குமரிக்கல் பயணம்- நடராஜன்

அன்புள்ள ஜெ,

தத்துவ வகுப்பில், நீங்கள் குமரிக்கல் பாளையத்தில் உள்ள நெடுகல்லைப்பற்றி கூறியபோதே அடுத்த முறை வகுப்பிற்கு வரும்போது அதை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. தத்துவ வகுப்பு மூன்றாம் நிலைக்கு வியாழக்கிழமை காலையிலேயே ஈரோடு வந்து சேர்ந்தேன். அங்கிருந்து குமரிக்கல் பாலயத்திற்கு நேரடி பஸ் இல்லாததால் முதலில் பெருந்துறை வந்து, விசாரித்தபோது குமரிக்கல் பாளையம் பற்றி எவருக்கும் தெரியவில்லை. பிறகு கோபி செல்லும் பேருந்தில் ஏறி சீனாபுரத்தில் இறங்கி ஒரு பெரியவரிடம் விசாரித்தபோது, அங்கு எதற்காக செல்லவேண்டும் என கேட்டார். நெடுகல்லை பார்க்க என சொன்னபோது, ஒரு கல்லைப் பார்க்க பாண்டிச்சேரியில் இருந்து வருகிறீர்களா? என சிரித்துக்கொண்டே கேட்டார். பிறகு அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்துக்கொண்டு கூகுள் மேப் உதவியுடன் குமரிக்கல் பாளையம் சென்றேன். ஆனால் அங்கே நெடுகள் தென்படவில்லை. ஆள் நடமாட்டம் ஏதும் இல்லை. ரோட்டில் ஆட்டோவை காத்திருக்க சொல்லிவிட்டு நான் அந்த வறண்ட நிலத்தின் ஒற்றையடிப்பாதையில் நடந்து சென்று நெடுகள் தெரிகிறதா எனப்பார்த்தேன், ஏமாற்றமே மிஞ்சியது. 

சரி ஊருக்குள் சென்று விசாரிக்கலாம் என திரும்பி வந்தபோது ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்தார். அவரிடம் விசாரித்தபோது, அவர் முக மலர்ச்சியுடன் நான் கூட்டிச்செல்கிறேன் என பைக்கில் ஏற சொன்னார். எப்படி இந்த இடம் தெரியும்? என கேட்டார். எழுத்தாளர் ஜெயமோகன் கூறினார் என நான் சொன்னபோது, அவர் இந்த இடத்தைப் பற்றி இணையதளத்தில் எழுதி இருக்கிறார், தெரியும் என அவர் கூறினார். அவருடைய பெயர் மோகன்ராஜ் எனவும், அங்கே 765 கிலோவாட் உயர்மின் கோபுரம் அமைக்க அரசுகள் தீவிரமாக முப்படுவதாவாகவும்,  அது வரும் பட்சத்தில் இந்த நெடுகல்லை எடுக்க வேண்டிவரும் என்றும் கூறினார்.

அதை எதிர்த்து 600 நாட்களுக்கு  மேலாக நடக்கும் போராட்டம் பற்றியும், அதில் பங்கெடுக்கவே அங்கே செல்வதாகவும் கூறினார். நெடுகல் இருக்கும் இடம் வந்ததும் என்னை பார்த்து விட்டு வாருங்கள், போராட்டம் நடக்கும் இடத்திற்கு அழைத்துச்செல்கிறேன் என கூறினார். 

அந்த நெடுகல்லை நிமிர்ந்து பார்த்த சில வினாடிகள் எனக்கு ஏற்பட்ட பரவசத்திற்கும் நெகிழ்ச்சிக்கும் அளவேயில்லை. காரணம், நீங்கள் இவ்விடத்தைப்பற்றி வகுப்பில் கூறிய தகவல்களால் எனக்குள் வந்த சேர்ந்த முன்னறிவா? இல்லை இத்தனை ஆயிரம் ஆண்டுகள் அறுபடாமல் கடத்தப்பட்டு வந்த வரலாற்றுணர்வுத் தொடர்ச்சியா?  எனப் பிரித்தறிய இயலவில்லை. அந்த கொளுத்தும் வெயிலில் அந்த நெடுகல்லை பார்க்கும்போது பூமி மேகத்தைப்பார்த்து ஒழுங்காக மழையாக பெய்ககிறாயா? இல்லை, உன்னை இந்தக்கல்லால் குத்திக்கிழிக்கட்டுமா? என மிரட்டுவது போலவே இருந்தது. 

பிறகு போராட்டம் நடக்கும் இடத்திற்கு சென்று, அங்கிருந்த பானை ஓடுகளையும்  இரும்புக் கற்களையும் காண்பித்து அந்த புராதன நெடுகல்லிற்கு 3 கிலோமீட்டர் சுற்றளவில் இவை நிறைய கிடப்பதாகவும் மத்திய மாநில அரசுகள் அங்கே அகர்வராய்ச்சி மேற்கொள்ள வேண்டியதின் அவசியத்தையும் எடுத்துக்கூறினார். 

ஆட்டோ வரும்போதே 30 நிமிடத்திற்கு மேல் காத்திருக்க முடியாது என கூறியது நினைவில் வர, அவசரமாக அங்கிருந்து கிளம்ப எத்தனித்தேன். அங்கிருந்த சதிஷ் என்பவர் மோகன்ராஜிடம் நீங்கள் சென்று ஆட்டோவை வேறு இடத்திற்கு வரச்சொல்லுங்கள் என கூறிவிட்டு என்னை அவருடைய பைக்கில் அழைத்துச்சென்று வாழைத்தோட்டத்தில் இருந்த இரண்டு சிலைகளையும் (புலிக்குத்திக்கற்கள்) மற்றும் புதுபிக்கப்பட்டிருந்த ஒரு பழைய பத்ரகாளியம்மன் கோவிலையும் காண்பித்தார். 

அங்கே வந்து சேர்ந்திருந்த ஆட்டோவில் நான் ஏற முற்பட்டபோது, ஆட்டோவை பத்திவிட்டு(அனுப்பிவிட்டு) வாங்க, ஜெயமோகன் “குமரிக்கல்லும் நீலிமலையும்” கட்டுரையில் குறிப்பிட்டிருந்த நீலிமலையை காண்பிக்கிறேன் என அவராகவே கூறினார். பிறகு நீலிமலைக்கு சென்று பார்த்தோம். வருடாவருடம் ஊர்மக்கள், அங்கே தை இரண்டாம் நாள் சாப்பாடு எடுத்து வந்து சாப்பிட்டுவிட்டு செல்வார்கள் எனவும் அந்த திருவிழாவிற்கு “பூப்பறிக்கிற நோம்பி” எனவும் கூறினார். 

பிறகு அங்கிருந்து அருகில் இருந்த விஜயமங்களம் சமனக்கோவிலுக்கு சென்றோம். அங்கே நான், கடந்த தத்துவ வகுப்பில் சந்தித்த பெண் ஒருவர் குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தார். அவர் ஆலயக்கலை இரண்டாம் வகுப்பில் கலந்து கொன்டவர் என்றும் தமிழ் விக்கியில் பதிவிடுவதற்காக அந்த கோவிலைப்பற்றி ஆராச்சி செய்வதாகவும் கூறினார். அவர் அந்த கோவிலைப்பற்றிய சுருக்கமான வரலாற்றையும் அங்கே இருந்த சிலைகள் பற்றியும் கூறியது ஏற்படுத்திய ஆச்சர்யத்தைக் காட்டிலும் அவருடைய ஆர்வமும் அந்த தகவல்களுக்கான மெனக்கிடலும் ஆச்சர்யம் அளித்தன. விரைவில் அந்த கோவில் பற்றிய நல்ல கட்டுரையை தமிழ்விக்கியில் எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன்.

பசிக்கிறது சாப்பிடலாம் என்றேன். ஒரு நல்ல ஹோட்டல் இருக்கிறது என அழைத்துச்சென்றார். நான் மட்டுமே சாப்பிட்டேன், சதிஷ் சாப்பிடவில்லை. பிறகு என்னை குன்னத்தூரில் பஸ் ஏற்றிவிட்டு , இவ்வளவு தூரம் அவர் செய்த உதவிக்கு நன்றியை மட்டுமே பதிலாக பெற்றுக்கொண்டு விடைபெற்றார். 

அந்தியூரில் இருந்து வெள்ளிமலைக்கு செல்லும் கடைசி பேருந்தை பிடிக்கவேண்டும் என்ற அவசர கதியில் அனைத்து இடங்களையும் பார்த்தேன் என்றாலும் “just tick in the box” என்கிற அளவில் இல்லாமல் ஒரு செவ்வியல் நாவலை முதல் முறை படித்தது போன்ற உணர்வை அளித்தது இந்தப்பயணம். அதற்குக்காரணம், பார்த்த இடங்களும், அந்த நிலப்பரப்பும் மட்டுமல்ல, சந்தித்த மனிதர்களின் எதிர்பார்ப்பு இல்லாத அன்பும்தான். நமக்குத் தோன்றும் நியாயமான ஆசையை, இந்தப் பிரபஞ்சம் எப்போதும் நிறைவேற்றிக்கொடுக்கும் எனும், என்னுடைய நம்பிக்கை மேலும் வலுப்பெற்றது.

என்றென்றும் அன்புடன்,

நடராஜன் பா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.