விஷ்ணுபுரம் அமெரிக்கா சந்திப்புகள்

 விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமெரிக்கா இணையப்பக்கம்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். நண்பர் பிரதீப்பின் டாலஸ் நடக்கும் இலக்கிய கூடுகைகள் பற்றிய பதிவை வாசித்தேன்.

டாலஸில் ஒரு சந்திப்பு

Odyssy வேன் முழுக்க ஆட்களை நிறைத்து கிரி ஓட்ட ஜூலை 12-ல் நடந்த டாலஸ் கூடுகைக்கு ஆஸ்டினிலிருந்து சென்றிருந்தோம். அந்தப் பயணம் முழுதும் வேனில் அமர்ந்து உரையாடியதில் இலக்கியம்தான் பிரதானம். விவாதிக்கவிருக்கிற மத்தகம் நாவலை குறித்து, நண்பர்கள், மறந்தும் தங்கள் பேச்சில் கொண்டு வராமல் பார்த்துக்கொண்டார்கள். கூடுகையில் அவர்கள் பேசுவதை கேட்டபொழுதுதான தெரிந்தது, எவ்வளவு கொதிப்பையும் அறச்சீற்றத்தையும் அடக்கிக்கொண்டிருந்தார்கள் என்று. கேசவனும், பரமனும் அவர்கள் அகத்தில் நுழைந்து அத்தனை கேள்விகளை கேட்டிருக்கிறார்கள்.

டாலஸ் மூர்த்தியிடம், “பரவாயில்லை, மாதத்திற்கு இரு முறை கடந்த ஏழு / எட்டு மாதமாக தவறாமல் நீங்களும் நண்பர்களும் கூடுகைகளை நடத்தி வருகிறீர்கள். நல்ல அர்ப்பணிப்பு !” என்றேன். அதற்கு அவர், “எங்கள் ஊரில், ஒரு குன்று உண்டு. அனுமன், இலக்குவனை உயிர்ப்பிக்க சஞ்சீவ மலையை தூக்கிச் சென்றபொழுது உதிர்ந்த கற்களில் முளைத்த குன்று என்று ஒரு ஐதீகம். இங்கு நடப்பது, தாங்கள் ஆரம்பித்து வைத்ததில் அங்கங்கே உதிர்ந்த சஞ்சீவ மலைக் குன்றுகளில் ஒன்று ” என்று தன்னடக்கமாக பதில் சொன்னார். 

நீங்கள், 2023 எமெர்சன் முகாமில், தங்கள் உரையில்,  நேரில் நடத்தும் முகாம்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினீர்கள். அதற்குப் பிறகு  நண்பர்கள் தங்கள் வட்டாரப் பகுதிகளில் நேரில் சந்தித்து உரையாட ஆரம்பித்தார்கள். சங்கர் பிரதாப், மதன், சீனி சங்கரன், சுஜாதா நண்பர்களுடன் இணைந்து சியாட்டலில் கூடுகை நடத்துகிறார்கள். விசு, சாரதா, பிரஸாத், சாரதி , விஜய் ரெங்கராஜன் என்று ஒரு பெரும் பட்டாளம்  வளைகுடாப் பகுதியில் நூலகம் ஒன்றில் மாதத்தின் முதல் சனிக்கிழமை கூடி தமிழ் இலக்கியத்தை விவாதிக்கிறார்கள். War and Peace நாவலை அத்தியாயம் அத்தியாயங்களாக பிரித்து உரையாற்றுகிறார்கள்.

நிகழ்வு முடிந்து பிரஸாத் கூடுகையில் விவாதித்த கதைகளை பற்றி அமெரிக்க நண்பர்கள் அனைவரும் இருக்கும் whatsapp குழுவிற்கு ஒரு நீண்ட பதிவை அனுப்புவார்.  அதை மாற்றங்கள் எதுவும் செய்யாமல் அப்படியே பதிவாக தளத்தில் பிரசுரிக்கலாம் என்ற தரத்தில் இருக்கும்.  குழுவில் தமிழ் இலக்கியத்தை வாசிக்கும் ஆரம்ப நிலையில் இருக்கும் வாசகர்களும் உண்டு.  இருபது முப்பது வருடங்கள் வாசித்து கேட்ட கேள்விகளுக்கு  நினைவிலிருந்தே பதில் கூறும் நண்பர்களும் உண்டு. ஆதலால், எல்லா நகரங்களிலும் நடக்கும் கூடுகையின் விவாதங்கள் அனைத்து நிலை வாசகர்களுக்கும் இலக்கிய அறிவை கையளிக்கும் வண்ணம் உள்ளன.

எமெர்சன் முகாமில் நேரில் சந்திக்கும் வரை, அமெரிக்க நண்பர்கள் அனைவரும் பேச / உரையாட ஒரு கூடுகை தேவையாகத்தான் உள்ளது. க.நா.சு உரையாடல் அரங்கை நான்கு மாதத்திற்கு ஒரு முறையாவது  நடத்திவிடுகிறோம். மலேசியா நவீனுடன் வருகின்ற ஆகஸ்ட் 23, இணையவழி நிகழ்வு உள்ளது.   க. நா.சு இணையவழி அரங்கு கூடாத மாதங்களில், டி.எஸ். எலியட் கூடுகை ஒன்றை zoom-ல் நடத்தி வருகிறோம். இந்தக் கூடுகையில் இலக்கியமல்லாமல், ஓவியம், சினிமா என மற்ற கலைகளைப் பற்றியும் பேசுகிறோம். ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு நண்பர்களுக்கு ஒருங்கமைப்பாளர் பணியை வழங்குகிறோம். நண்பர்களின் குழந்தைகள் வந்து பாடி  நிகழ்வை ஆரம்பித்து வைக்கிறார்கள்.  பிராந்தியக் குடும்பங்கள், தலைமைக் குடும்பம் அனைத்தும் ஒன்றென இயங்குவது தொடர்கிறது.

எமெர்சன் முகாம், பிராந்திய கூடுகைகள், மாதாந்திர இணையவழிக் கூடுகைகள் இப்படி வருடம் முழுக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பை அறிய வாய்ப்புகள் இருப்பதால்,   புதிதுபுதிதாக நண்பர்கள் அமைப்பில் இணைந்துகொண்டே உள்ளார்கள். இருந்தும் கூட, எங்காவது ஒரு நண்பர் தான் உண்டு தன் வாசிப்பு உண்டு என்று இருப்பார். அவரையும் வாருங்கள் வந்து இந்த கூட்டு வாசிப்பில் இணைந்துகொள்ளுங்கள் என்று அன்புடன் அழைக்கிறோம். 

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

austinsoundar@vishnupuramusa.org / contact@vishnupuramusa.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 02, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.