லண்டனில் நரிகள்

தனது 99வது வயதில் டேவிட் அட்டன்பரோ இயக்கியுள்ள வைல்ட் லண்டன் ஆவணப்படம் வியப்பூட்டும் காட்சிகளைக் கொண்டிருக்கிறது. பிபிசி இதனைத் தயாரித்துள்ளது.

பிரம்மாண்டமான அடுக்குமாடி கட்டிடங்களும் நூற்றாண்டுகளைக் கடந்த வரலாற்றுச் சின்னங்களும் கொண்ட லண்டன் மாநகரம் எண்ணிக்கையற்ற பூங்காங்களைக் கொண்டிருக்கிறது. இந்த நகரில் வளரும் விலங்குகளை அட்டன்பரோ ஆவணப்படுத்தியிருக்கிறார்.

லண்டன் நகரில் உலவும் நரிகளைக் காண ஆச்சரியமாகவுள்ளது. குறிப்பாகப் புதரிலிருந்து திடீரென ஒரு நரி வெளியே வருவதைக் காண சிலிர்ப்பாக உள்ளது. பத்தாயிரத்திற்கும் அதிகமான நரிகள் லண்டனில் வசிப்பதாகச் சொல்கிறார்.

இரவில் நரிகள் காரின் முகப்பில் சாய்ந்து ஒன்றையொன்று காதலிப்பதும் சாலையில் கிடக்கும் பந்தினை நரி எடுத்து விளையாடுவதும் அழகான காட்சிகள். நகரவாழ்க்கைக்கு நரிகளும் பழகிவிட்டன என்பதை அட்டன்பரோ கேலியாகக் குறிப்பிடுகிறார்.

இந்த ஆவணப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்தபகுதி டியூப் ரயிலில் பயணம் செய்யும் புறாக்களே. அவை ஒரிடம் விட்டு மற்றோர் இடத்திற்குப் பறப்பதில்லை. மாறாக ரயிலில் பயணம் செய்து அடுத்த ஸ்டேஷனில் இறக்கி நடக்கின்றன. இரை தேடுகின்றன. அவற்றை வாழ்வு முறை மாறிவிட்டிருக்கிறது. இந்தப் புறாக்கள் ரயிலில் சிதறும் உணவுப்பொருட்களை உண்கின்றன. பயணியர் காலடியில் அமர்ந்து பயணிக்கின்றன. ரயில் நிலையத்தில் புறா இறங்கிச் செல்லும் அழகாகவுள்ளது.

வாகன நெருக்கடி மிகுந்த சாலையொன்றின் வானில் பருந்து தனது குஞ்சிற்குப் பறக்க கற்றுத் தருவதைக் காண முடிகிறது. பாராளுமன்ற கட்டிடத்தின் வளைவுகளில் பருந்துகள் குடியிருக்கின்றன. ஒரே நகரில் வேறு வேறு அடுக்குகளில் வாழ்க்கை எப்படி இயங்குகிறது என்பதை ஆவணப்படம் சிறப்பாக விளக்குகிறது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகச் சினிமா படப்பிடிப்பிலிருந்து தப்பிய மெக்சிக கிளிகள் இன்று பல்கி பெருகி முப்பதாயிரத்திற்கும் மேலாக லண்டன் நகரினை வட்டமிடுகின்றன. ஒரு மரம் முழுவதும் கிளிகள் அமர்ந்துள்ள காட்சி அற்புதமாகவுள்ளது.

வயல் எலி ஒன்றை கையில் ஏந்தியபடி அவர் லண்டனிலிருந்து அழிந்து போன வயல் எலிகள் மீண்டும் தோன்றுவதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறார். உயிரினங்களுடன் அவர் கொண்டிருக்கும் உறவு ஆழ்ந்த அன்பின் வெளிப்பாடாகவுள்ளது

நகர்புற வீதியில் உலவும் மான்கள். அரண்மனை தோட்டத்தில் உள்ள பூக்களில் மட்டும் தேன் எடுக்கும் அரண்மனை தேனீக்கள். அதன் தேனின் தனித்துவ ருசி. சாலையைக் கடக்கக் காத்திருக்கும் தவளையின் பதற்றமான கண்கள். துணை தேடி இரவில் அலையும் முள்ளம்பன்றியின் வாழ்க்கை. நீருக்குள் வாழும் உயிரினங்கள். தட்டானின் முதற் பறத்தல் என டேவிட் அட்டன்பரோ லண்டனின் மறுபக்கத்தைச் சிறப்பாக ஆவணப்படுத்தியுள்ளார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 16, 2026 01:22
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.