விஷ்ணுபுரம் வழியாக…

https://vishnupuram.com/  நாவல் பற்றிய பார்வைகளுக்காக விஷ்ணுபுரம் வாங்க

விஷ்ணுபுரம் மின்னூல் வாங்க

பெருமதிப்பிற்கும் பிரியத்திற்கும் உரிய ஜெமோ–விற்கு,

வணக்கம். “விஷ்ணுபுரம்” வாசிப்பு அனுபவத்தை என் முதல் கடிதமாக எழுதுவதில் மகிழ்வுறுகிறேன். “விஷ்ணுபுரம்” என்ற நாவலை செவ்வியல் என்பதைவிட காவியம் என்றழைப்பதில் இன்னும் அணுக்கமாக உணர்கிறேன்.

விஷ்ணுபுரத்தை வாசிக்க தொடங்கிய சில பக்கங்களிலேயே முதலில் என் கற்பனை திறனுக்கு சவால் விட்டது பேராலயத்தின் பிரமாண்டம். அதன் கோபுரங்களும், சிற்பங்களும், மண்டபங்களும், கண்டாமணியும் மிக பிரமாண்டமாகவும் நுட்பமாகவும் விளக்கப்பட்டு இருப்பது சிறு ஓடை போல் இருந்த என் கற்பனை திறனை காற்றாற்று வெள்ளமாக மாற்றியது. மனிதமனமன்றி எந்த திரையும் இதன் பிரமாண்டத்தை காட்டிவிட முடியாது என்று எண்ணுகிறேன்.

புராணங்கள்

இதில் வரும் புராணக்கதைகள் அனைத்தும் சுவாரஸ்யமாகமட்டுமின்றி அனைத்திலும் சிறிது உண்மையும், அறமும்,நீதியும், கலந்து இருப்பதாக உணர்ந்தேன்.புராணத்தின் தேவையும் கூட அதன் பொருட்டுதானோ என்று எண்ணினேன்.

தத்துவங்கள்

நாவல் முழுவதுமாக தத்துவங்கள் பேசப்பட்டு இருந்தாலும் இரண்டாம் பாகத்தில் வரும் ஞானசபையின் நெறிமுறைகளும் தர்க்கபூர்வமான செறிவான விவாதங்களும் சங்கரரின் காலத்தில் தத்துவவிவாதங்கள் இவ்வாறுதான் நடந்து இருக்கக்கூடும் என்று உணரமுடிந்தது. அதீத உணர்ச்சி கொந்தளிப்புகள் தவிர்க்கப்பட்டு தூய அறிவை நோக்கிய விவாதத்தின் நெறிமுறைகள் எக்காலத்திற்கும் கடைபிடிக்கவேண்டியவை.

பிரளயம்

பிரளயத்தின் உக்கிரம் மிரட்சி கொள்ள செய்கிறது. உடலாக மனிதனாக இருந்தாலும் இயற்கையின் ஒரு அங்கமாகவே கலந்து இருக்கும் சோலைபைத்தியம் என்ற வேதத்தத்தன் பிரளயத்தில் பிழைத்து கொள்ளக்கூடும்  என்று எண்ணும் போது அவனது மரணம் மட்டும் தெய்வீகமாக நிகழ்ந்தது.

காட்சிகள் / படிமங்கள்

யானைப்பற்றிய அனைத்து காட்சிகளும் என்னை சிலிர்ப்பு அடைய செய்தன. குறிப்பாக யானையின்  பராமரிப்பும் , பாகனுக்கும் அதற்கும் உண்டான அன்பும், மதம் கொண்ட வீரன் என்ற யானையை கம்பீரமான அனுபவமிக்க வேறொரு யானை அடக்கி கொள்வதும், அங்காரகனின் கனவும் என்கனவுகளில் உறைந்து கொண்டன. மேலும் இக்காவியம் பல்வேறு படிமங்களை என் மனதில் விட்டு செல்கிறது. குறிப்பாக என் நினைவில் நிற்பது சோனாவும் அதன் அக்னி சிவப்பும், தொலைதூரத்து ஹரிததுங்காவின் தரிசனமும்,கண்களை உருட்டிநிற்கும் யட்சிகளும்,காடுகளும், குகைகளும, பாவகனும் யோகாவிரதனும் தொன்மமாக பார்க்கும் மண்டபகங்களும், லட்சுமியின் பசுவின் பிரசவமும், பிங்கலன், திருவடி, சங்கர்ஷணன்,அஜிதன், சூரியதத்தர், பத்மன் ஆகியோரது ஆழ்ந்த அகமும் தான்.

மறுவாசிப்பு

1,2,3 என்ற வரிசையில் மறுவாசிப்பு செய்து இக்காவியத்தை என் மனதில் இன்னும் ஆழமாக விரித்துக்கொள்ள இருக்கிறேன்.

முடிவாக விஷ்ணுபுரத்தின் வரிகளையே பிறருக்கு சொல்வேன் → “நமது வாசிப்பை காவியத்தின் மீது ஏற்றலாகாது. ஒரு வாழ்நாள் முழுக்க அது நம்முன் வீழ்த்தும் பிம்பங்களின் ஒட்டுமொத்தம்தான் காவியதரிசனம் என்பது. இடத்தையும் மனதையும் மாற்றியபடி மீண்டும் மீண்டும் காவியத்தை பார்க்க வேண்டும்.

பணிவுடன்,

ஆ.நாகராஜன்.

பி . கு நான் ஐரோப்பிய விஷ்ணுபுரம் குழுவில் இருக்கிறேன் முத்து கேசவனுடன்   வரும் மே 25 அன்று “Stratford- இல்   உங்களை சந்திக்க
ஆவல்கொண்டுள்ளேன் .

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 30, 2025 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.