தொடுவிரல்.
புதிய சிறுகதை. பிப்ரவரி 6 2024
இந்த முறை மூன்றாவதுபரிசு கிடைத்திருந்தது.
இரண்டாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள வீட்டுஉபயோகப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று பத்திரிக்கையிலிருந்து வந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.
பீங்கான் தட்டுகள்.கோப்பை கொண்ட பரிசுபெட்டியோ அல்லது கேசரோல்செட் ஒன்றோ அனுப்பி வைப்பார்கள்.

கிருதமால் பத்திரிக்கைகள் நடத்தும் போட்டியில் இதுவரை ஐம்பது நூறு துவங்கி ஐம்பதாயிரம் வரைப் பரிசாகப் பெற்றிருக்கிறான். பெரும்பாலும் அவன் கலந்து கொண்ட போட்டிகளில் ஏதேனும் ஒரு பரிசை வென்றுவிடுவது வழக்கம்.
அந்த அதிர்ஷ்டம் போட்டிக்கு மட்டுமே பொருந்துகிறது. வாழ்க்கைக்குப் பொருந்தவில்லை. இத்தனை வருஷமாகியும் அவனால் தனது தொழிலில் போட்டியிட்டு வளர முடியவில்லை. பெரிய சம்பாத்தியமில்லை. நாற்பது வயதைத் தொடுவதற்குள் தலைமயிர் கொட்டிவிட்டது. கன்னத்து எலும்புகள் புடைத்துத் தெரிகின்றன. அல்சருக்கு மாத்திரை மருந்து எடுத்துக் கொள்கிறான்.
பத்திரிக்கைகளில் வெளியாகும் குறுக்கெழுத்துப்போட்டிகள். புதிர்ப்போட்டி, புகைப்படங்களுக்குப் பொருத்தமான வாசகம் எழுதும் போட்டி. ஜோக்போட்டி, தேர்தல் கணிப்புபோட்டி, எனஅனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொள்ளும் ஆர்வம் அவனுக்கிருந்தது.
போட்டிக்காக யோசிக்கும் போது மட்டுமே அவனால் எழுத முடிகிறது. ஆசைக்காக எதையாவது எழுத நினைத்தால் ஒரு வரி கூட எழுத இயலாது. அவனது நண்பர்களில் சிலர் புத்தகம் எழுது என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். அவனால் எழுத இயலவில்லை.
புளியமரத்தடி பஸ் ஸ்டாபில் அவனது டெய்லர் கடை இருந்தது. வீடு பாவடித்தோப்பு பகுதியில். அவனைப் போலவே அவனது மனைவி திவ்யாவும் ஒரு டெய்லர். தன்னைப் போலவே தையல் வேலை செய்யும் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என வற்புறுத்தி பெண் பார்க்கச் சொன்னான்.

கோவிலாங்குளத்தில் அப்படியொரு பெண் இருக்கிறாள் என்று திவ்யாவைப் பற்றிச் சொன்னார்கள். பெண் பார்க்கப் போன நாளில் அவள் என்ன தையல் இயந்திரம் வைத்திருக்கிறாள் என்று தான் பார்த்தான். திவ்யா அணிந்திருந்த ரவுண்ட் நெக் ஜாக்கெட் மற்றும் அவள் தலையில் பூச்சரம் வைத்துள்ள கச்சிதம் அவனைக் கவர்ந்துவிட்டது. ஐந்து பவுன் மட்டுமே போடுவதாகச் சொன்ன போதும் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்து விட்டான்.
திருமணத்திற்கு முன்பாகத் தனது டெய்லர் கடையைத் திவ்யா ஒருமுறை காண வேண்டும் என்று விரும்பினான். இதற்காக அவள் தனது தம்பியை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள்.
கடையைப் பார்த்தமாத்திரம் சொன்னாள்
“மெயின் ரோட்ல இருக்கு. நாலு மிஷின் போட்டு நாலு டெய்லர் வேலை செய்யலாம். பேங்க் லோன் போட்டு கடையைப் பெருசா ஆக்குவோம்“
“அதெல்லாம் எனக்குப் பிடிக்காது. இது எங்க அய்யா நடத்துன கடை. இதுல வேற ஆள் எல்லாம் சேக்க முடியாது“.
“அது உங்க இஷ்டம்` என்று சொல்லி உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டாள். அப்படிச் செய்தது அவனைச் சங்கடப்படுத்தியது.
கடையின் உள்ளே அவன் முதல்முறையாகச் சைக்கிள் பரிசு பெற்ற புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. அதை அவளிடம் காட்டி விளக்கினான். அத்தோடு மர ஸ்டாண்டில் வைக்கபட்டிருந்த ரேடியோவைக் காட்டிச் சொன்னான்
“இந்த ரேடியோ கூட எனக்குப் போட்டில தான் கிடைச்சது“
“தவணை சீட்லயா“ எனக்கேட்டாள் திவ்யா
“இல்லை.பத்திரிக்கைல ஒரு புதிர்போட்டி. அதுக்குப் பதில் அனுப்பி வச்சேன். செகண்ட் பிரைஸ் கிடைச்சது. இப்படி நிறைய ஜெயிச்சிருக்கேன்“
அவனது வெற்றிகளைக் கேட்டுக் கொள்வதில் திவ்யா ஆர்வம் காட்டவில்லை.
இதுவரை அவன் கலந்து கொண்ட பத்திரிக்கைப் போட்டிகள் பற்றியும், அதில் கிடைத்துள்ள பரிசுகளைப் பற்றியும் ஒரு கணக்கு நோட்டில் குறித்து வைத்திருந்தான். தேதி வாரியாகத் தகவல் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அந்த நோட்டினை அவளிடம் ஆசையாக எடுத்துக் காட்டினான். அவள் இஷ்டமில்லாமல் அதைப் புரட்டிவிட்டு கேட்டாள்
“பேங்க்ல உங்க சேவிங்ஸ் எவ்வளவு இருக்கு“
“கம்மியா தான் இருக்கு. வர்றது வீட்டு செலவுக்கே சரியா போயிடுது. கீதா வேற படிச்சிட்டு இருக்கா.. அவளுக்கு நான் தான் கல்யாணம் பண்ணி வைக்கணும் “
வார இதழ்களில் நாளிதழ்களில் வெளியான போட்டி முடிவுகளில் அவனது பெயர் வெளியான துண்டுகளை அவளிடம் எடுத்துக் காட்டினான்
“உங்களுக்குத் தெரிந்த பொம்பளை பிள்ளைக ஸ்கூல் இருந்தா.. நாம ஆர்டர் எடுத்து யூனிபார்ம் தைத்து குடுக்கலாம்“ என்றாள்
“எனக்கு அப்படி யாரையும் தெரியாது“ என்றான் கிருதமால்.
கல்யாணத்தில் அவனுக்கு மோதிரம் போட இருப்பதாகவும் அதற்காக அளவு வேண்டும் என்றும் ஒரு நூலை அவனது விரலில் சுற்றி அளவு எடுத்துக் கொண்டு திவ்யா புறப்பட்டாள்.
திருமணத்திற்குப் பிறகு தனது விருப்பங்களை அவள் புரிந்து கொள்வாள் எனக் கிருதமால் நினைத்தான். ஆனால் அது பதினோறு ஆண்டுகள் கடந்தும் நடக்கவில்லை.

அவர்களுக்குள் நிறையச் சண்டை, கருத்து வேறுபாடுகள். அடிக்கடி கோவித்துக் கொண்டு அம்மா வீட்டிற்குப் போய்விடுவாள். சில நாட்களின் பின்பாகச் சமாதானப்படுத்தி அவளை அழைத்து வருவான். கடிகாரத்தின் சிறிய முள் போல அவனும் பெரிய முள் போல அவளுமிருந்தார்கள். திருமணமான மூன்றாம் மாதமே அவள் தனியே லேடீஸ் டெய்லர் ஷாப் திறக்கப்போவதாக சிவன் கோவில் தெருவில் இடம் பிடித்தாள். இரண்டு பெண்களையும் வேலைக்கு வைத்துக் கொண்டாள். ஒரு வருஷம் கூட அவளால் கடையை நடத்த முடியவில்லை. கடனாகிவிட்டது. அதனையும் கிருதமாலே ஏற்க வேண்டியது வந்தது.
துணிக்கடை ஒன்றில் வேலைக்குச் சென்றாள். அங்கேயும் அவளால் நிலைக்க முடியவில்லை. இதற்குள் குழந்தை பிறந்து மூன்று வாரத்திலே இறந்து விட்டது. அந்தத் துயரை அவளால் தாங்க முடியவில்லை. அதனை நினைத்து வருந்திக் கொண்டேயிருந்தாள். திடீரென ஒரு நாளிரவு அவனை ஒருமையில் அழைத்து திட்டத் துவங்கினாள். அவர்கள் குழந்தையை ஒளித்து வைத்துள்ளதாக சண்டையிட்டாள்
“என் பிள்ளையை குடுத்துருங்க“ என்று கத்தினாள்.
அவளது பெற்றோர்கள் தங்களோடு இருக்கட்டும் என அவளை அழைத்துக் கொண்டு போனார்கள். ஏழு மாதங்களுக்குப் பிறகு நலமாகினாள். வீட்டிலே தையல்வேலை செய்வதைத் தொடர ஆரம்பித்தாள். ஆனால் அவள் முன்பு போல இல்லை என்பதைக் கிருதமால் நன்றாக உணரத் துவங்கினான்
டெய்லர் மிஷினில் உட்கார்ந்து கொண்டு எதையோ யோசித்துக் கொண்டேயிருப்பாள். கைகள் அசையாது. பெடலை மிதிக்க மாட்டாள். வெறித்த பார்வை நிலைகுத்திப் போயிருக்கும்.
ஒரு நாள் பின்னிரவில் எழுந்து அவள் டெய்லரிங் மிஷினை வேகவேகமாக இயக்கிய போது அவன் பயந்து போனான். அவளை மனநல மருத்துவரிடம் காட்டி சிகிட்சை எடுக்க வேண்டியதாகியது. அந்த நாட்களில் அவள் சிடுசிடுப்பாகவே நடந்து கொண்டாள். திடீரெனச் சப்தமாக அழுவாள். கத்திரிக்கோலால் அவனது வேஷ்டியை துண்டு துண்டாக வெட்டி எறிந்தாள். தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டு அவளது உடல்நலம் தேறியது. ஆனால் சிடுசிடுப்பு மாறவேயில்லை.
அவர்களுக்குள் சண்டை முற்றும் நேரங்களில் அவனது விருப்பங்களைக் குத்திக்காட்ட அவள் மறப்பதேயில்லை.
“போட்டிபோட்டு கடையை நடத்திக் காசு சம்பாதிக்கத் துப்பில்லை. பத்திரிக்கை போட்டில நூறு இருநூறு ஜெயிச்சிட்டா நிறைஞ்சிருதாக்கும்“
“என்னாலே முடிஞ்சதை நான் சம்பாதிச்சிட்டு தானே இருக்கேன். இது என் ஆசைக்குச் செய்றேன். அதை ஏன் புரிஞ்சிகிட மாட்டேங்குறே“
“ஆமா சாமி நான் படிப்பறிவில்லாத கூகை. போதுமா“ எனக் கையெடுத்து கும்பிடுவாள். அவளது கோபத்தின் பின்னுள்ள காரணங்களை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
நோட்டில் வைத்த மயிலிறகை போலச் சிறிய அதிர்ஷ்டம் தன்னைத் தொடர்கிறது. வெற்றியின் சுண்டுவிரல் மட்டுமே தன்மீது படுகிறது. முழுக்கையும் பற்றிக் கொண்டு பெரிய ஆளாகிவிட முடியவில்லை.
போட்டி முடிவுகளில் தனது பெயரை பார்ப்பதில் அவனுக்கு ஆனந்தமாக இருந்தது. அத்தோடு வருஷத்துக்குச் சில ஆயிரங்கள் பரிசுப் பணமாக வந்துவிடுவது அவனது நெருக்கடியான வாழ்க்கையை ஒட்டுவதற்கு உதவிகரமாகவே இருந்தது.
ஆனால் அதைத் திவ்யா ஆழமாக வெறுத்தாள். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்த வெறுப்பை விஷமாக வெளிப்படுத்தினாள். அவள் சொல்வதைப் போலப் போட்டிகளில் கலந்து கொள்வதை நிறுத்திவிடலாம் என்று கிருதமால் பலமுறை நினைத்திருக்கிறான். ஆனால் அப்படி நிறுத்த முடியவில்லை. அது ஒன்றில் தான் அதிர்ஷ்டம் துணை நிற்கிறது. அதை எப்படி விட முடியும்.
••
போட்டிகளில் கலந்து கொள்ளும் பழக்கம் அவனது பள்ளிவயதில் துவங்கியது. அதற்கு முக்கியக் காரணம் நூலகர் ராமமூர்த்தி. உள்ளூர் கிளை நூலகத்தில் பணியாற்றி வந்தார்.
காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கப்போன அவனைவார இதழ்களும் நாவல்களும் படிக்க அவர் தான் தூண்டிவிட்டார். அவருக்கு வார இதழ்கள் நடத்தும் குறுக்கெழுத்து மற்றும் கதை கவிதை போட்டிகளில் கலந்து கொள்ளும் பழக்கமிருந்தது. இதற்காகவே நிறைய போஸ்ட் கார்டுகள், தபால் உறைகள் வாங்கி வைத்திருப்பார். எந்தப் பத்திரிக்கை போட்டி நடத்தினாலும் தவறாமல் கலந்து கொள்வார். ஒன்றிரண்டுமுறை ஆறுதல்பரிசுகளும் பெற்றிருக்கிறார்.
வார இதழ் ஒன்றில் லோமாக் சோப் நிறுவனம் விளம்பரவாசகம் ஒன்றை எழுதி அனுப்பும்படி கேட்டிருந்தார்கள்.நூலகர் ராமமூர்த்தி ஒரு தபால் அட்டையில் ஐந்து விளம்பர வாசகங்களை எழுதியிருந்தார்.
அந்த அட்டையைத் தபால்பெட்டியில் போடும்படியாகக் கிருதமாலிடம் கொடுத்தார்.
தபாலில் போடுவதற்கு முன்பாக அதனை வாசித்துப் பார்த்தான்.
அது போல நாமும் ஒரு தபால் அட்டையை அனுப்பி வைக்கலாமே என நினைத்து மறுநாள் ஐந்து வாசகங்கள் கொண்ட தபால் அட்டை ஒன்றை அதே முகவரிக்கு அனுப்பிவைத்தான்.
பல்லாயிரம் பேர்கள் கலந்து கொள்ளும் போட்டி என்பதால் தன்னைப்போல பள்ளியில் படிக்கும் மாணவன் எழுதிய வாசகத்தைப் பெரிதாக நினைக்கமாட்டார்கள் என்று கருதி அதனை மறந்து போனான்.
இரண்டு மாதங்களுக்குப் பிற்கு அதே வாரஇதழில் போட்டியின் முடிவு வெளியாகியிருந்தது.அவனால் நம்பமுடியவில்லை. அவனுக்குத் தான் முதல் பரிசு கிடைத்திருந்தது.
அதுவும் ஒருசைக்கிள். நூலகரால் நம்பமுடியவில்லை. இத்தனை வருஷமாகப் போட்டிக்கு அனுப்புகிறோம் நமக்குப் பரிசுகிடைக்கவில்லை. பள்ளிச் சிறுவனுக்குப் பரிசு கிடைத்து விட்டதே எனப் பொறாமை கொண்டவராக அவனிடம் குறுக்குவிசாரணை செய்வது போலக் கேட்டார்
“என்ன வாசகம் எழுதினே. “
“மறந்து போச்சு சார்“என்றான்கிருதமால்
தன்னை ஏமாற்றுகிறான் என நினைத்த நூலகர் கோபத்துடன்கேட்டார்
“நான் குடுத்த போஸ்ட்கார்ட்டை என்னடா செய்தே“
“அதை அப்பவே தபால்ல போட்டுட்டேன் சார்“.
“அதுல இருந்த வாசகத்தைத் தான் காப்பி அடிச்சயா உண்மையைச் சொல்லு“
“இல்ல சார். நானே யோசிச்சி எழுதினேன். நிஜமாவே எனக்குச் சைக்கிள் பரிசா கொடுப்பாங்களா சார்“
“அதெல்லாம் கிடைக்காது . உன் பேரை சொல்லி கம்பெனிக்காரங்களே அடிச்சிட்டு போயிடுவாங்க. “
“அப்போ எனக்குச் சைக்கிள் கிடைக்காதா சார்“
“நிச்சயமா கிடைக்காது“ என்றார் ராமமூர்த்தி.
“இந்த வார பத்திரிக்கைய எங்க வீட்டுல கொண்டு போயிகாட்டிட்டு வரவா சார்“ எனத் தயக்கத்துடன் கேட்டான்.
“இன்னைக்குதான் பத்திரிக்கை வந்துருக்கு.வெள்ளிகிழமை வரைக்கும் அது டேபிள்ல கிடக்கணும். அதுக்கு அப்புறமா தர்றேன்“ என்று வெறுப்பான குரலில் சொன்னார்
சைக்கிள் கிடைக்கும் வரைக்கும் வீட்டில் சொல்லவேண்டாம் என நினைத்த கிருதமால் தனது நண்பனிடம் கூட அதைப்பற்றிச் சொல்லவில்லை.
ஆனால் புதன்கிழமை அன்று ஒரு காரில் சோப்நிறுவனத்தின் இரண்டு அதிகாரிகள் அவனது பள்ளிக்கு வந்திருந்தார்கள்.
ஒன்பதாம் வகுப்பில் இருந்த அவனை அழைத்தார்கள்
தயக்கமும் பயமுமாகக் கிருதமால் தலைமைஆசிரியர்அறைக்குச்சென்றான். சபாரி சூட் அணிந்திருந்த நாற்பது வயதைக் கடந்த சோப் நிறுவனஅதிகாரி அவனை வியப்போடுபார்த்தார் . அவரது கையில் சிறிய சூட்கேஸ் இருந்தது. உடனிருந்த இன்னொரு அதிகாரி ஐம்பது வயதுக்கும் மேற்பட்டவராக இருந்தார். அவர் கூலிங்கிளாஸ் அணிந்திருந்தார். இடது கையில் நீலக்கல் மோதிரம் போட்டிருந்தார்.
சபாரி உடை அணிந்தவர் அவனிடம் கேட்டார்
“நீ தான் கிருதமாலா“
“ஆமா சார்“`
“இதை நீயா அனுப்பி வச்சே “எனஅவனது தபால்அட்டையைக் காட்டினார்.
ஆமாம் எனத் தலையாட்டினான்
“போட்டியில உனக்குத் தான் பர்ஸ்ட்பிரைஸ் கிடைச்சிருக்கு. இது நீ எழுதுனதா. இல்லை யாராவது எழுதி உன் பேர்ல போட சொன்னாங்களா“
“நானா தான் சார் எழுதுனேன்“.
“அப்போ ஒரு பேப்பர்ல இதுல நீ எழுதுன வாசகங்களை எழுதிக்காட்டு“ என்றார் சபாரி அணிந்தவர்.
தலைமைஆசிரியர் வெள்ளைத்தாள் ஒன்றை அவனிடம் நீட்டினார். சோப் நிறுவனத்திற்கு அனுப்பிய விளம்பர வாசகங்களைக் கடகடவென எழுதிக் காட்டினான்
அதே கையெழுத்து, அதே வாசகங்கள். சோப் நிறுவன அதிகாரி மகிழ்ச்சியான முகத்துடன் சொன்னார்
“எங்க கம்பெனியோட புதுசோப்பை அறிமுகப்படுத்துற நிகழ்ச்சி 22 ம் தேதி மதுரைல நடக்கப்போகுது. அதுல உனக்குப் பரிசுகொடுப்பாங்க. நாங்களே வந்து உன்னைக் கூட்டிட்டு போயிடுவோம்“
“அன்னைக்கு ஸ்கூல் இருக்கும் சார்`என்றான் கிருதமால்
“எங்க ஸ்கூல் பையன் பரிசு வாங்குறான். இது எங்களுக்குப் பெருமை. நான் லீவு கொடுத்து அனுப்பி வைக்கிறேன்“ என்றார் தலைமைஆசிரியர்.
“உங்க வீடு எங்க இருக்கு தம்பி“ எனக்கேட்டார் நீலக்கல் மோதிரம் அணிந்தவர்
“சின்னச்சாவடிபக்கம் சார்“என்றான் கிருதமால்
“உங்க அப்பா என்னசெய்றார் “`
“டெய்லர். அருப்புக்கோட்டைல கடை வச்சிருக்கார்“.
“உங்க வீட்டுக்குப் போயி உங்க அப்பா கிட்ட ஒரு கையெழுத்து வாங்கணும்“ `என்றார் சபாரி உடை அணிந்தவர்
“எங்கய்யா வீட்ல இருக்கமாட்டார் சார். அவரு நைட் தான் வருவார்“
“அப்போ உங்க அம்மா கிட்ட கையெழுத்து வாங்கிகிடலாம். வா..கார்லே போகலாம்“
என அவனையும் அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியர் அறையைவிட்டுபடிகளில் இறங்கினார் சோப் நிறுவன அதிகாரி
அவன் காரை நோக்கிப் போவதை வகுப்பிலிருந்த மாணவர்கள் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்
அது கறுப்பு அம்பாசிடர் கார். பின்னிருக்கையில் வெண்ணிற டர்க்கி டவல் விரித்திருந்தார்கள். சபாரி அணிந்தவர் முன்சீட்டில் உட்கார்ந்துகொண்டார். கிருதமாலும் இன்னொரு அதிகாரியும் பின்னால் உட்கார்ந்து கொண்டார்கள். தலையில் வெள்ளை தொப்பி அணிந்திருந்த டிரைவர் காரைப் புழுதி பறக்கவெளியே எடுத்தார். வேப்பரமத்தில் இருந்த காகம் ஒன்று இந்த அதிர்ச்சியால் விருட்டெனப் பறந்து போனது.
வீட்டைநோக்கிக் காரில் செல்வது மகிழ்ச்சியாக இருந்தது. இதெல்லாம் கனவு போலவேயிருந்தது.
அவர்கள் வீட்டின் வாசலில் கார்நின்றபோது உள்ளே அம்மா விறகடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தாள். வீடெங்கும் ஒரே புகையாக இருந்தது. உள் அறையின் கதவையொட்டி அமர்ந்திருந்த பாட்டி சிறிய கல்உரலில் வெற்றிலை இடித்துக் கொண்டிருந்தாள்.
“யம்மா எனக்குப் பிரைஸ் கிடைச்சிருக்கு“என்று சப்தமாகச் சொல்லியபடியே அடுப்பை நோக்கி நடந்தான் கிருதமால்
“அதுக்குள்ளயா ஸ்கூல் விட்டுட்டாங்க“ எனக்கேட்டாள் அம்மா
“ரெண்டுபேர் உன்னைப் பாக்க வந்துருக்காங்க“
“என்னைப் பாக்கவா..எதுக்கு“. எனக்குழப்பமாகக் கேட்டாள்
“நீயே கேளு. சொல்வாங்க“
அம்மா கலைந்து கிடந்த தலையை அவசரமாகச் சரிசெய்துகொண்டாள். அண்டாவில் இருந்து தண்ணீரை அள்ளிமுகத்தைக் கழுவிக் கொண்டாள்.சேலை முந்தானையில் முகத்தைத் துடைத்துவிட்டுக் கையில் ஒட்டிய ஈரத்தை இன்னொரு கையால் துடைத்துவிட்டபடி ஆபிசரா எனக் கேட்டாள்
“ஆமாம்“என்றான் கிருதமால்
அவளுக்குப் பேண்ட் சர்ட் அணிந்து காரில் வருகிறவர்கள் எல்லோரும் ஆபிசர்கள் தான்.
சோப் கம்பெனியின் அதிகாரிகள் அவனது வீட்டுதிண்ணையில் உட்கார்ந்திருந்தார்கள்.
அம்மா வாசலுக்கு வந்தவளாக`உள்ளே வாங்க சார்`என்று அழைத்தாள்
“இருக்கட்டும்மா..உங்க பையன் நாங்க நடத்துன போட்டில பர்ஸ்ட்பிரைஸ் வாங்கியிருக்கான்.ராலே சைக்கிள் பரிசா கொடுக்கப் போறோம்.. எங்க சோப் கம்பெனி சார்பா மதுரைல ஒரு பங்ஷன் நடக்கப்போகுது நீங்க வரணும்“..
“இதெல்லாம் நிஜமா` என்பது போலக் கிருதமாலை அம்மா திரும்பி பார்த்தாள். அவன் கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தான்.
“சோப்பும் ஒசியா குடுப்பீங்களா சார்` எனக்கேட்டாள்அம்மா
“ஒரு டஜன்சோப் குடுப்போம். எங்க கார்லே உங்களை மதுரைக்குக் கூட்டிட்டுபோயிட்டுத் திரும்பக் கொண்டுவந்து விட்ருவோம் `என்றார் நீலக்கல் மோதிரம் அணிந்தவர்.
“அப்போ சைக்கிள் அதை யார்ஒட்டிகிட்டுவர்றது“எனக்கேட்டான்கிருதமால்
“அதை வேன்ல வச்சி நாங்களே இங்ககொண்டு வந்து குடுத்துருவோம்“
அம்மாவால் நம்ப முடியவில்லை. காரில் இதுவரை மதுரைக்குப் போனதில்லை. காதும் கழுத்தும் மூளியாக இருக்கிறது. இந்தக் கோலத்தில் எப்படி மதுரைக்குப் போவது என மனதிற்குள் கவலையாகவும் இருந்தது.
அவர்கள் ஒரு உறுதிமொழிச் சான்றிதழில் அம்மாவிடம் கையெழுத்து வாங்கினார்கள். சுந்தரலட்சுமி என்ற தனது பெயரை அம்மா பொடி எழுத்தாக எழுதினாள். அவர்கள் கேட்காமலே அம்மா சொன்னாள்
“ஏழு வரைக்கும் படிச்சிருக்கேன் சார்“.
என்ன நடக்கிறது எனப்புரியாமல் பாட்டி வந்திருந்தவர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“கார்லயே உன்னை ஸ்கூல்ல விட்டுட்டு போயிடுறோம்“ என சபாரி அணிந்தவர் கிருதமாலிடம் சொன்னார்
“வீட்ல சாப்பிட்டு பிறகு ஸ்கூலுக்குப் போய்கிடுறேன் சார்“ என்றான் கிருதமால்.
அவர்கள் கார் கிளம்பும் வரை அம்மாவும் பாட்டியும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“சைக்கிள் குடுக்கிறதுக்குப் பதிலா தங்க கம்மலோ செயினோ குடுத்தா நல்லா இருந்துருக்கும்“ என்றாள் பாட்டி
“போட்டில அதெல்லாம் குடுக்கமாட்டாங்க “ என்றான் கிருதமால் ராமன்
“போட்டிகீட்டீனு படிப்பை கோட்ட விட்ராதே` என்றாள் பாட்டி.
“பாட்டி நீயும் மதுரைக்கு எங்க கூட வர்றே“ என்றான் கிருதமால்
“முழங்கால் வலியை வச்சிக்கிட்டு நாலு எட்டு நடக்க முடியலை. நான் எங்க வர்றது“. எனச் சலித்துக் கொண்டாள் பாட்டி
அம்மா திடீரெனச் சந்தேகம் வந்தவள் போலக் கேட்டாள்
“கையெழுத்து போடுறப்போ.. என் பேரை தப்பு இல்லாம எழுதுனனா“..
“கரெக்டா தான்மா எழுதுனே“ என்றான் கிருதமால்
“நான் கையெழுத்து போட்டு எத்தனையோ வருசமாச்சி… உங்கப்பாவை கேட்காம நான் கையெழுத்து போட்டதுக்குக் கோவிச்சிகிடுவாரு..அவர்கிட்ட ஒண்ணும் சொல்ல வேணாம்“
பாட்டி எதையோ முணுமுணுத்துக் கொண்டாள்.
கிருதமால் வேகமாகக் கிளை நூலகத்தை நோக்கிச் சென்றான். பஞ்சாயத்து அலுவலகத்தை ஒட்டிய வீடு ஒன்றில் தான் நூலகம் இயங்கி வந்தது. ஆர்ச் முகப்புக் கொண்ட பழைய காலத்து வீடு. நூலக நேரம் முடிந்தவுடன் முன்வாசலை மூடிவிட்டு நூலகர் உள்ளே சட்டை இல்லாமல் மரப்பெஞ்சில் படுத்துக்கிடப்பார். சில சமயம் நூலகத்தை மூடிவிட்டு சலூன் கடையில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்பதும் உண்டு. அன்றைக்கு நூலகத்தினுள் கால்நீட்டி படுத்துக்கிடந்தார். வாசலில் நின்று `சார்… சார்` எனக் கிருதமால் சப்தமிட்டான்.
சட்டை அணியாத மயிர் அடர்ந்த வெறும் மேலோடு வெளியே வந்தவர் கிருதமாலைப் பார்த்தபடி “குமுதம் வேணுமா, இல்ல விகடன் வேணுமா“ எனக்கேட்டார்.
பள்ளி ஆசிரியர்கள் படிப்பதற்காக இது போல வார இதழ்கள் கேட்டு வாங்கிப் போயிருக்கான் என்பதால் உருவான கேள்வியது.
இல்லை எனத் தலையாட்டியபடியே `சோப் கம்பெனி காரங் கார்ல எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க சார்` என்றான்
“என்னடா சொல்றே. உள்ளே வா` எனக் கதவை தள்ளி முழுவதுமாகத் திறந்தார். கிருதமால் உள்ளே சென்றான். மரநாற்காலியில் நூலகரின் வெள்ளைச் சட்டை தொங்கிக் கொண்டிருந்தது.
“கம்பெனிகாரங்க வந்தப்போ என்னைக் கூப்பிடக்கூடாதா“ என ஆதங்கமாகக் கேட்டார்
“அவங்க திடீர்னு ஸ்கூலுக்கு வந்துட்டாங்க சார். “ `
“போட்டோ பிடிச்சாங்களா“
“இல்லை சார். “`
“நானும் பதினாறு வருஷமா எத்தனையோ போட்டிகளுக்கு அனுப்பி வச்சிருக்கேன். எனக்கு லக்கு இல்லைடா.. நீ அதிர்ஷ்டக்காரப் பய. நீ அந்தச் சைக்கிளை வச்சி என்னடா செய்யப்போற.. எனக்குக் குடுத்துரு. “
“எங்கய்யா விட மாட்டாரு சார்“
“உங்கய்யாவா உன்னைப் பொஸ்தகம் படிக்கச் சொல்லி பழக்கிவிட்டாரு.. “
“நீங்க தான் சார்“
“அப்போ சைக்கிள் எனக்குத் தான்.. அதை மறந்துராதே“
“அது முடியாது சார்“
“நான் சொல்லி கொடுத்ததை எழுதி அனுப்பிட்டு என்னை ஏமாத்தப்பாக்காதடா“
“அதெல்லாமில்லை சார், நானா யோசிச்சி தான் எழுதுனேன்“
“உன்னை மாதிரி மரமண்டையால எப்படி எழுத முடியும். நான் எழுதுனதுல கொஞ்சம் மாத்தி அனுப்பி வச்சிருப்பே.. உன் பிராடு வேலைய பற்றி நான் கம்பெனிக்காரங்களுக்கு லெட்டர் போடப்போறேன். “ என நூலகர் அவனை மிரட்டினார்
அதைக்கேட்டவுடன் கிருதமாலுக்குப் பயம் வந்தது.
அவரை ஏன் பார்க்க வந்தோம் என்பது போலவே முறைத்தபடியே வெளியேறி பள்ளிக்குப் போனான். சொன்னது போலவே நூலகர் சோப் கம்பெனிக்கு இரண்டு புகார் கடிதங்கள் எழுதினார். அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. ஆனால் உள்ளூர் முழுவதும் நூலகர் சொல்வதை நம்பினார்கள். குறிப்பாகச் சலூனில் தினமும் இதைப்பற்றிப் பேசிக் கொண்டார்கள்.
கிருதமாலுக்குச் சைக்கிள் பரிசாகக் கிடைத்திருப்பதைப் பற்றிய செய்தியை அறிந்தவுடன் அவனது அய்யா வேந்தன் கோவித்துக் கொண்டார்
“படிக்கிற பயலுக்கு.. இதெல்லாம் ஏன் வேண்டாத வேலை“
“இதுல என்ன இருக்குய்யா..என் பேரன் ராசிக்கார பய.. அவன் ஜாதகத்துல ஒஹோனு வருவானு இருக்கு“ என்றாள் பாட்டி
“சைக்கிளுக்குப் பதிலா ஆயிரம் ரெண்டாயிரம் ரொக்கமா குடுத்தா.. கடனை அடைக்கத் தோதா இருக்கும்“ என்றார் கிருதமாலின் அய்யா.
ஆனால் கிருதமாலின் இரண்டு தங்கைகளும் அவனது வெற்றியை நினைத்து மகிழ்ந்தார்கள். அதிலும் கீதா தன்னோடு படிக்கும் மாணவிகளிடம் அண்ணன் ரொம்பவும் அதிர்ஷ்டமானவன் என்று பெருமையடித்தாள்.
இதன் பிறகான நாட்களில் கிருதமால் வகுப்பில் கவனம் இல்லாமல் இருந்தால் `என்னடா போட்டி நினைப்பா` என்று டீச்சர் கோவித்துக் கொண்டார். அரைப்பரிட்சையின் போது `இது போட்டியில்லப்பா.. நீ ஈஸியா ஜெயிக்கிறதுக்கு` என்று முகத்திற்கு நேராகச் சொன்னார் கணக்கு வாத்தியார் லோகநாதன்.
நூலகர் அவன் மீதிருந்த கோபத்தில் பள்ளிச் சிறுவர்கள் எவரையும் நூலகத்திற்குள் வருவதற்கு அனுமதிக்கவில்லை. அத்தோடு எல்லாப் போட்டிகளுக்கும் நாலைந்து பதில் எழுதி அனுப்பி வைத்தார். ஒரு நாள் கிருதமாலின் வீட்டிற்கு வந்து தான் எழுதி வைத்திருந்ததைத் திருட்டுதனமாக எடுத்து சோப் கம்பெனி போட்டிக்கு அனுப்பி விட்டான் என்று சண்டையிட்டார். ஊரைக் கூட்டி நியாயம் கேட்கப்போவதாகச் சொன்னார்.
“வயித்தெரிச்சல்ல பேசாதீங்க. என் பையன் ஒரு நாளும் அப்படிச் செய்யமாட்டான். “ என அய்யா கோபத்துடன் திட்டி அனுப்பிவைத்தார்
சொன்னது போலவே மதுரை நிகழ்ச்சிக்கு கிருதமால் குடும்பத்தைக் காரில் அழைத்துப் போனார்கள். கோரிப்பாளையத்திலுள்ள பெரிய கல்யாண மண்டபம் ஒன்றில் நிகழ்ச்சி நடந்தது. பரிசாகக் கொடுத்த சைக்கிளுடன் அவன் நிற்பது போலப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். சைக்கிளுடன் சேர்ந்து நிற்பது போன்ற குடும்பப் புகைப்படம் ஒன்றும் எடுத்தார்கள். இலவச சோப் மட்டுமின்றி இரண்டு பிளாஸ்டிக் வாளிகளும் பரிசாகக் கொடுத்து அனுப்பினார்கள். மண்டபத்தில் தரப்பட்ட விருந்தில் முதன்முறையாக மஞ்சள் நிறத்தில் ஐஸ்கிரிம் கொடுத்தார்கள். அவ்வளவு சுவையாக இருந்தது.
இளஞ்சிவப்பு வண்ண புதுச் சைக்கிளை எடுத்து ஒட்டிக் கொண்டு பள்ளிக்குச் சென்றான் கிருதமால். திடீரெனத் தான் வளர்ந்துவிட்டதைப் போல உணர்ந்தான். அது வெறும் சைக்கிள் இல்லை. தனது சாதனை. இது போல நிறையப் போட்டிகளில் கலந்து கொண்டு பெரிய பெரிய வெற்றிகளைப் பெற வேண்டும் என நினைத்துக் கொண்டான். சைக்கிள் தரையில் ஒடாமல் பறப்பது போலவே உணர்ந்தான்.
பள்ளியை நெருங்க நெருங்கஅவனது மகிழ்ச்சி அதிகமாகிக் கொண்டேயிருந்தது. சைக்கிளோடு வரும் கிருதமாலைப் பார்த்த பராங்குசம் தனது கைகளை நீட்டி சைக்கிளை நிறுத்தச் சொன்னான்
“நான் ஒரு ரவுண்ட் அடிச்சி பாக்குறேன்டா“
“இல்லைடா.. நாளைக்குத் தர்றேன்“ என்றான் கிருதமால்
“ஒரே ஒரு ரவுண்ட்றா“ எனப் பின்னாடியே வந்தான் பராங்குசம்
பள்ளியில் ஆசிரியர்களின் சைக்கிள்கள் ஒருபுறமும், மாணவர்கள் சைக்கிள் வேறு இடத்திலும் நிறுத்தப்படுவது வழக்கம். இரண்டுக்கும் நடுவில் தண்ணீர் தொட்டியை ஒட்டிய வேம்படியில் தனது சைக்கிளை கிருதமால் நிறுத்தினான். வகுப்பில் இருந்து பார்த்தால் சைக்கிள் கண்ணிற்குத் தெரியும் என்பதே அதற்கான காரணம்
மாணவர்கள் புது சைக்கிளைத் தொட்டுத்தொட்டு வியந்தார்கள். புதுவகையான பூட்டுள்ள அந்தச் சைக்கிளை ஆசிரியர்களும் கூட வேடிக்கை பார்த்தார்கள். தலைமை ஆசிரியர் பிரேயரில் அவனைப் பாராட்டி பேசினார். அன்று வகுப்பில் இருந்த போதும் அவனது கண் வேப்பமரத்தடியில் நிறுத்திவைக்கபட்ட புதுச் சைக்கிள் மீதே இருந்தது.
பள்ளிவிட்டதும் தனியே அந்தச் சைக்கிளில் மாங்குளம் செல்லும் மண்பாதையில் சென்றான். வானில் பறப்பது போல அத்தனை சந்தோஷமாக இருந்தது. அன்றிரவு சைக்கிளை வீட்டிற்குள் நிறுத்தினான். அதன் மீது ஒரு பழைய வேஷ்டியை போர்த்தி விட்டான். அருப்புக்கோட்டையிலிருந்து வீடு திரும்பிய அவனது அய்யா அம்மாவிடம் சொன்னார்
“பாளயம்பட்டி வியாபாரி ஒருத்தருக்கு சைக்கிளை வித்துட்டேன். காலைல வந்து எடுத்துக்கிடுவாரு“
“சைக்கிள் எனக்கு வேணும், நான் தரமாட்டேன்“ என்று கலங்கிய கண்களுடன் சொன்னான் கிருதமால்
“செவுளை பேத்துருவேன். வாங்கி வச்ச கடனை கட்டமுடியாம நானே நாக்குத் தள்ளிபோயிருக்கேன். இந்தச் சைக்கிள் மயிரை வச்சி என்ன செய்யப்போற. பகுமானம் காட்டவா. “ எனக் கைகளை உயர்த்தினார் அவனது அய்யா
கிருதமாலின் மறுப்பை யாரும் பொருட்படுத்தவில்லை. மறுநாள் புதுசைக்கிளை ஒரு வியாபாரி ஒட்டிக் கொண்டு போவதை கண்கலங்கப் பார்த்துக் கொண்டிருந்தான். இனிமேல் எந்தப் போட்டியிலும் கலந்து கொள்ளக்கூடாது என்று தோன்றியது. இந்த வீட்டை விட்டே ஒடிவிட வேண்டும் என்றும் நினைத்தான். ஆனால் அவனது வைராக்கியம் ஒரு நாள் கூட நீடிக்கவில்லை..
சைக்கிள் விற்ற பணத்தில் அய்யா அவர்களை அருப்புக்கோட்டைக்கு அழைத்துப் போய்ச் சினிமா பார்க்க வைத்தார். ஹோட்டலில் சாப்பிட செய்தார். ஒலைக்கொட்டானில் சீரணியும் சேவும் வாங்கிக் கொடுத்தார். வீட்டிற்குத் தேவையான எவர்சில்வர் சாமான்கள் சிலவற்றை அம்மா வாங்கிக் கொண்டாள். கீதாவிற்கு ரிப்பனும் ரப்பர் வளையலும் வாங்கினார்கள். சாந்தி ஹவாய் செருப்பு வாங்கிக் கொண்டாள். தனது பங்கிற்குக் கிருதமால் ஒரு பைனாக்குலர் வாங்கிக் கொண்டான்.
“ஒரு சைக்கிள் போனா என்ன. இன்னொரு போட்டில ஜெயிச்சி நீ காரை வாங்கு“ என்று பாட்டி மட்டுமே அவனை உற்சாகப்படுத்தினாள்.

பத்தாம் வகுப்போடு அவனது பள்ளிப்படிப்பு நின்று போனது. தன்னோடு டெய்லர் கடைக்கு வந்து உதவி செய்யும்படியாக அய்யா கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். இடுப்பு எலும்பில் ஏற்பட்ட தேய்மானம் காரணமாக அவரால் உட்கார முடியாத நிலை இருந்த காரணத்தால் அவனால் மறுக்கவும் முடியவில்லை.
டெய்லர் கடைக்குப் போய்வரத் துவங்கிய பிறகு பத்திரிக்கை போட்டிகளில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தது. அப்போது தான் பெட்டிக்கடை ஜமாலின் நட்பு உருவானது. மதிய நேரங்களில் அந்தக் கடையில் அமர்ந்தபடி வார இதழ்களைப் புரட்டிப் பார்ப்பதும் போட்டி பற்றித் தகவல் வெளியாகியிருந்தால் அதைக் குறித்துக் கொண்டு வருவதாக இருந்தான்.
எல்லா நாளிதழ்களையும் வார இதழ்களையும் படிக்க முடியாதே என்பதால் தினமும் நூலகத்திற்குப் போய் வருவான். வாரம் ஒன்றோ இரண்டோ போட்டிகளுக்குப் பதில் அனுப்பி வைப்பான். ஏதாவது ஒரு பரிசு கிடைத்துவிடும்.
போட்டிகளில் தொடர்ந்து கலந்து கொள்வதன் மூலம் சிலஉண்மைகளை அவன்அறிந்திருந்தான். ஒரே ஆள்தொடர்ந்து வெற்றிபெறமுடியாது .அது தனக்கு மட்டுமே அபூர்வமாக நடந்துவருகிறது. பத்திரிக்கை போட்டிகளில் திறமையை விடவும் குருட்டு அதிர்ஷ்டமே முதன்மையானது. நாலைந்து போட்டிகளில் தோல்வியுற்றவர்கள் அதன் பிறகு போட்டிகளில் கலந்து கொள்வதே கிடையாது. ஒவ்வொரு போட்டியும் எண்ணிக்கையற்ற தோல்வியாளர்களை உருவாக்குகிறது. தனது திறமையை விடவும் அதிர்ஷடமே வெற்றி அடையச் செய்கிறது எனக் கிருதமால் முழுமையாக நம்பினான்.
ஒரு பத்திரிக்கையில் அவனைப் பற்றிய செய்தி புகைப்படத்துடன் வெளியாகி இருந்தது. யாரோ ஒரு வெள்ளைக்காரன் அவனைத் தேடி வந்து நிறையப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு போனான். பத்திரிக்கை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்வதில்லை. பழகுவதில்லை. ஆனால் விதிவிலக்காக ஒரு முறை புகைப்பட வாசகப் போட்டியில் அவன் வெற்றி பெற்றபோது அந்தப் புகைப்படக் கலைஞர் அவனைத் தேடி வந்திருந்தார். தனது புகைப்படத்திற்குப் பொருத்தமாக அவன் எழுதிய வாசகத்தைப் பாராட்டியதோடு அது போல நிறையப் புகைப்படங்களுக்கு வாசகங்கள் எழுதி தர வேண்டும் என்றார். அதற்காக முன்பணமும் கொடுத்தார். பத்து நாட்கள் முயன்று எண்பது புகைப்படங்களுக்கு வாசகங்கள் எழுதிக் கொடுத்தான். எதுவும் அவருக்குப் பிடிக்கவில்லை. அவன் திறமையற்றவன் என்று முகத்திற்கு நேராகச் சொல்லியபடி கிழே கிடந்து காசை கண்டு எடுப்பது போன்ற அதிர்ஷ்டம் மட்டுமே அவனுக்க
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 675 followers

