காணொளிகள், கடிதம்

காணொளிகளின் தேவை என்ன? முழுமையறிவு- அனைத்துக் காணொளிகளும்

மரியாதைக்குரிய ஜெ,

காணொளிகளின் தேவை குறித்த பதிவை வாசித்தேன். அக்கருத்தை ஒற்றிய என்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள தோன்றியதால் இக்கடிதத்தை எழுதுகிறேன்.  

பல காலமாக உங்களைப் பற்றி அறிந்திருந்தாலும் ஒரு வருடத்திற்கு முன்பு வரை உங்கள் எழுத்தை வாசித்ததில்லை. பொதுவாகவே வாசிப்புப் பழக்கம் உள்ளவன் என்றாலும் உங்கள் எழுத்தை வாசிக்காமல் போனதற்கு காரணம் பொதுவெளியில் உங்கள் மீது பூசப்பட்டுள்ள இந்துத்துவ சாயம். விவரம் தெரிந்த வயதிலிருந்தே சோசியலிச கருத்துகளில் இருந்த ஈடுபாடு காரணமாக அதைச் சார்ந்த வாசிப்புகளில் அதிகமாக ஈடுபட்டேன். 

தற்செயலாக டிவிட்டர் தளத்தில் நூறு நாற்காலிகள் கதைக்கான இணைப்பைப் பார்த்தேன். அதற்கு மேல் இதை விட சிறந்த சிறுகதை இல்லை என்ற கருத்தும் இருந்தது. சரி என்று இணைப்பைத் தொட்டு சென்று கதையைப் படித்தேன். தீவிர இலக்கியத்தை வாசித்து இருந்தாலும் இக்கதை அவற்றை விட ஒரு படி மேல் என்பது புரிந்தது. இப்படி ஒரு கதையை எழுதியவரும் பொது வெளியில் சங்கி என அழைக்கப்படுபவரும் ஒருவராக இருக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. 

YouTube algorithm உண்மையில் சிறந்த ஒரு தொழில்நுட்பம். ஒருவர் எந்த காணொளியை விரும்புவார், அவரது ஈடுபாட்டை மேம்படுத்த எந்த காணொளி தேவை என்பதைப் பயன்படுத்த தொடங்கிய சில மாதங்களிலேயே அறிந்து கொண்டு விடுகிறது. ரீல்சும் சார்ட்சம் வெறும் பாசாங்கு தான் என புரிந்து கொண்ட உடன் மனம் நமக்கான காணொளிகளை தேட துவங்குகிறது. நூறு நாற்காலிகள் வாசித்த ஒரு மாத இடைவெளியில் என்னுடைய YouTube feeds ல் வந்தது உங்களுடைய “அறிவியக்கமே நவீன நாட்டின் மையம்” என்ற காணொளி. மனதின் ஓரத்திலிருந்த தயக்கத்தையும் மீறி அந்த காணொளியைப் பார்த்தேன். அதில் எப்படி அமெரிக்கா அறிவியக்கத்தை முன்னெடுத்துச் செல்கிறது என்றும் இந்தியாவில் அறிவியக்கத்தின் நிலை மற்றும் தேவையைப் பற்றியும் விளக்கிக் கூறியிருந்தீர்கள். மேலும் உங்களை திராவிட இயக்கத்தவர் சங்கி என்றும் இந்துத்துவாவினர் திராவிடன் என்றும் அழைப்பதையும் குறிப்பிட்டிருந்தீர்கள்.  

நிச்சயமாக எல்லா இயக்கத்திலும் bigots என்று சொல்லப்படக் கூடிய நபர்கள் இருப்பார்கள். தங்கள் கருத்தைத் தவிர வேறு எதையும் காது குடுத்து கேட்காதவர்கள் அல்லது முயற்சிக்காதவர்கள் . என்னுடைய bigotry தன்மையை அந்த காணொளி நீக்கியது என்று தான் கூற வேண்டும். நம் சிந்தனை உலகத்தில் தவிர வெளியே இருப்பவர்களிடமும் நல்லவை உள்ளன, கருத்துகள் உள்ளன. அவற்றை கூர்ந்து நோக்கி கற்றுப் பழகினாலொழிய நம்மால் தெரிந்து கொள்ள இயலாது என்ற உண்மையும் விளங்கியது.  

ஒரு காணொளியில் மூளையைச் சாட்டையால் அடித்து தான் எழுப்ப வேண்டும் என கூறியிருப்பீர்கள். முழுமையறிவு பக்கத்தில் வரும் ஒவ்வொரு காணொளியும் என் மூளையைச் சாட்டையால் அடிப்பதாகத் தான் எனக்கு தோன்றுகிறது. மேலும் மேலும் வாசிப்பை நோக்கி என்னைச் செலுத்துவதும் அவைதான். 

அன்றாட வாழ்க்கையில் ஈடுபடும் பொழுது பல நேரங்களில் நம் அகத் தேடலை மறந்து இருக்க வேண்டிய நிலைமைகள் ஏற்படுகின்றன. ஒரு நாள் இரண்டு நாளாக சேர்ந்து நீண்ட நாள்கள் வாசிப்பைக் கைவிட வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. அவ்வாறான நாள்களில் காணொளிகள் நம் உண்மையான தேடலை நோக்கி நம்மை செலுத்தும் சாதனங்களாக உள்ளன. என்னைப் பொறுத்த வரையில் என்னுடைய களம் இலக்கியம் தான் என்பதைத் தெளிவடையவும் வைத்துள்ளன.

நன்றிகளுடன்

கார்த்திக் ராஜா.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 20, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.