வரைபடமில்லாத பயணம்.

மவுண்டன்ஸ் ஆஃப் தி மூன் திரைப்படம் நைல்நதியின் தோற்றுவாயைக் கண்டறிவதற்காகப் பிரிட்டீஷ் ஆய்வாளர் ரிச்சர்ட் பர்டன் மற்றும் ஸ்பீக் மேற்கொண்ட நெடும்பயணத்தை விவரிக்கிறது. இப்படத்தைப் பாப் ரஃபெல்சன் இயக்கியுள்ளார்

ரோஜர் டீகன்ஸின் கேமிரா படத்தின் பெரும்பலம். கிழக்கு ஆப்ரிக்காவின் முடிவற்ற நிலவெளியில் பர்டனின் குழு பயணிக்கும் போது கேமிரா அவர்களைப் பருந்தெனப் பின்தொடர்கிறது. இரவுக்காட்சிகளை ரோஜர் டீக்கன்ஸ் படமாக்கியுள்ள விதம் அற்புதம். குறிப்பாக மெழுகுவர்த்தி ஒளியில் பர்ட்டன் தனது காதலி இசபெலின் நிர்வாண உடலைக் காணும் போது ரெம்பிராண்டின் ஓவியம் போலவே உருவாக்கபட்டிருக்கிறது.

நைல் நதி எங்கிருந்து துவங்குகிறது என்பதைக் கண்டறிய ஒரு நீண்ட பயணத்தை ரிச்சர்ட் பர்டன் மேற்கொண்டார். பர்டன் & ஸ்பீக்கின் பயணத்திற்கு லண்டன் ராயல் சொசைட்டி நிதியளித்தது. 132 கொண்ட இந்தக் குழு 1857–1858 ஆம் ஆண்டுக் கிழக்கு ஆப்பிரிக்கா வழியாகப் பல மாதங்களாக நீண்ட பயணமது. நோயிலும் எதிர்பாராத இடையூறுகளின் காரணமாகவும் அவர்கள் குழுவில் பலர் இறந்து போனார்கள். பர்டன் பலத்த காயம் அடைந்தார். பழங்குடி இனத்தலைவரால் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கபட்டார். ஆனாலும் தனது பயணத்தைக் கைவிடவில்லை.

தீராப்பயணியான ரிச்சர்ட் பர்டன் சாகசங்களில் நாட்டம் கொண்டவர். 29 மொழிகள் கற்றவர். ஒருமுறை அவர் மெக்காவிற்கு மாறுவேஷத்தில் சென்றிருக்கிறார். அவர் கிழக்கிந்திய கம்பெனியின் 18வது படைப்பிரிவில் ஜெனரல் சர் சார்லஸ் நேப்பியரின் கீழ் ஏழு ஆண்டுகள் இந்தியாவில் பணியாற்றியிருக்கிறார். அந்த நாட்களில் காமசூத்ராவை மொழியாக்கம் செய்திருக்கிறார்.

இது போலவே அரப தேசத்தில் பயணம் செய்து ஆயிரத்தோரு அராபிய இரவுகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். பர்டனின் சாகசம் பற்றி ஏராளமான கதைகள் உலவுகின்றன. அதில் கொஞ்சம் மட்டுமே அவரது வாழ்வில் நடந்தேறியவை. மற்றவை அவர் உருவாக்கியவை. அவரது நண்பர்கள் உருவாக்கியவை.

காலனியமாக்கலின் இன்னொரு வடிவம் தான் இது போன்ற நதியின் தோற்றுவாயை தேடும் பயணம். அடிமை வணிகத்திற்கான அடித்தளம் அமைப்பதே இதன் அடியில் உள்ள ரகசிய வேட்கை என்கிறார்கள். படத்திலும் ஸ்பீக் தான் கண்டறிந்த ஏரிக்கு விக்டோரியா ராணியின் பெயரைச் சூட்டுகிறார். அது பூர்வீகமாக ஆப்பிரிக்க மக்கள் கண்டறிந்த ஏரி. அவர்களுக்கு உரிமையான ஏரி. பெயரிடுவதன்வழியே ராணியின் அதிகாரத்தை நிலைநாட்டுகிறார் ஸ்பீக். இது தான் காலனிய வேட்கை.

பர்டனும் ஸ்பீக்கும் மேற்கொள்ளும் பயணத்தில் அவர்கள் தங்கள் உயிரைப் பயணம் வைத்து நடக்கிறார்கள். சோமாலியாவில் பர்டன் முகாமிட்டிருந்த போது ஒரு இரவு பழங்குடியினர் அவரைத் தாக்குகிறார்கள். . சோமாலிய ஈட்டி அவரது மேல் தாடையை உடைத்து நான்கு பின்புற பற்களையும் உடைத்துச் சென்றது. ஆகவே அவரால் பேசவோ சாப்பிடவோ முடியவில்லை. அதற்காகச் சிறப்புச் சிகிட்சை எடுத்துக் கொள்ள வேண்டியதாகியது

ஒரு இரவு ஸ்பீக்கின் காதில் கருவண்டு புகுந்துவிடுகிறது. அதை வெளியே எடுக்க முடியாமல் துடிக்கிறார். இதனால் காதின் செவிப்பறை பாதிக்கபடுகிறது. இன்னொரு இடத்தில் அவர்களைச் சிங்கம் தாக்குகிறது. இத்துடன் பஞ்சம், கொள்ளைநோய் தாக்குதலால் பலரும் இறந்து போகிறார்கள். குருட்டு விதி தான் அவர்களின் பயணத்தைத் தீர்மானிக்கிறது. மோசமான நிகழ்வுகளைச் சந்திக்கிறார்கள்.

அறியப்படாத ரகசியம் என்பது நதியின் தோற்றுவாயில்லை. உடன் பயணிக்கும் நண்பனின் மனதில் என்ன ஆசையிருக்கிறது. என்ன கனவுகாணுகிறான் எனப் பர்டன் அறியமுடியாததே பெரிய புதிர்.

ஸ்பீக் தனியே பயணம் செய்து விக்டோரியா ஏரியைக் கண்டுபிடிக்கிறான். மொத்த பயணத்திற்கான பாராட்டினையும் தானே பெறுவதற்கு முயற்சிக்கிறான். இது பர்டனை ஆத்திரம் கொள்ள வைக்கிறது. தான் ஏமாற்றப்பட்டதாக உணருகிறார். ராயல் சொசைட்டியில் பொதுவிவாதம் நடத்த அழைப்பு விடுகிறார்

நண்பனின் துரோகத்தை பர்டன் உணரும் விதமும் தனது தவற்றை ஸ்பீக் உணரும் தருணத்தையும் படம் சரியாக சித்தரித்துள்ளது. ஒத்தல்லோ போன்ற கதாபாத்திரமாக ஸ்பீக் மாறுகிறான்.

ராயல் சொசைட்டியில் இசபெல்லை ஸ்பீக் சந்தித்து உரையாடுவது சிறப்பான காட்சி. அதில் ஸ்பீக்கின் மனநிலை தெளிவாக வெளிப்படுகிறது.

ஸ்பீக் பறவைகளை வேட்டையாடும் காட்சி படத்தின் முக்கிய நிகழ்வு. ஒரு நத்தை தான் அவனது இறுதி முடிவை எடுக்க வைக்கிறது

நைல் நதியின் தோற்றுவாயாகக் கருதப்படும் டாங்கன்யிகா ஏரியை அடையும் போது, பர்டனை ஒரு ஸ்ட்ரெச்சரில் சுமந்து செல்கிறார்கள். அவரால் நம்பமுடியவில்லை தனது இலக்கை அடைந்துவிட்ட மகிழ்ச்சியில் கண்ணீர் சிந்துகிறார். ஆனால் அது தான் நைல் நதியின் தோற்றுவாயா என உறுதியாகச் சொல்ல முடியவில்லை. உடனே அடுத்தப் பயணத்திற்குத் தயராகிறார். அந்தத் தீராதவேட்கை தான் பர்டனை தொடர்ந்து இயக்குகிறது.

இனக்குழு அரசனின் தங்கைக்கு ஸ்பீக் சிகிட்சை அளிக்கும் காட்சியும் அதைத் தொடர்ந்த அவனது விடுதலையும் வரலாற்று உண்மைகளே.

பெரும்சாகசப் பயணத்தை முடித்துக் கொண்டு அவர்கள் லண்டன் திரும்பும் காட்சி சிறப்பானது. இசபெல் பர்டனை சந்திக்கும் போது வெளிப்படும் உணர்ச்சிகள் நிஜமானவை. நிஜவாழ்வில் பர்டன் இறந்தவுடன் அவரது கையெழுத்துப் பிரதிகள் யாவற்றையும் இசபெல் எரித்துவிடுகிறார். ஆகவே பர்டன் குறித்த மர்மங்கள் இன்றும் விளக்கபடவில்லை. இசபெல் அறிமுகமாகும் காட்சியும்.நடன விருந்தில் பர்டனும் ஆடும் இன்பமும். அவர்களின் திருமணம் மற்றும் எதிர்காலத்தை அவள் திட்டமிடும் விதம் அசலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜான் ஹானிங் ஸ்பீக் தனது பயண அனுபவத்தை விற்பனை பொருளாக மாற்றுகிறார். இதனால் பர்டன் மற்றும் ஸ்பீக் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது, நைல் நதியின் மூலத்தைக் கண்டுபிடித்ததற்காக ஸ்பீக் பாராட்டுகளைப் பெறுகிறார். ஆனால் அதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை எனப் பர்டன் வாதிடுகிறார். அதற்காகப் பர்டன் நடத்தும் விவாதம் முக்கியமான நிகழ்வாகும்

ஸ்பீக்கின் களிமண் சிலையைப் பர்டன் முழுமையாக்கித்தரும் காட்சியின் மூலம் ஸ்பீக்கின் முகம் அவரது மனதில் எவ்வளவு ஆழமாகப் பதிந்துள்ளது என்பது புரிகிறது.

பழங்குடி மக்கள் விருந்தினர்களை வரவேற்க அவர்கள் முகத்தில் பாலை துப்புவது, பர்டனும் டாக்டர் லிவிங்ஸ்டனும் தங்கள் உடலில் உள்ள வடுக்களைக் காட்டிக் கொள்வது, பழங்குடி மக்களின் ஆசிர்வதிக்கும் சடங்கு. அவர்கள் வீடு கட்டும் விதம், துப்பாக்கியை முதன்முதலாகப் பழங்குடித்தலைவன் கையில் வாங்கும் போது ஏற்படும் நடுக்கம். வழிகாட்டியை குரூரமாகத் தண்டிக்கும் விதம், அடிமை வணிகம், வெளியுலகம் அறியாத பழங்குடியின் அவலநிலை. எனப் படம் ஆப்ரிக்க வாழ்வை நுண்மையாக விவரித்துள்ளது.

பர்டனிடம் உள்ள பித்து விளங்க முடியாதது. அதன் நன்மை தீமை இரண்டினையும் படம் விவரிக்கிறது. இங்கிலாந்தில் உள்ள ஆப்ரிக்க மக்கள் பற்றிய பார்வையைப் பர்டன் மறுக்கிறார். வெள்ளை அதிகாரத்தைக் கண்டிக்கிறார். ஆனாலும் அவர்களின் காலனியாக்க கருவியாகவே செயல்படுகிறார். ஸ்பீக் நேரடியான ராஜவிசுவாசி. அவர் அவையில் பாடும் காட்சியில் அது நேரடியாகவே வெளிப்படுகிறது.

நைல் நதியின் தோற்றுவாளைத் தேடிய பயணத்தின் போது சுமை தூக்குபவர்களுக்கு இடையே சண்டை நடக்கிறது. அவர்கள் பலநேரம் தங்கள் சுமைகளை இழக்கிறார்கள். இயற்சை சீற்றம் பலரை காவு வாங்குகிறது. இதில் பம்பாய் என்ற பணியாளர் தனித்துவமான கதாபாத்திரம். ஒரு சந்தர்ப்பத்தில் அவர் பர்ட்டனின் உயிரைக் காப்பாற்றுகிறார். முடிவு வரை உடன் வருகிறார்.

உண்மையான அவர்களின் பயணத்தில் பர்டன் தன்னோடு ஒரு ஷேக்ஸ்பியர் நாடகங்களின் நூலை வைத்திருந்தார். அவரும் ஸ்பீக்கும் அந்த நூலை தொடர்ந்து வாசித்தார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. படத்தில் அப்படியான காட்சி இடம்பெறவில்லை. ஆனால் ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரங்களில் ஒருவராக ஸ்பீக் மாறிவிடுவதைப் படம் சித்தரித்துள்ளது.

பர்டன் ஒரு உளவாளி. பிரிட்டிஷ் ராணுவத்திற்காக உளவு பார்த்தார் என்றும் ஒரு விமர்சனமிருக்கிறது. காமபித்துக் கொண்டவர். இதற்காக பாலியல் பிரதிகளை தேடி சேகரித்தார் என்றும் சொல்கிறார்கள். இது போன்ற விமர்சனங்கள். எதிர்ப்புகள். பாராட்டுகள் யாவையும் தாண்டி பர்டனின் பன்முக ஆளுமையின் ஒரு பகுதியை மட்டுமே இப்படம் வெளிப்படுத்தியுள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 27, 2026 23:52
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.