உருமாறும் அன்றாடம்.

எரான் கொலிரின் இயக்கிய தி எக்ஸ்சேஞ்ச் என்ற இஸ்ரேலியத் திரைப்படம் நகரவாழ்வின் சலிப்பை, தனிமையை அழகாகச் சித்தரிக்கிறது.

டெல் அவிவ் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக வேலை செய்யும் ஓடெட் ஒருநாள் தனது பையை வீட்டில் மறந்துவிட்டுச் செல்கிறான். அதை எடுப்பதற்காக வீடு திரும்பும் போது பகலில் தனது வீடு வேறு ஏதோ ஒரு தோற்றத்தில் இருப்பதாக உணர்கிறான்.

தனிமையாக வெறுமையாகவும் அமைதியாகவும் இருக்கும் ஒரு அந்நியனின் வீட்டிற்குள் நுழைந்தது போல் அவனுக்குத் தோன்றுகிறது

அன்றாடம் காலை வேலைக்குப் போய்விட்டு இரவில் வீடு திரும்புகிறவன் என்பதால் இந்தக் காட்சி புதிதாக இருக்கிறது. பழகிப் போன தனது வீட்டை மேஜை நாற்காலிளை, படுக்கையை யாரோ ஒருவரின் வீட்டைப் போலப் பார்க்கிறான். ரசிக்கிறான்.

தனது வீட்டு மேஜையில் இருந்த ஒரு பொருளை தள்ளிவிடுகிறான். தனது வாழ்க்கை என்பது தானே வடிவமைத்துக் கொண்ட ஒழுங்கில் நடைபெறும் சலிப்பூட்டும் விஷயம் என்பதை உணருகிறான்.

வாகன நிறுத்துமிடம், படிக்கட்டுகள், தபால் பெட்டிகள். என. தனது சுற்றுப்புறத்தை. வெளியாள் போலப் பார்க்க துவங்குகிறான். அவனது அன்றாடம் மாறத் துவங்குகிறது.

இதன் பிறகு அடிக்கடி ரகசியமாக மனைவி அறியாமல் பகலில் வீட்டிற்கு வருகிறான். குடியிருப்பில் சுற்றி அலைகிறான். தரையில் படுத்துக் கிடக்கிறான். தனக்குத் தெரிந்த உலகிற்குள் தெரியாத அசைவுகள். தெரியாத இடங்கள் இருப்பதைக் கண்டறிகிறான்.

இந்த மாற்றம் அவனது வாழ்க்கையை மாற்றிவிடுகிறது. அவனது மனைவி டாமி கட்டிடக்கலை பயின்றவள். அவள் புதிய வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறாள். ஒரு நிறுவனத்தின் அழைப்பிற்காக அவள் செல்லும் போது கார் பழுதாகி வழியில் நின்றுவிடுகிறது. அதை ஓடெட் வழியில் பார்க்கிறான். ஆனால் உதவி செய்யவில்லை. வெளியாள் போல அவளை ரகசியமாகப் பின்தொடருகிறான்.

மனைவி போன் செய்தால் எடுப்பதில்லை. சக ஆசிரியரிடம் பொய் சொல்கிறான். இந்த ரகசிய விளையாட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்விடத்தில் துவங்கி பல்கலைகழகம் வரை நீள்கிறது. தனது வகுப்பறையில் இருந்து ஒரு பொருளை ஜன்னல் வழியே வெளியே தூக்கி எறிந்துவிட்டு அதைத் தேடுவது போல நடிக்கிறான்.

அவனுக்கு அவனே புதியவனாகிறான். . இந்த ஒளிவு மறைவு நாடகம் அவனது மனைவிக்குச் சந்தேகத்தை உருவாக்குகிறது. அவர்களுக்குள் சண்டை வருகிறது

இதே குடியிருப்பில் இருக்கும் ஓடெட் போன்ற மனநிலை கொண்ட யோவாவுடன் நட்பாகிறான். அவர்கள் தங்கள் வாழ்விடத்தினை ரகசிய வெளியாக மாற்றுகிறார்கள். ஓடெட்டும் யோவாபும் சேர்ந்து, காலியான வீடுகளின் கதவுகளுக்கு முன்னால் நின்று விரக்தியில் கத்துகிறார்கள்; பிறர் அறியாமல் கட்டிடத்தின் அடித்தள அறையில் ஒரு இரவைக் கழிக்கிறார்கள்

ஓடெட் அன்றாடம் வீடு திரும்பும் பேருந்தில் வேண்டுமென்றே முந்தைய நிறுத்ததில் இறங்கி நடக்க ஆரம்பிக்கிறான். பேருந்தின் ஓட்டுனருக்கு அவனது செயல் வியப்பளிக்கிறது.

மகிழ்ச்சியான வாழ்க்கை எனத் தான் நம்பிக் கொண்டிருந்தது உண்மையான மகிழ்ச்சியில்லை என்று உணர்கிறான்.

தனது அன்றாடத்தை முற்றிலும் மாற்ற வேண்டும் என்ற கட்டுப்படுத்த முடியாத உந்துதல் அவனைத் தூண்டுகிறது.

பல்கலைகழக வேலையில் கொண்டிருந்த ஆர்வத்தை இழக்கிறான். மாணவர்களிடமிருந்து விலகிப் போகிறான். அன்றாடம் அவன் வீடு திரும்பும் போது அதே குடியிருப்பில் இருக்கும் ஒரு குடும்பம் லிப்டின் முன்னால் காத்திருக்கிறது. அவர்களுடன் இணைந்து லிப்டில் போக விருப்பமற்றுப் படிகளில் ஏறிப் போகிறான். எதிர்வீட்டில் நடப்பதை ரகசியமாக ஒளிந்து பார்க்கிறான்.

பழக்கமான அனைத்தையும் ஒரு புதிய கண்ணோட்டத்தில் புதிய அனுபவமாக மாற்ற ஓடெட், முயலுகிறான். இதனால் ஏற்படும் உறவுச் சிக்கல்களை, குழப்பங்களை அவனால் தீர்க்க முடியவில்லை

ஒளிப்பதிவாளர் ஷாய் கோல்ட்மேனின் ஒளிப்பதிவு ஓடெட்டை போல அறிந்த காட்சியை அறியாத ஒன்றாகக் காட்டுகிறது. அதன் நிதானம். கோணங்களின் மாற்றம் அவனது மனநிலையை அழகாக வெளிப்படுத்துகிறது

ஒருவன் தனது சொந்த வாழ்க்கையை வெளியிலிருந்து கவனித்தால் என்ன ஆகும் என்பதைப் படம் நிதானமாக விவரிக்கிறது. பெரிய திருப்பங்கள் எதுவும் கதையில் கிடையாது. ஆனால் நமது அன்றாடம் குறித்த ஆழமான கேள்வியைப் படம் எழுப்புகிறது. இதிலிருந்து விடுபட முயன்றவனின் சிக்கல்களை உண்மையாக அடையாளம் காட்டுகிறது.

ஒரு காட்சியில் அவனது மனைவி இருட்டில் அமர்ந்திருக்கிறாள். வீட்டிற்குள் நுழையும் ஓடெட் ஏன் வீடு இருண்டுகிடக்கிறது என யோசிக்கிறான்.அவளோ தான் கர்ப்பமாக உள்ளதாகத் தெரிவிக்கிறாள். அவன் சந்தோஷப்படுகிறான். ஆனால் அது சந்தோஷமான விஷயம் தானா என அவளுக்குக் குழப்பமாக உள்ளது. அந்தக் காட்சியின் போது அவளும் ஓடெட்டைப் போலவே நடந்து கொள்கிறாள்

குடியிருப்பில் பகல் நேரத்தில் வரும் சூரிய வெளிச்சம். ஆள் நடமாற்றமற்ற வெறுமையான படிக்கட்டுகள்.. பூட்டிய வீட்டிற்குள் நிரம்பிய நிசப்தம். என தனது வசிப்பிடம் என்பது இத்தனை விநோதமானதா என அவன் வியப்படைகிறான். வேலை, அன்றாட விஷயங்கள் தன்னை இத்தனை காலமாக எதையும் உணர விடாமல் வைத்திருந்ததாக நினைக்கிறான். தன் வீட்டுக்கதவின் முன்பாக யாரோ போல அவன் நிற்கும் காட்சி அழகானது. வாசற்கதவில் உள்ள தனது பெயரை, தனது மனைவியின் பெயரை அவன் வாசிக்கும் போது இதுவரை கேட்காத பெயர்களைப் போல உணருகிறான்.

ஓடெட் புறஉலகில் மாற்றங்களைக் காணுகிறான். அவன் மனைவி அக அளவில் மாற்றத்தை காணுகிறாள். தாய்மை அடைவதன் வழியே அவளது கட்டிடக்கலைஞராகும கனவு மாறப்போகிறது. வீடும் அதன் தனிமையும் மாறப்போகிறது. அந்த மாற்றங்கள் அவளைப் பாதிக்கும் அளவிற்கு அவனைப் பாதிப்பதில்லை. பகல்நேரத்தை வீட்டில் கழிக்காத அவனுக்குத் தான் பகலில் வீடு கொள்ளும் புதுரூபம் வசீகரமாக இருக்கிறது. வீட்டுப்பணிகளைச் செய்து முடித்துக் களைப்புடன் அசதியுடன் தன்னை மறந்து உறங்கும் அவளுக்கு வீடு மாயவெளியில்லை.

வெளிச்சம் என்பது ஒரு கூண்டு என்றொரு வரியை கவிஞர் நிஸ்ஸிம் எசேக்கியேல் எழுதியிருக்கிறார். இரவு பொருட்களின் இயல்பை மாற்றிவிடுகிறது. பகல் எல்லாப் பொருட்களைத் துல்லியமாக்குகிறது. வேறுபடுத்திக் காட்டுகிறது. வீடு வெளியே என இருவேறு உலகமாக ஆணும் பெண்ணும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரே வீட்டில் வசித்தாலும் வேறுவேறு கனவுகளுடன் வாழ்கிறார்கள்.

இருப்பின் உண்மையான நிலை குறித்த ஆழமான கேள்வியைச் சந்திக்கும் ஓடெட் அதை மேற்பரப்பில் சந்தித்து எளிய குழப்பங்கள் தப்பித்தலுடன் நின்று விடுகிறான். திமிங்கலம் போல அவன் நீந்தவேண்டிய ஆழம் வேறாக இருக்கிறது.

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 26, 2026 03:41
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.