டீ. உங்கம்மா இத்தனை வருஷமா அதே ஸ்லிம்மா இருக்காங்க.. ஆச்சரியமா இருக்கு“

“அது உடம்பு வாகு“ என்றாள் சுமா

“ரெண்டு மணி நேரம் உங்க வீட்ல இருந்தேன். நேரம் போனதே தெரியலை. எனக்கு ஒரு செண்கப்பூ குடுத்தாங்க நல்ல வாசம்.. “

யார் வீட்டையோ பற்றிக் கேட்பதைப் போலச் சுமா கேட்டுக் கொண்டிருந்தாள். அன்றிரவே அம்மாவிற்கு வீடியோ கால் செய்தாள். பரிமளா சொன்னது போல அம்மாவின் தோற்றம் மாறியிருந்தது. எவ்வளவு அடர்ந்த கூந்தல் வைத்திருந்தாள். அதை ஏன் வெட்டிக் கொண்டாள். அந்த ஆசை இப்போது பிறந்தது தானா. இல்லை மனதின் ஆழத்தில் ஒளிந்திருந்ததா. அவளது உடையும் மாறியிருந்தது. பேச்சில் நிதானம்.

அப்பா அரசு அதிகாரியாக வேலை செய்த நாட்களில் எட்டு மணிக்கெல்லாம் கிளம்பிவிடுவார். ஜீப் வாசலில் நிற்கும். ஆகவே அம்மா பதற்றமாகவே சமையல் செய்வாள். அவளோ, தம்பியோ பள்ளிவிட்டு வர நேரமாகிவிட்டால் பதற்றமாகி விடுவாள். கோவிலுக்குப் போவது என்றால் கூட நடை திறப்பதற்கு முன்பாகப் போய்க் காத்திருப்பாள். ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனால் இட்லியைத் தவிர வேறு எதையும் சாப்பிட மாட்டாள்.

அப்பா புதிய சுவைகளை விரும்புவார். வீட்டிற்கு நண்பர்கள் குடும்பத்தை அழைத்து வந்து உபசரிப்பார். அவருக்கு வெள்ளை நிற உடை மட்டும் பிடிக்காது. செருப்பில் சிறு தூசி ஒட்டியிருக்கக் கூடாது . துடைத்துக் கழுவிச் சுத்தமாக வைத்துக் கொள்வார்.

அப்பாவும் அம்மாவும் மட்டும் சினிமா போனதேயில்லை. ஒருவேளை திருமணமான நாட்களில் போயிருக்கக் கூடும். குடும்பமாகச் சினிமாவிற்குப் போன போது மட்டுமே அம்மா உடன் வருவாள். அதுவும் சினிமா நன்றாக உள்ளதா என ஒரு அபிப்ராயமும் சொல்லமாட்டாள். அடிக்கடி அவளுக்கு ஒற்றைத் தலைவலி வந்துவிடும். அந்த நாட்களி தைலம் தேய்த்துக் கொண்டு படுக்கையிலே படுத்தேயிருப்பாள். அம்மா தனியே அமர்ந்திருக்கும் போது அவளது முகத்தை ஏதோ கவலை. வேதனை படர்ந்திருப்பதைச் சுமா கண்டிருக்கிறாள்

வீடியோ காலில் பார்க்கும் அம்மா வேறாக இருந்தாள். அந்த முகத்தில் கவலையில்லை. தெளிவு. உறுதி. சந்தோஷம் வெளிப்பட்டது.

என்ன நடந்திருக்கும். எப்படி வாழ்க்கையை மாற்றிக் கொண்டார்கள். ஒருவேளை மிஞ்சமிருக்கும் வாழ்க்கை தங்கள் இருவருக்கு மட்டுமேயானது என உணர்ந்து கொண்டுவிட்டார்களா. அம்மா கல்லூரியில் படிக்கவில்லை. ஒரு வேளை கல்லூரி சென்றிருந்தால் இந்தத் தோற்றத்தில் தானிருப்பாள்.

இந்த மாற்றத்தைப் பற்றி அம்மாவிடம் கேட்டபோது அம்மா பதில் சொல்லவில்லை

“மாறிட்டேன்“ என்று ஒரு வார்த்தை மட்டும் சொன்னாள்

“இப்படி உன்னைப் பார்க்க நல்லா இருக்கும்மா“ என்றாள் சுமா

“அது சரி.. நீ ஏன் இப்படி இருக்கே. கண்ணுக்கு கீழே சதை தொங்குது. உதடெல்லாம் வெடிச்சி போயி இருக்கு. நல்லா தூங்குறதில்லையா“

“குளிர் ஜாஸ்தி “எனப் பொய் சொன்னாள் சுமா

“உன்னை நீ தான் பாத்துகிடணும். கூட இருந்து கவனிக்க அங்க யாரு இருக்கா“ எனக்கேட்டாள் அம்மா

“அதெல்லாம் பாத்துகிடுறேன். நீ நல்லா செஸ் ஆடுறயாமே“ எனக் கேலி செய்தாள் சுமா

“உங்கப்பா தான் ஜெயிப்பார்“ என்று அம்மா சொன்னாள்

அம்மாவின் வயதில் தான் நிச்சயம் அப்படியிருக்க மாட்டோம் எனச் சுமாவிற்குத் தோன்றியது.

அம்மாவிடம் பேசியதற்கு மறுநாள் ப்யூட்டி பார்லர் போய் முகத்தைப் பொலிவு பெறச் செய்தாள். தனது ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொண்டாள். அதைக் பென்னி கவனிக்கக் கூடயில்லை

அப்பா அம்மாவிடம் ஏற்பட்ட மாற்றங்கள் அவளை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருந்தன. அதன் உச்சம் போலிருந்தது இந்த மாரத்தான் ஓட்டம். எப்படி அவர்களால் இவ்வளவு நன்றாக ஓட முடிகிறது. அந்த வீடியோவில் முதியவர்கள் சிலரும் ஓடுவதைக் கண்டாள். இளைஞர்கள் ஓடுவதை விடவும் முதியவர்கள் ஓடுவதைக் காணுவதே மகிழ்ச்சி அளித்தது.

வீட்டின் வெளியே தனது காரை பார்க் செய்துவிட்டு தனது ஹேண்ட்பேக்கை எடுத்துக் கொண்டு நடக்கும் போது கண்ணாடி ஜன்னல் வழியாக ரிச்சர்ட் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவனை நோக்கி கையாட்டினாள்.

ரீனா ஒரு நோட்டில் படம் வரைந்து கொண்டிருந்தாள்.

இருவரையும் அழைத்துச் சுமா அந்த வீடியோவை காட்டினாள்.

“பாட்டி தாத்தாவிற்காக மெதுவாக ஓடுகிறாள்“ என்று ஆங்கிலத்தில் சொன்னான் ரிச்சர்ட்

அவளுக்கும் அப்படித்தான் தோன்றியது. அம்மாவிடம் பேச வேண்டும் போலிருந்தது. போனில் அழைத்தாள். அம்மா போனை எடுக்கவில்லை. அப்பாவிற்குப் போன் செய்தாள். அப்பா போனை எடுத்துப் பேசினார்

“சும்மா ஓடிப்பாக்கலாம்னு நினைச்சோம். ஆனா கம்ப்ளீட் ரவுண்ட் ஓடி முடிச்சிட்டோம். சர்டிபிகேட் குடுத்துருக்காங்க“ என மகிழ்ச்சியாகச் சொன்னார்

“சூப்பர் டாட். அம்மாவுக்குப் போன் அடிச்சேன். எடுக்கலை“

“உங்கம்மா கீ போர்ட் கத்துகிடுறா.. இப்போ கிளாஸ். “

“ரியலி.. ரெண்டு பேரும் ரொம்ப மாறிட்டீங்க டாட்“

“நான் அப்படியே தான் இருக்கேன். உங்கம்மா ரொம்ப மாறிட்டா.. இந்த மாரத்தான் எல்லாம் கூட அவ ஐடியா தான். இதுக்காக தினம் ஐந்து மணிக்கு எழுந்து பிராக்டீஸ் பண்ணினோம். ஹெல்த் செக்கப் பண்ணி பாத்துட்டு தான் ஓட அனுமதிப்பாங்க. இவ்வளவு தூரம் அதுவும் சிட்டி உள்ள ஒட முடியுமானு எனக்குக் கூடச் சந்தேகமா தான் இருந்து. உங்கம்மா தான் ஓடிரலாம்னு சொன்னா… ஓடுறப்போ ரொம்பச் சந்தோஷமா இருந்து. காற்றில மிதக்கிற மாதிரி.. நான் ரொம்ப என்ஜாய் பண்ணினேன். அடுத்து கன்யாகுமரில ஒரு மாரத்தான் நடக்கப் போகுது. அங்கே போகலாம்னு இருக்கோம்.

ஏதோ இரண்டு விளையாட்டு வீரர்கள் தங்கள் பயணத்திட்டத்தைப் பற்றிச் சொல்வதைப் போல அப்பா ஆசையாக விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார். வாழ்க்கையை இவ்வளவு எளிதாக மாற்றிக் கொள்ள முடியுமா. சந்தோஷம் என்பது நாம் உருவாக்கிக் கொள்வது தானா.

பள்ளி,கல்லூரி நாட்களில் இருந்த சந்தோஷத்தில் கால்வாசி கூடத் திருமண வாழ்க்கையில் இல்லையே.

சுமா போனை வைத்துவிட்டு பெருமூச்சிட்டுக் கொண்டாள். பிள்ளைகளை அழைத்துக் கொண்டு நடந்தே போய் எங்காவது சாப்பிட்டு வரலாம் என்று தோன்றியது

ஏன் காரில் போகவில்லை என வழி முழுவதும் ரிச்சர்ட் கேட்டுக் கொண்டே வந்தான். மூவருமாக ஒரு இந்திய உணவகத்தில் சாப்பிட அமர்ந்த போது அம்மாவிடமிருந்து போன் வந்தது. வெஜ்ரோலைக் கடித்தபடியே அம்மாவிடம் பேசினாள்

“வேலையா இருக்கியா“ எனக்கேட்டாள் அம்மா

“சாப்பிட வந்துருக்கோம். அதுவும் ரெண்டு கிலோ மீட்டர் நடந்து“

“ஏன் வீட்ல சமைக்கலையா.. கார் என்ன ஆச்சு“

“உன் வீடியோ பாத்தவுடனே நடக்கணும்னு ஆசை வந்துருச்சி“

“பிள்ளைங்க பாவம்.. இவ்வளவு தூரம் எப்படி நடப்பாங்க“

“அதெல்லாம் ஜாலியா நடந்து வந்துட்டாங்க. நீ மாரத்தான் ஓடப்போறேனு என்கிட்ட சொல்லவேயில்லை“

“சொல்லியிருந்தா வேண்டாம்னு சொல்லியிருப்பே. நீ சொல்லிட்டா உங்கப்பா வேண்டாம்னு சொல்லிடுவார்“

“உன் நல்லதுக்குத் தானேம்மா சொல்றேன். நீங்க ரெண்டு பேரும் சர்டிபிகேட் வாங்குற போட்டோ அனுப்பி வையும்மா. பென்னி கிட்ட காட்டுறேன்“

“அதெல்லாம் வேணாம்.. “

“நான் பாக்கணும். அனுப்பி வை. எப்படிம்மா இவ்வளவு தூரம் ஒடுனே“

“எனக்கே தெரியலை. ஆனா ஓடுனது நல்லா இருந்துச்சி. எங்க கூட நிறையப் பேர் ஓடுனாங்க. “

“அப்பாவும் நீயும் ஓடுறதை பாக்கும் போது எனக்கே பொறாமையா இருந்துச்சி“

“ஏன் நீயும் கென்னியும் ஓட வேண்டியது தானே. “

“அவருக்கும் நேரம் கிடையாது. எனக்கும் நேரம் கிடையாது“

“உங்கப்பாவுக்குக் கூட ஓட முடியுமானு சந்தேகம். ஆறு மாசமா நாங்க ரெண்டு பேரும் கிரவுண்ட்ல வாக்கிங் போறோம். அங்கே இப்படி ஆட்கள் ஓடுறதை பாத்திருக்கேன். நாம எல்லாம் இப்படி ஓட முடியுமானு ஏக்கமா இருக்கும்“

“அதான் மாரத்தான்ல டீட்டயே“

“இது மினி மாரத்தான். இனிமே தான் மாரத்தான் ஓடப் போறோம். ஓடும் போது எனக்கு வயசு கிடையாது. உடம்பு கிடையாது. நான் ஒரு இலை. காத்துல பறக்கிற இலை. அப்படித் தோணுச்சி“.

“அப்பாவும் இப்படித் தான் சொன்னார். “

“நாங்க மாரத்தான் புல்லா ஓடி முடிச்சதும் உங்கப்பா அழுதுட்டார். நான் அவர் அழுறதை பாத்துகிட்டே இருந்தேன். அப்போ உங்கப்பா ரொம்ப அழகா இருந்தார்“

அம்மா அப்படிப் பேசிக் கேட்டதேயில்லை.

“நானும் விக்ரமும் தான் உன்னை இத்தனை வருஷமா ஓட விடாம தடுத்து வைச்சிருந்தமோனு தோணுது. “

“முப்பது வயசுல என்னை இப்படி ஓடச்சொல்லியிருந்தா நிச்சயம் ஓடியிருக்க மாட்டேன். இப்போ தான் அந்தத் தைரியம் வருது“

“எப்படிம்மா. எனக்கெல்லாம் வயசு கூடக் கூடத் தைரியம் குறைஞ்சிகிட்டே போகுது“

“அது மாறிடும்“ என்றாள் அம்மா

குறுக்கிட்டு ரிச்சர்டும் ரீனாவும் பாட்டியிடம் போனில் பேசினார்கள். அம்மா அவர்கள் பாராட்டிற்கு வெட்கப்பட்டாள். பின்பு சுமாவிடம் சொன்னாள்

“புதுசா கீ போர்ட் கத்துகிட ஆரம்பிச்சிருக்கேன்“

“அப்பா சொன்னார்“

“புதுசா எதையாவது கத்துகிட்டே இருந்தா வயசாகாது. வயசை மறக்க ஏதாவது செய்துகிட்டே தான் இருக்கணும். எனக்குக் கீபோர்ட் கத்துக்குடுற பையனுக்கு உன் வயசு தான் இருக்கு. அம்மானு தான் கூப்பிடுறான். “

“நான் கூட ஸ்கூல் படிக்கிறப்போ கிதார்கத்துகிட போனேன். ஞாபகம் இருக்கா“

“ஆமா.. எய்த் படிக்கும் போது. ரெண்டு மூணு வாரம் போனே. அப்புறம் விட்டுட்டே“

“அது ஸ்கூல் பங்ஷனுக்காகப் படிச்சேன். ஆனா பிடிக்கலை“

“ரெண்டு மாசம் கழிச்சி கன்யாகுமரில ஒரு மாரத்தான் நடக்கப் போகுது. அதுல ஒடுறதுக்காக நாங்க ரெண்டு பேரும் போறோம். கடற்கரை வழியா ஒடுறது நல்லா இருக்கும்லே“.

“நீ மாரத்தான் ஓடுனது விக்ரமும் தெரியுமா“

“அவனுக்கும் வீடியோ அனுப்பி வச்சேன். பாத்தானானு தெரியலை“

“யார் இந்த வீடியோ எடுத்தது“

“மாரத்தான்ல எங்க கூடவே ஒரு மெடிகல் வேன் வரும். அதுல ஒரு பையன் நான் எடுத்து தர்றேனு என் செல்போனை வாங்கிகிட்டான். கொஞ்சம் தான் ரிக்காடிங் ஆகிருக்கு. “

“உங்க ரெண்டு பேருக்கும் நான் ஒரு கிப்ட் வாங்கி அனுப்பி வைக்குறேன்“

“அதெல்லாம் வேணாம். நீ ஊருக்கு வா. உன்னைப் பாத்து ரொம்ப நாளாச்சி. “

“ஆகஸ்ட்ல நிச்சயம் வர்றேன். “

அம்மா போனை துண்டித்துவிட்டாள். திடீரென நாம் ஏன் வெளிநாட்டில் வசிக்கிறோம் என்ற குற்றவுணர்வு அவளுக்குள் உருவானது. தொண்டையை அடைத்துக் கொண்டது போன்றதொரு வலி. சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு தண்ணீரைக் குடித்தாள். கண் கலங்குவது போலிருந்தது. பிள்ளைகள் பார்க்காமல் கண்ணைத் துடைத்துக் கொண்டள்

விக்ரம் ஏன் அம்மா அனுப்பிய வீடியோவை பார்க்கவில்லை என எரிச்சலாக வந்தது. அவள் விக்ரமிடம் பேசுவதற்கு முயன்றாள். அவன் போனை எடுக்கவில்லை.

இரண்டு நாட்களின் பின்பாக விக்ரமிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது

“நமக்கு தான் வயதாகிறது. அவர்களுக்கு இல்லை. பிரைடே ஊருக்குப் போகிறேன்“

அவனை வீடு திரும்பச் செய்வதற்குத் தான் அம்மா இப்படி ஒடினாளா என்று கூடச் சுமாவிற்குச் சந்தேகமாகயிருந்தது. விக்ரமைப் பார்த்தால் அம்மா மிகவும் சந்தோஷப்படுவாள். எந்த அறிவிப்பும் தராமல் ஊருக்குப் போய் நிற்கப் போகிறான். அப்படியே நடக்கட்டும்.

ஐந்து நாட்களுக்குப் பிறகு அம்மா போனில் தொடர்பு கொண்டாள்

“விக்ரம் வந்துருக்கான்.. தாடி வச்சிட்டு ஆளே மாறிப்போயிருக்கான்“.

“என்ன சொல்றான் உன் மகன்“

“கல்யாணத்தைப் பத்தி நான் ஒரு வார்த்தை பேசலை. நல்லா சமைக்கிறான் சுமி. அமெரிக்கா போயி நல்லா சமைக்கக் கத்துருக்கான்.. “

“நம்ம வீட்ல இருந்தப்போ நீ அவனை எதுவும் செய்ய விடமாட்டே“

“அப்போ படிக்கிற பையன். “

“அப்போ நல்லா சாப்பிடுவான். இப்பவும் அப்படித் தான் இருக்கான்“

“எனக்கும் உங்க அப்பாவுக்கும் புது ரன்னிங் ஷு வாங்கிட்டு வந்துருக்கான். அதைப் போட்டுட்டு தான் இன்னைக்கு ஒடுனோம்“

“அவன் கூட ஓடுனானா“

“ஆமா. ஆனா ரெண்டு ரவுண்ட் கூட ஓட முடியலை. மூச்சு வாங்குது“

சுமா சிரித்தாள். அம்மாவும் சேர்ந்து சிரித்தாள். பின்பு அம்மா சொன்னாள்

“விக்ரம் எனக்கு ஒரு தொப்பி வாங்கிக் குடுத்துருக்கான். அதுல என் பேரு பிரிண்ட் ஆகிருக்கு. “

“அப்பாவுக்குத் தொப்பி இல்லையா“

“அவருக்கு ஒரு ஸ்மார்ட்வாட்ச். ஓடுற ஸ்பீட்ல இருந்து ஹார்ட் பீட் வரைக்கும் எல்லாம் பாத்துகிடலாம். “

“இப்போ என்ன செய்றான்.. தூங்குறனா“

“எப்படி கரெக்டா சொல்றே“

“நான் அவன் அக்கா.. எழுந்தவுடனே என்கிட்ட பேசச் சொல்லு“

அம்மா சிரித்துக் கொண்டாள். அந்தச் சிரிப்பில் வெளிப்பட்ட மகிழ்ச்சியைத் தன்னால் அடைய முடியுமா எனச் சுமாவிற்கு ஏக்கமாக இருந்தது

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 09, 2026 02:11
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.