தங்கள் பொறுப்பு
புதிய சிறுகதை. மார்ச் 20, 2026
சக்கையன் தலையில் கட்டியிருந்த சிவப்புத் துண்டினை அவிழ்த்து கையில் ஏந்தியபடி ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளிடம் “ வானரூ இறந்துபோயிட்டாரு.. தானம் பண்ணுங்க“ என்று கேட்டுக் கொண்டிருந்தான். வானரூ யார் என எவரும் கேட்டுக் கொள்ளவில்லை
ஒரு சிலர் சில்லறைக் காசுகளைத் துண்டில் போட்டார்கள். ஒருவர் பேண்ட் பாக்கெட்டிலிருந்து மணிபர்ஸை வெளியே எடுத்துத் திறந்து பார்த்துவிட்டு இல்லை என்று கையை விரித்தார்.
சென்னையிலிருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்னும் வரவில்லை. அதில் நிறையக் கூட்டம் வந்து இறங்கும். அவர்கள் நிச்சயம் வானரூவிற்காகத் தானம் கொடுப்பார்கள் என்று நினைத்துக் கொண்டான்.

வானரூ என்று அவர்கள் அழைத்த குரங்கு காலையில் இறந்து போனது. மனிதர்களைப் போலவே அதற்கும் வயது மூப்பு. சில நாட்களாகவே பாதிக் கண்ணைத் திறந்தபடி சுருண்டுகிடந்தது. இன்று காலை இறந்துவிட்டது
முதலாவது பிளாட்பாரத்திலுள்ள தண்ணீர்த்தொட்டியை ஒட்டிய அரச மரத்தில் அந்தக் குரங்கு வசித்தது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் அக்குரங்கு பயணிகளில் ஒருவரைப் போல ரயிலில் தான் வந்து இறங்கியது. நீண்ட பிளாட்பாரத்தின் முடிவு வரை நடந்து திரிந்தபின்பு அது ரயில் நிலையத்தின் கொடிக்கம்பத்தில் ஏறிக் கொண்டு விளையாட்டுக் காட்டிய நாள் சக்கையன் நினைவில் இருந்தது.
ரயில்நிலையத்தில் அலையும் நாயைப் போல, பூனையைப் போல அந்தக் குரங்கும் நிலையவாசிகளில் ஒருவராகியது.
வானரூ பயணிகள் வைத்திருந்த உணவுப்பண்டங்களைப் பிடுங்கிக் கொண்டு போய்க் கழிப்பறைச் சுவரில் அமர்ந்து சாப்பிடுவதைக் கண்டிருக்கிறான். சில பயணிகளின் துணிப்பைகளை, வாழைப்பழங்களை, பூமாலைகளை அது பிடுங்கிச் சென்றிருக்கிறது. தனது கழுத்தில் பூமாலையைத் தானே சூடிக் கொண்டு அக்குரங்கு பிளாட்பாரத்தில் சுற்றிய போது பயணிகளில் சிலர் அதை வணங்கினார்கள்.
வானரூ என அதற்குப் பெயர் வைத்தவன் பொன்னுதுரை. ஒரு நாள் ரயில்வே போலீஸ்காரனின் தொப்பியை பிடுங்கிக் கொண்டு போன போது “வானரூ குடுத்துரும். கேட்கிறவிதமா கேட்கணும்“ என்று பொன்னுதுரை சொன்னான். அவர்கள் குரங்கில் பின்னால் கையேந்திபடியே ஒடினார்கள்.
வானரூ போலீஸ்காரரின் தொப்பியைத் தரவில்லை. தனது தலையில் அணிந்து கொண்டு சிவப்பு ஒடு வேய்ந்த ஸ்டேஷன் மாஸ்டர் அறையின் மேல் நடந்து வேடிக்கை காட்டியது. தொப்பியைப் பல்லால் கடித்துத் தின்ன முயன்றது. பின்பு ரயில்வே தண்டவாளத்தில் வீசி எறிந்தது.

அந்த ரயில் நிலையம் புகழ்பெற்ற கோவில் ஒன்றின் அருகிலிருந்தது. ஆகவே செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ரயில் நிலையத்திற்கு வந்து இறங்குபவர்களின் எண்ணிக்கை திரளாக இருக்கும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கோவில் இவ்வளவு புகழ்பெறவில்லை. ஆனால் திடீரெனப் புகழ்பெறத் துவங்கி வடமாநிலங்களில் இருந்து கூடப் பக்தர்கள் வந்து குவிய ஆரம்பித்தார்கள்.
அதன்காரணமாக அந்த ஊரில் புதிய லாட்ஜ்கள். உணவகங்கள். பூக்கடைகள். டீக்கடைகள் பெருகிப் போயின. ஒரு நாளைக்கு ஐம்பது பேருக்குள் வந்து போய்க் கொண்டிருந்த ரயில் நிலையம் ஆயிரக்கணக்கில் ஆட்கள் வந்து போகுமிடமாகியது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ரயில் நிலையத்தையும் விரிவு படுத்திவிட்டார்கள். இரண்டு பிளாட்பாரங்கள் இருந்த ரயில் நிலையத்தில் புதிதாக இரண்டு பிளாட்பாரங்கள் உருவாக்கப்பட்டதுடன் அதிவேக ரயில்கள் நிற்கும் வசதியும் ஏற்படுத்தபட்டது.
சக்கையன் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ரயில் நிலையத்தின் போர்ட்டராக இருந்தான். அப்போது இரண்டே போர்ட்டர்கள் தான் வேலையில் இருந்தார்கள். இன்றைக்கு எட்டு பேர் இருக்கிறார்கள். அதுவும் நாலாவது பிளாட்பாரத்திலிருந்து படிக்கட்டுகள் மூலம் தான் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வர முடியும் என்பதால் சுமை தூக்குபவர்களின் உதவி அவசியம்.

வானரூ ரயில் நிலையமே தனக்குத் தான் சொந்தம் என்பது போலச் சுதந்திரமாகச் சுற்றித்திரிந்தது. வாழைப்பழத்தை தின்றுவிட்டு அதன் தோலை வானை நோக்கி வீசியடித்தது. அவர்கள் விரட்டும் போது கண் இமைக்கும் நேரத்தில் தாவி உயரத்திற்குப் போய்விடும். வேடிக்கை செய்வதில் அதற்கு விருப்பம் அதிகம். ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்குள் புகுந்து காகிதம் எதையாவது தூக்கிப் போய்விடும். தன்னை விரட்ட முயற்சிப்பவர்களைப் பல்லிளித்து முறைப்பது அதன் வழக்கம் ..
தொல்லை தரும் அக்குரங்கை ரயில் நிலையத்திலிருந்து துரத்தியடிக்க வேண்டும் என்று எத்தனையோ பேர் புகார் அளித்திருக்கிறார்கள். ரயில்வே காவலர்களும் அதற்காகப் போராடினார்கள். ஆனால் முடியவில்லை.
ஒருமுறை மயக்கமருந்து கலந்த ஊசியைப் போட்டு அதை மயங்க வைக்க முயன்றும் தோல்வியுற்றார்கள். அதற்காக வந்திருந்த கால்நடை மருத்துவரின் மீது வானரூ கல்லை எறிந்த போது அது மனிதர்கள் கோபத்தை வெளிப்படுத்துவது போலவே உக்கிரமாக இருந்தது.
ரயில்வே கேண்டியன் நடத்தும் கணேசன் மீதமான உணவுகளை வானரூவிற்குக் கொடுக்கத் துவங்கிய பிறகு அது பயணிகளின் உணவுப்பொருட்களைப் பிடுங்குவதில்லை. தாகம் எடுத்த நேரங்களில் ரயில் நிலைய தண்ணீர் குழாயை திருக்கி தண்ணீர் குடிக்கப் பழகியிருந்தது.
வடக்கிலிருந்து வரும் ரயில் பெட்டியின் மீது தாவி அமர்ந்து ரயிலோடு கொஞ்ச தூரம் பயணம் சென்று பின்பு தாவி ரயில்வே கேட்டில் நிற்பதை வழக்கமாக வைத்திருந்தது.
ரயில்வே பிளாட்பாரத்தில் உறங்குகிறவர்களின் செருப்பை எடுத்துப் போய் மரத்தில் தொங்க விட்டது. பிளாட்பாரத்தைத் தூய்மை செய்யும் மங்கம்மாள் அதனைத் தனது சொந்த மகனைப் போல நடத்தினாள்.
“ இப்படி வந்து உட்காருய்யா“ என்று அவள் அழைத்தால் வானரூ அருகில் வந்து அமர்ந்து கொள்ளும். வெற்றிலை போட்டபடியே அவள் தனது வீட்டுக்கதைகளை, கடந்தகால நினைவுகளை வானரூவிடம் பகிர்ந்து கொள்வாள். வானரூ செய்யும் சேஷ்டைகளை ரசிப்பாள். அந்த ரயில் நிலையத்தில் வாழும் ஒருவராக வானரூவை அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்
மழைக்காலத்தில் வானரூவின் இயல்பு மாறிவிடும். அதற்கு இடிச்சப்தம் கேட்டால் பிடிக்காது. அது போன்ற நாட்களில் ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்குள் வந்து ஒடுங்கி நிற்கும். தொடர்ந்து மழை பெய்யும் நாட்களில் அது மழையை வெறுப்பதைக் காட்டுவது போலப் பற்களை இறுக்கியபடி நிற்கும். வெயில் கண்டால் ஆனந்தம் கொண்டுவிடும். வெளிச்சத்தை அள்ளிக்குடிக்க முயல்வது போலக் கைகளை நீட்டும். விளையாடும்.
யாரோ ஒரு சிறுமி பிளாட்பாரத்தில் விட்டுப் போன பிளாஸ்டிக் பொம்மை ஒன்றை கையில் வைத்துக் கொண்டு சில நாட்கள் வானரூ விளையாடிக் கொண்டேயிருந்தது. அந்தப் பொம்மையை மரத்தின் உச்சிக்கே கொண்டு போய் வைத்துக் கொண்டது. பின்பு ஒரு நாள் அதனை வீசி எறிந்துவிட்டது. எதனால் அப்படி வீசி எறிந்தது எனத் தெரியவில்லை.
மனிதர்களைப் போலவே வயது மூப்பு குரங்கினையும் பாதிக்கும் என்பதைச் சக்கையன் கண்கூடாகப் பார்த்தான். பிளாட்பாரத்தில் வானரூ நடக்கும் போது தளர்ந்த வயசாளி செல்வது போல மாறியது. முன்பு தேங்காய் முடியை அது லாவகமாக உடைப்பதைப் பார்த்திருக்கிறான். இப்போது அது தேங்காய் முடியை உடைக்க முடியாமல் உருட்டி விளையாடியது. மனிதர்களைப் போலவே அதற்கும் சுவை திரிந்துவிட்டது. பளுப்பேறிய அதன் கண்கள் மங்கிவிட்டதைப் போலச் சதா காற்றில் கைகளை அசைத்துக் கொண்டிருந்தது.

அதுவும் கடந்த ஐந்தாறு நாட்களாக வானரூ தலையை ஒருபக்கம் சாய்த்தபடி சோர்வாகக் கழிப்பறை தகரத்தின் மீது அமர்ந்திருந்தது. சாப்பிடக் கொடுத்த எந்த உணவையும் எடுக்கவில்லை. சில நேரம் முற்றிய வெயில்பட இரும்பு பெஞ்சில் சுருண்டு படுத்துக்கிடந்தது.
இதனைக் கண்ட கேண்டியன் கணேசன் சொன்னார்
“ சாகப்போற நாளு குரங்குக்கு முன்னாடியே தெரிஞ்சிரும். அது சாப்பிடாம கிடந்து செத்துப் போகும்னு கேள்விபட்டிருக்கிறேன்“.
அவர் சொன்னது நிஜம் என்பது போலவே வானரூ உணவை விலக்கிப் படுத்தே கிடந்தது.
மங்கம்மாள் ஒருநாள் அதனருகில் சென்று தனது கைகளால் தடவிவிட்ட போது அதன் உடல் நடுங்கியது. நோயுற்ற கைக்குழந்தைக்குப் பிசைந்த உணவை ஊட்டிவிடுவது போல அவள் இட்லியை பிய்த்து எடுத்து “இதை மட்டும் சாப்பிடுய்யா“ என்று ஊட்ட முயன்றான். குரங்கு வாயைத் திறக்கவில்லை. ஆனால் அதன் கண்களில் நீர் கசிந்தது. அவள் குரங்கின் நெற்றியை தடவிவிட்டபடி “சொகமாயிரும்“ என மனதிற்குள் ஏதோ பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள்.
இதன் மறுநாள் வானரூ இறந்து போனது.
யார் முதலில் பார்த்தார்கள் என்று தெரியவில்லை. வானரூ செத்துப் போயிருச்சி என்ற தகவல் வந்த போது சக்கையன் இரண்டாவது பிளாட்பாரத்தில் இருந்தான். அவசரமாக முதல் பிளாட்பாரத்திற்கு வந்து பார்த்தபோது தண்ணீர்தொட்டியருகே குரங்கு இறந்து கிடந்தது. ஒடுங்கிய முகம். ஒரு கண்ணில் பாதித் திறந்திருந்தது. மறு கண் மூடியிருந்தது. அசைவற்ற அதன் உடலை சக்கையன் தொட்டுப்பார்த்தான். ரயில்பெட்டிகளில் தாவியோடிய அதன் விளையாட்டுதனம் நினைவில் வந்து போனது.
மங்கம்மாள் எங்கே போனாள் என்று தான் சக்கையன் முதலில் தேடினாள். அவளால் இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ள முடியாது. மனது உடைந்து போய்விடுவாள். மங்கம்மாள் விடுப்பு எடுத்துக் கொண்டு மகள் ஊருக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள்.
கேண்டியன் நடத்தும் கணேசனிடம் தகவல் சொன்ன போது அவர் ஸ்டேஷன் மாஸ்டரிடம் சொல்லும்படி சொன்னார்
இதற்குள் தகவல் அறிந்த ஆட்டோ ஒட்டுனர்கள். பக்கத்து டீக்கடை நடத்துபவர், ரயில் நிலைய பேப்பர்கடை நடத்துபவர், போளி விற்பவர் எனப் பலரும் பிளாட்பாரத்தில் திரண்டிருந்தார்கள்.

போர்ட்டர்களில் சிலர் இறந்த குரங்கை குப்பை வண்டியில் அள்ளிக் கொண்டு போய்ப் போட வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். செத்துகிடந்த நாய்களை அப்படித் தானே அப்புறப்படுத்துகிறார்கள் என்றார் பேப்பர் கடை நடத்துகிறவர்.
ஆனால் கேண்டியன் நடத்தும் கணேசன் அதனை ஏற்கவில்லை
“ நாம தான் வானரூவை அடக்கம் பண்ணணும். “ என்றார்.
சக்கையனும் அதற்கு ஒத்துக் கொண்டான். பாடைகட்டி மனிதர்களைப் போலச் சுடுகாட்டிற்குக் கொண்டு போய்ப் புதைக்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்தார்கள்.
“ நான் ஒரு பட்டுத்துண்டு வாங்கிட்டு வந்து சாத்துறேன்“ என்றான் போர்ட்டர் சேகர்.
“ நான் பாடைரெடி பண்ணுறேன்“ என்றான் திரவியம்
சக்கையன் வசூல் பண்ணி காசு சேர்த்துக் கொடுப்பதாகச் சொன்னான். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ஐம்பது ரூபாய் கொடுத்தார். அத்தோடு ரெண்டு மணி எக்ஸ்பிரஸ் வர்றதுக்குள்ளே பாடி எடுத்துருங்க. என்று ஆலோசனையும் சொன்னார்
ரயில்வே காவலர் முத்துசாமி குரங்கின் இறப்பு என்றாலும் அதைப் பற்றிய தகவல்களை நாம் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லி வயது மூப்பின் காரணமாகக் குரங்கு இறந்துவிட்டது. அதைப் பார்த்தவர்கள் பெயர் என்று சக்கையன், சேகர் ,திரவியம் பெயர்களை எழுதிக் கொண்டார். பின்பு தனது பங்கிற்கு இருபது ரூபாய் பணம் கொடுத்தார்.
பயணிகளில் ஒருவராக இருந்த வெள்ளைவேஷ்டி சட்டை அணிந்த மனிதர் மட்டும்“ குரங்கு செத்துக்கிடப்பது நோய் பரவுவதற்குக் காரணமாகிவிடும். உடனே அதைக் கிளியர் பண்ணுங்க“ “ என்று ஸ்டேஷன் மாஸ்டரிடம் சப்தமிட்டார்
“அந்தக் குரங்கு ரொம்ப நாளா இங்கே இருந்துச்சி சார்“ என்றார் ஸ்டேஷன் மாஸ்டர்
“ அதுக்காகச் செத்த குரங்கை வச்சி பூஜை பண்ணுவீங்களா“ எனக்கேட்டார் அந்த நபர்.
“ அரை மணி நேரத்தில அடக்கப் பண்ண கொண்டுட்டு போயிடுவாங்க“ என்று ஸ்டேஷன் மாஸ்டர் உறுதி அளித்தபிறகே அந்த நபர் வெளியேறிப் போனார்.
இறந்தவர்களைக் குளிப்பாட்டுவது போல வானரூவை குளிக்க வைக்க வேண்டுமா எனச் சக்கையனுக்குத் தெரியவில்லை. திரவியம் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி வானரூவை தூக்கிச் சிமெண்ட் பெஞ்சில் படுக்க வைத்தான். சேகர் வாங்கிவந்திருந்த பட்டுத்துண்டினை அதன் தலையில் சுற்றிவிட்டான். சக்கையன் வசூல் செய்த பணத்தில் சந்தனம் ஊது பத்தி, ரோஜா மாலை வாங்கி வந்திருந்தான். சந்தனத்தைத் தனது கையாலே வானரூவின் உடலில் பூசினான். மயிர் அடர்ந்த உடலில் சந்தனம் லேசாக ஒட்டியது. பின்பு ரோஜா மாலை அணிவித்தான். வானரூவின் தோற்றம் விநோதமாக இருந்தது.
பயணிகளில் சிலர் சிமெண்ட் பெஞ்சில் வைக்கபட்ட வானரூவிற்கு அஞ்சலி செலுத்தினார்கள். திரவியம் பாடையைத் தயார் செய்தான்.
சக்கையன் ஒரு நாவிதரை வரவழைத்திருந்தான். அவர் பிளாட்பாரத்தின் ஒரத்தில் உட்கார வைத்து சக்கையனுக்கு மொட்டை அடித்துவிட்டார். மழிக்கபட்ட தலையுடன் சக்கையன் வந்து நிற்பதைப் பார்த்த ரயில் நிலைய பணியாளர் பார்வதி கண்கலங்கிப் போனாள்.
“ யக்கா …இதுக்கு நெத்திக்காசு வைக்கணுமா“ எனப் பார்வதியிடம் கேட்டான் சக்கையன்.
வைக்க வேண்டும் என்று தலையாட்டினாள் பார்வதி. ஒற்றை ரூபாய் நாணயத்தை அதன் நெற்றியில் ஒட்டவைக்க முயன்றான். அது நிற்கவில்லை. சந்தனம் தொட்டு நெற்றிக்காசை ஒட்டினான்.
அது ஒற்றைக் குரங்கு. எங்கிருந்தோ அந்த ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அவர்களுடனே வாழ ஆரம்பித்து அங்கேயே தனது வாழ்வை முடித்துக் கொண்டுவிட்டது. இறந்தபின்பு மனிதன். குரங்கு என்று பேதமில்லை. இறந்த மனிதனை நினைவு கொள்வதற்கு அவன் குடும்பமாவது இருக்கும். இறந்த விலங்குகளுக்கு அதுவும் கிடையாது என்று பார்வதி நினைத்துக் கொண்டாள்.
வடக்கிலிருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து சேர்ந்தது. ரயில் பெட்டியிலிருந்து களைத்த முகத்துடன், கசங்கிய உடைகளுடன் ஆட்கள் இறங்கினார்கள். வழக்கத்தை விடவும் இருமடங்கு அதிகப் பயணிகள். திடீரெனப் பிளாட்பாரம் பரபரப்பாகியது. சிமெண்ட் பெஞ்சில் கிடத்தப்பட்டிருந்த வானரூவின் உடலை எவரும் கண்டுகொள்ளவில்லை.
சேகரும் சக்கையனும் பாடையின் முன்பக்கம் பிடித்துக் கொண்டார்கள். பின்பக்கம் பாடையைப் பிடிப்பதற்கு இன்னொரு ஆள் தேவைப்பட்ட போது பார்வதி தானே தூக்கி வருவதாகச் சொன்னாள். அவர்கள் நான்கு பேருமாகப் பாடையை ரயில்வே பிளாட்பாரத்தில் தூக்கிச் சென்றார்கள். விளையாட்டுதனங்களைக் கைவிட்ட வானரூ வானைப் பார்த்தபடி பாடையில் போய்க் கொண்டிருந்தது. அவர்கள் இறந்த குழந்தையைக் கொண்டு போவது மெதுவாக நடந்தார்கள்.
ரயில்வே பிளாட்பாரத்தை விட்டு இறங்கி கிழக்கே அவர்கள் நடக்கத் துவங்கிய போது நான்காவது பிளாட்பாரத்தை நோக்கி ஒரு கூட்ஸ் ரயில் வரும் சப்தம் கேட்டது. அவர்கள் இடுகாட்டில் வானரூவை புதைத்துவிட்டுத் திரும்பிய போது மணி மூன்றாகி இருந்தது. குடும்பத்தில் ஒருவரை அடக்கம் செய்து திரும்பியது போல அவர்கள் பசியை மறந்து துயர முகத்துடன் திரும்பினார்கள். கேண்டியன் கணேசன் அவர்களைச் சாப்பிட்டுப் போகும்படியாகச் சொன்னார். ஆனால் அவர்களில் எவரும் சாப்பிடவில்லை
ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் உதிர்ந்து கிடந்த ரோஜா இதழ்களை ஒரு காகம் கொத்திக் கொண்டிருந்தது.
நாளை மங்கம்மாள் வந்தால் பெருங்குரலெடுத்து அழுவாள். தான் இல்லாமல் போய்விட்டோமே எனத் தலையில் அடித்துக் கொள்வாள். நெருங்கிப் பழகிய உயிரை பறிகொடுப்பதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும். என நினைத்தபடியே சக்கையன் தனது வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்
தலையை மொட்டையடித்துக் கொண்டு நிற்கும் சக்கையனைப் பார்த்த அவனது மனைவி குழப்பமான முகத்துடன் கேட்டாள்.
“ “ என்ன இப்படி வந்து நிக்குறீங்க , வேலைக்குப் போகலையா“
“தெரிஞ்சவர் ஒருத்தர் இறந்துட்டார். அதான் காரியத்துக்குப் போயிட்டு வர்றேன்“
“ அதுக்கு நீங்க எதுக்கு மொட்டை போட்டீங்க“
“ அவருக்கு உறவுனு யாருமில்லை“. என்றபடியே குளிப்பதற்காகச் சென்றான்
சக்கையன் மனைவி கோபமாகத் திட்டிக் கொண்டிருப்பது கேட்டது. சக்கையன் தலையில் பச்சைத் தண்ணீரை ஊற்றியபோது வானரூவின் விளையாட்டுதனங்கள் மனதில் தோன்றி மறைந்தன.
“ ஆறுமணி எக்ஸ்பிரஸ் வர்றதுக்குள்ளே ஸ்டேஷன் போனா தான் நூறு ரூபாயாவது பாக்க முடியும். இல்லேண்ணா கடன் கேட்டு எவன்கிட்டயாவது கையேந்தி நிற்க வேண்டியது வரும்“ என்ற எண்ணமும் மனதில் தோன்றியது.
வானரூ இப்படி எவரிடமும் கடன்கேட்டதில்லை. கையேந்தியதில்லை.
“ என்ன பொழப்பு ….நம்ம பொழப்பு“ எனச் சுய வருத்தம் கொண்டபடி சக்கையன் அவசர அவசரமாகக் குளிக்கத் துவங்கினான்.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 676 followers

