கனவைத் துரத்தியவர்.
லெஃப்டர்: தி ஸ்டோரி ஆஃப் தி ஆர்டினேரியஸ் 2025 ல் வெளியான துருக்கி நாட்டுத் திரைப்படம் கேன் உல்கே இயக்கியுள்ளார். எர்டெம் கெய்னார்கா லெஃப்டராக நடித்துள்ளார்.

புகழ்பெற்ற துருக்கி கால்பந்தாட்ட வீரர் லெஃப்டரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. கிரேக்க குடும்பத்தில் பிறந்த லெஃப்டர் துருக்கி அணிக்காக விளையாடி பெரும்சாதனைகளைச் செய்திருக்கிறார். லெஃப்டரின் வாழ்வின் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைப் படம் உண்மையாகப் பதிவு செய்துள்ளது.
ஏதென்ஸில் கிரேக்கத்திற்கு எதிராகத் துருக்கி அணியில் அவர் விளையாடும் போது கிரேக்கர்கள் அவர் மீது . அழுகிய காய்கறிகளை வீசுகிறார்கள். துரோகி எனக் கூச்சலிடுகிறார்கள். ஆனால் தன்னை உருவாக்கியது துருக்கியே என அவர் அதன் வெற்றியை சாத்தியமாக்கிக் காட்டுகிறார்.

புயகோடோ தீவில் பிறந்தவர் லெஃப்டர், அவரது தந்தை ஒரு மீனவர். தாய் தையற்கலைஞர். பெரிய குடும்பம். பத்துப் பிள்ளைகள். வறுமையான சூழ்நிலை.
தந்தைக்குத் தனது மகன் படித்து மருத்துவராகவோ பேராசிரியராகவோ ஆக வேண்டும் என்று ஆசை. ஆனால் லெஃப்டருக்கோ சிறுவயது முதலே கால்பந்தாட்டத்தில் ஈடுபாடு அதிகம். துணியை உருட்டி பந்து போலச் செய்து விளையாடுவார். முறையான காலணி கிடையாது. ஆனாலும் பகலிரவாகக் கால்பந்தாடுவதில் நேரத்தை செலவிட்டார்.
இப்படியே இருந்தால் தனது மகன் படிப்பை மறந்துவிடக் கூடும் என அஞ்சிய தந்தை அவரிடம் படித்துப் பெரிய ஆளாக வர வேண்டும் எனச் சத்தியம் பெறுகிறார். அந்தக் காட்சி படத்தில் அழகானது.
ஆனால் தந்தைக்குச் செய்து கொடுத்த வாக்குறுதியை மீறி கால்பந்தாட்டமே வாழ்க்கை என முடிவு செய்கிறார். அதில் வென்றும் காட்டுகிறார். துருக்கியின் புகழ்பெற்ற விளையாட்டு வீரனாகத் தேசமே அவரைக் கொண்டாடிய போதும் தந்தை அதனை ஏற்க மறுக்கிறார். தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்

ஒருமுறை லெஃப்டர் கால்பந்து போட்டியில் தனக்குக் கிடைத்த பணத்தில் தந்தைக்கு அழகான சட்டை வாங்கி வந்து பரிசாக அளிக்கிறார். தந்தை அதைக் கையில் வாங்கிக் கொள்கிறார். ஆனால் முழுமனதோடு அதனை ஏற்கவில்லை. அதை உணர்ந்த அவரது அன்னை சமாதானம் சொல்கிறாள்.
லெஃப்டரின் சகோதரனும் கால்பந்தாட்ட வீரனே. ஃபெனர்பாஷே அணிக்காக விளையாட அவர் தேர்வு செய்யப்படும் போட்டி சிறப்பாகப் படத்தில் இடம் பெற்றுள்ளது. அந்தப் போட்டியில் தனது கனவுநாயகன் முன்பாக லெஃப்டர் பந்தை லாவகமாகக் கொண்டு சென்று கோல் போடுகிறார். அன்றைய வெற்றி அவரது வாழ்க்கையை மாற்றிவிடுகிறது.
ஃபெனர்பாஷே அணியில் சேர்ந்து கொள்ள எவ்வளவு ஊதியம் எதிர்பார்க்கிறாய் என நிர்வாகி கேட்கும் போது எனது தந்தையின் மருத்துவச் செலவுகளை மட்டும் ஏற்றுக் கொண்டால் போதும் என லெஃப்டர் சொல்கிறார். அந்த அணிக்காக விளையாடி வெற்றிகளைக் குவித்தார். ஃபெனர்பாஷேற்காக 423 கோல் அடித்திருக்கிறார். அந்த வகையில் தன் வாழ்நாள் முழுவதும் ஃபெனர்பாஷேவை தனதுஅடையாளமாக வைத்திருந்தார், இன்று, யோகுர்டுசு பூங்காவில் லெஃப்டருக்கு சிலை வைக்கபட்டிருக்கிறது‘
துருக்கி போரில் இறங்கிய போது கால்பந்தை கைவிட்டு நான்கு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றினார் லெஃப்டர். வீட்டின் அனுமதி பெறாமல் அவர் ராணுவத்தில் சேர்ந்துவிட்ட காட்சியில் அவரது அம்மாவும் சகோதரிகளும் அழுது புலம்பி தவிப்பதும் தந்தையோ அது உருப்படியான விஷயம் எனப் பாராட்டுவதும் அழகான காட்சி.

துருக்கிய தேசிய அணிக்காக ஒன்பது முறை கேப்டனாக இருந்திருக்கிறார். அத்தோடு 1948 கோடைகால ஒலிம்பிக்கிலும் , மற்றும் 1954 உலகக் கோப்பையிலும் இரண்டு கோல்களை அடித்திருக்கிறார் . தேசிய பயிற்சியாளராகப் பணியாற்றியிருக்கிறார்.
ஆனாலும் துருக்கியில் நடந்த கிரேக்க எதிர்ப்பு கலவரங்களின் போது அவரது வீடு தாக்கபட்டது. அவரை வசைபாடினார்கள். ஆனால் எந்த நிலையிலும் தான் துருக்கியை சேர்ந்தவனே என்பதில் லெஃப்டர் உறுதியான இருந்தார். அதன் காரணமாகவே மரணத்தின் பின்பு இன்றும் துருக்கியின் நிகரற்ற கால்பந்தாட்ட நாயகனாகக் கொண்டாடப்படுகிறார்.
விளையாட்டில் ஒரு வீரன் தேர்வு செய்யப்படுவதற்குப் பின்னால் உள்ள சதிகள். வெறுப்புகளை இதிலும் காண முடிகிறது. அதே நேரம் திறமையை யாராலும் தடுக்க முடியாது என்பதையும் படம் அழகாகச் சித்தரிக்கிறது. விளையாட்டினை முதன்மைப்படுத்திய படம் என்றபோதும் லெஃப்டரின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அதன் பிரச்சனைகளையே அதிகம் விவரித்துள்ளது.
லெஃப்டரின் காதலும் திருமண வாழ்க்கையும் அழகான கிளைக்கதை கிரேக்க அழகியான ஸ்டாவ்ரியானி பெக்கியாரியை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். 1953 ஆம் ஆண்டுச் சர்வதேச புகழை அடைந்து இத்தாலி மற்றும் பிரான்சில் சில ஆண்டுகள் விளையாடிய பிறகு பின்பு அவர்கள் இஸ்தான்புல்லிற்கு வருகை தருவதில் தான் படம் துவங்குகிறது. தனது இளமைக்காலத்தைப் பத்திரிகையாளர்களிடம் நினைவு கொள்வதாகவே படம் விரிகிறது.
கால்பந்தாட்ட வெற்றிகளை மட்டுமின்றித் துருக்கியில் துருக்கியில் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் போராட்டங்கள், முரண்பாடுகள் மற்றும் கலாச்சார அழுத்தங்களையும் படம் நிஜமாகப் பிரதிபலிக்கிறது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 676 followers

