சரஸ்வதி யாமம்
சரஸ்வதி என்னும் ராகத்தில் அமைந்த பாடல் இது என்று சொல்லப்படுகிறது. எம்.கே.அர்ஜுனனின் இசையமைப்பில் 1976 ல் வெளிவந்த அனாவரணம் என்னும் படத்தில் இடம்பெற்ற பாடல். வயலார் ராமவர்மா எழுதியது. ஏசுதாஸ் பாடியது.
ஏசுதாஸின் குரல் கம்பீரம் அடையத்தொடங்கும்போது வந்த பாடல். (கம்பீரம் எனும்போது தமிழ்ச்செவிகளுக்கு தோன்றும் அந்தக் கம்பீரம் அல்ல. இது ஓர் இனிய மணியோசை)
இந்தப்பாடல் எனக்கு நீண்டகாலமாகவே பிடித்தமான ஒன்று. கொஞ்சம் ஊக்கப்படுத்திக்கொள்ள நான் கேட்பது. இந்தப் பாடலின் வரிகள் அந்த படத்துடன் இணைந்தவை. நிகழ்காலத்தில் சோர்ந்துகிடக்கும் கேரளத்தின் மேல் சூரியன் எழுகிறது என்றும், அதைநோக்கி பாடுவதாகவும் எழுதப்பட்டது
சரஸ்வதி யாமம் கழிஞ்ஞு
உஷஸின் சஹஸ்ர தளங்கள் விரிஞ்ஞு
வெண்கொற்ற குட சூடும் மலயுடே மடியில்
வெளிச்சம் சிறகடிச்சு உணர்ந்நு
அக்னி கிரீடம் சூடி அஸ்வாரூடனாயி
காலம் அங்கம் ஜயிச்சு வந்த தறவாட்டில்
இதுவழி தேரில் வரும் உஷஸே
இவிடுத்தே அஸ்திமாடம் ஸ்பந்திக்குமோ?
முத்து உடவாள் முனையாலே
நெற்றியில் குங்குமம் சார்த்தி
கைரளி கச்ச முறுக்கி நிந்ந களரிகளில்
நிறகதிர் வாரித்தூகும் உஷஸே
இனியும் ஒரு அங்கத்தினு பால்யமுண்டோ?
சரஸ்வதி யாமம் கடந்தது
காலையின் ஆயிரம் இதழ்கள் விரிந்தன.
வெண்கொற்றக்குடை சூடும்
மலையின் முடியில்
வெளிச்சம் சிறகடித்து எழுந்தது.
அக்கினி கிரீடம் சூடி, அஸ்வத்தின் மேல் ஏறி
காலம் களம் வென்றுவந்த தாய்நிலத்தில்
இவ்வழியாக தேரில் வரும்
உன்னைக்கண்டு
இங்குள்ள கல்லறை அதிர்வுகொள்ளுமோ?
முத்துபதித்த உடைவாள் முனையால்
நெற்றியில் குங்குமம் தீட்டி
கேரளம் கச்சை இறுக்கி நின்ற போர்க்களங்களில்
நிறைகதிர் அள்ளிச் சொரியும் புலரியே
இன்னும் ஒரு ஒற்றைப்போருக்கு
இளமையுள்ளதா?
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
