பீத்தோவன், மேதையின் தனிமை
பீதோவன் வியன்னாவில் வாழ்ந்த இல்லத்திற்குச் சென்றிருந்தோம். அங்கே அவர் எழுதிய ஒரு கடிதம் இருந்தது. தன்னை மானுடவிரோதி என்றும் எரிச்சலூட்டுபவர் என்றும் சொல்லவேண்டாம் என்னும் மன்றாட்டு கொண்ட அக்கடிதம் ஒரு மானுட ஆவணம். அதில் அவருடைய கலைமேல் அன்றைய சமூகத்தின் பொதுப்புத்தி வைத்த விமர்சனங்களை எண்ணி வருந்துகிறார். தன் கலையை முழுமையாக வெளிப்படுத்தாமல் சாகக்கூடாது என்பதனாலேயே உயிர்வாழ்வதாகச் சொல்கிறார்.
பீதோவன் அல்லத்து மேலையிசை குறித்து என் அறிவு எல்லைக்குட்பட்டது. நான் பள்ளியில் படிக்கும்போதுதான் அவர் இசைகேட்கமுடியாமலாகி, தன் கைத்தடியை பல்லால் கடித்து இசையைக் கேட்டார் என்னும் செய்தியை ஆசிரியர் சொன்னபோது அவர் பெயரை கேட்டறிந்தேன். அதன்பின் அவரைப் பற்றி வாசித்து அறிந்திருக்கிறேனே ஒழிய இசையை நுணுக்கமாகக் கேட்டதில்லை. ஓர் அகவைக்கு மேல் மேலையிசை போன்ற ஒன்றுக்குள் நுழைவது கடினம், அதற்கான பொறுமையும் உள்ளமும் அமைவதில்லை. உரிய காலத்தில் உள்ளே நுழைபவர்கள் நல்லூழ் கொண்டவர்கள்.
சைதன்யா மேலையிசை, மேலை இலக்கியம், மேலைத் தத்துவம் மூன்றிலும் வாசிப்பு கொண்டவள் என்னும் முறையில் அவளுடைய கருத்தைக் கேட்டேன். இந்த தலைமுறையினர் பொதுவாக பாப் இசை மட்டும்தான் கேட்கிறார்கள் என்ற எண்ணம் பரவலாக உண்டு. அதை என்னிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். என் கண்ணுக்குப் படுவதும் பாப் இசைதான். ஐரோப்பியச் செவ்வியல் இசையை, இசைக்கலைஞர் அல்லாத ஒருவர், வெறும் ரசிகரான ஒருவர் எப்படி அணுகுகிறார் என்று அறிவதே நோக்கம்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
