வெண்முரசு இரு கடிதங்கள்

அன்பு ஜெ,

உங்களுக்கு தனிப்பட்ட முறையில் எழுதும் கடிதம். 2018 வருடம் எனது வாழ்வின் மிக கடினமான காலகட்டம் – தனிப்பட்ட அலைக்கழிப்பு, எனது குடும்பம் சிதறுண்டு நான் சந்தோசமாக இருக்கவேமுடியாது என்று வாழ்ந்திருந்த சமயம். வெண்முரசு என்னை மீட்டது; எனது வினாக்களுக்கு விடையளிக்கும் நூல் எப்படியாவது என்னிடம் தக்க சமயத்தில் வந்துசேரும் – அதை நல்லூழ் என்பதே தவிர வேறு எப்படி புரிந்துகொள்வது என்று தெரியவில்லை. வெண்முரசின் சமநிலை, அறம், விதியின் பாதை என்னை மருகட்டமைக்க உதவியது.

நானும் எனது மனைவியும்,”குழந்தை இல்லாமலே வாழ்ந்துவிடலாம்” என்று பலவருடங்களுக்கு முன்னரே முடிவுசெய்திருந்தோம். 2020 வருடம் திடீரென்று ஒரு நாள், அந்த முடிவே மறுபரிசீலனை செய்து மாற்றிக்கொண்டோம்.

என் வாழ்வின் மிக மிக மகிழ்ச்சியான நாட்கள் இரண்டு – 1) என் மனைவி கருவுற்றிகிறாள் என்றறிந்த நாள் 2) எனது மகளை செவிலி கையில் அளித்த நாள் – கண்கள் என்னை அறியாமல் இப்பொழுதும் பனிக்கிறது. என்னில் ஒரு தாயை நான் கண்டது அவளிடம் சரணடையும் பொழுது. மற்றொரு உயிரை இவ்வளவு விரும்பமுடியும் என்பதே எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது (நான் மிகவும் ரேஷனல் ஆனவன் என்ற கற்பனை எனக்கிருந்தது).

வெண்முரசு எனக்களித்த வரங்கள்;

1) தந்தை வடிவங்கள்: பாண்டு போன்ற ஒரு தந்தையாகவும் திருதராஷ்டிரர் போன்று அன்பே வடிவானவராகவும் எனது மகளுக்கு இருக்க விழைகிறேன்.

2) தரிகட்டு அலைந்த மனதை சீர்படுத்தி எனது தெரிவுகளை மறுபரிசீலனை செய்யும் மனநிலை. அறம் நோக்கி என்மனது பயணிக்க ஆரம்பித்தது

3) தற்செயல்களின் ஆடல் பற்றிய புரிதலை

4) இன்னும் நிறைய இருக்கிறது…சுருக்கமாக சொன்னால் வெண்முரசு என்னை கண்டறியாவிடில் எனது வாழ்கை பாதை மாறியிருக்கும்

எங்களது மகளுக்கு “மாயா” என்று பெயரிட்டிருக்கிறோம். இத்துடன் சில படங்களையும் இணைத்துள்ளேன். ஒரு வகையில் நீங்களும் எனக்கு குரு/தந்தை வடிவம்தான் – உங்களது படைப்பு இல்லாவிடில் இந்த இடத்திற்கு நான் வந்திருப்பது சந்தேகமே. உங்களக்கு என் நன்றிகள் பல. மாயா உங்களது கதைகளை கேட்டே வளரப்போகிறாள் :-) நீங்களும், உங்களது அன்பிற்கு உரியவர்களும் நீண்ட காலம், நல்லாரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறையிடம் வேண்டுகிறேன். 31 தேதி சந்திக்க பேராவலுடன் இருக்கிறேன்.

பேரன்பும் / நன்றிகளும்,
ஜி

***

அன்புள்ள ஜி,

வெண்முரசு அளிப்பது என்ன அனுபவம் என்று கேட்டால் ஒருவகையில் ஆணவமழிவுதான் என்று சொல்வேன். வாழ்க்கையின் பெருஞ்சித்திரம் நாம் அரிதானவர்கள், நாம் தனித்துவம் கொண்டவர்கள் என்ற ஆணவத்தை இல்லாமலாக்குகிறது. இங்கு வாழ்ந்து மறையும் கோடானுகோடிகளில் ஒருவர். ஆகவே நாம் நம்மை தருக்கி மேலேற்றிக்கொள்ளவேண்டியதில்லை. நம்மை நாம் கீழிறக்கிக் கொள்ளவேண்டியதுமில்லை. நாம் மானுடத்திரளேதான். மானுடமேதான். அந்த நிறைவுணர்வும் அதன் விளைவே

ஜெ

***

திரு ஜெயமோகன் அவர்களுக்கு

தற்போது பன்னிரு படைக்களம் வந்துவிட்டேன் உங்களுடைய வெண்முரசு படிக்க ஆரம்பித்த நாட்களில் இருந்து வேறு ஒரு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் இன்னும் ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பே இதை நீங்கள் எழுதி அதை நான் படிக்க வரம் பெற்றிருந்தால் என் வாழ்க்கை மாறி இருக்கக்கூடும் எனினும் தற்போதைய மாற்றங்களே நான் வரவேற்க கூடியவைதான் அதுவும் இந்த சொல்லொணாத் துயரில் உலகமே அடங்கியிருக்கும் பொழுதில

என் உள்ளம் மட்டும் சுறுசுறுப்பாக உங்கள் எழுத்துக்களில் நடனமாடிக் கொண்டிருப்பது என்னைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரையும் பெரும் ஆச்சரியத்தையும் பொறாமையையும் கொண்டு சேர்த்திருக்கிறது.

பெண்களின் ஆளுமையை மிகப் பிரமாதமாக கொண்டு செல்கின்றீர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக ஆளுமை உடைய பெண்கள் நினைப்பதை அப்படியே சித்தரிக்கிறீர்கள் எனினும் துரோணர் பட்ட அவமானத்தையும் கர்ணன் கொண்ட கஷ்டங்களையும் பார்த்து அதை fiction தான் என்று புரிந்து கொண்ட போதிலும் இன்று அதனால் பெற்ற தைரியம் மிக அதிகம். வெண்முரசு என்னிடம் 18 வால்யூம் இருக்கிறது மேலும் 5 வாங்கவேண்டும் என நினைக்கிறேன் பக்கத்தில் இருக்க மிகவும் செல்வம் கொண்டவளாக மிதக்கின்றேன் இந்த உணர்வை கொடுத்ததற்காக மிக்க நன்றி தமிழுக்கு நீங்கள் கிடைத்தது ஒரு பெரிய வரம்

என்னைப் போன்றவர்களுக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் ஒரு பெரிய வரம் உங்கள் புத்தகங்களை வாங்க எனக்கு ஆற்றல் இருப்பது பெரிய வரம் தற்போதைய நேரம் மிகப் பெரிய வரம் மொத்தத்தில் ஜெயமோகன் என்றாலே வரம் பெற்றவர்களின் அருகில் உள்ளவர் என்பதே என் புரிதல் நீங்கள் பல்லாண்டு வாழ நான் வணங்கும் ஈசன் அருள வேண்டும்

நான் வேலை செய்யும் பி எஸ் ஜி ட்ரஸ்டுக்கு வானவில் நிகழ்ச்சியில் நீங்கள் பேச வந்த பொழுது உங்களைப் பார்த்து இருக்கின்றேன் ஆனால் அப்பொழுது எனக்கு வெண்முரசு அதிகம் தெரியாது தெரிந்த பிறகு நீங்கள் நின்றிருக்கும் மேடை மிக உயரம் என்ற புரிதல் மிகவும் சரியே நீங்கள் பல்லாண்டு வாழ நோய் நொடியற்ற உடல் நலத்துடன் தெளிவான தமிழ் கொடுக்க நான் வணங்கும் ஈசனை மீண்டும் வேண்டுகின்றேன் உங்கள் மனைவிக்கு குழந்தைகளுக்கு என் நல்வாழ்த்துக்கள்

டாக்டர் பானுமதி

டைரக்டர் பி எஸ் ஜி விஷ்ணுகிராந்தி

கோவை

***

அன்புள்ள பானுமதி அவர்களுக்கு,

நன்றி. வெண்முரசு ஒருவருக்கு ஒரு முழுமைப்பார்வையை அளிக்கவேண்டுமென எண்ணினேன். ஒன்று இன்னொன்றை முழுமையாக நிறைவுசெய்யும் ஒரு நிலையை. இலக்கியப்படைப்புக்கள் பொதுவாக அளிப்பது நிலைகுலைவை. ஆனால் நூற்றுக்கணக்கான நிலைகுலைவுகள் வழியாக ஓர் ஒருமையை அளிப்பதே செவ்விலக்கியம் என்பார்கள்.

உங்கள் வாசிப்பு உங்களை நிறைவுசெய்யட்டும். நான் அதிலிருந்து மிக விலகி அதை ஒரு வாசகனாகப் பார்க்கும் நிலையில் இன்றிருக்கிறேன்

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 24, 2021 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.