சதீஷ்குமார் சீனிவாசன் – கடிதங்கள்

பிறிதொன்று கூறல் இரண்டு கவிதைகள்- சதீஷ்குமார் சீனிவாசன்

அன்புள்ள ஜெ

பிறிதொன்று கூறல், கட்டுரை கவிதை பற்றிய ஒரு புதிய பார்வையை உருவாக்குவதாக இருந்தது. சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகளும் அழகானவை. அவர் இன்னமும் தொகுப்பு என ஏதும் போடவில்லை என நினைக்கிறேன்.

ஒரு மரபில் கவிதை மட்டும் எத்தனை துள்ளினாலும் அதன் பண்பாட்டு அடிப்படைகளை விட்டு மேலே போகவே முடியாது என்று ஒரு கூற்று உண்டு. அதாவது அது மெய்யான கவிதையாக இருக்கும்பட்சத்தில். செயற்கையாக நகலெடுக்கும் கவிதைகளைச் சொல்லவில்லை.

இதை நான் சமீபத்தில் பேசும்போது உணர்ந்தது ஜப்பானிய மாங்கா காமிக்ஸின் வசனங்களை வாசிக்கும்போது அவற்றிலுள்ள நையாண்டியும் இயற்கைபற்றிய ஓரிருவரிக் குறிப்புகளும் ஜென் தனமாக இருக்கிறதே என்று எண்ணினேன். அந்த அழகியலில் இருந்து அவை வெளியேற முடியாது

அப்படிப்பார்த்தால் சங்ககால அழகியல் தமிழ் நவீனக் கவிதைகளில் உள்ளது. ஆனால் தமிழின் தனித்துவம் கொண்ட அழகியல் என்பது ரிட்டாரிக் அல்லவா? தமிழுக்கே அந்த ரிட்டாரிக் அம்சம் உண்டு. அது ஏன் நவீனக் கவிதைகளில் நிகழவில்லை? எந்த தற்பிடித்தம் அதை தடுக்கிறது?

எம்.பாஸ்கர்

***

அன்புள்ள ஜெ,

சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகள் அழகாக உள்ளன. நவீனத் தமிழ்க்கவிஞர்களிடம் ஓர் அம்சத்தைப் பார்க்கிறேன். அவர்கள் தமிழ்மொழியை இலக்கணச் சுத்தமாகப் படித்திருப்பதில்லை. இலக்கணச்சுத்தமாக தமிழ் படித்தால் இரண்டுவகை மொழிகள் வந்துவிடும். ஒன்று, பத்திரிகை மொழி. இன்னொன்று, பள்ளிக்கூட மொழி. இரண்டு மொழியுமே ஸ்டேல் ஆனவை. ஆகவே கவிதைக்கு உதவாதவை. அவற்றில் எழுதினால் கவிதை கான்கிரீட்டில் செய்ததுபோல இருக்கும்.

நவீனக் கவிஞர்கள் தங்கள் மொழியை சூழலில் இருந்து பெற்றுக்கொண்டு அதில் தங்கள் கவித்துவத்தை முன்வைக்க முயல்கிறார்கள். அப்போது இலக்கணப்பிழைகள் நிகழ்கின்றன. கூடவே புதிய சொல்லாட்சிகளும் அழகுகளும் உருவாகின்றன. இதுதான் நவீனக்கவிதைக்குரிய மிகமிக அழகான அம்சம் என நினைக்கிறேன்.

நிலத்தில் மட்டுமே எஞ்சியிருந்தன

பெய்ததின் அறிகுறிகள்

என்றவரியை இலக்கணவாத்தி என்ற வகையில் நான் பெய்தமையின் என திருத்துவேன். ஆனால் பெய்ததின் என்ற வரி இன்னும் பல அர்த்தங்களை அளிக்கிறது.

இல்லாமல் ஆக்க முடியாத

மனங்களின் சுவடுகள்போல

இருந்தது

என்னும் வரியிலுள்ள ஒருமைபன்மை மயக்கமே அழகை உருவாக்குகிறது என நினைக்கிறேன்

ஆர்.சுப்ரமணியம்

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 24, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.