ஷேக்ஸ்பியரின் மகன்
அயர்லாந்தை சேர்ந்த எழுத்தாளரான மேகி ஓ’ஃபாரலின் ஹாம்னெட் நாவல் ஷேக்ஸ்பியரின் மனைவி பார்வையில் ஹாம்னெட்டின் இறப்பு மற்றும் அதன் விளைவுகளை விவரிக்கிறது. ஷேக்ஸ்பியரின் ஒரே மகன் ஹாம்னெட்.
இதில் ஆக்னஸ் எதிர்காலத்தை உணரும் இயற்கைக்கு அப்பாற்பட்ட திறனையும் கொண்ட மருத்துவராகச் சித்தரிக்கபடுகிறாள். கிரேக்க தேவதைகளில் ஒருவரைப் போலவே ஆக்னஸ் உருவாக்கபட்டுள்ளார்

ஷேக்ஸ்பியரின் மனைவியைப் பற்றிய புதிய கண்ணோட்டத்தை விவரிக்கும் இந்த நாவலை Nomadland திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்ற இயக்குரான Chloé Zhao திரைப்படமாக இயக்கியுள்ளார்.
இந்த ஆண்டிற்காக ஆஸ்கார் விருதுப் பட்டியலில் ஹாம்னெட் இடம்பெற்றுள்ளது. ஷேக்ஸ்பியர் பற்றிய படங்களில் மிகவும் தனித்துவமானது என இதனை விமர்சகர்கள் கொண்டாடுகிறார்கள். அதே நேரம் இது ஷேக்ஸ்பியரை மோசமாகச் சித்தரிக்கிறது. அமெரிக்கக் குடும்பத்தின் கதையைப் போல ஷேக்ஸ்பியர் வாழ்க்கையை மாற்றிவிட்டார்கள் என எதிர்மறையான விமர்சனங்களும் வெளியாகியுள்ளன.
தனது 11வது வயதில் ஹாம்னெட் இறந்து போனான். இதற்குக் காரணம் பிளேக் என்கிறார்கள். ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை. எதிர்பாராத அந்த மரணத்தால் ஷேக்ஸ்பியரின் குடும்பம் நிலை குலைந்து போனது. தனது மகனின் இறுதிச் சடங்கில் ஷேக்ஸ்பியர் கலந்து கொள்ளவில்லை என்கிறார்கள். அப்போது அவர் லண்டனில் இருந்தார். தகவல் கிடைத்துத் தாமதமாக வந்து சேர்ந்தார் என்றும் சொல்கிறார்கள். ஹாம்னெட்டுடன் இரட்டையராகப் பிறந்தவள் ஜூடித்.

தனது மகனின் நினைவாகவே ஷேக்ஸ்பியர் ஹேம்லெட் நாடகம் எழுதினார். ஹாம்னெட் என்ற பெயரின் மாற்றுவடிவம் தான் ஹேம்லெட் என்கிறார்கள். அதுவும் யூகமே.
ஷேக்ஸ்பியர் தனது மகனின் நினைவாக அந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கினார் என்பதற்கு எந்த நேரடி சான்றுமில்லை. ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் பெண் ஆண்வேஷமிட்டு வருவது நடக்கிறது. அதற்குக் காரணம் ஜூடித் இப்படி ஆண் வேஷமிட்டுக் கொள்வாள் எனச் சில ஷேக்ஸ்பியர் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அளவிற்கு அவரது சொந்தவாழ்வும் ஆராயப்பட்டு விரிவாக எழுதப்பட்டுள்ளது. அதற்குத் தேவாலய சான்றுகளும். உள்ளூர் நிர்வாகப் பதிவேடுகளும் உதவியிருக்கின்றன. ஷேக்ஸ்பியரின் உயில் கிடைத்திருக்கிறது. அதனை இப்போதும் பாதுகாத்து வருகிறார்கள். ஷேக்ஸ்பியரைப் பற்றி ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக புத்தகம் வந்தபடியே இருக்கிறது. உலகெங்கும் அவரது நாடகங்கள் மேடையேற்றப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. ஷேக்ஸ்பியர் தான் தனது நாடகங்களை எழுதினாரா என்ற சர்ச்சை இன்றைக்கும் தொடரவே செய்கிறது.
1613 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரிய தீ விபத்துக் காரணமாக ஷேக்ஸ்பியரின் குளோப் தியேட்டர் அழிந்து போகிறது. அதன் காரணமாக, வில்லியம் ஷேக்ஸ்பியர் தனது குடும்பம் வசித்த ஸ்ட்ராட்ஃபோர்டுக்குத் திரும்பி வருகிறார். மகன் இறந்த செய்தியை அறிந்து கொள்கிறார். அந்தத் துயரத்திலிருந்து மீள முடியாமல் விவசாயப்பணிகளில் ஈடுபடுகிறார். என
ஷேக்ஸ்பியர் நடிகரும் சிறந்த இயக்குநருமான கென்னத் பிராஹா இயக்கிய ஆல் இஸ் ட்ரூ படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிலும் ஹாம்னெட்டின் மரணம் சந்தேகத்திற்குரியதாகவே சித்தரிக்கபடுகிறது
படத்தில் ஷேக்ஸ்பியர் நாடக ஆசிரியராக, கவிஞராக அறியப்படுவதிலிருந்து விலகி குடும்பத்தலைவராகவே பெரிதும் சித்தரிக்கப்படுகிறார். ஆக்னஸ் இயற்கையின் குரலைப் போலவே விளங்குகிறாள். சொந்த அனுபவங்களில் இருந்தே ஷேக்ஸ்பியர் நாடகங்களை உருவாக்குகிறார் எனப் படம் சித்தரிக்கிறது
தன்னை விட எட்டு வயது மூத்த பெண்ணான ஆக்னஸை ஷேக்ஸ்பியர் காதலிப்பதில் படம் துவங்குகிறது. தந்தையின் கடனை அடைக்க சிறிய பள்ளி ஒன்றில் லத்தீன் ஆசிரியராக ஷேக்ஸ்பியர் வேலை செய்கிறார் ர். காட்டிற்குள் அவளைப் பின்தொடர்கிறார். காதலிக்கிறார். இருவரும் நெருக்கமாகிறார்கள். ஆக்னஸ் கர்ப்பிணியானதால் அவர்களின் திருமணம் அவசரமாக நடைபெறுகிறது. அதனை இரண்டு குடும்பங்களும் விரும்பவில்லை. ஷேக்ஸ்பியரின் மகள் சூசனா பிறக்கிறாள்.

ஷேக்ஸ்பியரின் தந்தை மிகவும் கண்டிப்பானவர். கையுறைகள் தயாரிக்கும் தொழில் செய்து வந்தவர். அந்தத் தொழிலை தொடர ஷேக்ஸ்பியருக்கு விருப்பமில்லை. அவர் தந்தையின் கடனை அடைக்கவே லத்தீன் ஆசிரியராக வேலை செய்கிறார். தந்தையோடு சண்டையிட்டு ஷேக்ஸ்பியர் வீட்டைப் பிரிந்து வெளியேறுகிறார். நாடக ஆசிரியராக மாறுகிறார்.
படத்தில் ஆக்னஸ் மருத்துவக் குணமுள்ள தாவரங்களைக் கண்டறிந்து வைத்தியம் செய்கிறாள். இயற்கையோடு அவள் கொண்டுள்ள நெருக்கம் ஊர் மக்களை அச்சம் கொள்ளச் செய்கிறது. அவளைச் சூனியக்காரியாக எண்ணுகிறார்கள்
தனது முதல் குழந்தையான சுசன்னாவை பிரசவிக்க அவள் காட்டினை நோக்கித் தனியே செல்கிறாள். குழந்தை இயற்கையின் மடியில் பிறக்கிறது. அதன் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஜூடித் மற்றும் ஹேம்னெட் பிறக்கிறார்கள்.
ஷேக்ஸ்பியர் தனது குடும்பத்தை ஸ்ட்ராட்ஃபோர்டு-அபான் அவானில் விட்டுவிட்டு நாடகம் நடத்த லண்டன் சென்றுவிடுகிறார். அவரது லண்டன் நகர வாழ்க்கை எப்படியிருந்தது எனப் படம் விவரிப்பதில்லை
ஒரு காட்சியில் தனது வீட்டில் மனைவி பிள்ளைகளுடன் ஷேக்ஸ்பியர் மெக்பெத்தின் காட்சி ஒன்றை நடத்திக் காட்டுகிறார். மகனுடன் கத்திசண்டை போடுவது போல விளையாடுகிறார். நாடகம் நிகழ்த்த அவர் லண்டன் செல்லும் போது மகன் அந்தப் பிரிவை ஏற்கமுடியாமல் வருத்தமடைகிறான்.

ஹாம்னெட்டின் மரணம் ஷேக்ஸ்பியருக்குள் வாழ்க்கை பற்றிய ஆழமான கேள்வியை எழுப்புகிறது.. தனது மகன் எங்கே மறைந்திருக்கிறான். இறந்தவர்கள் எங்கே போகிறார்கள் என அவர் தனக்குள் கேள்வி எழுப்பி அவன் இயற்கையின் ஒருபகுதியாக இருப்பது போலவே உணருகிறார்.
ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களிலிருந்து இப்படம் பெரிதும் மாறுபட்டு உருவாக்கபட்டுள்ளது. இது ஆக்னெஸின் கதை. அவளது வேறுவேறு மனநிலைகளை, உளக்கொந்தளிப்பை, இழப்பின் துயரையே படம் முதன்மையாக விவரிக்கிறது. ஷேக்ஸ்பியரை தேடி ஆக்னஸ் தனது சகோதரனுடன் லண்டன் வரும் காட்சியின் போது மட்டுமே அவரது பெயர் உச்சரிக்கபடுகிறது. பெரும்பான்மை காட்சிகளில் அவர் ஷேக்ஸ்பியர் இல்லை. ஆக்னஸின் கணவர் மட்டுமே
ஹேம்லெட்டில் ஹாம்னெட்டைப் பார்க்க முயற்சிப்பதைப் போலத் தோற்றம் கொண்டிருந்தாலும் படம் ஆக்னஸை ஷேக்ஸ்பியர் புரிந்து கொள்ளவில்லை எனக் குற்றம் சாட்டவே முற்படுகிறது. ஆக்னஸ் ஒரு கானகதேவதையைப் போலவே சித்தரிக்கபடுகிறாள். அந்தக் காட்சிகளைப் படத்தில் மிகச்சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். இசையும் அரங்க அமைப்பும், கதாபாத்திரத் தேர்வும் சிறப்பாக உள்ளன.
ஆக்னஸ் ஹேம்லெட் நாடகம் பார்க்க வரும் காட்சியும் ஹாம்லெட் மேடையில் பார்வையாளர்களைப் பார்த்து உரையாடும் விதமும் சிறப்பாக உள்ளன. அதில் வெளிப்படும் ஆக்னஸ் உணர்ச்சி கிரேக்க நாடகத்தில் இடம் பெறும் துயரமீட்சியை நினைவூட்டுகிறது.
ஹேம்லெட்டின் தந்தை ஆவியாக நாடகத்தில் ஷேக்ஸ்பியர் நடிக்கிறார். நிஜத்தில் நடக்காத மகனிடம் விடைபெறுவதை நாடகத்தில் நிகழ்த்திக் காட்டுகிறார். அந்தக் காட்சியில் ஷேக்ஸ்பியரை ஆக்னஸ் புரிந்து கொள்கிறார்
தனது காதல் நாட்களின் போது ஷேக்ஸ்பியர் தனக்குப் பிடித்தமான ஆர்ஃபியஸ் மற்றும் யூரிடைஸின் கதையைச் சொல்கிறார். இசைக்கலைஞரான ஆர்ஃபியஸ் இறந்த தனது காதலியை மீட்க பாதாள உலகம் செல்கிறான். அவளை திரும்பப் பெற முயற்சிக்கிறான். வழியில் திரும்பிப் பார்க்க கூடாது என்ற நிபந்தனையுடன் பாதாள உலகிலிருந்து காதலி அனுப்பி வைக்கபடுகிறாள். தன்னை அவள் பின்தொடரவில்லையோ எனச் சந்தேகத்தில் திரும்பி பார்த்து காதலி யூரிடைஸை ஆர்ஃபியஸ் இழந்துவிடுகிறான். அந்தக் கதை இப்படத்தின் திறவுகோல் போலவே மாறுகிறது.
Chloé Zhaoன் முந்தைய படத்திற்கும் இதற்குமிடையில் தொடர்பு இருப்பது போலவே உணர்ந்தேன். நோமாட்லேண்டில் வரும் பிரான்சிஸ் மெக்டார்மண்ட்டின் இன்னொரு வடிவம் போலவே ஆக்னஸ் இருக்கிறாள். சீனப் பண்பாட்டின் இழைகளை ஷேக்ஸ்பியர் காலத்தில் இடம்பெறச்செய்திருப்பது Chloé Zhaoன் தனிவிருப்பமாகும்.
ஹாம்னெட்டின் மரணத்திற்கான சரியான காரணங்கள் தெரியவில்லை, ஷேக்ஸ்பியர் தனது மனைவிக்கு எழுதிய கடிதங்கள் எதுவும் கிடைக்கவுமில்லை. திருச்சபை பதிவேடுகள் மரணத்திற்கான காரணத்தைப் பதிவு செய்யவில்லை. ஜெஸ்ஸி பக்லி ஆக்னஸாகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இழப்பை மீட்க முயலும் பெண்ணின் கதையிலிருந்து துவங்கி இழப்பை மீட்க முயலும் ஆணின் கதையாக இறுதியில் நிறைவு பெறுகிறது. Chloé Zhao படத்தில் உருவாக்கியுள்ள சில காட்சிகள் நிகரற்றவை. அவை அழியாப்பிம்பங்களாக மனதில் பதிந்துவிடுகின்றன.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 675 followers

