காஃப்காவின் நாட்கள்
அக்னீஸ்கா ஹாலண்ட் இயக்கிய ஃபிரான்ஸ் 2025ல் அதிகம் எதிர்பார்க்கபட்ட திரைப்படமாகும். இது எழுத்தாளர் காஃப்காவின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. காஃப்காவாக இடான் வெய்ஸ் சிறப்பாக நடித்திருக்கிறார், மிகப்பொருத்தமான தேர்வு. அவரது தோற்றம் அப்படியே காஃப்காவின் மறுஉருவம் போலிருக்கிறது.

படத்தில் காஃப்காவின் நிஜமான புகைப்படங்களை அப்படியே திரைக்காட்சியாக உருவாக்கியிருக்கிறார்கள், அதில் இடான் வெய்ஸ் கச்சிதமாகப் பொருந்துகிறார்.
வழக்கமான வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களைப் போலின்றிக் காஃப்காவின் எழுத்து, கொந்தளிப்பான மனநிலை மற்றும் கனவுநிலைப்பட்ட காட்சிகளைக் கொண்டு படம் உருவாக்கபட்டிருக்கிறது. ஆகவே படத்தை நான்லீனியராகவே கருத வேண்டியுள்ளது.

காஃப்கா எளிய விஷயங்களால் அதிகம் பாதிக்கப்பட்டார், அது அவரது மனதில் தீராத குழப்பங்களை உருவாக்கியது. குடும்பம் என்பதைத் தண்டனைக்கூடமாகக் கருதினார். குறிப்பாகத் தனது தந்தையை முடிவற்ற அதிகாரத்தின் பிரதிநிதியாக உணர்ந்தார்.

வேறு படைப்பாளிகளைப் போலின்றிக் காஃப்காவின் எழுத்துகளுக்கு நிகராக அவரது சொந்த வாழ்க்கையும் பேசப்படுகிறது. அவரது வாழ்க்கை வரலாறு. காதல்கடிதங்கள். நாட்குறிப்புகள், பதிவேடுகள் எனக் காஃப்காவின் வாழ்க்கை சார்ந்த நூல்கள் அதிகம் விரும்பி வாசிக்கபடுகின்றன.
இப்படம் காஃப்காவின் சொந்த ஊரான பிராக்கில் அவரது இளம் பருவத்தில் துவங்கி 1924ல் தனது 40 வயதில் காசநோய் சிகிட்சைக்கான மையத்தில் வாழ்ந்த அவரது இறுதிநாட்கள் வரை விவரிக்கிறது
.

காஃப்காவின் எழுத்துகளில் வெளிப்படும் காட்சிப்படிமங்கள், குறியீடுகளைப் படமும் உருவாக்கியுள்ளது.
ஃபிரான்ஸ் காஃப்காவின் குழந்தைப் பருவம், தந்தையோடு நீச்சல் பழகச் செல்வது, உணவுமேஜையில் அவரது தந்தை நடந்து கொள்ளும் முறை, மற்றும் அவரது பணியிடம் சார்ந்த நிகழ்வுகளைப் படம் நிஜமாக உருவாக்கியுள்ளது.
1914 ஆம் ஆண்டுக் காஃப்கா தனது சிறுகதையான தி பீனல் காலனி கதையினை வாசிக்கும் நிகழ்வின் போது பலரும் அதைக் கேட்காமல் வெளியேறிப் போகும் போகிறார்கள். ஆனால் தனது கவனம் சிதறாமல் அவர் கதையை வாசித்துக் கொண்டேயிருக்கிறார். அந்தப் பிடிவாத மனநிலையை அவர் பல நேரங்களிலும் இயல்பாகக் கொண்டிருப்பதைப் படத்தில் உணர முடிகிறது
காஃப்காவின் நண்பரும் அவரது எழுத்துகளைப் பதிப்பித்தவருவமான மாக்ஸ் பிராட் படத்தில் சரியாகச் சித்தரிக்கப்படவில்லை. அவர்களுக்குள் இருந்த நட்பும் இலக்கியச் செயல்பாடுகளும் மிகக்குறைவாகவே படத்தில் இடம் பெற்றுள்ளது.
காஃப்காவின் சகோதரிகள் அவர் மீது காட்டும் அன்பு. காஃப்காவின் காதல் வாழ்க்கை. திருமண ஏற்பாடு. அதில் அவருக்கு இருந்த குழப்பங்கள். வெளிப்படுத்தமுடியாத அவரது மனத்தடைகளைப் படம் மேலோட்டமாகவே சித்தரித்துள்ளது.
ஃபிரான்ஸ் பனி உருகுவதைப் போல மௌனமாகத் தனக்குள் உருகிக் கொண்டிருக்கிறார். அவரது ஆசைகள் கனவுகள் குழப்பங்கள் பிறருடன் பேச விடாமல் தடுக்கின்றன. அவர் எப்போதும் மௌனத்தை விரும்புகிறார். அவருக்குப் பேசப்பிடிப்பதில்லை.
தனது கொந்தளிப்பான மனநிலையை ஆற்றுப்படுத்திக் கொள்ள நீந்துகிறார். இசை கேட்கிறார். சினிமா பார்க்கிறார். தியேட்டரில் தனது காதலியோடு சினிமா பார்க்கும் காட்சியில் கூட அவர் மனம் விட்டு சிரிப்பதில்லை.
நான் தொடர்ந்து தொடர்புபடுத்த முடியாத ஒன்றைத் தொடர்புபடுத்தவே முயற்சிக்கிறேன், விவரிக்க முடியாத ஒன்றை விளக்க முயலுகிறேன். அடிப்படையில் இது பயத்தைத் தவிர வேறில்லை, ஆனால் பயம் எல்லாவற்றிலும் பரவி நீள்கிறது, மிகச் சிறியதைப் போலவே மிகப்பெரியதைப் பற்றியும் பயம், பயம், ஒரு வார்த்தையை உச்சரிக்க விடாமல் பயம் முடக்குகிறது, இருப்பினும் இந்தப் பயம் பயமாக மட்டுமல்லாமல், பயப்படும் அனைத்தையும் விடப் பெரிய ஒன்றைப் பற்றிய ஏக்கமாகவும் இருக்கலாம் என்று தனது காதலி மிலேனாவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிடுகிறார்.
எது பயமாக இருக்கிறதோ அது ஏக்கமாகவும் இருக்கலாம் என்ற விநோத மனநிலை தான் காஃப்காவின் வெளிப்பாடு. தனக்குள் சொருகிக் கொள்ளும் கத்தியைப் போன்றதே தனது காதல் என்ற எண்ணம் காஃப்காவிடமிருந்தது. தனது வாழ்நாளில் பல பெண்களுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்தார். ஆனால் எவரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
படத்தின் ஒரு காட்சியில் ஆனால் காஃப்கா பிச்சைக்காரர் ஒருவருக்கு இரண்டு குரோன் நாணயத்தைக் கொடுக்கிறார். ஒரு குரோனை எடுத்துக் கொண்டு இன்னொரு குரோன் நாணயத்தைத் திருப்பித் தரும்படி கேட்கிறார். பிச்சைக்காரன் தர மறுக்கிறான். தனக்கு அவர் இரண்டு குரோன்களையும் யாசகமாக;ப போட்டார் எனப் பொய் சொல்கிறான். இதனால் அவனுடன் காஃப்கா சண்டையிடுகிறார். எவரும் சொன்ன வார்த்தையின் படி நடப்பதில்லை. சொற்களை மதிப்பதில்லை என உரத்து சப்தமிடுகிறார். தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார்.
காஃப்கா ராணுவத்தில் சேர விரும்பியது. அவரது இன்சூரன்ஸ் நிறுவன வேலை. அதில் சந்திக்கும் நெருக்கடிகள், என அவரது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளையும் படம் துல்லியமாக விவரித்துள்ளது

காஃப்கா இன்று கொண்டாடப்படும் இலக்கியப் பிம்பமாக மாறியிருப்பதையும், அவரது நினைவாக செயல்பட்டு வரும் காஃப்கா அருங்காட்சியகம். அதைக் காண வரும் மக்கள். அவரது வாழ்வோடு தொடர்புடைய உணவகங்கள், சிலைகள், காட்சிக்கூடங்களைப் பார்வையிடும் வெளிநாட்டு வாசகர்கள் என இன்றைய பிம்ப உருவாக்கமும் படத்தில் விவரிக்கபடுகிறது. அவரது காதல்கடிதங்களை இன்றைய டிவிட், மற்றும் மின்னஞ்சலுடன் இணைத்து ஒரு பெண் பரிகாசமாகப் பேசுகிறாள். காஃப்காவின் கடிதங்கள் இயந்திர கதியில் வெளிவந்தபடியே இருக்கும் காட்சியும் காட்டப்படுகிறது.
இந்த இடையீட்டின் காரணமாக நாம் திரையில் காணுவது காஃப்காவின் சொந்த வரலாற்றை மட்டுமில்லை என்ற உணர்வை ஏற்படுத்த முயலுகிறார்கள். ஆனால் இவை படத்தின் மையக் கதை நகர்விற்குள் பொருந்தாமல் தனித்து நிற்பதால் வெற்றுத் திணிப்பாகவே உணர முடிகிறது.
டோமாஸ் நௌமியூக்கின் ஒளிப்பதிவு மிக நேர்த்தியாகவுள்ளது. குறிப்பாக ஆற்றில் நீந்தும் காட்சிகள், திரையரங்க காட்சி, மற்றும் நகர வீதிகளில் வெளிப்படும் ஒளி மற்றும் காட்சிக் கோணங்கள் சிறப்பாக உள்ளன. காலகட்டத்தை மறுஉருவாக்கம் செய்துள்ள விதம் அதற்கான நுட்பமான கலை இயக்கம் மிகவும் பாராட்டிற்குரியது.

காஃப்காவின் பிரச்சனை பெரிதும் உடல் சார்ந்தது. அவர் தனது உடலை வெறுப்பவராக உள்ளார். தனது தோற்றம் குறித்த தாழ்வு எண்ணம் கொண்டிருக்கிறார். அதனை தனது கடிதங்களில் தொடர்ந்து வெளிப்படுத்துகிறார். படம் அதனைப் பெரிதாக கருதவேயில்லை.
வீட்டில் நடைபெறும் பல்வேறு அன்றாட நிகழ்வுகளில் காஃப்கா தன்னைச் சிறிய பூச்சி போலவே உணர்கிறார். அவரது நீள்கதையொன்று புத்தகமாக வெளியாகும் போது அதனைத் தந்தையிடம் நேரில் கொடுக்கத் தைரியமில்லை. அவரது சகோதரியே வற்புறுத்தி கொடுக்கச் செய்கிறாள். ஆனால் தந்தை விருப்பமின்றித் தனது படுக்கை அருகே வைத்துவிட்டுப் போகச் சொல்கிறார். தந்தையின் இந்தப் புறக்கணிப்பு அவரை வேதனை கொள்ள வைக்கிறது. அதே நேரம் தனது காஃப்கா புத்தகம் எழுதியிருப்பதை அவரது அன்னை மகிழ்வோடு பாராட்டுகிறார். வாழ்த்து தெரிவிக்கிறார்.
வீட்டிலிருந்து காஃப்கா வெளியேறி தனி அறையில் வசிக்கச் செல்லும் காட்சியில் பிராக் நகரின் வீதிகள் அவருக்கு விருப்பமானதாக மாறுகின்றன. காதல் அவரைத் தொடர்ந்து படைப்பிலக்கியத்தில் ஈடுபடச் செய்கிறது. சொற்களின் வழியே அவர் வெளிப்படுத்தும் காதலை நேரில் வெளிப்படுத்துவதில்லை.
படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள் தங்கள் உணர்வுகளைப் பற்றி நேரடியாகக் கேமராவுக்கு முன்னால் பேசுகிறார்கள், அல்லது கடந்த கால மற்றும் எதிர்கால நிகழ்வுகளை நேரடியாக விவரிக்கிறார்கள். அது நாடக நிகழ்வினைப் போலவே சித்தரிக்கபடுகிறது
படம் காஃப்காவின் எழுத்திற்கும் இன்றைய உலகின் அபத்தத்திற்கும் இடையிலான குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளை வரைய முயலுகிறது. அந்த முயற்சி முக்கியமானது. ஆனால் அது சிறந்த கலைப்படைப்பாக வெற்றியடையவில்லை.

காஃப்காவைப் புரிந்துகொள்வதற்கான சாவி அவருடன் சேர்ந்து புதைக்கப்பட்டுள்ளது என்று படத்தில் ஒரு கதாபாத்திரம் சொல்கிறது. அந்தச் சாவியைப் படம் உருவாக்க முயன்றுள்ளது. ஆனால் சாவி பொருத்தமற்றதாகிவிட்டது தான் மிகப்பெரிய குறை.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 675 followers

