கிளி சொல்லாதது

புதிய சிறுகதை பிப்ரவரி 7 2024

குழாயில் தண்ணீர் வராது எனப் பெரியதாக வாஷ்பேஷின் இருந்த சுவரில் எழுதி வைத்திருந்தார்கள். கூடவே ஒரு அம்புக்குறி கீழ் நோக்கி வரையப்பட்டிருந்தது. அங்கே ஒரு இரும்பு வாளி. அதில் பாதியளவு அழுக்குத் தண்ணீர்.

எவர்சில்வர் டம்ளர் ஒன்று தண்ணீருக்குள்ளே கிடந்தது. வாளிக்குள் கையை விட்டு டம்ளரை எடுக்கச் சாம்பசிவத்திற்கு அருவருப்பாக இருந்தது. இவ்வளவு பெரிய ஹோட்டல் நடத்துகிறவர்கள் கை கழுவத் தண்ணீர் இல்லாமல் வைத்திருக்கிறார்களே என்று எரிச்சலாகவும் வந்தது.

அவன் சாப்பிட வந்த போது காலை மணி பத்தைக் கடந்திருந்தது. இட்லி பொங்கல் எல்லாம் தீர்ந்து போய்விட்டது என்றார்கள். தோசை மட்டுமே இருந்தது.

சாதா தோசா ஒன்று வேண்டுமென்றான். தோசைக்குத் தேங்காய்சட்னி கிடையாது. சாம்பார் மட்டும் தான் என்றார் சர்வர். சரியெனச் சாம்பசிவம் தலையாட்டினான். ஒன்றிரண்டு பேர் மட்டுமே ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவரின் டேபிளில் வைக்கபட்டிருந்த வெந்நீரில் ஆவி பறந்து கொண்டிருந்தது.

சாம்பசிவம் கிளி ஜோசியம் பார்க்கிறவன். அவனது கிளியின் பெயர் ஜமு. அதாவது ஜமுனா. சுண்ணாம்புக்காரத் தெருவில் தனியறை ஒன்றில் வசித்து வந்தான். திருமணம் செய்து கொள்ளவில்லை. சொந்த ஊரில் அம்மா மட்டுமே இருந்தாள். ஊருக்குப் போய்ப் பல வருஷமாகி விட்டது.

காலை ஏழுமணிக்கெல்லாம் கிளிக்கூண்டுடன் புறப்பட்டுவிடுவான். வழியில் இருந்த நவோதயா டீஸ்டாலில் ஒரு டீயைக் குடித்துவிட்டு ரயில்வே ஸ்டேஷன் படிக்கட்டில் உட்கார்ந்து கொள்வான்.

அலுவலகம் போகிறர்களில் சிலர் தவறாமல் ஜோசியம் பார்ப்பார்கள். பெரும்பாலும் பெண்கள். நடுத்தர வயதைக் கடந்தவர்கள். இளைஞர்களில் எவருக்கும் கிளி ஜோசியத்தில் ஆர்வமில்லை. சில நேரம் ரயில்வே போர்ட்டர்களும் ஜோசியம் பார்ப்பதுண்டு.

பத்து மணிக்கு வரும் பாசஞ்சர் ரயில் கிளம்பும் வரை அங்கேயிருப்பான். அதற்குப் பிறகு தான் டிபன் சாப்பிடச் செல்வான். சில நாட்கள் இன்னொரு டீயைக் குடித்துவிட்டு நேரடியாக மதியச் சாப்பாட்டிற்குப் போய்விடுவதும் உண்டு.

மதிய நேரங்களில் கோர்ட் வளாகத்தினுள் இருந்த மகிழமரத்தடிக்குப் போய்விடுவான். கோர்ட்டில் வழக்கு நடக்கிறவர்களில் பலர் அவனிடம் ஜோசியம் பார்ப்பார்கள். அதுவும் கிராமவாசியாக இருந்துவிட்டால் அவன் கேட்காமலே வழக்கு பற்றிய விபரங்களைக் கதையாகச் சொல்லுவார்கள். சிலர் சொல்ல முடியாமல் தேம்பி அழுவதும் உண்டு.

பெரும்பான்மை நாட்களில் மாலையில் ஏதாவது ஒரு சினிமாவிற்குப் போய்விடுவான். சினிமா விட்டு வந்து தியேட்டர் வாசலில் உள்ள பரோட்டா கடையில் சாப்பிடுவான். பின்பு நடந்து வீடு திரும்புவான். அவன் பார்த்த அத்தனை திரைப்படங்களையும் அவனது கிளியும் பார்த்திருக்கிறது. சில சமயம் இருட்டில் நடக்கும் போது சினிமா பாடலை பாடியபடி நடப்பான். அப்போது கிளியும் சப்தமிடும்.

வாரம் ஒருநாள் சுப்ரமணிய சுவாமி கோவிலின் முன்பாகப் போய் உட்கார்ந்து கொள்வான். பக்தர்களில் சிலர் அவனிடம் ஜோசியம் கேட்பார்கள். செவ்வாய்கிழமை தோறும் ஜோசியம் கேட்கும் ஆச்சி ஒருத்தியை அவனுக்குத் தெரியும். அவளது வீடு தேடிப் போய் ஜோசியம் சொல்வான். கேட்ட பணத்தைத் தருவதோடு வீட்டில் சாப்பிட்டுப் போகவும் சொல்வாள் ஆச்சி. இப்படி அவனுக்கென ஒரு உலகம் அந்த நகரிலிருந்தது.

••

அன்றைக்கு டிபன் சாப்பிட வந்த போது அவனுக்கு வழக்கத்தை விடவும் பசி அதிகமாக இருந்தது. அடை சாப்பிட வேண்டும் போலிருந்தது. காலையில் ஏன் அந்த ஆசை வந்தது என்று தெரியவில்லை. ஆனால் ஹோட்டலில் புளித்த மாவில் தோசை கொடுத்தார்கள். கூடவே தண்ணீராக ஒடும் சாம்பார். காசை வாங்கிக் கொண்டு நல்ல சாப்பாடு கொடுக்க மாட்டேன் என்கிறார்களே என ஆத்திரமாக வந்தது. பசி பொறுக்கமுடியாமல் வேகவேகமாகத் தோசையைச் சாப்பிட்டான். தனது பக்கத்துச் சீட்டில் கிளிக்கூண்டினயும் துணிப்பை ஒன்றையும் வைத்திருந்தான்.

கல்லாவின் முன்பாக ஒரு குட்டி பேன் சுற்றிக் கொண்டிருப்பதைக் கிளி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. தோசை சாப்பிட்டு முடித்தும் பசி அடங்கவில்லை. மதியம் செண்பகம் மெஸ்ஸில் அன்லிமிடெட் மீல்ஸ் சாப்பிட்டுக் கொள்ள வேண்டியது தான் என முடிவு செய்தபடி கைகழுவதற்காகச் சென்றான்.

கைகழுவ வைத்திருந்த உப்புதண்ணீரின் பிசுபிசுப்பை கையில் உணர்ந்தான். வேஷ்டியில் கையைத் துடைத்துக் கொண்டு ரசம் போன கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்துக் கொண்டான். புருவத்தில் நீண்டிருந்த நரைமயிர்களைப் பிடுங்கி எடுக்கப் பார்த்தான். பிடுங்க முடியவில்லை. எந்தப் பெண் தனது அழகைப் பார்த்து ரசிக்கப் போகிறாள் என முடிவு செய்வதனாகத் தான் அமர்ந்திருந்த டேபிளை நோக்கி வந்த போது அவனது கிளிக்கூண்டு காணாமல் போயிருந்தது

விளையாட்டுதனமான யாராவது எடுத்து கீழே வைத்துவிட்டார்களோ எனக் குனிந்து பார்த்தான். கிளிக்கூண்டினைக் காணவில்லை. கிளிக்கூண்டினை யார் எடுத்திருப்பார்கள். சற்றே பதற்றமாக அங்குமிங்கும் தேட ஆரம்பித்தான்.

கிளிக்கூண்டினை இத்தனை வருஷமாகத் திருட முடியாத பொருள் என்று நினைத்துக் கொண்டிருந்தான். யார் திருடியிருப்பார்கள். ஹோட்டல் சர்வர்களில் எவரேனும் தன்னுடன் விளையாடுகிறார்களா எனச் சந்தேகம் கொண்டவன் போலச் சுற்றிலும் பார்த்தான்.

கையில் சாப்பிட்ட பில்லுடன் நின்ற சர்வர்“என்ன அண்ணே தேடுறீங்க பர்ஸைக் காணோமா“ எனக் கேட்டார்

“இங்கே வச்சிருந்த கிளிக்கூண்டைக் காணோம். கூட ஒரு பையும் வச்சிருந்தேன்“.

“இந்த சீட்ல தானே இருந்துச்சி. ரெண்டாவது டேபிள்ல ஒருத்தர் காபி சொன்னார். அதை வாங்க கிச்சன் உள்ளே போகும்போது கூடப் பார்த்தேனே“

“கைகழுவப் போகும்போது கூட இருந்துச்சே“ என்றான் சாம்பசிவம்

“யாரு எடுத்துருப்பா“ எனக்கேட்டார் சர்வர்

“அதான் தெரியலை. கிளிக்கூண்டையும் காணோம். கூட வச்சிருந்த பையும் காணோம்“ என்றான் சாம்பசிவம்

“பைல என்ன இருந்துச்சி. “

சாம்பசிவம் பதில் சொல்லவில்லை.

“யாராவது பாத்தாங்களானு கொஞ்சம் கேளுப்பா“ எனச் சர்வரிடம் சொன்னான்.

“முதலாளிட்ட கேட்டு பாருங்க. ஒருவேளை அவரு பாத்திருப்பாரு“ என்றார் சர்வர்

பில்லை கையில் வாங்கியபடி முதலாளியின் இருந்த கல்லாவை நோக்கி நடந்தான் சாம்பசிவம். நெற்றியில் பெரிய திருநீற்றுப் பட்டை, மீசையில்லாத முகத்துடன் இருந்தார் முதலாளி. குனிந்து கிழிந்த பத்துரூபாய் தாள் ஒன்றை டே போட்டு ஒட்டிக் கொண்டிருந்தார். அவனை ஒரக்கண்ணால் பார்த்தபடியே பில் பணத்திற்காகக் கையை நீட்டினார்.

பில்லை மட்டும் அவரிடம் நீட்டியபடியே சொன்னான்

“சேர்ல வச்சிருந்த என் கிளிக்கூண்டைக் காணோம். யாரோ எடுத்துட்டு போயிட்டாங்க“

“நான் பாக்கலையேப்பா. எவனோ இந்தக் கிழிஞ்ச பத்து ரூபாயை நம்மகிட்ட தள்ளிவிட்டு போயிட்டான். நான் அதை ஒட்டிகிட்டு இருந்தேன். கவனிக்கலையே“ என்றார்

“இப்படி சொன்னா எப்படிங்க.. உங்க ஹோட்டல்ல இப்படித் திருடு நடந்தா அதுக்கு நீங்க பொறுப்பில்லையா“ என ஆத்திரமாகக் கேட்டான்

“அவரவர் பொருளை அவரவர் தான்பா பாத்துகிடணும். நாங்க எப்படிக் கவனிக்க முடியும். கிளிக்கூண்டை திருடிட்டு போயி என்ன செய்ய முடியும். அதென்ன விக்குற பொருளா“ எனக்கேட்டார் கடை முதலாளி.

அதைக் கேட்டதும் சாம்பசிவத்திற்கு ஆத்திரமாக வந்தது.

“அது கிளியில்லைங்க. படியளக்குற லட்சுமி. “.

இதற்குள் ஹோட்டல் சர்வர்கள் மூவரும் முதலாளி மேஜையை நெருங்கி வந்து பக்கத்து டேபிளில் ஒரு ஆள் காபி சாப்பிட்டதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்

“அந்த ஆள் கிளிக்கூண்டை எடுத்துட்டு போனதை நீங்க யாரும் பார்த்தீங்களா“ எனக்கேட்டார் முதலாளி.

“பாக்கலை. ஆனா அந்த ஆள் கிளிக்கூண்டை முறைச்சி பார்த்துகிட்டே இருந்தான். நான் கவனிச்சேன்“ என்றான் ஒரு சர்வர்

“ஆளு எப்படியிருந்தான். இங்கே கேமிரா இருக்கா“ எனக்கேட்டான் சாம்பசிவம்

“கேமிரா எல்லாம் கிடையாது. கிளிக்கூண்டை எடுத்தவன் வெளியே தான் போயிருக்கணும். நாலு கடை தள்ளியிருக்கச் செருப்பு கடைல கேமிரா போட்டிருக்கான். அதுல தெரிஞ்சி போயிரும். கோவிச்சிகிடாம ஒரு எட்டு பார்த்து வந்துருங்க“ என்றார் முதலாளி

“உங்க ஆளு யாரையாச்சும் கூட வரச்சொல்லுங்க“ என்றான் சாம்பசிவம்

“முத்தையா நீ கூடப்போயிட்டு வா“ என்றபடி முதலாளி குரலினை தாழ்த்தியபடி சொன்னார்

“பில்லுக்குப் பணத்தைக் குடுத்துட்டு போயி பாத்துட்டு வாங்க“

தனது சட்டைப்பையிலிருந்து நூறு ரூபாயை எடுத்து அவரிடம் நீட்டினார். அவர் மீதப்பணத்தை அவனிடம் தரும்போது ஒட்டி வைத்திருந்த பத்து ரூபாயை அவனிடம் தள்ளிவிடலாமா என நினைத்தார். பின்பு அந்த நினைப்பை மாற்றிக் கொண்டு வேறு பத்து ரூபாய் தாளை டிராயரிலிருந்து எடுத்து அவனிடம் நீட்டினார்

முத்தையாவும் அவனுமாக ஹோட்டலை விட்டு வெளியேறி சாலையில் நடந்தார்கள். நான்கு கடைகள் தள்ளி மெஹர் செருப்புக்கடையிருந்தது. சற்றே பெரிய கடை. கண்ணாடி பெட்டியினுள் விதவிதமான ஷுக்களை அடுக்கி வைத்திருந்தார்கள். முத்தையா கடைக்கதவை தள்ளி உள்ளே சென்று ரகுமான் முதலாளியிடம் சொன்னான்

“கிளிக்கூண்டையா திருடிட்டு போயிட்டாங்க“ என ரகுமான் முதலாளி வியப்போடு கேட்டார்

“ஆமாம்“ எனச் சாம்பசிவம் தலையாட்டினான்

“காலம் கெட்டு போச்சு.. கிளிய வச்சி பிழைப்பு நடத்துவறவன் அதைக் கவனமா பாத்துகிட வேணாமா“ எனக்கேட்டார் ரகுமான் முதலாளி

“ பெத்த பிள்ளைய மாதிரி பாத்துகிடுவேன்க. இன்னைக்குக் கைகழுவிட்டு வர்ற நேரத்தல எந்தக் களவாணிப்பயலோ அடிச்சிட்டு போயிட்டான்“

செருப்புக்கடைப் பையன்கள் இந்த விநோத திருட்டை கேள்விப்பட்டுச் சிரித்துக் கொண்டார்கள். ஒரு குடை திருடு போனால் கூட வருத்தப்படுகிறவர்கள் ஏன் கிளி திருடு போனால் இப்படிச் சிரிக்கிறார்கள் என அவனுக்குக் கோபமாக வந்தது.

ரகுமான் முதலாளி நஸீர் என்ற கடைப்பையனை அழைத்துக் கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளைக் காட்டும்படியாகச் சொன்னார்

நஸீர் அவர்களை உள் அறைக்கு அழைத்துச் சென்றான். அங்கே ஒரு மானிட்டரில் கடையின் உள்ளும் புறமுமான எட்டுக் காட்சிகள் தெரிந்தன.

“திருடு போயி எவ்வளவு நேரமிருக்கும்“ எனக்கேட்டான் நஸீர்

“அரைமணி நேரமிருக்கும்“ என்றான் சாம்பசிவம்

நஸீர் காட்சிகளை ரீவைண்ட் செய்து காட்டினான். ஹோட்டலில் இருந்து ஒரு இளைஞன் கையில் கிளிக்கூண்டுடன் வெளியேறி வீதியில் நடந்து கொண்டிருந்தான். அந்தக் காட்சியை அப்படியே நிறுத்திவிட்டுச் சொன்னான்

“இந்த ஆளு தான் திருடிட்டு போறான்“

அந்த இளைஞன் உயரமாக இருந்தான். கறுப்புப் பேண்ட். ஆரஞ்சு நிற டீசர்ட். காலில் ரப்பர் செருப்பு.

இவன் எதற்காகக் கிளிக்கூண்டினை திருடுகிறான். இதை வைத்து இவனால் என்ன செய்ய முடியும்.

“அந்தப் பையன் முகம் நல்லா தெரியலை“ என்றான் சாம்பசிவம்

நஸீர் அந்த இளைஞன் முகத்தைப் பெரியதாக்கி காட்டினான். அம்மை தழும்புகள் கொண்ட முகம். சற்றே பெரிய மூக்கு. உலர்ந்து போன உதடுகள். கழுத்தில் சிவப்பு கயிறு கட்டியிருக்கிறான். அதில் ஒரு தாயத்து. எங்கேயும் அது போன்ற ஒருவனைப் பார்த்த ஞாபகமேயில்லை.

நஸீர் அந்த இளைஞன் கிளிக்கூண்டுடன் தெருமுனை வரை செல்லும் காட்சியைக் காட்டினான். சொந்தப் பொருளை கொண்டு போவது போல அந்த இளைஞன் சாவகாசமாக நடந்து சென்றான். அவனை எப்படிக் கண்டுபிடிப்பது. கிளி இல்லாமல் எப்படிப் பிழைப்பது. சாம்பசிவத்திற்குக் கவலையாக இருந்தது

ரகுமான் முதலாளியிடம் நஸீர் சொன்னான்

“ஆளை கண்டுபிடிச்சிட்டோம். தெற்குபஜார் பக்கமா நடந்து போறான்“

“தம்பி நீங்க போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் குடுத்துருங்க. அவங்க ஆளை பிடிச்சிருவாங்க“ என்றார் ரகுமான் முதலாளி

சரியெனத் தலையாட்டியபடியே மீண்டும் ஹோட்டலுக்குச் சென்றான். கல்லாவில் முதலாளியைக் காணவில்லை. வேறு ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவளிடம் திருடனைப் பற்றிச் சொல்ல வேண்டாம் போலிருந்தது. ஆனால் சர்வர் முத்தையா நடந்தவற்றை அவளிடம் விளக்கிக் கொண்டிருந்த போது சாம்பசிவம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுப்பதற்காக நடக்கத் துவங்கினான்

கிளிக்கூண்டு இல்லாமல் நடப்பது என்னவோ போலிருந்தது. எப்போதும் அவனது கையில் கூண்டிருக்கும். அதன் எடையை உணர்ந்து இடது தோள் தானே கிழே இறங்கி விடும். ஆகவே வேகமாக நடக்க மாட்டான். இன்றைக்குக் கிளிக்கூண்டு இல்லாமல் நடக்கும் போதும் கையை அப்படியே வைத்துக் கொண்டிருக்கும் படியானது. வீசி நடக்க விரும்பவில்லை.

சில நாட்களுக்கு முன்பாகப் பஸ்ஸில் தனது சீட்டின் பக்கத்தில் கிளிக்கூண்டை வைத்துப் பயணம் செய்த போது கண்டக்டர் கிளிக்கு லக்கேஜ் வாங்க வேண்டும் என்றார்

“என்ன புதுசா லக்கேஜ் கேட்குறீங்க. இது ஜோசியம் பாக்குற கிளி “

“கிளின்னா பறக்கணும். எங்கே உன் கிளியை பறந்து காட்டச் சொல்லு“ எனக் கேலியான சொன்னார் கண்டக்டர்

“இது கூண்டுக் கிளி “ என்றான் சாம்பசிவம்

“பறக்கத் தெரியாட்டா அது கிளியா. .. இது பஸ்ல வர்ற கிளி. ஆட்டோல போற கிளி. அப்படின்னா இதுக்கு லக்கேஜ் வாங்கித் தான் ஆகணும். “

“இத்தனை வருஷமா யாரும் லக்கேஜ் கேட்கலையே“ என்றான் சாம்பசிவம்

“லக்கேஜ் வாங்க வேண்டாம். பஸ் கூடவே பறந்து வரச்சொல்லு. நீ பழக்குன கிளி தானப்பா. நீ சொன்னா கேட்காதா“ என்றார் கண்டக்டர்

அதைக்கேட்டு மற்ற பயணிகள் சப்தமாகச் சிரித்தார்கள்

ஆத்திரத்தில் சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்து “லக்கேஜ் போட்டுக்கோங்க“ என்றான் சாம்பசிவம்

“கிளிக்கு அரை லக்கேஜ் போடுப்பா போதும்.. “ என்று ஒரு ஆள் சொன்னதும் கண்டக்டர் முறைத்தபடியே அதெல்லாம் எங்களுக்குத் தெரியும் என முணுமுணுத்தபடியே லக்கேஜ் ரசீதை கிழித்துக் கொடுத்தார். அப்போதே சாம்பசிவத்திற்கு ஏன் இவர்கள் தனது கிளியை இப்படி எல்லாம் அவமானப்படுத்துகிறார்கள் என ஆத்திரம் வந்தது. தான் இறங்க வேண்டிய ஸ்டாப்பில் பஸ் நின்றதும் கிழே இறங்கி நின்று பஸ்ஸைப் பார்த்துக் காறித் துப்பினான்.

அந்த நினைவுகள் போலீஸ் ஸ்டேஷனை நோக்கி நடந்து செல்லும் போது அவனை அறியாமலே வந்து போயின. ஸ்டேஷன் வாசலில் வயலட் நிற சேலை கட்டிய பருமனான ஒரு பெண் அழுது வீங்கிய கண்களுடன் உட்கார்ந்திருந்தாள். அருகில் காலியான டீ கிளாஸ் இருந்தது. அவனைப் பார்த்தவுடன் “என் மகனை அடிச்சி இழுத்துட்டு வந்து வச்சிருக்காங்க. அவனை வெளியே விடச் சொல்லுங்கண்ணா“ என்றாள்.

யார் அவளது பையன். எதற்காகக் காவலர்கள் அழைத்து வந்திருக்கிறார்கள் என எதுவும் தெரியாமல் சாம்பசிவம் தலையாட்டினான்.

ஸ்டேஷன் கான்ஸ்டபிள் அவனைப் பார்த்த மாத்திரம் கேட்டார்

“நீ கிளி ஜோசியக்காரன் தானப்பா“

“ஆமா சார்“.

“உன்கிட்ட நான் ஜோசியம் பாத்துருக்கேன். என்ன விஷயமா வந்துருக்கே“

“என் கிளிக்கூண்டை ஒருத்தன் திருடிட்டு போயிட்டான் சார்“

“கிளிக்கூண்டையா. அதை வச்சி அவனும் ஜோசியம் சொல்லப் போறானா. இல்லே சைடுடிஷ்க்கு கிளியை ரோஸ்ட் பண்ணி திங்கப் போறானா“ எனக் கேட்டார்

அதைக் கேட்கும் போதே அவனுக்குக் கலக்கமாக இருந்தது

“தெரியலைங்க . ஹோட்டல்ல சாப்பிட்டு கைகழுவிட்டு வர்றதுக்குள்ளே அடிச்சிட்டு போயிட்டான்“

“பாத்த ஆள் யாராவது இருக்காங்களா“

“மெஹர் செருப்புகடை கேமிரால அந்த ஆள் அடையாளம் தெரியுதுங்க“

“நீயே விசாரிச்சி அடையாளம் பாத்துட்டயா. அப்போ நாங்க எதுக்கு இருக்கோம்“

“ஹோட்டல் முதலாளி தான் பாக்க சொன்னாரு“

“எந்த ஹோட்டல் நாராயண விலாசா“

“ஆமாம். “

“இந்தக் கிளி உன்னோடது தானுங்கிறதுக்கு ஏதாவது சர்டிபிகேட். சாட்சி இருக்கா“

“அப்படி எதுவுமில்லைங்க“

“இந்த கிளியை யார் கிட்ட வாங்குனே. எத்தனை ரூபா“

“அதெல்லாம் வெளியே சொல்லக்கூடாதுங்க“

கான்ஸ்டபிள் அவனை முறைத்துப் பார்த்தார். பின்பு தனது கடைவாய் பல்லைக் குத்துவதற்குப் பல்குச்சியை டிராயரில் தேடி எடுத்து பல்குத்தியபடியே கேட்டார்

“ஒரு நாளைக்கு உன் வருமானம் எவ்வளவு“

“ஏதோ கொஞ்சம் கிடைக்கும் சார்“

“கிளிக்கு பேர் இருக்கா“

“ஜமுனா.. ஜமுனு கூப்பிடுவேன்“

“எத்தனை வயசாச்சு“

“அதை சொல்லக்கூடாதுங்க“

“எங்க தங்கியிருக்க. எத்தனை வருஷமா ஜோசியம் பாக்குறே“

“இந்த ஊர்ல ஆறு வருஷமா இருக்கேன். இதுக்கு முன்னாடி தஞ்சாவூர்ல இருந்தேன்“

“அது உன் சொந்த ஊரா“

“இல்லைங்க. டூரிஸ்ட் நிறைய வருவாங்கன்னு அங்கே இருந்தேன்“

“பிறகு ஏன் இந்த ஊருக்கு வந்தே“

“தெரிஞ்ச ஆள் ஒருத்தர் கூப்பிட்டார். அதான் இங்கே வந்துட்டேன்“

“அட்ரஸ் சொல்லு“

அவன் தனது அறையின் முகவரியை சொன்னான். எல்லாவற்றையும் குறித்துக் கொண்ட கான்ஸ்டபிள் சொன்னார்

“கிளியை எல்லாம் கண்டுபிடிக்க முடியுமானு தெரியல. நான் அந்த ஹோட்டல் முதலாளிகிட்ட பேசி ஐநூறோ ஆயிரமோ வாங்கித் தர்றேன். புதுசா ஒரு கிளியை வாங்கிக்கோ“

“அது வேணாங்க. திருடுன ஆளை கண்டுபிடிச்சிட்டா என் கிளி கிடைச்சிருக்கும்“

“அவனை எங்க போயி தேடுறது. கிளியை காணோம் பூனையைக் காணோம்னு ஆளுக்கு ஆள் கிளம்பி வந்து நின்னா நாங்க என்ன செய்றது சொல்லு“

சாம்பசிவம் அமைதியாக நின்றிருந்தான்.

“நீ வெளியே உட்கார்ந்திரு. இன்ஸ்பெக்டர் வரட்டும். பேசிக்கிடுவோம்“ என்றார் கான்ஸ்டபிள்.

வெளியே மரப்பெஞ்சில் நாலைந்து பேர் உட்கார்ந்திருந்தார்கள். இங்கே உட்கார்ந்திருப்பதை விடவும் நாமே திருடிய இளைஞனை தேடிக் கண்டுபிடித்து விடலாமே என்று தோன்றியது. போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியேறி சாலையில் நடந்தான்.

இந்தப் பிழைப்பு போதும் வேற வேலையைத் தேடிக் கொள் என்பதற்காகத் தான் கிளி தன்னை விட்டு போய்விட்டதா என நினைத்தான். இத்தனை வருஷங்களுக்குப் பிறகு என்ன வேலை தேடுவது. சாலையில் கைகளை வீசி நடக்கும் போது சுதந்திரமான உணர்வு வந்தது. கடந்து செல்கிறவர்களின் கைகளைப் பார்த்தபடியே நடந்தான். கூடையுடன் நடப்பவர்கள். துணிப்பை வைத்திருப்பவர்கள். சாப்பாட்டு பையுடன் நடப்பவர்கள். எனப் பலரது கைகளிலும் ஏதேனும் ஒரு பொருள் இருந்தது.

தெற்குபஜாரை நோக்கி அந்த இளைஞன் கிளிக்கூண்டுடன் சென்ற காட்சியை மனதில் வைத்துக் கொண்டு அதனை நோக்கி நடந்தான். தெற்கு பஜாரில் நிறைய நகைக்கடைகள். குறுகலான சந்திற்குள் நகை வேலை செய்யும் ஆட்களும் இருந்தார்கள். வரிசையாகப் பைக்குகள் நிறுத்தப்பட்டிருக்கும். அந்தச் சந்திற்குள் பழைய கால லாட்ஜ் ஒன்றிருந்தது. அதன் படிகளில் மேலேறிப் போய்க் கிளிக்கூண்டை வைத்தபடியே ஒரு இளைஞனை பார்த்தார்களா எனக்கேட்டான். எவரும் பார்க்கவில்லை என்றார்கள்

அவன் தனது கிளி திருடு போனதைப் பற்றி பலரிடமும் சொன்னான். கிளியை எதற்காகத் திருடியிருப்பான் என ஆளுக்கொரு காரணத்தை சொன்னார்கள்.

தெற்குபஜார் முழுவதும் சுற்றிலையந்தும் அவனைப் பற்றிய விபரம் கிடைக்கவில்லை. ஒருவேளை காய்கறி மார்க்கெட் வழியாகப் போயிருக்கக் கூடுமோ என அந்த வழியாகவும் தேடி அலைந்தான். நகருக்குள் இத்தனை சிறிய வீதிகள் இருப்பதை அன்று தான் கண்டான். அத்தோடு கழிவாகப் போட்டிருந்த காய்கறிகளைத் தின்னும் திமில் உள்ள கோவில் மாட்டினையும் அன்று தான் பார்த்தான். எவ்வளவு பெரிய காளை. ஒரு சந்திற்குள் பூனையொன்றை நாய் துரத்திக் கொண்டிருந்தது.

மதியம் மூன்றுவரை சுற்றிலையந்தும் அந்த இளைஞனை கண்டுபிடிக்க முடியவில்லை. மதிய சாப்பாட்டினை மறந்து நடந்தான். வழக்கமாக மதிய நேரங்களைச் செலவிடும் கோர்ட் வளாகத்திற்குள் சென்றான். அங்கே ஒரு கிழவர் தலையில் கிழிந்த துண்டு ஒன்றைப் போட்டு அமர்ந்திருந்தார். அருகில் சென்று அவனும் உட்கார்ந்து கொண்டான்.

வழக்கமாகக் கிளிக்கூண்டை வைத்து அதன் முன்னால் பச்சைநிற விரிப்பை விரிப்பான். அதில் பிரேம் செய்யப்பட்ட முருகனின் புகைப்படத்தை வைப்பான். அதன் முன்னால் சிவப்பு அட்டைகளின் அடுக்கை சரித்து வைப்பான்.

ஜோதிடம் பார்க்க அவன் முன் உட்காருகிறவர்களின் முகத்தை ஆழ்ந்து கவனிப்பான். அந்தக் கண்களிலே அவர்களின் கடந்தகாலம் தெரிந்துவிடும். ஒருவரின் துயரை அவரது கண்களை விடவும் கைகள் அதிகம் வெளிப்படுத்துகின்றன. ஆகவே கைகளை எப்படி வைத்திருக்கிறார்கள் என்று கவனிப்பான். தொடுகுறி சாஸ்திரம் அறிந்தவன் என்பதால் அவனால் எளிதாகப் பலரின் ஆசைகளையும் அறிய முடிந்திருந்தது.

ஜமு ஜமு என அவன் அழைத்தவுடன் கிளி வெளியே வரும். அவன் அடுக்கி வைத்த சீட்டில் ஒன்றை எடுத்து தரும்படி கேட்பான். அந்த நேரத்தில் தனது கையிலுள்ள ஒரு விரலை அல்லது கால்விரலை அசைத்துக் கொண்டேயிருப்பான். கிளி ஒவ்வொரு சீட்டாக எடுத்துப் போட்டுக் கொண்டேவரும். அவன் அனுமானித்த சீட்டு வந்தவுடன் விரல் அசைவதை நிறுத்திவிடுவான். கிளி அந்தச் சீட்டை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு முருகனை வணங்கும். பின்பு அதற்கான நெல்மணியைப் பெற்றுக் கொண்டு பள்ளிவிட்டு வீடு திரும்பும் மாணவி போல இயல்பாகக் கூண்டிற்குள் போய் நின்று கொள்ளும். உலகிற்குத் தான் அது கூண்டு . கிளிக்கு அது வசிப்பிடம்.

அன்றைக்குக் கிளி இல்லாமல் தனியே உட்கார்ந்திருந்த போது எவரும் அவனைத் தேடி வரவில்லை. ஒருவேளை கிளியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது எனக் கவலையாக இருந்தது. யார் இதற்கு உதவி செய்வார்கள். யாரைப் போய்ப் பார்ப்பது என்றும் தெரியவில்லை. திடீரெனத் தனது எதிர்காலம் இப்படி இருண்டுவிடும் என அவன் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

பக்கத்தில் உட்கார்ந்திருந்த கிழவர் அவனை நோக்கித் திரும்பி “சாப்பிடலையாப்பா, மொகம் கிறக்கமா தெரியுது“ என்று கேட்டார்

அவர் கேட்காமலே தனது கிளி திருடு போய்விட்டதைப் பற்றி விரிவாகச் சொன்னான்

“உன் பிழைப்ப கெடுத்தவன் நல்லா இருக்கமாட்டான். எத்தனையோ ஆளுக்கு நல்ல வார்த்தை சொல்லிருக்கே.. உனக்கும் நல்லது தான்பா நடக்கும். கவலைப்படாதே“ என்றார் அந்தக் கிழவர்

அப்படிச் சொன்னது அவனுக்கு ஆறுதலாக இருந்தது

“நீங்க சாப்பிட்டீங்களா“ எனக்கேட்டான்

“வக்கீல் கூடப் போன என் பேரன் வரக்காணோம். அவன் வந்து தான் சாப்பிடப் போகணும். மணி என்னாகுது“

“இப்பவே நாலு மணியாச்சே“ என்றான்

“கோர்ட் வாசல்ல கால வச்சிட்டா சாப்பாடு தண்ணி எல்லாம் மறந்துர வேண்டியது தான்“ என வருத்தமான குரலில் சொன்னார் கிழவர்

“வாங்க டீ குடிப்போம்“ என அவரை அழைத்தான் சாம்பசிவம்,

“வேணாம்பா.. நீயே கிளியை பறிகொடுத்துட்டு நிக்குறே.. செலவை பாத்து செய்யு“

அப்படிச் சொன்னது அவனது மனதைத் தொட்டது. அவரை வற்புறுத்தி டீக்கடைக்கு அழைத்துப் போனான். இருவரும் தேநீர் குடித்தார்கள். கிழவர் அவனிடம் தயங்கிய குரலில் கேட்டார்

“ஒண்ணுக்கு போற இடம் எங்க இருக்கு. காலைல இருந்து மூத்திரம் போகலை“

“வாங்க கூட்டிட்டு போறேன்“

அவர்கள் இருவரும் பைக் ஸ்டாண்டினைக் கடந்து நடந்தார்கள். சருகுகளாகக் கிடந்த பாதையில் நடந்து டாய்லெட்டினைக் காட்டினான். கிழவர் மூத்திரம் பெய்துவிட்டு திரும்பி வந்த போது சொன்னார்

“திருட்டுப்பயக பெருகிப் போயிட்டாங்க. முழிச்சிருக்கக் கண்ணைத் தோண்டிட்டு போற காலம்பா.. நாம தான உஷரா இருந்துக்கணும்“

“ஆமாய்யா.. எப்பவும் கிளியை கூடவே தான் வச்சிருப்பேன். இன்னைக்கு இப்படி ஆகிப் போச்சு“

“யாரு பிழப்பும் நிம்மதியா இல்லை“.. என முணுமுணுத்தபடியே அவனுடன் நடந்தார் கிழவர்

மாலை ஐந்தரை மணி வரை கோர்ட் வளாகத்தினுள்ளே இருந்தான். கனத்த கம்பளி ஒன்றை போர்த்தியபடி இருட்டில் உட்கார்ந்திருப்பது போன்று மனதில் வலி நிரம்பியிருந்தது. உலகிற்குத் தான் அது கிளி. அவனுக்குச் செல்லம். ரயிலில் பயணம் செய்யும் நாட்களில் கிளியிடம் பேசிக் கொண்டே வருவான். கிளி அவனோடு அருவியில் நனைந்திருக்கிறது. அவன் குடிப்பதைக் கண்டிருக்கிறது. அவன் சீட்டு விளையாடும் போது அருகிலிருந்திருக்கிறது. இதை எல்லாம் பற்றி நினைக்க நினைக்க மனதில் துயரம் அதிகமாகிக் கொண்டே போனது.

மாலை நேரம் கோர்ட் வளாகத்தில் அடைவதற்காக நிறையப் பறவைகள் கூடத் துவங்கின. அவனுக்கு அறைக்குப் போகவே மனமில்லாமல் இருந்தது. சினிமாவிற்குப் போவதற்கும் பிடிக்கவில்லை. வெளியே சுற்றிக் கொண்டேயிருந்தால் இழப்புணர்வு அதிகமாகிவிடும் என்று உணர்ந்தவனாகச் சினிமா தியேட்டரை நோக்கி சென்றான். புதுப்படம் போட்டிருந்தார்கள். படத்தில் மனம் ஒன்றவேயில்லை.

தனது கிளிக்கூண்டினை திருடிச் சென்ற இளைஞனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். இடைவேளையுடன் தியேட்டரை விட்டு வெளியே வந்து அறையை நோக்கி நடந்தான். இரவு சாப்பாட்டைத் தவிர்த்துவிடலாம் என்று தோன்றியது. அறை வாசலுக்கு வந்த போது கிளி தன்னோடு இல்லை என்பது வேதனையாக இருந்தது. அறைக்கதவை திறந்து விளக்கைப் போட்டான். வழக்கமாகக் கிளிக்கூண்டை வைக்கும் மேஜையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அறை விநோதமாகத் தோற்றம் அளிப்பதாக இருந்தது.

திடீரென அந்த நகரம் பல்லாயிரம் கரங்கள் கொண்ட ராட்சச ஆக்டோபஸைப் போல மாறிவிட்டதாகத் தோன்றியது. படுக்கையில் படுத்தபோதும் உறக்கம் கூடவில்லை. ஏதோ யோசனைகள். கவலைகள். எப்போது உறங்கினான் என்று தெரியவில்லை. கண்விழித்த போது வெயிலேறி இருந்தது. கைக்கடிகாரத்தில் மணி எட்டாகியிருந்தது. பிளாஸ்டிக் ஜக்கில் இருந்த தண்ணீரில் முகம் கழுவி கொண்டு டீக்குடிப்பதற்காக அறைக்கதவை திறந்தான்

வாசலில் அவனது கிளிக்கூண்டும் பையுமிருந்தன

யார் கொண்டு வந்து வைத்தார்கள் எனத் தெரியவில்லை.

மகிழ்ச்சியோடு குனிந்து “ஜமு எங்க போயிட்டே“ என்று கேட்டான்

பயத்தை வெளிப்படுத்துவது போலக் கீச் கீச் எனக் கிளி உரத்து சப்தமிட்டது. என்ன நடந்திருக்கும் என அவனுக்குத் தெரியவில்லை. அந்த நிமிஷத்தில் எதிர்காலத்தை விடவும் கடந்தகாலம் தான் அறிந்து சொல்ல முடியாத புதிராக அவனுக்குத் தோன்றியது.

••••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 07, 2026 04:39
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.