ஓஷோ:மரபு மீறலும் 5

ஓஷோவின் பரிணாமம்

கேரளத்தில் நம்பூதிரி நகைச்சுவை என்ற ஒரு வகை உண்டு. அசட்டுத்தனமும் புத்திசாலித்தனமும் முயங்கக்கூடிய இடத்தில் இருக்கும் நகைச்சுவை. அதில் ஒரு பிரபலமான நகைச்சுவை இது. தஞ்சாவூரை சேர்ந்த பண்டிதர் ஒருவர் சம்ஸ்கிருத கவிதை ஒன்றை எழுதி அதை எடுத்துக்கொண்டு கேரளா முழுக்க சுற்றிவந்தார். கடைசியாக தோலன் என்ற பெயர்கொண்ட ஒரு நம்பூதிரியை சந்திக்கிறார். தோலன் நம்பூதிரி வேடிக்கையானவர், அவருக்கு எழுதப்படிக்க தெரியாது. பண்டிதர் நம்பூதிரியிடம் சொல்கிறார், ”இந்த கவிதையை மேலமங்கலம் நம்பூதிரியிடம் காண்பித்தேன். அவருக்கு அர்த்தம் தெரியவில்லை. கீழமங்கலம் நம்பூதிரிக்கும் தெரியவில்லை. பூமுள்ளிக்கும் கீழில்லத்துக்கும் சென்றேன். அவர்களுக்கும் தெரியவில்லை. பதினெட்டு நம்பூதிரி மனைகளுக்கும் சென்றுவிட்டேன். யாருக்கும் அர்த்தம் தெரியவில்லை”.

உடனே தோலன் அவரிடம் மிக ஆர்வமாக ‘இங்க கொண்டா’ என்று அதை வாங்கி பார்த்துவிட்டு அப்படியே அவரிடம் திருப்பிக்கொடுத்து ‘என் பெயரையும் பட்டியலில் சேர்த்துக்கொள்’ என்றார்.

தெரியாத ஒன்றை எல்லாவற்றிலும் சேர்த்துக்கொள்ளலாம். க.நா.சு. ‘இல்லாதது’ என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.

இல்லாததைப் போல

அழகானதொன்றும் இல்லை.

இல்லாததை கண்

உள்ளவர்களும் காண முடியாது

விளக்கேற்றியும் காண முடியாது

இல்லாததால் உபயோகம் ஒன்றுமில்லை

அதைப்போல உபயோகமானதும் ஒன்றுமில்லை

 

இல்லாததை அளக்க முடியாது

அழிக்க முடியாது

என்னதான் இல்லை

என்று சொல்ல முடியாது

உலகம் என்றுமே இல்லாததாக

இருந்திருந்தால்…

எப்படியெல்லாம்

நாம் உருவாகியிருக்கலாம் !

ஓஷோவை பற்றி பேசுவதில் உள்ள சௌகர்யம் என்னவென்றால், ஓஷோ போன்ற ஒருவரை நீங்கள் எந்தவொரு சிந்தனை மரபிலும் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் அவர் ஒரு மறுப்புவாதி (Nihilist), ஐயுறுவாதி (Skeptic). மறுப்புவாதிக்கு அல்லது ஐயுறுவாதிக்கு எல்லா சிந்தனை பள்ளிகளிலும் ஒரு நாற்காலி இருக்கும். குமரி மாவட்ட கோவில்களில் எந்த உள்ளூர் சாமிகள் எப்படி இருந்தாலும் அரவணைப்போத்தி என்று ஒரு சாமி இருக்கும். எல்லோருக்கும் படையல் முடித்த பிறகு சட்டுவத்தில் சிறிது சர்க்கரை பொங்கல் மீதமிருக்கும். அதை ஒரு பூவரசு இலையில் வழித்து அரவணைப்போத்திக்கு வைப்பார்கள். எப்படியோ அதற்கும் ஒரு படையல் கிடைக்கும்.

சிந்தனையை பற்றி பேசவரும்போது ஓஷோவை எங்கு வைப்பது என்பது எப்போதும் ஒரு பெரிய சிக்கல். அவரை எதிலும் சேர்க்கலாம். ஆனால் எதிலும் சேரவும் மாட்டார். புத்தகக் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஓஷோவின் நூல்களை பார்த்தாலே கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்களுக்குக்கூட தலைசுற்றல் வரும். ஒருபுறம் தத்துவ நூல்கள் இருக்கும், இலக்கிய நூல்கள் இருக்கும். ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத விஷயங்களை விளக்கியிருப்பார். ஒருபுறம் ஜென் பௌத்தம் பற்றியும், மறுபுறம் தந்த்ரா பற்றியும் பேசுவார். இரண்டும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை. ஒருபுறம் கீதை இருக்கும், அந்தப்பக்கம் ரூமி இருப்பார். இவ்வளவையும் சொல்லக்கூடிய இவர் யார் என்று பார்த்தால், நேர் எதிராக நின்று சுத்தமாக தத்துவமும் கொள்கையும் எதற்குமே அர்த்தம் கிடையாது என்று அவர் பேசும் வேறொரு உரையும் இருக்கும். ஓஷோவை எங்கே வட்டமிட்டு சுழிப்பது என்பது ஒரு சிக்கலான விஷயம். நம்முடைய சமகாலத்தில் இவ்வளவு பெரிய புதிர் நம்முடன் வாழ்ந்து கடந்து சென்றது என்பது விந்தையான ஒன்றுதான்.

ஆனால் இந்தியர்களாகிய நமக்கு புதிர்களை சந்திப்பது என்பது புதிது அல்ல. நமது ஞானிகள், ஆன்மீகத் தலைவர்கள் பெரும்பாலானோர் புதிரானவர்களே. காந்தியே ஒரு மாபெரும் புதிர்தான்.இந்தவகையான புதிர்களை எதிர்கொள்வதற்கென்றே நாம் பல ஆண்டுகளாக நல்ல வழியொன்றை வைத்திருக்கிறோம். இதை சொல்லும்போது ஒரு நம்பூதிரி நகைச்சுவை நினைவுக்கு வருகிறது. கொல்லம் அரசருக்கு கேசவன் என்ற பெரிய யானை இருந்தது. கொடூரமான யானை, யார் அருகில் சென்றாலும் கொன்றுவிடும். ஆனால் தோலன் நம்பூதிரி கேசவன் தன்னை எதுவும் செய்யமாட்டான் என்று சொல்லிக்கொண்டிருந்தார். இவர் ஏன் இப்படி சொல்கிறார், ஒருவேளை யானை வித்தை எதுவும் தெரிந்திருக்குமோ என்று அவரை வரவழைத்து, ‘எப்படி கேசவன் உங்களை மட்டும் எதுவும் செய்யமாட்டான்’ என்று கேட்கின்றனர். அதற்கு தோலன் ‘அது எப்படீன்னா, நான் அவன் பக்கத்தில் போவதும் கிடையாது, அவனை என் பக்கத்தில் வரவிடுவதும் கிடையாது’ என்றார். கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக நாம் இந்த கொள்கையின் அடிப்படையில்தான் ஞானிகளை கையாண்டு வருகிறோம். ஓஷோ இந்தப்பக்கம் வருவதும் கிடையாது, நாம் அந்தப்பக்கம் செல்வதும் கிடையாது.

இங்கே ஓஷோ பற்றிப் பேசுபவர்கள், ஓஷோவை அறிந்துவிட்டதாகச் சொல்லிக்கொள்பவர்கள் பெரும்பாலும் தோலனின் நிலைபாடு கொண்டவர்களே. தங்களுக்கு உகந்த ஓர் ஓஷோவை அவர்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்த ஓஷோ ஏற்கனவே நம் மரபில் இருந்துகொண்டிருக்கும் ஒரு வழக்கமான உருவத்தின் நகல்தான். “ஓஷோவா, அவர் ஒரு ஞானி அல்லவா?” என்று எளிதாகச் சொல்லிவிடுகிறார்கள். “ஞானிகளை நம்மால் புரிந்துகொள்ள முடியாது” என்கிறார்கள். எவராவது புரிந்துகொள்ள முயன்றால் “அதெப்படி ஞானியை நீ விமர்சிக்கலாம், விமர்சிக்க நீ யார்?” என்று சீற்றம் அடைகிறார்கள். இவர்களுக்கும் ஓஷோவுக்கும் எந்த உரையாடலுமில்லை. உரையாடாதவனுக்கு ஓஷோ எந்த பொருளையும் அளிப்பதுமில்லை.

‘நீங்கள் ரூமியை பற்றி பேசுகிறீர்கள், பின்பு கீதை பற்றியும் பேசுகிறீர்கள்’ என்று அவருடைய ஆளுமையிலுள்ள அந்தப் புதிரை பற்றி நாம் அவரிடம் கேட்டிருந்தால் ஒரு உரையாடல் தொடங்கியிருக்கும். ஆனால் நாமோ ‘அவருக்கென்னங்க, அவரு மகான். அப்படித்தான் சொல்வார். நாம நம்ம சோலிய பாக்கணும்க’ என்பதாக அப்படியே கடந்து வந்துவிடுகிறோம். இங்கே ஓஷோ பற்றி எப்படிப் பேசியிருக்கிறார்கள், என்னெவெல்லாம் பேசியிருக்கிறார்கள் என நமக்குத் தெரியும். ஆனால் இந்த புதிரை பற்றி கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளில் தமிழில் யாராவது எழுதியிருக்கிறார்களா என்று சிந்தித்துப்பாருங்கள். இந்த இடத்தில் இருந்துதான் ஓஷோவை பற்றி பேசத்தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.

நான் எப்படி ஓஷோவை அறிமுகம் செய்துகொண்டேன் என்பதில் இருந்து தொடங்கவேண்டும். 1974இல் The Illustrated Weekly of India என்ற வாரஇதழில் நிறைய படங்களுடன் ஒரு கட்டுரை வெளியானது. அந்த கட்டுரை வெளியாகி கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்கு பிறகு சில ஆசிரியர்கள் அந்த பிரதியை கையில் வைத்துக்கொண்டு ஆர்வமுடன் பேசிக்கொண்டிருப்பதை கவனித்தேன். அப்போது எனக்கு பன்னிரண்டு வயது இருக்கும். அவர்கள் என்னை வெளியே அனுப்பிவிட்டனர். அதன்பின் வேறு எதையோ எடுக்க உள்ளே சென்றபோது அந்த பிரதியையும் எடுத்து வந்து, வீட்டிற்கு சென்று பரபரப்புடன் அதை பார்த்தேன்.

ஓஷோவின் புனே ஆசிரமத்தில் டைனமிக் தியானப் பயிற்சிகள் நடப்பதைப் புகைப்படம் எடுத்திருக்கின்றனர். அது ஓஷோ ஆசிரமத்தில் அவர்களே எடுத்துக்கொண்டது. ஆனால் அது எப்படியோ கசிந்துவிட்டதாக சொல்கிறார்கள். ஓஷோவே அதை வெளியே கசியவிட்டார் என்ற வதந்தியும் உண்டு. எப்படியோ அது அந்த வார இதழில் பிரசுரமாகி, அதனால் மொத்த இந்தியாவும் அதிர்ச்சியடைந்தது. உடனே இந்தியாவின் அத்தனை வட்டாரமொழிப் பத்திரிக்கைகளும் இரண்டாம்கட்ட அதிர்ச்சி அடைந்தன. குமுதம், விகடன், தந்தி போன்ற இதழ்கள் அந்த செய்தியை வெளியிட்டன. தந்தி ஒரு அற்புதமான வார்த்தையை கண்டுபிடித்தது. அது ‘செக்ஸ் சாமியார் ரஜ்னீஷ்’ என்பது. அப்போது அவர் பகவான் ரஜ்னீஷ் என்று பரவலாக அறியப்பட்டிருந்தார்.

இந்த Illustrated Weekly இதழை ஒரு குறியீட்டு அடையாளமாகவே சொல்ல விரும்புகிறேன். ஓஷோவை பற்றிப் பேசும் எல்லா விஷயங்களிலும் நீங்கள் இந்த வாரஇதழை ஒரு தரப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த இதழின் ஆசிரியர் குஷ்வந்த் சிங் (Khushwant Singh) அந்த வழக்கில் ஒரு கட்சிக்காரர். அவர் தன்னை ஒரு அதிநவீன மனிதராகக் காட்டிக்கொண்டவர். அதாவது பாலியல் சுதந்திரம் பற்றி பேசுவார், பாலியல் நகைச்சுவைகளை எழுதுவார், கட்டற்ற வாழ்க்கை பற்றி பேசுவார், நவநாகரீக உலகங்களை பற்றி சொல்வார். அந்த காலகட்டத்தின் எல்லா விஷயங்களுக்கும் எதிரான ஒருவர். ஆனால் பொற்கோவிலில் இந்திய ராணுவம் நுழைந்தபோது தனது பத்மபூஷண் விருதை சீற்றத்துடன் திருப்பிக்கொடுக்கும் அளவுக்கு தீவிரமான சீக்கியர். அதுதான் அவருடைய உண்மையான முகம். உயர்குடியில் பிறந்தவர், எதையும் அலட்சியமாக எடுத்துக்கொள்ளும் மனநிலை கொண்டவர், ஆனால் அடிப்படையில் கேசதாரி சீக்கியர்.

இந்தியாவில் இது மிகவும் சௌகரியமான ஒரு விஷயம். வீட்டில் நீங்கள் பெரிய நாமத்தை போட்டுக்கொண்டு இருக்கலாம். ஆனால் வெளியே அறிவியல் புனைவெழுத்தாளராக தோற்றமளிக்கலாம். அதிலிருக்கும் முரண்பாட்டை ஒப்புக்கொள்வதற்கு உங்களுக்கு எழுபது வயது தாண்டவேண்டும். அதன்பின் நீங்கள் நாமத்தை போட்டுக்கொண்டு வெளியே வரலாம். இத்தகைய முகம்தான் இந்தியாவின் பிரபல ஊடகங்களின் முகம். தமிழில் குமுதம் அப்படிப்பட்டது. ஆமையை தண்ணீரில் போட்டு தண்ணீரை சூடுபடுத்திக்கொண்டே இருந்தால் அது சூடாவதே தெரியாமல் கொதிக்கும்வரை நீந்திக்கொண்டிருக்கும் என்பார்கள். இந்த இதழ்கள் மெல்ல மெல்ல இந்தியச் சமூகத்தை அனைத்துவகை ஒழுக்கமீறல்களுக்கும் பழக்கப்படுத்தின. ஆனால் எந்த வகையான அரசியல் மீறலுக்கும், தத்துவ மீறலுக்கும் பழக்கப்படுத்தவுமில்லை. ஆகவே மிகக் கட்டுப்பெட்டியான அரசியலும், சமூகவாழ்க்கையும் கொண்ட ஒரு சமூகம் கூடவே ரகசியமான பாலியல்மீறல் சார்ந்த கனவுகளும் கொண்டதாக உருவாகியது. அதை உருவாக்கியவை இந்த இதழ்கள். இவைதான் மீறலுக்காக ஓஷோவைக் குற்றம் சாட்டின, செக்ஸ் சாமியார் என்றன.

ஒட்டுமொத்தமாக இந்த தமிழ் இதழ்களின் பங்களிப்பு என்னவென்றால், சமுதாயத்தின் சபைநாகரீக விளிம்புகளை  சமுதாயத்துக்கே தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிவிடுவதுதான். அதாவது ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு டிகிரியை கூட்டிவைப்பது. அதைத்தான் குமுதம் செய்தது.உதாரணமாக, எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ஒரு கதையில் ஒரு பையன் அண்டா திருடுவான். ஒரு வீட்டின் பின்னால் பெரிய அண்டா ஒன்று இருக்கும். அவனால் அதை தூக்கமுடியாது. பள்ளிக்கூடம் செல்லும்போது ஒவ்வொரு நாளுக்கும் ஒரு இன்ச் வீதம் அதை நகர்த்தி வைப்பான். அண்டா ஒரு இன்ச் நகர்ந்தால் அதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அவ்வாறு ஆறுமாதகாலம் அந்த அண்டாவை வசதியான இடத்திற்கு நகர்த்தி அது ஒரு சரிவின் விளிம்பை அடையச் செய்வான். அதன்பின் அதை உருட்டி எடுத்துச் சென்றுவிடுவான். அப்படியான அண்டாஉருட்டிகளான பத்திரிக்கைகள்தான் Illustrated Weekly, குமுதம் போன்றவை.அவை உருவாக்கிய ஓஷோவின் உருவம்தான் நம்மில் பெரும்பாலானவர்களின் உள்ளத்தில் உள்ளது.

எல்லா செய்திகளிலும் காமம் உண்டு என்பதை கண்டுபிடித்ததுதான் குஷ்வந்த் சிங்கின் சாதனை. குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி குஷ்வந்த் சிங்கின் தமிழ் நகல் அன்றி வேறல்ல.ஜெயகாந்தனிடம் ஒருமுறை பேசும்போது ஒரு கதை சொன்னார். ஒரு மகப்பேறு மருத்துவர் சென்னையில் இருந்திருக்கிறார். அவரிடம் ஒருவர் தனது மனைவியை அழைத்து செல்கிறார். அங்குதான் அந்த பெண்ணின் முதல் பிரசவத்தின்போது அவளைக் காட்டியதாக அவர் மருத்துவரிடம் சொல்கிறார். மருத்துவர் அந்த பெண்ணை பார்த்துவிட்டு ‘அப்படியா, எனக்கு முகம் அடையாளம் தெரியவில்லை’ என்றார். ‘நீங்கள்தான் அவளுக்கு அறுவை சிகிச்சை செய்தீர்கள்’ என்கிறார் கணவர். ‘அப்படியா, தெரியாதே’ என்கிறார் மருத்துவர். அதன் பின்பு அப்பெண்ணை பரிசோதிப்பதற்காக ஆடைகளை களைத்துவிட்டு பார்த்தபோது ‘ஓ, நீயா’ என்றாராம். இவர்களுக்கு தெரிந்தது ஒன்றுதான். அதைத்தான் எல்லா இடங்களிலும் பார்ப்பார்கள்.

ஆதிவாசிகளின் துயரம் பற்றி Illustrated Weekly ஒரு கட்டுரை வெளியிடும். ஆனால் அதில் திறந்த மார்பகங்கள்தான் முக்கியமாக இருக்கும். செஸ் விளையாட்டை பற்றிய ஒரு கட்டுரையில்கூட நிர்வாண பெண்களின் படங்கள் இருக்கும். ஏனெனில் எகிப்தில் ஏதோவொரு அரசன் ஏதோவொரு காலத்தில் நிர்வாண பெண்களை வைத்து செஸ் விளையாடியிருக்கிறார். அதை கண்டுபிடித்து இவர் வெளியிடுவார். நடிகை சாமி கும்பிட்டார் என்பதை தலைப்பு செய்தியாக போடக்கூடிய தந்திதான் ஓஷோவை செக்ஸ் சாமியார் என்று முத்திரையிட்டாது. நடிகை கர்ப்பம் என்று நான்கு ஆச்சர்யக்குறிகள் போடும் செய்தித்தாளிலும், அந்தக் கர்ப்பத்திற்கு உண்மையான காரணம் யார் என கிசுகிசு போடும் இதழிலும் தான் ரஜ்னீஷ் செக்ஸ் சாமியாராக குறிப்பிடப்பட்டார்.

அன்றைய செய்தியால் இந்தியா முழுக்க நடுத்தர வர்க்கத்திற்கு பெரிய அதிர்ச்சியும் தார்மீக கோபமும் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட இருபதாண்டுகாலம் இந்தியாவில் அது நீடித்தது. ஒருவகையில் ஓஷோ இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு காரணமாக அமைந்தது Illustrated Weekly இல் இருந்து தொடங்கி வளர்ந்து வந்த கசப்புதான். அந்த ஒவ்வாமை இலக்கியவாதிகளிடமும் இருந்தது. நான் எண்பதுகளில் தமிழ் இலக்கியவாதிகளை சந்திக்கும்போது அவர்கள் அனைவருமே ஜே.கிருஷ்ணமூர்த்தியை பின்பற்றுபவர்களாக இருந்தனர். பிரமிள் ஜே.கே.வை கிருஷ்ணா என்றுதான் சொல்வார். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஜெயகாந்தன் உள்ளிட்ட பலர் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் மேல் பற்றுகொண்டவர்களாக இருந்தனர். அசோகமித்திரன் ஜே.கே. கதாபாத்திரமாக வரும் கதைகளை எழுதியிருக்கிறார். ஆனால் ஒருவர்கூட ஓஷோவின் வாசகரோ ஆதரவாளரோ கிடையாது. சு.ரா. ஓஷோவின் ஒரேயொரு புத்தகத்தை படித்திருப்பதாகவும், ஓர் உரையை நேரில் கேட்டிருப்பதாகவும் சொன்னார். “ஓஷோ பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று அவரிடம் கேட்டேன். சுருக்கமாக ‘பெரிய வாயாடி’ என்றார். ஏனெனில் இவர்களுடைய ஏதோவொரு வகையான ஒழுக்கத்தை அல்லது தார்மீகத்தை  ஓஷோவின் கருத்து சீண்டுகிறது. அவரை ஏற்பது அவ்வளவு கௌரவமாக இருக்காதோ என்பதாக எண்ணுகிறார்கள். உண்மையை சொல்லவேண்டுமென்றால் எனக்கும் அவ்வாறுதான் இருந்தது. நானும் அன்றைக்கு ஒரு ஒழுக்கமான நல்ல பையன்.

நான் அப்போது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜே.ஹேமச்சந்திரன் அவர்களிடம் இதுபற்றி கேட்டேன். அவர் எனக்கு தாய்மாமன் முறை. அவர் என்னை உட்காரவைத்து சொன்னார் ‘பூர்ஷ்வா கலாச்சாரம் தன்னைத்தானே இப்படி சீரழித்துக்கொள்ளும். இது ஒரு நோய்க்கூறு. குஷ்டநோயின் முதல் கொப்புளம். இவ்வாறுதான் முதலாளித்துவம் அழியும். ஏனெனில் பூர்ஷ்வா கலாச்சாரத்திற்கு உயர்ந்த வகையான இன்பங்கள் கிடையாது. கீழ்த்தரமான இன்பங்களே உள்ளன. எனவே அது சூதாடும், விபச்சாரம் செய்யும், இம்மாதிரி காமச் சோதனைகளை செய்துபார்க்கும்’. எனக்கும் அப்போது அது சரியென்றே தோன்றியது.

நீண்டநாட்கள் கழித்து, தொண்ணூறுகளுக்கு பிறகு அன்று இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி  வெளியிட்ட அந்த புகைப்படங்களைப் பார்க்கும்போது அவை மிகவும் சர்வசாதாரணமாக தெரிந்தன. அதில் ஆறேழு பெண்கள் திறந்த மார்பகங்களோடு இருந்தனர். அமெரிக்காவில் மியாமி கடற்கரைக்கு சென்றால் ஐம்பதாயிரம் பெண்கள் திறந்த மார்பகங்களோடு இருப்பார்கள். அந்தச் சோதனையே கூட காமச்சோதனை அல்ல, காமத்தை அவதானிக்கும் பயிற்சிதான். காமத்தைப் பற்றி காமக்கிளர்ச்சி இல்லாமல் தெரிந்துகொள்வதற்கான ஒரு வழிமுறைதான்.

அதன்பின், சொல்லப்பட்டவற்றில் இருந்து மாறாக நான் ஒரு உணர்வை அடைந்தேன். 1982இல் ஒருமுறை திருவனந்தபுரத்தில் இலக்கிய அழகியல் குறித்து பேசும் மார்க்சியச் சிந்தனையாளராகிய எம்.என்.விஜயன் பேசிக்கொண்டிருந்தார். ஆசார்ய ரஜ்னீஷ் இவ்வாறு சொல்கிறார் என்று சொல்லி ஒரு விஷயத்தை சொன்னார். எரிக் ஃப்ராம் (Erich Fromm) எழுதிய The Art of Loving என்ற நூல் அப்போது வெளிவந்திருந்தது. அந்த நூலில் எரிக் ஃப்ராம் எதை சொல்கிறாரோ அதை பகவான் ரஜ்னீஷ் முப்பதாண்டுகளுக்கு முன்பே சொல்லியிருப்பதாக விஜயன் பேசினார். ஒரு படுக்கையில் நான்குபேர் என்ற தலைப்பில் கேள்விபதிலாக அமைந்திருந்த ஒரு கட்டுரை அது. அதில் ஓஷோ ஒரு பெண்ணிடம் சொல்கிறார், ‘நீயும் உனது கணவனும் படுக்கையில் இருக்கும்போது உண்மையில் அதில் நான்குபேர் இருக்கிறீர்கள். உனது கணவனை பற்றிய உனது பிம்பம், உன்னைப்பற்றிய உன் கணவனின் பிம்பம், அத்துடன் உண்மையான நீங்கள் இரண்டுபேர் என மொத்தம் நான்குபேர் இருக்கிறீர்கள். இந்நான்கு புள்ளிகளும் உருவாக்கும் முடிவற்ற சாத்தியக்கூறுகள் வழியாகத்தான் உங்கள் உறவுகள் ஒவ்வொருநாளும் நிகழ்கிறது’.

நாம் எப்படி மானுட உறவுகளை உருவாக்கிக் கொள்கிறோம். ஒரு மனிதனைப்பற்றி நாம் கொண்டிருக்கும் பிம்பத்துடன்தான் உண்மையில் உறவு வைத்துக்கொள்கிறோம். அந்த மனிதனை நாம் அறிவதில்லை. அவரைப்பற்றிய பிம்பத்தை வைத்து அம்மனிதனை நாம் வசதியாக மறைத்துக்கொள்கிறோம். அதுவே அவர் என நம்புகிறோம். அந்த பிம்பத்தோடு உறவுகொள்வதுதான் சாத்தியம், அதற்கப்பால் அம்மனிதரைப் பற்றிய உண்மையை நம்மால் அறியமுடியாது என்கிறார் எரிக். அம்மனிதர் உங்களுக்கு காட்டும் முகம் ஒரு நடிப்பு என்றாலும்கூட, நடைமுறையில் அவ்வளவுதான் சாத்தியம் என்கிறார்.

அந்த உரையை கேட்டபோதுதான் ‘இவர் யாரைப்பற்றி சொல்கிறார், அந்த செக்ஸ் சாமியார் பற்றியா ? அவர் இவ்வளவு ஆழமாக பேசியிருக்கிறாரா’ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அப்போதுதான் முதன்முறையாக ஒரு சிந்தனையாளராக ஓஷோ எனக்கு அறிமுகமாகிறார். அப்போது வினோத் கன்னா என்ற இந்தி நடிகர் நடிப்பை விட்டுவிட்டு ஓஷோ கம்யூனுக்கு சென்று துறவியாகியிருந்தார். அதுபற்றிய செய்திகள் பரபரப்பாக வந்துகொண்டிருந்தன. இத்தகைய பரபரப்புச் செய்திகளை தாண்டி ஓஷோ இவ்வளவு நூல்களை எழுதியிருக்கிறார் என்றோ, இவ்வளவு உரைகளை ஆற்றியிருக்கிறார் என்றோ எந்த செய்தியும் வரவில்லை.

ஓஷோ இந்தியாவை விட்டுச்சென்று, அங்கே பிரச்சினைகளுக்கு ஆளாகி, மீண்டும் இங்குவந்து, தொண்ணூறுகளில் மறைந்த பிறகுதான் அவருடைய நூல்கள் தமிழில் பரவலாகக் கிடைக்க ஆரம்பித்தன. அவர் பேசிமுடித்து முப்பதாண்டுகளுக்கு பிறகுதான் தமிழில் ஒரு சிந்தனையாளராக அறிமுகமானார். நமக்கு ஓஷோ என்ற அந்த ஆளுமையை, சங்கடமான சிக்கலூட்டக்கூடிய அந்த மனிதனை, தவிர்த்துவிட்டு அந்த சிந்தனைகளை பார்ப்பதற்கு அவர் மறையவேண்டியிருந்தது. இது நவீன காலமாகிவிட்டது. இதுவே கொஞ்சம் பழைய காலமாக இருந்திருந்தால் நாம் வசதியாக ஒரு சிலுவையை உருவாக்கி அவரை அறைந்து, புனிதராக்கி அல்லது தெய்வமாக ஆக்கி கோவிலில் நிறுத்தியிருப்போம். தீர்க்கதரிசிகளோ சிந்தனையாளர்களோ உயிருடன் இருக்கையில் ஒருவித சங்கடத்தை அளிக்கிறார்கள். அவர்களை சிலையாக, ஒருவித அடையாளமாக மாற்றவேண்டியுள்ளது. அதன்பிறகு நாம் அவர்களை சௌகரியமாக அணுகுகிறோம். நான் தொண்ணூறுகளில் யோகி ராம்சுரத்குமாரை சந்தித்தபோது அவரிடம் சொன்னேன், ‘இங்கு சுற்றியிருக்கும் அனைவரும் நீங்கள் சிலையாக மாறுவதற்கு காத்திருக்கிறார்கள்’ என்று. கற்சிலை மிகவும் வசதியானது. பேசும் சிலை அவ்வளவு வசதியானது அல்ல.

அக்காலகட்டத்தில் ‘காமத்தில் இருந்து கடவுளுக்கு’ என்ற புத்தகம் தமிழில் வந்தது. அது ஓஷோவின் ஆரம்பகால நூல்களில் ஒன்று. அதன் தலைப்பு காரணமாகவே இங்கு அதிகமாக படிக்கப்பட்டது. தமிழில் ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால் பாலியல் தொடர்பான எதுவும் சிறப்பான விற்பனையை அடையும் என்பதே. தமிழ்ச்சமூகம் மிகப்பெரிய பாலியல் வறுமையும், அதன் விளைவான ரகசியத் தேடலும், அதை ஒளித்துக்கொள்வதற்கான ஒழுக்கப்பாவனைகளும் கொண்டது. மின்சாரம் வந்த புதிதில், பழைய மணிக்கொடி இதழில் ‘மின்சார நீர்’ விற்பனை பற்றிய செய்தி வந்திருந்ததை கண்டிருக்கிறேன். தண்ணீரில் மின்சாரம் பாய்ச்சி, அதை குப்பிகளில் அடைத்து ,ஆண்மை விருத்திக்கு என்று சொல்லி விற்றிருக்கிறார்கள். ஆண்மை விருத்திக்கு நல்லது என்று சொல்லி எதை வேண்டுமானாலும் விற்கக்கூடிய ஒரு பண்பாட்டு வெளி தமிழகம் என்று சொல்லலாம். அன்று குமுதம் உட்பட இதழ்கள் பலமணிநேரம் ஆண்மைச் சக்தியை தூக்கி நிறுத்தக்கூடிய யோகசக்தி உடையவர் என்று ரஜ்னீஷை பற்றி பேசிவந்தன. ‘இருக்கும்போல, நாமென்ன கண்டோம்’ என்று தமிழர்கள் அந்த புத்தகத்தை வாங்கிப் படித்தார்கள். அப்படித்தான் அந்த புத்தகம் தமிழகம் முழுக்க பரவலாக அறியப்பட்டது.

அதற்கும் முன்னால் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ‘அறிந்ததினின்றும் விடுதலை’ என்ற புத்தகம் தமிழில் வந்திருந்தது. நான் அன்று பலவிதமான தத்தளிப்புகளில் இருந்த காலம். அப்போது அந்த புத்தகத்தை படித்தேன். ஜே.கே. பற்றிய எனது விமர்சனம் ஒன்று இப்போதும் உண்டு. படிக்கப்படிக்க சரியானது என்று தோன்றி, படித்து முடித்தவுடன் ஒட்டுமொத்தமாகவே அந்தப்பார்வை தவறானதாக நமக்குள் மாறக்கூடிய விசித்திரமான ஒரு தன்மை அதில் உண்டு. எனக்கு அந்த புத்தகத்தை படித்து முடித்தவுடன் எதோ வலையில் விழுந்து மாட்டிக்கொண்டது போல இருந்தது. ஒன்றும் செய்யவேண்டியதில்லை, சும்மா ஒழுகிச் சென்றுகொண்டே இருந்தால்போதும், தியானமும் அறிதலும் ஆராய்தலும் பயனில்லை. எந்தச் செயலும் வெறும் எதிர்விளைவையே உருவாக்கும். எதை அறிந்தாலும் அறிவைத்திரட்டி மேற்கொண்டு அறியாமல் தடுத்துக்கொள்வதையே செய்கிறோம்… இப்படியே செல்லும் சிந்தனைகள். எப்போதுமே ஜே.கே.யின் நூல்களை படிக்கும்போது ஏற்படும் கேள்வி, ‘சரி,இப்போ என்னங்குற?’ என்பதுதான்.

அந்த வலையில் இருந்து என்னை வெளியே கொண்டுவந்தது ஓஷோவின் காமத்திலிருந்து கடவுளுக்கு தான். அதன்பிறகு வெறியுடன் சிலகாலம் ஓஷோவை படித்தேன். இந்த உரைக்காக மீண்டும் தனியே ஓஷோவை படிக்கக்கூடாது என்ற முடிவுடன் இருந்தேன். மீண்டும் அவரை படிக்க முடியுமா என்பதும் தெரியவில்லை. நான் எனக்கு ஓஷோ என்ன பொருள் அளித்தார் என்றே பேச விரும்புகிறேன். நுணுக்கமான ஓர் ஆய்வை நான் முன்வைக்கவில்லை. இந்நூற்றாண்டில், ஓஷோ உச்சத்தில் இருந்தபோது தன் அறிதல்பயணத்தைத் தொடங்கிய ஓர் இந்திய எழுத்தாளனுக்கு, அடுத்த தலைமுறையினனுக்கு, ஒட்டுமொத்தமாக அவர் என்னவாக பொருள்படுகிறார் என்பதுதான் இந்த உரையின் பேசுபொருள்.

பல இடர்களிலிருந்தும் தளைகளிலிருந்து ஓஷோ நம்மை எப்படியெல்லாம் விடுவிக்கிறார் என்பதை சொன்னேன். பசுமாட்டிற்கு மூக்கை சுற்றி கயிறுகட்டி மூக்கணாங்கயிறு போட்டிருப்பார்கள். எருமைக்கு மூக்கில் உள்ள மெல்லிய சவ்வில் ஒரு வளையத்தை போட்டு பிடித்திருப்ப்பார்கள். கரடிக்கு அதன் விரைப்பையில் துளையிட்டு அதில் கம்பியை கட்டி பிடித்திருப்ப்பார்கள். மரபு உங்களுக்கு எத்தகைய மூக்கணாங்கயிறு போட்டிருக்கிறது என்பது உங்களுக்குத்தான் தெரியும். எனக்கு போட்டிருந்தது கரடிக்கு போட்டிருந்தது போல. அதைவிட்டு வெளியே வருவதற்கு எனக்கு ஓஷோ பெரிய அளவில் உதவினார்.

இன்று இந்த மேடையில் ஓஷோவை பற்றி பேசும்போது மிகுந்த நன்றியுணர்வுடன், என்னை கட்டியிருந்த வாதைகளில் இருந்து விடுவித்த ஒரு பேயோட்டி என்ற அளவில்தான் பேசுகிறேன். இங்கு ஒரு பெரிய பாவனை இருந்துகொண்டிருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது எம்.ஜி.ஆரின் இதயக்கனி என்ற படம் வந்தது. அந்த படத்தில் ‘இன்பமே உந்தன் பெயர் …’ என்றொரு பாடல் உண்டு. அந்த பாடல் அளவுக்கு மோசமான ஒரு போர்னோகிராஃபி இன்றுகூட இணையத்தில் கிடைக்காது. ஆடைகள் அணிந்திருப்பது மட்டும்தான் வேறுபாடு. சிவாஜி கணேசனின் ஒரு படத்தில் வரும் ‘நாலுபக்கம் வேடர் உண்டு’ என்றொரு பாடலில் சிவாஜியும் சுஜாதாவும் ஒரு குழிக்குள் இருப்ப்பார்கள். அந்தக்  குழியின் அனைத்து சாத்தியங்களையும் அவர்கள் பரிசீலிப்ப்பார்கள். அந்த அளவுக்கு ஒரு மோசமான போர்னோகிராஃபி இன்றுவரை இல்லை. ஆனால் இதையெல்லாம் அம்மா, பிள்ளை என்று குடும்பமாக சென்று பார்த்துக்கொண்டிருந்தோம். அது நமக்கு தவறாக தெரியவில்லை. ஆனால் முத்தமிட்டுக்கொண்டால் ஆபாசம். ஒரு கதையில் முலை என்று சொன்னால் அது ஆபாசக்கதை. ஒரு சாதாரண ஆண்பெண் உறவு விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது, கேட்டால் அதிர்ச்சியடைவோம். இத்தகைய அபத்தமான பாவனையை நமக்கு சுட்டிக்காட்டி இதிலிருந்து வெளியே வருவதற்கான வழியை திறந்தவர் ஓஷோ. அதன்பிறகுதான் நான் அவரை தொடர்ந்து படிக்கத்தொடங்கினேன்.

(மேலும்)

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 31, 2025 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.