நிழல்களுடன் ஆடியது-4

இந்நாவல் வழியாக நான் சென்றடைந்த இடங்கள் என்ன, கண்டடைந்தவை என்ன என்று சொல்லப்போவதில்லை. அவை எனக்கு மட்டும் உரியவை. இந்நாவல் வாசகர் தான் கண்டடைந்தவற்றை இந்நாவல் தனக்கென மட்டுமே அளிக்கும் கொடையென கொள்ளலாம். இங்கு நிகழும் ஒரு நிகழ்வின் புள்ளியிலிருந்து பல்லாயிரம் நிகழ்வுகளாலான இறந்தகாலம் வரைக்கும் செல்லும் ஒரு பயணம் இது. காலத்தின் முடிவின்மையையும், நிகழ்காலத்தின் ஒருபுள்ளியையும் மாறி மாறித் தொட்டு ஆடிக்கொண்டிருக்கும் பெரும் ஊசல் நம் உள்ளம் .அதுவே இந்த நாவல். இந்நாவலிலேயே சொல்லப்படுவதுபோல ஒரு புள்ளி விரிந்து வரலாறாகிறது, மறுபக்கம் வரலாறு சிறு புள்ளிகளாகச் சுருங்குகிறது.

இந்த நாவலை எழுதுகையில் இதுவரைக்கும் நான் எழுதிய எந்த நாவலிலும் அடையாத கொந்தளிப்புகளை  அடைந்தேன். விஷ்ணுபுரம் எழுதும்போதும், காடு எழுதும்போதும், ஏழாம் உலகம் எழுதும்போதும், கொற்றவை எழுதும்போதும் நான் பலவகையான அகக்கொந்தளிப்புகளினூடாகச் சென்றதுண்டு. உச்சகட்டமாக வெண்முரசின் நீலம் எழுதுகையில் உடலே தித்திப்பின் உச்சத்தில் அதிர்ந்துகொண்டிருக்கும் ஓர் அரிய நிலையை அடைந்தேன். கிராதம் எழுதும்போது அதில் வைதரணி என்று சொல்லப்படும் அழுக்கின் நதியை நீந்திக் கடப்பது போலவும், கருநாகங்கள் நெளியும் இருண்ட ஆழங்களுக்குள் தனித்து சென்று கொண்டிருப்பது போலவும் உணர்ந்திருக்கிறேன். வெண்முரசு முடியும் தருவாயில் தற்கொலைக்கும் கொலைக்கும் நடுவிலான ஒரு அதீத நிலையில் சில மாதங்களைக் கழித்திருக்கிறேன்.

ஆயினும் காவியம் அளித்த வதை என்பது முற்றிலும் பிறிதொன்று. ஒவ்வொரு அத்தியாயத்திற்குப் பிறகும் இங்கேயே நிறுத்திவிடலாம், மீண்டும் தொடங்கவேண்டாம் என்று தோன்றுவதும்; மறுநாள் வேறுவழியேயின்றி மீண்டும் எழுதத்தொடங்குவதுமான ஒரு நிலை எல்லா நாளும் இருந்தது. ஒவ்வாத ஒன்று உடல் முழுக்க நிறைந்திருக்கையில் வாந்தி எடுத்தே ஆகவேண்டுமென்று தோன்றுவது போல என்று தோன்றுகிறது. எவ்வகையிலும் இனிமையோ சுவையோ அளிக்காத ஒரு பெரிய மொழிவெளிப்பாடு இந்த நாவல் என்று சொல்லலாம். உளநோயாளியின் சொற்பெருக்கு போல. மனநல மருத்துவரின் முன் மல்லாந்து படுத்திருப்பவன் வாக்குமூலம் அளிப்பதை இனிய அனுபவமாகக்கொள்ள வாய்ப்பில்லை. ஆனால் வேறு வழியின்றி அவனிடமிருந்து அந்த வாக்குமூலம் சொற்களாக வெளிப்படுகிறது.

இந்நாவலை எழுதும்போது பல நாட்கள் தொடர்ந்து தூக்கமின்மையால் அவதிப்பட்டேன். குழப்பமான நுண்சமிக்ஞைகள் வழியாக எதிர்காலத்து நிகழ்வுகள் என பல பிரமைகள் என் முன் தோன்றி என்னை அலைக்கழிய வைத்தன. நானே பல துயர்களையும், இழிவுகளையும் என் கற்பனையால் மிகைப்படுத்திக்கொண்டு அந்த அலைக்கழிப்பை பலமடங்கு பெருக்கிக்கொண்டேன். நானே என்னை சவுக்கால் அறைந்துகொள்வது போன்ற ஒரு அனுபவம் அது. என் உடலெங்கும் சவுக்குத்தடங்கள் விழுந்து ரத்தம் கொட்டுகையில் கூட அது ஒரு திமிர்த்த சுகமெனத் தோன்றும் மாயை. இந்த நாவலே நான் எனக்கு நானே விடுத்துக்கொண்ட பெரும் சித்திரவதை என்று தோன்றுகிறது. சில சித்திரவதைகள் உடலை வலியில் துடிக்க வைக்கும்போது உள்ளத்துக்கு ஒரு நிறைவை அளிக்கின்றன. எங்கோ எதற்கோ ஈடு செய்கிறோம், கழுவாய் தேடுகிறோம் என்னும் நிறைவு அது. அத்தகைய ஒன்றா என்று எனக்கு தெரியவில்லை.

இந்நாவலை இன்னும் சில நாட்களுக்குபிறகு நினைவு கூரப்போவது இதை எழுதும்போது இருந்த தொடர்ச்சியான தூக்கமற்ற இரவுகளுக்காகத்தான். எனது தூக்கத்தை மிகத் தெளிவாகத் திட்டமிட்டு இயற்றிக்கொள்பவன் நான். தூங்கும் நேரத்தை மாற்றிக்கொள்வதில்லை. தூங்குவதற்கான இடத்தை மாற்றிக்கொள்வதில்லை . நன்றாகவே தூங்குவேன். ஆயினும் இந்நாட்களில் முற்றிலுமாகத் தூக்கத்தை இழந்தேன். பலநாட்கள் தொடர்ச்சியாக உள்ளத்தில் இருந்துகொண்டே இருந்த பதற்றமும் ,உடலில் இருந்துகொண்டே இருந்த அதிர்வும் என்னால் படுக்கவே முடியாதபடி ஆக்கின.

முதல் நீண்டநேரத் தூக்கமின்மையை பதிவுசெய்திருக்கிறேன். (நிழல்கள் உடனிருக்கின்றன)ஏதோ நிகழவிருக்கிறது என்று நிழல்கள் என்னிடம் சொல்லின. எனக்குத்தெரிந்த, எனக்கு வேண்டிய அத்தனை பேரையும் தொலைபேசியில் அழைத்துக்கொண்டே இருந்தேன். ஏறத்தாழ நாற்பத்தெட்டு மணிநேரம் தூங்காமல் இருந்தேன். வெவ்வேறு பிரமைக் காட்சிகள் தோன்றின, கானபூதி இருக்கும் அந்த முற்றிலும் மூடப்பட்ட மாளிகை பார்வதிபுரத்தில் எங்கோ  இருப்பதாக தோன்றி நானே கிளம்பி அதைச் சுற்றி தேடி வந்தேன். எங்கே செல்கிறேன் என நடுச்சாலையில் வியந்து நின்றேன்.இரவில் விழித்திருக்கையிலேயே பைத்தான் நகரின் அந்த மூடுண்ட காட்டுக்குள் இருப்பதாகவும் உணர்ந்திருக்கிறேன். ஒலிகள் கேட்கத்தொடங்கின. நான் பைத்தியமாக ஆகிக்கொண்டிருக்கிறேனா என்ற பயம் அவ்வப்போது கடுங்குளிர் போல வந்து கவ்விக்கொள்ளும். இரண்டு அல்லது மூன்று மணிநேரத்தூக்கத்திலேயே மூளை ஓய்வெடுத்தபின் மீண்டும் வெறிகொண்டு எழுத ஆரம்பிப்பேன்.

லண்டன் பயணம் நடுவே வந்தது அப்பயணம் இந்நாவல் அளித்த பெரும் அவஸ்தையிலிருந்து என்னை பெரும்பாலும் காப்பாற்றியது என்று சொல்லவேண்டும். நண்பரின் மகன் மித்ரன் சாமுவேலின் சாவு ஓர் உச்சம். முற்றாக உடைந்துவிட்டிருக்க வாய்ப்பு இருந்தபோது பயணம் வழியாக தப்பித்தேன். தூக்கமில்லாத இரவுகளில் அமர்ந்து நாளுக்கு இரண்டு மூன்று அத்தியாயம் வீதம் பதினைந்து நாட்களுக்கு மேல்  முன்னால் எழுதி வைத்து சென்றமையால் லண்டனில் இந்நாவலை தொட்டே பார்க்கவில்லை. முற்றிலும் புதிய இடம்,பேரழகு கொண்ட இயற்கையின் வெளி என்னை இந்த நாவலிலிருந்து முழுக்க வெளியே கொண்டு சென்றது. விண்டர்மீர் ஏரிக்கரையில் ஒவ்வொரு நாளும் எட்டு மணி நேரத்துக்கு மேல் ஆழ்ந்து தூங்கினேன். ஒவ்வொரு தூக்கத்துக்குப் பிறகும் அந்த பளிச்சிடும் ஏரி நீரின் அருகே, முகில் கூட்டங்கள் செறிந்த வானத்தின் கீழே புதிய ஒருவனாக பிறந்தெழுந்தேன். வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதைகளை அங்கிருந்து படிக்கையில் அந்த நிலவெளியை எனது மொழிவெளியாகவும் மாற்றிக்கொண்டேன்.

லண்டன் கிளம்பும்போது சுசித்ராவின் மின்னஞ்சல் வந்தது. அவர் ஒவ்வொரு நாளும் இந்நாவலை மொழியாக்கம் செய்திருந்தார். நான் லண்டன் செல்லவிருப்பதனால் சில அத்தியாயங்கள் முன்னரே எழுதியிருப்பேன். அவருக்கு அவற்றை அனுப்ப முடியுமா என்று கேட்டிருந்தார். நான் அனைத்தையும் அனுப்பி வைத்தேன். நான் அனுப்ப அனுப்ப மொழியாக்கம் செய்துகொண்டே இருந்தார்.

நாகர்கோவிலுக்குத் திரும்பி வந்தபோது வெறும் மூன்று அத்தியாயங்களே அதற்கு மேல் கைவசம் இருந்தன.நாவல் என்ன ஆகும், எப்போது முடியும் என்று தெரியவில்லை. ஒருநாள் முழுக்க இந்த நாவலை தொடங்குவதற்கு தயங்கி வேறெதோ செய்துகொண்டிருந்தேன். இரண்டாவது நாள் நாவலைத் தொடங்கியபோது அதை என்னால் தொடரவும் முடியவில்லை. அந்த மொழியிலிருந்தும் விலகிச்சென்றுவிட்டேன். உண்மையில் அதுவரைக்கும் அந்தக்கதையில் நான் என்ன எழுதினேன் என்பது நினைவில் இல்லை. பழைய அத்தியாயங்களைப் படிக்கும்போது அவை வெறும் சொற்களாக இருந்தன. அவற்றுக்குள் என்னால் செல்ல முடியவில்லை .எந்த வகையிலும் அதனுடைய கதாபாத்திரங்களையோ, நிகழ்வுகளையோ, கட்டமைப்பையோ என்னால் என் அகத்திலிருந்து மீட்டெடுத்துக்கொள்ள முடியவில்லை.

ஆகவே இரண்டாம் நாளும்  எதுவும் எழுதவில்லை. கைவசம் ஒரே ஒரு அத்தியாயம் மட்டுமே மிஞ்சியிருந்தது. மறுநாள் விழித்தெழுந்து நான் ஒன்றை எழுதவில்லை என்றால் நாவலை நிறுத்திவிடுகிறேன் என்றும், பிறிதொரு முறை  தொடங்குகிறேன் என்றும் அறிவித்துவிடவேண்டியதுதான் என்றும் எண்ணிக்கொண்டேன். உண்மையில் இந்த நாவலை இவ்வாறு தொடராக வெளியிட்டு, இத்தனை பேர் அதைப்படித்து, அவர்களின் வாசிப்பு எனக்கொரு கட்டாயத்தை உருவாக்கியிருக்கவில்லையெனில் நான் ஏற்கனவே எழுதி கைவிட்டு அல்லது பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் பல நாவல்களில் ஒன்றாக இது ஆகியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

அன்றிரவு முற்றிலும் தூக்கமில்லாதவனானேன். இரவு முழுக்க தூங்குவதற்காக முயன்றபடியே செலவிட்டேன். பதினைந்து  நிமிடம் படுப்பேன், மீண்டும் எழுந்து அமர்வேன் மீண்டும் படுத்து மீண்டும் எழுவேன். இத்தனைக்கும் தூங்குவதற்கான எல்லா முன்னேற்பாடுகளையும் செய்திருந்தேன். நீண்ட நேரம் வெயிலில் நடந்து உடலைக் களைக்கவைத்து, தலைக்கு குளிர எண்ணை தேய்த்து, வெந்நீரில் குளித்து ,இரவு தூங்குவதற்கு முன் வழக்கத்துக்கு மாறாக ஒரு கோப்பை பாலையும் அருந்தியிருந்தேன். விடியற்காலை வரைக்கும் தூக்கமின்மையில் தவித்த பிறகு ஐந்து மணிக்கு எழுந்து காலை நடை சென்று திரும்பி வந்தேன். இருமல் மருந்து ஓர் அவுன்ஸ் குடித்தேன். அது அரைமணி நேரம் ஒரு மயக்கத்தை அளித்தது. எவரோ தொட்டு உசுப்பியதுபோல விழித்துக்கொண்டேன். என் அருகே நிழல்களை கண்டேன்.

உண்மைக்கும் விழிப்புக்கும் இடையிலான ஒரு மயக்க நிலையில், எங்கிருக்கிறேன் என்று தெரியாத ஒன்றாக இருந்தேன். சூழலில் கேட்கும் சிறு ஒலிகள் கூட என் உடலை நீர்ப்பரப்பு போல அதிரச்செய்தன. வாயில் கசப்பு ,கண்களில் எரிச்சல், காய்ச்சல் வந்தது போன்ற ஒரு நிலை. உடல் புல்லரித்துக்கொண்டே இருந்தது. வாயில் பற்கள் ஒன்றுடனொன்று உரசி கூச்சம் எழுந்தது. கூடத்தில் சோபாவில் கால்களைத்தூக்கி உயரமாக வைத்துக்கொண்டு இருபது நிமிடம் படுத்திருந்தேன். என் காலடியில் கானபூதி வந்து அமர்வது போன்ற உணர்வை அடைந்தேன். எழுந்தமர்ந்தபோது எதையும் உணரவில்லை. ஆனால் அதற்கு முன்பு வந்த ஒரு சிறு கனவில் நான் இக்காவியத்தின் அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருந்தேன். எழுதிக்கொண்டிருந்தது என்ன என்பது எனக்கு நினைவிலும் இருந்தது.

எழுந்து நேராகச் சென்று உணவு மேஜையிலிருந்த கணிப்பொறியில் நினைவிலிருந்த அந்த வரியை எழுதத்தொடங்கி அந்த அத்தியாயத்தை முடித்தேன். சற்று ஓய்வுக்குப்பின் இன்னொரு அத்தியாயம். அன்று மாலைக்குள் மூன்றாவது அத்தியாயத்தின் பாதியை முடித்திருந்தேன். அன்றிரவு மிக நன்றாகத் தூங்கப்போகிறேன், காலை எழுந்து புத்தம் புதிய ஒளியுடன் இந்த நாவலை தொடரப்போகிறேன் என்று நினைத்தேன். ஆனால் அன்றிரவும் முற்றிலும் தூங்க முடியவில்லை. ஒன்பது மணிக்கு படுத்து ஒன்பது நாற்பதுக்கு எழுந்தவன் இரவு முழுக்க தூங்காமல் அமர்ந்திருந்தேன். இரவில் இரண்டு அத்தியாயங்கள் எழுதினேன். எழுதியவற்றை சுசித்ராவுக்கு அனுப்பினேன்.

காலையில் நடை செல்லும்போது குடிகாரனின் தள்ளாட்டம் இருந்தது. எங்காவது விழுந்து விடுவேன் என்ற எண்ணம் இருந்ததனால் பேருந்துகளோ வண்டிகளோ ஓடும் சாலைகளைத் தவிர்த்து, தனியான கிராம வழிகளினூடாக சென்று வந்தேன். அன்று பகலில் எப்படியும் தூங்கிவிடுவேன் என்று நினைத்தேன். ஆனால் அன்று பகலிலும் முழுமையாகவே தூக்கமில்லை. விட்டு விட்டு  இந்நாவலை எழுதிக்கொண்டிருந்தேன். நடுவே அதே மனநிலையை தக்கவைத்துக்கொள்வதற்காக பாணபட்டரின் காதம்பரி, தண்டியின் தசகுமாரர் சரிதம், பாசரின் ஸ்வப்ன வாசவதத்தம் என்று வெவ்வேறு கவிஞர்களால் குணாட்யரின் தொடர்ச்சி என்று இயற்றப்பட்ட நூல்களை படித்துக்கொண்டும் இருந்தேன். வேறெதையும் செய்ய முடியவில்லை.

அன்று இரவு மீண்டும் இரண்டு அத்தியாயங்கள். இருமல் மருந்து குடித்துவிட்டு விடியற்காலையில் பதினைந்து நிமிடம் படுத்திருந்தேன். ஐந்து நிமிடம் தூங்கி உடனே விழித்துக்கொண்டேன். ஒவ்வொரு முறையும் எவரோ அருகே நிற்பதுபோன்ற உணர்வுடன் எழுந்தேன்.மீண்டும் ஒரு காலை நடை. தூங்கி ஐம்பத்தைந்து மணி நேரத்திற்கு மேலாகிறது என்று தெரிந்தது. என் உடல் மிகப்பெரிய எடை கொண்டுவிட்டது போலவும் முற்றிலும் எடையற்றதாக மாறிவிட்டது போலவும் மாறிமாறி தோன்றிக்கொண்டிருந்தது. நடந்து கொண்டிருக்கும்போதே தலை எடையில்லாமல் ஆகி உடல் என்னை ஒருபக்கமாக தள்ளியது. முற்றிலும் விழிப்பு நிலையில் நடந்து சென்று டீக்கடையில் ஒரு டீ குடித்துக்கொண்டிருக்கும்போது கூடவே கனவுகள் நிகழ்ந்துகொண்டிருந்தன. முற்றிலும் அர்த்தமற்ற உதிரிக் கனவுகள், பழைய நினைவுகள். அம்மா, சிறுமியாகிய தங்கை, காசர்கோடு ஆற்றில் பெருவெள்ளம் வந்தபோது நானும் மறைந்த என் நண்பர் அப்துல் ரசாக்கும் சென்று பார்த்தது. நூற்றுக்கணக்கான சிறுசிறு கனவுகள். அவை நனவாக, அத்தனை துல்லியமாக நிகழ்ந்தன. நனவு மங்கி, கனவுபோல அலைபாய்ந்தது.

மீண்டும் வீடு திரும்பி  என்ன செய்வதென்று எண்ணிக்கொண்டிருந்தேன். இந்த நாவலை அரைத்தூக்க நிலையிலேயே எழுதினால் ஒருவேளை அது வெறும் உளறலாகவோ, முன்பின் தொடர்ச்சியற்ற ஒன்றாகவோ ஆகிவிடக்கூடும். என் மூளை கடும்போதையில் இருப்பது போல எல்லா உலகத்தொடர்புகளையும் அறுத்துக்கொண்டு வேறெங்கோ இருக்கிறது. இப்போதே இதை விட்டுவிட்டு பிறகு எழுதலாம் .பதினைந்து அத்தியாயங்களுக்கு முன்னால் சென்றுவிட்டிருந்தேன். ஆகவே எப்படியும் பத்து நாட்களாவது எனக்கு பொழுது  கிடைக்கும் . இந்த தூக்கமின்மை இப்படியே போக முடியாது. எப்படியும் தூங்கிவிடுவேன்.

ஆனால் இன்னொரு பக்கம் நிரந்தரமான தூக்கமின்மை நோய்க்கு ஆளான திரைப்பட ஆளுமை ஒருவரைப் பற்றிய நினைவு என்னை துன்புறுத்தியது. அவர் படிப்படியாக தூக்கமின்மைக்கு செல்லவில்லை. வழக்கமாக நன்றாகத் தூங்கக்கூடியவர் .அவ்வப்போது சில  உளக்கொந்தளிப்புகளால் தூங்காமலும் ஆவார். ஏதோ ஒரு நாள் தூக்கமின்மை வந்தது. தூங்க முயன்றுகொண்டே இருந்தார். அடுத்த முப்பத்தைந்து ஆண்டுகள் ஒருநாளும் தூங்கவில்லை. அவர் இன்றும் ஒரு முக்கியமான ஒரு மருத்துவ ஆய்வுப்பொருளாகவே இருக்கிறார். அவருடைய ஒரு பக்க மூளை தூங்குகையில் இன்னொரு பக்க மூளை செயல்படுகிறது என்பதனால் தூங்கவேண்டிய தேவை இல்லை என்கிறார்கள். ஆனால் தூக்கமின்மையால் உருவாகக்கூடிய எல்லா உடல் நலக்கோளாறுகளும் மறதியும் அவருக்கு உண்டு.

அந்த நிலை நோக்கி நான் சென்று கொண்டிருக்கிறேனா என்று என் உள்ளம் பதைத்துக்கொண்டே இருந்தது. ஆனால் இந்த நாவலை எழுதி முடித்துவிடுவதுதான் ஒரே வழி. இதை எழுதாத வரைக்கும் இதிலிருந்து என்னால் விடுதலை பெற முடியாது. இது சரியாக வராவிட்டால் ஒன்றுமில்லை .எத்தனையோ நாவல்கள் சரியாக வருகின்றன ,வராமல் போகின்றன. ஒரு நல்ல நாவலை முழுமையாக அளிக்கிறேன் என்று யாருக்கும் நான் வாக்களிக்கவில்லை. எனக்கு இதிலிருந்து விடுபடுவது மட்டும்தான் முதன்மையானது என்று எனக்கே சொல்லிக்கொண்டேன். எழுதித்தள்ளிவிட்டால் என்னால் விடுதலை அடைய முடியும்.

ஆனால் அந்த தர்க்கம் எனக்கு உடன்பாடாக இல்லை. செய்வனவற்றை முழுமையை நோக்கி கொண்டு செல்லவேண்டும் என்ற பிடிவாதம்தான் என்னை இதுவரை ஆளாக்கியிருக்கிறது. மிகையாக செய்நேர்த்தி நோக்கி செல்லக்கூடாது.  பிசிறுகளை அப்படியே விட்டுவிடவேண்டும். ஏனெனில் மிகையான செய்நேர்த்தி நோக்கிச் செல்லும்போது எப்படியோ அதில் ஆசிரியரின் கை தெரிய ஆரம்பிக்கிறது. மகத்தான கலைப்படைப்புகள் எல்லாமே பிசிறுகளும்  பிழைகளும் இருப்பவைதான்.  பிசிறுகளும் பிழைகளும் இருப்பதுதான் அவை தன்னிச்சையானவை, உயர்வானவை என்பதற்கான சான்று. மிகக்கச்சிதமான செய்யப்பட்டவை என்று தோன்றும் விளாடிமிர் நபக்கோவ் போன்றவர்களின் படைப்புகள் என் வாசிப்பில் மிகச்செயற்கையானவையாக, மின்னணுக்கருவிகளைப் போன்றவையாகத் தோன்றுகின்றன. ஆகவே எந்தப் படைப்பையும் நான் திரும்பத் திரும்ப செய்து சலிப்புறுவதில்லை. சிறு பிழைகளை விட்டுவிடுவேன். ஆனால் எனக்கு முக்கியமான இடங்களில் எனக்கே நிறைவு தோன்றும் வரை விடுவதும் இல்லை. விஷ்ணுபுரம், கொற்றவை, நீலம் போன்ற நாவல்களில் சில இடங்களை இருபது முறைக்குமேல் செப்பனிட்டிருக்கிறேன். ஒவ்வொரு மாற்றமும் எனக்கு மட்டுமே தெரியும் அளவுக்குச் சிறியவை. ஒரு நாவலைக் கைவிட என்னால் முடியும், அரைகுறையாக எழுதி வெளியிடவும் முடியாது.

பின்னர் ஒன்று தோன்றியது, ஒருவேளை மீண்டும் பத்து நாள் இடைவெளிவிட்டால் இந்நாவலின் உணர்வுநிலை ,மொழி இரண்டிலிருந்தும் நான் வெளியே சென்றுவிடமுடியும். மறுபடியும் இந்நாவலை என்னால் தொடங்கவே முடியாமல் ஆகிவிடக்கூடும். அப்படி கைவிடப்பட்ட பல நாவல்கள் என் கையிலிருக்கின்றன. அந்த மொழிவெளிக்குள் திரும்ப என்னால் செல்ல முடியவில்லை என்பதனாலேயே அவற்றை என்னால் முடிக்க முடியவில்லை .இப்போது எதையோ ஒன்றை எழுதி முடித்து அதை வெளியிட்டு விட்டால் கூட, என்னால் பின்னர் அவற்றை  இன்னொரு முறை பரிசீலித்து செம்மை செய்ய முடியும். அல்லது எழுதிச் சேர்த்து வைத்தால் கூட தூங்கிவிழித்து என் மூளையைத் தெளிவுபடுத்திக் கொண்ட பிறகு அவற்றை செம்மை செய்யவோ இன்னொரு முறை மேம்பட்ட வகையில் எழுதவோ எனக்கு வாய்ப்புண்டு. ஆனால் இப்போது எழுதி முடிக்காமல் என்னால் தூங்க முடியாது.

ஆகவே மீண்டும் வெறிகொண்டு எழுதத்தொடங்கினேன். இறுதி அத்தியாயங்களில் இருக்கும்போது கிட்டத்தட்ட எழுதும் செயலே எங்கோ நானறியாமல் நடந்துகொண்டிருப்பது போல, என்னுடைய உள்ளம் பல துண்டுகளாக உடைந்து கனவாகவும் நனவாகவும் எங்கெங்கோ இருந்துகொண்டிருப்பது போல, தோன்றியது. மேலே தட்டச்சு செய்துகொண்டிருப்போதே நான் கீழே வந்து டீ போட்டுக்கொண்டு திரும்பி வந்தேன். எழுதிக்கொண்டிருக்கும் நான் ஒரு அறையில் இருக்க ,இன்னொரு நான் வெளியே வெயிலில் நடந்து சென்று பார்வதிபுரம் தெருக்களில் அலைந்துகொண்டிருந்தேன்.

நாற்பத்தெட்டு மணி நேரத்துக்குமேல் தூக்கம் இல்லை என்றால் பிரமைகள் அத்தனை வலுவாக, உண்மைக்கும் மேலான துல்லியத்துடன் தோன்றும் என்பதையும் அப்போதுதான் உணர்ந்தேன். ஜூன் மாதம் ஏழாம் தேதி இறுதி அத்தியாயத்தை எழுதும்போது வீட்டில் எவருமில்லை அருண்மொழி கிளம்பி சென்னை சென்றுவிட்டாள். அன்று மாலை நான் கிளம்பி அரங்கசாமியின் குலதெய்வக்கோயில் நாற்பத்தெட்டாவது நாள் பூஜை முடிவிற்கு செல்லவேண்டும். அரங்கசாமி தன் குலதெய்வங்கள் வெங்கிடசாமி நாயுடு- ஏண்டம்மாள் இருவருக்கும் ஒரு ஆலயத்தை தன் ஊரில் கட்டியிருந்தார். அதன்  கும்பாபிஷேகம் நடந்தபோது நான் பெங்களூரில் இருந்தேன். அந்நிகழ்ச்சி முன்னரே முடிவு செய்யப்பட்டிருந்தது .அன்று தான் இந்நாவலை தொடங்கியுமிருந்தேன். நாற்பத்தெட்டாவது நாள் நான் வந்தே ஆகவேண்டும் என்று அரங்கா சொன்னதனால் ஏழாம் தேதி அங்கு செல்வதாக ஒத்துக்கொண்டிருந்தேன். ஆனால் நாவலை முடிக்காமல் கிளம்பக்கூடாது என்றும் தோன்றியது.

கீழே வந்து கைக்குக்கிடைத்த எதையோ சாப்பிட்டுவிட்டு மேலேறிச்சென்றேன். மீண்டும் சாப்பிடவேண்டும் என்ற எண்ணத்துடன் கீழே வந்தேன். ஏற்கனவே சாப்பிட்டுவிட்டேன் என்ற நினைவு அப்போதுதான் வந்தது. ஆனால் என்னால் மீண்டும் மாடிக்குச் செல்ல முடியவில்லை. என் வழிகள் முழுக்க குழம்பிவிட்டிருந்தன. சமையற்கட்டை திறந்து வெளியே சென்று. அது எந்த இடம் என்று குழம்பிப்போய் அங்கே நின்று, அங்கிருந்து கார்ஷெட் வழியாக நடந்து என் அறைக்கு வந்தேன். என்னுடைய வீடு மொத்தமாகவே இடம் குழம்பியிருப்பது போலிருந்தது. மீண்டும் கீழே வந்தபோது விட்டுக்குள் கானபூதியை பார்த்தேன், நிழல்களுடன்.

அப்போது அதைப்பார்த்தது ஒரு பதற்றத்தையும் கொந்தளிப்பையும் தான் உருவாக்கியது. அதிலிருந்து தப்ப விரும்புபவன் போல மேலே சென்று கணிப்பொறி முன் அமர்ந்தேன். எடை கொண்ட தலை விசைப்பலகை நோக்கி தாழ்ந்து நெற்றியால் விசைப்பலகையை முட்டிக்கொண்டேன். பதினைந்து நிமிடம் கண்களை மூடி ஓய்வெடுத்தபோது மீண்டும் தட்டச்சு செய்ய முடிந்தது. என்ன அடித்தேன் என்றே நினைவில்லை. நிமிர்ந்தபோது என் அருகே கானபூதி தன் கனிந்த கண்களுடன் அமர்ந்திருந்தது. ஆனால் இப்போது அது என் மொழியின் பிரமை என நன்கு அறிந்தும் இருந்தேன். நாவலை எழுதி முடித்தேன். கதைகளின் பேரரசனுக்கு கண்ணீருடன் வணக்கம் சொன்னேன். நீண்டநேரம் தன்னந்தனிமையில் கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தேன். சிதைந்துப் பரவியிருந்த அனைத்தும் இணைந்து ஒன்றாகி பிசிறற்ற ஒருமையை அடைந்தன. உலகமே முழுமையாகத் தெரிந்தது. என் வாட்ஸப்பில் கண்ணீருடன் உணர்ந்த அந்த முழுமையை பற்றி ஒரு நிலைத்தகவலை வைத்தேன். நண்பர்களின் வாழ்த்துக்கள் வந்துகொண்டிருந்தன. அஜிதன் ‘Hugs Appa’என ஒரு செய்தியை அனுப்பியிருந்தான். புன்னகையுடன் அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

இரவு ஏழரை மணிக்கு சுசித்ராவுக்கு இறுதி அத்தியாயத்தை அனுப்பினேன். இரவு ஒன்பதரை மணிக்கு நாகர்கோயில் -கோவை ரயிலில் ஏறி அமர்ந்ததும் சுசித்ராவின் மின்னஞ்சல் வந்தது. மொழியாக்கத்தை முடித்துவிட்டேன் என்று. விரிப்பை விரித்துப் படுத்தேன், இரண்டு நிமிடத்தில் தூக்கம். ஒரு மணி நேரத்தில் விழித்துக்கொண்டேன். உடல் நன்றாகவே ஓய்வெடுத்திருந்தது. மூளை தெளிவாக இருந்தது. ரயிலின் வாசலில் கம்பியை பிடித்தபடி விண்மீன்கள் நிறைந்த வானை நோக்கியபடி, அலையலையாக வந்து அறைந்த காற்றை வாங்கியபடி நின்றிருந்தேன். திருப்பூரில் இறங்கி, அரங்காவின் ஊருக்குச் சென்று விழாவில் கலந்துகொண்டேன். அங்கிருந்து கோவை வந்து நிர்மால்யாவுக்கு அரசு அளித்திருந்த வீட்டுக்குச் சென்று அவரை வாழ்த்தினேன் ஈரோடு கிருஷ்ணன் , கோவை பாலு, கோவிரந்தராஜ் என நண்பர்கள் அங்கே வந்திருந்தனர்.

மாலை விமானத்தில் சென்னை. ஐடிசி சோழாவின் பிரம்மாண்டமான அறையில் வெந்நீர்த்தொட்டியில் நீராடிவிட்டு ஒன்பதரை மணிக்கு படுத்தவன் மறுநாள் காலை எட்டரைக்கே எழுந்தேன். குளித்து தயாராகி குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வர இருபது நிமிடம் பிந்திவிட்டது. அந்த விழா முடிந்து நண்பர்களுடன் சாப்பிடச்செல்லாமல் என் அறைக்கு திரும்பி மீண்டும் ஒன்பது மணிக்கே படுத்துவிட்டேன். மறுநாள் பத்து மணிக்குத்தான் விழித்தெழுந்தேன். அங்கே இருக்கும் நாளெல்லாம் தூக்கம் வந்து அழுத்திக்கொண்டே இருந்தது. எடைமிக்க ஒரு பொருளாக தூக்கத்தை வைத்துக்கொண்டே இருந்தேன். தூக்கம், அது விடுதலை, அருள்.

(முழுமை)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 06, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.